வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் அனைத்தும் ஆரம்ப காலத்தில் மனிதனின் உடல் சார்ந்த பணிகளை இலகுவாக்கின. காலங்கள் மாற மாற, அவை மனிதனின் சிந்திக்கும் பணியினையும் இலகுவாக்கின; பின்னாளில் சிந்திக்கவும் விடுவதேயில்லை. ஆக, மனிதன் தனக்காக உருவாக்கிய இயந்திரங்கள் அனைத்தும் மனிதர்களைத் தன்வசமாக்கிவிட்டன.
இதற்கனைத்திற்கும் மூல காரணம்: மனிதனின் சோம்பேறித்தனம். இந்த சோம்பேறித்தனத்தால், சிந்திக்கும் திறனை இழந்ததால், மனிதனுக்கு எந்தளவு நஷ்டம் ஏற்படுகிறது என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் தான் இப்பேரங்காடிகளின் (ஷாப்பிங் மால்) ஏமாற்றும் வித்தைகள் கூறும் பாடங்கள். இனியேனும் மனிதன் சிந்திக்கத் முற்பட வேண்டும் என்பதை உணர்த்தவே இச்சிறிய பதிவு.
"அந்த மாலில் வாங்கியதாக்கும்" என பிறரிடம் பெருமைபட்டுக்கொள்ளாதவர் யாரேனும் நம்மில் உண்டா? சில ஷாப்பிங் மால்கள் நகரத்தின் வெளிப்புறத்தில் தனியாகக் கட்டப்பட்டிருக்கும். ஏன்? நகரத்தின் மையப்பகுதியில் அமைந்திருந்தால் இன்னும் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்திருக்கலாமே என்று நினைத்திருக்கிறீர்கள் தானே? இதற்கு ஒரு மனோதத்துவ காரணம் இருக்கிறது. அது இதுதான்.
அந்த வெளிப்புற ஷாப்பிங் மாலில் கணவன் – மனைவி பேசிக்கொள்வதாக வைத்துக்கொள்வோம்.
கணவன்: இது என்ன இவ்ளோ ரேட் போட்டிருக்கான்? போன வாரம் அந்த ஷாப்பிங் மாலில் இது 100 ரூபாய் கம்மியா பார்த்த ஞாபகம்.
மனைவி: ஆமாங்க.. எனக்கும் எல்லாமே விலை கூட மாதிரி தான் தோணுது. இவ்ளோ விலை கொடுத்து யார் வாங்குவா? (கேட்கும் நீங்களே தான் மேடம்)
சரி.. சரி.. இவ்ளோ தூரம் வந்தாச்சு… இவ்ளோ நேரம் நின்னாச்சு.. அதுக்காகவாவது இதெல்லாம் வாங்கிட்டு போவோம். இதெல்லாம் வாங்குறதுக்கு இன்னொரு மாலுக்கு இதுக்கு மேல போகவும் முடியாது. அங்க இன்னொரு இரண்டு மணி நேரம் நிற்கவும் முடியாது.
- இது தான் இந்த வெளிப்புற மால்களின் சூட்சுமம். சூட்சுமம் நம்பர் 1
ஷாப்பிங் மாலில் அமைந்திருக்கும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட கடைக்கு அல்லது விரும்பிய அந்த பொருளை வாங்கச் செல்கிறீர்களா ? உங்கள் கைகளில் வீடு திரும்பும்போது எப்படி இத்தனை பொருட்கள் குவிந்தன….?
கூர்ந்து கவனித்தால் புரியும்.. சினிமா தியேட்டருக்குச் செல்லும் வழியில் அத்தனை கடைகள் இருப்பதில்லை. ஏனெனில் தியேட்டருக்குச் செல்லும் அவசரத்தில் இருப்பவர் கடைகளுக்குள் செல்ல விரும்புவதில்லை. அதுவே, சினிமா பார்த்துவிட்டுத் திரும்புபவர்கள் சாவதானமாக ஷாப்பிங் செய்ய விரும்புவார். ஆகையால், தியேட்டரின் வாசலில் இல்லாத கடைகள் எல்லாம் வெளியேறும் பாதையில் உங்களைக் கவர்ந்திழுக்கும்.
மால்களின் கட்டமைப்பு ஒவ்வொன்றுக்குப் பின்பும் வாடிக்கையாளர்களின் மனோதத்துவம் அலசி ஆராய்ந்த மெனக்கெடல்கள் பல நிறைந்துள்ளன என்பது வாடிக்கையாளர்களே அறியாத உண்மை.
மகளிர்க்கான, குழந்தைகளுக்கான பொருட்கள் நிறைந்த கடைகள் வரிசையாக ஒரே இடத்தில் அமைந்திருப்பதன் பிண்ணனி, ஒரு கடையில் வாங்க வேண்டாமென உறுதியுடன் கடந்துவிட்டாலும் அடுத்தடுத்த கடைகள் உங்கள் உறுதியைக் குலைத்துவிடுவதற்காகத்தான்.
நீங்கள் வாங்க வந்தது ஒன்றிரண்டு பொருட்களாகக் கூட இருக்கலாம். ஆனால், நீங்க அந்த அம்மாம்பெரிய தள்ளுவண்டி(ட்ராலி)யைத் தான் எடுக்க வேண்டும். அது உங்களை இன்னுமிரண்டு பொருட்களை எடுக்கலாமே என்ற எண்ணம் தானாக துளிர்விடச் செய்யும்.
சூப்பர்மார்க்கெட்டின் நுழைவாயிலில் இருக்கும் பேக்கரியில் என்ன பெரிய சூட்சுமம் இருந்துவிடப்போகிறது? என்று தானே நினைக்கிறீர்கள்? அந்த ஃப்ரெஷ் பேகிங் வாசனையால், உங்கள் மூளை சிந்திக்குமுன்பே செயல்படத் துவங்குகிறது. அதைப்போலவே, காற்றில் மிதந்து வரும் மிதமான இசை உங்கள் ஷாப்பிங்கை நின்று நிதானிக்கச் செய்கிறது, உலகை மறந்து பல பொருட்கள் மீது ஈர்க்கச் செய்கிறது. இது ஆய்வில் கண்டறியப்பட்ட மனிதர்களின் மனோதத்துவம்.
ஷாப்பிங் மால்களின் சில பகுதிகளில் மட்டும் கார்பெட் அமைத்திருப்பார்கள்?ஏன்? கார்பெட்டின் மீதான சாந்தமான உங்கள் நடை உங்களை மேலும் அங்கு நிதானமாகத் தேர்ந்தெடுக்க உதவுகிறது. அதாவது, கூடுதலாக, இரண்டு பொருட்களை வாங்கத் தூண்டுகிறது.
இந்த சூட்சுமம் இன்னும் அதிக நுணுக்கமானது. ஓர் உதாரணம் மூலம் அறிந்துகொள்வோம். அதாவது, ஒரு சிறிய மிக்சியின் தயாரிப்பாளர், அதனை 400 ரூபாய்க்கு விற்கிறார். ம்ஹூம்.. விற்பனையாகவில்லை. ரூம் போட்டு யோசித்தார். தான் தயாரித்ததை விடவும் கொஞ்சம் பெரியதாக ஒரு மிக்சியைத் தயாரித்து, அதனை 700 ரூபாய் என விலை நிர்ணயித்து, அந்த சிறிய மிக்சியினருகிலேயே வைத்தார். இங்குதான் ஓர் வியக்கத்தக்க வணிகம் நிகழ்ந்தது. 400ரூபாய் மிக்சி சூடுபறக்க விற்பனை ஆனது.
மால்களை விட்டும் வெளியேற நினைத்தாலும் தானியங்கி ஏணி(லிஃப்டு)க்குச் செல்லும் வழியெல்லாம் கடைகள்..கடைகள். அத்தனை எளிதில் உங்களை வெளியே செல்ல விடமாட்டார்கள். மேல்தளங்களுக்குச் செல்ல 2,3 தானியங்கி ஏணிகள் இருக்கும். ஆனால் கீழிறங்கவோ ஒரு ஏணிதான் இருக்கும்.
நம் மனதை, நம்மைவிட அதிகமாகக் கணிக்கக்கூடியவர்கள் பேரங்காடிகளின் நிர்வாகத்தினர். நம்மை அவர்கள் கண்காணித்துக்கொண்டே இருக்கின்றனர். சில சூப்பர்மார்க்கெட்டுகளில் பொருட்களை மொத்தமாக அவ்வப்பொழுது இடம் மாற்றி வைப்பார்கள். சற்று சோம்பல் படாமல் சிந்தித்தால் இதிலிருக்கும் சூட்சுமமும் புரிந்துவிடும். இது சூப்பர்மார்க்கெட்டின் உட்புற வடிவமைப்புக்காக மட்டுமல்ல… விற்பனை அதிகரிக்கவும் பின்பற்றப்படும் ஒரு வழிமுறை. ஒரு வாடிக்கையாளர் கடையினுள் நுழைந்தால், அவர் வலப்புறமாகச் செல்கிறாரா இடப்புறமாகச் செல்கிறாரா என்பது வரையிலான அனைத்தும் குறிப்பெடுக்கப்படுகின்றன. அதற்குத்தக்க பொருட்கள் இடம்மாறும். ஒரு பொருள் இருந்த இடத்தில் இன்று வேறொரு பொருள் இருக்கும்பொழுது நமக்குத் தேவையில்லையென்றாலும், அந்த பொருளின் மீது, நம் கவனம் தானாகவே திரும்பும்.
இவைதான் நம் தேவை என தீர்மானித்துவிட்டு கடைகளுக்குச் சென்றால் தேவையில்லாததை வாங்குவதை விட்டும் தவிர்ந்து கொள்லலாம்.
இன்னும் சில விஷயங்கள் நாம் அறிந்து கொள்ள வேண்டியவை:
- 1. பால், அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு, நீங்கள் சூப்பர்மார்க்கெட் முழுவதும் கடந்து செல்லுமாறே வழி ஏற்படுத்தப்பட்டிருக்கும். பால் வாங்கச் சென்ற நீங்கள் கடையை விட்டு வெளியே வரும்போது, குறைந்தது கூடுதலாக பத்து பொருட்களேனும் வாங்கி வந்திருப்பீர்கள்.
- 2. ஒன்றிரண்டு பொருட்கள் வாங்குவதற்கு அருகில் இருக்கும் சின்னச்சின்னக் கடைகள் உகந்தவை. சூப்பர் மார்க்கெட் போல் அதிக லாப இலக்கின்றி, இங்கு குறைந்த விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.
- 3. விலை உயர்ந்த பொருட்கள் அடுக்குப்பலகை(செல்ஃப்)களின் கைக்கெட்டும் தூரத்திலும் அதே தரத்திலான விலை மலிவான பொருட்கள் உயரத்திலோ கீழ்ப்புறமாகவோ வைக்கப்பட்டிருக்கும். சோம்பல் படாமல் உயரத்தில் இருக்கும் பொருளை எட்டி எடுத்தால் பணம் மிச்சமாகும்.
- 4. கடைக்குச் செல்லும்முன், நீங்கள் வாங்கவிருக்கும் பொருளின் விலையை மற்ற கடைகளில் கிடைக்கும் அதே பொருளின் விலையோடு ஒப்பிட்டு பாருங்கள். இதற்குச் சோம்பல்பட்டால், அவர்கள் விரித்த வலையில் நீங்கள் வசமாகச் சிக்கிவிட்டீர்கள் என அர்த்தம்.
- 5. மிகப்பெரும் ஆஃபர் என விளம்பரப்படுத்தப்பட்டால் சோம்பல் படாமல் சிந்தியுங்கள். விலையுயர்ந்த பொருளை உங்களுக்குக் குறைந்த விலையில் கொடுத்துவிட அவர்கள் ஒன்றும் சமூக சேவை புரிய வரவில்லை. அவர்களது லாபம் தான் அவர்களது முதல் இலக்கு. ஏன் திடீரென விலை குறைக்கப்பட்டுள்ளது என விசாரியுங்கள்.
- 6. வாடிக்கையாளரின் பொதுவான ஒரு பலவீனம். கடைக்கு வந்துவிட்டு பொருளை வாங்காமல் சென்று விட்டால் நம்மைக் குறைத்து மதிப்பிடுவார்களோ என கவுரவம் பார்ப்பது. குற்றவுணர்ச்சி மேலிட கடையில் நுழைந்த கடமைக்கு அவசியம்/விருப்பமில்லாத பொருளை வாங்கிச் செல்கின்றனர். இந்த குற்ற உணர்ச்சி தான் அவர்களது பலம். இந்த குற்ற உணர்ச்சிக்குச் சிறிதும் அவசியமேயில்லை. 20 ரூபாய்க்குப் பொருளைத் தயாரித்து 50 ரூபாய் லாபம் வைத்து 70 ரூபாய்க்கு விற்கும் அவர்களுக்கே இருக்க வேண்டியது குற்ற உணர்ச்சி மொத்தமும். ஒரு பொருள் தேவையில்லை என்றாலோ விலை அதிகமென்றாலோ சற்றும் தயங்காமல் நிராகரித்துவிடுங்கள். உங்களைக் கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. வாங்குவதும் வாங்காமல் விடுவதற்கும் தீர்மானிக்க வேண்டியது நீங்கள் தான்.
- 7. இதே கவுரவம் தான்.. பணம் செலுத்துமிடத்திலும் (கேஷ் கவுண்டர்) சில்லறைக்குப் பதிலாக சாக்லேட் தரும்போது பார்ப்பதும். எனக்கு சாக்லேட் அவசியமில்லை.. சில்லறை தான் வேண்டும் எனக் கேட்பது நம் உரிமை. நாம் என்ன சாப்பிட வேண்டும் என நாம் தான் தீர்மானிக்க வேண்டும், பிறரல்ல.
இவை அனைத்தும் அடிப்படையான ஒரு சில சூட்சுமங்கள் தாம். வாடிக்கையாளர்களை ஈர்க்க இன்னும் ஆழமான சூட்சுமங்கள் பல கையாளப்படுவதும் உண்டு.
வாடிக்கையாளர் தான் அரசர். நீங்களின்றி அவர்கள் இல்லை என்பதை ஒரு போதும் மறக்க வேண்டாம்.
பானு என்றென்றும்...

