Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கல்வியே உன் விலை என்ன? 19

அதிரைநிருபர் | January 10, 2011 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

சீனா சென்றாயினும் சீர் கல்வி பெற்றிடுக!
கற்கை நன்றே கற்கை நன்றே!
பிச்சை புகினும் கற்கை நன்றே!

கல்வி விழிப்புணர்வு நம் சமுதாயம் அடைந்த பயன்கள் என்றால் சொல்லிக்கொள்ளும்படி அதிகம் இல்லை. அடையப்போகும்(எதிர் காலத்தில்) பயன்கள் அதிகம் உண்டு. இன்ஷாஅல்லாஹ்.

சுதந்திரத்திற்காக தங்களின் கல்வியை விட்ட ஒரே சமுதாயம் இந்தியாவில் முஸ்லிம் சமுதாயம் மட்டும்தான். வீரத்தோடு தங்கள் சொத்துக்களையும், உயிர்களையும் சமுதாய சதவீதத்திற்கு அதிகமாக தியாகம் செய்த ஒரே சமுதாயம் முஸ்லிம் சமுதாயம் மட்டும்தான்.

வெள்ளையனுக்கு சாமரம் வீசியவர்கள், அடிமை சேவகம் செய்தவர்கள். சுதந்திரத்திற்காக ஒரு துரும்பை கூட எடுத்த போடாதவர்கள் என்ற பெரும் கூட்டமே வெள்ளையன் விட்டு சென்ற அத்தனை துறைகளையும்: கல்வித்துறை, பத்திரிக்கை துறை, தொழில் துறை, அரசு துறை, இராணுவத்துறை, இப்படி அனைத்து துறைகளையும் தியாகம் என்றால், சுதந்திரம் என்றால் என்ன விலை என்று கேட்கும் கூட்டங்கள் தந்திரத்தால் அபகரித்து, தியாகம் செய்த முஸ்லிம்களை சுதந்திரம் கிடைத்த அன்றிலிருந்து திட்டமிட்டு ஓரம் கட்டியது. இரண்டாம்தர குடிமக்கள் நிலைக்கு தள்ளிவிட்டது. இந்த நரிகளின் திட்டம் இன்று போடப்பட்டதல்ல. மாறாக சுதந்திரத்திற்கு முன்பே திட்டம் போட்டு சரியானபடி முஸ்லிம் வாழும் அனைத்து பகுதிகளையும் புறக்கணிக்க ஆரம்பித்தது. இன்று வரை தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது.

வெள்ளைக்காரன் முஸ்லிம்களுக்கு அளித்து வந்த இடஒதுக்கீட்டை நரிகள் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் இந்த இடஒதுக்கீட்டைத்தான் ஒழித்தார்கள். கல்வியை மார்க்க கல்வி உலக கல்வி என்று தனித்தனியாக பிரிக்கப்பட்டது. நம் முன்னோர்கள் படிக்காத சமுதாயமாக ஆகிப்போனதால் வெளிநாட்டில் வேலை தேடும் அவல நிலைக்கு ஆளானார்கள். நரிகள் இந்தியாவை கபளீகரம் செய்து தம்மை வளம், பலம், கல்வி என்று எல்லாவற்றிலும் முன்னேற்றி எம்மை வெல்ல யாரும் உண்டோ? என்று எகத்தாளமாக முஸ்லிம்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சுதந்திரம் கிடைத்த பிறகு முஸ்லிம் சமுதாயத்திற்கு கிடைத்த வெகுமதிகள் என்ன? முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் கல்வி இல்லை, பொருளாதார முன்னேற்றம் இல்லை, தண்ணீர் இல்லை, சுகாதரா வசதி இல்லை, அரசாங்க துறையில் வேலை இல்லை, இல்லை - இல்லை - இல்லை எதுவுமில்லை என்று அயல்நாடு சென்றார்கள் முன்னோர்கள்.

