இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் – 35 31

அதிரைநிருபர் பதிப்பகம் | July 05, 2014 | , , , ,


பங்குச் சந்தை முதலீடுகள் பங்கமா? வாழ்வின் அங்கமா?

கடந்த அத்தியாயத்தில் முதலீடுகளின் சில வகைகளைப் பார்த்தோம். இப்போது பங்கு சந்தை பற்றி அறியும்  முன்பு பங்கு என்றால் என்ன என்று பார்க்கலாம்.

நாம் ஒரு தொழில் தொடங்க விரும்புகிறோம் அல்லது ஒரு தொழிலுக்கான ஒரு நல்ல திட்டம் நம்மிடம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். வெறும் கை முழம் போடாது . ஆகவே அந்தத் தொழிலைத் தொடங்குவதற்கும் நடத்துவதற்கும் பணம் தேவைப்படும். நாம் தொடங்கத் திட்டமிட்டு இருக்கிற தொழிலுக்கு போதுமான அளவு நம்மிடம் நமது சொந்தப் பணம் இல்லை என்று நாம் உணரும் நிலையில் வங்கிகள் முதலிய வெளியார் இடமிருந்து கடன் வாங்கி  அந்தத் தொழிலைத் தொடங்கி நடத்த நினைப்போம். 

மிகப்பெரிய அளவில்  திட்டமிட்டு இருக்கிற தொழிலைத் தொடங்க வேண்டுமானால் தேவைப்படும் மூலதனத்தை பொதுச் சந்தையில் பொதுமக்களிடமிருந்து  திரட்ட  திட்டமிட்ட மூலதனத்தை சிறு சிறு   மதிப்பாகப் பிரித்து வெளியிட வேண்டும். இதற்காக சில ஒழுங்கு முறைகள் மற்றும் சட்ட பூர்வமான தகுதியும் அமைப்பும் அங்கீகாரமும்  தேவைப்படும்.  இவ்விதம் வெளியிடப்படும் அந்தப் பிரிவுகளின் மதிப்பே பங்கு எனப்படும்.  இந்த முறையில்  முகம் அறியாத பொது மக்கள் கூட ஒரு  நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதன் மூலம் முதலீட்டாளர்கள் ஆக முடியும்.

எடுத்துக் காட்டாக, நம்முடைய தொழிலின் அபிவிருத்திக்கு அல்லது நமது தொழில் திட்டம் நடைமுறைக்கு வர  ஒரு கோடி ரூபாய் தேவைப் படுகிறது என்று வைத்துக் கொண்டால் அதை பத்து ரூபாய் மதிப்புள்ள பத்து இலட்சம் பங்குகளாக்கி  பொது மக்களிடம் விற்று தேவையான மூலதனத்தைத்  திரட்டலாம். 

இந்த முறையில் ஏற்படும் உடனடிப் பலன் என்னவென்று கேட்டால் நமக்குத் தேவையான – நமது சக்திக்கு அப்பாற்பட்ட முதலீடு திரட்டப்படுகிறது. அத்துடன்,  நிறுவனத்தின் முதலீட்டுத் தேவைக்காக கடன் வாங்கி அல்லது இருக்கும் அனைத்து சொத்துக்களையும் விற்று முதலீடு செய்தால் அதன் மூலம் வரும் இலாபமும் இழப்பும் ஒரு தனி நபரை மட்டுமே சார்ந்திருக்கும் . ஆனால் பங்குகளை வெளியிட்டு பல முதலீட்டாளர்களை ஈர்த்து தொழில் நடத்தும்போது இலாபமும் இழப்பும் பங்குகளை வைத்திருக்கும் பலராலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.  முதலீடாக திரட்டப்பட்ட தொகைகளுக்கு முதலீட்டாடளர்களுக்கு வட்டி என்று கொடுக்கப்படவேண்டியதில்லை. மாறாக, இலாபத்தில் டிவிடெண்ட் ( Dividend) என்று சொல்லப்படுகிற ஆதாயப் பகுதி முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும். இந்த டிவிடென்டின் விகிதம்   நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். இந்த டிவிடென்டின் விகிதமே  ஒவ்வொரு நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பை உயர்த்துகின்றன; அல்லது தாழ்த்துகின்றன. அதிக இலாபப் பங்கை  டிவிடெண்ட் ஆகக்  கொடுக்கும் நிறுவனத்தின் பங்குகளுக்கு தேவை அதிகமானால் அவற்றின் விலையும் அதிகமாகும்.  ஒரு நிறுவனம் தனது முதலீட்டை பங்காக பிரித்து விற்கத் தொடங்கிய பின் சட்ட பூர்வமான அளவில் அந்த நிறுவனம் தனி நபர் நிறுவனம் என்கிற அமைப்பை இழந்து பங்கு நிறுவனம் ( Joint Stock Company ) என்று ஆகிவிடும். 

பங்கு என்றால் என்ன என்று தெரிந்த பின்,  இந்தப் பங்குகளின் முக மதிப்பு  ( Face Value) என்றால் என்ன என்றும் தெரிந்து கொள்வோம். ஒரு நிறுவனம் வெளிஇடும் ஒற்றைப் பங்கின் நிர்ணயிக்கப்பட்ட விலையே அதன்  முக மதிப்பாகும். பத்து ரூபாய் பங்கு என்பது பத்து ரூபாய் முகமதிப்புடையதாகும். சில நேரங்களில் நிறுவனங்களின் கடந்த கால வெற்றி தோல்விகளைப் பொருத்து அந்த  நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு இதுவரை தந்து கொண்டிருந்த இலாபப் பங்குகளின் வீதத்தை வைத்து அந்த நிறுவனம் வெளியிடும் பங்குகளை வாங்க அல்லது வாங்காமலிருக்க மக்கள் முன்வரலாம் வராமலிருக்கலாம். நிறுவனங்களின் இத்தகைய வணிக வரலாறுகள் அவற்றின் பங்குகளின் விலையை விலாசமிடுகின்றன.  

இதுநாள் வரை சரியான அளவில் இலாபம் ஈட்டி நல்ல வீதத்தில் இலாபப்பங்குகளை தராத நிறுவனங்கள் தங்களின்  பங்குகளை வெளியிடும்போது பங்குகளின் முக மதிப்பில் கழிவு கொடுத்து விற்பார்கள். அதாவது பத்து ரூபாய் முகமதிப்புள்ள பங்கு எட்டு ரூபாய்க்கு விற்கப்படும். இதையே வேறு ஒரு ரீதியில் நல்ல பெயரோடு இயங்கும் நிறுவனம் தனது பங்கை வெளியிடும்போது முகமதிப்பை விட அதிக விலை வைத்து விற்பார்கள் . அதாவது பத்து ரூபாய் முகமதிப்புள்ள பங்கு பனிரெண்டு ரூபாய்க்கு விற்கப்படும். 

இதையே ஆங்கிலத்தில்,  முகமதிப்பில் குறிப்பிடப்பட்ட  அதே விலைக்கு விற்றால் Share at Par   என்றும் கழிவு கொடுத்து விற்றால் Share at Discount   என்றும்  கூடுதல் விலை வைத்து விற்றால் Share at  Premium  என்றும் கூறுவார்கள்.   

தொழில் முனைகிற எல்லோரும் பொதுமக்கள் இடம் பங்குகளை விற்கிறேன் என்று கூறி பணம் திரட்டிவிட முடியுமா? முடியாது. பங்குகளை பொது மக்கள் இடமிருந்து திரட்டும் நிறுவனங்கள் சில தகுதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

குக்கிராமத்தில் ஒரு தனி நபர் நடத்தும் ஒரு மளிகைக்கடையை பெரிய நகரத்துக்கு இடம் மாற்றி ஒரு பெரிய கடையாக்க விரும்புகிற  தனி நபர் நிறுவனம்  என்று அழைக்கப்படுகிற  Sole Proprietor நிறுவனம் இதற்கான கூடுதல்  முதலீட்டுத் தேவைக்காக பொதுமக்களுக்கு பங்குகளை விற்க இயலாது. அவ்விதம் தனது நிறுவனத்தை  அவர்  பெரிது படுத்த விரும்பினால் தன்னிடம் இருக்கும் அசையும் அசையாச் சொத்துக்களை விற்றுத்தான் முதலீட்டைப் பெருக்க முடியும். 

அதேபோல்   கூட்டு நிறுவனம் என்று அழைக்கப்படும் Partnership Companies ஆகியவைகளும் பங்குச் சந்தையில் பங்குகளை வெளியிட்டு விற்கும் அதிகாரம் படைத்தவைகள் அல்ல. 

இன்னும் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் என்ற அமைப்பில் இருக்கும் நிறுவனங்களும் பங்குச் சந்தையில் பங்குகளை வெளியிட்டு விற்க இயலாது. 

இந்த இடத்தில் நாம் அன்றாடம் பல இடங்களிலும் காணும் ஒரு வார்த்தை பற்றி விளக்க வேண்டி இருக்கிறது. உதாரணத்துக்கு மன்னார்  & கம்பெனி பிரைவேட் லிமிடெட் என்பது போல் பல வணிக நிறுவனங்களின்  விலாசபலகைகளை கண்டிருக்கிறோம்.  இப்படி பிரைவேட் லிமிடெட் என்பதன் பொருள் என்ன என்பது பலருக்குத் தெரிவதில்லை. மிகச் சுருக்கமாக,  இதன் விளக்கம் என்ன வென்றால் இந்த லிமிடெட்  அதாவது அளவுக்குட்பட்டது என்கிற வார்த்தை ஒரு நிறுவனத்தின் லயாபிளிட்டி என்கிற செலுத்தப்படவேண்டிய நிலுவைகளோடு சம்பந்தப்பட்டிருப்பதாகும்.   அதாவது அந்த கம்பெனி பிறருக்குக் கொடுக்க வேண்டிய லயாபிளிட்டி லிமிடெட்-  வரையரைகுட்பட்டதுதான் -  என்பதை புரிந்து கொண்டால் இதை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். 

ஒரு நிறுவனம் நடத்தப்படுகிறபோது அந்தத் தொழிலில் இழப்பு ஏற்பட்டு கடன்கார நிறுவனமாகிவிட்டால் ஒரு லிமிடெட் கம்பெனி தான் கொடுக்க வேண்டியவர்களுக்கு தன்னிடம் இருக்கக் கூடிய பங்கீட்டு மூலதனத்தின் அளவு வரையே திருப்பிச் செலுத்தக் கடப்பாடு உடையது என்றும், அந்த நிறுவனத்தின் பங்காளிகளாக இருக்கக்கூடியவர்களின் தனிப்பட்ட சொத்துக்களை விற்று அந்தக் கடன்களை திருப்பிச் செலுத்தத் தேவை இல்லை என்பதே இது பற்றிய விளக்கமாகும். அதாவது கடன் ஏற்படும் பட்சத்தில் போட்ட முதல் மட்டுமே போய்விடும் தன்னிடம் இருக்கும் மற்ற சொத்துக்கள் போய்விடாது . இப்படிப் பட்ட பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளும் வெளிச் சந்தையில் பொதுமக்களுக்கு தனது பங்குகளை விற்க முடியாது.  The liability of the shareholders to creditors of the Company is limited to the Capital originally invested . A shareholder’s personal assets are thereby protected in the event of Company’s loss or insolvency, but money invested in the Company will be lost. 

பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் பெரும்பாலும் குறிப்பிட்ட அளவுள்ள பங்குதாரர்களையே கொண்டு இருக்கும். மேலும் அவை குறிப்பிட்ட சில குடும்பங்களின்  உறுப்பினர்களையே பங்குதாரர்களாகக் கொண்டு இருக்கும்.  

Joint Stock Companies என்று அழைக்கப்படும்  பப்ளிக் கம்பெனிகள் மட்டுமே பங்கு சந்தைகளில் பதிவு செய்து கொள்ளவும் தனது பங்குகளை பொதுச் சந்தையில் விற்கவும் சட்டம் அனுமதித்து இருக்கிறது.  இப்படிப்பட்ட பெரிய கம்பெனிகள்,  பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்டு அவர்களின் பெயர் இடம் பெறுவதையே லிஸ்டட் கம்பெனி ( Listed Company) என்று அழைக்கிறோம். இப்படிப்பட்ட கம்பெனிகள் தங்களின் தொழிலில் நாட்டும்  வெற்றிக் கொடியைப் பொறுத்து பங்குச்  சந்தையில் இவற்றின் விலைகள் ஏற்ற இறக்கம் காணுகின்றன.  இவற்றின் தரத்துக்கு ஏற்ப கடந்த காலங்களில் இத்தகைய நிறுவனங்கள் சாதித்துக் காட்டிய சாதனைகளின் அடிப்படையில் இவற்றிர்க்கு A, A+,+,+, B,  B+,+,+, C, C+  ஆகிய தரங்களும் வழங்கப்படுகின்றன.  SEBI   என்கிற Securities and Exchange Board of India என்கிற நிறுவனமும் பங்குச்சந்தை நடைமுறைகளை கண்காணிக்கிறது. 

