Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

23

அதிரைநிருபர் பதிப்பகம் | January 31, 2015 | , , ,

தொடர் பகுதி - இருபத்தி ஐந்து

இஸ்ரேல் உருவாக்கப்பட்டதும் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டு தனிநாடாக உருவாக்கப்பட்டதும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் நடைபெற்ற உலக வரலாற்று நிகழ்வுகள். இரண்டு செயல்களுக்கும் சூத்திரதாரி பிரிட்டன்தான். ஒரு பிரச்னையைத் தீர்க்க வேண்டுமென்றால் ஒரு புதிய பிரச்னையை பூதத்தின் அளவுக்கு உருவாக்கி வைத்துவிட்டுத் தீர்ப்பது என்பது பிரிட்டனின் அரசியல் மூளையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் காணப்படும் குறுகிய புத்தியின் வெளிப்பாடு என்பதும் உலகறிந்த உண்மை . 

ஆனால் அடிப்படையில் இந்த இரண்டு வரலாற்று நிகழ்வுகளுக்கும் வேறுபாடுகள் உள்ளன. 

இந்தியா தனது சொந்த நாட்டை, அடக்கி ஆண்டு கொண்டிருந்த ஆங்கில ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது. அதற்கு இந்தியா கொடுத்த விலை – நாட்டுப் பிரிவினை. நாடுகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டாலும் இந்தியாமற்றும் பாகிஸ்தானில் வாழ்ந்த மக்கள் காலம் காலமாக அந்தப் பகுதிகளில் வாழ்ந்து வந்தவர்கள்தான். ஒன்று பட்டு வாழ்வது ஒத்துவராது என்று அந்தந்தப் பகுதி மக்கள் கருதிய காரணத்தால் இந்தியா, பிரிவினை என்கிற கசப்பு மருந்தை உண்ண ஒப்புக் கொண்டது. 

ஆனால்,  

எங்கெங்கிருந்தோ மூட்டை முடிச்சுகளுடன் வந்து குவிந்த யூதர்களுக்கு ஏற்கனவே இருந்த பாலஸ்தீனத்தைப் பங்கு போட்டுப் பிரித்துக் கொடுத்தது பிரிட்டன். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை பங்காளிகளுக்கிடையே ஏற்பட்ட பாகப்பிரிவினை என்று நாம் ஒப்பிட்டால் பாலஸ்தீனம் பிரிக்கப்பட்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டதை , வாங்காத கடனுக்காக ஒரு வீட்டை , ஆமைபோலப் புகுந்த ஐ. நா., அமீனாவாகி ஜப்தி செய்தததற்கு ஒப்பிடலாம். ஒன்று பிரிக்கப்பட்டது மற்றது திணிக்கப்பட்டது. 

இல்லாத நாட்டை உருவாக்கும் இழி செயலை நியாயப்படுத்த ஏற்கனவே ஐரோப்பா முதலிய நாடுகளில் சுக வாழ்வு வாழ்ந்து சுகித்துக் கொண்டிருந்த யூதர்களை எல்லாம் இஸ்ரேல் நாட்டுக்கு பயணச்சீட்டுப் போட்டுக் கொடுத்து வரவழைத்து கூட்டத்தைத் திரட்டினார்கள். 

பாலஸ்தீனம் எவ்வாறு பிரிக்கப்பட்டது? 

ஐ . நா அறிவித்த திட்டப்படி பாலஸ்தீனம் இரண்டாகப் பிரிக்கப்படும். ஒரு பகுதி இனி இஸ்ரேல் என்று அழைக்கப்படும். மற்றொரு பகுதி பாலஸ்தீன் என்ற நிகழும் பெயரிலேயே நின்று நிலவும். இரு பகுதிகளிலும் அரபு இனத்தவர்களும் யூதர்களும் வசிப்பார்கள். 

ஜெருசலம் என்கிற அந்த புனிதப் பகுதியில் அதிகமதிகம் அராபிய கிருத்தவர்கள் வசித்து வந்தாலும் இப்போது அமையப்பெற்ற அரசியலமைப்பில் அராபிய கிருத்துவர்களுக்கென்று இன்னொரு இடம் அல்லது நாடு தனியாக ஒதுக்கப்படாததாலும் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் ஜெருசலம் ஒரு புனிதமான இடம் என்பதாலும் ஜெருசலமும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஐ நா சபையின் கண்காணிப்பிலும் பாதுகாப்பிலும் இருக்கும்.

ஆக, பாலஸ்தீன் என்கிற புனித பூமியை என்கிற ஆப்பத்தை ஐ. நா குரங்குகள், வல்லரசு வல்லூறுகளின் துணையோடு மூன்று நிலைகளாகப் பங்கு வைத்தன. இதனால்தான் இன்றைய வழக்குகளும் வடிக்கப்படும் இரத்தமும் .

இந்தப் பிரிவினைத் திட்டம் வெளியான அன்றிரவே பாலஸ்தீன அரபுகள் கைகளில் கிடைத்த ஆயுதங்களை எல்லாம் தூக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த ஆயுதங்கள் துப்பாக்கிகள்தான் என்று இல்லை. தங்களின் தோட்டங்களில் கிடந்த ஆலிவ் மரத்தின் கிளைகளைக் கூட கரங்களில் தூக்கிக் கொண்டு தெருவுக்கு வந்துவிட்டார்கள் என்று ஒரு குறிப்புக் கூறுகிறது. தங்கள் தேசத்தின் மண்ணை அள்ளித் தலைகளில் போட்டுக் கொண்டு கதறினார்கள். நெஞ்சில் அடித்துக் கொண்டு அலறினார்கள். அரபியர்களின் இந்தக் கதறலும் கண்ணீரும் காலம் கடந்தவை என்பதை இந்தத் தொடரைப் படித்துவரும் நண்பர்கள் புரிந்து கொள்ளலாம். 

அரபுகளைப் பொறுத்தவரை விதைக்கின்ற காலத்தில் வீணே ஊர் சுற்றிவிட்டு அறுவடைக் காலத்தில் அரிவாளை எடுத்துக் கொண்டு வயல்வெளிக்குப் போனவனின் கதியில்தான் நின்றார்கள். தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது இனி ஜான் என்ன முழம் என்ன?

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே! அவர் சிந்தையில் ஆயிரம் சிறப்புகள் சேர்ந்து சிறந்ததும் இந்நாடே! ஹஜரத் உமர் ( ரலி ) அவர்களின் காலத்தில் அல்லாஹ்வின் போர்வாள் என்று அழைக்கப்பட்ட காலித் பின் வலீத் (ரலி) மற்றும் அபூஉபைதா (ரலி ) ஆகியோரின் வீரத்தின் வித்தாக வென்றெடுக்கப்பட்டதும் இந்நாடே! சன்மார்க்கப் பிரியர் சலாஹுதீன் அய்யூபி ( ரஹ் ) அவர்களால் மீட்டெடுக்கப்பட்டதும் இந்நாடே! 

ஊணுடம்பு மக்காத உயர்ந்த நபிமார்களின் உடல்கள் உறங்குவதும் இந்நாட்டிலே! தேன் சுனை நீர்வளமும் திசைதோறும் மலைவளமும் கால்படும் இடமெல்லாம் இடறிவிடும் திராட்சைக் கொடிவளமும் கண்டவர்கள் யாவரும் மயங்கும் காட்சிகளும் கொண்டதும் இந்நாடே! இந்த நாட்டை எம்மைக் கேட்காமலேயே எம்மிடமிருந்து பறித்துப் பங்கு வைத்த பாவிகளை கண்டதும் வெட்டக் காலம்கடந்து திரண்டனர் அரபிகள்.  

அரபுநாடுகளின் கூட்டமைப்பு ஒன்று கூடி கஹ்வா குடித்துவிட்டு ஒரு கண்டனத் தீர்மானத்தை இயற்றியது. ஐ. நா சபையோ யார் வீட்டுத் தோட்டத்துக்கோ யாரெல்லாரையெல்லாம்     சொந்தக்காரனாக்கிவிட்டு தனது பொதுச் சபையில் ஒப்புக்காக ஒரு தீர்மானத்தை முன்வைத்தது. தீர்மானத்தை முப்பத்து மூன்று நாடுகள் ஆதரித்து ஜால்ரா அடித்தன. தீர்மானத்தை எதிர்த்து அரபுநாடுகளும் , இந்தியா, துருக்கி, கியூபா உட்பட்ட சில நாடுகள் மட்டுமே  எதிர்த்தன. புதிதாக உருவாகி இருந்த பாகிஸ்தானும் தீர்மானத்தை எதிர்த்தது. தீர்மானம் நிறைவேறியது. 

தீர்மானத்தை ஆதரித்த நாடுகளின் பட்டியலையும் தீர்மானத்தை எதிர்த்த நாடுகளின் பட்டியலையும் பார்த்தால் எண்ணிக்கையில் மட்டுமல்ல வலிமையிலும் வளத்திலும் தங்களை வளர்த்துக் கொண்ட நாடுகள் இஸ்ரேலின் பிறப்பை ஆதரித்து தோரணம் கட்டி கேக் வெட்டிக் கொண்டாடின என்பதைக் காண முடியும். . அன்றைய நாட்களில் தங்களின் சொந்த நாடுகளில் அடித்த அரசியல் புயலையே தாக்குப் பிடிக்க இயலாத நோஞ்சான் நாடுகளே இஸ்ரேலை அங்கீகரிக்க மறுத்தன. உதாரணமாக, இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரிட்டனைப் பின் தள்ளி வல்லரசுகளாக உருவெடுத்த அமெரிக்காவும் சோவியத் யூனியனும் இஸ்ரேலை ஆசீர்வதித்தன. அதே போல வலிமை வாய்ந்த பிரான்ஸ், நியூசிலாந்து , ஸ்வீடன், போலந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளும் ஆதரித்த நாடுகளில் அடங்கும். 

அன்றைய நாட்களில் அவித்துத் தின்ன நிலக்கடலை கூட கிடைக்காத அரபு நாடுகளும் , ஆப்கானிஸ்தான் போன்ற பட்டியலில் மட்டுமே பெயர் உள்ள நாடுகளும் , நாட்டுப் பிரிவினையால் வகுப்புக் கலவரங்கள் மற்றும் சமஸ்தான இணைப்புப் பிரச்னைகளில் மூழ்கிக் கிடந்த இந்தியா , பாகிஸ்தான் போன்ற நாடுகள் மட்டுமே இஸ்ரேலை எதிர்த்தன. ஆகவே வலிமைவாய்ந்த அணிகளின் ஆதரவுடன் இஸ்ரேல் தோள் தட்டியது; பாலஸ்தீனம் துவண்டு போனது. 

பாலஸ்தீனத்தின் எல்லைகளில் இருந்த ஜோர்டான், எகிப்து, சிரியா, லெபனான் முதலிய நாடுகளில் இருந்து பெயரளவுக்கு சில வீரர்கள் உதவிக்கு வந்தார்கள் . ஈராக் முதலிய நாடுகளில் இருந்தும் சிலநூறு வீரர்கள் வந்தார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இவர்கள் அனைவருடனும் இணைந்து இஸ்ரேல் பிறந்த அன்றே பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கென்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பெரிய கலவரத்தில் ஈடுபட்டார்கள். மீண்டும் யூதர்களின் பிணங்கள் குவிய ஆரம்பித்தன. 

இப்படிக் கலவரத்தில் ஈடுபட்டு யூதர்களைத் தாக்கினால் அவர்கள் பயந்து கொண்டு நாட்டைக் காலி செய்துவிட்டு ஓடிவிடுவார்கள் என்று அரபுகளும் பாலஸ்தீனத்து மக்களும் நினைத்து வன்முறை ஆட்டம் ஆடினார்கள். இந்தக் கலவரத்தில், கொல்லப்பட்ட யூத இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் அழவில்லை; நாடு கைவிட்டுப் போகிறதே என்கிற நினைப்பில் கொன்றவர்களும் அழுதார்கள் என்பதுதான் வினோதம்.  கொல்லப்பட்டவர்களுடைய கதறலின் சத்தத்தையும் மீறி, கொல்லத் துணிந்தவர்களுடைய கதறலின் சத்தம்தான் மத்திய தரைக் கடலின் அலைகளிளும் அதைச்சார்ந்த மலைகளிலும் எதிரொலித்தது. 

ஆனால் தங்களின் மீது விழுந்த ஆரம்ப அடிகளை யூதர்கள் தாங்கிக் கொண்டார்கள். அவர்களுக்குத் தெரியும். இன்னும் சில நாட்களில் தங்களுக்கென்று ஒரு அரசியல் அமைப்பு, தனிக் காவல் நிலையம், தனி இராணுவம், தனி நிர்வாகம் என்று ஒரு அமைப்பு ஏற்படத்தான் போகிறது. வல்லரசுகளின் துணை நமக்கு இருக்கிறது. அப்போது வட்டியும் முதலுமாகத் திருப்பி அடிக்கலாமென்ற எண்ணத்தில் தங்களின் நாடு பிறந்த அன்றே தங்களின் மீது விழுந்த பிணங்களை எண்ணிப் பார்த்து ஏற்றுக் கொண்டார்கள். பிறகு யூதர்கள் திருப்பி அடிக்கத் தொடங்கினார்கள். 

இஸ்ரேல் பிறந்த அன்றே தொடங்கிய இந்த சண்டை ஒரு வருடம் நீடித்தது. இறுதியில்   ஐ. நா. தலையீட்டால் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதை உண்மையாக சொல்வதென்றால் ஐ. நா. தலையிட்டதால் என்று சொல்லக் கூடாது; சகோதர அரபு நாடுகள் தலையிடாததால் என்றுதான் சொல்ல வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய அண்டை நாடுகள் ‘செத்த மாட்டில் உன்னி’ இறங்குவதுபோல் பாலஸ்தீன மக்களுக்கான ஆதரவை மனப்பூர்வமாக காட்டாமல் ஒதுங்க ஆரம்பித்தன. 

சவூதி அரேபியா போன்ற சகோதர நாடுகள் அப்போதுதான் தங்களிடம் எண்ணெய் வளம் இருப்பதை நுகர்ந்து கொண்டிருந்தன. இந்த நேரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் வல்லரசுகளை எதிர்த்து நின்றால் அவைகள் தங்களின் அடிமடியில் கையை வைத்துவிட்டால் என்ன செய்வது என்று கண்டனத் தீர்மானம் போடுவதுடன் கடமை முடிந்தது என்று ஒதுங்கி நின்றன. ஆகவே கிட்டத்தட்ட பாலஸ்தீன மக்கள் அரசியல் ரீதியாகவும் மார்க்க ரீதியாகவும் அனாதைகளாக நின்றனர். இஸ்ரேல் இதை நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தது. ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். முஸ்லிம்களின் ஒற்றுமை என்பது மார்க்க ரீதியானது மட்டுமே; அந்த ஒற்றுமை அரசியல் ரீதியானதாக என்றுமே இருந்ததில்லை. 