இந்த நேரத்தில் முஸ்லிம் சமுதாயத்தில் தியாகமிக்க நல்ல மனிதர்களால் முஸ்லிம் வாழும் பகுதிகளில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு சேவை அடிப்படையில் நடக்க ஆரம்பித்தது. இருந்தாலும் எல்லோருக்கும் கல்வி சென்று சேரவில்லை. வயிற்றுக்கு சோறு இல்லாத பொழுது கல்வி எங்கே கற்பது. நம் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள தனவந்தர்களின் பிள்ளைகளும், ஏழைகளில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர்களுக்கும் கல்வி கிடைத்து வருகிறது.

ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. இன்றும் அப்படியேதான் நிலைமை உள்ளது. ஆர்வமிக்க ஏழை முஸ்லிம் மாணவர்களின் நிலை இன்றளவும் பரிதாபம்தான் 6 அல்லது 10ம் வகுப்போடு அவனுடைய கல்வி வாசல் அடைக்கப்படுகிறது. மேற்கொண்டு படிப்பதற்கு குடும்ப சூழ்நிலை இடம் கொடுப்பதில்லை. முஸ்லிம்களால் ஏழை மாணவர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டாலும், இந்த உதவிகள் திட்டமிடப்படாத உதவிகளாகவே சென்று கொண்டு இருக்கிறது.

மேற்படிப்பை பற்றியும், அரசாங்க வேலை வாய்ப்பை பற்றியும்  பேசிக்கொண்டு இருக்கிறோம். கல்வியை பாதியோடு விட்டுவிடும் ஏழை மாணவ, மாணவிகளின் நிலையை பற்றி அதிகம் பேசப்பட வேண்டும். இதற்காக சரியான திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

ஏழை மாணவ, மாணவிகளின் நிலைகள் ஆரம்ப நிலையிலேயே சரி செய்யப்பட வேண்டும். செல்வந்தர் வீட்டு பிள்ளைகள் எப்படியும் படித்து விடுவார்கள். ஏழைகள் பாதியில் கல்வியை விட்டு விடுவதற்கு காரணங்கள் கண்டறிந்து சரியான வழியில் திட்டமிட்டு இவர்கள் கல்வியில் தொடர்ந்து படித்து மேற்படிப்பு முடித்து நல்ல வேலையில் சேர உதவிகள் செய்யப்பட வேண்டும்.

எப்படி செயல்பட வேண்டும் என்பதை பார்ப்போம். முதலில் நம் உறவினர்களில் உள்ள மாணவ, மாணவிகள் என்ன படிக்கிறார்கள், அவர்கள் குடும்ப நிலை என்ன அவர்களால் கல்வியை தொடர முடியுமா? என்று ஆய்வு செய்து நம் வசதிக்கு தக்கவாறு அவர்களின் கல்வி தொடர உதவிகள் நம்மால் செய்யப்பட வேண்டும். மேலும் கல்விக்கு உதவி செய்வதோடு நின்று விடாமல் மாணவன் பள்ளி செல்வதை விட்டால்தான் அவனின் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்று தெரிந்தால் அவர்களின் குடும்பத்திற்கும் நிதி உதவி செய்து அவன் படிப்பு பாதியில் தடைபடாமல் தொடர உதவ வேண்டும்.

நம்முடைய ஏழை உறவினர்கள் நம்மிடம் வந்து உதவி கேட்கும்வரை அலட்சியமாக இருக்கக்கூடாது. அவர்களின் நிலை அறிந்து நாமே சென்று உதவிகள் செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் உறவினர்களில் உள்ள ஏழை மாணவ, மாணவிகளுக்கு பொறுப்பு எடுத்து கொண்டால் இதற்கான கூலியை வல்ல அல்லாஹ் நமக்கு தாரளமாக வழங்குவான்.

ஊர் அளவில் செயல்படும் திட்டங்களை பார்ப்போம்;: ஊர் அளவில் ஒரு தன்னலம் பாராத கல்விக்குழு அமைக்கப்பட வேண்டும்.(உதாரணத்திற்கு: அதிரை அறக்கட்டளை என்று வைத்துக்கொள்வோம்) ஒவ்வொரு தெருவிலும் சேவை மனப்பான்மை உள்ள ஒரு குழுவை ஏற்படுத்தி இந்த குழு மூலம் அந்த தெருவில் உள்ள மாணவ, மாணவிகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களின் கல்வி தரம், குடும்ப பொருளாதார தரம் இரண்டையும் ஆய்வு செய்து, மாணவர்களின் கல்வி தொடர உதவி செய்ய வேண்டும். அவர்களின் குடும்பத்திற்கு  வாழ்வாதார வசதி இல்லை என்றால் அவர்களுக்கும் சேர்த்தே நிதி வழங்கப்பட வேண்டும்.

நாங்கள் மாணவர்களுக்கு மட்டும்தான் கல்வி உதவி தொகை வழங்குவோம், குடும்பத்திற்கு உதவி செய்ய மாட்டோம் என்றால் 2 ஆண்டுகள் கல்வி உதவி தொகை பெற்றவர்கள் குடும்ப வறுமை காரணமாக கல்வியை பாதியில் நிறுத்தி விடும் அவலம் தொடர்ந்து வருவதை காண முடிகிறது. மாணவர்களின் கல்விக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் பொருளாதார உதவி சென்றடைய வேண்டும்.

ஒவ்வொரு குழுவும் தலைமை குழுவிடம் அறிக்கை சமர்பித்து பொருளாதாரத்தை எப்படி திரட்டுவது என்ற ஆலோசனை செய்ய வேண்டும். அந்தந்த தெருவில்  உள்ள செல்வந்தர்களிடம் பொருளாதாரம் திரட்டப்பட்டு திட்டமிட்டு செயல்பட வேண்டும். இந்த திட்டம் செயல்படுத்த ஆரம்பிக்க வரும் வரை மலையை பெயர்த்து வேறு இடத்தில் வைக்கும் அளவுக்கு கஷ்டமானதுதான். அல்லாஹ்வின் அருளால் சேவை மனப்பான்மை உள்ள, பெரியவர்களிடமும், இளைஞர்களிடமும் இந்த பணியை கொடுத்தால் இன்ஷாஅல்லாஹ் வெற்றி உறுதி.

இதை விட்டு விட்டு கல்விக்கு மட்டும் உதவி செய்வோம். மேற்படிப்புக்கு உதவி செய்வோம், வேலைக்கு உதவி செய்வோம் என்று சொன்னால் படித்து வந்தால்தானே மேற்படிப்புக்கும், வேலைக்கும் உதவி செய்ய முடியும்.

படிப்புக்கு தடையாக முண்ணனியில் இருப்பது அவர்களின் வறுமை... வறுமை... வறுமை . . . சகோதரர்களே! இதைத்தான் தாங்கள் கவனத்தில் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். வயிற்றுப்பசியோடு படி என்றால் எப்படி படிக்க முடியும். சொல்வது யாருக்கும் எளியது,  வறுமையை கண்டவர்களுக்குதான் அதன் உண்மை புரியும். மாணவர்களின் கல்வியையும், வறுமையையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

மேலும் அதிக முக்கியமானது மார்க்க கல்வி - இந்த கல்வியை இரண்டாம் இடத்தில் தள்ளி தனியாக படிக்க வேண்டும் என்ற நிலைதான் இருக்கிறது. காலேஜ் படிப்பை விட்டு விட்டு தனியாக மதரஸாவில் படிக்க கூடிய சூழ்நிலை இல்லை. மார்க்க கல்வியும், உலக கல்வியும் ஒரு சேர தரமாக ஒரே இடத்தில் கிடைக்கும் வரை மாணவ மாணவிகளுக்கு அவர்களின் விடுமுறை காலத்தை நன்கு பயன்படுத்தி மார்க்கத்தை நன்றாக போதிக்க முயற்சி செய்ய வேண்டும்.

பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கும், திரும்ப வந்து வீட்டு பாடங்களை எழுதுவதற்கும்தான் மாணவ மாணவிகளுக்கு நேரங்கள் இருக்கிறது. தொழ, குர்ஆன் ஓத அதிக நேரங்கள் கிடைப்பதில்லை என்பது வருத்தமளிக்க கூடியதாக இருக்கிறது.

