Showing posts with label A.R.அப்துல் லத்தீஃப். Show all posts
Showing posts with label A.R.அப்துல் லத்தீஃப். Show all posts

சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை - 7 17

அதிரைநிருபர் பதிப்பகம் | December 05, 2012 | , ,


அதுதான் 'தயம்மும் கல்' என்று ஒரு சிறு பாறை போன்ற கல், வருபவர்கள் அதில் தயம்மும் செய்கிறார்கள். தூய மண்ணில் தயம்மும் செய்ய நாம் இறைத் தூதர் அவர்களால் ஏவப்பட்டுள்ளோம். நிர்பந்த அடிப்படையில் சுவர், தாரை போன்றவற்றில் தயம்மும் செய்யலாம் என மார்க்க அறிஞர்கள் rulings எடுக்கிறார்கள்.

ஆனால், இதற்காக வேண்டி ஒரு கல்லையே பள்ளி வாசலில் அமைத்தால், அல்லது வீடுகளில் வைத்துக் கொண்டால், அது சிலை வணக்கத்திற்கு மறைமுகமாக, தூண்டுகோலாக அமையாதா? சுப்ஹானல்லாஹ்! இதைப் பற்றி லண்டனில் வசிக்கும் நமது ஊர்ச் சகோதரர்கள், அங்குள்ள இஸ்லாமிய அமைப்புகளைத் தொடர்பு கொண்டு ஹீத்ரோ விமான நிலைய அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லி, அதை அகற்ற ஆவண செய்யும்படி வேண்டுகிறேன்.


இதே போன்று, வேறு எங்கு இருந்தாலும், அவைகளை அப்புறப்படுத்த நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சில ஆன்லைன் சாப்பிங் இணைய தளங்கள் (முஸ்லிம்களால் நடத்தப்டுபவைகள்) தயம்மும் கல், தயம்மும் மண் என்று விற்கின்றன. அவைகளையும் அவ்வாறு விற்கக் கூடாது என நாம் அறிவுறுத்த வேண்டும்.

லண்டன் ஹீத்ரு விமான நிலையத்திலிருந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் டல்லாஸ் நோக்கிப் புறப்பட மீண்டும் 10:30 மணிநேரப் பயணத்தால் உடல் அயர்ந்து போனேன்.

டல்லாஸ் (Dallas) ஏர்போர்ட் டெக்சாஸ் இமிகிரேஷன் முடிந்து, கஸ்டம்ஸ் வந்தேன், எல்லாவற்றையும் பிரித்துப் போட்டு விட்டார்கள், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொண்டு வந்த மசாலா வகைகள், அல்வா, பனியாரம், ஊறுகாய் வகைகள் சிதறிக் கிடக்க சிலவற்றை கழிவு கூடைக்கும் (Garbage) போக, ஊரிலிருந்து கூடுதல் லக்கேஜுக்கு என்று ருபாய் 8,000 கட்டி எடுத்து வந்ததை (152/- டாலர்) இங்கு வந்ததும் தூக்கி எறிகிறானே என்ற ஆதங்கம் ஒருபக்கம், மறுபுறம் நான் வேறு டெர்மினல் மாறி டிரெயின் மூலம் சான்பிரான்சிஸ்கோ செல்லும் விமானத்தை பிடிக்க வேண்டும்.

என்ன செய்வது !? கஸ்டம்ஸ் அதிகாரி சொன்னான் "உனக்கு உன் கவலை எனக்கு என் டூட்டி" என்று, அதுவும் சரிதானே ! இதற்கு கவலைப்பட்டு என்ன ஆகப் போகிறது.

உண்மையான வலிமையான இமிகிரேஷன், கஸ்டம்ஸ் ஆபிசர்கள் என்று நம்மை விசாரிக்க இருக்கும் மலக்குகளை விடவா ? இது முக்கியம் ! அந்த விசாரிப்புகளில்தான் உண்மையான பாஸ் / ஃபெயில் இருக்கிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அந்த மலக்குகளின் விசாரிப்புக்களில் பாஸாகி ஏக இறைவனின் மன்னிப்புக்கும், அருளுக்கும் உரித்தானவர்களாக நம்மை ஆக்குவானாக ஆமீன் !

அடுத்த டெர்மினல் சென்றடைந்ததும், பிளைட் புறப்பட 1/2 மணி நேரமே இருந்தது. ஏறி அமர்ந்தவுடன், ஆசுவாசப்படுத்திக் கொள்ள சான்பிரான்சிஸ்கோ நோக்கிய பயணம் துவங்கியது.

சுமார் 3 1/2 மணி நேரப் பயணத்தில் சான்பிரான்சிஸ்கோ விமான நிலையம் அடைந்து வெளியே வந்தேன். அல்லாஹ்வின் உதவியால், அழைத்துச் செல்ல மச்சானும், மகனும் வந்திருந்தார்கள்.

மீண்டும் அமெரிக்க மண்ணை மிதித்தவுடன் என் மகள் ஒருவாரமாக புலம்பிக் கொண்டிருந்தது இதயத்தில் அழுத்த சோகம் என்னை ஆட்கொண்டது, "வாப்பா உங்களை தேடுவேன்" இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.
நிறைவுற்றது.
A.R.அப்துல் லத்தீஃப்

சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை... - 5 17

அதிரைநிருபர் பதிப்பகம் | November 20, 2012 | ,


நம்மவர்களுக்கே உரித்தான விருந்தோம்பல், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்தும். விருந்தாக யாராவது மீன் உணவு அல்லது வெறும் காய்கறி உணவு என தரமாட்டார்களா? ஏக்கம் !


எல்லோரும் சொல்லி வைத்தார் 'மே மே'யும் 'பே பே'யும் சாப்பாட்டுக்கு துணைக்கு வைத்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். எல்லாம வல்ல அல்லாஹ் அவர்களின் விருந்தோம்பலுக்கு மிகச் சிறந்த கூலி தருவானாக !


ஊர் நன்றாக வளர்ந்து விட்டது ! சகோதரர்களின் பைக்கில் ஊரை வலம் வந்தேன், விவசாய நிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாறிப் போயிருந்தன. பள்ளி வாசல்கள் பெருகிவிட்டன மாஷா அல்லாஹ் !

என்னால் முடிந்த அளவு சுமார் 17 பள்ளிவாசல்களில் தொழுதேன். எல்லாப் பள்ளிகளிலும் ஒன்றை நன்றாக கவனிக்க முடிந்தது. அது மனதை கரைத்தது கனக்க செய்தது. 

தொழுகையில் சஃபில் ஒழுங்கு இல்லை, ஒவ்வொருவர் பாதத்திற்கிடையே நிறைய இடைவெளிகள் காண முடிந்தது. ஆறுதலான விஷயம் தக்வா பள்ளி. இங்கு மட்டுமே ஹதீஸ் எப்படி போதிக்கிறதோ அப்படி சஃபில் நெருக்கமாக நின்றார்கள். இதன் முக்கியத்துவத்தை இமாம் எடுத்துச் சொன்னால் நலமாக இருக்கும்.

கவனத்தில் கொள்ளவேண்டியது:


உங்கள் ஸஃப்பை சீர்படுத்திக் கொள்ளுங்கள், நிச்சயமாக ஸஃப்பை சீர்ப்படுத்திக் கொள்வது தொழுகையை முழுமைப்படுத்தக்கூடிய விஷயங்களில் ஒன்றாகும் என நபி (ஸல்) கூறினார்கள்: (புகாரி, முஸ்லிம்)

புகாரியின் அறிவிப்பில்: ஸஃப்பை சீர் செய்வது தொழுகையை நிலைநாட்டும் விஷயங்களில் ஒன்றாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புகாரியின் மற்றொரு அறிவிப்பில்: (ஸஃப்பில் நிற்கும்பொழுது) எங்களில் ஒருவர் தம் தோள்பட்டையை அருகிலுள்ளவரின் தோள்பட்டையுடனும், தம் பாதத்தை அவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொள்வோம் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

ஊரில் ஹைதர் அலி ஆலிம், சித்தீக் பள்ளி விஷயம் பரவலாகப் பேசப்படுவதை அவதானிக்க முடிந்தது. இதற்கு ஒரு சுமூக, ஒரு நல்ல தீர்வு கிடைக்க அல்லாஹ் அருள் புரிய வேண்டும்.

ஊரில் அஹ்மது சாச்சா, இபுராஹீம் அன்சாரி காக்கா, சகோதரர்கள் தாஜுதீன், லெ.மு.செ.அபூபக்கர், சேக்கனா நிஜாம், இப்ராஹிம் மவ்லவி இன்னும் பலரை சந்தித்து உரையாடியதில் உவகை கொண்டேன்.

இன்னும் எல்லாத் தெருக்களிலும் குப்பைகளும், கூலங்களும் நிரம்பி இருந்ததை பார்க்கும் போது வேதனையாக இருந்தது.

செக்கடிக் குளத்தில் ஒரு ஹெர்பல் பூங்கா அமைக்கலாம் என்ற நல்ல யோசனையை என் உறவினர் (புகாரி மச்சான் அவர்கள்) சொன்னார்கள். சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் கவனிக்க வேண்டும். இரண்டு பள்ளிகளும், வீடுகளும் சுற்றி இருந்தது போன்ற ஒரு அமைப்பு ஊரின் செக்கடிக் குளத்திற்கே இருக்கிறது.

மக்களிடையே சுகாதார விழிப்புணர்வு அவசியம் தேவை. இது விஷயத்தில் பேரூராட்சி மன்றத் தலைவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பது மிக அவசியம். அதிரை பைத்துல்மால் நிர்வாகம், பிளாஸ்டிக் ஒழிப்பின் அவசியம் குறித்து மார்க்கெட்டில் விழிப்புணர்வு பயணம் செய்தமை பாரட்டுக்குரிய ஒன்றாகும்.

அஹ்மது சாச்சாவை பார்க்கும்போது ஒரு புத்தகம் தந்து படிக்கச் சொன்னார்கள் "The miserable revolution" என்பது அந்த புத்தகத்தின் பெயர். இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாத்திற்கு எதிரான முறையில் ஆட்சி செய்த கொமேனியின் கொடுங்கோன்மை ஆட்சி குறித்தும், அவர் செய்த அட்டூழியம், இரான் இராக் போர் ஏன் ஏற்பட்டது என்ற விவரம் அடங்கிய நூல் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல் எனில் அதில் மிகையில்லை. அஹ்மது சாச்சா அவர்களை அவர்கள் வீட்டில் சந்திக்கும்போது நான் கேட்ட்து "இதுதான் உங்கள் ஓய்வுக் கூடமா?" என்று, உடனே அவர்கள் சொன்னார்கள் "அல்ல இது அடியேனின் ஆய்வுக் கூடம்" என்று.

எப்படி நாட்கள் வேகமாக நகர்ந்தது என்று தெரியவில்லை மீண்டும் புறப்படும் நாள் நெருங்கியது...
தொடரும்...
A.R.அப்துல் லத்தீஃப்

சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை... - 4 15

அதிரைநிருபர் பதிப்பகம் | November 13, 2012 | ,

தொடர் - 4

விமானம் சென்னை விமான நிலையத்தை தொட்டதோ இல்லையோ நம் தமிழ் ‘குடி’மகன்கள், எல்லோரும் ஓட்டப் பந்தய வீரர்கள் என்ற நினைப்பில் பந்தயத்துக்கு தயராக, விமானமோ ஓடுதளத்தில் இன்னும் ஓடிக் கொண்டிருந்தது.

சென்னை விமான நிலையம் இன்னும் மாறவில்லை அதே வெந்தயக் கீரை மணம், தூசு படிந்த சன்னல்கள், ஒழுங்கில்லாத மேசை நாற்காலிகள்.


இமிகிரேசன் கவுண்டரில் நாம் சொன்ன ஹலோவுக்கும், அங்கிருந்து நகரும்போது சொன்ன நன்றிக்கும் எவ்வித சலனமும் இல்லை அந்த அதிகாரியிடமிருந்து பதிலும் இல்லை. எல்லோருக்கும் இதே கதிதான் ஏதோ எந்திரத்தனமாக முடிந்தது.


கஸ்டம்ஸில் எதுவும் கேட்கவில்லை நல்ல விதமாக மரியாதையாக நடந்து கொண்டார்கள். அவர்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்ல வேண்டும் யாரையும் துன்புறுத்தவில்லை. எல்லாம் இறைவன் அருளால் நலமாக முடிந்து வெளியில் வந்தோம். குடும்ப உறுப்பினர்கள் சகிதமாக வரவேற்று அழைத்து சென்றனர்.

மெட்ராஸ் என்ற பெயரைக் கேட்டவுடன் மனம் புளகாங்கிதம் அடையும் முயற்சிக்கு ஏற்ற உயர்வுக்கு வழி உள்ள இடம். முயற்சித்த எவரும், அல்லாஹ்வின் அருளால் சோடை போகாத இடம் நான் ஹையர் செகண்டரியும், கல்லூரியும், படித்தாலும், சகோதரர்களோடு இணைந்து உழைத்த இடமும் சென்னையே!


அந்த சென்னை ரொம்பவும் மாறிவிட்டது. அடுக்குமாடிகளும், பாலங்களும் என்று, ஆனால் மாறாமல் இன்றும் இருப்பது குப்பைகளும், தூசுகளும் சாலை விதிகளை பேனாத மக்களும். என்ன செய்வது அதுதான் இந்தியாவின் ட்ரேட் மார்க் ஆயிற்றே ! சென்னையில் 4 நாட்கள் உறவினர்கள் வீட்டில் தங்கி விட்டு அதிரை நோக்கி எங்கள் பயணம் ஆரம்பமானது.

நாங்கள் சென்ற டிரவேரா அதிரையின் தெருக்களில் நுழைந்து வீட்டில் வெளியே நின்றது. தாய் தந்தையைக் கண்டவுடன் அன்று தான் பிறந்தது போன்ற ஒரு உணர்வு நெஞ்சம் பனித்தது. சொந்தக்காரர்கள் சுற்றி நிற்க ! எங்கும் மகிழ்ச்சி வெள்ளம் ! அல்லாஹ் அக்பர் ! அல்லாஹ் அக்பர் !.


எங்கள் செக்கடிப்பள்ளி, முகைதீன் ஜும்ஆ பள்ளியின் இஷாவுக்கான பாங்கோசை கேட்டவுடன் மெய்மறந்தேன். அமெரிக்காவில் எந்த மதத் தளத்தின் சப்தமும் வெளியே வரக்கூடாது என்பது அந்நாட்டு சட்டம் நம் இறை இல்லத்தின் அழைப்பை எனக்குள் ஈமானின் உத்வேகம் அளித்தது.

தொடரும்...
A.R.அப்துல் லத்தீஃப்

சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை... - 3 16

அதிரைநிருபர் பதிப்பகம் | November 06, 2012 | , ,


கண்ட அதிர்ச்சி கண்ணிலிருந்து அகல மறுத்தது, அதுதான் சாக்கடை தண்ணீரும், பேப்பர் குப்பைகளும் !? சிங்கப்பூரா இது !? ஆச்சர்யமாக இருந்தது. சிங்கப்பூர் தெருக்களில் சோறு உண்ணலாம் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றா ? ஆச்சரியம் தாங்க இயலவில்லை, அவைகளை கிளிக்கிக் கொண்டேன். சரி சரி அவர்களும் சராசரி மனிதர்கள் தானே!.


மீண்டும், உடனே டாக்சி எடுத்துக் கொண்டு டெர்மினல் 2 வந்து சேர்ந்தோம். சிங்கப்பூர் வெள்ளி 20/-ஐ கொடுத்து விட்டு, அடுத்த பயணத்துக்கு இன்னும் நேரம் மிச்சம் இருந்ததால். சாங்கை விமான நிலையத்தையே அளந்தோம். மிக நேர்த்தியான முறையில் கட்டப்பட்டிருந்தது. எமிக்ரேஷன் மற்றும் கஸ்டம்ஸில் சில தமிழ் முகங்கள்.

இரவு மணி 08:20 சென்னை நோக்கிய எங்கள் பயணம் தொடர்ந்தது. இந்தியாவிற்கு நீண்ட நாட்கள் கழித்து வரும் நினைவுகள், கனவுகள் எனக் கழிந்தன ஆனால் சிங்கப்பூரில் விமானத்தில் ஏறிய தமிழ் ‘குடி’மகன்களின் அட்டகாசம்தான் தாங்க முடியவில்லை. விதவிதமான கலர் பாட்டில்கள் அடைத்து வைத்திருந்த 'சரக்கு'களை ஒற்றை விரல் காட்டி, கேட்டு குடித்தனர். ஒன்றுக்கு இரண்டாக! 'ஓ' வென்ற சப்தம் வேறு! எப்போதுதான் இந்த 'குடி'மகன்கள் திருந்துவார்களோ ?


ஒரு வித்தியாசத்தை நன்றாக உணர முடிந்தது. சான்பிரான்சிஸ் கோவிலிருந்து புறப்பட்ட விமானத்தில் அமெரிக்காவிலும், மற்ற ஆசியர்களும் இருக்கத்தான் செய்தனர் ஆனால் 90 சதவிகிதமானோர் ஆரஞ்சு, ஆப்பிள், ஜூஸ்களையே வாங்கி அருந்தினர் எவ்வித சத்தமும் இல்லை. எல்லாம் அமைதியாக இருந்தது. ஆனால், சிங்கப்பூர் - சென்னை விமானத்தில்தான் இந்த களோபரம்.

நாங்கள் எங்கள் பயணத்துக்கு முன்னரே இந்தியன் வெஜிட்டேரியன் என்று புக் செய்திருந்தோம். அதனால் எங்களுக்கு சென்னை வரை தோசை, இட்லி, வடை, சாம்பார் சாதம், காய்கறி, கனிகள், ஐஸ்கிரீம் என்று நல்ல சாப்பாடு அல்ஹம்துலில்லாஹ்.

விமானம் சென்னையை நெருங்கி விட்டது புள்ளிகள் பெரிதாகி அதோ அறிஞர் அண்ணா சர்வதேச விமான நிலையம் தெரிகிறது.

ஒருமுறை சகோதரர் ஜாகிர் ஹுசைன் எழுதியது ஞாபகத்திற்கு வர அட! அது நிஜமாக நடந்தேறியது! அது நம் ரத்தத்தில் ஊறியது என்று கமெண்ட்டும் ஞாபகத்திற்கு வருகிறது
தொடரும்
A.R.அப்துல் லத்தீஃப்

சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை... - 2 36

அதிரைநிருபர் பதிப்பகம் | October 31, 2012 | , , ,

தொடர் - 2

மகள் சொன்னதை கேட்டு பதறிய எனக்கு ஞாபகத்திற்கு வந்த இந்த குர்ஆன் வசனத்தை என் மகள்களுக்கும், மனைவிக்கும் சொன்னேன்.

بسم الله الرحمن الرحيم

   أَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ مُسَخَّرَاتٍ فِي جَوِّ السَّمَاءِ مَا يُمْسِكُهُنَّ إِلَّا اللَّهُ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ

"வான(மண்டல)த்தின் (காற்று) வெளியில் (இறை கட்டளைக்குக்) கட்டுப்பட்டு பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) தாங்கி நிற்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை; நிச்சயமாக இதில் ஈமான் கொண்ட மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன." - அல்குர்ஆன் - 16:79

ஆகையால், இந்த அலுமினியப் பறவை விழுந்து விடாமல் காப்பவனும் அல்லாஹ்வே என்று ஆறுதல் கூறினேன்.

விமானம் சென்று கொண்டே இருந்தது, விமானத்தின் திரையில் சான்பிரான்சிஸ்கோ புறப்பட்டு, கனடா எல்லை வரை சென்று - ஜப்பானின் டோக்கியோ மேலே (பசிபிக் மேலே) பறந்தது விமானம். நீண்ட பயணத்தின் முதல் கட்டமாக ஹாங்காங் வந்து சேர்ந்ததை காட்டிக் கொண்டே வந்தது (சுமார் 14 மணிநேரப் பயணம்). இடையிடையே நேரத்தைக் கணித்து இருக்கையிலேயே தொழுது கொண்டோம். பிறகு 1 1/2 மணிநேர இடைவெளியில் மீண்டும் பயணம் சிங்கப்பூர் நோக்கி. சிங்கப்பூர் வந்தடைந்தபோது வெள்ளிக்கிழமை காலை 11:20 மணி.


சிங்கப்பூர் நெருங்க, நெருங்க பச்சைப் பசேல் என்ற பசுமையான போர்வைக்குள் அழகான குட்டிக் குழந்தை தூங்குவது போல் கண்களுக்கு தெரிந்தது இந்த சிங்காரச் சிங்கப்பூர்.

அன்று ஜும்மா தினம் இன்ஷா அல்லாஹ் ஜும்ஆ தொழ வேண்டும் என்கிற எண்ணம் அலைமோதியது, அடுத்த சென்னை ஃபிளைட் இரவு 08:30 மணிக்குத்தான். எனவே, டெர்மினல் மாறினோம் வெளியில் செல்ல இமிக்ரேஷன் முடிக்க வேண்டும். அமெரிக்க பாஸ்போர்ட்களுக்கு சிங்கப்பூர் விசா எடுக்க வேண்டிய தேவையில்லை. இமிகிரேஷனில்! நான் ஒரு நாள் மட்டும் விசா போதும் என்றேன், மூன்று மாதங்களுக்கு தந்தார்கள்.

அந்த பிரமாண்டமான சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் ஈத் பெருநாளைக் குறிக்கும் வண்ணம் அழகாக ஜோடித்திருந்தார்கள்.


Money exchange சென்று சிறிது சிங்கப்பூர் டாலர் மாற்றிக் கொண்டு வெளியில் வந்தோம். லேசான தூறல் ஆரம்பித்திருந்தது, ஏர்போர்ட் வாசலில் ரெடியாக இருந்த டாக்ஸியில் ஏறி சிறிது முஸ்தபா செண்டர் வந்தடைந்தோம். சிங்கப்பூர் வெள்ளி 21.40 வந்தது அதைக் கொடுத்து விட்டு அருகில் பள்ளிவாசல் இருக்கிறதா ? என்று விசாரித்தோம்.

''அங்குளியா மஸ்ஜித்" இருக்கிறது என்று சொன்னார்கள். அங்கு சென்றபோது தமிழில் பயான் நடந்து கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் தமிழ் பேசும் முஸ்லிம் பெருமக்கள் நிம்மதியாக 'ஜும்ஆ" தொழுதுவிட்டு, அருகில் உள்ள ஹலால் ரெஸ்டரண்டில் பகல் உணவை முடித்துக் கொண்டு, அங்கேயிருக்கும் கடைகளில் சில பொருட்களை வாங்கினோம். சிங்கப்பூர் விலைவாசி பற்றிய என் கருத்து 'பல பொருட்கள் இந்தியா, அமெரிக்காவை விடவும் அதிகமாகவே இருந்தது. அமெரிக்காவிலிருந்தே தேவையான பொருட்களை வாங்கி வந்து விட்டதால் இங்கு வேறு அதிகமாக வாங்காமல் திரும்பிவிட்டோம்.

இனி ஏர்போர்ட்டுக்கு போகலாம் என வெளியிலே வந்தபோதுதான் கண்ணில் பட்ட அந்த காட்சி அதிர்ச்சியாக இருந்தது.
தொடரும்...
A.R.அப்துல் லத்தீஃப்

சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை... 28

அதிரைநிருபர் பதிப்பகம் | October 23, 2012 | , , , ,

பிஸ்மில்லாஹ்....

நீண்ட பல வருடங்களுக்குப் பிறகு தாயகம் சென்று வர வாய்ப்பு கிட்டியது. அதற்கு முதலில் அல்லாஹ்விற்கு நன்றி செலுவத்தியவனாக (அல்ஹம்துலில்லாஹ்)!

விமானப் பயணச்சீட்டு முன்பதிவு செய்ததிலிருந்து எபோது மீண்டும் இந்தியாவையும், பெற்றோர், உற்றார் உறவினர்களையும், நண்பர்களையும் காண்போம் என்ற அவா நைல் நதியின் துள்ளலோடு எண்ணத்தில் அலை மோதிக் கொண்டு இருந்தன.

புறப்படும் நாளும் நெருங்கியது, ஆயிரமாயிரம் எண்ணங்கள் அலைமோதிக் கொண்டு ஆர்ப்பரித்துக் கொண்டும், சந்தோஷ துள்ளல்களாக நேரம் நகரத் துவங்கியது.

கலிஃபோர்னியாவில் உள்ள என் சகோதரியின் வீட்டிலிருந்து குடும்ப சகிதமாக உள்ள அந்த சுகமான பயணம் தொடங்கியது.


சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை அடைந்தபோது இரவு 10:45 மணி.

அங்கிருந்த விளக்கு வெளிச்சங்களும் அந்த விமான நிலையத்தை பகலாக ஆக்கிக் கொண்டிருக்க, என் கடைசி (4வயது) மகள் முல்தஸிமா ஜுவைரியா என்னைப் பார்த்து "நான் ஃபிளைட்டில் வரமாட்டேன், இந்தியாவுக்கு இரயிலில்தான் வருவேன்" என்றாள்.

மகளாருக்கு ஃபிளைட் என்றாலே பிடிக்காது, இரயில் பயணம் என்றால் அலாதி பிரியம், எனவே, நாங்களும் "பறக்கும் இரயிலில்தான் பயணம்" என்று சொல்லி அழைத்து வந்தோம் ஆனால், விமான நிலையத்திலிருந்த விமானங்களை கண்டு விட்டு முரண்டு பிடிக்க ஆரம்பித்து விட்டால்.

ஒருவழியாக லக்கேஜ்களை சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் செக்-இன் செய்து முடித்து விட்டு போர்டிங் பாஸ் பெற்றதும், முரண்டு பிடித்த மகளையும் சமாளித்து வழி அனுப்ப வந்த உறவினர்களுக்கு விடை கொடுத்துவிட்டு, செக்யூரிட்டி செக்கிங் நோக்கி நடந்தோம்.

அமெரிக்காவில் குடிபெயரக சோதனைக்கு (emigration clearance) பதிலாக பாதுகாப்பு சோதனை வைத்து அது TSA என்ற பெயரில் இயங்குகிறது (Transportation Security Administration), இது அமெரிக்காவின் ஹோம் லேண்ட் செக்யூரிட்டியின் கீழ் வருகின்றது.

அங்கு இருந்தவர் ஒரு வொயிட் ஆஃபிசர், ஒவ்வொரு பாஸ்போர்ட்டையும் முகத்தையும் கவனித்து அதை ஸ்கேன் செய்துவிட்டு, தனித் தனியே பயண வாழ்த்து சொல்லி புன்முறுவல் பூத்தார் !

பாஸ்போர்ட்டை பெற்றுக் கொண்டு, சிங்கப்பூர் செல்லும் விமானம் SQ001 இருக்கும் இடம் (Gate) நோக்கி நர்ந்தோம்.

கண்ணாடிக்கு வெளியே தெரியும், விமானங்களைக் கண்டு கொண்டு, மீண்டும் மகளின் நச்சரிப்பு ஆரம்பிக்க, இரவு நேர சான்பிராசிஸ்கோவின் குளிரிலும் வியர்க்க ஆரம்பித்து சிறிதாக செல்லமாக தட்டலாம் என்று எண்ணம் வந்ததை அடக்கிக் கொண்டேன். அதனை போலீஸ் பார்த்தால் பிரச்சினை, ஒவ்வொன்றாக சொல்லி மீண்டும் சமாளிப்புதான் தொடர்ந்தது.

சரியாக 12:50க்கு ஃபிளைட்டில் அமர அழைக்கப்பட்டோம் சிங்கப்பூர் ஏர்லைன்சின் பணிப் பெண்களின் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டு உள்ளே சென்று அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள, மீண்டும் என் மகளின் அழுகையும் பிடிவாதமும் அரம்பிக்க என் இல்லாள் ஒரு யோசனை செய்தார்! அங்கு வந்த பனிப் பெண்ணிடம் என் மகளின் பிடிவாத குணத்தை சாடையாக காட்டி விட்டு "at what time this tர்ain will fly? என்று கேட்க அந்தப் பணிப் பெண்ணும் புரிந்து கொண்டு புன்முறுவலுடன் "this train will fly at 01:20am" என அழுத்தி சொல்ல என் மகளின் முகத்தில் சந்தோஷக் களைகட்டியது. நாம் பறக்கும் இரயிலில் தான் பயணிக்கப் போகின்றோம் என்று!. என் இல்லாளின் சமயோசித அனுகுமுறையை நினைத்து பெருமைப் பட்டேன் அதே நேரத்திலும் 'பாராட்டவும் தயங்கவில்லை' மாஷா அல்லாஹ் !

சரியாக 1:20 மணி, அதிகாலை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என்ற அலுமினியப் பறவை - தன் பயணத்தை தொடங்கியது.

எல்லோருமாக, பயண துஆவை ஓதிக் கொண்டோம், அல்லாஹ்வின் அருள் வேண்டி பிரார்த்தித்துக் கொண்டோம். பயணியின் துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என்ற ஹதீஸ் ஞாபகம் வந்தது, துஆ செய்தோம்.

பயணத்தின் ஊடே, என் மகளிடம் கேட்டேன் "ஏன் ஃபிளைட் என்றால் பயப்படுகிறாய்?" என்று..

என் மகள் சொன்னாள் "ஃபிளைட் புறப்படும்போது கீழே விழுந்து விடும்" என்று சொன்னதைக் கேட்டவுடன் எனக்கு 'சொலக்' என்றது.
தொடரும்...
A.R.அப்துல் லத்தீஃப்