பங்குகளை வாங்கித்தரவும் விற்றுத்தரவும் பதிவுபெற்ற தரகர்கள் ( Brokers)  இருக்கிறார்கள். இந்தத் தரகர்கள் அவ்வபோது நம்மை அலைபேசியில் அல்லது இணையத்தில் தொடர்பு கொண்டு புதிதாக சந்தைக்கு வரும் நிறுவனங்களின் பங்குகள், ஏற்கனவே இருக்கும் நிறுவனங்கள்  மேலும் வெளியிட இருக்கும் பங்குகள், Fluctuations என்கிற ஏற்ற இறக்கங்கள், யூகங்கள் ஆகியவற்றை நமக்கு அறிவித்துக் கொண்டே இருக்கின்றன. 

புதிதாக உருவாக்கப்படுகிற ஒரு நிறுவனம் தனது பங்குகளை வெளியிட வேண்டுமானால் பெரும்பாலும் நாம் ஏற்கனவே பார்த்த முகவிலை மதிப்பே இதன் பங்கின்  விலையாகும். சரி !  புதிய கம்பெனி ! இதன் பங்குகள் சிலவற்றை வாங்கி வைத்துப் பார்க்கலாமே என்று சிலர் வாங்குவார்கள். பெரும்பாலும் தொடக்கத்தில்  பிரிமியம் இல்லாமல் முகமதிப்பிலேயோ அல்லது ‘கம்பெனி விளம்பரத்துக்காக’  டிஸ்கவுண்டோடோதான் பங்குகள் விற்கப்படும். இவ்விதம் புதிதாக உருவான கம்பெனி வெற்றிகரமாக தனது தொழில் நடவடிக்கைகளை கையாண்டு நடத்தி இலாபம் சம்பாதித்துக் காட்டி தனது பங்கை வாங்கியவர்களுக்கு நல்ல இலாபப்பங்கீடும் அளிப்பதாக பங்குச் சந்தையில் செய்திகள் வெளியாகும் பட்சத்தில் அந்தக் கம்பெனியின் பங்குகளின் முக மதிப்பு ஏற்றம்  காணத் தொடங்கும். பலர் போட்டி போட்டுக் கொண்டு அந்தக் கம்பெனியின் பங்குகளை வாங்குவார்கள். 

இதற்கு மாறாக, இந்த நிறுவனம் தனது தொழிலில் இலாபம் சம்பாதித்துக் காட்டாவிட்டால் இதனுடைய பங்குகளை வைத்துக் கொண்டு இருப்பதைவிட விற்றுவிடுவது நல்லது என்று இந்தப் பங்குகள் விற்பனைக்கு வரும். வந்த விலைக்கு  இவைகள் விற்கப்படும் நிலைக்குத் தள்ளப்படும்  முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும்.  

சில புதிய நிறுவனங்கள் புதிதாக அமைக்கப்பட்டாலும் ஏற்கனவே வளர்ந்து நிற்கும் ஒரு ஆலமர கம்பெனியின் அரவணைப்பில் வெளியாகலாம். உதாரணமாக டாடா கம்பெனி, அத்வானி கம்பெனி, அத்னான் குரூப். முருகப்பா குரூப், சோழமண்டல நிறுவனங்கள், பொள்ளாச்சி மகாலிங்கம் குரூப் என்றெல்லாம் ஏற்கனவே வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் நிறுவனங்களின்  நிழலில் உருவாகி வரும் கம்பெனிகள் முதல் ஓவரிலேயே சிக்சர் அடிக்கும். வெளியீட்டின் போதே இவைகள் பிரிமியம் விலை வைத்து விற்கப்படும். அதே போல் உடனே விற்றும் தீர்ந்துவிடும். 

ஏற்கனவே வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் நிறுவனங்கள்  தங்களின் தொழில் விரிவாகத்துக்காக இன்னும் அதிக நிதி திரட்ட விரும்புகிறது என்றால் பங்குகளை வெளியிடும். இவ்விதம் வெளியிடும் பங்குகள் உடைய விலையை நிறுவனம் ஆரம்பத்திலேயே அதிக பிரிமியம் விலை வைத்து விற்கும். உதாரணமாக பத்து ரூபாய் முக மதிப்புள்ள ஒரு பங்கு இரு நூறு ரூபாய் என்று கூவும் ; அவை உடனே விற்றும் போய்விடும். காரணம் நம்பிக்கை மட்டுமல்ல; யூகமும்தான். ஜெயிக்கலாம் என்று நமபபடும் குதிரையின் மேல் பணம் அதிகமாக கட்டுவது மாதிரித்தான் இதுவும்.   பங்கு மார்கெட் வர்த்தகத்தின் இயல்புகளைப் பார்த்து வரும் நாம் இப்போது முக்கியகட்டத்துக்கு வந்திருக்கிறோம். 

அதிக இலாபம் தரும் பங்குகளின் மதிப்பு சந்தையில் அதிகரிக்கும் என்கிற யூக எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரிக்கும் என்பதால் பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்க அதில் ஈடுபட்டுள்ளோர் முனைகிறார்கள்.  இப்படிப்பட்ட சூழலில்தான் இந்த வணிக அமைப்பின் மீது நாம் வைக்கத் தொடங்கும் விமர்சனங்கள்  வீதிக்கு வருகின்றன. பங்குகளின் விலையை செயற்கையாக அதிகரிக்க,  பலமுறை பல தந்திரங்கள் நடைபெற்று அம்பலத்துக்கு வந்திருக்கின்றன.  

பங்கு வணிகம் ஒரு சூதாட்டம் போன்றது என்கிற கருத்தை முன்னெடுத்து வைக்கிறவர்கள் பங்கு வணிகத்தில் ஈடுபட்டுள்ளோர் அனைவரும் பத்தினிகள் அல்ல என்று குறிப்பிடுகிறார்கள். வியாபாரத்தில் இதெல்லாம் சகஜம் என்று தங்களை சமரசப்படுத்திக் கொள்வோர் மனமறிந்து ஏமாற்றத் துணிவதற்கு பங்குச் சந்தை உரம் போட்டு வளர்க்கிற காட்சிகளை கண்டிருக்கிறோம். 

உண்மையில் இலாபம் சம்பாதிக்காமலேயே ஊடகம் மற்றும் அரசியல் செல்வாக்குகளின் துணையோடு செயற்கையாக  பங்குகளின் தேவைகளை வெற்று நிதிநிலை  அறிக்கைகள் மூலம் அதிகரித்து - ஏமாற்றும் நோக்கத்துடன் விலைகளை ஏற்றிவிட்டு - பொது மக்களை ஆசையுடன் வாங்க வைத்து பின்னர் விற்க முடியாமல் போகும்போது தங்களின் உழைத்து சேர்த்த சேமிப்பை இழந்து நடுத்தெருவில் நின்ற பலரையும் தற்கொலை செய்துகொண்ட சிலரையும்  சரித்திரம் சந்தித்து இருக்கிறது. இவற்றிர்க்கெல்லாம் அண்மைக்கால உதாரணமாக சத்யம் தொழில் நுட்ப நிறுவனத்தின் வீழ்ச்சியையும் ஹர்ஷத் மேத்தா மோசடி என்பவைகளையும் குறிப்பிட்டுக் காட்டலாம். 

சில நிறுவனங்கள்,  தங்களின் பங்கின் வெளிச்சந்தை  மதிப்பை இரட்டிப்பு அல்லது அதற்கு மேலும் போனஸ் என்று கூடக்  காட்டி  வெற்று வெளிச்சம் போட்டு விட இங்கே வழி இருக்கிறது. பங்குகளை வெளியிடும்போது பங்குகளுக்கு வைக்கப்படும் முகமதிப்பு விலை நாட்கள் செல்லச்செல்ல அதிகரிக்கப்படுகிறது. உண்மையாக விலை ஏறாவிட்டாலும் நிறுவனங்கள் தங்களின் நிலையை ஊதிக் காட்ட இவ்விதம் அதிகரிப்பதால் உண்மையான மதிப்பை உலகம் உணர முடியாமல் போகிறது. இப்படிப்பட்ட நிறுவனங்களை உருவாக்கும் புரமோட்டர்ஸ் நிறுவனங்கள் நிர்வாகத்தை தங்களின் கைகளில் வைத்துக் கொண்டு தங்களின் ஏனைய வணிகங்களுடைய நிதி நெருக்கடிகளுக்கு  பங்குகளை வெளியிட்டு பொதுமக்களை ஏமாளியாக்கும் வாய்ப்புகள் வாய்த்தது இந்தப் பங்குச் சந்தை.  

இப்படிப்பட்ட நிலைமைகள் வரும்போதுதான்  இஸ்லாம்  தடை செய்துள்ள பல அம்சங்கள் இங்கே தென்படுகின்றன என்று மார்க்க அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 

உதாரணமாக, ஒரு நிறுவனத்திடம்  இருக்கும் பங்குகளின் உண்மை மதிப்பு இருபது இலட்சம் ரூபாய் என்றால் அதை இரண்டு கோடி என்கிற அளவுக்கு மதிப்புக் காட்டி சொல்லப்படுகிறது. ஆகவே உண்மை மதிப்புக்கும் சொல்லப்படும் மதிப்புக்கும் இடையே ஒரு கோடியே எண்பது இலட்சம்    வித்தியாசப்படுகிறது. இத்தகைய நிறுவனங்களில் நாம் செய்யும் முதலீடு,  உண்மையின் அடிப்படையை தகர்த்துவிடுவதால் மார்க்கம் வகுத்த வணிக வழிமுறைகளுக்கு  மாறுபாடாக நிற்கிறது. இல்லாததை இருப்பதாக காட்டப்படுவதால் இஸ்லாமிய பொருளாதாரத்தின் வணிகத்தில் நேர்மை என்கிற அடிப்படை தகர்ந்து போகிறது. 

பங்குச் சந்தை மூலம்  முதலீடு செய்கிறவர்கள் அந்த   நிறுவனங்களின்  கணக்குகளை சோதித்துப் பார்க்கவோ அல்லது நிர்வாகத்தில் தலையிடவோ   அதிகாரம் பெற்றவர்கள் அல்ல. நமது கண் பார்வைக்குட்படாத ஒரு நிறுவனத்தில் முதலீடுகள் செய்வது அனுமதிக்கப்பட்டதல்ல. 

பங்கு சந்தை மூலம் முதலீடு செய்கிறவர்கள் தாங்கள் முதலீடு செய்துள்ள பணம் எத்தகைய பொருட்களை வாங்க/ விற்க பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிய மாட்டார்கள். ஒரு முஸ்லிம் பங்கு வாங்கிய நிறுவனத்தின் பணம் , மதுக்கடைகள் நடத்தவும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் இரவு நேர கேளிக்கைகள் நடத்தவும் கூட பயன்படுத்தப்படலாம். இப்படி தனது பணம் ஹராமான வணிக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறதா  அல்லது ஹலாலான வணிக நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுகிறதாஎன்று அறிய முடியாத நிலையில் கண்ணைக் கட்டி காட்டில் விடும் பங்குச் சந்தை வணிகத்தில் முஸ்லிம்கள் இறங்கக் கூடாது என்று பல மார்க்க அறிஞர்கள் மற்றும் பொருளியல் வல்லுனர்கள் சொல்கிறார்கள்.    

ஆனாலும் நமது கருத்தை சிந்தனைக்கும் விவாதத்துக்குமாக  இப்படி சமர்ப்பிக்கலாம். 

இந்த நவீன யுகத்தில் - புதுமைகளை புரட்டிப் போட்டுப் பார்க்கும் வணிக சமூகத்தில் வளர்ச்சியின் பாதையில் செல்ல மார்க்கம் ஒரு தடையாக இருக்குமா என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டி இருக்கிறது.  

