Showing posts with label ie. Show all posts
Showing posts with label ie. Show all posts

இஸ்லாமிய வங்கிமுறையும் முதலீட்டுத்துறையும் தோன்றி வளர்ந்த வரலாறு 10

அதிரைநிருபர் பதிப்பகம் | March 17, 2015 | , , ,



தொடரிலிருந்து

இஸ்லாமிய வங்கிமுறையும் முதலீட்டுத்துறையும்  தோன்றி வளர்ந்த வரலாறு .

இந்தத்தொடரை ஆழ்ந்து படித்துவரும் அன்பர்களுக்கு ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன். இந்த அத்தியாயத்தில் நான் பகிர இருக்கும்  தகவல்கள் யாவும் இஸ்லாமிய வங்கி முறைகள் பற்றி  நூல்கள் மற்றும் இணையத்தில் திரட்டிய தகவல்களின் மொழி பெயர்ப்பு ஆகும். கூடிய வரை நன்றாகவே மொழிபெயர்த்து எனது வழக்கமான தமிழ்நடையில் தர முயற்சித்து இருக்கிறேன். இஸ்லாமியப் பொருளாதார இயலில் ஆர்வமுள்ள தனிப்பட்டவர்களுக்கும் மாணவர்களுக்கும் இதில் குறிப்பிடப் போகும் தகவல்கள் பயனுள்ளவைகளாக இருக்குமென்று நம்புகிறேன். பெரும் உழைப்பின் பின்னணியில் திரட்டப் பட்ட  இந்தத்தகவல்களை உங்களின் அன்புக் கரங்களில் சமர்ப்பிக்கிறேன்.

நவீன பொருளாதார இயலின்  வளர்ச்சி -மற்றவர்களோடு போட்டி போட்டு வாழவேண்டிய சூழ்நிலை - அதே நேரம்  , அல்லாஹ் வகுத்த வழிகளில் இருந்தும் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழும் வழிகளில் இருந்தும் நெறி பிறழாமல் இந்த சமுதாயத்தை கொண்டு செல்லவேண்டிய நிலை சமூகத்தின் கல்வியாளர்களுக்கும் மார்க்க அறிஞர்களுக்கும்உதித்த எண்ணம்  தந்த உந்து சக்தியின் காரணமாக இஸ்லாமிய வங்கி முறையும் பலவித ஆராய்வுகளுக்கும் விவாதங்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் பிறகு இம்முறைகள் சமுதாயத்துக்கு அறிமுகப் படுத்தப் பட்டன.

இதை என் இப்படி “பம்மி பம்மி” சொல்ல நேரிடுகிறது என்றால் நமது கை விரல் நகங்களில் வளர்ந்துள்ள நகத்தை வெட்டினாலே இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று வழக்குக் கூண்டில்  நிறுத்தப்படும்  ஒரு யுகத்தில் வாழவேண்டிய சூழ்நிலை. நான் சொன்னால் வழிகேடில்லை அதையே நீ சொன்னால் வழிகேடு என்று வழக்குரைக்கும்  மாந்தர்களின் நடுவே நடுநிலையில் சில நடக்கும் செய்திகளை நெறி பிறழாமல் சொன்னாலும் வடையைப் பார்க்காமல் வடையில் உள்ள துளையைப் பார்ப்பவர்கள் துரதிஷ்டவசமாக நம்மிடையே உலவுவதால் இந்த முன்னுரை தேவைப்படுகிறது.  வாருங்கள் நமது வேலையைப் பார்ப்போம்.  

இரண்டாம் உலக மகா யுத்தத்துக்குப் பின் பல முஸ்லிம் நாடுகளும் முஸ்லிம்கள்           சிறு பான்மையாக வும்  பெரும்பான்மையாகவும்  வாழ்ந்த நாடுகளும்  சுதந்திரம் பெற்றன. இதைத் தொடர்ந்து மற்ற நவீன கல்விகளைப் போல பொதுவான பொருளியல் கல்வியின் தேவை உணரப்பட்டது. பொதுவான பொருளியலில் போதுமான இஸ்லாமிய அடிப்படையின் சாயல் இல்லாததால் இஸ்லாமியப் பொருளாதாரம் என்கிற கோட்பாடுகள் வரையருத்துத் தேவைப்பட்டன. ஆகவேதான் ஷரியா மற்றும் சுன்னாவின் அடிப்படையில் இஸ்லாமியப்  பொருளியல்எனும் எண்ணக்கரு தோற்றம் பெற்றது.

முஸ்லிம்கள் , ஆங்கிலேயர் , பிரெஞ்ச, போர்த்துகீசியர் போன்ற  பிற மத ஏகாதிபத்தியவாதிகளின் அதிகாரத்திற்குள் இருந்த காலத்தில் தம் பொருளாதார நடவடிக்கைகளை இஸ்லாத்தின் வரையறைக்குள் நின்று மேற்கொள்ள முடியாதிருந்தனர். வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளியல் கோட்பாடு ஏனையோர் போன்று முஸ்லிம்கள் மீதும் திணிக்கப்பட்டிருந்தது. தொழுகை, நோன்பு போன்ற இபாதத்களை ஓரளவேனும் சீராக செய்யக்கிடைத்த முஸ்லிம்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இஸ்லாமிய விதிமுறைகளையும், விழுமியங்களையும் பேணுவது மிகச் சிரமமாக இருந்தது. இதுவே ஏகாதிபத்திய கெடுபிடியிலிருந்து சுதந்திரம் பெற்ற முஸ்லிம்களை தனியான இஸ்லாமிய பொருளியல் பற்றி சிந்திக்கத் தூண்டியது.

குர்ஆனும், ஸுன்னாவும் பொருளியலின் அடிப்படைகளைக் கூறியிருந்தன. அவற்றுக்கு வியாக்கியானம் செய்த இமாம்கள் பல்வேறு பொருளாதார கருத்துக்களை முன்வைத்தார்கள். இஸ்லாமிய சட்டத்துறை (ஃபிக்ஹ்)க்கு பங்களிப்புச் செய்த  இமாம்கள் பல்வேறு பொருளியல் கோட்பாடுகளை தனித்தனிப் பிரிவுகளாக சமூகத்தில் முன்வைத்தனர்.

இபாதாத் (வணக்க வழிபாடுகள்), முஆமலாத் (கொடுக்கல் வாங்கல்கள்), முனாக்கஹாத் (விவாகங்கள்), ஜினாயாத் (குற்றங்கள்) என நாற்பெரும் பிரிவுகளாக ஃபிக்ஹை வகைப்படுத்தி இரண்டாம் இடத்தை இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடுகளுக்கு வழங்கினர்.

வாங்கல், விற்றல், பண்டமாற்று, தவணை அடிப்படையிலான கொடுக்கல் வாங்கல், முற்பணம் செலுத்தி வாங்கல், அடகு வைத்தல், இரவல் கொடுத்தல், கடன், பங்குடைமை, முதலீடு, குத்தகை இப்படி பல்வேறு தலைப்புக்களில் இமாம்களின் மார்க்க அடிப்படையிலான  ஆய்வுகளும், கருத்துக்களும், தீர்ப்புக்களும் சட்டத்துறை நூற்களில் இடம் பிடித்துள்ளன. எனினும் இவை தனியொரு கலையாக அல்லது ஒரு அறிவுத்துறையாக இஸ்லாமிய பொருளியல் எனும் பெயரில் அறிமுகம் பெற்றிருக்கவில்லை. அவர்களது காலப்பகுதி இதற்கான தேவையை வேண்டி நிற்கவுமில்லை.

நாளுக்கு நாள் வளர்ந்துவரும்  உலகம்,  நுண்கலை அறிவுத்துறைகளிலும் புதுப்புதுத் தத்துவங்களைக் கண்டுபிடித்ததன் விளைவாக சில வேளைகளில் முற்காலத்தில் ஓர்அறிவுத்துறையின் உட்பிரிவாக இருந்த ஒரு பகுதி தனிப்பெரும் அறிவுத்துறையாக பரிணமித்திருப்பதை நாம் காணலாம். உதாரணமாக பொது மருத்துவம் என்கிற துறை அறிவியல் வளர்ச்சியின் காரணமாக உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் நிபுணர் கல்வியை அதற்கான பட்டங்களை வழங்கத்தொடங்கியது.  அது போன்றே இஸ்லாமிய சட்டத்துறையின் உட்பிரிவாக இருந்த பொருளியல் , காலத்தின் தேவைக்கேற்ப இஸ்லாமிய பொருளியலாக பெயர்  சூட்டப்பட்டு ஒரு தனி அறிவுத்துறையாக உருவம் பெற்றது.

இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பொருளாதார ரீதியில் பெரும்  பாதிப்புக்களை சந்தித்த நாடுகள் தம்மை பாதிப்பிலிருந்து மீட்டுக் கொள்ளும் பொருட்டு   முதலீடுகள் செய்வது பற்றி சிந்திக்கவும் ஆரம்பித்தன. இத்தருணத்தில் இலாப நஷ்டத்தை மூலதனத்தின் விகிதத்திற்கேற்ப முதலீட்டாளர்கள் பகிர்ந்துகொள்ளும் இஸ்லாமிய கூட்டு முதலீட்டு முறையை சுதந்திரம் பெற்ற முஸ்லிம் நாடுகளுக்கு அறிமுகம் செய்து வைப்பதில்  அறிஞர்கள் ஆர்வம் காட்டினர். மிக முக்கியமாக வழிகேடர்களின் வழிமுறைகளை தடுத்து நிறுத்தவும், நமக்கு ஏற்ற முறைகளை நாமே உருவாக்கிக் கொள்ளவும்  வேண்டுமென்ற கருத்தில்  இதன் மூலம் நடைமுறையிலுள்ள வட்டியடிப்படையிலான வங்கிகளின் நடவடிக்கைகளுக்கும் வட்டியடிப்படையற்ற ஒரு கூட்டு முதலீட்டு முறையை அறிமுகம் செய்து வைத்தனர்.

அறிஞர்களான அன்வர்குறைஷி, நயீம் சித்தீக்கீ, மஹ்மூத் அஹ்மத், முஹம்மத் ஹமீதுல்லாஹ் ஆகியோரே 1940இன் பிற்பகுதிகளில் இது பற்றி முதன் முதலில் பேசியோராவர். இவர்களைத் தொடர்ந்து 1950களில் இச்சிந்தனைக்கு மார்க்க அறிஞர்களால் பரவலாக உயிர் கொடுக்கப்பட்டது.  பேரரிஞர்முஹம்மத் ஹமீதுல்லாஹ் அவர்களின் பங்களிப்பு இவ்வகையில் நீண்டதாகும். 1940இலும், 1955இலும், 1957இலும், 1962இலும் இது தொடர்பில் அவர்எழுதினார்.  முதன் முதலில் இது பற்றி ஒரு தனியான நூல் அறிஞர் முஹம்மத் உவைஸ் என்பவரால் 1955இல் எழுதப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்துல்லாஹ் அல்-அரபி, நஜாத்துல்லாஹ் சித்தீக்கி, அல்-நஜ்ஜார், பாக்கிர்அஸ்-ஸத்ர்ஆகியோரின்  நூற்கள் 1960களின் பிற்பகுதியில் 1970களின் ஆரம்பப் பகுதியில் வெளிவந்தன.
  • இது வரை காலமும் அறிஞர்பெருமக்களின் தனிநபர்களின்  சிந்தனையாக விளங்கிய இஸ்லாமிய பொருளியல் 1970களில் நிறுவனமயப்படுத்தப்பட்டது        ( Organized status).
  • இதன் ஓர்அங்கமாக இது பற்றி விவாதிக்க,  கராச்சியில் 1970இல் முஸ்லிம் நாடுகளின் நிதி அமைச்சர்களின் மாநாடு நடைபெற்றது.
  • 1976இல் இஸ்லாமிய பொருளியல் சம்பந்தமான முதல் சர்வதேச மாநாடு மக்காவில் கூட்டப்பட்டது.  இம்மாநாட்டில் 200க்கும் மேற்பட்ட பொருளியல் அறிஞர்கள், சமூகவியலாளர்கள் உலகின் பல பாகங்களிலிருந்தும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. பல வகையிலும் திருப்புமுனையாக அமைந்த இம்மாநாடு இஸ்லாமிய பொருளியல் பற்றி மேலும் பேசவும், எழுதவும், உயர்மட்ட நிலையில் விவாதிக்கவும் வழிகோலியது.
  • பின்னர் 1977இல் சர்வதேச பொருளாதார மாநாடு லண்டனில் நடைபெற்றது.
இம்முயற்சிகள் யாவும் வெறும் எண்ணக்கருவாக இருந்த இஸ்லாமிய பொருளியலுக்கு ஒரு வடிவத்தை கொடுக்க ஆரம்பித்தன. இஸ்லாமிய பொருளியல் கோட்பாடுகளை அனுசரித்து தனித்தியங்கும் வங்கிகள் தோற்றம் பெற்றன.
  • இஸ்லாமிய  வங்கிகளில் முன்னோடி வங்கியாக அமைந்தது 1972இல் எகிப்தில் நிறுவப்பட்ட Nasser Social Bank.
  • பின்னர் 1975இல் Dubai Islamic Bank நிறுவப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் குழுவொன்று இதனை நிறுவியது.
  • பின்னர் 1977இல் Faisal Islamic Bank எகிப்திலும், சூடானிலும் அமையப்பெற்றது.
  • இதே ஆண்டில் குவைத் அரசாங்கம் Kuwait Finance Houseஐ உருவாக்கியது.
  • தற்போது 200க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பொருளாதார கோட்பாடுகளை பேணி நடக்கக்கூடிய இவ்வாறான வங்கிகள் இயங்கிவருகின்றன. பெரும்பாலானவை முஸ்லிம் நாடுகளில் அமைந்துள்ளன. சில மேற்கு ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், லக்ஸம்பேர்க், சுவிஸர்லேன்ட், யுனைடட் கிங்க்டம் ஆகிய நாடுகளிலும் அமையப்பெற்றுள்ளன. இத்தகைய வங்கிகள் தனியார்வங்கிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • 1981ஆம் ஆண்டு பாகிஸ்தானும், ஈரானும் வட்டியில்லா வங்கி முறையை சட்ட ரீதியாக அறிமுகம்  செய்தன.
இஸ்லாமிய பொருளியல் உதயத்தின் மூலம் பல்வேறு முன்னேற்றகர நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. அவையாவன:-

1.   சுய அறிவுத்துறை

தனியான இஸ்லாமிய பொருளியல் நூற்களும், சஞ்சிகைகளும் வெளிவரும் அளவுக்கு ஒரு தனிப் பெரும்  அறிவுத்துறையாக இஸ்லாமிய பொருளியல் பரிணமித்துள்ளது. வேறு பல சஞ்சிகைகள் இத்தலைப்பில் கட்டுரைகள் எழுதிவருகின்றன. பாரம்பரிய பொருளியல், முகாமைத்துவம், வர்த்தகம், கணக்கியல் பற்றி எழுதுகின்ற ஆய்வு சஞ்சிகைகள் இத்துறை பற்றி ஆய்வுக் கட்டுரைகளை இடம்பெறச்செய்கின்றன. Palgraves Dictionary of Money and Finance தற்பொழுது இஸ்லாமிய வங்கி முறை பற்றி ஒரு தனிப் பகுதியையே ஒதுக்கியுள்ளது.

2.   அறிவு முயற்சிகள்:-

பல அறிஞர்கள் இத்துறையில் ஆழமான ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்டு ஆக்கபூர்வமான ஆக்கங்களை சமூகத்திற்கு நல்கியதன் மூலம் இத்துறைக்கு அபார அறிவு முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. இத்யாதி முயற்சிகள் பற்றி முஹம்மத் அன்வர்கான் மூன்று வால்யூம்களில் தொகுத்துள்ளார்.

3.   பல்கலைக்கழக பாட  நெறிகள்:-

பல்வேறு பல்கலைக் கழங்களிலும்  பெரும் கல்லூரிகளிளும் பாடத்திட்டங்களில்   ஒரு முக்கிய இடத்தை இஸ்லாமிய பொருளியல் பெற்றுள்ளது. மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகமும், இஸ்லாமாபாத்திலுள்ள இஸ்லாமிய பொருளியல் சர்வதேச நிறுவனமும் இத்துறையில் தனியான பட்டம் தரும் பாடப்பிரிவுகளை வழங்கிவருகின்றன. பாகிஸ்தான், ஈரான், சூடான், சவூதி அரேபியா இன்னும் பல இஸ்லாமிய நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களும் பட்டப்படிப்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகவே இத்துறையை ஆக்கியுள்ளன. யுனைடெட் கிங்க்டத்திலுள்ள Loughborugh University இத்துறையில் தனி நிகழ்ச்சியொன்றை தன் பாடபிரிவில்  உட்புகுத்தியுள்ளது. லன்டனில் அமையப் பெற்றுள்ள International Institute of Islamic Economics and Insurance தொலைக் கல்வி டிப்லோமா நிகழச்சியின் நெறியொன்றை நடத்துகின்றது. (மலேசியாவில் உள்ள பல்கலைக் கழகத்தின் மூலம் பயின்று இஸ்லாமிய வங்கி முறைகளில் பட்டம் பெறும் முயற்சிகளை எனது நண்பர் வரலாற்றுப் பேராசிரியர் A.K.அப்துல் காதர் அவர்கள் நெறிப்படுத்தி வருகிறார்கள்.)

4.   பல்கலைக்கழக ஆய்வுகள் :-

பெரும் எண்ணிக்கையிலான சர்வகலாசாலைகள் Ph.D க்கான ஆய்வுகளை இஸ்லாமிய பொருளியல், அதன் உப பிரிவுகளை தலைப்பாகக் கொண்டு எழுத அனுமதிக்கின்றன. இவ்வாறு நூற்றுக்கணக்கான ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.

5.   இஸ்லாமிய பொருளியல் ஆய்வு நிலையங்கள்:-

இஸ்லாமிய பொருளியல் ஆய்வு நிலையங்களின் வருகையும், இஸ்லாமிய பொருளியல் துறையின் வளர்ச்சியின் ஒரு பகுதியாகும். ஜித்தா இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் கீழ் இயங்கிவரும் Islamic Research and Training Institute இவற்றுள் முக்கியமானது. நூற்றுக்கணக்கான நூற்களை இது வரை இஸ்லாமிய பொருளியல் பற்றி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் அமைந்துள்ள International Institute of Islamic Thought இத்துறைக்கு அளப்பரிய பங்களிப்பு செய்து வரும் மற்றொரு அமைப்பாகும் . அரபிலும், ஆங்கிலத்திலும் நூற்றுக்கணக்கான புத்தகங்களை வெளியிட்டும், கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள் நடத்தியும் பணிபுரிந்து வருகின்றது. Association of Muslim Social Scientists உடன் இணைந்து இந்நிலையம் வெளியிட்டு வரும் American Journal of Islamic Social Sciences இன் ஒவ்வொரு இதழும் பெரும்பாலும் இத்துறை சார்ந்த கட்டுரைகளை தாங்கி வருவது கவனிக்கப்படவேண்டியது.

6.   இஸ்லாமிய பொருளியல் தகவல் மையங்கள்:-

இஸ்லாமிய வங்கி முறை, முதலீடு, பொருளியல் தொடர்பான தகவல் மையம் ஒன்றை ஜித்தா இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி ஏற்படுத்தியுள்ளது. இத்தகவல் மையம் இஸ்லாமிய வங்கி தகவல் முறை, இஸ்லாமிய பொருளியல் பற்றிய நூற்கள், முஸ்லிம் நிபுணர்தகவல் முறை, தொடர்புவழி விபரக்கொத்து போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.

7.   சட்டத்துறை நூற்கள்:-

இஸ்லாமிய பொருளியல் துறையை மையப்படுத்தி சட்டத்துறை நூற்கள் வெளிவந்துள்ளமை மற்றொரு அம்சமாகும். Fiqh Academy of the Organization of Islamic Countries, Fiqh Academy of India, Islamic Ideology Council of Pakistan, Association of Islamic Banks ஆகிய நிறுவனங்கள் இத்துறை பற்றிய மார்க்கத் தீர்ப்புகள் தழுவிய நூற்களை வெளியிட்டுள்ளன. குவைத்தின் மார்க்க விவகார வக்ஃப் அமைச்சு வெளியிட்டுள்ள ஃபிக்ஹ் கலைக்களஞ்சியம், இஸ்லாமிய பொருளியல் சார்ந்த பல விடயங்களை உள்ளடக்கியுள்ளது. லன்டனிலுள்ள Institute of Islamic Banking and Insurance இது தொடர்பில் இரு கலைக்களஞ்சியங்களை இது வரை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஒரு கலைக்களஞ்சியத்திலும், இஸ்தன்பூலில் வெளியிடப்பட்டுள்ள கலைக்களஞ்சியத்திலும் இஸ்லாமிய பொருளியல் தொடர்பான விவகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.  

8.   கணக்குத் தணிக்கை  அமைப்புகள்:-

இஸ்லாமிய பொருளியல் வளர்ச்சியின் ஓர்அங்கமாக இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து கணக்குப் பரிசோதனை அவை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக Accounting and Auditing Organization for Islamic Financial Institutions உருவாக்கப்பட்டு பஹ்ரைனில் சிறப்பாக இயங்கிவருகின்றது. இந்நிறுவனம் மிகத் திறமைமிக்க துறைசார்ந்தோரைக் கொண்டு கணக்குப் பரிசோதனை அளவீடுகள் இஸ்லாமிய வங்கிகளுக்கும், முதலீட்டு நிறுவனங்களுக்கும் ஏற்றதாய் அமைத்துள்ளது. 1994இல் அது நூல் வடிவம் பெற்று பின்னர் 1997இல் புதிய பல தலைப்புக்களுடன் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.  இதே வேளை லண்டனிலுள்ள Institute of Islamic Banking and Insurance இஸ்லாமிய வங்கிகளுக்கான கணக்குப் பரிசோதனை முறை நூலொன்றை வெளியிட்டுள்ளது.

9.   துறைசார்ந்தோர்அமைப்பு:-

இத்துறையின் ஒரு வளர்ச்சியாக முஸ்லிம் பொருளியலாளர்களைக் கொண்ட ஓர்அமைப்பு International Association of Islamic Economics எனும் பெயரில் அமைக்கப்பட்டு காலத்திற்குக் காலம் கருத்தரங்குகளையும், மாநாடுகளையும் ஒழுங்கு செய்வதில் ஈடுபட்டு வருவதோடு, ஆய்வு பத்திரிக்கை  ஒன்றையும் வெளியிட்டு வருகின்றது.

10. கருத்தரங்குகள், மாநாடுகள்:-

ஒவ்வொரு வருடமும் இத்துறைசார்கருத்தரங்குகளும், மாநாடுகளும் உலகலாவிய ரீதியில் ஏற்பாடு  செய்யப்பட்டு மேலாய்வுகளுக்கு வாயில்கள் திறந்து விடப்படுகின்றன. பிரச்சினைகளுக்கு முடிவு காணப்படுகின்றது. சந்தேகங்களுக்கு தெளிவு காணப்படுகின்றது.

11. இஸ்லாமிய வங்கி முறையும், முதலீடும்:-

இஸ்லாமிய பொருளியல் எண்ணக்கரு தோற்றம் பெற்றதன் பயனாக இஸ்லாமிய முதலீட்டு முறைகளுடன் கூடிய வங்கி முறைகள் அமுலுக்கு வந்துள்ளன. நூற்றுக்கணக்கான முதலீட்டு நிறுவனங்களும், வங்கிகளும் தோன்றியுள்ளதுடன் நாளுக்கு நாள் உலகின் பல பாகங்களிலும் இத்தகைய நிறுவனங்கள் தோற்றம் பெற்ற வண்ணம் இருக்கின்றன.

இஸ்லாமிய பொருளியலின் எண்ணக்கரு தோற்றம், அதற்கு உரு கொடுக்கப்பட்டமை, இதனால் ஏற்பட்ட பல்வேறு நன்மைகள் பற்றியெல்லாம் இது வரை பார்த்த  அதே வேளை இவை  பற்றிய ஒரு மதிப்பீட்டையும் செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும்.

இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள், வங்கிகளின் நடவடிக்கைகள் குறித்தும், உலகப் பொருளாதாரத்தின் மீது அது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் அறிஞர்கள் மதிப்பீடு செய்தனர். இதன் விளைவாக 1984இல் லண்டனில் ஒரு மாநாடு ஏற்பாடு  செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1986இல் வியன்னாவிலும், தெஹ்ரானிலும், வாஷிங்டனிலும், ஜெனீவாவிலும் இது குறித்த மாநாடுகள் நடைபெற்றன. பின்னர் 1988இல் லண்டனிலும், 1992இல் இஸ்லாமாபாத்திலும் மாநாடுகள் நடைபெற்றன. அதே வேளை இக்காலப்பகுதியில் பல்வேறு கட்டுரைகள் எழுதப்பட்டும், பல்கலைக்கழக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும், நூற்கள் வெளியிடப்பட்டும் உள்ளன. இத்தகைய மதிப்பீட்டுப் பணியில் ஈடுபட்ட அறிஞர்களுள் முஹம்மத் அக்ரம் கான் சிறப்பாக குறிப்பிடத்தக்கவர்.

இத்தகைய மதிப்பீடு இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்களிடம் சில குறைகளுக்கான  நீக்கங்களை  வேண்டி நிற்கின்றன. அவையாவன:

1.   குறுகிய பார்வை:-

இது வரையும் இஸ்லாமிய பொருளியல், அதன் அகன்று விரிந்த உட்பிரிவுகள் உள்ளடக்கப்படாமல், முராபஹஹ், முஷாரக்கஹ், முழாரபஹ், இஜாரஹ் போன்ற சிலவற்றுடன் மட்டுப்படுத்தப்பட்டு எழுதப்பட்டும், பேசப்பட்டும் வருகின்றது. இதனால் இஸ்லாமிய பொருளியல் என்பது வட்டியில்லா வங்கி முறை என அர்த்தம் கொள்ளப்படுகின்றது. பாரம்பரிய வட்டி வங்கிகளுடன் தொடர்பு உடைய முஸ்லிம் செல்வந்தர்களை வட்டியில்லா அமைப்பின் பக்கம் திருப்பும் உடனடி ஆரம்ப முயற்சியாகவே இது அமைந்துள்ளது. இதனால் சில தனவந்தர்கள் மாத்திரம் வட்டி பாவத்திலிருந்து விடுபட்டனரே தவிர நடுத்தர மக்களும், ஏழைகளும் அதிலிருந்து இன்னும் விடுபடவில்லை. எனவே இஸ்லாமிய பொருளியல், அதன் உட்பிரிவுகள் முழுமையாக புரிந்துகொள்ளப்பட்ட நிலையில் இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. இதற்கான ஆய்வுகள் அறிஞர்களால் தொடர்ந்து  செய்யப்பட வேண்டும். சமூகத்தின் சகல நிலையில்உள்ளவர்களுக்கும் இஸ்லாமிய பொருளியல் ஏற்புடையது, நடைமுறைச் சாத்தியமானது என்பது அப்பொழுது மாத்திரமே நிரூபிக்கப்படும்.

2.   முறை பற்றிய குழப்பம்:-

இஸ்லாமிய பொருளியல் என்பது முற்றிலும் வித்தியாசமான தனிப்பெரும் தத்துவங்களையும், நெறிமுறைகளையும் உள்ளடக்கியதாகும். இது பற்றிய ஆழமான அறிவில்லாதோர்மூலம் இஸ்லாமிய முதலீட்டு அமைப்புக்களைக் கொண்டு நடாத்த முடியாது. பெரும்பாலான இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்களில் உயர்மட்டம் முதல் அடி மட்டம் வரையிலான சகல ஊழியர்களும், நிர்வாகிகளின் அமைப்பு  கூட இத்துறையில் போதிய கல்வியற்ற  நிலையிலுள்ளனர். குறிப்பாக முடிவெடுக்கும் அதிகாரமுள்ளோர் வட்டி அடிப்படையிலான பாரம்பரிய வங்கிகளில் வேலை  பார்த்து அந்த சிந்தனைகளுடனும், பயிற்சிகளுடனும் இருப்பவர்கள். எனவே இஸ்லாமிய பொருளியல் பற்றி அறை குறை ஞானத்துடனும் பாரம்பரிய வங்கிகளின் அறிவு, பயிற்சிகளுடனும் இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள் இயக்கப்படுவதால் பெரும்பாலான கொடுக்கல் வாங்கல்கள் அவர்களுக்கும் தெளிவில்லாமல், வாடிக்கையாளர்களுக்கும் தெளிவில்லாமல் நடந்தேறுகின்றன. உதாரணமாக: இஜாரஹ்வின் அடிப்படையை தெரிந்த நிலையில், அதன் உட்பிரிவுகள் பற்றிய தெளிவு இல்லாமல் நடைபெறும் இஜாரஹ் உடன்படிக்கைகள் பல. இதன் காரணமாக இத்தகைய உடன்படிக்கைகள் பல தவறுகளை  சுமந்த வண்ணம் நடைபெறுகின்றன. இதன் விளைவாக சில பொது நிறுவனங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்குமிடையே பல பிரச்சினைகள் எழுகின்றன. எனவே இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்களைச் சார்ந்தோர்இஸ்லாமிய பொருளியல் தொடர்பாக நன்கு அறிவும், பயிற்சியும் முஸ்லிம் மார்க்க  அறிஞர்களால் பெறவேண்டியுள்ளனர்.  இந்த நிறுவனங்களில்  பணியாற்றுவோர் மார்க்க கல்வியைக்  கற்றுத் தேர்வதை கட்டாயமாக்க வேண்டும்.

3.   ஷரீஆ விதிகளைப் பேணுவதில் அசிரத்தை:-

முராபஹஹ், முழாரபஹ், முஷாரக்கஹ், இஜாரஹ் போன்ற உடன்படிக்கைகள் சில பல வேளைகளில் ( பிற மத) ஊழியர்களின் அசிரத்தை காரணமாக அவற்றின் ஷரீஆ விதிகளில் சில பேணப்படாத நிலையில் நடந்தேறுகின்றன. ஆவணங்களில் கையொப்பம் இடுவதன் மூலம் இவ்வுடன்படிக்கைகள் பரிபூரணம் அடைவதில்லை. ஒவ்வோர் உடன்படிக்கையும் அதற்குரிய சகல விதிகளும் முழுமையாக சரியாக பின்பற்றப்பட்ட நிலையில் நடைபெறுவதை நிறுவனங்கள் உறுதி செய்தல் வேண்டும். இல்லையேல் நரகத்தில் இடத்தைப் பதிவு செய்ய நேரிடும்.

4.   அறிவூட்டல் போதாமை:-

இஸ்லாமிய பொருளியல் பற்றி குறிப்பாக முஸ்லிம்களுக்கும், பொதுவாக சகல மதத்தவர்களுக்கும் அறிவூட்டப்பட்டமை போதாத நிலையிலுள்ளது. இதனால் இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள் நடைமுறைப் படுத்திவரும் முழாரபஹ், முராபஹஹ், முஷாரக்கஹ் இஜாரஹ் போன்றவை கூட சமூக மட்டத்தில் பிழையாக விமர்சிக்கப்படுகின்றன. பாரம்பரிய வங்கிகளின் வட்டி வீதத்தை விட இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்களின் வட்டி வீதம் அதிகம் என்றெல்லாம் விமர்சிக்கப்படுகின்றது. எனவே மக்களை அறிவூட்டுவதையும் ஒரு முக்கிய பணியாக தமது நிகழ்ச்சி நிரலில் ஆக்கிக்கொள்வது முதலீட்டு நிறுவனங்கள் முன்னுள்ள ஒரு முக்கிய பொறுப்பாகும்.

எந்தவொரு அறிவுத்துறையும் காலத்துக்குக் காலம் வளர்ச்சியடையாமலில்லை. இஸ்லாமிய பொருளியலும் இதில் விதிவிலக்கல்ல.  தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். விமர்சனங்கள் செய்யப்பட வேண்டும். இப்பொருளியல் தத்துவங்களில் பலவற்றுக்கு உரு கொடுக்கும் நிறுவனங்களாக இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள் திகழ வேண்டும். அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புக்களை அவை ஏற்க வேண்டும். ஆக்கபூர்வ விமர்சனங்களை புறந்தள்ளாமல் , அவை தம் வளர்ச்சிக்கு உந்து சக்தியென உள்வாங்கி தம்மை செப்பனிட்டுக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ்வைப் பயந்த நிலையில் ஒவ்வோர் நடவடிக்கையும்  உடன்படிக்கையும் நடைபெற வேண்டும்.

மார்க்கக் கல்வியின் ஒரு அம்சமாக பொருளாதாரப் பாடங்களும் மார்க்க அடிப்படையாளான பொருளாதார கல்விக்கூடங்களும் பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய வங்கி மற்றும் முதலீட்டுத்துறையில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப் பிரிவுகளும் தொடங்க குரல் எழுப்பவேண்டுமென்பதே இந்த அத்தியாயத்தை நான் நிறைவு செய்யுமுன் வைக்கும் கோரிக்கை.  மேலும் இஸ்லாமிய வங்கி மற்றும் முதலீடுகள் பற்றி விளக்கமான தனித்தொடர் எழுதவேண்டுமென்று சில நண்பர்கள் கேட்டிருப்பதால் விளக்கமான மற்றொரு தொடரைத் தர வல்ல நாயன் உதவிடுவானாக! (தம்பி அபூ இப்ராஹீம் உற்சாகத்தில் குதிப்பது மனக் கண்ணுக்குத் தெரிகிறது)    - இன்ஷா அல்லாஹ் பார்க்கலாம்.  

இபுராஹீம் அன்சாரி

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் – 35 31

அதிரைநிருபர் பதிப்பகம் | July 05, 2014 | , , , ,


பங்குச் சந்தை முதலீடுகள் பங்கமா? வாழ்வின் அங்கமா?

கடந்த அத்தியாயத்தில் முதலீடுகளின் சில வகைகளைப் பார்த்தோம். இப்போது பங்கு சந்தை பற்றி அறியும்  முன்பு பங்கு என்றால் என்ன என்று பார்க்கலாம்.

நாம் ஒரு தொழில் தொடங்க விரும்புகிறோம் அல்லது ஒரு தொழிலுக்கான ஒரு நல்ல திட்டம் நம்மிடம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். வெறும் கை முழம் போடாது . ஆகவே அந்தத் தொழிலைத் தொடங்குவதற்கும் நடத்துவதற்கும் பணம் தேவைப்படும். நாம் தொடங்கத் திட்டமிட்டு இருக்கிற தொழிலுக்கு போதுமான அளவு நம்மிடம் நமது சொந்தப் பணம் இல்லை என்று நாம் உணரும் நிலையில் வங்கிகள் முதலிய வெளியார் இடமிருந்து கடன் வாங்கி  அந்தத் தொழிலைத் தொடங்கி நடத்த நினைப்போம். 

மிகப்பெரிய அளவில்  திட்டமிட்டு இருக்கிற தொழிலைத் தொடங்க வேண்டுமானால் தேவைப்படும் மூலதனத்தை பொதுச் சந்தையில் பொதுமக்களிடமிருந்து  திரட்ட  திட்டமிட்ட மூலதனத்தை சிறு சிறு   மதிப்பாகப் பிரித்து வெளியிட வேண்டும். இதற்காக சில ஒழுங்கு முறைகள் மற்றும் சட்ட பூர்வமான தகுதியும் அமைப்பும் அங்கீகாரமும்  தேவைப்படும்.  இவ்விதம் வெளியிடப்படும் அந்தப் பிரிவுகளின் மதிப்பே பங்கு எனப்படும்.  இந்த முறையில்  முகம் அறியாத பொது மக்கள் கூட ஒரு  நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதன் மூலம் முதலீட்டாளர்கள் ஆக முடியும்.

எடுத்துக் காட்டாக, நம்முடைய தொழிலின் அபிவிருத்திக்கு அல்லது நமது தொழில் திட்டம் நடைமுறைக்கு வர  ஒரு கோடி ரூபாய் தேவைப் படுகிறது என்று வைத்துக் கொண்டால் அதை பத்து ரூபாய் மதிப்புள்ள பத்து இலட்சம் பங்குகளாக்கி  பொது மக்களிடம் விற்று தேவையான மூலதனத்தைத்  திரட்டலாம். 

இந்த முறையில் ஏற்படும் உடனடிப் பலன் என்னவென்று கேட்டால் நமக்குத் தேவையான – நமது சக்திக்கு அப்பாற்பட்ட முதலீடு திரட்டப்படுகிறது. அத்துடன்,  நிறுவனத்தின் முதலீட்டுத் தேவைக்காக கடன் வாங்கி அல்லது இருக்கும் அனைத்து சொத்துக்களையும் விற்று முதலீடு செய்தால் அதன் மூலம் வரும் இலாபமும் இழப்பும் ஒரு தனி நபரை மட்டுமே சார்ந்திருக்கும் . ஆனால் பங்குகளை வெளியிட்டு பல முதலீட்டாளர்களை ஈர்த்து தொழில் நடத்தும்போது இலாபமும் இழப்பும் பங்குகளை வைத்திருக்கும் பலராலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.  முதலீடாக திரட்டப்பட்ட தொகைகளுக்கு முதலீட்டாடளர்களுக்கு வட்டி என்று கொடுக்கப்படவேண்டியதில்லை. மாறாக, இலாபத்தில் டிவிடெண்ட் ( Dividend) என்று சொல்லப்படுகிற ஆதாயப் பகுதி முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும். இந்த டிவிடென்டின் விகிதம்   நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். இந்த டிவிடென்டின் விகிதமே  ஒவ்வொரு நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பை உயர்த்துகின்றன; அல்லது தாழ்த்துகின்றன. அதிக இலாபப் பங்கை  டிவிடெண்ட் ஆகக்  கொடுக்கும் நிறுவனத்தின் பங்குகளுக்கு தேவை அதிகமானால் அவற்றின் விலையும் அதிகமாகும்.  ஒரு நிறுவனம் தனது முதலீட்டை பங்காக பிரித்து விற்கத் தொடங்கிய பின் சட்ட பூர்வமான அளவில் அந்த நிறுவனம் தனி நபர் நிறுவனம் என்கிற அமைப்பை இழந்து பங்கு நிறுவனம் ( Joint Stock Company ) என்று ஆகிவிடும். 

பங்கு என்றால் என்ன என்று தெரிந்த பின்,  இந்தப் பங்குகளின் முக மதிப்பு  ( Face Value) என்றால் என்ன என்றும் தெரிந்து கொள்வோம். ஒரு நிறுவனம் வெளிஇடும் ஒற்றைப் பங்கின் நிர்ணயிக்கப்பட்ட விலையே அதன்  முக மதிப்பாகும். பத்து ரூபாய் பங்கு என்பது பத்து ரூபாய் முகமதிப்புடையதாகும். சில நேரங்களில் நிறுவனங்களின் கடந்த கால வெற்றி தோல்விகளைப் பொருத்து அந்த  நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு இதுவரை தந்து கொண்டிருந்த இலாபப் பங்குகளின் வீதத்தை வைத்து அந்த நிறுவனம் வெளியிடும் பங்குகளை வாங்க அல்லது வாங்காமலிருக்க மக்கள் முன்வரலாம் வராமலிருக்கலாம். நிறுவனங்களின் இத்தகைய வணிக வரலாறுகள் அவற்றின் பங்குகளின் விலையை விலாசமிடுகின்றன.  

இதுநாள் வரை சரியான அளவில் இலாபம் ஈட்டி நல்ல வீதத்தில் இலாபப்பங்குகளை தராத நிறுவனங்கள் தங்களின்  பங்குகளை வெளியிடும்போது பங்குகளின் முக மதிப்பில் கழிவு கொடுத்து விற்பார்கள். அதாவது பத்து ரூபாய் முகமதிப்புள்ள பங்கு எட்டு ரூபாய்க்கு விற்கப்படும். இதையே வேறு ஒரு ரீதியில் நல்ல பெயரோடு இயங்கும் நிறுவனம் தனது பங்கை வெளியிடும்போது முகமதிப்பை விட அதிக விலை வைத்து விற்பார்கள் . அதாவது பத்து ரூபாய் முகமதிப்புள்ள பங்கு பனிரெண்டு ரூபாய்க்கு விற்கப்படும். 

இதையே ஆங்கிலத்தில்,  முகமதிப்பில் குறிப்பிடப்பட்ட  அதே விலைக்கு விற்றால் Share at Par   என்றும் கழிவு கொடுத்து விற்றால் Share at Discount   என்றும்  கூடுதல் விலை வைத்து விற்றால் Share at  Premium  என்றும் கூறுவார்கள்.   

தொழில் முனைகிற எல்லோரும் பொதுமக்கள் இடம் பங்குகளை விற்கிறேன் என்று கூறி பணம் திரட்டிவிட முடியுமா? முடியாது. பங்குகளை பொது மக்கள் இடமிருந்து திரட்டும் நிறுவனங்கள் சில தகுதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

குக்கிராமத்தில் ஒரு தனி நபர் நடத்தும் ஒரு மளிகைக்கடையை பெரிய நகரத்துக்கு இடம் மாற்றி ஒரு பெரிய கடையாக்க விரும்புகிற  தனி நபர் நிறுவனம்  என்று அழைக்கப்படுகிற  Sole Proprietor நிறுவனம் இதற்கான கூடுதல்  முதலீட்டுத் தேவைக்காக பொதுமக்களுக்கு பங்குகளை விற்க இயலாது. அவ்விதம் தனது நிறுவனத்தை  அவர்  பெரிது படுத்த விரும்பினால் தன்னிடம் இருக்கும் அசையும் அசையாச் சொத்துக்களை விற்றுத்தான் முதலீட்டைப் பெருக்க முடியும். 

அதேபோல்   கூட்டு நிறுவனம் என்று அழைக்கப்படும் Partnership Companies ஆகியவைகளும் பங்குச் சந்தையில் பங்குகளை வெளியிட்டு விற்கும் அதிகாரம் படைத்தவைகள் அல்ல. 

இன்னும் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் என்ற அமைப்பில் இருக்கும் நிறுவனங்களும் பங்குச் சந்தையில் பங்குகளை வெளியிட்டு விற்க இயலாது. 

இந்த இடத்தில் நாம் அன்றாடம் பல இடங்களிலும் காணும் ஒரு வார்த்தை பற்றி விளக்க வேண்டி இருக்கிறது. உதாரணத்துக்கு மன்னார்  & கம்பெனி பிரைவேட் லிமிடெட் என்பது போல் பல வணிக நிறுவனங்களின்  விலாசபலகைகளை கண்டிருக்கிறோம்.  இப்படி பிரைவேட் லிமிடெட் என்பதன் பொருள் என்ன என்பது பலருக்குத் தெரிவதில்லை. மிகச் சுருக்கமாக,  இதன் விளக்கம் என்ன வென்றால் இந்த லிமிடெட்  அதாவது அளவுக்குட்பட்டது என்கிற வார்த்தை ஒரு நிறுவனத்தின் லயாபிளிட்டி என்கிற செலுத்தப்படவேண்டிய நிலுவைகளோடு சம்பந்தப்பட்டிருப்பதாகும்.   அதாவது அந்த கம்பெனி பிறருக்குக் கொடுக்க வேண்டிய லயாபிளிட்டி லிமிடெட்-  வரையரைகுட்பட்டதுதான் -  என்பதை புரிந்து கொண்டால் இதை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். 

ஒரு நிறுவனம் நடத்தப்படுகிறபோது அந்தத் தொழிலில் இழப்பு ஏற்பட்டு கடன்கார நிறுவனமாகிவிட்டால் ஒரு லிமிடெட் கம்பெனி தான் கொடுக்க வேண்டியவர்களுக்கு தன்னிடம் இருக்கக் கூடிய பங்கீட்டு மூலதனத்தின் அளவு வரையே திருப்பிச் செலுத்தக் கடப்பாடு உடையது என்றும், அந்த நிறுவனத்தின் பங்காளிகளாக இருக்கக்கூடியவர்களின் தனிப்பட்ட சொத்துக்களை விற்று அந்தக் கடன்களை திருப்பிச் செலுத்தத் தேவை இல்லை என்பதே இது பற்றிய விளக்கமாகும். அதாவது கடன் ஏற்படும் பட்சத்தில் போட்ட முதல் மட்டுமே போய்விடும் தன்னிடம் இருக்கும் மற்ற சொத்துக்கள் போய்விடாது . இப்படிப் பட்ட பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளும் வெளிச் சந்தையில் பொதுமக்களுக்கு தனது பங்குகளை விற்க முடியாது.  The liability of the shareholders to creditors of the Company is limited to the Capital originally invested . A shareholder’s personal assets are thereby protected in the event of Company’s loss or insolvency, but money invested in the Company will be lost. 

பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் பெரும்பாலும் குறிப்பிட்ட அளவுள்ள பங்குதாரர்களையே கொண்டு இருக்கும். மேலும் அவை குறிப்பிட்ட சில குடும்பங்களின்  உறுப்பினர்களையே பங்குதாரர்களாகக் கொண்டு இருக்கும்.  

Joint Stock Companies என்று அழைக்கப்படும்  பப்ளிக் கம்பெனிகள் மட்டுமே பங்கு சந்தைகளில் பதிவு செய்து கொள்ளவும் தனது பங்குகளை பொதுச் சந்தையில் விற்கவும் சட்டம் அனுமதித்து இருக்கிறது.  இப்படிப்பட்ட பெரிய கம்பெனிகள்,  பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்டு அவர்களின் பெயர் இடம் பெறுவதையே லிஸ்டட் கம்பெனி ( Listed Company) என்று அழைக்கிறோம். இப்படிப்பட்ட கம்பெனிகள் தங்களின் தொழிலில் நாட்டும்  வெற்றிக் கொடியைப் பொறுத்து பங்குச்  சந்தையில் இவற்றின் விலைகள் ஏற்ற இறக்கம் காணுகின்றன.  இவற்றின் தரத்துக்கு ஏற்ப கடந்த காலங்களில் இத்தகைய நிறுவனங்கள் சாதித்துக் காட்டிய சாதனைகளின் அடிப்படையில் இவற்றிர்க்கு A, A+,+,+, B,  B+,+,+, C, C+  ஆகிய தரங்களும் வழங்கப்படுகின்றன.  SEBI   என்கிற Securities and Exchange Board of India என்கிற நிறுவனமும் பங்குச்சந்தை நடைமுறைகளை கண்காணிக்கிறது. 

