Showing posts with label பர்மா தேக்கு வீட்டுக்காரர். Show all posts
Showing posts with label பர்மா தேக்கு வீட்டுக்காரர். Show all posts

பர்மா தேக்கு வீட்டுக்காரர் - தொடர்கிறது.... 17

அதிரைநிருபர் பதிப்பகம் | September 22, 2015 | , , ,

ஞாபகம் வருதே - [4] part - 2

அன்று இரவு சென்னையிலிருந்து கேலாலம்புருக்கு புறப்பட்டேன். காலை ஆறு மணிக்கு விமானாம் தரை இறங்கியது. முதலில் குடி நுழைவு துறை எல்லோ லைன் கடந்து பின் கஸ்டம்ஸ். இந்திய கஸ்டம்ஸ்காரர்களின் கண்ணில் விழித்தாலே நளவெண்பாவின் கதாநாயகன் நளனுக்கு பிடித்த ‘சனி’தமயந்தி நமக்கு மாலை. இடாத போதும் நம்மையும் வந்து பிடிக்கும். ஆனால் இங்கே சகோதரத்துவ-நட்பு முறை வாசனைப்பூ மணம் கமழும். செழிப்பான சிரித்த முகத்துடன் சுங்கதுரை அதிகாரிகள்.                    கொண்டு வந்த பெட்டியே தூக்கி மேஜையில் வைத்தேன். ‘’பெட்டிக்குள் என்னஇருக்கிறது?’’என்றார் ’என் சொந்த உபயோகத்துக்கான சாமான்கள்! என்றேன்

"புடைவைகள் எத்தனை இருக்கிறது?" என கேட்டார். 

"ஒரே ஒரு புடவை" என்றேன்.

"யாருக்கு? மனைவிக்கா?"

"மனைவி ஊரில் நானிங்கே?"

"அப்படியென்றால் Girl Friendகா கொண்டு போகிறாய்?" என்றார். 

"எனக்கு girl friend இல்லேயே" என்று செயற்கையான ஏக்கத்துடன் சொன்னேன்.

"u nampa handsome! cubalah.boleh dapat satu" என்றார் 

[நீ கவர்ச்சியாக இருக்கிறாய், முயற்சி செய்; ஒன்று கிடைக்கும்] இது போன்ற நட்பு-கேலி முறையிலான பேச்சுக்கள் வயது வரம்பு இன்றி அங்கே பேசிக்கொள்வது சகஜம். நம் பாரத பூமிபோல் பதவி பந்தாக்கள், மூஞ்சியே ‘உற்ர்ரர்ர்ர்’ என்று நாய் போல் நரி போல் வைத்துக் கொள்வதெல்லாம் அங்கே இல்லை!.

"பெட்டியே மூடு" என்றவர், அடுத்து கீழே  மாம்பழக்கூடையே பார்த்தார்.

"அது என்ன கூடையில் மாம்பழமா?’’

"ஆமாம்" 

"நிறைய இருக்கிறதே! வியாபாரம் செய்ய கொண்டு போகிறாயா?"

"இல்லை! என் நண்பர்களின் குடும்பம் இங்கே இருக்கிறது. அவர்களுக்கு கொடுக்ககொண்டுபோகிறேன். மற்றபடி இது மாதிரியான வியாபாரம் செய்யும் சில்லறைதனமான பழக்கமெல்லாம் என்னிடம் இல்லை!" என்றேன் 

"சரி! நம்புறேன்! நானொன்று கேட்கிறேன். நீ தப்பாக நினைக்காதே! என் பிள்ளைகள் இந்திய மாம்பழம் திங்க ஆசைப்படுகிறார்கள். இரண்டு பழம் கொடுக்க முடியுமா! காசு தந்து விடுகிறேன்!" எனக் கேட்டார்.

கூடையை திறந்து நாலு பழத்தை எடுத்துக் கொடுத்தேன். 

"இரண்டு போதுமே!  உன் நண்பர்களுக்கு வேண்டுமே?"

"நிறைய இருக்கிறது! பிள்ளைகளுக்கு கொடுங்கள்!"

காஸு கொடுக்க பர்ஸை திறந்து கொண்டே "பிறப்பா ரிங்கிட்?" [எத்தனை வெள்ளி] வினவினார்..

"இதை நான்காஸுக்கு விற்கவில்லை! உங்கள் பிள்ளைகளுக்கு என் அன்பளிப்பாக கொடுக்கிறேன்."

என்னை ஒரு பார்வை பார்த்தவர் "திரிமாகஸி! [நன்றி] என்றார். இந்த "திரிமாகசி" மலாய் மொழியில் அதிகம் உபயோகப்படும் வார்த்தை. அதிகம் உபோயோகப்பட்டதனால் அது தேய்ந்து போய் பழைய இரும்பு வியாபாரியிடம் பேரீச்சம் பழத்திற்கு எடை போட்டு கொடுத்து பண்டமாற்று செய்யப்பட வில்லை. மாறாக அது என்றும் வளர்ந்து கொண்டே வருகிறது. 

ஆனால் கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடிகள் வாழும் நம் நாட்டில் `நன்றி` என்ற வார்த்தை பேங்க்லாக்கரில் saftyயாக இருக்கிறது. சில சமயங்களில் இது ஒப்புக்காக சொல்லப்படுகிறது. அடிமனதின் ஆழத்திலிருந்து உணர்வுபூர்வமாக இந்த வார்த்தை வருவதில்லை. எப்படி வரும்? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்! 

நான் மலேசிய சுங்கசோதனையிலிருந்து மலர்ந்த முகத்துடன் வெளியாகி வீடு வந்து சேர்ந்தேன். 


அன்று ஞாயிற்றுக் கிழைமை. ஓய்வு! மறுநாள் மாலை சென்னையில் என் நண்பர் தந்த சாமான்களை எடுத்துக்கொண்டு ’லிட்டில்இந்தியா’ என்று அழைக்கப்படும் Malayan Mansion/Selangor Mansion பகுதிக்கு சென்றேன். அங்கே ‘வைர யாவாரி’ தங்கி இருக்கும் ரூமுக்கு போனேன். கதவில் பூட்டு தொங்கியது. ஆளில்லை. பக்கத்து ரூம்காரர் வெளியே வந்தார்.அவரிடம் கேட்டேன்.

"காலை எட்டு மணி சுமாருக்கு வெளியே போவார். ஒரு மணி சுமாருக்கு வருவார். கொஞ்சநேரம் இருந்து  விட்டு போறவர் இரவு ஒன்பது மணிக்கு மேல் வருவார்" என்றார்.

"நீங்கள் எந்த ஊர்?" எனக் கேட்டவரிடம், ஊர் பெயரைச் சொன்னேன்.

"அவர் உங்க ஊரா?" என்றார் 

"அடுத்த வீட்டுக்காரருக்கே இவரை யாரென்று இன்னும் தெரியவில்லை. இவருடைய பொது உறவு கொள்கையின் லட்சணம் இப்படி!

மண்ணுக்காகப் படைக்கப்பட்ட மனிதனை மனித நேயத்திலிருந்து எது பிரிக்கிறது?

"ஆமாம்! எங்க ஊர்தான். தெருவு வேறே!" என்றேன்.

அவருக்கு ஊரில் ஒருவர் கொடுத்த சாமானைக் கொடுக்க வந்திருக்கிறேன்! தயவுசெய்து அவரிடம் கொடுத்து விடுகிறீர்களா?’ என்றேன். 

இதைக் கேட்டு திடுக்கிட்டுப் போனவர்

"மன்னிச்சுக்கோங்க தம்பி! இதை வாங்கிட்டு அவரோடு என்னால் மல்லுக்கு நிக்க முடியாது! லாயர் Burrow* கேக்காத கேள்வி யெல்லாம் அவர் என்னிடம் கேட்பார். இந்த வம்பெல்லாம் நமக்கு வாணாம்! நீங்களே நேரடியா கொடுத்துடுங்கோ!" என்றார். 

கொண்டு போன சாமானுடன் திரும்பி விட்டேன். [*லாயர் Burrow. மலேயாவில் ஜப்பானியர் ஆட்சிக்கு முன் வெள்ளயார் ஆட்சிகாலத்தில் மேல் சொன்ன பெயரில் உச்ச நீதி மன்ற வழக்கறிஞராக வெள்ளைக்கார துரை ஒருவர் இருந்தாராம். அவர் தன் கட்சி காரருக்கு எதிரான சாட்சிகளை கூண்டில்லேற்றி ’எடக்கு-முடக்கான’ கேள்விகளைக் கேட்டு குழப்பு-குழப்பென்று குழப்பி திண்டாட வைத்து விடுவாராம். சாட்சிகள் குழம்பிப்போய் ‘உடும்பு வேணாம் கையைவிடு!’ என்று ஓடி விடுவார்களாம். இன்னும் புரியும்படி சொல்வதென்றால் ’ஆட்டைக் கழுதையாக்கிய ’நம்மூர்கதைதான்.] 

மறுநாள் பகல் ஒரு மணி சுமாருக்கு வைரயாவாரிக்கு டெலிபோன் போட்டேன். விஷயத்தைச் சொன்னேன்.

"நான் நீங்கள் வந்த அந்த நேரம் ரூமில் இருக்கமாட்டேன். ரெம்ப பிஸி. இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் ரூமில் இருப்பேன். அப்போ கொண்டு வந்து கொடுங்கள்!" என்றார். 

பேச்சில் கொஞ்சம் அதிகாரத் தொனி இழையோடியது.

"நான் மாலை 5.30க்குஅங்கே வருவேன்! 7.30க்கு திரும்பி விடுவேன். ஒன்பது மணிவரை அங்கிருந்தால் திரும்பி வர பஸ் கிடைக்காது. என் மாமா கடையில் கொடுத்து விட்டுப் போகிறேன். வாங்கிக் கொள்ளுங்கள்" என்றேன்.

"அங்கெல்லாம் நான் போய் வாங்க முடியாது! `யாரிடம் கொடுத்து விடுகிறேன்!` என்று ‘வாக்கு’கொடுத்து அதை வாங்கி வந்தீர்களோ அதை அவர் கையிலேயே ஒப்படைக்க வேண்டும். இதுதான் ’அமானிதம்’ என்பதன் அர்த்தம். இதுதான் முறை!" என்றுரைத்தார்.

"புண்ணியத்திற்கு உழைக்கும் மாட்டை பல்லை பிடித்து பதம் பார்ப்பது" என்று தமிழில் சொல்வார்கள். ஆங்கிலத்தில் Look not a gifted horse in the mouth. 

இதைக் கேட்ட எனக்கு ஏறியது ரத்தம்!

"நான் அதை உங்கள் திருவடி பணிந்து உங்களிடமே ஒப்படைக்கிறேன்" என்று வாக்கு கொடுத்து வாங்கி வரவில்லை. இது ஒன்றும் நேத்திக்கடன் அல்ல! வெள்ளிக்கிழமை இரவு அங்கே ’தலை போட்டு’ படுத்துவிட்டு நேத்திக் கடனையும் செலுத்தி வர!. வேண்டுமானால் ஒரு வாரத்திற்குள் இங்கே வந்து உங்கள்  சாமான்களை எடுத்துக் கொள்ளுங்கள். வருவதற்கு முன் அப்பாயின்மென்ட் வாங்கி வரவேண்டும். நான் ரெம்ப பிஸி" என்றேன்.

[வேணுமென்றே நானும் ஒரு’பந்தா’ பன்ணினேன்] டெலிபோனை வைத்து விட்டார். கொஞ்சநேரம் கழித்து டெலிபோன் மணி அடித்தது. என் மாமா பேசினார்

"என்னப்பா அவரிடம் தகராறு செய்கிறாயாமே?" கேட்க..

"ஒன்றும் தகராறு இல்லை" என்று நடந்ததை சொன்னேன்.

"அவர் குணம் அப்படித்தான். நாம்தான் பார்த்து அனுசரித்துப் போகணும் . பெரியமனுஷன். கொண்டுபோய் கொடுத்துவிடு"

"அவர் போடும் கண்டிசனுக்கும் சவுடாளுக்கும் நான் பணிந்து போக முடியாது. வேண்டுமென்றால் ஒரு வாரத்திற்குள் வந்து எடுக்கட்டும். இல்லையென்றால் இங்கேயே கிடக்கட்டும்" என்றேன்.  என் மாமாவுக்கு என் குணம் தெரியும்.

"நீ அதை என்னிடம் கொண்டு வந்து கொடுத்துவிடு. நான் கொடுத்து கொள்கிறேன்" என்றார். அடுத்த நாள் மாலை அங்கே போய் அதை என் மாமாவிடம் கொடுத்துவிட்டு வந்தேன்.  

பல மாதங்கள் கடந்து போனது. ஒரு நாள் மாலை லிட்டில் இந்தியா மலையன் மன்சனில் இருக்கும் புத்தக மொத்த வியாபாரம் செய்யும் கடைக்கு போனேன். அங்குள்ளவர்கள் அனைவரும் என் உடன் பிறவா சகோதரர்களும் நண்பர்களும் போல. நான் நம்மூர்காரர் ஒருவரின் நிறுவனத்தில் working partnerராய் இருந்து கடினமாக இரவு பகல் பாராமல் உழைத்து-உழைத்து ஓடாய்போய் பையிலும் கையிலும் காசில்லாமல் வீசியகையும் வெருங்கையுமாய் வெளியே வந்தபோது எனக்கு ஆதரவு கரம் நீட்டி நெஞ்சோடு நெஞ்சாக அணைத்துக் கொண்ட மனித இதயம் கொண்ட மனிதர்கள் அங்கே இருந்தார்கள். வாரத்திற்கு இரண்டு மூன்று தடவை அங்கே போய் வருவது என் வாடிக்கையான பொழுதுபோக்கு. 

ஒரு நாள் மாலைஅங்கே போய் பேசிக் கொண்டிருந்தபோது அந்த கம்பெனி டெலிபோன் மணி கினுகிணுத்தது. அதை எடுத்துக் கேட்ட மேனேஜர்

"உங்களுக்குத்தான். யாரோ பேச வேண்டுமாம்" என்று ரிஸிவரை என்னிடம் தந்தார். பேசியது வைரயாவாரி

"பாரூக்! நான் இங்கே மூனாவது மாடியில் பதினாளாம் நம்பர் ரூமில் இருக்கிறேன்! ஒரு செய்தி பேசவேண்டும். இங்கே வர முடியுமா?" என்றார். பேச்சில் பணிவும் கனிவும் சோகமும் இழையோடியது.

"அவர்தானா இவர்?" என்ற சந்தேகத்தை தூண்டும்படியான தொனி ஒலித்தது. அங்கே சென்றேன். முகத்தில் வாட்டம். ஆழ்ந்த யோசனை. என்னையே பார்த்துக்கொண்டு ஏதும் பேசாமல் யோசனையில் மூழ்கி இருந்தார். கொஞ்சநேரம் சென்றதும்.

"செய்தி சொல்ல கூப்பிட்டீர்களே? என்ன சேதி" என்று அவரை யோசனைலிருந்து கலைத்தேன். "ஒன்றுமில்லை! நானும் பல யாவாரங்கள் செய்தும் ஒன்றும் கை கொடுக்கவில்லை. ஜான் ஏறினால் முழம் வழுக்குது! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. ’கை’ முதல் எல்லாம் ’கை’ விட்டு  போய்விட்டது. தங்குமிடத்துக்கு மூன்று மாத பாக்கி நிக்கிது. கேட்டு இம்சை படுத்துகிறார். கையில் காசில்லை.கை செலவுக்கு நூறு வெள்ளி இருந்தால் கொடுங்கள் அப்புறம் தந்து விடுகிறேன்" என வேண்டினார்.

அப்பொழுது என்னிடம் இருந்தது ஆறுவெள்ளி சில்லரை மட்டுமே.

"இங்கேயே  இருங்கள் கொஞ்ச நேரத்தில் வருகிறேன்" என்று கீழேபோய் என் நண்பரிடம் பணம் வாங்கி கொடுத்து விட்டு வந்தேன்.

அவர் சொன்னது போல் யாவாரம் அவருக்கு மட்டும் தான் கை கொடுக்கவில்லை. பயறு கஞ்சி, பால் காய்ச்சி வித்தவர்கள் வடைசுட்டு வித்தவர்கள்," வாடா! வாடா! என்று மரியாதை குறைவாக கூறிகூறி "வாடா" விற்றவர்களும் ஆப்பம் சுட்டு யாவாரம் செய்தவர்களும் காஸு சம்பாதித்து ஊரில் மாடிவீடு கட்டினார்கள். அம்பாஸிடர் கார் வாங்கி விட்டார்கள். அவர்களையெல்லாம்  விட அனுபவத்திலும் கல்வியிலும் உடல் கவர்ச்சியிலும் பலமடங்கு மேலான இவர் ஏன் தோற்றார்? அவரை தடுத்த சீனத்து  சுவர் எது.? ஒரே ஒரு காரணம் "வாய்" அவருடைய ‘வாய்!’ வாயாலே கெட்டுச்சாம்  கௌதாரி’’ என்று சொல்வார்கள். 

அதன் முழுகதையும் தெரிந்தவர்கள் சொல்லலாம். சும்மாபோன குருட்டு பாம்பை பார்த்த தவளை வாயே வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் அதை பார்த்து கேலி செய்தது. கடைசியில் அந்த குருட்டு பாம்புக்கே அந்த தவளை இரையான கதை உங்களுக்கு தெரியும்.

1967 ஆண்டு வாக்கில் தென் இந்திய ரயில் நிலையங்களில் "வாய் நல்லதானால் ஊர் நல்லது" என்ற வாசகம் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது.

நீண்ட நாட்களாக அந்த நபரின் நடமாட்டம் லிட்டில் இந்தியா பக்கம் இல்லை. மாதங்கள் பல கடந்தது. ஒரு நாள் மாலை என் கடைக்கு திடீரென வந்தார். முகத்தில் வாட்டம் இழையோடியது. வந்தவருக்கு சேர் எடுத்து போட்டு உட்காருங்கள் என்று சொன்னேன். அது டி’டைம்! இரண்டு.டி வந்தது. டி குடித்த பின் கொஞ்ச நேரம் எதையோ யோசித்துக் கொண்டிருந்தார்.

"யாவாரம் ஏதும் செய்கிறீர்களா?" எனக் கேட்டேன். 

"இல்லை! இந்த சபுர் நான் புறப்பட்டு வந்த நேரம் சரி இல்லை. ஊர்போய் இரண்டு மூன்று மாதம் நின்று விட்டு வந்து யாவாரம் பாக்கலாம் என்று இருக்கிறேன். அடுத்த வாரம் பயணம் டிக்கட்டுக்கு தோது செய்து விட்டேன். ஊருக்கு போனால் பிள்ளைகள் கையை-கையை பாக்கும். அதுகளுக்கு கொடுக்க சாமான்கள் வாங்க கையிலே காசில்லை. ஒரு நூறு வெள்ளி கொடுங்கள் வந்ததும் தந்து விடுகிறேன்" என்றார். 

கொடுத்தேன்.போய்விட்டார்.

அவர் போன அரை மணி நேரம் கழித்து  என் டெலிபோன் மணி கினு கிணுத்தது. எடுத்துக் கேட்டேன். நம் மூர்காரரின் குரல்.

"அவர் அங்கே வந்தாரா?" 

நான் "இல்லை" யென்றேன். 

அவர் என்னிடம் வந்ததை இவரிடம் சொன்னால் ஊரெங்கும் பறையரைவார். சந்தர்ப்ப சூழலில் மனிதனுக்கு ஏற்ற-தாழ்வுகள் இயற்க்கை. அதை யறியாது   ஒரு மனிதனை மட்டம் தட்டுவதும் இழித்து பேசுவதும் இந்த மனிதனின் habit. அதனால் அந்த நபர் வந்ததை நான் அவரிடம் சொல்லவில்லை. 

அவரைப் பற்றி நண்பர் சொன்னார்:

"என்னிடம் வந்து ஊருக்கு போக போரதாகவும் கையில் காசில்லை" என்றவர். 

"கொஞ்சம் பணம் கொடுத்தால் போய் விட்டு வந்து தருகிறேன்" என்று கேட்டிருக்கிறார்

`போய்விட்டு வந்து எங்கே தரப்போகிறார்?’ என்று நூறு வெள்ளி கொடுத்ததைச் சொன்னதும்.

அடுத்து,

"என்ன! நூறு வெள்ளியை தூக்கி போடுகிறீர்கள்? இதை வைத்து நான் என்ன செய்ய முடியும்? என் பேரப் பிள்ளைகளுக்கு சோக்லேட்டே வாங்க முடியாதே! நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்று கொடுத்த பணத்தை நண்பரின் பக்கமே தள்ளி விட்டிருக்கிறார் அவர்.

"உங்கள்  பேரப் பிள்ளைகளுக்கு சொக்லேட் வாங்க நான் ஏன் பணம் கொடுக்க வேண்டும்?" என்று பணத்தை எடுத்து வைத்துக் கொண்டேன். போய்விட்டார்.

இந்த நிலைக்கு அவரை தள்ளியது எது? அவரின் கடந்த கால செல்வ செழிப்பும் அதனால் ஊறிய மமதையும். கால ஓட்டத்தையும் மாற்றத்தையும் கணிக்காமல் கால்போன பாதையெல்லாம் கண் போனது! கண்போன பாதையெல்லாம் மனம் போனது.

மனம்போன பாதையெல்லாம் வாய் போனது.
        வில் விட்டு புறப்பட்ட அம்பும் வாய்விட்டு 
புறப்பட்ட சொல்லும் திரும்ப வராது.

பெரும்பாலோர் தங்களின் கடந்த கால `பாட்டன் பூட்டன்` பெருமைகளை பேசிபேசியே  நிகழ்காலத்தை கைவிட்டார்கள். 

இவர்கள் "பொய் நெல்லை குத்தியே பொங்க நினைத்து கை நெல்லும் விட்டவர்கள்".

S.முஹம்மது பாருக்

பர்மா தேக்கு வீட்டுக்காரர் 28

அதிரைநிருபர் பதிப்பகம் | September 16, 2015 | , , ,

ஞாபகம் வருதே - [4] part - 1

ஒரு முறை மலேசியா புறப்பட சென்னைக்கு ரயில் ஏறினேன். என் நண்பர் ஒருவர் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்திருந்தார். எழும்பூரில் ஒரு விடுதியில் தங்கி வாங்க வேண்டிய சில சாமான்களை வாங்கிக்கொண்டு அன்று இரவு விமானத்தில் புறப்பட எண்ணி இருந்தேன். 

"மண்ணடியில் என் ரூமிலேயே தங்கிவிட்டு புறப்படலாமே! கொஞ்சநேரம் தானே! எதற்கு விடுதிக்கு வேறு வீண் செலவு?" என்று வற்புறுத்தினார்.

"சரி" என்று அங்கே சென்றேன். 

மண்ணடியில் எனக்கு தெரிந்த ஒரு வர்த்தகர் இருந்தார். ‘அவரையும் போய் பார்த்து விட்டு வரலாமே! ’ என்று அங்கே சென்றேன். மூன்றாவது மாடியில் அவர் அலுவலகம் இருந்தது. மேலே போக லிஃப்ட்டும் தொங்கிக் கொண்டு இருந்தது. லிஃப்ட் ஆப்பரேட்டர். முகமும் தொங்கிக் கொண்டிருந்தது. லிஃப்டில் போகலாம் என்று எண்ணிய எனக்கு தொங்கும் முகம் கண்டதும் லிஃப்டில் போக மனமில்லை. அதில் ஏறினால் வம்பு தும்பு வருமோ என்ற அச்ச உணர்வு வந்தது .அதனால் படி ஏறியே மேலே போகலாம்  என்று  ’வலது காலை எடுத்து முதல் படியில் வைத்தேன். அடுத்த கணம்,

"யாரது? நில்லுங்கள்! எங்கே போகிறீர்கள்?" என்ற அசரீரி போல் ஓசை கேட்டது.  இந்த அதட்டல் போட்டது  லிஃப்ட் ஆப்பரேட்டரே யன்றி வேறு யாருமல்ல.

"மூன்றாவது மாடிக்குப் போகிறேன்!"என்றேன்.

"யாரைப் பார்க்கப் போகிறீர்கள்?" என்றார். பதில் சொன்னேன். "எந்த ஊர்?" என்றார். இந்தக் கேள்வியை கேட்டதும் கண்ணதாசன் எழுதிய "எந்த ஊர் என்றவனே! இருந்த ஊரைச் சொல்லவா?" என்ற பாடல் நினைவுக்கு வந்தது.’ அதைப் பாடலாமா?’ என்று நினைத்தேன். வந்த இடத்தில் வம்பு எதற்கென்று விட்டு விட்டேன். இப்பொழுது இந்தப் பாடல் உருவான ஊற்றுக்கண் பற்றி  சுவையான செய்தி ஒன்றை சொல்ல ஆசைப்படுகிறேன். கண்ணதாசனின் இந்தப் பாடலுக்கு ‘கரு’கொடுத்தவர் அண்ணா என்றால் நம்புவீர்களா? ‘அண்ணா முதல்வராய் இருந்தபோது கரூர் வர்த்தக சங்க பிரதிநிதிகள் அண்ணாவைச் சந்திக்க வந்தார்கள். வந்தவர்கள் "வணக்கமுங்கோ! நாங்கள் கரூரிலிருந்து வருகிறோம்!" என்றார்கள். அதைக் கேட்ட அண்ணா `நானும் கரூரிலிந்து வந்தவன் தான்!" என்று நமுட்டுச் சிரிப்புடன் சொன்னார். இதைக் கேட்ட கரூர்காரர்களும் மற்றும் அங்கிருந்த நெடுஞ்செழியன், கருணாநிதி, அன்பழகன் கண்ணதாசன் ஆகியோரும். புருவத்தை உயர்த்தினார்கள்.

"என்ன அண்ணா உளறுகிறார்? காஞ்சிபுரத்தில் பிறந்த அண்ணா கரூரில் பிறந்தேன்’ ’ என்று சொல்கிறாரே”? என்று ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டார்கள்.  கரூர்காரர்களில் ஒருவர் குழப்பத்தோடு அண்ணாவை பார்த்து "நீ...ங்....க....ள்.....கா...ஞ்....சி......" என்று இழுத்தார். அவர் முடிக்கு முன்னே அண்ணா சொன்னார்.

"நான் காஞ்சிபுரத்தில் பிறந்தவன்தான். ஆனால் நான் என்தாயின் ‘கரு’ஊரில் உருவாகி வந்து காஞ்சிபுரத்தில் பிறந்தேன்.               அதனாலேதான் நானும் கரூரிலிருந்து வந்தவன்” என்று சொன்னேன் என்றார். இதைக்கேட்ட கரூர் ஆசாமிகள் கலங்கி போனார்கள்-அண்ணாவின் சொல் வண்ணம் கண்டு சொக்கிப் போனார்கள். ‘தூண்டில் காரனுக்கு மிதப்பு மேல் கண்!’ என்பது போல் அங்கிருந்த கவிஞர் கண்ணதாசனும் காரியத்தில் கண்ணா இருந்தார். வாய்ப்பு வந்தபோது அண்ணா கொடுத்த டிப்சை வைத்தே." எந்தஊர் என்றவனே? இருந்த ஊரைச்சொல்லவா? இருந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!" என்ற பாடலை எழுதினார்.’ வல்லவன் கையில் புல்லும் ஓர் ஆயுதம்’ என்று சொல்வார்கள். அதை அண்ணாவும் கண்ணதாசனும் மெய்ப்படுத்தினார்கள். இப்பொழுது நாம் கரூரிலிருந்து மண்ணடிக்கு  வருவோம். 

கரூரிலிருந்து மண்ணடி வந்தவர்கள் எல்லாம் மீண்டும் ஒரு நாள் ‘மண்ணடிப் போகத்தானே வேண்டும்!? . நான் சொல்லும் மண்ணடி அந்த இறுதிப் பயணம் போகும் மண்ணடி அல்ல: சிங்காரச் சென்னையின் கடலோரமிருக்கும் மண்ணடி. மீண்டும் மண்ணடிக்கு வருவோம்.

"எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்?" மண்ணடி லிஃப்ட் கேட்டது.

"அதிராம்பட்டினம்!"

"தெருவு?"

"கடல்கரை தெரு”

"பேரு?" 

"முஹமது பாரூக்!" [கேட்ட கேள்விகளைப் பார்த்தால் மண்ணடிக்குப் பதிலாக பாஸ்போர்ட் ஆபிஸுக்கு. வந்துவிட்டோமோ?’ என்ற சந்தேகமும் எனக்கு வந்தது.]

"என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள்?" என்றார்.

அவர் என்னை மதரஸா-அல்லது குமர் காரியமாக வந்த வசூல் பேர்வழி என்று எண்ணினாரோ என்னவோ? இப்படிக் கேட்டார்.

"அதையெல்லாம் சொல்ல முடியாது! விட்டால் விடு! இல்லையென்றால் நான் திரும்பிப் போய் விடுகிறேன்...........

அவர் வரச் சொன்னார் வந்தேன். விடமுடியாதென்றால் போய் விடுகிறேன். அதனால் எனக்கு ஒன்றும் குடி மூழ்கி விடப் போவதில்லை" என்றேன். 

இப்படி நான் சொன்னதும் என்னை ஏற இறங்க ஒரு பார்வைப் பார்த்தார். டெலிபோனை தட்டி மேலே கேட்டார். பின்பு,

"நீங்கள் லிஃப்ட்டிலேயே போங்கள்" என்றார்.

இப்போ பூசாரி மணியடித்தார். சாமியும் வரங்கொடுத்தது. ’நீங்கள் லிஃப்ட்டிலேயே போகலாம்" என்றார். 

அதட்டல் இல்லாத மரியாதை தொனி அவர் குரலில் ஒலித்தது. இதுவரை தொட்டிலில் துயில் கொண்ட மனித குணம் இப்பொழுது விழித்துக் கொண்டது. அங்கே ஒருவரை  லிஃப்டில் போக அனுமதிப்பது என்பது ஒரு வெளிநாட்டுத் தலைவர் இன்னொரு நாட்டுக்கு வரும்போது சிவப்பு கம்பளம் வரவேற்புக் கொடுப்பது போல! இது ஒரு[ Royal Salute] ‘ராஜமரியாதை!?’

**********************************************************************************
நான் மலேசியா புறப்படத் தயாரான போது என் நண்பர் இரண்டு கைலி ஒரு சந்தன சோப் ஒரு Vicco பல்பசை இவற்றை நம் ஊர்காரர் ஒருவரின் பேரைச் சொல்லி அவரிடம் கொடுத்து விடும்படி தந்தார். அவர் பெயர் உச்சரிக்கப்பட்டபோது’ என் நெஞ்சுக்குள் ஒரு எச்சறிக்கையுணர்வு மையம் கொண்டது’ இதனால் அவருக்கும் உனக்கும் ஒரு Ego போர் தொடங்கும்!.

"அதை வாங்காதே!" என்று என் உள் மனம் எச்சரிக்கை மணி அடித்தது.

அந்த நபரிடம் பழகுவதிலும் பேசுவதிலும் ஒருவர் எப்படித்தான் முன் எச்சரிக்கையுடன் இருந்தாலும் அதில் எப்படியாவது ஒரு குறை அல்லது தவறு கண்டு அடிபட்ட நாகம்புபோல சீறுவார். உப்புக்குக் கூட பிரயோஜனமில்லாத ஒரு தவறு, நாம் சொல்வதில் கண்டுபிடிப்பார். அதை வைத்தே நம்மைத் தாழ்த்துவார். தலையில் குட்டுவார். அதோடு அல்லாமல் அவரை அவரே ஒரு தூக்கு தூக்கி உச்சாணிக் கொப்பின் உயரத்தில் கொண்டு போய் வைத்துக் கொள்வார். 


அவரே உயர்ந்தவர்; அவரினும் உயர்ந்தவர் யாருமில்லை. அவர் சொல்வதெல்லாம் சரி;! அவர் போட்டிருக்கும் சட்டையே விலை உயர்ந்த சட்டை; அந்த விலை கொடுத்து அதை யாராலும் வாங்கிப் போட முடியாது. அவர் வீட்டு ஜன்னல், கதவு தூண் எல்லாமே "பர்மாவில் இருந்து விமானத்தில் அவர் பூட்டனுக்கு பூட்டன் காலத்தில் கொண்டு வரப்பட்டது” என்பார்.

கையில் கிடந்த ஒரு பவுன் மோதிரம் கீழே விழுந்தாலும்கூட அதை குனிந்து எடுக்காத குடும்பம் எங்கள் குடும்பம் என்பார்’ பர்மா தேக்கிலேயே அடுப்பு எரித்துச் சோறு பொங்கி திண்ட குடும்பம் எங்கள் குடும்பம்’ என்று சொல்ல மறந்து விட்டார் போலும். அவர் "பூட்டன்-,பூட்டன்’ என்று என்றோ போய் சேர்ந்தவர்களின் சாதனைகளையும் பெருமைகளையும் திரும்பதிரும்பச் சொல்லியதைக் கேட்டவர்களுக்கு ஆரம்ப பள்ளியில் படித்த வாய்ப்பாடு போல் மனப்பாடமாகி விட்டது வேறு-சிலருக்கு இந்த பூட்டன்! பூட்டன்" என்ற சொல் அவங்களெல்லாம் பழைய பூட்டுக்களைப் பழுது பார்க்கும் தொழில் செய்தவர்களோ?" என்ற எண்ணத்தை உண்டாக்கியது. 

அவர்கள் விமானத்தில் பர்மா `தேக்கு` கொண்டு வந்த காலத்தில் விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதர்களின் உம்மாக்கும் வாப்பாக்கும் கல்யாணமே ஆகலேங்கிற சங்கதி அங்குள்ள கிணற்று தவளைகளுக்கு தெரியாது. தெரிந்தவர்களும். "எதற்கு வீண்வம்பு?" என்று ‘செட்டி ஜாடையில்’ கண்டும் காணாமல் ஒதுங்கிக் கொள்வார்கள். இவரின் குணங்களில் ஒன்றை மட்டும் உங்களுக்கு விளக்க ஆசைப்படுகிறேன். தயவுசெய்து நான் அவரை வேண்டு மென்றே எல்லை கடந்து அதிகம் விமர்சிப்பதாக எண்ண வேண்டாம். அவர் இடக்கு-முடக்காக ஏதேனும் பேசுவாரே தவிர யாருக்கும் எந்த துரோகமும் செய்யவில்லை.

நண்பர் அந்த சாமான்களை என்னிடம் தந்தபோது நான் அதை கைநீட்டி வாங்கியபோதே ‘அவருக்கும் எனக்கும் ஒரு Ego போர் தொடங்கப் போகிறது’ என்ற உள் மனம் என்னை என்னை எச்சரித்தது. இது போன்ற எச்சரிக்கையை உள் மனம் தரும் போது `NO` என்றவர்கள் பிழைத்துக் கொண்டார்கள். `yes` என்றவர்கள் தூண்டிலில்  சிக்கிய மீன் ஆனார்கள். இது என் வாழ்நாளின் பெரும்பகுதியில் நான் செய்த தவறு. I wanted to say NO but I said YES! NO என்று சொல்ல நினைத்ததை No என்று சொல்லாமல் Yes என்று சொன்னேன். என் வாழ்வின் தேன் நிலவுகாலங்கள் வீண் நிலவுஆனது.

அப்படி சொன்னவர்கள் எல்லாம் தங்கள் சொந்தச் செலவில் தங்களுக்கே சூணியம்வைத்துக் கொண்டவர்களுக்கு சமம். போர் பிரகடனம் ஒன்றை எதிர் நோக்கத் தயாரானேன். காரணம் இவரோடு Deal செய்வது மிகமிக கடினம். 

சில ஆண்டுகளுக்கு முன்பு நான் வேறு ஒருவர் கடையில் Working Partner-ராக இருந்தபோது மாதம்  இருமுறை வெளிவரும் சஞ்சிகை ஒன்றை  அதன் உரிமையாளர் மலேசிய தீபகற்பத்தின் பெரும்பகுதிக்கு விநியோகம் செய்ய எங்களுக்கு தந்தார். அதன் விற்பனை ஏறத்தாழ ஒரு இலட்சம் பிரதிகள். மாதம் இருமுறை என்றால் இரண்டு லட்சம் பிரதிகள். அந்த  இதழின்ஆசிரியரும் உரிமையாளருமான மலாய்க்காரர் மாலை நேரங்களில் வேலை  முடிந்ததும் எங்கள் கடைக்கு இரண்டு-அல்லது மூன்று வாரத்திற்கு ஒரு முறையாவது வந்து சஞ்சிகை விற்பனை சம்பந்தமாகவும் மற்ற பத்திரிக்கைகள் எப்படி ஓடுகிறது என்றும் மற்றும் பொதுவான அரசியல் நிலவரங்கள் பற்றியும் பேசிச் செல்வார். இது அவர் வாடிக்கையான பொழுது போக்கும்-ஒரு ரிலாக்சும் கூட. 

இதை வழக்கமாக்கி கொண்ட அவர் ஒன்னரை மாதமாக வரவே இல்லை. ஆளைக் காணோம். ஒரு நாள் மாலை திடீரென வந்தார். நான்கேட்டேன்

"எங்கே ரெம்ப நாளா ஆளைக் காணோம். ஏதாவது புது Girl friend எதையாவது பிடித்துக்கொண்டு ஹனிமூன் போய் இருந்தாயா?" என்றேன்.

"ஹும்! என்ன முயற்சி செய்தும் ஒன்னும் கிடைக்கலே!" என்றார்.

இது  போன்ற பேச்சுக்கள் மலாய்க்காரர்களுக்கு ரெம்ப பிடிக்கும். எவ்வளவு பெரிய முதலாளியாக இருந்தாலும் கொஞ்ச நாள் பழகியதும் கேலி கிண்டல் செய்யலாம். நம் நாட்டு முதலாளிகளுக்கு இருக்கும் Ego போல் மலாய்கார முதலாளிகளுக்கு இல்லை. ஆனால் மலேசியாவில் கடை வைத்திருக்கும் தமிழ் முஸ்லிம் தஞ்சை மாவட்ட முதலாளிகளுக்கு கெளரவம் ஈகோ எல்லாம் இங்கேயும் [மலேசியாவில்] உண்டு. இது ரத்தத்தோடு கலந்தது அல்ல; ரத்தமே அதுதான். கண் மூடிய பின் அவர்களை மண் மூடி போட தூக்கியபோது ego சொன்னது"you go ! I stay!

மலாய்கார முதலாளிகளிடம் மூஞ்சியை ‘உம்’மென்று வைத்து டீல் பண்ணினால் தகர டப்பா ரெங்கு பெட்டி பாக்கட்டை தோளில் தூக்கி கொண்டு ஜப்பான் காரன் செய்த கித்தா செருப்பை வரட்வரர்ட்டென்று காலில் போட்டு இழுத்துக் கொண்டு ஊர் வந்து சேர வேண்டியதுதான். ரைபன் மூக்கு கண்ணாடி அத்தர் பூசிய டெர்லின் சட்டை, ஓடிகுலான் பாட்டால் ஹார்லிக்ஸ் போட்டல் யார்ட்லி புட்டாமாவு, யார்ட்லி சவ்வுக்காரம் 555 சாப் ரோக்கோ (சிகரெட்) கோபுர சாப்பு பணியன் ONE MAN SHOW சென்ட் பாட்டில்Etc. Etc ஏதுமில்லாமல் கோஷப்பெட்டி(empty]யோடு ஊர் வந்து எறங்க   வேண்டியதுதான்.   

வயதுக்கு வந்து கல்யாணத்துக்கு நிக்கிற தன் மகள் பாத்துமுத்துக்கு மாப்பிளைகேக்க நினைச்சிருந்த தாயோடு கூடப்பிறந்த மூத்த மாமாவே கூட வீட்டுப்படி மிதிச்சு உள்ளே வந்து, "சொவமா வந்தியலா?"-ன்டும் ஒரு வா[ர்]த்தை கேக்க மாட்டார். "மவளுக்கு மாப்புளே தாங்கோ!"-ன்டும் கேக்க மாட்டார்.! பெண் கொடுப்பதும்,மாப்பிளை எடுப்பதும் பினாங்கிலிருந்து வரும் சபுராளியின் பெட்டியின் வெயிட்டை பொறுத்தே அது அமையும்.

ரெம்ப நாள் கழித்து கடைக்கு வந்த அந்த மலாய்காரரிடம்…

"எங்கே ரெம்ப நாளா காணோமே!” என்றேன்.

"பிரிண்டிங். மெசின் வாங்கலாமென்று ஜெர்மனி சென்றிருந்தேன். அதான் வர வில்லை!" என்றார். அவர் கையில் வைரக்கல் பதித்த மோதிரம் ஒன்று பளிச்சிட்டது. அதை நான் கவனித்ததை  கண்ட அவர் அதை என்னிடம் காட்டி..

"இதை அங்கே வாங்கினேன். விலை மலேசியன் ரிங்கிட் இருபத்தி அஞ்சாயிரம்" என்றவர் ‘இதை பார்த்த` என் மனைவி

"இதுபோல் எனக்கும் ஒன்று வேண்டும்!" என்று அடம் பிடிக்கிறாள்!’” என்றார். 

"உனக்கு தெரிந்த வைர வியாபாரம் செய்யும் ’மாமா’* யாராவது இருந்தால் சொல்! பத்து பணி ரெண்டு ஆயிரரிங்கிட்க்குள் ஒன்று வாங்கலாம்!’ என்றார் 

[*தமிழ் முஸ்லிம்களை மலாய்காரர்கள் ’மாமாக்’ என்று அழைப்பது வழக்கம்] மேற்சொன்ன பாட்டன் பூட்டன் பரம்பறை பெருமை பேசும் நபர் கொஞ்ச நாளாக "நான் வைர யாவாரம் செய்கிறேன்! நான் வைர யாவாரம் செய்கிறேன்”! என்று சொல்லிக் கொண்டு இருந்தார். ’அவரை இந்த மலாய்காரரிடம் காட்டி விடுவோம் ’ஏதாவது அஞ்சோ பத்தோ கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவருக்கு டெலிபோன் போட்டேன். 

"எனக்கு தெரிந்த மலாய்க்காரர் ஒருவர் வைரம் வாங்க வேண்டுமாம்! உங்களிடமிருக்கும் வைரங்களை எடுத்துக் கொண்டு இங்கே வரமுடியுமா"? என்றேன்.

"அவர் என்ன வேலை செய்கிறார்?"என்றார்.

"அவர் ஒரு மலாய் மொழி பத்திரிக்கையின் எடிட்டரும் உரிமையாளரும்" என்றேன்.

"என்னிடம் இருக்கும் வைர மெல்லாம் வெறும் முன்னூறு நானூறு வெள்ளி விலை யுள்ள மலிவான வைரமல்ல! ஆயிர வெள்ளியிலிருந்து ஐயாயிரம் வெள்ளி வரை விலையுள்ள வைரங்கள். அவரால் அந்த விலை கொடுத்து அதை வாங்க முடியுமா?" என்றார்

"அந்த விலையில் நிச்சயமாக அவரால் வாங்க முடியுமென்றால் மட்டுமே நான் அங்கே வருவேன். இல்லையென்றால் வெட்டித்தனமாக வந்து என் டயத்தை வேஸ்ட்டு பண்ண விரும்பவில்லை" என்றார்.  

நான் பதில் கொடுத்தேன் "இப்போ அவர் கை விரலில் கிடக்கும் மோதிரத்தில் பதித்த வைரத்தின் விலை 65 ஆயிரம் மலேசியன் ரிங்கிட் மதிப்புள்ளவை. இப்போ அவர் Girl friendடுக்குவாங்க நினைப்பது இருபது ஆயிரத்திலிருந்து முப்பதாயிரம் வரை. நீங்கள் வைத்திருக்கும் மலிவான வைரங்கள் அவர் வீட்டு வாசல் படிக்கு பதிக்க தேவைபட்டால் சொல்லுகிறேன்! கொண்டு வாருங்கள்" என்று சொல்லி விட்டு டெலிபோன் ரிசிவரை ’டக்’கென்று போட்டேன். சற்றுநேரத்தில் டெலிபோன் மணியடித்தது.

நான் எடுக்கவில்லை. 

அடுத்த பகுதியிலும் தொடரும்… 

S.முஹம்மது பாருக்