ஆங்கிலம் படிப்பது ஹராம் என்று பத்வா கொடுத்து கல்வியில் நமது  சமூகம் பின் தங்கியது போல்  இன்றைக்குப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருக்கும் பங்கு சந்தைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு பெட்டிக் கடைகளையும் புரோட்டா கடைகளையுமே இந்த சமுதாயம் நடத்திக் கொண்டு இருக்க வேண்டுமா என்பதே நமது கேள்வி. ஒரு முஸ்லிமின் கரங்களில் என்றைக்கும் குஷ்கா போடும் கரண்டிதான் இருக்க வேண்டுமா? அவனது கரங்கள் பீடிதான் சுற்ற வேண்டுமா? அவன் தோல் தொழிற்சாலைக் கழிவுகளில் கிடந்துதான் சாக வேண்டுமா? அவன் கல்கத்தா வீதிகளில் கை ரிக்க்ஷா இழுத்துத்தான் பிழைக்க வேண்டுமா?

வளர்ந்து வரும் சமுதாயத்தில் தொலைக்காட்சிபெட்டிகள் இல்லாத முஸ்லிம்களின் வீடுகள் இல்லை; அலைபேசியும் தொலைபேசியும் இல்லாத இஸ்லாமியரை ஆள் வைத்துத்தேடவேண்டிய நிலை;  கணினி யுகத்தில் கல்வியும் கணினி மயமாகிவிட்டது; அதே கணினியில் கல்வியுடன் கூட கலவிக் காட்சிகளும் காட்டத்தானேப்படுகின்றன? அதற்காக கணினிகளைத் தூக்கி கடாசிவிட்டோமா? அவற்றின் பயன்பாட்டை ஒதுக்கிவிட்டோமா இல்லையே!  

விமானங்களில்  பயணிக்கும்போது, அனைவருக்கும் இலவசமாக மது பரிமாறப்படுகிறது. அடுத்த இருக்கையில் இருப்பவன் ஊற்றி ஊற்றிக் குடிக்கும்போது நாம் வேண்டாம் என்று சொல்லி ஒதுங்கிவிடுகிறோமே அதேபோல் நமக்கு வேண்டாதை ஒதுக்கி ஓரங்கட்டிவிட்டு நாமும் இந்த பங்கு சந்தையில் ஒரு அங்கமாகி நம்மை வளர்த்துக் கொள்ளக் கூடாதா?  பலாப்பழத்தில் சக்கைகளைத் தூக்கி வீசிவிட்டு சுளைகளை மட்டும் சுவைக்கும் பக்குவம் பங்கு சந்தை வணிகத்துக்கும் நமக்குப் பயன்படாதா? 

வங்கிகளில் வட்டியை ஒழித்து இஸ்லாமிய வங்கி முறையை மார்க்க அறிஞர்கள் தந்திருப்பது போல் இஸ்லாமிய பங்குச் சந்தை முறைகளையும் களைய வேண்டியவைகளைக் களைந்து வடிவமைத்து வழங்கினால் அது சமுதாயம் நவீன பொருளாதார வளர்ச்சியுடன் இணையாக  போட்டி போட்டு வளர வழி வகுக்கும்தானே!   எடுத்த எடுப்பிலேயே ஒன்றைத் தவறு என்று சொல்ல ஆயிரம் காரணங்கள் சொல்லும் மார்க்க அறிஞர்கள் அந்தத் தவறுகளைக் களைய வழிகளையும் சொல்லித் தர மாட்டார்களா? இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு விலங்கிடாதீர்கள்; சிந்தித்து அல்லாஹ் ஏற்கும் வழியில் உயரப் பறப்பதற்கு ஏற்ற சிறகாக ஆக்கித் தாருங்கள் என்று மார்க்க நல் அறிஞர்களைக் கேட்டுக் கொள்கிறேன். 

இன்ஷா அல்லாஹ் மீண்டும் ஒரு தலைப்பில் சந்திப்போம். 

இபுராஹீம் அன்சாரி

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 76 5

அதிரைநிருபர் பதிப்பகம் | July 04, 2014 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!

ஃதிக்ரின் சிறப்பு:

(நபியே) உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! ( அல்குர்ஆன் : 7:205 )

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்! அவனைக் காலையிலும், மாலையிலும் துதியுங்கள்! ( அல்குர்ஆன் : 33:41,42 )

''நபி(ஸல்) அவர்கள் தொழுதால், கடைசி இருப்பில் அத்தஹிய்யாத் மற்றும் ஸலாம் கூறுவதற்கு இடையே கடைசி வார்த்தையாக, ''அல்லாஹும்மஹ்ஃபிர்லீ மாகத்தம்து வமா அக்கர்து, வமா அஸ்ரர்து வமா அஃலன்து. வமா அஸ்ரஃப்து, வமா அன்த அஷ்லமு பிஹி மின்னீ அன்தல் முகத்தமு, வஅன்தல் முஅக்கரு, லாயிலாஹ இல்லா அன்த'' என்று கூறுவார்கள்.

பொருள்: இறைவா! நான் முன் செய்தவற்றையும், பின் செய்தவற்றையும், ரகசியமாக செய்தவற்றையும், வெளிப்படையாக செய்தவற்றையும், வீண் விரயம் செய்தவற்றையும், என்னைப் பற்றி என்னைவிட நீ அறிந்துள்ளவற்றையும் எனக்கு நீ மன்னிப்பாயாக! நீயே முற்படுத்தி வைப்பவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. (அறிவிப்பவர்: அலீ(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1424 )

''நபி(ஸல்) அவர்கள் தன் ருகூஉவிலும், தன் ஸஜ்தாவிலும், ''சுப்ஹானக் கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக, அல்லாஹும்மஹ்ஃபிர்லீ'' என்று அதிகமாக கூறுபவர்களாக இருந்தனர். (புகாரி,முஸ்லிம்)

பொருள்: இறைவா! எங்கள் இரட்சகனே! உன்னைப் புகழ்ந்து தூய்மையானவன் என போற்றுகிறேன். இறைவா! என்னை மன்னிப்பாயாக! (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1425 )

''நபி(ஸல்) அவர்கள் தன் ருகூஉ, ஸஜ்தாவில் ''சுப்பூஹுன், குத்தூசுன் ரப்புல் மலாயிகதி வர்ரூஹ்'' என்று கூறுவார்கள்.

பொருள் : அல்லாஹ் தூய்மையானவன், பரிசுத்தமானவன். மேலும் வானவர்கள், ஜிப்ரீல் (அலை) ஆகியோரின் இறைவன். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா  (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1426 )

(தொழுகையின்) ருகூஉவில் இறைவனை கண்ணியப்படுத்துங்கள். ஸஜ்தாவில் துஆச் செய்வதில் ஈடுபடுங்கள். உங்களுக்கு  துஆ ஏற்கப்படக் கூடும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1427 )

''ஸஜ்தா செய்யக்கூடிய அடியான் தான், தன் இறைவனுக்கு மிக நெருக்கமானவனாக உள்ளான். எனவே (அதில்) துஆவை அதிகமாக்குங்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1428 )

''நபி(ஸல்) அவர்கள் தன் ஸஜ்தாவில் ''அல்லாஹும்மஹ்ஃபிர்லீ ஃதன்பீ குல்லஹு, திக்கஹு, வஜில்லஹு, வஅவ்வலஹு, வஆகிரஹு, வ அலானிய்யதஹு, வசிர்ரஹு''' என்று கூறுவார்கள்.

பொருள்: இறைவனே! என் பாவங்களில் சிறியவை, பெரியவை, முதன்மையானவை, இறுதியானவை, பகிரங்கமானவை, இரகசியமானவை என அனைத்தையும் நீ மன்னிப்பாயாக! (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1429 )

''ஒருநாள் இரவு நபி(ஸல்) அவர்களைக் காணவில்லை என்பதால் தேடினேன். அப்போது அவர்கள் ருகூஉ செய்தவர்களாக அல்லது ஸஜ்தா செய்தவர்களாக இருந்தார்கள். (அதில்) ''சுப்ஹானக்க, வபிஹம்திக்க, லாஇலாஹ இல்லா அன்த'' என்று கூறிக் கொண்டிருந்தார்கள். 

பொருள்: யா அல்லாஹ்! நீ தூய்மையானவன். உன்னைப் புகழ்கிறேன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.

''என் கைகள் அவர்களின் உள்ளங்கால்களை தொட்டது. அவர்கள் பள்ளியில் இருந்தார்கள். கால்கள் இரண்டும் (ஸஜ்தாவில்) நட்டு வைத்த நிலையில் இருந்தது.''

அப்போது அவர்கள் ''அல்லாஹும்ம இன்னீ அஊது பிரிழாக்க மின் ஸக்திக, வ பி முஆபாதிக மின் உகூபதிக, வஅஊது பிக மின்க, லா உஹ்ஸீ ஸனாஅன் அலய்க அன்த கமா அஸ்னய்த அலா நஃப்ஸிக '' என்று கூறினார்கள்'' என மற்றொரு அறிவிப்பில் உள்ளது.

பொருள் : இறைவா! உன் திருப்தி மூலம் உன் கோபத்தை விட்டும் உன் ஆதரவு மூலம் உன் தண்டனையை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் உன்னிடம் உன் வேதனையை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன். உன்னை நீ புகழ்ந்தது போல் (எல்லையில்லா உன் புகழை) என்னால் முழுமையாக உன்னை புகழ இயலாது. (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1430 )

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''


இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

இலவசம் விலை போனதே ! [அனுபவங்களின் விலாசம்] - குறுந்தொடர் - நிறைவுப் பகுதி 24

அதிரைநிருபர் பதிப்பகம் | July 03, 2014 | , , , , ,

கு.தொ.: 4

“நம் ஊரிலிருந்து வந்திருக்கிறார்கள். எனக்கு வேண்டியவர். குர் ஆன் தமிழ் தர்ஜமா கொண்டு வந்திருக்கிறார்கள். உங்களிடம் கூட்டி வந்திருக்கிறேன்” என்றேன்.  

“உட்காருங்கள். அந்த மாதிரி காப்பியைக் காட்டுங்கள்” என்றேன். கையோடு கொண்டு வந்திருந்த மாதிரியைக் கொடுத்தோம். 

“தலைப்பைப் பார்த்து தர்ஜமா என்று இருக்கிறதே, தர்ஜூமா என்கிறார்களே?!” என்றார்.

“இதுதான் சரியான உச்சரிப்பு” என்று நம் ஊர் ஆள் சொன்னார். பிரித்து ஒரு பார்வை பார்த்து விட்டு,

“அமல்களின் சிறப்பு என்ற புத்தகம் வாங்கி ஹதியா கொடுக்கலாம் என்று இருந்தோம். ஃபாரூக் அண்ணன் ஊர்க்காரர் கொண்டு வந்த்தால் இதையே வாங்கிக் கொள்கிறோம். எத்தனை பிரதிகள் கொண்டு வந்திருக்கிறீர்கள்?” என்றார்.

“முன்னூறு பிரதிகள் கொண்டு வந்திருக்கிறேன். எல்லாம் பினாங்கில் இருக்கிறது” என்றார். அந்த மேனேஜர், 

“என்ன விலை போட்டிருக்கிறது” என்று கேட்டுக் கொண்டே குர்ஆனைத் திறந்து, 

“ரூ 120/- போட்டிருக்கிறது” என்றார். குர்ஆன் கொண்டு வந்த ஆசாமி உடனடியாக,

“அடுத்தப் பதிப்பு ரூ 150/-“ என்றார். உடனே அந்த மேனேஜர்,

“இப்பொழுது பிறந்திருக்கும் பிள்ளைக்கு மட்டும் பேர் வைப்போம். பிறக்கப்போற பிள்ளைக்கு பிறந்ததும் பேர் வைக்கலாம்” என்று திருப்பியடித்தார்.

குர் ஆன் கொண்டு வந்தவர் அடுத்த பதிப்பின் விலை சொன்னதும் இவர் ஒரு ‘தில்லு முல்லு’ ஆசாமி என்பதைப் புரிந்து கொண்டேன். இது பிரச்னையில் முடியும் என்ற எண்ணம் என் உள் மனதில் உதித்தது. மேனேஜரிடம், ‘வேண்டாமென்று சொல்லுங்கள்’ என்று கண்ணைக் காட்டினேன். அவர் கவனிக்கவில்லை.  குர் ஆனைப் புரட்டிப் பார்ப்பதிலேயே குறியாக இருந்தார். 

“முன்னூறு பிரதிகளையும் எடுத்துக் கொள்கிறோம். என்ன ரேட்டுக்குத் தருகிறீர்கள்” என்று கேட்டார்.

“சிங்கப்பூரில்…..” என்று ஒரு பணக்காரர் பெயரைச் சொல்லி, “அவர் இரண்டு பிரதிகள் வாங்கிக்கொண்டு சிங்கப்பூர் டாலர் 1,500/- கொடுத்தார். கோலாலம்பூரில் (ஒரு தமிழ் முஸ்லீம் பெயரைச் சொல்லி) ஒரு பிரதி எடுத்துக் கொண்டு 2,000/- மலேசிய டாலர் கொடுத்தார்.” என்றார். இதைக் கேட்ட மேனேஜர், 

“அது தர்மம்” என்றார். பாம்புக்குப் பால் வார்த்து விட்டோமோ! நம் மரியாதையும் கப்பல் ஏறப் போகுது! ஊர் மரியாதையும் கப்பல் ஏறப்போகுதென்று எண்ணி எழுந்து கொஞ்சம் தள்ளிப்போய் மேனேஜருக்கு ‘வேண்டாம், திருப்பி அனுப்புங்கள்’ என்று சைகை செய்தேன்.  அவர் என்னை கவனிக்கவில்லை.

“நாங்கள் டெல்லியிலிருந்து பல லட்ச ரூபாய்க்கு புத்தகங்கள் இறக்குமதி செய்கிறோம். பேங்க் ரேட்படி போட்டு எங்களுக்கு 30-35% கழிவு கொடுக்கிறார்கள். அது அல்லாமல் நாங்கள் டெல்லிக்கு புத்தக கண்காட்சிக்குப் போகும் போது பல செல்வுகளையும் செய்கிறார்கள். அதெல்லாம் பெரிய வியாபாரம். பரவாயில்லை. குர்ஆன் என்பதால் கழிவு எங்களுக்கு வேண்டாம். நாங்கள் வாங்கியும் அல்லாஹ் பேராலே ஹதியாதான் கொடுக்கப் போகிறோம். வித்து ஆதாயம் சம்பாதிக்கவில்லை. ரூபாய்க்கு மலேசியா 9 காசு வீதம் ஒரு புத்தகத்துக்கு வருது.  மலேசியா காசு 9.60 போட்டுத் தருகிறேன். விருப்பமிருந்தால் கொடுங்கள். இல்லையென்றால் வேறு தோது பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.

வந்தவரோ 300 குர்ஆனை மலேசியா ரிங்கிட் 1,500/2,000 த்துக்கு விற்று நடுவிக்காடு, மங்கனங்காடு, மழவேனிற்காடு, முடுக்குக்காடு, மரவக்காடு தொக்காளிக்காடு போன்ற காடுகளையெல்லாம் ஒரே வளையா வளைச்சுப்போடலாம் என்று திட்டம் போட்டு விட்டார். முன்னூறு பிரதிகளை வாங்கி ஹதியாக் கொடுக்க்கூடிய ஆளாக இருந்தால் அவன் ஒரு ஏமாளியாக இருப்பான் என்றே நினைத்து விட்டார். ‘பொன் முட்டை இடும் வாத்தின் கழுத்தை அறுத்தால் எல்லா முட்டையையும் ஒரே தடவை எடுத்த் விட்டால் ஒரே நாளில் பணக்க்காரனாகலாம்’ என்ற ஐடியா அவருக்கு வந்து விட்டது. அந்த அளவுக்கு உள்ள பைத்தியகாரன் அங்கே இல்லை என்பதை இந்த அசாமி உணரவில்லை. 

பார்த்தார், யோசித்தார்.  ‘ஏண்டா இவரை இங்கே கொண்டு வந்தோம்’ என்றாகிவிட்டது.  இதில் வேறு பிரச்னை எழும் என்று என் உள் மனம் என்னை உறுத்தியது.  ஒரேயடியாக தட்டிக் கழித்து விட்டால் நல்லதென்றே பட்டது! மேனேஜரிடம் மீண்டும் கண் ஜாடை செய்தேன், அவர் புரிந்து கொள்ளவில்லை. குர்ஆன் கொண்டு வந்த ஆசாமி,

“சரி, கணக்குப் பார்த்து பணம் தாருங்கள். பினாங்கிலிருந்து பிரதிகளை அனுப்பி வைக்கிறேன்” என்றார்.

“பிரதிகள் வந்ததும் கணக்குப் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்” என்றார் மேனேஜர்.

“அட்வான்ஸாவது கொடுங்கள்” என்றார்.

“அதெல்லாம் எங்கள் ஸிஸ்டத்தில் இல்லை. நாங்கள் இந்தியாவிலிருந்து வாங்கும் புத்தகங்களுக்கு புத்தக்கங்கள் பெற்றுக்கொண்ட தேதியிலிருந்து 90 நாட்கள் சென்றுதான் பணம் கொடுப்போம்” என்று ஒரே பேச்சாகச் சொன்ன மேனேஜர், “ பினாங்கிலிருந்து அனுப்பும் லாரி சார்ஜைக் கழித்து பாக்கியை ரொக்கமாக வாங்கிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் பேச்சு இல்லை.  உங்கள் விருப்பம் எதுவோ அதுபடி செய்து கொள்ளுங்கள்” என்றார்.

குர்ஆன் கொண்டு வந்த ஆசாமியின் தந்திரங்கள் ஏதும் பலிக்கவில்லை. ஹதியா கொடுக்கும் குர்ஆனைக்கூட அங்குள்ளவர்களுக்கு படிக்க நேரமில்லை. ‘காசு காசு’ என்பதே ஒவ்வொருவரின் வேதமாக இருக்கிறது. தமிழ் முஸ்லீம்கள் குர்ஆன் வாங்கி ஓதுவதும் படிப்பதும் யார்? அதெல்லாம் இமாம்களின் வேலை என்று ஒதுங்கி விடுகிறார்கள்.  குர்ஆன் கொண்டு வந்த முதலைக்கு ஆசையைத் தூண்டியது எது என்றால் அந்தக் கடை மேனேஜர் தவறுதலாக ஒரு டிப்ஸ் கொடுத்து விட்டார். அது “நாங்கள் ‘அமல்களின் சிறப்பு’ என்ற புத்த்கத்தை வாங்கி ஹதியா கொடுக்கலாம் என்றிருந்தோம் என்பதே.  முன்னூறு நானூறு பிரதிகளை வாங்கி ஹதியா கொடுப்பவர்களாக இருந்தால் பெரிய கையாகவும் அதே சமயம் இஸ்லாம் மார்க்கம் என்றால் அள்ளிக் கொடுக்கும் ஏமாளி பண முதலையாகவும் இருப்பார்கள் இதை பயன் படுத்தி ஊரில் தோட்டந்துரவுகளை வாங்கி போட்டு கால் மேல் கால் போட்டு உண்ணலாம்,. காரில் ஊர் சுற்றலாம் என்ற எண்ணம் தோன்றி இருக்க வேண்டும்.  அதனால் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். 

இஸ்லாம் இப்படிச் சொல்லவில்லை. மனித இனத்துக்கு நல்வழி காட்டவே அல்லாஹ் குர் ஆன் என்ற வேதத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளினான்.  இது மனித இனத்திற்கு நேர் வழி காட்டும் திருமறை என்று சொன்னானே தவிர இதை விற்று பெரும் பணத்தைத் தேடிக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. பணக்காரர் ஆவதற்கு வேறு நல்ல நல்ல புத்தகங்கள் மனிதன் எழுதி இருக்கிறான். அதில் ஒன்று ‘Think and Grow Rich’ by Nepoleon Hill என்பதும் சிறந்த ஒன்று. அதிலும் சிந்தித்து செயல்பட்டு நேர்வழியில் பொருளீட்டி பணக்காரன் ஆகு என்றும் தேடிய பணத்தை ஏழை எளியோருக்கு உதவி செய் என்றும் அதை முதலீடாகக் கொண்டு பெரும் பெரும் தொழிற்சாலைகளை நிறுவி பலருக்கு வேலை கொடு என்றும்தான் சொல்லப் படுகிறது.   அது மனிதனால் எழுதப்பட்ட புத்தகம். அதன் விலையோ எழுதியவருக்கு சிறு ராயல்டி, பதிப்பாளருக்கு காகித விலை, அச்சுக்கூலி சில்லறை விற்பனையாளருக்குக் கமிஷன் என்ற கணக்கிலேயே ஒரு சாதாரண தொழிலாளியும் ஒரு வேலை சாப்பட்டுச் செலவுக்கு செய்யும் செலவைவிட மிகக்குறைவாகவே இருக்கும்.  அந்தப் புத்தகம் படித்து அதன் வழி எத்தனையோ பேர் அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் கோடீஸ்வரர் ஆகி இருக்கிறார்கள்.  அந்தப் புத்தகத்தில் விற்கும் விலையை அச்சிட்டு வெளியிடுகிறார்கள். திருமறையோ how to become rich  பாலிஸையையோ ‘A short cut way to become rich’, ‘A way to become rich quickly’ என்னும் வழிமுறைகளைச் சொல்ல அருளப்படவில்லை.

மனித இனம் ஒழுக்க நெறியுடன் வாழ, மனித இனத்திற்கு நேர்வழி காட்ட அல்லாஹ்வால் அருளப்பட்ட புனித வேதம்.  புனித வேதம்-பணம் சம்பாதிக்க அருளப்பட்ட வேதமல்ல.  அல்லாஹ்வின் பேரருளை பெற மனித இனத்திற்கு தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வழியாக அருளப்பட்டது என்பதை முஸ்லீம்கள் எல்லோரும் உணர வேண்டும்.

ஆக, ஒரு வழியாக ஒரு புக் 9-60 மலேசிய ரிங்கிட் விலை பேசி முடித்தாகி விட்டது. பினாங்கில் இருக்கும் குர் ஆன் பிரதிகள் வந்ததும் ட்ரான்ஸ்போர்ட் சார்ஜ் போக மீதி தொகையை உடனடியாக கொடுப்பதென்ற Gentleman Agreement செய்தாகி விட்டது.  இரவு 7-30 மணியளவில அங்கிருந்த உணவு கடை ஒன்றில் இருவரும் சாப்பிட்டு விட்டு நேராக பார்க்கிங்கில் போட்ட வேனை எடுத்து கொண்டு அவரை அவர் தங்கும் இடத்தில் விட்டு விட்டு என் இடத்திற்கு வந்து விட்டேன். 

இரண்டுமூன்று நாட்கள் ஆனது. குர்ஆன் வரவில்லை. ஒருநாள் என் கடைக்கு குர்ஆன் பேர்வழி வந்தார்.,

“குர் ஆனை கஸ்டம்ஸில் வெளியுறவு அமைச்சைச் சார்ந்த புத்தக தணிக்கை இலாக்காவின் மத சம்பந்தப்பட்ட பிரிவு தடுத்து விட்டது.”  என்றார்.

அதை அவர்கள் வெளியிட மறுக்கிறார்கள் என்று சொன்னார். “என்ன காரணம்?” என்றேன். அவருக்கு விளக்கமாகச் சொல்லத் தெரியவில்லை.  நானும் அவரும் புத்தகக் கடை மேனேஜரிடம் சென்றோம். விபரத்தைச் சொன்னோம். அவர்கள் வெளி நாட்டிலிருந்து புத்தகம் இறக்குமதி செய்வதில் அங்குள்ள அதிகாரிகள் நல்ல பழக்கம்.  அந்த புத்தக கம்பெனிக்காரர்கள் மீதும் அந்த இலாகாவில் நல்ல பெயர்.  அரசுக்கு எதிரான புத்தகங்கள் இறக்குமதி செய்து எந்த கெட்ட பெயரும் அந்தக் கம்பெனிக்கு இல்லை. அந்த இலாக்காக்காரர்க்ளும் அடிக்கடி அங்கே வந்த தடை செய்யப்பட்ட புத்தகங்களின் பெயரையும் சில சமயம் பட்டியலையும் கொடுப்பார்கள்.  சில நேரங்களில் தடை செய்யப்பட்ட புத்தகங்களின் பட்டியல்கள் பத்திரிகைகளில் வரும். ஆரசியல் கோட்பாடு குறிப்பாக கம்யூனிசம், அடுத்து இஸ்லாம் சம்பந்தமான எதிர்மறையான கருத்து போதிக்கும் புத்தகங்கள், அடுத்து ஆபாச புத்தகம். இவை தடை செய்யப்பட்டவை.

புத்தகக் கம்பெனி மேனேஜர் அந்த இலாக்காவுக்கு டெலிபோன் போட்டு விஷயத்தைச் சொன்னார். “நாளை அவரை ஆஃபீசுக்கு வரும்படி சொன்னார். மறுநாள் மேனேஜர் அங்கே சென்று விபரம் கேட்டார். அவர்கள் சொன்னது அரபு மொழி எழுத்தில் இரண்டு மூன்று வகை உண்டாம். 1) இந்தக் குர்ஆனில் மலேசியாவில் அங்கீகரிக்கப்பட்ட எழுத்து இல்லையாம். 2) இந்த குர்ஆன் பலதடவைக்கு மேல் அச்சிட்டதால் சில அரபு எழுத்துகளும் சேர், ஸபர் போன்ற குறியீடுகளும் தேய்ந்து போய் இருப்பதால் அர்த்தம் மாறுபடுகிறது என்றும் அதனால் அதை வெளியிட தடை போடும் நிலை இருக்கிறது.” என்றார்கள்.  எங்களுக்கும் இதை தடை செய்ய வருத்தமாக இருக்கிறது. வேண்டுமென்றே செய்த தவறு அல்ல. இயற்கையாக உண்டானது.  இதற்கு ஏதாவது ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணங்களை இன்னும் இரண்டு வாரத்தில் எழுத்து மூலம் கொடுத்தால் வெளியாக்கும் உத்தரவை தருகிறோம் இல்லை என்றால் எல்லாமே கடலில் கொண்டு போய் கொட்டி விடுவோம்” என்றார்களாம்.  மறுநாள் போனபோது சொன்னார்.

குர்ஆன் வெளியாக என்ன வழி? ஒரு குர்ஆனுக்கு மலேசியா டாலர் 2,000 கேட்ட quick rich அல்லது குறுக்கு வழி பணக்காரனாக விரும்பிய பேராசை பேர்வழிக்கு அல்லாஹ்வின் சோதனை!

குறுக்கு வழிக்காரரின் முகம் வெளிறிவிட்டது.  ஆனால், இது குறுக்கு வழிக்காரருக்கு முன்னமேயே தெரியும்.  அதைக் காட்டிக் கொள்ளாமல் குர்ஆனுக்கு உள்ள பணத்தை முன் கூட்டியே வாங்கி விட்டால்...! என்ற எண்ணம்.

என்னிடம் அவர் சொன்னது குர்ஆன் பினாங்கில் ஒரு பிரபல்யமான தமிழ் முஸ்லீம் கம்பெனியின் குடோவ்னில் இருப்பதாகவே பேசினார். தில்லு முல்லுத் தனம். அதுவும் குர்ஆனில். 

இரண்டு நாள் கழித்து குர்ஆனை வெளியாக்கும் வழி கண்டாச்சு.  “இந்திய தமிழ் முஸ்லீம்கள் இந்த அரபு எழுத்திலேயே படித்துப் பழக்கம். தமிழ் முஸ்லீம்களுக்கு மட்டும் விலையில்லாமல் ஹதியாகாவாகக் கொடுப்பது. தமிழ் முஸ்லீம்கள் ஏற்கனவே அரபு வாசகத்தை ஏற்கனவே ஓத தெரிந்தவர்கள். ஆனால், தமிழில் அதற்கு தெளிவான விளக்கம் தெரியாதவர்கள். இன்னும் பலர் அரபு மொழியில் ஓத தெரியாதவர்கள். ஒரு சில சூராக்கள் மட்டும் வாய்வழி மனப்பாடம் செய்து ஓதுபவர்கள். எனவே அரபு மொழி முக்கியமில்லை. குர்ஆனின் வாசகத்தைத் தமிழில் கொடுப்பதே இதன் முக்கிய நோக்கம். அதுவும் தமிழ் முஸ்லீம்களுக்கு மட்டும் இனாமாகக் கொடுப்பதால் சிறிய எண்ணிக்கையிலான பிரதிகளே வெளியாகும்” என்ற காரணத்தை அந்த இலாக்காவின் தமிழ் பகுதியைச் சேர்ந்த ஓர் இஸ்லாமியர், “இந்தக் காரணத்தை எழுதிக் கொடுங்கள். பிரதிகளை வெளியாக்க என்னையும் கலந்து கொள்வார்கள்.  நான் ஒப்புதல் கொடுக்கிறேன்” என்றாராம். 

அதன்படியே அந்த கம்பெனிக்காரர்கள் கடிதம் எழுதிக் கொடுத்தார்கள்.  இதில் நாலைந்து நாட்கள் ஆகிவிட்டது.  கோலாலம்பூரிலிருந்து வெளியாக்கும் உத்தரவு பின்ங்கு போய் சேர வேண்டும்.  அதன் பின்பே குர் ஆன் வெளியாகும். ஒரு கண்டிஷன். இந்தக் குர்ஆன் தமிழ் முஸ்லிம்களுக்கும் மட்டுமே இனாமாகக் கொடுக்க வேண்டும் “இந்த குர்ஆன் இனாமாக கொடுக்கப்படுகிறது” என்ற ரப்பர்  ஸ்டாம்ப் அடித்தே வழங்க வேண்டும் என்ற உத்தரவின் பேரில் குர்ஆன் வெளியாக்க அனுமதி கிடைத்தது.  

ஏறத்தாழ மூன்று நான்கு தடவை என் வேலையைப் போட்டுவிட்டு கூட்டிப்போய் பெட்ரோல் செலவு, பார்க்கிங்க் செலவு எல்லாம் செய்தும் ஏதும் நான் கமிஷனோ வேறு எதுவுமோ எதிர் பார்க்கவில்லை.  அல்லாஹ்வுக்காக நான் அதையெல்லாம் எண்ணவில்லை. யாருக்கு எந்த உதவி செய்தாலும் எதையும் எதிர்பார்க்கும் எண்ணம் எனக்கு இல்லை.

ஒரு நாள் அவர் என் கடைக்கு வந்தபோது புத்தக வெளியீடு சம்பந்தமாகப் பேசினோம்.  அப்பொழுது நான் சொன்னேன்,“நான் சிறுவர்கள் கதை புத்தகம் 4 கலரில் வெளியிடுகிறேன்.  தமிழ் நாட்டில் நல்ல ஓவியர்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாரையாவது என்னிடம் அரிமுகப்படுத்தி விடுங்கள். அவர்களிடம் பேசி கதையைக் கம்ப்யூட்டரில் அனுப்பி அதற்கு ஏற்ற ஓவியங்கள் தீட்டிக் கொடுத்தால் அதற்குரிய சார்ஜைப் பேசி கொடுத்து விடலாம்.  என்னுடைய அட்ரசைத் தருகிறேன்.  என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்ல முடியுமா?” என்றேன்.

“செய்யலாம். அதற்கு எனக்கு ஒரு கமிஷனை நீங்கள் பேசி கொடுக்கனுமே!” என்றார்.

அதைக் கேட்ட நான் திடுக்கிட்டேன்.  உண்ட தட்டையிலேயே…. ஆள்! என்று தீர்மாணித்தேன். மீண்டும் தொடர்ந்தார்,

“அந்தக் கதையை என்னிடம் கொடுங்கள். நான் ப்ரிண்ட் செய்து அனுப்புகிறேன்” என்றார்.

“இது நாலு கலர் படம் போட்ட புக்குகள். அந்தக் குவாலிட்டியில் இந்தியாவில் செய்ய மிஷின் கிடையாது. வெறும் சினிமா நோட்டீஸ் மட்டும் அடிக்கும் மிஷின் மட்டுமே மண்ணடியில் ‘போட்டு சக்குசக்குன்னு’ அடிச்சுத் தள்ளிட்டு காசைக் கொடு என்பீர்கள்.  பத்தாம் பக்கம் இருக்கும் அடுத்தது 16 பக்கம் வரும். வேண்டாம் என்று கழட்டி விட்டேன், ‘ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே’ பாட்டு ஞாபகம் வந்தது.  அடுத்த நாள் வந்தார்.

“நான் சிங்கப்பூர் போகிறேன். மூன்று நான்கு நாள் கழித்து வருவேன்.  புக் வந்து விட்டால் பணம் வாங்கி வையுங்கள்” என்றார்.  

“உங்களுக்கு எந்த விசா தந்தார்கள்?” என்றேன். 

“விசிட்டிங் விசா தந்தார்கள்” என்றார்.  

“நீங்கள் சிங்கப்பூர் போனால் திரும்பி மலேசியா வர முடியாது. ஒரு முறை வந்து விட்டு வெளியானால் அந்த விசா ஆட்டோமாட்டிக்கா கேன்ஸல் ஆகிவிடும். புத்தகம் வந்ததும் பணத்தை வாங்கிக் கொண்டு போங்கள்” என்றேன்.  அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?

“அது உன்னைப் போல கேனப்பயலுகளிடம்தான் அப்படிச் சொல்வார்கள். நாங்கள் எல்லாம் மண்ணடியில் பேர் போட்டவர்கள். மண்ணடி மண்ணை பொன் என்று சொல்லி விற்று காசு பண்ற ஆசாமிகள் நாங்கள்” என்றார்.  

எனக்கு அவர் 10 வயது இளையவர். சரியான நல்ல பாம்புக்கு பால் வார்த்தோம் என்று என்னையே நான் நொந்து கொண்டேன். எனக்கு பத்து வயது இளையவன் என்னை நீ நான் என்று மரியாதை இல்லாமல் பேசுகிறானே என்று எனக்குக் கோபம் வந்தது.  இந்த மாதிரியான ஆசாமிகளிடம் என் குணமே வேறு. வேறு மாதிரியாக நடந்து விடும்.  நான் முதன் முதலில் மலேயா புறப்படும்போது சொல்லிய வாசகம் நினைவு வந்தது. “உனக்குக் கோபம் வந்தால் திடுதிப்பென்று அரிவாள், கத்தி, கம்பு என்று எடுக்கிற ஆளு நீ. வீட்டில் எத்தனை பீங்கான் தட்டையெல்லாம் உடைத்திருக்கிறாய். அங்கே போய் அப்படியெல்லாம் நடந்து கொள்ளாதே” என்று அழுதுகொண்டு சொன்ன சொல் ஞாபகம் வந்தது!  என்னையே நான் சமாளித்துக் கொண்டேன்.

“அப்படியா! Thank you brother! சென்று வாருங்கள். உங்களுக்கு மாலை போட்டு வரவேற்கிறேன்” என்றேன்.  

போய் விட்டார். இதற்கிடையில் நான் கம்பெனி மேனேஜரிடம் விஷயத்தைச் சொல்லி, 

“குர்ஆனுக்கு வெளியுறவுத் துறைக்குக் கொடுத்த கடிதத்தை வாபஸ் வாங்குங்கள். குர்ஆனை வெளியிடுவது அவர்கள் சொந்த முடிவாக இருக்கட்டும்” என்றேன். அவர், 

“வேண்டாம் ஃபாரூக். குர்ஆன் விஷயம். அந்த நாய் அப்படிச் செய்தது என்று நாமும் அப்படி நடக்க வேண்டாம்” என்றார். 

நாலைந்து நாள் வரை குர்ஆன் வரவில்லை. இதற்கிடையில் அவர் போன நாளாம் நாள் அந்தக் கம்பெனி மேனேஜர் ஜெர்மனியில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு புறப்பட்டுப் போய் விட்டார். திரும்பி வர 10-12 நாட்கள் ஆகும் ஒரு நாள் காலை 8:45 மணியளவில் என் டெலிபோன் மணியடித்தது. எடுத்தேன். ஒரே சப்தம்… இரைச்சல்,”

“ஹலோ” என்றேன்

“நான் தான்….. (குர் ஆன் பேர்வழி) காக்கா, மலேசியா ஏர்ப்போர்ட்டிலிருந்து பேசுகிறேன்” என்றார்.

“பேசுங்கள்” என்று கிண்டலடித்தேன்.

“என்னை வெளியே விட மாட்டார்களாம். ஒரு முறை போனால் விசா காலாவதியாச்சு” என்று சொல்கிறார்கள் காக்கா” என்றார்

“அப்படியெல்லாம் என்னைப் போல இளிச்ச வாயனிடம்தானே சொல்வார்கள்! நீதான் மண்ணடி மண்ணை பொன் என்று விற்கிறா ஆளாச்சே! அதை இமிகிரேஷின்காரனிடம் சொல்லுடா!” என்று டெலிபோனை வைத்து விட்டேன்.  

திரும்பவும் மணியடித்த்து. எடுத்தேன். 

“காக்கா, ரொம்ப கோபப்படுறியளே? குர் ஆன் வந்து விட்டதா?” என்றார்.

“வரவில்லை. மேனேஜர் வெளிநாடு போய்விட்டார். வர 15 நாட்கள் ஆகும். குர்ஆன் கையில் கிடைத்தால்தான் பணம் கிடைக்கும்” என்றேன்.

“ஏன் குர்ஆன் இன்னும் வரவில்லை?” என்றார்.

“அதை பினாங்கில் உன் ஆளிடம் கேள்” என்றேன். 

“நான் இங்கிருந்தே ஊர் போறேன். ஊர் போய் டெலிபோன் போடுகிறேன்” என்று வைத்து விட்டார்.

ஊர் போய் மூன்று நான்கு நாள் கழித்து போன் செய்தார். 

“குர்ஆன் வந்து விட்டதா?” என்றார். 

“குர்ஆன் வந்து விட்டது. அதற்குரிய பணம் வவுச்சரும் கொடுத்து விட்டார்கள். லாரி கூலி போக பாக்கி வெள்ளி இவ்வளவு தந்தார்கள்”என்றேன்.

“”அதில் இவருக்கு இத்தனை வெள்ளி, அவருக்கு இத்தனை வெள்ளி கொடுங்கள். பினாங்கில் (ஒரு நபருடைய பெயரைச் சொல்லி) அவருக்கு இவ்வளவு கொடுங்கள். பாக்கி தொகைக்கு பேங்க் போய் ட்ராஃப்ட் எடுத்து அதை கவரில் வைத்து அத்துடன் வவுச்சரையும் வைத்து என் அட்ரஸ் தருகிறேன். எழுதி தபால் ஆபீஸ் போய் என் பெயரில் ரிஜிஸடர் செய்து விடுங்கள்” என்றார்.

எனக்குக் கடுப்பு ஏறியது,

“நீ கொடுக்க வேண்டிய நபர்களுக்கு அவர்கள் இடத்துக்குப் போய் உன் கடனைக் கொடுக்க வேண்டும். பேங்குக்குப் போய் டிரஃப்ட் எடுக்க வேண்டும். தபால் ஆபீஸ் போய் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். இதையெல்லாம் செய்ய எவனாவது இளிச்ச வாயன் இருந்தால் அவனைப் பார். உன் வீட்டு எடுபிடி என்று நினைத்தாயா? கொஞ்சம் இரக்கப்பட்டு இடம் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவாய். இந்த வேலைகளுக்கு எல்லாம் எவனாவது கேனையன் இருப்பான் அவனைப் பார். பணம் வேனும் என்றால் எவனாவது ஒருத்தனை அனுப்பி முழுப் பணத்தையும் வாங்கிப் போகச் சொல். இந்த ‘மண்ணடித் தந்திரங்கள்’ எல்லாம் இங்கே விலை போகாது.  போனால் போகிறது என்று மனிதாபமான முறையில் உதவி செய்தால் மண்டையில் ஏறி மொட்டையடிக்கும் ஆள் என்பதைப் புரிந்து கொண்டேன்.” என்று சொல்லி போனை கட் செய்தேன்.

அடுத்த நாள் டெலிபோன் வந்தது. ஒரு நபரின் பெயரைச் சொல்லி, 

“அவரிடம் பணத்தைக் கொடுத்து விடுங்கள். ரொம்ப கோபப் படுகிறீர்களே, காக்கா!” என்றார்

“ஆமாம். கோபப்படாமல் இருந்தால் ஒண்ட வந்த பிசாசு ஊர் பிசாசை விரட்டும் என்பார்களே, தெரியுமா? உனக்கு இவ்வளவு உதவி செய்த என்னிடம் கமிஷன் கேட்டாய் அல்லவா? உன் போன்ற நன்றி கெட்டவர்கள் எல்லாம் அல்லாஹ் குர் ஆனை தொடவே கூடாது.  நீ எல்லாம் அதைப் பணம் சம்பாதிக்கும் கருவியாகப் பயன் படுத்துவதனால்தான் இஸ்லாமியர்களுக்கு உலக அளவில் சோதனைகள் ஏற்படுகிறது.” என்று சொல்லி போனை வைத்து விட்டேன்.  

பணம் வாங்க வந்தவரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்து விட்டேன்.  அதோடு காலை சுற்றிய நாகப் பாம்பு போய் விட்டது என்று எண்ணி இருந்தேன்.

அடுத்து ஒரு வாரம் கழித்து மீண்டும் போன் மணி அடித்தது. எடுத்த்தும், 

“காக்கா, நான் தான் பேசுகிறேன். குர் ஆன் கொண்டு வந்ததில் கணக்குப் பார்த்தால் எனக்கு நட்டம் எற்பட்டு விட்டது. அந்தக் கடைக்காரரிடம் சொல்லி இன்னும் கொஞ்சம் பணம் வாங்கிக் கொடுங்கள்” என்றார்.

“பேசியபடிதான் பணம் கொடுத்து விட்டார்களே? அதற்குமேல் எப்படி பணம் கேட்பது?” என்றேன்.

“நான் அங்கே ரொம்ப நாள் தங்கியதில் செலவு அதிகமாகிவிட்டது. அவர்களிடம் நீங்கள் சொல்லுங்கள்” என்றார்.

“நான் சொல்ல முடியாது. பேசியபடி பணம் கொடுத்து விட்டார்கள்” என்றேன்.

“அவர்கள் பணம் கொடுக்க சுனங்கி விட்டதால் நான் தங்கியதில் செலவு அதிகமாச்சே.?” என்றார்

“குர்ஆன் வந்து சேரவிவில்லை. சாமான் வராமல் விலை பேசியதும் பணத்தை இந்தா வாங்கிக்கொண்டு ஊர் போ என்று சொல்லும் முட்டாள்கள் இங்கு இல்லை. அவர்கள் முயற்சிக்கா விட்டால் அவ்வளவு குர்ஆனையும் அரசாங்கம் கடலில் கொட்டி விடும்.  குர்ஆனை காசுக்கு விற்று பணம் சம்பாதித்து தோட்டம் தொறவு வாங்க அவர்கள் உன்னிடம் குர்ஆன் வாங்கவில்லை. அதையெல்லாம் அல்லாஹ்வின் பேரால் இனாம் கொடுக்கவே அதை வாங்கினார்கள். காசு ஆசையால் ஷெய்த்தான் வேலையெல்லாம் செய்யாதே” என்றேன்

“அப்படியென்றால் நான் நேரடியாக அவரிடம் பேசுகிறேன்” என்றார்.

நான் அந்தக் கம்பெனி மேனேஜருக்கு டெலிபோன் போட்டு விஷயத்தைச் சொன்னேன். 

“அப்படியா? அவன் முகத்தில் வைத்திருந்த தாடியையும் உங்களூர் ஆள் என்று நீங்கள் கூட்டி வந்ததாலும்தான் நான் குர்ஆனை வாங்கினேன். ஷைத்தான் வேதம் ஓதுகிறது” என்று சொல்லிவிட்டு,

“உங்கள் ஊரில் ஷெய்த்தான்கள் அதிகம் இருக்கும்போல் தெரிகிறது!” என்றார்.

கொஞ்ச நேரம் கழித்து அந்த்க் கடை மேனேஜர் எனக்கு மீண்டும் போன் போட்டார்.

“பணம் கேட்டார். பணம் இல்லை. கொடுத்த பணத்தை திரும்ப கொடுத்து விட்டு குர்ஆனை எடுத்துக் கொள் என்றேன். விலை பேசி முடித்து ஒப்பந்தம் செய்துவிட்டு பிறகு கூட கொடு குறையக் கொடு என்று கேட்கிறாயே அப்படியெல்லாம் நீ கொண்டு வந்த குர்ஆனில் இருக்கிறதா?. உனக்கெல்லாம் ஒரு தாடி! ஒரு தொப்பி! மகா மட்டரகமான பேர்வழியாக இருக்கிறாயே” என்று திட்டி டெலிபோனை வைத்து விட்டேன்” என்று சொன்னார்.

“மீண்டும் டெலிபோன் போட்டு அதே பல்லவியைப் பாடினார். ஒரு வாரம் டயம் தர்றேன். நான் கொடுத்த பணத்தை கொடுத்து விட்டு குர்ஆனை எடுத்துக் கொள். இல்லை என்றால் நீ இங்கே வா. குர்ஆனை தருகிறேன். நான் கொடுத்த பணம் அல்லாஹ் பேராலே உனக்கு கொடுத்த தர்மமாக இருக்கட்டும் என்று சொன்னேன் என்றும், உழைத்துப் பணம் சம்பாதிக்க வழியைப் பார். தில்லுமுல்லுத்தனம் செய்யாதே” என்று சொன்னதாகச் சொன்னார்.

‘இனிமேல் டெலிபோன் போடாதே. போட்டால் நான் வேறு விதமாகப் போக வேண்டி வரும்” என்று எச்சரித்ததாகச் சொன்னர். அதோடு டெலிபோன் வருவது நின்று விட்டது.  

நான் படித்த புத்தி, பாம்பென்று நினைத்து அடிப்பதா? பழுதை என்று நினைத்து மிதிப்பதா? என்று ஒரு தமிழ் சொல்லடை உண்டு. (இதன் பொருள்: பழுதை என்பது வைக்கோல் பிரி). இரவு வேளைகளில் வயல்களின் வழி பாதையில் போகும்போது அங்கே பாம்பும் சுருண்டு கிடக்கும். வைக்கோல் பிரியும் சுருண்டு கிடக்கும். மங்கிய நிலவொளியில் பார்க்கும்போது அது பாம்பாகவும் தெரியும் வைக்கோல் பிரியாகவும் தெரியும். வைக்கோல் பிரியா பாம்பா? வைக்கோல் பிரி என்று எண்ணி பாம்பின் மீதுகால் வைத்தால் என்ன ஆகுமென்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆட்டுத்தோல் போத்திய நரி மந்தையில் புகுந்து ஆடுகளைத் தின்று ரத்தம் குடித்ததைப்போல் இஸ்லாத்தின் தோல் போத்திய நரிகள் நிறையவே குர் ஆனின் போதனை கூறியும் நபிகள நாயகம்(ஸல்) அவர்கள் கூறிய பொன் மொழிகளை (ஹதீஸ்களை) கூறியும் தங்கள் பொருளாதாரத்தை வளப்படுத்திக் கொள்கின்றன.  அல்லாஹ் குர்ஆனை அருளியது அதை ஒன்றுக்கு நூறாக விற்று மனிதன் காசு பார்க்க அல்ல. ரசூலுல்லாஹ்(ஸல்) நல்லுபதேசம் செய்த ஹதீஸ்களைச் சொன்னது புத்தகமாக்கி ஒன்றுக்கு நூறாக விற்று காசு பார்க்க் அல்ல. அவை இரண்டும் நமக்கு வந்தது மனிதன் நல் வழியில் சென்று நல்வாழ்வை பெற்று நல்லதைச் செய்து மனித இனம் திருந்தி அல்லாஹ்வின் நல் அடியாராகவே.  குர் ஆனில் think and grow தத்துவங்கள் சொல்லப்பட் வில்லை. Think and grow rich புத்தகத்திலும் குறுக்கு வழியில் சீக்கிரமே பணக்காரனாகும் தத்துவமும் சொல்லப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

குர்ஆனில் சொல்லப்பட்டதெல்லாம் நேரிய வழியில் நட; அல்லாஹ் ஒருவன் என்று நம்பு அவனையே வணங்கு; நேரிய வழியில் பொருளீட்டி வாழ்க்கை நடத்து தான தர்மங்களைச் செய் போன்றவையே.

அல்லாஹ்வும் இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் குர்ஆனும் ஹதீஸூம் மனிதனுக்கு நேர் வழி காட்ட அல்லாஹ்வால் அனுப்பப்பட்டவையே. அவை மனிதனுக்கு quick rich method டை கூற அல்லாஹ்வால் அனுப்பப்ப்படவில்லை என்பதை மீண்டும் நினைவு படுத்தி நிறைவு செய்கிறேன், அஸ்ஸலாம் அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு!

S.முஹம்மது ஃபாரூக்

தவற்றால் "சரி"ந்ததோ?? 8

அதிரைநிருபர் பதிப்பகம் | July 02, 2014 | , , , , ,

நீர் நிரப்பிய
ஏரியை,
மண் கொண்டு
நீர் நிரப்பினீர்..
மனையென்று
பொய் பரப்பினீர்...

அழகான நீர்நிலை
தூர்த்து
அடுக்குமாடியா?
அடுக்குமா?
கட்டடம் சிதறியது
கண்ணாடியா....

பாதி கட்டிய
நிலையில்
ஆடியது மாடி.....
அம்-மாடி,
அப்பாவி தொழிலாளிகளின்
உயிரைக் களவாடியது..
அய்யகோ !! அம்மாடி!!

பலி எண்ணிக்கை
கூடியது,
படிப்பவர்
பார்ப்பவர் உள்ளங்கள்
வாடியது..

வீடு வாங்கும்-விற்கும்
மோகங்களில் ஒன்று
இன்று
சோகம் ஆகியிருக்கிறது..

வீட்டுப் பத்திரம்
பத்திரமாய்
இருக்கிறதா? இருக்கட்டும்..
வீடு பத்திரமாய்
இருக்கிறதா?
தெரியுமா நமக்கு?

கட்டி விற்கிறார்கள்
வீடு வட்டிக்கு ...
சென்னைக்கு அருகில்
ஒரு சிட்டி-க்கு..
தகுதிக்கு மீறிய
துட்டுக்கு..

கடனில் வீடுகள்
வாங்கப்படும் போது
வாங்கும் திறணும்
பார்க்கப்படுவதில்லை,
பூமி
தாங்கும் திறணும்
பார்க்கப்படுவதில்லை.

குண்டு வெடித்தபின்
பாதுகாப்பு,
குழந்தை இறந்தபின்
பள்ளி வண்டி
பரிசோதனை,
படகு மூழ்கிய பின்
உயிர்க்கவச உடை,

இந்த வரிசையில்
போரூர் விபத்தும்
சில தினங்களில்
நினைவை விட்டும்
போய்விடாது இருக்கட்டும்..

அரசு உடனே
உரிய செயலில் இறங்கட்டும்,
உரியவர்களின் உள்ளம்
இரங்கட்டும்!!

அதிரை என்.ஷஃபாத்

நோன்பாளிகளே - 1 0

அதிரைநிருபர் பதிப்பகம் | July 01, 2014 | , , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

வல்ல அல்லாஹ்வின் அருளால் நோன்பு மாதத்தை அடைந்து நோன்பு வைப்பவர்களாக நாம் இருக்கிறோம். எல்லாப்புகழும் இறைவனுக்கே! (அல்ஹம்துலில்லாஹ்!) நாம் நோன்பிலும், பொதுவாகவும் கடைபிடிக்கும் காரியங்களைப் பற்றி பார்ப்போம்.

குர்ஆன்:

ரமலானின் தனிச்சிறப்பே இந்த மாதத்தில் குர்ஆன் அருளப்பட்டதுதான். அதனால் தினமும் குர்ஆனை நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் ஓதி வாருங்கள். ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் அவசியம் ஓதுங்கள்.

முதல் நோன்பு தொழுகை:

முதல் நோன்பு ஆரம்ப தொழுகையில் பள்ளி முழுவதும் நிரம்பி வழிந்த தொழுகையாளிகளை காண்பதற்கு மனதிற்கு நிறைவாக இருந்தது. தினமும் தொடர்ந்து வருபவர்களுக்கு இடம் இல்லாமல் பல சப்கள் கடந்து நிற்கும் அளவுக்கு இஷா தொழுகை, இரவுத்தொழுகை, பஜ்ர் தொழுகைகளுக்கு வந்த மக்களை பார்க்கும்பொழுது ஜூம்ஆவின் ஞாபகம் வந்தது. இத்தனை கூட்டமும் மற்ற நேரங்களில் எங்கு போனார்கள். வல்ல அல்லாஹ் அனைவருக்கும் ஹிதாயத் வழங்கட்டும்.

ஆடை அலங்காரம்:

நம் சகோதரர்கள் ஒரு விருந்துக்கு செல்வதென்றாலும், ஆபிஸ்க்கு செல்வதென்றாலும் வாசனை திரவியங்களை பூசிக்கொண்டு நல்ல ஆடைகளை அணிந்து செல்கிறார்கள்.

ஜூம்ஆ தினத்தன்று சாதாரண ஆடைகளையோ, கசங்கி போனதையோ அணிந்து வருகிறார்கள்.

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்.   (அல்குர்ஆன் : 7:31)

வல்ல அல்லாஹ் ஆடைகளால் உங்களை அழகாக்கிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறான். அதனால் வல்ல அல்லாஹ்வின் முன் தொழுகையில் நிற்கும்பொழுது சிறந்த ஆடைகளை அணிந்து நல்ல வாசனை திரவியங்களை பூசிக்கொண்டு வருவது சிறந்தது.

கொட்டாவி :

தொழும்பொழுது சிலர் வாயை பிளந்து ஆவென கொட்டாவி விடுவதை பார்த்திருக்கிறேன்.  (நீங்கள் தொழும்பொழுது பக்கத்தில் உள்ளவர்களை எப்படி பார்த்தீர்கள் என்று நினைக்கவேண்டாம். நான் தொழுது விட்டு வரும்பொழுது சுன்னத் மற்றும் 2வது ஜமாத் தொழுபவர்களை கவனிக்க நேரிடுகிறது).  (தொழுகையில் நம்மை படைத்த வல்ல அல்லாஹ்வுக்கு முன் நிற்கிறோம் என்ற உள்ளச்சம் இருக்க வேண்டும்) சிலர் சத்தத்துடனும் கொட்டாவி விடுவார்கள். இது நல்ல பண்பாக தெரியவில்லை. தொழும்பொழுதும் மற்றவர்களிடம் பேசிக்கொண்டு இருக்கும் நேரங்களிலும், தனியாக இருக்கும் நேரங்களிலும் கொட்டாவி வந்தால் வாயை ஆவென பிளக்காமல் சத்தம் இல்லாமல் கொட்டாவி நம்மை விட்டு அகலும்வரை நமது கையை கொண்டு வாயில் மூடிக்கொண்டு இருப்பது நல்ல பண்பாக இருக்கும். (கொட்டாவி நம்மோடு எல்லா காலங்களிலும் இருப்பது, அதனால் நாமும் கவனமாக இருக்க வேண்டும்).

சாக்ஸ் அணிபவர்களுக்கு:

ஊரில் பள்ளிக்கு சாக்ஸ் அணிந்து வருபவர்கள் குறைவாகவே இருப்பார்கள். வளைகுடா நாடுகளில் சாக்ஸ் அணிந்து தொழ வருபவர்கள் அதிகம் பேர். தொழும்பொழுது சுஜூதுக்கு சென்றால் கார்பெட்டில் உள்ள சாக்ஸ் வாடை நம்மை சிரமப்படுத்தும். சாக்ஸ் பயன்படுத்துபவர்கள் வேலை செய்யும் இடங்களில் குறிப்பாக ஆபிஸ்களில் வேலை செய்பவர்கள் ஷூவிலிருந்து காலை வெளியில் எடுத்து வைத்துக்கொள்ளலாம். ஷூவிற்குள் காற்று போக வாய்ப்பு இல்லாத காரணத்தால் காலில் உள்ள வேர்வை சாக்ஸிலிருந்து பள்ளியில் உள்ள கார்பெட்டில் ஈர்த்துவிடுகிறது.

சாக்ஸ் வாடை நம்மால் பள்ளிக்கு செல்வதிலிருந்து தடுப்பதற்கு தினமும் ஒரு சாக்ஸ் அணியலாம். ஒளு எடுத்த பிறகு மீண்டும் வேர்வை சாக்ஸை அணிந்து கொண்டு பள்ளிக்கு வருகிறார்கள். சாக்ஸை பள்ளிக்கு வெளியில் வைத்து விட்டு வருவது நலம் அளிக்கும். நிறைய பேர் சாக்ஸ் வாடையை பற்றி கண்டுகொள்வதில்லை.

பல்துலக்குவது:

நோன்பு வைத்திருக்கும் நேரத்தில் வாயை சுத்தம் செய்வது பற்றி சிலர் சந்தேகத்தில் இருப்பார்கள். மற்ற காலங்களை விட நோன்புக் காலங்களில் அதிகம் வாயை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

நோன்புக் காலங்களில் நாம் சாப்பிடாமல் இருப்பதால் வாயிலிருந்து வாடை அதிகமாக வரும். நம் வாயிலிருந்து வரும் வாடை நம் அருகில் உள்ள மனிதர்களை சிரமமப்படுத்துவதோடு, மலக்குமார்களையும் சிரமமப்படுத்தும். அதனால் ஸஹருக்கு எழுந்திருக்கும்பொழுதும், பின் தூங்கி எழுந்திருக்கும்பொழுதும், அஸருக்குப் பிறகு தூங்கி எழும்பொழுதும் நோன்பு திறப்பதற்கு முன்பாகவும் பல் துலக்குங்கள். தூங்கி எழுந்திருக்கும் நேரத்தில் பேஸ்ட் கொண்டும் மற்ற நேரங்களில் கை விரல் அல்லது மிஸ்வாக் குச்சி கொண்டு பல் துலக்கி வாயை மிகச் சுத்தமாக வைத்திருக்கலாம். (ஒரு சிறு துளி அளவு பேஸ்ட் எடுத்து நேரம் இருந்தால் எல்லா நேரங்களிலும் உபயோகப்படுத்தலாம்).

சில சகோதரர்கள் பஜ்ர் தொழுகைக்கு எழுந்திருக்கும்பொழுது வாயை மட்டும் கொப்பளித்து விட்டு தொழுச் செல்கிறார்கள். காரணம் தூக்கம் போய்விடுமாம். தூங்கி எழுந்தவுடன் வாய் வாடை போகும் அளவுக்கு பல் துலக்குவதுதான் சிறப்பு.

பல்துலக்குவதை பற்றி கீழ்க்கண்ட நபிமொழிகள் விளக்குவதை கவனியுங்கள்

என் சமுதாய மக்களுக்கு சிரமமாக இருக்கும் என நான் பயப்படவில்லையானால், ஒவ்வொரு தொழுகையின் போதும் பல்துலக்கும்படி அவர்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: (அபூஹுரைரா(ரலி) அவர்கள். நூல்: புகாரி,முஸ்லிம் - ரியாளுஸ்ஸாலிஹீன்).

நபி(ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து எழுந்தால், பல்துலக்கும் குச்சியால் பல் துலக்குவார்கள். (அறிவிப்பவர்: ஹுதைஃபா(ரலி) அவர்கள். நூல்: புகாரி,முஸ்லிம் - ரியாளுஸ்ஸாலிஹீன்).

(நபி(ஸல்) அவர்கள் வீட்டிற்கு வந்தால் முதலில் என்ன செய்வார்கள் என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். ''பல்துலக்குவார்கள்' என்று அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஷுரைஹ் இப்னு ஹானீ(ரஹ்)அவர்கள். நூல்: முஸ்லிம் ரியாளுஸ்ஸாலிஹீன்).

பல் துலக்குவது, வாயை சுத்தப்படுத்தும். இறைவனை திருப்தி படுத்தும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) அவர்கள். நூல்: நஸயீ, ரியாளுஸ்ஸாலிஹீன்).

எச்சில்(உமிழ்நீர்):

எச்சிலை சிலர் துப்பிக்கொண்டே இருப்பார்கள். எச்சிலை விழுங்குவதால் நோன்பு முறியாது. வாயில் உள்ள உமிழ்நீர் காய்ந்துவிட்டால் வாய் வரண்டு போய் நமக்கு சிரமத்தை ஏற்படுத்தும் அதனால் உமிழ்நீரை(எச்சில்) துப்ப வேண்டியதில்லை. சளியைத்தான் துப்ப வேண்டும்.

வாசனை திரவியங்கள்:

நோன்பு வைத்திருக்கும் நேரங்களில் வாசனை திரவியங்கள் சிலர் பயன்படுத்த கூடாது என்று சொல்லி வருகிறார்கள். ஆல்ஹகால் கலக்காத அத்தர் வகைகளை பயன்படுத்தலாம், பவுடர், எண்ணெய், சோப்பு இவைகளை தாரளமாக பயன்படுத்தலாம்.  தாராளமாக வாசனை சோப்பு போட்டு குளிக்கலாம்.

நம்முடைய சமுதாயத்தில் பிற மதக் கலாச்சாரத்தில் இருந்து நம் மக்களிடையே பரவி காலம் காலமாக நல்லது என்று பின்பற்றப்படும் காரியங்களில் பிறந்த நாள் விழாகாதணி விழாபூப்பெய்த விழாவரதட்சணை விழாதர்கா கந்தூரி விழாமௌலூது விழா போன்ற மார்க்கம் காட்டித்தராத விழாக்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்தக்காரியங்கள் நமக்கு நன்மையை பெற்றுத்தருமா?

சகோதரசகோதரிகளே! நோன்பை பற்றி சொல்லாமல் நமக்கு தெரிந்த சாதாரண காரியங்களைப்பற்றியாகூறப்போகிறீர்கள் என்று தாங்கள் நினைக்கலாம். மக்களால் உணரப்படாத தீமையான காரியங்கள் அனைத்தும் நம்மை விட்டு அகலும் வரை சொல்லிக்கொண்டே இருந்தால்தான் நானும், நீங்களும் இதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்ற அச்சம் ஏற்படும்.

