Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மையல் ! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | April 30, 2016 | , , ,


இழுத்து கொண்டும்
இழைத்து கொண்டும் செல்கிறது கவிதை

தொட்டதெல்லாம்
தொடுத்து கொள்கின்றன எண்ணங்கள் வண்ணங்களாக

விடு பட்ட
எழுத்துகள் வினா எழுப்புகின்றன
எனை கொண்டு எப்பொழுது வடிப்பாய் என

இரகசியங்கள்
மெளனித்து கொள்கின்றன
வார்த்தைகளின் பிடியில் சிக்கிடாமல்

அலுப்பதேயில்லை
எழுத்துகளின் ச"மையல்"

நட்புடன் ஜமால்

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 034 16

அதிரைநிருபர் பதிப்பகம் | April 29, 2016 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . . 

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

கொடையளித்தல், அல்லாஹ்வை பயந்து நல்ல வழிகளில் செலவு செய்தல்:

நீங்கள் எப்பொருளை (நல் வழியில்) செலவிட்டாலும் அவன் அதற்கான பிரதிபலனை அளிப்பான். (அல்குர்ஆன்: 34:39)

நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் : 2:272)

நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன். (அல்குர்ஆன் : 2:273)

'மூன்று செய்திகளை உங்களிடம் நான் சத்தியமிட்டுக் கூறுகிறேன். அதை நீங்கள் பேணிக் கொள்ளுங்கள். 1) தர்மம் செய்வது, ஒரு மனிதனின் சொத்தை குறைத்து விடாது. 2) அநீதம் செய்யப்பட்ட ஒருவன் அது விஷயமாக அவன் பொறுமையாக இருந்தால், அவனுக்கு அல்லாஹ் கண்ணியத்தை அதிகப்படுத்தாமல் இருப்பதில்லை. 3) யாசகத்தின் வாசலை ஒருவன் திறந்து கொண்டால், ஏழ்மையின் வாசலை அல்லாஹ் திறக்காமல் இருப்பதில்லை.

இன்னும் உங்களுக்குச் சில செய்திகளைக் கூறுகிறேன். அதை நீங்கள் பேணிக் கொள்ளுங்கள். நிச்சயமாக உலகம், நான்கு பேர்களுக்கு மட்டும்தான்.

1) ஒருவனுக்கு அல்லாஹ் சொத்தையும், அறிவையும் வழங்குகிறான். அவன் இது விஷயமாக தன் இறைவனைப் பயப்படுகிறான். தன்னுடன் அவனின் உறவினர்களை சேர்க்கிறான். மேலும் அல்லாஹ்விற்குரிய கடமைகளை அறிகிறான். இவன், உயர்ந்த பதவிகளில் உள்ளான்.

2) ஒருவனுக்கு அல்லாஹ் அறிவை வழங்கி உள்ளான். சொத்தை அவனுக்கு வழங்கிவிடவில்லை. அவன் உண்மையான எண்ணமுடையவன், 'எனக்கு சொத்து இருந்தால், நானும் இவனைப் போன்று செயல்படுவேன்' என்று கூறுகிறான். இதுவே இவனது எண்ணமுமாக உள்ளது. எனவே இருவரின் கூலியும் சமமாகும்.

3) ஒருவனுக்கு அல்லாஹ் சொத்தை வழங்கி உள்ளான். ஆனால் அறிவை அவனுக்கு வழங்கிடவில்லை. அறிவின்றி அவனது சொத்தில் அவன் மூழ்கிக் கிடந்தான். அவன் தன் இறைவனை பயப்படவில்லை. தன் உறவினரையும் அவன் சேர்க்கவில்லை. அல்லாஹ்விற்குரிய கடமைகளையும் அவன் அறிந்திடவில்லை. இவன் மிக கீழான தகுதியில் உள்ளான்.

4) ஒருவனுக்கு அல்லாஹ் சொத்தையும், அறிவையும் வழங்கவில்லை. 'எனக்கு சொத்து இருந்தால், இவனைப் போன்று (தீய) செயல்களை நானும் செய்வேன்' என்று கூறுகிறான். அவன் தன் எண்ணப்படி உள்ளான். இவ்விருவரின் தண்டனையும் சமமானதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூகபஷா என்ற உமர் இப்னு ஸஹ்துல் அன்மாரீ (ரலி) அவர்கள் (திர்மிதீ).     (ரியாளுஸ்ஸாலிஹீன்: 557)

'உன் (பணப்பையை) முடிச்சுப் போட வேண்டாம். அவ்வாறு (செய்தால்) உனக்கு எதிராக (அல்லாஹ்வினால்) முடிச்சுப் போடப்படும்'' என்று என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மற்றொரு அறிவிப்பில், ''நீ செலவு செய்! நீ எண்ணி (செலவு) செய்யாதே! அல்லாஹ் உனக்கு எதிராக எண்ணிக் கொடுத்து விடுவான். நீ (செலவு செய்யாமல்) தடுத்துக் கொள்ள வேண்டாம். அல்லாஹ் உனக்கு எதிராக தடுத்து விடுவான் என்று உள்ளது.'' (அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபூபக்கர்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 559)

'கஞ்சனுக்கும், செலவு செய்பவனுக்கும் உதாரணம், உருக்குச் சட்டையை தங்களின் நெஞ்சிலிருந்து, தொண்டைக்குழி வரை அணிந்துள்ள இருவரின் உதாரணம் போலாகும். செலவு செய்பவன், செலவு செய்யும் போது அந்த உருக்குச் சட்டை அவனது (கால்) விரல்களை மறைத்து, அவனது பாதத்தின் அடிச்சுவட்டையும் மறைத்து தோல் முடியையும் மூடி விடுகிறது. கஞ்சன், எதை செலவு செய்தாலும் அவனது உருக்குச் சட்டையின் ஒவ்வொரு வளையமும் அந்தந்த இடத்தை ஒட்டிக்கொள்கிறது. அவனோ அதை விரிவாக்க விரும்புகிறான். அதுவோ விரிவாவதில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 560)

'தூய்மையான (பொருளின் தர்மத்)தைத் தவிர அல்லாஹ் ஒப்புக் கொள்ள மாட்டான் என்பதால் தூய்மையான உழைப்பின் மூலம் உள்ள ஒரு பேரீத்தம்  பழத்தின் பணத்தை ஒருவன் தர்மம் செய்தால், நிச்சயமாக  அல்லாஹ் அதை தன் வலது கையால் ஏற்றுக் கொள்கிறான். பின்பு உங்களில் ஒருவர் தன் குதிரைக் குட்டியை உயரமாக ஆகும் அளவுக்கு வளர்ப்பது போல், தர்மம் செய்தவருக்காக அந்த தர்மத்தை (மலை போல் நன்மையை) வளர்க்கிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 561)

வனாந்திர பூமியில் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்த போது, மேகத்தில் ''இன்னாரின் தோட்டத்திற்கு நீர் வழங்கு'' என்ற சப்தத்தைக் கேட்டார். உடனே அந்த  மேகம் நகர்ந்து சென்று, தன் தண்ணீரை கறுப்புக் கற்கள் நிறைந்த பூமியில் கொட்டியது. அதன் ஓடைகளில் ஓர் ஓடை, அந்த தண்ணீர் முழுவதையும் கொண்டு சென்றது. உடனே அந்த மனிதர் தண்ணீரைத் தொடர்ந்து ஓடினார். அப்போது தண்ணீர் சென்றடையும் தோட்டத்தில் ஒருவர் நின்று  கொண்டிருந்தார். தன் மண் வெட்டியால் தண்ணீரைத் திருப்பிக் கொண்டிருந்தார். இவர் அவரிடம், ''அல்லாஹ்வின் அடியாரே! உன் பெயர் என்ன? என்று கேட்டார். 'இன்னார்' என அவர் கூறினார். அந்த பெயர், மேகத்தில் கேட்ட பெயர் போலவே இருந்தது. ''அல்லாஹ்வின் அடியாரே! என் பெயர் பற்றி ஏன் கேட்கிறீர்?'' என்று கேட்டார். இந்த தண்ணீரைத் தந்த மேகத்தில் ''இன்னாரின் தோட்டத்திற்கு தண்ணீர் வழங்கு!' என ஒரு சப்தத்தைக் கேட்டேன். அது உங்கள் பெயராக இருந்தது. நீர் என்ன (நற்செயல்) செய்கிறீர்?'' என்று கேட்டார். ''நீ கேட்டு விட்டதால் அதை நான் வெளியே கூறும் நிலையில் உள்ளேன். (கிடைக்கும் விளைச்சலை மூன்று பங்காக்கி) அதில் ஒன்றை தர்மம் வழங்குவேன். மற்றொன்றை நானும், என் குடும்பத்தாரும் சாப்பிடுவோம். மற்றொன்றை இதிலேயே (மறு விளைச்சலுக்குப்) போடுவேன் என்று கூறினார். இதை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 562)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

சார்ந்திருப்பவர்கள்... 0

அதிரைநிருபர் பதிப்பகம் | April 28, 2016 | , ,

முன்னொரு காலத்தில் ஆப்பிரிக்க நாடான ஹபஷா(எதியோப்பியா)வை ஆண்டு கொண்டிருந்த கிறிஸ்தவ மன்னரின்மீது அதே நாட்டைச் சேர்ந்த ஒரு சாரார் போர் தொடுத்தனர். அந்த நாட்டில் முஸ்லிம்களும் வசித்து வந்தனர். சிறுபான்மையினர். அதுவும் அந்நிய நாட்டிலிருந்து அங்கு வந்து குடியேறி தஞ்சமடைந்து இருந்தவர்கள். அவர்களுக்கு இந்தப் போர் அளவற்றக் கவலையை அளித்துவிட்டது.

ஏனெனில் அந்தக் கிறிஸ்தவ மன்னர் தம் நாட்டில் அடைக்கலம் புகுந்திருந்த முஸ்லிம்களுக்கு உரிய வசதிகள் அளித்து வெகு பத்திரமாகப் பாதுகாத்து வந்தார். இந்நிலையில் அவருக்கு எதிரான இந்தப் போரில் அவர் தோற்றுவிட்டால் வெல்பவன் தங்களை என்ன செய்வானோ, ஏது செய்வானோ என்ற அவர்களுக்கு இயல்பான கவலையும் அச்சமும் ஏற்பட்டுப் போனது.

போர் தொடங்கியது. நதிக்கு மறுபுறம் களத்தில் சண்டை நடக்க, இங்கு நகரில் பதட்டத்துடனும் கவலையுடனும் அமர்ந்திருந்தார்கள் முஸ்லிம்கள். யாராவது களத்திற்குச் சென்று என்ன நடக்கிறது என்று தெரிந்து வந்து சொன்னால் நன்றாயிருக்கும் என்று அவர்களுக்குத் தோன்றியது.

‘நதியைக் கடந்து சென்று அங்கு நடப்பவற்றை அறிந்து வந்து சொல்ல யாராவது தயாரா?’ என்று கேட்டுக் கொண்டார்கள்.

“நான் செல்கிறேன்” என்று ஒருவர் தம் கையை உயர்த்தினார்.

