உடனே 11 என்று சொல்ல வேண்டாம். இது 6 அறிவு படைத்த எனக்கும் , 5 அறிவு படைத்த மிருகங்களுக்கும் நடந்த
சுவாரஸ்யமான விசயங்கள். இந்த அறிவுகள் 6 / 5 என்றெல்லாம் எங்கே கணக்கு சொல்லித் தருகிறார்கள்
என்று தெரியவில்லை. ஏனெனில்சில சமயங்களில் சில நாய்கள் செய்யும் லூட்டியில் அவைகள்
ஏதும் சைக்காலஜி கிராஜுவேசன் முடித்து வாடகைக்கு வீடு
கிடைக்காமல் அலைகிறதோ எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.
எனக்கும் சின்ன
வயதில் யாரோ காதில் ஓதி விட்டுருப்பார்கள் என நினைக்கிறேன், அதாவது 'மிருகங்களை நேசி' என்று... [அதனால் தான் என்னவோ எனக்கு
கோழிக்கறியை விட ஆட்டிறைச்சி வருவல் சாப்ஸ் ரொம்ப பிடிக்கும்] மிருகங்கள் மீதான
ஆர்வம் அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்வது மாதிரி இல்லை. இருப்பினும் எப்படியாவது ஒரு
நாய் வளர்ப்பது என்று 'ஆறாப்பு" [சிக்ஸ்த் ஸ்டேன்டர்ட்] படிக்கும் போது ஒரு வீரமான முடிவுடன் நாய்க்குட்டி ஏதாவது
கிடைக்குமா என்று தேட ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் எந்த சனியன் பிடித்தவனோ
நாய்க்கும் குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரம் ஏதும் செய்தானா என்று தெரியவில்லை, எல்லா நாய்களும் ஏதோ ஆஸ்ரமத்தில் பகல் நேரத்தில் திரியும் பெண்கள் மாதிரி
தனியாகவே திரிந்தது.
கடைசியில் ஒரு
இடத்தில் [சரியாக ஞாபகம் இல்லை], அப்படி ஞாபகம் இருந்து நான் சொல்லிவிட்டால் தாய்நாய் வந்து நான் தான் எனது
கேவலத்தை மறைக்க இந்த குட்டி நாய் பிறந்தவுடன் மெட்ராஸ் போர கூட்ஸ் ட்ரைனில்
அநாதையாக விட்டு விட்டேன் இப்போது திருப்பி தாருங்கள் என்றால் எங்கே போவது??.] ஒரு
நாய்க் குட்டியின் ஹீனமான சத்தம் கேட்டு பக்கத்தில் போய் பார்த்தால் என்னை பார்த்த
கடுப்பில் இன்னும் சத்தம் போட்டது. சரி நாம் அன்பாக இருந்தால் தான் நாய் நம்முடன்
வரும் என்று கொஞ்சம் அன்பான முகத்த மாற்றிக் கொண்டு நாயின் கண்களைப் பார்த்தேன். [எப்படியாவது நம் கண்ணிலிருந்து ஒளி வெள்ளம் பாயும் என்று] யார் வைத்த சூனியமோ அன்றைக்கு எனக்கு பேட்டரி வீக் ஆன
மாதிரி கண்ணின் ஒளி மஞ்சளாக இருந்து இருக்க வேண்டும். பணம் அனுப்பாத கணவனின்
அறிவுரையை கேட்ட மனைவி மாதிரி அந்த நாய் எந்த சலனமும் இல்லாமல் தூங்கிபோனது.
தூங்கிக் கொண்டிருக்கும்போதே
தூக்கிக் கொண்டு வந்து வீட்டில் கட்டிப் போட்டு அமுல்ஸ்ப்ரே போட்ட டீயெல்லாம்
கொடுத்தேன். இருப்பினும் அது ஃபில்டர் காஃபி குடிக்கும் பழக்கம் உள்ளதோ என்னவோ
தெரியவில்லை, ரொம்பவும் அழிச்சாட்டியம்
செய்து மறுத்து விட்டது. கடுப்பாகிப் போன நான் வீட்டுக்கு வெள்ளையடிக்க வைத்திருந்த
கம்பை எடுத்து கொஞ்சம் கடுமையாகவே விலாசி விட்டேன். [இதைப் பார்த்த வீட்டில் இருந்தவர்கள் நாயை வீடு
கடத்தி எங்கள் வீட்டு தோப்பில் கொண்டு போய் விட்டு விட்டார்கள். கவனிக்க: அப்போது பிஹேவியர் பற்றியெல்லம் தெரியாத
ஆறாப்பு படிக்கும் மாணவன் நான்..
கொஞ்சம் நாளைக்கு
நாய் வளையம் வளையமாக வந்தது. பின்னாளில் அது மனதை விட்டு "போயிந்தே' என்று போய் விட்டது. இதற்கு முன் ஒரு
ஃப்ளாஸ் பேக்கில் கொக்கு கதை [உண்மை சம்பவம்.... சூடம் ஸ்டாக் எல்லாம் இல்லை
அதனால் சத்யம் எல்லாம் செய்ய முடியாது] . அப்போது போலீஸ் பள்ளிக்கூடம் [1-ம் நம்பர் பள்ளிக்கூடத்தில்] படித்த நேரம். அப்போது எலக்ட்ரிக் சார்ஜ்
செய்யும் பேட்டெல்லாம் கிடையாது கொசு அடிக்க. அப்போது என் வீட்டில் ஒரு கொக்கு
வளர்த்தேன்.
அந்த கொக்கு
தனக்கு கொடுக்கப்பட்ட சோறு ஆனத்தை தவிரவும் அதன் சைட் டிஸ் & ஹாபி என்னவென்றால் ஈயை லாவகமாக கொத்தி சாப்பிடுவது. ஓரளவு அதனால்
வீட்டில் ஈயின் ஊசலாட்டம் குறைந்தது. அது என்னவோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும்
போட்டியில் தங்கம் வென்றதைப் போல் என் வீட்டை சுத்தி பேச்சாகிப் போய் அதற்கு திருஷ்டி
விழுந்து சேற்றில்
ஓட்டும்போது சைக்கிளில் உள்ள டைனமோ மாதிரி குறைந்த பவருடன் சுனக்கமாகிப்போனது.
இரண்டாம் நாள் நான் பசங்களுடன் விளையாடி விட்டு சீக்கிரமே தூங்கிப் போனேன் , இரவு பத்து மணிக்கு என் வீட்டில் உள்ளவர்கள் என்னை எழுப்பி ‘சாப்பிடாமல் படுத்தால் யானை பலம் குறையும் என்ற
தத்துவத்துடன் மெயின் ரோட்டில் வாங்கி
வந்த பரோட்டா ரொட்டியுடன் ஏதோ Bird கறியுடன்
சாப்பாடு தந்தார்கள். அடுத்த நாள்தான் தெரிந்தது நான் வளர்ந்த செல்லகொக்குதான்
அந்த Bird கறி.
அதன் பிறகு எந்த
பாய்மார்கள் வீட்டின் மேலேயும் எந்த கொக்கும் பறப்பதில்லை.
பின்னாளில் என் கல்யாணம் எல்லாம் முடிந்து சில காலம் ஊரில் தங்கியிருந்தேன், அல்மோஸ்ட் நான் புறப்பட சில நாட்கள் சாகுல் வேட்டைக் கெல்லாம் போய் நிறைய கொக்கு எல்லாம் கொண்டு வந்தாப்லெ சாகுல் நான் மற்றும் என் நண்பர்கள் எல்லோரும் சிரித்துக் கொண்டே அந்த கொக்கு கறியை சாப்பிட்டாலும் எனக்கு என்னவோ அந்த இருட்டிலும் ஏற்கனவே சின்ன வயதில் செத்த கொக்கு லேசான புகையுடன் தூரத்தில் லதா மங்கேஸ்கர் குரலில் பாடிக் கொண்டு வருமோ என்று லேசான பயம்.
[கொக்குக்கு வெள்ளைப்புடவை தேவையில்லை...காஸ்ட்யூம் செலவு மிச்சம்.]
அதற்கு பிறகு
சென்னையில் படிக்கும்போது போயஸ் கார்டனில் எனக்கு ட்யூசன் எடுத்த கலீமுல்லா
ப்ரொஃபொசர் வீட்டுக்கு போகும்போது சில வீடுகளைத் தாண்டி போகும்போது வீட்டுக்குள்
நாய்கள் கட்டிக் கிடக்கிறதா என்பதை பஸ்பாஸ் புதுப்பிப்பதைவிட மிக முக்கியமாக கருதி
நடந்துபோவேன். நாய் என் மீது காண்டாகி பாய்ந்தால் அவ்வளவு இறைச்சி நம்மிடமிருந்து
தேராது. [ஏண்டா குடல் எடுத்த மீன் மாதிரி இப்படி
ஒட்டிப் போயிருக்கே என்று என் நண்பன் ரியாஸ் எப்போதும் கேட்பான்.]
சில பூனைகளுக்கு
உள்ள ரோசம் பெரும்பாலும் சில மருமகன் களுக்கு கூட இருப்பதில்லை. ஒரு முறை எங்கள்
வீட்டில் ஏறக்குறைய 15 பூனைகள் அவுட்பேசன்ட் மாதிரி வந்து
சாப்பிட்டு விட்டு போகும். என் தகப்பனாரும் பூனைக்கு மீன் எல்லாம் அவியல் செய்து
போடுவதால்.. எலி வேகமாக வந்தாலே பயந்து ஒடிவிடும்.
நாளடைவில் சில பூனைகளுக்கு எலியை கண்டால் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமலே அதனுடைய மூலையில் உள்ள சில ஃபைல்கள்
பேட்க்லஸ்டரில் பாதிப்படைந்த மாதிரி அடிக்கடி பூனைகள் திகைத்து நின்று விடும். இப்படி பூனைகள் மீது அதீத அன்பு வைத்ததால்
பூனைகள் எல்லாம் உடல் பருமனாகி நடக்கவே கஷ்டப்பட்டு ஏறக்குறைய ஓவர் வெயிட்டிலேயே ப்ளட்ப்ரஸ்ஸர்
எல்லாம் வந்து அடிக்கடி கோபப்பட ஆரம்பித்தது. இதில் ஒரு அதிசயம் ஒரு தாய்ப்பூனை
மிகவும் ரோசமானது, அதன் பிள்ளைகளை என் தம்பி அவசரப்பட்டு 'சனியன்" என்று சொன்னதற்காக அந்த குட்டிப்பூனையை எடுத்துக்கொண்டு மரத்துக்கு கீழே வைத்து கண்ணத்தில் தொடர்ந்து
அடிக்க ஆரம்பித்தது [பிள்ளையை கண்டிக்கிறதாம்]. பூனைகள் எல்லாம் சேர்ந்து எடுத்த
'நல்லதங்காள்" படத்தில் கதாநாயகியாக நடித்த
பூனையோ என்னவோ தெரியவில்லை. இன்னொரு பூனை கண்ணாம்பாள் ரேஞ்சுக்கு ரொம்ப ஆவேசமாக
குட்டிப்பூனையை பார்க்கும். என் தகப்பனார் என்னவென்றால் ஒருமுறை Europe போயிருக்கும்போது அங்கு ஏர்போர்ட்டில்
இறங்கியவுடன் எங்களை நலம் விசாரிக்கு முன் 'பூனைக்கு மீன்
அவிச்சி போட்டாச்சா" என்று ரொம்பவும் பிரியமாக இருந்ததால் நான் என் தம்பி
எல்லோரும் சேர்ந்து பூனையை கொண்டு போய் SPCA யில் விட்டு விடுவது என்று ஏற்பாடு செய்து அத்தனை
பூனையையையும் சில கார்ட்டன் பாக்சில் அடைத்து
கொண்டு போய் விட்டு விட்டோம். SPCA யில் ஒருவன்
எங்களிடம் கேட்டான் 'பூனைக்கு என்ன சார் போட்டு வளர்த்தீங்க' இப்படி கணமா இருக்கு. உண்மையில் அந்த பூனைகள் சாப்பிட்ட மீனில் உள்ள ஒமேகா
ப்ளஸ் மட்டும் ஒரு லாரி லோடு தேரும்.
இப்படி
மிருகங்களை வெறுத்தது தானோ என்னவோ பக்கத்து வீட்டில் இருக்கும் சீனப்பெண்மனி [என்
பிள்ளைகள் அவளுக்கு வைத்த பெயர் 'நாய் அன்ட்டி"] ஏறக்குறைய 13 நாய்கள் 16 பூனை என்று ஒரு ஃபார்ம் ஹவுஸ் வைத்து எங்களை
வதைத்தாள். பிறகு அரசாங்கத்தில் ஏறக்குறைய பூம்புகார் கண்ணகி மாதிரி முறையிட்டு
சமீபத்தில்தான் முனிசிபால்ட்டி வந்து அள்ளிக்கொண்டு போனது.
இங்கு உள்ள
எலிகளைப்பற்றியும் சொல்ல வேண்டும்,
நான் முன்பு வேலைபார்த்த
இடத்துக்கு பக்கத்தில் எலிகள் அதிகம் , டெய்லி எலிகள்
பஸ்ஸில் அடிபட்டு செத்துக்கிடக்கும். இதில் கடை வைத்திருக்கும் சீனர்கள்
எலிகூண்டைவைத்து பிடித்து அந்த எலி ஏறக்குறைய தப்பிக்க கூண்டுக்குள்ளேயே அலைந்து
கொண்டிருக்கும்போது அதன்மீது கொசு மருந்து ஸ்ப்ரே அடித்து அதன் நுனியில் லைட்டரை பத்தவைத்து அந்த எலியை எரித்து வெறியை தவிர்த்துகொள்ளும்
அளவுக்கு அவைகள் [எலிகள்] 'சிறந்த வில்லனுக்கான பரிசை' தட்டிச் செல்லும் அளவுக்கு இவனுகளை கொடுமை
செய்திருக்கும். இந்த சீன் பார்க்க வரும் கூட்டம் சவூதியில் தலை
வெட்டுவதை பார்க்கும் கூட்டத்தை விட கொஞ்சம் அதிகமாக இருக்கும். சமீபத்தில் சில
மார்க்கெட்களை புதுப்பிக்க ஒரு எலி அடித்து கொடுத்தால் ஒரு மலேசிய ரிங்கிட் என்று
அறிவிப்பு செய்தார்கள். மாநகராட்சியின் முயற்சியில் 2 நாளில் பிடித்த எலிகளின் எண்ணிக்கை 7600 ஐ தாண்டியது. சில
எலிகள் சினிமாவில் வரும் ஸ்டண்ட் மாஸ்டர் மாதிரி ரொம்ப பெரிய சைசில் இருக்கும். எலிகள் இருந்த பொந்தை நோண்டிப்பார்த்தால் எலிகள் எல்லாம் ஏதோ ரேசன் கடை / கொடுக்கல் வாங்கல் அடமானக்கடை எல்லாம் வைத்து நடத்திய மாதிரி அவ்வளவு ப்ளேனிங்கோடு வாழ்ந்த மாதிரி அடுத்த சிந்து சமவெளி நாகரிகம் மாதிரி தெரிந்தது.
இங்கு சீனர்கள்
குருவிகளை வைத்து பாட்டுபாடி கேட்டுக் கொண்டிருப்பார்கள். சிலர் மிருகங்களை
விரும்புவார்கள்.
I also LOVE animal, it is very TASTY
ZAKIR HUSSAIN
ZAKIR HUSSAIN





