நாம் வைத்திருக்கும் நோன்பு நம்முடைய தீமைகளை அகற்றி தூய்மையான இறையச்சத்துடன் கூடிய மக்களாக நம்மை மாற்ற வேண்டும்.

பிற மதத்தில் இருந்து இஸ்லாத்திற்கு இறக்குமதியான பழக்கங்கள்:

பிறமதத்தில் இருப்பது
இஸ்லாமியர்கள் பின்பற்றுவது
தேர் திருவிழா
சந்தனக் கூடு திருவிழா
காது குத்து விழா
காதணி விழா
வளைகாப்பு
ஒப்பிச்சு பார்ப்பது
கொடிமர விழா
கொடிமர கந்தூரி விழா
பிறந்த நாள் விழா
பிறந்த நாள் விழா
மஞ்சள் நீராட்டு விழா
பூப்பெய்த நீராட்டு விழா
கல், மரம், புனிதம்
தர்கா,மரம்,நார்சா புனிதம்
தவசம்,திதி
மூன்று,ஏழு,நாற்பது பாத்திஹா
வரதட்சணை
கைக்கூலி
தலை தீபாவளி
தலை பெருநாள்

பிறமதத்தில் இருந்து இறக்குமதியானதை மார்க்கம் அறியாமல் பின்பற்றி வந்த சிலர் தூய்மையான மார்க்கம் அறிந்த பிறகு இதிலிருந்து விலகி விட்டார்கள். என்னதான் விலகினாலும் குடும்பத்திற்குள் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் மற்றவர்களும் விலக வேண்டும் என்று.

பிறந்த நாள் விழா:

பிள்ளைகள் ஆசைப்பட்டார்கள் என்று பிற விழாக்களை புறக்கணிப்பவர்கள் கூட இந்த விழாவை அதிக இடங்களில் கொண்டாடி வருவதை பார்த்து வருகிறேன். மார்க்கத்தில் இல்லாத ஒன்றை செய்கிறீர்கள் என்று கூறினால் - நாங்கள் இணைவைக்கும் காரியம் செய்யவில்லையே என்று பதில் சொல்கிறார்கள். வளைகுடாவில் குடும்பத்தோடு உள்ள சகோதரர்கள் அதிகமான பேர் கொண்டாடி வருகிறார்கள். பிற மத நண்பர்கள் வீட்டு பிறந்த நாள் விழாவுக்கும் சென்று வருகிறார்கள். நாமும் இதிலிருந்து விலகி பிறர் கொண்டாடும் இடங்களுக்கும் செல்லாமல் இருப்பது நமக்கு நன்மையை பெற்றுத் தரும்.

காதணி விழா:

பெண் குழந்தை பிறந்து 2 வயது அல்லது 3 வயது வந்து விட்டதாகாதணி விழா அவசியம் செய்ய வேண்டும். அடி பத்திரிக்கையைகொடு ஊரைக் கூட்டி பிரியாணி விருந்தை. பகுத்தறிவு மார்க்கத்தில் இருந்து கொண்டு சகோதர சகோதரிகள் எங்கு சென்று கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

பூப்பெய்த நீராட்டு விழா:

ஒரு பெண் 10 வயதிலிருந்து 15 வயது வரைக்குள் (அதற்கும் மேலும் ஆகலாம்) இயற்கையாக வயதிற்கு வரும் நிகழ்ச்சி நடைபெறும். பல ஊர்களில் இந்த விழா பத்திரிக்கை அடித்து அழைக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறது. நமது ஊரில் கூப்பாடு மட்டும்தான் என்று நினைக்கிறேன். என் மகள் வயதிற்கு வந்து விட்டால் என்பதை ஊருக்கு அறிவித்து விருந்து போடும் நிகழ்ச்சியா இது.

நேற்று வரை பாவாடை சட்டைசுடிதார் அணிந்த பிள்ளைக்கு விலை உயர்ந்த பட்டு சேலை எடுத்து அந்த பிள்ளைக்கு கட்டி விடுவார்கள் (பொம்மைக்கு சுற்றுவது போல்). இந்தப்பிள்ளையை அனைவரும் வந்து பார்த்து விட்டு அன்பளிப்புகளை செய்து விட்டு விருந்திலும் கலந்து கொள்வார்கள்.

வெளியூரைச் சேர்ந்த என் உறவினர் வீட்டில் வயதிற்கு வந்த விழா பத்திரிக்கை அடித்து நடத்தப்போகிறார்கள் என்று கேள்விப்பட்டவுடன் போன் செய்து இந்த விழா மார்க்கம் காட்டித்தராததுஇதை செய்யாதீர்கள் என்று சொன்னேன். பிள்ளையின் தந்தைதாத்தா விருந்து வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். மேலும் தெருவில் உள்ளவர்கள் விருந்து வைக்கவில்லை என்றால் கேவலமாக பார்ப்பார்கள் என்ற பதில்தான் வந்ததது. மார்க்கத்தை விட இவர்களின் போலி கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டுமாம்.

வசதி உள்ளவர்கள் இந்த விழாவை நடத்தி விடுகிறார்கள். ஏழை வீட்டுப் பிள்ளைகள் நமக்கும் நம் வீட்டில் இந்த விழா நடத்தப்பட வேண்டும் என்று தங்கள் தாயாரிடம் சொல்லி வைத்து விடுகிறார்கள்.

ஒரு பெண் வயதிற்கு வந்து விட்டால் யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை. பெரிய அளவு செலவு எதுவும் செய்ய வேண்டியதில்லை. வயதிற்கு வந்த பெண்ணை பார்க்க போகிறேன் என்று அன்பளிப்பு எதுவும் செய்ய வேண்டியதில்லை.

வயதிற்கு வந்த பெண்ணிற்கு ஆரோக்கிய உணவுகள் அளித்து 7 நாள் அல்லது 10 நாள் வீட்டில் வைத்து நல்லபடியாக கவனித்து பிறகு சாதாரணமாக எப்பொழுதும் போவது போல் பள்ளிக்கூடம் அனுப்பி வைக்கலாம். சாதாரணமாக சென்ற பெண் புர்க்கா அணிந்து வெளியில் சென்றாலே இந்த பெண் வயதிற்கு வந்து விட்டது என்று புரிந்து கொள்வார்கள். ஊரைக் கூட்டி செய்யப்படும் காரியம் இது இல்லை.

தர்கா கந்தூரி விழா:

இதைப்பற்றி தாங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். தெருவுக்கு ஒரு புனித தர்கா. கந்தூரிக்கு செல்வதற்கு பிள்ளைகளுக்கு புது துணி உடுத்தி அழைத்துச் சென்றதை போன வருடத்தில் கூட பார்த்தேன். ஆனால் இஸ்லாம் காட்டித்தராத இந்த விழா வருடா வருடம் முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னால் குறைந்து கொண்டு வந்தது இப்பொழுது சில மெருகேற்றத்துடன் ஷைத்தானின் துணையுடன் நலமாக நடந்து கொண்டு இருக்கிறது. பிள்ளைகளை கவர்வதற்காக ராட்சத ராட்டினங்களும் உண்டு. பிள்ளைகள் வந்தால்தானே தாய்மார்களும் வரமுடியும். கந்தூரியை நடத்துபவர்கள் பார்த்தீர்களா கந்தூரிக்கு உள்ள கூட்டத்தை என்று பெருமைப்பட??? முடியும்.

ஒரு தடவை (1999ஆம் வருடம்) ஆட்டோவில் அறிவிப்பு கந்தூரி நிகழ்ச்சியில் ஒரு நடிகையின் பெயர் கூறி நாட்டியம் நடக்க உள்ளதுஅனைவரும் வந்து கலந்து கொண்டு அவுலியாவிடம் ஆசி பெற்று செல்லுங்கள் என்பதாகநடிகையின் நாட்டியத்தை பார்த்து விட்டு அவுலியாவிடம் ஆசி??? வாங்க வேண்டுமாம். இந்த அறிவிப்பை கேட்டு இதற்கு செல்லும் இஸ்லாமியர்களை என்ணி வருத்தப்படத்தான் முடிந்தது. (ஏகத்துவ மணம் வீச ஆரம்பித்தவுடன் தர்காவுக்கு செல்லும் கூட்டம் அதிகளவில் குறைந்திருப்பது உண்மையே).

வரதட்சணை விழா (பெண் வீட்டில் பகல் கொள்ளை):

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை (மஹர்) கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும்மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! (அல்குர்ஆன் : 4:4)

வல்ல அல்லாஹ் கூறியதை நம் மக்கள் அலட்சியப்படுத்தி விட்டார்கள்.

ஆனால் பெண் வீட்டில் எல்லோரும் விழித்திருக்கும் சமயத்தில் மாப்பிள்ளையின் தந்தைதாய்சகோதரிகள் அனைவரும் ஒன்று கூடி வந்து பெண்ணின் பெற்றோர் சம்மதத்துடன் (மனவேதனைப்படுத்தி வலுக்கட்டாயமாக) பெண்ணிற்கு வேண்டிய வீடுநகைகளை கொள்ளையடித்து சென்று கொண்டு இருக்கிறார்கள். இந்த கொடுமையைப் பற்றி அதிகம் விளக்க வேண்டியதில்லை உங்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

மௌலூது விழா:

மௌலூது மாதம் என்று கணக்கு வைத்து மௌலூது ஓதப்படுகிறது. வீடு குடி போனாலும் ஓதப்படுகிறது. பரக்கத் வேண்டியும் ஓதப்படுகிறது. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஓதுகிறார்கள். யார் காட்டித் தந்தது. இதுவும் மார்க்கத்தில் இல்லாத காரியம்.

மார்க்கத்தில் இல்லாத பழக்கங்கள் இன்னும் நம் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளதற்கு ஓர் உதாரணம்: வளைகுடாவில் பல வருடங்கள் வேலை செய்து வந்த நண்பர் ஒருவர் வேலை பிடிக்காத காரணத்தாலும் உடல் நலம் கருதியும் ஊரோடு போய் தங்கி ஒரு சிறு கடை நடத்தி சிரமத்தோடு வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

மார்க்கம் அறியாத காலத்தில் கந்தூரி, மௌலூது போன்ற காரியங்களில் ஈடுபட்டவர். இவரின் உறவினர்கள் யாரும் மாறவில்லை. இவர் மட்டும் மாறியதால் உறவினர் அனைவரும் நீ நஜாத்(தவ்ஹீது)காரனாகி விட்ட காரணத்தால் உனக்கு முஸீபத்து பிடித்து விட்டது. எங்களைப்போல் மௌலூது ஒதுதர்காகளுக்குச் செல் என்று அறிவுரை கூறுகிறார்களாம். எனக்கு அல்லாஹ் உதவி செய்வான் என்று உறுதியோடு இருக்கிறார்.

இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதாமார்க்கம் காட்டித்தந்துள்ளதாஎன்று கேட்டால் எங்கள் முன்னோர்கள் செய்தார்கள் அதனால் செய்கிறோம் என்ற பதில் வரும். தூதர்தான் வழிகாட்டியே தவிரமுன்னோர்கள் வழிகாட்டியாகி விடமாட்டார்கள்.

எவர் ஒருவர் பிறமத கலாச்சாரத்தை பின்பற்றுகிறாரோ அவர் நம்மை சார்ந்தவரல்ல என்பது நபிமொழி (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி))

இந்த நபிமொழியை மனதில் வைத்து மார்க்கம் காட்டித்தராத காரியங்களை செய்து வரும் சகோதர, சகோதரிகள் தவ்பா செய்துவிட்டு இதிலிருந்து விலகி தூய்மையான மார்க்கத்தை அறிந்து அதன்படி வாழ முயற்சி செய்ய வேண்டும்.

மேலும் ஏகத்துவத்தை பிறருக்கு சொல்லும் சகோதரர்கள் கூட சில நேரங்களில் மேற்கண்ட காரியங்களில், (தர்காவுக்கு செல்லமாட்டார்கள்மௌலூது ஓத மாட்டார்கள்) தன் மனைவிஉறவினர்களுக்கு அடிபணிந்து சிலவற்றை செய்து விடுகிறார்கள். அவர்களுக்கு வல்ல அல்லாஹ்வின் எச்சரிக்கை:

வேதத்தை படித்து கொண்டே உங்களை மறந்து விட்டுமக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களாநீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன் : 2:44)
இன்ஷாஅல்லாஹ் வளரும்!
S.அலாவுதீன்
இது ஒரு ரமளான் ஸ்பெஷல் மீள்பதிவு


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)