“நீயா?” என்று ஏக ஆச்சரியத்துடன் கேள்வி எழுந்தது. ஏனெனில் கையை உயர்த்தியவர் இளவயதுச் சிறுவர். தொலைவில் உள்ள போர்க் களத்திற்குச் செல்ல வேண்டும்; அதுவும் நதியை நீந்திக் கடக்க வேண்டும். ‘இந்தச் சிறுவர் எப்படி?’ என்று அவர்கள் அஞ்ச,அவரோ உறுதியுடன் தலையசைத்தார்,

தோல்துருத்தியில் காற்றடைத்து, அவரது நெஞ்சுடன் அதைக் கட்டி நதியோடு போய் வா என்று இறக்கி விட்டார்கள். நீந்தி, போர் நடைபெறும் பகுதியை அடைந்தார் அந்த இளைஞர். இங்கு இருந்த முஸ்லிம்களோ அந்த மன்னருக்கு வெற்றி வாய்க்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டிருந்தனர். போரில் அந்த மன்னர் வெற்றி அடைந்தார். இளைஞர் மீண்டும் நீந்தி இப்பால் வந்து, தம் ஆடையின் ஒரு பகுதியைக் கழட்டி உயர்த்திக் கொடிபோல் வீசிக்கொண்டு முஸ்லிம்களிடம் ஓடிவந்தார்.

“மக்களே மகிழுங்கள்! நம் மன்னருக்கு வெற்றி. அந்த எதிரிகளை அல்லாஹ் ஒழித்தான்.”

அதைக் கேட்டு அந்தச் சிறுபான்மை முஸ்லிம்கள் பெரும் உற்சாகமடைந்தார்கள். அன்னை உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா விவரித்துள்ள இந்த நிகழ்வு வரலாற்றில் குறித்து வைக்கப்பட்டுள்ளது. நபியவர்களின் காலத்தில் அபிஸீனியாவுக்கு முஸ்லிம்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்தபோது அங்கிருந்த நஜ்ஜாஷி மன்னர் ஈடுபட்ட போரும் அதில் அவர் அடைந்த வெற்றியும்தாம் மேற்சொன்ன நிகழ்வு. துறுதுறுவென்று தோல்துருத்தியைக் கட்டிக் கொண்டு நீந்திச் சென்றவர் புகழ் பெற்ற தோழர் ஸுபைர் இப்னுல் அவ்வாம் (ரலி).

முஸ்லிம்களுக்கு அப்படி என்ன அந்த நஜ்ஜாஷி மன்னரின்மீது பிரியம்? அவர் வெல்ல வேண்டும் என்று முஸ்லிம்கள் இறைவனிடம் இறைஞ்சும் அளவிற்கு நேசமாக இருந்திருக்கிறார்களே, அப்படியானால் அவர்கள் அந்த மன்னர் மீது எந்த அளவிற்கு அன்பும் மதிப்பும் வைத்திருந்தார்கள் என்பதை நாம் அறிய வேண்டியது முக்கியம். சமகாலத்தில் வெகு முக்கியம்.

மக்காவில் இஸ்லாம் மீளெழுச்சியுற்ற ஆரம்பக் காலங்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சொற்பம். அவர்களை மக்க நகரத்துக் குரைஷிகள் புரட்டியெடுத்தனர். அடி பின்னி எடுத்தார்கள். பாலை மணலில் வெற்றுடம்புடன் படுக்க வைத்து வறுத்து எடுத்தார்கள்.வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார்கள். அவர்களது கொடுமையும் தீங்கும் உச்சத்தை எட்டிய தருணத்தில் முஸ்லிம்கள் புலம்பெயர அனுமதி அளித்தார்கள் முஹம்மது நபி (ஸல்). நபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டில் 12 ஆண்களும் 4 பெண்களும் அடங்கிய முதல் குழுவினரும் அடுத்து 83 ஆண்களும் 18 பெண்களும் கொண்ட இரண்டாவது குழுவினரும் இரகசியமாக மக்காவிலிருந்து அபிஸீனியா நாட்டிற்கு வந்து இறங்கினார்கள்.

அபிஸீனிய நாட்டை நஜ்ஜாஷி என்ற மன்னர் ஆண்டு கொண்டிருந்தார். நேர்மையான அரசர். மீண்டும் ஒருமுறை அழுத்தி வாசிக்கவும். முஸ்லிமல்லாதவராக இருந்தாலும் அவர் நேர்மையான அரசர். “வாங்க” என்று வந்தவர்களை வரவேற்று, தங்க இடம்,உண்ண உணவு அனைத்திற்கும் மேலாகப் பாதுகாப்பு அளித்தார் அந்த மன்னர். பாதுகாப்பு என்றால் ஒப்புக்கான பாதுகாப்பன்று. மெய்யான பாதுகாப்பு.

எப்படி?

தங்களிடமிருந்து தப்பித்த முஸ்லிம்கள் அபிஸீனியாவில் பத்திரமாக வாழ்கிறார்கள் என்று தெரிய வந்ததும் மக்காவில் உள்ள குரைஷிகளுக்கு வியர்க்க ஆரம்பித்தது. தப்பித்துப் போனார்கள், விட்டுத் தொலைவோம் என்று இல்லாமல் அம்ரிப்னுல்-ஆஸ், அப்துல்லாஹ் இப்னு அபீரபீஆ என்ற இருநபர் குழுவை, ‘ஒன்று அந்த அயல்நாட்டு மண்ணிலேயே அந்த முஸ்லிம்கள் கொன்று புதைக்கப்பட வேண்டும்; அல்லது அங்கிருந்து மக்காவி்ற்கு அவர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டும். அதற்கு அபிஸீனியா மன்னர் நஜ்ஜாஷியைச் சந்தித்துக் கச்சிதமாய் பேசி இந்தக் காரியத்தை நிறைவேற்றுங்கள்’ என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

வந்தவர்கள் ராஜ பிரதானிகளுக்கும் மன்னருக்கும் அன்பளிப்புகளை அள்ளி இறைத்து, “ஓ மன்னா! எங்கள் குலத்தைச் சேர்ந்த கீழ்குல மக்களின் கூட்டத்தினர் தங்களது இராச்சியத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர். நாங்களோ அல்லது நீங்களோ அறியாத புதிய மதமொன்றை அவர்கள் புகுத்த ஆரம்பித்துள்ளார்கள். எங்கள் மதத்தை விட்டு நீங்கிவிட்ட அவர்கள், உங்கள் மதத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களின் அப்பன், சிற்றப்பன், பெரியப்பன், மாமன், எங்கள் குலத்தின் உயர்குடித் தலைவர்கள் ஆகியோர் எங்களை இங்கு அனுப்பியுள்ளார்கள். இவர்களை மீட்டு அவரவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் இந்த இளையவர்கள் அங்கு நிகழ்த்தியுள்ள குழப்பத்தையும் சச்சரவையும் அவர்களே நன்கு அறிந்தவர்கள்” என்றுவேண்டுகோள் வைத்தார்கள்.

“இவர்கள் உண்மையைத்தான் உரைக்கிறார்கள் மன்னா. அந்த மக்களது சொந்த மக்களே அவர்களது செயல்பாட்டைச் சிறப்பாய் உணர்ந்து தீர்ப்பு சொல்லக் கூடியவர்கள். அவர்களைத் திருப்பி அனுப்பிவிடுங்கள். மக்காவின் தலைவர்களே இவர்களை என்னசெய்வது என்று தீர்மானித்துக்கொள்ளட்டும்” என்று ஆமோதித்தார்கள் அன்பளிப்புகளில் மயங்கிய ராஜபிரதானிகள்.

முகம் சிவந்தார் நஜ்ஜாஷி! எந்தப் பரிந்துரையை சாதமாக்கிக் கொள்ளலாம் என்று குரைஷிக் குழு நினைத்ததோ அதுவே அவர்களுக்கு நேர்விரோதமாய் வேலை செய்தது.

“இறைவன் மீதாணை! – முடியாது! அவர்கள்மீது கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டை அவர்களை அழைத்து விசாரிக்காதவரை அவர்களை யாரிடமும் ஒப்படைக்க மாட்டேன். இவர்கள் கூறுவது உண்மையாக இருப்பின், இவர்களிடம் அந்த முஸ்லிம்களை ஒப்படைப்பேன். ஆனால் விஷயம் அவ்வாறு இல்லையெனில் நான் அவர்களுக்குப் பாதுகாவல் அளிப்பேன். சிறந்த அண்டை நாட்டினனாய் இருப்பேன். அவர்கள் விரும்பும் காலமெல்லாம் என்னுடைய நாட்டில் வாழலாம்”

சொன்னது போலவே முஸ்லிம்களை தமது அவைக்கு அழைத்துவரச் சொன்னார் நஜ்ஜாஷி. “அழைத்து வாருங்கள் அவர்களை”

நடந்தவை அனைத்தையும் அறிந்த முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் சஞ்சலம் ஏற்பட்டுப்போனது. ‘உங்களுடைய சங்காத்தமே வேண்டாம் என்றுதானேய்யா இங்கு வந்துவிட்டோம். அப்பவும் விடமாட்டீர்களா?’ மல்லுக்கட்ட பின்தொடர்ந்து வந்துவிட்ட குரைஷிக்குழுவின் திட்டத்தை எப்படி எதிர்கொள்வது என்று கூடிப்பேசினார்கள்.

“அரசர் நம்மிடம் நம் மார்க்கத்தைப் பற்றி விசாரிக்கப் போகிறார். நமது இறைநம்பிக்கையைப் பற்றித் தெளிவாய் அவரிடம் சொல்லிவிடுவோம். நம் சார்பாய் ஒருவர் மட்டும் பேசட்டும். மற்றவர்கள் அமைதியாய் இருப்போம்” என்று அவர்கள் ஜஅஃபர் பின் அபீதாலிப் ரலியல்லாஹு அன்ஹுவைத் தேர்ந்தெடுத்தார்கள். சிந்தித்துப் பார்த்தால் உண்மையிலேயே அது பிரமிக்கவைக்கும் கட்டுப்பாடு; செயல்பாடு. மிக மிக நெருக்கடியான அந்தச் சூழ்நிலையில் நிதானமாய் ஆலோசனை புரிந்து தெளிவான ஒரு வழிமுறை,அதுவும் சிறந்ததொரு வழிமுறையை அவர்கள் தேர்ந்தெடுத்தது அவர்களது ஈமானின் வலுவையும் நபியவர்களிடம் அவர்கள் அதுவரை கற்றிருந்த வழிமுறையின் சிறப்பையும் நமக்கு எடுத்துச்சொல்லும்.

அனைத்து முஸ்லிம்களும் நஜ்ஜாஷியின் அவையை அடைந்தனர். நஜ்ஜாஷியின் இருபுறமும் பாதிரியார்கள். அனைவரும் வீற்றிருந்தார்கள். எதிரே அவர்களது நூல்கள். அம்ரிப்னுல்-ஆஸும், அப்துல்லாஹ் இப்னு அபீரபீஆவும் அவையில் ஆஜராகியிருந்தனர்.

முஸ்லிம்கள் வந்ததும் அவர்களை நோக்கித் திரும்பிய நஜ்ஜாஷி, “நீங்கள் கண்டுபிடித்திருக்கும் உங்களது புதிய மதத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள். இந்தப் புது மதத்தின் நிமித்தமாய் நீங்கள் உங்கள் மக்களின் மதத்திலிருந்து நீங்கி விட்டிருக்கின்றீர்கள்.நீங்கள் எங்கள் மதத்திலும் இணையவில்லை; நாம் அறிந்த வேறு மதத்திலும் இணைந்ததாக நாம் அறியவில்லை” என்றார்.

