Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

எரிகிறது குஜராத் - யார் இந்த பட்டேல்கள்?? 2

அதிரைநிருபர் பதிப்பகம் | August 27, 2015 | , , , , ,

கடும் சலசலப்புக்கு உள்ளாகி இருக்கின்றது குஜராத். கலவரம், ஊரடங்கு உத்தரவுகள், பந்த். பல கோடி அரசு சொத்துக்கள் நாசம். இவை அனைத்திற்கும் பின்னணியில் பட்டேல் சமூகம். 


சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பாக, தலித்கள் ஆதிவாசிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டை எதிர்த்து போராட்டங்கள் மூலம் மாநிலத்தை ஸ்தம்பிக்க செய்தவர்கள், இன்று, தங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டுமென்று அரசு இயந்திரத்தை முடக்கியுள்ளார்கள். 

1931-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி குஜராத்தின் மொத்த மக்கட்தொகையில் பதினைந்து சதவிதம் பட்டேல் சாதியினர். சமீபத்தில் எடுக்கப்பட்ட சாதிரீதியான கணக்கெடுப்பு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. 


சமூக, பொருளாதார மற்றும் அரசியல்ரீதியாக வலுவானவர்களாக கருதப்படும் பட்டேல் பிரிவினர், 1970-கள் வரை காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தவர்கள். இடஒதுக்கீட்டுக்கு எதிரான தங்கள் எண்ணங்களுக்கு காங்கிரஸ் செவி சாய்க்க மறுத்ததால் பாஜகவின் தீவிர ஆதரவாளர்களாக மாறினர். இன்று வரை அது தொடர்கின்றது. 

இதற்கான பிரதிபலன்களை நாம் கண்கூடாக பார்க்க முடியும். பாஜக சட்டமன்ற உறுப்பினர்களில் சுமார் 40 சதவிதம் பேர் பட்டேல்கள். முதல்வர் மற்றும் ஏழு கேபினட் அமைச்சர்கள் பட்டேல் பிரிவை சார்ந்தவர்களே. 

ஆக, செல்வ செழிப்பான வாழ்வை அனுபவித்து வருவதாக கருதப்படும் இவர்கள், இட ஒதுக்கீடு கேட்பதற்கான மர்மம் என்ன? 

வெளியே ஊதி பெருக்கப்படும் 'குஜராத் மாடல்' மற்றும் 'ஒளிரும் குஜராத்' போன்ற திட்டங்கள் எடுபடாததே இதற்கு காரணம். உதாரணத்திற்கு, இவர்கள் கோலோச்சி உள்ள தொழில்களில் ஒன்றான வைர வியாபாரத்தில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். சுமார் 150 நிறுவனங்கள் வரை சமீபத்தில் மூடுவிழா கண்டுள்ளன. ஆக, தங்களின் எதிர்கால சந்ததிகள், கல்வி மற்றும் அரசு பணிகளில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்று விரும்புகின்றனர். அதனை முன்னோக்கியே லட்சக்கணக்கானோர் கலந்துக்கொள்ளும் சமீப கால போராட்டங்கள், அதன் வெளிப்பாடாக கலவரங்கள். 

இவர்களை வழிநடத்துவது ஹர்திக் படேல் என்ற 22 வயது இளைஞர் என்பது நம்புவதற்கு கடினமானதாக இருக்கின்றது. இவரை கைது செய்த போது தான் கலவரம் உச்சக்கட்டத்தை அடைந்தது. 

இவர்கள் கேட்பது 27 சதவித இடஒதுக்கீடு. எந்தவொரு மாநிலத்திலும், இட ஒதுக்கீடு என்பது ஐம்பது சதவிதத்தை தாண்டி இருக்க கூடாது என்பது உச்சமன்ற தீர்ப்பு. குஜராத்தை பொருத்தமட்டில், இந்த உச்சவரம்பை ஏற்கனவே எட்டி விட்டது. ஆக, பட்டேல்களுக்கான இந்த இட ஒதுக்கீடு சாத்தியமாக வேண்டுமென்றால், பிற்படுத்தப்பட்ட பிரிவில் ஏற்கனவே இருக்கும் ஏனைய சமூகத்தினருக்கான சதவிதத்தை குறைத்து அல்லது பிடுங்கி தான் இவர்களுக்கு தர முடியும். அப்படி நடந்தால் குஜராத் ஸ்தம்பிக்கும் அளவு தங்களின் எதிர்ப்பு இருக்கும் என்று OBC பிரிவில் இருக்கும் சமூகத்தினர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துவிட்டனர். 


இந்த பிரச்சனையானது மற்ற சமூகத்தினரை தூண்டும் அளவு சென்றது/செல்வது தான் பரிதாபமானது. சில தினங்களுக்கு முன்பு, பட்டேல் சமூகம் நடத்திய ஒரு பேரணியில் தலித்துகளுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இது துரதிஷ்டவசமானது. 

சாதிய பிரச்சனைகள் நிறைந்திருக்கும் இன்றைய சூழலில் இவை அனைத்தும் சுமூகமான தீர்க்கப்பட்டு குஜராத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்போம். 

ஆஷிக் அஹ்மத் அ [http://manithaabimaani.blogspot.com/2015/08/blog-post.html]
படங்கள்: இந்தியா டுடே, இந்தியன் எக்ஸ்பிரஸ்
செய்தி சேகரிக்க உதவியவை: NDTV, CNN IBN, TOI மற்றும் இந்தியா டுடே 

வெந்நீர் ஒத்தடம் III 19

அதிரைநிருபர் பதிப்பகம் | March 01, 2015 | , ,

‘பூமழை தூவி, வசந்தங்கள் வாழ்த்த, ஊர்வலம் நடக்கின்றது’ என்ற திரைப்படப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது பேண்ட் வாத்திய ஊர்வலத்திலோ பாய்ண்ட் டு பாய்ண்ட் பஸ்ஸிலோ சலூனிலோ ச்சாயாக் கடையிலோ அல்ல, தியேட்டரில்! ‘இதிலென்ன ஆச்சரியம்? தியேட்டரில் பாட்டுப் போடாமல் பஜனையா போடுவாங்க?’ என்று ‘முந்திரிக்கொட்ட’ வேண்டாம். நான் சொல்வது சினிமா தியேட்டரில் அல்ல ஓய், ஆபரேஷன் தியேட்டரில்! “மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரிலா?” “ஆமாங்கானும்! கதையைக் கேளும்.”

அரைகுறையாய் அலங்கரிக்கப்பட்ட அவுலியாவைப் போல பச்சை கவுன் அணிவிக்கப்பட்டு அந்த தியேட்டரின் அறுவை சிகிச்சை மேசையில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது வேறு யாரும் அல்ல, ஷாட்சாத் நானேதான். தலையில் கெஜ்ரிவால் தொப்பி வேறு. எனக்கருகில் சந்தணம் பூச உள்ளே போய் செத்துத் தொலைந்த பட்டத்து லெப்பை இல்லாததால் நான் இன்னும் ‘அடங்கவில்லை’ என்பது சற்றே ஆறுதலாக இருந்தாலும் அந்த டாக்டர் சர்வ அலட்சியமாக பாடலை ரசித்துக் கொண்டிருந்தது எனக்கு வினோதமாகவே பட்டது. பிடரியை பெயர்த்தெடுக்கும் பின்னணி இசையில் காசுக்காக கவலையை ஓவர் ஆக்ட் செய்யும் கதாபாத்திரங்களுக்கு நடுவே நடக்கும் ஆபரேஷன்களையே கண்டு கண்டமாகிப் போயிருந்த எனக்கு அந்தச் சூழல் ஏதோ காற்று வாங்க வந்த மாதிரி மிகமிக சாதாரணமாகவே தோன்றியது. லேசான பயம்கூட ஜகா வாங்கிப் போய் விட்டிருந்தது. அந்த ஆபரேஷன் தியேட்டரில் என்னை ஏன் கிடத்தினர்? எங்கே இருக்கிறது அந்த ஆஸ்பத்திரி? யார் அந்த டாக்டர்? என்ன ஆபரேஷன்? போன்ற உப்புச்சப்பில்லாத கேள்விகள் உங்களுக்கு எழலாம். எழவேண்டும். எழவில்லையென்றால் இந்த கட்டுரை இந்த பத்தியோடு முடிந்து போய்விடும் என்பதால் எழுந்தே ஆகவேண்டும். அப்படி எழவில்லை எனில் நானே கேள்வி எழுப்புகிறேன். கேள்வி எழுப்பும் அரசியல்வாதிகளைக் கேட்டுக்கேட்டு மெரசலாகிப்போய்த்தான் நானும் கேள்வி எழுப்புகிறேன். (கேள்வி கேட்பதற்கும் கேள்வி எழுப்புவதற்கும் என்ன வித்தியாசம் என்பது தெரியுமா உங்களுக்கு? சாதாரண ஆள் கேட்டால் கேள்வி கேட்பது. அரசியல்வாதியோ அமைச்சர் பெருமக்களோ கேட்டால் அது கேள்வி எழுப்புவது.) ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே என் மச்சான் கவலையோடு காத்திருக்கும் நேரத்தில் நாம் கொஞ்சம் இந்தச் சூழலின் பின்னணியைப் பார்த்து விட்டால் வாசகர்களுக்கான மெஸேஜ் என்ன என்று விளங்கிவிடும். மெஸேஜ் இல்லேன்னா நலம் விசாரிக்கும் கடிதங்களைக்கூட வரிகளை ஸ்கிப் பண்ணி வாசிக்கும் வம்சாவழிக்கான முன்மாதிரியல்லவா நாம்?

இந்த அசாதாரணமான நாளிலிருந்து 6-7 மாதங்களைக் கழித்துவிட்டால் ஈவு இல்லாமல் கிடைக்கும் மீதி நாட்களுக்கு முன்பு, இறக்கம் இல்லாமல் என் இடது கையின் மோதிர விரல் ஏதோ மனத்தாங்கல் ஏற்பட்ட மனைவி மாதிரி மற்ற விரல்களோடு ஒத்துழைக்காமல் தனித்து சோம்பி தலை குணிந்து நிற்க ஆரம்பித்தது. முதலில் புதுக் கல்யாணப் பெண்ணைப்போல லேசாக நிலம் பார்த்ததால் நான் அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை. தவிர, வலி ஏதும் இல்லையென்றால் ஒரு கையையே வெட்டி எடுத்தாலும் காலதாமதமாகக் கண்டுகொள்ளும் அளவுக்கு பிஸியான மனிதர்களாகிப் போனோமல்லவா நாமெல்லாம்? தொடர்ந்து அடிக்கடி ஒத்துழையாமல், இயக்கத்தைக் குறைத்துக்கொண்ட என் மோதிர விரலை என் பெருவிரல் வருடியும் தடவியும் தேய்த்தும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் பெருவிரலின் பேச்சைக் கேட்காமல் மோதிர விரல் முரண்டு பிடித்தது. வேறு வழியில்லாமல் பெருவிரல் மற்ற மூன்று விரல்களின் உதவியோடு பை தூக்குவது, கார் ஓட்டுவது, பேண்ட் போடுவது போன்ற வேலைகளை அட்ஜெஸ்ட் செய்து நிறைவேற்றினாலும், என்ன ஏது என்று அறியும் முயற்சியில் நான் இறங்கலானேன்.

ஷார்ஜாவில் சம்பாதித்து அஜ்மானிலும் அமீரகம் முழுவதிலும் செலவு செய்யும் வர்க்கத்தில் வாழும் எனக்கு இங்கிருக்கும் மருத்துவர்களிடம் ஏற்கனவே பலமுறை மரண அடி கிடைத்திருந்ததால், மேற்கொண்டு அவதிப்பட விருப்பமில்லாததால் ஊர் போகும் நாள் வரைக் காத்திருந்தேன். காத்திருப்பு நாட்களில் மோதிர விரலுக்கு மோதிரத்தைத் தவிர களிம்பு, க்ரீம், தைலம், வெந்நீர் ஒத்தடம் என்று எல்லாம் செய்தும் மசக்கையான மங்கையரைப்போல் அது மயங்கியே கிடந்தது.

ஒரு வழியாக ஊருக்குப் போகும் நாளும் வர, அரபாபுவோட கடுப்பில்; ஒரு மாத விடுப்பில் ஊருக்குப் போனேன். சபுராளிச் சடங்குகளில் சில நாட்கள் கடந்துவிட சில விசாரிப்புகளுக்குப் பிறகு பெரும்பான்மை சிபாரிசோடு எங்கூருக்குப் பக்கத்து ஊரில் உள்ள அந்த எலும்பு முறிவு மருத்துவமனைக்குச் சென்றேன். சம்பிரதாயங்கள் முடிந்து மருத்துவரைக் காணும் கூட்டம் அவர் அறையில் மொய்த்திருக்க ஓட்டை ஒடிசல்களான நோயாளிகளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அதில் சிலர் என்னைப் பார்வையாலேயே ஸ்கேன் செய்து ‘இவனுக்குக் கை கால்லாம் நல்லாத்தானே இருக்கு?’ என்று புருவம் உயர்த்த நான் மெல்ல எழுந்து விலகி நடந்து அந்த மருத்துவமனையைச் சுற்றலானேன். மாவுக்கட்டு இல்லாத மனிதரைக் காண்பதே அரிதாக இருந்தது. பெரும்பாலான நோயாளிகள், பெற்றெடுத்த பிள்ளையைப் போல தத்தம் கையை தூளியில் தொங்கவிட்டிருந்தனர். எல்லா உள்நோயாளிகளுக்கும் ஏதாவது எலும்பு முறிந்து போயிருந்தது. போதையில் விழுந்த பார்ட்டி, பைக்கில் சீன் காட்டிய பார்ட்டி, அடிதடி பார்ட்டி என்று நிறைய பேருக்கு எலும்பு ஒட்டவைக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது.

நான் என் முறைக்காகக் காத்திருக்க, மருத்துவரைத் தனியே சந்தித்துப் பழக்கப்பட்ட எனக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. நான் அழைக்கப்பட்டபோது என்னோடு சேர்த்து மூன்று சகனுக்கான ஆட்களும் அழைக்கப்பட்டார்கள். உள்ளே நுழைந்தால் அந்த மருத்துவரைச்சுற்றி இன்னும் சிலர் நின்றிருக்க, நெருக்கியடித்துக்கொண்டு கூட்டமாக நிற்க நேர்ந்தது. ‘மே...மே...’ என்கிற சப்தம் இல்லாததைத் தவிர அது ஆட்டு மந்தை அல்ல என்று சொல்லிவிட வேறு எந்த முகாந்திரமும் இல்லை. அவரும் ஆடு மேய்க்கும் இடையர்தான் என்பதற்கு அந்த ஸ்டெத்கோப்பைத் தவிர மற்ற எல்லா அடையாளங்களும் பொருந்திப் போயிருந்தது.

கைக்கு வாகாய்க் கிடைதத் ஆளைப் பிடித்து எதிரே ஸ்டூலில் உட்கார வைத்து, ‘என்ன பிரச்னை?’ என்று விசாரிக்க அந்த நோயாளி சொல்லிக்கொண்டிருக்க இவர் மற்றுமொரு நோயாளிக்கான பிர்ஸ்கிரிப்ஷன் எழுதிக்கொண்டோ சோதித்துக்கொண்டோ இருந்தார். அவர் சொல்லி முடித்ததும், அவர் வலிப்பதாகச் சொன்ன எலும்பு மூட்டை வளைத்தும் நிமிர்த்தியும் பரிசோதித்துவிட்டு (அம்மா, ஆத்தா, வலிக்குதே) ‘ஜவ்வு கிழிஞ்சி போயிருக்கு. அந்த மூட்டிலேயே ஊசி போடனும். அதற்கு முன், ஒரு வாரம் மருந்து தர்றேன். சாப்பிட்டுட்டு வாங்க. ஊசி போட்டுக்கனும் என்றால் வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமைதான் போடுவோம் இப்பவே சொல்லி வச்சிடுங்க” என்று சொன்னார். அந்த நோயாளி மேற்கொண்டு கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டே அடுத்த நோயாளியை ஸ்டூலில் உட்கார வைத்து விசாரித்தார். செம பிஸி. எனக்கு ஏனோ ஏலம் போடும் இடங்கள் நினைவுக்கு வந்தது. பெரும்பாலும் எல்லோருக்கும் ஒரே வைத்தியத்தைத்தான் சொல்லிக்கொண்டிருந்தார். ஏதோ ஒரு அலை என்னையும் அடித்துச் சென்று அவர் எதிரே இறுத்தியது. நான் வெகு வேகமாக மேற்சொன்ன மேட்டரையெல்லாம் ஒப்பித்தேன். சொன்னா நம்ப மாட்டீர்கள். எனக்கும் அதே ட்ரீட்மெண்ட்தான். கொஞ்சம் மாற்றி, ‘நரம்பு சுருண்டிருக்கு. ஊசி போட்டால் சரியாயிடும். அதற்கு முன் 10 நாளைக்கு மருந்த சாப்பிட்டுப் பாருங்கள். களிம்பு எழுதியிருக்கேன் தேய்த்து வாருங்கள். சரியாக வில்லை என்றால் ஊசி போட்டுடலாம்.’ என்றார். நான் என் நிலைமையைச் சொல்லி, "முயற்சி செய்து பார்க்க நாட்கள் இல்லை. எதுவாக இருந்தாலும் உடனே செய்துவிடுங்களேன்" என்றேன். அவர், ‘ஊசி தேவைப்படாது. மருந்திலேயே குணமாகிவிடும்’ என்று சொல்லி என்னை அப்புறப்படுத்தினார். இருந்தாலும், 10 நாட்கள் கழித்து ஊசி போட்டுக்கொண்டு அமீரகம் திரும்ப மேற்கொண்டு 10 தினங்கள் இருந்ததால் ஒத்துக்கொண்டு வந்துவிட்டேன்.

பத்து நாட்களும் பச்சப்புள்ளையைப் போல என் விரலைக் கவனித்து வந்தாலும் ஒரு சிறிய முன்னேற்றம்கூட இல்லாமல் மோதிர விரல் அடம்பிடித்து முடங்கியே கிடந்தது. இதற்கிடையே நண்பர்கள் மற்றொரு எலும்புநோய் அறுவை சிகிச்சை நிபுணரைச் சந்திக்கச் சொன்னதால் அதே ஊரைச்சேர்ந்த அவரைப் போய்ப் பார்த்தேன். அங்கே அந்தச் சூழல் எனக்குப் பிடித்திருந்தது. நாகரிகமான காத்திருப்பு, முறையான வரிசையான கவனிப்பு, ஒவ்வொருவராக அழைத்து பரிசோதித்த பாங்கு, பவ்யமான உரையாடல், அக்கறையான அறிவுரை என்று அந்த டாக்டர் என்னைக் கவர்ந்தார். மேலும், அவர் ஒரு தமிழ் ஆர்வலர் என்பது ஆங்காங்கே பளிச்சிட்ட அறிவிப்புகளில் இருந்து தெரிந்தது. என் பிரச்னையைப்பற்றி தெளிவாகக் கேட்டுக்கொண்டு, ‘பெரிய பிரச்னை ஒன்றும் இல்லை. மோதிர விரலுக்கான நரம்பு ஏதோ ஒரு அசம்பாவிதமான தருணத்தில் சுருண்டு கொண்டது. எக்ஸ்ரே எடுத்து உறுதி செய்து கொள்வோம். அப்படி சுருண்டிருப்பது உறுதியானால் எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாது. ஆபரேஷன் செய்தே ஆகவேண்டும் என்று உறுதியாகச் சொல்லி எக்ஸ்ரே எழுதிக்கொடுத்தார். எக்ஸ்ரேயைப் பார்த்துவிட்டு, "நரம்பு சுருண்டுதான் இருக்கிறது. வெளிநாடு செல்ல இருப்பதால் தாமதிக்காமல் நாளையே அபரேஷன் செய்துகொள்ளுங்கள். பயப்படத் தேவையில்லை" என்று சொல்லி மற்றவற்றை அங்கிருந்த நர்ஸ்களிடம் சொல்லி அடுத்தநாள் காலை 7 மணிக்கெல்லாம் வந்துவிட வேண்டும் என்று அனுப்பி வைத்தார்.

மறுநாள் காலை சரியான நேரத்திற்குப் போக தொடர்ந்து நடந்தவைதான் நான் துவக்கத்தில் சொன்னது.

ஆபரேஷன் துவங்கியது.

ஆடல் இல்லாத பாடல்களோடு அறுவை சிகிச்சைத் துவங்கியது. என் மணிக்கட்டில் போட்ட ஊசியால் என் இடது கை முழுவதையும் டாக்டர் தனதாக்கிக்கொள்ள, எனக்கு உள்ளங்கையில் படம் வரைவதுபோல் ஏதோ ஓர் உணர்வு மட்டும் இருந்தது. தலையை வலது பக்கம் திரும்பி என் கை கீறப்படுவதைக் காண சகிக்காமல் கண்களையும் இறுக்கி மூடிக்கொண்டிருந்த என்னிடம், ‘ நீங்கள் தாராளமாக இந்தப் பக்கம் திரும்பி ஆப்ரேஷனைப் பார்க்கலாம் என்றார் டாக்டர். வேண்டா வெறுப்பாய் நானும் பார்க்கலானேன்.

மிக நேர்த்தியாகச் செய்யப்பட்ட ஆப்ரேஷன் அது. என் உள்ளங்கையில் வெட்டிய வடு தெரியக்கூடாது என்பதற்காக உள்ளங்கை ரேகையோடு கீறி உள்ளே நரம்பை நெருடினார். மெளன வீணையாக மீட்டப்பட்ட என் நரம்பு டாக்டரோடு ஒத்துழைக்க, என்னிடம் விரலை அசைக்கச் சொன்னார். என்ன ஆச்சரியம்! டெர்மினேட்டரில் அர்னால்ட் அசைப்பதுபோல் என் விரல்களை நான் இயக்க என் மோதிர விரலும் ஒத்து அசைந்ததைப் பார்க்க ஆனந்தமாக இருந்தது. 40 நிமிடங்களில் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிய, என் கைக்கும் ஒரு தொட்டில் கட்டித் தொங்க விட்டு 5 நாட்கள் கழித்து வந்து தையலைப் பிரித்துக்கொள்ளச் சொல்லி அனுப்பி வைத்தார். அந்த ஐந்து நாட்களும் வலது கையையே கையுறை அணிந்து இடது கையாகவும் கையுறை அகற்றி வலது கையாகவும் உபயோகித்தாலும் சாப்பிடும்போதெல்லாம் ஏனோ லேசாக குமட்டவே செய்தது.

ஆச்சு, ஐந்தாவது நாள் சர்க்கரைப் பொட்டலத்தின் சணல் பிரிக்கும் அலட்சியத்தோடு தையல் பிரிக்கும் நர்ஸ்களிடம் சொல்லாமல் டாக்டரே ஒரே நிமிடத்தில் உள்ளங்கையில் ஒரு சிறிய கிச்சுகிச்சு மூட்டுவதுபோன்ற உணர்வைத்தந்து தையலைப் பிரிக்க, உம்மாவிடம் இங்குதான் ஆபரேஷன் செய்தார் என்று சொன்னபோது உம்மா நம்ப நேரமானது. அந்த அளவு காஸ்மெடிக் சர்ஜன் போல் ரேகையோடு வெட்டி ஜமாய்த்திருந்தார். இந்த கட்டுரையில் நான் சொல்லவில்லையென்றால் என் உள்ளங்கையைப் பார்த்து நீங்கள்கூட நம்ப மாட்டீர்கள்; எந்த வடுவோ தழும்போ இல்லை.

டாக்டருடனான உரையாடலின்போது, “ ஏன் டாக்டர் இப்படி ஆனது?” என்ற கேள்விக்கு, “இது நடந்த ஆரம்பத்திலேயே தினமும் வெந்நீர் ஒத்தடம் கொடுத்து வந்திருந்தால் இந்தளவுக்கு சுருண்டிருக்காது” என்ற வார்த்தைகள் இன்றும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.


சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

இலவசம் விலை போனதே ! [அனுபவங்களின் விலாசம்] - குறுந்தொடர் - நிறைவுப் பகுதி 24

அதிரைநிருபர் பதிப்பகம் | July 03, 2014 | , , , , ,

கு.தொ.: 4

“நம் ஊரிலிருந்து வந்திருக்கிறார்கள். எனக்கு வேண்டியவர். குர் ஆன் தமிழ் தர்ஜமா கொண்டு வந்திருக்கிறார்கள். உங்களிடம் கூட்டி வந்திருக்கிறேன்” என்றேன்.  

“உட்காருங்கள். அந்த மாதிரி காப்பியைக் காட்டுங்கள்” என்றேன். கையோடு கொண்டு வந்திருந்த மாதிரியைக் கொடுத்தோம். 

“தலைப்பைப் பார்த்து தர்ஜமா என்று இருக்கிறதே, தர்ஜூமா என்கிறார்களே?!” என்றார்.

“இதுதான் சரியான உச்சரிப்பு” என்று நம் ஊர் ஆள் சொன்னார். பிரித்து ஒரு பார்வை பார்த்து விட்டு,

“அமல்களின் சிறப்பு என்ற புத்தகம் வாங்கி ஹதியா கொடுக்கலாம் என்று இருந்தோம். ஃபாரூக் அண்ணன் ஊர்க்காரர் கொண்டு வந்த்தால் இதையே வாங்கிக் கொள்கிறோம். எத்தனை பிரதிகள் கொண்டு வந்திருக்கிறீர்கள்?” என்றார்.

“முன்னூறு பிரதிகள் கொண்டு வந்திருக்கிறேன். எல்லாம் பினாங்கில் இருக்கிறது” என்றார். அந்த மேனேஜர், 

“என்ன விலை போட்டிருக்கிறது” என்று கேட்டுக் கொண்டே குர்ஆனைத் திறந்து, 

“ரூ 120/- போட்டிருக்கிறது” என்றார். குர்ஆன் கொண்டு வந்த ஆசாமி உடனடியாக,

“அடுத்தப் பதிப்பு ரூ 150/-“ என்றார். உடனே அந்த மேனேஜர்,

“இப்பொழுது பிறந்திருக்கும் பிள்ளைக்கு மட்டும் பேர் வைப்போம். பிறக்கப்போற பிள்ளைக்கு பிறந்ததும் பேர் வைக்கலாம்” என்று திருப்பியடித்தார்.

குர் ஆன் கொண்டு வந்தவர் அடுத்த பதிப்பின் விலை சொன்னதும் இவர் ஒரு ‘தில்லு முல்லு’ ஆசாமி என்பதைப் புரிந்து கொண்டேன். இது பிரச்னையில் முடியும் என்ற எண்ணம் என் உள் மனதில் உதித்தது. மேனேஜரிடம், ‘வேண்டாமென்று சொல்லுங்கள்’ என்று கண்ணைக் காட்டினேன். அவர் கவனிக்கவில்லை.  குர் ஆனைப் புரட்டிப் பார்ப்பதிலேயே குறியாக இருந்தார். 

“முன்னூறு பிரதிகளையும் எடுத்துக் கொள்கிறோம். என்ன ரேட்டுக்குத் தருகிறீர்கள்” என்று கேட்டார்.

“சிங்கப்பூரில்…..” என்று ஒரு பணக்காரர் பெயரைச் சொல்லி, “அவர் இரண்டு பிரதிகள் வாங்கிக்கொண்டு சிங்கப்பூர் டாலர் 1,500/- கொடுத்தார். கோலாலம்பூரில் (ஒரு தமிழ் முஸ்லீம் பெயரைச் சொல்லி) ஒரு பிரதி எடுத்துக் கொண்டு 2,000/- மலேசிய டாலர் கொடுத்தார்.” என்றார். இதைக் கேட்ட மேனேஜர், 

“அது தர்மம்” என்றார். பாம்புக்குப் பால் வார்த்து விட்டோமோ! நம் மரியாதையும் கப்பல் ஏறப் போகுது! ஊர் மரியாதையும் கப்பல் ஏறப்போகுதென்று எண்ணி எழுந்து கொஞ்சம் தள்ளிப்போய் மேனேஜருக்கு ‘வேண்டாம், திருப்பி அனுப்புங்கள்’ என்று சைகை செய்தேன்.  அவர் என்னை கவனிக்கவில்லை.

“நாங்கள் டெல்லியிலிருந்து பல லட்ச ரூபாய்க்கு புத்தகங்கள் இறக்குமதி செய்கிறோம். பேங்க் ரேட்படி போட்டு எங்களுக்கு 30-35% கழிவு கொடுக்கிறார்கள். அது அல்லாமல் நாங்கள் டெல்லிக்கு புத்தக கண்காட்சிக்குப் போகும் போது பல செல்வுகளையும் செய்கிறார்கள். அதெல்லாம் பெரிய வியாபாரம். பரவாயில்லை. குர்ஆன் என்பதால் கழிவு எங்களுக்கு வேண்டாம். நாங்கள் வாங்கியும் அல்லாஹ் பேராலே ஹதியாதான் கொடுக்கப் போகிறோம். வித்து ஆதாயம் சம்பாதிக்கவில்லை. ரூபாய்க்கு மலேசியா 9 காசு வீதம் ஒரு புத்தகத்துக்கு வருது.  மலேசியா காசு 9.60 போட்டுத் தருகிறேன். விருப்பமிருந்தால் கொடுங்கள். இல்லையென்றால் வேறு தோது பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.

வந்தவரோ 300 குர்ஆனை மலேசியா ரிங்கிட் 1,500/2,000 த்துக்கு விற்று நடுவிக்காடு, மங்கனங்காடு, மழவேனிற்காடு, முடுக்குக்காடு, மரவக்காடு தொக்காளிக்காடு போன்ற காடுகளையெல்லாம் ஒரே வளையா வளைச்சுப்போடலாம் என்று திட்டம் போட்டு விட்டார். முன்னூறு பிரதிகளை வாங்கி ஹதியாக் கொடுக்க்கூடிய ஆளாக இருந்தால் அவன் ஒரு ஏமாளியாக இருப்பான் என்றே நினைத்து விட்டார். ‘பொன் முட்டை இடும் வாத்தின் கழுத்தை அறுத்தால் எல்லா முட்டையையும் ஒரே தடவை எடுத்த் விட்டால் ஒரே நாளில் பணக்க்காரனாகலாம்’ என்ற ஐடியா அவருக்கு வந்து விட்டது. அந்த அளவுக்கு உள்ள பைத்தியகாரன் அங்கே இல்லை என்பதை இந்த அசாமி உணரவில்லை. 

பார்த்தார், யோசித்தார்.  ‘ஏண்டா இவரை இங்கே கொண்டு வந்தோம்’ என்றாகிவிட்டது.  இதில் வேறு பிரச்னை எழும் என்று என் உள் மனம் என்னை உறுத்தியது.  ஒரேயடியாக தட்டிக் கழித்து விட்டால் நல்லதென்றே பட்டது! மேனேஜரிடம் மீண்டும் கண் ஜாடை செய்தேன், அவர் புரிந்து கொள்ளவில்லை. குர்ஆன் கொண்டு வந்த ஆசாமி,

“சரி, கணக்குப் பார்த்து பணம் தாருங்கள். பினாங்கிலிருந்து பிரதிகளை அனுப்பி வைக்கிறேன்” என்றார்.

“பிரதிகள் வந்ததும் கணக்குப் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்” என்றார் மேனேஜர்.

“அட்வான்ஸாவது கொடுங்கள்” என்றார்.

“அதெல்லாம் எங்கள் ஸிஸ்டத்தில் இல்லை. நாங்கள் இந்தியாவிலிருந்து வாங்கும் புத்தகங்களுக்கு புத்தக்கங்கள் பெற்றுக்கொண்ட தேதியிலிருந்து 90 நாட்கள் சென்றுதான் பணம் கொடுப்போம்” என்று ஒரே பேச்சாகச் சொன்ன மேனேஜர், “ பினாங்கிலிருந்து அனுப்பும் லாரி சார்ஜைக் கழித்து பாக்கியை ரொக்கமாக வாங்கிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் பேச்சு இல்லை.  உங்கள் விருப்பம் எதுவோ அதுபடி செய்து கொள்ளுங்கள்” என்றார்.

குர்ஆன் கொண்டு வந்த ஆசாமியின் தந்திரங்கள் ஏதும் பலிக்கவில்லை. ஹதியா கொடுக்கும் குர்ஆனைக்கூட அங்குள்ளவர்களுக்கு படிக்க நேரமில்லை. ‘காசு காசு’ என்பதே ஒவ்வொருவரின் வேதமாக இருக்கிறது. தமிழ் முஸ்லீம்கள் குர்ஆன் வாங்கி ஓதுவதும் படிப்பதும் யார்? அதெல்லாம் இமாம்களின் வேலை என்று ஒதுங்கி விடுகிறார்கள்.  குர்ஆன் கொண்டு வந்த முதலைக்கு ஆசையைத் தூண்டியது எது என்றால் அந்தக் கடை மேனேஜர் தவறுதலாக ஒரு டிப்ஸ் கொடுத்து விட்டார். அது “நாங்கள் ‘அமல்களின் சிறப்பு’ என்ற புத்த்கத்தை வாங்கி ஹதியா கொடுக்கலாம் என்றிருந்தோம் என்பதே.  முன்னூறு நானூறு பிரதிகளை வாங்கி ஹதியா கொடுப்பவர்களாக இருந்தால் பெரிய கையாகவும் அதே சமயம் இஸ்லாம் மார்க்கம் என்றால் அள்ளிக் கொடுக்கும் ஏமாளி பண முதலையாகவும் இருப்பார்கள் இதை பயன் படுத்தி ஊரில் தோட்டந்துரவுகளை வாங்கி போட்டு கால் மேல் கால் போட்டு உண்ணலாம்,. காரில் ஊர் சுற்றலாம் என்ற எண்ணம் தோன்றி இருக்க வேண்டும்.  அதனால் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். 

இஸ்லாம் இப்படிச் சொல்லவில்லை. மனித இனத்துக்கு நல்வழி காட்டவே அல்லாஹ் குர் ஆன் என்ற வேதத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளினான்.  இது மனித இனத்திற்கு நேர் வழி காட்டும் திருமறை என்று சொன்னானே தவிர இதை விற்று பெரும் பணத்தைத் தேடிக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. பணக்காரர் ஆவதற்கு வேறு நல்ல நல்ல புத்தகங்கள் மனிதன் எழுதி இருக்கிறான். அதில் ஒன்று ‘Think and Grow Rich’ by Nepoleon Hill என்பதும் சிறந்த ஒன்று. அதிலும் சிந்தித்து செயல்பட்டு நேர்வழியில் பொருளீட்டி பணக்காரன் ஆகு என்றும் தேடிய பணத்தை ஏழை எளியோருக்கு உதவி செய் என்றும் அதை முதலீடாகக் கொண்டு பெரும் பெரும் தொழிற்சாலைகளை நிறுவி பலருக்கு வேலை கொடு என்றும்தான் சொல்லப் படுகிறது.   அது மனிதனால் எழுதப்பட்ட புத்தகம். அதன் விலையோ எழுதியவருக்கு சிறு ராயல்டி, பதிப்பாளருக்கு காகித விலை, அச்சுக்கூலி சில்லறை விற்பனையாளருக்குக் கமிஷன் என்ற கணக்கிலேயே ஒரு சாதாரண தொழிலாளியும் ஒரு வேலை சாப்பட்டுச் செலவுக்கு செய்யும் செலவைவிட மிகக்குறைவாகவே இருக்கும்.  அந்தப் புத்தகம் படித்து அதன் வழி எத்தனையோ பேர் அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் கோடீஸ்வரர் ஆகி இருக்கிறார்கள்.  அந்தப் புத்தகத்தில் விற்கும் விலையை அச்சிட்டு வெளியிடுகிறார்கள். திருமறையோ how to become rich  பாலிஸையையோ ‘A short cut way to become rich’, ‘A way to become rich quickly’ என்னும் வழிமுறைகளைச் சொல்ல அருளப்படவில்லை.

மனித இனம் ஒழுக்க நெறியுடன் வாழ, மனித இனத்திற்கு நேர்வழி காட்ட அல்லாஹ்வால் அருளப்பட்ட புனித வேதம்.  புனித வேதம்-பணம் சம்பாதிக்க அருளப்பட்ட வேதமல்ல.  அல்லாஹ்வின் பேரருளை பெற மனித இனத்திற்கு தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வழியாக அருளப்பட்டது என்பதை முஸ்லீம்கள் எல்லோரும் உணர வேண்டும்.

ஆக, ஒரு வழியாக ஒரு புக் 9-60 மலேசிய ரிங்கிட் விலை பேசி முடித்தாகி விட்டது. பினாங்கில் இருக்கும் குர் ஆன் பிரதிகள் வந்ததும் ட்ரான்ஸ்போர்ட் சார்ஜ் போக மீதி தொகையை உடனடியாக கொடுப்பதென்ற Gentleman Agreement செய்தாகி விட்டது.  இரவு 7-30 மணியளவில அங்கிருந்த உணவு கடை ஒன்றில் இருவரும் சாப்பிட்டு விட்டு நேராக பார்க்கிங்கில் போட்ட வேனை எடுத்து கொண்டு அவரை அவர் தங்கும் இடத்தில் விட்டு விட்டு என் இடத்திற்கு வந்து விட்டேன். 

இரண்டுமூன்று நாட்கள் ஆனது. குர்ஆன் வரவில்லை. ஒருநாள் என் கடைக்கு குர்ஆன் பேர்வழி வந்தார்.,

“குர் ஆனை கஸ்டம்ஸில் வெளியுறவு அமைச்சைச் சார்ந்த புத்தக தணிக்கை இலாக்காவின் மத சம்பந்தப்பட்ட பிரிவு தடுத்து விட்டது.”  என்றார்.

அதை அவர்கள் வெளியிட மறுக்கிறார்கள் என்று சொன்னார். “என்ன காரணம்?” என்றேன். அவருக்கு விளக்கமாகச் சொல்லத் தெரியவில்லை.  நானும் அவரும் புத்தகக் கடை மேனேஜரிடம் சென்றோம். விபரத்தைச் சொன்னோம். அவர்கள் வெளி நாட்டிலிருந்து புத்தகம் இறக்குமதி செய்வதில் அங்குள்ள அதிகாரிகள் நல்ல பழக்கம்.  அந்த புத்தக கம்பெனிக்காரர்கள் மீதும் அந்த இலாகாவில் நல்ல பெயர்.  அரசுக்கு எதிரான புத்தகங்கள் இறக்குமதி செய்து எந்த கெட்ட பெயரும் அந்தக் கம்பெனிக்கு இல்லை. அந்த இலாக்காக்காரர்க்ளும் அடிக்கடி அங்கே வந்த தடை செய்யப்பட்ட புத்தகங்களின் பெயரையும் சில சமயம் பட்டியலையும் கொடுப்பார்கள்.  சில நேரங்களில் தடை செய்யப்பட்ட புத்தகங்களின் பட்டியல்கள் பத்திரிகைகளில் வரும். ஆரசியல் கோட்பாடு குறிப்பாக கம்யூனிசம், அடுத்து இஸ்லாம் சம்பந்தமான எதிர்மறையான கருத்து போதிக்கும் புத்தகங்கள், அடுத்து ஆபாச புத்தகம். இவை தடை செய்யப்பட்டவை.

புத்தகக் கம்பெனி மேனேஜர் அந்த இலாக்காவுக்கு டெலிபோன் போட்டு விஷயத்தைச் சொன்னார். “நாளை அவரை ஆஃபீசுக்கு வரும்படி சொன்னார். மறுநாள் மேனேஜர் அங்கே சென்று விபரம் கேட்டார். அவர்கள் சொன்னது அரபு மொழி எழுத்தில் இரண்டு மூன்று வகை உண்டாம். 1) இந்தக் குர்ஆனில் மலேசியாவில் அங்கீகரிக்கப்பட்ட எழுத்து இல்லையாம். 2) இந்த குர்ஆன் பலதடவைக்கு மேல் அச்சிட்டதால் சில அரபு எழுத்துகளும் சேர், ஸபர் போன்ற குறியீடுகளும் தேய்ந்து போய் இருப்பதால் அர்த்தம் மாறுபடுகிறது என்றும் அதனால் அதை வெளியிட தடை போடும் நிலை இருக்கிறது.” என்றார்கள்.  எங்களுக்கும் இதை தடை செய்ய வருத்தமாக இருக்கிறது. வேண்டுமென்றே செய்த தவறு அல்ல. இயற்கையாக உண்டானது.  இதற்கு ஏதாவது ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணங்களை இன்னும் இரண்டு வாரத்தில் எழுத்து மூலம் கொடுத்தால் வெளியாக்கும் உத்தரவை தருகிறோம் இல்லை என்றால் எல்லாமே கடலில் கொண்டு போய் கொட்டி விடுவோம்” என்றார்களாம்.  மறுநாள் போனபோது சொன்னார்.

குர்ஆன் வெளியாக என்ன வழி? ஒரு குர்ஆனுக்கு மலேசியா டாலர் 2,000 கேட்ட quick rich அல்லது குறுக்கு வழி பணக்காரனாக விரும்பிய பேராசை பேர்வழிக்கு அல்லாஹ்வின் சோதனை!

குறுக்கு வழிக்காரரின் முகம் வெளிறிவிட்டது.  ஆனால், இது குறுக்கு வழிக்காரருக்கு முன்னமேயே தெரியும்.  அதைக் காட்டிக் கொள்ளாமல் குர்ஆனுக்கு உள்ள பணத்தை முன் கூட்டியே வாங்கி விட்டால்...! என்ற எண்ணம்.

என்னிடம் அவர் சொன்னது குர்ஆன் பினாங்கில் ஒரு பிரபல்யமான தமிழ் முஸ்லீம் கம்பெனியின் குடோவ்னில் இருப்பதாகவே பேசினார். தில்லு முல்லுத் தனம். அதுவும் குர்ஆனில். 

இரண்டு நாள் கழித்து குர்ஆனை வெளியாக்கும் வழி கண்டாச்சு.  “இந்திய தமிழ் முஸ்லீம்கள் இந்த அரபு எழுத்திலேயே படித்துப் பழக்கம். தமிழ் முஸ்லீம்களுக்கு மட்டும் விலையில்லாமல் ஹதியாகாவாகக் கொடுப்பது. தமிழ் முஸ்லீம்கள் ஏற்கனவே அரபு வாசகத்தை ஏற்கனவே ஓத தெரிந்தவர்கள். ஆனால், தமிழில் அதற்கு தெளிவான விளக்கம் தெரியாதவர்கள். இன்னும் பலர் அரபு மொழியில் ஓத தெரியாதவர்கள். ஒரு சில சூராக்கள் மட்டும் வாய்வழி மனப்பாடம் செய்து ஓதுபவர்கள். எனவே அரபு மொழி முக்கியமில்லை. குர்ஆனின் வாசகத்தைத் தமிழில் கொடுப்பதே இதன் முக்கிய நோக்கம். அதுவும் தமிழ் முஸ்லீம்களுக்கு மட்டும் இனாமாகக் கொடுப்பதால் சிறிய எண்ணிக்கையிலான பிரதிகளே வெளியாகும்” என்ற காரணத்தை அந்த இலாக்காவின் தமிழ் பகுதியைச் சேர்ந்த ஓர் இஸ்லாமியர், “இந்தக் காரணத்தை எழுதிக் கொடுங்கள். பிரதிகளை வெளியாக்க என்னையும் கலந்து கொள்வார்கள்.  நான் ஒப்புதல் கொடுக்கிறேன்” என்றாராம். 

அதன்படியே அந்த கம்பெனிக்காரர்கள் கடிதம் எழுதிக் கொடுத்தார்கள்.  இதில் நாலைந்து நாட்கள் ஆகிவிட்டது.  கோலாலம்பூரிலிருந்து வெளியாக்கும் உத்தரவு பின்ங்கு போய் சேர வேண்டும்.  அதன் பின்பே குர் ஆன் வெளியாகும். ஒரு கண்டிஷன். இந்தக் குர்ஆன் தமிழ் முஸ்லிம்களுக்கும் மட்டுமே இனாமாகக் கொடுக்க வேண்டும் “இந்த குர்ஆன் இனாமாக கொடுக்கப்படுகிறது” என்ற ரப்பர்  ஸ்டாம்ப் அடித்தே வழங்க வேண்டும் என்ற உத்தரவின் பேரில் குர்ஆன் வெளியாக்க அனுமதி கிடைத்தது.  

ஏறத்தாழ மூன்று நான்கு தடவை என் வேலையைப் போட்டுவிட்டு கூட்டிப்போய் பெட்ரோல் செலவு, பார்க்கிங்க் செலவு எல்லாம் செய்தும் ஏதும் நான் கமிஷனோ வேறு எதுவுமோ எதிர் பார்க்கவில்லை.  அல்லாஹ்வுக்காக நான் அதையெல்லாம் எண்ணவில்லை. யாருக்கு எந்த உதவி செய்தாலும் எதையும் எதிர்பார்க்கும் எண்ணம் எனக்கு இல்லை.

ஒரு நாள் அவர் என் கடைக்கு வந்தபோது புத்தக வெளியீடு சம்பந்தமாகப் பேசினோம்.  அப்பொழுது நான் சொன்னேன்,“நான் சிறுவர்கள் கதை புத்தகம் 4 கலரில் வெளியிடுகிறேன்.  தமிழ் நாட்டில் நல்ல ஓவியர்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாரையாவது என்னிடம் அரிமுகப்படுத்தி விடுங்கள். அவர்களிடம் பேசி கதையைக் கம்ப்யூட்டரில் அனுப்பி அதற்கு ஏற்ற ஓவியங்கள் தீட்டிக் கொடுத்தால் அதற்குரிய சார்ஜைப் பேசி கொடுத்து விடலாம்.  என்னுடைய அட்ரசைத் தருகிறேன்.  என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்ல முடியுமா?” என்றேன்.

“செய்யலாம். அதற்கு எனக்கு ஒரு கமிஷனை நீங்கள் பேசி கொடுக்கனுமே!” என்றார்.

அதைக் கேட்ட நான் திடுக்கிட்டேன்.  உண்ட தட்டையிலேயே…. ஆள்! என்று தீர்மாணித்தேன். மீண்டும் தொடர்ந்தார்,

“அந்தக் கதையை என்னிடம் கொடுங்கள். நான் ப்ரிண்ட் செய்து அனுப்புகிறேன்” என்றார்.

“இது நாலு கலர் படம் போட்ட புக்குகள். அந்தக் குவாலிட்டியில் இந்தியாவில் செய்ய மிஷின் கிடையாது. வெறும் சினிமா நோட்டீஸ் மட்டும் அடிக்கும் மிஷின் மட்டுமே மண்ணடியில் ‘போட்டு சக்குசக்குன்னு’ அடிச்சுத் தள்ளிட்டு காசைக் கொடு என்பீர்கள்.  பத்தாம் பக்கம் இருக்கும் அடுத்தது 16 பக்கம் வரும். வேண்டாம் என்று கழட்டி விட்டேன், ‘ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே’ பாட்டு ஞாபகம் வந்தது.  அடுத்த நாள் வந்தார்.

“நான் சிங்கப்பூர் போகிறேன். மூன்று நான்கு நாள் கழித்து வருவேன்.  புக் வந்து விட்டால் பணம் வாங்கி வையுங்கள்” என்றார்.  

“உங்களுக்கு எந்த விசா தந்தார்கள்?” என்றேன். 

“விசிட்டிங் விசா தந்தார்கள்” என்றார்.  

“நீங்கள் சிங்கப்பூர் போனால் திரும்பி மலேசியா வர முடியாது. ஒரு முறை வந்து விட்டு வெளியானால் அந்த விசா ஆட்டோமாட்டிக்கா கேன்ஸல் ஆகிவிடும். புத்தகம் வந்ததும் பணத்தை வாங்கிக் கொண்டு போங்கள்” என்றேன்.  அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?

“அது உன்னைப் போல கேனப்பயலுகளிடம்தான் அப்படிச் சொல்வார்கள். நாங்கள் எல்லாம் மண்ணடியில் பேர் போட்டவர்கள். மண்ணடி மண்ணை பொன் என்று சொல்லி விற்று காசு பண்ற ஆசாமிகள் நாங்கள்” என்றார்.  

எனக்கு அவர் 10 வயது இளையவர். சரியான நல்ல பாம்புக்கு பால் வார்த்தோம் என்று என்னையே நான் நொந்து கொண்டேன். எனக்கு பத்து வயது இளையவன் என்னை நீ நான் என்று மரியாதை இல்லாமல் பேசுகிறானே என்று எனக்குக் கோபம் வந்தது.  இந்த மாதிரியான ஆசாமிகளிடம் என் குணமே வேறு. வேறு மாதிரியாக நடந்து விடும்.  நான் முதன் முதலில் மலேயா புறப்படும்போது சொல்லிய வாசகம் நினைவு வந்தது. “உனக்குக் கோபம் வந்தால் திடுதிப்பென்று அரிவாள், கத்தி, கம்பு என்று எடுக்கிற ஆளு நீ. வீட்டில் எத்தனை பீங்கான் தட்டையெல்லாம் உடைத்திருக்கிறாய். அங்கே போய் அப்படியெல்லாம் நடந்து கொள்ளாதே” என்று அழுதுகொண்டு சொன்ன சொல் ஞாபகம் வந்தது!  என்னையே நான் சமாளித்துக் கொண்டேன்.

“அப்படியா! Thank you brother! சென்று வாருங்கள். உங்களுக்கு மாலை போட்டு வரவேற்கிறேன்” என்றேன்.  

போய் விட்டார். இதற்கிடையில் நான் கம்பெனி மேனேஜரிடம் விஷயத்தைச் சொல்லி, 

“குர்ஆனுக்கு வெளியுறவுத் துறைக்குக் கொடுத்த கடிதத்தை வாபஸ் வாங்குங்கள். குர்ஆனை வெளியிடுவது அவர்கள் சொந்த முடிவாக இருக்கட்டும்” என்றேன். அவர், 

“வேண்டாம் ஃபாரூக். குர்ஆன் விஷயம். அந்த நாய் அப்படிச் செய்தது என்று நாமும் அப்படி நடக்க வேண்டாம்” என்றார். 

நாலைந்து நாள் வரை குர்ஆன் வரவில்லை. இதற்கிடையில் அவர் போன நாளாம் நாள் அந்தக் கம்பெனி மேனேஜர் ஜெர்மனியில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு புறப்பட்டுப் போய் விட்டார். திரும்பி வர 10-12 நாட்கள் ஆகும் ஒரு நாள் காலை 8:45 மணியளவில் என் டெலிபோன் மணியடித்தது. எடுத்தேன். ஒரே சப்தம்… இரைச்சல்,”

“ஹலோ” என்றேன்

“நான் தான்….. (குர் ஆன் பேர்வழி) காக்கா, மலேசியா ஏர்ப்போர்ட்டிலிருந்து பேசுகிறேன்” என்றார்.

“பேசுங்கள்” என்று கிண்டலடித்தேன்.

“என்னை வெளியே விட மாட்டார்களாம். ஒரு முறை போனால் விசா காலாவதியாச்சு” என்று சொல்கிறார்கள் காக்கா” என்றார்

“அப்படியெல்லாம் என்னைப் போல இளிச்ச வாயனிடம்தானே சொல்வார்கள்! நீதான் மண்ணடி மண்ணை பொன் என்று விற்கிறா ஆளாச்சே! அதை இமிகிரேஷின்காரனிடம் சொல்லுடா!” என்று டெலிபோனை வைத்து விட்டேன்.  

திரும்பவும் மணியடித்த்து. எடுத்தேன். 

“காக்கா, ரொம்ப கோபப்படுறியளே? குர் ஆன் வந்து விட்டதா?” என்றார்.

“வரவில்லை. மேனேஜர் வெளிநாடு போய்விட்டார். வர 15 நாட்கள் ஆகும். குர்ஆன் கையில் கிடைத்தால்தான் பணம் கிடைக்கும்” என்றேன்.

“ஏன் குர்ஆன் இன்னும் வரவில்லை?” என்றார்.

“அதை பினாங்கில் உன் ஆளிடம் கேள்” என்றேன். 

“நான் இங்கிருந்தே ஊர் போறேன். ஊர் போய் டெலிபோன் போடுகிறேன்” என்று வைத்து விட்டார்.

ஊர் போய் மூன்று நான்கு நாள் கழித்து போன் செய்தார். 

“குர்ஆன் வந்து விட்டதா?” என்றார். 

“குர்ஆன் வந்து விட்டது. அதற்குரிய பணம் வவுச்சரும் கொடுத்து விட்டார்கள். லாரி கூலி போக பாக்கி வெள்ளி இவ்வளவு தந்தார்கள்”என்றேன்.

“”அதில் இவருக்கு இத்தனை வெள்ளி, அவருக்கு இத்தனை வெள்ளி கொடுங்கள். பினாங்கில் (ஒரு நபருடைய பெயரைச் சொல்லி) அவருக்கு இவ்வளவு கொடுங்கள். பாக்கி தொகைக்கு பேங்க் போய் ட்ராஃப்ட் எடுத்து அதை கவரில் வைத்து அத்துடன் வவுச்சரையும் வைத்து என் அட்ரஸ் தருகிறேன். எழுதி தபால் ஆபீஸ் போய் என் பெயரில் ரிஜிஸடர் செய்து விடுங்கள்” என்றார்.

எனக்குக் கடுப்பு ஏறியது,

“நீ கொடுக்க வேண்டிய நபர்களுக்கு அவர்கள் இடத்துக்குப் போய் உன் கடனைக் கொடுக்க வேண்டும். பேங்குக்குப் போய் டிரஃப்ட் எடுக்க வேண்டும். தபால் ஆபீஸ் போய் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். இதையெல்லாம் செய்ய எவனாவது இளிச்ச வாயன் இருந்தால் அவனைப் பார். உன் வீட்டு எடுபிடி என்று நினைத்தாயா? கொஞ்சம் இரக்கப்பட்டு இடம் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவாய். இந்த வேலைகளுக்கு எல்லாம் எவனாவது கேனையன் இருப்பான் அவனைப் பார். பணம் வேனும் என்றால் எவனாவது ஒருத்தனை அனுப்பி முழுப் பணத்தையும் வாங்கிப் போகச் சொல். இந்த ‘மண்ணடித் தந்திரங்கள்’ எல்லாம் இங்கே விலை போகாது.  போனால் போகிறது என்று மனிதாபமான முறையில் உதவி செய்தால் மண்டையில் ஏறி மொட்டையடிக்கும் ஆள் என்பதைப் புரிந்து கொண்டேன்.” என்று சொல்லி போனை கட் செய்தேன்.

அடுத்த நாள் டெலிபோன் வந்தது. ஒரு நபரின் பெயரைச் சொல்லி, 

“அவரிடம் பணத்தைக் கொடுத்து விடுங்கள். ரொம்ப கோபப் படுகிறீர்களே, காக்கா!” என்றார்

“ஆமாம். கோபப்படாமல் இருந்தால் ஒண்ட வந்த பிசாசு ஊர் பிசாசை விரட்டும் என்பார்களே, தெரியுமா? உனக்கு இவ்வளவு உதவி செய்த என்னிடம் கமிஷன் கேட்டாய் அல்லவா? உன் போன்ற நன்றி கெட்டவர்கள் எல்லாம் அல்லாஹ் குர் ஆனை தொடவே கூடாது.  நீ எல்லாம் அதைப் பணம் சம்பாதிக்கும் கருவியாகப் பயன் படுத்துவதனால்தான் இஸ்லாமியர்களுக்கு உலக அளவில் சோதனைகள் ஏற்படுகிறது.” என்று சொல்லி போனை வைத்து விட்டேன்.  

பணம் வாங்க வந்தவரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்து விட்டேன்.  அதோடு காலை சுற்றிய நாகப் பாம்பு போய் விட்டது என்று எண்ணி இருந்தேன்.

அடுத்து ஒரு வாரம் கழித்து மீண்டும் போன் மணி அடித்தது. எடுத்த்தும், 

“காக்கா, நான் தான் பேசுகிறேன். குர் ஆன் கொண்டு வந்ததில் கணக்குப் பார்த்தால் எனக்கு நட்டம் எற்பட்டு விட்டது. அந்தக் கடைக்காரரிடம் சொல்லி இன்னும் கொஞ்சம் பணம் வாங்கிக் கொடுங்கள்” என்றார்.

“பேசியபடிதான் பணம் கொடுத்து விட்டார்களே? அதற்குமேல் எப்படி பணம் கேட்பது?” என்றேன்.

“நான் அங்கே ரொம்ப நாள் தங்கியதில் செலவு அதிகமாகிவிட்டது. அவர்களிடம் நீங்கள் சொல்லுங்கள்” என்றார்.

“நான் சொல்ல முடியாது. பேசியபடி பணம் கொடுத்து விட்டார்கள்” என்றேன்.

“அவர்கள் பணம் கொடுக்க சுனங்கி விட்டதால் நான் தங்கியதில் செலவு அதிகமாச்சே.?” என்றார்

“குர்ஆன் வந்து சேரவிவில்லை. சாமான் வராமல் விலை பேசியதும் பணத்தை இந்தா வாங்கிக்கொண்டு ஊர் போ என்று சொல்லும் முட்டாள்கள் இங்கு இல்லை. அவர்கள் முயற்சிக்கா விட்டால் அவ்வளவு குர்ஆனையும் அரசாங்கம் கடலில் கொட்டி விடும்.  குர்ஆனை காசுக்கு விற்று பணம் சம்பாதித்து தோட்டம் தொறவு வாங்க அவர்கள் உன்னிடம் குர்ஆன் வாங்கவில்லை. அதையெல்லாம் அல்லாஹ்வின் பேரால் இனாம் கொடுக்கவே அதை வாங்கினார்கள். காசு ஆசையால் ஷெய்த்தான் வேலையெல்லாம் செய்யாதே” என்றேன்

“அப்படியென்றால் நான் நேரடியாக அவரிடம் பேசுகிறேன்” என்றார்.

நான் அந்தக் கம்பெனி மேனேஜருக்கு டெலிபோன் போட்டு விஷயத்தைச் சொன்னேன். 

“அப்படியா? அவன் முகத்தில் வைத்திருந்த தாடியையும் உங்களூர் ஆள் என்று நீங்கள் கூட்டி வந்ததாலும்தான் நான் குர்ஆனை வாங்கினேன். ஷைத்தான் வேதம் ஓதுகிறது” என்று சொல்லிவிட்டு,

“உங்கள் ஊரில் ஷெய்த்தான்கள் அதிகம் இருக்கும்போல் தெரிகிறது!” என்றார்.

கொஞ்ச நேரம் கழித்து அந்த்க் கடை மேனேஜர் எனக்கு மீண்டும் போன் போட்டார்.

“பணம் கேட்டார். பணம் இல்லை. கொடுத்த பணத்தை திரும்ப கொடுத்து விட்டு குர்ஆனை எடுத்துக் கொள் என்றேன். விலை பேசி முடித்து ஒப்பந்தம் செய்துவிட்டு பிறகு கூட கொடு குறையக் கொடு என்று கேட்கிறாயே அப்படியெல்லாம் நீ கொண்டு வந்த குர்ஆனில் இருக்கிறதா?. உனக்கெல்லாம் ஒரு தாடி! ஒரு தொப்பி! மகா மட்டரகமான பேர்வழியாக இருக்கிறாயே” என்று திட்டி டெலிபோனை வைத்து விட்டேன்” என்று சொன்னார்.

“மீண்டும் டெலிபோன் போட்டு அதே பல்லவியைப் பாடினார். ஒரு வாரம் டயம் தர்றேன். நான் கொடுத்த பணத்தை கொடுத்து விட்டு குர்ஆனை எடுத்துக் கொள். இல்லை என்றால் நீ இங்கே வா. குர்ஆனை தருகிறேன். நான் கொடுத்த பணம் அல்லாஹ் பேராலே உனக்கு கொடுத்த தர்மமாக இருக்கட்டும் என்று சொன்னேன் என்றும், உழைத்துப் பணம் சம்பாதிக்க வழியைப் பார். தில்லுமுல்லுத்தனம் செய்யாதே” என்று சொன்னதாகச் சொன்னார்.

‘இனிமேல் டெலிபோன் போடாதே. போட்டால் நான் வேறு விதமாகப் போக வேண்டி வரும்” என்று எச்சரித்ததாகச் சொன்னர். அதோடு டெலிபோன் வருவது நின்று விட்டது.  

நான் படித்த புத்தி, பாம்பென்று நினைத்து அடிப்பதா? பழுதை என்று நினைத்து மிதிப்பதா? என்று ஒரு தமிழ் சொல்லடை உண்டு. (இதன் பொருள்: பழுதை என்பது வைக்கோல் பிரி). இரவு வேளைகளில் வயல்களின் வழி பாதையில் போகும்போது அங்கே பாம்பும் சுருண்டு கிடக்கும். வைக்கோல் பிரியும் சுருண்டு கிடக்கும். மங்கிய நிலவொளியில் பார்க்கும்போது அது பாம்பாகவும் தெரியும் வைக்கோல் பிரியாகவும் தெரியும். வைக்கோல் பிரியா பாம்பா? வைக்கோல் பிரி என்று எண்ணி பாம்பின் மீதுகால் வைத்தால் என்ன ஆகுமென்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆட்டுத்தோல் போத்திய நரி மந்தையில் புகுந்து ஆடுகளைத் தின்று ரத்தம் குடித்ததைப்போல் இஸ்லாத்தின் தோல் போத்திய நரிகள் நிறையவே குர் ஆனின் போதனை கூறியும் நபிகள நாயகம்(ஸல்) அவர்கள் கூறிய பொன் மொழிகளை (ஹதீஸ்களை) கூறியும் தங்கள் பொருளாதாரத்தை வளப்படுத்திக் கொள்கின்றன.  அல்லாஹ் குர்ஆனை அருளியது அதை ஒன்றுக்கு நூறாக விற்று மனிதன் காசு பார்க்க அல்ல. ரசூலுல்லாஹ்(ஸல்) நல்லுபதேசம் செய்த ஹதீஸ்களைச் சொன்னது புத்தகமாக்கி ஒன்றுக்கு நூறாக விற்று காசு பார்க்க் அல்ல. அவை இரண்டும் நமக்கு வந்தது மனிதன் நல் வழியில் சென்று நல்வாழ்வை பெற்று நல்லதைச் செய்து மனித இனம் திருந்தி அல்லாஹ்வின் நல் அடியாராகவே.  குர் ஆனில் think and grow தத்துவங்கள் சொல்லப்பட் வில்லை. Think and grow rich புத்தகத்திலும் குறுக்கு வழியில் சீக்கிரமே பணக்காரனாகும் தத்துவமும் சொல்லப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

குர்ஆனில் சொல்லப்பட்டதெல்லாம் நேரிய வழியில் நட; அல்லாஹ் ஒருவன் என்று நம்பு அவனையே வணங்கு; நேரிய வழியில் பொருளீட்டி வாழ்க்கை நடத்து தான தர்மங்களைச் செய் போன்றவையே.

அல்லாஹ்வும் இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் குர்ஆனும் ஹதீஸூம் மனிதனுக்கு நேர் வழி காட்ட அல்லாஹ்வால் அனுப்பப்பட்டவையே. அவை மனிதனுக்கு quick rich method டை கூற அல்லாஹ்வால் அனுப்பப்ப்படவில்லை என்பதை மீண்டும் நினைவு படுத்தி நிறைவு செய்கிறேன், அஸ்ஸலாம் அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு!

S.முஹம்மது ஃபாரூக்

தேவையில்லாமல் ஏன் எசல வேண்டும்? (ஒரு விமானப்பயண அனுபவம்) 11

அதிரைநிருபர் பதிப்பகம் | November 26, 2013 | , , , , , ,


ஒரு தடவை தம்மாமிலிருந்து கொழும்பு வழியாக திருச்சிக்கு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மூலமாக ஊர் திரும்பும் சமயம்  சுங்க,குடியுரிமைச் சட்டங்களெல்லாம் நம்மை நொங்கெடுத்த பின் விமானத்திற்குள் பிரவேசித்தேன். அவரவர் இருக்கையில் அமர்ந்த பின் விமானப் பணிப்பெண்கள் விமானத்தின் சட்ட திட்டங்களையும், ஆபத்துக் காலங்களில் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளையும் கை,கால்,கண் செய்கையில் சப்தமின்றி விளக்க ஆரம்பித்தனர்.

நம் இருக்கைக்கு கீழே பொறுத்தப்பட்டுள்ள அந்த உயிர்காக்கும் பலூனை கழுத்தில் மாட்டி அதனுடன் உள்ள குழாயை வாயில் வைத்து ஊதும் பொழுது எல்லோர்க்கும் என்னவ்வோ திக்குதிக்கென்று குமீர்ப்பு,  சொலேர்ப்பாகவும் தான் இருக்கும். எல்லோரும் தங்களை அவரவர் இருக்கையில் நன்கு பெல்ட் கொண்டு கட்டிப்போட்டுக் கொண்டதும் விமானம் ஓடுபாதையில் மெல்ல,மெல்ல நகர்ந்தது. நாமும் பயண து'ஆவை ஓதிக்கொண்டோம். பிறகு அதன் வேகம் கூடிக்கொண்டே தரையை எட்டி உதைத்து வானிற்குத்தாவியது. போதிய உயரம் அடைந்ததும் விமானம் பறப்பது செங்குத்து நிலையிலிருந்து சமநிலைக்கு கொண்டு வரப்பட்ட பின் விமானத்திற்குள் விளக்குகள் எரியவைக்கப்பட்டன. எல்லோர் முகத்திலும் பூரிப்பு தான் களரியில் சகனுக்காக காத்துக்கிடக்கும் நம்மைப்போல.

விமானப் பணிப்பெண்கள் நம்மூரில் கலியாணப்பத்திரிக்கை மாதிரி வாய்க்கூப்பாடின்றி வெறும் கை நார்சா தருவது போல் அந்த சாப்பாட்டு மெனு கார்டை இருக்கையிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் கொடுத்துச்சென்று கொண்டிருந்தனர். அதில் வெள்ளடை ஆட்டுத்தலையாணமோ, ரால் போட்ட ப்ராச்சப்பம் கடல்பாசியோ, அப்பம் உளுந்துக்கஞ்சியுமோ, இடியப்பம் முட்ட மொளவு தண்ணியாணமோ, முட்ட ரொட்டி முர்தபாவுமோ தேடியும் எம் கண்களுக்குத்தென்படவில்லை.

அவரவர் இருக்கைக்கு முன் மடக்கி வைக்கப்பட்டுள்ள அந்த தட்டுகள் விரிக்கப்பட்டு பரிச்சை ஹாலில் வினாத்தாளை எதிர்பார்த்து அமர்ந்திருக்கும் மாணவர்கள் போல் சாப்பாட்டை எதிர்பார்த்து எல்லோரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். 

அந்த சம்பிரதாய மெனு கார்டில் உள்ள ஐயிட்டங்களில் சிலவற்றையே நமக்கு தந்து பரிமாறப்பட்டது. ஆனால் 'குடி'காரர்களின் பானங்கள் மட்டும் குளிர் ஆவி பறக்க வேண்டிய அளவை விட அவர்களுக்கு பரிமாறப்பட்டது. 'காஞ்ச மாடு கம்புல விழுந்த கதையாக' அவரவர் மறு சோறு, புளியாணம் கேட்பது போல் பணிப்பெண்களிடம் கேட்டு, கேட்டு வாங்கி குடித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர். 

கொஞ்ச நேரத்தில் டாய்லெட் சென்றால் ரொம்ப நாளுச்செண்டு குடிச்சி ஒத்துக்கிடாதவர்கள் வாந்தி எடுத்து அந்த வாஷ் பேஷனையே நிரப்பி வைத்திருந்தனர் (வாஷ் பேஷனின் சர்சராக்குழிகள் அடைத்துக்கொண்டன) இது போன்ற குடிகாரர்களுக்காக இனி ஒவ்வொரு விமானக்கழிவறைகளிலும் நமதூர் தென்னங்குச்சியால் செய்யப்பட்ட வெளக்கமரு ஒன்று வைத்தால் நல்லது.

கழிவறை செல்லும் வழியில் உள்ள வரிசையில் எனக்கு இருக்கை கிடைத்திருந்தது. சாப்பாட்டுத்தட்டுகள் சாப்பிட்ட பின் திரும்பிப்பெறப்பட்டு எல்லோருக்கும் தேநீர் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. வருடங்கள் பல கழிந்த பின் ஊருக்குப்போகும் சந்தோசத்தில் சிலருக்கு டீ குடிப்பதா? தண்ணீர் குடிப்பதா? ஜூஸ் குடிப்பதா? என்றக்குழப்பத்தில் வாயும், வயிறும் ஓடவில்லை. 

எல்லோரும் உணவு உண்ட பின் கொஞ்சம், கொஞ்சமாக உறங்க ஆரம்பித்தனர். விமானம் நடுநிசியில் வானுக்கும், கடலுக்கும் நடுவில் பறந்து கொண்டிருந்தது. குளிராக இருந்ததால் நானும் போர்வை ஒன்றை கேட்டு வாங்கி போர்த்திக்கொண்டு உறங்க ஆரம்பித்தேன். நல்ல அசந்த தூக்கம். திடீரென என் இருக்கை அருகே ஒருவர் தொப்பென்ற சப்தத்துடன் விழுந்து கிடந்தார். நானும் விமானத்திற்குத்தான் ஏதேனும் கோளாறு வந்து விட்டதோ என்றெண்ணி பதறியவனாக திடுக்குண்டு முழிச்சிட்டேன். 

பிறகு என்னை நானே ஆசுவாசப்படுத்திக்கொண்ட பின் தான் அறிந்து கொண்டேன். ஒரு மடாக்குடியன் அதிகளவு குடித்து விட்டு கழிப்பறை அருகே நடைபாதையில் வாந்தி எடுத்து மயக்கதில் விழுந்து கிடக்கிறான் என்று. பிறகு ஆத்திரத்தில் அவனை முதுகில் லேசாக ஒரு தட்டு தட்டி "ஏன்டா இப்புடி செய்றீங்க? அறிவுகெட்டவனே நாலு,அஞ்சு மணி நேரத்துக்குப்பிறகு ஊருக்குப்போய் நல்லா குடிச்சிக்கிட வேண்டியது தானே?" என்று ஆத்திரத்தில் அங்கேயே அவனை திட்டினேன்.

பிறகு வெட்கப்பட்டோ, வேதனைப்பட்டோ தட்டுத்தடுமாறி மெல்ல எழுந்து அவன் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான். விமானப்பணிப்பெண் ஒருத்தி அவன் வாந்தி எடுத்த இடத்திற்கு வந்து அதன் மேல் ஒரு போர்வையை போர்த்திச்சென்றாள் ஏதோ வாந்திக்கு குளுவுற மாதிரி. என் இருக்கையிலிருந்து அவளை அழைத்தேன். எஸ் என்று அவளும் வந்து நின்றாள். பிறகு அவளிடம் கேட்டேன் "ஏன் இப்படி அளவுக்கு அதிகமாக வாந்தி எடுக்குமளவுக்கு நீங்கள் மதுவை பயணிகளுக்கு பரிமாறுகிறீர்கள்?" என்று. இப்பொழுது அவன் வழியில் வாந்தி எடுத்து விட்டானே உன்னால் அதை உடனே கழுவி சுத்தம் செய்ய முடியுமா? என்றேன்.

அதற்கவள் பேக்கபேக்க என்று முழித்து விட்டு சாரி சார், பயணிகள் கேட்கும் அளவு அவர்களுக்கு மது பரிமாற வேண்டுமென்று எங்கள் விமான நிறுவனத்தின் கட்டளை என்று சொன்னாள். குடிகாரர்களுக்கு வேண்டுமென்றால் ஆஹா, என்னா உபசரிப்பு? என்றிருக்கலாம். அது விமானத்தை அசுத்தப்படுத்தும் அளவுக்கு ஆகி விடுவது கூட மேலிட நாற்காலிகளுக்கு கொஞ்சம் விளங்கியும் வியாபார லாப நோக்கிற்காக அதை கண்டு கொள்வதில்லை.

கூலிக்கு மாரடிக்கும் அவளிடம் போய் வாக்குவாதம் செய்து என்ன பயன்? என்றெண்ணியவனாக என் உறக்கத்தைத்தொடர ஆரம்பித்தேன்.

இதே போன்ற அனுபவம் ஏர் இந்தியாவில் ஒரு முறை பயணிக்கும் பொழுதும் ஏற்பட்டது. ஒருவன் இருக்கையில் இருந்து நன்கு குடித்து விட்டு பிறகு எழுந்து சென்று பின்னால் காலியாக உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டான் மீண்டும் ஒரு ரவுண்டு குடிப்பதற்காக. அதை கவனித்த ஒரு வயதான விமான பணி ஆண் தமிழிலேயே இப்படி அவனிடம் கேட்டார் "ஏன்யா இப்படி அலைறே, உன் எடத்திலெ உக்காருய்யா" என்று.

கடைசியில் விமானமும் ஒரு வழியாக கொழும்பு வந்திறங்கி மாற்று விமானத்தின் மூலம் திருச்சியும் வந்திறங்கினேன். நம்மை சாவடிக்கும் சுங்கச்சாவடி சட்டதிட்டங்கள் வரிசைக்குப்பின் முறையே நிறைவேறி பின் சாமான்கள் சுழலும் பெல்ட் பக்கம் வந்து நின்றேன். கொஞ்ச தூரத்தில் என்னிடம் குடி மயக்கத்தில் நடு வானில் அடிவாங்கிய அந்த இளைஞனும் நின்று என்னையே வெறிக்க,வெறிக்க குருகுருவென்று பார்த்துக்கொண்டிருந்தான். ஆஹா, நம்மளை அடையாளம் கண்டுகொண்டு விட்டானே? உள்ளூர்க்காரனாக இருந்து திருச்சி ஏர்போர்ட்டை விட்டு நாம் வெளியேறும் சமயம் நம்மை அடியாள் வைத்து டின்னுக்கட்டிருவானோ? என மனதின் ஓரத்தில் கொஞ்சம் பயம் வர ஆரம்பித்து விட்டது. அவனை கேர் செய்யாமல் நான் என் சாமான்கள் வரும் வழியை மட்டும் நோக்கிக்கொண்டிருந்தேன். 

இருந்தாலும் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவன் பெட்டி ஒன்று சக்கர பெல்ட்டில் சுழன்று வந்து கொண்டிருந்தது. அதை பார்த்த அவன் உடனே லபக்குண்டு எடுத்தான். எதார்த்தமாக அந்த பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை நோக்கினேன். அஸ்தஹ்ஃபிருல்லாஹ்!!! அதில் முஸ்லிம் பெயர் எழுதப்பட்டிருந்தது (பயத்தில் அந்த பெயரை மனதில் பதிய வைக்க முடியாமல் போனது). உடனே நேராக அவனிடம் சென்று அடப்பாவிப்பயலே என்று ஒரு கன்னத்தில் அரை விட்டு வர மனம் நாடியது. ஏன் தேவையில்லாமல் அவனிடம் சென்று எசல வேண்டுமென்று விட்டு விட்டு என்னை அழைத்துச்செல்ல திருச்சி விமான நிலையம் வந்திருந்த என் தகப்பனார், பிள்ளைகளுடன் நல்லபடி அன்று ஊர் வந்து சேர்ந்தேன். அல்ஹம்துலில்லாஹ்....... 

விமானத்தில் சில நேரங்கள் நம்ம ஆளுஹலும் யாருக்குத் தெரியப்போவுது? என்று குடித்து விடுவது ஒரு வேதனையான, விழிப்புணர்வு இல்லாத பாவச்செயலாகிவிடுகிறது. சகோ. அர. அப்துல் லத்திஃப் தன் கட்டுரையில் குறிப்பிட்டது போல அமெரிக்காவிலிருந்து வருபவர்கள் அடக்கமாகத்தான் வருகிறார்கள். இந்தியாவிற்கு அக்கம்பக்கத்து நாடுகளிலிருந்து வருபவர்கள் தான் அலிச்சாட்டியம் அதிகம் செய்கிறார்கள். 

இது தாங்க நடந்துச்சி.......

மு.செ.மு. நெய்னா முஹம்மது
இது ஒரு மீள்பதிவு

கஞ்சி வருதப்பா... - பகுதி : 2 of 2 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 07, 2013 | , , , , ,

"சஹ்ருக்கு சோத்தை உண்டுட்டு நிய்யத்து சொலலு"ன்னு 'ஆலி'முசா சொன்னாரு! அரகிடா என்னடான்டா 'நிய்யத்தை சொல்லிட்டு கஞ்சியே குடி"ங்ககிறார். இந்த ரெண்டு பேரும் சேர்ந்து நோம்பாளிகளைப் போட்டு ஒரே கொழப்பு கொளப்புறாங்களே!

"அடே! அரகெடா சாபு ! இந்த ஒரு 'மண்' சட்டி கஞ்சிக்கா என்னை 'தீ'மிதிக்க சொல்றீய?''

"கஞ்சி காய்ச்ச உங்க அப்பனா காசு கொடுத்தார்?. ஊரார் ஊட்டு காசிலே கஞ்சி காய்ச்சிட்டு 'தாசில் பண்றியலா?"

நீங்க அரக்கிடா வைத் தான் திண்டீங்க! நான் யார் தெரியுமா? ஒன்னையும் ஒரு கிடை ஆட்டையும் ஆடு ஓட்டுற இடயனையும் சேர்த்து ஒரே முழுங்கா முழுங்கிட்டு மலைப் பாம்பு போல  சும்மாகிடப்பேன் சாபு! 

நான் ஒரு தடவைச் சொன்னா அது ஒரு தடவை சொன்னதுதான்! சும்மா, சும்மா சொல்லிச் சொல்லி கழுத்தை அறுக்க மாட்டேன்! பெருநாள் பொறை பொறக்கட்டும் வக்கிறேன் ஒங்கலுத்துலே கத்தி''

இருந்தாலும் அரக்கடா சாபுவின் கேள்வி நாங்கள் எதிர்பார்த்தது தான். முன்கூட்டியே மனப்பாடம் செய்த நிய்யத்தை அள்ளிவிட்டேன்.

அரக்கிடாவா கொக்கா "பொய் சொல்றேடா!" என்றார். 

எனக்கு பக்கத்தில் இருந்தவன் “நெசந்தான் சாபு  அவன் நோன்புதான்’’ என்று சாட்சி சொன்னான்’. வேலிக்கு ஓணான் சாட்சி-ஓணானுக்கு வேலி சாட்சி’

‘’நான்  நம்பல! சரி  கஞ்சி தர்ரேன்  பாங்கு சொல்லித்தான் குடிக்கனும். அதுக்கு முன்னே  குடிச்சிட்டு ஓடினே நாளைக்கு  கஞ்சி தர மாட்டேன்’’ என்று எந்த எழுத்து கிறுக்கு ஏதுமில்லாமல் எங்களுக்கும், அரகிடாவுக்கும் இடையே உண்டான ’ஜென்டில் மேன்’ உடன்பாட்டின் படி சட்டி வந்தது. 

சட்டி சூடாத்தான் இருந்துச்சு! ‘சட்டி  சுட்டதடா  கை  விட்டதடா’  என்று நான் சட்டியை கை  விடவில்லை என்னை நம்பி  என்னோடு வந்த பின் அதை கை விட்டால் நான் ஒரு மனுசனா ? 

நாலு  பேர்  பார்த்தா என்ன நினைப்பார்கள்?  எந்த முகத்தோடு ஊரில் நடமாட முடியும் என்று நாலையும்  நன்றாக யோசனை  செய்து ‘ சுட்ட சட்டியை’ அப்படியே என் அரவணைப்பில் வைத்துக் கொண்டேன்.  ஒரு கண்டம் நீங்கியது. கஞ்சியை எல்லோருக்கும் கொடுத்து முடித்து விட்டு தர்ஹா  தூண் ஓரம்  நின்று அரக்கிடா   எங்களையே  உளவு பார்த்தார். ‘யாரோ  கொடுத்த காசுலே கஞ்சியை காச்சி எங்களை இந்த பாடு படுத்துறியே!’ என்று மனதுக்குள் அவரை திட்டினோம். சத்தம் போட்டு திட்டி அரக்கெடா காதில் பட்டால் கஞ்சி சட்டிக்கு ஆப்புத்தான்.

அடுத்து  கடிகாரத்தை பார்த்தோம்.  பெரிய முள்  கொடுத்த சாவிக்கு ஆக்டிவா தனது கடமையை உணர்ந்து செய்தது. சின்ன முள்ளோ  ரொம்ப சோம்பேறி. பக்கத்தில்  இருந்த ஒருவர் கொஞ்சம் விஷயம் தெரிஞ்ச ஆள். பினாங்குக்கு வாப்பா மாமா மச்சானுக்கு எழுதும் கடித்ததில் இங்கிலீஸ்லே அட்ரஷ் எழுதும் அளவுக்கு அவரிடம் சங்கதி உண்டு.

இதில் இங்கிலீஷ்  தெரிந்த வேற ஆளுகளும் இருந்தார்கள். அவர்கள் TO எழுதும் இடத்தில் அனுப்புபவரின் பெயரை போட்டு FROM எழுதும் இடத்தில் கடிதம் பெறுபவரின் பெயரை  போட்டும் அட்ரசை எழுதி கொடுத்த கடிதமெல்லாம் நாளே நாளில் வீடு வந்தது. கடிதத்தை பெற்ற தாயோ “நான் போட்ட கடித்ததை தந்தி-போல் பாவிச்சு பதில் போட்டுட்டானே!” என்று தபாலை ஆவலுடன் ஒடச்சு படிச்சு பார்த்தா ‘என்  கண்ணான  வாப்பா  காதர்  மஸ்தானுக்கு உம்மா மம்நாச்சியா எழுதும் கடிதம். யாதெனில்  இப்பவும்  நானும்  வாப்பாவும்  ராத்தாவும் தங்கச்சியும் நல்ல சுகம்.  நீ கடுதாசி  போட்டு  மூனு  மாசம் ஆச்சு! ஒரு சேதியும் தெரியலே’ தாய் மகனுக்கு  போட்ட கடிதம் தாய்க்கே திரும்ப வந்துடுச்சு. காணாமல் போன பசுமாடு ஏழு நாளைக்கு பின் கன்றை தேடி  ‘ம்மா’ ‘ம்மா’ என்று கத்திக் கொண்டு  வருவது போல!  

இந்த இடத்தில்  எனக்கு  ஒரு டவுட். நாமெல்லாம் உம்மா உடைய காக்காவையோ தம்பியையோ "மாமா"ன்னு பிரியமா கூப்பிடுறோம். கன்றுக் குட்டியும் பதிலுக்கு ‘மருமகனே மருமகனே’ன்னு கூப்பிடாமா தன் தாயை ‘மா மா மா மா’ன்னு கூப்பிடுதே! இதுலே கன்றுக் குட்டிக்கு தன்னை பெற்ற பசு மாமாவா? அல்லது  மாட்டுக்கு கன்றுக் குட்டி ‘மாமா’வான்னு தெரியாம ரொம்ப குழப்பமா இருக்கு! இதில் யார் யாருக்கு மாமா?ன்னு தெரியலே! தெரிஞ்சவுக சொல்லலாம்.

இன்னொரு  குழப்பம்!  ஆட்டுக் குட்டியும் ‘மே! மே!’ன்னு  கத்துது. சந்தேகம் வந்து காலண்டரை பார்த்தா அது அக்டோபர் மாதம் 11 தேதி போட்டு இருந்தது. விஷயம் தெரிஞ்ச ஒருவரிடம் கேட்டேன். ‘’ஆட்டுக் குட்டி ஏன் ‘ மே மே’ன்னு கத்துது?’ ‘’அதுவா! அது தொழிளார் தலைவர் வீட்டு ஆட்டுக் குட்டி! தொழிலாளர்களுக்கு ‘மே’ என்றால் ரொம்ப பிடிக்கும். எஜமான் மேலே உள்ள விசுவாசத்தை காட்ட அந்த ஆடு ’மே! மே!’ன்னு  கத்துது’’ என்றார். நல்ல ”லாஜிக்”தான்.  

இப்போ நான் மேலே விட்ட விசயத்துக்கு வருவோம். நல்லா விஷயம் வெளங்குன ஆளுபோல இருந்ததால்  மேலும் ஒரு கேள்வியை கேட்டேன் "பெரிய  முள் ஏன் வேகமா ஓடுது? சின்ன முள் ஏன்  மெதுவா ஓடுது?"ன்னு கேட்டேன். 

என்னை ஒரு மாதிரியா பார்த்த அந்த ஆசாமி சொன்னார் “பெரிய முள் 12 ல் இருந்து ஒரு சுத்து சுத்தி  திரும்பவும் 12க்கு  வந்ததும் தான்  சின்ன  முள்  மணி 3ல் இருந்து  4 மணிக்கு  வரும். 60 நிமிஷம் ஆனபிறகு தான் சின்ன முள்  3ல் இருந்து  நாளுக்கு வரும்’’ என்றார். 

“அறுபது நிமிஷம் ஆகிறதுக்கு முன்னாடி  30 நிமிசத்துலேயே சின்ன முள்  3லிருந்து 4க்கு வந்தால் பெரிய முள் சின்ன முள்ளை அடிக்குமா?’’  என்று கேட்டேன். 

‘’நீ  யாருடா?  யாரு வுட்டு பயடா?  உங்க வாப்பா பேரு என்னடா?’’ என்று என்னோடு  சண்டைக்கு  வந்துட்டார்! 

”என்னாடா? நீ என்னை வெடைக்குறியா? ஒரே குத்திலே மூஞ்சியை  ஓடச்சி புடுவேன்’’  என்று என்னை அடிக்க கிளம்பிட்டார். 

அங்கே இருந்தவங்க எல்லோரும்’’ என்ன? என்ன?  என்று  கூடிட்டாங்க. பக்கத்தில் இருந்த என் நண்பன் சொன்னான் ‘’அவன் தெரியாம கேட்டுட்டான். காக்காவுக்கு கோபம் வந்துருச்சு!  என்றான்.

அங்கே கூடியவர்களில் ஒருவர் எனக்கு வக்காலத்து வாங்கினார்.

’’இவன்  நல்ல  புள்ளைடா!  வம்பு தும்பு கெல்லாம்  போக மாட்டன்டா!” என்று சொல்லி  சமாதனம்  சொன்னவர் என்  வாப்பா பெயரை சொல்லி  அவர்  மகன் என்று  என்னை அடிக்க  வந்தவரிடம் சொன்னார்.  

“அட! இவன்  காக்கா  மகனா?  எனக்கு  தெரியாதே! மொதல்லேயே வாப்பா பெயரை சொல்லி  இருக்கப்படாதா?  சரி!  சரி! போ” என்று சொல்லி  சமாதானம்  ஆகிவிட்டார். 

பாங்கு சொல்லும் சாபு ‘ஆசு வாசமா’ ஒளு செய்துட்டு அப்படியே உட்கந்துட்டார். சட்டியிலே ஊத்துன கஞ்சி ஆறுதுலே! ஆறுன கஞ்சி பழங்கஞ்சி’ங்கிற பழமொழி  தெரியாத ஆளுகளை எல்லாம் பாங்கு சொல்லப் போட்டால் இப்படித்தான்’ கொஞ்ச நேரம் ஆனதும் நகராசத்தம் ‘டும் டும் என்று கேட்டது பாங்கொலியும் பின்னர் கேட்டது.

கஞ்சி’ சட்டியெல்லாம் காலியாக கேட்ப்பாரற்று கிடந்தது. அந்த கால கட்டத்தில் நோன்பு முப்பது நாட்களும் நோன்பு கஞ்சி காய்ச்சுவது  குறைவு. ஒரு சில வசதி படைத்தவர்கள் மட்டுமே கஞ்சி காய்ச்சுவார்கள். பினாங்கில் இருந்து யாரும் வந்தால் அவர்களின் உபயம் கஞ்சி அடுப்பு புகையும்.

கஞ்சி  இல்லாத கஞ்சிகாய்ச்சாத நாட்களில் வழக்கமாக தொழுபவர்கள்  மட்டுமே வந்து போவார்கள். மற்ற நேரங்களில் தெருவே 144 போட்டது போல் இருக்கும். நோன்பு காலங்களில் ஊமையன் ‘டி’கடை வியாபாரம் back- door வழியாக பகல்  நாலு மணி வரைக்கும் நடக்கும். நாலுக்கு மேல் front-door  வியாபாரம் ’வாடா- பட்ஜி-வடை- நோன்புக் கஞ்சி etc.etc., முதலியவை நடக்கும். Public கஞ்சி இல்லாத நாட்களில் வழக்கமாக தொழ வருபவர்களுக்கு மட்டும் ஒரு குறிப்பிட்ட பணக்காரர் கேத்தலில் கஞ்சி கொண்டு வருவார். இது வேறுயாருக்கும் கிடைக்காது இந்த கஞ்சி A/c Prayer Only.

காலங்கள்  மாறின மண் வீடுகள் எல்லாம் செங்கல் வீடுகளானது. தென்னைங் கீற்று கூறைகள் ஓட்டு வீடுகள் ஆனது. கீத்து வேலிகள் எல்லாம்  காம்பவுண்ட் சுவர்கள் ஆனது கடிகாரம் இல்லாத வீடுகளில் வால்- கிளாக் அலாரம், ட்ரான்ஸ் சிஸ்டர்’ டிவி’ இப்போ computer வந்தது விட்டது. பண புழக்கம் முக்காடு போடாமல் திரிகிறது . கொழும்பு பினாங்கு சிங்கபூர் என்று சூரியன் உதிக்கும் கிழக்கை நம்பி இருந்த அதிராம்பட்டினம் போன்ற ஊர்கள் மேற்கே ‘கிப்லா’வை பார்த்ததும் சூரியன் அஸ்தமிக்கும் மேலை வானத்தில் புதிய சூரியன் தோன்றினான்.

தமிழகத்தின் முஸ்லிம் மக்களின்  வீடுகளில் மின்சார விளக்குகள் டியுப் லைட்கள் ஒளிவீசியது. ரேடியோ டிவி ஒலி-ஒளி பாரப்பின. ஆடிக்கு ஒரு தடவை – அமாவாசைக்கு ஒரு தடவை - எப்போதாவது ஒரு  அம்பாசடர் கார் அதிரைக்கு வரும். அதை துரத்திக் கொண்டு ஓடியவர்களில் நானும் ஒருவன். காரை தொடவிடாமல் AK-47 கையில் இருப்பதாக நினைத்துக் கொண்டு அதை கண்ணால்  கூட  பார்க்க விடாமல் டிரைவர்  எங்களை விரட்டுவார். ஒரு அம்பாசடர்  கார் வைத்திருப்பது தங்களின் ஏகபோக  உரிமை என்றும் தோப்பு வயல் வைத்து  நிர்வாகம் செய்வதை  தங்களுக்கே அல்லாஹ் Monopoly ஆக்கிவிட்டான்’  என்று எண்ணியவர் களுக்கெல்லாம்  காலம்  என்ற பேராசிரியர்  நல்ல நல்ல பாடங்களை  போதித்து விட்டார். அடுப்பு புகையாமல் கிடந்த குச்சி வீடுகள் எல்லாம் புகை போக்கி குழாய் வைத்து மாடி வீடுகள் கட்டி விட்டார்கள். வீடுகட்ட Blue-print போடும் போதே Car-shedக்கு இடம் போட்டு வீடுகள் கட்டப்படுகிறது. ’’ எங்கள்  வீட்டில் ‘வெல்லாட்டி’ வேலை பார்த்தவர்களுக்கு எங்கள் வீட்டை விற்க மாட்டோம்’’ என்று சொன்னவர்கள் விழி பிதுங்கி  நிற்கிறார்கள்.  

‘’சூரியன்  அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை  ஆள்பவர்கள் நாங்கள்’ என்று மார்தட்டி நின்ற  ‘சாம்ராஜ்யத்தின் ராஜ குடும்பங்களில் ‘\கலப்பு திருமண வாடை’ வீசுகிறது. குலப்பெருமை பேசியவர்கள் குணிந்து நடக்கிறார்கள்.

கஞ்சி வந்து விட்டது. ஆறின கஞ்சி பழங்கஞ்சி’ ஆகிவிடும் ஆதலால் ஆறும் முன்னே சூட்டோடு  குடிப்போம்.   ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் குடிப்போம்! "ஒற்றுமை என்னும் கையிற்றை  பற்றி பிடுத்துக் கொள்ளுங்கள்’’. ஒற்றுமை இன்றில் நம் அனைவருக்கும் தாழ்வே! 

மீண்டும் சந்திக்க  எல்லாம்  வல்ல  அல்லாஹ்  அருள் புரிவானாக! ஆமீன்.

அதிரைநிருபர் வாசகர்கள் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவர்களுக்கும் என் மனங்கனிந்த ஈதுல்பிதர் வாழ்த்துகள்.

S.முஹம்மது பாரூக்
அதிராம்பட்டினம்

தேவையில்லாமல் ஏன் எசல வேண்டும்? (ஒரு விமானப்பயண அனுபவம்) 21

அதிரைநிருபர் பதிப்பகம் | November 10, 2012 | , , , , , ,


ஒரு தடவை தம்மாமிலிருந்து கொழும்பு வழியாக திருச்சிக்கு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மூலமாக ஊர் திரும்பும் சமயம்  சுங்க,குடியுரிமைச் சட்டங்களெல்லாம் நம்மை நொங்கெடுத்த பின் விமானத்திற்குள் பிரவேசித்தேன். அவரவர் இருக்கையில் அமர்ந்த பின் விமானப் பணிப்பெண்கள் விமானத்தின் சட்ட திட்டங்களையும், ஆபத்துக் காலங்களில் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளையும் கை,கால்,கண் செய்கையில் சப்தமின்றி விளக்க ஆரம்பித்தனர்.

நம் இருக்கைக்கு கீழே பொறுத்தப்பட்டுள்ள அந்த உயிர்காக்கும் பலூனை கழுத்தில் மாட்டி அதனுடன் உள்ள குழாயை வாயில் வைத்து ஊதும் பொழுது எல்லோர்க்கும் என்னவ்வோ திக்குதிக்கென்று குமீர்ப்பு,  சொலேர்ப்பாகவும் தான் இருக்கும். எல்லோரும் தங்களை அவரவர் இருக்கையில் நன்கு பெல்ட் கொண்டு கட்டிப்போட்டுக் கொண்டதும் விமானம் ஓடுபாதையில் மெல்ல,மெல்ல நகர்ந்தது. நாமும் பயண து'ஆவை ஓதிக்கொண்டோம். பிறகு அதன் வேகம் கூடிக்கொண்டே தரையை எட்டி உதைத்து வானிற்குத்தாவியது. போதிய உயரம் அடைந்ததும் விமானம் பறப்பது செங்குத்து நிலையிலிருந்து சமநிலைக்கு கொண்டு வரப்பட்ட பின் விமானத்திற்குள் விளக்குகள் எரியவைக்கப்பட்டன. எல்லோர் முகத்திலும் பூரிப்பு தான் களரியில் சகனுக்காக காத்துக்கிடக்கும் நம்மைப்போல.

விமானப் பணிப்பெண்கள் நம்மூரில் கலியாணப்பத்திரிக்கை மாதிரி வாய்க்கூப்பாடின்றி வெறும் கை நார்சா தருவது போல் அந்த சாப்பாட்டு மெனு கார்டை இருக்கையிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் கொடுத்துச்சென்று கொண்டிருந்தனர். அதில் வெள்ளடை ஆட்டுத்தலையாணமோ, ரால் போட்ட ப்ராச்சப்பம் கடல்பாசியோ, அப்பம் உளுந்துக்கஞ்சியுமோ, இடியப்பம் முட்ட மொளவு தண்ணியாணமோ, முட்ட ரொட்டி முர்தபாவுமோ தேடியும் எம் கண்களுக்குத்தென்படவில்லை.

அவரவர் இருக்கைக்கு முன் மடக்கி வைக்கப்பட்டுள்ள அந்த தட்டுகள் விரிக்கப்பட்டு பரிச்சை ஹாலில் வினாத்தாளை எதிர்பார்த்து அமர்ந்திருக்கும் மாணவர்கள் போல் சாப்பாட்டை எதிர்பார்த்து எல்லோரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். 

அந்த சம்பிரதாய மெனு கார்டில் உள்ள ஐயிட்டங்களில் சிலவற்றையே நமக்கு தந்து பரிமாறப்பட்டது. ஆனால் 'குடி'காரர்களின் பானங்கள் மட்டும் குளிர் ஆவி பறக்க வேண்டிய அளவை விட அவர்களுக்கு பரிமாறப்பட்டது. 'காஞ்ச மாடு கம்புல விழுந்த கதையாக' அவரவர் மறு சோறு, புளியாணம் கேட்பது போல் பணிப்பெண்களிடம் கேட்டு, கேட்டு வாங்கி குடித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர். 

கொஞ்ச நேரத்தில் டாய்லெட் சென்றால் ரொம்ப நாளுச்செண்டு குடிச்சி ஒத்துக்கிடாதவர்கள் வாந்தி எடுத்து அந்த வாஷ் பேஷனையே நிரப்பி வைத்திருந்தனர் (வாஷ் பேஷனின் சர்சராக்குழிகள் அடைத்துக்கொண்டன) இது போன்ற குடிகாரர்களுக்காக இனி ஒவ்வொரு விமானக்கழிவறைகளிலும் நமதூர் தென்னங்குச்சியால் செய்யப்பட்ட வெளக்கமரு ஒன்று வைத்தால் நல்லது.

கழிவறை செல்லும் வழியில் உள்ள வரிசையில் எனக்கு இருக்கை கிடைத்திருந்தது. சாப்பாட்டுத்தட்டுகள் சாப்பிட்ட பின் திரும்பிப்பெறப்பட்டு எல்லோருக்கும் தேநீர் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. வருடங்கள் பல கழிந்த பின் ஊருக்குப்போகும் சந்தோசத்தில் சிலருக்கு டீ குடிப்பதா? தண்ணீர் குடிப்பதா? ஜூஸ் குடிப்பதா? என்றக்குழப்பத்தில் வாயும், வயிறும் ஓடவில்லை. 

எல்லோரும் உணவு உண்ட பின் கொஞ்சம், கொஞ்சமாக உறங்க ஆரம்பித்தனர். விமானம் நடுநிசியில் வானுக்கும், கடலுக்கும் நடுவில் பறந்து கொண்டிருந்தது. குளிராக இருந்ததால் நானும் போர்வை ஒன்றை கேட்டு வாங்கி போர்த்திக்கொண்டு உறங்க ஆரம்பித்தேன். நல்ல அசந்த தூக்கம். திடீரென என் இருக்கை அருகே ஒருவர் தொப்பென்ற சப்தத்துடன் விழுந்து கிடந்தார். நானும் விமானத்திற்குத்தான் ஏதேனும் கோளாறு வந்து விட்டதோ என்றெண்ணி பதறியவனாக திடுக்குண்டு முழிச்சிட்டேன். 

பிறகு என்னை நானே ஆசுவாசப்படுத்திக்கொண்ட பின் தான் அறிந்து கொண்டேன். ஒரு மடாக்குடியன் அதிகளவு குடித்து விட்டு கழிப்பறை அருகே நடைபாதையில் வாந்தி எடுத்து மயக்கதில் விழுந்து கிடக்கிறான் என்று. பிறகு ஆத்திரத்தில் அவனை முதுகில் லேசாக ஒரு தட்டு தட்டி "ஏன்டா இப்புடி செய்றீங்க? அறிவுகெட்டவனே நாலு,அஞ்சு மணி நேரத்துக்குப்பிறகு ஊருக்குப்போய் நல்லா குடிச்சிக்கிட வேண்டியது தானே?" என்று ஆத்திரத்தில் அங்கேயே அவனை திட்டினேன்.

பிறகு வெட்கப்பட்டோ, வேதனைப்பட்டோ தட்டுத்தடுமாறி மெல்ல எழுந்து அவன் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான். விமானப்பணிப்பெண் ஒருத்தி அவன் வாந்தி எடுத்த இடத்திற்கு வந்து அதன் மேல் ஒரு போர்வையை போர்த்திச்சென்றாள் ஏதோ வாந்திக்கு குளுவுற மாதிரி. என் இருக்கையிலிருந்து அவளை அழைத்தேன். எஸ் என்று அவளும் வந்து நின்றாள். பிறகு அவளிடம் கேட்டேன் "ஏன் இப்படி அளவுக்கு அதிகமாக வாந்தி எடுக்குமளவுக்கு நீங்கள் மதுவை பயணிகளுக்கு பரிமாறுகிறீர்கள்?" என்று. இப்பொழுது அவன் வழியில் வாந்தி எடுத்து விட்டானே உன்னால் அதை உடனே கழுவி சுத்தம் செய்ய முடியுமா? என்றேன்.

அதற்கவள் பேக்கபேக்க என்று முழித்து விட்டு சாரி சார், பயணிகள் கேட்கும் அளவு அவர்களுக்கு மது பரிமாற வேண்டுமென்று எங்கள் விமான நிறுவனத்தின் கட்டளை என்று சொன்னாள். குடிகாரர்களுக்கு வேண்டுமென்றால் ஆஹா, என்னா உபசரிப்பு? என்றிருக்கலாம். அது விமானத்தை அசுத்தப்படுத்தும் அளவுக்கு ஆகி விடுவது கூட மேலிட நாற்காலிகளுக்கு கொஞ்சம் விளங்கியும் வியாபார லாப நோக்கிற்காக அதை கண்டு கொள்வதில்லை.

கூலிக்கு மாரடிக்கும் அவளிடம் போய் வாக்குவாதம் செய்து என்ன பயன்? என்றெண்ணியவனாக என் உறக்கத்தைத்தொடர ஆரம்பித்தேன்.

இதே போன்ற அனுபவம் ஏர் இந்தியாவில் ஒரு முறை பயணிக்கும் பொழுதும் ஏற்பட்டது. ஒருவன் இருக்கையில் இருந்து நன்கு குடித்து விட்டு பிறகு எழுந்து சென்று பின்னால் காலியாக உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டான் மீண்டும் ஒரு ரவுண்டு குடிப்பதற்காக. அதை கவனித்த ஒரு வயதான விமான பணி ஆண் தமிழிலேயே இப்படி அவனிடம் கேட்டார் "ஏன்யா இப்படி அலைறே, உன் எடத்திலெ உக்காருய்யா" என்று.

கடைசியில் விமானமும் ஒரு வழியாக கொழும்பு வந்திறங்கி மாற்று விமானத்தின் மூலம் திருச்சியும் வந்திறங்கினேன். நம்மை சாவடிக்கும் சுங்கச்சாவடி சட்டதிட்டங்கள் வரிசைக்குப்பின் முறையே நிறைவேறி பின் சாமான்கள் சுழலும் பெல்ட் பக்கம் வந்து நின்றேன். கொஞ்ச தூரத்தில் என்னிடம் குடி மயக்கத்தில் நடு வானில் அடிவாங்கிய அந்த இளைஞனும் நின்று என்னையே வெறிக்க,வெறிக்க குருகுருவென்று பார்த்துக்கொண்டிருந்தான். ஆஹா, நம்மளை அடையாளம் கண்டுகொண்டு விட்டானே? உள்ளூர்க்காரனாக இருந்து திருச்சி ஏர்போர்ட்டை விட்டு நாம் வெளியேறும் சமயம் நம்மை அடியாள் வைத்து டின்னுக்கட்டிருவானோ? என மனதின் ஓரத்தில் கொஞ்சம் பயம் வர ஆரம்பித்து விட்டது. அவனை கேர் செய்யாமல் நான் என் சாமான்கள் வரும் வழியை மட்டும் நோக்கிக்கொண்டிருந்தேன். 

இருந்தாலும் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவன் பெட்டி ஒன்று சக்கர பெல்ட்டில் சுழன்று வந்து கொண்டிருந்தது. அதை பார்த்த அவன் உடனே லபக்குண்டு எடுத்தான். எதார்த்தமாக அந்த பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை நோக்கினேன். அஸ்தஹ்ஃபிருல்லாஹ்!!! அதில் முஸ்லிம் பெயர் எழுதப்பட்டிருந்தது (பயத்தில் அந்த பெயரை மனதில் பதிய வைக்க முடியாமல் போனது). உடனே நேராக அவனிடம் சென்று அடப்பாவிப்பயலே என்று ஒரு கன்னத்தில் அரை விட்டு வர மனம் நாடியது. ஏன் தேவையில்லாமல் அவனிடம் சென்று எசல வேண்டுமென்று விட்டு விட்டு என்னை அழைத்துச்செல்ல திருச்சி விமான நிலையம் வந்திருந்த என் தகப்பனார், பிள்ளைகளுடன் நல்லபடி அன்று ஊர் வந்து சேர்ந்தேன். அல்ஹம்துலில்லாஹ்....... 

விமானத்தில் சில நேரங்கள் நம்ம ஆளுஹலும் யாருக்குத் தெரியப்போவுது? என்று குடித்து விடுவது ஒரு வேதனையான, விழிப்புணர்வு இல்லாத பாவச்செயலாகிவிடுகிறது. சகோ. அர. அப்துல் லத்திஃப் தன் கட்டுரையில் குறிப்பிட்டது போல அமெரிக்காவிலிருந்து வருபவர்கள் அடக்கமாகத்தான் வருகிறார்கள். இந்தியாவிற்கு அக்கம்பக்கத்து நாடுகளிலிருந்து வருபவர்கள் தான் அலிச்சாட்டியம் அதிகம் செய்கிறார்கள். 

இது தாங்க நடந்துச்சி.......

மு.செ.மு. நெய்னா முஹம்மது

மாற்றம் ஏற்றமா ஏமாற்றமா – அனுபவம் பேசுகிறது. 23

அதிரைநிருபர் பதிப்பகம் | April 29, 2012 | , , , , ,


மாற்றம் ஒன்றே மாறாதிருப்பது என்று கூறுவார்கள். விதைகள் தளிர்களாவதும், தளிர்கள் தழைத்து செடிகளாவதும், கொடிகளாவதும், பூப்பதும், காய்ப்பதும், கனிவதும் மாற்றங்களே. மனிதவள மேம்பாட்டுதுறையில் மாற்றம் என்பது பணி இடமாற்றம், பதவி மாற்றம், பணி மாற்றம் என்று பலவகைப்படும். சில மாற்றங்களை அவரவரின் தகுதி, திறமை, பொறுப்புகளை நிறைவேற்றும் தன்மைகள் ஆகியவற்றை அளவிட்டு நிறுவனங்களே செய்யும். சில மாற்றங்களை நாமே செய்து கொள்ளலாம். அப்படி நாமே செய்து கொள்ளும் மாற்றம்தான் ஒரு பணியிலிருந்தோ, ஒரு நிறுவனத்திலிருந்தோ விலகி நாம் தேடும் அதிக நன்மைகளுக்காக வேறொரு நிறுவனத்தில் வேலை தேடிக்கொள்வது ஆகும்.

பல நேரங்களில் இருப்பதைவிட்டு பறப்பதற்கு ஆசைப்படுபவர்கள் உண்டு. சில நேரங்களில் நல்ல தகுதி திறமைகள் இருந்தும் சரியான வாய்ப்புக் கிடைக்காதவர்களும் உண்டு. ஒரு நிறுவனத்தில் பல ஆண்டுகள் வேலைபார்த்துவிட்டு ஏதாவது காரணத்துக்காக அல்லது ஒரு மாற்றத்தைத்தேடி இடம் பெயர நினைப்பவர்கள் உண்டு. “ அது இருந்தால் இது இல்லே- இது இருந்தால் அது இல்லே- அதுவும் இதுவும் சேர்ந்திருந்தா அவனுக்கு இங்கே இடமில்லே” என்பதுதான் பல சமயங்களில் நடக்கும் சம்பவங்களாகும். இங்கே நாம் விவாதிக்க இருப்பது எல்லாம் நன்றாக அமைந்து ஒரு நிறுவனத்தில் இருந்து பதவி விலகி- அடுத்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்வோர் கடைப்பிடிக்க வேண்டியவை பற்றிய சில அனுபவ குறிப்புகள்.  

பொதுவாக சொல்லப்போனால் ஒரு நிறுவனத்திலிருந்து மறு நிறுவனத்துக்கு வேலைக்குப்போகும் நமது மனநிலை கிட்டத்தட்ட ஒரு புதுப்பெண்ணின் மன நிலையாகத்தான் இருக்கும். பல சமயங்களில் பெரும் சவாலாகவும் அச்சமூட்டும் வகையிலும் அமைந்து இருக்கும். மணப்பெண்ணுக்கு சலங்கை கொலுசு போட்ட கால்கள் தடுமாறும்- நமக்கு சாக்சும்  ஷூவும்  போட்ட கால்கள் தடுமாறும். மணமகனை மணமேடையில் பார்த்த அனுபவத்தின் அளவுதான் நேர்காணலில் முதலாளியையோ , மேலாளரையோ பார்த்ததும் இருக்கும். மணம் முடிந்து மாமியார் வீட்டில் அடிஎடுத்துவைக்கும் போது இருக்கும் அச்சம், நாணம, மடம், பயிர்ப்பு அனைத்தும் புதிய அலுவலகத்தில் அடி எடுத்து வைக்கும்போதும் இருக்கும்.  ஒரு புதிய பொறுப்புக்கும், ,சூழ்நிலைக்கும் தயாராவதுடன் புதிய நண்பர்களை மட்டுமல்ல புதிய மேலாளரையும் சந்திக்கவும் அவர்களுடன் இணைந்து பணியாற்றவும் தயாராகவேண்டும். நாம் முதலில் வேலை பார்த்த நிறுவனத்தை முதல் கணவனுக்கோ மனைவிக்கோ ஒப்பிட்டால் அடுத்து நாம் போக இருக்கும் நிறுவனத்தை இரண்டாவது கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ ஒப்பிடலாம். முதல் கணவன் கோபப்படும்போது முகத்தில் பச்சைத்தண்ணிர் குவளையை வீசி இருக்கலாம். அதைவைத்து அடுத்தவன் சுடு நீர் குவளையை விட்டு எறிவான் என்று எண்ணி பயப்படக்கூடாது. பூக்களையும் வீசலாம் திராவகத்தையும் வீசலாம். எதுவும் நடக்கலாம். 

புதிய நிறுவனத்தில் நேர்காணலின்போது உங்களுக்கு அந்த நிறுவனத்தின் கொள்கைகள், வேலைச்சூழ்நிலைகள் ( POLICIES, CORPORATE CULTURE, WORK ENVIRONMENTS) ஆகியன பற்றி ஒரு மேலோட்டமான அறிமுகமே தந்து இருப்பார்கள். இவைகள் அந்த நிறுவனத்தின் முழு தகவல்களையும் பெற்றுக்கொள்ள முழுதுமாக உதவாது. நீங்கள் அங்கு பணியில் சேர்ந்து நடைமுறையில் அவற்றோடு இணைந்து பணியாற்றும்போதுதான் உங்களால் அந்த நிறுவனம் பற்றி முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.  சாம்பார்  வைப்பது எப்படி என்று டி வி யில் சொல்லித்தருவதை கேட்டு கவனிப்பதற்கும் நாமே  அடுப்பங்கரையில் குக்கரைப் பற்றவைத்து பருப்பை வேகவைப்பதில் ஆரம்பிப்பதற்கும் உள்ள வித்தியாசம். 

புதிய நிறுவனத்தின் முதல் நாள் உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். உங்களைப் பற்றிய ஒரு தோற்ற, பழக்க முறைகளைப்பற்றிய ஒரு முதல் கணிப்பையும் தீர்ப்பையும் உங்கள் மேலாளரிடத்திலும், உடன் பணியாற்றுவர்களிடத்திலும் உருவாக்ககூடியதாக இருக்கும். இந்த முதல் கணிப்பு உங்களின் பணிக்காலம் முழுதும் கை கொடுக்கக்கூடியதாக அமையும். ( THE FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION ) .

வேலைக்கு சென்று சேருவதற்கு முதல்நாள் இரவு விரைவிலேயே படுக்கச் சென்று நன்றாக தூங்கி விடுங்கள். சிலர் விடிய விடிய உட்கார்ந்து ஐ பி எல் மேட்சையோ , ஆஸ்திரேலியாவில் நடு இரவில் நடக்கும் ஒருநாள் மேட்சையோ பார்த்துவிட்டு காலையில் அழுது வழிந்து கொண்டிருக்கும் முகத்துடன் புதிய அலுவலகம் வராதீர்கள். இது தவிர்க்கப்படவேண்டும். அத்துடன் புதிய நிறுவனத்தின் வேலை தொடங்கும் நேரத்தை அறிந்துவைத்துக்கொண்டு தாமதமில்லாமல் வந்து சேர்ந்து கொள்ளுங்கள். வேலை நேரம் தவறி தாமதமாக வருவது முதல்நாளே ஒரு கரும்புள்ளியை உங்களின் உச்சந்தலையில் குத்திவிடும். அத்துடன் நேரத்தில் வருவது உங்களை ஒரு நேரம் தவறாதவரென்றும், நல்ல விதமாக பயின்றவர் என்றும் ஒரு நல்ல தோற்றத்தை ஏற்படுத்தும். ( WELL ORGANIZED AND PUNCTUAL ) .அதுமட்டுமலாமல் நல்ல எடுப்பான தோற்றம் தரும் ஆடைகளை அணிந்து வருவதும் இன்றியமையாதது. நீங்கள் எவ்வளவுதான் அனுபவமும், அறிவும், தகுதியும் பெற்றவராக இருந்தாலும் உங்களின் தோற்றமும் அதற்கேற்றபடி இல்லாவிட்டால் உங்களின் அத்தனை தகுதி, அனுபவம், திறமைகளும் வேஸ்ட்தான் என்பதை உணரவேண்டும்.  தகுதி, திறமைகள் வெளிப்பட நாளாகும். ஆனால் நீங்கள் அணிந்து வந்திருக்கும் ஆடைகளைப்பற்றிய விமர்சனம் உடனே அலுவலகத்தில் பிளாஷ் நியூஸ் ஆகும். 

அடுத்து உங்களுக்கு சொல்ல விரும்புவது , தரப்பட்ட வேலையில் கவனம் செலுத்துவது,உங்களுடைய இருப்பிடங்க்களை வசதியாக அமைத்துக்கொள்வது, உங்களுடன் பணியாற்றும் மற்றவர்கள் நீங்கள் பணி செய்வதை நோக்கும்போது உங்களுடைய வெளிப்பாடுகள் நீங்கள் ஒரு சிறந்த தேர்வுதான் என்பதை காட்டுவதாக இருக்க வேண்டும். ‘போயும் போயும் ஒரு பொழப்பத்தவனை’கொண்டு வந்திருப்பதாக மற்றவர்கள் நினைத்துவிடக்கூடாது.  உங்களை ஒரு நல்ல அனுபசாலி என்றும், பொறுப்பானவர் என்றும் மதிக்கும் விதத்தில் காட்டிக்கொள்ளவேண்டும். பழைய நிறுவனத்தில் நீங்கள் செய்த வீரப்பிரதாபங்களை அளந்து விடாமல் இருப்பது நல்லது. ரீல் சுற்றுவதாக மற்றவர்கள் நினத்துவிடாமல் அடக்கி வாசிப்பதே நல்லது. சில நேரங்களில் உங்களுக்கு சில விபரம் தெரியாது என்று நினைத்து சிலர் தாமாகவே உதவ முன்வருவார்கள். அவர்களிடம் பக்குவமாக உங்களுக்கு தெரியும் என்பதை தெரிவிக்கலாம் அல்லது தெரியாததுபோல் கேட்டும் கொள்ளலாம். மிக்க முக்கியமாக உங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்றால் கேள்விகள் கேட்டு தெரிந்து கொள்வதில் தவறு இல்லை. இதற்காக யாரும் பிரம்பை எடுத்து , கையை நீட்ட சொல்லி அடிக்க மாட்டார்கள்.  . ஆர்வமுடன் உங்களுக்கு விபரங்கள் சொல்லித்தரவே முனைவார்கள் என்பதே அனுபவம்.  அப்படி சொல்லித்தருவதன் மூலம் ஏற்கனவே வேலை செய்து வருபவர்களும் அவர்களின் மேதா விலாசத்தை உங்களிடம் காட்டிக்கொள்ள முனைவார்கள் என்பதும் ஒரு காரணம்.  

ஒவ்வொரு தனிப்பட்ட நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களுக்கிடையில் உறவுப்பாலம் வளர்ப்பதை வேறுபாடுகளாகவும் வித்தியாசமான முறைகளிலும் வைத்திருப்பார்கள். சில இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகம் இருக்காது. சில இடங்களில் ஒருவருக்குள் ஒருவர் உரையாடுவதைக்கூட விரும்பாமல் கட்டுப்பாடுகள் வைத்திருப்பார்கள். ஸி.டி. வி  வைத்து கண்காணிக்கக்கூடிய நிறுவனங்களும் உண்டு. தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகள் இருவழியிலும் அலுவலக நேரங்களில் வருவதை கட்டுப்படுத்தும் நிறுவனங்களும் உள்ளன. ஊழியர்களுக்கு தேநீர் வழங்குவதில் கூட முறைப்படுத்தும் நிறுவனங்கள் உள்ளன. அதேபோல் மேலாளர்களுடன் தகவல் பரிமாற்றத்திலும் சில முறைகள் மாறுபடும். சில மேலாளர்களுடன் நேராக சென்று உரையாடலாம். வேறு சிலருடன் அவருடைய செயலாளர் மூலம்தான் உரையாட முடியும். ஆகவே நீங்கள் புதிதாக சென்று சேரும் நிறுவனத்தின் முறைகளை பொறுமையுடன் முதலில் கவனியுங்கள். அதன்பின் பின்பற்றுங்கள்.  நீங்கள் உங்களை இயக்குவதற்கு எது அந்த நிறுவனத்தின் நடைமுறை என்பதை அறிந்து அதன்படி பின்பற்றுங்கள். இப்படி செய்வதன் மூலம் பழைய நடைமுறைகளையே பின்பற்றுபவராகவும் , அத்துமீறாதவராகவும் உங்களை நீங்கள் காட்டிக்கொள்ள முடியும். 

வேலைக்குப்போய் சேர்ந்த உடனே நீங்கள் கொண்டுபோன பழைய சட்டிகளைப்போட்டு உடைக்கத் தொடங்கிவிடாதீர்கள். மேலும் நீங்கள் கால ஊன்ற முன்பே நீங்கள் விரும்புகிற அல்லது முன் நிறுவனத்தில் புழக்கத்தில் இருந்த நடைமுறைகளை புதிய இடத்தில் திணிக்க முயலாதீர்கள். உங்களை புதிய நிறுவனம் ஏற்றுக்கொள்வதற்கு என்று ஒரு காலக்கட்டம் இருக்கிறது. உங்களை அங்கீகரிப்பதற்கும் ஒரு காலகட்டம் நிச்சயம் இருக்கிறது. அவைகளை நீங்கள் அடைந்துவிட்டோம் என்ற உறுதி வரும்வரை சீர்திருத்த செம்மலாகிவிடாதீர்கள். நதியின் ஓட்டத்தோடு வளைந்து போகும் நாணல் பயிர் மட்டுமே எத்தனை வெள்ளம வந்தாலும் நின்று தழைத்து வளரும். 

அடுத்து நண்பர்களை தேடிக்கொள்ளுங்கள். இந்த காரியம் சிலருக்கு வெகு சுலபம் சிலருக்கு மிகக் கடினம். சிரித்தமுகம், பக்குவமான அணுகுமுறைகள் நண்பர்களை தேடித்தரும். உம்மணா மூஞ்சிகளுக்கு நண்பர்கள் கிடைப்பது கஷத்திலும் கஷ்டமே. அதேபோல் கூச்ச சுபாவம் உள்ளவர்களுக்கும் நண்பர்கள் சந்தையில் டிமாண்ட் மிகக்குறைவே. பல சமயங்களில் நண்பர்கள் அமைவது, நாடு, மொழி , இனம் ஆகியவைகளைப் பொருத்தும் அமையும்.  நண்பர்களை தேடிக்கொள்ள மதிய உணவு வேலைகளும் – மதிய உணவுக்கூடங்களும் மிகவும் உதவும். உங்களை அறியாத மனிதர்களானாலும் அவர்களைப்பார்த்து நீங்கள் பூக்கும் ஒரு புன்முறுவல் நண்பர்களைப்பெற்றுத்தரும் தூண்டிலாகும்.  அத்துடன் நடைமுறையில் உள்ள உலகச்செய்திகளைப்பற்றி உணவு இடைவேளைகளில் பழைய ஊழியர்கள் உரையாடும்போது நல்ல பொருத்தமான கருத்துக்களைக்கூறி அவர்களுடன் இணைந்து கொள்வதும் நண்பர்களை தேடிக்கொள்ள உதவும். ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக யானைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்றெல்லாம் உளறி வைக்காதீர்கள். கொஞ்ச காலத்துக்காவது அரசியல் கருத்துக்களைக் கூறாமல் ஒதுங்கி இருப்பது உங்களின் (GAME) கேமை பாதுகாப்புடன் தற்காப்புடன் விளையாட உதவும். கூடியவரை ஆரம்ப மவுனம், அடக்கி வாசித்தல் உங்களுக்கு எதிர்காலத்தில் நண்பர்களை தானாக தேடிவரவழைக்கும். கரும்பு கட்டோடு கிடந்தால் எறும்பு தானாக வரும் என்று கூறுவார்கள். 

இவற்றுடன் புதிய நிறுவனத்தின் நிர்வாக அமைப்புகளைத் ( ORGANAIZATION CHART) கேட்டு வாங்கி படித்துத் தெரிந்துகொள்வதும் முக்கியம். பொதுவாக ஒரு புதிய நபர அலுவலகம் வரும்போது அவரை எல்லா துறைகளுக்கும் அழைத்துச்சென்று அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது மனிதவளத்துறை அதிகாரியின் முக்கிய பொறுப்பாகும். இத்தகைய ஆரம்ப அறிமுகம் ஒரு சடங்குதான். முக்கிய பொறுப்பில் உள்ளவர்களைத்தேடிச்சென்று உங்களின் நிறுவனத்தின் செயல்பாடுகளைப்ப்ற்றி ஒரு சிறு விளக்கங்கள் கேட்டுத்தெரிந்து கொள்வதும் உங்களின் தன்னார்வத்தை வெளிப்படுத்தும். 

சில சமயங்களில் உங்களுக்கு முன் உங்களின் இடத்தில் பணியாற்றியவர் பதவி உயர்வு பெற்று அதே அலுவலகத்திலோ அல்லது வேறு ஒரு கிளையிலோ தொடர்ந்து இருக்கலாம். அவரைத் தேடிச்சென்றோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளைப்ப்ற்றி ஒரு சிறிய முன்னோட்டமும் தேவைப்பட்டால் அவரை தொடர்ந்து தொடர்பு கொண்டு ஆலோசனைகள் அறிவுரைகள் கேட்டுக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தால் அவரும் மகிழ்வதுடன் நிர்வாகத்தினரிடமும் ஒரு வார்த்தை நல்லபடியாக சொல்லி வைப்பார்.  யார் கண்டது இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு என்று அந்த சீனியர் நினைக்கலாம். நல்லதுதானே. 

ஆகவே

1. PREPARE YOURSELF FOR YOUR FIRST DAY,
2. CONCENTRATE ON YOUR WORK
3. LISTEN AND OBSERVE
4. MAKE FRIENDS 
5. HUNTING FOR A CORPORATE KNOWLEDGE
6. CONSULTING WITH PREDECESSOR

ஆகியவை அடிப்படையான டிப்ஸ்களாகும். 

கூடியவரை மிகக்குறைந்த பொருளாதார நன்மைகளுக்காக- அந்த சிறு பொருளாதார நன்மையை இந்திய பேங்க் ரேட்டில் பெருக்கிப் பார்த்துவிட்டு பல ஆண்டுகளாக வேலைபார்த்த  நிறுவனத்தை – நண்பர்களை- சூழ்நிலைகளை விட்டு விலகி புதிய இடத்தில் சேர்வது பலருக்கு அக்னிப் பரிட்சைதான். புதிய பூதத்தைவிட பழைய பேயே தேவலை என்கிற நிலைமை பலருக்கு ஏற்பட்டு இருக்கிறது. தூரத்துப்பச்சைகள் கண்ணுக்கு அழகாய்த் தோன்றிடும். ஆகவே மாற்றங்களை தேடிப் போகும்போது அந்த மாற்றங்கள் நமக்கு ஏற்றங்களைத்தருமா என்று சிந்தித்து செயல்படவேண்டும் மாற்றங்கள்  ஏமாற்றங்களாகப் போவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.  

-இப்ராஹீம் அன்சாரி.

தோல்விகள் காட்டிடும் ஆயிரம் வழிகள் ! - அனுபவம் பேசுகிறது 21

அதிரைநிருபர் பதிப்பகம் | January 21, 2012 | , , , , ,


என் தகப்பனார் ஒரு முறை எங்கோ நடந்த ஒரு நேர்முகத்தேர்வு பற்றி எனக்கு வாழ்க்கைப்பாடமாக சொல்லியதுண்டு. அதாவது ஒரு நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட பணிக்காக நேர்முகத்தேர்வு நடந்து கொண்டிருந்தது. அதில் கலந்து கொள்ள பல பட்டதாரிகளும், அனுபவசாலிகளும் வந்திருந்தனர். நேர்முக தேர்வில் அதை நடத்தும் அதிகாரி ஒவ்வொருவராக நேர்காணல் செய்து கொண்டிருந்தார். அதில் ஒரு வாலிபனிடம் நேர்காணல் செய்யும் சமயம் அவர் நன்கு படித்து பட்டங்கள் பல பெற்றும், அவரின் உடை, நடை, உரையாடல் முறை எல்லாம் மிக நேர்த்தியாகவும், மிடுக்காகவும் இருந்தது. அந்த வாலிபர் கலந்து கொண்ட எல்லாத்தேர்வுகளிலும், போட்டிகளிலும் வெற்றிக்கு மேல் வெற்றி பெற்றிருந்தார். அதற்கான சான்றிதழ்களை முறையே அடுக்கி வைத்திருந்தார். எல்லாவற்றையும் நன்கு கவனித்த பின் அந்த அதிகாரி அந்த வாலிபனிடம் கேட்டார் "தாம் வாழ்வில் தனிப்பட்ட முறையில் அல்லது பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் எதிலேனும் தோல்வியை எப்பொழுதேனும் சந்தித்ததுண்டா?" என்று. உடனே அந்த வாலிபன் இல்லை ஒருபோதும் நான் தோல்வியை சந்தித்ததே இல்லை என்று உற்சாகத்துடன் கம்பீரமாக பதில் சொன்னான்.

அவன் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக அந்த அதிகாரி உடனே அந்த நேர்முகத்தேர்வில் அவனை தகுதியிழப்பு செய்து மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வண்ணம் அறையை விட்டு வெளியேற வேண்டிக்கொண்டார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த வாலிபன் வெளியேறுமுன் காரணமேதும் அறியாதவனாய் "ஐயா, தாங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தயக்கமின்றி பதில் சொன்னேனே, வேண்டிய ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தேனே என்னை தாங்கள் தகுதியிழப்பு செய்ததற்கு காரணம் என்னவென அறிந்து கொள்ளலாமா?" என்றான்.

உடனே அந்த அதிகாரி அந்த வாலிபனை நோக்கி 'மன்னிக்கவும், நீ சொல்வது எல்லாம் முற்றிலும் சரியே. ஆனால் நீ வாழ்வில் எதிலும் தோல்வியை சந்திக்காதவனாக இருக்கின்றாய். எனவே காலச்சூழ்நிலையில் வரும் காலத்தில் நம் நிறுவனம் ஏதேனும் இடரில் சிக்குண்டு தோல்வியை (Rescue Management) சந்திக்க நேரிட்டால் அதிலிருந்து நம் நிறுவனத்தை காப்பாற்ற உன்னால் எதுவும் செய்ய இயலாது. காரணம் தோல்வியை எதிர்கொண்ட அனுபவம் உனக்கில்லை. ஆதலால் தோல்வியையும் வாழ்வில் பலமுறை சந்தித்து அதை எதிர்கொண்டு மீண்டு வந்த வேறொரு நபரே இந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் ஆவார் என்று அமைதியாக பதில் சொல்லி அவனை அங்கிருந்து அனுப்பி வைத்ததாக என் தகப்பனார் சொல்லக்கேட்டிருக்கிறேன்.

என் தகப்பனார் இதன் மூலம் எனக்கு நடத்திய பாடம் என்னவெனில் "வாழ்வில் வெறும் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு வாழாதே. தோல்விகள் பல வந்தாலும் அதனால் துவண்டு விடாமல் அதை துணிவுடன் எதிர்கொண்டு தலை நிமிர்ந்து வாழ கற்றுக்கொள்".

மற்றும் அமெரிக்கா செல்ல முடியவில்லையே? ஆஸ்திரேலியா செல்ல இயலவில்லையே? இங்கிலாந்து சென்று காசு பணம் அதிகம் சம்பாதித்து ஊரில், சென்னையில் கட்டிடங்கள் வாங்கிப்போட முடியவில்லையே? நல்ல காரில் பவனி வர முடியவில்லையே? என்றெல்லாம் ஏக்கத்துடன் வாழ்க்கையை ஓட்டாமல் கடன் ஏதும் இல்லாமல் கடைசி வரை வாழ்ந்து விட்டு போக உள்ளத்தில் உறுதி கொள் என்று சொல்வார்கள்.

நம் அனைவருக்கும் வாழ்வில் ஏற்பட்ட மறக்க முடியாத நல்ல பல அனுபவங்களையும், சில சங்கடங்களையும் தனிக்கட்டுரை மூலம் அடிக்கடி இங்கு பகிர்ந்து கொண்டால் படிக்கும் பலருக்கு மிகவும் பயன் உள்ளதாகவும் நெளிவு,சுளிவான வாழ்க்கையை நேர்த்தியாக்கி எளிதாக ஓட்ட கற்றுக்கொள்ளலாமல்லவா?

இன்ஷா அல்லாஹ்...

- மு.செ.மு. நெய்னா முஹம்மது.

வேலை தேடுவோர்க்கு - அனுபவம் பேசுகிறது ! 46

அதிரைநிருபர் பதிப்பகம் | January 15, 2012 | , ,


வேலை தேடுவோர்க்கு சில அனுபவ குறிப்புகள்

கண்களில் கனவுகளோடும், கைகளில் கோப்புகளோடும் கழுத்தில் டையோடும்  வேலை தேடி நிறைய பேர் வருகிறார்கள். வலைதளங்களிலும், செய்தித்தாள்களிலும்  தெரிந்தவர்கள் மூலமாகவும் தான் அறிந்த வேலை முதல் அறியாத வேலை வரை எப்படியாவது ஒரு வேலையில் அமர்ந்துவிட வேண்டுமென்று  முயற்சி செய்கிறார்கள். சிலருக்கு கூடி வருகிறது பலருக்கு கூடுவது இல்லை.

வேலை கிடைக்காதவர்கள், தங்களுக்கு போதுமான தகுதிகள் இருந்தும்  ஏன் அந்த வேலை கிடைக்கவில்லை என்று ஆராய்ந்து பார்ப்பது இல்லை. வேலைக்கு அமர்த்தப்படுவது என்பது இரு முக்கிய காரணிகளின் கலவைகளின் வெற்றியாக  இருக்கும்.

ஒன்று நமது கல்வி தகுதிகள், அனுபவங்கள், எதிர்பார்க்கும் சம்பளம், நமது பின்பலம் ஆகியவைகள். அடுத்தது - அந்த தகுதிகளை நாம் உண்மையிலேயே பெற்று இருக்கிறோம் என்பதை நம்மை  பேட்டி காண்பவர்  உணருமளவு நம்முடைய நடை, உடை, பாவனைகளால் எப்படி எடுத்துக்காட்டுகிறோம் என்பது. இது மிக, மிக  முக்கியமானது.

பொதுவாக ஒரு தனிப்பட்ட நிறுவனத்துக்கு ஒரு தனிப்பட்ட ஆள் அவர் பெற்றிருக்கும் தனிப்பட்ட தகுதிகளின் அடிப்படையில் மட்டும் எப்படி பொருத்தமானவர் ஆவார் என்பதை அளவிட்டு சொல்ல முடியாது. ஆனால் வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் கல்வி தகுதியுடன் கூடவே ஏன் அதைக் காட்டிலும் வேலை தேடுபவர்களின் மனப்பக்குவத்தையும், நிறுவனத்தில் உள்ள மற்றவர்களுடன் எப்படி ஒத்துப்போய் வேலை செய்வார் என்பதையும், நிறுவனத்தின் இயல்புக்கு எந்த வகையில் ஏற்றவராக இருப்பார் என்பதையும், எவ்வளவு விரைவில் தன்னை முழுதாக ஈடுபடுத்தி காரியங்களை கற்றுக்கொள்வார் என்பதையும் அளவிடுவார்கள்.நேர்காணலின்போது நீங்கள் உங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் பாங்கும் பக்குவமும் உங்களின் கல்வியின் பின்பலத்தையும், தொழில்நுட்ப அறிவின் பட்டியலிடப்பட்ட்ட அனுபவங்களின் தொகுப்பையும்  விடவும் கை கொடுக்கும் . இதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

வெற்றிபெற்றவர்களில் ஒருவராக உங்களை ஆக்கக்கூடிய சிலவற்றை குறிப்பாகவும் ஆலோசனையாகவும் அனுபவத்தில் இருந்து தர விரும்புகிறேன்.

1. நீங்கள் நிறுவனத்துக்கு தரும் தொடர்பு முகவரியும், தொலைபேசியும் உடனே தொடர்புகொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும். விசிட் விசாவில் வேலை தேடி வருபவர்கள் யாராவது தெரிந்த மாமா, மச்சான், நண்பர் உடைய தொலைபேசி எண்ணை  தந்து விடுவார்கள். அவர் எங்கேயாவது ஒரு கடையிலோ அல்லது இரைச்சல் மிகுந்த பகுதிகளில் வேலை பார்த்துக்கொண்டு இருப்பார் அவர் இடம் பேசி அவர் உங்களுக்கு தகவல் தந்து நீங்கள் நேர்காணலுக்கு போய் சேர்வதற்குள் அந்த தமயந்தியை வேறு எந்த நளனாவது தூக்கிகொண்டு போய் இருப்பான். உங்களை இலகுவாக தொடர்புகொள்ள முடிந்த அல்லது உங்கள் கையில் உள்ள எண்களை குறிப்பிடுங்கள். அதுமட்டுமல்லாமல் ஈமெயில் மூலமாக உங்களுக்கும் ஏதாவது விளக்கங்கள் உங்களை நேர்முகத்துக்கு அழைக்கும் முன்பாகவே எழுதி கேட்கப்பட்டால் அவைகளுக்கு கண்ணியத்துடனும்  பொறுப்புடனும், (COURTEOUS AND PROFESSIONAL) பதில் அளியுங்கள். தொலைபேசியில் உங்களுடன் பேசுகிறவர்கள் இயல்பாக பேசினால் நீங்களும் இயல்பாகவே பேசுங்கள். நீங்கள் எந்த ஊர், எவ்வளவு நாளாக வேலை செய்கிறீர்கள். சம்பளம் சரியாக தருமா என்றெல்லாம் அவரிடம் கேள்வி கேட்காதீர்கள். நீங்கள் நேர்முகத்துக்கு அழைக்கப்படும் முன்பே உங்களைப்பற்றிய  ஒரு நல்ல மனப்படத்தை உருவாக்கி வையுங்கள்.(COMMUNICATION).

2. நிறுவனம் அழைக்கும் நேரத்துக்கு சற்று முன்பே சென்று அடைந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள். கழிப்பறை   போன்றவற்றிற்கு போக வேண்டிய தேவை இருந்தால் அவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். சிலர் வியர்க்க விறுவிறுக்க ஓடி வருவார்கள். பதட்டமில்லாமல் பக்குவமாக இருக்கிறீர்களா என்பது கவனிக்கப்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பதறும் காரியம் சிதறும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். (TIME KEEPING).

3. நேர்காணலுக்கு செல்லும்போது நேர்காண்பவர் இடம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அனாவசியமாக தெரிந்து கொள்ள கேட்காதீர்கள். அவரிடம் நகைச்சுவை துணுக்குகளை வீசிவிடாதீர்கள்.  (சேடை விடாதீர்கள்.) இப்படித்தான் தாடிவைத்திருந்த நேர்கண்ட ஒருவரைப்பற்றி அவரது தாடி சாம்பலில் விழுந்த இடியப்பம் மாதிரி இருக்கிறது என்று வெளியில் வந்து கமென்ட் அடித்து ஒருவர் (நம்மாளுதான்) நல்ல வாய்ப்பை இழந்தார். ஒரு சிறிய புன்முறுவல் பூத்த முகம் வெற்றிகளை கொண்டுவந்து சேர்க்கும். உரத்த குரலில் பேசாதீர்கள். அது உங்கள் தன்மையாக இருந்தாலும் மாற்றிகொள்ளுங்கள். மென்மையாக மெல்லிய குரலில் அதே நேரம் தெளிவாக பேசுங்கள். அதற்காக முனுமுனுக்காதீர்கள். கால்களை ஆட்டிக்கொண்டே பேசாதீர்கள். பேசும்போது கைகளில் சொடக்கு விடாதீர்கள். தோள்களை சும்மா சும்மா தூக்கி தூக்கி இறக்காதீர்கள். புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால் வாய்களை சுத்தமாக கழுவிக்கொள்வதுடன் உங்கள் உடையிலும் அந்த புகை நாற்றம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.சூயிங்க் கம்களை வாயில் போட்டு சொதப்பிக்கொண்டே  பேசாதீர்கள். உங்கள் வாழ்வும் சொதப்பிவிடும். (POLITENESS).

4. ஆடை அணிந்து செல்வதில் தனி கவனம் செலுத்துங்கள். சிலர் நேர்முகத்தேர்வுக்கு போகும்போது டை கட்டிப்போகவேண்டும் என்று  ஒரு சடங்காக வைத்து இருப்பார்கள். சில நிறுவன மேலாளர்கள் அதை விரும்பமாட்டார்கள். உஷ்ண பிரதேசத்தில் - கொளுத்தும் வெயிலில் நடந்து வருபவன் இப்படி டை கட்டக்கூடாது என்று கூட அறியாமல் இருக்கிறானே என்று கணக்குபோட்டு கழித்து விடுபவர்கள் இருக்கக்கூடும். எதற்கும் டை எடுத்து பேண்ட் பக்கெட்டில் வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால கட்டிக்கொள்ளுங்கள். (நான் அப்படித்தான் மஸ்கட்டில் சுற்றினேன்). அந்த நிறுவனத்தில் ஏற்கனவே வேலை செய்பவர்கள் அணிந்துள்ள உடை முறைகளை  கவனித்து முடிவு எடுக்கலாம். நிறைய டிசைன் போட்ட சட்டைகளை பொதுவாக அணிய வேண்டாம். ஒரு லைட் கலர் அல்லது லைட் டிசைன் பொதுவாக நல்லது. டி சட்டை போடவேண்டியதாக இருந்தால் அதில் எதுவும் அச்சிடப்பட்ட  கோஷங்கள் இல்லாமலும், இரட்டை அர்த்தம் தொனிக்கும் வாசகங்கள் இல்லாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.  ஒற்றை காதில் கடுக்கன், வளையம், கையில் காப்பு, தலை முடியை கோதிக்கட்டி அதில் ஒரு ரப்பர் பேன்ட்  (ஆண்களுக்கு) இவைகளை அறவே தவிர்த்து விடவும். மிகவும் அதிகமாக வாசனை ஸ்ப்ரேக்களை தெளித்துக்கொண்டு போகாதீர்கள். நேர்காண்பவருக்கு பிடிக்காத வாசனையாக இருந்தால் அது உங்களையும் அவருக்கு பிடிக்காதவராக்கிவிடும். (AVOID UNUSUAL APPEARANCE).

5. முக்கியமாக எந்த நிறுவனத்துக்கு அழைக்கப்பட்டு இருக்கிறீர்களோ அந்த நிறுவனம் பற்றிய தகவல்களை முதல்நாளோ அல்லது முன்கூட்டியோ வெப்சைட்டில் போய் தேடி படித்து வைத்துக்கொள்ளவும். நேர்காணலின்போது அந்த நிறுவனம் ஈடு பட்டுள்ள தொழில் காரியங்கள் பற்றி  (BUSINESS ACTIVITIES) பேச்சுவாக்கில் வரும் மாதிரியாக  தெரிந்துவைத்து இருப்பதாக குறிப்பிட்டுக்காட்டினால் அந்த தொழிலைபற்றியும் நிறுவனத்தைப்பற்றியும்  ஏற்கனவே நீங்கள் ஆர்வமுடன் அறிந்து இருக்கிறீர்கள் என்ற எண்ணம் ஏற்பட்டு உங்களுடைய வெற்றிக்கு அது அடிகோலும். அதாவது ஒரு நிறுவனத்துக்கு வேலை தேடி செல்லும் முன்பே அதைப்பற்றி வீட்டுப்பாடம் படியுங்கள். நீங்கள் எந்த வேலைக்கு செல்ல தகுதி படைத்து இருக்கிறீர்களோ – அந்த வேலை பற்றிய தன்மைகள், அது பற்றி அந்த நிறுவனம் எந்த மாதியான கேள்விகள் கேட்பார்கள் என்பதை நீங்கள் முன் கூட்டி கணித்துக்கொள்ள இது உதவும் . முடிந்தால் அந்த நிறுவனத்தில் வேலை செய்துவரும் யாரையாவது தொடர்புகொள்ள வாய்ப்பு இருந்தால் தொடர்பு கொண்டு ஒரு முன்னோட்டம் பெற்றுக்கொள்ள முயலலாம். (HOME WORK).

6. பேட்டியின்போது நிறுவன மேலாளர் வேலையின் தன்மை பற்றிய சில குறிப்புகளை மேலோட்டமாக தரக்கூடும். அவைகளை நன்கு கவனித்து கேட்கவும் வேண்டும். அப்போதே நீங்கள சில முடிவுகளை குறிப்பட வேண்டியிருக்கும் . அதாவது மேலாளர் அவருடைய எதிர்பார்ப்புகளை குறிப்பிடலாம் நீங்களும் உங்களுடைய எதிர்பார்ப்புகளை எடுத்து சொல்ல வேண்டி இருக்கும். கவனம் சிதறாமல் இருந்தால்தான் இது சாத்தியம். பேட்டியாளர் உங்களிடம் வைக்கும் வேலை பற்றிய குறிப்புகளுக்கோ அல்லது நிறுவனம் உங்களுக்கு தரத்தயாராக இருக்கும் ஈட்டுத்தொகை மற்றும் சலுகைகளுக்கோ (PACKAGE) நீங்கள் உடனடியாக பதில் தராமல் வானத்தைப் பார்த்துக் கொண்டோ தாவக்கொட்டையை தடவிக் கொண்டோ இருந்தால் அது உங்களுடைய முடிவு எடுக்கும் தன்மை மீது ஒரு கரும்புள்ளி விழ வைக்கும். பேசுகிறபோது இல்லை என்பதற்கோ ஆமாம் என்பதற்கோ தலையை ஆட்டாதீர்கள்.  வாய் திறந்து பேசுங்கள். (LISTEN & ANSWER).

7. கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களை ஒரு நல்ல சுத்தமான் கோப்பில் ஒவ்வொரு சான்றிதழையும் வெளியில் பளிச்சென்று தெரியும்படியான ட்ரான்ஸ்பரென்ட் சீட்களில் வைத்து கோர்த்து சமர்ப்பியுங்கள். அத்துடன் கலவிச்சான்றிதழ்களை தனியாகவும் அனுபவ சான்றிதழ்களை தனியாகவும் பங்கீடு செய்து பிரித்து கோர்த்து வைப்பது சிறப்புடையதாகும்.சிலர் கல்விச்சான்றிதழ்களுக்கு இடையில் அனுபவ சான்றிதழ்களை வைத்து குழப்பி இருப்பார்கள். அத்துடன் நீங்களே வாங்கி இருந்தாலும் தேவைப்படாத சான்றிதழ்களை வைத்து கோப்பை பருமனாக்கி விடாதீர்கள். உதாரணமாக பள்ளியில் படிக்கும் காலத்தில் திப்பு சுல்தான் நாடகத்தில் நடித்ததற்கு கிடைத்த சான்றிதழ்,, நாட்டு நற்பணியில் போய் சேண்டாக்கோட்டையில் புதர் வெட்டியதற்கான சான்றிதழ் போன்றவற்றை இணைக்காதீர்கள். அவைகளை உங்கள் வீட்டில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். சிலர் சான்றிதழ்களை கைகளில் பேப்பர் தோசையைபோல் சுருட்டிகொண்டு வருவார்கள். வேறு சிலரோ ஒவ்வொரு சான்றிதழகளையும் கேட்க கேட்க எடுத்துக்கொடுப்பர்கள். இவைகள் தவிர்க்கப்பட வேண்டும். (PROFESSIONAL  PRESENTATION)  

8. வேலை கிடைத்துவிட்டது . ஆனாலும் இந்த பயணம் முடிவுறாது. பொதுவாக நமக்கு தெரியாமலேயே சில குறிப்பிட்ட காலம்வரை நம்மை கண்காணிக்க சில நிறுவனங்களில் ஏற்பாடு செய்திருப்பார்கள். ஆகவே நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைகளில் ஈடுபாடும், அர்ப்பணிப்பும் உங்களின் கண்காணிப்பாளர் காணும் வகையில் வெளிப்படுத்துங்கள். அந்த நிறுவனத்துக்கே உரித்தான சில பழக்கவழக்கங்களுக்கு மார்க்கத்துக்கு மாற்றமில்லாதவகையில் மாறிக்கொள்ளுங்கள்.  அப்போதுதான் நீண்ட காலத்துக்கு ஒரு நிறுவனத்தில் தாக்குப்பிடிக்க இயலும். முன்னேற இயலும். (FLEXIBLE TO NEW ENVIRONMENTS).

ஆனால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள எல்லாவற்றுக்கும் தலையாயதாக எந்த வேலையையும் தேடி வெளியே கிளம்பும் முன்பு இறைவனிடம் தொழுது து ஆச்செய்து செல்லுங்கள். அன்றைய சுபுஹு தொழுகையை கண்டிப்பாக நிறைவேற்றிவிடுங்கள். கிட்ட அரிதானது என்று நினைப்பதும் கிட்டும். தன்னம்பிக்கை உண்டாகும். இறைவன் அருளால் எல்லாம் நல்லபடி நடந்தேறும்.

முடிவாக, படித்துவிட்டு பட்டங்களையும் பட்டயங்களையும் மட்டும் பை நிறைய கொண்டு வந்தால் மட்டும் வேலை கிடைத்துவிடாது. பழக்க வழக்கங்கள், தகவல தொடர்பு, நேரம் காப்பது, தோற்றம், அணிந்திருக்கும் ஆடை, பார்க்கப்போகும் வேலைகளைப்பற்றிய ஒரு அறிமுக முன்னோட்டத்தை அறிந்து வைத்திருப்பது, சூழ்நிலைக்கு தகுந்தபடி மாற்றிக்கொள்வது ஆகியவைகளும் ஒன்று கூடினால் வெற்றி உங்களுக்கே!

-இபுராஹிம் அன்சாரி