பங்குகளை வாங்கித்தரவும் விற்றுத்தரவும் பதிவுபெற்ற தரகர்கள் ( Brokers)  இருக்கிறார்கள். இந்தத் தரகர்கள் அவ்வபோது நம்மை அலைபேசியில் அல்லது இணையத்தில் தொடர்பு கொண்டு புதிதாக சந்தைக்கு வரும் நிறுவனங்களின் பங்குகள், ஏற்கனவே இருக்கும் நிறுவனங்கள்  மேலும் வெளியிட இருக்கும் பங்குகள், Fluctuations என்கிற ஏற்ற இறக்கங்கள், யூகங்கள் ஆகியவற்றை நமக்கு அறிவித்துக் கொண்டே இருக்கின்றன. 

புதிதாக உருவாக்கப்படுகிற ஒரு நிறுவனம் தனது பங்குகளை வெளியிட வேண்டுமானால் பெரும்பாலும் நாம் ஏற்கனவே பார்த்த முகவிலை மதிப்பே இதன் பங்கின்  விலையாகும். சரி !  புதிய கம்பெனி ! இதன் பங்குகள் சிலவற்றை வாங்கி வைத்துப் பார்க்கலாமே என்று சிலர் வாங்குவார்கள். பெரும்பாலும் தொடக்கத்தில்  பிரிமியம் இல்லாமல் முகமதிப்பிலேயோ அல்லது ‘கம்பெனி விளம்பரத்துக்காக’  டிஸ்கவுண்டோடோதான் பங்குகள் விற்கப்படும். இவ்விதம் புதிதாக உருவான கம்பெனி வெற்றிகரமாக தனது தொழில் நடவடிக்கைகளை கையாண்டு நடத்தி இலாபம் சம்பாதித்துக் காட்டி தனது பங்கை வாங்கியவர்களுக்கு நல்ல இலாபப்பங்கீடும் அளிப்பதாக பங்குச் சந்தையில் செய்திகள் வெளியாகும் பட்சத்தில் அந்தக் கம்பெனியின் பங்குகளின் முக மதிப்பு ஏற்றம்  காணத் தொடங்கும். பலர் போட்டி போட்டுக் கொண்டு அந்தக் கம்பெனியின் பங்குகளை வாங்குவார்கள். 

இதற்கு மாறாக, இந்த நிறுவனம் தனது தொழிலில் இலாபம் சம்பாதித்துக் காட்டாவிட்டால் இதனுடைய பங்குகளை வைத்துக் கொண்டு இருப்பதைவிட விற்றுவிடுவது நல்லது என்று இந்தப் பங்குகள் விற்பனைக்கு வரும். வந்த விலைக்கு  இவைகள் விற்கப்படும் நிலைக்குத் தள்ளப்படும்  முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும்.  

சில புதிய நிறுவனங்கள் புதிதாக அமைக்கப்பட்டாலும் ஏற்கனவே வளர்ந்து நிற்கும் ஒரு ஆலமர கம்பெனியின் அரவணைப்பில் வெளியாகலாம். உதாரணமாக டாடா கம்பெனி, அத்வானி கம்பெனி, அத்னான் குரூப். முருகப்பா குரூப், சோழமண்டல நிறுவனங்கள், பொள்ளாச்சி மகாலிங்கம் குரூப் என்றெல்லாம் ஏற்கனவே வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் நிறுவனங்களின்  நிழலில் உருவாகி வரும் கம்பெனிகள் முதல் ஓவரிலேயே சிக்சர் அடிக்கும். வெளியீட்டின் போதே இவைகள் பிரிமியம் விலை வைத்து விற்கப்படும். அதே போல் உடனே விற்றும் தீர்ந்துவிடும். 

ஏற்கனவே வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் நிறுவனங்கள்  தங்களின் தொழில் விரிவாகத்துக்காக இன்னும் அதிக நிதி திரட்ட விரும்புகிறது என்றால் பங்குகளை வெளியிடும். இவ்விதம் வெளியிடும் பங்குகள் உடைய விலையை நிறுவனம் ஆரம்பத்திலேயே அதிக பிரிமியம் விலை வைத்து விற்கும். உதாரணமாக பத்து ரூபாய் முக மதிப்புள்ள ஒரு பங்கு இரு நூறு ரூபாய் என்று கூவும் ; அவை உடனே விற்றும் போய்விடும். காரணம் நம்பிக்கை மட்டுமல்ல; யூகமும்தான். ஜெயிக்கலாம் என்று நமபபடும் குதிரையின் மேல் பணம் அதிகமாக கட்டுவது மாதிரித்தான் இதுவும்.   பங்கு மார்கெட் வர்த்தகத்தின் இயல்புகளைப் பார்த்து வரும் நாம் இப்போது முக்கியகட்டத்துக்கு வந்திருக்கிறோம். 

அதிக இலாபம் தரும் பங்குகளின் மதிப்பு சந்தையில் அதிகரிக்கும் என்கிற யூக எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரிக்கும் என்பதால் பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்க அதில் ஈடுபட்டுள்ளோர் முனைகிறார்கள்.  இப்படிப்பட்ட சூழலில்தான் இந்த வணிக அமைப்பின் மீது நாம் வைக்கத் தொடங்கும் விமர்சனங்கள்  வீதிக்கு வருகின்றன. பங்குகளின் விலையை செயற்கையாக அதிகரிக்க,  பலமுறை பல தந்திரங்கள் நடைபெற்று அம்பலத்துக்கு வந்திருக்கின்றன.  

பங்கு வணிகம் ஒரு சூதாட்டம் போன்றது என்கிற கருத்தை முன்னெடுத்து வைக்கிறவர்கள் பங்கு வணிகத்தில் ஈடுபட்டுள்ளோர் அனைவரும் பத்தினிகள் அல்ல என்று குறிப்பிடுகிறார்கள். வியாபாரத்தில் இதெல்லாம் சகஜம் என்று தங்களை சமரசப்படுத்திக் கொள்வோர் மனமறிந்து ஏமாற்றத் துணிவதற்கு பங்குச் சந்தை உரம் போட்டு வளர்க்கிற காட்சிகளை கண்டிருக்கிறோம். 

உண்மையில் இலாபம் சம்பாதிக்காமலேயே ஊடகம் மற்றும் அரசியல் செல்வாக்குகளின் துணையோடு செயற்கையாக  பங்குகளின் தேவைகளை வெற்று நிதிநிலை  அறிக்கைகள் மூலம் அதிகரித்து - ஏமாற்றும் நோக்கத்துடன் விலைகளை ஏற்றிவிட்டு - பொது மக்களை ஆசையுடன் வாங்க வைத்து பின்னர் விற்க முடியாமல் போகும்போது தங்களின் உழைத்து சேர்த்த சேமிப்பை இழந்து நடுத்தெருவில் நின்ற பலரையும் தற்கொலை செய்துகொண்ட சிலரையும்  சரித்திரம் சந்தித்து இருக்கிறது. இவற்றிர்க்கெல்லாம் அண்மைக்கால உதாரணமாக சத்யம் தொழில் நுட்ப நிறுவனத்தின் வீழ்ச்சியையும் ஹர்ஷத் மேத்தா மோசடி என்பவைகளையும் குறிப்பிட்டுக் காட்டலாம். 

சில நிறுவனங்கள்,  தங்களின் பங்கின் வெளிச்சந்தை  மதிப்பை இரட்டிப்பு அல்லது அதற்கு மேலும் போனஸ் என்று கூடக்  காட்டி  வெற்று வெளிச்சம் போட்டு விட இங்கே வழி இருக்கிறது. பங்குகளை வெளியிடும்போது பங்குகளுக்கு வைக்கப்படும் முகமதிப்பு விலை நாட்கள் செல்லச்செல்ல அதிகரிக்கப்படுகிறது. உண்மையாக விலை ஏறாவிட்டாலும் நிறுவனங்கள் தங்களின் நிலையை ஊதிக் காட்ட இவ்விதம் அதிகரிப்பதால் உண்மையான மதிப்பை உலகம் உணர முடியாமல் போகிறது. இப்படிப்பட்ட நிறுவனங்களை உருவாக்கும் புரமோட்டர்ஸ் நிறுவனங்கள் நிர்வாகத்தை தங்களின் கைகளில் வைத்துக் கொண்டு தங்களின் ஏனைய வணிகங்களுடைய நிதி நெருக்கடிகளுக்கு  பங்குகளை வெளியிட்டு பொதுமக்களை ஏமாளியாக்கும் வாய்ப்புகள் வாய்த்தது இந்தப் பங்குச் சந்தை.  

இப்படிப்பட்ட நிலைமைகள் வரும்போதுதான்  இஸ்லாம்  தடை செய்துள்ள பல அம்சங்கள் இங்கே தென்படுகின்றன என்று மார்க்க அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 

உதாரணமாக, ஒரு நிறுவனத்திடம்  இருக்கும் பங்குகளின் உண்மை மதிப்பு இருபது இலட்சம் ரூபாய் என்றால் அதை இரண்டு கோடி என்கிற அளவுக்கு மதிப்புக் காட்டி சொல்லப்படுகிறது. ஆகவே உண்மை மதிப்புக்கும் சொல்லப்படும் மதிப்புக்கும் இடையே ஒரு கோடியே எண்பது இலட்சம்    வித்தியாசப்படுகிறது. இத்தகைய நிறுவனங்களில் நாம் செய்யும் முதலீடு,  உண்மையின் அடிப்படையை தகர்த்துவிடுவதால் மார்க்கம் வகுத்த வணிக வழிமுறைகளுக்கு  மாறுபாடாக நிற்கிறது. இல்லாததை இருப்பதாக காட்டப்படுவதால் இஸ்லாமிய பொருளாதாரத்தின் வணிகத்தில் நேர்மை என்கிற அடிப்படை தகர்ந்து போகிறது. 

பங்குச் சந்தை மூலம்  முதலீடு செய்கிறவர்கள் அந்த   நிறுவனங்களின்  கணக்குகளை சோதித்துப் பார்க்கவோ அல்லது நிர்வாகத்தில் தலையிடவோ   அதிகாரம் பெற்றவர்கள் அல்ல. நமது கண் பார்வைக்குட்படாத ஒரு நிறுவனத்தில் முதலீடுகள் செய்வது அனுமதிக்கப்பட்டதல்ல. 

பங்கு சந்தை மூலம் முதலீடு செய்கிறவர்கள் தாங்கள் முதலீடு செய்துள்ள பணம் எத்தகைய பொருட்களை வாங்க/ விற்க பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிய மாட்டார்கள். ஒரு முஸ்லிம் பங்கு வாங்கிய நிறுவனத்தின் பணம் , மதுக்கடைகள் நடத்தவும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் இரவு நேர கேளிக்கைகள் நடத்தவும் கூட பயன்படுத்தப்படலாம். இப்படி தனது பணம் ஹராமான வணிக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறதா  அல்லது ஹலாலான வணிக நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுகிறதாஎன்று அறிய முடியாத நிலையில் கண்ணைக் கட்டி காட்டில் விடும் பங்குச் சந்தை வணிகத்தில் முஸ்லிம்கள் இறங்கக் கூடாது என்று பல மார்க்க அறிஞர்கள் மற்றும் பொருளியல் வல்லுனர்கள் சொல்கிறார்கள்.    

ஆனாலும் நமது கருத்தை சிந்தனைக்கும் விவாதத்துக்குமாக  இப்படி சமர்ப்பிக்கலாம். 

இந்த நவீன யுகத்தில் - புதுமைகளை புரட்டிப் போட்டுப் பார்க்கும் வணிக சமூகத்தில் வளர்ச்சியின் பாதையில் செல்ல மார்க்கம் ஒரு தடையாக இருக்குமா என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டி இருக்கிறது.  

ஆங்கிலம் படிப்பது ஹராம் என்று பத்வா கொடுத்து கல்வியில் நமது  சமூகம் பின் தங்கியது போல்  இன்றைக்குப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருக்கும் பங்கு சந்தைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு பெட்டிக் கடைகளையும் புரோட்டா கடைகளையுமே இந்த சமுதாயம் நடத்திக் கொண்டு இருக்க வேண்டுமா என்பதே நமது கேள்வி. ஒரு முஸ்லிமின் கரங்களில் என்றைக்கும் குஷ்கா போடும் கரண்டிதான் இருக்க வேண்டுமா? அவனது கரங்கள் பீடிதான் சுற்ற வேண்டுமா? அவன் தோல் தொழிற்சாலைக் கழிவுகளில் கிடந்துதான் சாக வேண்டுமா? அவன் கல்கத்தா வீதிகளில் கை ரிக்க்ஷா இழுத்துத்தான் பிழைக்க வேண்டுமா?

வளர்ந்து வரும் சமுதாயத்தில் தொலைக்காட்சிபெட்டிகள் இல்லாத முஸ்லிம்களின் வீடுகள் இல்லை; அலைபேசியும் தொலைபேசியும் இல்லாத இஸ்லாமியரை ஆள் வைத்துத்தேடவேண்டிய நிலை;  கணினி யுகத்தில் கல்வியும் கணினி மயமாகிவிட்டது; அதே கணினியில் கல்வியுடன் கூட கலவிக் காட்சிகளும் காட்டத்தானேப்படுகின்றன? அதற்காக கணினிகளைத் தூக்கி கடாசிவிட்டோமா? அவற்றின் பயன்பாட்டை ஒதுக்கிவிட்டோமா இல்லையே!  

விமானங்களில்  பயணிக்கும்போது, அனைவருக்கும் இலவசமாக மது பரிமாறப்படுகிறது. அடுத்த இருக்கையில் இருப்பவன் ஊற்றி ஊற்றிக் குடிக்கும்போது நாம் வேண்டாம் என்று சொல்லி ஒதுங்கிவிடுகிறோமே அதேபோல் நமக்கு வேண்டாதை ஒதுக்கி ஓரங்கட்டிவிட்டு நாமும் இந்த பங்கு சந்தையில் ஒரு அங்கமாகி நம்மை வளர்த்துக் கொள்ளக் கூடாதா?  பலாப்பழத்தில் சக்கைகளைத் தூக்கி வீசிவிட்டு சுளைகளை மட்டும் சுவைக்கும் பக்குவம் பங்கு சந்தை வணிகத்துக்கும் நமக்குப் பயன்படாதா? 

வங்கிகளில் வட்டியை ஒழித்து இஸ்லாமிய வங்கி முறையை மார்க்க அறிஞர்கள் தந்திருப்பது போல் இஸ்லாமிய பங்குச் சந்தை முறைகளையும் களைய வேண்டியவைகளைக் களைந்து வடிவமைத்து வழங்கினால் அது சமுதாயம் நவீன பொருளாதார வளர்ச்சியுடன் இணையாக  போட்டி போட்டு வளர வழி வகுக்கும்தானே!   எடுத்த எடுப்பிலேயே ஒன்றைத் தவறு என்று சொல்ல ஆயிரம் காரணங்கள் சொல்லும் மார்க்க அறிஞர்கள் அந்தத் தவறுகளைக் களைய வழிகளையும் சொல்லித் தர மாட்டார்களா? இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு விலங்கிடாதீர்கள்; சிந்தித்து அல்லாஹ் ஏற்கும் வழியில் உயரப் பறப்பதற்கு ஏற்ற சிறகாக ஆக்கித் தாருங்கள் என்று மார்க்க நல் அறிஞர்களைக் கேட்டுக் கொள்கிறேன். 

இன்ஷா அல்லாஹ் மீண்டும் ஒரு தலைப்பில் சந்திப்போம். 

இபுராஹீம் அன்சாரி

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் – 34 12

அதிரைநிருபர் பதிப்பகம் | June 28, 2014 | , , ,


பங்குச் சந்தை முதலீடுகள் பங்கமா? வாழ்வின் அங்கமா?

