அலசல் தொடர் எட்டு
இந்த தொடரை தொடர்ந்து படிப்பவர்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இது நேற்று இரவு கருவுற்று இன்று பிரசவிக்கும் கருத்துக்கள் அல்ல. பல ஆண்டுகளாக நெஞ்சில் சுமந்தவைகள். நல்ல அறிவுஜீவிகள் விரவிக்கிடக்கும் தளம் கிடைத்ததால் இவற்றை எழுதுகிறேன்.
அதுமட்டுமல்லாமல் இவ்வுலகில் என்னைப் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் ஒரு குறிக்கோளுக்காகவும் எழுதுகிறேன். குறிக்கோள் என்ன என்பதை இறைவன் நாடினால் முடிவில் சொல்வேன்.
கடந்த வாரம் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. துபையில் இருந்துதான். எனது அலைபேசியின் எண் கிடைத்த நதிமூலம் தெரியவில்லை. நானும் கேட்கவில்லை. (அ.நி. நெறியாளர் சொல்லலாம்) பேசியவர் ஒரு வேதம் மிகவும் படித்த பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த சகோதரர். அவர் பெயர் ஒன்றும் முக்கியமில்லை. அவர் சொன்ன கருத்தே முக்கியம். எழுத்தைப் பாராட்டிவிட்டுக் கேட்டார். நீங்கள் எழுதுவது நன்றாக இருக்கிறது. ஆனால் இவ்வளவு காலம் கடந்து – மனுநீதி காலாவதியாகிவிட்டது- யாரும் பயன்படுத்துவது இல்லை- இதை இப்போது தூசு தட்டி நீங்கள் எழுதவேண்டிய அவசியம் என்ன என்று கேட்டார். நான் சொன்னேன். இந்த கேள்வியை நீங்கள் தளத்தில் பின்னூட்டம் இட்டு ஒரு கேள்வியாக கேளுங்கள் நான் விளக்கமாக- பதில் தருகிறேன் என்றேன். அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. எனவே நான் சொன்னேன் உங்களின் கேள்விக்கு பதிலை நான் அடுத்த அத்தியாயத்தில் தருகிறேன் என்று சொன்னேன். கண்ணியமான முறையிலான உரையாடல் முற்றுப்பெற்றது. அவர் கேட்ட கேள்விகள் நம்மிலும் மேலும் சிலருக்கும் எழக்கூடும். ஆகவே பதில் தந்துவிட இந்த அத்தியாயத்தில் நினைக்கிறேன்.. இந்த பதிலுக்காக இந்த அத்தியாயம் கூடுதலாகிவிட்டது.
முதலாவதாக மனு நீதியை இப்போது ஆராய வேண்டிய அவசியம் என்ன?
மனித வளம் நிறைந்த நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி குன்றிப்போனதற்கு காரணங்களை நாம் சிந்தித்தால் எண்ணிக்கையில்தான் நாம் மனிதர்களைப் பெற்றிருக்கிறோம் என்பதும் , தரத்தில் அல்ல என்பதும் விளங்கும். இருக்கும் மனிதர்கள் அறிவிலும், ஆற்றலிலும், கல்வியிலும் தரமானவர்களாக இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. சின்னஞ்சிறு நாடுகள் தரமான மனித வளத்தை வைத்து சாதிப்பதை பெரிய நாடான நாம் சாதிக்க முடியவில்லை. இதற்கு முக்கியக் காரணம் ஆண்டாண்டுகாலமாக நமது நாட்டின் மனித வளம் சாதி, சமயம், உயர்வு , தாழ்வு, பெண்ணடிமை, தீண்டாமை, கல்வி மறுப்பு போன்ற கொடிய நோய்களால் பீடிக்கப்பட்டு வந்திருக்கிறது. இன்று அந்த நோய்களின் தீவிரம் குறைந்திருக்கலாம். ஆனால் முற்றிலும் மறைந்து விடவில்லை. இந்த நோய்கள் பரவுவதற்கு முக்கிய காரணிகளாக இருந்தவை வேதங்கள், புராணங்கள், மனுநீதி போன்ற சட்டங்கள் ஆகியவையாகும். ஆகவேதான் தாழ்வுக்குக் காரணம் யாவை என்பதை வரலாற்று ரீதியாக சுட்டிக்காட்டவே மனு நீதியைப் பற்றி பேச வேண்டி இருக்கிறது. நோயைத் தீர்க்க வேண்டுமானால் நோயின் மூல காரணம் காணப்படவேண்டுமல்லவா?
இரண்டாவதாக மனு நீதி காலாவதியாகிவிட்டது என்று யார் ஒப்புக்கொள்ள முடியும்? அது இன்றளவும் தன் கொடியபலத்தோடு இந்திய சமூகத்தை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்க நடைமுறையில் நூறுநூறு உதாரணங்களைக் காட்ட முடியும்.
பொருளாதார மேன்மைக்காகப் போடப்பட்ட சேது சமுத்திரத்திட்டம் சாஸ்திர புராணங்களின் பெயரால் இன்று முடங்கிப்போய் கிடக்கும் ஒரு உதாரணமே போதும் இவர்களின் வாயை அடைக்க.
அரசியல் சட்ட மேதை டாக்டர் அம்பேத்காரின் சிலைகளை அசிங்கம் கொண்டு அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால் மனு நீதி தந்த மனுவுக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத்தில் சிலைவைத்தவர்களைப் பார்த்தோ, மநுஸ்மிருதியை தன் உயிரினும் மேலாய் மதிப்பதாகச் சொன்ன காஞ்சி சங்கரர்களைப் பார்த்தோ ‘ஏனிப்படி தூசு தட்டி எடுக்கிறீர்கள்’ என்று கேட்காதவர்கள் நம்மைப் பார்த்து இப்படி குற்றம்சாட்ட என்ன நியாயமிருக்கிறது?
ஹரிஜன்களும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை கலைஞர் கருணாநிதி கொண்டுவந்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு என்ன ?
பாரம்பரியமாக இருக்கும் இந்துக்களின் ஆச்சார அனுஷ்டானங்க்களை மனு நீதி வகுத்த சட்டத்தின் முறையில்தான் கடைப்பிடிக்கவேண்டும் என்று தீர்ப்பளிக்கவில்லையா?
தாழ்த்தப்பட்ட பிறபடுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் இட ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று மனுநீதியை பின்பற்றும் உயர்சாதியினர் கங்கணம் கட்டி அலையவில்லையா? அதற்காக வழிவகுத்து மண்டல் கமிஷன் அறிக்கையை செயல் படுத்திய வி. பி.. சிங் அரசை உயர்சாதியினர் ஒன்று கூடி கலைக்கவில்லையா?
இன்றளவும் திருவண்ணாமலையில் உயர் சாதியினர் படிக்கும் பள்ளியில் தாழ்ந்த சாதியினரை சேர்க்கக்கூடாது என்று தனிப்பள்ளிக் கூடம் நடத்தவில்லையா?
பொள்ளாச்சியை அடுத்த பூவலப்பருத்தி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த குழந்தைகள் உயர்சாதியினரின் குடியிருப்பைக்கடந்து பள்ளிக்கு செல்லும்போது தங்கள் காலணிகளை கழற்றி கையில் எடுத்துச்செல்லவேண்டிய அடக்குமுறை கொடுமை இன்னமும் இருக்கிறது.அந்த சமுதாயத்தில் எவரேனும் இறந்து போனால் அவர்கள் சவ ஊர்வலம் இந்த பகுதியை கடந்து செல்ல அனுமதி கிடையாது.
அண்மையில் வந்த செய்தி. தலித்துகளின் தலைவியான மாயாவதி ஆட்சி செய்தபோது – உத்திரப்பிரதேசத்தில் ஒரு 42 வயதான ஒரு தாய் ஒரு உயர்சாதி வகுப்பினரால் கூட்டாக கற்பழிகப்பட்டாள். கற்பழிக்கப்படும் முன் அவளும் அவளது கணவரும், இரண்டு மகன்களும் கண்காணாத இடத்துக்குக் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். புரிந்த குற்றம் அந்தத் தாயின் இன்னொரு மகன் உயர் சாதிப் பெண் ஒருவளுடன் ஊரை விட்டு ஓடியதுதான். காவல்துறை இதில் ஒன்றும் செய்யவில்லை காரணம் குற்றம் புரிந்தவர்கள் சாதியிலும் ,செல்வத்திலும் ,செல்வாக்கிலும் பலம் படைத்தவர்கள்.
AMNESTY INTERNATIONAL என்கிற அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு அறிக்கையில் தலித் பெண்கள் மீது பாலியல் ரீதியான வன்கொடுமைகள் EXTREMELY HIGH என்று கூறியிருக்கிறது. இவற்றை நிகழ்த்துபவர்கள் உயர் சாதியினர் மற்றும் , காவல்துறையின் அதிகாரிகள் என்று அந்த அமைப்பு கூறி இருக்கிறது கொடுக்கப்படும் புகார்கள் மீது 5% வழக்குகள் மட்டுமே பதியப்படுவதாகவும் கூறி இருக்கிறது.
கடந்த ஜூன் 30 1997 - சாதி வெறியர்களின் வெறியாட்டம் உச்சத்திற்கு சென்ற நாள் ,சாதி ஒழிந்துவிட்டது சமத்துவம் மலர்ந்து விட்டது மனுநீதி செத்துவிட்டது- காலாவதியாகிவிட்டது என்று சொல்லித்திரியும் அன்பர்களே மேலவளவு என்ற கிராமத்தில், பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு நின்று வெ.ற்றி பெற்றார் என்கிற ஒரே காரணத்திற்காக, ஓடுகிற பஸ்சில் ஆதிக்க ஜாதி வெறியர்களால் வித விதமாக வெட்டி கொலை செய்யப்பட்டார் ஒருபாவமும் அறியாத முருகேசன்.
அந்தக் கொலை வழக்கில் உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்புரையின் சிறிய பகுதி இங்கே :
“ஈனப்பயலான உனக்கு எதற்கு தலைவர் பதவி, எதற்கு நஷ்ட ஈடு?” என்றபடி, தான் பதுக்கி வைத்திருந்த (அருவாள்) ஆயுதத்தால் அழகர்சாமி முருகேசனின் வலது தோளில் வெட்டினார். பேருந்திலிருந்த பயணிகள் அலறி அடித்து இறங்கி ஓடினார்கள். அழகர்சாமி முருகேசனின் தலையைத் துண்டித்து, துண்டித்த தலையோடு மேற்கு நோக்கி ஓடினார்” . நான் கேட்கிறேன் மனு நீதி மறைந்துவிட்டதா அல்லது மனிதத் தன்மை மறைந்து வருகிறதா?
ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள 246 கிராமங்களில் இருக்கின்ற டீக்கடைகளில் தாழ்த்தப்பட்ட மக்களிடம் இருந்து ரூபாய் நோட்டுக்களை வாங்குவதில்லையாம்.காரணம் அது தீண்டத்தகாத பணமாம்,தலித்துகள் தேனீர் அருந்த வேண்டுமானால் அதற்குண்டான பணத்தை நாணயமாக அந்தக்கடையில் இருக்கும் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் போடவேண்டும்,அதை கடைக்காரர் தண்ணீரில் அலசி எடுத்துக்கொண்டு அவர்களுக்கென இருக்கும் தனிக்குவளையில் டீ ஊற்றுவார். இது போன்ற நிலமை தமிழகத்தின் பல பகுதிகளிலும் காணப்படுகிறது. ஒரே நாடு!ஒரே மக்கள்! ஒரே சட்டம்! என்போரே, நாமெல்லாம் இந்து, நமக்குள் வேறுபாடுகள் இல்லை என்று மயக்கும் வித்தைகளை காட்டும் சங்பரிவாரங்களே!தமிழ் தேசியம் பேசிடும் ஆன்றோர்களே!சான்றோர்களே இந்த கொடுமைகள் குறித்து உங்கள் கருத்து என்ன?உங்கள் நிலைப்பாடு என்ன?இந்த நிலையை மாற்றிட நீங்கள் செய்யப்போகும் களப்பணி என்ன? பரிகாரம் என்ன? மாற்று மருந்து என்ன?
மனு நீதிக்கு வக்காலத்து வாங்கும் ஆர் எஸ் எஸ் , சங்க பரிவார் போன்ற அமைப்புகளால் இந்தியாவில் 28,861 கல்வி நிலையங்கள் நடத்தப்படுகின்றன. இதில் 32,33,337 மாணவர்கள் பயிலுகிறார்கள். 1,57,741 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆசிரியர்களுக்குத் தனியாக பாரதிய சிக்ஷா மண்டல் என்ற அமைப்பும் உண்டு.
இவையன்றி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவை எல்லா வற்றிலும் மனு மற்றும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன..
முழுக்க முழுக்க இந்துத்துவா வெறி என்னும் நஞ்சு ஊட்டப்படுவதோடு, சிறுபான்மை மதங்கள் மீது குரூரமான முறையில் வெறுப்பு விதைகளும் தூவப்படும் அபாயமும் உண்டு.
இவ்வாறு பயிற்சி பெறும் மாணவர்கள் வெளியே வருவார்களேயானால், நாட்டில் அமளி துமளிகளும், வன்முறைகளும், அமைதியற்ற தன்மையும்தானே தலை விரித்தாடும்? இதற்கான பயிற்சிதானே அவர்களுக்குத் தரப்படுகிறது?
ஆசிரியர் தினம் என்று அரசு அறிவித்துள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக வியாச முனிவர் பிறந்த நாள் என்று ஜூன் 25 ஆம் தேதி கடைப் பிடிக்கப்படுகிறது.
குழந்தைகள் தினம் என்று அரசு அறிவித் துள்ள நேருவின் பிறந்த நாளை இவர்கள் ஒப்புவதில்லை. மாறாக இந்துக் கடவுள் கிருஷ்ணன் பிறந்த நாள் என்று கோகுலாஷ்டமியைத்தான் கொண்டாடச் செய்கிறார்கள்.
பாடத்திட்டங்கள் எப்படி இருக்கும்? எடுத்துக் காட்டாக ஒன்று. உத்தரப் பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் சரஸ்வதி சிசு மந்திர் பள்ளியில் ஏழாம் வகுப்புப் பாடத்தில் இடம் பெற்றிருப்பதாவது : முலாயம் சிங் இக்கால இராவணன் என்று ஏன் அழைக்கப்படுகிறார்? பாபர் மசூதியை இடிக்கும் முயற்சி நடந்தபோது முலாயம் சிங் யாதவைச் சேர்ந்த ஆட்களின் துப்பாக்கிக் குண்டுகளால் எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டனர்? (அவுட் லுக் 10.5.1999)
இந்திய வரலாற்றுக் குழுவை மாற்றி அமைத்து ஆர்.எஸ்.எஸ்.காரர்களை அதில் திணித்தது பி.ஜே.பி. ஆட்சி.
இந்திய வரலாறு தலைமுறைகளை அழிக்கும் குண்டுகளைத் தயாரிக்கும் ஆலைகளாக (Bom Mahib Factories) மாற்றப்பட்டுவிட்டது பா.ஜ.க. ஆட்சியில்என்று ஃப்ரன்ட் லைன் ஏட்டில் கட்டுரையாளர்கள் பார்வதி மேனன், டி.கே.ராஜ லட்சுமி ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகள் கண்காணிக்கப்பட வேண்டும். சிறுபான்மையினரின் மார்க்கக் கல்வி பயிற்சி தரும் மதரசாக்களை தீவிரவாத குழுக்களுடன் இணைத்துப் பேசும் மனநிலை பாதிக்கப்பட்டோர் இத்தகைய ஆர் எஸ் எஸ் பள்ளிகளைப்பற்றி வாய்மூடி இருப்பது என்?
எனது ஆண்குறியை வெட்டிக் கொண்டாலும் வெட்டிக் கொள்வேனே தவிர எனது பூணூலை அறுத்துக் கொள்ளமாட்டேன் என்று ஒரு பிராமண சாமியாரால் பகிரங்கமாக தனது சாதியகங்காரத்தை வெளிப்படுத்த முடியுமென்றால், உயிர்நிலையான ஆண்குறியை விடவும் பெரிதென கொண்டாடுகிற அந்த பூணூலை அவருக்கு வழங்கிய மனு நீதியை எதிர்ப்பதைத் தவிர பார்ப்பனரல்லாத பிறசாதியாருக்கு வேறு என்னதான் மார்க்கமிருக்கிறது? ( படிப்பவர்கள் ஐயம கொள்ளும் முன்பு - இப்படி அறிவித்தவர் நித்யானந்தா சாமிகள் அல்ல).
மகாத்மா என்ற அடைமொழிப்பெயர் வரலாற்றில் தேசத்தந்தை காந்தி அவர்களை மட்டுமே குறிக்கும்படி வரலாற்றில் எழுதிவைத்து இருககிறார்கள். காரணம் காந்தி உயர்சாதியைச் சேர்ந்தவர். ஆனால் இதே மகாத்மா என்ற பட்டத்துக்குரிய மற்றொருவர் வாழ்ந்தது இந்த தேச வரலாற்றில் மறைக்கப்பட்டு இருக்கிறது. அவர் உயர் சாதியினரின் தீண்டாமையை எதிர்த்து காலமெல்லாம் போராடியவர். இவரது வாழ்வின் வரலாறு தனி பதிவாகவே வரவேண்டும். அவர் பெயர் மகாத்மா ஜோதிராவ் பூலே (Mahathma Jyotirao Phule) என்பதாகும். இவருடன் இவரது மனைவியும் சேர்ந்து தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் , பெண்களுக்காகவும் உருவாக்கிய பள்ளிக்கூடம் உயர் சாதியினரால் அன்று இரவே தீவைத்துக் கொளுத்தப்பட்டது. அஹமத் நகர தலித்துகள் ஒன்று கூடி நிதி திரட்டி தனி இடம் வாங்கிக் கொடுத்து அமைக்கப்பட்ட பள்ளிக்கூடத்துக்கு மனுநீதியின் சட்டங்களுக்கு ஒவ்வாது என்று உயர்சாதிக்காரர்களின் நிர்ப்பந்தத்தால் அனுமதி தர மறுத்தது அரசு. ஆகவே தலித்துகளை படிக்க முடியாமல் வைத்தது மனு நீதி. அதையும் மீறி படிக்க வந்த அம்பேத்கார் போன்றவர்கள் படிக்கும் காலத்தில் பள்ளிகளை பட்ட பாடுகளை அவரது வாழ்க்கை வரலாற்றை படித்துப் பார்த்தால் புரியும்.
வர்ணாசிரமத்தின் வாரிசுகளால் பீமாசுரன் என்றும் மனுவிரோதன் என்றும் வசைபாடப்பட்ட சட்டமேதை அம்பேத்கார் 1927- ல் மனு நீதியை தீ வைத்து எரித்தார். மனு நீதிக்கு எதிரான அத்தகைய தீயை அணைத்து விட்டதாக உயர்சாதியினர் நினைக்கலாம். ஆனால் அந்த தீ ஒரு நீறு பூத்த நெருப்பு . காற்று வீசும்போதேல்லாம் அந்த தீ உயிரெடுக்கும். மனு நீதி காலாவதியாக வேண்டுமென்றால் அந்த நெருப்பு முழுதும் அணைந்து மனு நீதி சட்டங்கள் அதில் சாம்பலாகி காற்றோடு பறக்கவேண்டும். மனு நீதி அப்படி சாம்பலாகும் வரை அது காலவதியானதாக ஏற்க முடியாது. அவ்வப்போது இப்படி விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கும். இப்படி அடிக்கடி தலையில் தட்டியே இந்த ஆட்டம் போடுகிறீர்கள். அதையும் விட்டால் ?
மீண்டும் சொல்கிறேன். மனு நீதி உண்டாகிய பிறப்புப் பாகுபாடுகள் வேரோடு அழியும் வரை அல்லது இந்தப் பாகுபாடுகள் இல்லாத சமத்துவ சமுதாயம் அமைய வழி காட்டும் மற்றொரு சமத்துவத்தை அடிப்படையாக வைத்துள்ள மார்க்கத்தை மக்கள் அனைவரும் ஏற்கும்வரை மனு நீதி காலாவதியான ஒன்று என்று ஏற்கவே முடியாது. அப்படி ஏற்க வேண்டுமானால் பூநூல்கள் அணிவது சட்டப்படி தடை செய்யப்படவேண்டும். கல்வியில், வேலைவாய்ப்பில் உயர் வகுப்பினரின் ஆதிக்கம் ஒழிக்கப்படவேண்டும். பிராமணர்களும் சேரிகளை மேம்படுத்தி கலந்து சமமாக வசிக்கவேண்டும். அக்கிரஹாரங்கள் அகற்றப்படவேண்டும். அரசு வேலைகளில் அனைவருக்கும் இட ஒதுக்கீடு உள்ளபடி உயர்சாதியினருக்கும் கடைத்தெருவில் கடைகளில் எல்லா வியாபாரமும் செய்ய இட ஒதுக்கீடு வேண்டும்; தோட்டி வேலையானாலும், துப்புரவுப்பணியானாலும் எல்லோரும் இணைந்து வேலை செய்யவேண்டும். பிராமணர்கள் வயலில் ஏர் பூட்டி உழ வேண்டும் ( குறைந்த பட்சம் டிராக்டராவது ஒட்டுங்களேண்டா) மொத்தத்தில் எல்லோரும் எல்லா வேலைகளையும் சமமாக செய்ய மனமாற்றம் வேண்டும். இந்த நிலை ஏற்படும் வரை மனு நீதியும், அதன் தாக்கமும் காலாவதி ஆகிவிட்டது என்ற் அன்பர்கள் கூற்றை ஒருகாலமும் ஏற்க முடியாது.
அடுத்த அத்தியாயத்தில் உலக ஆசைகளை துறக்க நினைக்கும் துறவிகளுக்கு மனு நீதி தனது ஆறாம் அத்தியாயத்தில் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
சாட்டைக்கு இன்னும் வேலை இருக்கிறது.
இபுராஹீம் அன்சாரி


