Showing posts with label இன்று. Show all posts
Showing posts with label இன்று. Show all posts

நேற்று! இன்று! நாளை! - தொடர் - 22 23

அதிரைநிருபர் பதிப்பகம் | September 18, 2016 | , , , ,

கவிஞர் வைரமுத்து ஒரு கவிதை எழுதி இருந்தார்.

பசுவினைப் பாம்பென்று சாட்சி சொல்ல முடியும்
காம்பினில் விஷம் என்று கரக்கவா முடியும்? 

– என்பது அந்தப் பாடல் வரிகளாகும். காஞ்சி மடாதிபதி பற்றி அந்தப் பாடலின் வரிகளை சற்று எதுகை மோனையுடன் மாற்றி எழுதினால் இப்படி எழுதலாம் (கவிக் குடும்பத்தோர் மன்னிப்பார்களாக!)

பாம்பினைப் பசுவென்று சாட்சி சொல்ல முடியும்
காம்பினில் விஷம் என்று கரக்கவா முடியும்? 

– என்பதே மாற்றப்பட்ட வரிகள். 

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரரை ஒரு பாம்பு என்று பலர் வர்ணிக்கிறார்கள். இந்தப் பாம்பை ஒரு பசு என்று சாட்சிதான் சொல்ல முடியும். ஆனால் இப்படிப் பொய் சாட்சி சொன்ன காரணத்தால் , இந்தப் பாம்பு பசு கறக்கும் பாலை சுரக்குமா? கறக்குமா? அல்லது அதன் இயல்பான விஷத்தைத்தான் சுரக்குமா? பாம்பு எப்படி பசுவின் வேஷம் போட்டாலும் பாம்பு பாம்புதான்.

சங்கராச்சாரியாரை ஜெகத் குரு என்று கண்மூடித்தனமாகப் போற்றும் பொதுமக்கள் புரிந்து கொள்வதற்காக அங்கே இங்கே எல்லாம் போகாமல், மகாபாரதத்தின் ஒரு காட்சியை இங்கு விவரிக்க விரும்புகிறோம். இறுதிப் போர் நடக்கும் முன்பே போரின் கொடுமைகளை அர்ஜுனன் நினைத்துப் பார்க்கிறான். அர்ஜுனனின் அச்சத்தைப் போக்குவதற்காக, கிருஷ்ணன் இவ்வுலகில் மனிதனின் தோற்றம் பற்றி அவனுக்கு விளக்குகிறார்.

“அர்ஜுனா ! நீ புல்லாய் புழுவாய் மீனாய் பறவையாய் பிறந்து பின் மனிதனானாய் . உன் பயணம் மிகப் பெரியது . நீ அர்ஜுனனாக இருப்பது இப்பயணத்தின் ஒரு பகுதி. ஒரு சிறிய புள்ளி. இந்தப் பயணம் தொடரும். பயணம் தொடர்வதற்காக உடல் அழியும். நீ உடல் அல்ல, ஆன்மா. ஆன்மாவின் பயணம் மிகப் பெரியது. காமக்குரோதம் நீக்கி மூலாதார சக்தியைத் தூண்டிவிட்டு அனாதகம் என்கிற சக்தியை நோக்கி நடந்து, ருசி, பசி, வாசனைகளை விலக்கி, இன்னும் நடந்து விசுத்தி என்ற இடத்தை அடைந்து, அந்த சக்தியின் துணையோடு ஆஞ்ஞை அடைந்தால் பரமானந்தமான சஹஸ்ரம் அடையலாம். இதுவே ஆத்ம பயணத்தின் வழி" என்கிறார்.

அதாவது அடிப்படையில் இந்து தர்மம் என்பது காமம், குரோதம், மோகம் ஆகிய மன வன்மங்களை துறந்துவிடச் சொல்கிறது . அதிலும் குறிப்பாக ஒரு மதத்தின் மரியாதைக்குரிய தலைமை பீடத்தில் இருப்பவர் மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் முன்னுதாரணமாகவும் வாழ்ந்து காட்டுவது அவசியமாகும். இந்த அடிப்படைத் தகுதிக்கு காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி தகுதிபடைத்தவராக வாழ்ந்தாரா என்பதே நம் முன் நிற்கும் விடை பெற இயலாத வினா.

சங்கர மடத்தை நிறுவிய ஆதி சங்கரரைப் பற்றியோ அவரது புனித நோக்கங்கள் அல்லது செயல்பாடுகள் நெறிமுறைகள் பற்றி விமர்சனங்கள் எழவில்லை. அவருடைய கொள்கைகளை ஏற்பவர்களும் சரி ஏற்காதவர்களும் சரி அவரது தனிப்பட்ட வாழ்வைப் பற்றி சந்தேகப் படவில்லை. அதே போல்தான் சுவாமி விவேகானந்தரும் வாழ்ந்தார். தான் நம்பியதை அவர் உபதேசித்தார். தனிமனித வாழ்வில் ஒழுக்கத்தை அவர் சீர் குலைத்தாக எவரும் அவரை நோக்கி குற்ற விரலை நீட்டவில்லை. ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி, தயானந்த சரஸ்வதி மதுரை ஆதீனம் போன்றவர்களைப் பற்றி யாரும் விமர்சித்ததாக நாங்கள் படிக்கவில்லை. அப்படி விமர்சனத்துக்குரிய செயல்களில் அவர்கள் ஈடுபட்ட செய்திகளும் இல்லை. இதே காஞ்சியில் மடாதிபதியாக இருந்து மறைந்த முன்னாள் பெரியவர் சந்திரசேகர் சுவாமி பற்றி விரலை அல்ல புருவத்தை கூட உயர்த்தியவர்கள் கிடையாது. ஆனால் இப்படிப்பட்ட பெரியவர்கள் இருந்த இடத்துக்கு வந்த ஜெயேந்திரர் பற்றி மட்டும் ஏன் விமர்சனங்கள் வருகின்றன? காரணம் நெருப்பு இல்லாமல் புகையவில்லை. காஞ்சி மடத்தின் வரலாறு பற்றி விக்கிபீடியாவிடம் கேட்டால் அது இப்படிக் கூறுகிறது.

“காஞ்சி சங்கர மடம் (Kanchi Sankara matha) தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஓர் இந்து சமய துறவியர் இருப்பிடமாகும். இது காஞ்சி காமகோடி பீடம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஆதி சங்கரர் இங்கு சமாதியடைந்ததாகவும் இந்த மடத்தை நிறுவியதாகவும் கூறப்படுகிறது. இந்த மடத்தின் தலைவர்கள், பீடாதிபதிகள், மற்றநான்கு (சிருங்கேரி, துவாரகா, பூரி, சோதிர்மத்) சங்கரமடத் தலைவர்களைப் போலவே, "சங்கராச்சாரியர்" என்றப் பட்டத்துடன் விளங்குகின்றனர். காஞ்சி மடம் கும்பகோணத்தில் இருந்த 18ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் புகழ்பெறத் துவங்கியது. சிலர் இதனை சிருங்கேரி மடத்தின் கிளையாகக் கருதுகின்றனர். இன்று தென்னிந்தியாவில் உள்ள முதன்மையான இந்து சமய அமைப்புகளில் ஒன்றாக இந்த மடம் விளங்குகிறது.

நவம்பர் 2004ஆம் ஆண்டு இந்த மடத்தின் பீடாதிபதிகளாக இருந்த செயந்திர சரசுவதி மற்றும் விசயேந்திர சரசுவதி சுவாமிகள் இருவரும் சங்கர்ராமன் கொலை வழக்கில் கைதானதை அடுத்து இதற்கு இழுக்கு ஏற்பட்டது."

சங்கர ராமன் கொலை வழக்கில் சிக்குவதற்கு முன்பாகவே ஜெயேந்திரர் மீது அரசல் புரசலாக சில பாலியல் தொடர்பான செய்திகள் கசிந்தன. கோடம்பாக்கத்தில் இருந்துதான் கிசுகிசுக்கள் வரவேண்டுமென்ற நியதிகள் மாறி ஒரு பெரும்பான்மை மதத்தைப் பின்பற்றும் மக்கள் மதித்து, நம்பி வழிபடும் பாரம்பரியமும் புனிதமும் மிக்கதாக மக்கள் கருதும் மதச் சார்பின்றி நமது மரியாதைக்கும் உரிய காஞ்சி மடத்தில் இருந்தும் கிசுகிசுக்கள் கசிய ஆரம்பித்தன எனபது ஒரு துரதிஷ்டமான நிலை. காமம் குரோதம் மோகம் போன்ற மனதின் வன்மங்களை மறந்தவர்களும் துறந்தவர்களும் தலைமைதாங்கும் மதத்தின் மடத்தில் காமத்தின் அடிப்படையிலான காரியங்களும், குரோதத்தின் அடிப்படையிலான கொலை போன்றவையும் நடந்ததாக கூறப்பட்டது . இந்தக் காரியங்களுக்கு முன்னோட்டமாக பக்தர்கள் அனைவரும் அதிர்ச்சியடையும்படி திடீரென்று அங்கு ஒரு சம்பவம் நடந்தது. அதாவது உலகப் புகழ் பெற்ற மடத்தின் தலைவராக இருந்த ஜெயேந்திரர் திடீரென்று காணாமல் போய்விட்டார். ஒரு உடலுக்குத் தலை இல்லாமல் போனது. முண்டம் மற்றும் துடித்துக் கொண்டு இருந்தது. தலையைத்தேடி இந்த நாட்டின் தலையே தலைக் காவிரி என்கிற இடத்துக்கு ஆளனுப்பித் தேடியது. ஆகவே ஜெயேந்திரர் மீது சங்கர ராமன் கொலை வழக்கு தொடரப் படுமுன்பே இவரது நன்னடத்தை பற்றிய சான்றிதழ் திருப்தி இல்லை என்றே வழங்கப் படக் காரணமானார்.

இது நடந்தது 1986 ல் . எல்லாப் பத்திரிகைகளிலும் வந்த விபரப்படி, ஜெயேந்திரர் தனது துறவறத்துக்கு அடையாளமான இழக்கக்கூடாத தண்டத்தை எங்கோ போட்டு விட்டு யாருக்கும் தெரியாமல், வெங்கட்ராமன் என்பவரின் பெண்னுடன் எங்கோ மாயமானார். ஒருவேளை அவருக்கு துறவறம் கசந்து இருக்கலாம். இல்லறத்தை நாடி இருக்கலாம். இது தனிமனித உணர்வுகளின் அடிப்படையில் ஒரு தனிமனிதர் எடுக்கும் முடிவு. உடல் இச்சைகளை அடக்கத் தாக்குப் பிடிக்காத துறவறம் அவரை மடத்தைவிட்டு ஒடி ஒளியச் சொன்னது. ஒரு மாதத்திற்கு மேல் குடும்பம் நடத்தினார். அப்போது மாயமாக மறைந்த சங்கராச்சாரி அவர்களை , சிபிஐ தேடிக் கண்டுபிடித்து தலைக் காவிரிக்கு போய் அந்தப் பெண்ணை இவரிடமிருந்து பிரித்துக் கூட்டிக் கொண்டு வந்த தகவல்கள் மிகவும் ஆச்சரியமானவை. மாயமாய் மறைந்த தலைவர் மாயாஜாலமாக காஞ்சிக்குக் கொண்டு வரப்பட்டார். இதற்குக் காரணம் அன்றைய குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனின் தலையீடு. அந்தக் கால இடைவெளியில் சின்ன சங்கராச்சாரி விஜயேந்திரரை நியமித்தது சங்கரமடம். இதுதான் இன்று இரண்டு சங்கராச்சாரிகள் இருப்பதன் காரணம்.

அடுத்து, பிரபலமான பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சங்கராச்சாரியார் தன்னிடம் முறை தவறி நடந்து கொண்டது குறித்து நவம்பர் 29, 2004 தேதி புகார் கொடுத்தார்.

அப்போது நிருபர்களுக்கு அனுராதா ரமணன் கொடுத்த பேட்டியிலிருந்து சில பகுதிகள் அதிர்ச்சியளிப்பவையாக இருந்தன.

“1992 ஆம் ஆண்டு காஞ்சி சங்கரமடத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நானும் இன்னொரு பெண்ணும் (இவர் தான் சங்கராச்சாரியாரிடம் அறிமுகப்படுத்தியவர்) மடத்துக்கு சென்றோம். அங்கு உட்கார்ந்து அவருடன் பேசிக்கொண்டு இருந்தோம் அப்போது சங்கராச்சாரியார் ஆன்மீகம் பற்றி பேசினார். நான் தலை குனிந்து எழுதிக் கொண்டு இருந்தேன். ஆன்மீகவாதியின் பேச்சு திடீரென்று ஆபாசமாக மாறியது. அப்போது நான் என் தலையை நிமிர்த்தி அவரை பார்த்தேன். அப்போது எனக்கு தூக்கி வாரிப் போட்டது. என்னுடன் வந்து இருந்த பெண் சங்கராச்சாரியாருடன் மிக நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு இருந்தார். அவர் என்னிடம் மிக ஆபாசமாக பேசினார். அவரது விருப்பத்துக்கு என்னையும் இணங்கும்படி வற்புறுத்தினார். என்னால் கோபத்தை தாங்கிக் கொள்ளமுடியாமல் நீயெல்லாம் மனுஷனா என்று கேட்டு விட்டு வந்து விட்டேன். அப்போது ஒரு வார பத்திரிகையில் எனக்கு ஏற்பட்ட துன்பத்தை தொடராக எழுதி வந்தேன். அப்போதும் எனக்கு மிரட்டல் வந்தது. அதே போல போலீசில் புகார் கொடுக்க முடியாத படி அவர்கள் எனக்கு பல தொல்லைகள் கொடுத்தார்கள் “ என்று விதவையான அனுராதா ரமணன் கூறினார்.

தினபூமியில் (5.12.04) அன்று வெளிவந்த செய்தி. "காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் அடிக்கடி இளம்பெண்கள் பலரை மடத்துக்கே வரவழைத்து சந்தித்திருக்கிறார். இதில் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த அனுராதா என்ற பெண்ணும் ஒருவர். இதேபோல, கும்பகோணம் வனஜா, ஆந்திராவைச் சேர்ந்த ஜெயா உள்ளிட்டப் பெண்கள் ஜெயேந்திரரை அடிக்கடி சந்தித்துள்ளதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காஞ்சி சங்கர மடத்துடனும், ஜெயேந்திரருடனும் நெருங்கிய தொடர்புவைத்திருந்த நடிகைகளில் சொர்ணமால்யா முக்கியமானவர். இது நடக்க, சில ஆண்டுகளுக்கு முன்புதான் சொர்ணமால்யாவுக்கு திருமணம் நடந்தது. ஆனால், திடீரென்று தன் கணவரிடமிருந்து சொர்ணமால்யா விவாகரத்துக் கோரினார். இந்த விவகாரம் சங்கர மடத்திலும் வைத்து பஞ்சாயத்து செய்யப்பட்டது. சங்கராச்சாரியாருடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, கணவரிடமிருந்து நிரந்தரமாகப் பிரிய சொர்ணமால்யா முடிவெடுத்தார்.