அண்மைக் காலமாக நம்மிடையே அதிக அளவில் பேசப்படும் பொருள்களில் பங்குச் சந்தை என்பதும் ஒன்றாகிவிட்டது. நம்மில் ஒரு சிலர் இந்த பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபடவும் ஆரம்பித்து விட்டார்கள்; ஈடுபட்டால் என்ன என்று யோசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்; ஈடுபடும் முன்பு இதைப் பற்றி தெரிந்து கொள்ளாலாம் என்று முயலத்தொடங்கி இருக்கிறார்கள். எளிமையான முறையில் பங்கு சந்தைகளைப் பற்றி ஒரு சிறு அறிமுகமும் இது பற்றி இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் எந்த திசை நோக்கி வழிகாட்டுகின்றன என்பது பற்றியும் விவாதிக்கலாம். இதைப் பற்றி விரிவாகவே பேசவேண்டி இருப்பதால் ஒரு சில அத்தியாயங்கள் தேவைப்படும். 

ஆட்டுச்சந்தை, மாட்டுச் சந்தை, காய்கறி சந்தை என்பது போல் பங்குச் சந்தையும் வணிக நிறுவனங்களின் பங்குகளை வாங்க அல்லது விற்க உதவும் சந்தைதான். ஆனால் மற்ற சந்தைகளுக்கு ஒரு வேலி அடைத்த அல்லது காம்பவுண்டு சுவர் எடுத்த குறிப்பிட்ட இடம் இருக்கும். ஆனால் பங்கு சந்தைக்கு குறிப்பிட்ட இடமெல்லாம் கிடையாது. இது உலகளாவியது; ஊடகங்களைச் சார்ந்து நிற்பது; வலைதள இணையங்களோடு இணைந்திருப்பது.

குறிப்பாக இன்றைய தகவல் தொழில்துறை நுட்ப வளர்ச்சியில் கண் இமைக்கும் நேரத்தில் பங்குகளை வாங்கவும் விற்கவும் முடியும். பம்பாய் பங்கு சந்தை , சென்னை பங்கு சந்தை என்றெல்லாம் இடங்கள் காட்டப்படுகின்றனவே என்று நம்மில் சிலர் கேட்கலாம். அந்த கட்டிடங்கள் மற்றும் இடங்கள் எல்லாம் பங்குகளின் பரிவர்த்தனைகளை பதிவு செய்து கொள்ளும் அலுவலகங்கள்தானே தவிர அந்த இடங்களுக்கு நேரடியாகச் சென்றுதான் வாங்க விற்க வேண்டுமென்று கட்டாயமான அவசியம் இல்லை. அந்த இடங்களில் கூடும் கூட்டம் முக்கியமாக பங்குகளின் நிலவரங்களையும் ஏற்ற இறக்கங்களையும் அறிந்து கொள்ளக் கூடுகின்ற கூட்டமே தவிர பங்குகள் வாங்க வேண்டுமானால் கூடுவாஞ்சேரியிலிருந்தும் வாங்கலாம் விற்க வேண்டுமென்றால் கோதண்டாபுரத்திலிருந்தும் விற்கலாம். 

இன்னும் பங்கு சந்தை பற்றியும் முதலீடுகளைப் பற்றியும் நம் அறிந்து கொள்ளும் முன் சில கருத்துக்களை முன்னெடுத்து வைப்பது அவசியமாகிறது. முக்கியமாக சேமிப்பு (SAVINGS) என்பதற்கும் முதலீடு (INVESTMENT) என்பதற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டும் ஒன்றல்ல; சேமிப்பாக இருப்பதெல்லாம் முதலீடாகாது. அதே நேரம் , சேமிப்பு இல்லாவிட்டால் முதலீடு செய்ய இயலாது. ஒரு காலத்தில் நமது பெண்கள் அடுக்குப் பானைகளில் அரிசிக்குள் அல்லது மிளகாய்க்குள் l “சிறுவாடு” சேர்த்து வைப்பார்கள். “சல்லி முட்டியில்” சில்லறைக் காசுகளைப் போட்டு வைப்பவர்களும் உண்டு. நமது செலவு போக மிகுதியை பிற்காலத் தேவைக்கு வேண்டுமென்று தனது கைகளில் மறைத்து வைத்திருப்பது சேமிப்பு. அப்படி சேமித்ததை வீணாக கையில் வைத்துக் கொள்ள வேண்டாமே என்று ஏதாவது செல்வத்தை வளர்க்கும் துறைகளில் அதை போடுவது முதலீடு. இப்படி செய்யும் முதலீடு தங்கத்தின் மீதாக இருக்கலாம்; நிலத்தின் மீதாக இருக்கலாம்; வீட்டின் மீதாக இருக்கலாம்; பரஸ்பர நிதிகளின் மீதாக இருக்கலாம்; பங்குச் சந்தையில் விற்கப்படும் பங்குகளின் மீதாகவும் இருக்கலாம். சேமிப்பு, எப்போது ஒரு வருமானத்தைப் பெறும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட ஆரம்பிக்கிறேதோ அப்போதுதான் அது முதலீடாகிறது.

பொதுவாக “மண்ணில் போட்டதும் பொன்னில் போட்டதும் வீணாகி விடாது” என்கிற கருத்து மக்களிடையே நிலவுகிறது. நிலம், வீடு போன்ற அசையாச் சொத்துக்களின் (Immovable Properties) மீது நாம் செய்யும் முதலீடு, காலக்கெடுவில் பலமடங்கு வளரக் கூடியது. பல நேரங்களில் இப்போதுள்ள வளரும் பொருளாதாரத்தில் நமது பொருளாதார நிலமைகளை எட்டாத உயரத்துக்குத் தூக்கிவிட்டு விடக் கூடியது. வானம் பார்த்த பூமிகளை வைத்துக் கொண்டு வறுமையில் வாடிய பலர் வீட்டில் இன்று இரண்டு மூன்று இன்னோவா கார்கள் நிற்கின்றன. மானாவாரி தென்னந்தோப்புகள் இன்று சராமாரியாக வீடுமனைகளாக்கப்பட்டு பல புதிய கோடீஸ்வரர்கள் உருவாகி இருக்கிறார்கள். என்றோ தனது பாட்டன் காலத்தில் வாங்கிப் போடப்பட்ட நிலங்கள் இன்று பலருக்கு பணம் காய்க்கும் மரமாகிவிட்டது. 

 இஸ்லாமிய பொருளாதார கண்ணோட்டத்தின்படி பிறருடைய நிலம் அல்லது வீட்டை தவறான முறையில் அபகரிக்காமல் இருந்தால்- அனாதைகளின் சொத்துக்களுக்கு அநீதி செய்து சுருட்டாமல் இருந்தால் – பொய் பித்தலாட்டம் புரட்டுக்களைக் கூறி சொத்துக்களை விற்காமல் இருந்தால் சுவையான குடிநீர் உள்ள இடம் என்று கூறி சுண்ணாம்புக் கல் விளையும் நிலங்களை தலையில் கட்டாமல் இருந்தால்- அவைகள் ஹலால் ஆனவையே. இத்தகைய அசையாச் சொத்துக்களின் மீது நாம் முதலீடு செய்யும் போது நமது கண் முன்னே நமது கைகளாலேயே இவற்றை செய்து கொள்கிறோம்; நமக்குத் தெரிந்தே இதற்கான பரிவர்த்தனைகள் யாவும் நடைபெறுகின்றன என்ற அளவிலும் இத்தகைய முதலீடுகள் அனுமதிக்கப்பட்டவையே. 

 ஆனாலும் இவைகளை வாங்குவதற்கு பெரிய அளவு பணம் தேவைப்படும்; நமக்குத் தேவையான நேரத்தில் இலகுவாக விற்க இயலாத தன்மைகள் கொண்டவை; சிறிய வருமானம் உள்ளவர்களால் இவற்றில் முதலீடு செய்வது இயலாததாக இருக்கும் என்கிற காரணங்கள் இத்தகைய முதலீடுகளின் மீது முனைவோர்களின் சட்டையைப் பிடித்து பின்னோக்கி இழுத்து, அசையாச் சொத்துக்களின் மீதான முதலீடுகளைப் பற்றி சாதாரண மக்களை தலையைச் சொரிந்து யோசிக்க வைக்கிறது.

அடுத்து, அசையும் சொத்துக்கள் என்று (Movable Properties) என்று அழைக்கப்படுகிற தங்கம், வெள்ளி, நகைகள், வங்கி நிரந்தர வைப்புக்கள், கடன் பத்திரங்கள், பங்குகள் ஆகியவை அசையும் சொத்துக்களாகும். இவற்றுள் வங்கி வைப்புக்கள், கடன் பத்திரங்கள் ஆகியவற்றின் மீது வட்டியின் வாசம் வீசுவதால் அவற்றை இஸ்லாமியப் பொருளாதாரம் ஒதுக்கி வைக்கிறது. 

தங்கத்தின் மீதான முதலீடு ஒரு நல்ல முதலீடாகக் கருதப் படுகிறது. ஆனாலும் “ஆளைப் பார்த்தியா! அப்படியே சரம் சரமாத் தொங்குது” என்று புரளி பேசும் பலருடைய கண்களுக்கு முன்னாலும் இரு சக்கர வாகனங்களில் வந்து கழுத்தறுப்பதுடன் இருட்டில் உள் நுழையும் கள்வர்களுக்கு முன்னாலும் தங்கத்தை பாதுகாத்து வைப்பது கடினமாக இருக்கிறது. தங்கத்தின் இன்றைய கடுமையான விலை மதிப்பால் திருடுபவர்கள் தங்கத்தையே குறிவைத்துத் திருடுகிறார்கள். காரணம் Less Luggage ! More Comfort ! கொள்கைதான். பூட்டியிருக்கும் வீடுகளில் வைத்துவிட்டுப் போகும் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது. பயணங்களில் மயக்க பிஸ்கட் கொடுத்து அகப்பட்டதை அபகரிப்பதும் விபத்துக்களில் காப்பாற்ற வருபவர்கள் போல் கழுத்தில் காதில் கிடப்பதை அறுத்துக் கொண்டு ஓடும் மனித மிருகங்களும் அதிகரித்து விட்டார்கள். ஆகவே தங்கத்தின் மீதான முதலீடு, ஆசையும் அநாகரிகமும் அரசாளும் சமூகத்தில் ஒரு முழுப் பாதுகாப்பான முதலீடாகாது.

அடுத்தபடியாக, தங்கத்தை பெண்கள் மட்டுமே அணிய முடியும். ஏதாவது தேவைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் – அதைப் பெண்களிடம் கேட்டால் உடனே கழற்றிக் கொடுப்பதற்கு எல்லோரும் கால் சிலம்பைக் கழற்றிக் கொடுத்த கண்ணகிகளல்ல. நகையை நாம் கேட்டால் நவீன கண்ணகிகள் முதலில் “ நஹி “ என்றுதான் சொல்வார்கள். அப்படி நகைகளை அணிந்து கொண்டிருக்கும் பெண்கள் அவற்றைக் கழற்றும்போது விடும் கண்ணீரின் அளவு சிரபுஞ்சி மழையையும் மிஞ்சிவிடும். “கேட்கும் போதெல்லாம் அதை கழற்றித் தந்தேனே! இதைக் கழற்றித் தந்தேனே !" என்று கூறும் பெண்கள் தங்கத்தை வாங்கும்போது மனமகிழ்வும் விற்கும்போது மனச் சோர்வும் அடைகிறார்கள். இதனால் குடும்ப வாழ்வில் தொய்வு விழ சாத்தியக்கூறுகள் உள்ளன. 

பல நல்ல மகிழ்வான குடும்பங்கள் தங்கத்தை விற்க நேரிடும்போது இழக்கக் கூடாததை இழந்து விட்டதாக உணர்கிறார்கள். "எங்க வாப்புச்சா தந்தது – எங்க வாப்பா பினாங்கிலேயிருந்து கொண்டு வந்தது" என்றெல்லாம் தங்க நகைகளின் மீது பெண்களுக்கு செண்டிமெண்டல் அட்டாச்மென்ட் உள்ளதைப் பார்க்கிறோம். அத்துடன் கல்யாணம் முடிக்க வேண்டிய குமர்களை வைத்துக் கொண்டு நகைகள் மீது கை வைப்பதா என்றும் – இப்போது விற்றால் பிறகு தேவைக்கு வாங்க முடியுமா என்றும் பெண்கள் கேள்விக் கணை தொடுப்பார்கள் என்பது சமுதாயம் தழுவிய பொருளாதாரத்தின் உண்மையின் வடிவம்.

ஆகவே தங்க முதலீடு என்பது கூடியவரை ஒரு வழிப்பாதைதான். ஒரு நகையை தட்டாரப்பிள்ளையிடம் கொடுத்து அழித்துவிட்டு, "ஆமா உறுத்துது- புடவையைக் கொழுவிக் கொழுவி இழுக்குது" என்று கூறி மாற்றி வேறு நகைகள் செய்ய வேண்டுமானால் அவைகளை மனக் கஷ்டம் இல்லாமல் பிரிய நமது பெண்கள் உட்படுவார்களேயன்றி நமது பொருளாதார நடவடிக்கைகளுக்காக தங்கத்தை விற்க பெரும்பானமையான பெண்கள் மனதார உடன்படவே மாட்டார்கள். 

ஆகவே தங்கத்தின் மீதான முதலீடு என்பது கை நழுவிப் போன சேமிப்பு. ஆகையால் தங்கத்தின் மீதான முதலீட்டை பெரும்பாலும் செலவுக் கணக்கில்தான் எழுதிவைக்க வேண்டும். வேண்டுமானால் ஆறுதலுக்காக, சேமிப்பு ரூபத்தில் ஏற்படும் செலவு என்று சொல்லிக் கொள்ளலாம். இன்னொரு வார்த்தையில் சொல்லப்போனால் தங்கத்தின் மீதான முதலீடு ஒரு தூங்கும் முதலீடு. தங்கத்தின் மீதான முதலீடு, நம்முடனே தங்கும் முதலீடு. நம்மைவிட்டுப் பிரியா முதலீடு. இந்த முதலீட்டால் வருமானம் வர வாய்ப்பில்லை. ஆனாலும் உடனடித் தேவைகள் ஏற்படும் காலத்தில் கை கொடுத்துக் காப்பாற்றும் கைகண்ட மருந்துதான் தங்கத்தின் மீதான தனித்தன்மையான தன்னிகரற்ற முதலீட்டு முறை என்பது மறுக்க இயலாது.

முயூசுவல் பண்ட் என்று அழைக்கப்படும் பரஸ்பர நிதிகளையும் முதலீட்டில் ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளலாம். அண்மைக் காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த முதலீட்டு முறை மக்களை மடையர்களாக்குவதில் முன்னிலை வகிக்கிறது. பெரும் விளம்பர உக்திகளாலும் வீடு தேடி வரும் விற்பனைப்பிரதிநிதிகளாலும் தூக்கிப் பிடிக்கப்படும் இந்த முதலீட்டுமுறை அடிப்படையிலேயே ஒரு மாயையை தோற்றுவிக்கிறது. இதன் முறையென்ன வென்றால் வர்த்தக வங்கிகளும் , முதலீட்டு நிறுவனங்களும் பல கார்பரேட் கம்பெனிகளும் முயூசுவல் பண்ட் என்கிற முறையில் பொது மக்களின் சேமிப்புகளைப் பெற்றுத் திரட்டி அவ்விதம் திரட்டப்பட்ட முதலீட்டுப் பணத்தைக் கொண்டு பங்கு சந்தையில் தங்களது இஷ்டத்துக்கு பங்குகளை வாங்கி விற்று, கடன் பத்திரங்களை வாங்கி வைத்து , நிறுவனங்களுக்கு வட்டிக்குக் கொடுத்து அதனால் இலாபம் திரட்டி அதை முதலீட்டாளர்களுக்கு ஈவு வைத்துக் கொடுக்கும் முறையே ஆகும். இந்த முறையில் ஏற்றம் பெற்றவர்களைவிட ஏமாந்தவர்களே அதிகமென்று இந்த முறையில் முதலீடு செய்து அனுபவப்பட்டவர்கள் சொல்கிறார்கள். இந்த முறையின் அடிப்படை என்னவென்று நமது மொழியில் சொல்லப்போனால் 'ஊரார் வீட்டு கோழியை அறுத்து உம்மா பெயரில் பாத்திஹா ஓதுவதுதான்' என்று கூறலாம். எப்படியும் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று அலைபவர்கள் பலி கொடுக்கப்படும் இடம்தான் இந்த மியூசுவல் பண்ட் முறையாகும். வாசமுள்ள வடை வைத்திருக்கிறார்கள் என்று இதில் வாயை வைத்து மாட்டிக் கொண்ட எலிகள் ஏராளம். வட்டியின் இழை இந்த முறையில் ஊடுருவி இருப்பதால் முஸ்லிம்கள் கவனமாகக் கையாளவேண்டிய முதலீடு இந்த முறையாகும். 

அடுத்து எஞ்சி இருப்பது பங்கு வர்த்தகம் மற்றும் பங்குச் சந்தை முதலீடுகள்தான். பங்குகளை ஒரு ஊகம் நிறைந்த துணிகரமான முதலீடுகள் (Risky investments) என துணிந்து சொல்லலாம்; வகைப்படுத்தலாம். இவ்வகை முதலீடுகளில், இலாபம் வர வாய்ப்பு உள்ள அதே அளவு நஷ்டம் ஏற்பட்டு, போட்ட முதல் ( capital) ஸ்வாஹா ஆகவும் வாய்ப்பு உள்ளது. முன்பெல்லாம், நடுத்தர மக்கள் பங்கு வர்த்தகத்தில் அதிக ஈடுபாடு காட்டியதில்லை. ஆனால் ஊதிப் பெருக்கும் ஊடகங்களால் நிலைமைகள் மாறி வருகின்றன. மக்கள் இன்று விரைவாக பணத்தைப் பெருக்க விரும்புகிறார்கள். எனவே, பங்குச்சந்தை முதலியவற்றில் துணிந்து ஆழம் தெரியாமலேயே காலை விடுகின்றனர் . எனவே, பங்குச் சந்தை பற்றிய அறிவு இன்று அவசியமாகிறது. பங்கு சந்தை பற்றிய இஸ்லாமியப் பொருளாதாரப் பார்வையும் அவசியமாகிறது. 

இவற்றை விவாதிக்கும் முன் பங்கு என்றால் என்ன? பங்கு சந்தை என்றால் என்ன? அவை எப்படி இயங்குகின்றன? ஆகிய கேள்விகளுக்கு விடை ? 

இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம்.

இபுராஹீம் அன்சாரி

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் – 33 15

அதிரைநிருபர் பதிப்பகம் | June 21, 2014 | , , , ,


ன் ட்டைனும் ருநாம்

உலகப் பொருளாதாரம்,  இன்றைய நவீன  உலகில் வட்டியை அடிப்படையாகக்கொண்டே இருக்கிறது என்பது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும்.  வட்டி பல அரிதாரங்களைப் பூசி ஆலவட்டம் போட்டு வருகிறது. வட்டிக்கு கடன் வழங்கும் முறை காலப்போக்கில்  பல வடிவங்களைப் பெற்றுள்ளது அவற்றுள் Mortgage, Finance, Leasing, Hire  Purchase , Hypothecation,  போன்றன அவற்றில் சில வடிவங்களாகும். அவற்றுள் ஒரு வடிவமே Credit Card என வழங்கப்படுகின்ற கடன் அட்டை என்கிற நடைமுறையாகும் . 

இப்படி வட்டி போடும் நவரச வேடங்களில் கடன் அட்டை என்கிற வேடம் ஒரு கவர்ச்சிகரமான வேடமாகும் ; இடுப்பில் இரண்டு இன்ச் கச்சையும் மார்பில் மாராப்பும் இல்லாமல் மறைக்க வேண்டியதை மறைக்காமல் குலுக்கு ஆட்டமும் குத்தாட்டமும் ஆடி வல்லவர்களைக் கூட வளைத்துப் போடும் வன்மை நிறைந்த வட்டியின் வனப்பான  அவதாரமே கடன் அட்டை. இன்றைய தனிமனித பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது இந்தக் கவர்ச்சி உடை அணிந்த கடன் அட்டை கலாச்சாரம்தான். 

கடன் பற்றிய கடந்த அத்தியாயத்தில் ஒரு மனிதருக்கு அத்தியாவசியமான தேவை ஏற்படுகிற போது கடன் வாங்குவதில் தப்பில்லை என்கிற கருத்தை குறிப்பிட்டோம். ஆனால் தேவை ஏற்படாமலேயே கடன் வாங்கும் அளவுக்கு மனதை தயார்ப் படுத்துவதே கடன் அட்டையின் தனிப்பட்ட தன்மையாகும். அரை வயிறுக் கஞ்சியாவது குடிக்க வேண்டுமென்று அரிசியை கடன் வாங்கும் நிலைமையில் இருக்கும் ஒருவனிடம் கடன் அட்டை இருந்தால் அவன் ஐ பேடு வாங்கி மச்சினிக்குப் பரிசாக அனுப்பத துணிவான்.    

உலகத்தின் வரலாறுகளைப் பார்த்தால் ஒழுக்கத்தின் அழிவுகள் அனைத்துமே உருவாகும் பகுதி மேற்கத்திய நாடுகளே என்பதில் சற்றும் சந்தேகம் இருக்க இயலாது. நாகரிக வளர்ச்சி என்கிற பெயரில் மேற்கத்திய நாடுகளில் தோன்றத் தொடங்கிய   பழக்கங்களே மெல்ல மெல்ல  உலகெங்கும் பரவி குவலயத்தை ஆண்ட பல நாடுகளை குப்புறத் தள்ளிய வரலாறுகள் பல இருக்கின்றன. அவ்வகையில் மேற்கில் தோன்றிய ஒரு பழக்கமே கடன் அட்டை பயன் படுத்தும் கலாச்சாரமாகும்.  அத்துடன் அமெரிக்க மற்றும் யூத மூளைகள் ஒன்று சேர்ந்து ஈன்ற குழந்தையே இந்த கடன் அட்டை எனும் இந்த  ஈனக் குழந்தை.  

பொருளாதார நடவடிக்கைகளின் தொடக்கம் எது என்று பார்ப்போமானால் அது மனிதர்களுக்கு ஏற்படும் தேவையும் ஆசையும்தான்.  இந்தத் தேவைகளை அத்தியாவசியத் தேவை (Necessities)  என்றும் ஆடம்பரத்தேவை (Luxuries) என்றும்  பொருளாதார இயல் பகுத்து இருக்கிறது. கையில் உள்ள காசுக்குத் தகுந்தபடி தனது செலவினங்களைத் திட்டமிடும் மனிதன் முதலில் தனது அத்தியாவசியத்தேவைகளுக்கே அந்தக் காசை பயன் படுத்துவான். ஆடமபரத் தேவைகளையும் , ஆசைப்படும் தேவைகளையும் கையில் காசில்லாமலேயே நிறைவேற்றிக் கொள்ளும் நிலைமைகளை உருவாக்குவது கடன் அட்டை கலாச்சாரமாகும். 

இந்த கடன் அட்டையின் ஆபத்தை அறிந்தவர்கள் அவற்றைக் கண்டு ஒதுங்கிப் போனாலும் நிதி நிறுவனங்களும் வர்த்தக வங்கிகளும் வீட்டுக் கதவுகளைத் தட்டுவது மட்டுமல்லாமல் நேரில் சந்தைப்படுத்தும் விற்பனைப் பிரதிநிதிகளை நாம் வேலைபார்க்கும் அலுவலகத்துக்கும் அனுப்புவதுடன்  அலை பேசி மற்றும் இணைய தளங்களின் முகவரி  மூலமாகவும் கவர்ச்சியான விளம்பர  உக்திகளைக் கையாண்டு இவர்கள் விரிக்கும் வலையில் பல மான்களும் மீன்களும்  வீழ்ந்துவிடுகின்றன.  கடன் அட்டைகளை வைத்திருப்பதை ஒரு பெருமையாகக் கருதும் மனப்பான்மையிலும்  பலர் இந்த வலையில் வீழ்ந்துவிடுகின்றனர். 

உலகிலேயே  மிகவும் கொடியது என்ன வென்று கேட்டால் நல்லது போலத்தோன்றும் கெட்டதுதான். நல்லவர்கள் போலத் தோன்றும் கெட்டவர்களே உலகில் ஆபத்தானவர்கள். வெறும் பனை ஓலைதானே  என்று கை வைக்கப்போனால் அது பச்சைப் பாம்பாகி கண்களைக் கொத்திவிடும்  உதாரணம் இந்தக் கடன் அட்டைக்குக் கச்சிதமாகப்  பொருந்தும். 

உண்மையில் கடன் அட்டை என்பது நுகர்வோரை கடன்காரராக மாற்றும் ஒருவகையான சமூகக் கொடுமையாகும். சம்பாதிப்பதை உறிஞ்சும் அட்டைப் பூச்சியே இந்த கடன் அட்டை. பணம் இல்லாத நிலையில் மனோதத்துவரீதியாக ஒரு தைரியத்தைக் கொடுத்து செலவு செய்யத் தூண்டும் ஒரு இழைதான் இந்த கடன் அட்டை. தங்களின் பர்சுகளில் இருக்கும் கடன் அட்டைகளின் மதிப்பு ஏதோ ஒரு தனிமனிதன் தான் தேடி சேமித்து வைத்திருக்கும் செல்வத்தின் மதிப்பு அல்ல என்பதை உணராமல்  செலவழித்துவிட்டு அதிலிருந்து விடுபட முடியாமல் பல மில்லியன் மக்கள் இன்று உலகெங்கும்  பொருளாதார சிக்கலில் ஆழ்ந்து மூழ்கிவிட்டதாக ஒரு ஆய்வு சொல்கிறது.  ஒரு வகையில் இது ஒரு நாகரிகமான  அடிமை சாசனம். 

கடன் அட்டை கலாச்சாரத்தை ஆதரித்துப் பேசுவோர் கூறும் முதல் வாதம் பெரும் தொகைகளை ரொக்கமாக கைகளில் வைத்திருப்பது ஆபத்தானது. அதற்கு பதிலாக பெருந்தொகை மதிப்புக்கு ஒரு கடன் அட்டையை வைத்திருப்பது பாதுகாப்பானது என்பதாகும்.  ஆனால் உலகெங்கும் கடன் அட்டையின் இரகசிய சங்கேத வார்த்தைகள் திருடப்பட்டு பலரின் பணம் பதைக்கப்பதைக்க களவாடப்படும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றனவே! கூட்டம் கூட்டமாக இப்படிப்பட்ட கொள்ளைக் கும்பல் பிடிபடுகின்றனவே!  போலியாக கார்டுகள் தயாரிக்கப்பட்டு பல இலட்சங்கள் சுருட்டப்படுகின்றனவே ! ஆகவே திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.   

பணத்தைப் பாதுகாப்பதற்காக கடன் அட்டையைப் பயன்படுத்துவோர் காசோலைகளைப் (Cheques) பயன்படுத்தலாம் அல்லது (Traveller’s Cheques)  சுற்றுலா காசோலைகளைக்  கூட பயன்படுத்தலாம். மேலும் கிரெடிட் கார்டு என்கிற ஷைத்தானுக்கு ஒரு குணமுள்ள  சக்களத்தி உண்டு. அதன் பெயர் டெபிட் கார்டு (Debit Card). இந்த டெபிட் கார்ட் என்பது நமது கணக்கில் எவ்வளவு பணம் இருப்பு இருக்கிறதோ அந்த அளவுக்கு மட்டும் நம்மால் நுகர் பொருட்களையோ அல்லது சேவைகளையோ வாங்கிக் கொள்ள உதவும். பணத்தை ரொக்கமாக தூக்கி சுமக்க அஞ்சுவோர் இந்த டெபிட் கார்டுகளை பயன்படுத்தலாம். இப்படி டெபிட் கார்டுகளைப் பயன்படுத்திக் கொள்வதில் எவ்வித குற்றமோ தடையோ நாம் காண இயலாது. வெளியூர்களுக்குச் செல்பவர்கள் தங்களுடைய வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி அதை தங்களது டெபிட் கார்டுகளில் வரவு வைத்துக் கொண்டு செல்லமுடியும். பாதுகாப்பாகவும் இருக்கும் ; தேவைக்கும் பயன் படுத்தலாம். 

கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாமென்று வாதிடுவோர் வைக்கின்ற இன்னொன்று வாதம் கடன் அட்டைகள் இருந்தால் அவைகளைப் பயன்படுத்துவதன்  மூலம் இணைய தளங்கள்  மூலம் பணம் செலுத்தி நாம் செல்ல முடியாத இடங்களில் இருந்து கூட நுகர் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதாகும்.  உதாரணமாக விமான டிக்கெட்டுகள் முதல் இரயில் மற்றும் பேருந்து  டிக்கெட்டுகள் வரை இவ்விதம் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. மேலும் இணைய தளங்கள் அல்லது தொலைக் காட்சிகள் மூலமாக  விளம்பரம் செய்யப்படும்  டெலி மார்கெடிங் மூலமாகவும் பொருட்களை வாங்க கடன் அட்டைகள்   பயன்படுத்துவது வசதியாக இருக்கிறது என்றும்  நகராட்சி வரிகள்,  தொலைபேசி,   மின்வாரியப்  பட்டியல் தொகைகளைக் கூட  செலுத்திவிட வசதியாக இருப்பதாகவும் வாதிடுகிறார்கள். ஆனால் மேற்கண்ட அனைத்து வசதிகளையும் நம்மிடம் நமது கணக்கில் இருக்கும் பணத்தின் அளவுக்கு டெபிட் கார்டுகள் மூலமும் நாம் பெற்றுக் கொள்ள இயலும்.இதன்மூலம் கடன் வாங்க வேண்டிய நிலைமையும் தவிர்க்கப்படும் ;  வட்டி எனும் வஞ்சகனின் ஆட்சியும் இம்முறையில் இல்லை. 

இஸ்லாமியப் பொருளாதாரத்தின் பார்வையில் கடன் அட்டைகளை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டிய காரணங்கள் யாவை?  

பொதுவாக வட்டியுடன் தொடர்புடைய எவ்வித கொடுக்கல்வாங்களாக இருந்தாலும் அது இஸ்லாமியப் பொருளாதாரப் பார்வையில் அது தடுக்கப்பட வேண்டும்; தவிர்க்கப்பட வேண்டும் என்பதே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதை தடுத்துக் கொள்ள வேண்டுமென்பதன் அடிப்படைக் காரணம். 

கடன் அட்டைகளை தேவைகளுக்காகப்  பயன்படுத்திக் கொண்டு பின் அவ்விதம் பயன்படுத்திய தொகைக்கான வட்டி கணக்கிடப்படும் தேதிக்கு  முன்பே  பணத்தை கடன் அட்டைகளை வழங்கும் நிறுவனத்திடம் செலுத்திவிட்டால் வட்டி இல்லாமல் தவிர்த்துக் கொள்ளலாமே! என்று சிலர் வாதிடுகிறார்கள். இந்த வாதம் இரு விதங்களில் தவறு என்று இஸ்லாமியப் பொருளாதார அறிஞர்கள் கூறுகிறார்கள். 

ஒன்று,  கிரெடிட் கார்டுகளை பெற்றுக் கொள்ளும் முன்பு அவற்றை வழங்கும் நிறுவனத்துடன் நாம் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்கிறோம். அந்த ஒப்பந்தத்தின் ஷரத்துக்களின்படி தாமதமாகும் நாட்களுக்கு குறிப்பிட்ட  சதவீதத்தில்  வட்டி செலுத்த நாம் ஒப்புக் கொண்டு கை எழுத்திட வேண்டும். இத்தகைய கையெழுத்திடும் ஒப்பந்தம் இஸ்லாமிய பொருளாதார விதிகளின்படி ஹராமானது/ விலக்கப்பட வேண்டியது. 

இரண்டாவதாக, நாம் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி வாங்கும் பொருள்கள் மற்றும் சேவைகளுக்குரிய பணத்தை வட்டி கணக்கிடபப்டும் தேதிக்கு முன்பே செலுத்திவிடுவோம் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் கிடையாது. சில நேரங்களில் நமது பணக் கையிருப்பு எதிர்பாராதகாரனங்க்களால்  குறைவாக இருந்துவிட்டாலோ  அல்லது நமது கவனக் குறைவாலோ குறிப்பிட்ட தேதிக்குள் பணம் செலுத்தாவிட்டால் வட்டியின் வலையில் விழும் வாய்ப்புக்கள் அதிகம். ஒருமுறை வட்டி,  நமது வாழ்வில் அரங்கேற்றம் ஆகிவிட்டால் பலமுறை அது பாலச்சந்தர்  படம் போல நமது கதவுகளைத் தட்டும்.   ஆகவே நெருப்போடு  விளையாடுவதை தவிர்த்துக் கொள்வதே நல்லது. 

வட்டியைப் பற்றி இறைவன் தனது திருமறையிலும் பெருமானார் ( ஸல்) அவர்கள் தனது நபி மொழிகளிலும் தந்திருக்கும் எச்சரிக்கைகளை ஏற்கனவே தனி அத்தியாயத்தில் கண்டு இருக்கிறோம் . மீண்டும் கீழ்க்கண்டவற்றை நினவு படுத்திக் கொள்வோம். வட்டியோடு தொடர்புடைய கடன் அட்டையை வாங்குவதையும் பயன்படுத்துவதையும் தவிர்த்துக் கொள்வோம். 

“யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய்) எழ மாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், ‘நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான் ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்” (அல்குர்ஆன் 2:275)

“வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியோரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” என்பதை அறிவிப்பவர்  ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த அத்தியாயத்தில் பங்கு சந்தைகள்    பற்றிப் பார்க்கலாம்.
தொடரும்
இபுராஹீம் அன்சாரி

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்- 32 [அவசியம் கருதி தொடர்கிறது...] 19

அதிரைநிருபர் பதிப்பகம் | June 14, 2014 | , , ,


கடனில்லா வாழ்வு !

அன்பானவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும். 

இந்த அத்தியாயத்தை எழுதத் தொடங்குமுன் உங்களுடன் ஒரு வார்த்தை! ஏற்கனவே வெளியான இந்தத் தலைப்பிட்ட தொடர் இன்ஷா அல்லாஹ் விரைவில் நூல் வடிவம் பெற இருக்கிறது. அதற்குமுன் நூலில் சேர்க்கப்பட வேண்டிய சில விடுபட்ட உட்தலைப்புகளின் அத்தியாயங்களையும் எழுதி சேர்த்துவிட வேண்டுமென்று சில அறிஞர்களும் பேராசிரியர்களும் தந்த ஆலோசனையின் அடிப்படையில் சில விடுபட்ட தலைப்புக்கள் இந்தத் தொடரில் இன்னும் சில வாரங்கள் தொடரும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
==================================================================

இன்றைய உலகப் பொருளாதாரம் கடன் முறைகளை அடிப்படையாகச் சார்ந்தே இருக்கிறது. நாட்டுக்கு நாடு கடன் – தனி மனிதருக்கு மனிதர் கடன் – அசையும் அசையாச்சொத்துக்களின் மீது பிணைக் கடன்- சொந்தக்காரர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து தேவைகளுக்குப் “புரட்டும்” தற்காலிகக் கடன்- என்றெல்லாம் கடன் என்பது அன்றாட வாழ்வின் ஒரு அம்சமாகவே  மாறிவிட்டது.  கல்யாணத்திலிருந்து பிரசவம் வரை – சாவு முதல் சமயச் சடங்குகள் வரையும் - கார் வாங்குவது முதல் கையேந்தி பவனில் சாப்பிடுவது வரை  கடன் வாங்காமல் காரியம் நடத்த முடியாது என்கிற மனப்பான்மை மக்களிடம் வளர்ந்து விட்டது.   

கடன் ஏன் ஏற்படுகிறது ?  

தனது வருமானத்துக்குள் வாழ்க்கைச் செலவுகள் அடங்காத போது அல்லது தனது வருமானத்துக்குள் தனது வாழ்க்கைச் செலவுகளை அடக்கிக் கொள்ள இயலாத போது வரவுக்கும் செலவுக்கு இடையே ஏற்படும் இடைவெளியை இட்டு நிரப்ப கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. அளவறிந்து வாழாத சிலரின் வாழ்க்கை கடன் வாங்கியே நகர்த்தப் படுகிறது. அளவோடு செலவு செய்து சிக்கனத்துடன் வாழ்வோரின் வாழ்க்கை கடன் வாங்க தேவை இல்லாதததுடன் வருமானத்தில் மிச்சம் பிடித்து அது சேமிப்பாகவும் உருவெடுக்கிறது. ஒருவருக்கு கடன் ஏற்படுவதற்கும் எற்படாததற்கும் அவரவருடைய தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் , ஆடம்பரம் அல்லது எளிமை போன்ற குணநலன்களே காரணங்களாக அமைந்து விடுகின்றன.

இன்றைய நவீன உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் ஆகிய ஷைத்தானின் பொருளாதாரப் பிரதிநிதிகளால் ஆட்டிப்படைக்கப்பட்டு  கடன் வாங்குவதை ஊக்கப்படுத்தும் பொருளாதார அமைப்பில் கடன் இல்லாமல் வாழ்வது கஷ்டம் என்று ஆகிவிட்டது. கதவைத்தட்டி கடன் வேண்டுமா என்று கேட்கும் இன்றைய நிலையில் கடன் வாங்குவதும் ஒன்றும் சஞ்சீவி மலையை தலையில் தூக்கிவைத்துக் கொண்டு வருவது போல் அப்படி ஒன்றும் கஷ்டமாக இல்லை. காலண்டரில் தேதிகளின் தாள்களைக் கிழிப்பது போல் நவீன உலகில்  இலகுவாகப் போய்விட்ட  சமாச்சாரமே கடன் வாங்குதும் என்று ஆகிவிட்டது. அரை மணி நேரத்தில் கடன் என்று அழைக்கும் விளம்பரங்கள் அங்கங்கே தொங்குகின்றன. கடன் தருவதற்காகவே “கடன் திருவிழா” என்று பொருள் படும் “லோன்  மேளா” என்றும் வருடாவருடம் வண்ணமயமாக நடத்தபபடுகின்றன. இதற்குக் காரணம் பொது மக்களின் மீது கடன் தரும் அமைப்புகளுக்கு ஏற்படும் இரக்கமல்ல . கறக்க கறக்க சுரக்கும் வட்டி என்கிற அமுத சுரபிதான் காரணம். வட்டியின் அடிப்படையிலான பொருளாதாரத்தில் அது ஒரு அச்சுறுத்தலாக இருந்தாலும் வானத்தில் போகிற வட்டிச் சனியனை வாவென்று வரவேற்று ஏணி வைத்து  தங்களின் இல்லங்களுக்குள் இறக்குவதற்கு எல்லோரும் தயாராக இருக்கிறார்கள். கடன் தரும் நிறுவனங்களை சிலர் ஏதோ காமதேனுக்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் “ இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே! இதுதான் உலகம்!  வீண் அனுதாபம் கண்டு நீ ஒருநாளும் நம்பிடாதே! “ என்று பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாஷையில்தான்  பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. 

உலகநாடுகள் ஒன்றை ஒன்று அடிமைப்படுத்தவும் தான் இட்ட  கட்டளைக்கு அடிபணியும் அடிமை நாடாக ஆக்கிக் கொள்ளவும் கடனே அவர்களது கையில் உள்ள கருவியாக இருக்கிறது. கடன் மூலமான வட்டி என்பது ஒருவகையில் கத்தியின்றி இரத்தமின்றி கைப்பற்றப்படும்  காலனித்துவமாகும். இத்தகைய கடன் அமைப்பில் மூன்றாம் உலக நாடுகள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன. பணக்கார நாடுகளிடம் கை நீட்டிக் கடன் வாங்கிய ஏழை  நாடுகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போதே கடன்காரர்களாகவே பிறக்கின்றன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. நோட்டுக்களை கடனாக வாங்கிய காரணத்தால் நீட்டுகிற இடத்தில் கையெழுத்து இடுகிற நாடுகள் தங்களது பொருளாதார வளங்கள் சுரண்டப்படுவதை கண்டும் காணாமல் இருப்பதே நவீன காலனியாதிக்கமாகிவிட்டது. 

தனிமனித வாழ்வும் கிட்டத்தட்ட வட்டியின் அடிப்படையிலான கடன்களால் வளங்கள் சுரண்டப்பட்டே நிற்கின்றன. வட்டிக்கு மேல் வட்டி கட்டி வளங்களை கொட்டிக் கொடுத்து, வாழ்விழந்த பல குடும்பங்கள் நம் கண் முன்னே சாட்சியாக நிற்கின்றன. வட்டியைப் பற்றி இஸ்லாம் கூறும் எச்சரிக்கை மிகுந்த   பொருளாதாரக் கருத்துக்களை இதற்கு முன்னரே வேறு ஒரு அத்தியாயத்தில் நாம் கண்டு இருக்கிறோம். 

கடன் பற்றி இஸ்லாமியப் பொருளாதார சிந்தனை ஓட்டங்கள் எவ்வாறு அமைந்து இருக்கின்றன என்பதை நாம் காணலாம். 

கடன் வாங்கிக் காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதை இஸ்லாமியப் பொருளாதாரம் தடை ஒன்றும் செய்துவிடவில்லை. வட்டியை அடிப்படை யாகக் கொண்ட கடன் நடவடிக்கைகளையே இஸ்லாம் தடை செய்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் ஒருவருக்கொருவர் தருவதையும் பெறுவதையும் தடை செய்யவில்லை. கடன் கொடுக்கல் வாங்கலின் போது முறையாக எழுதி வைத்துக் கொள்ளும்படியும் அதற்காக சாட்சிகளை நியமித்துக் கொள்ளும்படியும் இஸ்லாமியப் பொருளாதாரம் வரையறுத்து இருக்கிறது.  இறைவனின் திருமறையின் 2:282 (அல்பகரா)வின் வசனங்கள் இதுபற்றி மிக நீண்ட விளக்கம் தருகிறது. இதே அத்தியாயத்தின் 2:283 ஆம் வசனம் கடனுக்காக அடமானமாக ஒரு பொருளைப் பெற்றுக் கொண்டும் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொள்ளலாமென்றும் அனுமதியளிக்கிறது. அதே போல் அடமானப் பொருளை  அச்சுப் பிசகாமல் அப்படியே திருப்பிக் கொடுத்து விட வேண்டுமென்றும் வரையறுக்கிறது.  

பெருமானார்  (ஸல்) அவர்களின் வண்ணமிகு வரலாற்றை- வாழ்க்கைச் சரித்திரத்தைப் படிக்கும் போது அவர்கள் ஒரு யூதரிடம்  தமது கேடயத்தை அடமானம் வைத்து கோதுமையை கடனாகப் பெற்றதாக அறிகிறோம்.  

கடன் வழங்குவது ஒருவகையில் மனிதாபிமான நேசத்தின் அடிப்படையில் மனிதருக்கு மனிதர்  உதவியும் ஒத்துழைப்புக்குமே அல்லாமல்  அப்படிக் கடன் கொடுப்பது பிழைப்புக்கான ஒரு வழியல்ல என்பதே இஸ்லாத்தின் கடன் பற்றிய பொருளாதார நிலைப்பாடு . கடன் கொடுத்து உதவுவது ஒரு சமூக நலப் பணி என்பதே இஸ்லாத்தின் மனித நேயத்தின் அடிப்படையிலான பொருளாதாரக் கோட்பாடு.  ஒருவர் கண் முன்னால் கஷ்டப்படும்போது கையில் தனது தேவைக்கு அதிகமான  பொருளை வைத்திருக்கும் மற்றொருவர் சகோதர மனப்பான்மையோடும் நட்போடும் தேவைப்படுபவருக்கு பிரதிபலன் கருதாமல் கொடுத்து உதவ வேண்டுமென்பதே கடன் பற்றிய இஸ்லாமியப் பொருளாதாரத்தின் புரட்சிகரமான சிறப்பம்சம்.  ஒருவருக்கொருவர் நண்மையான காரியங்களில் உதவிக் கொள்வது சமுதாயத்தில் அன்பை அதிகப் படுத்தும். இத்தகைய பண்புகளை வெளிப்படுத்தும் பல நபி மொழிகளை இங்கு சுட்டிக் காட்டலாம். 

யாரேனும் சிரமப்படுபவருக்கு அவகாசம் வழங்கினால் அல்லது அவரது கடனைத் தள்ளுபடி செய்தால் எந்த நிழலும் இல்லாத இறுதி நாளில் அர்ஷின் நிழலின் கீழ் அவருக்கு அல்லாஹ் நிழல் தருவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.  நூல்:திர்மிதி

மற்றொரு ஹதீஸில்

ஒருவர் மரணித்து விட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), 'நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும் போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்" என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி

பெருமானார்  (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். “எவர் ஒரு முஸ்லிமுடைய உலகக் கஷ்டங்களில் ஒன்றை நீக்க உதவுகிறாரோ அவரின் மறுமை நாள் கஷ்டங்களில் ஒன்றை அல்லாஹ் நீக்கிவிடுவான் . மேலும் எவர்  கஷ்டத்தில் அவருக்கு (உதவி செய்து)  வசதி ஏற்படுத்திக் கொடுக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் இவ்வுலகிலும் மறுமையிலும் அவருடைய (கஷ்டங்களை) இலகுவாக்கிக் கொடுப்பான்." (முஸ்லிம்) 

மேலும்,

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதாக, இப்னு மசூத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் “ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு இரு தடவைகள் கடன் வழங்கினால் அவற்றுள் ஒரு தடவை அவர் சதகா என்கிற  தர்மம் செய்தவரைப் போன்றவராவார்" (இப்னு மாஜா, இப்னு ஹிப்பான்)

திருமறை குர்-ஆன் இதுபற்றி இவ்வாறு குறிப்பிடுகிறது .

“அல்லாஹ்வுக்கு நீங்கள் அழகிய கடன் கொடுத்தால் அதனை அவன் உங்களுக்கு பன்மடங்கு அதிகமாக்கித் தருவான். மேலும் உங்கள் பாவங்களைப் புறக்கணித்து விடுவான். (அத்தகாபுன்  64: 17)

அதே நேரம் தவிர்க்க முடியாத சந்தப்பங்களில் அத்தியாவசியத் தேவைகளுக்காக தனது கைகளில் ஒன்றுமில்லா விட்டால் தான் கடன் வாங்க வேண்டுமென்பதும் இஸ்லாத்தின் பொருளாதார நிலைப்பாடு. பட்டினி இருக்கும் நிலையில் கடன் வாங்கி பிரியாணி வாங்கி சாப்பிட வேண்டுமென்று  எண்ணுதல் கூடாது; மாறாக கஞ்சி காய்ச்சிக் குடித்து பசியை நீக்கிக் கொள்ளலாம் என்பதே  இஸ்லாம் அனுமதித்து இருக்கும் கடன் வாங்குவது பற்றிய கோட்பாடு. 