எப்பொழுது முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஊர்களில் ஆரம்ப படிப்பு முதல் வல்ல அல்லாஹ் தந்த குர்ஆன், நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய உண்மையான மார்க்கம் போதிக்க கூடிய கல்விக்கூடங்கள் உருவாகும். உலக கல்வியும் - மார்க்க கல்வியும் சேர்ந்த கல்விக்கூடம் எப்பொழுது வரும் என்ற ஆதங்கத்தில் இந்த கட்டுரையை முடிக்கிறேன். வல்ல அல்லாஹ் நம் எண்ணங்களை நிறைவேற்றித்தர போதுமானவன்.

உங்களில் இறைநம்பிக்கையாளர்களுக்கும், கல்வி கொடுக்கப்பட்டவர்களுக்கும் பல படித்தரங்களை அல்லாஹ் உயர்த்துகிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவன். (திருக்குர்ஆன் : 58:11)

குறிப்பு : கல்வி விழிப்புணர்வு மாநாட்டு குழு என்னுடைய ஆதங்கத்தை கவனத்தில் கொள்ளவும். (கல்வி, வறுமை, மார்க்கம் இவை மூன்றிற்கும் சரியான திட்டமிடல் அவசியம்). கல்வி விழிப்புணர்வு மாநாடு சிறப்பாக நடந்து பயன்கள் சரியான வழியில் சென்றடைய வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.

- அலாவுதீன். S.


19 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மன நிலையை மாற்றினால் பண நிலை ஒரு பொருட்டே அல்ல.கல்வி நிறுவனங்கள் மனம் வைத்து குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு 50% உலகக்கல்வியும் 50% மார்க்கக் கல்வியும் இணைந்த கல்விமுறையை உருவாக்க வேண்டும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கும், சரியான தருணத்தில் தங்களின் கருத்துக்களை முன்வைத்துள்ளீர்கள்.

ஒரு காலத்தில் இந்நாட்டின் வீரத்திலும், கல்வியிலும், வளத்திலும் வெற்றிநடைப்போட்டு வாழ்ந்த சமுதாயத்தின் நிலை, வெள்ளையரின் சூழ்ச்சியாலும், அவர்களின் கைக்கூலிகளின் சூழ்ச்சிகளாலும் இன்றைய நம் நிலையை கண்டு மனம் வேதனையடைகிறது.

//மேற்படிப்பை பற்றியும், அரசாங்க வேலை வாய்ப்பை பற்றியும் பேசிக்கொண்டு இருக்கிறோம். கல்வியை பாதியோடு விட்டுவிடும் ஏழை மாணவ, மாணவிகளின் நிலையை பற்றி அதிகம் பேசப்பட வேண்டும். இதற்காக சரியான திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.//

இக்கருத்துடன் நானும் முழுமையாக உடன்படுகிறேன். கல்வி விழிப்புணர்வு மாநாட்டோடு செயல்பாடு நின்றுவிடப்போவதில்லை. இன்ஷாஅல்லாஹ் தொடர்ந்து நிறைய வேலைகள் செய்யவேண்டியுள்ளது. சமூக சேவை அர்பணிப்புமிக்க நல்உள்ளம் கொண்ட சகோதரர்கள் இதற்கு முன்வரவேண்டும்.

sabeer.abushahruk said...

அலாவுதீன்,

உன் ஆதங்கம் நியாயமானதே. எனினும், அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல் என்ற முது மொழிக்கேற்ப எடுத்த காரியம் வெற்றிகரமாக நடத்துவதே இம்மாநாட்டின் நோக்கமாகயிருக்கும்.

அஃதாவது, 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு "அடுத்து என்ன" என்கிற வழிகாட்டுதலும், அரசுத் துறைகளில் பணியாற்ற என்ன படிக்க வேண்டும் எப்படி படிக்க வேண்டும் என்கிற வழிகாட்டுதலுமே பிரதானமாயிருக்கும், இருக்கனும்.

மற்றபடி, வசதில்லாததால் தொடர்ந்து படிக்கமுடியாதவர்களுக்கு உதவுதல், இடையில் விட்டவர்கள் தொடர்ந்து படிக்க உதவுதல் மற்றும் ஏழை குடும்பங்களுக்கு உதவுதல் போன்ற பெரும் பிரச்சினைகளை இம்மாநாட்டின் தொடர்ச்சியாக பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் பேசுவதே நல்லது என்பது என் கருத்து!

புரிதலுக்கு நன்றி.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//சொல்வது யாருக்கும் எளியது, வறுமையை கண்டவர்களுக்குதான் அதன் உண்மை புரியும்.//

இளமையில் வறுமையை அனுபவித்தவர்களுக்கு நிச்சயம் அதன் உண்மை புரியும், அதன் முதல் எதிரொலியே இந்த கல்வி விழிப்புணர்வு.

முதலில் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் அளிக்கப்பட்டவர்கள் அதை சரியாக பயண்படுத்த தவறிவிட்டார்களே என்ற ஆதங்கம் ஏக்கம் ஒரு பக்கம் தொடர்ந்துக்கொண்டே செல்கிறது. எத்தனையோ நம் சமூக மக்கள் வறுமையின் காரணமாக கல்வி கற்கு வாய்ப்பே இல்லாமல் போகிறது மற்றொரு பக்கம்.

பேசிக்கொண்டு இருப்பதைவிட குறைந்த பட்சமாவது செயலில் இருக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து கல்வி விழிப்புணர்ச்சி என்ற வார்த்தைக்கு புது அர்த்தத்தை கொடுப்போம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சகோதரர் அலாவுதீன் அவர்கள் எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் அதனை அலசி ஆராய்ந்து எழுவதோடில்லாமல் தீர்வையும் வைப்பார்கள்... மிகவும் பயனுள்ள அருமையான ஆக்கம், கவனத்தில் கொள்ள வேண்டிய ஆதங்கம் அதோடு பரிந்துரைகள்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ .அலாவுதீன் தம் உள்ளக்கிடங்கி இருந்ததை மிக்க கவலையுடன் இங்கு எழிதியுள்ளார் அல்லாஹ் அன்னாரின் நற்சிந்தனைக்கு நற்கூலி அளிப்பானகவும் ஆமீன்.

ZAKIR HUSSAIN said...

கட்டுரை மற்றவர்கள் பார்க்காத சில சூழ்நிலைகளை விவரித்தது நன்று.

//தனவந்தர்களின் //

எங்கேப்பா புடிச்சே இந்த வார்த்தை எல்லாம்.... 50 களில் உள்ள ஆனந்த விகடன் , கல்கியில் தான் இது போன்ற வார்த்தைகள் இருக்கும்

Yasir said...

வித்தியாசமான கோணத்தில் ஆராய்ந்து எழுதப்பட்ட சமுதாய அக்கறை உள்ள ஆக்கம்..வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாத மாணவ/மாணவிகளுக்கு மட்டுமின்றி அந்த குடும்பத்திற்க்கான வாழ்வாதார தேவைகளையும் செய்ய வேண்டும் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று..அப்பொழுதுதான் உண்மையான குறிக்கோளை எட்ட முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை....ஒவ்வொரு செல்வந்தர்களும் தனக்கு அல்லாஹ்விடமிருந்து கொடுக்கபட்டு இருக்கும் செல்வம் தான் பயன்படுத்தமட்டுமின்றி சொந்த பந்துக்களுக்கும் சமுதாயத்துக்கும் செலவிடவும்தான் என்ற எண்ணத்தை வளர்த்து கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் உதவி செய்வதில் தொய்வு இருக்காது...

ஜாகிர் ஹீசைன் said...

இந்தக் கல்வி மாநாடு வெற்றிபெறவும் மாணவர்கள் வெற்றிப்பெறவும் என் வாழ்த்துக்கள்
சகோ. சபீர்
//தொடர்ந்து படிக்க உதவுதல்//
இந்த கல்வி வழிப்புணர்வு மாநாட்டில் மேற்படிப்பை மட்டும் சொல்லாமல் மேற்படிப்பு படிக்க வசதியில்லாத ஏழை மாணவர்களுக்கு எந்த அமைப்புகள் உதவிசெய்கிறது என்பதையும் சொன்னால் நன்றாக இருக்கும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

////தொடர்ந்து படிக்க உதவுதல்//
இந்த கல்வி வழிப்புணர்வு மாநாட்டில் மேற்படிப்பை மட்டும் சொல்லாமல் மேற்படிப்பு படிக்க வசதியில்லாத ஏழை மாணவர்களுக்கு எந்த அமைப்புகள் உதவிசெய்கிறது என்பதையும் சொன்னால் நன்றாக இருக்கும்///

கல்வி நிதியுதவி, கடன்கள் எங்கெல்லாம் முறையாக வழங்கப்படுகிறது என்ற விபரங்கள் சிறிய கையேடு தயாரித்து வழங்க இருக்கிறார்கள் இவைகள மாணவ மணிகளுக்கான give away gift kitல் இணைக்கப்பட்டுள்ளது.

அதிரைநிருபர் said...

//இந்த கல்வி வழிப்புணர்வு மாநாட்டில் மேற்படிப்பை மட்டும் சொல்லாமல் மேற்படிப்பு படிக்க வசதியில்லாத ஏழை மாணவர்களுக்கு எந்த அமைப்புகள் உதவிசெய்கிறது என்பதையும் சொன்னால் நன்றாக இருக்கும் //

அஸ்ஸலாமு அலைக்கும்,

கல்வி விழிப்புணர்வு மாநாடு முடிந்தவுடன், முறையாக ஏழை மாணவ மாணவிகளுக்கு தேவையான கல்வி உதவி தொடர்பான சரியான தகவல் பதிவுகள் நம் அதிரைநிருபரில் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ். கொஞ்சம் பெருத்திருங்கள் சகோதரரே.

Meerashah Rafia said...

இசுலாமியர்களுக்கான கல்வி உதவித்தொகை விசயத்தில் MEPCO நிறுவனம் எனக்கு தெரிந்து பத்தாண்டுகளுக்கு மேல் அருமையாக செய்துவருகிறது..

ஆனால் நம்ம ஊரு சங்கதி கொஞ்சம் உல்டாவால இருக்கு. பணம் அதிகம் இருப்பவர்கள்தான எந்த ஒரு கவலையும் இல்லாமல் கல்வியை பறக்க விடுகிறார்கள்..!!?!

பணம் இருந்தும் மணம் இல்லை நம் மானவச்செல்வங்களுக்கு..

MSM(MR)

அலாவுதீன்.S. said...

கருத்திட்ட சகோதரர்கள் M.H.ஜஹபர் சாதிக், தாஜுதீன், சபீர், அபுஇபுறாஹிம், தஸ்தகீர், ஜாகிர், யாசிர் -அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தங்களின் கருத்திற்கு நன்றி!

என்னுடைய ஆதங்கத்தை தங்களிடம் பகிர்ந்து விட்டேன். இதற்கான கலந்துரையாடல் ஏற்பட்டு, திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்முறைப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இது உடனே நடந்து விடும் என்று சொல்வதற்கில்லை. நாமெல்லாம் இந்த பிரச்சனைகளை அடிக்கடி கலந்து ஆலேசானை செய்தால் தாமதம் ஆனாலும் ஒரு விடியல் ஏற்படும்.

நம்முடைய இலக்கு அடைய முடியாத ஒன்றல்ல. நல்ல உள்ளங்கள் ஒன்றினைந்தால் எந்த லட்சியத்தையும் அடைய முடியும் இன்ஷாஅல்லாஹ்.

sabeer.abushahruk said...

//நம்முடைய இலக்கு அடைய முடியாத ஒன்றல்ல. நல்ல உள்ளங்கள் ஒன்றினைந்தால் எந்த லட்சியத்தையும் அடைய முடியும் இன்ஷாஅல்லாஹ்.//

இன்ஷா அல்லாஹ்!!!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//நம்முடைய இலக்கு அடைய முடியாத ஒன்றல்ல. நல்ல உள்ளங்கள் ஒன்றினைந்தால் எந்த லட்சியத்தையும் அடைய முடியும் இன்ஷாஅல்லாஹ்.//

இன்ஷா அல்லாஹ்!!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நம்முடைய இலக்கு அடைய முடியாத ஒன்றல்ல. நல்ல உள்ளங்கள் ஒன்றினைந்தால் எந்த லட்சியத்தையும் அடைய முடியும் இன்ஷாஅல்லாஹ்.//

இன்ஷா அல்லாஹ்!!!

crown said...

meerashah சொன்னது…

இசுலாமியர்களுக்கான கல்வி உதவித்தொகை விசயத்தில் MEPCO நிறுவனம் எனக்கு தெரிந்து பத்தாண்டுகளுக்கு மேல் அருமையாக செய்துவருகிறது..

ஆனால் நம்ம ஊரு சங்கதி கொஞ்சம் உல்டாவால இருக்கு. பணம் அதிகம் இருப்பவர்கள்தான எந்த ஒரு கவலையும் இல்லாமல் கல்வியை பறக்க விடுகிறார்கள்..!!?!

பணம் இருந்தும் மணம் இல்லை நம் மானவச்செல்வங்களுக்கு..

MSM(MR).
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். Meers என்றால் ஸ்பானீஸ்ல பார்(see )அர்த்தம்.Saw என்றால் ஆங்கிலத்தில்(பார்த்தேன்னென்று அர்த்தம்).ஆக தம்பி உன் முன்னாள் ஆக்கம் பார்த்தேன்,இப்ப கருத்து பார்த்தேன். நீ கண்டிப்பாக மற்றுமொரு ஆக்கம் எழுதனும். இது என் அன்பு கட்டளை.

Unknown said...

அலாவுதீன் காக்காவின் உண்மைகளை தாங்கிய கட்டுரை,இது போன்ற விழிப்புணர்வு தகவல்கள் இன்று அவசியமானது.

இந்தியாவில் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலை குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையில் ஏழு பேர் அடங்கிய குழு ஒன்றை மத்திய அரசு 09.03.2005 அன்று நியமித்தது. அக்குழு பெரும்பாலான தகவல்களை பல இடங்களிலும் பெற்று தனது அறிக்கையை பிரதமரிடம் ஒப்படைத்தது. இவ்வறிக்கை 30.11.2006 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இன்று வரை அமல்படுத்தவில்லை.

முஸ்லிம்கள் மிக மிகப் பின் தங்கியுள்ளனர் என்ற உண்மையை பட்டவர்த்தனமாக போட்டுடைத்திருக்கின்றது சச்சார் குழுவின் அறிக்கை. கிராமப்புறமோ அல்லது நகர்ப்புறமோ, ஆண் அல்லது பெண் என எந்தப் பிரிவை எடுத்துப் பார்த்தாலும் முஸ்லிம்களின் கல்வி நிலைமையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. கல்வியறிவற்ற ஒரு சமூகம் மற்ற துறைகளில் வளர்ச்சி அடைய முடியும் என்பது கானல் நீராகவே இருக்க முடியும்.

இனி வரும் தேர்தல்களுலும் இட ஒதுக்கீடு தருவோம் என்று சொல்வார்கள்.நாமும் நம்பி ஓட்டுப்போட‌ மீண்டும் அரச கட்டிலில் அமர்வார்கள். அடுத்த நொடியே மறப்பார்கள்.எத்துனை காலத்திற்கு இந்த இழிவு???

அடலேறுகள் அதிகாரம் நோக்கி அணிவகுக்காதவரை இது தொடரும்...ஆனால் அந்த அதிகார பீடம் செல்லும் முன் கல்வி அவசியம் என்பதை 'மதுரை'பிள்ளையிடம் பாடம் கற்கவேண்டும்.

crown said...

அடலேறுகள் அதிகாரம் நோக்கி அணிவகுக்காதவரை இது தொடரும்...ஆனால் அந்த அதிகார பீடம் செல்லும் முன் கல்வி அவசியம் என்பதை 'மதுரை'பிள்ளையிடம் பாடம் கற்கவேண்டும்.
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அட நம்ம அழகிரி!(அரிகிரி தமிழ் நாட்டு அசெம்பிளியா இருந்தா பரவாயில்லை.)பாராளுமன்றத்துல ஆங்கிலம் தெரியாமல் பருப்பு வேகல அப்பு.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு