அன்னையவள் அன்பென்னும் அருமருந்தே அரவணைத்து,
இன்பமெனும் செல்வமென எந்நாளும் காத்திருந்து,
தன்னலமே தான்மறந்து தரணியிலே வாழ்ந்திருக்கும்!
தாயவளின் உள்ளமது தவறுகின்ற தன்மகனின்...
காயங்கள் மட்டுந்தான் காணுமன்றி வேறெங்கும்
சாயுதலே இன்மையினால் தந்தையின் பாசத்தை
நேயமுடன் நானிங்கு நெகிழ்கவிதை பாடவந்தேன்!
தாயவளே சிலநேரம் தாவென்று தம்மக்கள்
நேயமுடன் கேட்கின்ற நெகிழ்ம பொம்மையதை
வாயுரையால் விலக்கிவிட மாளாத துயரடையும்
சேயதனின் ஆசைதனை தீர்ப்பவரும் தந்தையன்றோ?
முழுமைபெற்ற இலக்கியத்தை, முற்றுமுணர் மாந்தர்களை,
பழுதறவே தம்மன்பைப் பாங்காக மைந்தர்முன்
வழுவகன்ற வார்த்தைகளில் மலர்ந்தருளுந் தந்தையரை
விழுந்தெங்கும் தேடுகிறேன்; மேதினியில் காணவில்லை!
தந்தையுளம் தரணியிலே தவறிவிழும் தனயனையே
முந்திவந்து காத்திடத்தான் முனைந்தாலும்; வீழ்ந்தெழுகும்
தந்தனையன் தூசுகளைத் தட்டிவிட்டு மீள்முனையச்
சிந்தனையைக் கூராக்கிச் செப்பலிடும் சீர்மையன்றோ!
அன்னையென்ற கட்டிடத்தின் அடித்தளமே தந்தையவர்
தன்னிருப்பால் தடையின்றித் தருகின்ற தைரியமே;
தன்மகனை ஊர்போற்றும் சான்றோனாய் ஆவதற்கே
முன்னிருத்தும் தந்தையவர் முகமூடி கண்டிப்போ?
நாம்கலங்கும் வேளையிலே நம்பிக்கை தான்கொடுத்து,
நாம்சறுக்கும் வேளையிலே நமையேந்தித் தான்பிடித்து,
நாம்பிறழும் வேளையிலே நமைக்கடிந்தே தான்காத்து,
நாம்சிறக்கும் வேளையிலே நமைக்கண்டே தான்சிலிர்த்து
தளிர்க்கின்ற சிறுவிதையும் தானாக எழுவதுபோல்
வளங்களுடன் தம்மைந்தர் வாழ்ந்திருக்கச் சுயம்புவென
களம்தனிலே கருத்தூன்றிக் கலக்கிடவே விரும்புகின்ற
உளப்பாங்கு கொண்டநல் உன்னதமே தந்தையன்றோ!
அத்தனைப் பெருமைகளை அற்புதமாய் வாழ்த்துகளை
முத்தனைய சிரிப்பொன்றால் முகிழ்க்கின்ற பேரன்பால்
வித்தகமாய்த் தான்பெற்ற வியனுலகின் தாய்மையெனும்
பித்தமிழ்தின் பின்புலத்துப் பேராற்றல் தந்தையன்றோ?






