அதே நேரம் கடன் கிடைக்கிறதே என்பதற்காக யானையைக் கடனாகக் கொடுத்தாலும் சிலர் வாங்கத் தயாராக இருப்பார்கள். கடன்  கிடைக்கிறதே என்று வாங்கக் கூடாது தேவைப்பட்டால் மட்டுமே வாங்க வேண்டுமென்பது ஒரு பொதுவான நியதி. ஒருவருக்கு அதிகமானவர்கள் கடன் தரத் தயாராக இருக்கிறார்கள் என்றால் அவருக்கு சமூகத்தில் நற்பெயர் இருக்கிறது என்று பொருள். அந்த நல்ல பெயரை தொடர்ந்து கட்டிக் காப்பாற்ற வேண்டும். பலருக்குக் கொடுக்கப்பட்ட  கடன் , கிணற்றில் போட்டது என்றும் அதை காந்திக் கணக்கில் எழுதவேண்டுமென்றும் சிலர் சமூகத்தில் பெயர் சம்பாதித்து வைத்திருப்பார்கள். கடனை வாங்கும் போதே அதை  திருப்பித்தரும் நிய்யத்துடனும் (Intention) திட்டத்துடனும் (Re-Payment Plan) வாங்க வேண்டும். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதில் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென்று இஸ்லாம் வற்புறுத்துகிறது. 

அபு ராபி ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் 

“ஒருமுறை ரசூல் ( ஸல்) அவர்கள் ஒருவரிடம் ஒரு இளம் ஒட்டகத்தை கடனாகப் பெற்றார்கள். அவர்களுக்கு சதகாவாக சில ஒட்டகங்கள் கிடைத்த போது, என்னை அழைத்து ,  தான் கடன் வாங்கிய அந்த மனிதருக்கு ஓர் இளம் ஒட்டகத்தை திருப்பிக் கொடுத்து கடனை அடைக்குமாறு வேண்டினார்கள். அதற்கு நான் ஆறு வயதுள்ள ஒரு தரமான ஒட்டகம் இருக்கிறது என்று கூறினேன். அதையே அந்த மனிதருக்குக்குக் கொடுத்துவிடுங்கள்; உண்மையில் உங்களில் சிறந்தவர்  தான் பெற்ற கடனை சிறந்த முறையில் திருப்பி செலுத்தியவரே ஆவார்” என்றார்கள். (அஹ்மத்). இதுவே இஸ்லாமியப் பொருளாதார முறைகளின் உயரிய வழிமுறையாகும்.

கடனை வாங்கிவிட்டு அதனை திருப்பித் தராத பழக்கம் உடையவர்களுடைய சமூக அந்தஸ்து பாதிக்கப்படும். அத்தகையோரைக் கண்டாலே பலர் விலகி ஓடுவார்கள். சில சந்தர்ப்ப  சூழ்நிலைகளால் வாங்கிய கடனை சொன்னபடி திருப்பித் தர இயலாத சந்தப்பங்கள் சிலருக்கு ஏற்படுவது இயல்பு. அப்படிப்பட்டவர்கள் கடன் கொடுத்தவர்களை அணுகி,  தங்களுடைய நிலைமைகளைச் சொல்லி  இன்னும் தவணை வாங்கிக் கொள்ளலாம். “ஒருவரை நல்லவர் என்று சொல்ல வேண்டுமானால் அவர் அண்டை வீட்டுக்காரராக இருந்திருக்க  வேண்டும்; அல்லது நீண்ட தூரம் அவருடன் பயணம் செய்திருக்க வேண்டும்; அல்லது அவருடன் கடன் கொடுக்கல் வாங்கல் செய்திருக்க வேண்டும்”  என்று ஒரு அறிஞர் கூறி இருந்தார். இந்த மூன்று நிலைகளை அவர் குறிப்பிட்டு இருப்பதற்குக் காரணம்,  இந்த மூன்று சூழ்நிலைகளிலும் ஒருவருடைய உண்மையான இயல்புகளை இலகுவாகப்  புரிந்து கொள்ள இயலும் என்பதால்தான்.

வசதியுள்ளவர் (கடனை) இழுத்தடிப்பது அநியாயமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அவர்கள்  அறிவித்தார்கள் . நூல்: திர்மிதி

வசதி இருந்தும் கடனை அடைப்பதில் அக்கரை காட்டாதவர்களை வேண்டுமென்றே தாமதம் செய்பவர்களை கடுமையான வார்த்தையைக் கொண்டு கடனை வசூலிப்பதற்கு உரிமையுண்டு. என்று பெருமானார் ( ஸல் ) அவர்கள் கூறியதாக  அபூ ஹுரைரா (ரலி) அவர்கள்  அறிவித்தார்கள். நூல்: புகாரி

எப்போது கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் கடன் வாங்கியாவது அந்த செலவை செய்யத்தான் வேண்டுமா அல்லது நமது கைகளில் பணம் வரும் வரை அந்தத் தேவையைத் தள்ளிப் போடலாமா என்று தனது மூலவளங்களின் அடிப்படையில் நன்றாக சிந்திக்க வேண்டும். கடன் வாங்குவதை எப்போதும் கடைசி  ஆயுதமாகவே கையாள வேண்டும். சிக்கனமாக செலவு செய்பவர்களுக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை பெரும்பாலும் ஏற்படுவதில்லை என்பது வாழ்க்கையின் அனுபவ பாடம். தேவையற்ற செலவுகளை ஊதாரித்தனமாக செய்பவர்கள் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைகளுக்குத் தள்ளப்படுகிறார்கள். 

இன்றைய சமூகத்தில் ஆடம்பரமான வீடுகளைக் கட்டுபவர்கள், திருமணச் செலவுகளை திணறடிக்கும் வகையில்  செய்பவர்கள், தேவையற்ற நுகர்வோர் பொருள்களை வாங்குபவர்கள், ஊரார் முன் தன்னைப் பெரிய ஆள் என்று காட்டிக் கொள்ளும் பெருமைக்காக ஆடம்பர ஆடை அணிகலன்களை தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் வாங்குபவர்கள்தான் கடன் சுமையில் மாட்டிக் கொள்கிறார்கள்.  இஸ்லாம் அனுமதிக்காத பல சடங்குகளை செய்பவர்களும் கடன்களில் மாட்டிக் கொள்கிறார்கள். கடன் வாங்கியாவது கந்தூரிக்குச் செல்லும் குடும்பங்கள், கடன் வாங்கியாவது பெரிய மனுஷியானதற்கு சடங்கு சுத்தும் குடும்பங்கள், கடன் வாங்கியாவது ஊரைக் கூட்டி ஒன்பது முறை கல்யாண விருந்து வைக்கும் குடும்பங்கள், கடன் வாங்கியாவது பிறந்த நாள், திருமண நாள் போன்ற நாட்களைக் கொண்டாடும் குடும்பங்கள்  கடனாலேயே அழிந்து போன கதைகள் நாம் வாழும் சமுதாயத்தில் நமது  கண்களால்  காணும் கதைகளாகும். 

கடனில் மூழ்கியவர்களை சமுதாயம் மட்டுமல்ல வீட்டில் பெற்ற பிள்ளைகள் கூட மதிப்பது இல்லை. என்னை பெற்றவர், ஊரெங்கும் கடனைத்தவிர எனக்கு என்ன தேடிவைத்துவிட்டுப் போனார்    என்று கடன்காரர்கள் மறைந்த பிறகும் இழி சொல்லை வாங்குவார்கள். கடனில்லாமல் வாழ்ந்து பிள்ளைகளுக்கும் வாரிசுகளுக்கும் சொத்து சுகம் தேடிவைத்து விட்டு மரணிப்பவர்களுக்கு மரணித்த பின்னும் கிடைக்கும் மரியாதை,     கடன்களைத் தேடிவைத்துவிட்டு மரணிப்பவர்களுக்குக் கிடைக்கிறதா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.  

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜை நிறைவேற்றும்போது கூட கடனில்லாமல் இருந்தால்தான் ஹஜ்ஜுகூட கடமையாகிறது என்று அல்லாஹ் விதித்து இருக்கிறான்.  

எவர்  மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறாரோ அவரின்   சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவர்  திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை பாழாக்கும் நோக்கத்துடன் கடன் வாங்குகிறாரோ அல்லாஹ்வும் அவரை  பாழாக்கி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அவர்கள்  அறிவித்தார்கள்.  நூல்:புகாரி

“கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் “ என்று கம்ப ராமாயணம்,  கடன் பட்டோரின் நிலைய இலக்கிய ரீதியாகக் காட்டுகிறது. ஆனால் கீழ்க் கண்ட இரு சம்பவங்களை நாம்  நபி ( ஸல் ) அவர்களின் வாழ்விலிருந்தும் வாக்கிலிருந்து அறியும் போது அல்லாஹ் நம்மை , நமது கடன்களில் இருந்து காப்பானாக!  என்றே  இறைஞ்சுகிறது.

நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவுக்கு தொழுகை நடத்துவதற்கு முன் அவன் நயவஞ்சகனா? அல்லது தனக்குத் தெரியாமல் இஸ்லாத்திற்கு மாறு செய்பவனா என்று கேட்காமல் , அவர் மீது கடன் இருக்கிறதா? என்றுதான் தனது ஏனைய தோழர்களைப் பார்த்து முதலில்  கேட்பார்கள். கடன் எதுவும் அவர் மீது இல்லை என்றால் மட்டும்தான்  தொழுகை நடத்துவார்கள். இல்லையெனில் நீங்களே  தொழுதுகொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு சென்றுவிடுவார்கள் என்று படிக்கும்போது தான் உயிருடன் இருந்தபோது வாங்கிய கடனை அடைக்காமல் வைத்துவிட்டு மரணிப்பவர்களில் ஒருவராக நம்மை ஆக்கிவிட வேண்டாமென்று இறைவனை நோக்கி ,  நமது நெஞ்சங்கள்  கடன் இல்லாமல் நாம் கண்ணை மூட வைக்க  வேண்டுமென்று இறைஞ்சுகிறது. 

இதன் பிறகு காலத்தின் வளர்ச்சியில்,  இஸ்லாம் வலுப் பெற்ற பிறகு இஸ்லாத்தின் பொது உபகார  நிதியின் அளவு  உயரத் தொடங்கிய பின்-நாட்டுக்கென்று சொத்துக்கள் வந்த பின், இறந்தவர்களுடைய  கடனை அடைப்பது அரசின் தலையாய பொறுப்பு என்று ஆக்கப்பட்டுவிட்டதால் அவரது கடனுக்குப் பொறுப்பு ஏற்பட்டுவிடுகிறது என்கிற திருப்தியில், இறந்தது யாராக இருந்தாலும் தொழுகை நடத்துவார்கள் என்றும் அறிகிறோம். 

இவ்விரண்டு செய்திகளும் மரணிப்பவர்கள் கடனில்லாமல் அல்லது அவரது கடனை திருப்பி செலுத்த பொறுப்பேற்றுக் கொள்பவரின் பொறுப்பில் மரணிக்க வேண்டுமென்ற இஸ்லாத்தின் பொருளாதார கொள்கையை வலியுறுத்துகின்றன. நவீன சட்டங்களில் பல கோடி ரூபாய்களை திட்டமிட்டு கடன் வாங்கி விட்டு அனைத்தும் நஷ்டமாகி விட்டது என்று ஜோடனைகள் ஜோடித்து ஐ..பி. என்கிற இன்சால்வென்சி கொடுக்கிற காட்சிகளைக் காண்கிறோம் . இந்தப் பருப்பு,  இஸ்லாத்தில் இறைவனின் சன்னிதானத்தின் முன் வேகாது.  அல்லாஹ் பாதுகாப்பானாக! 

ஆகவே இஸ்லாமியப் பொருளாதார சிந்தனைகளின் படி  முடிந்த வரை கடன் வாங்குவதை தவிர்த்து கொள்வது நல்லது. கடன் வாங்கிய பிறகு அதனை திருப்பிச் செலுத்த முடியாமல் கடன் கொடுத்தவரிடம் கொடுத்த வாக்கை மீறுவதும் பொய்யும் கூறுவது கடன் வாங்கியவருக்கு  ஏற்படுகிறது. இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் தானே கடனை விட்டும் பாதுகாப்பு தேடியிருக்கிறார்கள்.இதனைத்ட்ட்ட்தான் , 

ஆயிஷா(ரலி) அவர்கள் இவ்வாறு அறிவித்தார்கள். "இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களைவிட்டும் கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் துஆச் செய்தார்கள்.

'தாங்கள் கடனை விட்டும் அதிமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன?' என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது 'ஒரு மனிதன் கடன் வாங்கும்போது  பொய் பேசுகிறான்; வாக்களித்துவிட்டு அதை மீறுகிறான்" என்று நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள். நூல்: புகாரி

பெருமானார் ( ஸல்) அவர்கள் வாழ்வில் நடந்த இந்த கீழ்க்கண்ட சம்பவத்தை ஹஜரத் முகமது இப்னு அப்துல்லாஹ் இப்னு ஜஷாஷ் சுட்டிக்காட்டிக் கூறுகிறார்கள் . “ ஒரு நாள் நாங்கள் ஜனாசாக்கள் வந்தால் அவைகளை வைக்கும் இடத்தில் கூடி இருந்தோம். எங்களுக்கு மத்தியில் பெருமானார் ( ஸல் ) அவர்கள் அமர்ந்து இருந்தார்கள். திடீரென்று அவர்கள் வானத்தைப் பார்த்துவிட்டு பின் பார்வையைத் தாழ்த்தினார்கள். அதன் பின் தனது கைகளை நெற்றிப் பொட்டுக்களின் மீது வைத்து சுபஹானல்லாஹ்! சுபஹானல்லாஹ் ! என்று கூறியபடியே , “ எவ்வளவு கடுமையான எச்சரிக்கை வந்திருக்கிறது “ என்று கூறினார்கள். அன்று பகலும் அந்த இரவிலும் மறுநாள் காலையும் கூட நாங்க எதுவும் அவர்களிடம் கேட்கவில்லை. மெளனமாகவே இருந்தோம். பிறகு நான் பெருமானார் ( ஸல் ) அவர்களிடம் என்ன கடுமையான எச்சரிக்கை இறங்கியுள்ளது என்று ஆவலுடன் கேட்டேன். அதற்குப் பெருமானார் ( ஸல்) அவர்கள்,   “ கடனைப் பற்றித்தான் கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது.  இந்த முகமதின் உயிர் யார் கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக யாரேனும் ஒரு மனிதர் அல்லாஹ்வின் பாதையில் உயிர் துறந்து ஷஹீதாகினாலும் அவர் மீது கடன் இருந்து அது நிறைவேறும் வரை அவர் சுவர்க்கத்தில் நுழைய முடியாது“ என்று கூறினார்கள். (அஹ்மது). 

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் நாம் வாழ்வில் எவ்வளவுதான்  நன்மைகள் செய்து இருந்தாலும் நாம் திருப்பிக் கொடுக்க வேண்டிய கடன் தீர்க்கப்படாமல் இருந்தால் இறைவனின் முன்னாள் நாம் குற்றவாளியே என்பதும் சுவர்க்கத்தில் நுழையும் அருகதையை நாம் இழந்து விடுவோம் என்பதும் தான்.

கடனால் ஏற்படும் இன்னல்களை விட்டும் நாம் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவோமாக! கடனில்லாத நிலையில் மரணத்தைத் தரும்படி இறைவனிடம் இறைஞ்சுவோமாக! 

இன்ஷா அல்லாஹ் அடுத்து நம்மில் பலரின் பர்சுக்குள்ளேயே இடம் பிடித்து இருக்கும்   நவீன கால ஷைத்தான் ஆகிய கடன் அட்டைகளைப் பற்றிப் பேசலாம். 

இபுராஹீம் அன்சாரி