சொர்ணமால்யா தன் கணவரை பிரிந்து விடுவதற்கு ஜெயேந்திரரே ஆலோசனை வழங்கினார். இந்தச் சூழ்நிலையில் காண்ட்ராக்டர் ரவி சுப்ரமணியம் மூலம் சென்னையில் சொர்ணமால்யாவுக்கு வீடு ஒன்றை ஜெயேந்திரரே வாங்கி கொடுத்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து சொர்ணமால்யா அடிக்கடி சங்கர மடத்துக்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதேபோல சங்கர மடப்புள்ளிகளும் சென்னையில் உள்ள சொர்ணமால்யாவின் வீட்டுக்கே தேடிச் சென்று அவரைச் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சொர்ணமால்யாவுக்கும் சங்கர மடத்திற்கும் இருந்த நெருக்கம் குறித்து பரபரப்பான தகவல்களை அவரின் கணவரே காவல்துறையிடம் கூறினார்.

சங்கரராமன் கொலை வழக்கிலும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப் பட்ட வழக்கிலும் இன்னும் புழல் சிறையில் இருக்கும் ரவி சுப்பிரமணியம் தந்த முதல் வாக்குமூலத்தில் ஜெயேந்திரர் பல பெண்களுடன் இருந்துள்ளதை நேரில் பார்த்ததாக ரவி சுப்பிரமணியம் அதிர்ச்சிகரமான தகவல்களைக் கூறினார். சங்கர ராமன் வழக்கில் இவர்தான் பிரதானசாட்சி. பின்னர் என்ன காரணமோ முதல் பிறழ் சாட்சியாகவும் மாறினார்.

இன்னொரு திருவிளையாடலும் வெளிவந்தது இப்படி ஒரு வாக்குமூலம் மூலம். “நான் பிராமண வகுப்பைச் சேர்ந்தவன். என் மனைவி சித்ரா, , நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். 1994ம் ஆண்டில் எனக்கும்மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றியதால் பிரிந்துவிட்டோம். தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்த நான் பின்னர் கட்டட காண்ட்ராக்ட் எடுத்து செய்ய ஆரம்பித்தேன். என் நண்பர் விஸ்வநாதன் மூலமாக காஞ்சி மடத்துடன் தொடர்பு கிடைத்தது. விஸ்வநாதனின் அக்காள் லீலாவுக்கும் ஜெயேந்திரருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. லீலாவும் ஜெயேந்திரரும் மணிக்கணக்கில் டெலிபோனில் அரட்டை அடிப்பது வழக்கம். அவர் மூலமாக ஜெயேந்திரரின் அறிமுகம் கிடைத்தது.

1995ம் ஆண்டில் நான், விஸ்வநாதன், அவரது மனைவி சரஸ்வதி மூன்று பேரும் தாம்பரத்தில் ஜெயேந்திரர் தங்கியிருந்த கல்யாண மண்டபத்தில் அவரை சந்திக்கப் போனோம். இரவு நேரத்தில் ஜெயேந்திரரை நாங்கள் தனித்தனியாக சந்திக்க வைக்கப்பட்டோம். பின்னர் மூவரும் வீட்டுக்குத் திரும்பியபோது, தன்னிடம் ஜெயேந்திரர் தகாத முறையில் நடக்க முயன்றதாக சரஸ்வதி எங்களிடம் கூறினார். இதையடுத்து ஜெயேந்திரரை கண்டிக்குமாறு லீலாவிடம் சொன்னோம். அவரும் ஜெயேந்திரருடன் பேசினார். இதைத் தொடர்ந்து சரஸ்வதியிடம் டெலிபோனிலேயே ஜெயேந்திரர் மன்னிப்பு கேட்டார்.

அதே சமயம் நானும் லீலாவும் தொடர்ந்து, அடிக்கடி காஞ்சி மடத்துக்கு சென்று வந்தோம். லீலாவுடன் மணிக்கணக்கில் ஜெயேந்திரர் தனியே பூட்டிய அறையில் இருப்பார். இந்த விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரிந்து போனதால், என்னை சங்கராகல்லூரிக் குழுவின் உறுப்பினராக ஜெயேந்திரர் நியமித்தார். அந்தக் கல்லூரிக்காக கட்டடம் கட்ட ரூ. 1.6 கோடி செலவிட திட்டமிட்டார். அந்தப் பணியை என்னிடம் தந்தார். நான் கட்டித்தந்தேன். இதையடுத்து காஞ்சி மடத்தின் பல கட்டட வேலைகளை எனக்குத் தந்தார் ஜெயேந்திரர்.

ஜெயேந்திரருக்கு பெண்கள் விஷயத்தில் நிறைய தொடர்பு இருந்தது. மதிய நேரத்திலேயே தனது அறைக்குள் பல பெண்களுடன்அவர் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

மடத்தின் சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையின் இயக்குனர் நடராஜனின் மனைவி பிரேமா, ஹைதராபாத்தில் ஆல் இந்தியாரேடியோவில் வேலை பார்க்கும் பெண் ஆகியோரை ஜெயேந்திரருடன் தவறான நிலையில் நான் பார்த்திருக்கிறேன்.

மருத்துவமனையில் கேண்டீன் வைத்திருக்கும் பத்மாவையும் மதிய நேரத்தில் ஜெயேந்திரருடன் பார்த்திருக்கிறேன். மடத்துக்குச்சொந்தமான நசரத்பேட்டை பள்ளியின் முதல்வர் ரேவதியும் ஜெயேந்திரருடன் பார்த்திருக்கிறேன்.

மதிய ஓய்வு நேரத்தில், பக்தர்களை சந்திக்காதபோது இவர்களுடன் இருந்துள்ளார் ஜெயேந்திரர். இதைத் தவிர நிறைய புளு பிலிம் படங்களையும் ஜெயேந்திரர் பார்ப்பார். மதியம் 1.30 மணி முதல் மாலை 3 மணி வரை இதெல்லாம் நடக்கும்.
2000ம் ஆண்டில் ஒருநாள் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுடன் ஜெயேந்திரர் இருந்தார். அநத நேரத்தில் ஒரு மிகப் பெரியதொழிலதிபரின் மனைவி ஜெயேந்திரரை சந்திக்க வந்துவிட்டார். அவர் மிகப் பெரிய இடம் என்பதால் அனுமதி இல்லாமலேயேஜெயேந்திரரின் அறைக்குள் நுழைய வந்துவிட்டார்.

இதனால் பக்கத்து அறையில் இருந்த என்னை அவரசமாக அழைத்த ஜெயேந்திரர், அந்த ஆந்திரா பெண்ணின் கணவரைப் போல நடிக்குமாறு கூறினார். ஜெயேந்திரின் அறைக்குள் அரைகுறை ஆடையுடன் இருந்த அந்த இளம் பெண்ணின் அருகில் அவரதுகணவர் போல நடித்தேன். தொழிலதிபரின் மனைவி வந்துவிட்டுப் போகும் வரை அப்படியே உட்கார்ந்திருந்தேன். இப்படியெல்லாம் இத்யாதி இத்யாதி.

இவ்வளவு தூரம் தனது தவறான நடத்தைகளால் ஒரு புனிதமான இடம் என்று போற்றப்படும் இடத்தின் தலைவர் நடந்திருப்பது அவரது அந்தரங்க நம்பிக்கைக்குரிய ரவி சுப்ரமணியாலேயே மேற்கண்டவாறு எல்லாம் வாக்குமூலமாகத்தரப்பட்டு பத்திரிகைகளில் வெளியானவைதான். அப்படி ஒரு நடத்தை இருந்த ஒருவர், கொலையும் செய்ய முகாந்திரம் இருந்து இருக்கும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்து. பல சாதாரண தனி மனிதர்களின் வாழ்வில் காம வெறியாட்டம் கொலையில் முடிந்த கதைகளை அன்றாடம் பார்க்கிறோமே!

