அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்பானவர்களுக்கு...!
கடந்த 25.04.2014 அதிரை பெரிய ஜும்மா பள்ளி அருகில் இரவு நேர கைப்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இது ஒரு விளையாட்டு, ஆனால் இந்த விளையாட்டுப் போட்டியினால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு அன்றிரவு முழுவதும் ஒலிப்பெருக்கி சத்தத்தால் இடையூறு ஏற்பட்டுள்ளதையும், ஃபஜர் தொழுகை வரை முதல் நாள் போட்டி நடந்துள்ளதையும் சுட்டிக் காட்டி. இந்த கைப்பந்துப் போட்டி தொடர்பாக புகைப்படத்துடன் வெளியிட்ட அதிரை வலைத்தளங்களில் ஒன்றில் ஒரு சகோதரி பெயரில் பின் வரும் கருத்து ஒன்று பதிக்கப்பட்டிருந்தது.
அன்புள்ள சகோதரர்களே.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள், அல்லாஹ்வுடைய கோபப் பார்வை இந்த அதிராம்பட்டினத்தை வதைக்கின்றது.
பத்து வருடங்களுக்கு முன்பெல்லாம் நமதூரில் கால் பந்து தொடர் போட்டிகள் மாலை நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு மஃரிபு நேரத்திற்குள் முடிந்து விடும், இது யாரையும் பாதிக்காமல் இருந்தது, ஆனால் இன்றோ மின்னொளி விளையாட்டு என்று பெயரை அறிமுகப்படுத்தி நமதூர் சிறுவர் முதல் பெரியவர்கள்(மார்க்க விபரம் அறிந்தவர்கள்) வரை கலந்து கொண்டு வருகின்றனர்.
இரவு நேரமுழுக்க அதிக ஒலிகளை எழுப்பி சினிமாப் பாடல்கள், இசைகள், அறிவிப்புகள், வண்ண வண்ண வெடிகள், இதன் காரணத்தால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், பச்சிளங் குழந்தைகள், நோய்வாய் பட்டவர்கள், முதுமை அடைந்தவர்கள், பெரியவர்கள், தஅஜ்ஹத் தொழ எழுந்திருப்பவர்கள், இவர்கள் எல்லோரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
சுபுஹு பாங்கு சப்தம் கேட்டுக் கொண்டு இருக்கின்றது, உங்களின் அறிவிப்பு நிறுத்தப்பட வில்லை, “தூக்கத்தை விட தொழுகை மேலானது” என்று பள்ளியில் ஒலிக்கும் ஒலியைவிட உங்களின் அறிவிப்பு ஒலி அதிகமாக இருந்தது.
இந்த நிகழ்ச்சியை மாலை நேரத்தில் ஆரம்பித்து மஃரிபுக்குள் முடிக்கலாமே. இப்படி இரவு முழுக்க செய்யணும் என்று கட்டயமா? இதற்க்கு எவ்வளவு பணம் சிலவு ஆகி இருக்கும்? உங்களுடைய முகம், பெயர், எவ்வளவு பணம் போன்ற விபரங்கள் இணையத்திலும், போஸ்டரிலும் வரணும் என்று ஆசைபடும் நீங்கள், அந்த பணத்தை இயலாதவர்கள் எத்தனையோ உங்கள் கும்பத்தில் இருக்கலாம், ஊரில் இருக்கலாம், அவர்களுக்கு கொடுத்து உதவி இருக்கலாமே, உங்களுடையை பெயர் நாளை மறுமை நாளில் நன்மை பக்கத்தில் எழுதப்பட்டு இருக்குமே.
அல்லாஹ் உங்களை நம்பி கொடுத்த பணத்தை வீண் விரயம் செய்யாதீர்கள். அவன் சொன்னபடி செய்தால் பரக்கத் உண்டு.
குடும்பத்தை பிரிந்து பலமைல் தூரம் சென்று கஷ்டப்பட்டு சம்பாத்திக்கும் பணத்தை இப்படி அநியாயமாக சிலவுகள் செய்ய உங்களுக்கு எப்படி மனம் வந்தது. எல்லா நேரமும் ஒரே மாதிரியாக இருக்காது. உங்களை நம்பித்தான் ஊரில் உள்ள மனைவி மக்கள் இருக்கின்றோம். நீங்க நல்லா இருந்தாத்தான் நாங்க நல்லா இருப்போம், நீங்க இல்லை என்றால் எங்களுக்கு ஒரு சொட்டு தண்ணீ ஊத்த ஒரு நாதியும் கிடையாது.
இனிமேல் யாரும் வசூல் என்று வந்து கேட்டால் கொடுக்காதீங்க, யாருடைய காசில் யாரு ஆட்டம் போடுவது?
இந்த இரவு நேர நிகழ்ச்சியால் ஹராமானது எது நடந்தாலும் அதுக்கு பொறுப்பு நீங்கதான். நமதூரில் ஒரு சின்ன விசேஷம் நடந்தால் முதலில் விற்கப்படுவது மதுபானம்தான்.
அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள்.
வஸ்ஸலாம்
ஹுமைராஹ் சுல்தானாஹ்.
இந்த சகோதரியின் கருத்தை நாம் கவலையோடு பகிர்ந்து கொள்கிறோம்.
கந்தூரி என்ற பெயரில் கேளிக்கை கூத்துக்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்று அறிந்தே ஒரு கூட்டம் வீம்புக்காக கந்தூரி கூத்துக்களை நடத்துகிறது. மேலும் இது போன்ற இரவு நேர விளையாட்டுக்கள் அறியாமை காலத்தில் அதிரைவாசிகள் நடத்தி இருக்கலாம். இரவு நேர கேளிக்கைகள் இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்பதை அறிந்து கொண்டுள்ள இந்த காலகட்டத்தில், இது போன்ற இரவு நேர கேளிக்கை விளையாட்டுக்கள் தேவையா? என்ற எண்ணம் ஊரில் பொதுமக்களிடம் எழுவதை தவிர்க்க இயலாது. இது போன்ற இரவு நேர கேளிக்கை பிற மத கலாச்சாரமே அன்றி இஸ்லாமிய கலாச்சாரம் அல்ல.
விளையாட்டுத் தானே அதனை இரவில் விளையாடினால் என்ன தவறு? அரபு நாடுகளில் இது போன்று இரவு நேரங்களில் விளையாட அனுமதிக்கிறார்களே? என்ற நியாயமான கேள்விகளை தொடுத்து ஒரு சில சகோதரர்கள் இரவு நேர கேளிக்கைகளை நியாயப்படுத்த முனைகிறார்கள். அரபு நாடுகள் அனுமதித்தால் அது இஸ்லாமிய அங்கீகாரமாகாது. குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இரவு நேர கேளிக்கை விளையாட்டுக்கு அனுமதி என்றால் சரியான வாதம். அரபு நாடுகள் அனுமதித்தால் அது குர்ஆன் ஹதீஸ் வழிமுறையாகாது.
நபி(ஸல்) அவர்கள் இரவு தொழுகைக்கு பிறகு உடனே தூங்கும் வழக்கமுடையவர்களாகவும், தஹஜ்ஜத்து தொழுகைக்காக நள்ளிரவில் எழுந்து தொழுபவர்களாகவும் இருந்துள்ளார்கள். இப்படித் தான் சத்திய சஹாபாக்களும் இருந்துள்ளார்கள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் ஹதீஸ் கிரந்தங்களிலும், வரலாற்று ஏடுகளிலும் உள்ளது. ஆனால் ஒரு ஹதீஸ் நபி(ஸல்) அவர்கள் இரவு நேர விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்று இரவு நேர கேளிக்கைக்கு ஆதாரமாக காட்ட முடியுமா?
இஸ்லாத்தில் இசை கலந்த பாடல்கள் பாடுவதும், கேட்பதும் ஹராம் என்ற நிலை இருக்கும் போது. இரவு நேர கேளிக்கை நடத்துபவர்கள் தங்களின் விளையாட்டு ரசிகர்களை உற்சாக படுத்துவதற்காக இசை கலந்த பாட்டுக்களை ஒலித்து இரவு நேர கேளிக்கை என்ற பெயரில் ஒலிபெருக்கிகளில் மார்க்கத்தில் தடுக்கப்பட்டவைகளுக்கு அங்கீகாரம் கொடுப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி உள்ளது என்பதற்கு தெளிவான ஆதாரம் காட்ட முடியுமா?
இரவு 10 மணிக்கு மேல் மார்க்க நிகழ்ச்சிகள் ஊரில் நடைபெறுவதையே மார்க்கம் பேசுபவர்கள்கூட இரவு தூக்கத்தை தொந்தரவு செய்து மார்க்கம் சொல்லக்கூடாது என்று அவைகளை நிறுத்திக் கொள்ளுகிறார்கள். ஆனால் ஊரில் வயதானோர், குழந்தைகள், தொழுகையாளிகள் ஆகியோரின் தூக்கத்துக்கு கெடுக்கும் விதமாக இவ்வகை கைப்பந்து ஏற்பாட்டால் ஒலிபெருக்கிகளின் சத்தத்தை வைத்து தொந்தரவு கொடுப்பது மிகப்பெரிய பாவமில்லையா? அன்றிரவு தூக்கத்தை தொலைத்தவர்கள் சாபம் செய்திருந்தால் அவர்களின் சாபம் சும்மா விடுமா?
பாவம் செய்பவனைவிட அந்த பாவத்திற்கு துனை நிற்பவர்களுக்கும், ஊக்கப்படுத்துபவர்களுக்கும் அதிக கேள்விகள் உண்டு. இது போன்ற இரவு நேரத்தில் பொது மக்களுக்கு தொந்தரவு அளிக்கும் கேளிக்கை விளையாட்டுக்கு நிதி உதவி செய்தவர்கள், விழாவில் கலந்து கொண்டவர்கள், துவக்கி வைத்தவர்கள், நடத்துனர்கள், இதனை ஊக்கப்படுத்தும் வலைத்தளங்கள், ஆஹா, ஓகோ என்று கருத்திட்டவர்கள் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும். என்பதை நினைவூட்ட இதனை பதிவு செய்கிறோம். தவ்பா செய்து கொள்ளுங்கள். இனியும் அதிரையில் உள்ள செய்தி திரடடி பதியும் சகோதரர்கள், இது போன்ற தடுக்கப்பட்டதை ஊக்கப்படுத்த வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். பொதுமக்களுக்குத் தொந்தரவு கொடுக்கும், மார்க்கத்தில் இல்லாத இரவு நேர கேளிக்கை விளையாட்டுக்கு வெளிநாட்டில் உள்ளவர்களும், உள்ளூரில் உள்ளவர்களும் ஊக்கம் கொடுக்க வேண்டாம் என்றும் கோரிக்கை வைக்கிறோம்.
கந்தூரி கூத்தும் ஆரம்பமாகி விட்டது. இரவு நேர கேளிக்கைகளை கந்தூரி கப்ருத் திருவிழாவில் நடத்த திட்டமிடலாம். நம் உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்களோ, சத்தியத் தோழர்கள்கள் யாருமே செய்யாத கந்தூரி கப்ரு வழிபாடு கேளிக்கை நிகழ்ச்சிகளை, இந்த பாவத்தின் விபரீதம் அரியாத பாவப்பட்ட நம் சமுதாயம் செய்து வருகிறது, இந்த பாவத்திலிருந்து மீட்டெடுக்க, பல வருடத்திற்கும் மேலாக நம்முடைய சமுதாய சகோதரர்கள் அவமானம், அடி, உதைகள் வாங்கிக் கொண்டு, பிற மத காலாச்சாரமான கந்தூரி கூத்து திருவிழாக்களை முஸ்லீம்களிடம் இருந்து தூக்கி எறிய அயராது போராடி வருகிறார்கள். இந்த சூழலில் மக்களிடம் செய்திகளை எளிதில் எடுத்துச் செல்லும் நவீன மீடியாக்களை தன் கையில் வைத்திருக்கும் நம் சமுதாய இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். செய்திகளை தருகிறோம் என்ற பெயரில் மார்க்கத்துக்கு விரோதமான தர்கா கப்ரு வழிபாடு, கூத்து கும்மாளம் நிறைந்த கந்தூரி கூத்துக்களை ஊக்கப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அல்லாஹ்வுடைய கோபத்திற்கு நீங்கள் உங்களைச் சார்ந்தவர்களும் ஆளாக வேண்டாம் என்று நல்லெண்ணத்தில் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
கேடு கெட்ட கந்தூரிக்கு முக்கியத்துவம் கொடுக்காத அதிரை வலைத்தளங்களை மனதாரப் பாராட்டுகிறோம். அவர்களின் நல்லெண்ணத்திற்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக.
அதிரைநிருபர் பதிப்பகம்

































