தங்களுக்கு ஆதரவு அளிக்கும் வேற்றுமத அரசன்முன் மிகவும் பலவீனமான நிலையில் சிறுபான்மை முஸ்லிம்கள். அவர்களைக் கொத்தி தூக்கிப் பறக்க கழுகு போல் தயாராகக் காத்து நிற்கும் எதிரிகள். எத்தகைய அபாயமான இக்கட்டான சூழ்நிலை அது? வாழ்வா சாவா என்ற நிலை அல்லவா அது? எனினும், அவர்கள் அல்லாஹ்வைச் சார்ந்திருந்தவர்கள்.

ஜஅஃபர் இப்னு அபீதாலிப் பேச ஆரம்பித்தார். புகழாரமில்லை. முகஸ்துதி இல்லை. எங்கே மன்னர் தங்களுக்கு அளிக்கும் பாதுகாப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்வாரோ என்ற அச்சம் சிறிதும் இல்லை.

“மன்னரே! நாங்கள் அறியாமையில் இருந்தோம்; சிலைகளை வணங்கினோம்; இறந்த பிராணிகளை உண்டோம்; மானக்கேடான காரியங்களில் ஈடுபட்டோம்; உறவுகளைத் துண்டித்துக்கொண்டு அண்டை வீட்டாருக்குக் கெடுதிகள் விளைவித்து வாழ்ந்து வந்தோம்; எங்களில் எளியோரை வலியோர் அழித்து வந்தோம். இவ்விதமாய் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போதுதான் எங்களில் ஒருவரையே அல்லாஹ் எங்களுக்குத் தூதராக அனுப்பினான். அவர் உண்மையாளர், நம்பகத்தன்மை மிக்கவர், மிக ஒழுக்கசீலர் என்பதையும் அவர் வமிசத்தையும் நாங்கள் நன்கு அறிவோம்”;

“நாங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும்; நாங்களும் எங்களது மூதாதையர்களும் வணங்கி வந்த கற்சிலைகள், புனித ஸ்தலங்கள் போன்றவற்றிலிருந்து நாங்கள் விலக வேண்டும்; உண்மையையே உரைக்க வேண்டும்; அடைக்கலப் பொறுப்பான அமானிதத்தை நிறைவேற்ற வேண்டும்; உறவினர்களோடு இணைந்து வாழவேண்டும்; அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும்; அல்லாஹ் தடைசெய்தவற்றையும் கொலைக் குற்றங்களையும் விட்டு விலகிவிடவேண்டும் என அத்தூதர் எங்களுக்குக் கட்டளையிட்டார்”;

“மேலும் மானக்கேடானவைகள், பொய் பேசுதல், அனாதையின் சொத்தை அபகரித்தல், பத்தினிப் பெண்கள்மீது அவதூறு கூறுவது போன்றவற்றிலிருந்து எங்களைத் தடுத்தார். அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும்; அவனுக்கு இணைவைக்கக் கூடாது; தொழ வேண்டும்; செல்வந்தர்கள் ஏழைகளுக்கு வளவரி செலுத்த வேண்டும்; நோன்பு நோற்க வேண்டும் என்றும் அத்தூதர் எங்களுக்கு கட்டளையிட்டார்”;

“நாங்கள் அவரை உண்மையாளர் என்று நம்பினோம்; அவரிடம் விசுவாசம் கொண்டோம்; அவர் எங்களுக்கு அறிமுகப்படுத்திய அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றினோம்; அல்லாஹ் ஒருவனையே வணங்க ஆரம்பித்தோம்; அவனுக்கு இணை வைப்பதை விட்டுவிட்டோம்; அவன் எங்களுக்கு விலக்கியதிலிருந்து விலகிக் கொண்டோம்; அவன் எங்களுக்கு அனுமதித்ததை அப்படியே ஏற்றுக் கொண்டோம். இதனால் எங்களது இனத்தவர் எங்கள் மீது அத்துமீறி நடந்துகொள்ள ஆரம்பித்தனர்; எங்களை வேதனை செய்தனர். அல்லாஹ்வை வணங்குவதை விட்டுவிட்டு சிலைகளை வணங்க வேண்டும்; முன்போலவே தீயவற்றைச் செய்ய வேண்டும் என்று எங்களை கட்டாயப்படுத்தி எங்களது மார்க்கத்திலிருந்து திருப்ப முயன்றனர். எங்களை அடக்கி, அநியாயம் புரிந்து, நெருக்கடியை உண்டாக்கி எங்களது மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கும் மதச் சுதந்திரத்துக்கும் அவர்கள் தடை ஏற்படுத்திய போதுதான் உங்களது நாட்டுக்கு நாங்கள் வந்தோம். உங்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். உங்களிடம் தங்குவதற்கு விருப்பப்பட்டோம். அரசே! எங்களுக்கு இங்கு அநீதி இழைக்கப்பட மாட்டாதென்று நம்புகிறோம்”.

தெளிவான, சீரான, நேர்மையான பேச்சு அது. இஸ்லாமிய வரலாற்றின் சிறப்பானதொரு பிரசங்கம்.

ஜஅஃபரின் பேச்சை உற்றுக்கேட்ட நஜ்ஜாஷி, “இறைவனைப் பற்றி உங்களுக்கு உங்கள் நபி அளித்தது ஏதாவது தெரிவிக்க முடியுமா?”

‘தெரியும்’ என்ற ஜஅஃபர் ஓத ஆரம்பித்தார். குர்ஆனின் 19ஆவது அத்தியாயம் சூரா மர்யமின் வசனங்களை – “காஃப், ஹா, யா, ஐன், ஸாத். (நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய பேரருளைப் பற்றியதாகும்” ஆரம்பத்திலிருந்து துவக்கி,

"நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?" என்று கேட்டனர். "நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். "இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னைப் பெரும்பேறு பெற்றவனாக ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும் ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு அறிவுறுத்தி (கட்டளையிட்டு) இருக்கின்றான். "என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) பேறுகெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. "இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்" என்று (அக்குழந்தை) கூறியது”

என்று 33ஆவது வசனத்தை ஜஅஃபர் ஓதி முடிக்கும்போது நஜ்ஜாஷியின் கண்களிலிருந்து தாரை தாரையாய்க் கண்ணீர் அவரது தாடி நனைந்து கொண்டிருந்தது! அருகிலிருந்த பாதிரிகள் கண்களில் கண்ணீர். அவர்களது வேதநூல்கள் நனைந்து கொண்டிருந்தன. ஏக இறைவன் அருளிய குர்ஆன் வசனங்களின் அழுத்தமும் தெளிவும் வசீகரமும் அவர்களை ஏகத்துக்கும் கலக்கியிருந்தன.

தங்களது கொள்கையில் எவ்வித சமரசமும் இன்றி, உள்ளது உள்ளபடி உண்மையை உரத்து உரைத்த ஜஅஃபரின் பேச்சில் இன்றைய முஸ்லிம் தலைவர்களுக்கும் முஸ்லிம்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் ஏகப்பட்ட பாடம் ஒளிந்துள்ளது. ஏனெனில்அவர்களது சூழ்நிலைதான் அவர்களை பலவீனர்களாக்கி இருந்ததே தவிர, உள்ளத்தில் குடிகொண்டிருந்த ஈமானில் அவ்வளவு அசாத்திய பலம்! ஏக இறைவன்மீது அசைக்க இயலாத நம்பிக்கை!

“எங்களுக்கு ஈஸா கொண்டுவந்த ஒளி எங்கிருந்து வந்ததோ அங்கிருந்தே உங்கள் நபியும் உங்களுக்கு ஒளி கொண்டுவந்துள்ளார்” என்று கூறிய நஜ்ஜாஷி மக்கத்துக் குழுவினரிடம் திரும்பி, “நீங்கள் வந்த வழியே உங்கள் ஊருக்குப் போகலாம். நான் இவர்களை ஒப்படைப்பதாக இல்லை”

தூது வந்த குழு ஏமாற்றத்துடன் திரும்ப, சிறுபான்மை முஸ்லிம்களுக்குத் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தினார் அந்த மன்னர் நஜ்ஜாஷி. சிறந்த அண்டை நாட்டில் சிறந்த தோழமையில் தங்கியிருக்க ஆரம்பித்தார்கள் முஸ்லிம்கள்.பத்து ஆண்டுகள் நஜ்ஜாஷியின் அபிஸீனிய நாட்டில் அமைதியான பாதுகாப்பான வாழ்க்கை அமைந்திருந்தது முஸ்லிம்களுக்கு.

அவ்விதம் பாதுகாப்பு அளித்த  நீதியரசருக்குத்தான் அவர் போரில் வெற்றியடைய பிரார்த்தனை புரிந்தார்கள் அந்தச் சிறுபான்மை முஸ்லிம்கள்.

மாறாக, இன்று நம் நாட்டின் சிறுபான்மை முஸ்லிம்களின் நிலை என்ன?

அமைச்சர் பதவிக்கு ஆசைப்படும் பிற மதப் பிரபலங்களே C வடிவில் வளைந்து கும்பிடு போடும்போது, அவர்களையும் விஞ்சி, தன்மானத்தை அடகு வைத்துவிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர், கேவலம் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்காக தலைகீழ் L வடிவில் கும்பிடு போட்டுக் கொண்டு ருகூவில் நிற்கும் கேவலம் அரங்கேறி வருகிறது.  பார்க்கும்போதே வயிற்றைக் குமட்டவில்லை?

இவர்களெல்லாம் தம்மை முஹம்மது நபியின் உம்மத்துகள்; காயிதே மில்லத்தின் அரசியல் வாரிசுகள்; சமுதாயத்தின் காவலர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வது அசிங்கத்தின் உச்சமில்லையா?

"இன இழிவு நீங்கிட இஸ்லாமே நன்மருந்து" என்று பெரியார் கூறினார். ஆனால், நம்முடைய இனமே இஸ்லாத்திற்கு இழிவைத் தேடித் தருவதற்கு முனைப்புக் காட்டி நிற்பகும் காலத்தின் கோலத்தை என்னென்பது?

நம்முடைய ஈமானைப் பாதுகாத்துக் கொள்வதே இன்றைய நிலையில் நமது தலையாய தேவையாக இருக்கின்றது.

இறைவா!

உன் பார்வையில் நரகின் எரிகொள்ளிகளான மனிதர்களைத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுகின்ற, அவர்களின் அநியாயங்களுக்குத் துணை போகின்ற, வக்காலத்து வாங்குகின்ற, சப்பைக்கட்டு கட்டுகின்ற முஸ்லிம் பெயர் தாங்கிகளின் வரம்பு மீறிய செயல்களுக்காக அவர்களோடு சேர்த்து எங்களையும் தண்டித்துவிடாதே!
நாங்கள் உன்னையே சார்ந்திருப்பவர்கள்!


நூருத்தீன்

ஓட்டுக்கு பணம் - லஞ்சம் ஹராம் 12

அதிரைநிருபர் பதிப்பகம் | April 27, 2016 | , , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும்....!

தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் தருவாயில் இருக்கிறது வரும் ஏப்ரல் 24ம் தேதி தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் நாள். மக்கள் யாருக்கு ஓட்டு போடுவது என்று அநேகம் முடிவு செய்திருப்பார்கள். இச்சூழலில் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் போக்கு தமிழக அளவில் அதிகரித்துள்ளது. இதை யார் செய்கிறார்கள் என்பது நாடறிந்த விசயமாகி விட்டது. தன் அணிக்கு ஒட்டுப் பெறுவதற்காக பணம் பட்டுவாடா செய்வதில் அதிரைவாசிகள் மட்டும் விதிவிலக்கா என்ன?

ஒவ்வொரு குடிமகனுக்கும் ஓட்டுரிமை ஒரு ஜனநாயக கடமை, காசுக்காக ஓட்டு போடுவதும் ஓட்டுப்போட வைப்பதும் நம் நாட்டில் சட்டப்படி குற்றம். சட்டத்தை இயற்றும் அவைக்கு செல்பவனே சட்டங்களை மதிப்பதில்லை இந்நாட்டில் எவர்தான் சட்டத்தை எல்லாம் மதிக்கிறார்கள், மக்களுக்கு உழைப்பின்றி காசு கிடைக்குது இதுக்கெல்லாமா ஒரு கட்டுரை? என்ற எண்ணம் இதை படிக்கும் சிலருக்கு தேன்றும். உண்மை தான். ஜனநாயகத்தை மதிக்கும் இந்தியனாக அணுகுவதற்கு முன்பு இதை ஒர் இஸ்லாமிய பார்வையில் அணுகுவதே ஒவ்வொரு முஸ்லீகளின் கடமை. சிந்திப்பீர்...!

ஓட்டுக்காக (தீர்ப்புக்காக) பணம் வாங்குவது லஞ்சம் இது ஹராம் என்பதை பின் வரும் இறைவசனங்களும், நபி மொழிகளும் நமக்கு நன்கு உணர்த்துகிறது.

அல்லாஹ் கூறுகிறான்:

நம்பிக்கைக் கொண்டோரே! உங்களுக்கிடையே, உங்கள் பொருள்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்! திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர.  (அல்-குர்ஆன் 4:29)

மேலும் உங்களுடைய செல்வங்களை உங்களுக்கடையில் உரிமையின்றி உண்ணாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே (பிற) மனிதர்களின் செல்வங்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணுவதற்காக அவற்றை (இலஞ்சமாகக் கொடுக்க) அதிகாரிகளின்பால் கொண்டும் செல்லாதீர்கள். (அல்குர்ஆன் 2:188)

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:

தீர்ப்புக்காக லஞ்சம் கொடுப்பவனையும் லஞ்சம் வாங்குபவனையும் அல்லாஹ் சபிப்பானாக! (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹமத்)

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘லஞ்சம் கொடுப்பவர் மீதும் லஞ்சம் வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இப்னுமாஜா)

அல்லாஹ்வின் இறை வசனமும், நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையும் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தடுக்கப்பட்டுள்ளது என்பதை மிகத் தெளிவாக உணர்த்தியிருக்கிறது.

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் மாறிமாறி இருந்து வரும் இருபெரும் கட்சியும் இன்னும் மத்தியில் ஆட்சிப் பொறுப்பிலிருக்கும், ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் கட்சிகளும் கடந்த பல தேர்தல்களில் பணம் பட்டுவாடா செய்து ஓட்டுக்கள் பெற்றார்கள் என்பதை ஊரில் உள்ள மனசாட்சியுள்ள ஒவ்வொருவரும் அறிவார்கள். மார்க்கத்தை விளங்காத காலத்தில் சில தெருக்களில் பிரபலமான நம்மூர் பெண்கள் (பெருசுகள்) இரவோடு இரவாக வீடுவீடாக சென்று பணம் கொடுத்து ஓட்டுக்கள் பெரும் முயற்சியில் ஈடுப்பாட்டார்கள் என்பதை இன்றைய இளைஞர்கள் சிறுபிள்ளைகளாக இருந்த காலத்தில் கண்டிருப்பார்கள். பாவம் அந்த பெருசுகளுக்கு இது போன்ற ஹதீஸ்கள், குர்ஆன் ஆயத்துக்கள் எத்தி வைக்கப் படாமிலிருந்திருக்கலாம். யா அல்லாஹ்! ஓட்டுக்காக பணம் லஞ்சம் பட்டுவாடா செய்த அந்த பெண்மணிகளை மன்னித்து விடுவாயாக. ஆனால் இன்றும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அவலம் தொடர்கிறது என்பது தான் வேதனை. தேர்தல் அல்லாத நேரத்தில் மார்க்கத்தை பேசும் சிலரும் இது போன்ற ஹராமான செயல்களை நம் சமூகத்தவர்கள் செய்கிறார்கள் என்று அறிந்தும் அதை தடுக்க மறுக்கிறார்கள், என்ற செய்திகளை கேள்விப் படும்போது போது மிக வேதனையாக உள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் ஓட்டுக்காக பணம் விநியோகம் மறைத்து வைத்தும் ரகசியமாகவும் பட்டுவாட நடந்து வருவதை பத்திரிகைகளிலும் தொலைக் காட்சிகளிலும பிடிபடுவதை காண முடிகிறது. சில வீடுகளில் இருக்கும் நபர்களின் ஓட்டு எண்ணிக்கையை வைத்து தொகையை முடிவு செய்து கொடுக்கப்படுகிறதையும் அறிய முடிகிறது. தற்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் பணம் பட்டுவாடா செய்பவர் 5000-ருபாய்க்கு 500-ருபாயும், 1000-ரூபாய் 100-ரூபாயும் பட்டு வாடா செய்பவர் கமிஷன் என்று சொல்லி எடுத்துக் கொள்கிறார்கள் என்றும் தகவல்கள் கசிந்து கொண்டு இருக்கிறது. என்ன கேவலமோ...! இது உண்மையா? அல்லது பொய்யா? என்பதை அல்லாஹ் மட்டுமே நன்கறிவான்.

இது நம் பணம் தான் என்று சாக்கு சொல்லும் பிரபலங்கள் சொல்லுகிறார்கள், ஏன் நாம் இதை வாங்கிக் கொள்ளக்கூடாது? என்று ஒரு சில அறிவாளிகள் வாதாடுகிறார்கள். இவர்கள் இப்படிச் சொல்லுவதால் அது நம் பணமாகி விடுமா? அடுத்த தேர்தல் தேதிக்குள் எனக்குள்ள பங்கு பணம் தரவேண்டும் என்று இந்த அரசியல் கொள்ளைகார கூட்டத்துடன் நம் மக்கள் அக்ரிமண்ட் போட்டுத்தான் சென்ற தேர்தலில்  தேர்ந்தெடுத்து அனுப்பினார்களா?  ஓசியில் பணம் எவன் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள வெட்கமில்லையா நம் மக்களுக்கு?

அன்பானவர்களே ஓட்டுக்காக பணம் வாங்குவதும் லஞ்சமே, அது தடுக்கப்பட்டது என்பதை மேல் சொல்லப்பட்ட இறைவசனங்களும், நபிமொழியும்  நமக்கு ஞாபகப்படுத்துகிறது. இதை அதிரையில் உறவுகளிடம் எடுத்துச் சொல்லுங்கள், பணம் வாங்கியிருந்தால் தந்தவரிடமே அதை திருப்பி கொடுத்துவிட சொல்லுங்கள். ஊருக்கும் நம் சமுதாயத்திற்கும் நல்லது செய்பவர் யார் என்பதை முடிவு செய்து ஓட்டுப்போட சொல்லுங்கள்.

ஏகத்துவத்தை இவ்வுலகில் நிலைநிறுத்தி, இவ்வுலகிலும் மறுவுலகிலும் அல்லாஹ்வின் திருப்தியை அடைவதை மட்டுமே லட்சியம் என்பதை மறந்து, கட்சிகளுக்கு நம் பலம் காட்ட வேண்டும் என்று கச்சைகட்டி உண்மைகளை மறைத்து பொய்களை மெய்படுத்தி மேடை மேடையாக இந்த தேர்தல் பிரச்சாரங்களில் பேசிவரும் நம் சமுதாய சகோதரர்களுக்கு கிழ் வரும் இறைவசனத்தை கேள்வியாக வைத்து இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

வேதமுடையோரே! ஏன் உண்மையை பொய்யுடன் கலக்கிறீர்கள்! அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள். (திருக்குர்ஆன் 3:71)

அல்லாஹ் போதுமானவன்.

தயவு செய்து உங்கள் பொன்னான வாக்குகளை தகுதியானவருக்கும் இன்றைய சூழலில் யார் ஆட்சிக்கு வந்தால் நம் சமுதாயம் அமைதியுடன் நிம்மதியாகவும் இருக்கும் என்ற திடமான தீர்மானத்தில் ஓட்டு போடுங்கள் இன்ஷா அல்லாஹ் !

அதிரை நிருபர் பதிப்பகம்

ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம்... 19

அதிரைநிருபர் பதிப்பகம் | April 26, 2016 | , ,

தமிழகத்தைப் பொறுத்த வரை கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி ஒரே நாளில் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவுற்றது. வாக்குப்பதிவு நடப்பதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பாகவே வழக்கம் போல அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது பரப்புரை மற்றும் வாக்கு சேகரிப்புப் பணிகளை முடுக்கிவிட்டன. தெருவெங்கும் கட்சிக் கொடிகள், தெருமுனைகள் எங்கும் கூட்டங்கள், திரைப்பட நட்சத்திரங்கள் எல்லாம் சாக்ரடீஸ் மற்றும் அரிஸ்டாட்டில் போல பேசிய பேச்சுக்கள், கூடவே ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சி தலைவர்களின் அனல் பறக்கும் பரப்புரைகள். பேசத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் வானூர்தியில் பறந்து , எழுதிவைத்தாவது படித்த தமிழக ஆளும் கட்சித்தலைவி ஒரு புறம்; மற்றொரு புறமோ தள்ளாத வயதில் தள்ளு நாற்காலியில் அமர்ந்தாவது தனது கட்சிக்காகப் பரப்புரை செய்த தமிழக முக்கிய எதிர்க் கட்சியின் தலைவர். அவருக்குத்துணையாக தமிழகமெங்கும் சுற்றி கவர்ச்சிகரமான – காட்டமான பிரச்சாரம் செய்து மக்களைக் கவர்ந்த திமுக வின் பொருளாளர் ஸ்டாலின், தேர்தலில் போட்டியிடாமல் நாடெங்கும் சென்று பிரச்சாரம் செய்த திரு. ஜி.கே. வாசன் போன்ற முக்கியத் தலைவர்களின் பரப்புரைகள் என்று ஜனநாயகத் திருவிழா பலவாறும் களைகட்டியது. கூடவே சோனியா, அத்வானி, ராகுல் காந்தி போன்ற தேசியத் தலைவர்களும் பங்கேற்ற நிகழ்வுகளும் நிகழ்ந்தன. 

இவர்களுடன் கூடவே கட்சிகளின் பல்வேறுதரப்பட்ட பேச்சாளர்களின் பொதுக் கூட்டங்கள் , தொண்டர்களின் கோஷங்கள், மோட்டார் சைக்கிள்களிலும் வாகனங்களிலும் அணி வகுப்புகள், வீதியெங்கும் வீட்டு சுவர்களில் உடமையாளரின் அனுமதி பெற்றும் பெறாமலும் வரையப்பட்ட கட்சிகளின் சின்னங்கள் என தமிழகமே அல்லோகலப் பட்டது. 

வெற்றி வாய்ப்புக்களுக்கான கருத்தாக்கங்கள் என்ன? கருத்துக் கணிப்புகள் என்ன? தொலைக் கட்சி விவாதங்கள் என்ன? முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் நிகழ்ந்த வம்புகள், வசவுகள் என்ன? பஜார் முதல் படித்துறை வரை பகிர்ந்து கொண்ட அரசியல் கருத்துக்கள் யாவை? ஆரூடங்கள் யாவை? அடிதடிகள் எத்தனை? 

தமிழகமே சுறுசுறுப்பாக ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வரும் ஜனநாயகத் திருவிழாவின் காவடி எடுக்கும் அனைத்துக் கட்சிகளுமே தங்களின் ஜனநாயகக் கடமையைச் செய்தன. இத்தகைய பல்வேறு தரப்பட்ட பரப்புரைகளின் தன்மைகளையும் பரிமாறப்பட்ட கருத்துக்களையும் எடுத்து வைக்கப்பட்ட விவாதங்களையும் உண்மைகளையும் மக்கள் அலசி ஆய்ந்து தங்கள் மனதில் ஒரு முடிவெடுத்து வாக்களிக்கும் தினத்தில் தாங்கள் முடிவு செய்த கட்சிக்கு வாக்களித்து ஆதரிப்பதே நடந்த அத்தனை ஆர்ப்பாட்டங்களுக்கும் பணிகளுக்கும் ஒரு முடிவாக இருந்து இருக்க முடியும். ஆனால் இந்த அனைத்து வகை ஜனநாயக் செயல் பாடுகளையுமே செல்லாக்காசாக்கி, இறுதி இரண்டு நாட்களில் இடுப்பை ஒடித்துப் போட்டது ஆளும் கட்சியினரால் அனைத்துத் தொகுதிகளிலும் வழங்கப் பட்ட காசு, பணம், மண்ணி! மண்ணி!. சட்ட ரீதியாக ஆளும் கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெளிப்படையாக இதை மறுக்க முற்படலாம். ஆனால் அவரவர் மனசாட்சியின்படி மறுக்கவோ மறைக்கவோ இயலாது. இது ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்ல; ஊர் அறிந்த ரகசியம். 

இவ்விதம் பணம் கொடுத்து வாக்குகளை திசை மாற்றுவது சரியான ஜனநாயக நடவடிக்கையா? மக்கள் சேவையே எங்களின் இலட்சியம் என்று மேடையில் வாய் கிழிய முழங்கி விட்டு திரைமறைவில் பணத்தை முதலீடாக்கி வெற்றி பெற நினைப்பது அரசியல் நாகரீகமா? அரசியல் நன்னடத்தையா? இதுதான் ஒரு பெரிய அரசியல் கட்சியின் அரசியல் பண்பாடா? அண்ணாவின் பெயரில் கட்சியை நடத்திக் கொண்டு எம்ஜியார் பெயரை என்றும் முழங்கிக் கொண்டு வலம் வரும் கட்சிக்கு இது மரியாதை தருமா? அப்படி என்றால் ஒன்றரை மாதங்கள் நடந்த ஜனநாயகப் பணிகளுக்கு அர்த்தம்தான் என்ன? பணக்கட்டுகள் இருந்தால் ஓட்டுக்களை வாங்கி வெற்றி பெற்று விடலாம் என்றால் தேர்தல் ஏன்? கோஷம் ஏன்? கொள்கைகள் ஏன்? தேர்தல் அறிக்கைகள் ஏன்? மக்களுடைய அரசியல் அறிவு அப்படி மழுங்கிவிட்டது என்று எடை போடுவது நியாயமா? இருநூறு ரூபாய் காசுக்காக இந்த மக்களை விலைக்கு வாங்கிவிட முடியும் என்று ஆளும் பொறுப்பில் இருந்த கட்சி நினைத்தது – அதற்காக பெரும் தொகையை ஒதுக்கி அதை விநியோகித்தது இந்திய அரசியல் வரலாற்றில் கழுவ முடியாத களங்கம். 

இந்த பணப்பட்டுவாடா மக்களின் மனதில் உண்மையில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்கள் ஏற்கனவே செய்து வைத்திருந்த முடிவுகளின் பிரகாரம் வாக்களிக்கவிடாமல், வாக்குகளை திசை திருப்பியதா? இப்படிப்பட்ட அசாதாரணமான அரசியல் சூழ்நிலை ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு வழிவகுக்குமா? இப்படிப்பட்ட இழிவான செயலுக்கு பரிகாரங்கள் என்ன? இவற்றை மக்கள் ஏற்றுக் கொண்டார்களா? ஏற்றுக் கொள்வார்களா? ஆகிய கேள்விகளை இங்கு விவாதிக்கலாம். 

இந்த முறை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத முறையாக தேர்தல் பிரச்சாரம் முடிவு பெற்ற நாளின் மாலை முதல் தேர்தல் ஆணையம், தமிழகமெங்கும் 144 தடை உத்தரவை – அமுல் படுத்தியது. தேர்தல் பரப்புரைகள் நடைபெற்ற காலங்களில் சட்டம் ஒழுங்குக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்றும் அமைதியாக அனைத்தும் நடந்தன என்றும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த தேத்தல் ஆணையமும் அரசும் 144 தடை உத்தரவை அமுல் படுத்த வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்று நடுநிலையாளர்கள் முதல் ஆளும் கட்சியல்லாத அனைத்து எதிர்க் கட்சிகளுக்கும் ஆரம்பத்தில் புரியவில்லை. ஆனால் நடு இரவுகளில், வீடுகளைத் தேடி சில்லரையாக இரண்டு நூறு ரூபாய் நோட்டுகள் முதல் ஐநூறு ரூபாய்வரை அனைத்து பெரிய சிறிய ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் தாழ்த்தப் பட்ட பிற்படுத்தப் பட்ட மக்கள் வாழ்ந்துவரும் சேரிகளுக்கும் ரொக்கங்களாக வந்த பிறகுதான் இந்தத்தடையின் உண்மை நோக்கம் பற்றி ஒரு சந்தேகம் மக்கள் மனதில் தோன்றியது; ஓரளவுக்குப் புரிய ஆரம்பித்தது. இவ்விதம் வழங்கப் பட்ட தொகையின் மொத்த மதிப்பு சுமார் பதினைந்தாயிரம் கோடி ரூபாய் ஆக இருக்கலாமென்று பொருளியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகிறார்கள்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்த பிறகு வணிகர்களும் சாதாரண பொதுமக்களும் பணப்பரிவர்த்தனை விஷயத்தில் பட்ட பாடுகள் கொஞ்சநஞ்சமல்ல . ஒரு திருமணக் குடும்பம் , நகைகள் வாங்கக் கொண்டு சென்ற ரொக்கங்களைக் கூட பறிமுதல் செய்து தங்களது பலத்தைக் காட்டியது தேர்தல் ஆணையம். இன்றைய விலைவாசி உயர்வில் , ஒரு சாதாரண நடுத்தர வியாபாரி டாடா ஆஸ் அளவுள்ள வாகனத்தில் சரக்கு வாங்க நினைத்தால் கூட அந்த சரக்கின் மதிப்பு ஐம்பதினாயிரத்துக்கு மேலேதான் இருக்கும் . ஆனால் இத்தகைய சிறிய வணிக நடமாட்டங்களின் கூட பணப்பரிமாற்றத்துக்கு தடை செய்து பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை. ஆனால் தேர்தலுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக கட்டுக் கட்டாக ஒவ்வொரு குக்கிராமத்துக்கும் பணம் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டதே அது எவ்வாறு சாத்தியப்பட்டது என்று சொல்ல தேர்தல் ஆணையம்தான் தார்மீகமாக கடமைப்பட்டு இருக்கிறது. 

தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் ஒரு வானளாவிய அதிகாரம் என்று வரையறுக்கபப்ட்டு இருந்தாலும் உண்மையிலேயே கிட்டத்தட்ட ஒரு வண்ணத்துப் பூச்சியின் வாழ்நாள் அதிகாரம்தான் என்று நாம் மனதில் வைக்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வாக்களிப்பும் வாக்கெண்ணிக்கையும் முடிவடைந்ததும் ஒரு மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தின் நிர்வாக அதிகாரமும் முடிவுக்கு வந்துவிடும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருக்கும் காலம் வரைதான் ஒரு மாநிலத்தின் அனைத்து அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகள் உட்பட தேர்தல் ஆணையத்துக்கு கட்டுப் பட்டவர்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததும் அந்த அதிகாரிகள் அனைவரும் மீண்டும் மாநில ஆட்சியாளர்களுக்கு சலாம் அடித்தே ஆகவேண்டுமேன்பதே துரதிஷ்டவசமான ஆட்சிமுறை அமைப்பு. ஆகவே , தற்காலிகமாக தேர்தல் ஆணையத்துக்கு தலையாட்டும் அதிகாரிகள் கூட மனப்பூர்வமாக மனசாட்சிப் படி நியாயமாக நடக்க மாட்டார்கள். அப்படி நடந்தால், தமிழ்நாட்டில் என்ன தண்ணீர் இல்லாத காடுகளுக்குப் பஞ்சமா? இந்த அச்ச உணர்வு இருக்கும் மாநிலத்தின் நிர்வாக அதிகாரிகள் மற்றும் அவர்களுக்குக் கீழே உள்ளவர்கள் அனைவரும் தங்களின் கடமைகளை நியாயமாக நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்க இயலாது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதே நிலைதான் என்பதை நாம் அனைவரும் உணர்ந்தே இருக்கிறோம். 

வாக்குப் பதிவு தினத்தன்று வாக்குச் சாவடிக்குள்ளேயும் வெளியேயும் ஆளும் கட்சியின் அல்லரைகளின் அக்கிரமங்களைக் கண்டும் காணாமல் இருப்பதே அதிகாரிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கு எழுதப் படாத உத்தரவு. இந்த நிலை இருக்கும்போது வாக்குச்சாவடிக்கு வெளியே வைத்துப் பணம் கொடுப்பதையும், வாக்களித்த பிறகு வாக்களித்த சின்னத்தைக் கேட்டு உருட்டி மிரட்டி பயமுறுத்தி உறுதி செய்துகொள்வதையும் தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையத்துக்குக் கூட வழியே இல்லை. தேர்தல் ஆணையத்துக்கென்று தனியாக காவல்படை இருந்தால் அல்லது வேறு மாநிலத்தில் இருந்து இராணுவம் அல்லது துணைப்படை வந்தால்தான் இந்தக் குறையை ஓரளவு நீக்க முடியும். அதைவிட்டுவிட்டு, மாநிலக் காவல்துறையை நம்பி தேர்தல் நடத்துவது பாலுக்குப் பூனையைக் காவலுக்கு வைத்தது போலத்தான் அமையும். 

தேர்தல் ஆணையத்திடம் சென்று எதிர்க் கட்சிகள் பணப்பட்டுவாடா தொடர்பான புகார்களை அளிக்கச் சென்றால் தேர்தல் ஆணையம் ஒற்றை வரியில் பதில் சொல்கிறது. தேர்தல் ஆணையம் சொல்லும் அல்லது கேட்கும் கேள்வி ஆதாரம் இருக்கிறதா என்பதுதான். கள்ளத்தனமாக வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப் போவது என்பது திருமண நிகழ்ச்சியோ அல்லது நிச்சயதார்த்தமோ அல்லது பூநீராட்டுவிழாவோ அல்ல என்பதை தேர்தல் ஆணையம் உணராமல் பணம் கொடுத்த புகாருக்கு ஆதாரம் இருக்கிறதா? வீடியோ அல்லது புகைப்பட ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். இத்தனை மணிக்கு சுபயோக முகூர்த்தத்தில்தான் ஓட்டுக்குப் பணம் தரும் திருட்டு ஜனநாயக வியாபார்கள் வருவார்களென்று முன் கூட்டியே அய்யரை வைத்து நேரம் குறித்து இருந்தால் மட்டுமே ஆதாரம் தர இயலும். நாட்டில் பரவலாக நடக்கும் அத்துமீறலை அறியாமல் கூட ஒரு ஆணையம் இருக்குமென்றால் அது தேர்தல் ஆணையமே. கைப்புண்ணைப் பார்க்க கண்ணாடி கேட்கும் கேட்கும் ஆணையமும் அதுவாகவே இருக்க முடியும். 

படித்தவர்கள்- விழ்ப்புணர்வு பெற்றவர்கள் கூட உள்ளூர் ஆளும்கட்சியின் பிரமுகர்களுக்கு அஞ்சி புகார் தரவோ பிடித்துக் கொடுக்கவோ முன்வருவதில்லை என்பதுதான் இந்தப் பிரச்னையின் நிதர்சனம். எளிய மக்கள் யாராவது வீட்டுக்கு வந்து பணம் தருவதை மறுக்காமல் , வாங்கிக் கொள்ளவே நினைப்பார்களே தவிர தைரியமாக புகார் தர முன் வருவார்களா? இப்படிப் பட்ட பலவீனங்கள்தான் ஜனநாயகத்தை விலை பேசும் வியாபாரிகளுக்கு அத்துமீறும் துணிச்சலைத் தருகிறது. ஒருவேளை எதிர்க் கட்சிக்காரர்கள் புகார் அளித்துப் பிடித்துக் கொடுக்க முயன்றாலும் எளிய மக்களின் மனநிலை, பணம் தராத எதிர்க் கட்சிகளுக்கு எதிராகத் திரும்பும் சாத்தியமும் உண்டு. காரணம் இவர்களும் தராமல், தருபவர்களையும் தடுக்கிறார்கள் என்கிற ஏழைகளின் இயற்கையான மனோபாவம்தான். சமுதாயத்தில் இந்த நிலையில் இருப்பவர்களின் இந்த மனோநிலை வாக்குகளை எதிர்க் கட்சிகளுக்கு எதிராகத் திருப்பும் சக்தி படைத்தது. 

பொதுவாகப் பார்க்கப் போனால் பணம் கொடுத்தால் மக்களின் மனதை மாற்றிவிட முடியும் என்ற எண்ணம் ஆளும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஏற்படுவது இது முதல் முறையல்ல. இந்த முறை மிகவும் விரிவாக நடைபெற்றது என்பதுதான். இப்படிப்பட்ட தீய செயலுக்கான விதை, திருமங்கலத்தில் விதைக்கப்பட்டு - ஏற்காட்டில் வளர்க்கப் பட்டது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 

இப்படிப் பணம் கொடுத்த காரணத்தால் மக்கள் மனம் மாறி வாக்களித்துவிடுவார்களா? என்ற கேள்விக்கு விட தேடினால் இதனால் ஏற்படும் விளைவை ஒட்டு மொத்தமாக ஒதுக்கிவிட முடியாது. காரணம் பணப்பட்டுவாடா ஒவ்வொரு பகுதிகளின் செயலாளர்களின் பொறுப்பிலேயே நடத்தப்பட்டு இருக்கிறது. பெரும்பானமையான கட்சிகளின் பகுதிச் செயலாளர்கள் இயல்பில் எவ்வளவு நல்லவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்கள் மூலம் பணம் கொடுக்கப்பட்டபோது, ஒருவித அச்ச உணர்வு அப்பாவிகளின் மனதில் விதைக்கப்பட்டதை மறுக்க முடியாது. அதே நேரம் இவ்வளவு பணம் கொடுத்த பிறகும் அதன் பலன் கொடுத்தவர்களுக்குப் போய்ச் சேராவிட்டால் தேர்தல் முடிந்த பிறகு, அதன் பாதிப்புகள் அந்தந்தப் பகுதிகளில் அராஜகமாக உருமாற வாய்ப்புண்டு. இதை எளிய மக்கள் வாழும் பகுதியினர் உணர்ந்தே நடந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்கலாம். பல இடங்களில் சமுதாயமாக வாழும் மக்களைக் கூட்டி விலை பேசியும் பட்டுவாடா நடந்து இருப்பதால் குறிப்பிட்ட சமுதாயம் வாழும் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகளை வைத்து எவ்வளவு வாக்குகள் எங்கிருந்து விழுந்தன என்று கண்டறியும் வசதியும் இருப்பதால் பணம் பெற்றவர்கள் பணத்துக்காக, மனசாட்சிக்கு எதிராக வாக்களிக்கும் வாய்ப்புண்டு. இந்த நிலை அப்பட்டமான ஜனநாயகத்தின் தற்கொலைக்கு சமம். இந்த தற்கொலைக்குத் தூண்டியவர்கள் ஜனநாயகத்தைக் கொலை செய்த குற்றத்துக்கு ஆளாவார்கள்.

அதே நேரம் ஏற்கனவே மக்களின் கோபத்துக்கு ஆளான கட்சிக்கு எதிராக அவர்கள் பணம் தந்தாலும் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு எதிராகவே வாக்களிக்கவேண்டுமென்று ஏற்கனவே ‘மைன்ட் செட்” செய்தவர்கள் – கட்சியின் தீவிர உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்களை இந்தப் பணம் மாற்றிவிட இயலாது. ஒரு இரு நூறு ரூபாய்க்கு மக்களின் மனதில் இவ்வளவு நாட்களாக இருக்கும் கோபம் மற்றும் ஆத்திரத்தை துடைத்துப் போட்டுவிடும் சக்தி இருக்கிறதா? என்கிற சிந்தனையும், இவ்வளவும் செய்து மக்களை துன்பத்தில் மிதக்கவிட்டு விட்டு கடைசி நேரத்தில் இரு நூறு ரூபாய் கொடுத்தால் எல்லாவற்றையும் மறந்து இவர்களுக்கு வாக்களித்து விடுவோமா என்று மக்கள் மனதில் கோபத்தைத் தூண்டி சொந்தக் காசிலே சூனியம் வைத்துக் கொள்ளும் போக்கும் இந்தப் பணத்துக்கு உண்டு. இப்படி பணம் கொடுத்தவர்களுக்கு வாக்களிக்கலாம் என்று நினைத்து இருந்தவர்களும் மாறி வாக்களித்திருக்கவும் வாய்ப்புண்டு. அத்துடன் ஒரே தெருவில் வேண்டியவர்களுக்குக் கூடுதலாகவும் வேண்டாதவர்களுக்கு சில இடங்களில் குறைவாகவும் கொடுத்த நிகழ்வுகளும் நிகழ்ந்திருப்பதால் அவனுக்கு நான் என்ன மட்டமா என்கிற மனோபாவத்திலும் வாக்குகளை மாற்றிப் போட வாய்ப்புண்டு என்பதையும் மறுக்க இயலாது. 

நல்லதோ கெட்டதோ கை நீட்டிக் காசு வாங்கிவிட்டோம் ஆகவே போட்டுத்தான் ஆகவேண்டுமென்று நினைத்து வாக்களித்தவர்களும் கணிசமாக இருந்து இருப்பார்கள். பாமர மக்களின் இந்த நாடித்துடிப்பு, இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தை விலைபேசி வாங்க நினைக்கும் பெருச்சாளிகள் அறியாதது அல்ல. ஆளும் வர்க்கத்துக்குத்தான் அதிகார போதை, கண்ணை மறைத்து நீதி நியாயங்களை காண முடியாமல் செய்துவிடும். ஆனால் அடித்தட்டு மக்கள், கடவுள் ! சாமி! பாவம்! பழி! என்கிற தர்மநியாங்களுக்குக் கட்டுப் பட்டவர்களாக இருப்பார்கள் என்பதால் வாக்களித்தபடி வாக்களிக்க வாய்ப்புண்டு. பல நேரங்களில் சாமி படங்களின் மீது சத்தியம் வாங்கிக் கொண்டும் பணம் தரப்படுவதுண்டு. 

இவ்வளவு விரிவான முறையில் பணபட்டுவாடா ஒரு பெரிய நெட் ஒர்க் ஆக நடைபெற்றது இதுவே முதல் முறை. இதன் வெற்றி தோல்வி இனி வரும் தேர்தல்களிலும் பயன்படுத்தப் படும் . ஜன நாயகம் என்கிற உயர்ந்த தத்துவம் என்கிற பூமாலை அதிகார போதை கொண்ட குரங்குகளின் கைகளில் சிக்கிச் சீரழிவதை நடுநிலையாளர்களால் பார்த்து ஆதங்கப்பட மட்டுமே முடியும். 

இப்படிப் பட்ட ஜனநாயகக் கொடுமையை நீக்க ஏதாவது வழி இருக்கிறதா என்று சிந்தித்தால் சில எண்ணங்கள் அல்லது ஆசைகள் நமது மனங்களில் அரும்பு விடலாம். 

முதலாவது தேர்தல் ஆணையம் என்கிற வண்ணாத்தி பூச்சியின் வாழ்வு காலம் ஒரு தேர்தல் முதல் அடுத்த தேர்தல் வரை என்கிற சட்ட திருத்தம் வேண்டும். 

முக்கியமாக சட்ட ஒழுங்குப் பாதுகாப்புக்கு தேர்தல் ஆணையம் மாநில காவல்துறையை நம்பி இருக்கும் நிலை மாற்றப் பட வேண்டும் .

அதே ரீதியில், தேர்தல் விதிகளின் நடைமுறைக் காலத்தில் மாநில அரசுக்கு உட்பட்ட நிர்வாகிகளைப் பயன்படுத்தும் முறைகள் மாற்றப்பட வேண்டும். உதாரணமாக, வாக்குச் சாவடிகளில் பணியாற்றுவோர் அதே மாநில அரசின் ஊழியர்களாக இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். வெளி மாநிலங்களில் இருந்து ஊழியர்களைக் கொண்டுவரலாம். 

தேர்தல் என்றால் எப்படியாவது அந்தத் தேர்தலை நடத்தி முடித்துவிட்டால் போதும் என்கிற மனோநிலையில்தான் தேர்தல் ஆணையம் இருக்கிறது. காரணம் ஒரே தலைமை தேர்தல் ஆணையர் எல்லாவகையானப பணிகளையும் கவனிக்க இயலவில்லை. மத்தியில் இருப்பது போல் மாநிலங்களிலும் இரண்டு மூன்று தலைமை தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப் படலாம். ஒரே தலைமை தேர்தல் ஆணையரால் தனது சொந்த விருப்பங்களை மீறி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை -எடுக்கவில்லை என்பதே கடந்தகாலம் கற்றுத்தந்த வருத்தமான குறைபாடு. ஒரு சார்பாக தேர்தல் ஆணையம் நடக்கிறது என்கிற குறைபாட்டை இதன் மூலம் களைந்து தேர்தல் ஆணையம் தனது பத்தினித் தனத்தை நிருபிக்க முடியும். 