இதே சங்கராச்சாரியார் ஒரு பிராமணராக இருந்ததாலும் உயர்ந்த இடத்தின் செல்வாக்கு இருந்ததாலும் தற்போது தப்பித்துக் கொண்டார். ஆனால், இதே போல ஒரு வழக்கு கற்பழிப்பு, கொலை ஆகியவற்றுக்காக வேறொரு சாமியார் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். அவர்தான் பிரேமானந்தா சாமியார். பாவம்தான் இவர். தவறுகள் செய்ததுதான் செய்தார் ஒரு சூத்திரனாகப் பிறந்துதான் அவற்றை செய்ய வேண்டுமா? ஒரு பிராமணராக இருந்து இருந்தால் இவரும் தப்பித்து இருக்கலாமோ என்றே தோன்றுகிறது.

தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் காஞ்சிபுரத்தில் சங்கரராமன் குடும்பத்தினரை செய்தியாளர்கள் சந்தித்தார்கள். . கண்ணீரோடு முடங்கிக் கிடந்த சங்கரராமனின் மனைவி பத்மா, சோகம் அப்பிய முகத்துடன் பேசினார். 'என் கணவர் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதவர். பாவிகள் அவரைத் துள்ளத் துடிக்க அவர் வேலை செய்த கோயிலிலேயே வெட்டிக் கொன்னாங்க. கொலையில சம்பந்தப்பட்டவங்க பெரிய இடம்னு தெரிஞ்ச பிறகும் விடாம வழக்கை நடத்த ஒத்துழைப்பு தந்தோம். 

ஒருநாள், விசாரணைக்காக போனபோது நீதிமன்ற வளாகத்திலேயே வெச்சி மூணு பேர், 'சாட்சியத்தை மாத்தி சொல்லலைன்னா உன் பிள்ளைங்களை ஆசிட் தொட்டியில வீசிடுவோம். அடையாளம் தெரியாம போயிடுவாங்க’னு மிரட்டினாங்க. கோயில்ல வெச்சி ஒரு உயிரைப் பறிக்கத் துணிஞ்சவங்க... இதையும் செய்திடுவாங்கங்கன்னு பயந்து போனேன். அவருதான் போயிட்டாரு... என் பிள்ளை களையாவது காப்பாத்து வோம்னு நீதிமன்றத்துல மாத்திச் சொல்லவேண்டியதாகிடுச்சி'' என்ற பத்மாவின் கண்களில் கண்ணீர் கொட்டுகிறது. துடைத்துக்கொண்டு தொடர்கிறார். ''போலீஸ்காரங்க அடையாள அணிவகுப்புக்கு தனி வேன்ல அழைச்சிட்டுப்போனாங்க. நீதிமன்றத்துல குற்றவாளிகளை சரியா நான் அடையாளம் காட்டினேன். உயிருக்கு பயந்துதான் இந்தக் காரியத்தைச் செய்தேன். 

அவ்வளவு அச்சுறுத்தல் இருந்த சூழலில், எங்களை மறுபடியும் தனி வேன்ல கூட்டிட்டு வந்து வீட்டுல விட்டிருக்கலாம். ஆனா, போலீஸ்காரங்க, சர்வசாதாரணமா பஸ்ல திரும்பிபோகச் சொன்னாங்க. எப்போ என்ன நடக்குமோன்னு பயந்துக்கிட்டுத்தான் பஸ் ஏறினேன். 

அன்னிக்கு நடுராத்திரி 12 மணிக்கு தன்னந்தனியா வீடுவந்து சேர்ந்தோம். அதுல இருந்து யாரையுமே நாங்க நம்பலை. யார் மேலயும் நம்பிக்கை வைக்கிற நிலையில நாங்க இல்லை. நாங்க யாரைப் பகைச்சிக்கிட்டோமோ அந்தப் பெரியவங்க எதையும் செய்யத் துணிந்தவங்க. குற்றவாளிகளை அடையாளம் காட்டிட்டு வந்த அன்றைக்கு எங்க உயிருக்கு ஏதாவது ஆகியிருந்தா யார் பொறுப்பு? 

அநாதையாதானே இருக்கோம்? இனி நமக்கு யாரும் பாதுகாப்பில்லைனு முடிவுபண்ணித்தான் சாட்சியை மாத்திச் சொன்னோம். ஆனா, அந்த ஒரு காரணத்துக்காக எங்க ஒத்துழைப்பு இல்லைன்னு அரசு வக்கீல் சொல்லியிருக்கார். இது நியாயமா? அதுக்காக அவா அத்தனை பேரையும் விட்டுர்றதா?'' என்று கேட்ட பத்மா, எதையோ யோசித்தவராக இருந்தார்.

''கடவுள் எல்லாத்தையும் பார்த்துண்டு இருக்கார். அவா பெரிய இடம். அவாளை எதிர்த்துப் போராட எங்களிடம் தெம்பும் திராணியும் இல்லை. நான் ஜெயலலிதா அம்மாவைத்தான் நம்புறேன். வழக்கை இத்தோட விட்டுடாம மறுபடியும் அப்பீல் போக நடவடிக்கை எடுக்கணும். எத்தனை வருஷமானாலும் எங்களுக்கு நீதி கிடைக்கணும். இது முதல்வர் அம்மாவுக்கு கண்ணீரோட நான் வைக்கிற கோரிக்கை'' என்றார் வழிந்த கண்ணீரை துடைத்தபடி.

அம்மா பேசுவதை கலங்கிய நிலையில் கவனித்தபடி இருந்தார் அவரது மகன் ஆனந்த் சர்மா. 'குற்றம் நிரூபணம் ஆகாததால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. சங்கரராமன் கொலையில் இவர்களுக்குத் தொடர்பில்லை என்றால் சங்கரராமனை கொன்றது யார்? தன்னைத்தானே கத்தியால் வெட்டிக்கொண்டு செத்துப்போக என் தந்தை என்ன மனநோயாளியா?

2001-ல் சீனா செல்ல இருந்த ஜெயேந்திரரை, 'மடாதிபதிகள் கடல் கடந்து செல்லக்கூடாது’ என வழக்குப் போட்டுப் போகவிடாமல் என் தந்தை தடுத்தார். தொடர்ந்து மடத்தின் அட்டூழியங்களை வெளியில் சொன்னார். ஜெயேந்திரர், விஜயேந்திரர் மற்றும் அவரைச் சேர்ந்தவர்களின் முறைகேடான செயல்களைச் சொந்தப் பெயரிலும் புனைபெயர்களிலும் புகார்களாக எழுதினார். இதற்கு ஆதாரமான கடிதங்களை முக்கிய ஆதாரங்களாக காவல் துறையினர் எங்கள் வீட்டிலிருந்து கொண்டுசென்றனர்.

அதிலேயே என் தந்தைக்கும் ஜெயேந்திரர் தரப்புக்கும் இருந்த பகை வெளிப்படையாகத் தெரியும். உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்கு மூலமாகவே இதைக் கூறியிருக்கிறேன். அடையாள அணிவகுப்பிலும் சரியான குற்றவாளிகளை அடையாளம் காட்டினோம். அதை ஏற்றுக் கொண்டனர். ஆனால், புதுவை நீதிமன்றத்தில் முதல் விசாரணையின் போது உயிர் பயத்தினால் நாங்கள் சாட்சியத்தை மாற்றிச் சொல்ல வேண்டியதானது. ஏற்கெனவே கொலை பாதகம் செய்த அவர்களின் மிரட்டலுக்கு எங்களைப் போன்ற சாமான்யன் பயப்படாமல் இருக்க முடியுமா? ஆண்டவன் நீதிமன்றத்தில் நிச்சயம் அவர்களுக்கு தண்டனை உண்டு'' என்றார் விரக்தியும் வேதனையும் கலந்த குரலில்.

சங்கரராமனின் மருமகன் கண்ணனிடம் பேசியபோது, 'இந்தத் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. போதிய ஆதாரங்கள் இருந்தும் ஒட்டுமொத்தமாக அத்தனை பேரையும் விடுவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.'' என்று சொன்னார்.-

இங்கு குறிப்பிட்டவை வெகு சிலவே. தட்ஸ்தமிழ், தினபூமி நாளிதழ்களில் வந்த துண்டு செய்திகளை கொண்டு தொகுத்துள்ளேன். ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய இதழ்களின் பழைய பதிப்புகளை புரட்டி பார்த்தால் தான் சங்கராச்சாரி ஜெயந்திரரின் உண்மையான முகம் ஒளிமயமாகத் தெரியும்.

இன்ஷா அல்லாஹ் மீண்டும் சில வினோதமான வழக்குகளுடன் சந்திக்கலாம். 
தொடரும்...
ஆக்கம்: முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc.,
உருவாக்கம் : இபுராஹிம் அன்சாரி

இன்று 29-03-2016 7

அதிரைநிருபர் பதிப்பகம் | March 29, 2016 | , ,

தேசந்தந்தை காந்தி பிறந்த நாளை விட மிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இந்தியா நினைத்து பார்க்கிறது. இரண்டு மதத்தவரும் இப்போது போடும் வழக்கை தொடர்ந்துகொண்டே இன்று வரை இழுத்தடித்து இருந்தால் இந்திய மண்ணில் இத்தனை உயிர்கள் அனாவிசயமாக போயிருக்காது. எப்போது நாகரீகம் எனும் ஒரு சர்க்யூட்டில் பிறச்சினையோ அப்போதெல்லாம் கொத்து கொத்தாக மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது...இதை இன்று வரை உலகவரலாறு எடுத்து சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது.

ஒரு Flash Back


சென்னையின் கக்கூஸ் நாத்தமில்லாத இரவு நேரம் சென்னைக்கு செல்லும் கம்பன் எக்ஸ்பிரசில் திருவாரூர் ஸ்டேசனில் ரயில் நிக்க நான் ஆழ்ந்த நித்திரையில் என் எக்கோலாக் சூட்கேசில் [நியு-காலேஜ் மாணவர்களின் ஸ்டேடஷ் சிம்பள்] தலைவைத்து பெர்த்தில் தூங்கி கொண்டிருக்க... 'லத்தியால் நான் தலைவைத்து தூங்கிகொண்டிருந் பெட்டியில் அடித்து எழுப்பிவிட்டு "வெடிகுண்டு இருக்கானு இந்த ட்ரயினை செக் பண்ரோம்" என அந்த போலீஸ் சொல்ல நானும் இன்ஸ்டேன்ட்டா..' ஆமாய்யா வெடிகுண்டு உள்ள பொட்டியை தலைக்கு வச்சிதான் தூங்குவானுக'... இந்த போலீஸ்தான்ஸ்காட்லாண்ட் யார்ட்????......

ஞாயமான கேள்வி

எதற்க்கெடுத்தாலும் "துவாச்செய்யுங்க அத்தா..துவாச்செய்ங்க..." என சொல்பவர்கள் , எதிரில் நின்று கேட்கும் மனிதர் துவா எதற்க்கு செய்ய வேண்டும் என தெரியாமலேயே போய் விடுகிறார். துவா செய்ய சொன்னவரும் 'அன்றைக்கு சொன்னேனே துவா செஞ்சீங்களா?' என கேட்காமல் ரெக்கார்டெட் மெஸ்ஸேஜ் மாதிரி மற்றவரிடமும் அதை ஒப்பிக்க சென்று விடுகிறார்.

நீதி: "துவா செய்ய காரணம் 10 வரிக்கு மிகாமல் விளக்கவும்"

ஒரு சின்ன கதை:

ஒரு நல்ல அரசன் ஆளும் இடத்தில் ஒரு துறவி ஊர்க்கோடியில் இருந்தார். அங்கு எல்லா மக்களும் போய் அந்த துறவியிடம் அறிவுரை பெற்று வந்திருக்கின்றனர். அந்த மன்னனுக்கு ஒரு ஆச்சர்யம் துறவி..அதுவும் பிச்சைக்காரன் கோலத்தில் இருப்பவனிடம் ஏன் மக்கள் இப்படி கூட்டம் கூட்டமாக போகிறார்கள்?. ஆர்வத்தால் ஆட்களிடம் சொல்லி துறவியை அழைத்துவந்து 'ஏன் உங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் ? " என கேட்க ..”நாளை சொல்கிறேன்” என துறவி சொல்லி இருக்கிறார். அந்த இரவு அரண்மனையில் தங்க அனுமதியை அரசன் தர...

' நீங்கள் எந்த விதமான அறையில் தங்க ஆசை?..---. அரசன்.

'உன் அறையை விட விசாலமான வசதியான அறையில்...' ---- துறவி

'என்னமாதிரியான சாப்பாடு'---அரசன்

'உன் சாப்பாட்டை விட ஆடம்பரமான சாப்பாடு'துறவி

அரசனுக்கு ஒரே குழப்பம் "எப்படி உங்களைப்போய் துறவி என சொல்கிறார்கள் மக்கள்? இப்படி பேராசை பிடித்து அலைகிறீர்கள்...அரசன்.


நாளை தெரிந்துகொள்வாய் அரசே...--- துறவி

மறுநாள் காலையில் துறவி புறப்பட்டு தனது இடத்துக்குபோக வேண்டும், போகும்போதும் அரசனுடைய குதிரையை விட நல்ல குதிரை , அரசனின் உடையை விட நல்ல உடை இப்படி துறவி கேட்க , எல்லாம் தரப்பட்டது. அரசனும் வழியனுப்ப அவருடன் செல்ல ஊர்க்கோடியில் அந்த துறவி தனக்கு கிடைத்த குதிரை, நல்ல உடை அனைத்தையும் திருப்பி அரசனிடமே கொடுத்துவிட்டு
தனது கிழிந்த உடையுடனும் வெறுங்காளுடனும் நடக்க.....

அரசன் 'இன்று தெரியும் என்று சொன்னீர்களே...'

'என்னால் நேற்று கிடைத்த அத்தனை சுகத்தையும் , வசதியையும் ஒறே நொடியில் தூக்கி எறிந்து விட்டு வாழ முடியும் அரசே உனக்கு அந்த மனப்பக்குவம் இருக்கிறதா?...துறவியின் கேள்வியில் அரசன் அசந்து விட்டான்.

வாழ்க்கையில் நமக்கு சார்ந்திருப்பது தவிர்க்க முடியாதது ஆனால் சொந்தம்

கொண்டாட எதுவும் இல்லை. இந்த தாமரை இலை நமக்கு கற்றுத் தரும் பாடம் என்ன தெரியுமா?...தண்ணீரில் இருந்தாளும் தண்ணீர் ஒட்டாத அந்த சூழல்...நம்மை சுற்றி எல்லாம் இருந்தாலும் எதுவும் நமக்கு சார்ந்ததல்ல. பல பிரச்சினைகளுக்கு காரணம் ' அது என்னுடையது” என்ற வாதம்தான்.

உடுத்தி கிழித்ததும் , உண்டு செரித்ததையும் தவிர எதுவும் நமக்கு சொந்தமில்லை.

ZAKIR HUSSAIN

நேற்று ! இன்று! நாளை! - தொடரிலிருந்து ரிவைண்ட் ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | March 26, 2016 | , , , , , ,

நாவலர் நெடுஞ்செழியன் கட்சியில் மூத்தவர். அனுபவம் நிறைந்தவர், கட்சியின் முக்கியப் பொறுப்புகள் பலவற்றில் இருந்தவர். முக்கியமாக, அண்ணாவின் நம்பிக்கையைப் பெற்றவர். அண்ணா இருந்த போதே கட்சியின் பெரிய பதவியான  பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தவர். முதல்வர் பதவிக்குத் தகுதியானவர். இன்னொரு பக்கம், கருணாநிதிக்கும் கட்சிக்குள் நல்ல செல்வாக்கு. தட்ட வேண்டிய இடத்தில் தட்டி வெட்ட வேண்டிய இடத்தில் வெட்டி குட்ட வேண்டிய இடத்தில் குட்டி வளர்ந்த சுறுசுறுப்பான இளைஞர். கடுமையான உழைப்பாளி. கட்சி வளர்ச்சிக்காக நிதி சேகரிப்பதில் வல்லவர். தொண்டர்கள் மத்தியில் மாவட்டமெங்கும் இணைந்து பழகி ஒட்டி உறவாடி   நன்கு அறிமுகமானவர்.


போட்டி ஏற்பட்டுவிட்டது. வாக்கெடுப்பு நடத்தவேண்டிய சூழல். திடீரென நெடுஞ்செழியன் எழுந்தார்.  ‘தலைவர் தேர்தலில் போட்டி ஏற்படுவதை நான் விரும்பவில்லை. ஒரு மனதாக என்னைத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால் மட்டுமே நான் தேர்தலில் நிற்பேன் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு வந்துள்ளேன். எனக்குப் போட்டி ஏற்பட்டுவிட்ட நிலையில், நான் போட்டியிட விரும்பவில்லை. போட்டியில் இருந்து விலகிக் கொள்கிறேன்’ சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல் அந்த அறையில் இருந்தும் வெளியேறிவிட்டார். கூட்டத்தில் லேசான சலசலப்புகள் ஏற்பட்டன. எனினும், முக்கியப் போட்டியாளர் விலகிக் கொண்டதால் திமுக சட்டமன்றக் குழுவின் தலைவராக கருணாநிதி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உண்மையில் அடுத்த முதல்வர் யார் என்ற பேச்சு எழுந்தவுடனேயே திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலரையும் அழைத்துப் பேசத் தொடங்கி விட்டார் எம்.ஜி.ஆர். பேசப்பேச பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கருணாநிதிக்கு இருப்பது எம்.ஜி.ஆருக்குப் புரிந்துவிட்டது. விளைவு, முடிவெடுக்காமல் இருந்தவர்களையும் கருணாநிதியின் பக்கம் திருப்பத் தொடங்கினார். அதை எம்.ஜி.ஆரே பின்னாளில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் வெளியிட்டார். 

இதுகுறித்து நாவலர் நெடுஞ்செழியன் தனது சுயசரிதையில் ‘கருணாநிதிக்கு ஆதரவு திரட்டும் விதத்தில் திமுக எம்.எல்.ஏக்களை ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்து விருந்து கொடுத்தார் எம்.ஜி.ஆர். ஆதித்தனாரும் தன் பங்குக்கு நிறைய உதவிகளைப் பொருளாதார ரீதியாகச் செய்து கொடுத்தார்’ என்று எழுதியிருக்கிறார்.

பெரிய அளவில் கருணாநிதிக்கு ஆதரவு உருவாகியிருக்கிறது என்று தெரிந்ததும் நேராக கருணாநிதியிடம் சென்று பேசினார் எம்.ஜி.ஆர். பெரும்பாலானோரின் விருப்பத்தைத் தட்டிக்கழிக்கவே கூடாது என்று எம்.ஜி.ஆரும் மற்ற திமுக முன்னணித் தலைவர்களும் முடிவெடுத்தனர்.   பெரியாரின் ஆதரவும் கருணாநிதிக்கே இருந்தது. இதற்கு முக்கியக் காரணம் தொடர்ந்து முதலியார் இனத்தவர்கள் முதல்வராக வந்த நிலை மாறி ஒரு பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் முதல்வராக வரட்டுமே என்றுதான்.  பக்தவத்சலத்தை தொடர்ந்து அண்ணா அதன்பின் நெடுஞ்செழியன் என்றால் தொடர்ந்து மூன்று முதலியார்களே முதல்வராக வந்திருப்பார்கள்.  

ஆக, அடுத்த முதலமைச்சராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. அந்த அமைச்சரவையில் யார், யார் இடம்பெறுவது என்ற கேள்வியும் கூடவே எழுந்தது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் நெடுஞ்செழியன். ‘ நான் திமுக சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து பணியாற்றுவேன். கலைஞர் கருணாநிதி அமைக்கப்போகும் அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன். எப்போதும்போல் கழகத் தொண்டினை ஆற்றிக்கொண்டு வருவேன்.’ என்று சொன்னதோடு நிறுத்தாமல் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குச் சென்று தன்னுடைய அறையைக் காலி செய்யும் முயற்சியில் இறங்கினார். அதைப் பார்த்த க. ராசாராம் எம்.பி கருணாநிதிக்குத் தகவல் கொடுத்தார். உடனடியாகக் கோட்டைக்கு வந்த கருணாநிதி, நேரே நெடுஞ்செழியனின் அறைக்குச் சென்று அவரிடம் பேசினார். துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார். அவை முன்னவராகவும் நீங்களே இருங்கள் என்றார். சட்டமன்றத்தில் உங்களுக்கு அடுத்த இருக்கையில் நான் அமர்கிறேன் என்று சொல்லி நெடுஞ்செழியனின் கைகளைப் பற்றிக் கொண்டார். ஆனால் நெடுஞ்செழியனோ எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை. நான் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரமாட்டேன்; ஒரு முடிவுக்கு வந்தால் மாறமாட்டேன் என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.

அதிருப்தி காரணமாக அப்படியொரு முடிவை எடுத்திருந்தார் நெடுஞ்செழியன். ஆனாலும் கட்சியின் மூத்தவரான அவரை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள விரும்பினார் கருணாநிதி. உடனடியாக என்.வி. நடராசன், ப.உ. சண்முகம், ஏ. கோவிந்தசாமி உள்ளிட்டோர் நேரில் சென்று நெடுஞ்செழியனிடம் பேசினர். பெரியாரும் நெடுஞ்செழியனை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினார். இந்த நெருக்கடியான நேரத்தில் நாவலரும் மற்றவர்களும் கண்ணைமூடிக்கொண்டு கலைஞரை ஆதரிக்கவேண்டும் என்றார் பெரியார்.

இதனைத் தொடர்ந்து 10 பிப்ரவரி 1969 அன்று கருணாநிதி தலைமையில் திமுக அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது.  

தி மு கவின் வரலாற்றில் நெடுஞ்செழியனின் பங்கு மகத்தானது. நாடெங்கும் சுற்றிப் பேசி நடமாடும் பல்கலைக் கழகம் என்று புகழப் பட்டவர். 1953 ல் திமுக நடத்திய மும்முனைப் போராட்டம் திராவிட இயக்க வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனை. அப்போது அண்ணா, ஈ.வெ.கி. சம்பத், நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராசன் ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு ஐவர் வழக்கு என்று அழைக்கப்பட்டது. பின்னாளில் அவர்களே திமுகவின் ஐம்பெருந்தலைவர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் கருணாநிதி யின் பெயர் இல்லை.  

பொதுச்செயலாளர் பொறுப்பை கட்சியின் மற்ற தலைவர்களுக்கும் கொடுக்க விரும்பியபோது அண்ணா முதலில் தேர்வுசெய்தது நெடுஞ்செழியனின் பெயரைத்தான். அப்போது நடந்த மாநாட்டில், ‘தம்பி வா, தலைமை ஏற்கவா!’ என்று நெடுஞ்செழியனுக்கு அழைப்பு விடுத்தார் அண்ணா. பின்னாளில் அண்ணாவுக்கும் ஈ.வெ.கி. சம்பத்துக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, திமுக பிளவுபட்டது. 1961 ல் திமுகவில் இருந்து வெளியேறினார் ஈ.வெ.கி. சம்பத். அதன்பிறகுதான் நெடுஞ்செழியனுக்கு முதன்முறையாக இரண்டாம் இடம் கிடைத்தது. ஆம். முதன்முறையாக திமுகவின் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார் நெடுஞ்செழியன். சட்டையைக் கிழித்துவிட்டு சம்பத்தைதி மு க`விலிருந்து வெளியேற்ற வேலூர் பொதுக் குழுவில் கருவியாக செயல்பட்டவர் கருணாநிதி என்கிற செய்தியும் அன்று பேசப்பட்டது. 

தமிழ் தேசியக் கட்சி என்னும் புதிய கட்சியைத் தொடங்கிய சமயத்தில், திமுக மீது கொள்கை ரீதியாக பல தாக்குதல்களைக் கொடுத்தார் ஈ.வெ.கி. சம்பத். அப்போது அவருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திமுக என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதினார் நெடுஞ்செழியன். சம்பத் எழுப்பிய  விமரிசனங்களுக்கு விளக்கம் கொடுக்கும் வகையிலும் கொள்கை தொடர்பாக திமுக தொண்டர்களுக்குப் புரிதலை ஏற்படுத்தும் வகையிலும் அந்தப் புத்தகம் அமைந்தது.  ‘ அன்று திராவிடர் கழகம் பிரிவதற்குத் தந்தை காரணமாக இருந்தார். இன்று திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவதற்குத் தனயன் காரணமாக இருக்கிறார்’ என்பது அந்தப் புத்தகத்தில் இடம்பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த வரிகள். ( சம்பத் பெரியாரின் அண்ணன் மகன்). 

அன்று முதல் திமுகவின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் சமயங்களில் எல்லாம் நெடுஞ்செழியன் முக்கியப்பங்கு ஆற்றினார். பிரிவினைத் தடைச்சட்டம் அமலுக்கு வந்ததன்மூலம் திமுகவுக்கு ஆபத்து ஏற்பட்டபோது திமுகவின் கொள்கை சற்றே திருத்தியமைக்கப்பட்டது. அப்போது அவைத்தலைவராக இருந்தவர் நெடுஞ்செழியன். 1965ல் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் தொடங்கும் முடிவை திமுக எடுத்தபோது அவைத்தலைவராக இருந்தவர் நெடுஞ்செழியன். 1962 தேர்தலுக்குப் பிறகு நெடுஞ்செழியன்தான் சட்டமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  

இன்னும் சொல்லப்போனால் 1967ல் திமுக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியபோது முதல்வர் பதவிக்கு அண்ணாவின் பெயரை முன்மொழிந்தவர் நெடுஞ்செழியன். திமுகவின் முதல் அமைச்சரவையில் கல்வி அமைச்சரானார் நெடுஞ்செழியன். கட்சியில் அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த அவருக்கு, ஆட்சியிலும் அதே இடம் கிடைத்தது.

அண்ணா மறைவுக்குப் பிறகு முதன்முறையாக முதலிடத்தை நெருங்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்காலிக  முதல்வரானார். பதவி நிரந்தரமாகவே அவர் வசம் இருந்துவிடும் என்று நினைத்தார். ஆனால் அந்த இடத்தில்தான் அரசியல் காய்நகர்த்தல்கள் அண்ணாவின் சவ அடக்கம் நடக்குமுன்னே தொடங்கின. அண்ணா இருக்கும்வரை எந்தப்பதவிக்கும் போட்டி போடாமல் இருந்த நெடுஞ்செழியன் முதன்முறையாக முதல்வர் பதவிக்காக கலைஞருடன் போட்டியிட வேண்டிய சூழல் உருவானது. அப்போது மேலே குறிப்பிட்டபடி எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் கலைஞரின் பக்கமே இருந்தனர். விளைவு, கலைஞர் முதல்வரானார்.

கருணாநிதி ஆதரவாக எம்.ஜி.ஆர் செயல்பட்டதில் நெடுஞ்செழியனுக்கு பலத்த அதிருப்தி. கருணாநிதிக்கு ஆதரவு திரட்டும் விதத்தில் எம்.ஜி.ஆர் திமுக எம்.எல்.ஏக்களை ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்து விருந்து கொடுத்ததும். ஆதித்தனாரும் தன் பங்குக்கு நிறைய உதவிகளைப் பொருளாதார ரீதியாகச் செய்துகொடுத்ததும் பெரும் மன உளைச்சலைக் கொடுத்தது. 

தொடர்ந்து கட்சியின்  பொதுச்செயலாளர் பதவிக்கும் இருவருக்கும்   போட்டி உண்டாகும் சூழ்நிலை  ஏற்பட்டது. கட்சி நிர்வாகப் பணிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. தலைவர் பதவி உருவாக்கப் பட்டு , திமுக தலைவராக கருணாநிதியும் பொதுச்செயலாளராக நெடுஞ்செழியனும் வந்தனர். அண்ணா மறைந்த பிறகு அவரது எண்ணங்களுக்கு மாறான முதல் அத்து மீறல் இதுவே.  இப்போதும் கலைஞரின் பக்கமே எம்.ஜி.ஆர் இருந்தார்.

1972ல் கலைஞருக்கு எதிராக எம்.ஜி.ஆர் போர்க்கொடி தூக்கியபோது எம்.ஜி.ஆருக்கு விளக்கம் கேட்டுக் கடிதம் எழுதியவர் நெடுஞ்செழியன்.  அத்துடன் பொதுக் கூட்டங்களில் எம் ஜி யாரை காரசாரமாகத் தாக்கிப் பேசினார். அண்ணா தி மு கவின் தேர்தல் சின்னம் இரட்டை இலை  என்று அறிவிக்கப் பட்டபோது “ இரட்டை இல்லையா? முளைத்து மூன்று இலை  கூட விடவில்லை “ என்று நையாண்டி பேசினார்.  பதிலுக்கு எம் ஜியாரும் சர்க்காரியா கமிஷனில் கொடுத்த ஊழல் பட்டியலில் ஒரு  நிறுவனத்தில் சென்னை ஜெமினி மேம்பாலம் கட்டும் ஒப்பந்தம் பெற்றுத்தர வைர நெக்லசை பரிசாகப்  பெற்றார் என்று நெடுஞ்செழியன் மீது குற்றம் சாட்டி இருந்தார். 

என்றாலும், அடுத்தடுத்த அரசியல் மாற்றங்களும் தேர்தல் முடிவுகளும் நெடுஞ்செழியனை எம்.ஜி.ஆரின் பக்கம் கொண்டுசேர்த்துவிட்டன. முதலில் திமுகவில் இருந்து விலகி, மக்கள் திமுக என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். அந்தக் கட்சியை நடத்த முடியவில்லை. பிறகு எம்.ஜி.ஆர் முதல்வரானதும் அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார். எம்ஜியாரால்  ப. உ . சண்முகம் உட்பட்ட பல முன்னாள் தி மு கவினர் இவ்விதம் அரவணைக்கப் பட்டனர். கருணாநிதி வசம்  தி மு க  சென்று சேர்ந்துவிட இவைகள் காரணமாயின. பேராசிரியர் அன்பழகனைத்தவிர ஒட்டு மொத்த திமுகவின் முன்னணித் தலைவர்கள் எம்ஜியாரோடு ஐக்கியம் ஆயினர்.  

நாஞ்சில் மனோகரன் அதிமுகவில் இருந்தவரை அவருக்குத்தான் இரண்டாம் இடம். அவர் வெளியேறியபிறகு அதிமுகவின் இரண்டாம் இடம் நெடுஞ்செழியன் வசம் வந்தது. அன்று தொடங்கி எம்.ஜி.ஆர் மறையும் வரை கட்சியிலும் ஆட்சியிலும் நிரந்தர இரண்டாம் இடம் அவருக்குத்தான். நிதியமைச்சர் என்ற முக்கியத்துவம் வாய்ந்த துறை அவர் வசமே இருந்தது. இடையில் எம்.ஜி.ஆர் மருத்துவ சிகிச்சையில் இருந்தபோது தற்காலிக முதல்வராகச் செயல்பட்டார்.

எம்.ஜி.ஆர் மரணம் அடைந்தபோது மீண்டும் தற்காலிக முதல்வர் பதவி கிடைத்தது. அப்போது அதிமுக இரண்டு கூறுகளாகப் பிரிந்தது. நெடுஞ்செழியன், ஜெயலலிதா உள்ளிட்டோர் ஒரு பிரிவாகவும் ஜானகி, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோர் இன்னொரு பிரிவாகவும் இயங்கினர். பிறகு ஜெயலலிதாவுடனும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அப்போது ஜெயலலிதா – நெடுஞ்செழியன் இடையே நடந்த கருத்துமோதலின்போது பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் ரசனை குறைவானவை.

இங்கு எழுதப் பட முடியாத வார்த்தைகளால் ஒதுக்கப் பட்ட  அலட்சியப்படுத்தப்பட்ட பின்னரும் ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும இரண்டாம் இடம் பெற்றுக்கொண்டவர் சகிப்புத்தன்மைக்குப் பெயர் போன நாவலர்.  ஜெயலலிதாவுடன் மனஸ்தாபமானபோது ஒரு சுவாரசியம். சுயேட்சையாக சட்டசபைக்கு போட்டியிட்டு நெடுஞ்செழியன் மயிலாப்பூர் தொகுதியில்  ஐநூறு ஓட்டுக்கள் மட்டுமே  வாங்கினார். அப்போது அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட மற்றொரு வேட்பாளர் திரைப்பட நடிகர் எஸ்.வி சேகர் இவரை விட அதிக ஓட்டு வாங்கினார். நடமாடும் பல்கலைக் கழகம் என்று நாடறிந்த ஒரு அனுபவம் பெற்ற அரசியல்வாதியின் அடையாளம் அலங்கோல அரசியலால் இப்படி வெளிப்பட்டது. தன்னை உணர்ந்தார். தனது பலத்தை யும் அறிந்தார். 

1991ல் ஜெயலலிதா வெற்றிபெற்று ஆட்சி அமைத்தபோது நெடுஞ்செழியனுக்கு அமைச்சரவையில் இரண்டாம் இடம் கிடைத்தது. அதன்பிறகு நெடுஞ்செழியனின் அரசியல் வாழ்க்கையில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவுமில்லை. அண்ணா, கருணாநிதி எம்ஜியார், ஜெயலலிதா என்கிற  பல முதலமைச்சர்களின் அவையில் இரண்டாம் இடம் நெடுஞ்செழியனுக்கு நிறந்தரமாகிப் போனது. 12 ஜனவரி 2000 அன்று மரணம் அடைந்தார். 

திராவிட இயக்கத் தலைவர்களில் அதிகம் எழுதியவர்கள் என்று பட்டியல் போட்டால் அதில் நெடுஞ்செழியனுக்கு முக்கிய இடம் உண்டு. குறிப்பாக, அவர் எழுதிய திராவிட இயக்க வரலாறு புத்தகத்தைச் சொல்லவேண்டும். அதிமுக தொண்டர்களுக்கு வரலாறு புரியவேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்ட புத்தகம் என்று முன்னுரையில் பதிவுசெய்திருப்பார். திராவிட இயக்க வரலாற்றைத் தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் விரும்புவோர் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்.

நெடுஞ்செழியனுக்கும் கருணாநிதிக்கும் ஏற்பட்ட மனத்தாங்களில் இவர்கள் பரிமாறிக்கொண்ட நாகரிகமான அரசியல் சொல்லாடல்கள் பலருக்கு உதாரணமாகத் திகழ வேண்டியவை. ஆனாலும் ஒரு முறை நெடுஞ்செழியனைப் பற்றி கருணாநிதி “ அவர் மனைவி பேச்சைக் கேட்பவர் ” என்று சொன்னபோது அதற்கு நெடுஞ்செழியன் சொன்ன பதில் , “ ஆமாம் ! நான் மனைவி பேச்சை கேட்பவன்தான். ஏனென்றால் நான் கேட்பதற்கு மனைவி மட்டுமே எனக்கு உண்டு “ என்று சொன்னார். இந்த வார்த்தைகள்,   பல சொல்ல மறந்த கதைகளை   ‘ கனிந்த மொழியில் ‘ சொல்லாமல் சொல்லும்.   

அரசியல் வாழ்வில் நெடுஞ்செழியன் தொட்ட உயரங்கள் முக்கியமானவை என்பதில் சந்தேகமில்லை. என்றாலும், வெற்றிக்கோட்டின்  மூச்சுக்காற்று முகத்தில் படும் அளவுக்கு நெருங்கியபிறகும் கோட்டைக் கடக்கமுடியாத வருத்தம் இறுதிவரை அவருக்கு இருந்திருக்கும். 

பல ஆண்டுகளாக தமிழக அரசியலை உற்று நோக்கும் பலருக்கு ஒரு ஆதங்கம் இருக்கலாம். ஒரு வேளை கருணாநிதியை எம் ஜி யார் ஆதரிக்காமல் நெடுஞ்செழியனை  அன்று முதல்வராக்கி இருந்து இருந்தால் அதன் பிறகு நடைபெற்ற அதிகாரப் போட்டிகளையும்  அறிவியல் ரீதியான ஊழல்களையும்  சட்டமன்ற குடுமிப்பிடி சண்டைகளையும்  நரகல் மொழி நாடகங்களையும்  இன்று வரை அரங்கேறிக் கொண்டு இருக்கும் பகைமை அரசியலையும் தமிழகத்தின் வரலாறு பார்க்காமலேயே இருந்திருக்கக் கூடும். அதே நேரம் திமுகவினர் வர்ணித்தது போல் வெண்டைக்காயாகவும் தான் ஒரு அரசியல் அசடு என்றும்  நிருபித்த நெடுஞ்செழியனின் நிர்வாக திறமையின்மையால் கட்சியும் ஆட்சியையும் இதுவரை காணாமலும் போயிருந்து இருக்கலாம். யார் கண்டது. ?

மீண்டும்   சந்திக்கலாம். இன்ஷா அல்லாஹ்….
முத்துப் பேட்டை  P. பகுருதீன் .B.Sc;