நபிமணியும் நகைச்சுவையும் - தொடர் - 8
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjs3lMZUfP_yUlRbLnQq1STLmM8KesV1Ijk3IWdyFjHID2JyY4w9Kp2VMqQpTkIVLkgxlFWCo1WG2T4p66zLwQXaMSoCg08xzWk14f6QaVPnufquuMwWFFy1u1MRCQ2C_oWTpbAXpjR9GI/s1600/Steiner_chain_animation.gif)
இப்போது, நாம் காண்போம் சற்றுக் கனவின் விளக்கம்:
கனவு காணாத மனிதரே கிடையாது! வாய் பேச இயலாதவர், கண் காண முடியாதவர், காது கேட்க வகை இல்லாதவர், சித்தப்பிரமை கொண்டவர், குழந்தைகள், வயோதிகர், ஏன்? விலங்குகளும் பறவைகளும் கூட கனாக் காணுகின்றன என்கின்றனர் மனக்கூறு வல்லுனர்கள்.
நாம் காணும் கனவுகள் மூன்று வகை:
நற்செய்தி : அல்லாஹு ரப்புல் ஆலமீன், நம்பிக்கையாளனுக்கு அனுப்பும் ‘புஷ்ரா’ எனும் நன்மாராயம்! இது கண்டால் 'அல்ஹம்துலில்லாஹ்' என்று அல்லாஹ்வைப் புகழுங்கள். நல்ல கனவு கண்டவருக்கு அன்று முழுவதும் அலாதியான மகிழ்ச்சியும் மன அமைதியும் மனமெங்கும் வியாபித்து இருக்கும். தனக்கு நெருக்கமான, தோழமை கொண்ட நலம் விரும்பிகளிடம் கண்ட கனவைப் பகிர்ந்து கொள்ளலாம்.
தீய கனவுகள் : இது முற்றிலும் ஷைத்தானின் தீண்டுதலால் தோன்றுவது! பயங்கரமான, மடத்தனமான, அருவருப்பான, ஆபாசமான, மிருகத் தனமான, இயற்கைக்கும் இயல்புக்கும் மாற்றமான, மொத்தத்தில் பேய்த்தனமாகத் தோற்றம் தரும் அனைத்தும் முஃமினின் ஈமானைச் சற்று அசைத்துப் பார்ப்போமே என்று இப்லீஸ் ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் இருட்டு வாய்ப்பு!
“ஒருவர் தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வந்தது (என அறிந்து), அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரட்டும். அதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம். ஏனெனில், அப்போது அக்கனவு அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது” என்றார்கள் உன்னத வழிகாட்டி கண்ணியத் தூதர் (ஸல்) அவர்கள். (1)
அப்போதும் மனம் அமைதி பெறவில்லை எனில், எழுந்து இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு அந்தத் தீய கனவின் தீமைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடவேண்டும்.
மனப்பிரம்மை: அஜீரணத் தொல்லை அதிகமானாலும் மனப்பிரம்மையான கனவுகள் அடிக்கடித் தோன்ற வாய்ப்புள்ளதென்பது உடற்கூறு வல்லுனர்களின் கூற்று. இவை பெரும்பாலும் அர்த்தமில்லாத கனவுகளாகும். கற்பனையான, தன் மனோ இச்சையின் பிரதிபலிப்பு கனவில் வரலாம். (உதாரணம்: நாகூர் தர்காவிற்குச் சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றப் பேரவா கொண்ட ஒரு பித்துக்குளிப் பெண்மணியின் பிரம்மை!)
குறிப்பாக, கனவில் அவுலியா வந்து அழைத்தார் (ஆகவே, நான் தர்காவிற்குச் செல்லத் தயாராகி விட்டேன்) என்று பொய்யுரைப்பது. இது மிகப்பெரும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
'பொய்களிலேயே மிகப் பெரும் பொய், ஒரு மனிதன் தன்னைத் தன் தந்தையல்லாதவருடன் இணைத்து (நான் அவரின் மகன் என்று) கூறுவதும், தன் கண்கள் பார்க்காத ஒன்றை (ஒரு கனவை) அவை பார்த்ததாகக் கூறுவதும், இறைத்தூதர் சொல்லாத ஒன்றை அவர்கள் சொன்னதாகச் சொல்வதும் ஆகும்' என்று உரைத்தார்கள் உண்மை மிகுந்த உத்தமத் தூதர் (ஸல்) அவர்கள். (2)
இப்போது நாம் அந்த நபித் தோழரைச் சந்திக்கும் நேரம் வந்துவிட்டது!
