Showing posts with label இந்து. Show all posts
Showing posts with label இந்து. Show all posts

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்... தொடர் - 6 18

அதிரைநிருபர் பதிப்பகம் | February 02, 2013 | , , , ,



தொடர் : ஆறு
மதங்களும் பொருளாதார இயலும் (தொடர்ச்சி)

கடந்த வாரம் இந்து மதத்தின் சில பொருளாதாரம் தொடர்பான சிந்தனைகளை அறிய சற்று நேரத்தை செலவழித்தோம். இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் இந்துக்கள் என்பதால் இதைப் பற்றி அறிய இன்னும் சற்று நேரத்தை ஒதுக்க வேண்டியதாக  இருக்கிறது. 

ஏற்கனவே சொல்லப்பட்டது  போல் இந்து மதம் பல வித மக்களையும் உள்ளடக்கி, பகுத்து, தொகுத்து, வகுத்து, பிரித்து அதேநேரம் ஒரே மத அடையாளம் வழங்கி அரவணைத்து செல்கின்ற மதம்.  இதன் பலம் என்று சொல்லப்படுவது கூட்டுக் குடும்ப முறையாகும். சில மேலைநாடுகள் இந்த இந்தியப் பண்பாட்டைப் பார்த்து வியப்பதும் பாராட்டுவதும் கூட உண்டு.  இத்தகைய கூட்டுக் குடும்பங்களை ஒழுங்கு படுத்துவதற்காகவே இந்து கூட்டுக் குடும்ப சட்டம் (Joint Hindu Family Act) என்கிற சட்டமும் கோலோச்சுகிறது. 

இதன்படி குடும்பத்தின் மொத்த சொத்துக்கள் ஒரு குடும்பத்தலைவரால் நிர்வகிக்கப்படும். அவருக்கு கர்த்தா என்று பெயர். குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களுக்கு வேண்டிய நல்லது கெட்டதுகளையும் தேவைகளையும்  இந்த குடும்பத்தின் தலைவரே  கவனிப்பார். முடிவு செய்வார். இப்படி தலைமைப் பொறுப்பில் இருக்கும் தலைவர் மரணிக்க நேரிட்டால் அவருக்கு அடுத்த வாரிசாக இருப்பவர்களில் மூததவர்தான் பொறுப்புக்கு வருவார். தன்னிச்சையான பொருளாதார நடவடிக்கைகளை குடும்ப உறுப்பினர் எவரும் குடும்பத்தலைவரின் அனுமதி இன்றி செய்யக்கூடாது ; செய்ய முடியாது. கிட்டத்தட்ட ஆங்கில ஐரோப்பிய சரித்திரங்களில் காணப்படும் Primogeniture (law or custom of the First born  to inherit the entire estate)  எனப்படும் முறை பின்பற்றப்படும். அதாவது குடும்பத்தின் தலைப்பிள்ளையே குடும்பத்தின் மொத்த சொத்துக்களையும் நிர்வகிக்கும் முறை. அவரே நாட்டாமை – அவரே தேவர் மகன்.- அவரே குடும்பத்தலைவன் – அவரே தாய்க்குத்தலைமகன்- அவரே பெரியண்ணன். ( இப்போ புரிஞ்சிருக்குமே! )

இந்த அமைப்பால் கூட்டுக்  குடும்ப ஒற்றுமை- இந்தியப் பண்பாடு ஆகியவை புகழப் பட்டாலும் குடும்ப உறுப்பினர்களின் குறிப்பாக இளைய ஆண்களின் தனித்தன்மை வெளிப்படும் தொழில்  முயற்சிகள்       ( Entrepreneurship ) தடைப்பட்டன. மேலும் பொறுப்புக்கு ஆண்கள் மட்டுமே வரமுடியும் என்பதால் திறமைகள் இருந்தாலும்  பெண்கள், குடும்பத்தின் தலைமை நிர்வாகத்துக்கு வரமுடியாமல் பெண்ணடிமைத்தனம் மேம்பட்டது.  

அடுத்ததாக விதவைகள் மறுமணம் செய்வது இந்து சாத்திர முறையில் தடுக்கப்பட்டதால் விதிவசத்தால் விதவைகளாகிவிட்ட  பெண்களின் வாழ்வுச் செலவுகள் மற்றும் பொருளாதாரத் தேவைகள்  கேள்விக்குறியாகி  வறுமை வளர்ந்தோங்கியது. தாலி அறுத்தோருக்கு இட்லிக் கடை வைப்பது  தாசில் உத்தியோகம் என்று ஒரு புகழ் பெற்ற வசனம் பலரின் காதுகளில் ஒலித்திருக்கும்.  இத்தகைய  குடிசைப் பொருளாதார நடவடிக்கை மூலம் வயிற்றைக் கழுவலாமே தவிர வளர்ந்தோங்கிட இயலாது.  

