Showing posts with label மறுமை நாள். Show all posts
Showing posts with label மறுமை நாள். Show all posts

நேரமில்லை! நேரமிருக்கிறது! - 7

அதிரைநிருபர் | January 15, 2014 | , , , , ,

நேரமில்லை!

தொழ நேரமில்லை!
ஓத நேரமில்லை!
பசியாற நேரமில்லை!
படிக்க நேரமில்லை!
தூங்க நேரமில்லை!

பர பரவென்ற வேலையால்
பறந்து கொண்டு இருக்கிறேன்!
பணம் உண்டு பையில்
மதிய உணவு இல்லை கடையில்
நேரத்தில் சாப்பிட நேரமில்லை!

படைத்தவனை நினைக்க நேரமில்லை!
பண்பாக இருக்க நேரம் நேரமில்லை!
பழகியவனை பார்க்க நேரமில்லை!
மனைவியிடம் பேச நேரமில்லை!
மக்களிடம் பேச நேரமில்லை!
பள்ளி விட்டு வரும் பிள்ளையை
பாசத்தோடு கொஞ்ச நேரமில்லை!

தாயை கவனிக்க நேரமில்லை!
தந்தையை கவனிக்க நேரமில்லை!
உற்றாரை கவனிக்க நேரமில்லை!
ஏழை வரி கொடுத்து
ஈட்டிய செல்வத்தை
தூய்மையாக்க நேரமில்லை!

நேரமிருக்கிறது!

மனிதா நேரமிருக்கிறது!
உயிர் பிரிய நேரமிருக்கிறது!
மண்ணறைக்கு செல்ல நேரமிருக்கிறது!
மண்ணறை கேள்விக்கும் நேரமிருக்கிறது!
நல்லடியார்களுக்கும் நேரமிருக்கிறது!
தீயவர்களுக்கும் நேரமிருக்கிறது!

மண்ணறை அழைக்கிறது
நான் தனி வீடாவேன்
புழு பூச்சிகளின் பிறப்பிடமாவேன்
நல்லவர்களுக்கு நிம்மதியளிப்பேன்
தீயவர்களுக்கு நோவினை தருவேன்!
நன்மை தீமை பிரித்தறிந்து
மண்ணறையில் கேள்விக்கும்
மண்ணறையின் வேதனைக்கும்
நேரமிருக்கிறது!

மறுமை கேள்வி கேட்கப்படும் நாள்!
மனிதன் மதி மயங்கி நிற்கும் நாள்!
மண்ணாகி இருக்கக் கூடாதா? நான்
மறுமையை சந்திக்காமல் இருந்திருப்பேனே!
மனிதன் அலறும் நாளுக்கு நேரமிருக்கிறது!

தந்தையை கண்டு மகன் ஓடுவான்!
மகனை கண்டு தந்தை ஓடுவான்!
மனைவியை கண்டு கணவன் ஓடுவான்!
கணவனை கண்டு மனைவி ஓடுவாள்!
நண்பனை கண்டு நண்பன் ஓடுவான்!
எங்கே ஓடுவார்கள்! நன்மையை தேடி!
மறுமையில் ஓட நேரமிருக்கிறது!

மறுமையில் விவாதம்
மனைவியிடம் கணவன்
உனக்கு வாரி வழங்கினேன்
உன் நன்மையிலிருந்து
எனக்கு கொஞ்சம் கொடு
மனைவி ஒத்துக்கொள்வாள்
நீங்கள் சிறந்த கணவர்தான்
எனக்கும் நன்மைதான் வேண்டும்
பாசமிகு கணவனை பிரிந்து
வெருண்டு ஓடுவாள்
ஓடுவதை காண நேரமிருக்கிறது!

பெற்ற மக்களிடம் ஓடுவான்
பெற்றெடுத்த மக்களே!
நான் சிறந்த தந்தையல்லவா!
துன்பம் தொடாமல் அனைத்து
வளங்களையும் தந்து ஆளாக்கினேன்!
உன் நன்மையிலிருந்து
எனக்கு கொஞ்சம் கொடு
பிள்ளைகள் ஒத்துக்கொள்வார்கள்!
நீங்கள் சிறந்த தந்தைதான்
எங்களுக்கும் நன்மைதான் வேண்டும்!
தந்தையிடம் இருந்து
வெருண்டு ஓடுவார்கள் பிள்ளைகள்!
காட்சிகளை காண நேரமிருக்கிறது!

உலகைப் படைத்தவனின் கோபம்
உலகம் முழுவதிலும்
அழிவுகள் சிறிது சிறிதாக! பெரிதாக
அழிவுக்கும் நேரமிருக்கிறது!

மனிதனுக்கோ
மறுமை பயம்
மனதில் இல்லை!
சகோதரச் சண்டை,
உடன்பிறந்தார் சண்டை
குலச்சண்டை,
தெருச்சண்டை,
சம்பந்தி சண்டை,
குழந்தைகள் சண்டை,
அடுத்தவன் வீட்டின்
இடத்தை அபகரித்த சண்டை
படிப்பில், அறிவில், ஆற்றலில்,
பணத்தில், அழகில், குலத்தில்
பெருமை, ஆணவம் மேலோங்க
பிறரிடம் ஏளனச்சண்டைகளுக்கு
நேரமிருக்கிறது!

மனிதர்களே பாசமும்
கேள்விக்குறியாகும் நாள்!
உங்கள் செல்வமும்
பலன் தர முடியாத நாள்!
எந்த பரிந்துரையும்
ஏற்றுக் கொள்ளப்படாத நாள்!
இம்மை, மறுமையின் அதிபதி
வல்ல அல்லாஹ்!
நீதி வழங்கும் நாள் -அந்த
மறுமைக்கு நேரமிருக்கிறது!

 
மண்ணறைகளைச்
சந்திக்கும் வரை
அதிகமாகத்(செல்வத்தை)
தேடுவது உங்கள்
கவனத்தைத்
திருப்பி விட்டது.
பின்னர் அந்நாளில்
அருட்கொடை பற்றி
விசாரிக்கப்படுவீர்கள்.
(அல்குர்ஆன்:102:1,2, 8)

அலாவுதீன் S
இது ஓர் மீள்பதிவு

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - 26 தொடர் இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம்.

காது கொடுத்து கேளுங்கள் - ப்ளீஸ் ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | October 30, 2013 | , , , ,

உலக மாந்தர் அனைவருக்கும் அருட்கொடையாக இறக்கப்பட்ட அருள்மறைத் திருக்குர்ஆனிலிருந்து இறை வசனங்களை எங்கு ஓதக் கேட்டாலும் அதன் பொருள் அறியாவிட்டாலும் அப்படியே நம் மனதை ஈர்க்கும், அதனையே முழுவதுமாக அர்த்தங்கள் பொதிந்த அவ்வசனங்களை கேட்கும்போது உள்ளத்தில் ஏற்படும் மாற்றத்தை ஒவ்வொருவராலும் அப்பட்டமாக உணரப்படும்.

இந்த வாரம் ஸூரத்துல் கியாமா [மறுமை நாள்] என்ற அத்தியாயத்தின் வசனங்களை அழகிய உச்சரிப்புடன் ஓதுவதை காது கொடுத்து கேட்போம் இன்ஷா அல்லாஹ் !

ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்) 

வசனங்கள்: 40

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

75:1. கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

75:2. நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.

75:3. (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?

75:4. அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.

75:5. எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.

75:6. “கியாம நாள் எப்போழுது வரும்?” என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.

75:7. ஆகவே, பார்வையும் மழுங்கி-

75:8. சந்திரனும் ஒளியும் மங்கி-

75:9. சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.

75:10. அந்நாளில் “(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது?” என்று மனிதன் கேட்பான்.

75:11. “இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!” (என்று கூறப்படும்).

75:12. அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.

75:13. அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.

75:14. எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கின்றான்.

75:15. அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்!

75:16. (நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதுவதற்காக) உம் நாவை அசைக்காதீர்.

75:17. நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.

75:18. எனவே (ஜிப்ரீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.

75:19. பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.

75:20. எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.

75:21. ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.

75:22. அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.

75:23. தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும்.

75:24. ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.

75:25. இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.

75:26. அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,-

75:27. “மந்திரிப்பவன் யார்?” எனக் கேட்கப்படுகிறது.

75:28. ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.

75:29. இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.

75:30. உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.  

75:31. ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை; அவன் தொழவுமில்லை.

75:32. ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.

75:33. பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.

75:34. கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!

75:35. பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.

75:36. வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?

75:37. (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?

75:38. பின்னர் அவன் “அலக்” என்ற நிலையில் இருந்தான்; அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.

75:39. பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.

75:40. (இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?


நன்மையை நாடியே பதிக்கப்பட்டதன் பலனை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்குவானாக!

அதிரைநிருபர் பதிப்பகம்