அரக்கப் பறக்க ஓடி வந்து, இறைத்தூதர் அவர்களே! என அழைத்தபடி இயல்புக்கு மாற்றமாக நின்று கொண்டிருக்கும் அவரைப் பார்த்ததுமே அண்ணலார் யூகித்துவிட்டார்கள். இவர் எதையோ பார்த்து பயங்கரமாக அதிர்ச்சி அடைந்திருக்கின்றார்! கசங்கிய உடை, கழுவாத முகம், வாரப்படாத பரட்டைத் தலை என்பதெல்லாம் அப்போதுதான் படுக்கையிலிருந்து எழுந்து நேராகக் கண்மணி நபி (ஸல்) அவர்களைக் காண வந்துள்ளார் என்பதைப் பறை சாற்றின!
"சொல்லுங்கள் தோழரே! என்ன நிகழ்ந்தது?"
"அல்லாஹ்வின் தூதரே! எனது தலை! எனது தலை துண்டிக்கப் படுவது போன்று நான் கனவு கண்டேன்” என்றார் பதட்டமாக! தொடர்ந்து, “அந்தக் கனவில் என் தலை வெட்டப்பட்டது. அதுமட்டுமல்ல! வெட்டப்பட்ட என் தலையைப் பாய்ந்து பிடிப்பதற்காக நானே துரத்திக்கொண்டு ஓடினேன் என் கனவில்" என்று கூறி நின்றார் பரிதாபமான தொனியில்!
செய்தி கேட்ட செம்மல் நபியவர்கள் சிரித்து விட்டார்கள்!
வெண்ணிலவும் வியப்படையும் வேந்தர் நபியின் முகம், சிரிப்பால் மேலும் சிவந்து போனதைக் கனவு சொல்லி நின்ற அவர் கண்டு களித்தார். அண்ணல் நபியின் அழகிய சிரிப்பால் தோழரின் கவலை தொலைந்து போனது! எங்கிருந்தோ ஒரு நிம்மதி வந்து அமைதியுடன் அவர் மனதில் அமர்ந்துகொண்டது!
“உறக்கத்தில் ஷைத்தானின் விளையாட்டால் உங்களில் எவரும் கெட்ட கனவு கண்டால், மற்ற எந்த மனிதரிடமும் சொல்லித் திரிய வேண்டாம்” என, அவரை ஆறுதல் படுத்தி அனுப்பி வைத்தார்கள் அன்பே வடிவாம் அண்ணல் நபியவர்கள். (3)
0o0o0o0o0o0o0o0o0o0
ஆதாரங்கள்:
(1) புஹாரி 6985 : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)
(2) புஹாரி 3509 : வாஸிலா இப்னு அல் அஸ்கவு (ரலி)
(3) முஸ்லிம் 4665 : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி)
இக்பால் M. ஸாலிஹ்
3 Responses So Far:
அன்றாடவாழ்க்கைதொல்லையில்காஸுகொடுக்காமல்காணும்சுகமான கனவுகள் அல்லாவின்அருட்கொடைகளில்ஒன்று.கனவிலும்அல்லா மனிதனைபேய்கனவைகொடுத்துசோதிப்பதும்உண்டு.அந்தநடுநிசிஇரவில் பேயாக வந்துமிரட்டுவதுவேறு யாருமல்லநீங்கள்தாலிகட்டியதாரமே!
கனவுகளைப்பற்றி விவரித்த்கிருக்கும் விதம் புதுமையானது.
அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் அந்த அடியாரின் கனா சிரிப்பை வரவழைத்தது.
Post a Comment