Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று! இன்று ! நாளை! – 3 36

அதிரைநிருபர் பதிப்பகம் | June 04, 2013 | , , , , ,

பெருந்தலைவர் காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த வேளையில் 1967 தேர்தலில் அடித்த தேர்தல் அலை ஆடிக்காற்றில் ஒரு சாதாரண மாணவரால் சொந்தத் தொகுதியிலேயே  தோற்கடிக்கப் பட்டார். (இதற்குரிய தண்டனையைத்தான் இன்றைய தமிழகம் அனுபவிக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் விமர்சிக்கிறார்கள்). அண்ணாவுடைய மறைவுக்குப் பிறகு கருணாநிதி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப் பட்ட  வரலாற்றுக் களங்கத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.  காந்தி சொன்ன, அண்ணா வலியுறுத்திய இராஜாஜி போன்றவர்கள் எதிர்த்த உயரிய   கொள்கை  தமிழ்நாட்டில் தனது உயிரை விட்டது. 

தமிழ்நாட்டில் தேர்தலில் தோற்றாலும் மத்தியில் காங்கிரஸ் கட்சியே அரசாண்டு கொண்டு இருந்தது. ஆனால் அலகாபாத் உயர் நீதிமன்றம், இந்திராகாந்தி ரேபரேலி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று  அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து இந்திரா காந்தி விஸ்வரூபம் எடுத்தார். காங்கிரசின் மூத்த தலைவர்களான காமராஜர், நிஜலிங்கப்பா ஆகியோரின் அறிவுரையை மீறி அவர் எடுத்த நடவடிக்கைகள் பல அரசியல் மாற்றங்களைக் கொண்டுவந்தன. 

ஜனாதிபதியாக சஞ்சீவ ரெட்டியை கொண்டுவருவதா அல்லது வி. வி. கிரியைக் கொண்டுவருவதா என்ற சர்ச்சையில் கட்சி கட்டுப்பாடுகளை மீறி மனசாட்சிப்படி அவரவர் வாக்கு அளிக்க வேண்டுமென்ற புதிய சித்தாந்தத்தை இந்திராகாந்தி முன்வைத்ததே  கட்சி உடைய உடனடிக் காரணமாயிற்று. 

காங்கிரஸ் கட்சி என்கிற பாரம்பரியக் கட்சி இந்திரா காங்கிரஸ் என்றும் , ஸ்தாபனக் காங்கிரஸ் என்றும் உடைந்தது. ஸ்தாபனக் காங்கிரஸ்  சிண்டிகேட் காங்கிரஸ் என்றும் அழைக்கப்பட்டது. இரட்டைக் காளை பூட்டிய காங்கிரசின் தேர்தல் சின்னம் முடக்கப்பட்டு  பசுவும்  கன்றாகவும், இராட்டையாகவும் வழங்கப் பட்டது. பாராளுமன்றம் கலைக்கப் பட்டு தேர்தல் வந்தது. 

நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சியைத் தருக! என்று ‘கூவி’ கருணாநிதி இந்திராகாந்தியுடன் தேர்தல் கூட்டு வைத்ததுடன் இன்னும் ஆயுள் இருந்த தமிழக சட்டமன்றத்தையும் கலைத்ததால்   1971- ல்  ஒரே நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் தமிழக சட்டமன்றம் இரண்டுக்கும் தேர்தல் நடைபெற்றது. காமராசரும் இராஜாஜியும் மாற்று அணியில் இந்திரா மற்றும் கருணாநிதிக்கு எதிராக கைகோர்த்தனர். தேர்தல்  முடிவுகள் வந்தன. திமுக இந்திரா கூட்டணிக்கு மாபெரும் வெற்றி. காமராசர் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசுக்கு பாராளுமன்றத்தில் ஒரு இடம் கூட தமிழ் நாட்டில் இருந்து கிடைக்கவில்லை. இந்த வெற்றியை எம் ஜி யாரின் உழைப்புக்கு காணிக்கையாக்குகிறேன் என்றார் கருணாநிதி. 

நாகர்கோயிலில் ஒரு இடைத்தேர்தல் வந்ததால் காமராஜர் அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்று டில்லி பாராளுமன்றம் சென்றார். நேரு இறந்த பின் லால்பகதூர் சாஸ்திரியை பிரதமராக்கியவர், லால்பகதூர் சாஸ்திரி இறந்ததும் மொரார்ஜி தேசாயின் எதிர்ப்பை மீறி இந்திராகாந்தியை பிரதமராக்கியவர் கிங் மேக்கர் என்று புகழப்பட்ட காமராசர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக அமர்ந்தார். காமராஜர் தனது தோல்வியை மிகச் சாதாரண அரசியல் நிகழ்ச்சியாகக்  கருதி ஒதுக்கிவிட்டார். வேறு யாராக இருந்தாலும், ”தமிழ்நாட்டு மக்கள் நன்றி கெட்டவர்கள், இந்த மக்களின் நல்வாழ்விற்காகத் தானே நான் நேற்று வரை பாடுபட்டேன்” என்று புலம்பியிருப்பார்கள். அரசியல் துறவறம் பூண்டிருப்பார்கள். அல்லது தன்னைத் தோற்கடித்த கட்சியின் மீது சதாசர்வகாலமும் ஏதாவது குற்றம், குறை கூறிக் கொண்டே காலத்தை ஓட்டியிருப்பார்கள். தோல்வியை ஒப்புக்கொண்டு அமைதியாக இருந்தார் காமராஜர். அதுவே அவரது பெருந்தன்மைக்கு சான்றானது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக்க் காமராஜர் டெல்லி வீட்டில் இருந்து வந்தார். 1966 – ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 7 – ஆம் தேதி, டெல்லியில் பசுவதைத் தடுப்புக் கிளர்ச்சி நடந்தது.

காமராஜர் டெல்லி வீட்டில்தான் இருந்தார். கிளர்ச்சியாளர்கள் காமராஜர் வீட்டைக் கற்களால் வீசித் தாக்கினார்கள். காவலாளியை அடித்துத் தள்ளிவிட்டு உள்ளே நூழைந்தார்கள். வீடு உள்தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. ஆனால் ஜன்னல்கள் திறந்து இருந்தது.

காமராஜர் மேல் வெறுப்பும், பொறாமையும் கொண்ட அந்தக் கும்பல் ஜன்னல் வழியே தீப்பந்தங்களை வீசினார்கள். வீடு தீப்பிடித்து எரிந்தது. மலை குலைந்தாலும் மனங்குலையாத காமராஜர் வீட்டிற்குள் தான் இருந்தார். படுக்கை மெத்தை தீப்பிடித்தும்கூட அவர் அஞ்சவில்லை. அலறவில்லை. பின்புறக்கதவைத் திறந்து கொண்டு காமராஜர் வெளியேறிவிட்டார்.

இந்தச் சம்பவம் டெல்லியில் காட்டுத்தீபோல் பரவியது. மறுநாள் பார்லிமெண்டிலும் இந்த நிகழ்ச்சி குறித்துக் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. ஆனால் காலமெல்லாம் பற்பல எதிர்ப்புகளைச் சந்தித்துச் சகித்துக் கொண்டு மௌனமாக இருந்து வெற்றி கண்டவர் ஆயிற்றே காமராஜர். யாரோ வேண்டாதவர்கள் செய்த இந்த நிகழ்ச்சிக்காக அவர் வேதனைப்படவில்லை. அதை அரசியலாக்க வேண்டாமென்று கூறிவிட்டார். இன்று இப்படி நடந்து  இருந்தால் பாராளுமன்றம் பலநாட்களுக்கு முடக்கப் பட்டு இருக்கும். 

அண்ணா அமெரிக்கா சென்று இருந்தபோது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த லிண்டன் ஜான்சனை சந்திப்பதற்காக சென்றாராம். அங்கே பலமணி நேரம் காக்க வைக்கபட்ட பின்னர் கூட அண்ணாவுக்கு அவரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லையாம். பின்னர் தமிழகம் திரும்பிவிட்டார்.

சில ஆண்டுகள் பின்னர் லிண்டன் ஜான்சன்  இந்தியாவுக்கு விஜயம் செய்தாரம். அவர் சந்திக்க விரும்புபவர்கள் பட்டியலில் முதலில் இடம்பிடித்த பெயர் கர்மவீரர் காமராஜர். அப்பொழுது அமெரிக்க ஜனாதிபதியுடன் நின்று புகைப்படம் எடுக்கவே பல இந்தியத் தலைவர்கள் விரும்பினார்கள். ஆனால் காமராஜர் தன்னால் அவரை சந்திக்க முடியாது என்று மறுத்துவிட்டாராம்.

எல்லோருக்கும் வியப்பு... ஏன் என்று வினவியபொழுது அவர் சொன்ன பதில் ''ஒரு தமிழனான அண்ணாவைச் சந்திக்காமல் அவமானப்படுத்திய அவரைச் சந்திக்க என்னால் முடியாது. ஏன் என்றால் நானும் ஒரு தமிழன்.." என்றாராம். அதனால் தான்  அவரைப் பச்சைத் தமிழன் என்று தமிழர்கள் அனைவரும்  பெருமையாகப் பேசுகின்றர்கள். 

அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும் தமிழன் ஒருவனின் கவுரவம் என்று வரும்போது விட்டுக்கொடுக்காத அன்றைய தலைவர்களை காவிரிப் பிரச்னை உட்பட்ட ஜீவாதாரப் பிரச்னைகளுக்காககூட ஒன்றாக தலைநகர் செல்ல விரும்பாத இன்றைய தலைவர்களோடு ஒப்பிடக்கூட முடியவில்லை.  இறப்பு முதலிய நிகழ்வுகளில் கூட ஆளும் கட்சியினர் போகும் வீட்டுக்கு எதிர்க் கட்சியினரும் எதிர்க் கட்சியினர் போகும் வீட்டுக்கு ஆளும் கட்சியினரும் போய் துக்கம் விசாரிப்பது கூட அற்றுப் போய்விட்டது. தப்பித்தவறி யாராவது சொந்தக் காரணங்களுக்காக போனால் அவர்களின் பதவி பறிக்கப்படுகிறது. அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்வார்கள். அது உண்மைதானோ என்று இன்றைய தமிழ்நாட்டைப் பார்த்து உறுதியுடன் தெரிந்து கொள்ளலாம் போல இருக்கிறது.  

காமராசர் முதலமைச்சராக இருந்த போது அவரின் தாயார் சிவகாமி அம்மையார் சென்னையில் தன் மகனுடன் சேர்ந்து இருக்க ஆசைப்பட்டு காமராசரிடம் தெரிவித்தார். அதற்கு அவர் நீங்கள் என்னுடன் இருக்க வந்தால் நமது உறவினர்களும் இங்கு வந்து இருக்க ஆசைப்படுவார்கள். அதனால் எனக்கு கெட்டப்பெயர் தான் உருவாகும் என்று கூறி தாயாரின் விருப்பதை ஏற்க மறுத்தார். சில மாதங்களுக்குப் பிறகு சிவகாமி அம்மையார் காமராசரிடம் மேலும் ஒரு கோரிக்கையை வைத்தார். "நீ முதலமைச்சராக ஆகிவிட்டதால் என்னைப் பார்ப்பதற்கு நம் வீட்டிற்கு பலர் வருகிறார்கள். அவர்களுக்கு கலர் சோடா போன்றவற்றை வாங்கித் தர வேண்டிய உள்ளது. எனவே மாதந்தேறும் ரூ.150 ரூபாயை அனுப்பிவை என்றார். அதற்கு காமராசர் மாதம் ரூ.120 ரூபாயை அனுப்புகிறேன், அதைவிட ஒரு ரூபாய் கூட அதிமாக தரமுடியாது. கொடுக்கிறதையே சிக்கனமாகச் செலவு செய்து கொள் என்று இந்தக் கோரிக்கையையும் நிராகரித்தார்.  இது நடந்தது நேற்று! இன்று என்ன நடக்கிறது? நாளை என்ன நடக்கும்?

ஒருமுறை , கருணாநிதிக்கும் திரு. கருத்திருமனுக்கும் சட்டமன்றத்தில் வாக்குவாதம் நடைபெற்றது. வணிகர்கள் நலம் மற்றும் அவர்களுக்குரிய சலுகைகள் பற்றிய விவாதம் அது.     அந்த விவாதத்தில் காமராஜர் பெயரை கருத்திருமன் இழுத்தார். காமராஜர் சார்ந்திருக்கும் சாதி என்பதால் நாடார்களுக்கு இந்த அரசு எந்த நன்மையையும் செய்ய மறுக்கிறது என்று கூறினார். உடனே கருணாநிதி தனக்கே உரிய பாணியில் “ எதிர்க் கட்சித்தலைவரே சொல்லிவிட்டார் நாங்கள் நாடாருக்கு ஒன்றும் செய்யவில்லை என்று. அதை மனதார ஒப்புக் கொள்கிறேன்.  இந்த அரசு நாடாருக்கு ஒன்றும் செய்யாது தன்னை நாடுவோருக்கே எல்லாம் செய்யும் “ என்று கூறி தூள் கிளப்பினார். 

இதேபோல் மற்றொருமுறை கருணாநிதி  ஒரு மானியக் கோரிக்கையில் விவாதம் நடைபெற்றது. எதிர்க் கட்சி உறுப்பினர் “ முதல்வர் தனது பெயரிலேயே கருணை என்றும்  நிதி என்றும்  வைத்து இருக்கிறார். ஆனால் என் தொகுதிக்கு கருணை காட்டி  நிதி   ஒதுக்க மறுக்கிறார் ” என்று கூறினார். உடனே கருணாநிதி எழுந்து “ எதிர்க் கட்சி உறுப்பினர் சொல்வது மிகவும் சரிதான். என் பெயரில் கருணையும் இருக்கிறது – நிதியும் இருக்கிறது. கருணை மூன்று எழுத்தாக நிறையவே   இருக்கிறது. ஆனால் நிதி இரண்டே எழுத்தாக குறைவாக இருக்கிறது. இதை உறுப்பினர் புரிந்து கொள்ளவேண்டும்” என்று சொன்னார். எதிர்க்கட்சி உறுப்பினர்  உட்பட எல்லோருக்கும் இத்தகைய சொற்சுவை வழங்கப் பட்டது. 


சிண்டிகேட் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக பாராளுமன்றத்தில் காமராஜர் பதவி வகித்துக் கொண்டிருந்தபோது இந்தி தேசிய மொழியாகும் பிரச்னை ஏற்பட்டது. இந்திய தேசிய மொழியாக ஆக்கும் சட்ட வரைவு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஓட்டெடுப்புக்கு நாள் குறிக்கப் பட்டது. காமராசரின் நிலை இருதலைக் கொள்ளி         எறும்பானது. மசோதாவை ஆதரித்தால் தமிழ்நாடு கொந்தளிக்கும் ஆதரிக்காவிட்டால் இந்திவாலாக்கள் நிறைந்த சிண்டிகேட் காங்கிரசில் குழப்பம் வரும். இந்த இக்கட்டான நிலையைத் தவிர்க்க ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் காமராசர் தவிர்த்து விட்டார். அதே போல் இருபத்தி ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த தி. மு. க  தரப்பிலும் இரண்டு பேரைக் காணவில்லை. 

இந்த நிகழ்வின் எதிரொலி தமிழக சட்டமன்றத்திலும் கேட்டது. காமராசர் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் தமிழுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக தி மு க தரப்பில் பேசப்பட்டது. அப்போது கருத்திருமன் எழுந்து , “ காமராசர் கலந்து கொள்ளாததை மட்டும் குறை கூறும் நீங்கள் உங்கள் கட்சி உறுப்பினர்களில் இரண்டு பேர்  கலந்து கொள்ளாமல் எங்கே போனார்கள் என்று கண்டுபிடித்தீர்களா?” என்று ஆவேசமாகக் கேட்டார். உடனே கருணாநிதி அமைதியாக எழுந்து சொன்ன வார்த்தைகள் விவாதத்தின் சூட்டைக் குறித்து சுகத்தை கொடுத்தது. கருணாநிதி சொன்னார் “ எங்கள் கட்சி உறுப்பினர்கள் இருவர் எங்கே சென்று இருந்தார்கள் என்று கண்டு பிடித்துவிட்டோம். அவர்கள் ஒளிந்து கொண்டிருந்த காமராசரைத் தேடிக் கண்டுபிடிக்கப் போயிருந்தனர் “ என்று நகைச்சுவையாகச் சொன்னார். தனது கட்சி உறுப்பினர்கள் செய்த தவறை தனது நாவன்மையால் சமாளிப்பது கருணாநிதிக்கு கைவந்த கலை. 

இன்ஷா அல்லாஹ் தொடரும்.
முத்துப் பேட்டை P. பகுருதீன். B.Sc.,

36 Responses So Far:

M.B.A.அஹமது said...
This comment has been removed by the author.
M.B.A.அஹமது said...
This comment has been removed by the author.
M.B.A.அஹமது said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

உண்மை சொல்லும் உண்மைகள் . உண்மை சொல்ல போட்டிகள்.

நண்பர் பகுருதீன் அவர்களிடம் சற்று முன் பேசினேன். ஐந்து வாரங்கள் வரவிருந்த இந்தத் தொடர் இன்ஷா அல்லாஹ் இன்னும் பல வாரங்கள் எழுதலாமென்று சொல்கிறார். வரவேற்பு அப்படி.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நம்மளும் நம்மை ஆள்கிறோம் என்று சொல்பவர்களும் அவசியம் அறிய வேண்டிய நல்ல அரசியல் வரலாறு.
தொடர் தொடர்ந்து தர வரவேற்பும் துஆவும்.

----------------------------------------------

ரஜப் பிறை 24 /1434

Unknown said...

அதிரையின் நீர் ஆதாரம் 'மஹாராஜா சமுத்திரம் அணைக்கட்டு' சிஎம்பி வாய்க்கால் எல்லாம் காமராஜர் கொண்டு வந்த நல்ல திட்டங்கள், நன்றியுடன் நினைவு கூற்த்தக்கவை

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இ.அ.காக்கா:

"UNMAI" சொல்வதெல்லாம் உண்மை என்று நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான், ஆனால் அந்த UNMAI யைச் சொல்லிவிட்டால் (யாரென்று) இந்த உண்மை செம்மையாக இருக்கும் !

கருத்தாடலுக்கு வலுசேர்க்கும் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

முதலில் அற்புதமான வரலாற்று தொகுப்புடன் நிஜங்களை சொல்லும் பகுருதீன் காக்கா அவர்களுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர், இன்னும் உங்களின் தொடர் நீளும் என்றதொரு நல்ல செய்தியும் இனிக்கிறது.

அந்த கருணாநிதி யின் 3:2 டிவைட் அண்ட் ஷேர் பாலிஷி அருமை ! அவரோட டீலிங்கே தனி ! அதெப்படி காக்கா பிச்சளம் பெருகியதும் அவரின் ஆழமான அறிவாற்றல் அருகிவிட்டது ! இது அவருக்கு மட்டுமா இல்லை எல்லோருக்குமா ?

காமராஜரை இ.காங்கிரஸ் இன்னும் எந்த மூஞ்சியை வைச்சுகிட்டு கொண்டாடுறாங்க !?

குட்டையை தானே குழப்பி விட்டுட்டு, கச்சல் கட்டும் நம்ம தலைவரும் இருக்காரே !

M.B.A.அஹமது said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

தம்பி அபூ இப்ராஹீம்!

உண்மை யாரென்ற உண்மை நீங்களறிந்த உண்மை என்று உண்மையிலேயே நான் நினைத்திருந்தேன். உண்மையில் ஏன் உண்மைக்கு மாறாக ஒரு தோற்றம் அதுவும் இந்த தளத்தில் என்று உண்மையிலேயே புரியவில்லை.

உண்மை வெளிச்சத்துக்கு வரட்டும். வரும். வரணும். வரவேற்கிறோம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நல்ல அருமையான அரிய பல தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்ளும் பகுருத்தீன் காக்காவிற்கு வாழ்த்துக்கள்.

உலக வரலாற்றில் எந்த ஒரு தலைவனும் இவ்வளவு காலம் பொதுப்பணியில் பணியாற்றிய வரலாறு கிடையாது. பல தொலைநோக்கு திட்டங்களை தீட்டி அதை செயல்படுத்திக்காட்டிய தலைவர். அவர் நீடூழி பல்லாண்டு வாழ்க. அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கவில்லையெனில் அவ்விருதிற்குத்தான் அவமானம் என்ற குரல்கள் நேற்று 90வது பிறந்த நாள் காணும் அத்தலைவருக்கு தோழமைக்கட்சிகளின் தலைவர்கள் புகழாரம் நல்லாவே சூட்டினார்கள். இப்படி இருக்க, கச்சத்தீவை இலங்கைக்கு தன்னுடைய ஆட்சிகாலத்தில் தாரை வார்க்க உடன்படிக்கை போட்டு நிறைவேற்றப்பட்டதால் பிற்காலங்களில் எப்படி தமிழகமும், அதன் மீனவர்களும் அல்லோலப்பட்டு அணுதினமும் அவதிப்பட்டு நிற்பர் என இத்தலைவருக்கு தெரியாமல் போனது ஏனோ?

க‌ண்ணிய‌ம் மிகு காயிதே மில்ல‌த் இஸ்மாயில் சாஹிப் அவ‌ர்க‌ள் இறுதி நாட்களில் இந்த‌ சிறுபாண்மை ச‌முதாய‌த்தை த‌ன் கைக்கரத்தை பற்றி பிடித்துக்கொண்டு அத‌ற்கு கடைசி வரை பாதுகாவ‌ல‌ராக‌ இருக்கும் ப‌டி வேண்டிக்கொண்ட‌தாக‌ கூறும் இத்த‌லைவ‌ர் "யாரும் எதிர்பாராம‌ல் ந‌டாத்த‌ப்ப‌ட்ட‌ கோவை க‌ல‌வ‌ர‌ங்க‌ளுக்கும் அத‌ற்குப்பின் வ‌ந்த‌ குண்டு வெடிப்புக‌ளுக்கும் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ இந்த‌ ச‌முதாய‌த்தின் இளைஞ‌ர்க‌ள் அநியாய‌மாக‌ ப‌ழிசும‌த்த‌ப்ப‌ட்டு சிறையில் அடைக்க‌ப்ப‌ட்டு இன்று வ‌ரை வாடிக்கொண்டிருக்க‌" அச்ச‌முதாய‌ இளைஞ‌ர்க‌ளை க‌ருணை அடிப்ப‌டையில், ந‌ன்ன‌டத்தை அடிப்ப‌டையில், நேரு, காந்தி, இந்த‌ அன்புத்த‌ம்பியின் அண்ணா பிற‌ந்த‌ நாட்க‌ளில் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ விடுத‌லை செய்ய‌ அனும‌திக்காத‌து ஏன்? அவ‌ர்க‌ள் கோவை க‌ல‌வ‌ர‌ங்க‌ளுக்குப்பின் உங்க‌ளை தொட‌ர்பு கொண்டு உத‌வி கேட்டு நின்ற‌ பொழுது அவ‌ர்க‌ளை அல‌ட்சிய‌ப்ப‌டுத்தி அவ‌ம‌தித்து வெளியேற்றிய‌து ஏன்?

அந்த‌ம்மாவை ச‌ட்ட‌ச‌பையில் அமைச்ச‌ர்க‌ளும், ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் புக‌ழார‌ம் சூட்டினால் அது புக‌ழ்ச்சி, அடிமைத்த‌ன‌ம். உங்க‌ளை வானுய‌ர யாரும் புக‌ழ்ந்து த‌ள்ளினால் அது ம‌ட்டும் த‌ன் காதுக‌ளில் தேனை ஊட்டுவ‌து போல் இருப்ப‌து ஏன்?

நீங்க‌ள் ஒரு ந‌ல்ல‌ எழுத்தாள‌ர், க‌விஞ‌ர், க‌லைஞ‌ர், ப‌டைப்பாளி, வ‌ச‌ன‌ க‌ர்த்தா, வார்த்தை ஜால‌ வித்த‌க‌ர், எல்லோரையும் அர‌வ‌ணைத்து செல்ல‌க்கூடிய‌வ‌ர், அர‌சிய‌ல் ஞானி.....நிச்ச‌ய‌ம் ஒத்துக்கொள்கிறோம். உங்க‌ள் க‌ட்சியில் இருக்கும் அந்த‌ வ‌ய‌தான‌ பெண்ம‌ணி (நூர்ஜ‌ஹான் என‌ நினைக்கிறேன்) உங்க‌ள் காலைத்தொட்டு கும்பிட்டு உங்க‌ளுடைய‌ 90வ‌து பிற‌ந்த‌ நாள் வாழ்த்து கூறிச்சென்ற‌தை நேற்று உங்க‌ள் தொலைக்காட்சியில் க‌ண்டு ச‌ந்தோச‌ம‌டைவ‌த‌ற்கு ப‌தில் வேத‌னையேப்ப‌ட‌ வேண்டியிருந்த‌து. க‌ண்ணிய‌ மிகு காயிதே மில்ல‌த் கால‌ங்க‌ளிலிருந்து காத‌ர் முகைதீன் வ‌ரை உள்ள‌ இன்றைய‌ கால‌ம் வ‌ரை அந்த‌ ச‌முதாய‌த்தைப்ப‌ற்றி நீங்க‌ள் என்ன‌ தான் தெரிந்து கொண்டிருக்கிறீர்க‌ள்? நினைத்துக்கொண்டிருக்கிறீர்க‌ள்?

என்று நீங்க‌ள் அர‌சிய‌ல் சூழ்நிலை, காலத்தின் கட்டாயம் என்று சொல்லி ம‌த்தியில் ம‌த‌வாத‌ பார‌தீய‌ ஜ‌ன‌தாவுட‌ன் கைகோர்த்தீர்க‌ளோ அன்று க‌ருப்பு, சிவ‌ப்பில் க‌ல‌ந்த‌ காவி இன்றும் பிரிய‌ ம‌ன‌மின்றி ப‌ல‌ இட‌ங்க‌ளில் அப்ப‌டியே த‌ங்கி விட்ட‌து. மஞ்சளாய் அது உங்க‌ள் தோளிலும் ஏறி விட்ட‌து.

உங்க‌ள் ம‌க‌னுடைய‌ கால‌மாவ‌து சுத்திக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ மாச‌ற்ற‌ கால‌மாக‌ இருக்க‌ட்டும்........

Anonymous said...

ஜனாப் பகுருதீன் அவர்களைஎன் myத்துனர் இப்ராகிம் அன்சாரி எனக்கு அறிமுகம் செய்த போது அவர்கள் கொஞ்சம் 'உம்' என்று இருப்பதுபோல் தோன்றியது.

''நிறைகுடம் தழும்பாது''என்று இன்று அறிந்தேன். கடந்த கால அரசியல் காற்றின் குளிரும் வெப்பமும் உங்கள் வரிகளில் உணர முடிகிறது.

உங்கள் ஊர் முத்துப்பேட்டை என்பதால் மூச்சை அடக்கி மூழ்கி எடுத்த வரலாற்று முத்துக்களை கோர்த்து இளய தலைமுறைக்கு முத்தாரம் சூட்டுவதற்கு எங்கள் நன்றி-யும் பாரட்டும் உங்களை சேரட்டும்.

1967 தேர்தலில் பெரும் தலைவர் காமராஜரும் காங்கிரசும் தோற்றபோது அதை ''கை'' தட்டி கொண்டாடியவர்களில் நானும் ஒரு வன். அப்போது முதல்வராக இருந்த பக்தவத்சலம்'' இந்த நாட்டில் நச்சு கிருமி பரவி விட்டது'' என்றார்.

அந்தவார்த்தை இன்று மெய்யாகி மெய்யாகி மெய்யாகி மெய்யாகிப் போனதே என்று பல கோடி கண்கள் கண்ணீர் துளிகளை சிந்திக் கொண்டு இருக்கிறது.

முஹமமதுபாரூக். அதிராம்பட்டினம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n): தாதாவுக்கே அட்வைஸா ! தாத்தா இந்த வயதிலும் 'தா' 'தா' என்றுதானே இருக்கிறார் !

இதைச் சொன்னதற்காக எந்த தாதாவும் தேடி வராமல் இருந்தால் சரி ! :)

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

நல்ல அருமையான அரிய பல தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்ளும் பகுருத்தீன் காக்காவிற்கு வாழ்த்துக்கள்.

உண்மை சொல்லும் உண்மைகள் அவருக்கும் எம்முடைய வாழ்த்துக்கள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...


// m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…
MSM(n): தாதாவுக்கே அட்வைஸா ! தாத்தா இந்த வயதிலும் 'தா' 'தா' என்றுதானே இருக்கிறார் !//

இது அட்வைஸ‌ல்ல‌....க‌ட‌ந்த‌ காலத்தில் கண்ட‌ வேத‌னையின் இன்றைய‌ கால‌ விசும்ப‌ல்.....

Yasir said...

நல்ல அருமையான அரிய பல தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்ளும் பகுருத்தீன் காக்காவிற்கு வாழ்த்துக்கள்.

ZAKIR HUSSAIN said...

.// இந்த அரசு நாடாருக்கு ஒன்றும் செய்யாது தன்னை நாடுவோருக்கே எல்லாம் செய்யும் “ என்று கூறி தூள் கிளப்பினார். //

இப்படியே அடுக்கு மொழி பேசியே இந்த ஆள் பேர் வாங்கி விட்டார். இதையெல்லாம் ரசித்து பாராட்டியே தமிழ்நாட்டுக்காரர்கள் ஏமாந்தவர்களாகிவிட்டனர்.

எது தமிழ் மொழிக்கு பாடுபடுவது / எவன் தமிழனை வாழ வைக்க முடியும் என்ற அடிப்படை அறிவையே துளிர்க்க விடாமல் இவர்கள் போன்றவர்கள் "சிறப்பாக" பேசி காலம் தள்ளி விட்டார்கள்.

sabeer.abushahruk said...

அற்புதமான கதைசொல்லியின் திறன் காக்காவிடம் கொட்டிக்கிடக்கிறது. இந்த வாரம் அவ்வளவுதானா என்று ஏங்கவைக்கின்றன விவரிக்கும் வரலாற்று நிகழ்வுகளின் சுவாரஸ்யம்.

சட்டசபையைக் கருத்தரங்கமாக சிறப்பிக்கும் திறமை கலைஞருக்கு உண்டு என்றால் அம்மாவின் பக்திக்கூடமாக மாற்றும் திறனும் இக்கால முதல்வருக்கு உண்டு.

எனக்கு ஓட்டுப்போட்டு சட்டசபைக்கு அனுப்புங்களேன், ப்ளீஸ். நம்ம பங்குக்கு சட்டசபையைக் கவியரங்கம் ஆக்கிடுவோம்.

முடிவற்ற அத்தியாயங்களுடன் இந்தப் பொக்கிஷத் தொடர் தொடர வாழ்த்துகள்.

நாடுவோர் சார்பில், சபீர்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

Shameed said...

இன்னும் இந்த தொடர் நீழும் என்ற உண்மை தெரிந்ததில் மகிழ்ச்சி மேலும் அந்த உண்மை யாரென்று தெரிந்தால் உண்மையில் மகிழ்ச்சி

உண்மையை சொல்லிடுங்க உண்மை

M.B.A.அஹமது said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி உண்மைக்கு, ( குறைந்த பட்சம் நீங்கள் தம்பி என்று புரிந்தது இப்படி ஒவ்வொரு முடிச்சாக அவிழட்டும். )

உண்மை கூறும் உண்மைகளில் தவறு இருப்பதாக சொல்லவில்லை. பாராட்டுகிறேன். ஆனால் உண்மைக்கு மை இருட்டு வேண்டாம் உண்மைகள் வெளிச்சத்துக்கு வர வேண்டும்.

வரவேற்கிறோம்.

Ebrahim Ansari said...

உண்மை அவர்களுக்கு,

அலைக்குமுஸ்ஸலாம்.

M.B.A.அஹமது said...
This comment has been removed by the author.
M.B.A.அஹமது said...
This comment has been removed by the author.
தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அருமையான வரலாற்று தொகுப்பு. திராவிட கட்சிகள் ஊடகங்களை தங்கள்வசம் வைத்துக்கொண்டதால் அரசியலில் நேர்மையானவர்கள் பற்றிய செய்தி ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு தெரியவில்லை.

தொடருங்கள் இது போன்ற அறியாத வரலாற்று தகவல்களுடன்..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

புனைப்பெயரில் எழுதுபவர்களுக்காக இந்த ஹதீஸை பதிவு செய்கிறேன்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் இரட்டை முகத்தான் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஷஹீஹ் புகாரி. 42 Volume :7 Book :93.


தங்களை தளநெறியாளரிடம் அறிமுகம் செய்துவிட்டாவது எழுதுங்கள் "உண்மை" என்ற பெயரில் எழுது அன்பான சகோதரரே.

புனைப்பெயர் பிடிவாத நிழலோடு உரையாடுபவர்களுடன் உரையாடி எந்த பிரயோஜனமும் இல்லை என்பது அனுபவபூர்வமான உண்மை. அறிமுகமில்லாதவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமலிருப்பதே சரியான அனுகுமுறை என்பது என் தனிப்பட்ட கருத்து.

Ebrahim Ansari said...

தம்பி ஜாகிர் அவர்கள் தந்துள்ள கருத்துபற்றி

வார்த்தை விளையாட்டுக்களில் மயங்கி -அதுவே அறிவின் உச்ச கட்டம் - ஆற்றலின் புகழ் என்று நம்பி பலர் காலடியில் விழுந்து கிடக்கிறார்கள். இவர்களைக் கட்சித்தொண்டர்கள் என்பதைவிட ரசிகர்கள் என்றே கூற வேண்டும்.

ஒரு முறை சவரத்தொழிலாளர்கள் மாநில மாநாடு நடத்தினார்கள். அப்போது கருணாநிதி முதல்வர். அந்த மாநாட்டில் அவர் பேசியது " நீங்கள் வேறு நான் வேறு அல்ல. நான் உங்களில் ஒருவன். நீங்கள் கத்தியானால் நான் கிண்ணமாவேன். நீங்கள் சீப்பானால் நான் சோப்பாவேன்" என்று அவர்களுக்கு சோப்பு போட்டார்.

மற்றொரு முறை முன்னாள் சபாநாயகர் தமிழ்க் குடிமகன் தலைமையில் யாதவ சங்கத்தினர் மாநாடு போட்டார்கள். அந்த மாநாட்டில் அவர் பேசினார்

" நானும் யாதவன் தான். பொய் சொல்லத் தெரியாதவன்; வாக்குமாறத் தெரியாதவன்; துரோகம் செய்யத் தெரியாதவன்; எதிர்க்ளைக் கண்டுபிடிக்கத் தெரியாதவன் ; நாம் வளர்த்தகிடா மார்பில் பாயும் என்று தெரியாதவன் " இப்படி .

இப்படியெல்லாம் கவர்ச்சியாகப் பேசியே உலகக் கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார்கள்.

நண்பர் பகுருதீன் இன்னும் பலவற்றை தோலுரித்துக் காட்ட இருக்கிறார் என்பதே இன்று பஜ்ர் தொழுகையில் அவரை சந்தித்த பிறகு நான் தெரிந்து கொண்டது. காத்திருப்போம்.

ஆனால் பின்னூட்டப் பகுதியில் உண்மையைத் தொடர்ந்து பொய் ஒன்று ஸலாம் சொல்லி வந்திருக்கிறது. இரண்டு மூஹ்மின்களுக்கும் அவர்களின் சலாத்துக்கு பதில் சொல்லிவிடுவோம். அலைக்குமுஸ் ஸலாம்.

ஆனால் இப்படியே உணமை , பொய், அகம் , புறம் , வடக்கு, தெற்கு, கத்தரிக்காய் , முருங்கைக்காய் என்றெல்லாம் பெயரிட்டு கருத்துக்கள் வரும்.

நண்பர்கள் கருத்திடுவதை வரவேற்கலாம்.

ஆனால் புனை பெயர்களில் கருத்திடுவதை அனுமதிப்பது பற்றி நெறியாளர் அவர்கள் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.

இது நமது ஊர் சார்ந்த பதிவர்களை ஊக்குவிக்கும் தளம். சில பதிவுகள் மற்ற தளங்களில் அவைகளின் தன்மை சார்ந்து , அனுமதி பெற்றோ பெறாமலோ வெளியிடப்படுகின்றன. தம்பி சபீர் போன்றவர்கள் மற்ற தளங்களில் வெளியிடுவதை நம்முடனும் அன்புடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இந்த தளத்தில் பதிவாளர்களாக இருந்தாலும் கருத்திடுவோராக இருந்தாலும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதே ஆரோக்கியமான செயலாக இருக்கும் என்பது எனது அன்பான தாழ்மையான கருத்து.

அதே நேரம் உண்மை என்ற பெயரில் எழுதும் தம்பி விஷயவாதியாகத் தோன்றுகிறது. அவர் தனது உண்மைப் பெயரில் தனி ஆக்கங்களை அனைவரும் அறியப் பதியலாம். வரவேற்கிறேன்.

Anonymous said...

UNMAI என்ற பெயரில் கருத்திடும் சகோதரரை சுய அறிமுகம் கொள்ள வேண்டுகிறோம் ! உங்களின் கருத்தாடலின் நம்பகத் தன்மையை அது வலுப்படுத்தும். இனி இந்தப் பெயரில் பதியும் கருத்துகள் அனைத்தும் மட்டுறுத்தலுக்குட்படுத்தப்படும்.

இன்று அதிகாலை பதிக்கப்பட்ட "பொய்" என்ற பெயரில்"அதிரையைச் சார்ந்த மூஹ்மின்" என்று அறிமுகத்துடன் இருந்த கருத்தை நீக்கம் செய்து விட்டோம்.

வேண்டுகோள் : நல்லதைச் சொல்ல முகமூடி தேவையில்லை, சொந்தப் பெயரில் எழுதுவதில் அச்சமிருந்தால் அதிரைநிருபர் தளநிர்வாகத்திற்கு தங்களை (editor@adirainirubar.in) அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்கள் அனுமதிக்கும் பட்சத்தில் தொடருங்கள் உங்களின் விபரங்கள் நீங்களாக வெளிக்காட்டாத வரை வெளிக்கொணரப்பட மாட்டாது.

சொல்வதெல்லாம் நல்லவை செயல்களெல்லாம் கெடுதல் என்ற போக்குடையவர்களைப் போன்ற முகமூடியும் அவசியமில்லை.

"உங்களுக்கிடையே அழகிய பெயர்களைக் கொண்டு ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்ளுங்கள்" என்ற நபிமொழிக்கு ஏற்ப செயல்படுவோம் இன்ஷா அல்லாஹ் !

M.B.A.அஹமது said...
This comment has been removed by the author.
M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இ.அ. காக்கா, அஸ்ஸலாமு அலைக்கும்.
நீங்க உண்மைகளோடும், பொய்யோடும் பேசிக் (கருத்திட்டு) கொண்டது சுவராஸ்யமாய் இருந்தது. இதுகளெல்லாம் ஆணா பெண்ணா என்பதும் மர்மமே!

M.B.A.அஹமது said...
This comment has been removed by the author.
M.B.A.அஹமது said...
This comment has been removed by the author.
M.B.A.அஹமது said...
This comment has been removed by the author.
shamsul huq said...

யார் இந்த அஹமது

Ebrahim Ansari said...

நல்ல அபூபக்கர் அவர்கள் கேட்பது யார் இந்த அஹமது? அவரது முகமது ( முகம் + அது)தெரிந்தால்தான் சொல்ல முடியும்.

Ebrahim Ansari said...

நண்பர் பகுருதீன் அவர்களின் ஏற்புரை - என் மூலமாக.

கருத்துக்கு திரை போடாமல் கருத்துரை தந்துள்ள அத்தனை நண்பர்களுக்கும் அன்பான ஸலாம் நன்றி.

கடந்த அத்தியாயத்தில் கவிஞர் சபீர் அவர்கள், என்னை ஒரு ஏற்புரையும் எழுதினால் நன்றாக இருக்குமென்று அபிப்பிராயம் தெரிவித்து இருந்தார்கள். இனி சிறு ஏற்புரைகளை எழுதுவேன். இன்ஷா அல்லாஹ்.

அதற்கு முன் இதைப் படித்து வரும் அன்பர்களுக்கு ஒரு செய்தியை தெரிவித்துவிட எண்ணுகிறேன். இங்கு எழுதப் படுவதெல்லாம் எனது நினைவிலிருந்து எழுதப் படுபவை.சில சம்பவங்கள் நினைவுக்கு வரும்போதெல்லாம் பகிர்கிறேன். நான் ஒரு வரலாற்று மாணவனுமல்ல குறிப்புகளும் என்னிடம் இல்லை. எனவே சம்பவங்கள் கோர்வையாக வராமல் இருக்கலாம். சில சம்பவங்கள் நினைவுக்கு வந்தால் அவற்றை அந்த வாரம் எழுதுவேன். அப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பதற்கு முந்தைய சம்பவங்கள் அதற்கு முன்னைய அத்தியாயத்தில் வந்திருக்கலாம். பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம் என்பதே இந்த த் தொடரின் கான்செப்ட்.

ஒரு சிறந்த அறிவுசார் அவையில் ஒரு அங்கம்ஆகி இருப்பதே எனது மகிழ்வு. ஐந்து வாரம் வரவேண்டிய அளவுக்கு திட்டமிடப்பட்ட இந்தத் தொடர் , அதையும் தாண்டி வரக்கூடிய அளவுக்கு இன்னும் பல செய்திகளை உங்களுடன் பகிர்வேன். இன்ஷா அல்லாஹ்.

முக்கியமாக இந்தத் தளத்தில் பெரியவர் எஸ். முகமது பாரூக் அவர்கள் என்னை ப் பாராட்டி எழுதுவது நான் பெற்ற பாக்கியம். அதேபோல் பல இளைஞர்கள் எங்களின் எழுத்தை ரசிப்பதும் யாம் பெற்ற பேறு .

வஸ்ஸலாம்.

உங்களின் அன்புச் சகோதரன்,

பகுருதீன். முத்துப்பேட்டை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு