Showing posts with label முஹம்மது ஃபாருக். Show all posts
Showing posts with label முஹம்மது ஃபாருக். Show all posts

பர்மா தேக்கு வீட்டுக்காரர் - தொடர்கிறது.... 17

அதிரைநிருபர் பதிப்பகம் | September 22, 2015 | , , ,

ஞாபகம் வருதே - [4] part - 2

அன்று இரவு சென்னையிலிருந்து கேலாலம்புருக்கு புறப்பட்டேன். காலை ஆறு மணிக்கு விமானாம் தரை இறங்கியது. முதலில் குடி நுழைவு துறை எல்லோ லைன் கடந்து பின் கஸ்டம்ஸ். இந்திய கஸ்டம்ஸ்காரர்களின் கண்ணில் விழித்தாலே நளவெண்பாவின் கதாநாயகன் நளனுக்கு பிடித்த ‘சனி’தமயந்தி நமக்கு மாலை. இடாத போதும் நம்மையும் வந்து பிடிக்கும். ஆனால் இங்கே சகோதரத்துவ-நட்பு முறை வாசனைப்பூ மணம் கமழும். செழிப்பான சிரித்த முகத்துடன் சுங்கதுரை அதிகாரிகள்.                    கொண்டு வந்த பெட்டியே தூக்கி மேஜையில் வைத்தேன். ‘’பெட்டிக்குள் என்னஇருக்கிறது?’’என்றார் ’என் சொந்த உபயோகத்துக்கான சாமான்கள்! என்றேன்

"புடைவைகள் எத்தனை இருக்கிறது?" என கேட்டார். 

"ஒரே ஒரு புடவை" என்றேன்.

"யாருக்கு? மனைவிக்கா?"

"மனைவி ஊரில் நானிங்கே?"

"அப்படியென்றால் Girl Friendகா கொண்டு போகிறாய்?" என்றார். 

"எனக்கு girl friend இல்லேயே" என்று செயற்கையான ஏக்கத்துடன் சொன்னேன்.

"u nampa handsome! cubalah.boleh dapat satu" என்றார் 

[நீ கவர்ச்சியாக இருக்கிறாய், முயற்சி செய்; ஒன்று கிடைக்கும்] இது போன்ற நட்பு-கேலி முறையிலான பேச்சுக்கள் வயது வரம்பு இன்றி அங்கே பேசிக்கொள்வது சகஜம். நம் பாரத பூமிபோல் பதவி பந்தாக்கள், மூஞ்சியே ‘உற்ர்ரர்ர்ர்’ என்று நாய் போல் நரி போல் வைத்துக் கொள்வதெல்லாம் அங்கே இல்லை!.

"பெட்டியே மூடு" என்றவர், அடுத்து கீழே  மாம்பழக்கூடையே பார்த்தார்.

"அது என்ன கூடையில் மாம்பழமா?’’

"ஆமாம்" 

"நிறைய இருக்கிறதே! வியாபாரம் செய்ய கொண்டு போகிறாயா?"

"இல்லை! என் நண்பர்களின் குடும்பம் இங்கே இருக்கிறது. அவர்களுக்கு கொடுக்ககொண்டுபோகிறேன். மற்றபடி இது மாதிரியான வியாபாரம் செய்யும் சில்லறைதனமான பழக்கமெல்லாம் என்னிடம் இல்லை!" என்றேன் 

"சரி! நம்புறேன்! நானொன்று கேட்கிறேன். நீ தப்பாக நினைக்காதே! என் பிள்ளைகள் இந்திய மாம்பழம் திங்க ஆசைப்படுகிறார்கள். இரண்டு பழம் கொடுக்க முடியுமா! காசு தந்து விடுகிறேன்!" எனக் கேட்டார்.

கூடையை திறந்து நாலு பழத்தை எடுத்துக் கொடுத்தேன். 

"இரண்டு போதுமே!  உன் நண்பர்களுக்கு வேண்டுமே?"

"நிறைய இருக்கிறது! பிள்ளைகளுக்கு கொடுங்கள்!"

காஸு கொடுக்க பர்ஸை திறந்து கொண்டே "பிறப்பா ரிங்கிட்?" [எத்தனை வெள்ளி] வினவினார்..

"இதை நான்காஸுக்கு விற்கவில்லை! உங்கள் பிள்ளைகளுக்கு என் அன்பளிப்பாக கொடுக்கிறேன்."

என்னை ஒரு பார்வை பார்த்தவர் "திரிமாகஸி! [நன்றி] என்றார். இந்த "திரிமாகசி" மலாய் மொழியில் அதிகம் உபயோகப்படும் வார்த்தை. அதிகம் உபோயோகப்பட்டதனால் அது தேய்ந்து போய் பழைய இரும்பு வியாபாரியிடம் பேரீச்சம் பழத்திற்கு எடை போட்டு கொடுத்து பண்டமாற்று செய்யப்பட வில்லை. மாறாக அது என்றும் வளர்ந்து கொண்டே வருகிறது. 

ஆனால் கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடிகள் வாழும் நம் நாட்டில் `நன்றி` என்ற வார்த்தை பேங்க்லாக்கரில் saftyயாக இருக்கிறது. சில சமயங்களில் இது ஒப்புக்காக சொல்லப்படுகிறது. அடிமனதின் ஆழத்திலிருந்து உணர்வுபூர்வமாக இந்த வார்த்தை வருவதில்லை. எப்படி வரும்? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்! 

நான் மலேசிய சுங்கசோதனையிலிருந்து மலர்ந்த முகத்துடன் வெளியாகி வீடு வந்து சேர்ந்தேன். 


அன்று ஞாயிற்றுக் கிழைமை. ஓய்வு! மறுநாள் மாலை சென்னையில் என் நண்பர் தந்த சாமான்களை எடுத்துக்கொண்டு ’லிட்டில்இந்தியா’ என்று அழைக்கப்படும் Malayan Mansion/Selangor Mansion பகுதிக்கு சென்றேன். அங்கே ‘வைர யாவாரி’ தங்கி இருக்கும் ரூமுக்கு போனேன். கதவில் பூட்டு தொங்கியது. ஆளில்லை. பக்கத்து ரூம்காரர் வெளியே வந்தார்.அவரிடம் கேட்டேன்.

"காலை எட்டு மணி சுமாருக்கு வெளியே போவார். ஒரு மணி சுமாருக்கு வருவார். கொஞ்சநேரம் இருந்து  விட்டு போறவர் இரவு ஒன்பது மணிக்கு மேல் வருவார்" என்றார்.

"நீங்கள் எந்த ஊர்?" எனக் கேட்டவரிடம், ஊர் பெயரைச் சொன்னேன்.

"அவர் உங்க ஊரா?" என்றார் 

"அடுத்த வீட்டுக்காரருக்கே இவரை யாரென்று இன்னும் தெரியவில்லை. இவருடைய பொது உறவு கொள்கையின் லட்சணம் இப்படி!

மண்ணுக்காகப் படைக்கப்பட்ட மனிதனை மனித நேயத்திலிருந்து எது பிரிக்கிறது?

"ஆமாம்! எங்க ஊர்தான். தெருவு வேறே!" என்றேன்.

அவருக்கு ஊரில் ஒருவர் கொடுத்த சாமானைக் கொடுக்க வந்திருக்கிறேன்! தயவுசெய்து அவரிடம் கொடுத்து விடுகிறீர்களா?’ என்றேன். 

இதைக் கேட்டு திடுக்கிட்டுப் போனவர்

"மன்னிச்சுக்கோங்க தம்பி! இதை வாங்கிட்டு அவரோடு என்னால் மல்லுக்கு நிக்க முடியாது! லாயர் Burrow* கேக்காத கேள்வி யெல்லாம் அவர் என்னிடம் கேட்பார். இந்த வம்பெல்லாம் நமக்கு வாணாம்! நீங்களே நேரடியா கொடுத்துடுங்கோ!" என்றார். 

கொண்டு போன சாமானுடன் திரும்பி விட்டேன். [*லாயர் Burrow. மலேயாவில் ஜப்பானியர் ஆட்சிக்கு முன் வெள்ளயார் ஆட்சிகாலத்தில் மேல் சொன்ன பெயரில் உச்ச நீதி மன்ற வழக்கறிஞராக வெள்ளைக்கார துரை ஒருவர் இருந்தாராம். அவர் தன் கட்சி காரருக்கு எதிரான சாட்சிகளை கூண்டில்லேற்றி ’எடக்கு-முடக்கான’ கேள்விகளைக் கேட்டு குழப்பு-குழப்பென்று குழப்பி திண்டாட வைத்து விடுவாராம். சாட்சிகள் குழம்பிப்போய் ‘உடும்பு வேணாம் கையைவிடு!’ என்று ஓடி விடுவார்களாம். இன்னும் புரியும்படி சொல்வதென்றால் ’ஆட்டைக் கழுதையாக்கிய ’நம்மூர்கதைதான்.] 

மறுநாள் பகல் ஒரு மணி சுமாருக்கு வைரயாவாரிக்கு டெலிபோன் போட்டேன். விஷயத்தைச் சொன்னேன்.

"நான் நீங்கள் வந்த அந்த நேரம் ரூமில் இருக்கமாட்டேன். ரெம்ப பிஸி. இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் ரூமில் இருப்பேன். அப்போ கொண்டு வந்து கொடுங்கள்!" என்றார். 

பேச்சில் கொஞ்சம் அதிகாரத் தொனி இழையோடியது.

"நான் மாலை 5.30க்குஅங்கே வருவேன்! 7.30க்கு திரும்பி விடுவேன். ஒன்பது மணிவரை அங்கிருந்தால் திரும்பி வர பஸ் கிடைக்காது. என் மாமா கடையில் கொடுத்து விட்டுப் போகிறேன். வாங்கிக் கொள்ளுங்கள்" என்றேன்.

"அங்கெல்லாம் நான் போய் வாங்க முடியாது! `யாரிடம் கொடுத்து விடுகிறேன்!` என்று ‘வாக்கு’கொடுத்து அதை வாங்கி வந்தீர்களோ அதை அவர் கையிலேயே ஒப்படைக்க வேண்டும். இதுதான் ’அமானிதம்’ என்பதன் அர்த்தம். இதுதான் முறை!" என்றுரைத்தார்.

"புண்ணியத்திற்கு உழைக்கும் மாட்டை பல்லை பிடித்து பதம் பார்ப்பது" என்று தமிழில் சொல்வார்கள். ஆங்கிலத்தில் Look not a gifted horse in the mouth. 

இதைக் கேட்ட எனக்கு ஏறியது ரத்தம்!

"நான் அதை உங்கள் திருவடி பணிந்து உங்களிடமே ஒப்படைக்கிறேன்" என்று வாக்கு கொடுத்து வாங்கி வரவில்லை. இது ஒன்றும் நேத்திக்கடன் அல்ல! வெள்ளிக்கிழமை இரவு அங்கே ’தலை போட்டு’ படுத்துவிட்டு நேத்திக் கடனையும் செலுத்தி வர!. வேண்டுமானால் ஒரு வாரத்திற்குள் இங்கே வந்து உங்கள்  சாமான்களை எடுத்துக் கொள்ளுங்கள். வருவதற்கு முன் அப்பாயின்மென்ட் வாங்கி வரவேண்டும். நான் ரெம்ப பிஸி" என்றேன்.

[வேணுமென்றே நானும் ஒரு’பந்தா’ பன்ணினேன்] டெலிபோனை வைத்து விட்டார். கொஞ்சநேரம் கழித்து டெலிபோன் மணி அடித்தது. என் மாமா பேசினார்

"என்னப்பா அவரிடம் தகராறு செய்கிறாயாமே?" கேட்க..

"ஒன்றும் தகராறு இல்லை" என்று நடந்ததை சொன்னேன்.

"அவர் குணம் அப்படித்தான். நாம்தான் பார்த்து அனுசரித்துப் போகணும் . பெரியமனுஷன். கொண்டுபோய் கொடுத்துவிடு"

"அவர் போடும் கண்டிசனுக்கும் சவுடாளுக்கும் நான் பணிந்து போக முடியாது. வேண்டுமென்றால் ஒரு வாரத்திற்குள் வந்து எடுக்கட்டும். இல்லையென்றால் இங்கேயே கிடக்கட்டும்" என்றேன்.  என் மாமாவுக்கு என் குணம் தெரியும்.

"நீ அதை என்னிடம் கொண்டு வந்து கொடுத்துவிடு. நான் கொடுத்து கொள்கிறேன்" என்றார். அடுத்த நாள் மாலை அங்கே போய் அதை என் மாமாவிடம் கொடுத்துவிட்டு வந்தேன்.  

பல மாதங்கள் கடந்து போனது. ஒரு நாள் மாலை லிட்டில் இந்தியா மலையன் மன்சனில் இருக்கும் புத்தக மொத்த வியாபாரம் செய்யும் கடைக்கு போனேன். அங்குள்ளவர்கள் அனைவரும் என் உடன் பிறவா சகோதரர்களும் நண்பர்களும் போல. நான் நம்மூர்காரர் ஒருவரின் நிறுவனத்தில் working partnerராய் இருந்து கடினமாக இரவு பகல் பாராமல் உழைத்து-உழைத்து ஓடாய்போய் பையிலும் கையிலும் காசில்லாமல் வீசியகையும் வெருங்கையுமாய் வெளியே வந்தபோது எனக்கு ஆதரவு கரம் நீட்டி நெஞ்சோடு நெஞ்சாக அணைத்துக் கொண்ட மனித இதயம் கொண்ட மனிதர்கள் அங்கே இருந்தார்கள். வாரத்திற்கு இரண்டு மூன்று தடவை அங்கே போய் வருவது என் வாடிக்கையான பொழுதுபோக்கு. 

ஒரு நாள் மாலைஅங்கே போய் பேசிக் கொண்டிருந்தபோது அந்த கம்பெனி டெலிபோன் மணி கினுகிணுத்தது. அதை எடுத்துக் கேட்ட மேனேஜர்

"உங்களுக்குத்தான். யாரோ பேச வேண்டுமாம்" என்று ரிஸிவரை என்னிடம் தந்தார். பேசியது வைரயாவாரி

"பாரூக்! நான் இங்கே மூனாவது மாடியில் பதினாளாம் நம்பர் ரூமில் இருக்கிறேன்! ஒரு செய்தி பேசவேண்டும். இங்கே வர முடியுமா?" என்றார். பேச்சில் பணிவும் கனிவும் சோகமும் இழையோடியது.

"அவர்தானா இவர்?" என்ற சந்தேகத்தை தூண்டும்படியான தொனி ஒலித்தது. அங்கே சென்றேன். முகத்தில் வாட்டம். ஆழ்ந்த யோசனை. என்னையே பார்த்துக்கொண்டு ஏதும் பேசாமல் யோசனையில் மூழ்கி இருந்தார். கொஞ்சநேரம் சென்றதும்.

"செய்தி சொல்ல கூப்பிட்டீர்களே? என்ன சேதி" என்று அவரை யோசனைலிருந்து கலைத்தேன். "ஒன்றுமில்லை! நானும் பல யாவாரங்கள் செய்தும் ஒன்றும் கை கொடுக்கவில்லை. ஜான் ஏறினால் முழம் வழுக்குது! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. ’கை’ முதல் எல்லாம் ’கை’ விட்டு  போய்விட்டது. தங்குமிடத்துக்கு மூன்று மாத பாக்கி நிக்கிது. கேட்டு இம்சை படுத்துகிறார். கையில் காசில்லை.கை செலவுக்கு நூறு வெள்ளி இருந்தால் கொடுங்கள் அப்புறம் தந்து விடுகிறேன்" என வேண்டினார்.

அப்பொழுது என்னிடம் இருந்தது ஆறுவெள்ளி சில்லரை மட்டுமே.

"இங்கேயே  இருங்கள் கொஞ்ச நேரத்தில் வருகிறேன்" என்று கீழேபோய் என் நண்பரிடம் பணம் வாங்கி கொடுத்து விட்டு வந்தேன்.

அவர் சொன்னது போல் யாவாரம் அவருக்கு மட்டும் தான் கை கொடுக்கவில்லை. பயறு கஞ்சி, பால் காய்ச்சி வித்தவர்கள் வடைசுட்டு வித்தவர்கள்," வாடா! வாடா! என்று மரியாதை குறைவாக கூறிகூறி "வாடா" விற்றவர்களும் ஆப்பம் சுட்டு யாவாரம் செய்தவர்களும் காஸு சம்பாதித்து ஊரில் மாடிவீடு கட்டினார்கள். அம்பாஸிடர் கார் வாங்கி விட்டார்கள். அவர்களையெல்லாம்  விட அனுபவத்திலும் கல்வியிலும் உடல் கவர்ச்சியிலும் பலமடங்கு மேலான இவர் ஏன் தோற்றார்? அவரை தடுத்த சீனத்து  சுவர் எது.? ஒரே ஒரு காரணம் "வாய்" அவருடைய ‘வாய்!’ வாயாலே கெட்டுச்சாம்  கௌதாரி’’ என்று சொல்வார்கள். 

அதன் முழுகதையும் தெரிந்தவர்கள் சொல்லலாம். சும்மாபோன குருட்டு பாம்பை பார்த்த தவளை வாயே வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் அதை பார்த்து கேலி செய்தது. கடைசியில் அந்த குருட்டு பாம்புக்கே அந்த தவளை இரையான கதை உங்களுக்கு தெரியும்.

1967 ஆண்டு வாக்கில் தென் இந்திய ரயில் நிலையங்களில் "வாய் நல்லதானால் ஊர் நல்லது" என்ற வாசகம் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது.

நீண்ட நாட்களாக அந்த நபரின் நடமாட்டம் லிட்டில் இந்தியா பக்கம் இல்லை. மாதங்கள் பல கடந்தது. ஒரு நாள் மாலை என் கடைக்கு திடீரென வந்தார். முகத்தில் வாட்டம் இழையோடியது. வந்தவருக்கு சேர் எடுத்து போட்டு உட்காருங்கள் என்று சொன்னேன். அது டி’டைம்! இரண்டு.டி வந்தது. டி குடித்த பின் கொஞ்ச நேரம் எதையோ யோசித்துக் கொண்டிருந்தார்.

"யாவாரம் ஏதும் செய்கிறீர்களா?" எனக் கேட்டேன். 

"இல்லை! இந்த சபுர் நான் புறப்பட்டு வந்த நேரம் சரி இல்லை. ஊர்போய் இரண்டு மூன்று மாதம் நின்று விட்டு வந்து யாவாரம் பாக்கலாம் என்று இருக்கிறேன். அடுத்த வாரம் பயணம் டிக்கட்டுக்கு தோது செய்து விட்டேன். ஊருக்கு போனால் பிள்ளைகள் கையை-கையை பாக்கும். அதுகளுக்கு கொடுக்க சாமான்கள் வாங்க கையிலே காசில்லை. ஒரு நூறு வெள்ளி கொடுங்கள் வந்ததும் தந்து விடுகிறேன்" என்றார். 

கொடுத்தேன்.போய்விட்டார்.

அவர் போன அரை மணி நேரம் கழித்து  என் டெலிபோன் மணி கினு கிணுத்தது. எடுத்துக் கேட்டேன். நம் மூர்காரரின் குரல்.

"அவர் அங்கே வந்தாரா?" 

நான் "இல்லை" யென்றேன். 

அவர் என்னிடம் வந்ததை இவரிடம் சொன்னால் ஊரெங்கும் பறையரைவார். சந்தர்ப்ப சூழலில் மனிதனுக்கு ஏற்ற-தாழ்வுகள் இயற்க்கை. அதை யறியாது   ஒரு மனிதனை மட்டம் தட்டுவதும் இழித்து பேசுவதும் இந்த மனிதனின் habit. அதனால் அந்த நபர் வந்ததை நான் அவரிடம் சொல்லவில்லை. 

அவரைப் பற்றி நண்பர் சொன்னார்:

"என்னிடம் வந்து ஊருக்கு போக போரதாகவும் கையில் காசில்லை" என்றவர். 

"கொஞ்சம் பணம் கொடுத்தால் போய் விட்டு வந்து தருகிறேன்" என்று கேட்டிருக்கிறார்

`போய்விட்டு வந்து எங்கே தரப்போகிறார்?’ என்று நூறு வெள்ளி கொடுத்ததைச் சொன்னதும்.

அடுத்து,

"என்ன! நூறு வெள்ளியை தூக்கி போடுகிறீர்கள்? இதை வைத்து நான் என்ன செய்ய முடியும்? என் பேரப் பிள்ளைகளுக்கு சோக்லேட்டே வாங்க முடியாதே! நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்று கொடுத்த பணத்தை நண்பரின் பக்கமே தள்ளி விட்டிருக்கிறார் அவர்.

"உங்கள்  பேரப் பிள்ளைகளுக்கு சொக்லேட் வாங்க நான் ஏன் பணம் கொடுக்க வேண்டும்?" என்று பணத்தை எடுத்து வைத்துக் கொண்டேன். போய்விட்டார்.

இந்த நிலைக்கு அவரை தள்ளியது எது? அவரின் கடந்த கால செல்வ செழிப்பும் அதனால் ஊறிய மமதையும். கால ஓட்டத்தையும் மாற்றத்தையும் கணிக்காமல் கால்போன பாதையெல்லாம் கண் போனது! கண்போன பாதையெல்லாம் மனம் போனது.

மனம்போன பாதையெல்லாம் வாய் போனது.
        வில் விட்டு புறப்பட்ட அம்பும் வாய்விட்டு 
புறப்பட்ட சொல்லும் திரும்ப வராது.

பெரும்பாலோர் தங்களின் கடந்த கால `பாட்டன் பூட்டன்` பெருமைகளை பேசிபேசியே  நிகழ்காலத்தை கைவிட்டார்கள். 

இவர்கள் "பொய் நெல்லை குத்தியே பொங்க நினைத்து கை நெல்லும் விட்டவர்கள்".

S.முஹம்மது பாருக்

பர்மா தேக்கு வீட்டுக்காரர் 28

அதிரைநிருபர் பதிப்பகம் | September 16, 2015 | , , ,

ஞாபகம் வருதே - [4] part - 1

ஒரு முறை மலேசியா புறப்பட சென்னைக்கு ரயில் ஏறினேன். என் நண்பர் ஒருவர் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்திருந்தார். எழும்பூரில் ஒரு விடுதியில் தங்கி வாங்க வேண்டிய சில சாமான்களை வாங்கிக்கொண்டு அன்று இரவு விமானத்தில் புறப்பட எண்ணி இருந்தேன். 

"மண்ணடியில் என் ரூமிலேயே தங்கிவிட்டு புறப்படலாமே! கொஞ்சநேரம் தானே! எதற்கு விடுதிக்கு வேறு வீண் செலவு?" என்று வற்புறுத்தினார்.

"சரி" என்று அங்கே சென்றேன். 

மண்ணடியில் எனக்கு தெரிந்த ஒரு வர்த்தகர் இருந்தார். ‘அவரையும் போய் பார்த்து விட்டு வரலாமே! ’ என்று அங்கே சென்றேன். மூன்றாவது மாடியில் அவர் அலுவலகம் இருந்தது. மேலே போக லிஃப்ட்டும் தொங்கிக் கொண்டு இருந்தது. லிஃப்ட் ஆப்பரேட்டர். முகமும் தொங்கிக் கொண்டிருந்தது. லிஃப்டில் போகலாம் என்று எண்ணிய எனக்கு தொங்கும் முகம் கண்டதும் லிஃப்டில் போக மனமில்லை. அதில் ஏறினால் வம்பு தும்பு வருமோ என்ற அச்ச உணர்வு வந்தது .அதனால் படி ஏறியே மேலே போகலாம்  என்று  ’வலது காலை எடுத்து முதல் படியில் வைத்தேன். அடுத்த கணம்,

"யாரது? நில்லுங்கள்! எங்கே போகிறீர்கள்?" என்ற அசரீரி போல் ஓசை கேட்டது.  இந்த அதட்டல் போட்டது  லிஃப்ட் ஆப்பரேட்டரே யன்றி வேறு யாருமல்ல.

"மூன்றாவது மாடிக்குப் போகிறேன்!"என்றேன்.

"யாரைப் பார்க்கப் போகிறீர்கள்?" என்றார். பதில் சொன்னேன். "எந்த ஊர்?" என்றார். இந்தக் கேள்வியை கேட்டதும் கண்ணதாசன் எழுதிய "எந்த ஊர் என்றவனே! இருந்த ஊரைச் சொல்லவா?" என்ற பாடல் நினைவுக்கு வந்தது.’ அதைப் பாடலாமா?’ என்று நினைத்தேன். வந்த இடத்தில் வம்பு எதற்கென்று விட்டு விட்டேன். இப்பொழுது இந்தப் பாடல் உருவான ஊற்றுக்கண் பற்றி  சுவையான செய்தி ஒன்றை சொல்ல ஆசைப்படுகிறேன். கண்ணதாசனின் இந்தப் பாடலுக்கு ‘கரு’கொடுத்தவர் அண்ணா என்றால் நம்புவீர்களா? ‘அண்ணா முதல்வராய் இருந்தபோது கரூர் வர்த்தக சங்க பிரதிநிதிகள் அண்ணாவைச் சந்திக்க வந்தார்கள். வந்தவர்கள் "வணக்கமுங்கோ! நாங்கள் கரூரிலிருந்து வருகிறோம்!" என்றார்கள். அதைக் கேட்ட அண்ணா `நானும் கரூரிலிந்து வந்தவன் தான்!" என்று நமுட்டுச் சிரிப்புடன் சொன்னார். இதைக் கேட்ட கரூர்காரர்களும் மற்றும் அங்கிருந்த நெடுஞ்செழியன், கருணாநிதி, அன்பழகன் கண்ணதாசன் ஆகியோரும். புருவத்தை உயர்த்தினார்கள்.

"என்ன அண்ணா உளறுகிறார்? காஞ்சிபுரத்தில் பிறந்த அண்ணா கரூரில் பிறந்தேன்’ ’ என்று சொல்கிறாரே”? என்று ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டார்கள்.  கரூர்காரர்களில் ஒருவர் குழப்பத்தோடு அண்ணாவை பார்த்து "நீ...ங்....க....ள்.....கா...ஞ்....சி......" என்று இழுத்தார். அவர் முடிக்கு முன்னே அண்ணா சொன்னார்.

"நான் காஞ்சிபுரத்தில் பிறந்தவன்தான். ஆனால் நான் என்தாயின் ‘கரு’ஊரில் உருவாகி வந்து காஞ்சிபுரத்தில் பிறந்தேன்.               அதனாலேதான் நானும் கரூரிலிருந்து வந்தவன்” என்று சொன்னேன் என்றார். இதைக்கேட்ட கரூர் ஆசாமிகள் கலங்கி போனார்கள்-அண்ணாவின் சொல் வண்ணம் கண்டு சொக்கிப் போனார்கள். ‘தூண்டில் காரனுக்கு மிதப்பு மேல் கண்!’ என்பது போல் அங்கிருந்த கவிஞர் கண்ணதாசனும் காரியத்தில் கண்ணா இருந்தார். வாய்ப்பு வந்தபோது அண்ணா கொடுத்த டிப்சை வைத்தே." எந்தஊர் என்றவனே? இருந்த ஊரைச்சொல்லவா? இருந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!" என்ற பாடலை எழுதினார்.’ வல்லவன் கையில் புல்லும் ஓர் ஆயுதம்’ என்று சொல்வார்கள். அதை அண்ணாவும் கண்ணதாசனும் மெய்ப்படுத்தினார்கள். இப்பொழுது நாம் கரூரிலிருந்து மண்ணடிக்கு  வருவோம். 

கரூரிலிருந்து மண்ணடி வந்தவர்கள் எல்லாம் மீண்டும் ஒரு நாள் ‘மண்ணடிப் போகத்தானே வேண்டும்!? . நான் சொல்லும் மண்ணடி அந்த இறுதிப் பயணம் போகும் மண்ணடி அல்ல: சிங்காரச் சென்னையின் கடலோரமிருக்கும் மண்ணடி. மீண்டும் மண்ணடிக்கு வருவோம்.

"எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்?" மண்ணடி லிஃப்ட் கேட்டது.

"அதிராம்பட்டினம்!"

"தெருவு?"

"கடல்கரை தெரு”

"பேரு?" 

"முஹமது பாரூக்!" [கேட்ட கேள்விகளைப் பார்த்தால் மண்ணடிக்குப் பதிலாக பாஸ்போர்ட் ஆபிஸுக்கு. வந்துவிட்டோமோ?’ என்ற சந்தேகமும் எனக்கு வந்தது.]

"என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள்?" என்றார்.

அவர் என்னை மதரஸா-அல்லது குமர் காரியமாக வந்த வசூல் பேர்வழி என்று எண்ணினாரோ என்னவோ? இப்படிக் கேட்டார்.

"அதையெல்லாம் சொல்ல முடியாது! விட்டால் விடு! இல்லையென்றால் நான் திரும்பிப் போய் விடுகிறேன்...........

அவர் வரச் சொன்னார் வந்தேன். விடமுடியாதென்றால் போய் விடுகிறேன். அதனால் எனக்கு ஒன்றும் குடி மூழ்கி விடப் போவதில்லை" என்றேன். 

இப்படி நான் சொன்னதும் என்னை ஏற இறங்க ஒரு பார்வைப் பார்த்தார். டெலிபோனை தட்டி மேலே கேட்டார். பின்பு,

"நீங்கள் லிஃப்ட்டிலேயே போங்கள்" என்றார்.

இப்போ பூசாரி மணியடித்தார். சாமியும் வரங்கொடுத்தது. ’நீங்கள் லிஃப்ட்டிலேயே போகலாம்" என்றார். 

அதட்டல் இல்லாத மரியாதை தொனி அவர் குரலில் ஒலித்தது. இதுவரை தொட்டிலில் துயில் கொண்ட மனித குணம் இப்பொழுது விழித்துக் கொண்டது. அங்கே ஒருவரை  லிஃப்டில் போக அனுமதிப்பது என்பது ஒரு வெளிநாட்டுத் தலைவர் இன்னொரு நாட்டுக்கு வரும்போது சிவப்பு கம்பளம் வரவேற்புக் கொடுப்பது போல! இது ஒரு[ Royal Salute] ‘ராஜமரியாதை!?’

**********************************************************************************
நான் மலேசியா புறப்படத் தயாரான போது என் நண்பர் இரண்டு கைலி ஒரு சந்தன சோப் ஒரு Vicco பல்பசை இவற்றை நம் ஊர்காரர் ஒருவரின் பேரைச் சொல்லி அவரிடம் கொடுத்து விடும்படி தந்தார். அவர் பெயர் உச்சரிக்கப்பட்டபோது’ என் நெஞ்சுக்குள் ஒரு எச்சறிக்கையுணர்வு மையம் கொண்டது’ இதனால் அவருக்கும் உனக்கும் ஒரு Ego போர் தொடங்கும்!.

"அதை வாங்காதே!" என்று என் உள் மனம் எச்சரிக்கை மணி அடித்தது.

அந்த நபரிடம் பழகுவதிலும் பேசுவதிலும் ஒருவர் எப்படித்தான் முன் எச்சரிக்கையுடன் இருந்தாலும் அதில் எப்படியாவது ஒரு குறை அல்லது தவறு கண்டு அடிபட்ட நாகம்புபோல சீறுவார். உப்புக்குக் கூட பிரயோஜனமில்லாத ஒரு தவறு, நாம் சொல்வதில் கண்டுபிடிப்பார். அதை வைத்தே நம்மைத் தாழ்த்துவார். தலையில் குட்டுவார். அதோடு அல்லாமல் அவரை அவரே ஒரு தூக்கு தூக்கி உச்சாணிக் கொப்பின் உயரத்தில் கொண்டு போய் வைத்துக் கொள்வார். 


அவரே உயர்ந்தவர்; அவரினும் உயர்ந்தவர் யாருமில்லை. அவர் சொல்வதெல்லாம் சரி;! அவர் போட்டிருக்கும் சட்டையே விலை உயர்ந்த சட்டை; அந்த விலை கொடுத்து அதை யாராலும் வாங்கிப் போட முடியாது. அவர் வீட்டு ஜன்னல், கதவு தூண் எல்லாமே "பர்மாவில் இருந்து விமானத்தில் அவர் பூட்டனுக்கு பூட்டன் காலத்தில் கொண்டு வரப்பட்டது” என்பார்.

கையில் கிடந்த ஒரு பவுன் மோதிரம் கீழே விழுந்தாலும்கூட அதை குனிந்து எடுக்காத குடும்பம் எங்கள் குடும்பம் என்பார்’ பர்மா தேக்கிலேயே அடுப்பு எரித்துச் சோறு பொங்கி திண்ட குடும்பம் எங்கள் குடும்பம்’ என்று சொல்ல மறந்து விட்டார் போலும். அவர் "பூட்டன்-,பூட்டன்’ என்று என்றோ போய் சேர்ந்தவர்களின் சாதனைகளையும் பெருமைகளையும் திரும்பதிரும்பச் சொல்லியதைக் கேட்டவர்களுக்கு ஆரம்ப பள்ளியில் படித்த வாய்ப்பாடு போல் மனப்பாடமாகி விட்டது வேறு-சிலருக்கு இந்த பூட்டன்! பூட்டன்" என்ற சொல் அவங்களெல்லாம் பழைய பூட்டுக்களைப் பழுது பார்க்கும் தொழில் செய்தவர்களோ?" என்ற எண்ணத்தை உண்டாக்கியது. 

அவர்கள் விமானத்தில் பர்மா `தேக்கு` கொண்டு வந்த காலத்தில் விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதர்களின் உம்மாக்கும் வாப்பாக்கும் கல்யாணமே ஆகலேங்கிற சங்கதி அங்குள்ள கிணற்று தவளைகளுக்கு தெரியாது. தெரிந்தவர்களும். "எதற்கு வீண்வம்பு?" என்று ‘செட்டி ஜாடையில்’ கண்டும் காணாமல் ஒதுங்கிக் கொள்வார்கள். இவரின் குணங்களில் ஒன்றை மட்டும் உங்களுக்கு விளக்க ஆசைப்படுகிறேன். தயவுசெய்து நான் அவரை வேண்டு மென்றே எல்லை கடந்து அதிகம் விமர்சிப்பதாக எண்ண வேண்டாம். அவர் இடக்கு-முடக்காக ஏதேனும் பேசுவாரே தவிர யாருக்கும் எந்த துரோகமும் செய்யவில்லை.

நண்பர் அந்த சாமான்களை என்னிடம் தந்தபோது நான் அதை கைநீட்டி வாங்கியபோதே ‘அவருக்கும் எனக்கும் ஒரு Ego போர் தொடங்கப் போகிறது’ என்ற உள் மனம் என்னை என்னை எச்சரித்தது. இது போன்ற எச்சரிக்கையை உள் மனம் தரும் போது `NO` என்றவர்கள் பிழைத்துக் கொண்டார்கள். `yes` என்றவர்கள் தூண்டிலில்  சிக்கிய மீன் ஆனார்கள். இது என் வாழ்நாளின் பெரும்பகுதியில் நான் செய்த தவறு. I wanted to say NO but I said YES! NO என்று சொல்ல நினைத்ததை No என்று சொல்லாமல் Yes என்று சொன்னேன். என் வாழ்வின் தேன் நிலவுகாலங்கள் வீண் நிலவுஆனது.

அப்படி சொன்னவர்கள் எல்லாம் தங்கள் சொந்தச் செலவில் தங்களுக்கே சூணியம்வைத்துக் கொண்டவர்களுக்கு சமம். போர் பிரகடனம் ஒன்றை எதிர் நோக்கத் தயாரானேன். காரணம் இவரோடு Deal செய்வது மிகமிக கடினம். 

சில ஆண்டுகளுக்கு முன்பு நான் வேறு ஒருவர் கடையில் Working Partner-ராக இருந்தபோது மாதம்  இருமுறை வெளிவரும் சஞ்சிகை ஒன்றை  அதன் உரிமையாளர் மலேசிய தீபகற்பத்தின் பெரும்பகுதிக்கு விநியோகம் செய்ய எங்களுக்கு தந்தார். அதன் விற்பனை ஏறத்தாழ ஒரு இலட்சம் பிரதிகள். மாதம் இருமுறை என்றால் இரண்டு லட்சம் பிரதிகள். அந்த  இதழின்ஆசிரியரும் உரிமையாளருமான மலாய்க்காரர் மாலை நேரங்களில் வேலை  முடிந்ததும் எங்கள் கடைக்கு இரண்டு-அல்லது மூன்று வாரத்திற்கு ஒரு முறையாவது வந்து சஞ்சிகை விற்பனை சம்பந்தமாகவும் மற்ற பத்திரிக்கைகள் எப்படி ஓடுகிறது என்றும் மற்றும் பொதுவான அரசியல் நிலவரங்கள் பற்றியும் பேசிச் செல்வார். இது அவர் வாடிக்கையான பொழுது போக்கும்-ஒரு ரிலாக்சும் கூட. 

இதை வழக்கமாக்கி கொண்ட அவர் ஒன்னரை மாதமாக வரவே இல்லை. ஆளைக் காணோம். ஒரு நாள் மாலை திடீரென வந்தார். நான்கேட்டேன்

"எங்கே ரெம்ப நாளா ஆளைக் காணோம். ஏதாவது புது Girl friend எதையாவது பிடித்துக்கொண்டு ஹனிமூன் போய் இருந்தாயா?" என்றேன்.

"ஹும்! என்ன முயற்சி செய்தும் ஒன்னும் கிடைக்கலே!" என்றார்.

இது  போன்ற பேச்சுக்கள் மலாய்க்காரர்களுக்கு ரெம்ப பிடிக்கும். எவ்வளவு பெரிய முதலாளியாக இருந்தாலும் கொஞ்ச நாள் பழகியதும் கேலி கிண்டல் செய்யலாம். நம் நாட்டு முதலாளிகளுக்கு இருக்கும் Ego போல் மலாய்கார முதலாளிகளுக்கு இல்லை. ஆனால் மலேசியாவில் கடை வைத்திருக்கும் தமிழ் முஸ்லிம் தஞ்சை மாவட்ட முதலாளிகளுக்கு கெளரவம் ஈகோ எல்லாம் இங்கேயும் [மலேசியாவில்] உண்டு. இது ரத்தத்தோடு கலந்தது அல்ல; ரத்தமே அதுதான். கண் மூடிய பின் அவர்களை மண் மூடி போட தூக்கியபோது ego சொன்னது"you go ! I stay!

மலாய்கார முதலாளிகளிடம் மூஞ்சியை ‘உம்’மென்று வைத்து டீல் பண்ணினால் தகர டப்பா ரெங்கு பெட்டி பாக்கட்டை தோளில் தூக்கி கொண்டு ஜப்பான் காரன் செய்த கித்தா செருப்பை வரட்வரர்ட்டென்று காலில் போட்டு இழுத்துக் கொண்டு ஊர் வந்து சேர வேண்டியதுதான். ரைபன் மூக்கு கண்ணாடி அத்தர் பூசிய டெர்லின் சட்டை, ஓடிகுலான் பாட்டால் ஹார்லிக்ஸ் போட்டல் யார்ட்லி புட்டாமாவு, யார்ட்லி சவ்வுக்காரம் 555 சாப் ரோக்கோ (சிகரெட்) கோபுர சாப்பு பணியன் ONE MAN SHOW சென்ட் பாட்டில்Etc. Etc ஏதுமில்லாமல் கோஷப்பெட்டி(empty]யோடு ஊர் வந்து எறங்க   வேண்டியதுதான்.   

வயதுக்கு வந்து கல்யாணத்துக்கு நிக்கிற தன் மகள் பாத்துமுத்துக்கு மாப்பிளைகேக்க நினைச்சிருந்த தாயோடு கூடப்பிறந்த மூத்த மாமாவே கூட வீட்டுப்படி மிதிச்சு உள்ளே வந்து, "சொவமா வந்தியலா?"-ன்டும் ஒரு வா[ர்]த்தை கேக்க மாட்டார். "மவளுக்கு மாப்புளே தாங்கோ!"-ன்டும் கேக்க மாட்டார்.! பெண் கொடுப்பதும்,மாப்பிளை எடுப்பதும் பினாங்கிலிருந்து வரும் சபுராளியின் பெட்டியின் வெயிட்டை பொறுத்தே அது அமையும்.

ரெம்ப நாள் கழித்து கடைக்கு வந்த அந்த மலாய்காரரிடம்…

"எங்கே ரெம்ப நாளா காணோமே!” என்றேன்.

"பிரிண்டிங். மெசின் வாங்கலாமென்று ஜெர்மனி சென்றிருந்தேன். அதான் வர வில்லை!" என்றார். அவர் கையில் வைரக்கல் பதித்த மோதிரம் ஒன்று பளிச்சிட்டது. அதை நான் கவனித்ததை  கண்ட அவர் அதை என்னிடம் காட்டி..

"இதை அங்கே வாங்கினேன். விலை மலேசியன் ரிங்கிட் இருபத்தி அஞ்சாயிரம்" என்றவர் ‘இதை பார்த்த` என் மனைவி

"இதுபோல் எனக்கும் ஒன்று வேண்டும்!" என்று அடம் பிடிக்கிறாள்!’” என்றார். 

"உனக்கு தெரிந்த வைர வியாபாரம் செய்யும் ’மாமா’* யாராவது இருந்தால் சொல்! பத்து பணி ரெண்டு ஆயிரரிங்கிட்க்குள் ஒன்று வாங்கலாம்!’ என்றார் 

[*தமிழ் முஸ்லிம்களை மலாய்காரர்கள் ’மாமாக்’ என்று அழைப்பது வழக்கம்] மேற்சொன்ன பாட்டன் பூட்டன் பரம்பறை பெருமை பேசும் நபர் கொஞ்ச நாளாக "நான் வைர யாவாரம் செய்கிறேன்! நான் வைர யாவாரம் செய்கிறேன்”! என்று சொல்லிக் கொண்டு இருந்தார். ’அவரை இந்த மலாய்காரரிடம் காட்டி விடுவோம் ’ஏதாவது அஞ்சோ பத்தோ கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவருக்கு டெலிபோன் போட்டேன். 

"எனக்கு தெரிந்த மலாய்க்காரர் ஒருவர் வைரம் வாங்க வேண்டுமாம்! உங்களிடமிருக்கும் வைரங்களை எடுத்துக் கொண்டு இங்கே வரமுடியுமா"? என்றேன்.

"அவர் என்ன வேலை செய்கிறார்?"என்றார்.

"அவர் ஒரு மலாய் மொழி பத்திரிக்கையின் எடிட்டரும் உரிமையாளரும்" என்றேன்.

"என்னிடம் இருக்கும் வைர மெல்லாம் வெறும் முன்னூறு நானூறு வெள்ளி விலை யுள்ள மலிவான வைரமல்ல! ஆயிர வெள்ளியிலிருந்து ஐயாயிரம் வெள்ளி வரை விலையுள்ள வைரங்கள். அவரால் அந்த விலை கொடுத்து அதை வாங்க முடியுமா?" என்றார்

"அந்த விலையில் நிச்சயமாக அவரால் வாங்க முடியுமென்றால் மட்டுமே நான் அங்கே வருவேன். இல்லையென்றால் வெட்டித்தனமாக வந்து என் டயத்தை வேஸ்ட்டு பண்ண விரும்பவில்லை" என்றார்.  

நான் பதில் கொடுத்தேன் "இப்போ அவர் கை விரலில் கிடக்கும் மோதிரத்தில் பதித்த வைரத்தின் விலை 65 ஆயிரம் மலேசியன் ரிங்கிட் மதிப்புள்ளவை. இப்போ அவர் Girl friendடுக்குவாங்க நினைப்பது இருபது ஆயிரத்திலிருந்து முப்பதாயிரம் வரை. நீங்கள் வைத்திருக்கும் மலிவான வைரங்கள் அவர் வீட்டு வாசல் படிக்கு பதிக்க தேவைபட்டால் சொல்லுகிறேன்! கொண்டு வாருங்கள்" என்று சொல்லி விட்டு டெலிபோன் ரிசிவரை ’டக்’கென்று போட்டேன். சற்றுநேரத்தில் டெலிபோன் மணியடித்தது.

நான் எடுக்கவில்லை. 

அடுத்த பகுதியிலும் தொடரும்… 

S.முஹம்மது பாருக்

வாழ்க்கையின் பதிவேடுகள்! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 29, 2015 | , ,

முடி நரைத்தும்
மூச் சிரைத்தும்
மூப் பெய்தோர்
முக வரிகளைக்
கண் டெடுத்துப்
காணத் தருவது...


 



S.முஹமது ஃபாரூக்

ஞாபகம் வருதே - 3 [சில நேரங்களில் சில மனிதர்கள்!] 19

அதிரைநிருபர் பதிப்பகம் | March 24, 2015 | , , ,

ஒருமுறை நான் மலேசியா சென்றபோது முன்பு வேலை செய்த கடையில் மீண்டும் வேலைசெய்ய மனமில்லை. காரணம் ஜில்லா வாரியான [மாவட்ட அளவில்] தஞ்சாவூர் காரர்களுக்கு ராமநாதபுர காரர்களை பிடிக்காது. அதுபோலவே ராமநாதபுர காரர்களுக்கும். ஊர்வாரியான, ஜில்லாவாரியான வேற்றுமைகள் கொடி கட்டி பறக்கும். இருந்தாலும் தஞ்சை மாவட்டத்துk காரர்களிடம் வேலை செய்வது மிக கடினமே. அமரிக்காவில் ஆப்பிரிக்க அடிமை கருப்பர்கள் பட்ட துயரத்தை எல்லாம் இவர்கள் தரும் துயரம் தூசு ஆக்கிவிடும். இது பற்றி நிறையவே எழுதலாம். இன்ஷா அல்லாஹ் இன்னொரு முறை அதை காண்போம்.

வேலை தேடி ஒரு வாரம் காத்திருந்தேன்.

ஒரு நாள் ஒரு புத்தக கடையில் மேனேஜராக இருக்கும் எனக்கு தெரிந்த ஒருவர் கூப்பிடவிட்டார். “தைபிங்கில் இருக்கும் எங்கள் கடையில் வேலை செய்யப்போகிறாயா? சம்பளம் 150 இரண்டு வருடங்களுக்கு மேல் தொடர்ந்து இருந்தால் இரண்டு மாதச் சம்பளம் போனஸ்!” என்றார்.

‘சரி’ என்றேன்.

தமிழ் முஸ்லிம்கள் கடையில் போனஸ் என்பதற்கும் Working partner என்பதற்கும் அர்த்தமே வேறு. அதன் முழுபொருள் Stick and Carrot. ஒரு நீண்ட கம்பின் நுனியில் கேரட் கிழங்கை கைற்றில் கட்டி குதிரை அல்லது ஒட்டகத்து மீதுயேறி ஒருவர் உட்கார்ந்து கொண்டு வாய்பேச தெரியாத  பசி கொண்ட அந்த ஜீவன்களின் கண்களுக்கு முன்னே இந்த கம்பில் கட்டிய கேரட் கிழங்கை தொங்க விடுவார்கள். 


பசி கொண்டபோது புசிக்க கிடைக்காத அந்த அப்பாவி ஜீவன்களும் மனிதனின் ‘தந்திரம் அறியாமல்’ கரட் நமக்கு அருகில் தானே இருக்கிறது! திங்கலாம்! பசி தீரதிங்கலாம்’’! என்ற ஆசையோடு வேக வேகமாக எட்டு மேலே எட்டு வச்சு நடக்கும். நடக்க-நடக்க கம்பில் கட்டிய கேரட்டும் அந்தவாயில்லா ஜீவன்களின் வாய்க்கு எட்டாமல் நகர்ந்து நகர்ந்து போகும். அது போல்தான் மலேசியாவில் தொழில் நடத்திய தமிழ் முஸ்லிம் முதலாளிகள் தங்களிடம் பணிந்து பணிபுரிந்த loyal  (விசுவாசமான) வேலையாட்களுக்கு கொடுத்த போனஸ் அல்லது பங்கு. இந்த கானல் நீரை நம்பி கண்ணீரும் விட்டு கடையையும் விட்டு காணாமல் போனவர்கள் பலர். நான் இந்த மேனேஜர் சொன்ன போனஸை நம்பவில்லை. ஆனால் சும்மா இருந்து பொழுதை போக்க விரும்பாமல் ரயில் ஏறினேன்.

பகல் முழுதும் ரயில் பயணம். இரு பக்கங்களிலும் பசுமை கம்பளங்கள் போர்த்தது போல் புல்வெளிகள். அடர்ந்த மரங்கள் மலாய்காரர்களின் முற்றிலும் மரத்தினால் கட்டிய பாரம்பரிய வீடுகள். ரப்பர் தோட்டங்கள் மலையில் பிறந்து மண்ணில் நெளிந்து கடலில் கலக்கும் நதிகள் இவை எல்லாம் கண்ணுக்கு காட்சியாய் இருந்தது.மாலை மணி ஐந்துக்கு தைபிங் நிலையத்தில் வண்டி நின்றது. பெட்டி படுக்கையுடன் இறங்கினேன். அங்கு நின்ற டேக்ஸியில் ஏறி அட்ரஸை சொன்னேன். பத்து நிமிஷத்தில் டேக்ஸி கடை முன் நின்றது.

அடுத்த நாள் கடையில் நிர்வாகி நான் செய்ய வேண்டிய வேலைகளை சொன்னார். [பெரும்பாலான தமிழ் முஸ்லிம் கடைகளில் இன்னார் இன்னாருக்கு இன்ன இன்ன வேலை  யென்று ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டாலும் இட ஒதுக்கீட்டை எல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி விட்டு எல்லா வேலைகளையும் எல்லோரும் செய்ய வேண்டும். இந்த ஒதுக்கீடெல்லாம் சம்பளத்தை குறைத்து பேச தூண்டிலில் கோர்க்கும் பூச்சியே.. முதலாளிக்கு சொந்தக்கார மாமன் மச்சாங்கள் தப்பு செஞ்சால்கூட வேறு எவனாவது ஒருத்தன்தான் முதலாளிக்கு ஜவாப் சொல்ல வேண்டும். இது எழுதப்படாத சட்டம்.] Formalityக்காக மேனேஜர் சொன்னதை Formalityக்காக நானும் ஒப்புக் கொண்டதாக டும்டும் மேல தாளத்திற்கு தலையாட்டும் கோயில் மாடுபோல் தலையாட்டினேன். மாதங்கள் ஓடியது.

ஒரு நாள் முதலாளிக்கும் மேனேஜருக்கும் சண்டை வந்தது! மச்சான் மச்சினன் சண்டை அன்றே மேனேஜர் கடையே விட்டு மூட்டை கட்டினார். நான் மேனேஜராக பதவி பிரமானம் எடுத்துக் கொண்டேன். பதவி எனக்கு வந்ததால் எனக்கு முந்திய சீனியருக்கு என் மேல் பொறாமை வந்தது. ‘முன்னவன் நான் இருக்க என் பின்னவனுக்கு பதவியா?’ என்று அவர் போர்க் கொடிதூக்கினார். கடையில் வேலை செய்த பையன்கள் எல்லாம் என் பின்னே நின்றார்கள். ஒரு மாதம் கழித்து அவரும் கடையே விட்டு எக்ஸிட்’ வாங்கினார். கடையில் எனக்கு வயதில் மூத்த ஒருவரும் இருந்தார். அவர் உண்டு அவர் வேலை உண்டு யென்று எதையும் கண்டும் காணாமல் இருந்தார்.

TAIPING என்னும் இந்த சீன மொழி சொல்லுக்கு [PEACE] அமைதி என்று பொருளாம். பெயருக்கு ஏற்றாற் போல் ஊரே ஒரே அமைதி பூங்காவாகவே இருந்தது. மலேசியாவின் முதல் ரயில்பாதை 1885-ஜூன் மாதம் முதல் தேதி தைபிங்கிலிருந்து Port Weld. வரை போடப்பட்டது.

மலேசியாவில் பல பழங்கள் விளைந்த போதிலும் இந்நாட்டு மக்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருப்பது துரியான் [DURIAN] பழமே! ’தூறி’ என்ற மலாய் சொல்லுக்கு ’முள்’ என்பது தமிழ். முக்கனிகளில் ஓன்றான பலா பழவகையை சார்ந்தது. ஆனால் பழமோ நம்ம ஊரு தேங்காய் அளவில் இருக்கும். இதை முன்பின் தின்று ருசி காணாதவர்கள் இதன் கிட்டே நெருங்கினால் குமட்டலும் வாந்தியும் வந்து காத தூரம் காலெடுத்து ஓடுவார்கள்.

இவர்களுக்கு தாம்பாளம் நிறைய பொன்னும் மணியும் குவித்துக் கொடுத்து “சாப்பிடுங்கள்! சாப்பிடுங்கள்!” என்று என்னமாத்தான் கெஞ்சினாலும் ஊஹும் “கல்லசை! என்னசை!” என்று அசைச்சு கொடுப்பார்கள். நெருங்கவே மாட்டார்கள். அதன் வாசம் அப்படி!. ஆனால், இதை மனதைக் கட்டுப்படுத்தி மூக்கை பொத்திக் கொண்டு  ஒருமுறை இருமுறை தின்று ருசி கண்டு விட்டார்களேயானால் அடுத்தமுறை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் கொஞ்சமாவதும் சாப்பிடாமல் போகமாட்டார்கள்.

ருசியும் வெட்கம் அறியாது. ஆனால் இனிப்பு நீர்காரர்களுக்கு இது நஞ்சு. ஆண்மை விருத்திக்கு கைகண்ட மருந்து. விடுதிகளில் தங்கி ஆண்மை விருத்திலேகியம் கொடுக்கும் டாக்டர்களை தேடி விடுதிப்படி ஏற வேண்டியதில்லை. இந்த பழசீசனிலிருந்து சரியாக பத்து மாசம் சென்றதும்  பிறசவ வார்டில் இடநெருக்கடியும் ‘குவா-குவா’ சத்தமும் அதிகமாகும். Duriyan jatoh sarong naik இது இந்தோனேசியா  பழமொழி. தமிழில் “துரியான் பழம் விழுந்தால் கைலி உயரும்”.

தைபிங் நகரில் துரியான் சீசன் ஆரம்பமானது. ரோடுகளின் இருபக்கமும் பழங்கள் குவிந்தன. ஒரு இரவு நாங்கள் எல்லாம் துரியன் பழம் வாங்க கிளம்பினோம். எங்கள்திட்டம் எல்லோருக்கும் மொத்தமாக வாங்குவது எல்லோரும் ஒன்று சேர்ந்து உண்பது. விலையில் எல்லோரும் சரிசமமாக ஈவிச்சு கொள்வது. எங்களில் அந்நாட்டில் பிறந்து ரப்பர் தோட்டத்தில் கூலி வேலை செய்த ஏழை குடும்பத்து பையனும் மிகக்குறைந்த சம்பளத்தில் வேலைசெய்து கொண்டிருந்தான் [குறிப்பு: குறைவான சம்பளத்துக்கு நிறைய வேலை செய்வோர்களை தமிழ் முஸ்லிம் முதலாளிகளுக்கு ரெம்ப பிடிக்கும்] அவன் திண்ணும் பழத்திற்கு அவனிடம் காஸு வாங்குவதில்லை அவனுக்கு நல்ல  பழம் எது, பூச்சி பழம் எது என்று நன்றாகத் தெரியும். மேலும் அவன் நாட்டுபுற மலாய் மொழி Slang நன்றாக பேசுவதால் அதை இதை சொல்லி விலை குறைத்து வாங்கி விடுவான். மலாய்காரர்களுக்கு மலாய்மொழியை அவர்களைப் போல் பேசுபவர்களை பிடிக்கும். அது ஒன்றையே மூலதனமாக கொண்டு பல காரியங்களை சாதித்து விடலாம்.


நாங்கள் துரியான் பழ பஜார் நோக்கி துரிதமாக நடந்தோம். அங்கே மலை மலையாய் பழம் குவித்திருந்தது Mari-marilah Tuan! buah yang bagus.dan sedap.Harga murah saja என்று வொவ்வொரு கடைகாராரும் கூவினார். இதன் பொருள். ”[வாங்க பெரியவரே! நல்ல பழம்! ருசியான பழம்! விலையோ மலிவுதான்]’’. ஒவ்வொரு குவியலாக பார்த்துக் கொண்டே போனோம். அந்த நாட்டுப்புற தெலுங்கு பையன் ஒருகுவியல் அருகில் போய் உட்கார்ந்து கவனமுடன் பார்த்து பார்த்து பலபழங்களை பொறுக்கி சேர்த்து விலைபேசினான். கொஞ்ச நேரம் விற்பவருக்கும் வாங்குபவருக்கும் பேரம் நடந்து பரஸ்பர நல்லெண்ணத்துடன் பேரம் முடிந்தது.

காசை கொடுத்த பையன் “சாயாசூடா பிள்ளி”, [நான் உன்னிடம் வாங்கி விட்டேன்].

பழம் விற்றவன் பதில் சொன்னான் “சாயாசூடா ஜூவால். செலாமத் மாக்கான் திரிமாகஸி” [நான் விற்று விட்டேன். நல்லபடியாக சாப்பிடுங்கள்.நன்றி.]

இது அந்த சின்னஞ் சிறிய நாட்டின் பண்பாடு. கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடியான நம்மைவிட எவ்வளவோ பின் தங்கியவர்களின் பண்பாடு இப்படி. நம்நாட்டின்நிலைஎப்படி?

நம் ஊர்  மெயின் ரோட்டில் ஒருபத்திரிகை கடைக்கு சென்று கைற்றில் தொங்கிய ‘ஆனந்தவிகடன்’னை எடுத்தேன் “ஆஆஆஆ… அதை எடுக்காதீர்கள்! என்னிடம் கேட்டால் நானே தருவேனே!” என்று அதட்டலாக சொன்னார்.

“சரி! கொடுங்கள்” என்றேன். உள்ளே இருந்த ஒரு பிரதியை எடுத்து அங்கிருந்தே தூக்கி மேஜைமீது வீசினார். அது வெளியே வந்து மண்ணில் விழுந்தது. கல்லாவில் இருந்த முதலாளி இந்த மரியாதை கெட்ட செயல் கண்டு கொஞ்சங்கூட கவலையில்லாமல் யாரோ ஒருவருடன் சுவாரசியமாக,தன்னை மறந்து கருணாநிதி-versus ஜெயலலிதா அரசியல் பேசிக்கொண்டிருந்தார்.

விகடனுக்கு. விலைRs15 போட்டிருந்தது. இருபது ரூபாய்கொடுத்து “பாக்கிகாஸு தாங்க!” என்றேன்.

நோட்டை வாங்கியவர் அதை மேஜை மேல் வைத்து காற்றில் நோட்டு பறந்து விடாமல்இருக்க கையை நோட்டின் மேல் வைத்துக் கொண்டார். இப்பொழுது அவர் கையே நோட்டுக்கு பேப்பர் வெய்ட்.

“பாக்கி கொடுங்கள் போகனும்! பாக்கி கொடுங்கள் போகனும்!” என்று நான் ’பலமுறை’ கத்தியும்கூட கடைகாரர்காதில்.அது ஏறவேஇல்லை. கருணாநிதியும் ஜெயலலிதாவும் அங்கே சேர்ந்து வந்து இந்த இருவர் வாதங்களை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

“பா..ஆஆஆக்கி கொடுங்கள்” என்று ஏழுருக்கு அப்பாலும் கேக்கும்படி சத்தம் போட்ட பின்பே கடை முதலாளி கருணாநிதி ஜெயலலிதாவை விட்டு விட்டு தன் சுயநினைவுக்கு வந்தார்.

“இன்னும் பாக்கி வாங்கலையா?” என்று அவர் என்னையே கேட்டுக் கொண்டு அஞ்சு ரூவா நோட்டைஎடுத்து வீசினார்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இங்லாந்திலிருந்து வெளிவந்த Psychologist என்ற மாத இதழில்  Herbert Cason என்பவர் எழுதினார் ’ஒரு வாடிக்கையாளர் உன் கடையிலிருந்து திருப்தியுடன் வெளியானால் அதுவே நூறு வாடிக்கையாளர்களை உன் கடைக்குள் கொண்டுவரும்’’ என்றார். இங்கே பாக்கிகாசைத் தூக்கி வீசுகிறார்கள். கொடுத்த காஸுக்கு பாக்கி கேட்டு பிச்சைகாரன் போல் ஒத்தைக் காலில் நிற்கவேண்டிய திருக்கிறது. [‘’இவர்கள் என்ன Psychologist-டா படித்தார்கள்? ஹெர்பர்ட்காசன் சொன்னது போல்செய்ய’’ என்று நீங்கள் கிசுகிசுப்பது காதில் விழுகிறது].

இப்பொழுது பேசு பொருளுக்கு திரும்புவோம். வாங்கிய பழங்களை எல்லாம் தூக்கி கொண்டு அருகிலுள்ள தனியிடத்திற்கு சென்று சாப்பிட உட்கார்ந்தோம்.பெரியவர் மட்டும் உட்காராமல் நின்றார்.

“ஏன் நிற்கிறீர்கள்? உட்காருங்களேன்!” என்றேன்.

’’நான் தனியாக ஒரு இடத்தில் போய் சாப்பிடுகிறேன். என் பங்குக்கு உள்ள பழத்தை கொடுங்கள்!’’ என்றார்.

பையன்கள் எல்லோருமே என்னை பார்த்தார்கள். ‘பழம் வாங்க வரும் போது பேசியது ஒன்று. இப்பொழுது இவர் மட்டும் ஏன் மக்கர் பண்ணுகிறார்? என்று எனக்கு குழப்பமாக இருந்தது.

“ஏன்? என்ன விஷயம்? வரும் போது இப்படித்தானே பேசி வந்தோம். இடையில் யாரும் ஏதும் தவறாக சொல்லி விட்டார்களா?” என்றேன்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை! எனக்கு எல்லோர் கூடவும் ஒன்றாக இருந்து சாப்பிட பிரியமில்லை” என்றார்.

அங்கிருந்த எல்லோரும் என்னைப் பார்தார்கள். அவர்கள் என்னை நோக்கிய நோக்கம் ‘அங்கிருந்தவர்களில் நானும் அந்தப் பெரியவரும்தான் முஸ்லிம்கள். மற்ற அனைவரும் இந்துக்கள்’. ‘இந்துக்களோடு ஒன்றாக இருந்து நான் சாப்பிடமாட்டேன்’ என்று அவர் சொல்கிறாரோ என்பதே அந்தப் பார்வையின் பொருளாய் எனக்கு பட்டது.

"எல்லோரும் அண்ணன் தம்பிகளாய் ஒன்றாக இருந்து வேலை செய்யும் போது நீங்கள் மட்டும் குழப்பம் செய்வதில் பல பிரச்சனைகள் வரும். அப்புறம் கடை வேலைகளிலும் அது எதிரொலிக்கும். அது எனக்கு தலைவலியை கொண்டு வரும். அதனால் விஷயம் என்னவென்று கூறுங்கள் அது எதுவானாலும் உங்கள் விருப்பபடியே செய்யலாம் என்றேன்"

“ஒன்றுமில்லை! நீங்கள் எல்லாம் இளம் வயதுகார்கள். சீக்கிரம் சீக்கிரம் சாப்பிடுவீர்கள். நான் மெதுவாதான் சாப்பிடுவேன். நான் ஒன்னு சாப்பிட்டு முடிப்பதற்குள் நீங்கள் லெல்லாம் ரெண்டு மூனை முடித்து விடுவீர்கள். காசு கொடுத்தும் எனக்கு கெடைக்க வேண்டிய பங்கு கெடைக்காது அதனால் என்பங்கை தனியே கேட்டேன்’’ என்றார்.

உள்ளம் திறந்துவிட்டார். அவர்உள்ளத்தில் சைத்தான் குடிகொண்டான். அங்கிருந்தவர்களில் எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். அந்தப் பார்வையின் பொருள் “இதுதான் உங்கள்இஸ்லாமா?” என்று கேட்பது போல் இருந்தது. 

அவர் அப்படி நினைத்தால் அவர்பங்கை அவருக்கு கொடுத்துடலாமே!’’ என்று ஒரு பையன் சொன்னான்’’ முதலில் பழத்தை அவரையே சாப்பிட சொல்லுங்கள். மீதியை நாம் சாப்பிடலாம்’’ என்று இன்னொரு பையன் சொன்னான்.

“என் பங்கைத்தான் நான் கேட்டேன்! யாரும் எனக்கு தர்மம் கொடுக்க வேண்டாம்’’என்றார்.!

‘சரி! இதற்கு மேல் கெஞ்சினால் குரங்கு மரத்துக்கு மேலே ஏறும்’’! என “எத்தனை பழம் இருக்கிறது’ என்று எண்ணும்படி சொன்னேன். ஆள் ஒன்னுக்கு மூனு பழம் வீதம் வந்தது போக.ஒரு பழம் மீத மிருந்தது.

‘’ஆள் ஒன்னுக்கு மூனு பழம் வருகிறது. உங்கள் பங்கை நீங்களே பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்றேன்.

அவரே நன்றாக பார்த்து பார்த்து எடுத்துக் கொண்டு சற்று ஒதுங்கிபோய் உட்கார்ந்தார். மீதமிருந்த அந்த ஒரு பழத்தையும் அவரிடம் கொடுத்தேன். 

“வேண்டாம் !ஒருபழம்தானே? நீங்கள்தான் அதிகம் பேர் இருக்கிறீர்கள். உங்கள் பங்கிலேயே இருக்கட்டும்!’’ என்று பெரும்தன்மையுடன் சொன்னார். செய்த்தான் வேதம் ஓதியது!

‘’பரவாயில்லை! எங்களிடம் நிறைய பழம் இருக்கிறது. அதில் ஒன்று பூச்சிப் பழமானால் இன்னொன்றை எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு ஒரு பழம் பூச்சியானால் மிஞ்சுவது இரண்டுதான். அதிலும்கூட பூச்சி இல்லாத பழம் கிடைப்பது அல்லாவின் நாட்டம். கைகாவலுக்கு இதையும் வைத்துக் கொள்ளுங்கள்’’ என்றேன். என் முகத்தை பார்க்காமல் வாங்கிக் கொண்டார்.

பழங்களை உடைத்து திண்ண ஆரம்பித்தோம். ஒரு பழத்திற்கு நாலு compartment-இருக்கும். ஒரு  compartment-டில் மூனுசுலை இருந்தால் அதில் ருசி அதிகமும் விதை சிறிதாகவும் இருக்கும். விதையைச் சுற்றிலும் வெண்ணைபோல் மெல்லிய இலேசான மஞ்சள் நிற க்ரிம் பத்தை போல் படிந்திருக்கும்.இது பழத்தின் கீரிம் compartment-டில் ஒட்டாமல்அப்படியே எடுத்துசாப்பிட அல்லாஹ் படைத்திருக்கும் அற்புதங்களில் இதுவும் ஒன்று அவன் படைப்பின் ஓவ்வொன்றிலும் உற்று நோக்கினால் இதைக் காணலாம்.

நாங்கள் பழங்களை ருசித்து-ருசித்து சாப்பிட்டோம். பக்கத்தில் இருந்த பையன் “அண்ணே! அங்கே பாருங்கள்!’’ என்றான். 

இலேசாக அந்தப் பெரியவர் பக்கம் பார்வையை போகவிட்டேன். ஒரு பழம் முழுதும் பூச்சி. அது ஒரு ஓரத்தில் தூக்கி வீசிக் கிடந்தது. மற்றொரு பழத்தில் பாதி பூச்சி. பாதியை ருசித்துக் கொண்டிருந்தார். ஆக உடைத்த இரண்டில் ஒன்னரை பழம் பூச்சி. பூச்சியில்ல பாதியை ருசிதுக் கொண்டிருந்தார். அவரிடத்தில் பாக்கி இருந்தது அவர் பங்குக்கு கிடைத்த ஒன்று, துண்டு விழுந்ததில் நாங்கள்கொடுத்தஒன்று.ஆக இரண்டு உடைக்காமல் வெய்டிங் லிஸ்ட்டில் இருந்தது. எங்கள் பழங்களிலும் இரண்டு பழத்தில் பாதிபூச்சியும் ஒன்று முழுதும் பூச்சியாய் போனது. அவரும் நாங்களும் துரியான் தின்று எழுந்த போது அவர் துரியானில் ஒன்னரை பூச்சியும் எங்களில் ரெண்டு பழ நட்டதிற்க்கும் எழுந்தோம் எங்களில் ஆறுபேர். அவர் ஒருவர் மட்டுமே.! 

நாங்கள் எல்லோரும் கடைக்கு நடந்தோம். தனித்து போனவரும் கூடவே வந்தார். யாரும் யாருடனும் பேசவில்லை. மௌனத்தின் ஆட்சி சிம்மாசனம் ஏறியது. மறுநாள் வேலைகள் வழக்கம் போல் நடந்தது. அவர் யாருடனும் ஏதும் பேசாமல் தன்வேலைகளை செய்து கொண்டிருந்தார். எப்பொழுதும் பேச்சும் சிரிப்பும் கிண்டலும் நையாண்டியுமாக ஓடியபொழுது சோகமாய் ஓடியது. ஒரு வெள்ளிகிழமை மாலை பினாங்கு தலைமை நிலையத்திலிருந்து டெலிபோன் வந்தது” அவர் கடையை விட்டு நின்றுகொள்கிறேன்” என்று டெலிபோன் போட்டார். நாளைக்கு அவர் கணக்கை பார்த்து பாக்கியே கொடுத்து எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவிடு! ’போனஸ் கீனஸ்’ என்று ஏதெனும் ’’கிக்கிரிபுக்கிரி’’ என்றால் என்னிடம் பேசிக்கிடசொல்’’ என்றார்.

அந்த முதலாளிக்கு பிடிக்காத ஒரே ஒருவார்த்தை ’’போனஸ்’ தான் அந்தக் கடையில். வேலைபார்த்த அத்தனை பேருக்கும் அவர்கடைசியாக உச்சரித்த வார்த்தை இதுதான். பினாங்கு தொடங்கி சிங்கப்பூர் வரை கிளைகளை நிறுவி ’ஓகோ! ஹோ’வென்று ஆலமரம் போல விழுதுகள் விட்டு வளர்ந்த இந்த விருட்சம் வீழ்ந்தது உழைத்துஉழைத்து ஓடாய்போன தொழிலாளிகளின் சாபமே.

இவைகளுக்கு காரணம் தலைமை நிலையத்தில் ஒருசெய்த்தான் மேனேஜராக இருந்து கெடுத்தான். துரியான் பழ செய்தானிடம் விஷயத்தை சொன்னேன் ’’அவன் நாசமாய் போகட்டும் என்று பாக்கிகாசை வாங்கி கொண்டு போய் விட்டார். நானும் அங்கிருந்து விலகியபோது எனக்கும் அந்த செய்த்தான் ஓதிய வேதம் ‘போனஸ் இல்லை! ’மலேசியாவில் தஞ்சாவூர் காரர்கள் கடையில் மேனேஜராக இருந்தவர்களும் முதலாளியும் வேதம் ஓதும் செய்த்தான்களே! வேதம் ஓதிய அவர்கள் கடைகளில் எல்லாம் இப்பொழுது YALE-பூட்டு தொங்குகிறது.!

S.முஹம்மது ஃபாருக்

ஞாபகம் வருதே [2] எறச்சிக்கறி சோறு! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | March 02, 2015 | , , , , ,

நான் மலேசியா புறப்படும்போது பதினோரு ஃபக்கிர்மார்களை.

வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுப்பது வழக்கம்.. இதில் நேத்திக்கடன் கீத்திக்கடன் அது இது என்றெல்லாம் ஏதுமில்லை.

இப்படிச் செய்வதில் ஏதோ எனக்கொரு இனம் புரியாத மனச்சாந்தி! அவ்வளவே! 

ஃபக்கிர்மார்களும் சொன்னபடி பதினோரு பேர் வருவார்கள் .தபுசு அடித்து பாட்டுப் பாடுவார்கள். அவர்கள் பாடும் பாடல்களில் கவிதை நயமும் இசை நயமும் இருக்கும்.     பாடிமுடிந்தபின் விருந்து உண்டு துவா ஓதுவார்கள். 

அவர்கள் புறப்படும்போது ரூவாய் நூற்று ஐம்பத்துது ஒன்று பெரியவரிடம் கொடுத்து “மற்றவர்களுக்குக் கொடுப்பதைக் கொடுத்து நீங்களும் எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்று சொல்லி விடுவேன். அதோடு. தெருவாசிகளில் ’பொறுக்கினால்போல’ சிலரையும் நண்பர்களையும் அடுத்தவீடு அண்டுன வீடுகளையும் சொந்தங்கள் பந்தங்களையும் கூப்பிட்டுக் கொள்வது வழக்கம்..பல பயண காலங்களில் இது  சுமுகமாக தொடர்ந்தது.

ஒரு முறை நண்பர்’ ஒருவர் ’இதை விட்டும் விட்டு சலவாத் நாரியா ஓது! முஸிபத் கழியும்’’என்றார். பக்கிர்மார்களுக்கு வழக்கமாக கொடுக்கும் விருந்தை நிறுத்த மனம் இடம் கொடுக்கவில்லை. சலவாத்நாரியா என்றால் என்ன என்று எனக்குத் தெரியாது.

ஒஸ்தாதிடம் போய் விசயத்தைச் சொன்னேன். 

"இது மூனு-நாலு  பேர் மட்டும் ஓத முடியாது. பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் ஓதக்கூடிய விஷயம்" என்றார். மேலும் நம் ஊரில் இருக்கும் மதர்சாவின் பெயரைச் சொல்லி ’’அதன் தலைமை இமாமிடம் சொல்லுங்கள். அவர்கள் ஓதுகிற பிள்ளைகளை அனுப்பி வைப்பார்கள்" என்றார்.

"மதர்சா தலைமை இமாமுக்கு என்னைத் தெரியாதே!" என்றேன். என் நண்பர் ஒருவரின் பெயரைச் சொல்லி ’’அவரைக் கூட்டிச் செல்லுங்கள் அவருக்குத் தெரியும்’’என்றார்.

நண்பரிடம் சொன்னபோது "அசருக்குப் பிறகு போகலாமே!" என்று சொன்னார்.

நானும் நண்பரும் மதரஸாவுக்குப் போனோம். தலைமை இமாம் அங்கே இருந்தார்கள் .என்னோடு வந்த நண்பர் இமாம் அவர்களிடம் வந்த விஷயத்தைச் சொன்னார். ’’இப்பொழுதுதெல்லாம் பிள்ளைகளைச் சலவாத்நாரியா ஓத அனுப்புவதை நிறுத்தி விட்டேன். ‘மதரஸாவில் ஒதவந்த பிள்ளைகள் யெல்லாம் ஓதுவதை விட்டுவிட்டு வாரா வாரம் வீட்டுக்கு வீடு சலவாத் நாரியா ஓதக் கிளம்பி விட்டார்கள்!’’ என்று பேச ஆரம்பித்து விட்டார்கள்’’ .என்றார்கள்.

கொஞ்ச நேரம்  நானும் நண்பரும் ஒருவரை யொருவர் பார்த்து மௌனமாக அங்கேயே நின்றோம். பின்பு என்னைப் பார்த்து பேர் என்ன?" என்றார்கள். 

‘முஹம்மது பாரூக்” ’என்றேன்.

“தெரு?” 

“கடல்கரைதெரு”

’’முன்பு ஓதி இருக்கிறீர்களா?’’ 

‘’இல்லை இதுதான் முதல் தடவை! வழக்கமாக தைக்கால் பக்கிமார்களை அழைத்து விருந்து கொடுத்து மலேசியா புறப்படுவது வழக்கம். அதை நிறுத்தி விட்டு சலவாத்நாரியா ஓதுங்கள் என்று ஒரு நண்பர் சொன்னார் அதனால்தான்..........’’ 

என்று இழுத்தேன். 

கொஞ்சம் யோசித்து விட்டு

’’அப்போ இந்த தடவை பக்கிர்மார்களை கூப்பிடவில்லையா?’’ என கேட்டார்கள்.

’’இன்ஷா அல்லாஹ்! நாளைக்கு வெள்ளிக்கிழமை சலவாத் நாரியா ஓதினால் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அவர்களை அழைத்து விருந்து கொடுக்கலாம் என்று இருக்கிறேன்’’ என்றேன்.

.’’சரி! நாளைக்கு பதினாறு பேர்கள் அசருக்குப் பின் வந்து ஓதுவார்கள். மஹ்ரிபுக்கு முன்னதாகவே அவர்களை இங்கே அனுப்பிவிட வேண்டும்’’ என்றார்கள்.

கூட வந்தந ண்பரிடம்,

’’எத்தனை பேருக்குச் சாப்பாடு அனுப்பவேணும் என்று கேளுங்கள்’’ என்றேன். 

அவர்கேட்டார்.

’’முப்பது பேருக்கு அனுப்பினால் போதும். அதோடு இனிமேல் பிள்ளைகளை ஒதக்கூப்பிட வேண்டாம்’’ என்றார்கள்.

வெள்ளிக்கிழமை காலை ஒஸ்தாதிடம் விஷயத்தை சொல்லி சலவாத்நாரியாய ஓத வரும்படி கூப்பிட்டேன்.’

"வருகிறேன்" என்று சொன்னவர் இன்னொரு லெப்பையின் பெயரையும் சொல்லி ’’அவரையும் கூப்பிடுங்கள்! இல்லை என்றால் நான்தான் அவரை கூப்பிட வேண்டாம் என்று சொன்னதாக ’ என் தலையில் பழிபோடுவார்" என்றார்.

அவரையும் போய் கூப்பிட்டு விட்டு எங்கள் தெரு கடையில்இறைச்சி வாங்கப் போனேன்.         வெள்ளிக்கிழமை எறச்சி கடையில் கூட்டம் கொஞ்சம் கூடவே நின்றது. என்னுடைய பொல்லாப்பான காலமோ என்னமோ அவ்வழியே வந்த ஒருவரின் கண்ணில் நான் பட்டுவிட்டேன். அவர் ஒரு விடாகண்டர். ’எறச்சிகறி சோறு’ என்றால் நாக்கில் ஜலம் ஊறும். இங்கிதம் பண்பாடு எல்லாம் கிலோ என்ன விலைதான்! எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி எல்லாம் எந்த கவலையும் அவருக்கு இல்லை. என்னைக் கண்ட அவர்.

’’பாரூக்! ஏன் இறைச்சிகடையில் நிக்கிறா?’’ என்றார். 

நான் ஒரு முட்டா பய! இவரை பற்றி முன்னமேயே எல்லாம் தெரிந்திருந்தும்.

‘எறச்சி வாங்க வந்தேன்’’ என்றேன். 

இந்த நேரம் பார்த்து இறைச்சி கடைகாரர் "காக்கா எத்தனை கிலோ வேண்டுமென்று சொன்னீர்கள்" என்றார். 

சொன்னேன்.

"கொஞ்ச நேரம் நில்லுங்கள்! இன்னொரு கடா வரும். அதில் தருகிறேன்" என்றார்.

நான் சொன்ன எறச்சி என் வீட்டு தேவையை விட கூடுதலாக இருப்பதை கேட்ட அந்த விடாகண்டர்

"ஏன் இன்றைக்கு எறச்சி கூட வாங்குகிறாய்?" என்றார்.

விஷயத்தை சொன்ன பாவி நான் இதையும் தெரியாத்தனமா சொல்லி விட்டேனா? அது ஒன்னே அவருக்குப் போதும், என் கழுத்தை அறுக்க.

"ஓதஎத்தனை பேர் வாறராஹ?" என்றார். 

சொன்னேன்

"பிரியாணியா? இல்லே எறச்சிகறி  சோறா?"

"எறச்சிகறி சோறுதான்"

"தெருவில் எத்தனை பேரை கூப்பிடுறா?"

"யாரும்மில்லே! ஒதுற பிள்ளைகள் மட்டும்தான்" என்று சொன்னதும்! 

இவர் இன்னொரு கேள்வி கேட்கு முன்னே இறைச்சி கடைகாரர்

"காக்கா! நீங்க சொன்ன ஆடு வந்துடுச்சு. அதுக்கு இப்போ வயசு நாலரை! .இவர் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி முடிச்சு ஆடுஅறுக்குறதானா ஆட்டுக்கு வயசு ஆறரை ஆயிடும்!. கறி நாக்குக்கு ருசியா இருக்காது!" என்றார்.

எறைச்சி கடைக்காரரை அந்த விடாகண்டர் ஒரு முறை முறைத்து பார்த்து விட்டு போய் விட்டார். இவ்வளவு அநாகரீக கேள்விகள் கேட்டதை அங்கு நின்றவர்கள் கேட்டு முகம் சுளித்தார்கள்.

"ஏன்டா தம்பி! நீ பெத்தமவ அவரு ஊட்டுலே ஈந்தா வாலுது?. என்னேனமோ அதுகேக்குது! நீயும் நிண்டுகிட்டு. எல்லாத்துக்கும் ’பதல் சொல்றியே மூஞ்சிலே அடிச்ச மாதிரி ஒரு பதலே சொன்னா அவன் ஊட்டுலே’ வாளுற ஓம்மவளே திருப்பியா அனுப்பிடுவான்?" என்று கேட்டார்கள்.

வீடு வந்து எறச்சிகடையில் நடந்ததை என் மனைவி இடம் சொன்னேன்.

"ஆஹா? அவருக்கு தெரிஞ்சு போச்சா? எறச்சிகறி சோறுண்டா மசக்கைக்காரி மாங்காயே பாத்த மாதிரிலோ வாய் ஊறும். கூப்பிடலேன்டா ஊரெங்கும் தண்டோரா போட்டு கொறை சொல்லிக்கிட்டு இருப்பார். போய் கூப்பிடுங்கள்.. கொள்வினை கொடுப்பினை இல்லாததால் ரத்த உறவு விட்டு போச்சு!" என்றது.

"யாரையுமே கூப்பிடவில்லையே! இவரை மட்டும் கூப்பிட்டா மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?" என்றேன்.

’’ஒன்றும் நினைக்க மாட்டார்கள்! போய் கூப்பிடுங்கள்!’’ என்றதும்

போய் கூப்பிட்டேன்.

’’வேறு  யார்றெல்லாம் வருகிறார்கள்?’’ என்றார்.

‘’யாருமில்லை மதரஸா பிள்ளைகள் மட்டுமே!’ என்று சொன்னேன். எப்படித்தான் மரியாதை கொடுத்தாலும் அதை பெற்றுக் கொள்ளும் பக்குவம் சிலருக்கு இருக்காது. அதில் இவருக்கு முதலிடம் கொடுக்கலாம். அவருக்கு வேண்டிய இரண்டு மூன்று நபர்களின் பேரை சொல்லி அவர்களையும் ’’கூப்பிடு!’’ என்று கட்டளை போட்டார்.

’’உங்களை கூப்பிட்டால் நீங்கள் போங்க. இல்லாட்டி வாயே பொத்திக்கிட்டு சும்மா வீட்டுக்குளே கெடங்க! அவரே கூப்புடு! இவரே கூப்புடு!’’ ன்டு சொல்லி நச்சறிப்பு செஞ்சு கொடுக்குற மரியாதியே கொலச்சுகிடாமே’’ அல்லா’ண்டு ஊட்டுலே படுத்து தூங்குங்க’’ என்று எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது. அதுஅவர் மனைவின் குரலேயன்றி வேறு யாருடைய குரலுமல்ல. 

’’இவர் வந்தா வரட்டும்! வராட்டி போவட்டும்! நீங்க போய் உங்க வேலையே பாருங்க காக்கா!”என்று மீண்டும் அந்தக்குரல் ஒலித்தது. ’தப்பித்தோம்-பிழைத்தோம்’’ என்று ஓடிவந்துவிட்டேன்.  

அன்று அசருக்கு பிறகு ஒதுகிற பிள்ளைகள் வந்து விட்டார்கள். ஒஸ்தாதும் அவர் கூப்பிடச் சொன்ன லெபையும் வந்து விட்டார்கள். ஒதுதல் தொடங்கியது. ஒதி முடிந்த பின் மதரஸாபிள்ளைகள் போய் விட்டார்கள். மஹ்ரிப் தொழுகை முடிந்ததும் நானும் என் நண்பரும் சோற்றை ஒரு வண்டியில் ஏற்றி மதர்சாவுக்கு கொண்டு போனோம். தூக்க-எடுக்க உதவியா இருக்கு மென்று ஒரு பையனையும் கூடவே கூட்டி சென்றோம்.

சோத்து வண்டியை பார்த்த மதரஸா சமயல்காரருக்கு ’மூஞ்சி’ சரி இல்லை! 

‘’சோறுகறி சட்டிகளை இறக்கி எங்கே வைப்பது?’ என்று கேட்டதற்கு

’’எங்கேயாவது ஏறக்கி போடுங்கள்!’’என்று.கொஞ்சம் காட்டமாகசொன்னார். அகத்தின் அழகு முகத்தில் தெரிந்தது. நாங்களே சோறுகறி சட்டிகளை தூக்கி வந்து ஒரு ஓரத்தில் வைத்து முடித்ததும் வேகமாக சமையல்காரர் ஓடி வந்து எல்லா சட்டிகளையும்திறந்து-திறந்து பார்த்துவிட்டு’படார்-படார்’மூடினார். ஏனோ அவர் மூடு [mood] சரியில்லை! ‘’ என்று நினைத்தேன்.

’’எத்தனை பேருக்கு சோறு கொண்டு வந்திருக்கிறீர்கள்?’’ என்றார்.

’’முப்பது பேருக்கு சோறு கொண்டு வந்திருக்கிறோம்!’’ என்றேன். 

’’ஹும் இது முப்பது பேரு திங்கிற சோறா இது? இருபது பேருக்கு கூட பத்தாதே! பாக்கிபேர் எதைத் திம்பார்கள்?’’என்றார்.

வீட்டில் சோறு ஆக்கிய சமையல்காரர் சட்டியில் சோறு வைத்தபோது ’’இது முப்பது பேருக்கு போதுமா?’’ என்று கேட்டேன்.’’

இதில் நாப்பது பேருக்கு மேலே சாப்பிடுறது சோறு இருக்கு. போற இடத்தில் கூடகொரச்ச இருக்கும். சோறு கொறஞ்சுட கூடாதேன்டு கூடவே வச்சு இருக்கேன். பயப்புடாமே கொண்டு போங்க!’’ என்றார்.

இங்கே இவரோ சோறு பத்தாது என்று வம்புக்கு வர்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நானும் என் நண்பரும் யோசனை பண்ணினோம். ‘கூட வந்த பையனையும் துணைக்கு வைத்து நாமே சோறு பறிமாறுவோம்’ என்ற முடிவுக்கு வந்தோம்.            இடையில் இந்த விவகாரங்களை எல்லாம் பக்கது வீட்டுககாரர் கவனித்துக் கொண்டிருந்தார்.

"நாங்களே சோறு பரிமாறி கொள்கிறோம் .நீ அங்கே போய் வாயே மூடிகிட்டு சும்மாகெட!" என்றேன்.

’’சோறு திண்ட தட்டையும் கழுவி வச்சுட்டு போகணும்’’ என்று சமையல்காரர் அதட்டலாக சொன்னான். 

எங்கள் கூட வந்த பய கொஞ்சம் மொரட்டு பய. ’’சொல்லுங்க காக்க! 

‘மூஞ்சி-மூஞ்சி’ண்டு நாலு குத்து வுட்டு அவன் மூக்கை ஒடைக்கிறேன்!’’ என்றான்.

’’வேண்டாண்டா வாப்பா! அப்பொறம் இந்தக் கடக்கரை தெருவான் வந்து மதறஸா ஆளுகளை அடிச்சு போட்டுட்டு போயிட்டானுவோ!’’ண்டு ஊரு முழுக்க செய்தி பறவிடும். ஒங்காலு ரெண்டையும் புடிக்கிறேன். கொஞ்ச நேரம் சும்மா இரு!’’ என்றேன். என் சொல் பேச்சு கேட்டு புள்ளே ’பதுவுஷசா ’கம்’முன்னு’ இருந்துட்டான்.

எதிர்த்த வீட்டிலிருந்து இங்கு நடப்பதைம் கவனிதுக் கொண்டிருந்தவர் எழுந்து வந்து மதர்ஸா வாசலில் நின்று எங்களை வெளியே கூப்பிட்டார்.

’’இவன் ஏன் உங்களிடம் வம்பு பண்ணி ஆத்திரப்படுகிறான் தெரியுமா?’’ என்றார்.

’’சலவாத் நாரியா ஒதுகிறவர்கள் பிள்ளைகளுக்கு சோறு சமைத்து கொடுக்கு பொறுப்பை இவனிடமே ஒப்படைத்து விட்டு இவன் போடும் சிட்டைப்படி பணத்தை கொடுத்து விட்டு போய் விடுவார்கள். அதில் பாதிக்குமேல் பணத்தை இவன் அடித்து விட்டு ஓதுகிற பிள்ளைகள் வைற்றில் அடித்து விடுவான். நீங்களே சோறு கொண்டு வந்து விட்டதால் உங்கள் மீது ஆத்திரப்பட்டு இப்படி நாய்போல் சீறுகிறான். அவனுக்கு அம்பதோ அறுபதோ கையில் திணித்து விட்டால் வாயே பொத்திகிட்டு வேலையே பார்ப்பான்!’’ என்றார். 

‘இதை முன்பே ஒழுங்கா சொல்லி இருந்தால் போனால் போகிறதென்று நூறே கொடுத்திருக்கலாம்..இப்பொழுது அம்பது தருகிறேன். கொடுதுப்பாருங்கள்! வாங்கினால் சரி! முரண்டு பண்ணினால் நாங்களே சோறு பரிமாறி கொள்கிறோம்’’என்றேன். பணத்தை வாங்கி கொண்டு போய் அவனிடம் ஏதோ சொன்னார்.அவர் திரும்ப வந்து

‘’நீங்கள் வீட்டுக்கு போங்கள்! நாளை காலை வந்து சட்டியே எடுத்து கொள்ளுங்கள். அவனே எல்லாத்தையும் பார்துக் கொள்வான்’’ என்றார்.

இஷா தொழுகை முடிந்ததும் ஒஸ்தாதும் அவருடன் கூட வந்து சலவாத் நாரியா ஓதிய லபையும் விடாகண்டரும் வந்தார்கள். மூவரையும் ஒரு சகனில் வைத்து நானும் என் நண்பரும் பரிமாறினோம்.

’’சோறு வேணுமா? சோறு வேணுமா?’’என்று கேட்டுகேட்டு பரிமாறினோம். ’கறிவேணுமா?/கறிவேணுமா?’’ என்று கூவிகூவி கேட்டு பரிமாறினோம்.

’’போதும் போதும்’’என்றே பதில் வந்தது. குறிப்பாக அந்த விடாகண்டரிடமும் கேட்டேன்

’’போதும்!’’என்றார்.

அல்லாஹ் உதவியினால் எல்லாம் நல்ல படியாகவே முடிந்தது. மறுநாள் காலை மதர்சாவுக்கு வண்டி அனுப்பி சோத்து சட்டி எடுக்க விட்டோம். சட்டிகள் நெளிந்துபோய் இருந்தது. இது சமையல் காரனின் கைவரிசை. இதோடு விட்டதா பிரச்னை? இன்னும் கேளுங்கள். காலை பத்து மணி சுமாருக்கு எங்கள் தெரு பட்டிமன்றத்திற்கு [தர்கா] போனேன். அங்கே ஒரு நபருடன் பேசிக்கொண்டிருந்தபோது வந்தாரையா விடாகண்டர். 

’’பாரூக்! ராத்திரி எனக்கு வந்த எறச்சி எல்லாம் ஒரே ஜவ்வா இருந்துச்சுப்பா! நல்ல எறச்சியை எனக்கு  கெடைக்கலேப்பா!’’ என்றார்.

‘’அல்லாஹ் ஆட்டையும் மாட்டையும் படைத்தபோது அவைகளுக்கு ஜவ்வு முள்ளு எல்லாத்தையும் வைத்துத்தான் படைத்திருக்கிறான். யார்யாருக்கு எதை கொடுக்க நாடினானோ அவர்களுக்கு அதை கொடுப்பான். அவன் கொடுப்பதை தடுப்பார் யாருமில்லை கிடைத்தவரை லாபம் என்று அல்லாஹ்வுக்கு நன்றி கூறு!’’என்றேன். 

‘’அதுக்கு சொல்லலேப்பா அடுத்த வாரம் பாக்கிர்மார்களுக்கு சோறு கொடுக்கும்போது, அவனிடம் எறச்சி வாங்காதே! ஒரே ஜவ்வும் எலும்பும் தண்ணியும் போட்டு  ஏமாத்தி காஸு வாங்கிடுறான்’’ என்றார்.

எறச்சிகாரருக்கும் இவருக்கும் எப்போதும் ஒத்து வராது. என்னை இவர் தன்னுடைய கட்டுபாட்டுக் கோட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறார் என்பது புரிந்தது. ‘’நரிக்கு இடம் கொடுத்தால் கெடைக்கு ரெண்டு ஆடு கேக்கும்’’ என்று நான் வேலை செய்த கடை முதலாளியின் வாக்கு என் காதுக்குள் ஒலித்தது. இனியும் இந்த நரிக்கு இடம் கொடுத்தால் கிடைக்கு ரெண்டு ஆடுஅல்ல ஒரு கெடையை கேக்கும் என்று நினைத்தேன். முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் முற்றியபின் ஆபத்து நமக்கே என்று என் உள் மனம் சொன்னது 

’’பாக்கிர்மார்கள் விருந்துக்கும் அவனிடமே இறைச்சி வாங்குவேன்! உன் கட்டளைபடியெல்லாம் நான் பணிந்து நடக்க முடியாது. நீ வந்தா வா! வரலேண்டா கவலை இல்லை’’ என்றேன்! 

இதைக் கேட்ட அவர் மூஞ்சி சுருங்கிப்போச்சு .அங்கிருந்து ’விசுக்’கென்று போய் விட்டார். இத்தோடு பிரச்சனை ஓய்ந்ததென்று நினைத்தேன்.அன்று மாலை ஐந்து மணி சுமாருக்கு தர்காவுக்கு காற்றுவாங்க வந்தேன். ஒஸ்தாதும் அவருடன் கூட வந்து சலவாத்நாரியா ஓதிய இன்னொரு லபையும் மற்றும் இரண்டொரு லபைமார்களும் ஜாமாத்காரர்களும் தர்கா எதிரே [பழைய ]புறாகூடு பக்கம் நின்று ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். 

நான் வருவதை பார்த்த ஒஸ்தாத்

’’அதோ! பாரூக் வருகிறார்!’’ என்ற ஒஸ்தாத்

’’பாரூக்! கொஞ்சம் இங்கே வாரியளா?’’என்றார்.

கூப்பிட்ட தொனியும் அங்கே நின்ற ஆட்களின் முகபாவங்களையும் வைத்து நான் மனக்கணக்கு போட்டு பார்த்த வகையில் வந்த விடை ‘நான் சாட்சி சொல்லும்’ அளவுக்கு ஒரு குற்றம் நடந்திருப்பதாக நான் உணர்ந்தேன். நான் அவர்கள் கிட்டே நெருங்கியதும் என்னை பார்த்து ஒஸ்தாத் 

’’ஆமாம்! சலவாத்நாரியாக்கு இவரை கூப்பிடாதீர்கள்’’ என்று நான் உங்களிடம் சொன்னேனா?’’என்றார். 

பிரச்னை என்ன என்பது எனக்கு புரிந்து விட்டது

’’யாஅல்லாஹ்! சோதனைமேல் சோதனை என்னை தொடர்ந்து வருதேன்னு?’’ என்னையே நொந்துகொண்டு

’’இல்லையே! நான் உங்களை கூப்பிட்டபோது நீங்கள்தானே ’அவரையும் கூப்பிடுங்கள்’ என்று என்னிடம் சொன்னீர்கள்’ என்று சொன்னேன் 

’’அவரை கூப்பிடாதீர்கள் என்று நான் உங்களிடம் சொன்னதாக நீங்கள்தான் அவரிடம் சொன்னீர்களாம்.’’என்று ஒஸ்தாத் சொன்னார்.

"ஏங்க! நான் அப்படி உங்களிடம் சொன்னேனா?’’என்றேன். பதில் இல்லை. தலை குனிந்து நின்றார். எனக்கு திருமணம் நடக்கும் தருவாயில் கடல்கரைதெரு லபைமார்களுக்கும் ஜமாதுக்கும் வக்கூப் போர்டு சம்பந்தமான ஒரு பிரச்சனையில் லபைமார்களை ’நீக்கி’ வைத்தார்கள். வழக்கமாக நிகாஹ் செய்து வைக்கும் லபைக்கு பதிலாக இவர் என் முன்னே உட்கார்ந்து ‘’இப்போ சொன்ன மஹருக்கு...... என்று ஆரம்பித்து எதை எதையோ சொல்லி ‘ஒப்புக் கொண்டேன்! ஒப்புக் கொண்டேன்! ஒப்புக் கொண்டேன்!’’ என்று சொல்லுங்கள்’ என்றார். மாப்பிள்ளையாகிய நானும் ஒரு கிளிப்பிள்ளையாகி’’ ஒப்புக் கொண்டேன்! ஒப்புக் கொண்டேன்!  ஒப்புக் கொண்டேன்!’’ என்றேன். ஆனால் அப்பொழுது சொன்னதுபோல இப்பொழுது இவர் சொன்ன இந்த படுதூறான செய்தியை நான் ’’ஒப்புக் கொள்ளவில்லை! ஒப்புக் கொள்ளவில்லை! ஒப்புக் கொள்ளவில்லை!’’ என்றதும் அங்குநின்ற எல்லோரும் சிரித்தார்கள் - பந்தி முடிந்தது!

S.முஹம்மது ஃபாரூக்

குறிப்பு : ஸலவாத் நாரிய என்பது புதினங்களில் (பித்அத்) ஒன்று இது நபி வழியல்ல, பழைய நினைவுகளை பகிர்ந்தளிக்கும்போது அதனைப் பற்றிய சுட்டல் இங்கு இடம் பெற்றிருக்கிறது.

முற்பகலும் - பிற்பகலும் 12

அதிரைநிருபர் பதிப்பகம் | January 07, 2015 | , , , , ,

ஞாபகம் வருதே - 1 [நிகழ்விடம் கோலாலம்பூர்]

ஒருநாள் காலை மணி 7.3o நான் தங்கி இருந்த வீட்டிலிருந்து பைக்கில் என் கடைக்குப் போனேன்.  நான் போன வழி கொஞ்சம் சுற்றுப்பாதை; அதோடு அந்த வழியில் காலை வேளையும் மாலை வேளையும் போக்குவரத்து அதிகம் இருக்கும் என்பதால் நான் அந்த வழியில் செல்வதில்லை. ஏனோ எனக்கே தெரியவில்லை அன்று மட்டும் ஏதோ யோசனையில் என்னையும் அறியாமல் அந்த வழியில் பைக்கை விட்டேன். போகும் போது கொஞ்சதூரத்தில் ரோட்டோரம் ஒரு இந்தியர் ஒருபைக்கைத் தள்ள முடியாமல் சிரமப்பட்டுத் தள்ளிக் கொண்டு போனார். பைக்கின் பின்பக்க கேரியரில் நிறைய செய்தி பத்திரிகை கட்டுகள் இருந்தது.

முன் பக்கத்திலும்கூட பத்திரிகை கட்டுகள் இருந்தது. அவர்அருகில் சென்று "ஏன் பைக்கைத் தள்ளிக் கொண்டு போகிறீர்கள்? ரிப்பேரா?’’ என்றேன். 

"இல்லே! பெட்ரோல் முடிஞ்சு போச்சுங்க! போடப் போறேன்!’’ என்றார். 


பெட்ரோல் பங்க் இருக்கும் இடம் கொஞ்சதூரம். போகும் வழியில் ஒரு உயரமான மேட்டில் பைக்கை ஏற்றி இறக்க வேண்டும். பைக்கிலும்   முன்னும் பின்னும் நியூஸ் பேப்பர் கட்டுகள் வேறு.  அவருக்கோ வயசு நாற்பத்து ஐந்து அல்லது ஐம்பது இருக்கலாம். ’பைக்கை பெட்ரோல் பங்குக்கு தள்ளிக் கொண்டு போவது சிரமம்’ என்று நினைத்தேன்.

"நீங்கள் கொஞ்ச நேரம் இங்கேயே நில்லுங்கள். நான் போய் பெட்ரோல் வாங்கிவர்றேன்’’ என்றேன். 50/# ரிங்கிட்டை என்னிடம் கொடுத்து நாற்பது ரிங்கிட்டுக்கு எண்ணெய் வாங்கினால் போதும்!’’ என்றார் [# மலேசிய நாணயத்தின் பெயர்] ”பணத்தை வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் கொண்டு வந்ததும் வாங்கிக் கொள்கிறேன். அதுவரை ஓரமாக பைக்கை போட்டு விட்டு அந்த மரநிழலில் நில்லுங்கள்!” என்று சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டேன். பத்து பதினைந்து நிமிசம் கழித்து எண்ணெயுடன் அங்கு சென்றேன். எண்ணெயை வாங்கி ஊற்றியபின் என் கையில் கேனை கொடுத்து 50# ரிங்கிட் நோட்டை என்னிடம் தந்தார். 

பாக்கி 10# ரிங்கிட்டை திரும்பக் கொடுத்தேன். அதை அவர் வாங்காமல் “’ஒன்றும் தப்பாய் எடுத்துக் கொள்ளதீர்கள். நீங்கள் எண்ணெய் வாங்க போன பெட்ரோல் செலவுக்காக இதை வைத்துக் கொள்ளுங்கள்” என்றார் .  

‘’இது மனிதனுக்கு மனிதன் செய்யும் சாதாரண உதவிதான். இது ஒன்றும் பெரிய உதவியல்ல! வைத்துக் கொள்ளுங்கள்” என்று பாக்கியை அவரிடமே கொடுத்து விட்டு புறப்படுங்கள், பேப்பர் போடணும் நேரமாகிறது” என்றேன்.

“அல்ஹம்துலில்லாஹ்! சமயத்தில் அல்லாஹ் உங்களை இங்கே அனுப்பி எனக்கு உதவி இருக்கிறான். இங்கே நான் உதவி தேடி நிற்பதை எத்தனையோ பேர் வேடிக்கை பார்த்துக் கொண்டேதான் போனார்கள். ஆனால், யாருமே உதவ முன்வரவில்லை. நீங்களும் எனக்கு உதவாமலிருந்தால் என் பேப்பர் டெலிவரி இன்னும் லேட்டாகும்! வாடிக்கைகாரர்கள் திட்டுவார்கள்” என்றார்.

“அல்ஹம்துலில்லாஹ்” என்று அவர் உச்சரித்ததை கேட்டு நான் திடுக்கிட்டேன். வைத்த கண் வாங்காமல் அவரையே பார்த்தேன். காது குத்தியதுக்கான துவாரம் அவர் காதில் இருந்தது. நான் ஒரு இஸ்லாமியன் என்று தெரிந்து கொண்ட அவர் என்னை திருப்தி படுத்த அவர் செவிவழி கேட்ட திருகுர்ஆன் வாசகங்களை என்னிடம் ஒப்பிக்கிறாறோ?” என்ற சந்தேகம் எனக்கு வந்தது. என் முகபாவனையிலிருந்து என் எண்ணத்தை புரிந்து கொண்ட அவர்” நானும் ஒரு முஸ்லிம்தான். முன்பு நான் ஒரு இந்து. என் இருபத்து ஐந்து வயதில் நான் இஸ்லாத்திற்கு மாறினேன். 

அதற்கு முன் நான் கொள்ளை, வழிப்பறி திருட்டு குற்றங்களுக்கு அடிக்கடி சிறை சென்றேன். ஒரு மலாய்க்கார சிறை அதிகாரி எனக்கு புத்திமதிகள் கூறியும் இஸ்லாமிய போதனைகளை அடிக்கடி எனக்கு சொன்னார். திருட்டு வழிப்பறி போன்ற கிரிமினல் வாழ்க்கையை விட்டு நல்லவழிக்கு வர என்னை தூண்டினார். நான் சிறையில் இருந்தபோது என்னிடம் கடுமையாக அவர் நடந்து கொள்ளவில்லை. அவரின் அன்பும் போதனையும் என் வாழ்க்கை திசையை மாற்றியது. இஸ்லாத்திற்கு மாறி வந்தேன். 

என்னை அவர் ஒரு மனிதனாக்கினார். இப்பொழுது என் பெயர் இலியாஸ் பின் அப்துல்லா. முன்பு காளிமுத்து!” என்று தன் அடையாளக் கார்டை காட்டினார்.

’’பேப்பர் போடணும்! நேரமாகுது, உங்கள் நேம்கார்டை கொடுங்கள். ஒரு நாளைக்கு உங்கள் இடத்திற்கு வந்துநான் இஸ்லாத்திற்கு மாறிய சூழலையும் சொல்கிறேன்’’என்றார்.

’’அஸ்ஸலாமு அலைக்கும்’’ சொல்லி அங்கிருந்து பறந்தார்.  

இது நடந்து மூன்று மாதத்தில் நான் வியாபாரம் செய்த இடமும் தங்கும் இடமும் மாறியது. பழைய இடத்துக்கு அவர் வந்தாரா? இல்லையா என்பது தெரியவில்லை! அவர் முழுக்கதையும் கேட்க வாய்ப்பு இல்லாமல்போனது.

அன்று காலை நான் வெகுதொலைவில் உள்ள ஊர்களுக்குச் சென்று என் வாடிக்கையாளர்களிடம் சப்ளை செய்த புத்தகங்களுக்குப் பணம் வாங்க வேண்டும். ஆனால், எதிர்பாராமல் இங்கே எனக்கு வேறு ஒரு வேலை வந்து விட்டதால் வெளியூர் போகும் வேலையை என்னிடம் வேலை செய்யும் மலாய்க்கார பையனிடம் கொடுத்தேன். நேற்று வேனுக்கு 35# ரிங்கிட்டுக்கு பெட்ரோல் போட்டு கொஞ்ச தூரமே ஓடியதால் மீதமுள்ள எண்ணெய் அந்த ஊருக்கு கிட்டத்தட்ட போகவர போதும். இருந்தாலும் போகுமிடத்தில் ஏதும் முன்பின் எதிர்பாராமல் ஆகலாம்’ என எண்ணி அவனிடத்தில் 50# ரிங்கிட் கொடுத்து “பத்து ரிங்கிட் உன் சாப்பாட்டுக்கு எடுத்துக் கொள். பாக்கி பணத்தில் எண்ணெய் போட்டுக் கொள்!’’ என்று சொல்லியனுப்பினேன். 

ஏற்கனவே வேனில் போகவர ஓரளவு எண்ணெய் இருக்கிறது. அப்படியே அது போதாமல் போனாலும்  திரும்ப வர இன்னும் ஐந்து ரிங்கிட்டுக்கு போட்டால் போதும். பெரும்பாலும் மலேசியாவில் டிரைவர்கள் முப்பது ரிங்கிட்டுக்கு பெட்ரோல் போட்டு நாற்பது ரிங்கிட்டுக்கு பில் கொண்டு வருவார்கள்.   இவனும்  அப்படிப்பட்ட ஆசாமியா என்பதை தெரிந்து கொள்ள ஏற்கனவே வேனில் பெட்ரோல் இருப்பதை அவனிடம் காட்டிக் கொள்ளாமல் அவன் திருடுகிறானா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள இந்த தந்திரத்தைக் கையாண்டேன். 

முப்பது ரிங்கிட்டு எண்ணெய் போட்டு நாற்பது ரிங்கிட்டுக்கு பில் கொண்டு வரும் திருட்டுத்தனத்தை மனசாட்சியின் கண் கொண்டு பார்த்தால் அது திருட்டுமல்ல; பொய்யுமல்ல; மனசாட்சிக்கு எதிரானதுமல்ல என்று எண்ணத் தோன்றுகிறது*. ஏனெனில் ’சைலாக்’ போன்ற ரத்தம் குடிக்கும் தமிழ் முஸ்லிம் முதலாளிகளுக்கு அப்படி செய்வதில் தவறில்லைதான்; ஏனெனில் ஒரு நாளைக்கு காலை எட்டு மணியிலிருந்து இரவு ஒன்பது-பத்து வரை [சில கடைகளில் காலை ஆறு மணிக்கே வேலை தொடங்கும்] வேலையாட்களின் ரத்தத்தை உறிஞ்சி குடித்து [Sunday & public Holiday மட்டும் ’பெரிய’ மனசு பண்ணி அரை நாள் லீவு கொடுக்கும் ’தர்மவான்’ முதலாளிகளுக்கு இப்படி செய்வதில்’ தவறில்லையோ என்று ஆதங்கமாக இருக்கும்.!’ (இருப்பினும் ஒரு தவறுக்கு பதில் தவறு தீர்வாகாது;மார்க்கமும் அனுமதிக்காது*).

முப்பது ரிங்கிட் பில்லை நாற்பது ரிங்கிட்டாக மாற்றி பில்லுக்கு பத்து ரிங்கிட் கமிஷன் அடித்தால் தான் சம்பளகாரன் பிழைப்பு ஒருவழியாய் ஓடியடையும். ஆனால், நான் அவர்களைப் போல் வேலை செய்யும் ஆட்களின் ரத்தத்தை பிழிந்து குடிக்கவில்லை. காலை 8.30 மணிக்கு வேலை தொடக்கம். ஒரு மணி நேரம் சாப்பாட்டுக்கு. மணி 2 to 5.30 வரை வேலை. சனிக்கிழமை பகல் ஒரு மணியோடு வேலை முடிந்தது.

நான் வெளியூருக்கு அனுப்பிய மலாய்கார பையன் வேலைகளை முடித்து கோலாலம்பூர் திரும்பிவர அதிகபட்சம் மாலை மணி 6.30 அல்லது இன்னும் அதிகமானால்கூட மணி 7.30குள் வந்தாக வேண்டும். ஆனால் கடிகாரமோ எட்டு, எட்டரை, எட்டே முக்கால், என்று முள்ளை ‘டிக்-டிக்’ என்று நகர்த்தி தன் கடமையில் கண்ணா இருந்தது. கடிகார முள் ஓட ஓட என் நெஞ்சுக்குள் பீதியும் படபடப்பும் அதிகரித்தது. 

துணை யாருமில்லாமல் ஒரே ஒருவன் மட்டுமே போயிருக்கிறான்.   விபத்து ஏதும் ஏற்பட்டு   விட்டதோ?  உயிருக்கு ஏதும் ஆபத்தோ?’’ என்ற அச்சம் என்னை அலைக் கழித்தது. என் கவலையறியாத கடிகாரமோ கொஞ்சங்கூட இரக்கமே இல்லாமல் தன் கருமமே கண்ணா இருந்தது. கொந்தளிக்கும் கடலில் சிறு துரும்பென என் மனமோ தத்தளித்து- தடுமாறியது.  மணி பத்தரை. கடை வாசலில் ஒரு வேன் வந்து நின்றது. ஆவலோடு உற்றுப் பார்த்தேன். அது என் வேன் அல்ல. 

வேன் கதவை திறந்து கொண்டு ’’பாரூக் அண்ணன்!’’ என்று ஒருவர் என்னை கூப்பிட்டுக் கொண்டே இறங்கினார். அது எங்கேயோ நான் கேட்ட பழக்கமான குரல். நான் வெளியே வந்து பார்த்த போது நீண்டகாலம்  என் கடை அருகில் மளிகைக்கடை வைத்திருந்தவர் வந்து கொண்டிருந்தார். தற்போது வெகுதூரத்தில் சூப்பர் மார்கெட் வைத்திருக்கிறார். ஊர் வேதாரணியம்  அருகில்  உள்ள தோப்புத்துறை. நான் சொந்த தொழில் ஆரம்பித்தபோது எனக்கு பலவகையில் உதவியவர். தற்போது நான் வைத்திருக்கும் Vanகூட முன் பணம் கட்டாமலே வாங்கித் தந்து உதவியவர். எங்கோ பிறந்தவர்!  எங்கோ வளர்ந்தவர்! பிழைக்கப் போன  நாட்டில் அறிமுகமாகி சொந்த சகோதரன் போல் எனக்கு பலதடவை கைகொடுத்து உதவிய மனிதன்! 

‘’பாரூக் அண்ணன்! நான் கிள்ளான்# [கிள்ளளான் கோலாம்பூருக்கு கிழக்கே சுமார் 40km தூரமுள்ள துறைமுக நகர்] போய் விட்டு வரும் வழியில் ஒரு வேன்ரோட்டு ஓரத்தில் நிற்பதை பார்த்தேன். கொஞ்ச தூரம் வந்தபின்’ அது உங்கள் வேனாக இருக்கலாமோ? ஏதும் ரிப்பேறோ?’ நீங்கள் தான்தனியே நிற்கிறீர்களோ?’’ என்ற சந்தேகம் வந்தது.

உங்கள் வேன் நின்ற இடத்திலிருந்து நான் வெகுதூரம் வந்து விட்டதால் வேகமாக கார்களும் லாரியும் போகும் அந்த ஹைவேயில்  ரிவர்சில் போக முடிவில்லை. வெகுதூரம் போய் U-டேர்ன் எடுத்து அங்கே போனேன். உங்கள் பையன் நின்று கொண்டிருந்தான்”

அவனிடம் “என்ன விஷயம்? ஏன் இந்நேரத்தில் இங்கே  நிற்கிறாய்? ஏதும் ரிப்பேரா?’ ’என்றுகேட்டேன். ’’ இல்லை! எண்ணெய் முடிஞ்சு போச்சு!’’ என்றான். 

“வரும் வழியில் தான் நிறைய பங்க் இருக்கிறதே! போட்டால் என்ன?  காசு இல்லையா?’’ என்றேன். 

“காசு தந்து இருக்கிறார் போட மறந்து போச்சு’’என்றான்.

காசை வாங்கி எண்ணெய் வாங்கிக் கொடுத்தேன். 

‘’நேரமாகி விட்டதால் கடைக்கு வந்து கணக்கு கொடுத்து விட்டு என் வீட்டுக்கு திரும்ப பஸ் இல்லை. நான் வேனிலேயே  வீட்டுக்கு போகிறேன். நாளைக்கு வருகிறேன் எனக்காக கடையில் காத்திருப்பார் சொல்லி விடுங்கள்.” என்றான்.

“அதோடு இந்த பையை உங்களிடம் கொடுக்கும்படி தந்தான். வசூல் செய்த பணம் இதில் இருக்கிறதாம்’’ என்றான். 

இதைக் கேட்ட என் மனம் அமைதியானது. 

“உங்களுக்கு ரெம்போ சிரமம் தந்துவிட்டேன். எனக்காக ரொம்ப சிரமம் எடுத்து இருக்கிறீர்கள். இந்த உதவியை நான் மறக்கமுடியாது. ரொம்போ நன்றி!’’ என்றேன்.

“என்ன ஃபாரூக் அண்ணன்! நன்றி கின்றி’ என்றெல்லாம் பெரிய பெரிய வார்த்தைகள் சொல்கிறீர்கள்? மனிதரா பிறந்து விட்டு இன்னொரு மனிதருக்கு இதெல்லாம் செய்யாமல் வேறு எதைத்தான் அங்கே அள்ளிக் கொண்டு போகப் போகிறோம்?’’என்றார்.

’’அஸ்ஸலாமு அலைக்கும் போய் வருகிறேன்’’ என்று போய் விட்டார்.  

அன்று காலை பேப்பர் காரருக்கு நான் செய்த உதவியின் பிரதிபலிப்பே இன்று இரவு அந்த தோப்புத்துறை காரரை அல்லாஹ் அனுப்பி உதவி இருக்கிறான்.

புகழ் அனைத்தும் அல்லாவுக்கே.!

இந்நினைவு என் மனம் விட்டு நீங்காத பசுமரத்து ஆணி போல் பதிந்து விட்டது. 

S.முஹம்மது ஃபாருக்