உணவு, ஆக்சிஜன் - நாம் உயிர் வாழ்வதற்கு இவைகளும் இன்றியமையாதது என்பது உங்களுக்குத் தெரியும். உணவு, உணவுக் குழாயின் வழியாக வயிற்றுக்குச் செல்கிறது. ஆக்சிஜன், சுவாசக் குழாயின் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இதில் இரண்டு குழாய்களுமே தொண்டையின் வழியாகத்தான் பயணப்படுகின்றன என்பதைத்தான் நீங்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்(!!)
ஆக, உணவும் ஆக்சிஜனும் உடலுக்குள் செல்ல தொண்டையும் ஒரு முக்கியமான பாதையாக இருக்கிறது. இன்னொரு வகையில் சொல்வதென்றால் உணவுப் பாதையிலும் சுவாசப்பாதையிலும் தொண்டையும் ஓரு முக்கிய அங்கமாக விளங்குகிறது.
இதோடு தொண்டையின் வேலை முடிவதில்லை. உணவு, சுவாசக் குழாய்க்குள் போகாமல், சுவாசக் காற்று உணவுக் குழாய்க்குள் போகாமல் பார்த்துக் கொள்வதும் மிக முக்கியம். அந்த சிறப்பான பணியையும் பொறுப்புடன் நிறைவேற்றுவது திருவாளர் / திருமதி (செல்வன் / செல்வி) தொண்டையார்தான். பொதுவாக, சுவாசப் பாதை எப்போதும் திறந்தே இருக்கும். உணவுப்பாதை எப்போதும் மூடியே இருக்கும், உணவு சாப்பிடும்போது சுவாசப்பாதை மூடிக் கொள்ளும், உணவுப் பாதை திறக்கும்.
உணவு உள்ளே போனதும் உணவுப் பாதை மீண்டும் மூடிக் கொள்ளும், சுவாசப்பாதை திறக்கும். இந்த வேலையை EPGLOTTIS என்ற பாகம் செய்கிறது. டான்சில்ஸ் என்ற குட்டிச் சதையும் இதில் பங்கேற்கிறது.
உணவுப் போக்குவரத்து நடைபெறும்போது (இங்கேயும் நம்மில் சிலர் ஒரு கவலம் உட்சென்று இறங்குவதற்குள் அடுத்தடுத்து உள்ளே அனுப்பி டிராஃபிக் ஜாம் ஏற்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்) சுவாசப்பாதையின் வாயிலை மூடவும், சுவாசப் போக்குவரத்து நடக்கும்போது உணவுக் குழாயின் வாயிலை மூடவும் இவை பயன்படுகின்றன. இதனால், சுவாசக் குழாயில் உணவு செல்லாமல் தடுக்கப்படும். அதேபோல், காற்றும் உணவுக் குழாயில் செல்லாமல் இருக்கும், ஆனால், சாப்பிடும்போது பேசினால், பேசுவதற்காக சுவாசக் குழாய் திறக்கும். இங்கே சிக்னலில் சிக்கல் வந்தால் "யாரோ நினைக்கிறாங்கமா" என்ற ஸ்லோகன் அருகிலிருப்பவரிடமிருந்து தானாக வரும் !
இதன் காரணமாக, சிலசமயம், சுவாசக் குழாயில் உணவு நுழைந்துவிடும். இது மிகவும் ஆபத்தானது. இதனால் ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்கத்தான், உணவை சுவாசக் குழாய் வெளியே பலவந்தமாகத் தள்ளும். இதைத்தான் "புரையேறுதல்" எனக் கூறுகிறோம். இதனால் சில நேரங்களில் மூச்சுத்திணறல் ஏற்படும்.
பொதுவாக, பாடகர்களும், பேச்சாளர்களும் தங்களது தொண்டையை நன்றாக பார்த்துக் கொள்வார்கள், பராமரிப்பார்கள். ஆனால் இந்த விஷயத்தில் எங்களுக்குச் சம்மதம் இல்லை என்று மற்றவர்கள் ஒதுங்க முடியாது. ஏனெனில், நம் ஒவ்வொருவருக்கும் தொண்டை மிகமிக முக்கியம். எட்டுக்கட்டை ஸ்ருதி பாடுவது இருக்கட்டும், பிறர் காதுகளில் எட்டும் வகையில் பேசுவதற்காவது தொண்டை தேவைப்படுமே.
தொண்டையில் உணவுக் குழாயும், சுவாசக் குழாயும் சந்தித்துக் கொள்ளும் இடத்துக்கு மிக அருகில் உள்ள குரல்வளைதான் நாம் பேசுவதற்கான ஆதாரம். ஆனால், அங்கிருந்து எழும்பும் ஒலியை மேம்படுத்தி, பாலீஷ் போட்டு, இனிமையான குரலாக, கரகர குரலாக வெளிப்படுத்த வாய், கன்னம், சைனஸ் அறைகள் போன்றவற்றோடு தொண்டையும் முக்கியமாகப் பயன்படுகிறது.
தொண்டைக்குள் தாகத்துக்கும்கூட மிக நெருங்கிய தொடர்பு உண்டு. நம் அனைவருக்குமே எப்போதாவது தாக உணர்வு ஏற்படுவது இயல்புதான். முதலில் தண்ணீரின் அவசியம் புரிந்தால்தான் தாகத்தின் அருமையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். தண்ணீர் நம் உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மூன்று வாரங்கள் தண்ணீர் குடிக்காமல் ஒருவர் இருந்தால் அவர் இறந்து போவதற்கான வாய்ப்பு அதிகம்.
நம் உடலில் பொதுவாக, 47 லிட்டர் தண்ணீர் இருக்கிறது. தசைகளில் முக்கால்வாசி தண்ணீர்தான் அடங்கியிருக்கிறது. கல்லீரலில் 70 சதவீதம் தண்ணீரே. சிறுநீரகத்தில் 83 சதவீதம், மூளையில் 79 சதவீதம் என்ற அளவில் தண்ணீர் இருக்கிறது. வாயும் தொண்டையும், வறண்டுபோனால் தாகம் என்று பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல. அச்ச உணர்ச்சிகூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.
கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகும் சிலருக்கு நாக்கும் தொண்டையும் வறண்டு போகலாம் அல்லது எச்சில் ஊறும் வேகம் திடீரென்று குறைவாக இருக்கலாம். இதனாலும் வறட்சி உண்டாகி இருக்கக்கூடும். கொஞ்சம் எலுமிச்சை ஜூஸை குடித்தால் எச்சில் மீண்டும் வழக்கம்போல் சுரக்கும்.
மிக அதிகமாக எச்சில் சுரந்தால் (அல்லது சுரக்க வைக்கப்பட்டால்) தாகம் அடங்கிவிடுமா என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதில். எச்சில் சுரந்து வயிறு நிரம்பி விட்டால்கூட தாகம் ஏற்படலாம்.
சரி, இப்போது அடிப்படைக் கேள்விகளுக்கு வருவோம்.
"தாகம் ஏன் ஏற்படுகிறது. ?"
"நம் உடலில் உள்ள உப்பு, சர்க்கரை ஆகிய இரண்டும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் உள்ளன. ஏதோ ஒரு காரணத்தால் இந்த விகிதம் மாறி உப்பின் அளவு (தண்ணீரோடு ஒப்பிடும்போது) அதிகமானால் தாகம் எடுக்கும்."
நம் மூளையில் தாக மையம் (Thirst Center) என்ற பகுதி உண்டு. இது நம் ரத்தத்தில் உள்ள உப்பின் அளவைக் கண்காணித்துக் கொண்டே இருக்கும். உப்பின் சதவீதம் அதிகமானால், உடனே தொண்டையின் பின்பக்கத்தில் உள்ள நரம்புகளுக்குத் தகவலைத் தெரிவிக்கும். அந்தத் தகவல் மூளையை எட்டும். இப்படி தகவல் பரிமாற்றங்கள் நடக்கும்போதுதான் நாம் தாகத்தை உணர்கிறோம். தண்ணீர் குடித்து உப்பு - தண்ணீர் விகிதத்தை சரி செய்கிறோம்.
தொண்டையின் தொண்டு பற்றி விரிவாகப் பார்த்தாகிவிட்டது. இனி, தொண்டையில் ஏற்படும் சின்னச் சின்ன தொந்தரவுகளையும் வரிசையாகப் பார்க்கலாம்.
அங்கே இருமல், விக்கல் தும்மல் என்ற தொண்டர் அணியின் அணிவகுப்பை அடுத்தடுத்து பார்க்கலாம்....
சொடுக்குத் தகவல்:-
அடிக்கடி ஏப்பம்! ஏற்படக் காரணம் என்ன ?
உணவுக் குழாய் உள்ளே காற்று இருப்பதனால் ஏப்பம் வருகிறது. சாப்பிடும்போது அதிகமாகப் பேசுவது, கரிய மில வாயு கலந்த பானங்களை குடிப்பது, புகைப்பிடித்தல், இவற்றி ஏதாவது ஏப்பம் வரக் காரணமாக இருக்கும். வாயிலும், தொண்டைக் குழியிலும் இருக்கும் காற்று, வயிற்றுக்கும் குடலுக்கும் செல்லாமல் வாயின் வழியாக ஏப்பமாக வருகிறது. சாப்பிடும்போது அதிகமாக பேச வேண்டாம். குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும். புகைப் பழகத்தில் இருந்து மீள வேண்டும். இவற்றைச் செய்தாலே ஏப்பம் வருவது பெரும்பாலும் நின்றுவிடும்.
இப்படிக்கு,
இப்படிக்கு,
கா.மூ.தொ. முற்போக்கு கூட்டனி.
நன்றியுடன் : காது-மூக்கு-தொண்டை (பிரச்சினைகள் - தீர்வுகள்) கையடக்க புத்தகத்திலிருந்து (காசு கொடுத்து) சுட்டதும், மனதைத் தொட்டதும்... அங்கே சுவாசித்ததும் உங்களின் மேலான பார்வைக்கு... - அபுஇபுறாஹிம்.


