அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 35 9

அதிரைநிருபர் பதிப்பகம் | April 23, 2014 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
முந்தைய பதிவில் பொய் சொல்லுவதால் ஏற்படும் தீமைகள், பொய் சொல்ல வேண்டிய சந்தர்ப்பங்களை சுட்டிக்காட்டினோம், அவைகளில் இருந்து படிப்பினைபெற்றோம். இந்த வாரம் பிறர் மானம், நலம் பேணுதல் தொடர்பாக பார்க்கலாம்.

இவர்கள் முஃமின்களை விட்டும் காஃபிர்களை (தங்களுக்குரிய) உற்ற நண்பர்களாக எடுத்துக் கொள்கிறார்கள். என்ன! அவர்களிடையே இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது. (திருக்குர்ஆன் 4:139)

மேல் சொன்ன திருக்குர்ஆன் வசனம் குறிப்பாக தேர்தல் பேரம் பேசிவிட்டு அரசியல் சாக்கடைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மூழ்கி இருக்கும் சமுதாய இயக்க சகோதரர்களுக்காக நினைவூட்டலாக இந்த பதிவு.

உண்மை முஸ்லிம் அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்துக்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்மை நாடுபவராக இருப்பார்.

நபி (ஸல்) அவர்கள் “மார்க்கம் என்பது நன்மையை நாடுவது” என்று கூறியபோது, நாங்கள் கேட்டோம்: “யாருக்கு?”நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்துக்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும்” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

பிறர் நலம் பேணுதல் என்பது இஸ்லாமின் அடிப்படைகளில் தலையாயதாகும். ஆரம்ப கால முஸ்லிம்கள் இறைத்தூதருடன் செய்து கொண்ட வாக்குப் பிரமாணங்களில் ஒன்றாக இது இருந்தது.

ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நான் நபி (ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலைநாட்டுவது, ஜகாத் கொடுப்பது, அனைத்து முஸ்லிம்களுக்கும் நன்மை நாடுவது ஆகியவற்றிற்கு உறுதிப் பிரமாணம் செய்துகொண்டேன்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்பாதவரை ஈமான் கொண்டவராக மாட்டார்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

பிறர் நலம் நாடுபவராக இருந்தால்தான், தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்புவார். ஆனால் இது மிகவும் சிரமமானது என்பதில் சந்தேகமில்லை. தான் விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்ப வேண்டுமென்பது ஈமானின் மிக முக்கியமான நிபந்தனைகளில் ஒன்றாகும். மார்க்கம் என்பதே “பிறர் நலன் பேணல்’ என்ற அடிப்படை, முஸ்லிமின் உணர்வுடன் ஒன்றிவிட்டால் இதைச் செயல்படுத்துவது சிரமமல்ல.

முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமிடம் வெளிப்படுத்த வேண்டிய இயற்கைப் பண்பாகும். இதற்கு முரணாக ஒர் உண்மை முஸ்லிமால் செயல்பட இயலாது. இத்தகைய உயர்ந்த அந்தஸ்தில் வாழும் முஸ்லிம் சுயநலம், அகம்பாவம் போன்ற கீழ்த்தரமான காரியங்களில் இறங்க மாட்டார். ஆம்! பாத்திரத்தில் இருப்பதுதான் அகப்பையில் வரும்! மலர்கள் நறுமணத்தைத்தான் பரப்பும்! செழுமையான பூமி நல்ல மரங்களைத்தான் வளர்க்கும்!

உண்மை முஸ்லிம், நண்பர்களுக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதையும், உபகாரம் செய்வதையும் இயல்பாகக் கொண்டிருக்க வேண்டும். நட்பின் நெருக்கத்தை பலப்படுத்தும் விதமாக உபகாரத்தை தனது இயல்பாகக் கொண்டிருக்க வேண்டும். நமது முன்னோர்கள் தங்களது வாழ்வில் வெளிப்படுத்திய நற்பண்புகளே அவர்களை உலக மனிதர்களில் சிறந்தவர்களாக்கியது.

இஸ்லாம் கற்றுக் கொடுத்த நேர்மை, உபகாரம், பிறர் நலம் பேணுதல், நேசம் கொள்வது என்பது போன்ற பண்புகளின் நோக்கம் என்னவெனில் ஒருவர் தனது முஸ்லீம் சகோதரருக்கு எல்லா நிலைகளிலும் உதவி செய்தாக வேண்டும். அதாவது தனது முஸ்லீம் சகோதரர் சத்தியப் பாதையில் இருந்தால் அவருக்கு உதவி, ஒத்தாசை செய்து அவரைப் பலப்படுத்த வேண்டும். அவர் அசத்தியத்தில் இருந்தால் அவரைத் தடுத்து மேலும் அவரை அசத்தியத்தின் பக்கம் இட்டுச் செல்லவிடாமல் பாதுகாத்து, அவருக்கு நல்வழி காட்டி, வழிகேட்டிலிருந்து பாதுகாக்க வேண்டும். இதையே பின்வரும் நபிமொழி நமக்கு போதிக்கிறது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு மனிதர் தனது சகோதரருக்கு உதவி செய்யட்டும்! அவர் அநீதியிழைப்பவராக, அல்லது அநீதியிழைக்கப்படுபவராக இருந்தாலும் சரியே. அவர் அநீதியிழைப்பவராக இருந்தால், அவரைத் தடுக்கட்டும். அது அவருக்கு உதவியாகும். அநீதியிழைக்கப்பட்டவராக இருந்தால் அவருக்கு உதவி செய்யட்டும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

முன்மாதிரியாகத் திகழும் உண்மை முஸ்லிம், தனது சகோதரர்களுடன் மென்மையாகவும், அவர்களை நேசிப்பவராகவும், அவர்களால் நேசிக்கப்படுபவராகவும் இருப்பார். இது விஷயத்தில் உயர் பண்புகளை வலியுறுத்தும் இஸ்லாமின் கண்ணோட்டத்தை ஆய்வு செய்வார்.

நபி (ஸல்) அவர்களுடனே இருந்து அவர்களுக்கு ஊழியம் செய்து வந்த அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஏசுபவராகவோ, கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ, சாபமிடுபவராகவோ இருக்கவில்லை. எங்களில் ஒருவரைக் கண்டிக்கும்போது கூட “அவருக்கென்ன நேர்ந்தது? அவருடைய நெற்றி மண்ணில் படட்டும்” என்றே கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி) நெற்றி மண்ணில் படட்டும் என்பதற்கு பொருள் அதிகமாக ஸஜ்தா செய்ய வேண்டும் என்பதாகும்.

மேல் குறிப்பிட்ட நபிமொழியில் இருந்து நபி(ஸல்) அவர்களின் உயரிய நற்பண்புகளில் பிறரை கண்டிக்கும்போதும்கூட கண்ணியத்தை கடைபிடித்தார்கள் என்று பார்க்கிறோம்.

சுப்ஹானல்லாஹ்! இன்று பார்க்கிறோம், ஒரு முஸ்லீம் என்றோ செய்த தவறை அல்லது அவர் மேல் சொல்லப்பட்ட அவதூறுகளை வைத்துக் கொண்டு, வருடக் கணக்கில் நேட்டீஸ் அடித்து வைத்துக் கொண்டு அவர் யார் தெரியுமா? இவர் யார் தெரியுமா? அவன் பொம்புல பொறுக்கி? அவன் கஞ்சா வியாபாரி? அவன் ஒரு ஒட்டு பீடி? நம்ம ஜமாத்துக்கு எதிரி? என்று குர்ஆன் சுன்னா என்று வார்த்தைக்கு வார்த்தை பேசும் சகோதரர்கள்கூட நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த நற்பண்புகளை மறந்து, கண்ணியமற்ற முறையில் பேசுவது அன்றாட வாடிக்கையாகிவிட்டது.

அவர்களின் அந்த ஈனச் செயலுக்கு முட்டு கொடுக்கும்விதமாக, வரம்பு மீறலுக்கு வரம்பு மீறல் என்று ஒரிரு குர்ஆன் வசனத்தை தங்களுக்கு சாதகமாக்கி விளக்கம் கொடுத்து, தங்களின் தவறை குர்ஆன் வசனத்தை வைத்து நியாப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அல்லாஹு அக்பர். அல்லாஹ் நம் எல்லோரையும் அந்த வழிகேட்டு கூட்டத்திலிருந்து பாதுகாப்பானாக.

ஒவ்வொருவரின் உள்ளத்தில் உள்ளதை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே, அவனுடைய உள்ளத்தில் இறை நம்பிக்கை எப்படி உள்ளது என்பதை எந்த ஒரு மனிதனை வைத்தும் நாம் எடை பேட்டுவிட முடியாது. இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் அரசியல் பொதுவாழ்வில் எந்த ஒரு இஹ்லாசான (இறையச்சமுள்ள) முஸ்லீமால் தன்னுடைய கொள்கையின் அடிப்படியில் 100% வாழ்வதை வெளி உலகத்தின் பார்வைக்கு காட்டுவது என்பது மிக மிக கடினம். ஏன் அரசியலில் ஈடுபடாத இயக்கங்களாலும், தங்களின் அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் கட்சிகளுக்கு ஆதரவு தேர்தல் பிரச்சாரம் போன்றவைகளினால், 100% தான் ஏற்றிருக்கும் குர்ஆன் சுன்னா வழியில் உலக பார்வைக்கு வாழ்ந்து காட்டுவது என்பது கடினம். 

அரசியல் மேடைகள், பிரச்சாரங்களில் சில சந்தர்ப்ப சூழ்நிலைகள், மனிதன் என்கிற அடிப்படையில் ஏற்படுகின்ற திணிக்கப்படும் தவறுகள். பிற மதத்தவர் சார்ந்திருக்கும் அமைப்பு கட்சிகாரர்கள் நம்முடைய கொள்கையை புரியாதவர்கள் அல்லது அக்கொள்கைக்கு உடன்படாதவர்கள் அல்லது நம்முடைய கொள்கைக்கு எதிரானவர்கள் அல்லது அவர்கள் கொள்கையை திணிப்பவர்கள் என்று ஒரு கடின சூழலில் வாழ்ந்து வருகிறோம். ஆனால் இங்கு நாம் முக்கியமாக கருத வேண்டியது என்னவென்றால், தற்செயலாக நடைபெறும் தவறாக இருந்தாலும், தான் செய்தது தவறு என்று வருந்துபவனே ஓர் உண்மை முஸ்லீமாக இருப்பான். இல்லவே இல்லை தான் செய்தது தவறே இல்லை என்று வரட்டு வாதத்தை வைத்து செய்த தவறை நியாப்படுத்தும் விதமாக, அவன் அப்படி செய்யவில்லையா, இவன் இப்படி செய்யவில்லையா, அவனைப் போய் கேள், இவனை போய் கேள் என்று எதிர் கேள்விகள் கேட்டு தப்பிப்பவனை என்ன நிலையில் நாம் வைப்பது? சுப்ஹானல்லாஹ்.

உண்மை முஸ்லிம் தனது முஸ்லீம் சகோதரன் அநீதம் செய்பவனாக இருந்தாலும் அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் அவனைப் பிரியமாட்டார். ஏனெனில் தான் விரும்புவதையே தமது முஸ்லீம் சகோதரனுக்கும் விரும்ப வேண்டுமென்கிறது இஸ்லாம். எந்தவொரு முஸ்லிமும் தான் பிறருக்கு அநீதி இழைப்பதையோ பிறர் தனக்கு அநீதி இழைப்பதையோ விரும்பமாட்டார். அவ்வாறே தனது சகோதரருக்கும் இதை விரும்பமாட்டார். அதனால் சகோதரன் அநீதிக்குள்ளாக்கப்பட்டால் அவருடைய தோளோடு ஒட்டி நின்று அநியாயத்தைத் தடுத்து உதவி செய்வார். அநீதி செய்பவராக இருந்தாலும் தோளோடு ஒட்டி நின்று அவரை அநியாயம் செய்வதிலிருந்து தடுப்பார். இதுதான் உண்மையான உபகாரம். இதுதான் தூய்மையான பிறர் நலம் பேணுதலாகும். இதுதான் ஒரு முஸ்லிம் எங்கும், எப்போதும் மேற்கொள்ள வேண்டிய அழகிய பண்பாகும்.

இன்றைய காலகட்டத்தில், குர்ஆன் ஹதீஸ் என்று பேசுபவர்களிடம் இருக்கும் மிகப்பெரிய சாபக்கேடு என்னவென்றால், முதல் நிலை – “மார்க்க அடிப்படையில் பெரும்பாலான சந்தர்பங்கள் பொதுவாக கடைபிடிக்க வேண்டிய நற்பண்புகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. உதாரணமாக மன்னிக்கும் தன்மை, கண்ணியமாக பேசுவது, பிறர் நலம் நாடுதல், நம் நற்செயல்கள் மூலம் பிறரை திருத்துவது போன்றவைகள்.” இரண்டாம் நிலை – “மார்க்க அடிப்படையில் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் எடுக்கப்படவேண்டிய நிலைகள். உதாரணமாக – தன்னை திட்டிவனை திட்டுவது போன்றவைகள்” ஆனால் மிக உயர்ந்த நிலையான முதன் நிலையை நம் சகோதரர்கள் எடுப்பதை காட்டிலும் இரண்டாம் நிலையையே தங்களுடைய நிலைகளை சாதகமாக்கிக் கொள்ள எடுத்துக் கொள்கிறார்கள். இது தான் எதார்த்தம்!.

“வார்த்தைகளில் சிறந்தது நபி(ஸல்) அவர்களின் வார்த்தை, வழிகாட்டுதலில் சிறந்தது நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்” என்று ஒவ்வொரு மார்க்க சொற்பொழிவுகளிலும் வார்த்தை அளவில் சில சொல்லுவதற்கு மட்டுமே என்றாகிவிட்ட்து. அது நடைமுறையில் செயல்படுத்துவது எல்லா சந்தர்பத்திலும் தான் என்பதை மறந்தவர்களாகவே பெரும்பாலன முஸ்லீம்களை காணுகிறோம். அன்றைய காலகட்டதில் “வார்த்தைகளில் சிறந்தது நபி(ஸல்) அவர்களின் வார்த்தை, வழிகாட்டுதலில் சிறந்தது நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்” என்பதை உத்தம நபியின் உன்னத தோழர்களும், அவர்கள் பின்னால் வாழ்ந்த இமாம்களும் பின்பற்றி வாழ்ந்து மரணித்துள்ளார்கள் என்பதற்கு லட்சக்கணக்கான ஆதாரங்களே சாட்சி.