அதனால்தான் ஐ. நா அறிவித்த போர் நிறுத்த ஒப்பந்தம் கூட பாலஸ்தீன நாட்டை அந்த மக்களிடமிருந்து இன்னும் கூறு போட்டு , அவர்களுக்கு ஆதரவாக போரில் இறங்கிய அரபு நாடுகளுக்கும் பங்கு போட்டுக் கொடுத்தன. அவைகளும் ஹி ஹி என்று இளித்துக் கொண்டு பெற்றுக் கொண்டன. 

எப்படி என்றால் !

பாலஸ்தீனத்தின் மேற்குக்கரை ( West Bank ) என்று அழைக்கப்படும் ஜோர்டான் நதியின் மேற்கு பகுதியை ஜோர்டான் நாட்டுக்கும் கிழக்கில் மத்திய தரைக் கடலை ஒட்டி இருக்கும் காஸா ( Gaza Strip ) என்கிற பகுதியை எகிப்துக்கும் தாரைவார்த்துக் கொடுத்தது ஐ. நா. 

கையறு நிலையில் கதறிய பாலஸ்தீனத்து மக்கள், தங்களின் பூமி இப்படி இஸ்ரேல், ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளால் பங்கு போடப்பட்டு சின்னாபின்னமாக்கபட்டதைப் பார்த்து கண்ணீர் வடிப்பதைத் தவிர வேறு வழி இல்லாமல் நின்றார்கள். எதிரிகள் பறித்துக் கொண்டது பாதி என்றால் கூட இருந்தவன் பறித்துக் கொண்டது மீதி என்ற நிலை ஆகிவிட்டது. 

ஆனாலும் அவர்களின் முன்னாள் ஒரே ஒரு வழிதான் இருந்தது. அதுவே அகதிகளாக தங்களின் பூமியை விட்டு வெளியேறுவது. அப்படித்தான் அரபுலகின் அனைத்து நாடுகளுக்கும் பாலஸ்தீனர்கள் சோகமுகங்களை சுமந்தவண்ணமும் எஞ்சிய துணிகளை அணிந்து மானத்தை மறைத்த வண்ணமும் அகதிகளாகப் போனார்கள். அவர்கள் அதிகம் சென்றது அடுத்த வாசலில்  இருந்த லெபனானுக்குத்தான். 

மீண்டும் 1967-ம் ஆண்டு எகிப்தும் ஜோர்டானும் சிரியாவும் இஸ்ரேலுடன் இன்னொரு போரை நடத்தின. போரின் முடிவு இந்த நாடுகள் படுதோல்வி அடைந்தன என்பது மட்டுமல்ல முன்பு ஐ. நா. பாலஸ்தீனத்திலிருந்து பிரித்துத் தந்த மேற்குக் கரை ஜோர்டானிடமிருந்தும் காஸாப்பகுதி எகிப்து இடமிருந்தும் போரின்மூலம் பிடுங்கப்பட்டு அவை இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டன. இவ்வாறு மேற்குக் கரையும் காஸாத்துண்டும் இஸ்ரேல் உடைய கைகளுக்கு வந்தன. இவற்றில் சில பகுதிகள்தான் இன்று பாலஸ்தீனம் என்று அழைக்கப்படுகிறது. பரிதாபத்துக்குரிய பாலஸ்தீனர்கள் அங்கு தினம் தினம் செத்து செத்துப் பிழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். 

1948-ல் இஸ்ரேலில் 10 லட்சம் யூதர்கள்தான் இருந்தார்கள். இன்று 60 லட்சத்துக்கும் மேல். உலகெங்கிலும் இருந்து யூதர்கள் அங்கு வந்து சேர்ந்துவிட்டனர். இஸ்ரேலில் அவர்கள் வசித்தாலும் வசிக்காவிட்டாலும் அவர்களின் முகவரி அதுதான் என்று ஆகிவிட்டது. 

இதுதான் ஒரு முகவரி இல்லாத இனம் முகவரியைத் தேடிக் கொண்டதும் ஒரு அகவரியும் முகவரியும் பெற்று ஆண்டுகொண்டிருந்த சமுதாயம் அனைத்தையும் இழந்த கதையும். இதுதான் ஒரு பூமாலை குரங்குகளின் கைகளில் சிக்கிச் சீரழிந்த கதை. இதுதான் ஒரு புனித பூமி நிராகரிப்போர்களால் இன்று பூட்டப்பட்டுக் கிடக்கும் கதை. 

ஒடுக்கப்பட்டவர்கள் அதோடு ஒதுங்கிப் போகாமல் போராடத் தலைப்பட்ட வரலாறும்- போராட்டங்களும் – இன்றுவரை அவர்கள் படும் அவதிகளும் இரத்தத்தைத் தொட்டு எழுத வேண்டிய வரிகள். இத்தொடரின் இரண்டாம் பகுதியாக விரைவில் காணலாம். இன்ஷா அல்லாஹ். 

அதற்கு முன் பாலஸ்தீனம் பற்றி அகில உலகின் நிலைப்பாடு , ஐ. நா சபையின் நிலைப்பாடு பற்றி மட்டும் அலசும் உலக அரசியல் அரங்குகள் இவ்வுலகைப் படைத்த அல்லாஹ்வின் நிலைப்பாட்டைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டாமா? இந்தக் கூட்டத்தின் ஆட்டம் முடியப் போகும் எச்சரிக்கைகளை ஆராய்ந்து அறியவேண்டாமா? 

இன்ஷா அல்லாஹ் அவற்றைக் குறிப்பிட்டு எழுதி அடுத்த வாரம் இந்தத் தொடரை நிறைவு செய்யலாம்.

இபுராஹிம் அன்சாரி

தலைசிறந்த சமுதாயம் 2

அதிரைநிருபர் பதிப்பகம் | January 30, 2015 | , ,

:::: தொடர் - 8 ::::

உன்னதமான ஒரு தலைமைக்குக் கட்டுப்பட்டதால், சிறப்பான சமுதாயம் ஒன்று உருவாயிற்று என்பதற்கு, நபித்தோழர்கள் சிறந்த முன்மாதிரிகளாவர்.  இஸ்லாமிய வரலாற்றில் அச்சிறந்த சமுதாயத்தின் ஒப்பற்ற நிகழ்வுகள் பதிவு பெற்றுள்ளன.  காரணம், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத் தூதர்களுள் இறுதியானவர்கள் என்பதால், அவர்களின் தூதுச் செய்தியை இவ்வுலகம் உள்ளளவும் எடுத்துக் காட்டவேண்டும் என்ற பொறுப்பைச் சுமந்தவர்கள் அத்தோழர்கள்.  அதனால்தான் ‘சிறந்த முதன்மைச் சமுதாயம்’ என்று மாநபி அவர்களால் மதிப்பளிக்கப் பெற்றார்கள். நபியவர்களின் மாணவர்கள் சீடர்கள் என்ற நிலையில் இருந்தும்கூட, ‘சஹாபா’ (தோழர்கள்) என்று சிறப்பிக்கப்பட்டார்கள்.

“என் சமுதாயத்தவர்களுள் முதன்மைச் சிறப்பைப் பெற்றவர்கள் என் தோழர்கள்; அதற்குப் பின்னர், அடுத்த சமுதாயம்; அதற்குப் பின்னர், அவர்களைத் தொடர்ந்தவர்கள் ஆவர்.  அதன் பின்னர் சிலர் வருவார்கள்.  அவர்கள் உறுதிமொழி எடுப்பதற்கு முன் சான்று பகர்வார்கள்;  சான்று பகர்வதற்கு முன் உறுதிமொழி எடுப்பார்கள்” என்று அருள்மொழி பகர்ந்தார்கள் அண்ணல் நபி நாயகம் (ஸல்).      (நூல்: புகாரீ)

மூன்று சிறந்த சமுதாயங்களுள் முதன்மையான சமுதாயமான நபித்தோழர்களைப் பற்றிய சிறப்பான எடுத்துக்காட்டுகளைப் படம் பிடிப்பது போன்ற தொகுப்பொன்றை ‘ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல்’ எனும் தமது நூலில் அதன் ஆசிரியர் காலித் முஹம்மத் காலித் அவர்கள் கூறுகின்றார்:  

“தம் தலைவரை முழுமையாக நம்பிச் செயல்பட்ட நல்லவர்களான நபித் தோழர்கள் அப்பழுக்கற்ற, தூய்மை மிக்க வரலாற்று நாயகர்கள் ஆவர்.  மனித வரலாற்றின் எந்தப் பதிவும் கண்டிராத, துல்லியமான உண்மை விவரனங்களைத் தந்த அந்த உத்தமத் தோழர்கள் உண்மையான வரலாற்று நாயகர்கள்தாம் என்பதில் ஐயமில்லை.  அத்தகைய உன்னதமான பதிவுகளைத் தருவதற்காக அவர்கள் எடுத்துக்கொண்ட கவனமும் கடும் உழைப்பும் ஈடிணையற்றதாகும்.  அவர்களுக்குப் பின்வந்த சமுதாயத்தினர், அந்தப் பதிவுகளின் நம்பகத் தன்மை மற்றும் மிகச் சிறிய நிகழ்வுகளையும் விடாமல் பதிவு செய்த நேர்த்தி நம்மை வியக்க வைக்கிறது. 

“இறைத் தூதர் (ஸல்) அவர்களின் இணையற்ற தோழர்கள் வெறும் வரலாற்றுப் பதிவுகளாக மட்டுமன்றி, தலைவரை முற்ற முற்றப் பின்பற்றிய முன்மாதிரிகளாகவும் வியக்கத் தக்க விதத்தில் திகழ்கின்றனர்.  அத்தகைய தோழமையின் உண்மைப் பதிவுகள்தாம் இந்நூலின் சிறப்பிற்குச் சான்று பகர்வன.  இந்நூலாசிரியரின் எழுத்துத் திறனுக்கு மதிப்புச் சேர்ப்பனவாக அந்த உண்மை வரலாறுகள் திகழ்கின்றன என்று கூறுவது மிகையாகாது.”

முந்திய இறைத் தூதர்களுக்கு இல்லாத வேறுபட்ட பொறுப்பும் நோக்கும் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இருந்தது.  மற்ற நபிமார்களுக்கு இருந்த பொறுப்போ, அவர்களின் தூதுச் செய்தியை ஏற்றுக்கொள்ளும் கூட்டத்தை உருவாக்குவதாகும்.  ஆனால், இறுதித் தூதரான இந்த நபிக்கோ, கிடைத்த தூதுச் செய்தியைப் பரப்புதல் மட்டுமன்றி, அந்தச் செய்தியை முற்றாகப் பின்பற்றும் சமுதாயம் ஒன்றை உருவாக்கி, அவர்களை உலகம் உள்ளளவும் வரும் மனித சமுதாயத்துக்கு எடுத்துரைக்கும்  உண்மையாளர்களாகத் திகழச் செய்யும் பொறுப்பும் இருந்தது.  அந்தப் பொறுப்புதான், முழு மனித சமுதாயத்துக்கும் மார்க்கத்தை எடுத்துரைக்கும் ‘தஅவா’ எனும் பெரும் பொறுப்பான இறுதித் தூதின் உண்மையாகும்.  சுருங்கக் கூறுமிடத்து, மற்ற இறைத் தூதர்கள் தம்மைப் பின்பற்றுவோரை உருவாக்கினார்கள்.  ஆனால் இறுதித் தூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் அந்தப் பொறுப்பைச் சுமந்த தலைவர்களை உருவாக்கினார்கள்.

அத்தகைய தலைவர்களுள் முதலானவர்தான், அண்ணலின் அருமைத் தோழர் அபூபக்ருஸ் சித்தீக் (ரலி) அவர்கள்.  தம் நேசரான நபியவர்களிடம் எத்தகைய தலைமைத்துவப் பாடத்தைப் படித்தார்கள் என்பதற்கு, நபியின் இறப்பிற்குப் பின்னர் அன்னார் நடந்துகொண்ட முறை மிகச் சிறந்த சான்றாகும்.  இறைத் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாழ்க்கையின்போது தமக்குப் பின் எத்தகைய தலைவர் வரவேண்டும் என்று சூசகமாக உணர்த்திச் சென்றார்கள் என்பதற்கு அந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டாகும்.  தமக்குப் பின் தம் தோழர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன், எவ்வித ஐயத்திற்கும் இடமின்றி அபூபக்ரைத் தேர்ந்தெடுப்பார்கள் என நம்பியிருந்தார்கள்;  அவ்வாறே அம்மக்களும் அபூபக்ரைத் தேர்ந்தெடுத்தார்கள்.  

அந்த நிகழ்வின் மீது ஐயத்தைக் கிளப்புவோர் நபியவர்களின் முழு வாழ்க்கையின் மீதும்  தமது அறியாமையால் பிதற்றத் தொடங்குகின்றனர்.  உண்மையில் நடந்ததென்ன என்பதைக் கீழ்வரும் விவரணத்தால் நாம் அறியலாம்:

“உங்களுக்குத் துன்பம் ஒன்று ஏற்பட்டு, அதனால் உள்ளம் வாடி வருந்துமாயின், அப்போது எனது மரணத்தை மனக்கண் முன் கொண்டுவாருங்கள்.  அதனால் உங்களுக்கு ஏற்பட்ட சோதனை ஒரு துளியளவே எனக் கருதப்படும்” என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அன்னாரின் இறப்பால் தோழர்களுக்கு ஏற்பட்ட துயரத்தை அளவிட்டுக் கூற முடியாது!  

விளைவுகள்...?  அந்த அருள் தூதரின் நெருக்கம் இல்லாமல் போய்விட்டது!  அது மட்டுமா?  இறைவனிடமிருந்து ஜிப்ரீல் கொண்டுவந்த ‘வஹீ’யும் அல்லவா தடைபட்டு நின்றுவிட்டது!  நபியவர்களின் தொடர்பால் கிடைத்துவந்த இறைத் தொடர்பும் இல்லாமலாகிவிட்டது!

அவ்வாண்டின் சஃபர் மாதம் தொடங்கி, அது முடியும் தருவாயில் வந்துவிட்டது.  இறைத் தூதரின் இறப்பு ஊறுதியாகிவிட்டது என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன.  அண்ணலவர்கள் அதற்காகத் தம்மை ஆயத்தம் செய்துகொண்டார்கள்.  குர்ஆனின் சில வசனங்கள் அவர்களின் இறுதிப் பயணத்தை உறுதிப் படுத்தும் வகையில் அமைந்தன.  அன்னாரின் முன்னவர்களான இறைத்தூதர்கள் இறந்தது போன்று முஹம்மத் (ஸல்) அவர்களும் இறப்பார்கள் என்ற செய்தியும் வந்தது!

“(நபியே! முஹம்மதே!)  நீர் இறக்கக் கூடியவரே.  அது போன்று உம்முடைய முன்னவர்களான இறைத் தூதர்களும் இறந்தவர்களே” (39:30) எனும் வசனம் இறங்கி, அன்னாரின் இறப்பை உறுதிப் படுத்திற்று!

“(நபியே!) உமக்கு முன்னரும் எந்த மனிதனுக்கும் நிலையான வாழ்வை நாம் ஏற்படுத்தவில்லை.  ஆகவே நீர் இறந்தால், அவர்கள் மட்டும் என்றென்றும் இருக்கப் போகிறார்களா?  ஒவ்வோர் ஆன்மாவும் இறப்பைச் சுவைப்பதாகவே இருக்கின்றது.  கெடுதியையும் நன்மையையும் கொண்டு தேர்வு செய்வான்வேண்டி, நாம் உங்களைச் சோதனை செய்கின்றோம்.  பின்னர் நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.”  (21:34,35)

இது போன்று நபியவர்களின் இறப்பைச் சூசகமாகச் சுட்டிக்காட்டுவதாக இன்னும் பல வசனங்கள் நபியவர்களின் இறுதிப் பருவத்தின்போது இறங்கின.  இவ்வாறு இறைவன் தன் தூதர்களின் அழைப்புப் பணி முடிவடையும்போது, அவர்களைத் தன்னளவில் அழைத்துக்கொள்வது இறை நியதியாக இருந்துள்ளது.  இறுதித் தூதர் இறப்பைச் சந்தித்துவிட்ட பின்னர் தூதுத்துவத்தின் தொடர்பு நின்றுபோய்விடாது; மாறாக, அப்பொறுப்பு அவரைப் பின்பற்றியவர்களால் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நியதியை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.  அவர்கள் அப்பொறுப்பை நிறைவேற்றும் காலமெல்லாம், இறையுதவி அவர்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும். 

‘ஹஜ்ஜத்துல் விதா’ என்னும் அவர்களின் விடை பெறும் ஹஜ்ஜின்போது அண்ணலார் மிகத் தெளிவாகவே மக்களுக்குத் தமது இறப்பைப் பற்றி அறிவித்துவிட்டார்கள்.  

“என்னருமைத் தோழர்களே!  ஹஜ்ஜின் செயல்பாடுகளை நான் செய்வது போன்றே நீங்கள் செய்யுங்கள்.  ஏனெனில், அடுத்த ஆண்டு ஹஜ்ஜின்போது நான் ஹஜ்ஜுக்கு வருவேனா என்பது எனக்குத் தெரியாது” என்றார்கள்.

முஆது பின் ஜபல் (ரலி) என்ற நபித் தோழரை யமன் நாட்டிற்கு அனுப்பியபோது, “முஆதே!  நீர் அங்கிருந்து திரும்பி வரும்போது என்னைக் கண்டுகொள்ள மாட்டீர்.  எனது மண்ணறையையும் இந்த மஸ்ஜிதையும்தான் காண்பீர்” என்று கூறினார்கள்!  அதைக் கேட்டு அந்தத் தோழர் ஆற்றாமையால் அழுதார்கள்!

அதே பருவத்தின்போது, “இறைச் செய்தியைக் கொண்டுவரும் ஜிப்ரீல் எப்போதும் ஒவ்வொரு முறைதான் ஓதிக் காட்டுவது வழக்கம்.  ஆனால், இந்த வருடம் இரண்டிரண்டு தடவை எனக்கு ஓதிக் காட்டி, அவற்றை உறுதிப் படுத்தினார்கள்” என்று நபியவர்கள் கூறினார்கள். 

ஒரு நாள் இரவின் இறுதியில் நபி (ஸல்) அவர்கள் தம் பணியாளரான அபூ முவைஹிபா என்பவரை எழுப்பி, “இறந்தவர்கள் அடக்கப்பட்ட ‘ஜன்னத்துல் பகீ’ என்ற அடக்கவிடத்திற்குச் சென்று, அங்குப் புதைக்கப்பட்டவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு கட்டளை இடப்பட்டுள்ளேன்” என்று கூறி, அவருடன் அங்கு சென்றார்கள்.  அவ்விடத்தில் சென்று, “கப்ரில் அடங்கியுள்ளவர்களே!  உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும்.  இப்போது உள்ள மக்கள் நுகரும் வேதனையைப் போன்று நீங்கள் நுகரவில்லை என்பதையிட்டு, உங்களுக்கு நற்செய்தி கூறுகின்றேன்.  இப்போது உள்ளவர்களுக்குச் சோதனையும் வேதனையும் புயலைப் போல் வந்துகொண் டிருக்கின்றன” என்று கூறிவிட்டு, அபூ முவைஹிபாவைப் பார்த்துக் கூறினார்கள்:  “நான் இவ்வுலகின் செல்வங்களையும் சொத்து சுகங்களையும் கொடுக்கப்பட்டு, உலக முடிவு வரை வாழ்வதற்குமான தெரிந்தெடுப்பை வழங்கப்பட்டேன்;  எனினும், நான் இப்போதே இறந்து, என் இரட்சகனைச் சந்திக்கும் நல்வாய்ப்பைத் தெரிவு செய்துவிட்டேன்.”  

பின்னர் அந்த மண்ணறை வாசிகளை நோக்கி, அவர்களுக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள்.  அதன் பின்னர் தமது இல்லத்திற்குச் சென்றார்கள்.  வீட்டைச் சென்றடைந்தபோது, அவர்களின் இறப்பிற்கான இறுதி நோய் தொடங்கிவிட்டிருந்தது!  

அன்னை ஆயிஷாவின் வீட்டிற்கு வந்து, அன்னையின் மடியில் பெருமானார் (ஸல்) அவர்களைக் கிடத்தியபோது, “ஆஹ்!  ஆஹ்!  என் தலையே!” என்று தம் தலைவலியைப் பற்றி ஆயிஷா (ரலி) முறையிட்டபோது, நபியவர்கள், “இல்லையில்லை. என் தலைதான் கனக்கிறது!  ஆயிஷா!  எனக்கு முன்னால் நீ இறந்தால், நானே உன்னைக் குளிப்பாட்டிக் கஃபனிட்டு, நானே உனக்குத் தொழுகையும் நடத்துவேன்.  உனக்கான இறுதிக் கடமைகளையும் நிறைவேற்றுவேன்” எனக் கூறினார்கள்.

அதற்கு அன்னையார் அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் அவர்களே, நான் இறந்து போனால், உங்களுக்கு மற்ற மனைவிகள் இருக்கின்றார்கள்.  அவர்கள் உங்களுக்குப் பணிவிடை செய்வார்கள்.  ஆகவே, நான் இறந்து போவதே மேல்” என்று கூறினார்.

இறைத்தூதர் அவர்களுக்குத் தலைவலி கூடிக்கொண்டே சென்றது.  காய்ச்சலும் கடுமையானது.  தோழர் ஒருவர் அண்ணலாரின் மேல் கை வைத்துப் பார்த்து, உடன் அகற்றிக்கொண்டார்.  அவ்வளவு சூடு!  “என் கையைத் தொடர்ந்து வைக்க முடியாத அளவுக்கு  உங்கள் ஜுரம் மிகக் கடுமையாக இருக்கின்றது!” என்றார் அத்தோழர். 

“ஆம்.  இறைத் தூதர்களான எங்களுக்கு, மற்றவர்களைவிட வேதனை இரு மடங்காகும்.” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  நபியவர்களின் அன்றைய முறை, அன்னை மைமூனா (ரலி) வின் வீட்டில் இருந்ததால், ஜுரம் சற்றுக் குறைந்தபோது, அவர்கள் எழுந்து மைமூனாவின் வீட்டிற்குச் சென்றார்கள்.  சிறிது நேரத்தில் அவர்களுக்குக் காய்ச்சல் மீண்டும் கூடிற்று.  ஆகவே, தம் மனைவியரை ஆயிஷாவின் வீட்டிற்கு வரும்படிக் கூறிவிட்டு, அங்கே சென்றார்கள்.  மற்ற மனைவியர் அனைவரும் ஆயிஷாவின் வீட்டிற்கு வந்து பணிவிடை செய்ய அனுமதி பெற்றுக்கொண்டு அங்கே சென்றார்கள்.  அன்னாரின் தலை, துணியால் இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தது.  நபியவர்களின் ஒரு பக்கத்தில் மருமகன் அலீ (ரலி) அவர்களும், அடுத்த பக்கம் அப்பாஸ் (ரலி) அவர்களும் தாங்கிப் பிடித்திருந்தார்கள்.

பின்னர், மதீனாவின் ஏழு கிணறுகளிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து அண்ணலாரின் மீது ஊற்றினார்கள்.  அதனால், ஜுரம் தணிந்தது.  அப்போது அலீ (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களின் மகன்களுள்  ஒருவரும் தாங்கிப் பிடித்திருக்க, ‘மஸ்ஜித் நபவி’யின் பக்கம் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.  பின்னர் பிரசங்க மேடையில் ஏறி, மக்களுக்கு உபதேசம் செய்யலானார்கள்.  அதில், உஹதுப் போரில் உயிர்நீத்த  தோழர்களுக்காக அவர்கள் துஆ செய்தார்கள்.  பெருமானார் (ஸல்) தம் தோழர்கள் மீது அளவு கடந்த பற்றும் பாசமும் கொண்டிருந்தார்கள்.  அத்துணைப் பற்றும் பாசமும் தம் தோழர்கள் மீது வைத்திருந்ததற்குக் காரணம், தமக்குப் பின் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்கிவிட்டுச் செல்ல வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருந்ததுதான்.

மக்காவிலிருந்து ‘ஹிஜ்ரத்’ செய்து வந்த ‘முஹாஜிரீன்’களைப் பார்த்துக் கூறினார்கள்:  “என் அருமை ‘முஹாஜிரீன்’களே!  நீங்கள் எண்ணிக்கையில் கூடிக்கொண்டு வருகின்றீர்கள்.  ஆனால், என்னருமை ‘அன்சார்’களான இந்த மண்ணின் மைந்தர்கள் குறைந்துகொண்டே வருகின்றனர்.  ஆகவே, அவர்களை கண்ணியப் படுத்துங்கள்.  முதலில் அவர்கள்தாம் ஆதரவு வழங்கினர்.  அவர்களின் குறைகளைப் பெரிது படுத்தாமல், அவர்களை மன்னித்துவிடுங்கள்.  மக்களே!  உஸாமாவின் தலைமையில் செல்ல இருக்கும் படைக்கு வலுச் சேருங்கள்.  அவரின் தலைமையை ஏற்காமல் புரட்சி செய்யும் நீங்கள்தாம் முன்னர் அவருடைய தந்தை ஜெய்தின் தலைமையையும் எதிர்த்தீர்கள்.  ஜெய்து எவ்வாறு படைத் தளபதியாகப் பொருத்தமாக இருந்து வீரதீரச் செயல்கள் செய்து தனது பொறுப்பை நிறைவேற்றினாரோ, அது போன்று அவர் மகனும் செய்வார் என்ற நம்பிக்கை எனக்குண்டு.”

அதன்பின் சற்று நேரம் அமைதியானார்கள்.  சுற்றி இருந்தவர்களிடமும் அமைதி நிலவியது.  பின்னர் அண்ணல் நபியவர்கள் பேசத் தொடங்கினார்கள்:  “அடியார் ஒருவருக்கு இவ்வுலகும் இதன் வசதிகளும், மறுமையின் அழியாப் பேரின்பமும் அதன் நல்வாழ்வும் தேர்ந்தெடுப்பாகக் கொடுக்கப்பட்டது.  அவ்வடியார் அழியாத மறுமை வாழ்வைத் தேர்ந்தெடுத்தார்.”

இதைக் கேட்டவுடன், அண்ணலாரின் அருமைத் தோழர் அபூபக்ர் (ரலி) அவர்கள் அழத் தொடங்கினார்கள்.  மக்களுக்கு இது புரியாப் புதிராக இருந்தது. நபித்தோழர்கள், “யா ரசூலுல்லாஹ்!  நாங்களும் எங்கள் சந்ததிகளும் உங்களுக்கு அற்பணமாகட்டும்” என்றார்கள்.  அப்போது நபியவர்கள் இடைமறித்து, “நட்பாலும் தியாகத்தாலும் எனக்குப் பேருதவியாக இருந்தவர் இந்த அபூபக்ர்தான்.  அல்லாஹ்வையன்றி நான் யாரையும் தோழனாக எடுத்துக்கொள்வதாக இருந்தால், அபூபக்ரைத்தான் தேர்ந்தெடுப்பேன்.  நான் அல்லாஹ்வின் நேசன் (கலீல்).  அபூபக்ர் என் தோழர்.  இந்தப் பள்ளியின் அனைத்து வாசல்களையும் அடைத்துவிடுங்கள்;  அபூபக்ரின் வாசலைத் தவிர. 

“அல்லாஹ் யூத கிருஸ்தவர்களைச் சபிப்பானாக!  அவர்கள் தமக்கு அனுப்பப்பட்ட நபிமார்களைக்  கடவுள்களாக ஆக்கினர்.  அரபுத் தீபகற்பத்தில் இஸ்லாமைத் தவிர வேறு எந்த மதமும் இருக்கக் கூடாது.  தொழுகையைக் கடைப்பிடியுங்கள்.  உங்கள் பாதுகாப்பில் இருப்பவர்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.  உங்கள் பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.  உஸாமாவின் தலைமையிலான படையை இப்போதே அனுப்புங்கள்” என்றார்கள்.

நபியவர்கள் அன்று கூட்டுத் தொழுகை தொழச் செல்லவில்லை. “அபூபக்ரை இமாமாக நிறுத்தித் தொழச் செய்யுங்கள்” என்று கட்டளையிட்டார்கள்.  தம் தந்தை இளகிய உள்ளம் படைத்தவர் என்பதால், தொழுகையின்போது ஏதேனும் அசம்பாவிதம் நிகழ வாய்ப்புண்டு என்றெண்ணி, ஆயிஷா (ரலி) எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.  தம்முடைய இயலாமையையும் பொருட்படுத்தாமல், ஆயிஷாவின் மீது சினங்கொண்டு, “நீங்களெல்லாம் நபி யூசுபின் பெண்ணினத்தார்தாமே” என்று இடித்துரைத்தார்கள்.  பிற்காலத்தில் தமது மறுப்புரைக்குக் காரணம் கூற விரும்பிய அன்னை ஆயிஷா அவர்கள்,”அல்லாஹ்வின் தூதர் நின்று தொழுத இடத்தில் மற்றொருவர் தொழுகையின் இமாமாக நின்று நடத்துவதை மக்கள் விரும்ப மாட்டார்கள்;  அதனால்தான் நான் மறுப்புத் தெரிவித்தேன்” என்று கூறினார்கள்.

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முந்திய இந்த நிகழ்வு எழுத்தளவில் இருக்கவில்லை.  இருப்பினும், பொதுமக்களின் புரிந்துணர்வால் அது நடைமுறைப் படுத்தப்பட்டது.  இன்றும்கூட அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருக்கும் பழங்குடியினர் இடையே எழுத்தளவில் இல்லாமல், தலைவரின் வாய்மொழிக் கட்டளையே போதுமாக இருக்கின்றது.  ஒருவரைத் தலைவராக ஏற்றுக்கொண்ட பின்னர், அவருடைய கட்டளையே சட்டமாக அங்கு மதிக்கப்படுகின்றது.  இதைவிட உயர்ந்த நிலையில்தான், அன்று ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் நபியின் வாக்கை மக்கள் சட்டமாக ஏற்றுக்கொண்டனர்.  அவ்வடிப்படையில்தான் நபியின் பிரதிநிதித் தேர்வும் நடந்தது.

நபியின் பிரதிநிதித் தேர்வை எதிர்த்தவர்கள் ‘முனாஃபிக்கீன்’ என்ற நயவஞ்சகர்கள்தாம்.  அவர்கள் முஸ்லிம்களைப் போன்று வெளிப்படையாக நடித்து, இதயங்களில் நபிக்கு எதிரான கொள்கையைக் கொண்டவர்கள்.  இவர்களை அல்லாஹ் இறைமறுப்பாளர்களைவிட மோசமாகக் கடிந்துரைக்கின்றான்.  நபியின் இறப்பிற்குப் பின்னர் அவரது பிரதிநிதியாக வருவதற்கு, அவருடைய நெருங்கிய உறவினர்தான் தகுதியானவர்கள் என்ற கொள்கையை எடுத்து வைத்து, இஸ்லாமிய உம்மத்தில் பிளவை ஏற்படுத்தியவர்கள் இவர்கள்தாம்.  அன்றிருந்த நபித்தோழர்கள் தம் தலைவருக்குக் கட்டுப்படும் விஷயத்தில் மிக உயர்ந்திருந்தார்கள்.  அதனால், அண்ணலாரின் பிரதிநிதியாக அபூபக்ரை ஏற்றுக்கொண்டார்கள்.

அண்ணலார் (ஸல்) விரும்பியிருந்தால், தமது கட்டளையை எழுத்து வடிவில் அமைத்திருக்கலாம்.  ஆனால், அவர்களுக்குத் தெரியும், தாமும் தம் தோழர்களும் அபூபக்ரை எவ்வளவு உயர்ந்த நிலையில் வைத்திருந்தார்கள் என்று.  பல சூழ்நிலைகளின்போது நபியவர்கள் அபூபக்ருக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது மக்கள் அனைவருக்கும் தெரியும்.  முஹம்மது நபிக்குப் பின் வேறு நபியில்லை;  நபியின் பிரதிநிதிதான் ஆட்சிப் பொறுப்புக்கு உரித்தானவர் என்பதை உண்மை என்று உள்வாங்கியவர்கள் நபித்தோழர்கள்.

தமக்குப் பின் இஸ்லாமிய அரசை நடாத்திச் செல்வதற்கு முழுத் தகுதி பெற்றவர் அபூபக்ர் என்ற முதன்மைத் தோழர்தான் என்பதைப் பல நிகழ்வுகளின்போது சூசகமாக மக்களுக்கு நபியவர்கள் உணர்த்தியிருந்தார்கள்.  அதனால், அபூபக்ரை நபியின் பிரதிநிதியாக ஏற்றுக்கொள்வதில் பொதுமக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை.

ஹுதைபிய்யா உடன்படிக்கையின்போது தமக்கு இருந்த ஆட்சேபனையை நபியிடம் தெரிவிக்க உமர் (ரலி) அவர்கள் யாரிடம் சென்றார்கள்?  அபூபக்ர் (ரலி) அவர்களையே தேர்ந்தெடுத்து, அவர்கள் மூலம் நபியவர்களிடம் தெரிவிக்கச் செய்தார்கள்.  

பெண்ணொருவர் நபியவர்களிடம் எழுப்பிய கேள்விக்கு, “நாளை வாருங்கள்” என்றார்கள்.  அதற்கு அந்தப் பெண், “நீங்கள் இல்லாவிட்டால் நான் யாரிடம் கேட்பது?” என்றபோது, “அபூபக்ரிடம்” என்றார்கள்.  பின்னர் அப்பெண், “அபூபக்ர் இல்லாவிட்டால்...?” என்றபோது, “உமரிடம்” என்றார்களே.  இதுதான் இஸ்லாமிய அடிப்படையில் தலைமைத் தேர்வாகும்.

அண்ணலார் (ஸல்) அவர்கள் கடுமையாக நோயுற்றது வியாழக்கிழமை.  அவர்கள் இறந்துபோனதோ, திங்கள் கிழமை முற்பகலில்.  அவர்கள் விரும்பியிருந்தால், இடைப்பட்ட அந்த நான்கைந்து நாள்களில் அலீ (ரலி) அவர்களையோ, வேறு ஒருவரையோ கலீஃபாவாக இருக்கட்டும் என்று கூறியிருக்கலாம்.  ஆனால், அவ்வாறு செய்யவில்லை.  காரணம், அவர்கள் இறைக் கட்டளையினால் வழிநடத்தப்பட்டார்கள். 

அந்த இறுதி நாள்களின்போது ஒரு தொழுகைக்கு, அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகை நடத்த வருவதற்குத் தாமதமாயிற்று.  தொழுகை அழைப்பாளர், உமர் (ரலி) அவர்களை இமாமாக நிற்கச் சொன்னார்.  தொழுகையில் உமரின் குரலைக் கேட்ட நபியவர்கள், மக்கள் தமக்குப் பின் அபூபக்ர்தான் கலீஃபா என்ற தமது கட்டளையை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தார்கள்.  அல்லாஹ்வின் தூதரவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைத் தமது கலீஃபாவாகத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்கான தெளிவான சன்றாகும் இது.

திங்கள் கிழமை அன்று மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை இமாமாகக் கொண்டு கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டிருந்தார்கள்.  அண்ணலார் (ஸல்) அவர்கள் தமது வீட்டுத் திரையை நீக்கி மஸ்ஜிதைப் பார்த்தார்கள்.  மக்கள் அபூபக்ரை இமாமாகக் கொண்டு தொழுகிறார்கள் என்பதைக் கண்டு மன அமைதி பெற்றார்கள். 

சற்று நேரத்திற்குப் பின், அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள் ஒரு புறமும் ஃபழ்ல் இப்னு அப்பாஸ் (ரலி) ஒரு புறமும் தம்மைத் தாங்கிய நிலையில் மஸ்ஜிதிற்குள் நபியவர்கள் வந்தார்கள்.  தொழுதுகொண்டிருந்த தோழர்களுக்கிடையில் சிறிய சலசலப்பு ஏற்பட்டது.  அது இறைத் தூதரின் வருகையால் ஏற்பட்ட சலசலப்புதான் என்றுணர்ந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் சற்றே பின்வாங்கினார்கள்.  அதற்குப் பெருமானார் (ஸல்) அவர்கள், தொழுகையைத் தொடருமாறு கூறிவிட்டு, அபூபக்ருக்கு அருகில் அமர்ந்து தமது தொழுகையை நிறைவேற்றினார்கள்.  

தொழுது முடித்த பின், மக்களைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்கள்:  “மக்களே!  கரும் புகை போன்று இஸ்லாத்திற்கு எதிரான சோதனைச் சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன!  அதில் மாட்டிக்கொள்பவர்களுக்காக நரகம் ஆயத்தப் படுத்தப்பட்டு இருக்கின்றது!  ஆனால், இனிமேல் அதற்கு நான் பொறுப்பாளியாக இருக்க மாட்டேன். குர்ஆனின் கட்டளைகளுள் எந்த ஒன்றையும் நடைமுறைப் படுத்தாமல் நான் இருந்ததில்லை.   அது போன்றே, இறைவன் தடுத்த எந்த ஒன்றையும் நான் தடுக்காமல் இருந்ததில்லை.  மன்னறைகளைத் தமது வணக்கத் தலங்களாக ஆக்கிக்கொண்டவர்களை அல்லாஹ் சபிப்பானாக!”

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது உடல் நலக் குறைவிலிருந்து மீண்டுள்ளார்கள் என்பதைக் கண்டு மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள்.  இளைஞர் உஸாமா (ரலி) அவர்கள் புனிதப் போருக்குச் செல்ல நபியவர்களிடம் இறுதி அனுமதியை வேண்டி நின்றார். 

அபூபக்ர் (ரலி) அவர்கள், “யா ரசூலில்லாஹ், தங்களுக்கு அல்லாஹ் இப்போது உடல் நலத்தைக் கொடுத்துவிட்டான்.   நாமனைவரும் ஒன்றாகத் தொழுதும் உள்ளோம்.  காரிஜாவின் மகளான என் மனைவியிடமிருந்து கோரிக்கை ஒன்று வந்துள்ளது.  அதன்படி, இன்றையப் பகலை அவருடைய வீட்டில் கழிக்கவேண்டும் என்பதே அக்கோரிக்கை.  எனக்கு அதற்கான அனுமதியைத் தருவீர்களா?”  என்று கேட்டு நின்றார்கள்.  அண்ணலவர்களும் அதற்கான அனுமதியை வழங்கினார்கள்.  உமரும் அலீயும் தம் பணிகளைத் தொடர அனுமதி பெற்றுச் சென்றுவிட்டார்கள். அண்ணலவர்களும் மனைவி ஆயிஷாவின் வீட்டுக்குத் திரும்பினார்கள். 

ஆயிஷாவின் சகோதரரான அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்கள் நபி அவர்களின் சுகம் விசாரிப்பதற்காக அங்கு வந்து சேர்ந்தார்கள்.  அவருடைய கையில் பல் துலக்கும் குச்சியொன்று இருந்தது.  அண்ணலவர்களின் பார்வை அதன் மீதே இருந்தது.  அதைக் கவனித்த ஆயிஷா (ரலி) அவர்கள் தம் சகோதரரிடமிருந்து அக்குச்சியை வாங்கி, அதைத் தம் பற்களால் நளினப் படுத்தி, அண்ணலாரிடம் கொடுத்தார்கள்.  அண்ணலாரும் அதை வாங்கிப் பல் துலக்கத் தொடங்கினார்கள்.  அன்னை ஆயிஷா (ரலி)  அவர்கள் குர்ஆனின் 113, 114 ஆவது அத்தியாயங்களை ஓதி, அண்ணலவர்களின் கைகளில் ஊதி, அக்கைகளை அண்ணலாரின் உடம்பின் மீது தடவிக்கொள்ள உதவினார்கள். 

சற்று நேரத்தில் அண்ணலாரின் உடல் நிலை மோசமடைந்தது.  அருகிலிருந்த தண்ணீர்ப் பாத்திரத்தில் கையை விட்டுத் தம் முகத்தில் தடவினார்கள்.  “மரண வேதனை என்பது உண்மைதான்” என்றும் அடிக்கடிக் கூறினார்கள்.  

இறைத்தூதரின் இறுதி நேரம் நெருங்கிற்று!  அன்னை ஆயிஷாவின் அறிவிப்பின்படி, “அண்ணலவர்கள் அடிக்கடி வானத்தைப் பார்த்தபடி, “மேலான தோழனாகிய அல்லாஹ்வின் பக்கம்” என்று மும்முறை கூறினார்கள்.  நான் நினைத்தேன், உயிரை வாங்கும் மலக்குல் மவ்த் வந்துவிட்டார் என்று.  நான் அவர்களிடம் எம்முடன் இருப்பதைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டேன்.  ஆனால், அவர்கள் அல்லாஹ்விடம் செல்வதையே தேர்ந்தெடுத்தார்கள்.  அவர்களின் தலை என் பக்கம் சரிந்தபோது, நான் வீறிட்டு அழுதுவிட்டேன்!”

இறுதித் தூதர் இறந்துவிட்டார்கள் என்ற செய்தி மதீனாவின் மூலை முடுக்கெல்லாம் பரவி, மக்கள் அனைவரும் பள்ளியில் கூடத் தொடங்கினார்கள்.  முதலில் உமர் (ரலி) அவர்களும் முகீரா (ரலி) அவர்களும் உள்ளே நுழைந்தார்கள்.  “அண்ணலார் உணர்வை இழந்துள்ளார்கள்; இறக்கவில்லை” என்றார்கள் உமர் (ரலி).  “இல்லை.  அவர்கள் இறந்துவிட்டார்கள்” என்றார்கள் முகீரா (ரலி).  

“நீர் குழப்பத்தை விளைக்கும் மனிதர்.  இந்த நாட்டில் இருக்கும் நயவஞ்சகர்களைக் களையெடுக்கும் வரை அவர்கள் இறக்கப் போவதில்லை.  நபி மூஸா (அலை) அவர்கள் தம் இறுதி நேரத்தில் நினைவிழந்தது போன்று, இவர்களும் நினைவிழந்துள்ளார்கள்.  யாரேனும் நபியவர்கள் இறந்து போனார்கள் என்று சொன்னால், எனது வாளால் அவர் தலையைக் கொய்துவிடுவேன்” என்று ஆவேசத்துடன் கூறினார்கள் உமர் (ரலி) அவர்கள். 

மதீனாவின் ‘சுன்ஹ்’ என்ற புறநகர்ப் பகுதியில் வசித்த அபூபக்ர் (ரலி) அவர்களுக்குச் செய்தி எட்டியது.  அதிர்ச்சியோடு மஸ்ஜிதுன் நபிக்கு விரைந்தார்கள்.  யாருடனும் பேசாமல், பள்ளியை ஒட்டியிருந்த ஆயிஷாவின் வீட்டினுள் நுழைந்தார்கள்.  அங்குதான் அண்ணலவர்கள் கிடத்தப்பட்டிருந்தார்கள்.  முஹம்மத் (ஸல்) அவர்களின் முகத்தை மூடியிருந்த துணியை நீக்கிப் பார்த்தார்கள்.  அன்னாரின் முகத்தில் முத்தமிட்டுவிட்டு, அழுதவர்களாக, “உலகில் உயிரோடிருந்தபோதும் மணம் மிக்கவர்களாக இருந்தீர்கள்.  இப்போது இறந்த பின்னரும் மணமிக்க நிலையில் உள்ளீர்கள்.  உங்களுக்கு விதிக்கப்பட்ட இறப்பு நிகழ்ந்துவிட்டது” என்று கூறினார்கள்.

பின்னர் அபூபக்ர் (ரலி) அவர்கள் மஸ்ஜிதுக்கு வந்து, ‘நபி இறக்கவில்லை’ என்று கூறிக் குரல் எழுப்பிக்கொண்டிருந்த உமர் (ரலி) அவர்களைப் பார்த்தார்கள்.  “உமர்!  அமருங்கள்!” என்றார்கள்.  ஆனால் உமரின் ஆவேசம் அடங்கவில்லை!  எனவே, அபூபக்ர் அவர்கள் நேராகச் சொற்பொழிவு மேடைக்குச் சென்றார்கள்.  அன்னார் பேசத் தொடங்கியதும், மக்கள் உமரை விட்டுவிட்டு அபூபக்ரின் பக்கம் ஓடிவந்தார்கள்.  

“மக்களே! அறிந்துகொள்ளுங்கள். எவர்கள் முஹம்மதை வணங்கிக்கொண்டி ருந்தார்களோ அவர்கள், முஹம்மது இறந்துவிட்டார்கள் என்று அறிந்துகொள்ளட்டும்.  எவர்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்கினார்களோ, அல்லாஹ் உயிரோடு இருக்கின்றான் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளட்டும்” என்று உரத்த குரலில் கூறிவிட்டு, அருள்மறை குர்ஆனின் ‘ஆலு இம்ரான்’ அத்தியாயத்தின் கீழ்க்காணும் வசனத்தை ஓதினார்கள்:

“முஹம்மது மனிதர்களுக்கு அனுப்பப்பட்ட தூதரேயன்றி வேறில்லை.  அவருக்கு முன்னர் இறைத்தூதர்கள் பலர் இவ்வுலகில் இறந்து போயுள்ளார்கள்.  இவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டுவிட்டால், நீங்கள் (இறைநம்பிக்கையாளர்களாக) இல்லாமல் வழி மாறிச் சென்றுவிடுவீர்களா?  இத்தகையோர் அல்லாஹ்வுக்கு எந்த இழப்பையும் ஏற்படுத்திவிடப் போவதில்லை.  நன்றியுள்ள அடியார்களுக்கு, அவர்களின் செயலுக்குத் தக்க கூலியை அல்லாஹ் கட்டாயம் வழங்குவான்.”    (3:144)

மேற்கண்ட இறைவசனத்தைக் கேட்டு விக்கித்து நின்ற உமர், “இந்த வசனம் குர்ஆனில் உள்ளதா?”  என்று கேட்டார்கள்.  அன்னாருக்குத் தெரியும், அது இறைவசனம் என்று.  இந்த வசனம் இப்போதுதான் இறங்கிற்றோ என்று புதினப்படும் அளவுக்கு அவர்களின் ஆவேசம் மிகைத்திருந்தது!  அத்துடன், “என்னால் நிற்க முடியாமல், என் முழங்கால்கள் வலுவிழந்துவிட்டன” என்று கூறியவராக உமர் (ரலி) மயங்கி வீழ்ந்தார்கள்!  அங்குக் குழுமியிருந்த பலரும், அபூபக்ர் (ரலி) அவர்கள் ஓதிய அந்த இறைவசனத்தையே திருப்பித் திருப்பி மொழிந்தவர்களாக இருந்தார்கள்.

நபியின் நல்லறத் தோழர்களுள், அபூபக்ரைப் போல் அண்ணலாரை நேசித்தவர்கள் யாருமில்லை.  நபியும் மற்றவர்களைவிட அபூபக்ரை நேசித்தார்கள்.  நபியின் இறப்பினால் உணர்விழந்து மயங்கி வீழும் நிலைக்கு வருபவர் யாருமிருந்தால், அவர் அபூபக்ராகத்தான் இருப்பார்.  ஆனால் அந்த அபூபக்ர் நிலை குலையாமல் உறுதியாக நின்றார்கள்!  வீரமும் துணிச்சலும் கொண்டிருந்த உமரோ, அண்ணலாரின் இறப்பை உறுதியுடன் அறிந்தவுடன், நிலை குலைந்து மயங்கி வீழ்ந்தார்!  

இங்குதான் இந்த உம்மத்தை நபிக்குப் பின்னர் வழி நடத்துவதற்குச் சரியான தேர்வுக்குரியவர் அபூபக்ர்தான் என்பது நிரூபணமாயிற்று.  தாம் பெற்ற பயிற்சியால் இந்தச் சமுதாயத்தை வழி நடத்துவதன் கட்டாயம், அந்தத் தலைவர் இறந்துவிட்டார் என்பது நிரூபனமானபோது, உறுதியுடன் நின்ற அபூபக்ரின் செயலால் வலுப் பெற்றது.  அவர்களின் செயலால், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிகச் சரியான ஆளைத்தான் சமுதாயத் தலைவராகத் தெரிவு செய்து பயிற்சியளித்துள்ளார்கள் என்பதுவும் விளங்குகின்றது. 

இறைத்தூதரின் பொறுப்பு, இறைச் செய்தியை மக்களுக்கு எடுத்துரைப்பது மட்டுமன்று; அதை இனி வரும் சமுதாயங்களுக்கும் எடுத்துரைப்பதற்கான தலைமையை உருவாக்குவதும் அவருடைய பொறுப்பாகும்.  அபூபக்ரின் தேர்வால், இது உண்மைப் படுத்தப்பட்டது.  இது ஒன்றே போதும், இந்தச் சமுதாயம் பதினான்கு நூற்றாண்டுகளாக, தலைமைத் தேர்வுக்கு எதை இலக்கணமாகக் கொண்டது, கொள்ளவேண்டும் என்பதை உலகறியச் செய்தது.  இதனை மெய்ப்படுத்தும் விதத்தில், அடுத்து வந்த அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சித் தலைமை அமைந்தது.  ரசூலுல்லாஹ் (ஸல்) அந்த ஆட்சியை அவர்களுடைய இறப்பிற்குப் பின்னர் பார்க்காவிட்டாலும், அவர்களின் தலைமைத் தேர்வு எவ்வளவு செம்மையானது என்பதை இச்சமுதாயம் சாட்சி கூறுவதாக அமைந்தது.

தலைவர் ஒருவரின் கடமை, தன் கட்டளைகளுக்குப் பணியும் செயல் வீரர்களை உருவாக்குவது மட்டுமன்று;  அவருடைய கனவை நனவாக்கும் அடுத்த தலைமையை உருவாக்குவதும்தான்.  இதுதான் மிகச் சிரமமான கடமையாகும்.  முஹம்மத் (ஸல்) அவர்கள் இதைத் தமது வாழ்வில் முழுமையாகச் செய்து காட்டினார்கள்.  மேலும், இனி வரும் தலைமுறைகளுக்கும் அதே தலைமைத் தேர்வு அமையவேண்டும் என்பதைப் பதிவு செய்தும் சென்றார்கள்.  அவர்களைப் பார்க்காத, அவர்களின் வாழ்நாளில் பிறந்தே இருக்காத தலைமுறையினர்கூட அந்தத் தூதரின் வழிகாட்டல் தமக்கு நேரடியாக வந்தது போன்று பின்பற்றக் கடமைப் பட்டவர்களாக உணர்ந்தார்கள்.  அந்தத் தூதரைத் தம் பெற்றோர்களைவிடவும் பிள்ளைகளைவிடவும் உயர்வாக மதித்தார்கள். எவ்வித அர்ப்பணிப்புக்கும்  ஆயத்தமாக இருந்தார்கள்.

இதற்குக் காரணமென்ன?  ஒப்புயர்வற்ற தலைவராக அந்த இறைத்தூதரை மதிக்கச் செய்த காரணிகள் யாவை?  அன்னாரின் எதிரிகள்கூட அவர்களை உயர்வாக மதிப்பிடும் அளவுக்கு அவர்களிடம் இருந்த திறமைதான் என்ன?  நான் முன்பு எடுத்துக் காட்டிய ரோமப் பேரரசின் ஹிராக்லியஸின் முன் அபூசுஃப்யான் மொழிந்த மெய்ச்சான்று இதற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு அல்லவா? 

அதிரை அஹ்மது

பிடி நழுவிய பொழுதுகள்! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | January 28, 2015 | , , , ,

நீர்த்தேக்கம் உடைந்து
ஊர்த்தாக்கும் வரை
கண்டுகொள்ளாமல் விடப்பட்ட
அணைக்கட்டின் கசிவு

குரும்பு என்று
அரும்பிலேயே
அலட்சியமாய் விட்டுவிட்ட
சிறுவனின் முதற்குற்றம்

உஷ்ணத் தொடுகைக்குத்
தயாராகும்வரை
ஒன்றுமில்லை என்றிருந்த
விடலைகளின் ஓரப்பார்வை

ஒரு துளிதானே சிறு பொறிதானே
என விடப்பட்ட
பிழையான கணிப்புகளால்தான்
பெரு வெள்ளமோ கடும் நெருப்போ
அழித்து அடங்கும்

உல்லாச ஊஞ்சலில்
காற்றைக் கிழித்தாடும்
களிப்பான கணங்கள்கூட
ஒரு நொடி
பிடி நழுவவே
வலியோடு முடிகின்றன

பற்றிப் பிடிப்பதில்
வெற்றியடைதல் போதாது
கைக்கு எட்டி
வாய்க்கும் வாய்ப்புகள்
வாய்க்கும் எட்டும்வரை
அடி வழுவாது
பிடி நழுவாது பிடி

அகலப்பாதை கனவால்
பிடி நழுவிய பொழுதன்றோ
இருந்த இருப்புப் பாதையையும்
ஊர்ந்த ரயிலையும்
ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது

ஓடிப்போகும்
ஜோடிக்குப் பின்னாலும்
வாடிப்போகும்
வாழ்க்கைக்குக் காரணமாகவும்
தோற்றுப் போகும்
தொழிலுக்குத் துவக்கமாகவும்
இன்னும்
இல்லை யென்றாகிப்போன
இயல்பான இன்பத்திற்கும்
பிடி நழுவிய பொழுதொன்று
இருந்தே தீரும்

பிடி இறுகட்டும்

ஒடித்துவிடாமல் வளைக்கவும்
வெடித்துவிடாமல் அனைக்கவும்
ஆரம்பமே
அருமையான தருணம்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

அலி சகோதரர்களின் அழியாத தியாகங்கள் - குடியரசு தின பதிப்பு 2

அதிரைநிருபர் பதிப்பகம் | January 26, 2015 | ,

தொடர் – 14
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் இன்றியமையாத வரலாற்றுப் பக்கங்களில் அலி சகோதரர்கள் என்று அழைக்கப் படும் மெளலானா முகமது அலி மற்றும் சவுகத் அலி ஆகியோருக்கு நீக்கப்பட இயலாத பல பக்கங்கள் சொந்தமாகும். மகாத்மா காந்தி , இந்த சகோதர்களைப் பற்றி ஒரு முறை குறிப்பிடும்போது, “என் தோளின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளதைக் காணும் போது, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இந்த சகோதர்களின் பங்கு எந்த அளவுக்கு இருந்து இருக்குமென்று நாம் உணரலாம். 

இந்த சகோதரர்களின் வரலாற்றைக் காணும் முன்பு இவர்களை ஈன்றெடுத்த தாயார் ஹாஜியா ஆலாஜி பானு அவர்கள் பற்றிய ஒரு மறக்க முடியாத வரலாற்றுக் குறிப்பை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். அலி சகோதர்களின் வீட்டுக்கு வருகை தந்த காந்திஜிக்கு அவர்களின் தாயார் ஆலாஜி பானு என்கிற பீவிமா தான் தனது கையால் ராட்டையில் நெய்த ஒரு ஆடையைப் பரிசாக வழங்கி “ காந்திஜி! இதைக் கதராக ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றார். கதர் என்றால் உருது மொழியில் “கவுரவம்” என்று பொருள். அன்று முதல் கதர் என்பது தனது கரங்களால் தானே நெய்து உடுத்தும் ஆடை – அன்னியக் கலப்பில்லாத ஆடை நாட்டின் மக்களுக்கு கவுரவத்தையும் சுய மரியாதையையும் வழங்கும் தன்மை உடையது என்கிற கோட்பாடு காந்தியால் ஏற்றுக் கொள்ளப் பட்டது. சுதந்திர இயக்கத்தின் அடையாளமாகக் கருதப் பட்ட கதருக்குப் பெயர் வழங்கியவர் - அதாவது அலி சகோதரர்களின் தாயார் தனது கைகளால் நெய்த துணியை காந்திக்குப் பரிசாக அலி சகோதரர்களின் தாய் வழங்கியதன் மூலம் அதன் காரணத்தால் அந்தத் துணிக்கு கதர் என்று பெயர் வந்தது. அன்றும் இன்றும் காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களின் ஆடை அடையாளமாக விளங்கும் கதருக்குப் பெயரிட்டவர் ஒரு முஸ்லிம் தாய்தான் என்கிற வரலாறு எத்தனை காங்கிரஸ் காரர்களுக்குத் தெரிந்து இருக்குமென்று தெரியவில்லை. 

இளம் வயதில் தந்தையை இழந்த இந்த சகோதரர்கள், தாயின் அரவணைப்பில் வளர்க்கப் பட்டார்கள். மெளலானா முகமது அலி அவர்கள் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் நவீன கால வரலாற்றுத் துறையில் பட்டம் பெற்று நாடு திரும்பினார். பத்திரிகைத் துறையில் சாதிக்க நினைத்த மெளலானா முகமது அலி அவர்கள் தனது திறமைகளையும் தன்னிடமிருந்த சிறு அளவு செல்வத்தையும் ஒன்று திரட்டி “ காம்ரேட்” (Cornrade) என்ற பத்திரிகையைத் முதலில் தொடங்கினார். இந்திய அரசியலில் இந்தப் பத்திரிகை ஒரு புயலாக அடித்தது. அதன் அடிநாத முழக்கமாக "Cornrade of all and partisan of none" என்ற முழக்கத்தை இலச்சினையாக வைத்தார். அதைத் தொடர்ந்து “ஹம்தர்ட் “ (Hamdard') என்கிற பெயரில் டில்லியில் மற்றொரு பத்திரிகை தொடங்கி நடத்தினார். அத்துடன் லண்டனில் இருந்து ஆங்கிலத்தில் முஸ்லிம் அவுட்லுக் ("Muslim Outlook" ) என்றபெயரிலும் பாரிசில் இருந்து பிரெஞ்ச் மொழியில் 'Echo de I'Islam' என்ற பெயரிலும் பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தினார். இதனால் இந்திய முஸ்லிம்களின் நிலைகளையும் இந்திய சுதந்திரத்தின் போராட்ட அவசியங்களையும் உலகம் அறியத்தொடங்கியது. 

He knew that in this venture he had to sacrifice all and to expect no material gain; he firmly closed his eyes to all temptations and left for Calcutta to start the 'Comrade' -"Cornrade of all and partisan of none" as he put it. The first issue came out on January 11, 1911. Born in abject poverty, the 'Comrade' took the journalistic world of India by storm. Later, he started the 'Hamdard' from Delhi and the "Muslim Outlook" from England and piloted 'Echo de I'Islam' in Paris. என்று வரலாறு குறிப்பிடுகிறது. 

வெறும் பத்திரிகையாளனாக இருந்து மட்டும் தனது சுதந்திர உணர்வுகளுக்குத் தீனி போட இயலாது என்பதை உணர்ந்த மெளலானா முகமது அலி, மிக வலுவான அரசியல் நிலைப் பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் துணிந்தார். அதனால் , அப்போது கிலாபத் இயக்கத்தில் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. 

Politics was a passion, not a pastime, and journalism a 'means' not an 'end'. His contributions to the various political movements in India from 1911 to 1931 are now a matter of history. என்பது அவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்பு. 

