Showing posts with label இலவசம் விலை போனதே. Show all posts
Showing posts with label இலவசம் விலை போனதே. Show all posts

இலவசம் விலை போனதே ! [அனுபவங்களின் விலாசம்] - குறுந்தொடர் - நிறைவுப் பகுதி 24

அதிரைநிருபர் பதிப்பகம் | July 03, 2014 | , , , , ,

கு.தொ.: 4

“நம் ஊரிலிருந்து வந்திருக்கிறார்கள். எனக்கு வேண்டியவர். குர் ஆன் தமிழ் தர்ஜமா கொண்டு வந்திருக்கிறார்கள். உங்களிடம் கூட்டி வந்திருக்கிறேன்” என்றேன்.  

“உட்காருங்கள். அந்த மாதிரி காப்பியைக் காட்டுங்கள்” என்றேன். கையோடு கொண்டு வந்திருந்த மாதிரியைக் கொடுத்தோம். 

“தலைப்பைப் பார்த்து தர்ஜமா என்று இருக்கிறதே, தர்ஜூமா என்கிறார்களே?!” என்றார்.

“இதுதான் சரியான உச்சரிப்பு” என்று நம் ஊர் ஆள் சொன்னார். பிரித்து ஒரு பார்வை பார்த்து விட்டு,

“அமல்களின் சிறப்பு என்ற புத்தகம் வாங்கி ஹதியா கொடுக்கலாம் என்று இருந்தோம். ஃபாரூக் அண்ணன் ஊர்க்காரர் கொண்டு வந்த்தால் இதையே வாங்கிக் கொள்கிறோம். எத்தனை பிரதிகள் கொண்டு வந்திருக்கிறீர்கள்?” என்றார்.

“முன்னூறு பிரதிகள் கொண்டு வந்திருக்கிறேன். எல்லாம் பினாங்கில் இருக்கிறது” என்றார். அந்த மேனேஜர், 

“என்ன விலை போட்டிருக்கிறது” என்று கேட்டுக் கொண்டே குர்ஆனைத் திறந்து, 

“ரூ 120/- போட்டிருக்கிறது” என்றார். குர்ஆன் கொண்டு வந்த ஆசாமி உடனடியாக,

“அடுத்தப் பதிப்பு ரூ 150/-“ என்றார். உடனே அந்த மேனேஜர்,

“இப்பொழுது பிறந்திருக்கும் பிள்ளைக்கு மட்டும் பேர் வைப்போம். பிறக்கப்போற பிள்ளைக்கு பிறந்ததும் பேர் வைக்கலாம்” என்று திருப்பியடித்தார்.

குர் ஆன் கொண்டு வந்தவர் அடுத்த பதிப்பின் விலை சொன்னதும் இவர் ஒரு ‘தில்லு முல்லு’ ஆசாமி என்பதைப் புரிந்து கொண்டேன். இது பிரச்னையில் முடியும் என்ற எண்ணம் என் உள் மனதில் உதித்தது. மேனேஜரிடம், ‘வேண்டாமென்று சொல்லுங்கள்’ என்று கண்ணைக் காட்டினேன். அவர் கவனிக்கவில்லை.  குர் ஆனைப் புரட்டிப் பார்ப்பதிலேயே குறியாக இருந்தார். 

“முன்னூறு பிரதிகளையும் எடுத்துக் கொள்கிறோம். என்ன ரேட்டுக்குத் தருகிறீர்கள்” என்று கேட்டார்.

“சிங்கப்பூரில்…..” என்று ஒரு பணக்காரர் பெயரைச் சொல்லி, “அவர் இரண்டு பிரதிகள் வாங்கிக்கொண்டு சிங்கப்பூர் டாலர் 1,500/- கொடுத்தார். கோலாலம்பூரில் (ஒரு தமிழ் முஸ்லீம் பெயரைச் சொல்லி) ஒரு பிரதி எடுத்துக் கொண்டு 2,000/- மலேசிய டாலர் கொடுத்தார்.” என்றார். இதைக் கேட்ட மேனேஜர், 

“அது தர்மம்” என்றார். பாம்புக்குப் பால் வார்த்து விட்டோமோ! நம் மரியாதையும் கப்பல் ஏறப் போகுது! ஊர் மரியாதையும் கப்பல் ஏறப்போகுதென்று எண்ணி எழுந்து கொஞ்சம் தள்ளிப்போய் மேனேஜருக்கு ‘வேண்டாம், திருப்பி அனுப்புங்கள்’ என்று சைகை செய்தேன்.  அவர் என்னை கவனிக்கவில்லை.

“நாங்கள் டெல்லியிலிருந்து பல லட்ச ரூபாய்க்கு புத்தகங்கள் இறக்குமதி செய்கிறோம். பேங்க் ரேட்படி போட்டு எங்களுக்கு 30-35% கழிவு கொடுக்கிறார்கள். அது அல்லாமல் நாங்கள் டெல்லிக்கு புத்தக கண்காட்சிக்குப் போகும் போது பல செல்வுகளையும் செய்கிறார்கள். அதெல்லாம் பெரிய வியாபாரம். பரவாயில்லை. குர்ஆன் என்பதால் கழிவு எங்களுக்கு வேண்டாம். நாங்கள் வாங்கியும் அல்லாஹ் பேராலே ஹதியாதான் கொடுக்கப் போகிறோம். வித்து ஆதாயம் சம்பாதிக்கவில்லை. ரூபாய்க்கு மலேசியா 9 காசு வீதம் ஒரு புத்தகத்துக்கு வருது.  மலேசியா காசு 9.60 போட்டுத் தருகிறேன். விருப்பமிருந்தால் கொடுங்கள். இல்லையென்றால் வேறு தோது பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.

வந்தவரோ 300 குர்ஆனை மலேசியா ரிங்கிட் 1,500/2,000 த்துக்கு விற்று நடுவிக்காடு, மங்கனங்காடு, மழவேனிற்காடு, முடுக்குக்காடு, மரவக்காடு தொக்காளிக்காடு போன்ற காடுகளையெல்லாம் ஒரே வளையா வளைச்சுப்போடலாம் என்று திட்டம் போட்டு விட்டார். முன்னூறு பிரதிகளை வாங்கி ஹதியாக் கொடுக்க்கூடிய ஆளாக இருந்தால் அவன் ஒரு ஏமாளியாக இருப்பான் என்றே நினைத்து விட்டார். ‘பொன் முட்டை இடும் வாத்தின் கழுத்தை அறுத்தால் எல்லா முட்டையையும் ஒரே தடவை எடுத்த் விட்டால் ஒரே நாளில் பணக்க்காரனாகலாம்’ என்ற ஐடியா அவருக்கு வந்து விட்டது. அந்த அளவுக்கு உள்ள பைத்தியகாரன் அங்கே இல்லை என்பதை இந்த அசாமி உணரவில்லை. 

பார்த்தார், யோசித்தார்.  ‘ஏண்டா இவரை இங்கே கொண்டு வந்தோம்’ என்றாகிவிட்டது.  இதில் வேறு பிரச்னை எழும் என்று என் உள் மனம் என்னை உறுத்தியது.  ஒரேயடியாக தட்டிக் கழித்து விட்டால் நல்லதென்றே பட்டது! மேனேஜரிடம் மீண்டும் கண் ஜாடை செய்தேன், அவர் புரிந்து கொள்ளவில்லை. குர்ஆன் கொண்டு வந்த ஆசாமி,

“சரி, கணக்குப் பார்த்து பணம் தாருங்கள். பினாங்கிலிருந்து பிரதிகளை அனுப்பி வைக்கிறேன்” என்றார்.

“பிரதிகள் வந்ததும் கணக்குப் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்” என்றார் மேனேஜர்.

“அட்வான்ஸாவது கொடுங்கள்” என்றார்.

“அதெல்லாம் எங்கள் ஸிஸ்டத்தில் இல்லை. நாங்கள் இந்தியாவிலிருந்து வாங்கும் புத்தகங்களுக்கு புத்தக்கங்கள் பெற்றுக்கொண்ட தேதியிலிருந்து 90 நாட்கள் சென்றுதான் பணம் கொடுப்போம்” என்று ஒரே பேச்சாகச் சொன்ன மேனேஜர், “ பினாங்கிலிருந்து அனுப்பும் லாரி சார்ஜைக் கழித்து பாக்கியை ரொக்கமாக வாங்கிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் பேச்சு இல்லை.  உங்கள் விருப்பம் எதுவோ அதுபடி செய்து கொள்ளுங்கள்” என்றார்.

குர்ஆன் கொண்டு வந்த ஆசாமியின் தந்திரங்கள் ஏதும் பலிக்கவில்லை. ஹதியா கொடுக்கும் குர்ஆனைக்கூட அங்குள்ளவர்களுக்கு படிக்க நேரமில்லை. ‘காசு காசு’ என்பதே ஒவ்வொருவரின் வேதமாக இருக்கிறது. தமிழ் முஸ்லீம்கள் குர்ஆன் வாங்கி ஓதுவதும் படிப்பதும் யார்? அதெல்லாம் இமாம்களின் வேலை என்று ஒதுங்கி விடுகிறார்கள்.  குர்ஆன் கொண்டு வந்த முதலைக்கு ஆசையைத் தூண்டியது எது என்றால் அந்தக் கடை மேனேஜர் தவறுதலாக ஒரு டிப்ஸ் கொடுத்து விட்டார். அது “நாங்கள் ‘அமல்களின் சிறப்பு’ என்ற புத்த்கத்தை வாங்கி ஹதியா கொடுக்கலாம் என்றிருந்தோம் என்பதே.  முன்னூறு நானூறு பிரதிகளை வாங்கி ஹதியா கொடுப்பவர்களாக இருந்தால் பெரிய கையாகவும் அதே சமயம் இஸ்லாம் மார்க்கம் என்றால் அள்ளிக் கொடுக்கும் ஏமாளி பண முதலையாகவும் இருப்பார்கள் இதை பயன் படுத்தி ஊரில் தோட்டந்துரவுகளை வாங்கி போட்டு கால் மேல் கால் போட்டு உண்ணலாம்,. காரில் ஊர் சுற்றலாம் என்ற எண்ணம் தோன்றி இருக்க வேண்டும்.  அதனால் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். 

இஸ்லாம் இப்படிச் சொல்லவில்லை. மனித இனத்துக்கு நல்வழி காட்டவே அல்லாஹ் குர் ஆன் என்ற வேதத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளினான்.  இது மனித இனத்திற்கு நேர் வழி காட்டும் திருமறை என்று சொன்னானே தவிர இதை விற்று பெரும் பணத்தைத் தேடிக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. பணக்காரர் ஆவதற்கு வேறு நல்ல நல்ல புத்தகங்கள் மனிதன் எழுதி இருக்கிறான். அதில் ஒன்று ‘Think and Grow Rich’ by Nepoleon Hill என்பதும் சிறந்த ஒன்று. அதிலும் சிந்தித்து செயல்பட்டு நேர்வழியில் பொருளீட்டி பணக்காரன் ஆகு என்றும் தேடிய பணத்தை ஏழை எளியோருக்கு உதவி செய் என்றும் அதை முதலீடாகக் கொண்டு பெரும் பெரும் தொழிற்சாலைகளை நிறுவி பலருக்கு வேலை கொடு என்றும்தான் சொல்லப் படுகிறது.   அது மனிதனால் எழுதப்பட்ட புத்தகம். அதன் விலையோ எழுதியவருக்கு சிறு ராயல்டி, பதிப்பாளருக்கு காகித விலை, அச்சுக்கூலி சில்லறை விற்பனையாளருக்குக் கமிஷன் என்ற கணக்கிலேயே ஒரு சாதாரண தொழிலாளியும் ஒரு வேலை சாப்பட்டுச் செலவுக்கு செய்யும் செலவைவிட மிகக்குறைவாகவே இருக்கும்.  அந்தப் புத்தகம் படித்து அதன் வழி எத்தனையோ பேர் அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் கோடீஸ்வரர் ஆகி இருக்கிறார்கள்.  அந்தப் புத்தகத்தில் விற்கும் விலையை அச்சிட்டு வெளியிடுகிறார்கள். திருமறையோ how to become rich  பாலிஸையையோ ‘A short cut way to become rich’, ‘A way to become rich quickly’ என்னும் வழிமுறைகளைச் சொல்ல அருளப்படவில்லை.

மனித இனம் ஒழுக்க நெறியுடன் வாழ, மனித இனத்திற்கு நேர்வழி காட்ட அல்லாஹ்வால் அருளப்பட்ட புனித வேதம்.  புனித வேதம்-பணம் சம்பாதிக்க அருளப்பட்ட வேதமல்ல.  அல்லாஹ்வின் பேரருளை பெற மனித இனத்திற்கு தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வழியாக அருளப்பட்டது என்பதை முஸ்லீம்கள் எல்லோரும் உணர வேண்டும்.

ஆக, ஒரு வழியாக ஒரு புக் 9-60 மலேசிய ரிங்கிட் விலை பேசி முடித்தாகி விட்டது. பினாங்கில் இருக்கும் குர் ஆன் பிரதிகள் வந்ததும் ட்ரான்ஸ்போர்ட் சார்ஜ் போக மீதி தொகையை உடனடியாக கொடுப்பதென்ற Gentleman Agreement செய்தாகி விட்டது.  இரவு 7-30 மணியளவில அங்கிருந்த உணவு கடை ஒன்றில் இருவரும் சாப்பிட்டு விட்டு நேராக பார்க்கிங்கில் போட்ட வேனை எடுத்து கொண்டு அவரை அவர் தங்கும் இடத்தில் விட்டு விட்டு என் இடத்திற்கு வந்து விட்டேன். 

இரண்டுமூன்று நாட்கள் ஆனது. குர்ஆன் வரவில்லை. ஒருநாள் என் கடைக்கு குர்ஆன் பேர்வழி வந்தார்.,

“குர் ஆனை கஸ்டம்ஸில் வெளியுறவு அமைச்சைச் சார்ந்த புத்தக தணிக்கை இலாக்காவின் மத சம்பந்தப்பட்ட பிரிவு தடுத்து விட்டது.”  என்றார்.

அதை அவர்கள் வெளியிட மறுக்கிறார்கள் என்று சொன்னார். “என்ன காரணம்?” என்றேன். அவருக்கு விளக்கமாகச் சொல்லத் தெரியவில்லை.  நானும் அவரும் புத்தகக் கடை மேனேஜரிடம் சென்றோம். விபரத்தைச் சொன்னோம். அவர்கள் வெளி நாட்டிலிருந்து புத்தகம் இறக்குமதி செய்வதில் அங்குள்ள அதிகாரிகள் நல்ல பழக்கம்.  அந்த புத்தக கம்பெனிக்காரர்கள் மீதும் அந்த இலாகாவில் நல்ல பெயர்.  அரசுக்கு எதிரான புத்தகங்கள் இறக்குமதி செய்து எந்த கெட்ட பெயரும் அந்தக் கம்பெனிக்கு இல்லை. அந்த இலாக்காக்காரர்க்ளும் அடிக்கடி அங்கே வந்த தடை செய்யப்பட்ட புத்தகங்களின் பெயரையும் சில சமயம் பட்டியலையும் கொடுப்பார்கள்.  சில நேரங்களில் தடை செய்யப்பட்ட புத்தகங்களின் பட்டியல்கள் பத்திரிகைகளில் வரும். ஆரசியல் கோட்பாடு குறிப்பாக கம்யூனிசம், அடுத்து இஸ்லாம் சம்பந்தமான எதிர்மறையான கருத்து போதிக்கும் புத்தகங்கள், அடுத்து ஆபாச புத்தகம். இவை தடை செய்யப்பட்டவை.

புத்தகக் கம்பெனி மேனேஜர் அந்த இலாக்காவுக்கு டெலிபோன் போட்டு விஷயத்தைச் சொன்னார். “நாளை அவரை ஆஃபீசுக்கு வரும்படி சொன்னார். மறுநாள் மேனேஜர் அங்கே சென்று விபரம் கேட்டார். அவர்கள் சொன்னது அரபு மொழி எழுத்தில் இரண்டு மூன்று வகை உண்டாம். 1) இந்தக் குர்ஆனில் மலேசியாவில் அங்கீகரிக்கப்பட்ட எழுத்து இல்லையாம். 2) இந்த குர்ஆன் பலதடவைக்கு மேல் அச்சிட்டதால் சில அரபு எழுத்துகளும் சேர், ஸபர் போன்ற குறியீடுகளும் தேய்ந்து போய் இருப்பதால் அர்த்தம் மாறுபடுகிறது என்றும் அதனால் அதை வெளியிட தடை போடும் நிலை இருக்கிறது.” என்றார்கள்.  எங்களுக்கும் இதை தடை செய்ய வருத்தமாக இருக்கிறது. வேண்டுமென்றே செய்த தவறு அல்ல. இயற்கையாக உண்டானது.  இதற்கு ஏதாவது ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணங்களை இன்னும் இரண்டு வாரத்தில் எழுத்து மூலம் கொடுத்தால் வெளியாக்கும் உத்தரவை தருகிறோம் இல்லை என்றால் எல்லாமே கடலில் கொண்டு போய் கொட்டி விடுவோம்” என்றார்களாம்.  மறுநாள் போனபோது சொன்னார்.

குர்ஆன் வெளியாக என்ன வழி? ஒரு குர்ஆனுக்கு மலேசியா டாலர் 2,000 கேட்ட quick rich அல்லது குறுக்கு வழி பணக்காரனாக விரும்பிய பேராசை பேர்வழிக்கு அல்லாஹ்வின் சோதனை!

குறுக்கு வழிக்காரரின் முகம் வெளிறிவிட்டது.  ஆனால், இது குறுக்கு வழிக்காரருக்கு முன்னமேயே தெரியும்.  அதைக் காட்டிக் கொள்ளாமல் குர்ஆனுக்கு உள்ள பணத்தை முன் கூட்டியே வாங்கி விட்டால்...! என்ற எண்ணம்.

என்னிடம் அவர் சொன்னது குர்ஆன் பினாங்கில் ஒரு பிரபல்யமான தமிழ் முஸ்லீம் கம்பெனியின் குடோவ்னில் இருப்பதாகவே பேசினார். தில்லு முல்லுத் தனம். அதுவும் குர்ஆனில். 

இரண்டு நாள் கழித்து குர்ஆனை வெளியாக்கும் வழி கண்டாச்சு.  “இந்திய தமிழ் முஸ்லீம்கள் இந்த அரபு எழுத்திலேயே படித்துப் பழக்கம். தமிழ் முஸ்லீம்களுக்கு மட்டும் விலையில்லாமல் ஹதியாகாவாகக் கொடுப்பது. தமிழ் முஸ்லீம்கள் ஏற்கனவே அரபு வாசகத்தை ஏற்கனவே ஓத தெரிந்தவர்கள். ஆனால், தமிழில் அதற்கு தெளிவான விளக்கம் தெரியாதவர்கள். இன்னும் பலர் அரபு மொழியில் ஓத தெரியாதவர்கள். ஒரு சில சூராக்கள் மட்டும் வாய்வழி மனப்பாடம் செய்து ஓதுபவர்கள். எனவே அரபு மொழி முக்கியமில்லை. குர்ஆனின் வாசகத்தைத் தமிழில் கொடுப்பதே இதன் முக்கிய நோக்கம். அதுவும் தமிழ் முஸ்லீம்களுக்கு மட்டும் இனாமாகக் கொடுப்பதால் சிறிய எண்ணிக்கையிலான பிரதிகளே வெளியாகும்” என்ற காரணத்தை அந்த இலாக்காவின் தமிழ் பகுதியைச் சேர்ந்த ஓர் இஸ்லாமியர், “இந்தக் காரணத்தை எழுதிக் கொடுங்கள். பிரதிகளை வெளியாக்க என்னையும் கலந்து கொள்வார்கள்.  நான் ஒப்புதல் கொடுக்கிறேன்” என்றாராம். 

அதன்படியே அந்த கம்பெனிக்காரர்கள் கடிதம் எழுதிக் கொடுத்தார்கள்.  இதில் நாலைந்து நாட்கள் ஆகிவிட்டது.  கோலாலம்பூரிலிருந்து வெளியாக்கும் உத்தரவு பின்ங்கு போய் சேர வேண்டும்.  அதன் பின்பே குர் ஆன் வெளியாகும். ஒரு கண்டிஷன். இந்தக் குர்ஆன் தமிழ் முஸ்லிம்களுக்கும் மட்டுமே இனாமாகக் கொடுக்க வேண்டும் “இந்த குர்ஆன் இனாமாக கொடுக்கப்படுகிறது” என்ற ரப்பர்  ஸ்டாம்ப் அடித்தே வழங்க வேண்டும் என்ற உத்தரவின் பேரில் குர்ஆன் வெளியாக்க அனுமதி கிடைத்தது.  

ஏறத்தாழ மூன்று நான்கு தடவை என் வேலையைப் போட்டுவிட்டு கூட்டிப்போய் பெட்ரோல் செலவு, பார்க்கிங்க் செலவு எல்லாம் செய்தும் ஏதும் நான் கமிஷனோ வேறு எதுவுமோ எதிர் பார்க்கவில்லை.  அல்லாஹ்வுக்காக நான் அதையெல்லாம் எண்ணவில்லை. யாருக்கு எந்த உதவி செய்தாலும் எதையும் எதிர்பார்க்கும் எண்ணம் எனக்கு இல்லை.

ஒரு நாள் அவர் என் கடைக்கு வந்தபோது புத்தக வெளியீடு சம்பந்தமாகப் பேசினோம்.  அப்பொழுது நான் சொன்னேன்,“நான் சிறுவர்கள் கதை புத்தகம் 4 கலரில் வெளியிடுகிறேன்.  தமிழ் நாட்டில் நல்ல ஓவியர்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாரையாவது என்னிடம் அரிமுகப்படுத்தி விடுங்கள். அவர்களிடம் பேசி கதையைக் கம்ப்யூட்டரில் அனுப்பி அதற்கு ஏற்ற ஓவியங்கள் தீட்டிக் கொடுத்தால் அதற்குரிய சார்ஜைப் பேசி கொடுத்து விடலாம்.  என்னுடைய அட்ரசைத் தருகிறேன்.  என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்ல முடியுமா?” என்றேன்.

“செய்யலாம். அதற்கு எனக்கு ஒரு கமிஷனை நீங்கள் பேசி கொடுக்கனுமே!” என்றார்.

அதைக் கேட்ட நான் திடுக்கிட்டேன்.  உண்ட தட்டையிலேயே…. ஆள்! என்று தீர்மாணித்தேன். மீண்டும் தொடர்ந்தார்,

“அந்தக் கதையை என்னிடம் கொடுங்கள். நான் ப்ரிண்ட் செய்து அனுப்புகிறேன்” என்றார்.

“இது நாலு கலர் படம் போட்ட புக்குகள். அந்தக் குவாலிட்டியில் இந்தியாவில் செய்ய மிஷின் கிடையாது. வெறும் சினிமா நோட்டீஸ் மட்டும் அடிக்கும் மிஷின் மட்டுமே மண்ணடியில் ‘போட்டு சக்குசக்குன்னு’ அடிச்சுத் தள்ளிட்டு காசைக் கொடு என்பீர்கள்.  பத்தாம் பக்கம் இருக்கும் அடுத்தது 16 பக்கம் வரும். வேண்டாம் என்று கழட்டி விட்டேன், ‘ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே’ பாட்டு ஞாபகம் வந்தது.  அடுத்த நாள் வந்தார்.

“நான் சிங்கப்பூர் போகிறேன். மூன்று நான்கு நாள் கழித்து வருவேன்.  புக் வந்து விட்டால் பணம் வாங்கி வையுங்கள்” என்றார்.  

“உங்களுக்கு எந்த விசா தந்தார்கள்?” என்றேன். 

“விசிட்டிங் விசா தந்தார்கள்” என்றார்.  

“நீங்கள் சிங்கப்பூர் போனால் திரும்பி மலேசியா வர முடியாது. ஒரு முறை வந்து விட்டு வெளியானால் அந்த விசா ஆட்டோமாட்டிக்கா கேன்ஸல் ஆகிவிடும். புத்தகம் வந்ததும் பணத்தை வாங்கிக் கொண்டு போங்கள்” என்றேன்.  அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?

“அது உன்னைப் போல கேனப்பயலுகளிடம்தான் அப்படிச் சொல்வார்கள். நாங்கள் எல்லாம் மண்ணடியில் பேர் போட்டவர்கள். மண்ணடி மண்ணை பொன் என்று சொல்லி விற்று காசு பண்ற ஆசாமிகள் நாங்கள்” என்றார்.  

எனக்கு அவர் 10 வயது இளையவர். சரியான நல்ல பாம்புக்கு பால் வார்த்தோம் என்று என்னையே நான் நொந்து கொண்டேன். எனக்கு பத்து வயது இளையவன் என்னை நீ நான் என்று மரியாதை இல்லாமல் பேசுகிறானே என்று எனக்குக் கோபம் வந்தது.  இந்த மாதிரியான ஆசாமிகளிடம் என் குணமே வேறு. வேறு மாதிரியாக நடந்து விடும்.  நான் முதன் முதலில் மலேயா புறப்படும்போது சொல்லிய வாசகம் நினைவு வந்தது. “உனக்குக் கோபம் வந்தால் திடுதிப்பென்று அரிவாள், கத்தி, கம்பு என்று எடுக்கிற ஆளு நீ. வீட்டில் எத்தனை பீங்கான் தட்டையெல்லாம் உடைத்திருக்கிறாய். அங்கே போய் அப்படியெல்லாம் நடந்து கொள்ளாதே” என்று அழுதுகொண்டு சொன்ன சொல் ஞாபகம் வந்தது!  என்னையே நான் சமாளித்துக் கொண்டேன்.

“அப்படியா! Thank you brother! சென்று வாருங்கள். உங்களுக்கு மாலை போட்டு வரவேற்கிறேன்” என்றேன்.  

போய் விட்டார். இதற்கிடையில் நான் கம்பெனி மேனேஜரிடம் விஷயத்தைச் சொல்லி, 

“குர்ஆனுக்கு வெளியுறவுத் துறைக்குக் கொடுத்த கடிதத்தை வாபஸ் வாங்குங்கள். குர்ஆனை வெளியிடுவது அவர்கள் சொந்த முடிவாக இருக்கட்டும்” என்றேன். அவர், 

“வேண்டாம் ஃபாரூக். குர்ஆன் விஷயம். அந்த நாய் அப்படிச் செய்தது என்று நாமும் அப்படி நடக்க வேண்டாம்” என்றார். 

நாலைந்து நாள் வரை குர்ஆன் வரவில்லை. இதற்கிடையில் அவர் போன நாளாம் நாள் அந்தக் கம்பெனி மேனேஜர் ஜெர்மனியில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு புறப்பட்டுப் போய் விட்டார். திரும்பி வர 10-12 நாட்கள் ஆகும் ஒரு நாள் காலை 8:45 மணியளவில் என் டெலிபோன் மணியடித்தது. எடுத்தேன். ஒரே சப்தம்… இரைச்சல்,”

“ஹலோ” என்றேன்

“நான் தான்….. (குர் ஆன் பேர்வழி) காக்கா, மலேசியா ஏர்ப்போர்ட்டிலிருந்து பேசுகிறேன்” என்றார்.

“பேசுங்கள்” என்று கிண்டலடித்தேன்.

“என்னை வெளியே விட மாட்டார்களாம். ஒரு முறை போனால் விசா காலாவதியாச்சு” என்று சொல்கிறார்கள் காக்கா” என்றார்

“அப்படியெல்லாம் என்னைப் போல இளிச்ச வாயனிடம்தானே சொல்வார்கள்! நீதான் மண்ணடி மண்ணை பொன் என்று விற்கிறா ஆளாச்சே! அதை இமிகிரேஷின்காரனிடம் சொல்லுடா!” என்று டெலிபோனை வைத்து விட்டேன்.  

திரும்பவும் மணியடித்த்து. எடுத்தேன். 

“காக்கா, ரொம்ப கோபப்படுறியளே? குர் ஆன் வந்து விட்டதா?” என்றார்.

“வரவில்லை. மேனேஜர் வெளிநாடு போய்விட்டார். வர 15 நாட்கள் ஆகும். குர்ஆன் கையில் கிடைத்தால்தான் பணம் கிடைக்கும்” என்றேன்.

“ஏன் குர்ஆன் இன்னும் வரவில்லை?” என்றார்.

“அதை பினாங்கில் உன் ஆளிடம் கேள்” என்றேன். 

“நான் இங்கிருந்தே ஊர் போறேன். ஊர் போய் டெலிபோன் போடுகிறேன்” என்று வைத்து விட்டார்.

ஊர் போய் மூன்று நான்கு நாள் கழித்து போன் செய்தார். 

“குர்ஆன் வந்து விட்டதா?” என்றார். 

“குர்ஆன் வந்து விட்டது. அதற்குரிய பணம் வவுச்சரும் கொடுத்து விட்டார்கள். லாரி கூலி போக பாக்கி வெள்ளி இவ்வளவு தந்தார்கள்”என்றேன்.

“”அதில் இவருக்கு இத்தனை வெள்ளி, அவருக்கு இத்தனை வெள்ளி கொடுங்கள். பினாங்கில் (ஒரு நபருடைய பெயரைச் சொல்லி) அவருக்கு இவ்வளவு கொடுங்கள். பாக்கி தொகைக்கு பேங்க் போய் ட்ராஃப்ட் எடுத்து அதை கவரில் வைத்து அத்துடன் வவுச்சரையும் வைத்து என் அட்ரஸ் தருகிறேன். எழுதி தபால் ஆபீஸ் போய் என் பெயரில் ரிஜிஸடர் செய்து விடுங்கள்” என்றார்.

எனக்குக் கடுப்பு ஏறியது,

“நீ கொடுக்க வேண்டிய நபர்களுக்கு அவர்கள் இடத்துக்குப் போய் உன் கடனைக் கொடுக்க வேண்டும். பேங்குக்குப் போய் டிரஃப்ட் எடுக்க வேண்டும். தபால் ஆபீஸ் போய் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். இதையெல்லாம் செய்ய எவனாவது இளிச்ச வாயன் இருந்தால் அவனைப் பார். உன் வீட்டு எடுபிடி என்று நினைத்தாயா? கொஞ்சம் இரக்கப்பட்டு இடம் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவாய். இந்த வேலைகளுக்கு எல்லாம் எவனாவது கேனையன் இருப்பான் அவனைப் பார். பணம் வேனும் என்றால் எவனாவது ஒருத்தனை அனுப்பி முழுப் பணத்தையும் வாங்கிப் போகச் சொல். இந்த ‘மண்ணடித் தந்திரங்கள்’ எல்லாம் இங்கே விலை போகாது.  போனால் போகிறது என்று மனிதாபமான முறையில் உதவி செய்தால் மண்டையில் ஏறி மொட்டையடிக்கும் ஆள் என்பதைப் புரிந்து கொண்டேன்.” என்று சொல்லி போனை கட் செய்தேன்.

அடுத்த நாள் டெலிபோன் வந்தது. ஒரு நபரின் பெயரைச் சொல்லி, 

“அவரிடம் பணத்தைக் கொடுத்து விடுங்கள். ரொம்ப கோபப் படுகிறீர்களே, காக்கா!” என்றார்

“ஆமாம். கோபப்படாமல் இருந்தால் ஒண்ட வந்த பிசாசு ஊர் பிசாசை விரட்டும் என்பார்களே, தெரியுமா? உனக்கு இவ்வளவு உதவி செய்த என்னிடம் கமிஷன் கேட்டாய் அல்லவா? உன் போன்ற நன்றி கெட்டவர்கள் எல்லாம் அல்லாஹ் குர் ஆனை தொடவே கூடாது.  நீ எல்லாம் அதைப் பணம் சம்பாதிக்கும் கருவியாகப் பயன் படுத்துவதனால்தான் இஸ்லாமியர்களுக்கு உலக அளவில் சோதனைகள் ஏற்படுகிறது.” என்று சொல்லி போனை வைத்து விட்டேன்.  

பணம் வாங்க வந்தவரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்து விட்டேன்.  அதோடு காலை சுற்றிய நாகப் பாம்பு போய் விட்டது என்று எண்ணி இருந்தேன்.

அடுத்து ஒரு வாரம் கழித்து மீண்டும் போன் மணி அடித்தது. எடுத்த்தும், 

“காக்கா, நான் தான் பேசுகிறேன். குர் ஆன் கொண்டு வந்ததில் கணக்குப் பார்த்தால் எனக்கு நட்டம் எற்பட்டு விட்டது. அந்தக் கடைக்காரரிடம் சொல்லி இன்னும் கொஞ்சம் பணம் வாங்கிக் கொடுங்கள்” என்றார்.

“பேசியபடிதான் பணம் கொடுத்து விட்டார்களே? அதற்குமேல் எப்படி பணம் கேட்பது?” என்றேன்.

“நான் அங்கே ரொம்ப நாள் தங்கியதில் செலவு அதிகமாகிவிட்டது. அவர்களிடம் நீங்கள் சொல்லுங்கள்” என்றார்.

“நான் சொல்ல முடியாது. பேசியபடி பணம் கொடுத்து விட்டார்கள்” என்றேன்.

“அவர்கள் பணம் கொடுக்க சுனங்கி விட்டதால் நான் தங்கியதில் செலவு அதிகமாச்சே.?” என்றார்

“குர்ஆன் வந்து சேரவிவில்லை. சாமான் வராமல் விலை பேசியதும் பணத்தை இந்தா வாங்கிக்கொண்டு ஊர் போ என்று சொல்லும் முட்டாள்கள் இங்கு இல்லை. அவர்கள் முயற்சிக்கா விட்டால் அவ்வளவு குர்ஆனையும் அரசாங்கம் கடலில் கொட்டி விடும்.  குர்ஆனை காசுக்கு விற்று பணம் சம்பாதித்து தோட்டம் தொறவு வாங்க அவர்கள் உன்னிடம் குர்ஆன் வாங்கவில்லை. அதையெல்லாம் அல்லாஹ்வின் பேரால் இனாம் கொடுக்கவே அதை வாங்கினார்கள். காசு ஆசையால் ஷெய்த்தான் வேலையெல்லாம் செய்யாதே” என்றேன்

“அப்படியென்றால் நான் நேரடியாக அவரிடம் பேசுகிறேன்” என்றார்.

நான் அந்தக் கம்பெனி மேனேஜருக்கு டெலிபோன் போட்டு விஷயத்தைச் சொன்னேன். 

“அப்படியா? அவன் முகத்தில் வைத்திருந்த தாடியையும் உங்களூர் ஆள் என்று நீங்கள் கூட்டி வந்ததாலும்தான் நான் குர்ஆனை வாங்கினேன். ஷைத்தான் வேதம் ஓதுகிறது” என்று சொல்லிவிட்டு,

“உங்கள் ஊரில் ஷெய்த்தான்கள் அதிகம் இருக்கும்போல் தெரிகிறது!” என்றார்.

கொஞ்ச நேரம் கழித்து அந்த்க் கடை மேனேஜர் எனக்கு மீண்டும் போன் போட்டார்.

“பணம் கேட்டார். பணம் இல்லை. கொடுத்த பணத்தை திரும்ப கொடுத்து விட்டு குர்ஆனை எடுத்துக் கொள் என்றேன். விலை பேசி முடித்து ஒப்பந்தம் செய்துவிட்டு பிறகு கூட கொடு குறையக் கொடு என்று கேட்கிறாயே அப்படியெல்லாம் நீ கொண்டு வந்த குர்ஆனில் இருக்கிறதா?. உனக்கெல்லாம் ஒரு தாடி! ஒரு தொப்பி! மகா மட்டரகமான பேர்வழியாக இருக்கிறாயே” என்று திட்டி டெலிபோனை வைத்து விட்டேன்” என்று சொன்னார்.

“மீண்டும் டெலிபோன் போட்டு அதே பல்லவியைப் பாடினார். ஒரு வாரம் டயம் தர்றேன். நான் கொடுத்த பணத்தை கொடுத்து விட்டு குர்ஆனை எடுத்துக் கொள். இல்லை என்றால் நீ இங்கே வா. குர்ஆனை தருகிறேன். நான் கொடுத்த பணம் அல்லாஹ் பேராலே உனக்கு கொடுத்த தர்மமாக இருக்கட்டும் என்று சொன்னேன் என்றும், உழைத்துப் பணம் சம்பாதிக்க வழியைப் பார். தில்லுமுல்லுத்தனம் செய்யாதே” என்று சொன்னதாகச் சொன்னார்.

‘இனிமேல் டெலிபோன் போடாதே. போட்டால் நான் வேறு விதமாகப் போக வேண்டி வரும்” என்று எச்சரித்ததாகச் சொன்னர். அதோடு டெலிபோன் வருவது நின்று விட்டது.  

நான் படித்த புத்தி, பாம்பென்று நினைத்து அடிப்பதா? பழுதை என்று நினைத்து மிதிப்பதா? என்று ஒரு தமிழ் சொல்லடை உண்டு. (இதன் பொருள்: பழுதை என்பது வைக்கோல் பிரி). இரவு வேளைகளில் வயல்களின் வழி பாதையில் போகும்போது அங்கே பாம்பும் சுருண்டு கிடக்கும். வைக்கோல் பிரியும் சுருண்டு கிடக்கும். மங்கிய நிலவொளியில் பார்க்கும்போது அது பாம்பாகவும் தெரியும் வைக்கோல் பிரியாகவும் தெரியும். வைக்கோல் பிரியா பாம்பா? வைக்கோல் பிரி என்று எண்ணி பாம்பின் மீதுகால் வைத்தால் என்ன ஆகுமென்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆட்டுத்தோல் போத்திய நரி மந்தையில் புகுந்து ஆடுகளைத் தின்று ரத்தம் குடித்ததைப்போல் இஸ்லாத்தின் தோல் போத்திய நரிகள் நிறையவே குர் ஆனின் போதனை கூறியும் நபிகள நாயகம்(ஸல்) அவர்கள் கூறிய பொன் மொழிகளை (ஹதீஸ்களை) கூறியும் தங்கள் பொருளாதாரத்தை வளப்படுத்திக் கொள்கின்றன.  அல்லாஹ் குர்ஆனை அருளியது அதை ஒன்றுக்கு நூறாக விற்று மனிதன் காசு பார்க்க அல்ல. ரசூலுல்லாஹ்(ஸல்) நல்லுபதேசம் செய்த ஹதீஸ்களைச் சொன்னது புத்தகமாக்கி ஒன்றுக்கு நூறாக விற்று காசு பார்க்க் அல்ல. அவை இரண்டும் நமக்கு வந்தது மனிதன் நல் வழியில் சென்று நல்வாழ்வை பெற்று நல்லதைச் செய்து மனித இனம் திருந்தி அல்லாஹ்வின் நல் அடியாராகவே.  குர் ஆனில் think and grow தத்துவங்கள் சொல்லப்பட் வில்லை. Think and grow rich புத்தகத்திலும் குறுக்கு வழியில் சீக்கிரமே பணக்காரனாகும் தத்துவமும் சொல்லப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

குர்ஆனில் சொல்லப்பட்டதெல்லாம் நேரிய வழியில் நட; அல்லாஹ் ஒருவன் என்று நம்பு அவனையே வணங்கு; நேரிய வழியில் பொருளீட்டி வாழ்க்கை நடத்து தான தர்மங்களைச் செய் போன்றவையே.

அல்லாஹ்வும் இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் குர்ஆனும் ஹதீஸூம் மனிதனுக்கு நேர் வழி காட்ட அல்லாஹ்வால் அனுப்பப்பட்டவையே. அவை மனிதனுக்கு quick rich method டை கூற அல்லாஹ்வால் அனுப்பப்ப்படவில்லை என்பதை மீண்டும் நினைவு படுத்தி நிறைவு செய்கிறேன், அஸ்ஸலாம் அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு!

S.முஹம்மது ஃபாரூக்

இலவசம் விலை போனதே ! [அனுபவங்களின் விலாசம்] - குறுந்தொடர் - 3 24

அதிரைநிருபர் பதிப்பகம் | June 26, 2014 | , , , ,

அடுத்து என் நேர்த்திக்கடன் பயணம் மேற்கு நோக்கி! மேற்கு நோக்கிய பயணத்தில் கோட்டைப்பட்டினம். கோட்டைப்பட்டினம் ராவுத்தர் அப்பா தர்ஹா! அது 30 ஆண்டுகளுக்கு முன்பு அழகான கடற்கரை. பறந்த வெளியில் அந்த தர்ஹா தனியே நின்றது. வெண் நுரை கக்கும் கடல் அலைகள் கரை நோக்கி வந்து வந்து அதை முத்தமிடும் காட்சி கவிரசனை கொண்ட கண்ணிலும் மனதிலும் கற்பனை ஊற்றுக்களைத் தோண்டும். கரை ஓரம் டீ கடை, அடுத்து சர்க்கரை பத்தி, சாம்புராணி மற்றும் மளிகைப் பொருட்கள் விற்கும் கடை. நாகூரைப் போல ரெடிமேட் சர்க்கரை அங்கே இல்லை. வாடிக்கையாளர் கேட்கும் அளவு தராசில் ஒரு தட்டில் படிக்கல்லும் மறு தட்டில் சர்க்கரையும் போட்டு நிறுத்துத் தருவார்கள். எப்பொழுதும் நிறுவையில் தராசின் சர்க்கரைத் தட்டு சற்றுத் தாழ்ந்தே இருக்கும். அதாவது கேட்ட அளவை விட சர்க்கரை கூடுதலாக இருக்கும். நாகூர் சிஸ்டம் அங்கே இல்லை. நாணயமான கடைக்காரர். நேர்வழியில் பொருள் தேடும் நெஞ்சு. என்றைக்கும் ஏழயாய்தான் இருப்பாரோ!?  

நான் 10-12 வயது பையனாக இருக்கும்போது அங்கொரு கல்யாணத்திற்கு என் மாமாவுடன் போயிருந்தேன். (அவர் மூத்த மகளை நிக்காஹ் செய்து தந்தவரும் அவரே).  இரவு கல்யாணம்.  இரவு எட்டு மணிக்கு சகன் விருந்து. இரவு 11 மணிக்கு நிக்காஹ் முடிந்தது. வெளியூரிலிருந்து வந்தவர்களுக்கெல்லாம் படுக்கை பள்ளியில்தான்.  அப்போதெல்லாம் பஸ் கிடையாது. போனால் கூண்டு வண்டி, பெட்டி வண்டி கட்டித்தான் போக வேண்டும்.  ராஜாமடம் பாலம் அப்போ கிடையாது.  தண்ணீர் முழங்கால் அளவு ஓடும்போது வேட்டியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டுபோக வேண்டும். நுங்கும் நுரையுமாக பெருக்கெடுத்து ஓடினால் படகு வரும்.  அதில் ஏறிக் கடக்கலாம். அதற்கு ஒரு நபருக்கு கால் ரூபாயோ அரை ருபாயோ கட்டணம் செலுத்த வேண்டும். 

காலை பசியாற மாப்பிள்ளை வீட்டிலேயே.  நாங்கள் எல்லாம் மாப்பிள்ளை வீட்டார் கெஸ்ட்ஸ்.  காலை பசியாறல் சகனில் வந்தது. மொத்தம் அஞ்சாறு சகன்.  சகனில் இடியப்பம், எறச்சாணம், வட்டிலப்பம், கடப்பாசி, சவ்வரிசி, ரவ்வா போன்ர அதிராம்பட்டிண அய்ட்டங்கள் இல்லை. சகனில் இருந்தது தேங்காய்ப்பால் கஞ்சி! சகனில் கூடி இருந்த எல்லோரும் ‘திருதிரு’வென்று விழித்தார்கள்.  விழித்தவர்கள் விழிகளை விழிகளால் கண்ட ஒருவர் வாய் திறந்து சொன்னார், 


“இது இந்த ஊர் பழக்கம். குடியுங்கள்” என்றார். ‘பாம்பு திண்கிற ஊருக்குப் போனால் நடுத்துண்டம் நமக்கே!’ என்னும் முதுமொழி when you are in Rome do as Romans’s do  என்பதுபோல.

கஞ்சியின் கூடவே தொட்டுக்கிட ஒரு பெரிய உருண்டை தேங்காய்த் தொட்டுக்கறியும் ஒரு தட்டையில் வந்தது. எங்கள் சகனில் எதைக் கொடுத்தாலும் சேடை சொல்லுமொரு நபரும் இருந்தார்.  அவர் சகன் பரத்தியவரைக் கூப்பிட்டு, 

“ஒரு கிண்ணியில் நல்லெண்ணெய் தருகிறீர்களா?” என்று கேட்டார்.  இதைக் கேட்ட அவர் கொஞ்ச நேரம் விழித்தார். பின்பு, 

“ஏன் நல்லெண்ணெய் கேட்கிறீர்கள்?” என்று கேட்டார். சகனில் இருந்த விகடர் தேங்காய்த் தொட்டுக்கறியைக் காட்டி,

“அரப்பு உருண்டை கொடுத்திருக்கிறீர்கள். நல்லெண்ணெய் கொடுத்தால் தேய்த்து குளிக்கத்தான்!” என்றார். 

இதைக் கேட்ட பலர் சிரித்து விட்டார்கள். ஆனால், அந்த வீட்டுக்காரரின் முகம் அவமானத்தால் சுருங்கி விட்டது. இது ஒரு அநாகரீகமான கிண்டல். பிறர் நிலை, பழக்க வழக்கம் அறியாமல் கிண்டல் செய்து பிறர் மனதை நோகடிப்பதை நம் மார்க்கம் ஏற்றுக் கொள்வதில்லை. உலகில் தோன்றிய மக்கள் எல்லாம் ஒரே பொருளாதார நிலையிலும் பழக்க வழக்கங்களிலும் இல்லை. நாகரீகமற்ற அந்த மனிதரின் கிண்டலை இன்று நினைத்தால்கூட அவர் மீது எனக்கு வெறுப்பு ஏற்படுகிறது. அவர்கள் எப்பொழுதும் பிறரை மட்டம் தட்டியும் தாழ்த்தியும் பேசிக் கொண்டிருப்பதையே பொழுது போக்காக்க் கொண்டிருப்பாரகள்.  அவர்கள் வீட்டுக் குப்பையைக் கிண்டினால் கப்பல் கப்பலா ஏற்ற நிறைய சரக்கு உண்டு. 

நாம் நம்ம பேசுபொருளுக்குள் வருவோம்.

சர்க்கரை பத்தி தட்டோடு தர்ஹா வாசலில் உட்கார்ந்திருக்கும் லபையிடம் கொடுத்து ஃபாத்திஹா அல்லது மவுலுது என்று சொன்னால் முறையாக ஓதுவார். அங்கு ஒரு ஆண்டுக்கு ஒரு லபைதான். வருஷா வருஷம் லபை மாறிமாறி வருவார்கள்.  10 ½ ரூபாய் கொடுத்தாலும் 101 ரூபாய் கொடுத்தாலும் முகம் மலர வாங்கிக் கொண்டு வாழ்த்தி அனுப்புவார்கள். முத்துப்பேட்டை தர்ஹா பிரச்னை, நாகூர் தர்ஹா பிரச்னை அங்கு கிடையாது.  ஆங்காங்கே நேர்த்திக் கடனுக்கு இருப்பவர்கள் தூங்கிக்கொண்டும் விழித்திருப்போர் காசு கொடுப்பவர்களைப் பார்த்துக் கொண்டும் இருப்பாரகள். 

“உங்கள் ஹக்கில் ஏதாவது அவர்களுக்கு பிரியமிருந்தால் கொடுங்கள்!” என்று அந்த லபை மென்மையாகச் சொல்வார். அவரவர்கள் முகம பார்த்து பிரியமிருந்தால் கொடுத்துவிட்டு வரலாம். இது சுமார் 15 வருடங்களுக்கு முந்திய நிலைமையைச் சொல்கிறேன்.  இன்றைய நிலைமை என்ன என்று எனக்குத் தெரியாது. ஷிர்க்கை அடயாளம் கண்டுகொண்ட பின்பு அங்கு செல்வதில் விருப்பம் இல்லை.

அடுத்தப் பயணம், ஏர்வாடி! பஸ்ஸை விட்டு இறங்கி நடந்தால் இருபக்கமும் கடைகள். பனை ஓலைப் பெட்டியில் கருப்பட்டி மற்றும் சில பொருள்கள்.  என்கூட வந்த என் நண்பர் ஊரை விட்டு கிளம்பியதும் “தன் பிள்ளை எங்கேயோ கல் தடுக்கிக் கீழே விழுந்து விட்டானோ? தொட்டியில்  தூங்கிய பிள்ளை தொட்டில் கயிறு அருந்து கீழே விழுந்து காயப்பட்டு விட்டானோ? என்ற வீட்டுக் கவலையுடனேயே இருப்பார்.  பிள்ளையின் வய்து என்ன தெரியுமா? ஒன்றும் அவ்வளவு அதிகமில்லை.  பசித்தப்பின் கைசூப்பும் பழக்கம் உள்ள குழந்தை! குழந்தை பிறந்து பிறக்கிற எடையெட்டு பிறையோட பதினெட்டு வருஷமாகிரது. பதினெட்டு மாதமல்ல, பதினெட்டு வயது! ஒரு வருஷத்திற்குப் பணிரெண்டு மாதம்.  மலேசியாவில் அவர் இருக்கும்போது பிள்ளையை கவனிக்க வேண்டுமென்று அந்தப் பிழைப்பை விட்டுவிட்டு பிள்ளையைக் காப்பாற்ற ஊரிலேயே தங்கி பிள்ளையை நல்லாத்தான் வளர்த்தார். 

ஏர்வாடி பள்ளிவாசல் கேட்டிலேயே ஒரு ‘ட்டோல் கேட்!’. செருப்பையெல்லாம் கழட்டி அங்கே போட்டுவிட்டு டோக்கன் வாங்கிக் கொண்டு உள்ளே போக வேண்டும். பள்ளிவாசல் தூரம். ஒரே மணல், கால் வைக்க முடியவில்லை.  சூடு தாங்காத பாதம் ஓடு ஓடு என்றது. ஓடிப்போய் தர்ஹாவில் ஏறினோம். பலமுறை அந்த தர்ஹா போயிருக்கிறேன். இந்த முறை ஒரு புதிய் சிஸ்டம் அங்கே உண்டாக்கி இருந்தார்கள்.  ஒரு லபை முன் உட்கார்ந்து, 

“மவுலுது ஓதுங்கள்< என்றேன். பத்தியைக் கொளுத்தினார். ஒரு இளைஞர் வந்தார். 

“உங்களுக்கு ஏற்பட்ட தங்கடம், சீக்கு, பிணி, சூனியம் நீங்க இந்த ஃபார்மில் எல்லா விபரங்களையும் எழுதி ரூ101/- சேர்த்து உண்டியலில் போடுங்கள். உங்கள் பெயர், ஊர், வாப்பா பெயர், அட்ரஸ், டெலிபோன் நம்பர் எல்லாம் சரியாக எழுதி அந்த உண்டியலில் போடுங்கள்” என்றார்.

“இது என்ன புதிய சிஸ்டமாக இருக்கிறதே?” என்றேன்.

“உங்கள் மனுவை, வேண்டுதல் உள்ளவர்களின் மனுவை அவுலியாக்களே ஒவ்வொன்றாக பரிசீலித்து உங்கள் முசீபத்தை போக்குவார்கள்” என்றார்.

“எவ்வளவு நாளில் பதில் வரும்?” என்றேன்.

“உங்கள் கேஸினுடையத் தன்மையைப் பொருத்து பதில் வரும். சிக்கலான கேஸா இருந்தால் இரண்டு வருஷம்கூட ஆகும். நீங்கள் அடிக்கடி வந்து மீண்டும் ஒரு மனு (ரிமைண்டர்) போட வேண்டும்” என்றார்.

‘விஞ்ஞான முறையில் ஊழல்’ என்ற வார்த்தை தெரியும்.  இதுவும் ‘விஞ்ஞான முறையில் ஏமாற்றுதல்’ என்று புரிந்து கொண்டேன். ஒரு ஃபார்ம் வாங்கி அதில் என்னைப் பற்றிய தகவல், பெயரைத்தவிர எல்லாம் தவறாகக் கொடுத்தேன். ஊர் என்று எதையோ போட்டு ரூ 30/- கொடுத்தேன்.  

“என்ன முப்பது ரூபாய் கொடுக்கிறீர்கள்? ரூ 101/-“ என்றார். 

“திரும்பிப் போகவும் சாப்பிடவும் காசு இல்லை. வேண்டாமென்றால் திரும்பக் கொடுங்கள். யாராவது வந்தால் அவரிடம் கொடுத்து அனுப்புகிறேன்.” என்றேன்.

“சரி சரி” என்று அந்த ரூபாய் முப்பதையும் வாங்கிக்கொண்டார்..  ஃபார்மையும் முப்பது ரூபாயையும் கொண்டு சென்றவர், ஒரு தூணில் மறைந்துகொண்டு ரூ முப்பதை தன் பாக்கெட்டில் வைத்துவிட்டு அப்ளிகேஷன் ஃபார்மை மட்டும் உண்டியலில் போட்டார்.  இதை அறியாமல் என் கூட வந்த நண்பர்,

“எனக்கும் ஒரு ஃபார்ம் கொடுங்கள்” என்றார். கண்ஜாடை செய்து வேண்டாம் என்றேன். அது அவருக்குப் புரியவில்லை.  நாகூர் லபை சொல்லிய காணிக்கை என்ற சொல்லைக் கேட்டு மாட்டிக் கொண்ட புத்திசாலிதான் அந்த நண்பர். அவருடைய மனவியலை எந்த மனோதத்துவ நிபுனராலும் நிர்ணயிக்க முடியாது. குரங்குப்பிடி! குரங்கை பிடித்து அதை முதலை என்று தவறாகச் சொல்லிவிட்டாலும் மாற்றவே மாட்டார். முதலை முதலையே. தனக்கே எல்லாம் தெரியும் என்பார். மற்றவர்களை ஸீரோ என்பர். அந்த ஃபாரத்தில் அவருடைய உண்மை பெயர், அட்ரஸ், டெலிபோன் நம்பர் எல்லாம் சரியாக எழுதி ரூ 101/- கட்டினார்.  அந்த ரூ 101/- அந்த லபையின் பாக்கெட் உண்டியலில் சரணடைந்தது. ஃபார்ம் மட்டும் அவுலியாக்களின் உண்டியலில் போனது.  

ஒரு வருஷமானது. அவருக்குக் கடிதம் வந்தது.  உள்ளே சந்தனம், நார்சா வந்தது. அவுலியா, “ மீண்டும் அவனை என் தளத்திற்கு வரச்சொல், அவன் கேஸ் ரொம்ப சிக்கலானது. கவனித்துக் கொண்டிருக்கிறேன்” என்று லபையின் கனவில் அவுலியா வந்து சொன்னதாகவும் வியாழன் பிற்பகல் வந்து வெள்ளி இரவு என் தளத்தில் ‘தலைபோட்டு’ படுக்கச் சொன்னதாகவும் லபை கடிதம் எழுதி இருப்பதாக என்னிடம் சொன்னார். 

“உங்களுக்குக் கடிதம் வ்ந்ததா?” என்று கேட்டார்.  

“வரவில்லையே!” என்றேன். 

இப்படியெல்லாம் தொல்லைகள் தொடரும் என்று எனக்குத் தெரியும். அதனால் உண்மையான என் அட்ரஸை ஃபார்மில் எழுத வில்லை.  சமயங்களில் வலுத்த கை என்று தெரிந்தால் கலெக்ஷனுக்கு நேரிலேயே வந்து விடுவார்களாம்.

மலேசியாவிலிருந்து அஜ்மீர் சென்ற அரு நபரிடம் அங்குள்ள ஒரு லபை நன்றாக பைண்ட் செய்யப்பட்ட ஒரு பெரிய் லெட்ஜரை எடுத்து கொடுத்து உங்கள் காணிக்கையை எழுதுங்கள் என்றாராம். திறந்து பார்த்தால், பெரும் பெரும் பாம்பே புள்ளிகளின் பெயர்கள், அரசியல்வாதிகள், மந்திரிகள் என்று பெரும்புள்ளிகளின் பெயர்கள். ஒவ்வொருவரும் லட்சக்கணக்கான ரூபாய் காணிக்கை செலுத்தியதாய் இருக்க ஆக குறைந்த காணிக்கை அப்பவே 10 லட்சம்.  இது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நிலைமை.  உழல்கள் 98 லட்சம் கோடியை ரொம்ப சுலபமாகத் தாண்டும் இந்த காலகட்ட்த்தில் எவ்வளவு எழுதுவார்கள் என்று நமக்குத் தெரியாது..  98 ஆயிரம் லட்சம் கோடிக்கு எத்தனை சைபர் என்று  படித்தவர்களுக்கே இன்னும் தெரியாத இந்த கல கட்ட்த்தில் எவ்வளவு எழுதுவார்களோ?  அவுலியாக்கள்தான் அந்த ஹராமானப் பணத்தை ஒப்புக் கொள்வார்களா?

இவ்வளவு காணிக்கை நம்மால் முடியாது என்றதும் வேறு லெட்ஜர். இப்படி ஆளுக்கு ஏற்ற லெட்ஜர்.  ஒரு லெட்ஜரின் மொத்தத் தொகையையும் கூட்டினால் வரி போடாமல் அந்தத் தொகையைப் பயன்படுத்தி இந்தியாவின் பட்ஜெட்டை போட்டுவிடலாம்.  ஐந்து ஆண்டுகாலம் வரி இல்லாமல் இந்தியாவை ஓட்டலாம் என்றார்.   ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைய வைத்து சவாரி செய்யும் ஆசாமிகள் அவர்கள்  

ஒருநாள் ஒருவர் மலேசியாவில் என்னுடைய கடைக்கு வந்தார்.  முகத்தில் வறுமையின் கோடுகள் இல்லை. நல்ல உடை, தொப்பி, தோளில் வெண்ணிர ஹஜ் சால்வை சமூசா வடிவில் அல்லது பிரமிட் மாதிரி மடித்து முதுகிலிருந்து நெஞ்சு வரை போட்டிருந்தார். சால்வையில் ஓரங்களில் குஞ்சமும் நல்ல வேலைப்பாடும் கலைநயமும் கொண்டிருந்தது.  மற்றவர்களைப் போல் முகத்தில் ஏழ்மை தாண்டவமாடவில்லை.  கூடுதலான வருவாய் உள்ளவர் போல் தெரிந்த்து. அதனால அவரை யார் என்று என்னால் கணிக்க முடியவில்லை. மலேசியாவை சுற்றிப்பார்க்க வந்தவர் போலும் தெரிந்தது.  யாரோ எனக்கு தெரிந்தவர்கள் என் அட்ரசை கொடுத்து முக்கிய்மாகப் பார்க்க வேண்டிய இடங்களைச் சுற்றிக் காட்டச் சொல்லி இருக்கிறார்கள் போல் என்று நான் நினைத்தேன்.

“அஸ்ஸ்லாமு அலைக்கும், ஃபாரூக் ஹாஜியாரே” என்றார்.

“வ அலைக்குமுஸ்ஸலாம். நான் ஹாஜியார் அல்ல; நான் இன்னும் ஹஜ் செய்யவில்லை. ஆனால் நான் ஃபாரூக் தான்” என்றேன்.”. “நீங்கள் தேடி வந்த ஃபாரூக் ஹஜியார் இந்த வரிசையில் ஏழாவது கடை அவருடைய்து” என்றேன். நான் ஏதும் கிண்டலாகக் கதை சொல்லவில்லை. தவறான அட்ரசுக்கு வந்திருக்கலாம் என்றே இதைச் சொன்னேன். 

“நான் அங்கே போய் அவரைப் பார்த்துவிட்டுத்தான் வருகிறேன். அவர்தான் உங்களின் இடத்தைச் சொல்லி உங்களின் பெயரையும் சொல்லி என்னை இங்கு அனுப்பினார்” என்றார்.

“அப்படியா?” டீ குடிக்கிறீர்களா? வந்த விஷயம் என்ன?” என்று கேட்டேன்.

“டீ இப்போதான் அங்கே குடித்தேன். “ என்றார். 

ஒரு கவரை எடுத்து என்னிடம் தந்தார். திறந்து பார்த்தேன். அதில் ஒரு கலர் ஃபோட்டோ இருந்தது. ஃபோட்டோ வேறு ஒன்றுமில்லை ஒரு கச்சிதமான் வீடு. வீடு மாடி வீடு. ஆனால் மாடி இல்லை. அதற்கான பில்லர்கள் எழுப்பப் பட்டிருந்தது. தள வீடு வெளிப்பூச்சு இல்லை. எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் முகத்தைப் பார்த்தேன். திருநெல்வேலிப் பகுதியில் ஒரு ஊரில் மதர்ஸாவில் ஓதிக் கொடுப்பதாகச் சொன்னார். இரண்டு குமர்களாம். ஆண் பிள்ளை இல்லையாம். கீழ் வீடு மூத்த பிள்ளைக்காம். மேல் வீடு இளைய பெண்ணுக்காம். இரண்டுக்கும் மாப்பிள்ளை பார்த்தாச்சு. விரைவில் கல்யாணம். மாப்பிள்ளை இருவரும் வேறு வேறு ஊர் மதறஸாக்களில் ஓதிக் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். குறைந்த சம்பளம்.” என்றார். ஊரில் உள்ளவர்கள் உதவியால் கீழ் வீட்டைக் கட்டி விட்டேன். தளம் போட்டாச்சு. மேல் வீடு எழுப்பனும், இன்னும் ஜன்னல்,கதவு, பூச்சு எல்லாமே பாக்கி இருக்கு. ரூ 7க்குமேல் (லட்சம்) எஸ்டிமேட் என்றார். 

“எனக்கு உங்களால் ஆனதைச் செய்யுங்கள்” என்றார்.

மறைவாகச் சென்று மலேசிய நாணயம் 50 டாலர் கரன்ஸியில் இரண்டை வைத்து ஆக வெள்ளி 100 கொண்ட என்வலோப்பை அவரிடம் கொடுத்தேன். மறைவாகச் சென்று பணத்தை என்வலோப்பில் வைப்பதை எட்டிப் பார்த்தார். என்வலோப்பை அவர் கையில் கொடுத்தேன்.  அதை வாங்கிய அவர் உடனே திறந்து பார்த்தார்.  அவர் முகம் மாறியது.

“என்ன இது? நூறு வெள்ளி வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கே நல்லா இருக்கிறதா? என்று கோபமும் அதட்டலுமாக்க் கேட்டார். அதட்டலைக் கேட்ட எனக்குக் கோபம் வந்தது. ஆனால், அடக்கிக் கொண்டேன்.

“நம்மால் முடிந்தது அதுதான். எடுத்துக் கொள்ளுங்கள்” என்று மென்மையாகச் சொன்னேன். 

“நான் இவ்வளவு சொல்லியும் நீங்கள் நூறு வெள்ளியைத் தருகிறீர்கள். இதை வைத்து ஒரு லோடு செங்கல் வாங்க முடியுமா?” என்று கேட்டவர், 

“இந்தா பாருங்கள். உங்கள் பேருடைய ஃபாரூக் ஆயிரம் வெள்ளி தந்திருக்கிறார்” என்று வசூல் நோட்டைக் காட்டினார். 

அங்கே பெரும்புள்ளிகள் பெயர்கள், பெரிய பெரிய நோட்டு. அவர்களோடு என்னால் போட்டி போட முடியாது. என் வியாபாரம் ஆரம்பித்தே இரண்டரை வருடங்கள்தான் ஆகிறது. உழைப்பையும் உதிரத்தையும் காலத்தையும் வேறு ஒருவருக்கு அற்பணித்து விட்டு உடுத்திய கைலியோடும் உலர்ந்த வயிற்றோடும் அல்லாஹ்வின் நம்பிக்கையோடும் வெளியேறியவன் நான். அந்த முயல்களோடு போட்டிப் போட்டு ஓட இந்த ஆமையால் முடியாது. கதையில்தான் ஆமை வெல்லும். நிஜ வாழ்வில் முடியாது. 

“என்னால் முடிந்தது இதுதான். செங்கல் விலையெல்லாம் எனக்குத் தெரியாது. இந்தியாவில் பால் விலை அரிசி விலையெல்லாம் எனக்குத் தெரியாது.” என்றேன்.

“இந்தாங்கள் இதை நீங்களே வைத்துக் கொண்டு நல்லா இருங்கள்” என்று என்வலோப்பை மேசைமேல் போட்டார். பிள்ளைகளுக்கு ஓதிக் கொடுக்கிறேன் என்று சொன்னார். இவர் ஓதிக்கொடுக்கும் லட்சணம் தெரிந்து விட்டது. கதவைத் திறந்து படார் என்று அடித்து விட்டுக் கடையை விட்டுக் கோபமாக வெளியேறினார்.  ஒரு மதர்சாவின் பிரின்சிபால் இப்படி நடந்தார். இயல்பில் சிறு விஷயத்திற்குக் கோபப்படும் எனக்கு பல ஆண்டுகள் ஒருவரிடம் பட்ட அடியால் என் மனது உணர்ச்சியை மறந்து மரத்துப்போய் விட்டது. இதுவே பத்து வருஷத்துக்கு முந்திய ஃபாரூக்கா நான் இருந்திருந்தால் நடப்பது வேறாக இருக்கும். காலம் எனக்கு பாடம் போதித்து மாங்காயாக இருந்த என்னை ஊறுகாயாகப் பாடம் பண்ணிவிட்டிருந்தது. அமைதியாக அந்த நூறு வெள்ளியைத் தனியே எடுத்து வைத்திருந்தேன். அதிலிருந்து பிறகு வந்தவர்களுக்கு 20-10-30தாகக் கொடுத்து எம்ப்டி என்வலோப்பை கிழித்துப் போட ஆறுமாதம் ஆனது.

ஏனோ எனக்குத் தெரியவில்லை. யார்யாருக்கு நல்லெண்ணத்துடன் உதவி செய்ய வேண்டுமென்று உதவி செய்தேனோ அவர்கள் எல்லாம் எனக்கு புரூட்டஸாக மாறி என் முதுகில் குத்தினார்கள்.  பலரால் பல் முறை குத்தப்பட்டுச் செத்தவன் நான்.  புரூட்டஸ் ஒரு தடவை குத்தினான். ஜூலியஸ் சீஸர் ஒரு தடவை செத்தான். நானோ பல தடவை பலரால் குத்தப்பட்டு பல தடவை செத்தேன்.  மறக்க முடியாத இரண்டு நெருங்கிய நண்பர்கள் குத்திய கடைசி குத்துகள் என் கண்ணிரெண்டைத் திறந்து வாழ்க்கையில் ஒளி பிறந்தது.  இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் இரண்டு நண்பர்களின் பெயரும் என் பெயரும் ஒன்றே.  கடைசி இரு நண்பர்களின் குத்துகள் என் வாழ்வின் உதய சூரியன். எனக்கு விடிந்தது.  மறக்கவே முடியாத ‘மா பெரும் நண்பர்கள்” அவர்கள்.  ஒருவர் போய் விட்டார். ஒருவர் பள்ளியில் பயான் செய்கிறார். ஷெய்த்தான் வேதம் ஓதுகிறது.

இறுதியாக, “இலவசம் விலையானது” என்ற இந்தக் கட்டுரையில் தலைப்பை பிரதிபலிக்கப்போவது இனி வரும் நிகழ்வுகளேயாகும்.  முன் சொன்னதையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடும் இனி சொல்ல இருப்பவை.

take break ! :)

ஒரு நாள் காலை 10:30 மனி அளவுக்கு ஒருவர் என் கடைக்குள் நுழைந்தார். நுழைந்தவர் 

“அஸ்ஸலாமு அலைக்கும்” என்றார். 

“அலைக்கு முஸ்ஸலாம்” என்று அவரை நோட்டமிட்டேன். இதுவரை நான் அவரைப் பார்த்ததில்லை.  நல்ல நீட்டான உடை, கவர்ச்சியான நல்ல அகன்ற கருத்த முகம். முகத்துக்குத் தாடையில் கொஞ்சம்போல் தாடி.  நம் ஊர் ஜாடை. ஆனால், அவரை நம் ஊரில் பார்த்ததில்லை. 

“நீங்கள்தானே ஃபாரூக்?” என்றார். 

“ஆமாம்” என்றேன். 

“இந்த வரிசையில் இன்னொரு ஃபாரூக் இருக்கிறார். அவரை ‘கீலா கீலா’ என்பார்கள்.” என்றேன். 

பெரும்பாலும் என்னைத் தேடி ஊரிலிருந்து யாரும் வர மாட்டார்கள். காரணம் பசை இல்லை. ஊரில் மண்டபம், வணிக வளாகங்கள், தோப்பு, வயல்கள்,  வாடகை வீடுகள் என்று விளம்பர அய்ட்டங்கள் ஏதும் எனக்கு இல்லை. நான் ஆமைபோல் அமைதியாக வந்து விட்டு அமைதியாக போகிற ஆள்.  எனக்கு இங்கே விளம்பரம் இல்லை. நான் ஊர் வந்திருக்கும்போதுகூட என்னை பார்ப்பவரகளில் பெரும்பாலோர் என் பள்ளித் தோழர்கள் “ எப்போ வந்தா” என்று கேட்பதில்லை. புகழ்பெற்ற பார்ட்டி பேரைச் சொல்லி அவன் சுகமாக இருக்கிறானா? என்று மிகுந்த ஆதங்கத்தோடும் அக்கரையோடும் கேட்பார்கள். “ நீ சுகமாய் இருக்கிறாயா?” என்று கேட்பதில்லை. 

என் மூடு நல்லா இருந்தால், “ நல்லா இருக்கிறான்!” என்பேன். அதோடு விடுவதில்லை.
.  
“எப்போ ஊருக்கு வருரான்?’ என்பார்கள்.  

“நான் ஜோசியன் அல்ல! அது எனக்குத் தெரியாது. யாராவது குடுகுடுப்பைக் காரனிடம் போய் கேள்” என்பேன். 

“என்னப்பா இப்படி பதில் சொல்றா? அவனே உன்னைப்ப்த்தி இப்படித்தான் சொன்னான். ‘சிடுசிடு’ என்று பேசிவிடுவாயாம்.” என்பார்கள்.

“நான் சொலவதைக் கேள். நானும் நீயும் பள்ளிக்காலம் தொட்டு நண்பர்கள். என்னைப் பார்த்து நீ, ‘ நீ சுகமாக இருக்கிராயா?’ என்று கேட்கவில்லை. முதலில் மனித உறவுகளையும் நட்புகளையும் எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற உளவியலை நன்கு தெரிந்துந்துகொள்” என்பேன்.

ஒருமுறை நான் KLல் என் பெயருடைய நண்பர் கடையில் பங்காளியாக இருக்கும்போடு இரவு 7:30 மணிக்கு டெலிபோன் மணி அடித்த்து.  7:30 க்கு பிசினஸ் சம்பந்தமான டெலிபோன் வருவது அரிது.  எல்லாம் வெட்டிப்பேச்சு ஊர் வமு போந்தான் வரும்.  டெலிபோனை எடுத்து,

“ஹலோ” என்றேன். 

“யார் பேசுறது?” எதிர்முனைக் குரல். இந்தக் குரலுக்குரியவர் ‘எல்லாமே தனக்குத்தான் தெரியும் மற்றவர் யாருக்கும் ஏதும் தெரியாது,. தன் சட்டைத்தான் விலை உயர்ந்த சட்டை, தன் கடிகாரம்தான் விலை உயர்ந்த கடிகாரம், மற்றவரக்ளுடைய எல்லாமே மட்டம் என்று தம்பட்டம் அடிக்கும் பேர்வழி! இவருக்கு ஒரு நாளைக்கு சரியா கொடுக்கனும் என்று ரொம்ப நாள் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன்.  என் மாமா, அதிரை நிருபரின் இபுறாகீம் அன்சாரியுடைய வாப்பாவுக்கு நெருங்கிய நண்பரும்கூட.

“நான் சுருட்டு ஃபாரூக் பேசுறேன்” என்று அடக்க ஒடுக்கமாய்ச் சொன்னேன்.

“ஏன்…….அவர் இல்லையா?” என்று ரொம்ப அதட்டலான குரலில் கேட்டார்.

“நீங்கள் யார்?” என்றேன் மிகப் பணிவுடன்.

“ஏன் என்னைத் தெரியலையா? நான் தான் …… பேசுறேன்” என்றார். இதுவும் அதட்டலே.

“எங்கள் டெலிபோனில் எதிர்முனையில் பேசுபவரின் முகம் தெரியாது. அதனால் கேட்டேன்.” என்றேன். கிண்டல்தான்.” இப்போ நீங்கள் ….நபருடன் பேச வேண்டும். உங்கள் காலை அவர்தான் அட்டெண்ட் செய்ய வேண்டும் என்பது உங்கள் விருப்பம். நான் போனைக் கட் செய்கிறேன். இன்னொரு கால் போடுங்கள் அவர் எடுப்பார்” என்று டெலிபோனைக் கட் செய்தேன்.

மறு கால் வந்த்து.  அவர் எடுத்தார். நான் வெளியே போய் விட்டேன். ஒவ்வொன்றும் ஒரு விதம். எல்லாவற்றிற்கும் அடீப்ப்படை காரணம் பணம். மனிதாபிமானம் பணத்திற்கு பலியாகிக் கொண்டே இருக்கிறது.  இப்போழுது நாம் முன்பு விட்ட இடத்திலிருந்து தொடர்வோம்.

“நான் உங்களைத்தான் பார்க்க வந்தேன்” என்றார்.

“உட்காருங்கள்” என்று நாற்காலியைக் காட்டினேன். எதற்காக அவர் என்னைப் பார்க்க் வந்தார் என்று தெரியாமல் அவரையே பார்த்தேன்.

“நானும் அதிராம்பட்டிணம்தான். நாங்கள் முன்பு கடல்கரைத் தெருவில்தான் இருந்தோம் எங்கள் குடும்ப்ப் பட்டப்பேர் இத்” என்று ஒரு பட்டப்ப்யெரைச் சொன்னார். எனக்குப் புரிந்த்து.  நான் சிறு பிள்ளையா இருந்தபோது என் தாயார் அவர் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். அந்த வீட்டு திறந்த வெளி வேலியடைத்த முற்றத்தில் நான் பலமுறை விளையாடி இருக்கிறேன்.  அந்த வீட்டுப் பெண்கள் என் மீது பிரியமாக இருப்பார்கள்  அவர்கள் போன பின் அத இடம் காலியாக இருந்த்து.   இப்போது எப்படி இருக்கிரதுஎன்று தெரியவில்லை. கை மாறி கல்வீடாக மாற் இருக்கலாம்.  தனக்கு நம்ம ஊர் ஆள் என் இட்த்தை அடையாளம் சொல்லி அனுப்பியதாகச் சொன்னார்.

“இரண்டு டீ வரவழைத்துக் குடித்தோம்.

“என்ன விஷயம்?” என்றேன்.

“குர்ஆன் 300 பிரதிகள் தர்ஜமா கொண்டு வந்தேன். உங்களுக்குத் தெரிந்த பெரிய புத்தக வியாபாரி இருப்பதாகவும் நீங்கள் சொன்னால் எல்லாவற்றையும் அவரிடமே கொடுத்த் விடலாம் என்று கேள்விப்பட்டேன். அதனால் உங்களைத்தேடி வந்தேன்:” என்று சொன்னார்.

“குர் ஆன் எங்கே இருக்கிறது?” என்று கேட்டேன்.

“எல்லாமே கப்பலில் வந்து பினாங்கில் இருக்கிரது. மாதிரிக்கு மூனு கொண்டு வந்தேன்” என்று கையில் கொண்டுவந்திருந்த ஒரு பிரதியைக் காட்டினார். ஏற்கனவே வந்த்துதான். வெளியாகி ஐந்து ஆண்டுகளுக்குமேல் இருக்கும். பலமுறை reprint  செய்யப்பட்ட்து.

“இப்போது காலை நேரம். அவர் பிசியாக இருப்பார்கள். குர் ஆன் மாதிரியோடு மாலை 41/2 அல்லது 5 மணிக்கு வாருங்கள் போகலாம்” என்று சொல்லி அனுப்பினேன். 

சொன்னதுபோல் 4 1/2 மணிக்கு வந்தார்..  டீ குடித்துவிட்டு வேனில் அங்கே 5 மணிக்குப் போய்ச் சேர்ந்தோம்.  அந்த இடம் எந்த நேரமும் ட்ராஃபிக் நெருக்கடி மிகுந்த இடம்.  பார்க்கிங் கிடைப்பது அரிது. “லிட்டில் இந்தியா” என்று சொல்லப்படும் தமிழ் முஸ்லீம்களின் தேன்கூடு! மொச்சுமொச்சு என்று தஞ்சை மற்றும் ராம்நாடு முச்லீம்கள் நிறைந்த பகுதி. தமிழ் முச்லீம்கள் பள்ளியும் உண்டு.  ஜாலன் மஸ்ஜித் இந்தியா – இந்திய பள்ளிவசல் வீதி – அல்லது தெரு என்பதே இதன் பொருள்.  “பத்து ரோடு (கல் சாலை) கோலாலம்பூரின் (அண்ணாசாலைக்கு சம்ம்) முக்கிய வீதி.  

அருகில் பார்க்கிங் கிடைக்கவில்லை.  சற்று தூரமுள்ள ஐந்து மாடிக்கட்டிடத்தில் மேலே நாலாவது மாடிக்குப் போய் பார்க்கிங் செய்து விட்டு நாங்கள் போக வேண்டிய புத்தகக் கடைக்கு முதல் மாடிக்கு இருவரும் போனோம். 
தொடரும்..
S.முஹம்மது ஃபாருக்

இலவசம் விலை போனதே ! [அனுபவங்களின் விலாசம்] - குறுந்தொடர் - 2 22

அதிரைநிருபர் பதிப்பகம் | June 19, 2014 | , ,

அறிவிப்பு : அரேபியர்களுக்கு ஜாஹிலியா என்னும் அறியாமைக் காலத்தைப்போல அநேக இஸ்லாமியர்க்கு அல்லாஹ் மற்றும் ரசூல் (ஸல்) என்று அறிமுகப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் பொழப்புக்கு அவுலியாக்களை ஹீரோக்களாக வைத்து காசு பார்த்த கால கட்டம் அது. அற்றை பொழுதுகளில் தர்ஹாக்குச் செல்வது ஒரு மார்க்க கிரியையாகவே கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆகவே, என் கீழ்க்காணும் தர்ஹா பயணங்கள் அங்கு நடக்கும் உட்டாலக்கடி விஷயங்களை வெளிச்சம் போடவே அன்றி, ஷிர்க்கை ஊக்குவிக்க அல்ல, இனி அதன் பக்கம் எவரும் நெருங்கக் கூடாது என்று எச்சரிப்பதே இதன் நோக்கம்.

கு.தொ.: 2

ஒவ்வொரு தடவையும் மலேஷியா புறப்படும் போது முத்துப்பேட்டை தர்ஹா, நாகூர் தர்ஹா, கோட்டைப்பட்டணம் தர்ஹா, ஏர்வாடி ஆகிய அவுலியாக்கள் அடங்கிய தளங்களுக்குச் சென்று ஃபாத்திஹா அல்லது மவுலுது ஓதிவிட்டுப் புறப்படும் பழக்கம் இருந்தது.

ஒரு தடவை முத்துப்பேட்டை போனபோது எங்களுக்கு வாடிக்கையான ஒரு லபை வீட்டிற்குச் சென்று அவரை அழைத்து வந்து ஃபாத்திஹா ஒதுவது பழக்கம். எனக்கு ஏழு வயதாக இருக்கும்போது நேர்த்திக்கடனுக்காகத் தங்கி இருந்ததால் ஏகப்பட்ட பழக்கம். எனக்கு இப்போது வயது 75 முடிஞ்சு 76 நடக்கிறது. அந்த உறவு தொடர்கிறது. நோன்புக்கு நோன்பு புதுப்பிக்கப்படுகிறது; இன்ஷா அல்லாஹ் அது தொடரும். இப்போது அந்த லபையின் பேரன் வருகிறார். அன்று நான் நேர்த்திக்கடனுக்குத் தங்கி இருந்தபோது இந்தப் பையனின் தாயார் வயதுக்கு வராத சிறு பிள்ளை! அந்த மூத்த லபை காலமானபின் அவர் வாரிசு அவர் மகன் தொடர்ந்தார் நல்லவர், பாசமும் உள்ளவர். ஒரு முறை மலேசியாவுக்குக்கூட வந்தார். 

நிற்க, ஒருமுறை அங்கு சென்றபோது மண்ணில் கட்டிய குச்சுகளில் நேர்த்திக்கடன் 40 நாள் 60 நாள் அல்லது அவுலியாக்கள் தங்குபவர்களின் பிணிகளையெல்லாம் நீக்கி ‘உத்தரவு’ கொடுக்கும்வரை தங்கி இருப்பார்கள். நானும் என் தாயாரும் அங்கே 2 மாதங்களுக்கு மேல் தங்கி இருந்தோம். இந்த இடத்தில் ஒரு உண்மையை நான் சொல்லித்தானாக வேண்டும். மனசாட்சிக்கு மாறு செய்வதில் எனக்கு விருப்பமில்லை. எந்த மருந்து தின்றும் பல டாக்டரிடம் காட்டியும் குணமடையாமல் கை விடப்பட்ட கேஸாக நான் இருந்தபோது பலர் முத்துப்பேட்டை அக்கரைப்ப்பள்ளி போங்கள் குணமாகும் என்றார்கள். அதன்படி அங்கே என்னைத் தூக்கிப் போனார்கள். நடக்கக்கூட முடியா நிலை மட்டுமல்ல. எழுந்து நிற்கக்கூட முடியாத நிலையில் இருந்தேன். யாருக்கும் நான் பிழைப்பேன் என்ற நம்பிக்கை இல்லை. அனால், நான் பிழைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது!

அங்கே போனதும் கொஞ்சம் கொஞ்சம் கம்பை ஊன்றி நடந்தேன். மருந்து ஏதும் நான் சாப்பிடவில்லை. போகப்போக உடல் தேறியது. வியாதியின் உக்கிரம் கொஞ்சம் கொஞ்சம் குறைந்தது. நடக்கக்கூட முடியாத நான் ‘கிளித்தட்டு விளையாடும்’ அளவுக்குத் தெம்பு பெற்றேன். அந்த miracle என்ன என்று சொல்ல எனக்குத் தெரியாது. கடைசியாக பல மாதங்கள் கடந்து பூரண சுகத்துடன் ஊர் வந்த அடுத்த நாளே ஃபுட்பால் விளையாடப் போனேன். பார்த்த ஜனமெல்லாம் மூக்கின்மேல் விரல் வைத்தது. 

ஒருமுறை முத்துப்பேட்டை தர்ஹா சென்றபோது நேர்த்திக்கடனுக்குத் தங்கி இருப்போர்களின் குச்சுகள் இடித்து 9 ரூம்கள் எடுக்க அஸ்திவாரம் போட்டு சுவரும் இடுப்பளவு எழுப்பி இருந்தது. என்னை அங்கே அழைத்துப்போய் என்னிடம் காட்டினார். அதன் புளு பிரிண்ட்டையும் கான்பித்தார். மொத்த எஸ்டிமேட் எழு லட்ச ரூபாய் என்றார். அதற்கு மேலும் ஒன்பதுக்கும் நெருங்கும் என்றார். உங்களில் ஒருவர் பத்து மூடை சிமெண்ட் கொடுங்கள் என்றார். அப்பொழுது சிமெண்ட் மூடை ரூ 70-75 ஆக இருந்தது. நீங்களும் உங்கள் ஹக்கில் நல்லபடியாக செய்யுங்கள் என்றார். மலேசியா போய் ரெண்டொரு மாதங்களுக்குப்பின் ஊருக்கு கடிதம் எழுதுகிறேன் தருவார்கள் என்றேன். பின்பு தர்ஹாவுக்குப் போய் ஃபாத்திஹா ஓதிவிட்டு அவருக்குக் கொடுக்க வேண்டியதை கொடுத்தேன். தர்ஹா வாசலில் நின்ற ஒரு வாலிபர், “ விளக்குக்கு எண்ணெய் போட பணம் கொடுங்கள்” என்றார். பக்கத்துக் கடையில் ஒரு பாட்டில் எண்ணெய் வாங்கிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன். 

“எண்ணெய் போட பணம் கொடுங்கள்” என்றார்.

“ இப்பத்தான் எண்ணெய் வாங்கி கொடுத்து விட்டேனே” என்றேன். மீண்டும், 

“எண்ணெய் போட பணம் கொடுக்கனும்” என்றார். 

“எண்ணெய்தான் வாங்கிக் கொடுத்துவிட்டேனே” என்றேன். 

“என்ன, நீங்கள் ஒன்னுமே புரியாமல் பேசுகிறீர்கள்? சொல்றது விளங்குதா இல்லையா?” என்று கொஞ்சம் அதட்டலுடன் கேட்டார். ஃபாத்திஹா ஓதிய என் வாடிக்கை லபை, 

“ அவர் சொல்வது உங்களூக்குப் புரிய வில்லை. நீங்கள் வாங்கிக்கொடுத்த எண்ணெயை விளக்கில் போட ஒருவர் இருக்கிறார். அது அவருக்கு ஒதுக்கப்பட்டது. அந்த எண்ணெயை ஊற்றி விளக்கு கொளுத்த அவருக்குப் பணம் கொடுக்க வேண்டும். அந்தப் பணத்தைத்தான் அவர் கேட்கிறார். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு லபைக்கு இந்த காரியம் பிரித்துக் கொடுக்கப்படும்” என்றார்.

முன்பு நான் பலமுறை போனபோது இந்த சிஸ்டம் கிடையாது. இதுவும் அவுலியாக்களின் பேரைச் சொல்லி பக்தர்களை விஞ்ஞான முறையில் கொள்ளையடிக்கும் முறை!

எனக்கு ஆத்திரம் வந்தது.

“அப்படியெல்லாம் காசு கொடுக்க என்னிடம் பணம் காய்க்கும் மரமில்லை. எண்ணெய் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள் வேண்டாம் என்றால் தந்து விடுங்கள்” என்றேன். 

“அவுலியாக்கள் தளத்துக்கு வந்து விட்டு நீங்கள் இப்படியெல்லாம் நடப்பது நல்லதல்ல” என்றார்.

“நல்லதோ கெட்டதோ அது என்னோடு இருக்கட்டும். நான் பணம் கொடுக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு 

“எண்ணெய் வேண்டுமா வேண்டாமா?” என்று அதட்டினேன்.

இதற்கிடையில் மற்றொரு வளமான பக்தர் குடும்ப சகிதம் வந்ததால் கம்யூனிகேஷன் தொடர்பு அறுபட்டது. நானும் என் நண்பரும் புறப்பட்டு நாகூர் போனோம்.

போகும் வழியில் பாப்பா ஊர்! அங்கு போய் ஃபாத்திஹா ஓதினோம். பணம் கொடுத்தோம். வாங்கிக் கொண்டு எங்களை துவா செய்து அனுப்பி வைத்தார் ஒரே ஒரு லபை. நேராக நானும் நண்பரும் நாகூர் சென்றோம். நாங்களாகவே ஃபாத்திஹா ஓதினோம். உண்டியலில் காசு போட்டோம். வாங்கிக் கொண்டுபோன சாம்புராணியை சட்டியில் போடப் போனோம். சாம்புராணி சட்டி அருகில் விசிறியுடன் நின்றவர் சட்டியில் சாம்புராணியைப் போட கட்டணம் கேட்டார். ரூ 10/-தான், கட்டினோம். போட்ட சாம்புராணி புகைந்து மணம் பறப்பியது. 

“நாகூரில் மவுலூது ஓதி ரூ 10/- கொடு. நான் வேண்டிக்கொணடேன்” என்று என் தாயார் என்னிடம் சொல்லி அனுப்பியது. ஒரு தூணில் சாய்ந்து கொண்டிருந்த ஓரு நடுத்தர வயதுக்காரர் எங்களைப் பார்த்து, 

“மவுலுது ஓதுனுமா?” என்றார். என் நண்பர் ஆமாம் என்றார். என் நண்பருக்கும் அப்படி ஒரு வேண்டுதல் இருந்தது. ஓதுபவர் இடது புறத்தில் ஒரு கல்லாப்பெட்டி. அவருக்கு முன்னால் ஒரு ஓலைப் பெட்டி உண்டியல்போல் நடுவில் காசு போடும் அளவுக்கு துவாரம் இருந்தது. அந்த ஓலைப்பெட்டி மல்லிகைப் பூ சரத்தால் கல்யாண பெண்போல் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

நானும் என் நண்பரும் எதிரே உட்கார்ந்தோம். 

“யார் பேருக்கு மவுலுது ஓத வேண்டும்? “ என்றார் லபை. என் நண்பர் என்னை விட மூத்தவர். அவரைக்காட்டி,

“ஷ பெயர் ஷாகுல் ஹமீது. அவர் பெயரில் ஓதுங்கள்” என்றேன். 

“உங்களுக்கு?” என்றார். 

“பிறகு” என்றேன். 

“மவுலுது ஓத எவ்வள்வு?” என்றேன்.

“பெரிய மவுலுது ரூ 50/-; சின்ன மவுலுது ரூ 30/-“ என்றார். 

“எங்களுடைய நிய்யத்து ரூ 10/- தான், அதற்கு உள்ள மவுலுது ஏதாவது இருக்கா?’ என்றேன். (அந்தக் காலகட்ட்த்தில் ரூ 10/- என்பதும் பெரிய காசே!) என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு,

“ ஓதலாம்” என்றார். என் நண்பரைப் பார்த்து,

“ஓதலாமா?” என்றார். இப்படி ஒரு மரியாதை நிலவி வந்தது. நண்பர்,

“ஓதுங்கள்” என்றார். 

“காணிக்கையை இந்தப் பெட்டியில் போடுங்கள்” என்றார். இந்த லபை காணிக்கை என்று சொன்னதில் எனக்கொரு சந்தேகம் ஏற்பட்டது. வார்த்தையின் சூசகம் என்னை உஷார் படுத்தியது. ஆனால், என் நண்பரோ ஒரு முந்திரிக் கொட்டை. எல்லாம் அவருக்குத்தான் தெரியும். அவர் பிடித்த முயலுக்கு மட்டும் கால் மூனு என்பார். மற்றவர்களும் நான் மூனு கால் முயல் பிடித்தேன் என்றால் இவர் நான் பிடித்த முயலுக்குக் கால் ரெண்டு என்பார். இன்னும் கொஞ்சம் போனால் முயலுக்கு காலே இல்லை என்று அடம் பிடிக்கும் ஆசாமி. பிறர் சொல்வதை எற்றுக் கொள்ளவே மாட்டார். நான் எவ்வளவோ கண் ஜாடை காட்டியும் புரிந்து கொள்ளாமல் பாக்கெட்டிலிருந்து ரூ 10/- எடுத்து ஓலைப்பெட்டி உண்டியலில் போட்டு விட்டார்.

அடுத்து லபை என்னைப் பார்த்து, 

“உங்கள் காணிக்கையையும் பெட்டியில் போடுங்களேன்” என்றார்.

“நீங்கள் அவர் பெயருக்கு மவுலுது ஓதுங்கள்” என்றேன். 10 நிமிஷத்தில் மவுலுது முடிந்தது. சின்ன மவுலுதுக்கு சின்ன மினிட்ஸ்தானே!. ரெண்டு மணி நேரமா ஓடும்? மவுலுது முடிந்து நண்பர் பேரால் துஆ கேட்டு சக்கரை சுருளை எடுத்து எங்களுக்குக் கொஞ்சம் தந்து,

"நல்லா நேர்ந்துக்கிட்டு வாயில் போடுங்கள்” என்றார்.

“அடுத்த தடவை வந்து அல்லாஹ்வும் அவுலியாக்களும் உங்களுக்கு நிறைந்த பரக்கத் தருவார்கள்” என்று நன்றாக கனியக் கனிய வாழ்த்தினார். சர்க்கரை சுருளில் பாக்கியை அவர் கையில் கொடுத்து,

“மவுலுது காசு கொடுங்கள்!” என்று நிதானமாகவும் மென்மையாகவும் கேட்டார். நான் நினைத்தது நடந்தே விட்டது! என்று எண்ணினேன். என் நண்பர் பதறி, 

“அதைத்தான் பெட்டியில் போட்டு விட்டேனே?” என்றார்.

“நீங்கள் பெட்டியில் போட்டது காணிக்கை. அது மவுலுது காசு அல்ல” என்று லபை வாதிட்டார்.

“நான் போட்டது மவுலுது காசுதான்” என்று நண்பரும் வாதிட்டார்.

“நான் யார் தெரியுமா? என் பேரும் இங்கு அடங்கப்பட்டிருக்கும் அவுலியாவும் ஷாகுல் ஹமீது ஆண்டவர்கள் பேர்தான்” என்று வாதம் ஒரு பத்து நிமிஷம் ஓடியது. லபையை வெல்ல முடியவில்லை. பிரச்னையைத் தீர்க்க என் நண்பர் கையில் காசு இல்லை. நண்பர் என்னைப் பார்த்தார். விட்டோ பவர் என் கையில் இருந்தது. நன்றாகப் பாடம் படிக்க வேண்டுமென்று விட்டுப் பிடித்தேன். கடைசியாக என்னுடைய ரூ 10/- லபை கையில்,

“இந்தாருங்கள், இது நீங்கள் அவருக்காக மவுலுது ஓதிய காசு” என்று கொடுத்தேன். லபை வாங்கிக்கொண்டார்.

“உங்கள் பெயரில் மவுலுது ஓதவா? உங்கள் பெயர் என்ன்?” என்று கேட்டார். 

“எனக்கு மவுலுது ஓத வேண்டாம்” என்று சொன்னேன். 

“ஏன்? மவுலுது ஓத வேண்டுமென்று சொன்னீர்களே?” என்றார்.

“ஆமாம், இப்போ நீங்கள் ஓதிய மவுலூதில் நான் பாதியை அவரிடமிருந்து வாங்கிக்கொள்கிறேன். காசு இல்லை. மவுலுது ஓதினால் ஊர் போய்ச் சேர கையில் காசு இருக்காது. கையில் பாக்கி இருப்பது ரூ 100/-தான். இருவருக்கும் சாப்பாடு, ரயில் டிக்கெட்டுக்கு காசு போதாது. ஊருக்கு கால் நடையாக போகவேண்டி வரும். நாங்கள் எல்லாம் வாணியம்பாடி, ஈரோடில் இருந்து வரும் தோல் வியாபாரிகள் அல்ல. ஆயிரம் இரண்டாயிரம் என்று அவர்கள் அள்ளிக் கொடுப்பார்கள். நாங்கள் நாகூர் ஏழை லபையை விட ஏழைகள்” என்று குத்தலாகச் சொல்லிவிட்டு எழுந்து வந்தோம். என் தோழரின் மூஞ்சி விடியலே. செருப்புக் காவலாளிக்கு காசு கொடுத்துவிட்டு வெளியே வந்தோம்.

“அட பாவிகளா, நீங்க நல்லா இருப்பியலா? இந்த அவுலியாக்கள் தளத்தில் இப்படி அநியாயம் செய்யிறியலே! இந்த சாமியும் அந்த சாமியும் கேக்காதா? நீங்க நாசமாப் போக” என்று ஒரு இந்துக் கிழவி சர்க்கரை சுருளை பிரித்து வைத்துக்கொண்டு ஒரு கடையில் சண்டை போட்டுக் கொண்டிருந்தது. என் கூட வந்த என் நண்பர் முந்திரிக்கொட்டை. வேகமாக அந்தக் கிழவி நோக்கிப் போனார். யாராவது சண்டை சச்சரவு செய்து கொண்டிருந்தால் பஞ்சாயத்துப் பண்ண முந்திக் கொண்டு அந்த வம்பை இவர் தூக்கிச் சுமப்பார். இங்கேயும் பஞ்சாயத்துச் செய்யப்போய் ‘ நாகூரான் கையில் அடிவாங்க’ எனக்கு சக்தி இல்லை. நான் போட்டிருந்த சட்டையும் புதுச் சட்டை. சட்டையும் கிழிந்து கன்னமும் வீங்கி ஊர்போய்ச்சேர விருப்பமில்லை. 

என் முந்திரிக்கொட்டை நண்பர் பாய்ந்துகொண்டு முந்திப் போனதும் கையை பிடித்து நிறுத்தி “இதில் போய் மாட்டாதீர்கள்” என்று சொல்லி நாலாம் பேரோடு அஞ்சாம் பேராக வேடிக்கை பார்த்தோம்.

“இந்த பயலுவோட அட்டகாசத்துக்கு கேட்க, அள்ளித்தூத்த மண்ணுகூட இங்கே இல்லையே” என்று அந்தக் கிழவி அங்கலாய்த்தவள் எங்களைப் பார்த்த்தும் அருகில் வந்து, 

“இத பாருங்கையா,முப்பது ரூபாய் சர்க்கரை சுருளை இந்தே நீட்டம் நீட்டி சுருட்டி மூனு ரூபா கூட பொறாத சக்கரையை உள்ளே திணிச்சிருக்கான். எஞ்சாமியை கும்புடாமே ஒஞ்சாமியை கும்புட வந்தேன். சாமிக்கு அஞ்சாமே சக்கரை சுருளை இப்படி செஞ்சிருக்கானே, உங்க அல்லாஹ் அவனை கேக்க மாட்டாரா. ஒங்க அல்லாக்கு பயந்து சொல்லுங்கய்யா” என்று அந்தக் கிழவி எங்களிடம் வந்தாள். முந்திரிக்கொட்டை,

“ சக்கரை எங்கே வாங்குனா?” என்று அவர் பஞ்சாயத்தை ஓப்பன் செய்தார்.

“நீங்கள் சும்மா இருங்கள். நான் சொல்கிறேன் “ என்று சொல்லி சக்கரை சுருளை கையில் வாங்கிப் பார்த்தேன். ‘சக்கரை மதிப்பு ரூ 5க்கும் மேல் போகாது. கிழவியிடம் சொன்னேன், 

“ கிழவி தப்பு உன்னுடைய்து” என்றேன். 

“என்ன சாமி நீ இப்படி சொல்றே? “ என்றாள்.

“சொல்றதை கேளு. நீ செஞ்ச முதல் தப்பு ஒஞ்சாமியை உட்டுட்டு எஞ்சாமியைக் கும்புட வந்தது ஒன் முதல் தப்பு. என்றேன். 

“அப்புடி சொல்லு சாமி. எம் புத்திக்கி என்னை காலுல கிடக்கிற செருப்பை கெளட்டி எங்கன்னத்துல நாலு அடி போடு” என்றாள்.

“ரெண்டாவது சக்கரை. முப்பது ரூபாய் சக்கரை சுருளில் 5 ரூபாய் சக்கரைதான் இருக்குது என்று சொன்னியா” என்றேன். 

“ஆமாஞ்சாமி” என்று ஒத்துக் கொண்டாள் 

“நானும் ஒத்துக்கிறேன். அஞ்சு ரூபாய் சக்கரைதான் இருக்கு. பாக்கி 25 எதுக்கு தெரியுமா?” என்றேன். என்னையே பார்த்தாள். பார்வையில்கேள்விக்குறியும் ஆச்சரியக்குறியும் நின்று விளையாடியது.

“அஞ்சு ரூபாய் சக்கரையை உள்ளே வச்சு பாக்குறவங்களுக்கு முப்பது ரூபாய் சக்கரையா தெரியும்படி சுருள் மடிச்சான் பாத்தியா, அந்த திறமைக்குக் கூலிதான் நீ கொடுத்த பாக்கி ரூஉ25/- “ என்றேன். அதோடு, 

“நல்லபடியா ஊர் போய் சேர்ந்து உஞ்சாமியை கும்பிடு போ” என்றேன். 

“எம்புத்தியை செருப்பாலே அடிக்கனும்” என்று சொல்லி கிழவி சக்கரை சுருளோடு நாகூரை விட்டு நகர்ந்தாள். அவள் ஃபாத்தியா ஓத போக வில்லை. நாங்களும் நகர்ந்தோம். அத்தோடு நாகூர் ஸ்டாப்பில் எங்கள் பஸ் நிற்கவில்லை. 

விஞ்ஞான ரீதியிலான செய்தி பரிமாற்ற வளர்ச்சியைப் பயன்படுத்தும் நாகூர் தந்திரம் பற்றி ஆகக் கடைசியாக ஒரு தகவல் கிடைத்தது. நாகப்பட்டிணம் ரயில்வே ஸ்டேஷனில் நாகூர் லபைகள் தங்கள் தங்கள் பிரதிநிதி ஒருவரை நிறுத்தி வைத்திருக்கிறார்களாம். மலையாளம், சேலம், ஈரோடு, ஆந்திரா, கர்நாடகா பகுதியிலிருந்து வரும் ரிஸர்வ்ட் வண்டியில் நாகூர் போறவர்களின் பெயர் பட்டியல் ஒட்டபட்டிருக்கும். அதில் உள்ள பெயர்களையும் கோச் நம்பரையும் தனக்கு வேண்டிய லபைமார்களுக்கு தகவல் சொல்ல வேண்டியது. அந்த ரயில் நாகூர் சென்றதும் அந்தலபை அவரிடம்,

”அஸ்ஸலாமு அலைக்கும் குத்தூஸ் பாய். வாங்கோ வாங்கோ” என்று அவருக்கு சலாம் சொல்லி குத்தூஸ் பாயை ரயில்வேஸ்டேஷனுக்குப் போய் அழைப்பாராம். 

“வ அலைக்குமுஸ்ஸலாம்” சொன்ன குத்தூஸ் பாய் ஆச்சர்யப்பட்டு 

“ என்ன பாய் என் பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும்? நான் இங்கே வருவதை உங்களுக்கு யார் சொன்னது? “ என்று ஆச்சரியத்துடன் கேட்பாராம்.

“என்ன பாய் இப்படி கேட்டு விட்டீர்கள்? ராத்திரி என் கனவில் நாதாக்கள் வந்து என்னுடைய் அடியான் குத்தூஸ் பாய் நாளை காலை வண்டியில் என்னை நாடி வருகிறான். அவனை நீ போய் அழைத்து வந்து என் தளத்திற்கு கூட்டி வா. அவனை நன்றாக கவனித்து அனுப்பு” என்றும்

“நாதாக்கள் ராத்திர் கனவில் வந்து எனக்கு உத்தரவு போட்டார்கள். அதான், சுபுஹு தொழுகையை முடித்ததும் ஓட்டமும் நடையுமாக ஸ்டேஷனுக்கு வந்தேன்” என்பாராம்.

“ஆமாம் உங்கள் மரியம் பீவியும் பாத்திமா பீவியும் எங்கே என்பாராம். ( மரியம் பீவி குத்தூஸ் பாய் மனைவி, பாத்திமா பீவி குத்துஸ் பாய் மகள் என்பதை நாம் நமது யூகத்தில் அறிந்து கொள்ள வேண்டும்)

அதைக் கேட்ட குத்தூஸ் பாய்க்கு உச்சி மூதல் உள்ளங்கால் வரை குளிர்ந்து போய்விடும். லபைக்கு அன்று நரி முகத்தில் முழித்த மாதிரி அதிர்ஷ்டம் அடிக்கும். ஈரோட்டு தோல் வியாபாரியின் எலும்புகூட குளிர்ந்துபோய் புறப்படும்போது லபைக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பர். பெரிய லபையின் குடும்பத்தார் பேரன் முதல் பெரியம்மா வரை முன்னே வந்து தலை காட்டும். பின்பு? பின்பு என்ன, குத்தூஸ் பாய் அட்ரஸ், தொழில், டெலிபோன் நம்பர் கைமாறும். அடிக்கடி கடிதத்தில் சந்தனம் வரும் 

“நாதாக்கள் என் கனவில் வந்து என் நார்சாவை குத்தூஸ் பாய்க்கு அனுப்பி என்னை அவனுக்கு நினைவு படுத்து என்று சொன்னார்கள். இத்துடன் நார்சா வருகிறது பெற்றுக் கொள்ளவும். அடுத்த கிழமைக்கு வந்து ஒரு ராத்திரி தலையைப் போடச் சொல்லு. அவன் முஸிபத் எல்லாம் பறந்து போய் விடும் என்றார்கள்” என்று கடிதம் வரும்.. ஒரு மாசத்திற்குள் குத்தூஸ் பாய் வருவார். அல்லது அவர் மகன் வருவார். குத்தூஸ் பாய் எங்கே என்று கேட்டால் பாபா மவுத்தா போய் மூனு மாசமாச்சே என்று மகன் சொல்வான். 

“நான் நெனச்சது சரிதான். நான் தான் தப்புப் பண்ணிட்டேன். நான் நாலு மாதத்துக்கு முன்னேதான் அந்த மினாவ் கண்டேன். கடிதம் போட மறந்து விட்டேன். அப்பவே கடிதம் போட்டிருக்கனும் மறந்து விட்டேன். மவுத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்”. என்பார். ( எப்படி இருக்கு பல்ட்டி?)

இந்த மாதரி டெக்னிக்கெல்லாம் அதிராம்பட்டினம் கடல்கரைத்தெரு லபைமார்களுக்குத் தெரியவில்லை. தர்ஹாவை யே நம்பி நம்பி தர்ஹா சொத்தையெல்லாம் புத்திசாலிகளிடம் பரிகொடுத்துவிட்டு கடைசியாக எல்லாம் போன பின் தூங்கி எழுந்து தெம்மா கெம்மா என்று விழிக்கிறார்கள். எங்கள் உரிமை எங்கள் சொத்து என்கிறார்கள். உரிமை இருக்கிறது. எங்கே இருக்கிறது சொத்து? நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தார்கள்; விழித்தவன் பறித்துக்கொண்டான். கொடுத்தவன் தெருவில் நின்றான். 

இப்பொழுது புதிய கபுர்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்கள். பச்சை போர்வை போர்த்திய புதிய கபுரில் எண்ணெய் போட்டு குத்து விளக்கு கொழுந்து விட்டு எரிகிறது.

அடுத்து என் நேர்த்திக்கடன் பயணம் மேற்கு நோக்கி....
தொடரும்...
S.முஹம்மது ஃபாருக்

இலவசம் விலை போனதே ! [அனுபவங்களின் விலாசம்] - குறுந்தொடர் - 1 18

அதிரைநிருபர் பதிப்பகம் | June 12, 2014 | , , ,

கு.தொ : 1

இந்தக் கட்டுரையின் கதைக் களம் மலேசியா என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.  பெரும்பாலும் நோன்பு காலங்களிலும் நோன்பு நெருக்கக் காலங்களிலும் இந்தியாவிலிருந்து பள்ளிகளில் தொழுகை வைக்கும் இமாம்கள் என்றும் மோதீன்கள் என்றும் லபைமார்கள் என்றும் நிறைய பேர் வசூலுக்கு வருவது வழக்கம்.  இவர்களை அழைத்து வரவும் தங்குவதற்கு இட வசதி ஏற்பாடு செய்து தரவும் சிலர் இங்கு, மலேசியாவில் ஒரு டூரிஸ்ட் கைட் போலவே செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த கைடு ஆசாமிகளுக்கு மலேசியாவில் உள்ள கடை வைத்து வியாபரம் நடத்தும் ஒவ்வொரு கடையைப் பற்றிய முழு பொருளாதார நிலையும் முதலாளிகளின் பையோ டேட்டாவும் அத்துபடி.  ஒவ்வொரு கடைக்காரரும் எவ்வளவு கொடுப்பார் எதைச் சொன்னால் அவர் மனம் ‘இறங்கும்’ என்றும் இவர்களுக்கு மனப்பாடம்.  ஒவ்வொரு வசூலிலும் 20% முதல் 25% வரை கமிஷன்.  தங்குமிடம், போக்குவரத்துச் செலவு எல்லாம் வசூலுக்கு வருபவர்தான் கட்ட வேண்டும்.  வியாபர ஸ்தலத்தின் பெயர் பலகையைப் பார்த்தும் சிலர் கணிப்பதுண்டு.  உதாரணமாக, 786 என்று எழுதி பிறையும் நட்சத்திரமும் போட்டு syrikat Abdul Karim & Anak Anak, அதாவது ஆங்கிலத்தில் Abdul Karim & Sons  என்று இருந்தால் ஓரளவு வளமான ‘கை’ என்று கணிப்பார்கள்.  அல்லது syrikat Abdul karim Sdn Bhd (Sdn Bhd என்றால் private limited) இது ரொம்ப வளமான “கை” என்று கணிப்பார்கள். 

Syrikat என்ற மலாய் சொல்லுக்கு Company என்று பொருள்.  தனியாருடையதாக இருந்தால் Kedai Buku Abdul Kadir என்று போர்டு தொங்கும்.  இது பங்குதாரர்கள் தொந்தரவு இல்லாத கடை.  முதலாளியே மனம் வைத்தபடி எதையும் செய்யலாம்.  எவனுக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமில்லை.  வெறும் பேக்கை போக்கைகளை பங்காளிகளாக சேர்த்துக்கொண்டு புத்திசாலிகள் ஓடியாடி சம்பாதித்து வருஷ கடைசியில் கணக்கு பார்க்கும்போது வருஷம் 364 நாட்களும் தூக்கமோ தூக்கமென்று தூங்கிவிட்டு அந்த ஒரு நாள் மட்டும் “இது ஏன் இந்த செலவு கூடி இருக்கிறது? அது என்ன அந்த செலவு அப்படி இருக்கிறது? “ என்று கேள்விமட்டும் கேட்கும் ஸ்லீப்பிங் பார்ட்னர் தொல்லையும் லொள்ளும் இருக்காது.

“மூனு மாதத்திற்கு முன் கடைக்கு வந்தேன். அந்த கட்டை பய என்னை கண்டும் காணாமே வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தான்” என்றும், “என் மருமகன் இங்கு வந்தபோது யாரும் தே (டீ) வாங்கிக் கொடுக்கலையாம். இப்படியெல்லாமா தொழிலை நிர்வாகம் செய்வது?’ என்ற முனகலும் பங்காளி தொழிலில் உண்டு.  அந்த காவியம் எழுத வேண்டுமென்றால் கம்பனைத்தான் எழுப்பிவர வேண்டும். அவன் “கம்பெனியாணம்” என்று தலைப்புப் போட்டு எழுதுவான். 

இப்போது பிரச்னைக்கு வருவோம்.  இங்கே நான் பெறிய முதலாளி! பெறிய முதலாளி என்று பெரிய ‘றி’ போட்டு எழுதினேன்.  தமிழ் வழக்குப்படி இது தப்பு.  சிறிய ‘ரி’ போட்டுத்தான் பெரிய முதலாளி என்று எழுத வேண்டும். சின்ன ‘ரி’ போட்டால் பெரிய முதலாளிக்குக் கோபம் வரும்.  “என்னிடம் கை நீட்டி சம்பளம் வாங்குறவன் என்னை சின்ன ‘ரி’ போட்டு கவலப்படுத்தி விட்டான்” என்று கோபித்துக் கொள்வார்.  அதனால்தான் பெரிய ‘றி’ போட்டு எழுதினேன்.  எழுத்துப் பிழை கண்டு பிடிக்க வேண்டாம். 

இனி இப்பொழுது பேசுபொருளுக்கு வருவோம்.

ஒரு நாள் பகல் 2 ½ மணி இருக்கும்.  28 வயது மதிக்கத்தக்க ஒருவரும் அவரோடு மெல்லிய தேகமும் சாதாரண உடையும் உடுத்தி வறுமையில் வாடும் தோற்றத்துடன் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரும் கடைக்குள் நுழைந்தனர்.

“அஸ்ஸலாமு அலைக்கும்” என்று இருவரும் ஒரே குரலில் சலாம் சொன்னார்கள்.  நானும் பதில் சலாம் சொல்லி நாற்காலியில் உட்காரச் சொன்னேன். உடனடியாக கையில் கொண்டு வந்த ஃபோட்டோ ஆல்பத்தை எடுத்து “இதைப் பாருங்கள்” என்றார். பார்த்தேன்.  குழந்தையும் குட்டியுமாக பெண்களும் ஆண்களும் நின்றுகொண்டிருந்தார்கள்.  மற்ற ஃபோட்டோக்களில் சின்ன சின்ன குடிசை வீடுகள் அருகே குப்பை, கூளம், கோழி, நாய், சாக்கடை, உடைந்து போன பானை சட்டிகள்.  கலர் ஃபோட்டோக்கள்.  ஒரு பழைய கீத்துக் கொட்டகை அதன் முன் ஒரு பழைய பச்சை மை போர்டு அந்த கிராமத்தின் பெயரை வெள்ளை மையால் எழுதி “தொழுகிற பள்ளி” என்று போர்டு தொங்கியது.  இப்படி பல ஃபோட்டோக்கள். ஏழ்மையின் அவல நிலையை அந்த வண்ணப்படங்கள் தெளிவாக்கின.  நல்ல கேமராக் கலையில் கைதேர்ந்த படப்பிடிப்பாளன் எடுத்த ஃபோட்டோவாக இருந்தது.   பார்த்துவிட்டு திருப்பி அவரிடம் கொடுத்தேன்.  இந்த பீடிகை எதற்கு என்று தெரிந்து கொண்டேன்.

“நாங்கள் பாண்டிச்சேரி அருகிலுள்ள, ஒரு கிராமத்தின் பெயரைச் சொல்லி, அங்கிருந்து வருவதாக” சொன்னார்.  நான் கேட்டுக் கொண்டு சும்மா இருந்தேன்.  “இது ஒரு ஏழைகள் நிறைந்த கிராமம்.  சுமார் 100-150 இஸ்லாமிய குடும்பங்கள் இங்கே இருக்கிறது.  அதோடு 40-50 இந்துக் குடும்பங்களும் அங்கே ஒற்றுமையாக பலகாலம் வசித்து வருகிறார்கள்.  சென்ற மூன்று மாதங்களுக்கு முன்பாக மதம் மாறிய அந்த இந்துக் குடும்பங்கள் எல்லோருக்கும் கலிமா சொல்லி அவர்கள் விருப்பப்படி இஸ்லாத்திற்கு கொண்டு வந்து விட்டோம்.  ஆண்களுக்கு ஹத்தனாவும் செய்து விட்டோம்.” என்றார்.

அவர்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுக்கவும் நல்ல உடைகள் கொடுக்கவும் கீத்து கொட்டகையாக இருக்கும் பள்ளிகளை கட்டிடமாகக் கட்டித்தரும்படி பலமுறை பாண்டிச்சேரி முதல்வர் ஃபாரூக் மரைக்காரிடம் கேட்டும் அவர் அது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. அவர் கோயில் திருவிழாக்களில் தேர் இழுக்கிறார்” என்றார்.

அவர் சொன்ன செய்திகள், காட்டிய படம் எல்லாம் பொய். ஒவ்வொரு நோன்பு மாதங்களுக்கு முன்பு வந்து பின்பு வருபவர்களை ஒவ்வொரு இடமாக்க் கூட்டிப்போய் ஏதாவது கதை சொல்லி வசூல் செய்து வசூலில் பெரும் பகுதியை இந்த இளைஞர் விழுங்கி விடுவார் என்று பலர் என்னிடம் சொல்லி இருக்கின்றனர். இவருக்குக் கோலாலம்பூரில் தமிழ் முஸ்லிம்களின் கடை எங்கே இருக்கிறது , எதைச் சொன்னால் எவ்வளவு கொடுப்பார்கள் என்ற கணிப்பில் நிபுணர்.   இவர் பிழைப்பே இதுதான்.

ஒவ்வொரு கடைக்கார முதலாளிகளுடைய பெயர் ஊர் எல்லாம் தெரிந்து வைத்திருப்பார். நன்றாக உழைக்கும் திடகாத்திரமான் உடற்கட்டு.  இருந்தாலும் காசு தேட இந்த வழியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். 

“நீங்கள் பார்த்து நன்றாக செய்யுங்கள். பாண்டிச்சேரி பாரூக் மரைக்காயர் பெயரும் உங்கள் பெயரும் ஒன்றுதானே? அவர் போல் நீங்கள் நடக்காமல் நன்றாகச் செய்யுங்கள். என்றும் அல்லாஹ் உங்களுக்கும் ஊரில் நிறைய தந்திருக்கிறான்! அல்லாஹ் உடைய பரக்கத் உங்களுக்கு இன்னும் நிறைய கிடைக்கும்” என்றார்.

“ஆமீன்!” என்றேன்.

“என்னுடைய பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டேன்.
“உங்கள் ஊருக்கு வந்திருக்கிறேன்!. உங்களுக்கு இரண்டு திருமண மண்டபம் இருப்பதைப் பார்த்தேன். உங்கள் பெயர் அங்கே இந்து முஸ்லீம் எல்லோருக்கும் நன்றாகத் தெரிகிறதே! நல்லபடியாக சொல்கிறார்களே!” என்றும் கொஞ்சம் கூடுதலாக ஐஸ் வைத்தார். 

அவர் வைத்த ஐஸ் என் கொதிப்பைக் கூட்டியது.  ஒன்றும் சொல்லிக் கொள்ளாமல் ஒரு என்வலோப்பில் மலேசிய ரிங்கிட் 50/- வைத்து அவரிடம் கொடுத்தேன்.  அதை வாங்கிய அவர் என் முன்னேயே திறந்து பார்த்தார். முகம் மாறியது. 

“என்ன 50 வெள்ளியைத் தருகிறீர்கள்? நான் இவ்வளவு விபரங்க்ளைச் சொல்லியும் இதைக் கொடுக்கிறீர்களே? இதை வைத்து என்ன செய்ய முடியும்? “ என்றார்.

கேள்வியில் கோபமும் வேகமும் பளிச்சிட்டது.

“கோப்ப்படாதீர்கள். இவ்வளவுதான் நம்மால் முடியும்” என்றேன்.

“ஒரு கிராமத்து மக்களையே அவர்கள் விருப்பப்படி முஸ்லீமாக மாற்றியிருக்கிறோம்.  பாண்டிச்சேரி பாரூக் மரைக்காயர்தான் காஃபிர்களுக்கு சப்போர்ட் செய்கிறார் என்றால் அவர் பெயருடைய நீங்களும் இப்படி செய்கிறீர்களே!” என்று கொஞ்சம் அதிகாரத் தொணியில் கேட்டார்.

“கொஞ்சம் பொறுமையுடன் கேளுங்கள். அந்த ஃபோட்டோக்களை எல்லாம் எடுங்கள்” என்றேன்.

பள்ளிவாசல் கொட்டகைப் பட்த்தை எடுத்துக்காட்டி, “இத் ஏற்கனவே இருந்த முஸ்லீம்கள் தொழுத பள்ளிதானே?” என்றேன்.

“ஆமாம.” என்றார்.

“இப்போது இஸ்லாத்திற்கு வந்தவர்கள் முன்பிருந்தவர்களைவிட மிக்க் குறைவுதானே?” என்று கேட்டேன்.

“ஆமாம்” என்றார்.

“காலகாலமாக முஸ்லீமாக இருந்தவர்களுக்கு ஒரு பள்ளிவாசல் கட்ட எந்த முயற்சியும் எடுக்காமல் புதிதாக இஸ்லாத்திற்கு வந்த முஸ்லீம்களுக்கு பள்ளிவாசல் கைலி புடவை என்று பேசுகிறீர்களே! ஏன்?” என்றேன்.  மெளனமாக இருந்தார்.

“நீங்கள் பாண்டிச்சேரி ஃபாரூக் மரைக்காயர் தேர் இழுக்கிறார் என்கிறீர்களே அவருக்கு ஏன் முஸ்லீம்கள் ஓட்டு போட்டீர்கள்? அவர் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டியதுதானே?” என்று சொல்லிவிட்டு,  “நீங்கள் நினைத்து வந்த கல்யாண மண்டப ஃபாரூக் நான் அல்ல. பாண்டிச்சேரி ஃபாரூக்கும் நான் அல்ல! ஆனால் என் பெயரும் ஃபாரூக் தான். இந்த 50 வெள்ளி வேண்டுமா வேண்டாமா?” என்றேன்.

“மூன்று பேரும் ஃபாரூக்தான். ஆனால், குணமும் பணமும் அதைத் தேடும் வழிகளும் வேறுவேறு” என்றேன்.  மீண்டும் முறைத்தார்.

“முறைக்காதே! போலீசுக்கு டெலிஃபோன் போட்டால் நீ வசூல் செய்யும் விஷயம் சொன்னால் உள்ளே தள்ளுவார்கள். நீ டூரிஸ்ட் விசாவில் வந்திருக்கிறாய். உன் பாஸ்போர்ட்டை முடக்குவார்கள். இஸ்லாத்தின் பெயரில் பொய்கள விற்று சுகமாக வாழ நினைக்காதே. உழைத்துப்பிழை! பிழை செய்து பிழைக்காதே! போய் விடு! அதிகம் பேசினால் பிழைப்பு கெட்டு விடும்” என்றேன்.

கொடுத்த காசை எடுக்காமல் போய் விட்டார்.

மிச்சம் என்று வைத்துக் கொண்டேன்.   
(தொடரும்...)
S.முஹம்மது ஃபாருக்