எல்லாம் வல்ல இறைவனின் இனிய பெயர்கள் அனைத்தும் அப்பெயர்களுக்குரிய தமிழாக்கத்துடன் கவி நடையில் . மனப்பாடம் செய்து இறைஞ்ச ஏற்றது.
காவல் பிஸ்மியும் கனிவாய் ஹம்தும்
ஆவல் மிகவே அகமுவந் துரைத்தோம்
எல்லா உலகும் ஏகமாய்க் காக்கும்
வல்லான் இறையே வான்புகழ் அல்லாஹ்!
அளவிலா அருளின் அர் ரஹ்மானே!
அளவிலா அன்பின் அர் ரஹீமே!
ஒரு பேரரசாய் உயர் மாலிக்கே!
துருவே இல்லாத தூய குத்தூசே!
சரிநிகர் இல்லாச் சாந்தி ஸலாமே!
விரியுமடைக்கலம் விளங்கு முமினே!
கனிவுற அனைத்தும் காக்கும் முஹைமினே!
தனிமிகையாகத் தானுயர் அஸீசே!
ஒரு சமநிலையின் உயர் ஜப்பாரே!
பெருமை மிக்க பேர் முதக்கப்பிரே!
எல்லாம் ஆக்கும் இறை காலிக்கே!
வல்லானாகி வனையும் பாரியே!
படைப்பின் வடிவைப் படைக்கும் முஸவ்விரே!
இடர்ப்படு பிழைகளை எடு கப்பாரே!
அனைத்தையும் அடக்கி ஆள் கஹ்ஹாரே!
தனிப்பெரும் கொடைகள் தரு வஹ்ஹாபே!
உணவினை வழங்கும் உயர் ரஸ்ஸாகே!
மனமுறு வெற்றி மன்னு ஃபத் தாஹே!
எல்லாம் அறியும் ஏக அலீமே!
ஒவ்வா உணவை ஒறுக்கும் காபிளே !
அகமும் அன்னமும் அருள் பாஸித்தே!
தகவிலா தவற்றைத் தாழ்த்து காபிளே!
உவக்கும் பதவியில் உயர்த்தும் ராபியே!
சீரும் சிறப்பும் சேர்க்கும் முயிஸ்ஸே!
சாரும் இழிவினை சாட்டு முதில்லே!
இறைஞ்சலைக் கேட்கும் இனிய ஸமீயே!
உறைவான பார்க்கும் உயரிய பஸீரே!
தீர்ப்புகள் அளித்துத் தேற்றும் ஹகமே!
தீர்ப்பில் நீதி திகழும் அதில்லே!
உள்ளருள் காக்கும் உயர் லத்தீபே !
உள்ளமை அறியும் ஒண் கபீரே!
தெள்ளிய அமைதி தேர் ஹலீமே!
வல்லமை மிகுந்த வரிசை அளீமே!
அல்லதை மன்னித்தருள் கபூரே !
நன்றி சிறக்கும் நல் ஷக்கூரே !
மன்றிலே உயர்ந்த மாபெரும் அலீயே!
ஆணையில் வல்ல அரிய கபீரே!
பேணிக் காக்கும் பெரிய ஹபீளே!
திட்பமும் வலிமையையும் திகழும் முகீத்தே!
நுட்பமாய் கணக்கை நோக்கும் ஹசீபே!
தடையிலா வல்லமை தங்கும் ஜலீலே!
கொடையாலுயர்ந்த கோதறு கறீமே!
கண்காணிக்கும் கண்ணிய ரகீபே!
நன்முரைஈட்டை நல்கு முஜீபே!
விரிவாய்க் கொடுக்கும் விரி வாஸீயே!
தெரி நுண்ணறிவின் தெளிவார் ஹகீமே!
மிகுதியாய் உவக்கும் மேன்மை வதூதே!
தகுதியாந் தலைமை தகு மஜீதே!
தட்டியெழுப்பும் தனிப்பெரும் பாயிதே!
ஒட்டிய காட்சி யுடைய ஷஹீதே!
மறுப்பிலா உண்மை மருவும் ஹக்கே!
பொறுப்புகள் ஏற்கும் புகழ் வகீலே!
வல்லமை மிக்க வான் கவிய்யே!
செல்லும் உறுதிசேர் மத்தீனே!
விசுவாசிகட்கு விகசித வலிய்யே!
நசியாப்புகழின் நாயன் ஹமீதே!
தன்னாலறியும் தனி முஹ்ஸீயே!
முன்னாள் வெளியிடும் முதல் முப்தீயே!
இறுதியல் மீட்டும் இன் முயீதே!
இறந்தோர்க்குயிரை ஈயும் முஹ்யே!
இறக்கச் செய்யும் இறவா முமீத்தே!
சிறக்க வாழும் சீரிய ஹையே!
என்றும் நிலைக்கும் எழில் கையூமே!
நன்றாயுணரும் நலமார் வாஜிதே!
பொன்றாத் தலைமை புகழார் மாஜிதே!
ஒன்றாய்த் தணிக்கும் உயர்வாம் வாஹிதே!
ஒருமைக் குரிய ஒளிசேர் அஹதே!
மருவும் தேவைகள் மருவா ஸமதே!
ஆற்றல் அனைத்தும் அமையும் காதிரே!
ஆற்றல் அருளும் அரிய முக் ததிரே!
முன்னாலாக்கும் மூலமாம் முகத்திமே!
பின்னாலாக்கும் பிழையிலா முஅக்கிறே!
ஆதியா யிலங்கும் அரியதோர் அவ்வலே!
பேதியா திறுதி பிறங்கும் ஆகிறே!
வெளிப்படை யாகிய வேத ளாகிரே!
களிப்படை ரகசிய கண்ணிய பாத்தினே!
ஆளும் பொறுப்புகள் அமைந்திடு வாலியே!
மூளும் பதவியின் முத்த ஆ லிய்யே!
நன்றியளிக்கும் நலமார் பர்ரே!
என்றும் தவ்பா ஏற்கு தவ்வாபே!
ஊறு செய்வோரை ஒறுக்கு முன்தகிமே!
பூரிய பிழைகள் பொறுக்கும் அபூவே!
முன்னே இரங்க முத்து ரவூஃபே!
மன்னே இருமையின் மலிக்குல் முல்கே!
யாதல் ஜலாலி வல் இக்ராமே!
நீதம் செய்யும் செய்யும் நேரிய முக்ஸிதே!
கடைநா ளதனில் கூட்டும் ஜாமியே!
அடையும் தேவைகள் அற்ற கனிய்யே!
தேவைகள் தீர்க்கும் திரு முக்னீயே!
தாவும் துன்பம் தடை மானீயே!
சேரார் துன்புறச் செய்யும் ளார்ரே!
பாரோர் பயனுறப் பார்க்கும் நாஃபியே!
வானார் ஒளியை வழங்கும் நூரே!
தீனார் நேர்வழி தெரிக்கும் ஹாதியே!
புதுமைகள் புரியும் புகழார் பதீயே!
முதுமை நிலைக்கும் மூவா பாகியே!
எல்லாம் அழிந்தபின் இலங்கும் வாரிதே!
ஒல்லும் நேர்வழி உணர்த்தும் ரஷீதே!
இணையில் பொறுமை இலங்கு ஸபூரே!
காவல! உனக்கு கனிவாய்ச் சூட்டிய
ஆவல் மிகு அழகுத் திருப்பெயர்
பலவும் கொண்டு பணிவுடன் வேண்டினோம்.
நலமே யருள்வாய்! நன்மையே பொழிவாய்!
இறையருட் கவிமணி, பேராசிரியர் மர்ஹூம் கா . அப்துல் கபூர்
பரிந்துரை : இப்ராஹீம் அன்சாரி