கிலாபத் இயக்கம் என்பது (1919-1924) ஆகிய காலகட்டத்தில் ஆங்கில ஆட்சிக்குட்பட்ட இந்தியாவில் முஸ்லிம்களால் உதுமானிய கலீபகத்தைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட ஓர் இயக்கமாகும். முதலாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு ஆதரவாகப் போரிட்ட உதுமானியக் கலீபகம், போரில் ஏற்பட்ட தோல்வியினால் அழியும் நிலைக்கு ஆளானது. வெற்றி பெற்ற நேச நாடுகள் உதுமானியக் கலீபகத்தைப் பிரிவினை செய்து கலீபாவின் அதிகாரத்தை அழிக்க முடிவு செய்தனர். கலீபாவினை தங்களின் இஸ்லாமிய சமய அதிகாரத்தின் சின்னமாகக் கருதிய உலக முஸ்லிம்களிடையே இது பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது. உலகெங்கும் கிலாபத் இயக்கம் தோன்றியது. கலீபகத்தைப் பாதுகாக்க அலி சகோதரர்களான மெளலானா முகமது அலி மற்றும் சௌகத் அலி ஆகியோர் 1919ம் ஆண்டு இந்தியாவில் கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினர்.

விரைவில் கிலாபத் இயக்கம் இந்திய தேசிய காங்கிரசுடன் கூட்டணி அமைத்துக் கொண்டது. உதுமானியக் கலீபகத்தைப் பாதுகாக்கும்படி ஆங்கில அரசை வலியுறுத்துவதே கிலாபத் இயக்கத்தின் நோக்கம். அதே நேரத்தில், காங்கிரஸ் அப்போது துவங்கியிருந்த ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு அங்கமாகவும் செயல்பட்டது. ஒத்துழையாமை இயக்கத்துக்கு இந்திய முஸ்லிம்களின் ஆதரவைத் திரட்ட மகாத்மா காந்தியும் காங்கிரசும் அலி சகோதரர்களான மெளலானா முகமது அலி மற்றும் சௌகத் அலி ஆகியோர் தலைமை ஏற்று நடத்திய கிலாபத் இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் இவ்வியக்கம், இந்திய தேசியவாதத்துக்கு எதிராக பரந்த இஸ்லாமியத்தை பிரதிபலிக்கிறது என்று குற்றம் சாட்டிய இந்து மகாசபை ஆகிய அமைப்புகள் இதனை எதிர்த்தன.

ஒத்துழையாமை இயக்கம் (Non-cooperation movement) என்பது ஆங்கில ஆட்சிக்குட்பட்ட இந்தியாவில் காலனிய அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட நாடுதழுவிய மக்கள் இயக்கமாகும். இது 1893ம் ஆண்டு ஜூன் 7ம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. ரவ்லட் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்ததை வெளிக்காட்டிக் கொள்ளவும் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். 

இந்திய விடுதலை போராட்டத்தில் இது ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது. மகாத்மா காந்தியாலும் இந்திய தேசிய காங்கிரசாலும் முன்னெடுக்கப்பட்ட இவ்வியக்கம் செப்டம்பர் 1920 இல் தொடங்கி பிப்ரவரி 1922 வரை தொடர்ந்தது. 

இந்தியர்கள், ஆங்கில ஏகாதிபத்திய காலனிய அரசுடன் அனைத்து நடைமுறை மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளிலும் ஒத்துழைக்க மறுத்தனர். மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களுக்கு செல்லாமல் இருப்பது, அரசு அதிகாரிகள் பணிகளை செய்யாமல் புறக்கணிப்பது போன்ற செயல்கள் மூலம் அரசுக்கு ஒத்துழைப்பு தராமல் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

அரசுப் போக்குவரத்து, பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட துணி முதலான பொருட்கள் போன்றவையும் இந்திய தேசியவாதிகளால் புறக்கணிக்கப்பட்டன. ஆங்கில அரசு அதிர்ந்தது. நிர்வாகம் ஸ்தம்பித்தது. இவ்வியக்கத்தை காங்கிரசின் பல மூத்த தலைவர்கள் குறிப்பாக இந்துத்வா எண்ணம் கொண்டோர் ஆதரிக்கவில்லை. எனினும் இளைய தலைமுறை தேசியவாதிகளிடையே இது பெரும் ஆதரவைப் பெற்றிருந்தது. ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால் காந்தி இந்திய தேசிய காங்கிரசின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். அலி சகோதரர்கள் காந்தியுடன் தோளோடு துணை நின்றனர். 

அகிம்சையின் அடிப்படையில் ஆரம்பிக்கப் பட்ட ஒத்துழையாமை இயக்கம் வெற்றியின் உச்சத்தில் இருந்த போதே காந்தியால் திடீரென்று திருப்பிப் பெறப்பெற்றது. காரணம், பிப்ரவரி 5, 1922 ல் உத்திரப் பிரதேசத்தில் சவுரி சாவ்ரா என்ற இடத்தில் விடுதலை இயக்கத்தினருக்கும் காவல்துறையினருக்கும் வன்முறை மோதல்கள் ஏற்பட்டன. 

காவல் துறையினரின் செயல்பாட்டால் சில விடுதலை இயக்கத்தினர் மரணமடைந்தனர். இதனால் கோபம் கொண்ட மற்றவர்கள் காவல் நிலையத்தை தீயிட்டு கொளுத்தினர். இதில் 22 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். வன்முறை இந்தியாவின் வேறு சில பகுதிகளுக்கும் பரவியது. 

அறவழியில் நடந்து வந்த இயக்கம் வன்முறைப் பாதையில் செல்வதைக் கண்ட காந்தி அதிர்ச்சியடைந்தார். ஒத்துழையாமை இயக்கம் வன்முறை இயக்கமாக மாறுவதைத் தடுக்க, அதனை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார். வன்முறை ஓயும் வரை மூன்று வாரங்கள் உண்ணாநிலைப் போராட்டமொன்றை நடத்தினார். 

இதனால் ஒத்துழையாமை இயக்கம் வலுவிழந்து நின்று போனது. 

சவுரி சாவ்ரா நிகழ்வுக்குப் பின்னர் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்டதை அலி சகோதரர்கள் ஏற்கவில்லை. கிலாபத் இயக்கத்தைத் தனியே தொடர்ந்தனர். 1924ல் துருக்கியில் கமால் அத்தா துர்க் தலைமையில் ஏற்பட்ட புரட்சியால் உதுமானியக் கலீபகம் ஒழிக்கப்பட்டு மதச்சார்பற்ற குடியரசு உருவானதால் கிலாபத் இயக்கமும் பலனற்றுப் போனது. 

கிலாபத் இயக்கத்திலும் ஒத்துழை யாமை இயக்கத்திலும் பங்கெடுத்த மௌலானா முகம்மது அலி மற்றும் சௌகத் அலி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது முகம்மது அலியின் மனைவி பேகம் சாஹிபாவும், அவரது தாயார் ஆலாஜி பானுவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அந்தக் காலத்திலேயே விடுதலைப் போருக்கு ரூ.30 லட்சத்தை நிதியாகத் தந்தனர். என் பிள்ளைகள் சிறையில் இருக்கும்போது, ஒருவேளை அவர்கள் ஆங்கிலேயர் களிடம் மன்னிப்புக் கேட்டு விடுதலை யானால், அவர்களது குரல்வளையை நானே நெறித்துக் கொள்வேன் என கர்ஜித்தார் அவரின் தாயார் பீபிமா.

அவரைப் போலவே அவர்களின் பிள்ளைகள் இரட்டைக் குழல் துப்பாக்கி களாக வீரத்தோடு களமாடினார்கள். எப்படியென்றால் மெளலானா முகமது அலி அவர்கள் கைது செய்யப்பட நேரத்தில் தனது சகோதரரின் கைகளில் விலங்கு மாட்டப் படுவதைப் பார்த்த மெளலானா சவுக்கத் அலி அவர்கள் அழ ஆரம்பித்தார். அப்போது அவருக்குக் கிடைத்தது ஒரு பரிசு. அந்தப் பரிசு பளார் என்று கன்னத்தில் ஒரு அறை. தொடர்ந்து சகோதரரை நோக்கி ஒரு உறுமலுடன் கூடிய அதட்டல். ஏன் கண்ணீர் சிந்துகிறாய்? இந்த நாட்டுக்காக நமது சுதந்திரத்துக்காக இந்த ஒரு முறை அல்ல இன்னும் எத்தனை முறையானாலும் சிறை செல்லத் தயாராக நானும் இருக்கிறேன்! நீயும் இரு! என்று கர்ஜித்துவிட்டு ஜீப்பில் ஏறியது மெளலானா முகமது அலி என்ற அந்த சிங்கம். 

மெளலானா முகமது அலி அவர்கள் ஈரோட்டில் நடந்த உலமாக்கள் மாநாட்டுக்கு வருகை தந்து இருந்தார். அந்த மாநாட்டில் மெளலானா முகமது அலி அவர்களுக்கு தனது சார்பில் வரவேற்ற பலத்த கையொலிகளுக்கிடையே ஈ வெ ரா பெரியார் இப்படிச் சொன்னார். “ இந்த தேசம் காந்திடம் இருக்கிறது . ஆனால் அந்த காந்தியோ இதோ இந்த மெளலானா முகமது அலி அவர்களின் சட்டைப் பையில் இருக்கிறார்." என்றார். அந்த அளவுக்கு இந்திய சுதந்திர வேள்வியில் தனது தாக்கத்தை ஏற்படுத்தியவர் மெளலானா முகமது அலி அவர்கள். 

1930- ஆம் ஆண்டு இந்திய சுதந்திரம் பற்றி கலந்து பேச லண்டனில் வட்ட மேசை மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் மகாத்மா காந்தியுடன் கை கோர்த்துக் கொண்டு செல்ல மெளலானா முகமது அலி அவர்களும் அழைக்கப்பட்டார்கள். ஆனால் அவர்களுக்கு உடல் நலம் குன்றி மிகவும் மோசமடைந்து இருந்தது. இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் லண்டன் கிளம்பத் தயாராகிக் கிளம்பினார். 

லண்டனில் வட்டமேசை மாநாடு. மெளலானா முகமது அலி அவர்கள் பேசும்படி அழைக்கப்பட்டார்கள். அவருக்குத் தரபப்ட்ட நேரம் ஐந்து நிமிடங்கள் மட்டுமே. ஆனால் ஆங்கில ஏகாதிபத்தியமே தனது மூக்கின் மேல் விரலை வைக்கும்படி தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் இரண்டு மணி நேரம் முழங்கினார். அரங்கு நிறைந்த கைதட்டல்கள் அவரது பேச்சை அங்கீகாரம் செய்தன. தனது பேச்சை முடிக்கும் முன்பு மெளலானா முகமது அலி அவர்கள் கீழ்க்கண்ட வார்த்தைகளைச் சொல்லி முடித்தார்கள். அவருடைய அந்த வார்த்தைகள், எல்லாம் வல்ல இறைவன் தனது நாட்டத்தை அவரது வார்த்தைகளிலேயே கொண்டுவந்தது போல அமைந்திருந்தன.

என் தேசத்திற்கு நான் திரும்ப விரும்புகிறேன். அவ்வாறு என் தேசத்திற்கு நான் திரும்புவது, எனது தேசத்துக்கான உத்தரவை நீங்கள் எங்களின் கைகளில் கொடுத்தால் மட்டுமே முடியும். ஏனென்றால் ஒரு அடிமைத்தளையில் சிக்கி இருக்கும் நாட்டுக்கு நான் ஒரு அடிமையாகத் திரும்பிப் போவதை விரும்பவில்லை. அந்நிய மண்ணாணாலும் இதில் நான் மரணிக்கவே விரும்புகிறேன். ஏனென்றால் இது சுதந்திர மண். எனக்கும் மரணிப்பதற்கு ஒரு சுதந்திர மண் வேண்டும். ஆகவே எனது நாட்டுக்கு சுதந்திரம் கொடுங்கள். அல்லது உங்கள் மண்ணில் அடக்கமாக எனக்கு ஒரு கல்லறைக்கு இடம் கொடுங்கள்" என்று உணர்ச்சிகரமாகப் பேசினார். 

“ I want to go back to country” he said in a loud voice. “ If I can go back with the substance of Freedom in my hand. Otherwise I will not go back to a slave country. I will even prefer to die in a foreign country so long as it is a free country, and if you do not give us freedom in India, you will have to give me a grave here. “ ( Shan Mohamed , Freedom Movement in India – The Role of Ali Brothers , page 231.)

சுதந்திரம் தரப் படவில்லை. ஆனால் இறைவன் அவரது நாட்டத்தை நிறைவேற்றினான். லண்டன் வட்டமேசை மாநாட்டில் உடல்நலக் குறைவோடு முழங்கிக் கேட்டுக் கொண்டபடி 04- 01- 1931 –ல் லண்டன் மாநகரிலே அவரை இறைவன் தன்னோடு அழைத்துக் கொண்டான். இன்னாலில்லாஹி வ இலைஹி ராஜிஊன். 

மெளலானா முகமது அலி அவர்களின் இறுதி ஆசைப்படி ஒரு சுதந்திர மண்ணில் அவர்களது மரணம் நிகழ்ந்தாலும் அவர்களது ஜனாஸாவை ஆங்கில ஏகாதிபத்திய மண்ணில் அடக்கம் செய்ய முஸ்லிம் நாடுகள் சம்மதிக்கவில்லை. கிலாபத் இயக்கத்தில் ஈடுபட்டிருந்த 22 நாடுகள் அந்தப் புனித மகனின் உடலைத் தங்களது மண்ணில் அடக்கம் செய்ய வேண்டுமென்று கோரி வரிசையில் நின்றன. இறுதியில் தூய்மையான வீடு என்று அழைக்கப் படும் - சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு கட்டப் பட்ட - பல நபிமார்களின் அடக்கஸ்தலமாக விளங்கி- ஆலம் வாழுகின்ற தீனோர் யாவர்க்கும் ஆரம்பக் கிப்லா அதுதான் என்ற புகழ்பெற்ற இன்றைய ஜெருசலத்தின் பைத்துல் முகத்தஸ் பள்ளியில் உள்ள புனித மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் அருகே உலகோர் திரள நல்லடக்கம் செய்யப்பட்டது. 

மெளலானா முகமது அலி அவர்கள் புனித ஹஜ்ஜுக்கு சென்ற போது இறைவனிடம் முக்கியமான இரண்டு துஆக்களைக் கேட்டார்கள். இறைவா எனது தாய் நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத்தா! அங்கிருக்கும் முஸ்லிம்களுக்கு அமைதியான நல் வாழ்வைத்தா ! என்பதுதான் அந்த மனிதப் புனிதன் இறைவனிடம் உள்ளம உருகிக் கேட்ட துஆக்கள். அவர்கள் கேட்ட இந்திய சுதந்திரம், அவர் மறைந்து பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு மலர்ந்தது. 

ஆனால் இந்திய முஸ்லிம்களுக்கான அமைதியான வாழ்வுக்கு இன்னமும் நாம் துஆச் செய்யவேண்டிய நிலையில்தான் இருந்து கொண்டு இருக்கிறோம். தங்களின் இன்னுயிரை துச்சமென நினைத்து இந்த நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய முஸ்லிம்களை வரலாற்றில் இருந்து பிரித்து எடுத்து அன்னியமாக்கும் சக்திகள் தொடர்ந்து வேலை செய்துகொண்டு இருக்கின்றன. மெளலானா முகமது அலி அவர்களின் மறுமையின் செழிப்புக்கும் அவர்கள் இறைவனிடம் கோரிய இந்திய முஸ்லிம்களின் நல் வாழ்வுக்கும் இன்னும் துஆச் செய்வோம்.

இன்ஷா அல்லாஹ் சந்திக்கலாம். 

இபுராஹீம் அன்சாரி

Silence please ! - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட்டி - தொடர்கிறது (4) 7

ZAKIR HUSSAIN | January 25, 2015 | , , , ,


ஹெச். ராஜாவுடன் பேட்டி...

ஹெச். ராஜா ‘என்ன விசயமா என்னை பேட்டி எடுக்க வந்திருக்கீங்க" You Tube -ல் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட காமெடியில்  H.Raja Comedy இருக்கிறதே சார்..அது ஒன்னு போதாதா?

ஹெச். ராஜா: அது முஸ்லீம் ஆட்களின் வேலை... இதற்கெல்லாம் முஸ்லீம்கள்  பதில் சொல்லியே ஆக வேண்டும்."

'சார் இதற்க்கு பதில் சொல்ல வேண்டியதே நீங்க தான் சார்.'

ஹெச். ராஜா' இந்த பாரதம் ரத்தம் சிந்தி / உதிரம் சிந்தி / குருதி சிந்தி சுதந்திரம் அடைந்த நாடு. அதில் மற்ற மதத்தினர் உரிமை கொண்டாடுவது தவறு. அது  முழுக்க முழுக்க அண்ணல் காந்தியின் தியாகம். காந்தி ஒரு ஹிந்து."

'சரி சார்...காந்தி சுதந்திரம் வாங்கி தந்தார்...அதற்கு ஏன் சார் உங்க ஆட்கள் அவரை ஒரு மிருகத்தை சுடுவது மாதிரி சுட்டுத்தள்ளிய கோட்சேவுக்கு சிலை வைக்கிறீங்க?...அதையும் நீங்கள் எல்லாம் ஆதரிக்கிறீர்கள்.? கோட்சே...ஒரு ஆர் எஸ் ஏஸ் மெம்பர்  என்பதால் கோட்சேவுக்கு இவ்வளவு மரியாதையா?


அடுத்து  ஜாலியன் வாலாபாக்  படுகொலையை நிகழ்த்திய ஜெனரல் டையருக்கு சிலை வைப்பீர்களா?..

ஹெச். ராஜா: எங்கள் ஆட்சியில் ஜெனரல் டையருக்கும் சிலை வைப்போம்.

'சார்... அவன் ஒரு வெள்ளைக்கார நாய்... நம் நாட்டு சீக்கிய சகோதரர்களையும் சகோதரிகளையும் ஏறக்குறைய 2000 பேர் [அதில் ஹிந்து / முஸ்லீம் மக்களும் சேர்ந்திருந்தனர்] ..கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி சுட்டுத்தள்ளப்பட்டனர். அத்தனை உயிர்களும் தப்பிக்க நினைத்தும், சுவற்றில் ஏற முயற்சித்த போதும் அனைவரும் பிணமாக விழுந்தனர்..பிரிட்டீஸ் நாய்களின் துப்பாக்கிக்கு...அந்த கொடுமையை செய்த ஜெனரல் டையருக்கு சிலை வைப்பீர்களா?...

ஹெச். ராஜா: எங்கள் ஆட்சியில் சிலை வைப்போம்... உங்களுக்கு என்ன பிரச்சினை... போய் பாருங்கள்...பென்னி குயிக் என்ற வெள்ளைக்காரனுக்கு சிலை வைக்கும்போது ஜெனரல் டையருக்கு வைத்தால் என்ன...??

பென்னி குயிக் தனது சொத்து அனைத்தையும் விற்று இந்தியர்கள்... குறிப்பாக தமிழர்கள் விவசாயம் செய்யவும், குடிதண்ணீருக்கு கஷ்டப்படாமல் இருக்கவும் அணை கட்டியவர்... அவரைப் போய் ஜெனரல் டையருக்கு ஒப்பிடுவது எப்படி உங்களால் முடிகிறது..?

ஹெச். ராஜா: நான் எது செய்தாலும் முஸ்லீம்கள் / கிறிஸ்தவர்களுக்கு பிடிக்காதே..

ஜாலியன் வாலாபாக் படுகொலையில்  நிறைய சீக்கியர்கள் மரணம் அடைந்திருக்கினர்.

ஹெச். ராஜா: ஜாலியன் வாலாபாக்கில் இறந்தது சீக்கியர்கள் அல்ல.. சீக்கியர்கள் இந்திய விடுதலைக்கு பாடுபடவில்லை.

அப்டீனா... பகத் சிங் [பஞ்சாப் சிங்கம்] போன்ற விடுதலை வீரர்கள்...??

ஹெச். ராஜா':  யோவ் அவன் சீக்கியர் அல்ல... அவன் பெயர் “பகவதி S/O சிங்காரம்”... எங்க ஊர் பக்கம்தான் அவன்…… சீக்கியர்கள் தனக்கு விளம்பரம் தேடி அப்படி பெயரை மாற்றிவிட்டனர்.

சரி இதற்கு மேல் எங்களை கோபாலபுரம் அழைப்பதால் ....கோபாலபுரம் நோக்கி பயணம்.

முன்னால் முதல்வர் கலைஞர் தனது உடன் பிறப்புக்கு கடிதம் எழுத பேப்பர் தேடிய நேரம்... நாங்கள் போவதற்கும் சரியாக இருந்தது.

ஐயா... சமீபத்தில் இலங்கையில் ஆட்சி மாறிய போது தமிழர்கள் இனிமேல் சந்தோசமாக வாழ புதிய ஆட்சி வழிவகுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கீங்களே..?

கலைஞர் :நான் சொன்னேன்...என் தமிழ் என்னை சொல்ல வைத்தது...எங்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் இருக்கும் உறவு...துணிக்கும் / கொடிக்கும் இருக்கும் உறவு. நரம்புக்கும் சதைக்கும் இருக்கும் உறவு...ஒன்றோடு ஒன்று எப்போதும் ஒட்டியே இருக்கும்.

அவர்களுக்கு குரல் கொடுக்க நானும் கழகமும் எப்போதும் முன்னால் நிற்கும்...புறமுதுகு காட்டி ஒடாது.

அப்டீனா முல்லிவாய்க்காலில் சிங்கள ராணுவம் அப்பாவி இளைஞர்களை சுடும்போது உங்களுக்கு / உங்கள் கழகத்துக்கும் குரல் கட்டியிருந்துச்சா?

கலைஞர் 'இல்லை...இது சில புல்லுருவிகளின் கூற்று. நான் அலுவல் காரணமாக தலைநகரம் டெல்லியில் இருந்தேன். அப்போது கழக்கண்மனிகள் கணிமொழிக்கும் / அழகிரிக்கும் அமைச்சர் பதவி கிடைக்க வேண்டிய தருணம். அதை தவற விட்டால் தமிழ்நாட்டுத்தமிழர்கள் சோற்றுக்கு வழியில்லாமல் சோம்பி விடுவார்களே என்ற ஆதங்கம் கழகத்தை இதுவரை காப்பாற்றும் எனக்கு இருக்காதா?.

சரி ஐயா...இனிமேல் உங்களின் பணி ஒய்வில் யார் உங்கள் கழகத்தை நடத்தி செல்வார்கள்...?


கலைஞர் :அது நிச்சயம் என் குடும்பத்தில் உள்ளவர்கள் இருக்க மாட்டார்கள். செயலாளர் ஸ்டாலின் இருக்களாம். முன்னால் அமைச்சர் அழகிரி இருக்களாம். முன்னாள் அமைச்சர் தயாநிதி இருக்களாம். ஏன் மகளிருக்கும் ஆட்சி அதிகாரம் உண்டு என்று குரல் கொடுக்க கனிமொழியே வரலாம். இதில் என் குடும்பம் இல்லை ..பெரியாரும் அண்ணாவும் கட்டிக்காத்த கொள்கை பிடிப்புள்ள இந்த இளைஞர்களே இனிமேல் தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றும் தன்னிரகரில்லா தலைவர்கள்.

ஸ்ஸப்பா முடியலே...என்று ஒட்டம் எடுத்தோம்.

விஜய்காந்த் வீட்டுக்கு...


அங்கு போனவுடன் அவரது மனைவி 'அவர் இப்போது வீட்டில் இல்லை... எதாவது கேள்வி கேட்பதாக இருந்தால் என்னிடமே கேளுங்கள்...பொதுக்கூட்டங்களில் கூட அதிகம் பாயின்ட் எடுத்துச்சொல்லி நான் தான் பேசுகிறேன். என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது ஒருவர் தடியான உருவத்துடன் கருப்பாக / தலை முடியில் கலர் "டை"அடித்து  கண் சிவக்க ..."டேய் ..எனக்கு தமிழிலில் பிடிக்காத வார்த்தை "கேள்வி"...ஓடிப்போய்டு...இங்கே ஏன் வந்தே...உனக்கு சம்பளம் தர்ரவன்ட்ட போய் கேள்வி கேளுடா' என்று நாக்கை துறுத்திக்கொண்டு அடிக்க கையை ஓங்கினார்...

எங்களுக்கு சந்தேகம் தான் விஜய்காந்த் வீட்டில் இல்லை என்று சொன்னார்களே... இவர் இப்படி விஜய்காந்த் மாதிரி பேசுராறே...ச்சே இருக்காது... உங்களுக்கு ஏதாவது வெளங்குதா ???

விட்டோம் ஜூட்...

ZAKIR HUSSAIN

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

16

அதிரைநிருபர் பதிப்பகம் | January 24, 2015 | , , ,

தொடர் பகுதி - இருபத்து நான்கு


மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க - மாப்பிள்ளை முன் வந்து மணவறையில் காத்திருக்க - காதலாள் மெல்லக் கால் பார்த்து நடந்து வர – கன்னி இளம் கையில் கட்டி வைத்த மாலை தர - காளைத் திருக்கரத்தில் கனகமணிச் சரம் ஜொலிக்க- ஆனந்தம் பாடு என்று ஆன்றோர் குரல் ஒலிக்க – கொட்டியது மேளம்! குவிந்தது கோடி மலர்! கட்டினான் மாங்கல்யம் ! என்று கவியரசு கண்ணதாசன் ஒரு திருமணத்தை வர்ணித்துக் காட்டுவார்.

அதே போல அரபுகள் ஆவென்று வாய்பிளக்க- உலக நல்லோர்கள் ஓவென்று ஓலமிட- பாதகச் செயல்களை, படைத்தவன் பொறுமையாய்ப் பார்த்திருக்க- பாலஸ்தீனத்தின் மண்ணின் துகள்களோடு ‘செம்புலப் பெயல் நீர்போல அன்புடன்’ கலந்து நின்ற அரபுகள் அகதிகளாய் மூட்டை கட்ட- ‘கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை’ என்று ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேலை தனிநாடாக அறிவித்து உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தது.

ஹிட்லரின் கொலை முகாம்களில் இருந்து தப்பித்து வந்த யூதர்கள் ஏற்கனவே பாலஸ்தீனத்தில் குவிந்து கூடத் தொடங்கி இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த அறிவிப்பு இளைப்பாறுதல் தந்தது.

வரலாற்றின் சுவடிகளில் பல வடுக்களை ஏற்படுத்தக் காரணமான இந்த தனிநாடு அமைப்புக்குப் பின்னால் இஸ்லாத்துக்கெதிராகவும் அரபு மக்களுக்கெதிராகவும் அமைந்திருந்த சதிவலைகளின் இழைகளை நாம் இந்த இடத்தில் சுட்டிக் காட்டக் கடமைப் பட்டு இருக்கிறோம்.

கி.மு என்று குறிப்பிடப்படுகிற கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே வரலாற்று ரீதியான பகைமை என்று பார்த்தால் அது யூதர்கள் மற்றும் கிருத்தவர்களுக்கு இடையிலேதான் இருந்து வந்தது. கிருத்துவத்தை யூதர்கள் இழிவு படுத்திய நிகழ்வுகளை வரலாற்றின் வழிநெடுக நாம் காண முடியும். அதேபோல் யூதர்களை கிருத்துவர்கள் கொன்றொழித்த வரலாறுகளையும் நாம் காண முடியும். யூதர்களை தங்களின் நாடுகளில் வைத்திருப்பது ஆபத்து என்று ஐரோப்பிய கிருத்தவ நாடுகள் யூதர்களைப் பொட்டலம் கட்டி வெளியேற்றிய நிகழ்வுகளையும் ஏற்கனவே நாம் குறிப்பிட்டு இருக்கிறோம்.

ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரை யூதர்களை கண்ணியப்படுத்தியே வந்திருக்கிறது என்பதை நாம் காண முடியும்.

எந்த மனிதனுக்கும் பிறப்பிலேயே மேன்மை அல்லது இழிவு என்பது மனதை பாதிக்கும் விஷயமாகும். ஒரு தனி மனிதனை இழிவாகப் பிறந்தவன் எனபது அவனது தன்மானத்தையும் சுய மரியாதையையும் சுரண்டிப்பார்க்கும் செயலாகும்.

இதோ இந்த ஐரோப்பியர்கள் இன்று கொடி தூக்கும் இந்த யூதர்கள், ஹஜரத் ஈசா நபி ( அலை) அவர்கள் பிறந்த பொழுது அவர்களின் பிறப்பை கேவலப்படுத்தி அவதூறுகளைக் கிளப்பினார்கள். ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் தனது திருமறையில் ஹஜரத் ஈஸா நபி (அலை) அவர்களின் பிறப்பை மேன்மைப்படுத்தி தொட்டில் குழந்தையாக இருந்த ஈசா நபி(அலை) அவர்களையே தனது அருளால் பேசவைத்து தன் மீது யூதர்களால் ஏவப்பட்ட பிறப்பின் இழிவையும் அவதூறையும் தானே துடைத்தெறிந்த நிகழ்வை சூரா மரியத்தில் காண்கிறோம்.

அதே போல ஹஜரத் ஈசா நபி ( ஸல்) அவர்களைக் கைது செய்து தலையில் முள் கிரீடம் சூட்டி சிலுவையை சுமக்கவைத்து சாட்டையால் அடித்துக் காறி உமிழ்ந்த யூதர்களின் கூற்றை மறுத்து, யூதர்கள் கைது செய்ததும் சிலுவையை சுமக்க வைத்ததும் சிலுவையில் அறையப்பட்டதும் யூதர்கள் ஈசா நபி ( ஸல்) அவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த அவர்களைப் போன்ற ஒருவர்தானே தவிர அல்லாஹ் ஈசா நபி ( ஸல்) அவர்களை தன்னளவில் காப்பாற்றி உயர்த்திக் கொண்டான் என்பதுடன் மீண்டும் அவர்கள் உலகுக்கு வருவார்கள் , தனக்கு இழிவு ஏற்படுத்திய சிலுவையை உடைப்பார்கள் , தஜ்ஜாலை அழிப்பார்கள் என்பதும்தான் ஹஜரத் ஈசா நபி ( ஸல்) அவர்களைப் பெருமைப் படுத்தி இறைவன் மற்றும் அவனது அருள் தூதர் பெருமானார் ( ஸல் ) அவர்கள் அளித்திருக்கும் வார்த்தைப்பாடுகள். முஸ்லிம்கள் தங்களின் ஈமானின் ஒருபகுதியாக நம்பும் இத்தகைய செயல்கள் இஸ்லாத்தின் நாடி நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், யாரை முஸ்லிம்கள் புனிதப் படுத்துகிறார்களோ அந்த இயேசு கிறிஸ்து என்றும் தேவகுமாரன் என்றும் கிருத்தவர்களால் சொல்லப்படும் ஈசா நபி ( ஸல்) அவர்களை பலவகைகளிலும் இழிவு படுத்தியவர்கள்தான் யூதர்கள்.

கிருத்தவர்களால் கொண்டாடப்படும் இயேசு கிருஸ்துவை பெருமைப்படுத்திய முஸ்லிம்களை அனாதரவாக்கி விட்டு இயேசு கிருஸ்துவை அவர்களின் பிறப்பு முதல் இறப்புவரை கேவலப்படுத்திய யூதர்களுக்கு , அரசியல் ரீதியாக உதவிகள் பல செய்து முஸ்லிம்கள் வாழ்ந்து வந்த இடங்களைப் பிடுங்கி யூதர்களிடம் கொடுக்க ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கிருத்துவ நாடுகள் முன்னணியில் நின்றன என்றால் அதன் காரணங்கள் யாவையாக இருக்கும் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

இன்னொரு வரலாற்று நிகழ்வையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம். பெருமானார் ( ஸல்) அவர்கள் மக்காவில் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு நபித்துவம் வழங்கப்பட்டபின் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரு சின்னஞ்சிறு முஸ்லிம்களின் கூட்டம் தாங்கள் ஏற்றுக் கொண்ட ஓரிறைக் கொள்கையை எதிர்த்து தங்கள் முன்னால் குத்தீட்டிகளை நீட்டிய குறைஷிகளின் கொடுமைகளில் இருந்து தப்பித்து அபிஷீனிய நாட்டுக்கு அகதிகளாக ஹிஜ்ரத் செய்தார்கள். அவ்வாறு ஹிஜ்ரத் செய்தவர்களை திருப்பிக் கட்டி இழுத்துவர மக்காவிலிருந்து குறைஷிகள் ஒரு தூதுக்குழுவை அனுப்பி வைத்தார்கள். அந்தத் தூதுக் குழுவினர் அபிஷீனிய நாட்டின் அரசர் நஜ்ஜாஷி அவர்களின் அவையில், மலைஎனப் பரிசுப் பொருள்களைக் கொட்டி அகதிகளைத் தங்களுடன் திருப்பி அனுப்பும்படிக் கோரினார்கள். அகதிகளாக வந்த முஸ்லிம்களை தனது அவைக்கு அழைத்த நஜ்ஜாஷி மன்னர், அவர்களை விசாரித்தபோது பெருமானார் ( ஸல்) அவர்களின் தூதுத்துவத்தையும் இறைவன் வஹி மூலம் தனது வார்த்தைகளை வழங்குவதையும் எடுத்துச் சொன்னார்கள். அப்படி வழங்கப்பட்ட திருமறையின் சில வசனங்களை ஓதிக் காட்டும்படி சொன்னதற்கு சூரா மரியத்திலிருந்து ஓதப்பட்ட வசனங்களைக் கேட்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்த மன்னர் நஜ்ஜாஷி அந்த இறை வசனங்கள் யாவும் உண்மை என்றும் அவை கிருத்தவர்களின் நம்பிக்கையை மெய்ப்படுத்துகின்றன என்றும் கூறி அகதிகளாக வந்த முஸ்லிம்களை திருப்பி அனுப்ப மறுத்து பரிசுப் பொருட்களை பொட்டலம் கட்டி குறைஷிகளில் முகத்தில் தூக்கி வீசினார். பின்னொரு நல்ல நாளில் நஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்பதும் சரித்திரம்.

அதே போல் யூதர்கள் இறைவனைத் தொழுத ஜெருசலம் இருந்த திசை நோக்கியே பெருமானார் ( ஸல் ) அவர்களும் சஹாபாக்களும் இறைவனின் திசை மாற்றல் உத்தரவு வரும்வரை தொழுது கொண்டிருந்தார்கள் என்பதையும் , தவ்ராத் வேதத்தில் கூறப்பட்ட விதி முறைகளின் அடிப்படையிலேயே யூதர்கள் நோன்பு நோற்ற நாட்களிலும் அத்துடன் ஒருநாள் கூடுதலாகவும் நோன்பு நோற்றார்கள் என்றும் யூதர்களின் நம்பிக்கையை கண்ணியப்படுத்தியக் காட்சிகளையும் காண்கிறோம். பெருமானார் ( ஸல் ) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்ததற்குப் பிறகு , யூதர்களுடன் பல அம்சங்கள் கொண்ட சமாதான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை செய்துகொண்டதையும் காண்கிறோம்.

இதுபோல பல சான்றுகள் மூலம் கிருத்துவத்தை மட்டுமல்ல யூதர்களையும் இஸ்லாம் கண்ணியப்படுத்திய வரலாறெல்லாம் இஸ்ரேலை உருவாக்கிக் கொடுத்த ஐரோப்பிய அமெரிக்க கிருத்தவர்களுக்குத் தெரியாமலா இருந்தது?

அவர்களுக்குத்தெரியும். ஆனால் பொருளாதார ஆதிக்கப் போட்டி நிறைந்த இந்த உலகில் இஸ்லாத்தைப் பரவவிட்டால் தங்களுக்குக் கொட்டிக் கொடுக்கும் வட்டித்தொழில் நசிந்துவிடும்; தங்களது மதுபானத் தொழில் ஒழிக்கப்படும்; தங்களின் சூதாட்டங்களுக்குத் தடை வரும்; தங்களது வணிக ஏகபோகங்களை இஸ்லாம் ஏப்பம் விட்டுவிடும் என்றெல்லாம் எண்ணித்தான், யூதர்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்தி இஸ்லாம் தழைத்தோங்கி வேர்விட்டு வளர்ந்த அரபு நாடுகளுக்கு மத்தியில் இஸ்ரேல் என்ற நாட்டை ஈன்றெடுத்துக் கொடுத்தார்கள். ஐந்து நேரங்களிலும் அல்லாஹு அக்பர் முழங்கும் அராபிய பூமியில் உலகமே ஒதுக்கித் தள்ளிய குப்பைகளை கொலுமண்டபத்தில் ஏற்றினார்கள்.

அதுமட்டுமா காரணம்? குணத்தால் கொடியவர்களென்று படைத்த இறைவனால் பட்டம் சூட்டப்பட்ட யூதர்களை தங்கள் நாட்டில் வைத்துக் கொள்ள விரும்பாத ஐரோப்பிய நாடுகள் அவர்களை அப்படியே விட்டு விட்டால் தங்கள் நாடுகளில் தங்கிவிடக்கூடும் அதற்கு இடம் தரக் கூடாது என்றே தனிநாடு என்ற ஒற்றை ஆசைகாட்டி யூதர்களைப் புறந்தள்ளவே அந்நாடுகள் ஒன்றிணைந்து இஸ்ரேலை உருவாக்கின என்ற ஒரு கருத்தும் உலகின் அரசியல் அரங்கில் நிலவுகிறது.

இப்படிப்பட்ட உள்நோக்கம் கொண்ட இஸ்லாத்துக்கு எதிரான உலக நாடுகள்தான் பரம்பரைப் பகைவர்களுக்கு மத்தியில் இஸ்ரேல் என்கிற சவலைப் பிள்ளைக்கு சக்திவாய்ந்த சகல ஆயுதங்களையும் கொடுத்து அந்த நாட்டை சகலகலாவல்லவனாக மாற்றிவைத்து படம் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இஸ்ரேல் உருவான பிறகு மனித குலத்துக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்களை எதிர்த்துப் பேச ஐ. நா . சபைக்கு நா இல்லாமல், வல்லரசுகளுக்கு முன்னால் ஒரு நாயைப் போல நாவைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருக்கிறது.

எப்படியோ, இஸ்ரேல் உருவாகிவிட்டது; மண்ணின் மைந்தர்கள் ஆன முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்டார்கள்; அன்றாடம் துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்; ஆனால் தங்களின் மண் மட்டும் அவர்களின் கண்ணை விட்டும் கருத்தைவிட்டும் போகவில்லை. தாங்கள் அனுபவிக்கும் அத்தனை துன்பங்களுக்கிடையிலும் தங்களின் பாலஸ்தீன மண்ணை அவர்கள் துறந்து தாங்களாக ஒருபோதும் வெளியேறவில்லை.

இன்று உலகம் கண்டு வரும் எண்ணற்ற அரசியல் பிரச்னைகளுக்கு இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டதும் – அந்த நாட்டில் பிறந்து வாழ்ந்த அரபு மக்கள் அன்னியர்கள் போல ஆக்கப்பட்டு காஸா போன்ற ஒரு இடத்தில் ஓரங்கட்டப்பட்டதும் அடிப்படைக் காரணங்கள் என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். அகில உலகத்தின் அரசியல் முடிச்சின் முனை , எங்கே சுற்றினாலும் அது பாலஸ்தீனத்தில்தான் கிடைக்கும்; அவிழும்.

முஸ்லிம்களாகிய பாலஸ்தீனியர்களை நாம் வென்று விட்டோம்; வெளியேற்றி விட்டோம்; அகதிகளாக ஆக்கிவிட்டோம்; அன்றாட வாழ்வுக்கு அலைபாய வைத்துவிட்டோம் என்றெல்லாம் இஸ்ரேலும் மேற்கத்திய நாடுகளும் மகிழ்ச்சியில் மல்லாந்து கொண்டு மனப்பால் குடிக்க வேண்டாம்.

இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டது என்பது அரசியல் மைதானத்தில் விளையாடும் ஒரு விளையாட்டல்ல . இவர்களின் இந்தச் செயல் ஒரு வரலாற்று துரோகம் என்பதும் அதையும் விட மேலாக இவ்வுலகைப் படைத்து பரிபாலித்துவரும் இறைவனோடு இவர்கள் விளையாடும் விபரீத விளையாட்டு என்பதை ஐரோப்பிய அமெரிக்க கிருத்தவ நாடுகள் உணரும் காலம் வந்தே தீரும்.

ஒருவேளை வல்லரசுகள், தங்களின் இந்தச் செயலை ஒரு விளையாட்டு என்றே எடுத்துக் கொண்டாலும் இந்த விளையாட்டின் முதல் பாதியைத்தான் இன்றைய உலகம் கண்டு வருகிறது. முதல் பாதியை அமெரிக்காவும் ஐரோப்பாவும் கிருத்துவ யூதக் கூட்டணி என்கிற அவர்களின் தவறான உறவில் பிறந்த இஸ்ரேலும் வென்றிருக்கலாம். ஆனால், ஆட்டத்தின் அடுத்த பாதியை ஆக்ரமித்து ஆடப்போவது அல்லாஹு சுபஹானத்துல்லாஹ்தான் . அதுவே இறுதி வெற்றி. அதுவரை உலகம் அவசரப் படாமல் இருக்கட்டும். ஒரு காலம் வரும் ; இந்தக் காக்கைகள் கூட்டம் ஒழியும் .

அல்லலுற்று ஆற்றாது அழுத கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் படையல்லவா?

மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமுதலைகள் என்கிற பூர்ஷ்வாக்களின் வளர்ச்சி, அவர்களில் பலர் யூத விந்தணுக்களின் வித்தைகளுக்குப் பிறந்தவர்கள் என்கிற உணர்வு, கிழக்கு ஐரோப்பாவில் நீடித்து வந்த நிலபிரபுத்துவம், ரஷ்யாவில் ஏற்பட்ட மாற்றங்கள், இரு உலகப் போர்களிலும் ஜெர்மனியின் தோல்வி, அதனால் திணிக்கப்பட்ட ஒப்பந்தம் , புதிதாக வல்லரசாக உருவெடுத்த அமெரிக்காவின் எழுச்சி ஆகிய அரசியல் காரணிகளே இஸ்ரேல் உருவாகவும் இன்று அரபு உலகை ஆட்டிப் படைக்கவும் காரணங்களாயின.

ஒரு விஷயத்தை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இரண்டாம் உலகப் போரின் மையப் புள்ளி ஜெர்மனிதான். போரைத் தூண்டியதும் போரை ஆரம்பித்ததும் ஜெர்மனிதான். ஆனால் போரை முடிவுக்குக் கொண்டு வந்த அணுகுண்டுகள் நியாயமாக ஜெர்மனியின் மீதுதானே வீசப்பட்டு இருக்க வேண்டும்? ஆனால் எங்கே வீசப்பட்டன ? ஜப்பானிய நகரங்களின் மீதுதானே வீசப்பட்டன? ஏன்?

ஏனென்றால் ஜெர்மனி ஒரு கிருத்துவ நாடு . ஜெர்மனியை சுற்றி உள்ள இதர ஐரோப்பிய நாடுகளும் கிருத்தவ மதத்தைப் பின்பற்றும் நாடுகள். ஆனால் ஜப்பான் பின்பற்றுவதோ புத்த மதத்தை. ஆகவே Blood is thicker than Water என்ற அடிப்படையில் அழிந்தால் ஜப்பான் அழியட்டுமென்று ஜப்பான் மீது அணுகுண்டுகள் அமெரிக்காவால் வீசப்பட்டன. எதிரிகளாக இருந்தாலும் கிருத்தவர்கள் அமெரிக்காவால் காப்பாற்றப்பட்டார்கள். அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளின் அனல் காற்று இன்றுவரை ஜப்பானில் வீசிக் கொண்டிருக்கிறது.

ஆனால் நண்பர்களே! நன்கு அறிந்து கொள்ளுங்கள் இந்த அரசியல் காரணங்கள் அனைத்தையும் மீறி அகிலத்தை படைத்த அல்லாஹு உடைய ஆன்மீகக் காரணங்கள் உலகில் இறக்கப்படும்போது , இஸ்ரேல் மீது இரக்கப்பட யாரும் இன்றி இந்த அரசியல் காரணங்கள் அனைத்தும் தலை குப்புறப் புரட்டப்படும். யூதர்களுக்குப் பாடம் புகட்டப்படும். இப்படிப் புரட்டப் போகிறவனும் புகட்டப்போகிறவனும் அவனோ இவனோ அல்ல. அல்லாஹ்! ஆம்! அல்லாஹ்!

இந்த நிலைமைகளுக்கான பல செய்திகளை ஆதாரங்களோடு இறைவனின் திருமறை எடுத்துச் சொல்கிறது. இறைவனின் அருள் தூதரும் நிறையவே மொழிந்து இருப்பதன் பதிவுகள் அறிஞர் பெருமக்களால் ஆய்ந்து தரப்பட்டு இருக்கின்றன.

அவைகள்?

இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம்.

இபுராஹீம் அன்சாரி


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு