Showing posts with label திமுக. Show all posts
Showing posts with label திமுக. Show all posts

நேற்று! இன்று! நாளை! - தொடர் - 8 22

அதிரைநிருபர் பதிப்பகம் | August 22, 2013 | , , , , , ,

அன்பான நண்பர்களே! 

அதிரைநிருபர் இணைய தளத்தின் பொன்போன்ற  வாசகர்களால் ஆர்வமுடன் படிக்கப் பட்டு வந்த இந்தத் தொடர் இடையில் ரமழான் மாதத்துக்கான அமல்களின் பொருட்டு  தொடர்ந்து எழுத இயலா சூழலால் இடையில் சில வாரங்கள் இடை  நிறுத்தம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டதற்கு வருந்துகிறேன். இனித் தொடர்ந்து வெளிவர இறைவன் துணை இருப்பானாகவும். 

நேரமின்மை என்பது ஒரு காரணமாக இருந்தாலும் அரசியல் ஒரு சாக்கடை என்று வர்ணிக்கப் படும் வரலாற்றுத் தகுதி படைத்தது என்பதால் புனித மாதத்தில் சாக்கடை பற்றியும் அதில் உழலும் புழுக்களைப் பற்றியும் எழுதி –அதை வெளியிட்டு பாவங்களை சுமந்து கொள்ள வேண்டாம் என்பதும் ஒரு காரணம். 

இதற்கு முன் அத்தியாயத்தில் கலைஞர் கருணாநிதி அவர்களைப் பற்றி அவருடன் இளம் வயதில் நெருங்கிப் பழகிய கவிஞர் கண்ணதாசன் கூறி இருந்த சில செய்திகளை சொல்லி முடித்து இருந்தேன். இளவயதில் நெருங்கிப் பழகிய  என்கிற வார்த்தைகளை இன்னும் இரண்டு முறை படித்துக் கொள்ளுங்கள். காரணம் இளமையில் ஒருவருடன் நெருங்கிப் பழகும் போதுதான் ஒருவரின் உண்மையான சொருபத்தை உணர முடியும்.  இதோ கண்ணதாசன் மீண்டும் ஒன்று கூறுகிறார் அதையும் கேட்டுவிட்டு இதைத்தொடரலாம். 

“அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.  “   

ஆகவே நாம் அறிவது என்ன வென்றால் ஒரு இனத்தின் தலைவர் என்று போற்றப் படுபவர் – ஒரு மொழியின் காவலன் என்று போற்றப் படுபவர் ஒரு எச்சில் கையால் காக்காய் விரட்டாத  புண்ணியவான் என்பதே. ஈகை முதலிய நல்ல தன்மைகளை தன் இயல்பிலேயே கொண்டிராதவர்  ஒரு மாபெரும் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்ததன் பின்னணியில் அவரது அறிவும் சூடசமும் ஆழமாக வேர்விட்டு இருந்தன என்பதை நாம் புரிந்து கொண்டால் போதும். 

எம்ஜியார் திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டுப் பிரிந்த நேரத்தில் நேற்று! இன்று! நாளை! என்று ஒரு திரைப்படம் வந்தது அதில் , 

மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார் தம் 
மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார், 

என்று சில  பாடல் வரிகள்  வாலியால் எழுதப் பட்டு வரும். (பார்த்தீர்களா இதனால்தான் நான் ரமழானில் இதை எழுதவில்லை)

அண்மையில் ஒரு விழாவில் கலைஞரின் செல்வப் புதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசியதாக கலைஞர் டி வி யில் காட்டினார்கள். அதில் அவர் பேசினார் “பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களைப் பற்றி சிந்திக்கக் கூடிய ஒரே தலைவர் கலைஞர்தான்” என்று அவர் பேசினார். தன் வாப்பாவைப் பற்றி மகனுக்கு மற்றவர்களை விட நன்றாகத்தெரியும். ஸ்டாலின் பேசியது நூற்றுக்கு நூற்று உண்மை. பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன் மனைவி  மூலமும் துணைவி மூலமும் பெற்றெடுத்த மக்களைப் பற்றியும், அவரகளது கிளைவேர்களான  மக்களைப் பற்றியும் ஆழம் விழுதுகள் போல் தொங்கிக் கொண்டிருக்கும்  உறவுகளைப் பற்றி மட்டுமே எண்ணிக்  கவலைப் பட்டு காய் நகர்த்தக் கூடியவர்தான்  கலைஞர் என்பதை உளமார ஒப்புக் கொள்வோம்.  
  • தி முகவில் முதல் பிளவு சம்பத் திமுகவை விட்டு விலகிய  போது நிகழ்ந்தது 
  • அடுத்த பிளவு எம்ஜியார் நீக்கப் பட்டபோது நிகழ்ந்தது
  • அதன் பின் வைகோ அவர்கள் விலக்கப் பட்டபோது நிகழந்தது. 
இம்மூன்று பிளவுகளுக்கும் பின்னணியில் கலைஞரின் காய் நகர்த்தும் கைவண்ணமும், கட்டு கதைகளும், அனுதாபம் தேடும் அரிய முயற்சிகளும், தேவைப்பட்டால் அடிதடியில் இறங்க வைக்கும் சாதுரியமும் ஆட்சியில் இருத்தால் அரசு எந்திரத்தை தனது   குடும்ப நலத்துக்காக பிரயோகிக்கும் குணமும்  இருந்தன என்பதை மனசாட்சி உள்ளோர் மறுக்க இயலாது.


அண்ணாவின் காலத்தில் தன்னை தட்டிக்கேட்ட காரணத்தால் ஈ வெ கி சம்பத்தை வேலூர் பொதுக்குழுவில் அடித்து சட்டையை கிழித்து கட்சியை விட்டு விரட்டியவர், கட்சிக்காக காலமெல்லாம் உழைத்து தனது உழைப்பால் வந்த செல்வத்தை வாரி வழங்கிய வள்ளல் எம் ஜி யாரை கட்சியை விட்டு நீக்கியவர், கொலை செய்ய சதி என்ற குற்றச்சாட்டில் தனக்கு நிகராக வளர்ந்து வந்த வைகோவை கட்சியை விட்டுப் புறந்தள்ளியவர் தன்னை எதிர்த்த காரணத்தால் நாவலர் முதல் மதியழகன் வரை  கட்சியை விட்டு ஓட வைத்தவர், கலைஞரை அரசியல் சாணக்கியன் என்று எதிரிகளும் புகழ்வார்கள். அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியன் குறிப்பிடுகிறான் புல் தடுக்கி விழுந்த ஒரு மாமன்னன் அந்தப் புல்லை அகற்ற, கோடாரி மண்வெட்டி  வரை கொண்டு வர செய்து அந்தப் புல்லின் ஆணிவேரின் கடைசி நுனி  வரை தோண்டி சிதைத்து அழித்தானாம்.

இந்தப் புல்லைத் தோண்ட இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டமா என்று கேட்டவருக்கு  மன்னன்  சொன்னான் “ஆம்! அரசியலிலும் எதிரி என்றும் எதிர்ப்பு என்றும் தலை எடுப்பவர்களை இப்படித்தான் வேரோடும் வேராடி மண்ணோடும் அழிக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் புல்லின் ஏதாவது ஒரு நுனி  கூட நாளை தலையெடுக்குமென்ற  வாய்ப்பைத் தானாகவே தரக்கூடாது. “இதை அரசியலின் ஆரம்பப் பாடத்திலே கருணாநிதி கற்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால்தான் தனக்கு சாதகமில்லாதவர்களை- ஒத்துவராதவர்களை ஒதுக்கி ஓரங்கட்டி ஒன்றுமில்லாதவர்களாக ஆக்கிய சரித்திரங்களை பதிவெடுத்துப் பல சாக்கு மூட்டைகளில் கட்டலாம். 

அண்மையில் நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலுக்கு ஒரே ஒரு திமுக உறுப்பினரைத் தேர்ந்தேடுக்க ஒரு வாய்ப்பு வந்தபோது தனது மகள் கனிமொழியை அந்த இடத்துக்கு அறிவித்தார். கனிமொழியை விட நீண்டகாலம் அனுபவமும் ஆற்றலும் பெற்றிருந்த திருச்சி சிவாவைப் போன்றவர்களை ஏன் அறிவித்து இருக்கக் கூடாது பலர் ஐயம் எழுப்பினார்கள். காரணம் மிக எளிதானது. கருணாநிதிக்கு டில்லிப் பட்டினத்தில் தனக்கு நம்பிக்கையான ஆள்தேவை. அது தனது மகளாக இருப்பது இன்னும் சிறந்தது என்று எண்ணினார். அத்துடன் வரலாறு அவருக்கு கற்றுத் தந்த பாடங்கள் அடுத்தவரை அளவுக்கு மேலே நம்பாதே என்பதும்தான்.

டில்லிக்கு சென்ற சம்பத் மனம் மாறி காங்கிரசில் இணையும் அளவுக்குத் துணிந்தார். திமுக நாடாளுமன்றக் குழுவின் தலைவராக்கப் பட்ட நாஞ்சில் மனோகரன் கலைஞரை எதிர்த்து ஆள்காட்டி விரலை அழுத்தமாக நீட்டினார். க. இராசாராம் கலைஞரை எதிர்த்து குரல் கொடுத்தார். இரா செழியன் கருத்து மாறுபட்டார். வைகோவும் நீடிக்க இயலவில்லை. பேராசிரியர் அன்பழகனைத் தவிர டில்லி சென்ற அனைவரும் கலைஞருக்கு எதிரியான காட்சிகளை அரசியல் வரலாறு கண்டது. அதனால்தான் முன்பு ஒரு முரசொலி மாறனையும் பின்னர்  தயாநிதி  மாறனையும் அதைத்தொடர்ந்து மு. க. அழகிரியையும் டில்லி அனுப்பினார். அதே காரணம்தான் கனிமொழியின் தேர்வும். ஒருவேளை கனிமொழி ஏற்கனவே ராஜ்யசபா உறுப்பினராக  இருந்து இருந்தால் அந்த இடம் இராசாத்தி அம்மையாருக்கோ தயாளு அம்மையாருக்கோதான் கிடைத்து இருக்கும். இந்தப் பதவியை  ஏற்க தயாளு அம்மையாரால் விமானப் பயணம் செய்ய இயலும் . 

தனது தனித்திறமைகளால் விஞ்ஞானரீதியாக  ஊழல் செய்வதில் மன்னர் என்று  சர்க்காரியா கமிஷனால் சுட்டிக் காட்டப் பட்டவர் மொரார்ஜி தேசாய்  தலைமையில் ஜனதாக் கட்சியே ஆட்சிக்கு வரும் என்று கணிக்கத்தெரிந்த திறமையால் அவருக்கு உறவுக்குக்  கை நீட்டி காரியம் சாதித்துக் கொண்டவர்.  இதனால் மருமகன் மாறனை மந்திரியாக்கி மகிழ்ச்சிகண்டவர் இந்திராகாந்தி பதவிக்கு வருவார் என்று அரசியல் ஆரூடம் கணிக்கத் தெரிந்த காரணத்தாலும்  அரசியல் ஆற்றலாலும் நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சியைத் தருக! என்று கூறி    தஞ்சமடைந்தவர். இதனால் எம்ஜியார் ஆட்சியை கலைத்து பழிவாங்கும் படலத்தின் பரிசைத் தட்டிச்சென்றவர்   தன்னை வழக்குகளிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியிடம் தஞ்சம் அடைந்தவர் அதே காரணத்துக்காக பி ஜே பி யிடமும் உறவாடி பதவிச் சுகம் கண்டவர் இன்றும் இதே காரணத்துக்காக முதலிரவோடு முடிந்து போன மன்மோகன் சிங்குடன் ஆன வாழ்க்கையை தாலி அறுக்காமல் தடுமாறும்  வாழ்க்கையை வாழ்ந்து வருபவர் . 

இவை போன்ற அனைத்து அரசியல் பின்னணியின்  அடிமரங்களில் ஆணிவேர் விட்டு இருப்பது கலைஞரின் சுய நலம் - குடும்ப நலம் மட்டுமே. இவ்வளவும் செய்தும் இந்திய  அரசியலில் ஞானி என்று அழைக்கப் படுகிறார். பிரணாப் முகர்ஜி சென்னை வந்தால் கருனாநிதிக்கு கோபாலபுரம் சென்று மாலை போடுகிறார்.

கண்ணதாசனை மீண்டும் அழைக்கிறேன். 

“கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.”

தனது தமிழ் அறிவாலும் ஆற்றலாலும் திறமையாலும் ‘சொல்வல்லான் சோர்விலான் இவனை இகல வெல்லல் யார்க்கும் அரிது’  என்று திருவள்ளுவர் கூறியதற்கொப்ப தனது திறமைகளை எல்லாம் அரசியலில் காசாக்கி உலகக் கோடீஸ்வரர்களின்  பட்டியலில் 216- ஆவது இடமும் இந்தியக் கோடீஸ்வரர்களின் பட்டியலில்  16- ஆவது இடமும் தனது குடும்பத்துக்குப் பெற்றுத்தந்தவர்  .

கடந்த ஆண்டு விகடன் குழுமத்தின் பத்திகையில் ஒரு பட்டியல் வந்தது அதை அப்படியே இங்கு தந்து இதை நிறைவு செய்ய விரும்புகிறேன். 

அந்தக் கட்டுரையின் துவக்கத்தில், 'கருணாநிதிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், தமிழகத்திலும் தென் இந்தியாவிலும் இருக்கக்கூடிய முக்கியமான சொத்துகளின் பட்டியல் விவரம். இது முழுமையான பட்டியல் இல்லை. கருணாநிதியின் குடும்பத்தாரால் வெளிநாடுகளில் மறைத்துவைக்கப்பட்டு இருக்கும் சொத்து பற்றிய விவரங்கள் இந்தப் பட்டியலில் இல்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழே உழன்ற கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் (தங்களது அயராத உழைப்பால்!) கடந்த 60 ஆண்டுகளில் ஈட்டியவை இவை. தமிழகத்தில் வாழும் ஏழை எளியவர்களுக்காகக் காலம் எல்லாம் பாடுபட்ட மஞ்சள் சால்வைக்காரர், இன்று தேர்தல் முடிவுகள் தந்த கட்டாய ஓய்வில் நிலை குத்தி நிற்கிறார்!’ என்று எழுதி இருக்கிறது.

அந்த பத்திரிகை வெளியிட்டு உள்ள பட்டியலை அப்படியே தருகிறோம்!

1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

2. முரசொலி மாறனின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.

4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.

5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.

6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.

7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.

8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.

9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.

10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.

11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.

12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.

13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.

14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.

15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.

16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.

17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.

18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.

19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.

20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.

21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.

22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.

23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.

24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு - 48 கோடி.

25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.

26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.

27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.

28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.

29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை

30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை

31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.

32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.

33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.

34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.

35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்

36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.

37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.

38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.

39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.

40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.

42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.

44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.

45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.

46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.

49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

50. சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.

51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு -3 கோடி.

52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.

53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.

54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.

56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை.

57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.

58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.

59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.

60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.

61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.

63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை

64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.

65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.

66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்களுடையதே.

67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.

68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.

- இவ்வாறு அந்தப் பத்திரிகை பட்டியல் இட்டுள்ளது. 

இந்த சொத்து போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா? வேண்டும்! ஹைதராபாத் கிரிக்கெட் அணி அண்மையில் வாங்கப் பட்ட புது  வசந்தம். 

தமிழகம் அரசியல்வாதிகளின் கரங்களில் அகப்பட்ட பூமாலை . தமிழ் வாழ்க! இன்னும் தமிழகத்தை சூறையாடிய சூறையாடும் மண்ணின் மைந்தர்களின் செயல்பாடுகள் சூட்டோடும் சுவையோடும் தொடரும். 

அடுத்து திமுகவின் பெரும் பிளவு எம்ஜியார் கண்ட புதுக் கட்சி பற்றிய விபரங்கள் மற்றும் விமர்சனங்கள். 

இன்ஷா அல்லாஹ் சந்திப்போம். 
ஆக்கம் : முத்துப் பேட்டை P. பகுருதீன். B.Sc.,
உருவாக்கம் : இப்ராகிம் அன்சாரி

நேற்று ! இன்று ! நாளை! – 7 15

அதிரைநிருபர் பதிப்பகம் | July 16, 2013 | , , , , , ,

தெரிந்தோ தெரியாமலோ திராவிட முன்னேற்றக் கழகம் தி மு க என்கிற பெயரை சுமந்தது. திருக்குவளை முத்துவேலர் கருணாநிதியின் கரங்களுக்குள் இந்தக் கட்சி சென்றுவிடுமென்ற அனுமானம் கட்சி ஆரம்பித்தபோதே தோன்றியதோ என்னவோ என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது.  

அரசியல் உலகில் நாம் பார்த்த அபூர்வ மனிதர்களில் கருணாநிதியும் ஒருவர். வாழ்க்கையின் அடித்தளத்தில் அடிகள் பல வாங்கி அரசியலில் ஒரு உதயசூரியனாக இன்றுவரை திகழ்பவர். அரசியல் வித்தகர்; வில்லாதிவில்லன்; விதைத்தவைகளை வாழ்நாளில் அறுவடை செய்து புசித்தவர். விதியின் வெப்பச்சலனத்தில் வீதியெல்லாம் மேடையேறிப் பேசி மன்னாதி மன்னர்களை எல்லாம் மண்டியிட வைத்தவர். இவரைப் பற்றி நிறைய அறிமுகம் தேவை இல்லை. அதிகம் அறியப்படாதவை என்று கருதுகிற ஒன்றிரண்டு செய்திகளுடன்  தொண்ணூறு வயதைத் தாண்டிய கருணாநிதியின் வாழ்வோடு தமிழ்நாட்டின் கடந்த நாற்பத்தியைந்து வருடங்களின் வரலாறுபின்னிப் பிணைந்து இருக்கிறது என்று சொல்லித்தொடங்குவோம். 

துடுக்கான பள்ளிச் சிறுவனாக இருந்தபோது , திருவாரூரில் கிருபானந்த வாரியார் உரையாற்றுகிறார்.  இடைக்கிடையே நாத்திகத்தைக் கண்டித்து நகைச்சுவையை வழங்கிக் கொண்டிருந்தவர், ஒரு கட்டத்தில் உயிர்களைக் கொல்லக்  கூடாது  அடித்து  கேட்டாலும் அப்போது கூட உணவுக்காகக் கொல்லக் கூடாது என்று உபதேசம் செய்தார். அப்போது ஒரு அரை டவுசர் போட்ட பையன் கூட்டத்தில் இருந்து எழுந்தான். ஐயா! ஒரு கேள்வி இன்று வகுப்பில் ஆசிரியர் தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது என்று பாடம் நடத்தினார். அப்படியானால் காய்கறிகளை மட்டும் சாப்பிடலாமா என்று கேட்டான்.  

இந்தக் கேள்விக்கு பதில் அளித்த வாரியார் , பிள்ளையாண்டா ! ஒரு ஆடு , மாடு, கோழி ஆகியவறை வெட்டி  சாப்பிட்டால் அவற்றின் உயிர் போய்விடுகிறது . தாவரங்களிலோ விளச்சளைத்தான் சாப்பிடுகிறோம். உதாரணமாக தக்காளிச் செடியில் தக்காளியையும் கத்தரிக்காய் செடியில் கத்தரிக்காயையும்தான் சாப்பிடுகிறோம். செடி கொடி அப்படியே இருக்கிறது இது உனக்குப் புரியலையா? “ என்று கேட்டார். பலத்த கைதட்டல் வாரியாருக்கு .

மீண்டும் எழுந்தான் அரை டவுசர். “ அப்படியானால் கீரைத்தண்டை அப்படியே வெட்டி சமைத்து சாப்பிடுகிறோமே! அதை கொல்வதாக ஆகாதா? ” என்று கேள்வி எழுப்பினான். இந்தக் கேள்விக்கு வாரியாரால் பதில் சொல்ல முடியவில்லை. கூட்டம், உட்கார்! உட்கார்!  என்று கூக்குரல் எழுப்பியது.  அன்று அந்த வயதில் வாரியாரிடம் கேள்வி கேட்ட அரை டவுசர்தான் பின்னாளில் கலைஞர் கருணாநிதியாக உருவெடுத்தார். 

கருணாநிதி பிற்காலத்தில் முதலமைச்சர் ஆனதும் வாரியாரையும் பெரியாரையும் ஒரு விழாவில் வைத்துக் கொண்டு “ அன்று நான் வாரியார் சுவாமிகள் இடம் கேட்ட கேள்விக்கு அவர் இன்று வரை பதில் சொல்லவில்லை “ என்றும் குத்திக் காட்டினார். கருணாநிதியின் வாதாடும் திறமைக்கு இந்த நிகழ்ச்சி ஒரு சின்ன உதாரணம் மட்டுமே. 

இளமையில் வறுமை! வளர்ந்த பின் முன்னேற வேண்டுமென்ற  வெறி! கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் நல்லபடி உழைத்துப் பயன்படுத்திக் கொண்டவர்தான் கருணாநிதி.  பள்ளிச்சிறுவனாக இருந்த போதே சக மாணவர்களைக் கூட்டி வைத்து நாத்திகக் கருத்துக்களை விவாதிப்பதில் அலாதி ருசி. வறுமையின் வாட்டம் அவரை முடக்கிப் போட்டுவிடவில்லை. படிக்கும் காலத்திலேயே முரசொலிப் பத்திரிகையை கையெழுத்துப் பிரதியாக எழுதி நடத்தும் உழைப்பு மற்றும் ஆற்றலின் வளர்ச்சி பின்னர் தமிழகத்தை பலமுறை ஆளும் நிலைக்கு அவரை உயர்த்தியது. கருணை ஜமால் என்ற பெயருடைய திருவாரூர் நண்பரை துணைக்கு சேர்த்துக் கொண்டு தலையில் முரசொலி பத்திரிக்கை  கட்டுகளை ஆற்றை நீந்திக் கடந்த கருணாநிதிக்கு வாழ்க்கைக்  கடலில் எதிர்நீச்சல் போடுவது கஷ்டமாகிவிடவில்லை.  

இங்கே குறிப்பிட்ட கருணை ஜமால் என்பவர் திருவாரூரில் கருணாநிதி அச்சகம் என்ற பெயரில் நடத்தியவர். கருணாநிதியுடன்  இளமைக்காலம் அல்ல பால்ய காலம்தொட்டே பாசத்துடன் பழகியவர். கருணை- கருணா இந்த சொற்களின் தாக்கத்தை அன்பர்கள் சிந்தித்து அவர்களின் உறவின் அல்லது நட்பின் வலிமையை அறியலாம். இந்திராகாந்தியின் ஆட்சி அறிமுகப் படுத்திய அவசரகால அடக்குமுறை நேரத்திலும் வீட்டை விட்டு வெளியே  வராத கருணாநிதி கருணை ஜமால் வீட்டுத்திருமனத்துக்கு வந்த்து மணமக்களை வாழ்த்திய கருணாநிதி வேறு எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் திரும்பிச்சென்றார். 

இங்கே கருணை ஜமால் அவர்களுடைய பெயரை குறிப்பிடக் காரணம் , இன்று கருணாநிதி இந்தியாவின் மிகப் பெரும் தலைவர்களில் ஒருவராக இருக்கலாம். ஆனால் இவரை வடிவமைத்த இவருடைய உயர்வுக்கு வித்திட்ட இவருக்கு உற்றுழி உதவி உறுபொருள் கொடுத்து வளர்த்தவர்கள் பலர். இவர்களில் தம்பிக் கோட்டை கீழக்காடு ஆர். எம். எஸ். என்கிற சோமுத்தேவரிலிருந்து, அதிராம்பட்டினத்தின் அன்றே கோடீஸ்வர குடும்பத்தைச் சார்ந்த என். எஸ். இளங்கோவில் இருந்து , அன்பில் தர்மலிங்கத்தில் இருந்து பலரும் அடங்குவர். ஆனால் மரம்  வைத்தவன் ஒருவன் அதன் பலனை அனுபவிப்பவன் மற்றவன் என்கிற முறையில்தான் கருணாநிதி வளரக் காரணமானவர்களும் அவர்களின் சந்ததியினரும் அந்த வளர்ச்சியின் பயனை அடைய முடியாத வலை வாழ்க்கை வலை அது பாச வலை. இதுபற்றி இறுதியில் விவரிப்போம். 

மேடைப் பேச்சில் சோடை போகாமல், அல்லும் பகலும் அரசியலில் அதுவும் நாத்திகம் கலந்த அரசியலில்- சுயமரியாதை இயக்கம் சார்ந்த பிரச்சாரக்கூட்டங்களில் தனது நாட்டத்தை செலுத்தினார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் காரைக்காலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பிராமண சமூகத்தினரைப் பற்றியும் அவர்களது கடவுள்கள் பற்றியும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். கோபம்  கொண்ட அந்த சமூகத்தார். ஆட்களை ஏவி கூட்டம் முடிந்து திரும்பிக் கொண்டு இருந்தவரை வழிமறித்து வன்முறையாகத் தாக்கினர்.  கருணாநிதி இரத்த வெள்ளத்தில் மிதந்து உணர்வற்று விழுந்தார். அவர் இறந்துவிட்டதாகக் கருதி சாக்கடையில் வீசி எறிந்துவிட்டு விரைந்தது அடியாட்கள் கூட்டம். 

பகலவன் எழுவதற்கு வாழ்த்துக் கூறி பறவைகள் கீதம் பாடத்தொடங்கிய நேரத்தில் படைத்தவனின் பள்ளியிலில் இருந்து பாங்க்கொலி  கேட்டு பஜ்ர் தொழ வந்த முஸ்லிம்கள் சிலரின் காதுகளில்  நடுஇரவில் சாக்கடையில் தூக்கிப் போடப்பட்ட  கருணாநிதியின் முக்கல் முனகல்   கேட்டது. மூச்சு மட்டும் ஓடிக கொண்டிருந்ததைக் கண்ட முஸ்லிம் பெருமக்கள் உடனே முனைப்புடன் செயல்பட்டு மருத்துவம் செய்து குளிப்பாட்டி உடைமாற்றி உணவளித்து உயிர் காப்பாற்றினர். 

காலையில் போட்ட இடத்தில் உடல் தேடி வந்த பிராமண  அடியாட்கள் தவித்தனர். கருணாநிதி தப்பினாரா இல்லையா என்று சந்தேகம் கொண்டு அலசினர். ஆனால் கருணாநிதியோ காரைக்கால் முஸ்லிம்களால் தொப்பி, சால்வை ஆகியவை அணிவிக்கப்பட்டு பத்திரமாக பாண்டிச்சேரி கொண்டு போகப்பட்டு அங்கு வந்திருந்த பெரியாரிடம் ஒப்படைக்கப் பட்டார்.  அங்கிருந்து பெரியாரால் பத்திரிகையில் பணியாற்ற  பின் ஈரோடு சென்றார். 

கருணாநிதியின் நா முனைக்கு மட்டுமல்ல பேனாவின் முனைக்கும் நாடே நடுங்கியது. பல உதாரணங்களைத்தரலாம்.  தான் பிறந்த திருவாரூரின் தியாகராஜா சுவாமியை இப்படி வம்புக்கு இழுத்தார் 

"ஏரோட்டும் உழவரெல்லாம் ஏங்கித் தவிக்கையிலே - தேரோட்டம் உனக்கேன் திருவாரூர் தியாகராசா!" என்று கேட்டார்.  (இப்படி எழுதியவர் நாற்பது ஆண்டுகள் கழித்து ஓடாத அந்தத்தேரை ஓட வைத்தது வேறு விஷயம்.)

கோடை காலத்தில் சட்டசபை நிகழ்ச்சிகளை ஊட்டியில் நடத்தலாமென்று காங்கிரசார் தீர்மானம் போட்டபோது,

"கும்பி எரியுது குடல் கருகுது - குளு குளு ஊட்டி ஒரு கேடா?" என்று பத்திரிகையில் கேள்வி எழுப்பினார்.   

கருனாநிதியின் வளர்ச்சிக்கும் புகழுக்கும் நாடகம் மற்றும் திரைப்படம் பலவகையில் உதவியது. தூக்குமேடை என்று ஒரு நாடகம் எழுதினார். அதற்கு காங்கிரஸ் அரசு தடை விதித்தது. தனது பேனாவின் முனைகளைத் தீட்டிக் கொண்டு திரைப்படத்த்துறையில் வசனகர்த்தாவாக களம இறங்கினார். அப்போது எழுதப் பட்ட வசனங்கள் சாகா வரம் பெற்றன. அவரது பேனா கொட்டித்தீர்த்த வசனத்துளிகள் சில:-

கோயிலிலே குழப்பம் விளைவித்தேன்- பூசாரியைத்தாக்கினேன்- குற்றம் சாட்டப் பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். 

கோயிலிலே குழப்பம் விளைவித்தேன் – கோயில் கூடாது என்பதற்காக அல்ல கோயில் கொடியவனின் கூடாரமாக ஆகிவிடக் கூடாது என்பதற்காக 

பூசாரியைத் தாக்கினேன்- அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல்வேஷமாக ஆகிவிட்டதைக் கண்டிப்பதற்காக 

****

"என்னடா முழிக்கிறே? "

"தூங்கினவனை எழுப்பினால் முழிக்காமல் என்ன செய்வான்?"

***

என் சுய நலத்திலே பொதுநலமும் கலந்திருக்கிறது. ஆகாரத்துக்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தப் படுத்துகிறதே மீன் ! அதைப்போல. 

***

வந்தாரை வாழவைக்கும் தமிழகமே! நீ சொந்த நாட்டுக்காரனையே சுரண்டுவது எத்தனை நாளாய்?

வானத்தை முட்டும் மாளிகைகள் ! மானத்தை மறந்த மனிதர்கள்!

வீரப் பெண்களின் ஏடுகளை எழுதி எழுதி ஏற்றம் பெற்ற என்னருமைப் பொன்னாடே! நீ விபச்சாரிகளை வீதியில் திரியவிட்டு விழிகளை மூடிக்கொண்டது ஏன்?

ஓடினாள்  ! ஓடினாள்! வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்! அந்த ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும் வாட்டத்தைப் போக்கி இருக்க வேண்டும் இன்று சட்டத்தை தீட்டுவோர் . 

***

"உன்னை ஏன் அழைத்து வந்திருக்கிறேன் தெரியுமா?"

"திருத்திக் கொள்ளுங்கள் தயவுசெய்து. அழைத்துவரவில்லை. இழுத்துவரச் செய்திருக்கிறீர்கள்."

***

என்றெல்லாம் வசன அக்கினிக் குழம்புகள் ஜனரஞ்சகமாகி கருணாநிதிக் கென ஒரு கூட்டத்தை கூட்டியது. அரசியல் வானிலும் மின்னுவதற்கு வழி செய்தது. திமுகவில் இருந்த நெடுஞ்செழியன், சம்பத் போன்றோரும் எழுத்திலும் மேன்மை பெற்றவர்களாக இருந்தாலும் அவர்கள் எழுதியவை பல்கலைகழகம் சென்றோரை மட்டுமே சென்றடைந்தது ஆனால் கருணாநிதி எழுதியது பாமரனை சென்றடைந்தது. அத்துடன் அவரது நாடகங்களும் திரைப்  படங்களும் காங்கிரஸ்  அரசால் தடை செய்யப்பட்டது அவரை விளம்பரம் இல்லாத விற்பனைப் பொருளாக உயர்த்திவிட்டது.  இனி நான் சொல்வதைவிட கருணாநிதியின் ஆத்ம நண்பராக இருந்த கவிஞர் கண்ணதாசனின் வரிகளிலும் கேட்போமே. 

“இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.

ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.

கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.

பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.

கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.

எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.

நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.” என்கிறார் கண்ணதாசன். 

பொதுத்தொண்டும் பொதுநோக்கும் நிறைந்து வழிந்த தலைவர்கள் ஆண்ட தமிழகம் ஒரு சுயநல சுரங்கத்துக்குள் போய்,   நேற்றும் இன்றும் இன்னும் நாளையும் தமிழ்நாட்டு அரசியலை ஆட்டிவைத்த- ஆட்டி  வைக்கும் அரசியல் தன்னலத்தின் விதைகள் தெளிக்கப்பட்டதால் விளைந்த  விபரீதங்களின்  விளைவுகள் யாவை என்பதை தொடர்ந்து இன்னொரு அத்தியாயத்தில்  காணலாம். 
இன்ஷா அல்லாஹ் ரமளானுக்குப் பிறகு தொடரும்..

முத்துப் பேட்டை P.  பகுருதீன் B.Sc.,

தமிழகத்தை ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும். 12

அதிரைநிருபர் பதிப்பகம் | November 30, 2011 | , , , ,


ஆட்சி செய்து முடித்த கட்சி ஆளும் கட்சியையும், ஆளும் கட்சி ஆட்சியிழந்த  கட்சியையும் ஒருவருக்கொருவர் குறை சொல்லியே நலத்திட்டங்கள் பல‌ மக்களுக்கு சென்றடையாமல் அவர்களை நட்டாற்றில் நிறுத்தி வேடிக்கைப்பார்த்து வருவது இன்றைய நாட்டு/ஊர் நடப்பாக இருக்கின்றன.

மேற்க‌ண்ட‌ ம‌க்க‌ள் விரோத‌ போக்கும், ஊர் நலனில் வேட்டு வைக்கும் தவறான அணுகுமுறையும் ந‌ம் ஊரில் நட‌ந்தேறிவிட‌க்கூடாது என்ப‌தே ந‌ம் எல்லோரின் எதிர்பார்ப்பும், ஆவ‌லும்.

மனிதர்களின் ந‌ல்ல‌ காரிய‌ங்க‌ளையும், செய‌ல்க‌ளையும் ம‌ன‌தார‌ பாராட்ட‌ ம‌ன‌ம் இற‌ங்கி வ‌ருவ‌தில்லை. குறை சொல்ல‌ ம‌ட்டும் ஏனோ சிம்மாச‌ன‌ம் இட்டு தானே அம‌ர்ந்து கொள்கிற‌து.

க‌ட்சிக‌ள் பேத‌மின்றி, காழ்ப்புண‌ர்ச்சியின்றி ம‌ற்றும் மாற்றான் தாய் வீட்டுப்பிள்ளை போல் பொடுபோக்காக க‌ருதாம‌ல் எங்கெங்கெல்லாம் ம‌க்க‌ளால் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ (கட்சிசார்ந்த, சாராத) த‌லைவ‌ர்கள் உள்ள‌ன‌ரோ அவ‌ர்க‌ளுக்கு தேவையான‌ உத‌விக‌ளை செய்வ‌துடன் அவர்களின் கோரிக்கைக‌ளையும் நிறைவேற்ற‌ ம‌த்திய‌, மாநில‌ அர‌சுக‌ளுக்கு முழு பொறுப்பும், க‌ட‌மையும் உண்டு. அப்பொழுது தான் ந‌ம் இந்தியா உள்நாட்டிலும், உல‌க‌ அர‌ங்கிலும் ஒளிந்து கொள்ளாமல் பிரகாசமாய் ஒளிரும்.

மின் த‌ட்டுப்பாடு ஒரு பிரதான‌ பிர‌ச்சினையாக‌ ந‌ம் நாட்டில் இன்று இருந்து வ‌ருவ‌தால் அத‌ற்கு மிக‌வும் முக்கிய‌த்துவ‌ம் த‌ந்து அதை க‌ளைய‌ முன்வ‌ர‌ வேண்டும். இதில் ந‌ல்ல‌ பெய‌ரை யாரும் த‌ட்டிச்சென்று விடுவாரோ? என்ற‌ அச்ச‌ம் அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளுக்கும், அத‌ன் த‌லைவ‌ர்க‌ளுக்கும் தேவையில்லை. க‌ல்வெட்டில் யார் பெய‌ர் இருந்தால் என்ன‌? மின்வெட்டில்லா மாநில‌மாக‌ மாற்றிக்காட்டினால் ந‌ல்ல‌து தானே?

ஊரில் அறிவிக்க‌ப்ப‌ட்டோ அல்ல‌து அறிவிக்க‌ப்ப‌டாம‌லோ எந்நேர‌மும் வ‌ரும் மின்த‌டையும் அதைத்தொட‌ர்ந்து வ‌ரும் கொசுக்க‌டியும் குறைந்த‌ கால‌ விடுமுறையில் ஊர் செல்லும் ந‌ம்மை ஓட‌,ஓட‌ விர‌ட்டி எங்கோ நாடுக‌ட‌த்தி விடுகிற‌து. தாய் நாட்டின் மேல் ஒரு பிடிமான‌ம‌ற்ற‌ த‌ன்மையையும், வெறுப்பையும் த‌ற்காலிக‌மாக‌ ஏற்ப‌டுத்தி விடுகின்ற‌ன‌. என்ன‌ தான் தாய் த‌ன் குழ‌ந்தையை க‌த‌ற‌,க‌த‌ற‌ அடித்தாலும் "உம்மா/அம்மா" என்றே அக்குழ‌ந்தை அடித்த த‌ன் தாயை க‌ட்டித்த‌ழுவ‌ ஓடிச்செல்வ‌து போல் நிற‌ந்த‌ர‌மாக‌ த‌ன் தாய் நாட்டின் மேல் வெறுப்பு வ‌ந்து விடாது ஒரு போதும் ந‌ம‌க்கெல்லாம்.

பெரும்பாலான‌ வீடுக‌ளில் இன்வெட்ட‌ர் (யு.பி.எஸ்) என்னும் மின்சார‌ த‌டையின் பொழுது மின்சாரத்தை சேமித்து உற்ப‌த்தி செய்து த‌ரும் க‌ருவி பொருத்த‌ப்ப‌ட்டுள்ள‌தால் எந்நேரமும் நிலவி வரும் மின்த‌டை ப‌ற்றி யாருக்கும் அக்க‌றையும், க‌வ‌லையும் மற்றும் ம‌க்க‌ளின் அல்ல‌ல்க‌ளை அர‌சின் க‌வ‌னத்திற்கு ஜ‌ன‌நாய‌க‌ முறையில் கொண்டு வர‌ அவ‌ர‌வ‌ர் உள்ள‌த்தில் உருவாகி வெளியாகும் முய‌ற்சிக‌ள் இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை. ஏதேதோ கார‌ண‌ங்க‌ள் சொல்லி ந‌ம் விவேக‌மான‌ முய‌ற்சிக‌ள் அவ்வ‌ப்பொழுது ம‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌டுவ‌து ஏனோ உண்மை.

வ‌ரும் கால‌ங்க‌ளில் வ‌ர‌க்கூடிய‌ தேர்த‌ல் அறிக்கையில் "வீடுக‌ளுக்கு இல‌வ‌ச‌ இன்வெட்ட‌ர் (யு.பி.எஸ்) க‌ருவி பொருத்த‌ப்ப‌டும்" என்று சொல்லும் க‌ட்சி அமோக‌ வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பில் அம‌ர்ந்தாலும் ஆச்ச‌ரிய‌ப்ப‌டுவ‌த‌ற்கில்லை.

மத்திய அரசு ப‌தினான்காயிர‌ம் கோடி செல‌வ‌ழிக்கும் வ‌ரை ப‌ல்லிளித்துக்கொண்டிருந்த‌ ம‌க்க‌ளும், அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளும் இன்று கூட‌ங்குள‌ம் அணுமின் உற்ப‌த்தி தொட‌ங்க‌ இருக்கும் இறுதி க‌ட்ட‌ நேர‌த்தில் வ‌ரிந்து க‌ட்டிக்கொண்டு அந்த‌ அணுமின் நிலைய‌த்தை மூட‌ க‌ள‌த்தில் குதித்திருப்ப‌து வேத‌னையான‌ வேடிக்கைய‌ன்றி வேறொன்றும் சொல்வ‌த‌ற்கில்லை.

மத்திய, மாநில அரசுகள் ஆங்காங்கே மக்களின் புகார்களுக்கென்று ஒரு தனித்துறை உருவாக்கப்பட்டு அது முழு அதிகாரத்துடன்/கட்டளையுடன் அரசியல் கலக்காமல் உடனுக்குடன் செயல்பட தனித்துவம் வாய்ந்த துறையாக எவ்வித தயக்கமும் இன்றி செயல்பட ஆவண செய்தாலே அன்றாடம் வரும் மக்கள் குறைகளையும், பிரச்சினைகளையும் தீர்க்க/போக்க முடியும் என்பதே என் ஆணித்தரமான கருத்து.

நமதூரில் ஆள்ந்த கட்சியும், ஆளும் கட்சியும் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பொறுப்பில் இருப்பதால் ஒருவருக்கொருவர் எதிரும், புதிருமாக இருந்து கொள்ளாமல் நல்ல‌ புரிந்துணர்வு ஏற்பட்டு மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் எவ்வித தடையுமின்றி நம் ஊருக்கு கொண்டு வந்து சேர்ப்பார்களேயானால் நம் ஊர் தமிழகத்திற்கு மட்டுமல்ல நம் நாட்டிற்கே ஒரு நல்ல முன்மாதிரியாக எல்லோராலும் நல்ல முறையில் எடுத்து பேசப்படும். இந்த அரிய வாய்ப்பை நம் ஊர் பயன்படுத்திக்கொள்ளுமா? அல்லது இந்த அரிய‌ வாய்ப்பை கொல்லுமா? என்பது போகப்போக தெரிய வரும்.

ந‌ல்ல‌வைக‌ளுக்காக நாட்கள் சில காத்திருப்பதால் ந‌ம‌க்கொன்றும் ந‌ட்ட‌ம் இல்லை தானே?

- மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து