Showing posts with label பாராளுமன்றம். Show all posts
Showing posts with label பாராளுமன்றம். Show all posts

புதிய மத்திய அரசு எதிர்நோக்கியுள்ள சவால்கள் 8

அதிரைநிருபர் பதிப்பகம் | May 22, 2014 | , , , ,

அண்மைப் பாராளுமன்றத் தேர்தல்கள் முடிந்து பாரதீய ஜனதாவின் அறுதிப் பெரும்பான்மை ஆட்சி நரேந்திர மோடியின் தலைமையில் ஏற்பட்டதும் இந்த புதிய வித்தியாசமான அரசு எப்படி நடந்து கொள்ளப் போகிறதோ என்கிற கேள்விகளும் உடனே மனதில் எழுந்தபோது கூடவே சிறு வயதில் வகுப்பாசிரியர் சொன்ன ஒரு கதை நினைவுக்கு வந்தது.

ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டுக்கென்று ஒரு வித்தியாசமான சட்டமிருந்தது. அந்த சட்டத்தின்படி , அந்த நாட்டுக்கு யார் வேண்டுமானாலும் மன்னராக வர முடியும். ஆனால் அந்தப் பதவி ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே. அதன்படி மன்னராக ஆசைப்பட்டு முன் வருகிற மன்னர் வெறும் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே அரசராக பதவி வகிக்க முடியும். ஐந்து ஆண்டுகள் ஆண்டு முடித்த பின்னர் அந்த மன்னரை அந்த நாட்டின் குறுக்கே ஓடும் ஒரு ஆழமான ஆற்றின் மறு கரையில் கொண்டு போய் விட்டுவிடுவார்கள் . அந்த ஆற்றின் மறுகரை ஒரு அடர்ந்த காடு . அங்கு மனிதர்களே கிடையாது. கொடிய காட்டு மிருகங்களே வசித்து வந்தன. அந்தக் காட்டில் நுழையும் எந்த மனிதரையும் அந்த மிருகங்கள் கொன்று தின்றுவிடும். இதுவே வித்தியாசமான சட்டம். இந்த சட்டத்தின் நிபந்தனைகளை ஏற்பவர் அந்த நாட்டின் மன்னராக ஐந்தாண்டுகள் பதவி வகிக்க முடியும். இதன்படி மன்னராக ஆசைபப்ட்டு முடி சூட்டிக் கொண்டவன் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மரணத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்து மன்னர் பதவியை ஏற்றுக் கொள்ள பலரும் தயங்கினாலும் , ஐந்தாண்டுகள் மன்னராக இருந்து அனுபவித்துவிட்டு சாகலாமே என்ற அசட்டு தைரியத்தில் சிலர் மன்னராக வர முன்வருவதுண்டு. அவ்விதம் வருபவர்கள் தங்களின் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிந்ததும் ஒப்பந்தபப்டி காட்டுக்கு அனுப்பபப்ட்டு உயிர்நீத்தனர்.

இவ்விதம் பதவியேற்ற ஒரு மன்னனுக்கு அன்று ஐந்தாண்டு நிறைவு நாள். அவரைக் காட்டுக்கு அனுப்பும் வைபவத்துக்காக நாடே ஆற்றங்கரையில் திரண்டு இருந்தது. மன்னர் தனது வழக்கமான ஆடை அலங்காரங்களுடன் ஆற்றங்கரைக்கு வந்தார். தனது கரங்களில் தங்க வாளையும் ஏந்தி இருந்ததுடன் மன்னருடைய பதவி காலத்தில் அணிந்து இருந்த அனைத்து வைர வைடூரிய நகைகளையும் அணிந்து இருந்தார். இன்னும் அரை மணி நேரத்தில் சாகப் போகிற அரசருக்கு இவ்வளவு அலங்காரம் ஏன் என்று மக்கள் வியந்தனர். ஆனாலும் மன்னரை அக்கரையில் கொண்டு விடத் தயாரான படகு கொண்டு வரப்பட்டது. அந்தப் படகைப் பார்த்ததும் மன்னருக்குக் கோபம் வந்தது.

''ஒரு நாட்டின் மாமன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக்கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது? எனது சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்! '' என்று அரச கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன. சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகானபடகு ஆற்று நீரைத் கிழித்துக்கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் மகிழ்வுடன் கையசைக்க படகுப் பயணம் தொடர்ந்தது. மிகவும் அதிசயபப்ட்டு அதிர்ச்சி அடைந்தவன் படகை ஓட்டிச் சென்ற படகோட்டியே. காரணம், இதுவரை அந்தப்படகோட்டி மறுகரைக்கு அழைத்துச் சென்ற மன்னர்கள் அனைவரையும் சவக்களை முகத்தில் தாண்டவமாடக்கண்டவன் இப்போதுதான் முதன்முதலாக மகிழ்ச்சிறேகைகள் படர்ந்த முகத்தோடு ஒரு மன்னனைப் பார்க்கிறான். ஆகவே பொறுமை இழந்தவனாக் மன்னனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பினான்.

“மன்னா! மாமா மன்னா! நீங்கள் எங்கே போகிறீர்கள் தெரியுமா? ”

“ தெரியுமே! ஆற்றின் மறுகரைக்குப் போகிறேன். “

“ அங்கே போனவர்கள் போன இடமும் தெரியுமா? அது வெறும் காடு மட்டுமல்ல சுடுகாடு என்றும் தெரியுமா? அங்கே சென்றவர்கள் இங்கே திரும்பியதில்லை என்றும் தெரியுமா? “

“ தெரியுமே ! அதுதான் மகிழ்ச்சியோடு போகிறேன் “

“ இவ்வளவும் தெரிந்தும் எப்படி இவ்வளவு மகிழ்ச்சியோடு சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லையே! “

“ ஓ அதுவா? நீ கேட்டதனால் சொல்கிறேன். கேள்! நான் ஆட்சி ஏற்ற முதலாண்டில் ஆயிரம் வேட்டைக்காரர்களை மறு கரையில் இருந்த காட்டுக்கு அனுப்பி அங்கிருந்த கொடிய மிருகங்களை வேட்டையாடிக் கொன்று அழிக்கச் செய்தேன். இப்போது அங்கே ஒரு கொடிய மிருகம் கூட இல்லை. இரண்டாவது ஆண்டில் சில ஆயிரம் நல்ல விவசாயிகளை அங்கு அனுப்பினேன். அவர்கள் சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி சோம்பல் இல்லாமல் ஏர் நடத்தி காட்டைத்திருத்தி உழுது பயிரிட்டு விவசாயம் செய்தார்கள் . இப்போது அது பொன் விளையும் பூமியாகிவிட்டது. மூன்றாம் ஆண்டில் பல கட்டிடக்கலை வல்லுனர்களையும் தொழிலாளர்களையும் அனுப்பி அங்கு வீடு வாசல்களைக் கட்டச் சொன்னேன். இப்போது அந்தக் காடு நல்ல ஒரு நாடாக ஆகி இருக்கிறது. அரண்மனை, அந்தப்புரம் உட்பட அனைத்து வசதிகளும் அயல்நாட்டு தூதர்கள் வந்து தங்கும் வசதிகளும் கூடவே அங்கு அமைந்துவிட்டன. நான்காம் ஆண்டுக்குள் பல அரசு ஊழியர்களை அங்கு குடும்பத்துடன் குடியேறச் செய்தேன். இப்போது அங்கு நல்ல நிர்வாகமும் நடைபெற்று வருகிறது. இப்போது ஐந்தாம் ஆண்டில் மன்னனாக நானும் போகிறேன். எல்லோரும் நினைக்கிறார்கள் நான் சாகப் போகிறேன் என்று. ஆனால் உண்மையிலேயே நான் நிர்மாணித்த அந்த நாட்டை நான் ஆளப் போகிறேன் . அதுவே எனக்கு மகிழ்ச்சிக்குக் காரணம். “

படகோட்டி அசந்து போனான். தனக்கும் அந்த புதுநாட்டிலேயே ஒரு வேலை போட்டுத்தர மன்னனிடம் வேண்டி நின்றான் என்று கதை முடியும்.

இந்தக்கதையில் பல படிப்பினைகள் உண்டு. காடாக இருந்தாலும் திட்டமிட்டு செயல்பட்டால் அதையும் நாடாக்கி ஆள முடியும் என்று இந்தக்கதை நிருபிக்கிறது. அரசுக்கு மட்டுமல்ல தனி மனித வாழ்வுக்கும் இது பொருந்தும். புத்திசாலித்தனமான திட்டமிடல் - அந்தத் திட்டத்தை நிறைவேற்றுதல் ஒரு தனி மனிதனுக்கும் ஒரு அரசுக்கும் அவசியமான தேவைகளாகும்.

கடந்த பத்தாண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் எந்த நன்மையையும் ஏற்படவில்லை. இந்த நாடு பல வீழ்ச்சிகளை சந்தித்தது . பல சரிவுகளையும் சீர் குலைவுகளையும் சந்தித்தது என்றெல்லாம் குற்றம் சாட்டி, அவை மக்கள் மன்றத்திலும் எடுபட்டு இன்று புதிய அரசு நரேந்திர மோடி தலைமையில் பதவி ஏற்றுக் கொண்டுள்ளது. பழைய அரசு செய்த தவறுகளை – எவை எல்லாம் தவறுகள் என்று புதிய அரசமைத்தோர் சொன்னார்களோ அவை சார்ந்த துறைகளை இப்போது வந்துள்ள இந்த அரசு எப்படிக் கையாண்டு அவர்களின் வாதப்படி காடாகிப் போன இந்த நாட்டை செம்மைப் படுத்தி நாடாக்கப் போகிறார்கள் என்று கவனிக்க வேண்டியதும் எதிர்பார்ப்பதும் நமது கடமை.

இப்போது பிஜேபி பெற்றுள்ள வெற்றியின் மூலம் அந்தக் கட்சிக்கு இருந்த அரசியல் நெருக்கடிகள் அருகிவிட்டன; ஆனால் நிர்வாக நெருக்கடிகளை இந்தப் புதிய அரசு கண்டிப்பாக சந்தித்தே ஆக வேண்டும். ஒரு மாற்றம் வேண்டுமென்று நினைத்த மக்களின் ஆதரவை பெற்று ஆட்சிக்கு வந்த கட்சிக்கு இத்தகைய பொறுப்புக்கள் அதிகம்.

இப்போது புதியஅரசு எதிர் நோக்கியுள்ள தலையாய சவால்களாக நாம் பார்ப்பது.
  • விலைவாசி உயர்வு
  • டாலருக்கெதிரான ரூபாயின் மதிப்பில் நிலையற்ற நிலை
  • தொழில் வளர்ச்சிக் குறைபாடுகள்
  • பல்வேறு துறைகளிலும் ஊழலில் வெறியாட்டம்
  • எண்ணெய் விலை ஏற்றதாழ்வுகள்
  • வங்கி வட்டி விகிதத்தின் நிலையற்ற தன்மை
  • வெளிநாடுகளில் கறுப்புப் பணம் – அவற்றை வெளிக் கொணரும் நடவடிக்கைகள்
  • உற்பத்திப் பெருக்கம்
  • சேது சமுத்திரத் திட்டம் மாற்றுப்பாதையிலாவது சாத்தியமா?
  • விவசாய வளர்ச்சி- கிராமப் பொருளாதார வளர்ச்சி
  • நேரடி அன்னிய முதலீடு தொடர்பான நிலைப்பாடு
  • ஏற்றுமதி இறக்குமதிப் பிரச்னைகள்
  • மத்திய மாநில உறவு மேம்பாடுகள்
  • மாநிலங்களுக்கிடையான நதி நீர்ப் பங்கீடு
  • நாடு தழுவிய நதி நீர் இணைப்புத் திட்டங்கள்
  • நடப்புக் கணக்குப் பற்றாக்குறை
  • இட ஒதுக்கீட்டுக் கொள்கைகள்
  • உலக மயமாக்கலின் பிரச்சனைகள்
  • முந்தைய அரசின் திட்டங்களை தொடர்வதா? விடுவதா?
  • ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள்
  • இலங்கைத் தமிழர் பிரச்னை
  • தமிழக மீனவர் பிரச்சனைகள்
  • அஸ்ஸாமில் அன்னிய நாட்டினர்
  • சிறுபான்மையினரின் பதட்டம் , சந்தேகம், பயம்
  • பொதுத்துறை நிறுவனங்களை ஊக்குவிப்பதா? தனியார்மயத்தை தாராளமாக்குவதா? 
  • அணுசக்தி உலை மற்றும் மின்திட்டங்களின் எதிர்காலம் 
  • அரசியல்வாதிகளின் மீதான நடப்பில் உள்ள வழக்குகளைத் தொடர்வது
  • கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்களின் மீதான விசாரணையை ஏவுதல் / வழக்குத்தொடரல்
  • ஆர் எஸ் எஸ் , சங்க பரிவார் அமைப்புகளின் செயல் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு / நிராகரிப்பு
  •  வராக் கடன் வசூல்
  • எல்லை நாடுகளுடன் நட்புறவு

மேற்கண்ட பட்டியலில் உள்ளவைகளுக்கு அதிகமாகவும் மேலும் பல பிரச்சனைகளும் சவால்களும் கேள்விகளும் புதிய அரசின் முன் இருக்கலாம்.

தேர்தலுக்கு முந்திய தேர்தல் அறிக்கையில் சில உணர்வு பூர்வமான – நாட்டின் மக்களுக்கிடையே பிளவு ஏற்படுத்தும் சில ஆபத்தான திட்டங்களை பாரதீய ஜனதா கட்சி முன் வைத்தது. அத்தகைய திட்டங்கள் வெறுமனே மக்களின் உணர்வுகளைத் தூண்டி அதிகாரத்தை வென்றெடுக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டால் இந்த நாடு அமைதியான நாடாக இன்னும் சொல்லப்போனால் ஒரு வல்லரசாக உருவெடுக்கும் வகையிலும் தனது அடிகளை எடுத்துவைக்க இயலும். அதற்கு மாறாக, அமைதிக்கு ஆபத்தான அந்தத் திட்டங்கள் செயல்வடிவம் பெறுவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டால் வளர்ச்சியின் நாயகன் என்று நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டதற்குப் பொருள் இல்லாமல் போய்விடும். காரணம், அமைதி நிலவாத நாடுகளின் பொருளாதாரம் வளர்ந்ததாகவோ வளர்ச்சி அடைந்ததாகவோ, ஒரு வரலாற்றை வங்காளக் கடலில் வலைவீசித்தேடினாலும் காணமுடியாது. ஆகவே நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்ல நினைக்கும் எந்த ஒரு அரசும் மக்களிடையே அமைதியைக் குலைக்கும் அழிவுப் பாதையை தேர்வு செய்யாது. அப்படிச் செய்வது அறிவுபூர்வமான செயலாக இருக்காது.

நம்மைப் பொறுத்தவரை, நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் நலிந்து போய்க்கிடக்கும் பல தொழில்கள் பேணி வளர்க்கப் பட வேண்டும். தங்களுக்கு ஆளும் பொறுப்பு அளிக்கப்பட்டால், ரூபாயின் மதிப்பு உலக நாணய செலவாணிச் சந்தையில் உயரும் விதத்தில் திட்டங்கள் தீட்டப்படுமென்று பிஜேபி கூறியது. இப்போது மக்கள் அதற்கு ஆளும் பொறுப்பை அளித்து இருக்கிறார்கள். தாங்கள் வாக்களித்தபடி நாட்டின் பொருளாதாரத்தை உயரச் செய்வதற்குரிய நல்ல நடவடிக்கைகளை இந்த புதிய அரசு எடுக்க வேண்டும்.

ஏற்றுமதி அதிக்க வேண்டுமானால் உற்பத்தித்துறையை முதலில் உயர்த்திப் பிடிக்க வேண்டும். கிராமப்புறப் பொருளாதாரத்தை வளர்க்கும் விதத்தில் விவசாயத்துக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வேண்டிய அளவுக்கு நிதி ஆதாரங்களை ஏற்பாடு செய்து கொடுக்கவேண்டும். பல பெரிய தொழில்களுக்கும் டாடா போன்ற பெரிய கார்பரேட் நிறுவனங்களுக்கும் 0.1% சதவீத ரேட்டில் வங்கி நிதி உதவிகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் விவசாயிகளுக்கு 4 % முதல் 7% வரை நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் இன்றைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் நிதி ஆதாரங்களை இலகுவாக்க புதிய வளர்ச்சியின் நாயகன் முயல வேண்டும்.

இறக்குமதி வரியாக இன்று 30% வரை வசூலிக்கப்பட்டாலும் இறக்குமதியாகும் பொருள்கள், உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களின் விலையை விட விலை குறைவாகக் கிடைக்கின்றன. ஆகவே இந்தியா ஒரு பன்னாட்டு சந்தையாக மாறுவதால் உள்நாட்டுத் தொழில்கள் நசிந்து வருகின்றன. இந்த அம்சத்தை புதிய அரசு தனது கவனத்தில் எடுத்துக் கொண்டு உள் நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களின் விலைகளைக் குறைக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

விவசாயத்துக்கு சரியான ஊக்குவிப்பு இல்லாததால் விவசாயம் நசிந்து போய் உற்பத்திக் குறைவு ஏற்பட்டு உணவுப் பொருள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் அவல நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதை புதிய அரசு உணர வேண்டும். இதனால் அந்நிய செலாவணி நாட்டில் இருந்து வெளியாகிக் கொண்டிருப்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். பன்னாட்டு நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு இந்தியா ஒரு சந்தையாக மாறியது பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் என்பதை பிஜேபி ஏற்கனவே சொல்லி வந்திருக்கிறது. இத்தகைய குற்றச்சாட்டுகள் வெறுமனே மன்மோகன் அரசின் மேல குற்றம் சாட்ட மட்டுமதானா அல்லது இதற்கு மாற்றுத் திட்டம் வைத்திருக்கிறதா என்பதை புதிய அரசு நிருபித்துத் தனது தனித்தன்மையை செயல்வடிவில் காட்ட வேண்டும்.

பிஜேபி தேர்தலில் வெற்றி பெற்றுக் கொண்டு இருக்கிறது என்கிற செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிற போதே பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலைகள் உச்சத்தைத் தொட்டன. பங்குச் சந்தை என்பதே ஒரு வகையில் ஊக வணிகத்தின் ஒரு வடிவமே. ஊக வணிகம் என்பது விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் என்பது பொருளாதாரத்தின் பாலபாடம். விலைவாசி உயர்வைக் காரணம் காட்டி ஆட்சியை மாற்றிவிட்டு ஆட்சிக்கு வந்து அரியணை ஏறிய ஒரு ஆட்சி , தனது ஆட்சியிலும் விலைவாசியைக் கட்டுப்படுத்தத்தவறினால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மீண்டும் மக்கள் மன்றத்தின் முன் நிற்கவேண்டிய நிலையில் தங்களுக்கும் தோல்வி ஏற்படும் என்பது உணர வேண்டும். காட்டில் விளையும் கத்தரிக்காய்க்கு கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கொண்டு விலையை நிர்ணயிக்கும் ஆன் லைன் வர்த்தகத்தை இந்த அரசு கட்டுப் படுத்தக் கூடாது ; ஒழித்துக் கட்ட வேண்டும்.

பெரிய கார்பரேட் கம்பெனிகளின் ஆதரவில் ஆட்சிக்கு வந்துள்ள கட்சி என்று பிஜேபி மீது ஒரு குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்தக் குறையை பிஜேபி அரசு நீக்கிக் கொண்டு தன்னை ஒரு பொதுநல அரசு என்று நிரூபிக்க வேண்டுமானால் , Non- Corporate Sectors என்று சொல்லப்படுகிற பல்வேறு வகையான சிறு குறுந்தொழில்களை வளர்ப்பதில் இந்த புதிய அரசு ஆர்வம் காட்ட வேண்டும். வெறும் டெக்னாலஜியை மட்டும் பரவலாக அரசு இறக்கி விடுமானால் சிறு குறுந்தொழில்கள் அழிந்துவிடும். மேலும் சிறு குறுந்தொழில்களின் வளர்ச்சி, வேலை வாய்ப்புகளை குறிப்பாக சுய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும். சீனா போன்ற மக்கள் தொகை பெருகிய நாடுகள் தங்களின் மக்கள் வளத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தி பொருளாதாரத்தில் மேலை நாடுகளுக்கு சவால்விடும் நிலைக்கு உயர்ந்திருப்பதற்கு குடிசைத்தொழில்கள் முதல் நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்கான அரசின் ஆக்கமும் ஊக்கமுமே காரணம் என்கிற உலகறிந்த உண்மையை இந்த அரசு அலட்சியப்படுத்திவிட இயலாது.

இந்தத் தலைப்பில் இன்னொரு வாரமும் பேசவேண்டும். இன்ஷா அல்லாஹ் சந்திக்கலாம். 

இபுராஹீம் அன்சாரி

பதினாறாவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை. 21

அதிரைநிருபர் பதிப்பகம் | May 17, 2014 | , , , , , ,

கடந்த இரண்டு மாதங்களாக நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த பாராளுமன்றத் தேர்தல் திருவிழாக் காட்சிகள், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதுடன் ஒரு முடிவுக்கு வந்துள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பு பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியிடப்பட்டன. பல்வேறு ஊடகங்களிலும் பிஜேபி அணியே வெல்லும் என்று கருத்துக் கணிப்புகள் சொல்லி இருந்தாலும் அது பற்றி பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆயினும் பரவலாக எதிர் பார்க்கப்பட்ட அல்லது அரசியல் வல்லுனர்களால் சொல்லப்பட்டது என்னவென்றால் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை அமையாது ; இழுபறியாக இருக்கும்; மாநிலக் கட்சிகள் பெரும் வெற்றி பெற்று புதிய ஆட்சி அமைப்பதில் பெரும் பங்கு வகிக்கும்; பிஜேபி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் மற்ற கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் ; மூன்றாவது அணி அமையும்; என்றெல்லாம் பல்வேறுவகையான கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன; வெளியாயின.


ஆனால் அனைவரின் கணிப்பையும் தோல்வி அடையச் செய்து பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, 330 க்கு மேலும் பிஜேபி மட்டும் தனித்து அறுதிப் பெரும்பான்மை எண்ணாகிய 272 இடங்களையும் தாண்டி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பத்தாண்டு காலமாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் அரசு பதவி விலகி பிஜேபி அரசு அமைய இருக்கிறது. முதலாவதாக வெற்றி பெற்ற கட்சிகளுக்கு நமது நல வாழ்த்துக்களையும் நல்ல எண்ணங்களையும் சிறந்த ஆட்சிக்கான எதிர்பார்ப்புக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்தத் தேர்தல் முடிவுகள் இவ்விதம் அமைந்ததைப் பற்றி நாம் ஒரு கருத்து சொல்லப் போனால் 2014 தேர்தல் முடிவுகள்! இருபது ஆண்டுகால காங்கிரசின் கையாலாகாத்தனம்! சங் பரிவாரங்களின் நூறாண்டுகால சாதுரியம் ! என்றே சொல்வோம். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே இப்படி ஒரு பலத்துடன் ஆட்சிக் கட்டிலில் ஏறிவிட வேண்டு மென்றும் தனது சித்தாந்தங்களை செயல் படுத்திட வேண்டுமென்றும் ஆர் எஸ் எஸ் மற்றும் அதைச் சார்ந்த அமைப்புகள் செய்த பகீரத பிரயத்தனம் இன்று ஊடகங்களின் ஒட்டு மொத்த உதவியால் - காங்கிரஸ் கட்சியின் மோசமான தேர்தல் நிலைப் பாடுகளால் இன்று பிஜேபியால் வென்று எடுக்கபப்ட்டு இருக்கிறது. 

வெளிப்படையாகப் பார்க்கும் போது பாரதீய ஜனதா கட்சி முன்னிறுத்திய மதவெறிக் கொள்கைகள் வென்றது போலத் தோன்றினாலும், பத்தாண்டுகள் ஆண்டுவிட்ட ஒரு கட்சியை மாற்றிப் பார்க்க மக்களின் மனம் இயல்பாகவே விரும்பி இருப்பதும் ஒரு காரணம் என்பதை தள்ளிவிட முடியாது. ஒரு வகையில் பிஜேபியின் வெற்றிக்கு காங்கிரசின் மோசமான ஆட்சியையும் முழுமையான காரணம் என்பதை நடுநிலையாளர்கள் ஏற்கவே செய்வார்கள். காங்கிரஸ் செய்த தவறுகளின் விளைச்சலையே அரசியல் ரீதியில் பிஜேபி அறுவடை செய்து இருக்கிறது. “ In fact, the election results are the expression of anger of people against Congress and their disastrous policies “ என்றார் இடதுசாரி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி. ராஜா. 

தேர்தல் பரப்புரை காலங்களில் இன்று பிஜேபியால் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட நரேந்திர மோடி மீது பல புகார்கள் கூறப்பட்டன. பல எச்சரிக்கைகள் விடப்பட்டன. ஐயோ! இவரா! வேண்டாம் என்று பலரும் மக்களை நோக்கி வேண்டுகோள்கள் விடுத்தனர். ஆனால் அவை அனைத்தையும் மீறி இன்று நரேந்திர மோடியின் தலைமையில் புதிய அரசு அமைய இருக்கிறது. ஆனால் இப்படி நரேந்திர மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தாலேயே அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அவர் ஆண்ட குஜராத்தில் சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அடக்குமுறைகள், படுகொலைகள், சொத்துச் சூறையாடல்கள் ஆகிய குற்றச்சாட்டுகள் மறைந்துவிட்டதாகக் கருதிவிட முடியாது. அந்தக் குற்றச்சாட்டுகள் அப்படியேதான் இருக்கின்றன. ஒருவேளை இப்போது நரேந்திர மோடி இப்போது ஏற்க இருக்கும் புதிய பிரதமர் பொறுப்பின் மூலம் அந்தக் கலங்கங்களைக் களையும் விதத்தில் செயலாற்றினால் அவர் மீது நம்பிக்கை ஏற்பட ஒரு வாய்ப்புள்ளது. தரப்பட்டுள்ள பொறுப்பான பதவிக்கு ஏற்ப அவர் நடந்து கொள்ளவேண்டுமென்று விரும்புவோம். 

இந்த தேர்தல் முடிவுகள் சொல்லும் இன்னொரு விஷயம் என்னவென்றால் 1984 தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் ஆட்சியமைத்த கட்சிகள் தனிப்பெரும் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கவில்லை. பல மாநில உதிரிக் கட்சிகளின் ஆதரவிலும் அமைச்சரவையின் உள்ளிருந்தும் வெளியிலில் இருந்தும் ஆதரவு பெற்றே தந்து ஆட்சியை நடத்தி வந்தது. இதன் மூலம் ஆளும் கட்சி , தான் நினைப்பதை செயல்படுத்த இயலாத நிலைகள் பலமுறை ஏற்பட்டன. அதுமட்டுமல்லாமல் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் மிரட்டல்களுக்கும் ஆளாகி, அமைச்சரவையில் அவர்கள் கேட்கும் துறைகளையும் கொடுத்தே தீர வேண்டிய நிலைமைகளும் ஏற்பட்டன. அது மட்டுமல்லாமல் கூட்டணியில் இருந்த கட்சிகள் ஊழல் முதலிய தவறுகளைச் செய்யும் பொது அவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க முடியாமலும் கூட்டணி தர்மங்கள் அரசின் கைகளைக் கட்டிப் போட்டன. 

ஆனால், இந்த முறை பிஜேபிக்கு மக்கள் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் வலுவைக் கொடுத்து இருக்கிறார்கள். தங்களது கூட்டணியில் இருக்கும் எவரையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டுதான் ஆளவேண்டுமென்ற அவசியமில்லாமல் சுதந்திரமான அரசை அமைக்க மக்கள் பிஜேபிக்கு உத்தரவிட்டு இருக்கிறார்கள் என்பது ஒரு ஆரோக்கியமான நிலை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். எந்த நல்ல காரியத்தையும் செய்ய விடாமல் கூட்டணிக் கட்சிகள் முட்டுக் கட்டை போட்டன என்று பிஜேபியும் காரணம் சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது. 

இந்த முறையும் ஆட்சியமைக்கப் பற்றாக்குறையான பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் பிஜெபிக்குக் கிடைக்குமென்றும் , அந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி பலவித பேரங்களை பேசி சொந்த நலனுக்காகவும் தங்கள் மீது இருக்கும் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் வகை ஏற்படுத்திக் கொள்ள தமிழகம் உட்பட்ட பல மாநிலங்களில் இருந்தும் அரசியல் வாதிகள் நினைத்து இருந்தனர். ஆனால் யாரிடமும் மண்டியிட வேண்டிய அவசியம் இல்லாமல் பிஜேபி மெஜாரிட்டி பெற்று இருக்கிறது. இவ்விதம் ஒரு பெரும்பான்மையை பிஜேபி பெறாவிட்டால் செல்வி ஜெயலலிதா போன்றோரின் பேரங்களுக்குப் பணிய வேண்டி இருக்கும்; டாக்டர் அன்புமணியை அமைச்சரவையில் சேர்க்க வேண்டி இருக்கும். இப்போது இந்த நிர்ப்பந்தங்கள்- நெருக்கடிகள் - மிரட்டல்கள் எதுவும் தேவை இல்லை என்பது பிஜேபிக்கு ஒரு பெரிய நிம்மதிப் பெருமூச்சாகும் இல்லாவிட்டால் வாஜ்பாய் காலம் போல அவதிப் பட்டு இருக்க நேரிட்டு இருக்கும். இப்படிப்பட்ட நிலைமைகளிலிருந்து நரேந்திர மோடி காப்பாற்றப்பட்டு இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

தேர்தல் கணிப்புகளைச் செய்த பல்வேறு வகையினர் கர்நாடகாவில் பிஜேபிக்கு பெரும் அளவுக்கு இடங்கள் கிடைக்காது என்று வாதிட்டனர். காரணம் அண்மையில்தான் அங்கு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆகவே இப்போதும் காங்கிரசே அதிகம் வெல்லும் என்று ஆரூடம் கணிக்கப்பட்டது. ஆனால் அந்த ஆரூடம் பொய்யானது. அங்கு பிஜேபி பதினேழு இடங்களில் வென்றது பிஜேபிக்கு இன்ப அதிர்ச்சியாகும். 

அதே போல் பிஜேபி உடைய பெரும்பான்மை பலத்தை உ. பி மற்றும் பீகாரில் அது பெறப்போகும் இடங்களின் எண்ணிக்கைகளின் அளவு உருவாக்கும் என்ற கணிப்பின்படி இவ்விரு மாநிலங்களிலும் மிகப்பெரும் வெற்றியை பிஜேபி வென்றெடுத்துள்ளது. பீகாரைப் பொறுத்தவரை ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாக் கட்சிக்கே அதிக இடங்கள் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டே இடங்களைத்தவிர பாக்கியை பாரதீய ஜனதா அள்ளிச் சென்றது. இந்த இரு மாநிலங்களில் மட்டுமே பிஜேபிக்கு கிட்டத்தட்ட நூறு இடங்கள் கிடைத்துள்ளன. 

அதே போல் உ பி போன்ற பெரிய மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் சமாஜ்வாடியும் தனது இடங்களை பிஜேபியிடம் இழந்தது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. உ பி யில் எண்பது இடங்களில் காங்கிரஸ் பெற்றது இரண்டே இடங்கள் மட்டுமே . அவையும் சோனியாவும் ராகுல் காந்தியும் பெற்ற இடங்கள் மட்டுமே. 

தலை நகர் டில்லியில் அண்மையில் ஒரு பெரும் எழுச்சி நடத்தியதாக அறியப்பட்டு நாற்பத்தி ஐந்து நாட்கள் மாநிலத்தை ஆட்சியையும் செய்த ஆம் ஆத்மிக் கட்சி , நாடெங்கும் 400 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது. டில்லியில் சட்டமன்றத்தில் வென்ற ஆம் ஆத்மிக் கட்சியால் ஒரு பாராளுமன்ற இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை. ஒட்டு மொத்த இந்தியாவில் இவர்கள் முன்னணி வகிப்பது நான்கே இடங்கள்தான்.

நாடெங்கும் இப்படி பிஜேபி அலையோ அல்லது மோடி அலையோ வீசி இருந்தாலும் கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிஜேபி குறிப்பிட்ட வெற்றியை ஈட்ட இயலவில்லை. அங்கெல்லாம் அலைகளின் ஒலி கேட்கவில்லை. அந்த அலை எங்கே போனது என்றும் தெரியவில்லை. 

அதேபோல் இடதுசாரிகளும் தங்களின் வழக்கமான தளம் உள்ள மாநிலங்களில் போதுமான அளவு வெற்றி பெற இயலவில்லை. இதற்குக் காரணம் , இடது சாரிகளைப் பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய இரண்டு பெரிய கட்சிகளையுமே எதிர்த்தார்கள். இரண்டு பெரிய கட்சிகளையும் எதிர்க்கும் அளவுக்கு இடதுசாரிகளுக்கு பலம் இருக்கிறதா என்றால் இல்லை. இதை உணராமல் இரண்டு மலைகளுடன் மோதி தங்களின் வாக்குகளைப் பிரித்து, பிஜேபி வெற்றி பெற உதவினார்கள் என்றே சொல்ல வேண்டும். அத்துடன் இந்த தேர்தலில் மக்கள் எந்த சித்தாந்தங்களையும் விவாதித்து முன்னிலைபடுத்தி வாகளைக்கவில்லை. இதுவும் ஊடகங்கள் ஏற்படுத்திய ஆட்டைக் கழுதையாக்கிய விந்தை. 

தமிழகத்தைப் பொறுத்தவரை முன்பு சட்டமன்றத் தேர்தலில் செய்த அதே தவறை திமுக மீண்டும் செய்து ஒரு இடம் கூட வெற்றி பெற இயலாத நிலைக்குத் தன்னைத்தானே தள்ளிக் கொண்டது. கடைசி நேரத்தில் காங்கிரசை கழற்றி விட்டதற்கான விலையை திமுக கொடுத்து இருக்கிறது என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அது மட்டுமல்லாமல் மயிலாடுதுறை போன்ற தொகுதிகளில் கூட்டணியில் இருந்தாலும் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளருக்கு மனப்பூர்வமாக திமுகவினர் வேலை செய்யவில்லை ; வாக்களிக்கவில்லை என்கிற செய்திகளையும் கேட்கிறபோது அவர்களுக்கு இந்த தண்டனை தேவையானதே என்றே கருத வேண்டி இருக்கிறது. 

அதே நேரம் திமுகவின் இந்த தோல்வி, அதன் சூரியனின் அஸ்தமனமல்ல. இது போல பல வெற்றி தோல்விகளை சந்தித்தக் கட்சி; பெரும் தொண்டர் பலம் உள்ள கட்சி; மீண்டும் எழுந்து நின்று உதிக்கும் வல்லமையும் வாய்ப்பும் உள்ள கட்சி. சரியாக நடந்து கொண்டால் வரும் சட்டமன்றத்தில் பிரகாசிக்கும் வாய்ப்புள்ள கட்சிதான் திமுக. 

நன்கு ஆய்ந்து பார்த்தோமானால் அதிமுகவின் வாக்கு வங்கி அப்படியே உதவி இருக்கிறது. அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் பலவாறு சிதறி அதிமுகவை வரலாறு காணாத மாபெரும் வெற்றியைப் பெற வழிவகுத்து இருக்கிறது. அத்துடன் தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தால் போடப்பட்ட 144 தடை உத்தரவும் அதைப் பயன்படுத்தி, பெருமளவில் பணப்பட்டுவாடா நடந்ததையும் வெட்கமின்றி தலைமை தேர்தல் ஆணையரே ஒப்புக் கொண்டார். நாமும் கண்ணால் பார்த்தோம். இந்த வெற்றியின் பின்னால் பணபலம் இருந்ததை மனசாட்சியுள்ளோரால் மறுக்க இயலாது. 

அத்துடன் பிஜேபி தலைமையில் தேமுதிக போன்ற அதிமுக எதிர்ப்புக் கட்சிகள் தமிழருவி மணியன் போன்ற அரசியல் முகவர்கள் மூலம் பேரம் பேசப்பட்டு தனி அணியாக உருவாக்கப்பட்டு, அதில் அடிப்படையில் வெட்டுப் பழி குத்துப்பழியாக அதுவரை அரசியல் நடத்திக் கொண்டிருந்த பாமகவும் இணைக்கப்பட்டது. இவர்களுடன் வைகோவுடைய மதிமுகவும் இணைந்து நின்றது. இந்த அணி அமைக்கப்பட்டதன் நோக்கமே அதிமுக மற்றும் பிஜேபியின் இரகசிய உடன்பாட்டின் ஒரு அங்கம் என்று ஒரு கருத்தும் நிலவுகிறது. இப்படி ஒரு அணியை அணையாக அமைத்து அதிமுகவுக்கு எதிரான ஓட்டுக்கள் திமுகவுக்கு விழாமல் தடுப்பதற்காகவே என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இதை நம்பவும் இடமிருக்கிறது.

இருந்தாலும், தமிழக அரசியலில் சில தேவையற்ற தொங்கு சதைகள் வெட்டி வீழ்த்தப்பட்டு இருக்கின்றன. அடிப்படை எதுவுமில்லாமல் அரசியல் கட்சி தொடங்கி, குறிக்கோளே இல்லாமல் கட்சி நடத்தி, கூத்து அடித்துக் கொண்டிருந்த நடிகர் விஜயகாந்தின் கட்சி, வேரடி மண்ணோடு வீழ்த்தப் பட்டு இருப்பது தமிழக அரசியலில் ஒரு மகிழத் தக்க விஷயம். அதே போல் ஒரு திராவிடக்கட்சியாக பரிணமித்து ஒரு இந்துத்வா கட்சியுடன் கூட்டணிவைத்த மதிமுகவும் அடையாளம் தெரியாமல் வீழ்த்தப்பட்டு இருப்பதும் ஒரு நல்ல விஷயமாகவே தோன்றுகிறது. இப்படிப் பட்டியலில் உள்ள தேவையற்ற அரசியல் கட்சிகளை அடையாளம் இல்லாமல் ஆக்கிய தமிழக வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இன்னும் இருக்கும் சிலரையும் வரும் தேர்தல்களில் புறக்கணித்து புறமுதுகிட்டு ஓட வைக்க வேண்டும்.

எப்படியானாலும் ஜனநாயக முறைப்படி வெற்றி பெற்றவர்களின் வெர்றியை அங்கீகரிக்கும் மரபுக்கு ஏற்ப நாமும் அவற்றை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மக்கள் பெரும் நம்பிக்கையுடன் நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டுமென்ற ஆவலில் ஒரு மாற்றத்தை வேண்டி இவர்களுக்கு வாக்களித்து இருக்கிறார்கள். வெறும் மத நம்பிக்கைகளை மட்டும் வைத்து மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அமைதியைக் குலைக்கும் முயற்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளில் புதிய அரசு ஈடுபடவேண்டும். அதற்கு மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ள அதிமுக அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். வெற்றி பெற்ற இருவரும் ஒத்துழைத்து இந்த மாநிலத்துக்கான மின்சாரம், நீர்-ஆதாரம், மீனவர்கள் பிரச்னைகள், இலங்கை தமிழர், கச்சதீவு உட்பட்ட பிரச்னைகளில் ஒன்றுபட்டு மக்கள் நலமுடன் வாழ எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். 

வளர்ச்சியின் நாயகன் என்று வடிவமைக்கப்பட்டுத்தான் பா.ஜ.க.பிரதம வேட்பாளரை முன்னிறுத்தினார்கள். இந்த வளர்ச்சியின் நாயகனின் முன் அவரது புதிய அரசுக்கு பல சவால்கள் காத்து இருக்கின்றன. புதிய அரசு எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் யாவை என்று தனிப்பதிவாக எழுதுவோம். இப்போது இந்திய தேர்தல் நடைமுறை அங்கீகரித்த வெற்றியை நாமும் ஏற்போம். அன்பும் அமைதியும் நிலவும் இந்த நாட்டில் தொடர்ந்து அமைதியும் சகிப்புத்தன்மையும் சகோதரத்துவமும் வேற்றுமையில் ஒற்றுமையும் நிலவச் செய்ய இறைவனை வேண்டுகிறோம்.

அதிரைநிருபர் பதிப்பகம்

பாரதீய ஜனதாவின் தேர்தல் அறிக்கை - ஒரு அலசல் 22

அதிரைநிருபர் பதிப்பகம் | April 09, 2014 | , , , , , , ,

ஞ்சும் சென்று அசரும் சென்று புள்ள வந்திருக்கான்’ என்று அதிரையின் பாஷையில் சொல்வார்கள். தாமதமாக, நேரம் தவறி வருவதைத்தான் நாம் இப்படிக் குறிப்பிடுவோம். இதே போல் குறிப்பிடத் தகுதி படைத்ததாகவே பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டு இருக்கிறது. நாடு முழுமைக்கான பாராளுமன்றத் தேர்தல், அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போகிறோம் என்று மார்தட்டிக் கொண்டு ஊடகங்களை எல்லாம் வளைத்துப் போட்டு வைத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி, புதிய நீதிக் கட்சி என்ற பொட்டிக்கடை கட்சியெல்லாம் கூட தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகும் கூட தனது தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் ஒரு மாநிலத்தில் வாக்குப் பதிவே தொடங்கிய பிறகு ஐம்பத்தி இரண்டு பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறது என்றால் – அதுவும் தேர்தல் கமிஷன் தனது கண்டனத்தை வெளியிட்ட பிறகும் அதை மதித்து பதில் கூட அளிக்காமல் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது என்றால் தேர்தல் அறிக்கைக்கு ஒரு தேசியக் கட்சி தரும் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம். ஒன் மேன் ஷோ நடத்தினால் உலகையே வெல்லலாம் என்ற மமதையின் வெளிப்பாடே இந்த தாமதம்.

தேர்தல் அறிக்கை என்பது தேர்தலை சந்திக்கும் கட்சிகள் தாங்கள் மக்களால் ஆதரிக்கப் பட்டு வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தால் செய்ய நினைக்கும் திட்டங்கள் மற்றும் செயல்படுத்த தீர்மானித்து இருக்கும் கொள்கைகள் மற்றும் கையாளப்போகும் சீர்திருத்தங்களின் பட்டியலே ஆகும். இந்த அடிப்படையில் மாநில மற்றும் தேசியக் கட்சிகள் யாவும் தங்களின் தேர்தல் அறிக்கைகளை பல வாரங்களுக்கு முன்பே வெளியிட்டுவிட்டன. இப்படி தேர்தல் அறிக்கைகளை கட்சிகள் தேர்தலுக்கு முன் கூட்டியே வெளியிடுவதற்குக் காரணம், அந்த தேர்தல் அறிக்கையின் அம்சங்கள், கொள்கைகள் , திட்டங்கள் ஆகியவை நாடெங்கும் பல்வேறு தலைவர்களால் விவாதிக்கப் படும்; விமர்சிக்கபப்டும்; பாராட்டப்படும்; நம்பிக்கை வைக்கப்படும். ஆனால் பாரதீய ஜனதாவின் தேர்தல் அறிக்கை இவற்றுக்கெல்லாம் நாட்டு மக்கள் யாருக்குமே எந்த வாய்ப்புமே வழங்காமல் ‘கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை’ என்று ஒரு சடங்காக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. இந்த தாமதத்துக்கு காரணம் இருக்கிறது.

அந்தக் காரணம் வேறு ஒன்றுமல்ல பாரதீய ஜனதாவின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் என்னவாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே என்ற மமதை மட்டுமல்ல நரபலி நாயகனை வளர்ச்சியின் நாயகன் என்று பூவும் பொட்டும் வைத்து சித்தரித்து ஊடகங்களில் உலவவிட்டு கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்பையும் நிகழ்த்திய பிறகு தேர்தல் அறிக்கை என்பது ஒரு தேவை இல்லாத ஒன்று என்று நினைத்து இருக்கலாம்.

மற்ற கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை தொடங்கும் முன்பே – அதாவது 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே பதினாறாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணியை முரளி மனோகர் ஜோஷி தலைமையில் குழு அமைத்து தனி வெப்சைட் தொடங்கி ஆரம்பித்தது பிஜேபி ஆகும். அப்போது இந்த வெப்சைட்டில் வெளியிடப்பட்டிருந்த ஒரு அறிக்கை காரணமாக நாட்டில் பிஜேபி மீது பல எதிர்ப்புக் கணைகள் பாயத்தொடங்கின. தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய திட்டங்கள், கொள்கைகள் யாவை என்று மக்கள் நினைக்கிறார்களோ அவற்றை பிஜேபி தொடங்கிய தனி வெப்சைட்டுக்கு அனுப்பும்படி நாட்டு மக்களை கேட்டிருந்தது பிஜேபி. ஆனாலும் பிஜேபியின் அடிப்படைக் கொள்கைகளான ராமர் கோயில் , பசுவதை, பொது சிவில் சட்டம், காஷ்மீருக்குரிய தனி அந்தஸ்து நீக்கம், சேது சமுத்திரத் திட்டம் ஆகியவற்றில் எவ்வித கருத்து மாறு பாட்டையும் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஏற்காது என்று அந்த அறிவிக்கை கூறியது. ஆனால் இவ்வளவு பில்டப்புடன் தொடங்கி. இறுதியில் கேட்க நாதியில்லாத தேர்தல் அறிக்கையாக – விவாதிக்க நேரம் தராத தேர்தல் அறிக்கையாக திருவிழாவில் காணாமல் போய் திரு திருவென்று முழித்துக் கொண்டிருக்கும் குழந்தையைப் போல் இந்த தேர்தல் அறிக்கை வெளிவந்து இருக்கிறது.

எப்படியானாலும் நாம் நமது விமர்சனத்தை ஒரு அலசலுடன் பதிவு செய்கிறோம். 

முதலாவதாக பிஜேபியின் தேர்தல் அறிக்கையின் ஆணிவேர் இந்துத்வா என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை பிஜேபியின் எந்த தேர்தல் அறிக்கையிலும் இடம் பெறாத ஆர் எஸ் எஸ் தலைவரின் படம் இடம் பெற்று இருக்கிறது. இது அவர்கள் பார்வையில் திருஷ்டிக்காக கூட இருக்கலாம்.

அறிக்கையை இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம் ஒன்று அரசு நிர்வாகம் பொருளாதாரம் வெளியுறவுக் கொள்கை ஆகியவை தொடர்பானது. மற்றது கலாச்சாரம் பண்பாடு ஆகியவை தொடர்பானது. 

அரசு நிர்வாகம், பொருளாதாரம் போன்றவற்றில் காங்கிரசின் தேர்தல் அறிக்கைக்கும் பாரதீய ஜனதாகட்சியின் தேர்தல் அறிக்கைக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை. எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் முகநூலில் பதிவு செய்தது போல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் முப்பது பைசா கொடுத்து எடுத்த ஜெராக்ஸ் காபிதான் அந்தக் கொள்கைகள். ஆட்சியை மாற்ற வேண்டும் என்று போராடும் ஒரு கட்சி ஒரு புதிய பொருளாதாரக் கொள்கை என்று ஒன்றைக் கூட எடுத்து வைக்கவில்லை. அப்புறமென்ன புடலங்காய் அறிக்கை?

அதேபோல் வெளியுறவுக் கொள்கைகளிலும் காங்கிரஸ் உடைய கொள்கைகளில் இருந்து எவ்வித மாற்றத்தையும் பிஜேபி அறிவிக்கவில்லை. வழக்கம் போல் அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பேணுவோம் என்றே கூறி இருக்கிறது. தமிழ்நாட்டில் பிஜேபியுடன் தேர்தல் கூட்டு வைத்துள்ள வைகோ தலைமையிலான மதிமுக கூறும் தனி ஈழம் என்பது போன்ற பெரிய முதலைகளை அல்ல கச்ச தீவு போன்ற சல்லிக் கெண்டைகளைக் கூட பிஜேபியின் தேர்தல் அறிக்கை குறிப்பிடவில்லை. இதற்காக வங்கக் கடலில் விழ வேண்டியவர் வைகோதான். 

அடுத்து மோடி ஆட்சிக்கு வந்தால் நாடு முழுதும் மதுவிலக்கு என்று மொடாக்குடியர்களின் மத்தியில் பேசி கைதட்டல் வாங்கும் பாட்டாளி மக்கள் கட்சி இந்த தேர்தல் அறிக்கையை ரத்தம் சிவப்பேறிய கண்களுடன் பார்க்கிறது; இன்னும் மோடி ஆட்சிக்கு வந்தால் முல்லைப் பெரியாறு நீர் வரும், காவிரி நீர் வரும், தடை இல்லா மின்சாரம் வரும் என்றெல்லாம் சம்சாரம் சகிதமாக கதை அளந்துகொண்டு இருக்கிற விஷ(ய)காந்தனுக்கும் இந்த அறிக்கையில் ஒன்றும் இல்லை. முக்கியமாக காவிரிப் பிரச்னை மற்றும் நதி நீர் இணைப்பு ஆகிய பிரச்சனைகள் பற்றி இதில் மூச்சு விடவில்லை. அப்படி மூச்சுவிட்டால் கர்நாடகா ஆப்பு வைக்குமே என்ற அச்சம் காரணமாக இருக்கலாம். 

அடுத்து, கலாச்சாரம் பண்பாடு ஆகிய பிரிவில் விவாதிக்கப் போனால் நாட்டை இன மத சாதி அடிப்படையில் உளி கொண்டு பிளக்கும் அம்சங்கள் நிறைந்த தேர்தல் அறிக்கையாக இந்த தேசியக் கட்சியின் தேர்தல் அறிக்கை இருக்கிறது. இந்தப் பகுதியே நாம் அதிகமாக விவாதிக்க வேண்டியதும் நம்மை மட்டுமல்ல நாட்டையே அச்சுறுத்தும் பகுதியாகவும் இருப்பதாகும். முதலாவதாக சங்க பரிவாரின் கோட்பாடாகிய 
  • “இந்திய நாட்டுக்கும் சமூகத்துக்கும் இந்து மதம்தான் அடையாளம், இந்துத்துவம்தான் கலாச்சாரம்.” என்பதை இந்த அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.
  • அத்துடன், “சனாதன தர்மம்தான் இந்திய தேசியத்துவம்” என்கிறது.
  • மேலும் “ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே தேசம்” என்ற லட்சியத்தை முழங்குகிறது.
  • இன்னும், “அரசியலில் இந்துத்துவம் உருவாவது, சமுதாயத்தின் சிலருக்கு சலுகைகள் காட்டி திருப்திப்படுத்துவதற்கும், சிலரை வாக்கு வங்கிகளாக நடத்துவதற்கும் நல்ல முறிவு மருந்தாக இருக்கும்” என்கிறது
  • இதையும் தாண்டி, “இந்தியாவின் மனசாட்சியாக பகவான் ராமர் இருக்கிறார்” என்கிறது.

மேலே குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள அனைத்துமே நாட்டின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோரின் கனவுகளைத் தகர்க்கும் விஷவித்துக்கள் அடங்கிய கருத்துக்களாகும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை. இந்த நாடு மங்கோலிய, ஆரிய, திராவிட, அந்தமான் போன்ற தீவுகளின் நீக்ரோ மற்றும் பழங்குடியினர் ஆகிய ஐந்து வகை இனங்களைக் கொண்டது. ஒரே கலாச்சாரம் என்பது இங்கு திணிக்கப்பட்டால் நாடு என்ன ஆகுமென்று நாம் சொல்லத் தேவை இல்லை. 

இத்தனையும் சொல்லும் அறிக்கை பிஜேபி பிறப்பெடுத்த காரணங்களுக்கான கரடுமுரடான காரியங்களை சொல்லாமல் விடுமா? இதோ அவை:-

1. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு கோயில் கட்டப்படும் என்று கூறுகிறது. கோயில் கட்டுவது ஒரு குறிப்பிட்ட கடவுள் மீது நம்பிக்கையுள்ள எவரும் எங்கும் கட்டலாம் . அரசியல் சட்டப்படி என்றால் கோயில் என்ன மகளிர் இட ஒதுக்கீடா? இருநூறு நாள் வேலைத்திட்டமா? உணவுப் பாதுகாப்புத்திட்டமா? அந்நிய முதலீட்டுக்கு அனுமதியா? இதில் அரசியல் சட்டத்துக்கு என்ன வேலை? வேப்பமரத்தில் ஒரு செங்கல்லை சாத்தி கோயில் என்று கும்பிட்டு வருகிற பக்திமான்கள் நிறைந்த நாட்டில் கோயில் கட்டுவதற்கு அரசியல் சட்டம் ஏன் என்று இதை தயாரித்த முரளி மனோகர் ஜோஷியின் மூளைதான் விளக்கவேண்டும். 

2. நாட்டின் அனைத்து மக்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் வகுக்கப்படும் வகையில் அனைத்து மரபுகளிலும் உள்ள முற்போக்கான அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்ற பொறுப்பு சட்ட ஆணையத்துக்கு அளிக்கப்படும் என்கிறது. இது நடைமுறைக்கு வந்தால் அந்தந்த மக்களது தனி உரிமைகள் பறிக்கப்படும். இதனால் நாட்டுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாது. ஆனால் அரசால் அடக்கவே முடியாத உள்நாட்டுக் குழப்பங்கள் ஏற்பட வழி வகுக்கும் என்பது அரசியல் அறிஞர்களின் கருத்து. அரசியல் சட்டத்தை வரைந்த முன்னோர்கள் ஒன்றும் கேப்பையில் நெய் வடிகிறது என்று சொன்ன கேணையர்கள் அல்ல என்பதை இன்னும் பிஜேபி உணரவில்லை என்பதையே இது காட்டுகிறது. 

3. அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்துசெய்ய வேண்டும் என்ற திட்டத்தின் மூலம் காஷ்மீருக்கு வழங்கப்படும் தனி அந்தஸ்தை ரத்து செய்வோம் என்று கூறுகிறது. காஷ்மீரை எவ்வளவு கஷ்டங்களுக்கிடைடையில் இந்தியாவோடு இணைத்தார்கள் என்பதை வரலாற்று ரீதியாக அறியாத வக்கில்லாதவர்கள்தான் இப்படி சொல்ல முடியும். எந்த நேரமும் அடுத்த பகைமை நாட்டுடன் இணையத் துடிக்கும் ஒரு மாநிலத்துக்கு இதுவரை வழங்கப் பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை பறிப்பது என்பது வானத்தில் போகிற ஓணானை ஏணி வைத்து இறக்குவதுஎன்பதுதான் என்பதை பிஜேபி உணர வேண்டும். எல்லையில் தொல்லை தரவே இந்த பாம்புக்கு மகுடி ஊதுகிறது பிஜேபி. 

மேலும் பசுவதை தடுப்பு, சேதுசமுத்திரத்திட்டத் தடுப்பு ஆகிய பழைய பல்லவிகள் மீண்டும் புதிய தம்பூரா கொண்டு மீட்டப்பட்டு இருக்கின்றன. இவை அனைத்துமே பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டு அவர்களை சிறுபான்மையினருக்கு எதிராக அணிதிரட்டி அதன் மூலம் அதிகாரத்தில் அமர்ந்து ஆட்டிப் படைப்பதற்கான அரிச்சுவடியே தவிர வேறு ஒன்றுமில்லை. ஆனால் இதை அப்படியே அலட்சியப் படுத்திவிட முடியாது; கூடாது. 

வஞ்சகமான வார்த்தை ஜாலங்களுடன் கூடிய அறிக்கையில் குறிப்பிடத்தகுந்த ஒரு அம்சமாக நாம் பார்ப்பது இந்த முறை இந்தியாவின் மிகப் பெரிய சிறுபான்மையினரான முஸ்லிம்களை கவர முயற்சிக்கும் விதமாகவும் சில வரிகள் அமைந்துள்ளது தான். இது இதுவரை இல்லாத விசித்திரமானது. இரண்டு மூன்று தொப்பி போட்ட முஸ்லிம்கள் பிஜேபியில் இணைந்த காரணத்தால் இவை சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பது நமது கேள்வி. இந்த விசித்திரத்தின் காரணம் சிறுபான்மையினராகிய முஸ்லிம்கள், விட்டில் பூச்சிகளாக வீழ்வர் என்கிற நப்பாசைதான். ஒன்றுக்கும் இல்லாவிட்டாலும் இதோ பாருங்கள் நாங்கள் இப்படி சொல்லி இருக்கிறோமே என்று மேடையில் பேசவே இவை உதவலாம். 

குஜராத்தில் 2002ல், முஸ்லிம்கள் இனப்படுக் கொலைச் செய்யப்பட்டதற்கு அப்போது குஜராத்தின் முதல்வராக இருந்த மோடியின் மீது முஸ்லிம்கள் நேரிடையான பிரதான குற்றவாளி என்றும், மறைமுகமாய் சம்பந்தப்பட்ட குற்றவாளி என்றும் குற்றச்சாட்டுகள் சுமத்திக் கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு ‘தாராளமயமாய்’ பல்வேறு வாக்குறுதிகள் கொடுத்து அசத்தி இருக்கிறது பிஜேபி.

அறிக்கையில் முஸ்லிம்களுக்கு குல்பி வைத்த குஜராத் ஐஸ் கொடுக்கும் வாசகங்கள்:

வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் மாபெரும் பலமாகும். இதை பிஜேபி உறுதியாக நம்புகிறது.

இந்தியாவை ஒன்றுபபடுத்தி துடிப்புடனும், பாதுகாப்புடனும் வைத்திருக்கின்ற பன்முகத்தன்மையை நாங்கள் பெரிதும் போற்றுகிறோம்.

முஸ்லிம்களின் தொன்மைவாய்ந்த கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை போலவே அவர்களின் சமூக, பொருளாதார பங்களிப்பையும் பிஜேபி போற்றிப் பாதுகாக்கிறது.

60 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் பரிதாப நிலையைக் கண்டு கவலை கொள்ளும் அதேநேரத்தில், அது முஸ்லிம்களுக்கு சம வாய்ப்பளிப்பதற்கு உறுதியளிக்கிறது.

சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் இந்திய சிறுபான்மையினத்தார், அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினர் பின்தங்கிய நிலையிலும், வறுமையிலும் உழல்வது துரதிஷ்டவசமானது. நவீன இந்தியா அனைவருக்கும் சமவாய்ப்பளிப்பதாக நிச்சயம் இருக்கும்.

இந்தியாவின் முன்னேற்றத்தில் அனைத்து சமூகத்தினரும் சமமான பங்குதாரர்கள்தான் என்று பிஜேபி உறுதியளிக்கிறது.

எந்தவொரு பிரிவினர் பங்களிக்காத இந்தியா முன்னேறவே முடியாது என்று நாங்கள் நம்புகின்றோம்.

மேலும், தனது தேர்தல் அறிக்கையில் பிஜேபி முஸ்லிம்களுக்கு இவ்வாறு உறுதிகளும்  அளிக்கிறது:

சிறுபான்மை இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு களில் எவ்வித பாகுபாடும் இருக்காது.

சிறுபான்மையினரின் கல்வி நிலையங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் நவீனமயமாக வலுப்படுத்தப்படும்.

மதரஸாக்கள் நவீனமயமாக்கப்படும்.

பொருளாதார முன்னேற்றம் மற்றும் தொழில் முனைவோர்க்கான வாய்ப்புகள் அளிக்கப்படும்.

சமயத் தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வக்ஃப் வாரியத்துக்கு அதிகாரமளிக்கப்படும்.

வக்ஃப் சொத்துக்கள் ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும்.

முஸ்லிம்களின் வளமான பாரம்பர்யம் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்படும்.

உருது மொழியின் பாதுகாப்பு மற்றும் அதனை முன்னெடுத்து செல்லும் திட்டங்கள் தீட்டப்படும்.

அமைதியான, பயமற்ற சூழல்; அடக்குமுறை, சுரண்டல் போன்ற பயமின்மை உத்திரவாதம் அளிக்கப்படும்.

பல சமய தலைவர்களின் மேற்பார்வையில் நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையை உருவாக்கும் ஒரு நிரந்தர அமைப்பு உருவாக்கப்படும்.

இவ்வளவு வாக்குறுதிகளையும் அளித்து விட்டு பிஜேபி தனது காவிமயமாக்கும் திட்டங்களை, பாபர் மசூதி, பொதுச்சட்டம், போன்ற நேரிடையாக முஸ்லிம்களை பாதிப்பதாக இருக்கும் பழைய பிரச்னைகளை முன் வைப்பதும் இந்த தேர்தல் அறிக்கையில் உள்ளது. ஆகவே இந்த தேர்தல் அறிக்கை ஒரு பசுத்தோல் போர்த்தி வந்துள்ள புலி. 

அதிகாரம் கையில் வந்தால் இந்தியா இன்னும் சிதறுண்டு போவதற்கான ஆபத்தான அமசங்களை உள்ளடக்கிய இந்த தேர்தல் அறிக்கையும் அதனைத் தயாரித்த தலைவர்களும் அதைத் தாங்கிப் பிடிக்கும் கட்சியும் அதற்கு துணை போக சதி ஆலோசனையில் மவுனம் காக்கும் மாநில கட்சிகளும் அந்த மாதிரியான மாநிலக் கட்சிகளை ஆதரியுங்கள் என்று கூவி அழைக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் யாவருமே குப்பையில் தள்ளப் பட வேண்டியவர்களே! அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் – இதற்கு முன் எவ்வளவு சீர்திருத்தங்கள சொன்னவர்களாக இருந்தாலும் இந்த வாழ்வா சாவா தேர்தலில் மதச் சார்ப்பின்மைக்கு ஆதரவான கட்சிகளுக்கே வாக்களித்து மத உணர்வைத் தூண்டும் பிஜேபியின் கனவுகளைத் தவிடு பொடியாக்கும் முயற்சிகளுக்கு சபதம் ஏற்பதே நாம் செய்ய வேண்டியது. இதுவே இந்தியாவைக் காக்கும்; வாழவைக்கும்; வளர்க்கும். 

 - இப்ராஹீம் அன்சாரி  -