வரதட்சணை , வருட சீர், குழந்தைப் பேறு செலவுகள் போன்றவை   காரணமாக பெண்ணைப் பெற்றவர்கள் தங்களின் சொத்துக்களை விற்று இழந்தனர் ;  கடனாளிகளாயினர். “அஞ்சாறு பெண் பொறந்தா அரசனும் ஆண்டியடா “ என்று தோளில் துண்டைப் போட்டுக்கொண்டு புலம்ப ஆரம்பித்தனர். 

சடங்குகள், சம்பிரதாயங்கள் , திருமணம் போன்ற சுப காரியங்களில் மட்டுமல்லாமல், கோயில் திருவிழா, உற்சவம், பல்வேறு பண்டிகைகள் ஆகியவற்றில் கடன்களை வாங்கியாவது கவுரவங்களுக்காக ஆடம்பரமாக  வருமானம் வந்தாலும் வராவிட்டாலும்   செய்தாக வேண்டுமென்ற சமூக மத சடங்கின் வழக்கங்கள் பலரை கடனில் மூழ்க வைத்தது.  கந்து வட்டி, மீட்டர்  வட்டி, விவசாயப் பொருள்களை விளைவித்து தாரை வார்க்கும் வட்டி என , இந்துக்களின் கடவுள்களைப் போல் வட்டியின் வகைகளும் தசாவதாரம் எடுத்தது.   

தனக்குக்  குழந்தைப் பேறு இல்லாதவர்கள், தனது சாதியைச் சேர்ந்த  யாரையாவது தத்து  எடுத்து வளர்த்து தங்களது சொத்துக்களை தாரை வார்ப்பதும் இந்த மதத்தில் வழக்கத்தில் உள்ள பழக்கம். பல நேரங்களில் நிர்வாகம் தெரியாதவர்களிடம் பெரும் சொத்துக்கள் திடீரென்று வாரிசுரிமை மூலம் குவிந்து சீரழிந்த சங்கதிகளும் உள்ளன. காய்ந்த மாடுகள் கரும்புத் தோட்டத்தில் புகுந்த கதைகள் அவை.  

தொழில்களின் அடிப்படையில் சாதிகளைப் பிரித்ததும் இந்து மதத்தில் புரையோடிப்போன பழக்கம். ஒவ்வொரு குலத்துக்கும் ஒரு குலத்தொழில் கற்பித்த மதம். மண்பாண்டம் செய்பவர்  குயவர் ; தச்சுவேலை செய்பவர்  ஆசாரி; ஆடுமாடுகள் வளர்ப்பவர் கோனார்; துணிகளை துவைப்பவர்  வண்ணார் ; மரம்  ஏறுபவர் நாடார்; ஊரை சுத்தம் செய்பவர் குறவர்; பிணம்  எரிப்பவர் வெட்டியார்; சவரத்தொழில் கடை வைத்திருப்பவர் நாவிதர்; பலசரக்குக் கடை வைத்து இருப்பவர் வாணிகச்  செட்டியார்; வட்டிக்கடை வைத்திருப்பவர் நாட்டுக்கோட்டைச் செட்டியார் என்றெல்லாம் செய்யும் தொழில்களின் அடிப்படையில் சாதிப்பிரிவுகள் .  இதேபோல் மீனவர் முதல் பூசாரி வரை அவரவர் தொழிலுக்கு  பொருந்தும்படி இனங்களும் பாகுபட்டன. அவரவர் செய்யும் தொழில்களின் அடிப்படையிலேயே திருமணம் போன்ற உறவுகள் நடத்தப்பட்டு வருகின்றன.   

ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள் மறு சாதி செய்யும் தொழிலை அல்லது வேலையை தமக்கு செய்யத் தெரிந்திருந்தாலும் செய்ய முன்வர மாட்டார்கள். இந்தத் தன்மை இந்திய இந்துக்களிடையே ஆணிவேராக ஊடுருவியதால்  இந்தியாவில் வாழும் ஏனைய இனத்தோரிடமும் இந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டது.  ஆசாரி என்கிற விஸ்வகர்மா இனத்தில் பிறந்தவரைப் போய் வேறு  வேலைக்குக் கூப்பிட்டால் வரமாட்டார். வேலை இல்லாவிட்டால் சும்மாவாவது சுருட்டுக் குடித்துக் கொண்டு படுத்திருப்பார். இத்தகைய தன்மைகள் பெரும்பான்மை மக்களின்  ஒரு தினத்தின் மனித வேலை என்று சொல்லப்படுகிற  இழப்புக்குக் காரணமானது. ( Loss of Manpower and  Man Hour ) இதற்குக் காரணம் இரத்தத்தில் ஊறிப்போன இந்து மதத்தின் வர்ணாசிரமக் கொள்கைகள் ஆகும்.  

உலக நாடுகள் பலவற்றுள் இப்படி செய்யும் தொழில்களின் அடிப்படையில் சாதிப் பிரிவுகள் இல்லை. நான் பார்த்த அல்லது பழகிய நாடுகளின் மக்களில் எல்லோரும் தங்களுக்குத் தெரிந்த எல்லாத் தொழில்களையும்  செய்வதைப் பார்த்து இருக்கிறேன். பல நாடுகள் சுற்றிய பலரும் இதை அவர்களின் அனுபவத்தில் உணர்ந்து இருக்கலாம். ஒரே நாடு , ஊர் அல்லது பகுதிகளில் இருந்து அரபு நாடுகளுக்கு வேலைகளுக்கு வருகிற எகிப்து, சிரியா, ஜோர்டான், லெபனான் , பாகிஸ்தான், வங்க தேசம், வியட்நாம், பிலிப்பைன்ஸ்  ஆகிய ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும்  இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் போன்ற ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்களும் தங்களுக்குத் தெரிந்த எல்லா வேலைகளையும் செய்வார்கள்.  இந்தியப் பொருளாதாரம் நசிந்து போய்க் கிடக்க இப்படிப் பட்ட  குலத்தொழில் முறையும் ஒரு காரணம். இந்த பிள்ளையை பெற்று வளர்த்ததும்  வர்ணாசிரமக் கொள்கையே.    

அதே நேரம் துறவறத்தை வற்புறுத்திய மதம்.  

காசிக்குப் போகும் சந்நியாசி! உன் குடும்பம் என்னாகும்  நீ  யோசி! என்று யோசிக்காமல் வாழ்வின் பொருளாதாரப் பிரச்னைகளை எதிர் கொண்டு சந்திக்கத்  திராணி இல்லாமல் சன்யாசிகளாக பலர் சுற்றிக் கொண்டிருப்பது பெரும்பான்மை மதமான இந்து மதத்தில் சகஜமாகிவிட்ட ஒன்றாகிவிட்டது. கடவுளை அடையப் போகிறேன் என்று உழைப்பை உதறித் தள்ளிவிட்டு, புனிதத்தலங்கள் என்று கூறப்படும்  கோயில்களில் கூட்டம் கூட்டமாக     சுற்றித்திரிந்து தர்ம சத்திரங்களில் சாப்பிட்டு  வயிறு வளர்க்கும் பழக்கத்தை ஆதரிக்கும் மதம் இந்து மதம். ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றால் பத்து சாமியார்களுக்கு சாப்பாடு போட வேண்டுமென்ற பண்பாடு கால காலமாக  மனித வள மேம்பாட்டை சிறைப் படுத்தி வைத்து இருக்கிறது. ஏழைகளை, பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களை ஆதரிப்பது என்பது வேறு; சோம்பேறிகளை சோறு போட்டு வளர்ப்பது என்பது வேறு. பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்று சொல்லப்பட்டது இதுவே.  

இப்படிப்பட்ட செயல்களைத் தூண்டும் விதத்தில் பல சித்தர்களும்  முனிவர்களும் துறவிகளும் பல பாடல்களை எழுதிவைத்து இந்த உலக வாழ்வு நிலையற்றது - ஆகவே எந்த தொழில் முயற்சியிலும் ஈடுபடாமல் பலரை  தடுத்து வைத்திருக்கிறது. 

காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா
மாயனாராம்  குயவர் செய்த மண்ணு பாண்டம் ஓடடா “ 

என்று உலகவாழ்வை  ஒரு உடையும் மண் பாண்டத்துக்கு உவமை சொன்ன சித்தர்களும், உலக வாழ்வை “நிலையற்ற நீர்க்குமிழி” என்று சொன்ன சித்தர்களும் நிறைந்த நாடு. 

 இதோ ஒரு பட்டினத்தார் பாடல் மனிதனின் விழியில் விழுந்து இதயம் நுழைந்து பொருளாதாரத்தின்  அடிப்படையான தேடல் முயற்சிகளை எப்படிக் கட்டிப் போடும் என்பதைப் பாருங்கள். 

“ஊருஞ்சதமல்ல, உற்றார் சதமல்ல, உறுப்பெற்ற 
பேருஞ்சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும் 
சீருஞ்சதமல்ல, செல்வஞ்சதமல்ல, தேசத்திலே 
யாருஞ்சதமல்ல நின் தாள் சதங்கச்சியே கம்பனே !" என்று பாடுகிறார்.

காதற்ற ஊசியும் வராது காணும் கடை வழிக்கே !”  என்றும் தத்துவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்ட நாடு. 

“நிலை மாறும் உலகில்- நிலைக்குமென்ற கனவில் வாழும் மனித சாதி ! இதில் வாழ்வதென்ன நீதி?” என்றும்  வாழ்வே மாயம் என்று புலம்பவைக்கிற போதனைகளின் நடுவேயும் எப்படி வளரும் பொருளாதாரச் செயல்பாடுகள்?  

இப்படிப் பட்ட தத்துவங்கள் இந்த மண்ணில் ஊறிப்  போன காரணத்தால் உழைத்துப் பிழைக்க வேண்டுமென்ற உற்சாகம் குன்றிப் போய்  உலக அரங்கில் இந்தியாவின் * GNP  Gross National Product எனப்படும் தேசத்தின் மொத்த உற்பத்தியின் அளவீட்டில்  குறைவு ஏற்பட்டது. இன்றளவும் உலக அரங்கில் இந்தியா பின் தங்கி நிற்கிறது.  உலகின் இரண்டாம் நிலையில் உள்ள நாட்டின்  மக்கள் தொகை வெறும் எண்ணிக்கையில் மட்டுமே தென்படுகிறது. பிறக்கும் பிள்ளைகளின் தலைகளின் எண்ணிக்கையை  உயர்த்த முடிகிறதே தவிர  உழைக்கும் கரங்களின் எண்ணிக்கையை உயர்த்தவே முடியவில்லை.  இந்தக் கரங்களில் கணிசமான அளவு  பிறரிடம் ஏந்தி எதிர்பார்த்து நிற்கவே  உதவுகின்றன. பிச்சை எடுத்து சாப்பிடுவது மோட்சத்தின்  கதவுகளைத் திறக்குமென்று நம்பும் கூட்டமொன்று  நம்மைச்சுற்றி நிற்கிறது. 

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் வீழ்ச்சிக்கு இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படும்  மதக்கொள்கைகளும் சடங்குகளும் அர்த்தமற்ற சம்பிரதாயங்களும்  ஒரு காரணம் என்பதை உலகப் பொருளாதார வல்லுனர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். 

வீடு இல்லாத மக்கள் 
மக்கள் இல்லாத வீடு 
இதுவே இந்த நாட்டின் சாபக்கேடு 

- என்பது ஒரு பெரியவர் சொன்னது. 

வீடுகளை மாளிகைகள் போல் கட்டிப் போட்டுவிட்டு ஒட்டடை அடிக்கக் கூட ஆள் இல்லாமல் பூட்டிப் போட்டு வைக்கும்  கிடக்கும் நிலை ஒரு புறம். சாலை ஓரத்தில் சாக்கடைகளின் வாசனைகளில் வெட்ட வெளிகளில் பாய் கூட இல்லாமல் குடும்பத்துடன் படுத்துறங்கும் மக்கள் ஒரு புறம். அறுபத்தி நாலாவது குடியரசைக் கொண்டாட அருகதையற்ற பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாய் நிற்பதற்கு  மக்களில் பெரும்பாலோர் பின்பற்றிய மதமும் ஒரு காரணம். 

ஒரு பக்கம் கறுப்புப் பணம் 
மறு பக்கம் வெறும் கோவணம் 
ஊழல் எனும் சொல்லில்
ஊசலாடுது இந்திய மானம் ( செந்தமிழ்தாசன்).  

இதற்கு மாற்றுப் பொருளாதார  வழிகள்  என்ன? காந்தியப் பொருளாதாரமா? சோசலிஸமா? பாசிசமா? கம்யூநிசமா? கலப்புப் பொருளாதாரமா? சுதந்திர வாதமா? முதலாளித்துவமா? இஸ்லாமா?  

இன்ஷா அல்லாஹ் தொடரும்.. 
இபுராஹீம் அன்சாரி
=============================================================
*GNP = GROSS NATIONAL PRODUCT . This is a measure of a country’s economic performance, or what its citizens produced ( i.e goods and services). 
=============================================================