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்..
M.தாஜுதீன்
நன்றி: www.readislam.net www.tamililquran.com

அதிரையின் பூர்வ குடிமக்கள் 26

அதிரைநிருபர் பதிப்பகம் | April 22, 2014 | , ,

முன்பு ஓர் இழையில், தஹ்லா மரைக்காயர் என்பவரைப் பற்றி எழுதிய நினைவு.  இந்த தஹ்லா மரைக்காயர், கீழக்கரையிலிருந்து புலம் பெயர்ந்து வந்து, அதிரையில் பதிந்து வாழ்ந்த பூர்வ குடிமகனாவார்.  இவர் அதிரைக்கு வந்து, இங்குப் பல சீர்திருத்தப் பணிகளை முன்னின்று நடத்தியவர். முதன் முதலில் அதிரையில் குதிரைச் சவாரியைப் பயண வாகனமாகப் பயன்படுத்தியவர்!

வண்டிப்பேட்டைப் பகுதியில் அமைந்துள்ள ஆலடிக்குளம் இவரால் வெட்டப் பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விடப்பட்டது.  இக்குளத்தின் தென்மேற்கு முனையில், பெண்கள் படித்துறை ஒன்றை அமைத்து, அதில் குளிக்கும் பெண்கள் ஆண்களால் பார்க்க முடியாத அளவுக்குச் சுவர் எழுப்பி, அச்சமின்றி ஆனந்தமாகப் பெண்கள் குளிக்கப் படித்துறையைக்  கட்டிப் பொதுநலச் சேவை புரிந்தவர்.

சென்னையில் அண்மைக் காலம்வரை, அதாவது ஓர் ஐம்பதாண்டுகள்வரை, O.S. சதக் தம்பி மரைக்கார் என்ற பெயரில் ஒரு கப்பல் கம்பெனி இருந்தது.  தஹ்லா மரைக்காயர் இந்நிறுவணத்தாரின் உறவுக்காரர் ஆவார்.  பிற்றை நாட்களில் சதக்தம்பி மரைக்காயர், தமது வாணிப வசதிக்காக நாகூரில் குடிபெயர்ந்து செட்டில் ஆனவர்.

அந்நாட்களில் தமிழ்நாட்டின் போலீஸ் உயர் அதிகாரியாக இருந்த அருள் என்பாரின் மகளை முஸ்லிமாக்கி மணந்துகொண்டார்!  கப்பல் கம்பெனி உரிமையாளர் என்பதாலும், அன்றையப் பணக்காரர் என்பதாலும், இத்திருமணம் எவ்வித எதிர்ப்பும் எதிர்பார்ப்பும் இன்றி, அமைதியாக நிறைவேறி, காவல்துறை மேலதிகாரி அருளின் மகள் இஸ்லாமிய மார்க்கத்தின் ஓர் அங்கமாகிப்போனார்!

‘வாவன்னா’ குடும்பத்து முத்துச் சாவடிகள்: 

காயல்பட்டினத்திலிருந்து புலம் பெயர்ந்து அதிரைக்கு வந்து வாழத் தொடங்கிய பூர்வீகக் குடும்பங்களுள் ஒன்று, ‘வாவன்னா’ குடும்பம். இக்குடும்பத்தின் பூர்வ குடிமகனாக இருந்தவர் ‘பாகிர் சாஹிப்’ என்பார்.  இன்று காயலில் இருக்கும் ‘சாலையார்’ குடும்பத்தைச் சேர்ந்தவர்.  அந்தக் குடும்பப் பெயர் மாறி, மூத்த குடிமகனாரான பாகிர் சாஹிப் அவர்களின் பெயரில் நிலை பெற்றது.  அப்படியானால், ‘பாவன்னா குடும்பம்’ என்றல்லவா ஆகியிருக்கும்?  அது என்ன ‘வாவன்னா குடும்பம்?’ என்ற கேள்வி, வாசகர்களின் மனத்தில் எழக்கூடும். 

பெரும்பாலும் பாமரர்களாகவே இருந்த அன்றைய அதிரை மக்கள், ‘பாகிர்’ باقر என்பதை ‘வாக்குறு’ என்றே மொழிந்தனர்.  அதனடிப்படையில் வந்ததே ‘வாவன்னா’ எனும் பெருங்குடிப் பெயர்.  இக்குடும்பத்தார் பெரும்பாலும் முத்து வாணிகமே செய்துவந்தனர்.  இவர்களுக்குச் சொந்தமான ‘முத்துச் சாவடிகள்’ பல ஊர்களில் இருந்தன.  முத்து (Pearl) வாணிபத்தில் அப்பொருளின் சந்தை மதிப்பைத் தீர்மானிக்கும் வணிகர்களாக முன்னணியில் ‘வாவன்னா’ குடும்பத்தினர் நின்றனர்.

மன்னார்குடி, கும்பகோணம், மதுரை, கேரளத்தின் கோழிக்கோடு, ஆந்திராவில் காக்கிநாடா, இலங்கையின் கொழும்பு, சீனங்கோட்டை போன்ற ஊர்களில் ‘வாவன்னா’ குடும்பத்தாருக்குச் சொந்தமான முத்துச் சாவடிகள் இருந்தன.  இவர்களின் பணியாளர்கள் விலை உயர்ந்த முத்துப் பரல்களைச் சுமக்கும் தொந்தரவே இல்லாமல், தம் வேட்டி மடிப்புகளில் வைத்துக்கொண்டு, முத்து வாணிபத்துக்காகப் பல ஊர்களுக்குச் சென்றுவருவார்கள்.

சில நாட்கள் முன்பு, ‘வாவன்னா சார்’ அவர்கள் என்னிடம் ஒரு விட்டடித்தார்கள்.  “நமது வாவன்னா குடும்பத்தவர்களைக் கணக்கெடுத்தால், அது ஒரு ECG Report போல வரும்.  அதாவது, அந்த ரிப்போர்ட்டில் நடுக் கோட்டுக்கு மேல் உச்சியை நோக்கிய உயர்வும், நடுக் கோட்டிற்குக் கீழே அதல பாதாளத்தை நோக்கிய தாழ்வும் இருக்கும்.  அதாவது, சிலர் மிகச் சிறந்த அறிவாளிகளாகவும், இன்னும் சிலர் அடிமுட்டாள்கள் என்று அறிவிக்கும் தாழ்நிலையிலும் இருப்பார்கள்” என்றார்கள்.  அந்த நகைச்சுவையைக் கேட்டு, என்னால் சிரிப்பை அடக்க முடியாத நிலை!  “நம் குடும்பத்தார், யாரையும் ஏமாற்ற மாட்டார்கள்;  ஆனால், இவர்கள் ஏமாறுவார்கள்” என்று கூறி, வாவன்னா குடும்பத்துப் பாமரத் தன்மையையும் மிகத் துள்ளியமாக மதிப்பிட்டார் ‘வாவன்னா சார்’.

அண்மையில், ‘அபூசுஹைமா’ (மர்ஹூம் அலியாலிம்சாவின் மகன்) இந்தக் குடும்பத்தின் வரைபடம் (Genealogy chart) ஒன்றை உருவாக்கி என்னிடம் காட்டினார்.  செவிவழித் தகவலாகத் தான் கேட்டறிந்ததை அடிப்படையாக வைத்து, ‘எக்ஸெல்’ ஷீட்டில்  உருவாக்கியது அந்தச் ‘சார்ட்’. வாசகர்களாகிய உங்களுக்குத் தந்த சிரமத்தைப் பெரிது படுத்தாமல், பதிவைப் பெரிது படுத்திப் பாருங்கள். இதோ, அந்தப் பதிவு:


பல்லாண்டுகளுக்கு முன்பு, ‘சலாமத் பதிப்பக’ உரிமையாளர் மர்ஹூம் அப்துர்ரஹ்மான் ஹாஜியார் ‘அதிரைக் கலைக்களஞ்சியம்’ என்ற பெயரில் ஒரு தொகுப்பை வெளியிட்டிருந்தார்.  அதில் பூர்வீக அதிரையில் வெளியூர்களிலிருந்து வந்து குடியமர்ந்த குடும்பத்தார் பட்டியலை வெளியிட்டிருந்தார். ‘மரைக்கா’ குடும்பத்தார் நாச்சிகுளத்திலிருந்தும், ‘கோனா’ வீட்டார் கோட்டைப் பட்டினத்திலிருந்தும், இன்னும் சில இப்போதைய அதிரைக் குடும்பத்தார் எங்கிருந்து அதிரைக்கு வந்து ‘செட்டில்’ ஆனவர்கள் எனும் பட்டியலைக் கொடுத்திருந்தார். 

அதிரையின் வணிகச் செம்மல்களாக இருந்த முதற்குடி மக்கள், இலங்கை, பர்மா, மலாயா, சிங்கப்பூர், இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்குச் சென்று பல்லாண்டுகள் அங்கே தங்கி வாணிபம் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், அச்செல்வந்தர்கள் தம் சொத்துகளைப் பாதுகாக்கும் பொறுப்பை, வெளிநாடுகளுக்குச் செல்லும் நிர்பந்தமில்லாத மரைக்கா குடும்பத்தாரிடம் விட்டுச் சென்றார்கள்.  நாளடைவில் அச்சொத்துகளின் பெரும் பகுதி, பாதுகாவலர்களான மரைக்காமாரின் சொத்துக்களாக மாற்றம் பெற்றது, என்றொரு தகவல்.

மரைக்காமாரின் ஒத்துழைப்புடன், ஊரில் இருந்து மதச் சடங்குகளில் வருமானத்தைக் கண்ட லெப்பைகளும், பூர்வ குடிமக்களின் கடும் உழைப்பால் வந்த சொத்துகளின் உரிமையாளர்களாக வந்ததும் மற்றுமொரு தகவல்.

தஞ்சையின் சரபோஜி மஹாராஜா தன் பிரதிநிதியாக அ. மு. க. உதுமான் மரைக்காயர் என்பவரை ஆட்சிப் பொறுப்பாளராக நியமித்திருந்தார்.  அவரும் தன்னை நம்பிப் பொறுப்பை ஒப்படைத்த சரபோஜி மன்னருக்கு விசுவாசமாக நடந்து வந்தார்.  தனக்காக ஏதேனும் ஒரு சொத்தைத் தனதாக்கிக் கொள்ள வாய்ப்பிருந்தும், மன்னரின் பிரதிநிதி என்ற சிறப்புப் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றி வந்தார் உதுமான் மரைக்காயர்.

ஒரு தடவை சரபோஜி மன்னர் இப்பகுதிக்கு வருகை தந்தபோது, மன்னரின் ஆட்சிப் பிரதிநிதி என்ற அடிப்படையில், உதுமான் மரைக்காயர் தன் பேத்தியைத் தோலில் சுமந்தபடி மன்னருடன் கிராமங்களின் சுற்றுப் பயணத்தில் இணைந்து சென்றார்.

இன்றும் அதிரையின் அடையாள கிராமமாக இருக்கும் ‘தொட்டியம் பள்ளி’ என்ற கிராமத்தில் மன்னர் சுற்றிப் பார்த்து வந்தபோது, உதுமான் மரைக்காயரின் பேத்தி திடீரென்று அழுதது.  மன்னர் திரும்பிப் பார்த்து, “மரைக்கார், குழந்தை ஏன் அழுகின்றது?” என்று கேட்டார்.  அதற்கு உதுமான் மரைக்காயர், “ராஜா எல்லாருக்கும் நிலத்தைப் பிரித்துக் கொடுக்கிறாரே, எனக்கு ஒன்றும் இல்லையா?” என்று கேட்டு அழுகின்றது என்று பதில் கூறினார்.  அதுவரை உதுமான் மரைக்காயர் மன்னரின் பிரதிநிதியாக இருந்தும், தனக்கென்று எந்தச் சொத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை.

சரபோஜி மஹாராஜா, “மரைக்கார், நாம் நிற்கும் இந்த நிலத்தின் கண்ணுக்கு எட்டிய அளவு உமக்குச் சொந்தம்;  எடுத்துக்கொள்ளும்” என்றார்.  குழந்தை அழுததற்குக் காரணம், உதுமான் மரைக்காயர் அக்குழந்தையைக் கில்லிவிட்டதுதான் என்பது மன்னருக்குத் தெரியாத மரைக்காயரின் வேலைதான் என்பது மன்னருக்குத் தெரியாது!  நேரடியாக, மன்னரிடம் கேட்காமல், குழந்தையின் அழுகையைக் காரணமாக வைத்து, உதுமான் மரைக்கார் சொத்துரிமை பெற்றார்.  அண்மைக் காலம் வரை அக்கிராமப் பகுதி, அ. மு. க. குடும்பத்துச் சொத்தாகவே இருந்துவந்தது என்ற தகவலை என்னிடம் கூறினார் மர்ஹூம் புலவர் பஷீர் அவர்கள். 

அதிரையின் முதல் குடிமகன்களுள் மகுதூம் சின்ன நெய்னா லெப்பை ஆலிம் ஒருவர்.  இவர் காயல்பட்டினத்து சதக்கத்துல்லா அப்பா என்ற பேரறிஞரின் ஆசிரியரும் ஆவார். இந்த அறிஞர் கட்டியதுதான் நமதூர் பெரிய குத்பாப் பள்ளி.  இவர், இப்போது சென்னையில்  அஹமது அன்கோ என்ற பெயரில் முன்னேற்ற நிறுவனத்தின் உரிமையாளர் இக்பால் ஹாஜியாரின் மூதாதை என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?        

வளர்ப்புகள்: பொதுவாக, அதிரையின் முஸ்லிம் பெருங்குடியினர் தம் வணிகத்திலும், வீட்டுப் பணிகளிலும் தமக்கு உதவியாளர்களாகப் பொருளாதாரத்தின் அடித்தட்டு மக்களாக இருந்தவர்களை அந்தந்தக் குடும்பத்து வளர்ப்புக்கள் என்று சிலரை வைத்திருந்தனர்.  அத்தகைய சமூக அடித்தட்டு மக்களின் காப்பாளர்களாக இருந்து, அந்த மக்களின் சுகதுக்கங்களில் பங்கு கொண்டு, அவர்களின் பொருளாதாரத் தேவைகளை முடித்துக் கொடுத்தார்கள்.  அவரவர் தகுதிக்கு ஏற்ப, நிலங்களையும் பிரித்துக் கொடுத்துள்ளார்கள். அக்குடுங்களின் காப்பாளர்களாக இருந்து, அவர்களின் சுக துக்கங்களில் முன்னிலை வகித்தார்கள் என்ற உண்மையும் செவிவழிச் செய்திகளாக நிலைபெற்று வருகின்றது.

இது பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது, நாம் பகிர்ந்து கொள்ளலாம், இன்ஷா அல்லாஹ்.

அதிரை அஹ்மது

கண்கள் இரண்டும் - தொடர்-33 7

அதிரைநிருபர் பதிப்பகம் | April 21, 2014 | , ,


சுர்மா

அந்தக் கரிய கல்லினை ஒரு கூழாங்கல்லில் தேய்த்து விரலால் தொட்டெடுத்துக் கண்களின் கீழிமைகளில் தீட்டிக் கொண்டேன். “மை போட்டது போல் இருக்கிறது” என்று கேலி பேசினாள் அவள்.

கண்கள் பெண்களுக்கு மட்டும் இருக்கும் பாகம் அல்லவே? ஆண்கள் மையிட்டுக் கொண்டால் ஆகாதா? யாரும் அப்படி இட்டுக் கொண்டதே இல்லையா என்ன? -இப்படிச் சிந்தித்தேன்.

இதனைத் தொடர்ந்து சரம் சரமாய் எண்ணங்கள் உதிக்கத் தொடங்கின. கண்-மைச் சிந்தனைகள்.

”கண்ணுக்கு மை அழகு
கவிதைக்குப் பொய் அழகு”

என்னும்வைர முத்துவின் வரிகள் தவழ்ந்தது என் நினைவில். கண்ணுக்கு மை எப்படியோ அப்படித்தான் கவிதைக்குப் பொய்.

அதாவது கற்பனை. மை என்பது இயற்கையிலேயே கண்ணில் இல்லாத ஒன்றுதானே? அதனை ஒப்பனையாகத்தான் கண்ணுக்கு எழுதுகிறார்கள். அது போல் கற்பனை என்பது பொய்தான். ஆனால் கண் உண்மையாக இருப்பது போல் கவிதை உண்மையாக இருக்க வேண்டும். மையே கண் ஆகி விடாது. பொய்யே கவிதை ஆகி விடாது.

அழகிய கண்களுக்கு மை தீட்டினால் அழகு அதிகம் ஆகும். ஆனால் இயல்பிலேயே ஒன்றரைக் கண்ணாக இருப்பதற்கு மை தீட்டுவதால் அழகு வந்துவிடாது அல்லவா? கவிதையும் அப்படித்தான். கேவலமான சிந்தனைகளுக்குக் கற்பனை அலங்காரம் அழகு சேர்க்காது.

பெண்கள் தங்கள் கண்களுக்கு அஞ்சனம் தீட்டி அழகுபடுத்திக் கொள்ளும் பழக்கம் மிகவும் தொன்மையான ஒன்று. மண்ணில் அது கலவையாகக் கிடைக்குமே அன்றித் தனி உலோகமாகக் கிடைப்பதில்லை. சொல்லப் போனால் பெண்மை பேணும் கண்-மையும்கூட தனிமைக்கு எதிரானதுதான்!

இரண்டாம் லெட் சல்ஃபைடு என்பது மற்றொரு வஸ்து. இது காரீயம் என்னும் உலோகத்தின் கலவை. கலீனா என்பது இதன் செல்லப் பெயர். காரிகையின் கண்ணுக்குக் காரிய வீரியம் நல்கும் போலும். இதில் கொஞ்சமாக வெள்ளியின் சல்ஃபைடுக் கலவையும் இருக்குமாம்.

அல் நிறத்து அஞ்சனத்தை ஒளிமிகு விழியில் எழுதிக் கல் தரத்து நெஞ்சுகளைக் கரைக்கும் அந்தப்புரத்து அழகிகள் அற்றை நாள் எகிப்திலும் கிரேக்கத்திலும். அவர்கள் மேலிமைக்கு கொஹ்ல் கொண்டு கறுமையும் கீழிமைக்கு ’மலச்சைட்’ (காப்பர் ஹைட்ராக்ஸைடுத் தாது) தாமிரக் கலவையால் பச்சை நிறமும் தீட்டி அலங்கரித்தனர். பார்க்கும் கண்களிலேயே கரிய நிறமும் பச்சை நிறமும் தோன்றுதடா நந்தலாலா!

அந்நாட்களில் எதிரிகள் மீது ஏவப்படும் கணைகளின் முனைகள் கொடிய விஷத்தில் முக்கி எடுத்தவையாக இருக்கும். காயத்தோடு எவரும் தப்பிக்க முடியாமல் அது காயத்தை உயிர் உலர்ந்த கட்டை ஆக்கிவிடும்! புறப்போரின் இந்த மரபை அகப்போரில் ’அப்ளை’ செய்து பார்த்தேன். சிந்தை ஒரு சிறு கவிதையை உடனே ’சப்ளை’ செய்தது. ’வில் வில் வில் உன் விழியம்பில் எனைத் தாக்காதே’ என்று பாடிய கவிஞர் வாலியின் பாணியில்:

“அம்பாகப் பாய்ச்சுகிறாள் அவளின் விஷனை
மையென்று வைக்கிறாள்
அதன் முனையில் விஷமாக

’அல்-குஹ்ல்’ என்னும் அரபிச் சொல்லின் அடியாகப் பிறந்த ஆங்கிலச் சொல் ஆல்கஹால் (alcohol). ஆல்கஹால் என்றால் மது / சாராயம். ஆனால் அரபியில் மதுவுக்கு ஷராப்/ நபீத் /ஃகம்ர் என்று பெயர்(கள்)! ’குஹ்ல்’ என்பது கண்-மைதான்.

”மை எழுதிய கண்களால
வசியம் வார்க்கிறாள்
ஆண்களின் மனதில்”

மேல் வர்க்கத்துப் பெண்கள் தம் கண்களுக்கு மை தீட்டுவது அழகின் பாற்பட்ட ஒன்றாக இருந்தாலும், எகிப்திய எத்தியோப்பிய அரேபியப் பகுதிகளில் பாலைவனத்தில் வாழ்க்கை நடத்தி வந்த மக்கள் – ஆண் பெண் இருபாலரும் – தம் கண்ணுக்கு மை இட்டுக் கொண்டது அழகு கருதி அல்ல.

பாலை எனும் பாவையின் மேனி முழுதும் பகலவனின் வெய்யில் எனும் பசலை படர்ந்து தகிக்கும் காட்சி காண்போருக்குக் கண் கூசும்! பார்த்துக் கொண்டே இருந்தால் எரிச்சலும் உண்டாகும்! அந்நிலைக்கு ஆகாமல் விழிகளைக் காக்கும் பொருட்டு அவர்கள் அஞ்சனம் அப்பிக் கொண்டனர். ஆமாம், மையின் கறுப்பு வெய்யில் ஒளியை உள்வாங்கிக் கொள்வதால் அதன் அடர்த்தி குறைந்து மிதமாகவே கருவிழிப் பாவை மீது படும்!

பண்டைய இந்தியாவில் பாவையர் தம் விழிப் பார்வை கூர்மை பெறும் பொருட்டு இமைகளின் விளிம்பில் இட்டுக் கொண்ட மை, சந்தனத் திரி எரியும் விளக்கின் புகையை ஆமணக்கு எண்ணெய்யில் (விளக்கெண்ணெய்யில்) படிய வைத்து வழித்துத் தயாரிப்பது.

விட்டில் பூச்சிகள் கவரப்பட்டு விழுகின்ற
விளக்கின் புகை கொண்டு மை செய்தது
விழிகளையே விளக்காக்கித் தம் காதலரை
விட்டில் பூச்சிகளாய்க் கவர்வதற்கா?

வரலாறும் அறிவியலும் இப்படிச் செப்ப இலக்கியத்தின் பக்கம் என் இதயம் திரும்பியது.

”கண்ணுள்ளார் காதலவர் ஆகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து” (1126)

என்று காதலி ஒருத்தி சொல்வதாகப் பாடுகிறார் திருவள்ளுவர்.

‘கண்ணில் என் காதலர் இருக்கிறார். மறைவார் என்பதால் மை எழுத மாட்டேன்’ என்று இதற்குப் பொருள். ‘இமைக்கும் நேரம் கூட இடைவெளி இன்றி அவரைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். எனவே கோலம் போடக் காலம் இல்லை’ என்பது மணக்குடவர் இக்குறளுக்கு எழுதிய உரையில் காணப்படும் கருத்து!

இக்கருத்தையே கொஞ்சம் மாற்றி அப்துல் ரகுமான் இப்படிச் சொன்னார்:

‘வீட்டுக்குள் அவர். வாசலில் எதற்கு வரவேற்புக் கோலம்?’

அப்துல் ரகுமானின் கஸல் துளி ஒன்று என் சிந்தனை மீது சில்லென்று தெரித்தது.
“கண்ணுக்கு மை தீட்டக்
கோல் எடுக்கிறாள்
அந்தோ
யாருடைய விதி
எழுதப்படப் போகிறதோ?”

நானும் ஏதாவது சொல்லிப் பார்க்க நாடினேன். சட்டென்று தோன்றின இவ்வரிகள்:

“அவளின் கருவிழிகள்
இரு கவிதைகள்
அதற்கு
அவளே வரைகிறாள்
மையால் உரை”

“கண்ணுக்கு மை என்பது அளவாக எடுத்து நிதானமாகத் தீட்டப்பட வேண்டும். கோதி எடுத்து அப்பிக் கண்ணையே மறைத்து விடக்கூடாது. அது போல் வேதத்திற்கு இயற்றப்படும் உரை அளவாக இருக்க வேண்டும். நிதானமாக எழுதப்பட வேண்டும். மூலக் கருத்தையே மறைப்பதாக இருக்கக் கூடாது.” 

கண்களுக்கு இடும் சுர்மா பற்றிய இத்தொடர்  அடுத்தவாரத் தொடரையும் அலங்கரிக்கும்
(வளரும்)
அதிரை மன்சூர்

என் இதயத்தில் இறைத்தூதர் - 7 - சிந்தனைக் கோளாறுகள்! 26

அதிரைநிருபர் பதிப்பகம் | April 20, 2014 | , , ,

ஒரு இரயில் பயண சம்பவத்தின் வடிவில்...

சென்னையிலிருந்து அந்த ரயில் புறப்பட்டு, வேகமெடுக்க ஆரம்பித்தது. பயணிகள் ஒவ்வொருவராக தங்கள் உடமைகளை பத்திரப்படுத்தி விட்டு, ரயில் பரிசோதகரிடம் தங்கள் டிக்கெட்டுகளைக் காட்டி ஓப்புதல் பெற்று கொண்டிருந்த்தனர்.

பண்டிகைகள் இல்லாத கால கட்டமாக இருந்ததால், கூட்டம் அவ்வளாக இல்லை. ரயில் ஓடிக் கொண்டிருந்தது. பயணிகள் ஒருவருக்கொருவர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டும், சிலர் பத்திரிகைகளை புரட்டிக் கொண்டுமிருந்தனர்.

பஷீர் காக்காவிற்கு பொதுவாக ஊர், உலக நடப்புக்கள் பற்றி பேச, அலச பிடிக்கும். அதற்குத் தோதாக ஆட்கள் அமைந்து விட்டால், போதும் விடமாட்டார். ஆனால் அவர் பேச்சில் கண்ணியம் இருக்கும். நளினம் இருக்கும்.வீண் சச்சரவு,வாக்குவாதம் என்று போக மாட்டார்.ஏனென்றால் அவர் எந்த இயக்கத்திலும் உறுப்பினர் கிடையாது.

தம்மை தாமே அறிமுகப்படுத்த எண்ணிய பஷீர் காக்கா, அவர் இருக்கைக்கு முன் இருந்த இருவரிடமும், "ஹலோ, நான் பஷீர், சென்னையில் இருக்கிறேன். சொந்த தொழில் செய்கிறேன்!" உங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா ? என்று நளினமாகக் கேட்டார். 

"ஓ... யெஸ்! என் பெயர் ஷம்சுதீன், நான் மதுரை, DRY FISH WHOLESALE வியாபாரம் செய்கிறேன்,அது விஷயமாக சென்னை வந்து செல்கிறேன். உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!" என்றார்.

இருவரும் சலாம் பரிமாறிக் கொண்டு, அந்த பெயர்கள் இரண்டும் அவர்கள் ஒரே மார்க்கம் என்பதை உணர்த்த, அவர்களை அறியாமலே இரண்டு பேரின் இதயங்களும் குளிர்ந்து போயின !அடித்துக் கொண்டாலும்,பிடித்துக் கொண்டாலும், என்ன அச்சுறுத்தல் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் இருந்தாலும் இங்கே வாழ்ந்தாலும்-வீழ்ந்தாலும் ஒன்றாக கலக்க வேண்டியவர்கள் அல்லவா!ஒரே மார்க்கம் என்பதால்.

"உங்கள் பெயர் என்ன என்று அறிந்து கொள்ளலாமா ?" என அருகில் இருந்த மற்ற பயணியிடம் பஷீர் காக்கா விசாரிக்க, அவர், என் பெயர் கதிரவன், தூத்துக்குடி என் சொந்த ஊர்" என்றவரைப் பார்த்த இருவரும் "வாழ்த்துக்கள்" சொல்லி அந்த சகோதரருக்கும் புன்னகைத்தனர்.

ரயில் ஓடிக் கொண்டிருந்தது. பஷீர் காக்கா, ஷம்சுதீன், கதிரவன் மற்ற பயணிகள தத்தமது உணவுப் பொட்டலங்களைப் பிரித்து, உணவுண்ண ஆரம்பித்தனர். பஷீர் காக்கா அதை இரண்டு ப்ளேட்டுக்களில் வைத்து, ஒரு தட்டை கதிரவனிடம் கொடுத்து "ஐயா ! இது இடியப்பமும், பாயாவும், தயவு செய்து சாப்பிட்டு பாருங்கள்" என்று அவரிடம் நீட்ட அதை மறுக்காமல் வாங்கிய கதிரவன், தன்னிடம் இருந்த பிரியாணி பொட்டலத்தை பஷீர் காக்காவிற்கு நீட்டினார்.

இன்னொரு தட்டில் இருந்த உணவை பஷீர் காக்காவும், ஷம்சுதீனும் ஒன்றாக அதில் இருந்து எடுத்து உண்ண ஆரம்பித்தனர். ஷம்சுதீன் கொண்டு வந்த, பரோட்டாவும், கறியும் கதிரவனுக்கு தனியே பிரித்து கொடுத்து விட்டு, அவர்கள் இருவரும் ஒரே தட்டில் சாப்பிட்டு முடித்தனர். இடையிடையே பிஸ்மில்லாஹ்வில் ஆரம்பித்து, அல்லாஹ்வை புகழ்வதை ஞாபகமூட்டியவர்களாக திருப்தியாக தங்களை பசியை ஆற்றிக் கொண்டார்கள். கதிரவன் ஒரு பிளாஸ்கில் தேநீர் கொண்டு வந்திருந்தார். ஆனால், அவரிடம் இருந்ததோ இரண்டு குவளைகள் மட்டுமே. அதனால், அந்த தேநீரை ஊற்றி, ஷம்சுதீன் மற்றும் பஷீர் காக்காவிடம் நீட்டவே, "சார், ஒரு கப் மட்டும் கொடுங்கள், நாங்கள் ஒரே கப்பில் குடித்துக் கொள்கிறோம்" என்று சொல்லி இருவரும் ஒரே கப்பில் தேநீரை அருந்தி முடித்தனர். பிறகு பஷீர் காக்கா பாத்ரூம் செல்வதாகக் கூறி, கதிரவன் கொடுத்த மட்டன் பிரியானியை, அவர் பார்க்காத வண்ணம் எடுத்துச் சென்று, மற்ற பயணியிடம் விசாரித்து, அதை உண்ணக் கொடுத்து விட்டு கை கழுவி வந்தார். தூக்கம் அனைவரையும் தழுவிக் கொள்ள ரயில் அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு ஸ்டேஷனிலும் பயணிகள் இறங்கிக் கொள்ள, பஷீர் காக்கா, ஷம்சுதீன், கதிரவன் ஆகிய மூவர் மட்டுமே அந்த பெட்டியில் இருக்கும்போது, பஜ்ர் தொழுகை நேரத்துக்கான அழைப்பொலி பஷீர் காக்காவின் செல்பேசியில் ஒலிக்க, மெதுவாக எழுந்து 'உளூ' செய்து விட்டு ஷம்சுதீனை மெதுவாக தட்டி எழுப்பி, இன்ஷா அல்லாஹ்,வாருங்கள் ஜமாத்தாக இருந்து இருவரும் சுபுஹு தொழுகையை முடித்து விடலாம்" என தூங்கிக் கொண்டிருக்கும் கதிரவனுக்கு தொந்தரவு வரக்கூடாது என்று பவ்யமாக சொன்னார். இருவரும் ஜமாத்தாக சுபுஹ் தொழுது முடிக்கும் நேரத்தில், கதிரவன் விழித்துக் கொள்ள, இருவரையும் முறைத்துப் பார்த்து விட்டு பாத்ரூம் சென்று விட்டு திரும்பினார் கதிரவன்.

காலை நேரத்தில் என்ன ஓதவேண்டும் என ஷம்சுதீன், பஷீர் காக்கா இருவரும் ஒருவருக்கொருவர் ஞாபக மூட்டிக் கொண்டிருக்கும்போது, கதிரவன் பாத்ரூமிலிருந்து வெளியே வந்து, ஒரு விரிப்பை எடுத்து விரித்து, "அல்லாஹு அக்பர்" என்று சொல்லி - தக்பீர் கட்டிக் கொண்டார். பஷீர் காக்காவும், ஷம்சுதீனும் ஒருவரை ஒருவர் வியப்போடு பார்த்துக் கொண்டனர்.

கதிரவன் அமைதியான முறையில் சுபுஹ் தொழுகையை முடித்து, துஆவும் செய்து விட்டு, இருவர் முன்னாளும் அமர்ந்து கொண்டார். கண்கள் ஏனோ, சற்று சிவந்திருந்தது. பஷீர் காக்காவும், ஷம்சுதீனும் இன்னும் அந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அவர் முஸ்லீமா ? நாம் அவரை "பிறமத சகோதரன்" என்றுதானே எண்ணியிருந்தோம் என்று இருவர் மனதிலும் ஒரே எண்ணம் ஓடிக் கொண்டிருக்க, கதிரவனே பேச ஆரம்பித்தார். "ஐயா ! பெருமக்களே ! இது நியாயமா? நான் ரயில் ஏறியது முதல் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். "இருவர் மட்டும் சலாம் பரிமாறிக் கொண்டீர்கள், எனக்கு "வாழ்த்துக்கள்" என்றீர்கள்."ஒரே தட்டில் வைத்து உண்டீர்கள், எனக்கு தனியே சாப்பிடவிட்டீர்கள், தேநீரும் அப்படியே ! நான் தந்த பிரியாணியை, எனக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு போய் மற்ற பயணியிடம் கொடுத்து விட்டு, நீங்கள் உங்கள் உணவை மட்டுமே உண்டீர்கள். இப்போது, சுபுஹ் தொழுவதற்கு என்னை எழுப்பாமல், நீங்கள் இருவர் மட்டுமே எழுந்து ஜமாத் செய்தீர்கள் ! நானும் ஒரு முஸ்லீம்தானே ! ஏன் இவ்வாறு செய்தீர்கள்?" என்று கொஞ்சம் காரமாகவே கேட்ட, கதிரவனை இருவரும் பரிதாபமாகப் பார்த்தனர்.

இருவரும் ஒரே குரலில், "நீ.... நீங்க என்ன முஸ்லிமா?" என்று கேட்க "ஆமாம், அதனால்தானே, இப்படிக் குமுறுகிறேன்", என்று கதிரவன் சூடாக சொன்னார்.

கொஞ்சம் அமைதியாக இருந்து விட்டு, பஷீர் காக்கா ஆரம்பித்தார் "மிஸ்டர் கதிரவன்! நடந்த வகைகளுக்கு நாங்கள் இருவருமே உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். ஆனால், தப்பு எங்களுடையது அல்ல, உங்களுடையது. நானும் வேட்டி, சட்டை போட்டிருக்கிறேன். நீங்களும் அதே! மூவரும் தாடி வைத்திருக்கிறோம், இதே போலத்தான் பிற மத சகோதரர்கனும் இருக்கிறார்கள். இந்த நம் இந்திய, தமிழக பூகோள ரீதியான பழக்கங்களும், உடைகளும் பொதுவாக எல்லோருக்கும் பொதுவானதே !

ஒரு வெள்ளை வேட்டி, ஜிப்பா, தொப்பி, தாடி வைத்துக் கொண்டு ஒரு இந்து, பள்ளிவாசலில் பிச்சை எடுத்தால் அவரை முஸ்லிம் என்றுதானே எண்ணுவோம். அதே நபர் தொப்பியை மட்டும் கழற்றி விட்டு ஒரு சிலுவையை கழுத்தில் தொங்கவிட்டு, சர்ச் வாசலில் நின்றால் அவரை கிறிஸ்தவன் என்றுதான் எண்ணுவார்கள். அவனுடைய அந்த சிலுவையை அகற்றிவிட்டு, அவன் நெற்றியில் திருநீறு பூசி கோவில் வாசலில் நிற்க வைத்தால், அவன் ஒரு இந்து என்றுதான் எண்ணத் தோன்றும்.

ஆக, மிச்சமிருக்கிற ஒரே அடையாளம் நம்முடைய பெயர்.முஸ்லிம்களை பொருத்த வரை, திருக்குர்ஆன், அரபி மொழியில் இறக்கியருளப்பட்டது. இறைவனின் இறுதி இறைத்தூதர் பேசிய மொழி அரபி, எனவே நம் தாய், தந்தை நமக்கு அரபியில் அழகாக பெயர் வைத்தார்கள். அந்தப் பெயரில் நாம் உலா வரும்போது, என்னை முஸ்லிம் என்று எல்லோருக்கும் தெரியும். எனக்கு சலாம் சொல்வார்கள். ஒன்றாக சாப்பிடும் சூழலில் ஒரே தட்டில் கை வைத்து உண்ணச் சொல்வார்கள். 

ஆனால், பிற மதத்தவர்கள் அவைகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். முஸ்லிம்கள் 'ஹலால்' உணவைத்தான் உண்ண வேண்டும். நீங்கள் கதிரவன் என்றோ அல்லது கருணாநிதி என்றோ தரும் உணவை, எப்படி ஹலாலாக இருக்கும் என எண்ண முடியும் ? உங்கள் பெயர் ஒரு அப்துல் சமதாக,அப்துல் காதராக இருந்தால், பிஸ்மில்லாஹ் சொல்லி அதை அறுத்து இருப்பீர்கள் என நம்ப முடியும்.நீங்கள் கதிரவன் என்று நாங்கள் அறிந்த நேரத்தில் தந்த அந்த மட்டன் பிரியாணியின் இறைச்சியை ஹலாலான முறையில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி அறுக்காமல் இருந்திருந்தால் எப்படி முஸ்லீமான நான் உண்ண முடியும் ? அதனால்தான், அதை பிற மத சகோதரனுக்கு கொடுத்தேன். அதேபோல், இன்னும் கலிமா சொல்லாத கதிரவனை எப்படி சுபுஹு தொழுகைக்கு எழுப்ப இயலும்"நீங்களே சொல்லுங்கள்" என்று படபடவென்று பேசிவிட்டு நிறுத்தினார்.

உடனே, சம்சுதீன் தொடர்ந்தார், "சகோதரரே, இது சாதாரணமாக உள்ள ஒரு பெயர் பிரச்சினை என்று மட்டும் எண்ணி விடாதீர்கள். ஒரு அரை நாள் ரயில் பயணத்திலேயே இப்படி முஸ்லிமுக்கு கிடைக்க வேண்டிய சிலவற்றை இழந்து விட்டீர்கள். இதுவே, கதிரவன் என்ற பெயரிலேயே நீங்கள் உங்களை மரணம் தழுவியிருந்தால் நீங்கள் முஸ்லிம் என்று சாட்சி சொல்ல எப்படி மனது இடம் கொடுக்கும், உங்களை சுடுகாட்டில் எரிக்கத்தான் செய்திருப்பார்கள். அல்லாஹ் நம் அனைவரையும் அதுபோன்ற இழி நிலையிலிருந்து காப்பாற்றி, கண்ணியமான வாழ்வையும், முஸ்லிமான நிலையில் மரணத்தையும்,முஸ்லிமான முறையில் நல்லடக்கமும் செய்ய அருள் புரிய வேண்டும், நான் தவறாக பேசியிருந்தால், அல்லாஹ்வுக்காக மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று சொல்ல கதிரவன் தன்னை அறியாமலேயே கண்கலங்க, அதைப் பார்த்த இருவரின் கண்ணகளும் கண்ணீர் சிந்தின.

"கைசேதமே ! தமிழ்,தமிழ் என்று என் சிந்தனையில் ஆழமாக பதிந்து, எது அசல், எது போலி, எது என் மரணம் மற்றும் அதற்கு பின்னாலும் வரும், எது இடையில் நின்று போகும் என்ற சிந்தனை இல்லாமல் என் அழகான என் அப்துல் காதர் என்ற பெயரை, கதிரவனாக்கினேன். இந்த சிறு பயணத்தில் எனக்கு வல்ல ரஹ்மான் பாடம் கற்பித்து தந்துவிட்டான்." 

இன்ஷா அல்லாஹ், இனி என் மரணம் வரை முஸ்லிம் என்ற அடையாளத்துடன் வாழ்வேன், இன்றே என் பெயரை 'அப்துல் காதர்' என்று திருத்திக் கொள்கிறேன். நீங்கள் அல்லாஹ்விடம் எனக்காக துஆச் செய்யுங்கள்" என்று கூறி இருவரது கைகளையும் பற்றிக் கொண்டார்.

"கவலைப்பட வேண்டாம் சகோதரா அப்துல் காதர்! அல்லாஹ் மிக்க இரக்கமுள்ளவன், மன்னிப்பவன்" என்று தழுதழுக்க சொன்னார் பஷீர் காக்கா.

தூத்துக்குடியை எட்டிப் பிடிக்க இன்னும் கொஞ்சம் தூரம் தான் இருக்கிறது என ஆசை ஆசையாய் அந்த ரயில் இன்னும் ஓடிக் கொண்டிருந்தது.
--------------------------------------------------------------------------

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "தன் தந்தையை சபிப்பவனை அல்லாஹ் சபிக்கிறான், அல்லாஹ் அல்லாதவர் பெயரில் அறுப்பவனை அல்லாஹ் சபிக்கிறான், மார்க்கத்தில் புதிய விஷயங்களை உருவாக்குபவனுக்கு அடைக்கலம் அளிப்பவனை அல்லாஹ் சபிக்கிறான், நிலத்தில் வைக்கப்படும் எல்லை அடையாளங்களை மாற்றி அமைப்பவனை அல்லாஹ் சபிக்கிறான்" - அறிவிப்பாளர் : அலீ(ரலி), ஆதாரம் : முஸ்லிம் 4001

இறைவன் நாடினால் தொடரும்...

இப்னு அப்துல் ரஜாக்

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 65 5

அதிரைநிருபர் பதிப்பகம் | April 18, 2014 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

இரவில் நின்று வணங்குவதின் சிறப்பு

''நபி(ஸல்) அவர்கள் ரமளானிலும், அது அல்லாத காலங்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாக்கியதில்லை. நான்கு ரக்அத் தொழுவார்கள். அதன் அழகு, அதன் நீளம் பற்றி நீர் கேட்க வேண்டாம்! பின்பு நான்கு ரக்அத் தொழுவார்கள். அவற்றின் அழகு, நீளம் பற்றி கேட்க வேண்டாம்! பின்பு மூன்று ரக்அத் தொழுவார்கள். அப்போது நான், ''இறைத்தூதர் அவர்களே! வித்ருத் தொழும் முன் நீங்கள் தூங்குவீர்களா?'' என்று கேட்டேன். ''ஆயிஷாவே! என் கண்கள் தான் தூங்குகின்றன. என் இதயம் தூங்குவதில்லை'' என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1172)

''இரவில் ஒரு நேரம் உண்டு. இம்மை, மறுமை  காரியங்களில் எந்த நல்லதையும் அல்லாஹ்விடம் ஒரு முஸ்லிம் கேட்டு, அந்த நேரத்துக்கு ஏற்ப அது இருந்தால், அதை அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை. இந்த நேரம் ஒவ்வொரு இரவிலும் உள்ளது'' என்று நபி(ஸல்) கூறக்  கேட்டேன். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1178)

''நபி (ஸல்) அவர்கள் இரவில் வணங்கினால் இலகுவான அளவில் இரண்டு ரக்அத் மூலம் தன் தொழுகையை ஆரம்பிப்பார்கள்.(அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1180)

''நபி(ஸல்) அவர்கள் உடல்வலி அல்லது வேறு காரணமாக இரவுத் தொழுகை அவர்களுக்குத் தவறிவிட்டால், பகலில் பனிரெண்டு ரக்அத் தொழுவார்கள்.  (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (முஸ்லிம்)(ரியாளுஸ்ஸாலிஹீன்: 1181)

''இரவில் எழுந்து, தானும் தொழுது, தன் மனைவிiயை விழிக்கச் செய்கிறார். அவள் மறுத்தால் அவளின் முகத்தில் தண்ணீரை தெளிக்கிறார். இவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! மேலும் ஒரு பெண் இரவில் எழுந்து தானும் தொழுது, தனது கணவனையும் எழுப்புகிறாள். அவன் மறுத்தால் அவனின் முகத்திலும் தண்ணீரை தெளிப்பாள். இவளுக்கும் அருள் புரிவானாக'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (அபூதாவூது) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1183 )

''ஒருவர் தொழுகையில் சிறு தூக்கம் தூங்கினால், அவர் தன்னை விட்டும் தூக்கம் நீங்கும் வரை தூங்கட்டும்! உங்களில் ஒருவர் தூங்கிய நிலையில் தொழுதால், அவர் அல்லாஹ்விடம் தவறாக மன்னிப்புத் தேடக் கூடும். மேலும் தன்னையே திட்டிக் கொள்ளவும் கூடும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1185)

ரமளான் இரவில் வணங்குவது

''இறை நம்பிக்கையுடனும்,நன்மையை நாடியும் ரமளானில் ஒருவர் வணங்கினால், அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (முஸ்லிம்)         (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1187)

''நபி (ஸல்) அவர்கள் ரமளானில் நின்று வணங்கிட தன் தோழர்களுக்கு உறுதியாகக் கட்டளையிடாமல் ஆர்வமூட்டினார்கள். அப்போது அவர்கள், ''இறைநம்பிக்கையுடனும், நன்மையை நாடியும் ரமளானில் நின்று வணங்கினால் அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1188)

லைலத்துல் கத்ரில் நின்று வணங்குதலின் சிறப்பு!
இதன் இரவுகளை விரும்புவதின் விளக்கம்

அல்லாஹ் கூறுகிறான் :

மகத்துவமிக்க இரவில் இதை (குர்ஆனை) நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படி தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும் ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடன் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97 :1 – 5)

 ''இறைநம்பிக்கையுடனும், நன்மையை நாடியும் ஒருவர் லைலத்துல் கத்ரில் வணங்கினால், அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும்' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1189)

''நபி(ஸல்) அவர்கள் ரமளானில் கடைசி பத்து நாட்கள் இஹ்திகாஃப் இருப்பார்கள். ''ரமளானில் கடைசி பத்து நாட்களில் லைலதுல் கத்ரை தேடுங்கள'; என்று கூறுவார்கள்.
(அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)  ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1191 )

''ரமளானில் கடைசி பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)    (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1192)

''இறைத்தூதர் அவர்களே! லைலத்துல் கத்ர், எந்த இரவு என்பதை நான் அறிந்து கொண்டால், அதில் நான் கூற வேண்டியது என்ன?' என்று கேட்டேன். ''அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன், துஹிப்புல் அஃப்வ, ஃபஹ்ஃபு அன்னீ''  என்று நீ கூறுவாயாக என்று நபி(ஸல்) கூறினார்கள். 

துஆவின் பொருள்: இறைவா! நீயே மன்னிப்பவன். நீ மன்னிப்பதையே விரும்புகிறாய். எனவே என்னை நீ மன்னிப்பாயாக!
(அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (திர்மிதீ)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1195 )

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

அலாவுதீன் S.

இட ஒதுக்கீடு! – இன்னும் ஒரு ஆய்வா !? - பகுதி இரண்டு ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | April 17, 2014 | , , , , ,

பட்டு வேட்டியைப் பற்றி கனாக்கண்டிருந்த போது
நாங்கள் கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது.” 

என்று வைரமுத்து ஒரு கவிதையில் கூறியிருப்பார். 

இந்திய சுதந்திரத்துக்கு முன்பு ஆங்கில ஆட்சியில் வழங்கப் பட்டிருந்த இட ஒதுக்கீடு கூட சுதந்திர இந்தியாவால் சுரண்டப்பட்டது என்பது வேதனையான வரலாறு.

நீதியரசர் ரெங்கநாத் மிஸ்ரா அவர்களின் விசாரணைக் கமிஷன் தந்த அறிக்கையை கடந்த வாரம் பார்த்த நாம் இப்போது இன்னொரு நீதிபதி இராஜேந்திர சச்சார் அவர்களின் தலைமையில் இந்திய முஸ்லிம்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர மற்றொரு கமிஷனையும் அமைத்தது பற்றியும் அந்த அறிக்கையின் சாராம்சங்களையும் காணலாம். 

இந்த விசாரணைக் குழுவில் மொத்தம் ஏழு பேர்கள் இருந்தனர். இந்தக் குழு நாடு முழுதும் சுற்றுப் பயணம் செய்தது. பலரை சந்தித்தது. களப்பணியாற்றி பல உண்மைகளைக் கண்டறிந்தது. ஆனாலும் சில அரசுத்துறைகள், அரசு சார்ந்த நிறுவனங்கள், முக்கியமாக இராணுவத்தில் தரைப்படை, கப்பல்படை, விமானப்படை ஆகியவை இந்தக் குழுவுக்கு கேட்ட தகவல்களை முறையாகத் தர மறுத்துவிட்டன என்பதையும் நாம் பதிவு செய்தாக வேண்டும். 

நீதிபதி சச்சார் கமிஷன் தனது அறிக்கையை நவம்பர் 2006ல் மத்திய‌ அரசிடம் சமர்பித்தது. அந்த அறிக்கையில் முஸ்லிம்கள் கல்வி, அரசு வேலைவாய்ப்பு போன்றவற்றில் இந்தியாவில் அவர்களின் மக்கள்தொகையின் ஒப்பீட்டு விகிதாச்சாரத்தைக் காட்டிலும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டியது. இன்னும் ஒரு படி மேலே சொல்லப்போனால் தலித்துகள், மலைவாழ் மக்களை விடவும் பின் தங்கிய நிலையில் இருந்து வருகின்றனர் என்பதை படம் பிடித்துக்காட்டியது. இந்த அறிக்கை, இவ்வளவு காலமும் முஸ்லிம்கள் எதோ ராஜபோக வாழ்க்கை வாழ்வதாக எண்ணிக கொண்டு அவர்களைப் பற்றி எண்ணிப் பார்க்காமலும் ஏறெடுத்துப் பார்க்கமலும் இருந்தவர்களுக்கு ஒரு இடி போல் இறங்கியது. அரசுகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கே தங்களுடைய உண்மை நிலை என்ன என்றும் உணர்த்தியது. 

சச்சார் கமிட்டி கண்டறிவித்த உணமைகளில் நாம் அறிந்துகொண்ட அதிர்ச்சி தரும் நிலைகள் சில:
  • 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 13.4% முஸ்லிம்கள் இருக்கின்றனர். 
  • ஆனால் ஐ.ஏ.எஸ் பணியில் முஸ்லிம்கள் 3%, மட்டும் 
  • பட்டப்படிப்பு படித்தவர்கள் 3%, மட்டுமே 
  • இரயில்வே துறையில் 4.5% மட்டுமே (அதில் 98.7% பேர் கடை நிலை ஊழியர்கள்) இருந்து வருகின்றனர். 
  • 25.2% முஸ்லிம்கள் வாழக்கூடிய மேற்கு வங்கத்தில் முஸ்லிம் அரசு ஊழியர்கள் 4.7% மட்டுமே ஆவார்கள்.
  • 18.5% முஸ்லிம்கள் வாழும் உத்திர பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் 7.5% மட்டுமே ஆவார்கள் என்று முஸ்லிம்களின் அவல நிலையை பட்டியலிட்டது சச்சார் கமிஷன்.
  • நாடு முழுவதும் முஸ்லிம்களே மிகக் குறைந்த வருமானத்தில் வாழ்கின்றனர். முஸ்லிம்களில் 94.8% பேர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கிறார்கள். ரேஷன் கார்டு வைத்திருக்கும் 32% தலித் மக்களோடு ஒப்பிடுகையில் 22% முஸ்லிம்களிடமே ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. விவசாயம் செய்துவரும் முஸ்லிம்களில் 2.1% விவசாயிகளே டிராக்டர் முதலிய விவசாய உபகரணங்களை வைத்து இருக்கிறார்கள். நிலங்களுக்கு நீர் பாய்ச்சும் பம்ப்செட் வைத்திருப்பவர்கள் 1% பேர்களே. பாராளுமன்றத்தின் 543 உறுப்பினர்களில் 33 பேர்களே முஸ்லிம்கள். இவர்களில் முஸ்லிம்களுக்கு உண்மையாக உழைப்பவர்கள் இன்னும் சொற்பம். உயர்கல்வி பயில்வதற்கு கல்விக்கடன் பெற்றுள்ள மொத்த மாணவர்களில் 3-2% மட்டுமே முஸ்லிம்கள் . 
  • நீதித்துறையில் தலித்துகளின் பங்கு 20 சதவிகிதமாக இருக்கிற போது முஸ்லிம்கள் பங்கு 7.8 சதவிகிதம் மட்டுமே. தலித்துகளில் 23 சதவிகிதத்தினருக்கு குழாய் குடிநீர் கிடைக்கையில் முஸ்லிமகளில் 19 சதவிகிதத்தினருக்கு மட்டுமே அது கிடைக்கிறது. பொதுத்துறை (7.2%) சுகாதாரத்துறை (4.4%) ரயில்வே துறை (4.5%) போன்ற பல்வேறு அரசு சார்ந்த துறைகளில் தலித்களைவிட முஸ்லிம்களின் பங்கு குறைவாகவே இருக்கிறது. மின்சாரமே இல்லாத கிராமங்களில் அதிகம் வாழ்பவர்கள் முஸ்லிம்களே. அதுபோல சேரிகளில் வாழ்பவர்களிலும் முஸ்லிம்களே அதிகம். இவை எல்லாம் நீதிபதி சச்சார் கமிட்டி கண்டறிந்து அறிவித்தவை. 
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் இந்தியாவில் ஓரளவு நல்ல நிலையை அடைந்துள்ளதற்கு காரணம் அவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடுதான் என்று இடஒதுக்கீட்டின் அவசியத்தை நீதிபதி சச்சார் குறிப்பிட்டு மட்டுமிருந்தார். இந்த அறிக்கையில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் முஸ்லிம்கள் தங்களின் கஷ்டத்தின் காரணமாக தங்களின் இனப் பெருக்கத்தை கருத்தடை முறைகளைப் பின்பற்றி தன்னிச்சையாகக் குறைத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் காரணத்தால் முஸ்லிம்களின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. நீதிபதி இராஜேந்திர சச்சார் அளித்த இந்த அறிக்கையில் முஸ்லிம்கள் இவ்வளவு கீழான நிலையில் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர் என தீர்க்கமாக அறிக்கை தந்து அறிவித்தது.

“பேசும்போது நல்லா பேசு ! ஆனா பாட்டெழுதும்போது பாட்டை விட்டுடு” என்று ஒரு புகழ்பெற்ற வசனம் தமிழ்நாட்டில் உலவி வந்ததுண்டு. அதே போல் முஸ்லிம்களின் அவலநிலையை பட்டியலிட்ட சச்சார் கமிஷன் துரதிஷ்டவசமாக முஸ்லிம்களின் துயர்களைக் களைய வழிமுறைகளை அல்லது இடஒதுக்கீடு போன்றவற்றிற்கான அளவீடு அல்லது இன்னும் என்னவெல்லாம் செய்யவேண்டுமென்ற பரிகாரம் எதையும் பரிந்துரை செய்யவில்லை. 

இதற்கு மாறாக, நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கின்றது, இந்நிலை மாற முஸ்லிம்களுக்கு 10% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரையை பதிவு செய்து இருந்தது.

ஆயினும் ஒன்றைச் சொல்லலாம். நீதிபதி சச்சார் கமிஷன், இந்திய சமூக இனங்களுக்கிடையே நிலவி வரும் ஏற்றத்தாழ்வு எனும் நோயை ஆராய்ந்து கண்டறிந்து அறிவித்தது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனோ இப்படிப்பட்ட ஏற்ற தாழ்வை நீக்கும் நிவாரணம் இடஒதுக்கீடுதான் என்றது. 

ஆனால் இந்த இரு கமிஷன்களின் அறிக்கைகளும், பரிந்துரைகளும் முஸ்லிம்களின் மறுவாழ்வு மற்றும் நலத்திட்டங்களுக்காக பரிந்துரை செய்திருந்தாலும் அந்த கருத்துக்கள் அடங்கிய அறிக்கைகளை பலகாலம் தொட்டிலில் போட்டு தாலாட்டி தூங்கவைத்து விட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் இடஒதுக்கீடு என்று தேர்தல் அறிக்கைகளில் மத்திய அரசை ஆண்ட காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டு முஸ்லிம்களை ஏமாற்றி வருகிற வாழைப் பழக் கதையை வழக்கமாக வைத்திருக்கிறது. அதே போல் அரசு , இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள நினைக்கும் போது அதை எதிர்த்து கருத்து தெரிவித்த கட்சிகள் கூட சமூக நீதி, முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு என்றெலாம் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிடுவது நகைச்சுவை இல்லாமல் வேறென்ன?

இந்த வாழைப்பழக் கதை மாதிரியே “திரும்ப முதல்லேருந்து வா” என்று இன்னொரு நகைச்சுவைக் கதையும் உண்டு. அதே போல்தான் இடஒதுக்கீடு என்ற உன்னத சமூக நீதிக் கொள்கைகள் மத்திய மாநில அரசுகளால் பந்தாடப்படுகின்றன. சுதந்திரம் பெற்று அறுபதுஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. நாட்டில் நலிவடைந்த பிரிவோரின் நிலைகள் என்ன என்று அரசு அறிந்து கொள்வதற்கு விசாரணைக் குழுக்கள் வேண்டுமென்று ஒன்றுக்கு இரண்டு குழுக்கள் போடப்பட்டு அறிக்கைகளும் நீதியின் வழியில் நீதிபதிகளால் சாதகமாகவே தரப் பட்டுவிட்டன. அவற்றை நிறைவேற்றுவதற்கு அதிகாரம் படைத்த அரசுகள் வாயளவில் முஸ்லிம்களுக்கு வெண்ணை தடவுகின்றனவே தவிர முழு அளவில் அந்த அறிக்கைகள் பரிந்துரைத்தவைகளை நடைமுறைப் படுத்த மனம் வரவில்லை என்றால் – இயலவில்லை என்றால்- சட்ட வடிவம் தந்து எழுந்து நடக்க வைக்காமல் சவளைப் பிள்ளையாகவே காலத்துக்கும் வைத்திருக்கிறது.

இன்னொரு வரலாற்று செய்தியையும் இங்கு பதிவு செய்தாக வேண்டும். இவ்வாறு நீதியரசர்கள் சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா போன்ற விசாரணை குழுக்கள் அமைக்கபப்ட்டது வரலாற்றில் முதல் முறையல்ல. இவ்வாறு இஸ்லாமிய சமுதாயம் குறித்து எச்சரிக்கை மணி ஒலிக்கப்படுவதும் முதன் முறை அல்ல. 1953ல் காகா கலேல்கர் கமிஷன், 1983 கோபல் சிங் கமிஷன், 1989 மண்டல் கமிஷன் என்று பல கமிஷன்கள் அமைக்கபப்ட்டே இருந்தன. 

இப்படியே இந்த சமுதாயம் ஆசைகாட்டி மோசம செய்யபடுவது ஒரு வழக்கமான அரசியல் விளையாட்டு என்றால் அதன் அரசியல் பின்னணி என்ன?

அதன் பின்னணி ஒன்றுமில்லை. இந்திய தேசிய ரத்தத்தில் கலந்துவிட்ட வகுப்பு துவேஷம் என்கிற விஷம்தான் காரணம். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மேலே குறிப்பிட்ட முஸ்லிம்களுக்கு சாதகமான இரண்டு நீதிபதிகளின் பரிந்துரைகளை சட்டமாக்கினால் அதை பிஜேபி போன்ற இன மத துவேஷ எதிர்க் கட்சி எதிர்க்கும் என்பதுதான் முதன்மைக் காரணம். இதே பிஜேபி எதிர்த்தாலும் அணு உலை அமைப்பு போன்ற ஏனைய எல்லா சட்டங்களையும் அவசரச் சட்டம் போட்டாவது நிறைவேற்றத் துணிகிற மத்திய அரசு, முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டு விஷயத்தில் மட்டும் பாராளுமன்றத்தின் மேற்கூரையை பார்த்துக்கொண்டே பத்தாண்டுகளை ஓட்டியது ஏன்? எதிர்க் கட்சியான பிஜேபி மட்டுமல்ல, காங்கிரசுக்குள்ளேயும் காங்கிரசின் கூட்டணி என்ற பெயரில் அந்த அரசைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் கட்சிகளுக்குள்ளேயும் ஆர் எஸ் எஸ் சித்தாந்தங்களை மறைமுகமாக பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் அடிவருடிகள், கதராடை அணிந்து காந்தி பெயர்ச் சொல்லி கட்சிகளுக்குள் ஊடுருவி இருப்பதும்தான் காரணம்.

இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என்று அதன் அரசியல் சட்டத்தில் எழுதிவைக்கபப்ட்டு இருக்கிறது. உண்மைதான். மத சார்பற்ற அணி என்று அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் ஒரு பகுதி தங்களை அடையாள படுத்திக் கொண்டு இருக்கின்றன. ஆனால் நாம் கேட்க விரும்புவது என்னவென்றால் மத சார்பற்ற அணி என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அரசியல் கட்சிகள் உண்மையிலேயே சிறுபான்மையினருக்காகவும் தாழ்த்தப் பட்ட மற்றும் பிற்படுத்தப் பட்ட மக்களுக்காகவும் ஆக்கபூர்வமாக செய்தது என்ன? மத சார்பற்ற என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் முதலிய சிறுபான்மையினரின் வாக்குகளை குறிவைத்து வாய்ஜாலம் பேசுவதுதான் இந்தக் கட்சிகளின் குறிக்கோளாக இருக்கிறதே தவிர, உண்மையில் சிறுபான்மையினருக்காக காலம் காலமாக எந்த உண்மையான நன்மைகளை நடைப் படுத்தி இருக்கிறார்கள் என்பது நாம் சிந்திக்க வேண்டிய செய்தியாகும்.

அப்படி ஆக்கபூர்வமான காரியங்கள் நடந்திருந்தால் 
  • முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு பத்து சதவீதம் தரவேண்டுமென்ற நீதிபதிகளின் அறிக்கை ஆஸ்பத்திரிப் படுக்கையில் கிடந்தது ஆக்சிஜனுக்காக போராட வேண்டிய அவசியம் ஏன் ஏற்படுகிறது?
  • சிறைச்சாலைகளில் பல சிறுபான்மையினரை பல வருடங்கள் வழக்கு ஏதுமின்றி விசாரணைக் கைதிகளாகவே வைத்திருக்கவேண்டிய நிலைமை ஏன் ஏற்பட்டு இருக்கிறது? 
  • எல்லா இயக்கங்களும் மாறி மாறி போராட்டங்களை அறிவித்தும் நடத்தியும் கூட மத்திய மாநில அரசுகள் இந்த கோரிக்கைகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? 
ஏனென்றால் சிறுபான்மையினரின் பிரச்னைகள் தீர்க்கப் படாமலேயே இருக்க வேண்டும் அப்போதுதான் அவர்களை இங்கும் அங்குமாக உதைத்து மற்ற பெரிய கட்சிகள் பந்தாட இயலும் என்கிற கீழ்த்தரமான நோக்கம்தான். இதில் வேதனையாகக் குறிப்பிட வேண்டிய செய்தி என்னவென்றால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இயக்கங்கள் பெரிய அரசியல் கட்சிகளின் கால்களில் உதைபடும் கால்பந்தாக நாங்கள் வருகிறோம் என்று போட்டி போட்டுக் கொண்டு தாங்களே உருண்டு ஓடிப்போய் மைதானத்தின் நடுவில் உட்கார்ந்து கொள்வதுதான். 

இந்த நிலைமைகள் தான் மனசாட்சி உள்ள – எந்த இயக்கத்தைச் சேர்ந்த யாரும் உண்மை நிலைமைகள் என்று உணர்ந்து இருந்தாலும் கூட மதசார்பற்ற அணி என்று அறிவித்துக் கொள்ளும் அணியோடுதான் நம்மை ஏதாவது காரணம் சொல்லி இணைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். காரணம், ஒரு புறம் வேடன் மறு புறம் நாகம் இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான் என்கிற நிலைமைதான் சிறுபான்மையினரின் நிலைமை. 

ஒருபுறம் மத வெறியர்கள் வெளிப்படையாக விளம்பரப் பலகை வைத்து இந்தப் பக்கம் வராதே! என்று நம்மை பயமுறுத்துகிறார்கள். மற்றொரு புறம் பிற அரசியல் கட்சிகள், நமது ஓட்டுப் பால் சுரக்கும் மடிகளில் ஆறுதல் விளக்கெண்ணையை தடவி செம்பு நிறைய பால் கறக்கிறார்கள். நாமோ பலவாறு பிரிந்து கிடப்பதால் அவர்களுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டு போயஸ் தோட்டத்துக்கும் கோபாலபுரத்துக்கும் முட்டுக் கொடுத்துக் கொண்டு அவர்கள் போடும் ஒன்று இரண்டு இடங்களுக்காக தயவை எதிர்பார்த்து நிற்கிறோம். இதற்காக நமது சொந்த சகோதரர்களை துர்வார்த்தைகளால் அர்ச்சிப்பதற்கும் நாம் தயங்குவதில்லை. இதே இட ஒதுக்கீட்டைக் காரணம் காட்டி நமக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் அவர்களின் கரங்களில் இருக்கும் கத்திகளுக்கு நாமே கழுத்தைக் கொடுத்து பலியாகிறோம். பிரித்தாளும் கொள்கையில் பெயர் பெற்றவன் பிரிட்டிஷ்காரன் என்று அன்று சொல்வார்கள். இன்றோ அரசியலில் வித்தகம் என்பது சிறுபான்மையினரையும் தலித்துக்களையும் கூறு போட்டுப் பிரித்து திக்காலுக்கு திக்கால் விட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டு முட்டி மோதவிடுவதுதான் என்பதாக ஆகிவிட்டது.

மிகுந்த வேதனையுடன் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். இந்து சகோதரர்கள் இடையே எவ்வாறு சாதிரீதியான கட்டமைப்பு உருவாகி இவர் செட்டியார், இவர் முதலியார், இவர் பிள்ளைமார் , இவர் வன்னியர் , இவர் கவுண்டர் என்று பாகுபாடுகள் ஊடுருவி உருவாகி இருக்கிறதோ அதற்கு சற்றும் குறையாமல் அதே அளவு வீரியத்துடன் முஸ்லிம்களிடையே இயக்கப் பாகுபாடுகளும் இயக்க வெறியும் நிலவி வருகிற உணமையை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். சாலையில் போகிற ஓர் இந்து சகோதரனை அடுத்த இந்து சகோதரன் இந்த ஆள் என்ன சாதி என்று கேட்பது போல் ஒரு முஸ்லிம் சகோதரனை மற்றொரு முஸ்லிம் சகோதரன் இவன் எந்த இயக்கத்தில் இருக்கிறான் என்று எடை போடுவது , ஆராய்வது இன்றைய சமுதாயத்தின் நடுவே வேதனையான விஷ விருட்சமாக வளர்ந்துவிட்டது. இந்து சகோதரர்கள் தங்களுடைய சாதித் தகராறுகளை தர்மபுரியிலும் பரமக்குடியிலும் மரக்காணத்திலும் முதுகுளத்தூரிலும் கீழ வளவு மற்றும் மேல வளவிலும் காட்டிக் கொள்கிறார்கள் என்றால் முஸ்லிம்கள் திருவிடச்சேரியிலும் அதிராம்பட்டினத்திலும் மதுக்கூரிலும் கிளியநூரிலும் காட்டிக் கொள்கிறார்கள் அல்ல காட்டிக் “கொல்கிறார்கள்” . இதையா இஸ்லாம் போதித்தது? இந்த ஒற்றுமையின்மை சால்வையை போர்த்திக் கொண்டு இட ஒதுக்கீடு கேட்டு இயக்கத்துக்கு ஒரு மாதிரி போராட்டங்கள் நடத்தினால் நமக்கு இஞ்சி போட்ட டீ கூட கிடைக்காது . இடஒதுக்கீடா கிடைத்துவிடும்? 

பல்வேறு இயக்கங்களின் போராட்டங்களுக்குப் பிறகு தமிழகத்தில் 3.5% கல்வியில் இட ஒதுக்கீடு கிடைத்தது. கிடைத்த இந்த இட ஒதுக்கீட்டிற்கு உரிமை கொண்டாடி ஒவ்வொரு இயக்கமும் தங்களது கொடிகளையும், பெயர்களையும் முன்னிறுத்திக் கொண்டன. விளைவு ஒரு இயக்கத்தார் மற்றொரு இயக்கத்தாரை பழிப்பதும், இழிப்பதும் காட்சியானது. இந்தக் கட்டுரை வெளியாகும் தினம் அன்றுவரை இந்தப் பகையுணர்வு நீங்கவில்லை. இந்த 3.5% இட ஒதுக்கீட்டைத் தந்த கட்சியும் அதன் தலைவரான கலைஞர் கருணாநிதியும் நமது கோரிக்கையான ஏழு சதவீதத்தை நமக்காக ஒரே நேரத்தில் தந்திருக்க இயலாதா? தரவில்லை. காரணம் அடுத்த தேர்தலுக்காக முஸ்லிம்களுடன் பேரம் நடத்த ஒரு கைப்பொருள் கையில் வேண்டும் என்பதுதான் காரணம். அதேபோல் அதை நாங்கள் அதிகரித்துத் தருகிறோம் என்று அடுத்தகட்சியும் இந்த இட ஒதுக்கீட்டை வைத்து நம்மிடம் அரசியல் பேரம் நடத்துவதற்கும் இவைகள் காரணமாக இருக்கின்றனவே தவிர இந்தக் காரணங்களும் பிரச்னையும் கோரிக்கையும் காலத்துக்கும் இருந்து கொண்டு இருந்தால்தான் நம்மைவைத்து இவர்கள் அனைவரும் நடத்தும் அரசியலும் இருக்கும். பிரச்னை தீர்ந்துவிட இவர்கள் விடமாட்டார்கள். அப்படிப் பிரச்னை தீர்ந்துவிட்டால் இவர்கள் நம்மோடு நடத்தும் அரசியலும் தீர்ந்துவிடும்.

இடஒதுக்கீடு பெறுவதற்கும் நம்மை கல்வி, வேலைவாய்ப்பு , சமூக நிலை ஆகியவற்றில் உயர்த்திக் கொள்ளவும் என்னவெல்லாம் வழியாக இருக்கலாம்?

முதலாவதாக நமக்குள் இருக்கும் இயக்க மயக்கங்கள் தீரவேண்டும். ஒற்றுமை ஒன்றே குறிக்கோளாக இருக்க வேண்டும். ஒற்றுமைக்கு குறுக்கே வரும் எவரையும், “ அண்ணன் என்னடா ! தம்பி என்னடா ! அவசரமான உலகத்திலே” என்று ஒதுக்கிவிட வேண்டும். 

அடுத்து நமது கல்வித்தகுதிகளை உயர்த்திக் கொள்ள வேண்டும். 

மூன்றாவதாக கல்வித்தகுதியை உயர்த்திக் கொள்வதுடன் நாம் கற்ற கல்விக்குத் தகுந்த அரசுப் பணிகளைத் தேடித்தரும் போட்டித் தேர்வுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டும். அதே போல் பல உயர் கல்வி நுழைவுதேர்வுகளிலும் கலந்து கொள்ள வேண்டும். 

நான்காவதாக நமது அரசியல் வலிமையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். அரசியல் வலிமைய வலுப்படுத்தே வேண்டுமென்றால் இங்கே இருக்கும் பெரிய ஆலமரக் கட்சிகளின் நிழலில் வளர்ந்துவிட முடியுமென்ற நினைப்பை அகற்ற வேண்டும். நமக்கென்ற ஒரே ஒரு அரசியல் அமைப்பில் நாம் மட்டுமல்ல நம்முடன் கை கோர்க்க நம்மை போல் ஒடுக்கப் பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுடன் நமது தலைமையில் நமது கூட்டணி அமைந்தால் அரசியலில் – நிர்வாகத்தில் நாம் இந்தியாவுக்கே தலைமை தாங்க நம்மால் முடியும்.

காலமெல்லாம் உயர் சாதியினராலும் பெரும் கட்சிகளாலும் வார்த்தை அலங்காரங்களால் வஞ்சிக்கப் பட்டவர்களின் வரிசையில் வருபவர்கள் யார் என்று எண்ணிப் பார்த்தால் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட மக்களோடு முஸ்லிம் மற்றும் கிருஸ்தவ மக்களே வருவார்கள். இந்திய சமுதாயத்தில் இந்தப் பிரிவினரின் மக்கள் தொகை அளவுதான் அதிகம் . ஆனால் இவர்கள் ஆளப்படுவது இவர்களைவிடக் குறைந்த அளவுள்ள உயர் பிரிவு வகுப்பினரால் மட்டுமே. தங்களின் வாழ்வாதாரங்களுக்ககவும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களுக்காகவும் மற்றவர்களிடம் இவர்கள் துண்டேந்தி நிற்கும் நிலை ஒரு வித்தியாசமான வேடிக்கை. ஆகவே ஆண்டாண்டு காலமாக வஞ்சிக்கப்பட்டு வரும் சமூகத்தின் இப்பிரிவினர் தங்களின் கரங்களை வலுவாக கோர்த்து ஒரு மாற்று அரசியல் அணி உருவாகி நாட்டை ஆளும் நிலை வரும்போதுதான் உண்மையான சமூக நீதி இந்தியாவில் உருவாக வாய்ப்புண்டு. இந்த நிலை ஏற்படாதவரை வாழைப் பழக்கதைகளும் மறுபடியும் முதல்லே இருந்து வா போன்ற நிகழ்வுகளும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். 

உத்தரவுகளை இடும் நிலையில் உட்கார வேண்டிய சமூகங்கள் , தங்களின் உண்மை நிலைகளை உணராத வரையில் உத்தரவுகளை எதிர்பார்த்து ஆண்ட வர்க்கங்களின் வாசலில் வரிசையாக நின்று கொண்டு போட்டதைப் பொறுக்கிக் கொண்டு போகும் நிலைதான் தொடரும். 

இனி இதைப் பற்றி சற்று சிந்திக்கத் தொடங்கலாமா? இன்ஷா அல்லாஹ்.

அதிரைநிருபர் பதிப்பகம்

ஒற்றுமையே பலம் ! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | April 16, 2014 | , , , ,


இந்த தேர்தலை முன்னிறுத்தி எழுதப்படும் கட்டுரை இது. நமக்கு தெரிந்து கனிசமான முஸ்லீம்களின் ஓட்டுகள் ஒரே கட்சிக்கே விழுந்தது எல்லோரும் அறிந்ததே அந்த அரசியல் தலைவர் நமது ஓட்டு வங்கியிலிருந்து ஓட்டை மட்டும் பொறுக்கிக் கொண்டு அந்த தலைவர் இஸ்லாமிய மக்களுக்கு இதயத்தில் மட்டும் இடம் வைத்து கறக்க வேண்டிய ஓட்டுக்களை அழகாக கறந்தார் இன்னும் கறந்து கொண்டுதான் இருக்கின்றார் இந்த தேர்தலில் அவருடைய அறுவடை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. இத்தனை வருடமாக நமது ஓட்டுகளை பெற்று சுகபோக வாழ்க்கையை அனுபவித்தார் தன் குடும்பத்தையே அனுபவிக்க வைத்தார் இதற்கு நன்றி கடனாக இஸ்லாமியருக்கு ஸ்பெஷலாக தானாக ஏதாவது செய்திருப்பாரா என்றால் அதுதான் இல்லை.

ஹிந்தியிலே ஒரு வார்த்தை சொல்லுவார்கள் “ஜியோ ஜீனேதோ” நீ வாழு எங்களை வாழவிடு என்ற சித்தாந்தத்தில் காலத்தை சுகபோகமாக காலத்தை தள்ளினார்கள் இன்னும் தள்ளிக் கொண்டிருக்கின்றார்கள். அம்மாவை பற்றி சொல்லவே தெவையில்லை அய்யாவுக்கு இல்லாத அக்கரை அம்மாவுக்கு வந்துவிடுமா என்ன ஆக நமக்காக யாரும் எதுவும் நம் சமுதாயத்திற்கு செய்யவில்லை.

நமக்கு 3.5% இட ஒதிக்கீடு கிடைத்தது  அவர்களாக கொடுத்தது கிடையாது நம்முடைய உரிமையில் ஒரு பங்கை மட்டும்  நாம் போராடி பெற்றுள்ளோம்.

புரட்சி தலைவி என்னடானா பதவியில் வந்து  மூன்று வருடமாக சும்மா இருந்துவிட்டு தேர்தல் நேரம் வந்ததும் முஸ்லீம்களுக்கு இட ஒதிக்கீட்டிற்கு ஏதோ வாரியம் அமைத்து இருக்கிறார் என்று நம்ப சொல்றாங்க. இத்தனை வருடாமா இல்லாத அக்கரை இப்போழுது என்ன வந்து விட்டது இதெல்லாம் வெறும் கண்துடைப்பு சரியாக சொல்லப் போனால் பித்தலாட்டம்.

இத ஒரு புறமிருக்கட்டும் இந்தியாவில் வாழும் 2% பிராமணர்களின் ஆதிக்க அதிகாரம் பற்றியும் பிராமணர்களின் பிரவேசித்திருக்கும் கணகெடுப்பை இந்த நேர்த்தில் எழுதியாக வேண்டும் காங்கிரஸ் ஆட்சி செய்யும் போதே இப்படி என்றால் நரபலி கொடூரனனாட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை கீழெ உள்ள புள்ளிவிபரத்தை பார்த்துவிட்டு முடிவு செய்து கொள்ளுங்கள்

ஜெயலலிதா ஒரு பிராமணர்  அதாவது அவர் சார்ந்திருக்கும் உயர்சாதி என்பதையும் சிந்தையில் ஏற்றுங்கள்.
  • இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் பிராமணர்களின் பிரவேசம் 
  • ஆளுனர்கள் 30 பேர் அதில் 13 பேர் பிராமணர்கள்.
  • உச்ச மன்ற நீதிபதிகள் 16 பேர் அதில் 9 பேர் பிராமணர்கள்
  • உயர் நீதிமன்ற  நீதிபதிகள் 330 பேர் அதில் 166 பேர் பிராமணர்கள்.
  • வெளி நாட்டு தூதர்கள் 140 பேர் அதில் 58 பேர் பிராமணர்கள்
  • பல்கலைகழக துணை வேந்தர்கள் 98 பேர் அதில் 50 பேர் பிராமணர்கள்
  • மாவட்ட நீதிபதிகள் 438 பேர் அதில் 250 பேர் பிராமணர்கள்
  • கலெக்டர் ஐ ஏ எஸ் அதிகாரிகள்  3300 பேர் அதில் பிராமணர்கள் 2376.
  • பாரளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர் அதில் 190 பேர் பிராமணர்கள்.
  • ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர் அதில் 89 பேர் பிராமணர்கள்

இப்படியாக பிராமணர்களின் ஆதிக்கம் எல்லாவற்றிலும் இருந்தால் யாருக்கு நீதி கிடைக்கும் நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா?

நாம் நமது உரிமைகளை போராடி பெற வேண்டும் அதில் மாற்று கருத்து இல்லை நமது உரிமைகளுக்கும் உடமைகளுக்கும் போராட நமக்கு இஸ்லாம் அதை அனுமதி அளிக்கின்றது  மக்கா மஸ்ஜித் இமாம் சொன்னது போன்று அடுத்தவர்களின் இடஒதிக்கீட்டை நாம் பிடிங்கி எடுப்பதாக அவர் சித்தரித்ததில் கண்டிப்பாக உள்நோக்கம் இல்லாமல் இஸ்லாத்தை வைத்து ஆதாயம் தேடுபவர்களை அல்லாஹ் சும்மா விடமாட்டான். ஒரு இயக்கம் நடத்திய போராட்டத்தை தவறாக சித்தரித்தார். நாம் அடுத்தவர்களின் உரிமையை பிடுங்குவதாக குற்றம் சாட்டினார். அது தவறு நம்முடைய உரிமையை பெறத்தான் ஒவ்வொரு இயக்கமும் போராடுகின்றது என்பது அவருடைய மண்டைக்கு எட்டவில்லை ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகள் இரண்டும்  ஒரே தாயின் பிள்ளைகள் ஒரு பிள்ளை பசியின் தாக்கத்தால் அடிக்கடி அழுதே பால் குடிக்கின்றது இன்னொரு குழந்தையோ எந்த ஆராவாரம் இன்றி தேவையின்போது பால் அருந்துகின்றது இப்பொழுது அடிக்கடி அழுது அடம்பிடித்து பால் அருந்தும்  குழந்தை அடுத்த குழந்தையின் பாலை அபகரிப்பதாக என்னம் கொள்வது போல் உள்ளது மேற்கண்ட கருத்து இன்னும் சொல்லபோனால் நம் உரிமையை பிராமணர்கள் அபகரித்திருக்கின்றார்கள் என்பதை மேலே உள்ள புள்ளி விபரம் தெள்ள தெளிவாக காட்டுகின்றது அதை மீட்டெடுக்க போராடி பெறுவதில் தவறு காணக்கூடாது.

இருந்த போதிலும் இப்பொழுது நாம்  மிக மோசமான  அபாயகரமான சூழலில் இருக்கின்றோம் எதை முன்பு செய்வது எதை பின்பு செய்வது என்பதை நியாயப்படி சிந்தித்து செயளாற்ற கடமை பட்டுள்ளோம். நாம் காலா காலமாக இடஒதிக்கீட்டிற்காக போராடி வருகின்றோம் அதை நிறுத்தச் சொல்லவில்லை அழுதால்தான் பால் கிடக்கும் என்பது நமது தலை எழுத்தாகி விட்டது. ஆனால், நாம் தற்போது அழுது பெறும் நிலமையில் இல்லை. இது ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்தின் பலத்தை காட்டும் நேரம் ஒவ்வோரு இயக்கமும் தனது தனித்துவத்தை காட்டும் நேரமல்ல.
                
இதில் நாம் நமது விருப்பு வெறுப்புகளை ஓரங்கட்டி விட்டு ஒன்று பட்டு ஓரணியில் திரண்டு நமது முழு பலத்தையும் இதில் காட்டி இருந்தால் எந்த தெரு பொறுக்கி நாய்களும் நம்மை சீண்ட முடியாது. எந்த மீடியாக்களும் நமக்கு எதிராக காய் நகர்த்த முடியாது இதையெல்லாம் சிந்திக்காமல் ஒவ்வொரு தலைவர்களுக்குள்ள ஈகோ பிரச்சனைகளையும் சொந்த அபிப்ராயங்களையும் அரசியலாக்கி இஸ்லாமிய சமுதாயத்தை கூறு போட்டதை மறுக்க முடியாது பொறுக்க முடியாது.  ஆளுக்கொரு கொடியும் ஆளுக்கொரு மேடை பிடித்ததிலிருந்து நமது ஒற்றுமையின் பலத்தின் அளவுகோளை எதிராளிகளுக்கு நன்றாக விளக்கி விட்டார்கள். 

நம் சமுதாய மக்கள் மானத்தோடும் கவுரவத்தோடும் வாழ்ந்து வந்தோம் ஒரு சில இயக்கங்களின் தலைவர்களின் தவறான முடிவுகளினால் நம் சமுதாயம் ஒற்றுமை இழந்து இருக்கின்றது. இதில் எதிர்மறையாக யாரும் யோசித்தால் கண்டிப்பாக உங்கள் கருத்தை அழகிய முறையில் இங்கு பதியலாம் அல்லது எனக்கு எடுத்து சொல்லாம். 

என்னுடைய ஆதங்கம் மட்டுமல்ல உங்களுடைய ஆதங்கமும் அப்படித்தான் இருக்கும் என்பதில் எனக்கு கிஞ்சிற்றும் சந்தேகமில்லை. காலா காலமாக நம்மை அழிக்க துடிக்கும் ஒரு சக்தி இப்பொழுது பதவி ஏற துடிக்கின்றது அவர்களுக்கு நாம் இந்த தேர்தலில் பதிலடி கொடுத்து அவர்களை வீழ்த்த வேண்டுமே தவிற அவர்களை முன்னேரவிடவோ வளரவிடவோ நாம் காரணமாக இருப்பது முட்டாள்தனம் என்பது எல்லொரும் உணர்ந்த ஒன்று. இருந்தாலும் ஆதரவு கொடுத்தவர்கள் ஏன் கொடுத்தோம் என்ற சிறு நெருடல் இருக்கத்தான் செய்தது. இது பற்றி எத்தனையோ மீடியாக்களிலும் இணைய தளங்களிலும் கண்டனக் குரலை பதிந்தார்கள். சம்பந்தப்பட்டவர்கள் காலம் தாழ்த்தி சிந்தித்து தனது ஆதரவை வாபஸ் வாங்கியது மிகவும் வரவேற்க தக்கது.

வாழ்வா சாவா என்ற கால கட்டத்தை நாம் எதிர் நோக்கி இருப்பதால் நம் உரிமைகளுக்கு போராடுவதை  சற்றே நிதானப்படுத்தி வைத்துவிட்டு நம் உயிருக்கும் உடமைகளுக்கு பங்கம்  வந்து விடாமல் முதலில் நம்  உயிரையும் உடமைகளையும் பாதுகாப்பதுதான் சால சிறந்தது.

உரிமையை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வையும் இழக்கலாமா ? என்ற குஜராத் முஸ்லீம்களை போன்று நாமும் ஆகிவிடாமல் உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை நினைவாக்குவோம்.

யுத்தங்களில் ரத்தங்கள் சிந்தினாலும் பாதை மாறலாமா? ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வெந்தாலும் நம் இனம் சாக வழி வகுக்கலாமா?

என்பதை மனதில் வைத்து நம்முடைய செயல்பாடுகளை வகுத்துக் கொண்டால் சரி இது ஒரு போராட்டமான தருனம் இப்பொழுது நாம் இட ஒதிக்கீட்டை பற்றி யோசிக்க அவசியமில்லை என்று சொல்ல வரவில்லை அவகாசமில்லை என்று சொல்லுகின்றேன்.

இட ஒதிக்கீட்டை மனதில் வைத்துக் கொண்டு நம்மை கொள்ள நினைக்கும் கொளையாளிகளுக்கு பட்டு கம்பலமும் பஞ்சு மெத்தையும் கொடுத்து வரவேற்கும் பினாமி ஜெயலலிதாவுக்கு ஆதரவு அளித்தது தவறானது என்று இப்பொழுது செறுப்படி கொடுத்து ஆதரவை வாபஸ் பெற்றது மிக சந்தோசம் அளிக்கின்றது.

நம் உடமைகளுக்கு வேட்டுவைக்க துடிப்பவர்களுக்கு நமது முழு உழைப்பும் நாம் போட்ட பொன்னான ஒட்டுக்களும் நமக்கே வினையாக வந்து விடக்கூடாது என்ற தொலை நோக்கு பார்வையுடன் இந்த பிரச்சனையை அணுகச் சொன்னோம்.

இந்த சிக்கலான சூழலை நாம் உதாசீனம் படுத்திவிட முடியாது. நம் பலத்தைவிட எதிரிகளின் பலத்தை நாம் கண்டிப்பாக கணக்கிட்டே ஆகவேண்டும். பிஜேபியின் தேர்தல் அறிக்கை மூலம் இந்தியாவில் வாழும் சிறுபான்மையினரை  துடைக்கவும் நம் தாய் நாட்டை இரத்த கலமாக ஆக்கவும்   நினைக்கும் தீய சக்தியின் தேர்தல் அறிக்கையை பற்றி அம்மா திருவாய் மலரவே இல்லை என்பதிலிருந்தும் மெளனம் சம்மத்திற்கு அறிகுறி என்பது யாரும் யாருக்கும் சொல்லி புரியவைக்க வேண்டிய அவசியமே இல்லை.

மு.க.ஸ்டாலினாவது ஏதோ பாசிஸ கொள்கையுடைய பிஜேபிக்கு நாங்கள் எங்கள் ஆதரவை  தரமாட்டோம் என்று பல இடங்களில் பேசி வருகின்றார். இதில் என்னவோ எனக்கு நம்பிக்கை இல்லை காரணம் குடிகாரர்கள்  குடித்து விட்டு உளருவார்கள் அரசியல் வாதிகளோ குடிக்காமல் உளறுவார்கள் அரசியல் வாதிகளின்  பேச்சில் நிதானமிருக்காது அறிவிப்புகளையும் வாக்குறுதிகளையும் அள்ளிவிடுவார்கள் என்ன காசா பணமா  குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு அரசியல் வாதிகளின் பேச்சு ஓட்டு கிடைச்சா போச்சு இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

வாய்கிழிய பேசியவர்களின் இன்றைய நிலமை என்ன என்பதை சற்று சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.

அவர்கள் எதிர்பார்த்தபடி பிஜேபி சிம்மாசனம் ஏறிவிட்டால் எந்த இட ஒதிக்கீட்டிற்காக போராடினோமோ  அது சிம்ம சொப்பனமாக ஆகிவிடும். அது மட்டுமல்லாது ஏற்கனவே கொடுக்கப்பட்ட 3.5% இட ஒதிக்கீடு நம்மிடமிருந்து பறிக்கப்படும் காட்சிகள் அரங்கேறும் கலவரங்கள் வெடிக்கும் இதைத்தானே அந்த தெரு நாய்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த நேரத்தில் ஒவ்வொருத்தருக்கும் இவர்களிடமிருந்து  நம் உயிரையும் உடைமைகளை பாதுகாக்கவே நேரமிருக்காது. சமீபத்தில் பக்கத்து நாடான பர்மாவில் புத்த பிச்சுகள் நடத்திய காண்டு மிராண்டித் தனத்தையும் முஸ்லீம்களின் அவல நிலையை நாம் பார்த்து கண்ணீர் வடித்தமே இவர்களிடம் அரசாட்சி சென்றால் அந்த நிலமை நமக்கு வராது என்று என்ன நிச்சயம். அல்லாஹ் நம் அனைவர்களையும் பாதுகாப்பானாக! இவர்களின் உண்மையான முகத்தையும்  குஜராத்தில் அவர்கள் நடத்திய  இன படுகொலைகளையும் கொடுமைகளையும் அங்கு  வாழும் நம் சமுதாய மக்கள் அனுபவித்து இருக்கிறது.

அந்த கொடூரமான காட்சிகளை ஏராளமான காணொளிக் காட்சிகளாக பார்த்திருக்கிறோம். அதனை அனைவருக்கும் பகிர்ந்தும் இருந்திருக்கிறோம். நம் இதயங்கள் துடித்தன உள்ளங்கள் உருகின கண்ணீர் விட்டு கதறினோம் அவைகள் எல்லாம் எங்கே மறைந்தது அந்த காட்சிகள் நம் மனதைவிட்டு எடுபட்டுவிட்டதா ?

இப்பொழுது அத்தனை இஸ்லாமியர்களின் படுகொலைக்கு காரணமாக இருந்த காரண கர்த்தாவை பச்சை(!!?) கம்பலம் விரித்து வரவேற்கும் அளவிற்கு ஊடக விபச்சாரத் தொழில் செய்யும் மீடியாக்கள் அரங்கேற்றி இருக்கும் கதா கலாச்சோபம் நமது புலனுக்கு எட்டவில்லையா? மீடியாக்கள் அனைத்தும் மதவெறி பிடித்த நாய்களின் கையில் இருப்பதால் தகரத்துக்கு தங்க முலாம் பூசி வல்லவர் நல்லவர் குஜராத்தை சொற்க பூமியாக மாற்றியவர் என்று புலுகு மூட்டைகளை அவித்து விட்டு  இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த மக்களையும் முட்டாள்ளாக்கி விட்டு மோடி வித்தை செய்யும் நரபலி மோடியை இந்தியா முழுதும் வலம் வர வைத்து இந்தியாவின் பிரதமராக்க துடிக்கின்றனர்.

இந்த வெறியர்கள் தமிழகத்திலும் தடம் பதிக்க பல வருடங்களாக எடுத்த முயற்சிக்கு  தமிழகத்தின் அரசியலில் வாய் கிழிய பேசிய சில திராவிட கட்சிகள் பிஜேபி போடும் சில எழும்பு துண்டுகளுக்காக வாலை ஆட்டிக்கொண்டு வக்காலத்து வாங்கி தன்னை  அந்த வெறிபிடித்த கூட்டத்துடன்  கூட்டணி வைத்துக் கொண்டு  இவர்களின்  உண்மையான நிறத்தையும் வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்கள்  முன்னால் வாய்கிழைய பேசியவர்களே பிஜேபி போடும்  எலும்புத் துண்டுக்கு அலைகின்றார்கள் என்றால் அதைபற்றியே வாயே திறக்காத அம்மா பச்சோந்திதான் என்பது புரியவில்லையா?
  
யாரைத்தான் நம்புவதோ இந்த பேதை நெஞ்சம் என்று புலம்பும் நிலயை இஸ்லாமிய அணைத்து இயக்கங்களும் கட்சிகளும் உருவாக்கி விட்டார்கள்.

இந்த முறை ஐந்து முனை போட்டியை இந்தியா எதிர் நோக்கியுள்ளது

இந்த தேர்தலை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாமிய இயக்க தலைவர்கள் கலந்தாலேசிக்க தவறிவிட்டார்கள் 

யாருக்காக யார் அடித்துக் கொள்வது என்ற விவஸ்தையில்லாமல் தவறான கருத்துக்கள் பரிமாறப்பட்டன.. பறிமாறிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் நமக்குள் தயவு செய்து இப்படிபட்ட தவறான கருத்து பரிமாற்றத்தை நிறுத்துங்கள். இப்படி பட்ட அகம்பாவமும் தற்பெருமை பிடித்த தலைவர்களினால், அவர்களை பின் தொடரும் இளைஞர்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டையிட்டு கொள்கின்றனர். இது எல்லா ஊர்களிலும் நடக்கின்றது எல்லா சமுதாய இயக்கங்களிலும் நடக்கின்றது இந்த இயக்கங்களில்  இருப்பது யார்?  ஒரே வயிற்றில் பிறந்த சகோதரர்கள், ஒன்றாக வளர்ந்த நெருங்கிய நண்பர்கள், மாமா, மச்சான்மார்கள், பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள் ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள், இயக்கங்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகளை பயிறிட்டு   அதற்கு பலியாகிய நம் சமுதாயத்தை  நினைக்கும்போது மனம் கனக்கின்றது.

அரசியலில் ஆதாயம் தேடும் ஒரு கும்பலுக்காக நாம் ஏன் நமக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தி பினங்கி கொள்ள வேண்டும் நாமே நம்மை ஏன் அழித்து கொள்ள வேண்டும் நமக்குள் நாம் அடித்துக் கொண்டு எதிரிகளின் சதியில் நாம் ஏன் விழ வேண்டும்.

நாம் அணைவரும் குரோத போக்கையும் நமக்குள் இருக்கும் காழ்புணர்ச்சிகளை கலைந்துவிட்டு நீதமாகவும் நேர்மையாகவும் சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.


யா அல்லாஹ் நம் சமுதாய மக்களை இந்த சைத்தானிய்யதை விட்டும் காப்பற்றுவாயாக ! யா அல்லாஹ்  குஜராத்தில் நடந்தது போன்று, பர்மாவில் நடந்தது போன்று கலவரங்களை ஏற்படுத்தி கண்ட கண்ட நாய்களிடம் அடிபட்டு மிதிபட்டு எங்களுக்கு மவுத்தை ஏற்படுத்திவிடாதே ! லாஇலாக இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற கலிமா சொன்ன இஸ்லாமிய சமூகத்தவர் அனைவர்களுக்கும் இயற்கையான மவுத்தை அந்த கலிமாவுடன் நசீபாக்குவாயாக !

யா அல்லாஹ் எங்களை இந்த சதிகார கூட்டத்தின் பிடியிலிருந்து பாதுகாப்பாயாக! யா அல்லாஹ் இந்த சதிகார கும்பலின் சதியை முறியடித்துவிடுயாக! யா அல்லாஹ் இந்தியாவில் நல்லாட்சியை ஏற்படுத்துவாயாக! யா அல்லாஹ் இந்த சதிகார கும்பலைக் கொண்டு எங்களை சோதித்து விடாதே. எங்களுக்கு பாதுகாப்பான அரசாட்சியை ஏற்படுத்திக் கொடு யா அல்லாஹ் அமீன் அமீன் யாரப்பல் அலமீன் 

நாம் ஒவ்வொருவரும் இறைவனிடம்  மனம் உருகி கையேந்துவோம் எப்பொழுதுமே நமக்கு உதவும்  ஆயுதம் பிரார்த்தனைகளே. இந்த உதவி அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் உதவி மனிதர்களிடமிருந்து கிடைக்கும் உதவியல்ல.

இதை ஏன் எதிர்மறையாக யோசனை செய்து எழுதுகின்றேன் என்றால் எதிரிகளை நாம் ஏளிமையாக கணக்கிடக்கூடாது வருமுன் காப்பதுதான் புத்திசாலித்தனம்.

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை என்ற வார்தைக்கு மதிப்பளித்து மனம் உருகி கேளுங்கள் நிச்சமயமாக நமக்கு நல்ல பாதகமில்லாத அரசாட்சியை ஏற்படுத்துவான்.

அதிரை மன்சூர்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)