சுமார் கிட்டத்தட்ட 15 அல்லது 20 வருடங்களுக்கு முன்னர் "பார்த்தீனியம்" என்ற விஷச்செடியைப்பற்றி ஒரு பத்திரிக்கையில் படித்திருக்கிறேன். எந்த பத்திரிக்கை என இங்கு குறிப்பிட எனக்கு ஞாபகம் இல்லை. இந்த செடியின் பெயரை வைத்து ஏதோ அமெரிக்க, ஆப்பிரிக்க கண்டத்தில் விளையும் ஒரு வகை செடி என்று யாரும் நினைத்து விடவேண்டாம். இந்த செடி நம்மூரில் பரவலாக குப்பை மேடு, குளக்கரை, வயல்வெளிகள், விளையாட்டுத்திடல் ஓரம், வீடு கட்டாமல் அப்படியே இருக்கும் மனைக்கட்டுகள், வாய்க்கால் வறப்புகள் மற்றும் நம் வீட்டு கொல்லைப்புறங்கள் என முளைத்து பார்ப்பதற்கு பசுமையாக காட்சி தந்து நமக்கும் அதனருகில் வாழும் விலங்குகள், பறவைகளுக்கும் உடல் உபாதைகளை தந்து மெல்ல, மெல்ல கொல்லும் ஒரு வகை விஷச்செடி தான் இது.ஆனால் இதன் பூர்வீகம் அமெரிக்கா தான் என்று படித்த ஞாபகம் உண்டு. இரண்டாம் உலகப்போர் நடந்து முடிந்த சமயம் குறிப்பாக இந்தியாவில் கடும் பஞ்சம் நிலவியதாம். எனவே இந்தியாவிற்கு உதவுகிறோம் என்ற பெயரில் அமெரிக்கா கோதுமைகளையும் இன்னும் பிற தானியங்களையும் இந்தியாவிற்கு அனுப்பி வைத்ததாம். அந்த தானியங்களுடன் இந்த பார்த்தீனிய செடியின் விதைகளையும் கலந்து அனுப்பப்பட்டதாக கேள்வி. அது தானியங்களுடன் இந்தியாவில் இறக்குமதியாகி இன்று நாடு முழுவதும் பரவி மக்களுக்கு சுவாசக்கோளாறுகள், ஆஸ்த்துமா, தோல் நோய்கள், தொற்று நோய்கள், நுரையீரல் நோய்கள், மூச்சுத்திணறல் நோய்கள் போன்ற இன்னும் பல நோய்கள் பரவ காரணமாக இருந்து இறுதியில் மரணத்தை ஏற்படுத்தக்கூடியது தான் இந்த பார்த்தீனியம் விஷச்செடி.
நான் நம் ஊரில் இந்த செடியை பரவலாக பார்த்திருக்கிறேன். அதன் புகைப்படமும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்களும் ஊர்ஜிதம் செய்யலாம்.
கடந்த வாரம் நம் தமிழக சட்டமன்ற பட்ஜெட் விளக்கக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவிடம் ஒரு உறுப்பினர் இந்த செடியின் தாக்கம் பற்றியும் அதை நம் தமிழகத்தில் அழிக்க உடனே ஆவண செய்யும்படியும் கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்த முதல்வர் இந்த பார்த்தீனிய விஷச்செடியை அழிக்க ஒரு தனி இயக்கமே ஏற்படுத்தப்படும் என உறுதியளித்தார் என்றால் இதன் கேடுகளையும், தீங்குகளையும் பார்த்துக்கொள்ளுங்களேன்...
இந்த செடியுடன் இன்னொன்றையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். நம் தமிழகத்தில் பரவலாக குறிப்பாக இராமநாதபுர மாவட்டத்தில் வறட்சியும், தண்ணீர் பஞ்சமும் தலைவிரித்தாட மிக முக்கிய காரணமாக கூறப்படுவது காட்டுக்கருவேல மரம் என்று சொல்லப்படும் கருவமரங்கள் தானாம். நம்மூரில் கா.மு. மேல் நிலைப்பள்ளி, கல்லூரி சாலை போன்ற இடங்களில் சர்வ சாதாரனமாக வளர்ந்து பார்ப்பதற்கு நல்ல நிழல் தரும் மரமாகவும், மழை தரும் ஒரு காரணியாகவும் போலிக்காட்சியளித்து நிற்கிறது. இதன் சிறப்பு என்னவெனில் தண்ணீரை அதன் வேர்கள் எத்தனை மீட்டர் வேண்டுமானாலும் பூமிக்கடியில் பாய்ந்து படர்ந்து சென்று உறிஞ்சி வாழக்கூடிய தன்மை கொண்டவை இந்த கருவேல மரங்கள். நாட்டில்/காட்டில் மரங்களை வளர்ப்பதற்காக ஒரு காலத்தில் காமராஜர் முதல்வராக இருந்த சமயம் விமானத்தில் பறந்து இதன் விதைகள் தரையில் தூவப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த கருவேல மரத்தின் தீங்குகள் என்னவெனில் இதன் மரத்தடியில் தொடர்ந்து கட்டப்படும் ஆடு, மாடு போன்ற விலங்குகள் மலட்டுத்தன்மை கொள்வதாகவும், இதன் காற்றில் கூட விஷத்தன்மை இருப்பதால் அதில் எந்த குருவியும் கூடு கட்டுவதில்லையாம். அறிவியல்/புவியியல் ஆராய்ச்சியாளர்களின் கருத்து என்னவெனில் இந்த மரம் அடியோடு அழிக்கப்பட்ட பகுதிகள் நல்ல பசுமையாகவும், நிலத்தடி நீரின் அளவு மிகவும் அருகிலேயே இருப்பதாகவும் தன் ஆராய்ச்சியின் முடிவாக அவர்கள் சொல்கிறார்கள்.
இவர்களின் முடிவுக்கு முன்னரே விழித்துக்கொண்டது நம் அண்டை மாநிலமான கேரளம். அங்கு இந்த கருவேல மரங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் பசுமை பச்சைபசேல் என்ற தன் போர்வையை விரித்து அமைதியுடன் உறங்குவதாக சொல்கிறார்கள் அறிவியலாளர்கள். அதுதானே உண்மை.
மழைக்காகவும், கடும் கோடைகாலத்தில் நல்ல நிழல் தருவதற்காகவும் மரங்கள் ஆங்காங்கே எல்லோராலும் வளர்த்து பராமரிக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் இது போன்ற விஷ செடிகளும், மரங்களும் நிச்சயம் துரித நடவடிக்கை மூலம் அழித்தொழிக்கப்பட வேண்டியவைகள் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது அதன் தீங்குகளை நன்கு உணர்ந்த/தெரிந்த பின். இதன் தீங்குகள் பற்றி இன்னும் அறிய விரும்புவோர் கூகுள் இணையதளத்தில் இதன் பெயரை அடித்து மட்டும் நோக்கினால் மேலதிக விவரம் அங்கு காணக்கிடைக்கும்.
இந்த பார்த்தீனியம் விஷச்செடியின் தாக்கத்தை பற்றி நீண்ட நாட்களுக்கு முன் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். சட்டசபையில் நாட்டில் மக்களுக்கு தீங்குதரக்கூடிய எத்தனையோ சமாச்சாரங்கள் இருக்கும் இவ்வேளையில் இந்த செடியின் பெயரை மட்டும் குறிப்பிட்டு முதல்வரால் அதை அழிக்க ஒரு தனி இயக்கமே உருவாக்கப்பட இருக்கிறதென்ற செய்தி அறிந்து இந்த செடியை பற்றி ஒரு கட்டுரை எழுதி அதை நாம் நம் ஊரில் வீட்டின் சுற்று பகுதியிலோ அல்லது வேறு எங்கு கண்டாலும் அழித்தொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை இங்கு வைத்து நிறைவு செய்கிறேன். இந்த கோரிக்கை எதற்கும் பயன் தராத மாறாக தீங்கை மட்டும் தரக்கூடிய கருவேல மரங்களுக்கும் பொருந்தும். இதை விறகுக்காக மக்கள் குறிப்பாக கலியாண, வைபவங்களில் விருந்துக்கு சமைக்க பயன்படுத்தலாம். அதை வைத்து சமைத்த உணவை உட்கொள்வதால் இன்னும் என்ன என்ன உடல் உபாதைகள் வருகிறதோ? யார் அறிவார்? அது பற்றி வேறொரு ஆராய்ச்சி கட்டுரையில் தான் நோக்க வேண்டும்.
மக்களின் விழிப்புணர்வுக்காக.....
- மு.செ.மு. நெய்னா முஹம்மது.