தேர்தல் பரப்புரைக்கான காலத்தை ஒன்றரை மாதங்களுக்கு முன்பே தொடங்குவதை தடை செய்து வாக்குப் பதிவு நடைபெற ஒரு வார காலம் முன்புதான் அரசியல் கட்சிகள் பரப்புரையைத் தொடங்க வேண்டுமென்ற விதியை அமுல் படுத்த வேண்டுமென்றும் இதனால் அரசியல் கட்சிகள் செய்யும் செலவையும் அத்துமீறல்களின் அளவையும் கட்டுப்படுத்த உதவுமென்று சில சமூக நலவிரும்பிகள் ஆலோசனை தருகிறார்கள். 

மேலும், இன்னொரு ஆலோசனையும் சமூக அரசியல்வாதிகளால் எடுத்து வைக்கப்படுகிறது. பரப்புரை செலவுகளை அரசே ஏற்று ஒரே மாதிரியாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்காகவும் செலவு செய்ய வேண்டுமென்றும் இதனால் கூடுதல் குறைவான சமத்துவமற்ற பிரச்சார செலவுகள் குறையுமென்றும் ஒரு கருத்து வைக்கப்படுகிறது. தேர்தல்களில் பணம் பெருமளவு விளையாடுவதையும் – கறுப்புப் பணம் பெருமளவு அங்கம் வகிப்பதையும் இந்த முறை கட்டுப் படுத்துமென்று அந்தக் கருத்து வலியுறுத்துகிறது. 

தேர்தலில் பணம் கொடுப்பவர்கள் கையும் களவுமாக பிடிக்கப்பட்டால் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு சட்டபூர்வமான சகல பாதுகாப்பும் வழங்குவதற்கும் பணம் கொடுத்த அல்லது பணம் கொடுக்க முயற்சித்த வேட்பாளரை போட்டியிலிருந்து உடனடி தகுதி நீக்கம் செய்யப்படுமென்றும் தேர்தல் ஆணையம் தனது விதிமுறைகளை வகுத்துக் கொள்ளவேண்டும் . இப்படி ஒன்றிரண்டு வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யபட்டால் அதன் மூலம் மற்றவர்களுக்கு அச்சமுண்டாக வாய்ப்புண்டு. அதை விட்டுவிட்டு தேர்தல் ஒழுங்காக நடைபெற்றது என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு விடுகிறது. ஆனால் இன்னொரு புறமோ தேர்தல் நடந்த ஒரே நாளில் 248 முறைகேடுகள் நடந்ததாக புகார் வந்துள்ளதாகவும் அதே தேர்தல் ஆணையம்தான் சொல்கிறது. மொத்தத்தில் தேர்தல் அமைதியாக நடந்தது ஆனால் இத்தனை புகார்கள் வந்தன என்று சொல்வது உடல் முழுதும் அடி ஆனால் உயிர் போகவில்லை என்று சொல்வது போலத்தான் தெரிகிறது. 

இப்போதுள்ள நடை முறையில் , தேர்தல்களின் ரிடர்நிங்க் ஆபீசர் என்கிற மாவட்ட தேர்தல் அதிகாரியின் தலைமைப் பொறுப்பு , அந்தந்த மாவட்ட ஆட்சித்த் தலைவர்கள் இடம் வழங்கப் பட்டு இருக்கிறது. மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அனைவரும் மாநில அரசுக்குக் கட்டுப்பட்டவர்களே . அதே போல் மாவட்ட காவல்துறைத் தலைவர்களும் மாநில அரசுக்குக் கட்டுப்பட்டவர்கள் மட்டுமல ஆட்சியாளரின் கடைக்கண் பார்வைக்கு காத்து இருப்பவர்களே. தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையத்தின் கட்டுப் பாட்டில் இவர்கள் எல்லாம் பணியாற்றுவது போல் தோன்றினாலும் உள்ளுக்குள் ஆட்சியில் இருக்கும் கட்சியின் ஆணைகளுக்கே உண்மையில் கட்டுப் பட்டவர்கள் ஆவார்கள். ஆளும் பொறுப்பில் உள்ளவர்கள் காலால் இடும் கட்டளைகளை தலையால் செய்யும் தன்மை கொண்டவர்களே. இதை மறுக்கவே இயலாது. தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சியை எதிர்த்துக் கொண்டு கடமை நேர்மை என்று வசனம் பேசினால் பிறகு அடுத்த இரண்டு வருடங்களுக்கு அவதிகளுக்குள்ளாக நேரிடும் என்பது ஐ ஏ எஸ், ஐ பி எஸ் படித்திருக்கும் அதிகாரிகளுக்குத் தெரியும். ஆகவே , தேர்தல் நேரத் தில்லுமுல்லுகளை உண்மையிலேயே ஒழிக்கவேண்டுமென்று தேர்தல் ஆணையம் நினைத்தால் ரிடர்நிங்க் ஆபீசர் மற்றும் சட்ட ஒழுங்கு போன்ற பொறுப்புக்களுக்கான அதிகாரிகளை இனி வரும் காலங்களில் தேர்தல் ஆணையமே தனது சொந்த அதிகாரிகளாக நியமித்துக் கொள்ள வேண்டும். மாநில அரசின் கட்டுப் பாட்டில் இருக்கும் அதிகாரிகளை இப்பொறுப்புக்களில் ஈடுபடுத்துவது நண்டைச் சுட்டு நரிக்கு வைப்பதற்கு ஒப்பானது. இதற்காக தேர்தல் ஆணையம் தனது மனித வளத்தின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள வேண்டும். 

ஆக, பெருமளவில் ஒரு பெரிய தேர்தலில் ஜனநாயக செயல்பாடுகளை அர்த்தமற்றதாக ஆக்க ஒரு முயற்சி நடந்து இருக்கிறது. மக்கள் இதை எப்படி அணுகி இருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகளே சொல்லும்.

ஆபிரகாம் லிங்கன் ஜனநாயகம் என்றால் என்ன என்பதற்கு உலகப் புகழ் பெற்ற விளக்கம் ஒன்றைச் சொன்னார் என்பது நமக்குத் தெரியும் 

“Democracy is of the people, for the people and by the people “ என்பதே லிங்கனின் வாக்கு. அதாவது ஜனநாயகம் என்பது மக்களுடைய ஆட்சி , மக்களால் , மக்களுக்காக என்பதாகும். ஆனால் இன்றோ அது !

“Democracy off the people far the people and to buy the people “ என்று நாம் மாற்றிப் படித்துக் கொள்ள வேண்டிய நிலைமைகள்தான் உருவாகி ஜனநாயகம் என்கிற ஒரு உயர்ந்த இலட்சியம் உலகத்தின் பெரிய ஜனநாயக நாட்டில் கேலிக் கூத்தாக மாறிக் கொண்டு இருக்கிறது. 

அதிரைநிருபர் பதிப்பகம்

சிரித்து வாழவேண்டும் ! பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே !? 4

அதிரைநிருபர் பதிப்பகம் | April 25, 2016 | , , , ,

மனிதப் பிறவியைப் பெற்றிருக்கும் நமக்கு மனிதனுக்கான அனைத்து தகுதிகளையும் அறிவுகளையும் இறைவன் வழங்கியுள்ளான். நாம் அதை உபயோகிக்கும் விதத்தில்தான் நமது வாழ்க்கைத் தரம் ஒருவருக்கொருவர் வித்தியாசமாக அமைகிறது. அப்படி அமைத்துக் கொள்ளும் வாழ்க்கையில் ஒன்றுதான் நாம் சிரித்து சந்தோசமாக வாழ்வதும் , பிறர் சிரிக்க நாம் கேலிச் சித்திரமாய் ஆவதுமாக இருக்கிறது. சிரித்து வாழ்வதும் பிறர் சிரிக்க வாழ்வதும் எல்லாம் தத்தமது பழக்க வழக்கம், நடவடிக்கை, அணுகுமுறை, செயல்பாடு இவைகளில்தான் அடங்கியுள்ளது.

சிரித்து வாழவேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்றுகூட ஒரு பழைய தத்துவ பாடல் ஒன்று நாம் கேட்டிருப்போம். இதன் பொருள் நாம் என்றைக்குமே மகிழ்வுடன் வாழ நமது வாழ்க்கையை வளமாக வழிவகுத்துக் கொண்டு எப்போதும் இன்முகத்துடன் சிரித்து சந்தோஷமாக இருக்க வேண்டும். அதேசமயம் பிறர் நம்மை ஏலனமாக பார்த்து கேவலமாக நினைக்கும்படியும் கைதட்டி சிரிக்கும்படியும் ஒருபோதும் நாம் ஆகிடக் கூடாது என்பதேயாகும்.

இதற்க்கு உதாரணத்திற்கு நாம் வேறெங்கும் போக வேண்டியத் தேவையில்லை.ஒவ்வொருவரது வாழ்விலும் எத்தனையோ பல மறக்கமுடியாத நிகழ்வுகள் நடந்திருக்கும். சில நிகழ்வுகள் நம் ஆயுட்காலம் வரை மனதை விட்டு நீங்காத நிகழ்வாக பிறர் நம்மைப் பார்த்து சிரிக்கும்படி நடந்திருக்கும்..சில நிகழ்வுகள் பிறரைப் பார்த்து நாம் சிரிக்கும்படியாக நடந்திருக்கும். அதன் தாக்கத்தில் அதுவே நமக்கு நல்ல பாடமாக உந்தல் சக்தியாக நாம் முன்னேற ஒரு பாதையாக அமைந்துவிடுவதும் உண்டு.

சிரித்து வாழும் வாழ்க்கை சாதாரணமாக கிடைத்து விடாது. அந்த வாழ்க்கை வாழ ஆரம்பத்தில் நாம் பலவகையிலும் பற்ப்பல கஷ்டங்களை அனுபவித்து எண்ணிலடங்கா சிரமங்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகி பல உலகப் பாடங்கள் கற்றறிந்து புத்திபடித்து கொஞ்சம்கொஞ்சமாக முன்னேறி இறுதியில் நாம் ஒரு நல்ல நிலையை அடைந்து நிம்மதி பெற வேண்டும்.அப்படி நிம்மதிப் பெருமூச்சுடன் கிடைக்கப் பெற்ற வாழ்க்கை இருக்கிறதே அதுவே நமக்க உண்மையான மகிழ்வுடனும் சந்தோசத்துடனும் சிரித்து வாழும் வாழ்க்கையாக இருக்கிறது.

ஆனால் பிறர் நம்மைப் பார்த்து சிரிக்கும்படியான வாழ்க்கை இருக்கிறதே இதை அடைவதில் எந்தச் சிரமமும் கஷ்டமும் பட வேண்டிய அவசியம் இருக்காது.. எப்படிஎன்றால் நமது இயலாமை எதிலும் அலட்சியப் போக்கு, சோம்பேறித்தனம், தாழ்வு மனப்பான்மை எதையும் எதிர்கொள்ளத் தெரியாத கையாலாகாத்தனம் இவைகளே பிறர் நம்மை பார்த்து ஏலனமாக பார்க்கும்படியும் சிரிக்கும்படியும் ஆக்கிவிடுகிறது.

பிறர் நம்மைப் பார்த்து கேலியாக சிரிக்கும்படியான வாழ்க்கை மிகக் கீழ்த்தரமான வாழ்க்கையாகும்.தமது தன்மானத்தை தலைகுனியச் செய்யும் வாழ்க்கையாகும். நம்மை ஒரு அற்பமாக நினைக்கும்படியும் சமுதாயத்தார் மத்தியில் அங்கீகாரமில்லாதவர் போல பார்க்கும்படியும் ஆகிவிடுகிறது. இத்தகைய வாழ்க்கை வாழ்பவர்கள் மனிதப் பிறவி எடுத்ததற்கு எந்தப் பிரயோஜனமும் இல்லாமல் போய்விடுகிறார்கள்.. 

எனவே நமது ஆரம்ப காலங்களை அலட்சியப் போக்கால் ஏதும் அறியாதவர்களாய் இருந்து உலகநடப்புக்கள் தெரியாமலும் பொது அறிவு இல்லாமலும் ஊர் தூற்றும்படி நடந்து கொள்ளாமல் பிறர் கேலிக்கும் பேச்சுக்கும் இடமளித்து இழிவுச்சொல்லுக்கு ஆளாகிவிடாமல் பலகீனமானவர்களாக இல்லாமல் புத்தியை பயன்படுத்தி தமது கடின உழைப்பிலும் நேர்மையான நடவடிக்கையிலும் முன்னேறி அறிவார்ந்த செயல்களும் சாதனைகளும் செய்து சமூகத்தாருடன் சுமூக உடன்பாடுடன் பழகி தனது வாழ்க்கையை தரத்துடன் அமைத்துக் கொண்டு எப்பொழுதும் நாம் சிரித்து வாழ்வதற்க்கான வழிமுறைகளை அமைத்துக் கொண்டு சந்தோசமாக கூடிச்சிரித்து மகிழ்வுடன் வாழ முயற்ச்சிப்போமாக...!!!

அதிரை மெய்சா

நாங்கள்தான் இலைகள் பேசுகிறோம்.. 3

அதிரைநிருபர் பதிப்பகம் | April 24, 2016 | , , ,


ஏற்றத் தாழ்வு
எங்களுக்கும் உண்டு;
கறிவேப்பிலை, புதினா , துளசி
உயர் சாதிகள்..

மனிதர்களைப் போலன்று நாங்கள்;
தேவையில்லை எனில்
கத்திரி மண்வெட்டி கதிர் அறுவாள்
ஒன்றின்மூலம் எங்களுக்கு
விசாரணையின்றி மரண தன்டனை நிச்சயம்!

காற்று எங்களோடு
கம்பெனி சேர்ந்தால் போதும்
உடனிருக்கும் இலைகளோடு
உரசி உரசி ஊர்புறணி
அளப்பதாய் ஒரே குற்றச்சாட்டு!

சில நேரம்
மழை எனும் பிரம்புகளால்
அடிபட்டு அடிபட்டு
துவண்டு மீண்டும் எழ
மூன்று நாளாகும்!

நாங்கள் சினிமா
நடிகர்களும் இல்லை! ஆனாலும்
எங்களுக்கு எப்போதும்
மூத்திர அபிஷேகம்!

ஏன்.. எங்களால்
எழுந்து வரமுடியாதெனும் தைரியத்தில்
அந்த நாய் கூட
ஒற்றைக்கால் தூக்கி....

வெறும் இலைகள் என
ஏழைகளைப்போல ஏளனமாய்
யாரும் பார்க்க வேண்டாம் !

இலைகளல்ல நாங்கள்!
இலவசமாக மனிதர்களுக்கு
மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் !

எங்கள் கிளைகள்
எங்கள் கைகள்;
வியர்க்கும்போது வசிறிகள் வீசுவோம்!

எங்களிடமும்
ரோஷக்காரி உண்டு
தங்கத்தையே தட்டுல வச்சாலும்
தண்ணீரோடு சேராது தாமரை இலை!

எங்களிலும் மழலைகள் உண்டு;
தொட்டாலே சினுங்கும்
தொட்டாச்சினுங்கிகள்!

மனிதர்களைப் போலவே
தவறுகள் செய்து திருந்தினோம்;
உசிலம்பட்டியில் தொப்புல் கொடிகளை
அரளி இலைகளால் அறுத்ததைதான் சொல்கிறோம் !

எந்த விருந்துக்காகவும் தடால் புடாலென
தட்டுக்கள் தயாரிக்கும் வாண்டையார்
வாழைக் குடும்பம் என..

ஏதோ ஒரு வகையில்
யாருக்காவது உதவிக்கொண்டே இருக்கிறோம்
உதவாக்கரைகள் அல்ல. !!!

இருந்தாலும் இறந்தாலும்
ஆயிரம் பொன்
யானை மட்டுமென
யார் சொன்னது?

நாங்கள் உறை விடத்தை விட்டு
உதிர்ந்து இறந்தாலும்
உரமாகும் வரம் பெற்றவர்கள் !!!

ஷேக் முகைத்தீன்

இயற்கை இன்பம்... 2

அதிரைநிருபர் பதிப்பகம் | April 23, 2016 | , , ,

கடல்



உலகெல்லாம்  நிறைந்திருக்கும்  நினைவுத்  தோற்றம்!

ஒன்றுக்கு  மூன்றாக  இருக்கும்  ஏற்றம்!

இலகில்லாப்  பேரலைகள்  வீசிப்  பாய்ந்தே 

இருக்கின்ற  அனைத்தையுமே  அடங்கச்  செய்து 

கலகத்தில்  பிறக்கின்ற  நீதி  போல   

கடலென்னும்  பெயர்தாங்கி  மக்க  ளெல்லாம்

செலவுக்கும்  பிழைப்புக்கும்  உதவு  கின்ற

செல்வங்கள்  தந்துதவும்  கொடையின்  வள்ளல்!   


அதிரை அஹ்மத்

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 033 12

அதிரைநிருபர் பதிப்பகம் | April 22, 2016 | ,


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

போதுமாக்குதல், பேணுதலுடன் இருத்தல், வாழ்க்கையிலும் செலவு செய்வதிலும் நடுநிலையாக இருத்தல், நிர்பந்தம் ஏதுமின்றி யாசகம் கேட்பதின்  கேடு:

அல்லாஹ் கூறுகிறான்:

பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். (அல்குர்ஆன் : 11:6)

(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். (அல்குர்ஆன்: 2:273)

அவர்கள் செலவிடும் போது விரையம் செய்ய மாட்டார்கள். கஞ்சத்தனமும்  செய்ய மாட்டார்கள். அதற்கு இடைப்பட்ட நிலையாகவே அது இருக்கும். (அல்குர்ஆன்: 25:67)

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன்: 51:56)

நான் அவர்களிடம் செல்வத்தை நாடவில்லை, அவர்கள் எனக்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை. (அல்குர்ஆன்: 51:57)

''அதிகம் சொத்து உள்ளதால், செல்வம் என்பதில்லை. எனினும் (இருப்பதைப் போதுமாக்கும்) மனதளவில் உள்ள செல்வம் தான் செல்வமாகும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 522)

''ஒருவர் இஸ்லாத்தில் இணைந்து, அவருக்குப் போதுமான  அளவுக்கு செல்வம் வழங்கப்பட்டு, அவருக்கு தான் தந்துள்ளதை போதுமாக்கிக் கொள்ளும் குணத்தையும் அல்லாஹ் வழங்கி விட்டால், அவர் வெற்றி அடைந்து விட்டார் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 523)

''(கொடுக்கும்) உயர்ந்த கை, (வாங்கும்)தாழ்ந்த கையை விட சிறந்ததாகும். உன் பொறுப்பில் உள்ளவர்களிடம் (உன் உதவியை) ஆரம்பிப்பீராக! தர்மத்தில் சிறந்தது, தேவைக்குப் போக உள்ளதில் ஆகும். ஒருவர் பேணுதலாக நடக்க விரும்பினால், அல்லாஹ் அவரை பேணுதலாக்கி வைப்பான். ஒருவர் பிறரின் தேவை இல்லாமல் வாழ விரும்பனால் அல்லாஹ் அவரை செல்வந்தராக்குவான் என்று நபி(ஸல்) கூறினார்கள்.    (அறிவிப்பவர்: ஹகீம் இப்னு ஹிஷாம் (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 527)

''நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் இருந்த நிலையில் தர்மம் செய்தல் பற்றியும் யாசகம் கேட்பதை விட்டும் பேணுதலாக இருப்பது பற்றியும் நினைவூட்டியவர்களாக, ''மேலே உள்ள கை, கீழே உள்ள கையை விட சிறந்ததாகும். மேலே உள்ள கை, கொடுக்கும் கையாகும். கீழே உள்ள கை, யாசகம் பெறும் கையாகும்;'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 531)

''ஒன்று, இரண்டு கவள உணவுக்காக, ஒன்றிரண்டு பேரீத்தம் பழத்திற்காக மக்களைச் சுற்றி (யாசகம் கேட்டு) வருபவர் ஏழை அல்ல! எனினும்  ஏழை என்பவர், அவரின் தேவையை பெற்றுக் கொள்ளாதவராக இருப்பார். அவருக்கு தர்மம் செய்யப்பட (தேவையில்லை எனும் அளவுக்கு) அவர் ஏழ்மை அறியப்படாதவராக இருப்பார். மேலும் அவர் மக்களிடம் யாசகம் கேட்டும் நிற்கமாட்டார் (இவரே ஏழையாகும்)'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 537)

யாசகம் கேட்காமலும், எதிர்பாராமலும் கிடைத்ததை எடுத்துக் கொள்ள அனுமதி உண்டு:

''நபி(ஸல்) அவர்கள் எனக்கு ஒரு பொருளைக் கொடுத்தார்கள், ''என்னை விட மிகவும் தேவை உள்ளவருக்கு நீங்கள் கொடுங்கள்'' என்று நான் கூறினேன். ''இதை எடுத்துக் கொள்வீராக. நீர் எதிர்பார்க்காமலும், கேட்காமலும் இருந்த நிலையில் ஏதேனும் ஒரு பொருள் உம்மிடம் வந்தால் அதை நீர் பெற்றுக் கொள்ளும். அதை நீர் அதிகப்படுத்திக் கொள்வீராக! நீர் விரும்பினால் அதை சாப்பிடுவீராக! விரும்பினால் அதை தர்மம் செய்வீராக! அப்படி இல்லாத ஒன்றை உம் மனதால் விரும்பிடச் செய்யாதீர்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.

தன் தந்தை அப்துல்லா இப்னு உமர்(ரலி) கூறியதாக கூறும் ஸாலிம் இப்னு அப்துல்லா அவர்கள், ''(என் தந்தை) அப்துல்லா (ரலி) அவர்கள் எவரிடமும் எதையும் கேட்கமாட்டார்கள். தனக்கு கொடுக்கப்படும் எதையும் மறுக்க மாட்டார்கள்'' என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் (ரலி)  அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 538)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
  
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு