
11.3 It is apparent from the debate, that the Members were keen on including the provision in the chapter on Fundamental Rights but, later as a compromise and on the basis of an assurance given by Dr. Ambedkar, the amendment was moved for inclusion as a Directive Principle of State Policy.
( Ref: Lensch. Propleme Dr. Chapter 44. Prospects of Cattle Husbandry in India )
மாட்டை அறுப்பதும், மாட்டுக்கறி உண்ணுவதும் தவறு என்று வாதிடும் கூட்டத்தார் அந்த மாட்டுக்கு கொடுக்கும் மரியாதை என்ன என்பதை அவர்கள் அன்றாடம் சென்று கும்பிடும் கோயில் கோபுரங்களில் இருக்கும் சிலைகள், சிற்பங்கள் நமக்கு சொல்லும். அவைகளை அவர்கள் கண்ணால் கண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. பல பெண்களும் இந்த தளத்தில் வரும் கட்டுரைகளை படிக்கிறார்கள் என்பதால் அவையடக்கம் கருதி சிலவற்றை அவிழ்த்துவிட முடியவில்லை. தூரத்தில் இருக்கும் கஜுரோக போக வேண்டாம் பக்கத்தில் இருக்கும் வேதாரண்யம் சென்று மட்டும் ஒருமுறை பாருங்கள்.
பசுவை தாய் என்போர் பெற்ற தாயை முதியோர் இல்லத்திலும் , பசுக்களை பராமரிப்பு இன்றி நடுத்தெருக்களிலும், சாலைகளிலும் அலைய விடுவது ஏன்? சானா பாநாவின் சகோதர கட்சி ஆளும் மாநிலங்களிலாவது இந்த காட்சிகல் மறைந்து இருக்கின்றனவா?
பசுவதை கூடாது என்கிற மதரீதியான வாதம் அடிப்படை இல்லாமல் அடிபட்டுப்போகிறது. பொருளாதார ரீதியாக பார்த்தாலும் பொருளற்றுப் போய்விடுகிறது. எந்த ஒரு விவசாயியும், தனது வயலில் உழுதுகொண்டிருக்கும் மாட்டை- தனக்காக வண்டி இழுக்கும் மாட்டை- தனக்காக பால் கறந்து தரும் மாட்டை பிடித்து அறுத்து சாப்பிட நினைப்பதில்லை. தனக்கு உபயோகப்படாது இந்த தொத்தை மாடு என்கிற நிலைக்கு வந்தபின் காயலாஙகடைக்குப் போகவேண்டிய நிலைக்கு இருப்பதை விற்று அல்லது அறுத்து தனது உணவுத்தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் தவறில்லை என்கிற பொருளாதார வாதம் ஏன் சில அடிமாடுகளுக்குப் புரியவில்லை என்பது நமக்குப் புரியவில்லை. இப்படி பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் கால்நடைகளை – பால் வற்றிப்போன மாடுகளை வைத்து ஏழை விவசாயியால் காலத்துக்கும் கட்டிப்போட்டு, பராமரித்து தீனி போட முடியுமா? அல்லது அந்த மாடுகள் உணவின்றி சாவது இவர்களுக்கு சம்மதமா?
உண்ண உணவில்லாத ஒரு நாட்டில் – ஊட்டச்சத்து இல்லாமல் ஒலிம்பிக்குகளில் ஓடமுடியாத மக்கள் வசிக்கும் ஒரு நாட்டில் -புரதச்சத்து மிகுந்த ஒரு உணவைத் தடைசெய்ய தத்துவ ரீதியாகவோ ,தார்மீக ரீதியாகவோ என்ன முகாந்திரம் இருக்கிறது?. நான் உயர்ந்த சாதி நான் என்ன சொன்னாலும் ஏன் என்று எதிர்கேள்வி கேட்காமல் நீ அடிபணிந்து நடக்கவேண்டுமென்கிற ஆதிக்க சக்திகளின் பூஷ்வா மனப்பன்மையைத்தவிர வேறு என்ன இருக்கிறது? முஸ்லிம்களும் தாழ்த்தப்பட்டோர்களும் உண்ணும் ஒரு வசதியான, இலகுவில் கிடைக்கக்கூடிய ஒரு உணவில் மண்ணை அள்ளிப்போட வேண்டும் என்ற எண்ணத்தை தவிர வேறு என்ன இருக்கிறது?
பத்தொன்பதாம் நூற்றாண்டில் துறவி விவேகானந்தர் அமெரிக்காவில் தங்கியிருந்த போது மாட்டிறைச்சி தின்றார். மாட்டிறைச்சி தின்ன மாட்டோம் என்று கூறும் ஆச்சாரம் மிகுந்த இந்துக்கள் மருத்துவத்திற்காக மாட்டிறைச்சி சூப் குடிப்பதைக் காந்தியடிகள் பலமுறை கேலி செய்திருக்கிறார். ( REF: DR. D. N JHA- THE MYTH OF HOLY COW )
கேரளத்தில், உயர்ந்த, தாழ்ந்த எல்லா சாதிகளையும் சேர்த்து மொத்தம் எழுபத்திரண்டு சாதிகள் இருக்கின்றன. ஆட்டிறைச்சியின் விலை அதிகம் என்பதால் இந்த அத்தனை சாதிகளைச் சார்ந்தோரும் மாட்டிறைச்சியைத் தான் விரும்பி தின்கிறார்கள். அச்சாதிகளை எல்லாம் இந்துத்துவா சக்திகள் கடிந்து கொள்ளவில்லை. இதே கேரளத்தில்தான் புகழ்பெற்ற அனந்த பத்மநாத சுவாமி கோயிலும் , குருவாயூர் கோயிலும், ஐயப்பன் கோயிலும் இருக்கின்றன. இந்த கோயில்களுக்கு அருகாமையிலேயே போத்துக்கறி வியாபாரம் கொத்துக்கறி போட்டு அமோகமாக நடக்கின்றது. அத்துடன் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவிலிருந்து மாடுகள் லாரி லாரியாக தினமும் கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. கேரளத்தில் சானா பானா திறந்து வைத்திருக்கிற அரசியல் கடை இன்னும் முதல் போனிகூட ஆகாமல் இருப்பதற்கு அது வலியுறுத்தும் பசுவதை தடை கொள்கையும் காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
அதே போல் மேற்கு வங்காளத்திலும், வடகிழக்கு மாநிலங்களிலும் மாட்டிறைச்சி ஒரு பிரதான உணவுப்பொருளாகும். எல்லா மலைசாதி மக்களுக்கும் மாட்டிறைச்சி ஒரு விலைகுறைந்த இலகுவாக கிடைக்கக்கூடிய இன்றியமையா உணவுப்பொருளாகும். அதே போல் தலை நகர் டில்லியில் சந்து சந்தாக மாட்டிறைச்சி தொங்குவதை சந்து பொந்துகளிலும் காணலாம். பம்பாயில் சிவாஜி நகர் ( கோவண்டி) பகுதியில் மாட்டை அறுப்பதற்காக நவீன இறைச்சிக்கூடம், அங்கிருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வசதிகளுடன் இருப்பதைக்காணலாம். மத்திய அரசு அதிகமான மாட்டிறைச்சி தொடர்பான உணவுப்பொருள்களை உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மிகவும் ஊக்கம் கொடுத்து வருகிறது. இதற்கு இளஞ்சிவப்பு புரட்சி என்று பெயரிட்டு இருககிறார்கள்.( PINK REVOLUTION). இந்த இளஞ்சிவப்பு புரட்சியின் மூலம் அந்நிய செலாவணி குவிவது சில காவிகளுக்குப் பிடிக்கவில்லை.
குஜராத், ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில் வட்டிக்கு வாங்கி ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சும் சில இனத்தவர்கள் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்கிற கோஷத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். அவர்களிடம் ஏழைகளிடமிருந்து சுரண்டிய வட்டிப்பணம் நிறைய இருக்கிறது அதைவைத்து பாதாமும் பிஸ்தாவும் சாப்பிட முடியும்; லஸ்ஸியும் லட்டும் பருகவும் தின்னவும் முடியும். ஏழை உணவான மாட்டுக்கறியில் இப்படி ஏன் கைவைத்து ஏழைகளின் அடிவயிற்றிலும் அடிப்படை உரிமையிலும் இடி இறக்க எத்தனிக்க வேண்டும்?
பசுக்களை காப்பற்ற விரும்பும் காவிகள் முதலில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்து கொண்டிருக்கும் மாடுகளை பராமரிக்க தங்கள் சானா பானா சக்திகளை தூண்டட்டும். குப்பை கூளம் கொட்டும் இடங்களில் கூட்டமாக மேயும் மாடுகளை நோக்கி தங்கள் கவனத்தை திருப்பட்டும். சாப்பிடுவது என்பது ஒரு தனி மனித உரிமை. என்ன சாப்பிடுவது என்று தீர்மானிக்க வேண்டியது தனி மனிதனே அன்றி சட்டமன்றம் அல்ல. . அறிவியல் ரீதியாக ஆபத்து இல்லாத ஒன்றை அரசாங்கம் தடை செய்ய நினைப்பது, அல்லது தூண்டுவது, அதற்காக போராடுவது என்பது கேலிக்கூத்து. சாராயக்கடையை விடவா சால்நா கடை தீங்கு விளைவிக்கிறது?
உயிர் வதை செய்தல் கூடாது என்று கூக்குரல் இடுவோர் முதலில் தன்னை கடிக்கும் கொசுவை , இரவில் தன் மேல் ஊறும் மூட்டைப்பூச்சியை , தெருவில் கடிக்க வரும் வெறிபிடித்த நாய்களை, நோய் பரப்பும் பன்றிகளை, விவசாயப் பயிர்களை தின்று தீர்க்கும் வெட்டுக்கிளிகளை, எலிகளை, தண்ணீரில் குடி இருக்கும் பாக்டீரியாக்களை, கொத்தவரும் பாம்பை, கடிக்க வரும் பூரானை, கொட்ட வரும் தேளை என்ன செய்கிறார்கள்? பாலூட்டி பழம் கொடுத்து வளர்க்கிறார்களா? வாழ்த்துப்பா பாடுகிறார்களா? மலேரியா மற்றும் டெங்குக் காய்ச்சளைப்பரப்பும் கொசுக்களைக் கொல்லாமல் குருமாவும் புரோட்டாவுமா கொடுக்க முடியும்? கொல்லாமை எல்லா இடத்திலும் சாத்தியப்படுமா? அப்படி சாத்தியப்பட்டால் தண்ணீரைக் கூட தண்ணீராகவோ வெந்நீராகவோ குடிக்க முடியுமா?
மாட்டின் இறைச்சிக்கு ஒரு நியாயம் வைத்திருப்போர் அதன் பாலுக்கு என்ன நியாயம் வைத்து இருககிறார்கள்? மாட்டின் மடி சுரக்கும் பால் நமக்கா அதன் கன்றுக்கா? அந்தப்பாலைக் குடம் குடமாக குடிக்கும்போது வராத பச்சாதாபம் அதன் கறியை சாப்பிடும்போது மட்டும் எங்கிருந்து பொத்துக்கொண்டு வருகிறதாம்? பாலைக்கறந்து குடித்து பசுவின் கன்றுக்கு பச்சை துரோகம் செய்யலாம்; எருதின் கழுத்தில் கலப்பையைப் பூட்டி வெயிலில் போட்டு வதைக்கலாம்; இழுக்க முடியாத சுமைகளை ஏற்றி காளைகளை வண்டி இழுக்கச் செய்யலாம். ஆனால் இயலாத நிலையில் இந்த மாடுகளை இன்னும் போட்டு வதைக்காமல் உணவாக உபயோகப்படுத்த மட்டும் கூடாதா? இந்த கருத்தை சொன்னால் அது அரசியலா? மத உணர்வை மதிக்கவில்லை என்கிற பட்டமா?
முதலாவதாக பசுவதை தடை மசோதா என்கிற பெயரே ஒரு கடைந்தெடுத்த மூடுமந்திரச்சொல் ஆகும். . இந்த பசுவதை என்பது வெளி உலகுக்கு மட்டுமே பசுவைக் காப்பாற்ற. ஆனால் உண்மையிலேயே இந்த வார்த்தைக்குள் காளை, எருமை முதலிய எல்லா கால்நடைகளும் அடக்கம். மராட்டியத்தில் சட்டமாக்கப்பட்டு நடைமுறையில் அமுல் படுத்தப்படாத/ முடியாத இந்த மசோதா ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொருந்தாது. இதை வைத்து மக்களின் உணர்ச்சியைத்தூண்டும் பித்தர்களின் சித்துவேலைகள் வெற்றி பெறாது. பசுவதை தடை சாத்தியம் இல்லாத தத்துவம். இது ஒரு செத்துப்போன பிணம். இதைக்கொண்டுபோய் புதைக்காமல் இன்னும் ஒப்பாரி வைப்பது சானாபானவின் சறுக்கும் அரசியல் சரித்திரம். எனவே நாம் எல்லோரும் மாட்டுக்கறிக்கு ஒட்டுப்போடுவோம்.
குறுந்தொடர் நிறைவுற்றது.
இபுராஹீம் அன்சாரி