Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை த.மு.மு.க.வின் விளக்கம் - காணொளி ! 46

அதிரைநிருபர் | June 30, 2012 | , ,

கடந்த சில நாட்களாக அதிரையில் பரப்பரப்பாக பேசப்படும் செய்தி மாட்டுக்கறி வியாபாரத்துக்கு தடையா / தடையில்லையா? என்பதுதான். இது தொடர்பாக அதிரை பேரூராட்சி மன்றத் தலைவர் சகோதரர் S.H.அஸ்லம் அவர்கள் நமது சகோதர வலைத்தளங்களில் அவர்களின் நிலையை மக்கள் மத்தியில் விளக்கமாக எடுத்துரைத்தார், மேலும் அதிரை தமுமுக மீது சில குற்றச்சாட்டுகளையும் அதில் முன் வைத்தார்கள்.

இதன் தொடர்ச்சியாக, சமுதாய சேவை செய்கிறோம் என்று சொல்லுகிறீர்கள் ஆனால் பேரூராட்சி மன்றத் தலைவர் அவர்கள் அதிரை த.மு.மு.க. பற்றி பட்டியலிட்டு குற்றம் சாட்டியுள்ளார் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று பொதுமக்களின் வேண்டுகோளுடன் அதிரை தமுமுக நிர்வாகிகளை அனுகினோம். அதன் காணொளியினை இங்கே பதிந்துள்ளோம்.

சகோதரர் செய்யது பேட்டி

சகோதரர் அஹமது ஹாஜா பேட்டி

சகோதரர் சாகுல் ஹமீத் பேட்டி

பட்டுக்கோட்டை பஜக, இந்து முன்னனியினரிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் நகல்கள், மற்றும் அதிரை பேரூராட்சி கூட்ட அழைப்பு நகல்.




இந்த பேட்டி இயக்கங்கள் அல்லது தனிநபர் இவர்களில் யாரையும் உயர்த்தவோ தாழ்த்தவோ அல்ல, நம் சகோதரர்களுக்கிடையே புரிந்துணர்வு ஏற்படவேண்டும், பகைமை போக்கவேண்டும். சம்பத்தப்பட்ட இருசாராரும் தங்கள் தரப்பில் உள்ள தவறுகளை உணர்ந்து, ஒருவருக்கொருவர் பகை மறந்து ஒற்றுமையுடன் அவர்களின் சமுதாய சேவையை செய்யவேண்டும் என்பதே அதிரை மக்கள் அனைவரின் ஆவல். இதனை நிறைவேற்றுவார்களா ? பொருத்திருந்து பார்ப்போம் !.

-அதிரைநிருபர் குழு
editor@adirainirubar.in

எழுது ஒரு கடுதாசி... ! 54

அதிரைநிருபர் பதிப்பகம் | June 29, 2012 | , , ,


கிராமங்களில்தான் ஒரு நாட்டின் கலாச்சார உயர்வுகள் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. கிராமங்களில் வளர்ந்தவர்கள், பெருநகரத் தெருக்களில், கிராமிய மணங்கமழ தம் பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை நெறிகளையும் நினைவுகூர்ந்து உரையாடும்போதும், அவை தொடர்பான எண்ணங்களை பரிமாறிக் கொள்ளும்போதும், பெருநகரத்துச் செயற்கை நாடகங்களால் உள்ளே செத்துக்கிடக்கும் அத்தனை உணர்வுகளும் உயிர்பெற்று மீண்டும் புலர்ந்துவிடுவது இன்றும் நம்மை நம் அடிப்படைப் பண்பு மாறாமல் பாதுகாத்துவருகின்ற வரம். 

இங்கே ஒரு கிராமத்து மகன், புகைப்படத்தையும் உறவினர்களின் பரிந்துரைகளையும் மட்டுமே முழுமனதுடன் ஏற்று, ஒரு வண்ண நிலவை வாழ்க்கைத்துணையாக்க நிச்சயம் செய்கிறான். உரையாடுவதோ கடிதம் வரைவதோ ஏற்றுக்கொள்ளப்படாத அந்த கிராமத்தில், பெருநகர வாழ்க்கையின் தூண்டுதலால், அவளிடம் கடித சுகம் கேட்டு அவன் எழுதும் கடிதமே இந்தக் கவிதை.

அவர்களின் நாட்டுப்புற நடையிலேயே நடக்கிறது.


நேத்துவர எம்மனச
நெலப்படுத்தி நானிருந்தேன்
பாத்துவச்ச தாய்தம்பி
பருசமுன்னு சொன்னாங்க


வேத்துவழி தெரியாம
விழுந்தேன் நான் வலைக்குள்ள
ஊத்தாட்டம் எம்மனசு
ஒன்னெனப்பா பொங்குதிப்போ


பாழான எம்மனசு
பனியே ஒன் வசமாயி
நாளாவ நாளாவ 
நீ நடக்கும் நெலமாச்சி


மாளாத கனவாச்சி
மங்காத நெனப்பாச்சி
தாளாத தனிமையில
தீராத ஆசையில


வாடாத மருக்கொழுந்தே
வத்தாத தேனூத்தே
போடேண்டி கடுதாசி
பொல்லாத மனசமாத்தி


போடாட்டி எம்மனசு
புண்ணாகிப் போகூன்னு
மூடாத முழுநிலவே
மச்சினனத் தூதுவிட்டேன்


ஆடாத மனசோட
அசையாத மொகத்தோட
போடாம கடுதாசி
புதிராக இருந்துட்டே 


வாடாத எம்மனசும்
வாடிப்போய்க் கெடக்குதடி
கூடாத காரியமா
குத்தமுன்னு யாருசொன்னா 


தாத்தா சொன்னாரா
தாய்மாமஞ் சொன்னாரா
பூத்த புதுப் பூவாட்டம்
போட்டாவக் கொடுத்தாங்க


கூத்தாத் தெரியலியா
கூடாது கடிதமுன்னா
வேத்தாளு ஆனேனா
வீணாயேன் மறுத்தாங்க 


யாருவந்து கேட்டாங்க
ஏம்பரிசம் போட்டாங்க
ஊரயெல்லாங் கூட்டிவச்சி
ஒன்னெனப்பக் கொடுத்தாங்க


நீரயள்ளி எறைச்சாக்கா
நெலம் ஈரம் ஆவாதா
தூரநாடு வந்ததால
தொலையுதுன்னு போவாதா 


தேர இழுத்தும் இப்போ
தெருவசந்தங் காணலியே
பூவப் பரிச்சும் இப்போ
புதுவாசம் வீசலியே


நாளமெல்லப் போக்காத
நரகத்துல தள்ளாத
யாருநின்னு தடுத்தாலும்
எழுதமட்டும் தயங்காத


நாந்தான ஒங்கழுத்தில்
நல்லமல்லி மாலையிடுவேன்..
வாந்தாலும் எங்கூட
வாடினாலும் எங்கூட


நாந்தானே ஒனக்கூன்ன
நாடறிஞ்ச சேதிய நீ
ஏந்தாமத் தூங்காத
எழுது ஒரு கடுதாசி


-அன்புடன் புகாரி

திர்ஹம் 45/=க்காக ! என்னங்க நடந்தது சார்ஜாவில் !? 12

அதிரைநிருபர் பதிப்பகம் | June 29, 2012 | , , , , ,


நேற்றைய தினம் கல்ஃப் நியூஸ் பத்திரிகையை மேய்ந்து கொண்டிருக்கும் போது வழமையான தகவல்களும், ஒருசில நெருடல்களும் இருக்கும் அந்தச் செய்தித் தாளில் சட்டென்று நம் கவனத்தை இழுத்த செய்தி ஏதோ ஒரு விடயத்தை மறைமுகமாக சொல்வதுபோல் இருந்தது.

அந்தச் செய்தியின் சாரம் இதுவே... !

கிளியரன்ஸ் சேல்ஸ்"ல் வாங்கிய முடிவெட்டும் மெஷின் (trimmer) திர்ஹம் 45/-க்கு வாங்கியவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று திரும்பி வந்து அது வேலை செய்யவில்லை என்று திரும்பிக் கொடுக்க வந்திருக்கிறார். கடைக்காரருக்கும் அந்த கஸ்டமருக்கும் வாக்குவாதம் தொடர்ந்ததோடு அன்றைய பொழுதின் இரவு 10:30 மணிக்கு அந்த கஸ்டமர் தனது பரிபாளங்களுடன், மறைக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு அந்த கடைக்காரை தாக்கியிருக்கின்றனர்.

இந்த சம்பவம் சார்ஜா அல்குரைர் மார்கெட்டிற்கு புதுசு, இதுமாதியான சம்பவங்கள் என்றுமே நடந்ததில்லை(யாம்), அனைவரும் அதிர்ச்சியிலும் தாக்கப்படுபவரை பாதுகாக்க சென்றவர்களுகெல்லாம் கத்திக் கீறல்கள், கத்தி குத்து அடி உதை. ஏதோ சினிமா போர்க்களம் போல் இருந்தது என்று சுற்றியிருந்தவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

திர்ஹம் 45/-க்கு அந்த இடத்தையே போர்க்களம் போன்று மாற்றியவர்களின் வன்மனம் எதைச் சொல்கிறது... ?

Row over Dh45 hair trimmer triggers deadly Sharjah knife frenzy

Sharjah attack survivor recounts the terrifying moment when his assailants pinned him to the ground and thrust a knife into his chest
By Mazhar Farooqui, Deputy EditorPublished: 22:17 June 27, 2012 ::: நன்றி : GULFNEWS.com

Sharjah: The survivor of a horrendous attack that left one dead and four injured in Sharjah’s bustling Al Ghuwair Market in Rolla said his knife wounds will heal but the scars will constantly remind him how men can turn into savage beasts – for something as trivial as a dispute over a Dh45 hair trimmer.


“Even the most absurd movie plot will not have 15-20 men fighting with swords and knives over a trimmer,” said Khalil Mattumal, smiling wryly through the pain.

The 33-year-old Indian suffered multiple stab wounds when he tried to save a relative from the wrath of the armed men last Saturday night. It was a futile attempt. His relative Mohammad Sharief 33,  succumbed to his wounds at the hospital.

“I could have been dead too,”  said Mattumal as he recalled the terrifying moment when his assailants pinned him down to the ground and thrust a knife into his chest. “There were two of them. One of them was burly. There was a crazed frenzy in his eyes as he slashed me with a  knife. As I lay bleeding heavily, I thought of my daughter. I thought I would never see her again.” 

Mattumal’s elder brother Nooruddin, 40, rushed to their aid with a friend, Hisan, from a neighbouring shop but they were outnumbered.   

“They were so many of them and they were armed with stick, swords and knives. We didn’t stand a chance,” said Nooruddin, who got stabbed in the stomach and was rushed to Kuwait Hospital. He was discharged on Monday afternoon. “I have been living in Sharjah for almost two decades. I have never seen anything more frightening.”  

Mattumal said both he and the deceased hail from Kasargod, Kerala. “Sharief has left behind two small children. Now they will grow up without him in the knowledge that their father  was killed over something so petty. My wounds will heal but the stitch marks will always remind me of how  men turn into animals when they lose sanity,” said Mattumal.

According to him, Sharief got into an argument with a Pakistani customer who wanted to return a hair trimmer he bought from a clearance sale on Friday evening at Sharief’s electronic shop.

What started off as a minor dispute snowballed into a major fight the following night when the customer returned with several of his friends and stormed Sharief’s shop around 10.30pm.

On Sunday, the Al Ghuwair market remained closed as a mark of respect for Sharief who had run his shop there for the past 15 years. Sharjah Police have  rounded  20 Pakistani men in connection with the crime.


-அதிரைநிருபர்-குழு

பரீட்சையை கண்டுபிடித்த புண்ணியாவனே ! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | June 29, 2012 | , , , ,

1980 - 90களில்... நினைவலைகள் !

பரீட்சை அப்டீங்கற விஷயத்தை கண்டுபிடிச்ச புண்யவான் யாருன்னு தெரியலை.. - அவர் தலை மேல.! ஆவல் தீர குட்டனும்னு கோபம் கோபமா வருதே !

பின்ன என்ன தலைவா.. பரீட்சைன்னு ஒண்ணு வெச்சா, ரிசல்ட்ன்னு ஒண்ணு வந்து தொலைக்குது.. எந்த பயத்தையும் விட இந்த ரிசல்ட் பயம் தான் பெரிய பயமா இருக்கு..!

பத்தாங்கிளாஸ்.. அதாங்க, எஸ்.எஸ்.எல்.சி-க்கு போனவுடனே, ஆளாளுக்கு 'பப்ளிக் எக்ஸாம்' 'பப்ளிக் எக்ஸாம்'னு நமக்கு பிரஷரை ஏத்துவாங்க.. வீட்ல நிம்மதியா கதை புக் படிக்க முடியாது, டிவி பாக்க முடியாது.. அட, ஒரு கல்யாணம், விசேஷம்னு யாராச்சும் கூப்பிட வந்தா, அவங்க கூட கொஞ்ச நேரம் பேசக் கூட விடமாட்டாங்க. படி படின்னு ஒரே ரோதணை. நாம படிச்சே தீரணும்னு ஒரு கூட்டமே நமக்கு எதிரா திரண்டிருக்கும்.

பரீட்சை நேரத்துல ஏற்கனவே பயந்து இருக்க நமக்கு, அட்வைஸ் பண்றேங்கற பேர்ல ஆளாளுக்கு ஆடியோ பேதி மருந்து குடுப்பாங்க.. இந்த பாட புஸ்தகம் இருக்கே.. ஹப்பா.. எனக்கு அதை தொறந்த அஞ்சாவது நிமிஷம் கொட்டாவி வரும், ஆறாவது நிமிஷம் தூக்கம் வரும். எட்டாவது நிமிஷம் டீ வரும்.

உம்மா டீ குடுக்கும் போது அவங்களை பாத்தா பாவமா இருக்கும். நம்மளை என்னவோ 'உலகம் சுற்றும் வாலிபன்' லெவலுக்கு மதிச்சு, மாத்தி மாத்தி டீ போட்டு குடுத்துகிட்டே இருப்பாங்க.. அது என்னமோ, என்ன மாயமோ தெரியலை.. அந்த டீயை குடிச்சா இன்னும் நல்லா Fresh-ஆ தூக்கம் வரும்.

பரிட்சை நேரத்துல என்னைத் தவிர எல்லாரும் என் படிப்பு மேலயே அக்கறையா இருப்பாங்க.. பத்தாக்குறைக்கு டிவில வர்ற விளம்பரம், பத்திரிகைகள்ல வர கட்டுரை எல்லாமே படிப்பு.. படிப்பு.. படிப்பு பத்தி தான்.

எனக்கு ஒரு சந்தேகம்.. அது எப்படி பரிட்சை நேரத்துல மட்டும் இந்த பாழாப்போன ஜுரம் வந்து தொலைக்க மாட்டேங்குது.?

ஒரு வழியா கடைசி பரிட்சைய எழுதி முடிச்சதும் மனசுக்குள்ள வந்த சந்தோஷம் இருக்கே.. ஹைய்யோ.. அடுத்த ஒரு மாசம் கிரிக்கெட், ஃபுட்பால், ஃபிரண்ட்ஸ்னு கலக்கலா போச்சு..

காலைல எழுந்து பசங்களோட ஜாகிங்.. வீட்டுக்கு வந்து காலை சாப்பாடு, மைதானத்துக்கு போய் கிரிக்கெட், மறுபடியும் வீடு. குளியல். சோறு. கிளம்பி தெருவில் இருக்கும் முச்சந்தியில் நிற்பது இல்லாட்டி ஏதாவது குளக்கரையோரம் அரட்டை, டிவி, பிரவுசிங் சென்டர், நொறுக்கு தீனி, மறுபடியும் கிரிக்கெட். 6.30 மணிக்கு மேல Flood Light மேட்ச் நடக்கற இடத்துக்கு போய் அலப்பறை. ஆஹா.. நிம்மதியா போய்கிட்டிருந்தது.

"பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.. வரும் ஜூன் மாதம்.. " உம்மாடியோவ்.. அதுக்குள்ள ரிசல்ட்டா..?! என்ன அவசரம்.. நல்லா பொறுமையா டயம் எடுத்து இன்னும் ஒரு ரெண்டு மூணு மாசம் கழிச்சு ரிசல்ட்டை வெளியிடலாமே.."

நல்லா படிக்கற பசங்களுக்கு கவலை இல்லை.. கண்டிப்பா புட்டுக்கும்னு தெரிஞ்ச பசங்களுக்கும் கவலை இல்லை.. என்னை மாதிரி மதில் மேல் மியாவ் தான் இதுல அவஸ்தைபடறோம்.

இன்னும் பத்து நாள்ல ரிசல்ட் வரப் போகுதுன்னு தெரிஞ்ச உடனே, எனக்கு மனசு பக் பக்குனு அடிக்க ஆரம்பிச்சிடுச்சு.. "பாஸ் பண்ணிடுவ இல்லை..?"னு மாமா கேக்கும்போது "கண்டிப்பா.."ன்னு பலவீனமா சொன்னேன். மாமா என் கண்ணையே ஒரு 3 செகண்ட் பாத்துகிட்டு இருந்தார்.. ஒருவேளை மாமாவுக்கு நாம கணக்கு பரிட்சை சரியா எழுதலைன்னு தெரிஞ்சிருக்குமோ..?

மாமா நகர்ந்ததும் உம்மா வந்து, " நல்லா தானே எழுதியிருக்க.. பாஸ் பண்ணிடுவ இல்லை..? யாரும் என்னை மதிக்க மாட்டா.. நீ பெயில் ஆயிட்டா  ரொம்ப இளக்காரமா போயிடும்டா.." அதாவது, நான் பாஸ் பண்ணி ப்ளஸ் ஒன் போறது கூட முக்கியமில்லை.. உறவுக்காரங்க மத்தில தலைக்குனிவு வந்திடக் கூடாது..! என்ன உலகம்டா இது..!

மறுநாள் பேப்பர் படிச்சிட்டிருந்த மாமா, கண்ணாடியை கழட்டி வெச்சுட்டு, பாத்ரூமுக்கு போயிருந்தார் போல.. நான் கண்ணாடியை பாக்காம, பேப்பரை அப்டியே எடுக்க, கண்ணாடி 'க்ளிங்' ஆயிடுச்சு..!

மாமா வந்து உடைஞ்சிருந்த கண்ணாடியை பாத்தார்.. கண்ணாடி போடாத மாமாவோட முகத்தைப் பார்க்க சிரிப்பாய் இருந்தது. என்னை முறைச்சது கூட பரவால்ல.. திட்டியிருந்தா கூட திருப்தியா இருந்திருக்கும்.. ஒண்ணும் சொல்லலை.. உடைஞ்ச துண்டுகளை ஒரு பேப்பர்ல எடுத்து போட்டுகிட்டு, " ரிசல்ட் வரட்டும்.."ன்னு சொல்லிட்டு போயிட்டார். கண்ணாடி உடையறதுக்குக்கும், என் ரிசல்ட்டுக்கும் என்ன சம்மந்தம்.. ? கண்ணாடியை உடைச்சதுக்கு திட்டித் தொலைக்க வேண்டியது தானே. ரிசல்ட் புட்டுகிச்சுன்னா, இதுக்கு சேத்து வெச்சு.. ஐயோ..!

இறைவா.. நான் எப்படியாவது பாஸ் ஆகிடணும்.. இந்த ஒரு தடவை மட்டும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணு...!

எங்க செட்ல யாரெல்லாம் பெயில் ஆவான்னு யோசிச்சு பாத்தேன்.. ம்ஹூம்.. சொல்ல முடியாது.. எல்லாருமே பாஸ் ஆனாலும் ஆயிடுவானுங்க.. நான் மட்டும் பெயில் ஆகி, மத்தவன் எல்லாம் பாஸ் ஆகிட்டா.. உம்மாடியோவ்.. அதுமட்டும் நடக்கக் கூடாது.. குறைந்தபட்சம், பக்கத்து வீட்டு நண்பன் மட்டுமாவது பெயில் ஆயிடணும்.. அவன் பிட் அடிச்சிருப்பானோ.. இறைவா.. என்னை பாஸ் பண்ண வெக்க முடியாட்டி, அட்லீஸ்ட் எனக்கு கம்பெனி குடுக்க ஒரு நண்பனையும் பெயில் ஆக்கிடு.. டீலிங்..!

அதுக்கப்பறம் எந்த எதிர்மறையான வார்த்தைகள் காதுல விழுந்தாலும், அது என் ரிசல்ட்டை பத்தி ஞாபகப்படுத்திகிட்டே இருந்தது. 'போச்சு' 'வராது' 'இல்லை'ன்னு எல்லா வார்த்தைகளையும் மாத்தி மாத்தி யாராவது சொல்லிகிட்டே இருந்தாங்க.

பஸ்ல போயிட்டிருக்கும்போது, என் கணக்கு பேப்பரை திருத்தும்போது, திருத்தரவருக்கு பைத்தியம் பிடிச்சு, நூத்துக்கு 80 மார்க் போடற மாதிரி பகல் கனவெல்லாம் கண்டேன்.. திட்டமிட்டு காணும் கனவு எல்லாம் பலிக்குமான்னு தெரியலை.

ரிசல்ட் வந்த அன்னிக்கு பசிக்கவே இல்லை.. உம்மா என்னை விடாம "சீக்கிரம் சாப்பிட்டுடு.."ன்னு வம்படியா சாப்பிட வெச்சாங்க.. அன்னிக்கு வீட்ல எல்லாரும் மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி இருந்தாங்க.. மாமா ஆபிஸுக்கு போவாரா மாட்டாரான்னு சந்தேகமா இருந்தது.. இறைவா.. அவர் கிளம்பி ஆபிஸ் போயிடணும்.. வம்படியாக பிரார்த்தனை முணுமுணுத்தது...

இப்ப மாதிரி ரிசல்ட்டை பிரவுசிங் சென்டர்ல எல்லாம் போய் பாக்க முடியாது.. பேப்பர் தான்.

ரிசல்ட் பேப்பர் இப்ப வரும்.. அப்ப வரும்னு அலைகழிய வெச்சிட்டாங்க.. பக்கத்து தெரு, அடுத்த தெருன்னு நாயா பேயா அலைஞ்சு, பேப்பரை வாங்கினா கை காலெல்லாம் நடுங்குது.

பேப்பர்ல நம்பரை தேட முடியலை.. கண்ல பூச்சி பறக்குது.. வயத்துல பட்டாம்பூச்சி பறக்குது.. பேப்பர்ல டுடோரியல் காலேஜ் விளம்பரம் எல்லாம் போட்டிருக்காங்க.. ஒரே அபசகுனமா இருக்குது..

என் நம்பர் சுத்தமா மறந்து போச்சு.. பேப்பரை தரைல விரிச்சு, அது மேலயே மண்டி போட்டு உக்காந்து, நம்பரை ஞாபகப்படுத்தி, கஷ்டப்பட்டு தேடிப் பாத்ததுல.. நம்பர் இல்லை.. இன்னொரு தடவை ஒழுங்கா பாக்கறேன்.. ம்ஹூம்.. இல்லை.. என்னமோ தெரியலை.. எல்லா டென்ஷனும் போய், நிம்மதியா இருந்தது..

நாம ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் மார்க் எதிர்பார்த்து அது வரலைனா வருத்தப்படலாம்.. பேப்பர்ல போட்டோ வர வேண்டாம் பாஸ்.. வெறும நம்பர் மட்டும் வந்தா போதும்னு பொன் செய்யும் மருந்தா மனசை வெச்சிருக்கோம்.. அதுக்கு கூட வழியில்லாம போயிடுச்சு..

திடீர்னு பக்கத்து வீட்லேந்து பயங்கரமா சத்தம் கேட்டது.. நண்பனை திட்டிகிட்டிருந்தாங்க.. ஆஹா.. அவனுக்கும் புட்டுகிச்சா..?! நன்றி நண்பா..!

மேட்டரை கன்ஃபர்ம் பண்ணிக்க பக்கத்து வீட்டுகிட்ட போனேன். பக்கத்து வீட்டு பையனும் உங்கூட தானே படிக்கறான்.. அவன் பாஸ் பண்ணிட்டான்.. நீயும் இருக்கியே தண்டம்.. தண்டம்.. "

என்ன சொல்றாங்க.. நான் பாஸா.. ? எப்படி?

அட, ஆமா.. பதட்டத்துல என் நம்பருக்கு பதிலா நண்பர்களின் நம்பரை மட்டுமே பேப்பர்ல தேடியிருக்கேன்.

பேப்பரை எடுத்து பார்த்ததுல, என் நம்பர் என்னைப் பார்த்து கண் அடிச்சுது.

மாமா வீட்டுக்குள்ளேயிருந்து பயங்கர சந்தோஷத்துடன் வெளியே வந்து, முதுகைத் தட்டி விட்டு ஆபிஸுக்கு போனார். கண்ணாடி போடாத மாமாவின் முகம் இப்ப அழகா இருந்தது.

மறுபடியும் மறுபடியும் பேப்பரை தரைல பரப்பி, என் நம்பரை பாத்துகிட்டே இருந்தேன்.

இப்ப நினைச்சு பாத்தா அந்த ரிசல்ட் டென்ஷன் இருக்கே, அதுவும் ஒருமாதிரி நல்லா தான் இருக்கு, இல்லை.!
குறிப்பு : சமீபத்தில் ஒரு பிரபல வரப்பத்திரிகையில் வெளியான இந்த கட்டுரையை வட்டார பேச்சு மொழி இணைத்து சின்ன சின்ன நெறியாடல் செய்து வித்தியாசமான ரசனையாக அந்த மீடியம் கிளாஸ் மாணவனின் ஏக்கத்தில்தான் இந்தப் பதிவு...


இப்படிக்கு இவ்வாறன அவஸ்த்தைகளில் சில வற்றை அனுபவித்த...


அன்றைய மாணவன்


-அபுஇபுறாஹிம்

மூன்றாம் கண் - பேசும்படம் தொடர்கிறது...! 42

அதிரைநிருபர் பதிப்பகம் | June 28, 2012 | , , , , ,


ஒரு நாட்டின் தரத்தை நிர்ணயிப்பதில் முக்கியமான பங்கு வகிப்பதில் ஒன்று அந்த நாட்டின் சாலைகள். இன்றைய காலகட்டங்களில் நம்நாட்டின் சாலைகள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால், ஓட்டுனர்களும் பாதசாரிகளும் இன்னும் நம் நாட்டின் சாலைகளின் தரத்திற்கு தங்களை உயர்த்திக் கொள்ளவில்லை. அதுபோல் ஹாரன் அடிப்பதிலும் ரோட்டின் நடுவில் நடந்து வாகனகளுக்கு இடைஞ்சல் கொடுப்பதிலும் நம் மக்களை மிஞ்ச உலகில் ஆட்களே இல்லை.

ட்ராக்டரில் பாட்டு கேட்டுக்கொண்டு வண்டி ஓட்டும் அவலமும், பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் ரோட்டின் விளிம்பில் உட்கார்ந்திருக்கும் அவலமும், விபத்தில் சிக்கியவரின் உயிரை காப்பற்றாமல் அவர் அணிந்திருக்கும் பொருட்களை திருடும் அவலம்.

பொறுப்புடன் இருக்க வேண்டியவர்கள் அனைவருமே ! அதிலும் பொதுமக்களுக்காக வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களின் மெத்தனம், ஸ்தரமின்மை, வாகனம் ஓட்டும்போது செல்ஃபோனில் பேசிக் கொண்டே ஓட்டுவது. எதிர்பாராமல் சென்னை அண்ணா மேம்பாலத்தில் கவிழ்ந்த பேருந்து விபத்து ஒரு சாட்சி.

சமீபத்தில் தமிழ்நாடு போக்குவரத்து காவல் துறை தலைவரின் ஆலோசனை "வழிவிட வலப்பக்கம் இருக்கும் இண்டிகேட்டரை போடலாம்" என்பதே!. இவைகளுக்கெல்லாம் எவ்வித சலனமும் இல்லாமல் தான் உண்டு தன் வழியுண்டு என்று இருக்கும் சிட்டியிலிருந்து ஒதுங்கியிருக்கும் ரோடுகளின் அணிவகுப்பை இங்கே பார்ப்போம்:-


ஆலம் விழுதுகள் கைக்கு எட்டினால் இந்த விழுதுகளை கலவானி பயல்கள் கொண்டுபோய் விடுவார்கள் என்று அந்த மரத்திற்கும் விளங்குமோ?!!


அதிரை நிருபருக்காக போட்டோ எடுக்க சென்றால் இந்த ஆட்டுக்குட்டிகள் எங்கிருந்துதான் வருகின்றதோ தெரியவில்லை 


அதிரை பட்டுக்கோட்டை ரோட்டின் ஒரு அதிகாலை போட்டோ 


கோடைக்கு அம்மாவின் ஆட்சியில் இலவச குளிரூட்டிய பரந்தவெளி... அங்கே சட்டசபை மேசைகள் அதிருது...

//பனி படர்ந்ததால் யாரும் பணிக்கு போகவில்லையோ பினி வந்துவிடும் என்று //


அதிக அழுத்தம் கொண்ட மின்சாரம்(????) அதிரைக்கு அடிக்கடி வருவதனால் (!!!!) அதன் வெயிட் (!!) தாங்க முடியாமல் அந்த கம்பியிலேயே தூக்கு மாட்டிக் கொண்டு தொங்கும் மின் கம்பம்.

//கரண்டு இல்லை என்று சொல்லி இந்த EB போஸ்ட் கரண்டு கம்பியில் தூக்கு போட்டுக்கொண்டு செத்துவிட்டதோ //

//ஊருக்கு உழைத்த சகோதரன் ஒருவரின் உயிரை குடித்ததில் வெட்கித் தலைகுனிவா ? இல்லை மின்சாரத் துறையின் மெத்தனம் கண்ட வெதும்பலின் தலைக்குனிவா ? //


என்னதான் சாலைகள் மேம்பட்டு இருந்தாலும் இந்த கிராமங்களின் ரோடுகள் என்றும் மனதை விட்டு அகலாது 


இந்த பிரிவு ரோடு நம்மை சுருக்க கொண்டுபோய் அதிரையில் விட்டுருமாமே (பைக்கை நாய் தொறத்தினால் சீக்கிரம் ஊர் போயிறலாம் என்று யாரோ பைக் ஓட்டி புலம்புவது காதில் விழுகின்றது )


இது வரைகலையில் வலைந்தத மின் கமபம் அல்ல, வராத மின்சாரத்திற்கு முட்டு எதற்கு என்று தலைமுறித்து குனிந்திருக்கும் மின்கம்பம்.

//பார்த்து போங்கோ EB போஸ்ட் பேய் புடுச்சிரபோவுது //


இந்த இடம் அதிரையின் பெர்முடா என்று சொல்லலாம் அந்த அளவுக்கு இந்த இடத்தில் விபத்துகளும் விபரீதங்களும் நடக்கின்றன 


இது எந்த இடம் என்று துல்லியமா சொல்பவருக்கு நம்ம கவிகாக்காவும் அசத்தல் காக்காவும் பரிசு கொடுப்பார்கள் 


இந்த ஏறி மழை பெய்தால் தண்ணீர் ஓடும் மறுநாள் வண்டி ஓடும் (அதெல்லாம் இருக்கட்டும் விளிம்பில் நிற்பவர் நீரில் குதிக்க நிற்கின்றாரா அல்லது koodai குளிருக்கு வெயில் நிற்கின்றாரா சரியாக பதில் சொல்பவருக்கு வெள்ளை தொப்பி, கம்ஸு சட்டை, பச்சை பெல்ட் பரிசு நிச்சயம் உண்டு).

சாலை விதிகள் மதிப்போம், அதன்படி நடப்போம், தலைமுறைகளை பாதுகாப்போம். சாலை விபத்துக்கள் இல்லாத சாலை அமைத்து கொண்டாடுவோம்.

மூன்றாம் கண்ணுடன்...
-Sஹமீத்

பொய்...! 37

அதிரைநிருபர் பதிப்பகம் | June 27, 2012 | , ,


ஒரு மனிதன் தானும் தன்னைச் சார்ந்தவரும் செய்கின்ற தவற்றை மறைப்பதற்காகவும், தன்னை சமூகத்தில் “நல்லவன்” போல் காட்டிக்கொண்டு அதை மற்றவர் முன் நடித்து வெளிப்படுத்துபவர்களும் பயன்படுத்தும் ஆயுதமே “பொய்” 

சிலருக்கு பொய் கூறுவதென்பது குற்றால அருவியிலிருந்து நீர் கொட்டுவது போல் அவ்வளவு சுலபமாக வரும். எதற்கெடுத்தாலும் நூர் லாட்ஜ் கடை “ஹல்வா” போல பொய்யைத் தயாராக வைத்திருப்பார்கள். இவர்களுக்கு தங்களின் பொய்யினால் காரியத்தை சாதித்து விட்டோம் என்ற “கெத்து” வேறு. ஒருவன் “பொய்” சொல்லும் போது அவனின் கண் புருவங்களையும், உதட்டையும் கவனித்தாலே போதும்......காட்டிக்கொடுத்து விடும்.

1. விளையாட்டுக்காகவும், அடுத்தவர்களை சிரிக்க வைப்பதற்காகவும் பொய் சொல்பவரும் சரி.............

2. இல்லாத ஒன்றை மிகைப்படுத்தி தன்னிடம் இருப்பதாக கூறிக்கொள்பவரும் சரி..............

3. தன்னிடம் இருக்கும் ஒன்றை இல்லாதது போல் காட்டிக்கொள்பவரும் சரி...............

4. வீட்டில் இருந்துகொண்டே இல்லை என அவரிடம் சொல் என சொல்பவரும் சரி.............

5. ஒரு பொய்யைச் சொல்லி அதை மறைப்பதற்கு மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்பவரும் சரி.............

6. சமூகத்தில் தன்னை உயர்த்திக் காட்டுவதற்காக பொய் சொல்பவரும் சரி.............

7. வியாபாரத்திற்காக பொய்யை மூலதனமாக பயன்படுத்துபவர்களும் சரி............

8. பொய்யானக் காரணத்தைக் கூறி கடன் கேட்பவர்களும் சரி.............

9. பிறருக்காக சாட்சி சொல்லும்போது பயன்படுத்துபவர்களும் சரி...............

10. இறைவன் மீது பொய் சத்தியம் செய்பவர்களும் சரி..............

என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

பொய் சொல்பவனுக்கு தான் சொன்ன ஒரு பொய்யை மறைக்க பல மடங்கு பொய்கள் சொல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு, இதனால் யாருக்கு எந்த இடத்தில் என்ன சொன்னோம் என்பதும் மறந்து, வாழ்க்கையில் சிக்கலான நிலை ஏற்படக்கூடிய அபாய நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள். 

மேலும் பொய் பேசுவது என்பது மனித சமுதாயத்தை சீர்கேட்டிற்கு இட்டுச் செல்லும் ஒரு தீயச்செயலாகும். இப்படி தனி மனித ஒழுக்கத்திற்கும், பிறர் நலனுக்கும் கேடுவிளைவிக்கும் இத்தகைய ஈனச்செயலை விட்டொழிக்க முன்வர வேண்டும்.

இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட சூழல்கள் :

அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் பொய் பேசுவது என்பது அனைத்து விஷயங்களிலும் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட கீழ்கண்ட மூன்று விஷயங்களில் அளவுக்கு மீறாமல் பொய் அனுமதிக்கப்பட்டுள்ளது, அதாவது எந்த மனிதனுக்கும் ஏதாவது ஒருவகையில் நஷ்டமோ அல்லது குழப்பமோ அல்லது தீமையோ ஏற்படாது என்றிருந்தால்

1. போரின் போது.....
2. சண்டையிட்டுக் கொள்ளும் இருதரப்பினரை சமாதானப்படுத்த.....
3. ஒரு கணவன் தன் மனைவியிடமும், மனைவி தன் கணவனிடமும் அன்பையும், பாசத்தையும், பரிமாறிக்கொள்ள.....

போன்றவற்றிற்கு கூறிக்கொள்ளும் பொய் அனுமதிக்கப்பட்டதாகும்.

அல்லாஹ் நம் அனைவரையும் அவன் வகுத்த நேரான வழியில் வாழ துணை புரிவானாக ! ஆமின் !

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்....

மானுக்கு ஆபத்து... 38

அதிரைநிருபர் பதிப்பகம் | June 26, 2012 | , , , ,

அது ஒரு ரம்மியமான சூழல்…
அடர்ந்த காடு
அங்கே விலங்குகளின்
வாழ்வுதனை
படம் பிடித்து காட்டும்
டிஸ்கவரி சேனலில் பார்த்தேன்…

அழகிய காட்டில்…
துள்ளித் திரியும்
மான்கள் கூட்டம்…
அதன் கண்களில்
என்றென்றும் மிரட்சி…

புல் மேய்ந்தது பாதி
மேயாமல் நின்றதி மீதி…
கொடிய விலங்குகள்
ஏதும் வந்து விடுமோ… 

புல் மேயவதற்குள்
நம்மை மேய்ந்து விடுமோ
என்ற பீதி….

பாவம்…
சிங்கமோ, சிறுத்தையோ
துரத்தி வேட்டையாடும்
சுற்றியிருக்கும் மான்கள்
செய்வது அறியாது நிற்கும்…

தாகம் மிகுதியால்
நீர் அருந்த
ஆற்றுக்கு செல்லும்
அங்கு
முதலையோ மானை
இழுத்து செல்லும்…

பார்க்க
பரிதாபமாக இருக்கும்…

சில சமயம்..
இரண்டு மூன்று வாரமே
வயதுடைய இளம் குட்டிகளை
ஓநாய்கள் குறிவைத்து
வேட்டையாடும்

தாய் மான்
காப்பாற்ற வக்கற்று
கண்ணீர் விட்டு நிற்கும்…

இது
காடுகளில் அன்றாடம்
நடக்கும் காட்சி...

மானுட இனத்தில் அதுவும் இஸ்லாமிய ஐக்கியத்தில் ஒவ்வொரு முஸ்லிம் இதயத்திற்குள் இருக்கும் ஈமானும் வேட்டையாட படுவதை கண்ணால் காண முடிகிறது.. பணத்தாசையால்... பணதேவையால்... வட்டி எனும் கொடூரமான மிருகம் .வேட்டையாடுகிறது. இன கவர்ச்சியால் பெண்ணினம் அந்நிய ஆணுக்கு இரையாகி, ஒட்டுமொத்த இனத்தின் மானத்தையே வேட்டையாடி ‘ஈமானை’ நிலை குலைய செய்கிறது.

காட்டில் எப்படியெல்லாம் இளம் மான் குட்டிகளை குள்ள நரிகளும், ஓநாய்களும் வேட்டையாடுமோ அது போன்று நம் இளம் சிறார்களின் 'ஈமானை', கல்வி என்ற பெயரால் கட்டாய கடமையான தொழுகை ஜும்ஆ நாளில் பள்ளிக் கூடங்களுக்கு செல்ல வைத்து .தொழுகையை மறக்கடித்து ஈமானை வேட்டையாடப்படுகிறது... 

ஏன் இப்படி என்று கேட்டால் “என்ன செய்வது மனதுக்கு சங்கடமாகத்தான் இருக்கிறது” அவர்களின் பதிலும் என்ன செய்வது தான் முடியலையே… !

நமதூரில் நம் சமூகத்திற்கென்றே அமையப்பெற்றிருக்கும் பள்ளிக்கூடங்களில் நல்ல படிப்பு மற்றும் தொழுகைக்கான வசதி(கள்)யாவும் உண்டு..

கல்வி மாயை சைத்தானோடு கைகோர்த்து அருகிலிருக்கும் ஊர்களுக்கும், பணம் அதிகமதிகம் பெற்றேனும் இன்ன பிற ஊர்களுக்கும் அனுப்பி இளம் “மாணவர்களின் 'ஈமானை' வேட்டையாடுகின்றனர்…."

காடுகளில் ‘மானு’க்குண்டான ஆபத்து இயற்கை, எனவேதான் அவைகள் அழியாமல் இனம் பெருகிய வண்ணம் உள்ளது. நாட்டில் வாழும் முஸ்லிம் இஸ்லாமிய வாழ்வியலுக்கும், அதன் இயற்கையான சூழலுக்கும் மாறாக சிந்தித்து தனது ஈமானை பறிகொடுக்கின்றானர்.

ஈமானின் அளவு குறைந்து கொண்டே போகிறது.. வீடும் நாடும்.. காடாகிறது.. கவனம் தேவை !

-அதிரை சித்தீக்

மனு நீதி மனித குலத்துக்கு நீதியா? அலசல் தொடர் - 4 29

அதிரைநிருபர் பதிப்பகம் | June 25, 2012 | , , , , ,

அலசல் தொடர் : நான்கு. 

உலகம் தோன்றிய பின் – பல்வேறு நாகரீகங்கள் –பல நாடுகளில் வளர்ந்த விதங்கள் பற்றி படித்து இருக்கிறோம். அவற்றுக்கான ஆதாரங்களையும் வரலாற்று அறிஞர்கள்  சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். உலகின் பல பாகங்களில் வரலாற்றின் பக்கங்களில் அநீதியும், அடக்குமுறையும், ஆட்சி செய்தே வந்திருக்கின்றன.  வலியோரால் எளியோர் தாழ்த்தப் பட்டிருக்கிறார்கள்; அவர்கள் மீது அடக்கு முறை ஏவப்பட்டிருக்கிறது; தட்டிக்கேட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தூக்கிலடப்பட்டிருக்கிறார்கள். நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். 

ஒரு காலகட்டத்தில் பொறுமை மீறி எளியோர் திரண்டு வலியோரை எதிர்த்திருக்கிறார்கள். புரட்சிகள் வெடித்திருக்கின்றன. இத்தகைய அடக்குமுறைக்கும் அத்துமீறல்களுக்கும் இடையே  அரசுகள் அல்லது ஆளுவோர் பின்பற்றிய DOCTRINE என்று சொல்லப்பட்ட கோட்பாடுகளே பெரும்பாலும் காரணமாக இருந்து இருக்கின்றன.  

இந்தியா மற்ற ஏனைய நாடுகளின் வரலாறுகளை ஒப்பிட்டு நோக்கும்போது ஒரு வித்தியாசம் தென்படுகிறது. மற்ற நாடுகளில் இருந்த மக்களுக்குள் ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்னைகள் மக்களின் எழுச்சியால் அழிந்தொழிந்தன. அல்லது மனிதர் குல மாணிக்கங்கள் தலைவர்களாய் கிடைத்ததால் அழிந்தொழிந்தன. இந்தியாவில் இருக்கும் சாதிப் பிரச்னைகள் காலகாலமாக இருந்துகொண்டுதான் இருக்கின்றன. உடன்கட்டை ஏறும் பழக்கம் மட்டுமே ஒரு புண்ணியவான் உடைய கடாட்சத்தால் நின்று போனது. 

பிரஞ்சு நாட்டிலே சர்வாதிகாரமும், அடக்குமுறையும் தாண்டவமாடியபோது பிரஞ்சுப்புரட்சி    1789- ல் ஏற்பட்டது. நூற்றாண்டுகள் காலமாக ஆதிக்கம் செலுத்திவந்த அடக்குமுறைகள், ஆட்சிமுறைகள் யாவும் மூன்றே ஆண்டுகளில் மக்கள் சக்தியால் தவிடுபொடியாக்கப்பட்டு சமத்துவமும் , சகோதரத்துவமும் அரியணை ஏறின. இன்றுவரை அந்த புரட்சி ஏற்றிய தீபம்தான் பிரான்சு நாட்டில் சமத்துவ ஒளி வீசி வருகிறது. 

பிரான்சு நாட்டில் ஏற்பட்ட புரட்சியின் தாக்கம் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் எதிரொலித்து, புரட்சி இல்லாமலேயே அங்கு சமத்துவமும், சகோதரத்துவமும் ஆட்சியின் ஆணிவேராக நிலை பெற்றன.

ரஷ்யாவிலும் இதேபோல் நிலைமை ஏற்பட்டபோது மக்கள் ஒன்று திரண்டு போராடி ஆட்சியில் எற்கனவே நிலவிய பாகுபாடுகள் அகற்றப்பட்டன. சைனாவிலும் கூட இப்படி வரலாற்றின் உதாரணங்கள் நம்மால் சுட்டிக்காட்டப்படும். 

அராபிய தேசங்களில் தோன்றிய அருமை நபி முமது ரசூல் ( ஸ்ல) அவர்கள் தனது சொல்லாலும், செயலாலும் காலம் காலமாக அந்த மண்ணில் நிலவி வந்த எண்ணற்ற அறிவுக்கொவ்வாத மூட மடமைகளை தலைகீழாக மாற்றி அறிவின்பாதையைக் காட்டினார்கள். அகோல்கைகள் மண்ணில் நிலைபெர்ரதுடன் இன்றளவும் இலட்சோப இலட்சம் பேர்கள அந்தக் கொள்கைகளை நோக்கி இணைந்து வருகிறார்கள்.  

ஆனால்- இந்தியாவில் ?? பெரும் கேள்விக்குறி. ஆண்டாண்டுகாலமாக இருந்துவரும் சாதிக்கொடுமைகள் இன்னும் தீரவில்லை. எத்தனையோ மேதைகள், அறிஞர்கள் அறிவுப்புரட்சியை ஏற்படுத்தினார்கள். உயர்சாதி வகுப்பில் பிறந்தவ ஒரு சிலர்  கூட இந்த தீண்டாமையையும், ஆலயப்பிரவேச மறுப்பையும் எதிர்த்து அணிதிரண்டார்கள். 

“பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே- வெள்ளைப் 
பரங்கியை துரை என்ற காலமும் போச்சே’ – என்று பாரதியார் பாடினார். 

கலைஞர் கருணாநிதி தாழ்த்தப்பட்டவர்களும் அர்ச்சகராகும் சட்டமும் கொண்டுவந்தார். காந்தி , விதவை மணத்தை ஆதரித்து எழுதினார். ஆனாலும் பயனில்லை. உயர்சாதியின் ஆதிக்கம் அழியவில்லை. அந்த அளவு “அவாளின்” செல்வாக்கு வேரூன்றி இருக்கிறது. சாதியாலும் , சம்பிரதாயத்தாலும், ஏற்ற தாழ்வாலும் உளுத்துப்போய் இருக்கும் இந்திய சமுதாய சுவற்றில் அங்கங்கு பூச்சுவேளை, பட்டி பார்த்து வர்ணம் பூசும் வேலைதான்  நடந்து இருக்கிறது. ஆனால் அந்த பழைய சுவற்றை அடியோடு இடித்துவிட்டு இனியொரு புதிய  சமுதாயச்சுவர்  எடுத்தால்தான் விடிவு. இப்படிப்பட்ட புதிய சுவரைத்தான் பிரஞ்சு ,ரஷ்யா, ஐரோப்பிய , அரபு தேசங்கள் எடுத்தன. பழமைச்சுவர் இடித்துத் தள்ளப்பட்டது.  

இனியொரு விதி செய்வோம் அதை எந்நாளும் காப்போம் என்பதை மறந்ததால் இன்றுவரை இந்த நாட்டில் உயர்சாதியினரின் ஆட்சிதான் நடந்துவருகிறது. பெரும் பதவிகளில் எல்லாம் மிகக்குறைந்த சதவீத மக்கள்தொகை கொண்ட ஆரியரின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. (மத்திய மாநில தலைமைச் செயலகங்களின் உணவு விடுதிகளில்  தயிர் சாதமும் மாவடுவும்தான் அதிகம் விற்பனையாகிறதாம்.)  இதனால் தாழ்த்தப்பட்டோர் , சிறுபான்மையினர் மேலே வரமுடியாமல்தான் இருக்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று வார்த்தையளவில்தான்  சொல்லப்படுகிறது. நடைமுறையில்,  பரமக்குடியில் தாழ்த்தப்பட்டவனின் மேல் துப்பாக்கிக் குண்டு பாய்கிறது. அதற்காக பிரான்சு போல், ரஷ்யா போல் புரட்சி வரவேண்டுமென்று சொல்லவில்லை. தங்களின் சக்தியை இன்னும் மக்கள் உணராமல் “ஐயா சாமி” என்று வாய்பொத்தி ஆமாம் சாமி போடும் கண்மூடிப்பழக்கமெல்லாம் மண்மூடிப் போகவேண்டுமென்றே சொல்கிறோம். உயர் சாதிக்குப் பல்லக்குத் தூக்கும் மனப்பான்மை மடியவேண்டுமென்றுதான் சொல்கிறோம். இவர்கள் இப்படி உயர்சாதிக்கு ஜால்ராப் போடுவதற்கு  கல்வி யறிவு இல்லாமையும், கடவுளின் பெயரால் காலம் காலமாக பயமுறுத்தப்படுதலும் அடிப்படைக் காரணங்களாகும்

கடவுளுக்கு காணிக்கை செலுத்தாவிட்டால் கண் போய்விடும், ரத்தம் கக்கி சாவாய், அம்மனுக்கு கோபம வந்தால் மழை பெய்யாது என்றெல்லாம் கல்வி அறிவில் பலகீனமாக்கப்பட்டவர்கள் பயமுறுத்தப்பட்டு உயர்சாதியினர் ஏழைமக்களின் உதிரத்தை உறிஞ்சிக் கொழிக்கின்றனர்.  இத்தகைய அப்பாவிகளை மிரட்டி வைத்து இருப்பதில் மனு நீதியின் பங்கு பெரும் பங்கு ஆகும். தாழ்த்தப்பட்டவர்கள் நேரடியாக சொர்க்கம் செல்ல இயலாது என்றும், ஒரு பிராமணருடைய உயிரைக்காப்பாற்ற இலவசமாக தன் உயிரைக்கொடுத்தால் மட்டுமே சொர்க்கம் செல்ல முடியும் என்றும் அத்தியாயம் பத்து 62- வது சுலோகத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. அதுபற்றி பின்னர் பார்க்கலாம்.

இப்போது தொடராக, மனு நீதியின்  CHAPTER III. 3. சொல்கிறது. 

12. For the first marriage of twice-born men, wives of equal caste are recommended; but for those who through desire proceed to marry again the following females, chosen according to the direct order of the castes, are most approved. 

13. It is declared that a Shudra woman alone can be the wife of a Shudra, she and one of his own caste the wives of a Vaisya, those two and one of his own caste the wives of a Kshatriya, those three and one of his own caste the wives of a Brahmin. 

14. A Shudra woman is not mentioned even in any ancient story as the first wife of a Brahmin or of a Kshatriya, though they lived in the greatest distress. 

15. Twice-born men who, in their folly, wed wives of the low (Shudra) caste, soon degrade their families and their children to the state of Shudras. 

17. A Brahmin who takes a Shudra wife to his bed, will after death sink into hell; if he begets a child by her, he will lose the rank of a Brahmin. 

இருபிறவி பிறந்த உயர்சாதி ஆண்மகன் தனக்கு சமமான சாதியைச் சேர்ந்த பெண்ணைத்தான் திருமணம் முடிக்கவேண்டும். ( இரு பிறவி என்பதற்கு முன் அத்தியாயத்தில் விளக்கம் இருக்கிறது- பிறப்பது ஒரு பிறவி- பூணூல் அணிவது இரண்டாம் பிறவி). அவர்களுக்கு ஒரு மனைவி போதாது என்று நினைக்கும் பட்சத்தில் இரண்டாவதாக மணமுடிப்பதாக இருந்தாலும் தனது சாதியைச் சேர்ந்த பெண்ணையே மணமுடிக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட சாதியான சூத்திர சாதிப்பெண் ஒரு சூத்திரனையே மணமுடிக்க வேண்டும். நெடுங்காலங்களுக்கு முந்திய புராணங்களில் கூட ஒரு பிராமணன் சூத்திரப்பெண்ணை மணமுடித்த வரலாறு கிடையாதாம்.  

ஏதோ ஒரு உடலின் இச்சையில் அல்லது முட்டாள்தனத்தில் ஒரு “அபிஷ்டு”  உயர்சாதி பிராமணன் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த பெண்ணை மணமுடிப்பானாகில் அவனும் அவனது குடும்பமும் உயர்சாதி அந்தஸ்தை இழந்துவிடுவார்கள். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் உடனே பதவியிறக்கம் செய்யப்பட்டு சூத்திரர்களாகிவிடுவார்கள். ஒரு சூத்திரப்பெண்ணோடு தனது படுக்கையைப் பங்கிட்டுக்கொள்ளும் ஒரு பிராமணன்  நரகத்துக்குப் போகக்கடவன். அத்துடன் அதன்மூலம் ஒரு குழந்தையும் பெற்றால் அந்த பிராமணன் தனது உலக மகா அந்தஸ்தாகிய பிராமண அந்தஸ்தை இழந்து “அசடாகி” விடக்கடவன். சுப மஸ்”தூ.”

இன்னும் சுழலும் இந்த சாட்டை ...
-இபுராஹீம் அன்சாரி

நாளங்கள் (ஒரு வெற்றிக்கான பகிரங்கக் குறிப்புகள்) 26

அதிரைநிருபர் பதிப்பகம் | June 24, 2012 | , , , , ,

(ஒரு வெற்றிக்கான பகிரங்கக் குறிப்புகள்)

நண்பர்கள் எனக்குள்
நாளங்கள்

தத்தம் தன்மைகளை
ரத்தம் எனக்கொண்டு
எனக்குள் ஊடுருவிய
நாளங்கள்

நல்லறம் கொண்டு
நண்மையை வென்று
நாளெல்லாம் ஓடும்
நற்செயல் கடத்தும்
நாளங்கள்

கவலை தாக்கும்
தகவலை கேட்கும்
தருணங்களி லெல்லாம்
ஊசி யின்றியே
நேசிப்பைச் செலுத்தி
மனநலம் காக்கும்
நாளங்கள்.

உடை நெகிழ நேர்ந்தால்
உடன் கை தந்து
திருத்தச் சொன்னது
வள்ளுவன் நட்பு

நடை தளரும்போதும்
தடை இடறும்போதும்
உடன் தாங்கியது
எனக்கான நட்பு

தலைச் சுமை மட்டுமே
பகிர்தல் இயல்பு
மனச் சுமைதனையும்
பிரித்து இலேசாக்கும்
நண்பர்கள் எனக்குள்
நாளங்கள்

தாழ்வு மனப்பான்மைக்கு
தடுப்பு ஊசியையும்;
தன்மானம் காப்பதற்கு
சொட்டு மருந்தையும்;
ஒழுக்க நெறிகளுக்கு
ஊக்க மருந்தையும்;
வெற்றிப் படியேற
கிரியா ஊக்கிகளையும்;
நாள்தோறும் ஓடவிடும்
நாளங்கள்

நிவாரணிகளை யல்ல
ரோகம் தீர்க்கும்
மருந்துகளைச் சுமந்து
இதயத்தை இயக்கும்
நாளங்கள் என்
நண்பர்கள்

தாளங்கள் மேளங்கள்
நாளெங்கும் முழங்கிய
காலங்கள் போயினும்
நாளங்கள் என்றான
தோழன்கள் எனக்குண்டு
வாழுங்கள் என்றியம்ப!

நெட்டை குட்டையென
நீண்டும் குறுகியும்
உச்சி வெயில்தனில்
உடல்மேல் ஒளிந்தாலும்
நிழலென தொடர்வான்;
இருட்டில்கூட
இல்லாமல் இருப்பான்
தோல் போர்த்தி மறைத்த
நாளங்கள் போன்ற நல்
நண்பன்தான்

நண்பன் இல்லா வாழ்வு
நாளங்கள் நலிந்த உடம்பு

நல்ல நண்பன்
நாளங்களுக்குள் உதிரம்
தீய நண்பன்
உதிரத்தினுள் விஷம்

நட்பு கொள்ளுமுன்
குணம் குற்றத்தில்
மிகைநாடி மிக்க கொள்ளல் நலம்

நல்ல நட்பில் நாட்டமா
நல்ல மனிதனாய் வாழ்
இனம் இனத்தோடே சேரும்!

-சபீர் அபுஷாருக்

படிக்கட்டுகள்... ஏற்றம் - 15 28

ZAKIR HUSSAIN | June 23, 2012 | , , , ,

இறைவழிபாடு Vs  பணம் சம்பாதித்தல்

மனிதனின் சறுக்கல் அவன் இந்த உலகத்தில் எதை முக்கியம் என்று நினைக்கிறானோ அதில்தான் பெரும்பாலும் அமைந்திருக்கிறது. ஒரு பாக்டீரியா பேரன் பேத்தியோடு குடியிருக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு ஏன் வயிற்றை இப்படி வலிக்கிறது எனும் ஒரு நோயாளியின் கேள்விபோல்தான் , பிரச்சினைகளை சொந்தமாக தேடி தன் வாழ்க்கையில் பிரச்சினைகளை அதிகமாக்கிவிட்டு பிறகு "எனக்கு ஏன் இறைவன் இப்படி சோதிக்கிறான்" என்று புலம்புவது ஒரு ரகம்.

வாழ்க்கையில் முன்னேறுவது என்பது முக்கியம் என நினைக்கும் சூடு சுரணை  உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு காலம் வரும் அதில் பணம் வசப்படும், வாக்குக்கு மரியாதை இருக்கும் அப்போதுதான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தன்னை சுற்றி ஒரு ஒளிவட்டம் வந்து விட்டதாக கற்பனை செய்து கொண்டு தான் சொல்வதெல்லாம் சரி, தான் செய்வதெல்லாம் சரி என்று ஆட்டம் போட்டால் சறுக்கும் காலம் வந்தால் முதலில் ப்ரூட்டஸ்களை சந்திக்க தயாராக வேண்டியதுதான். அதற்கு பிறகு வளர்த்த கிடா, நெஞ்சில் பாய்ந்துவிட்டது என புலம்பி புண்ணியமில்லை. [ கிடா நெஞ்சில பாயும் அளவுக்கு அவ்வளவு குள்ளமாவா இருக்கீங்கனு யாரும் கேட்டமாதிரி தெரியவில்லை]

இன்றைய நவீன சூழல் மனிதனை தடம்புரளச்செய்யும் எல்லா வசதிகளையும் அவன் கையில் வந்து கொடுத்து விட்டு போயிருக்கிறது.

ஆண்களைப்பொருத்தவரை விபரீத உறவுகளாலும், பண ஆசையில் என்ன செய்கிறோம் என்பதை மறந்த சயன நிலைதான் அவர்களை பாதாளத்துக்கு கொண்டு செல்கிறது. இதை நெறிப்படுத்த எந்த சட்டமும் செய்யாததை இறைஅச்சம் வெற்றிகரமாக செய்யும். இத்தனை நாள் இல்லாத பொருளாதார வளர்ச்சி சமயங்களில் தவறையும் சரி என்று பேசச்சொல்லும். தேவையில்லாத ஹராமான உறவுகளைக்கூட ஞாயப்படுத்த சொல்லும். மார்க்கம் சரியாக கற்றிருந்தால் / தொழுகை ஒழுங்குடன் கடைபிடிக்கப்பட்டிருந்தால் அந்த குடும்பம் மானக்கேடுகளை விட்டு தப்பிக்க முடியும்.

வாழ்க்கையில் ஒரளவு வெற்றியடைந்தவர்கள் தான் இதுவரை சம்பாதித்ததை தக்க வைத்துக் கொள்ள மார்க்கத்துக்கு மீறிய இறைவன் வெறுக்கும் இணைவைத்தல், இறைவன் அல்லாதவர்களை வணங்கவும் முற்படுதல் போன்ற விசயங்களில் இறங்கும்போது அதன் தண்டனைத் தீவிரம் தெரிவதில்லை. பிள்ளைகளை வைத்து பெருமை அடிப்பதுபணம் இருப்பதை வைத்து பெருமையடிக்கும் முன் இரண்டையும் இறைவன் நம்மை சோதிக்கத்தான் கொடுத்திருக்கிறான் எனும் அவன் வேத வாக்கை நினைத்தால் அகந்தைகள் அடங்கும். நாம் வாழும் இந்த நூற்றாண்டில் இந்த பரந்த பூமி எத்தனையோ கோடீஸ்வர்களை தனக்குள் புதைத்து சிதைத்திருக்கிறது. பூமி தன் வயதுக்கு எத்தனையோ கோடி மக்கள் மரணித்ததை தனது பொறுமையுடன் பார்த்திருக்கும்.

நாம் வாழும் காலம் , சம்பாதிப்பது எல்லாம் ஒரு மேகம் மாதிரி மாற்றங்களுக்கு உட்பட்டது. நமக்கு அள்ளித்தருபவன் இறைவன் தான் என்பது சரியாக புரிந்தால் மனது நிச்சயம் சாந்தப்படும். இந்த உலகத்தில் எத்தனையோ நீர் வளத்தை தந்தவன் தாகத்துக்காக ஒரு டம்ளர் தண்ணீர் கிடைக்காமல் மரணிக்கும் சூழ்நிலையை எத்தனையோ மனிதர்களுக்கு கொடுத்திருக்கிறான்.
 
அதே சமயம் பணம் சம்பாதிப்பதை ஏதோ பாவச்செயல் மாதிரி பேசும் முல்லாக்கள் சில இளைஞர்கள் மனதில் தனது ரப்பர் ஸ்டாம்பை ஆழமாக குத்திவிடுவதால் சில இளைஞர்கள் தான் செய்வது தவறு என்று தெரியும்போது தனது மகள் கல்யாண வயதுக்கு வந்துவிடுகிறது. இனிமேல் கிடைத்த குறுகிய காலத்துக்குள் தனது தேவைகளை பார்த்துக்கொள்ள அந்த இளைஞர்கள் அழையும்போது அந்த முல்லாக்கள் எந்த உதவியும் அந்த பாதிக்கப்பட்ட மனிதனுக்கு செய்வதில்லை. ஆரம்பத்திலேயே இந்த முல்லாக்கள் தனது கையாளாகாத தனத்தை மறைக்கத்தான் இப்படி போதிக்கிறார்கள் என்பதை உணர்ந்தால் இவ்வளவு பிரச்சினைகள் இருக்காது. எம்பெருமானார் முஹம்மது நபி [ஸல்] அவர்களின் எளிமையான வாழ்க்கையையும் தனது மகளுக்கு சீதனம் கொடுக்கும்போது இருந்த கஷ்டமான சூழ்நிலையை சொல்லும் அவர்கள் ஒருபோதும் நபி [ஸல்] சம்பாதித்து வசதியாக வாழ்வதை ஒருபோதும் தடை சொன்னதில்லை என்று சொல்வதே இல்லை.

 சிலர் எளிமையாக இருப்பதை போதிக்கிறேன் என்று வறுமையாக இருப்பதற்கு போதனை செய்கிறார்கள். சில பெரியவர்கள் செய்யும் தவறு தனது வாழ்க்கையை அப்படியே கார்பன் காப்பி எடுத்ததுபோல்தான் தன் வீட்டு பிள்ளைகளுக்கும் நடக்கும் என்று தன்னாலேயே கற்பனை செய்துகொண்டு சமயங்களில் பிள்ளைகளின் முன்னேற்றத்துகான முடிவுகளுக்கும் தடையாக இருக்கிறார்கள்.

ஆக சுபிட்சத்தை தருவது இறைவன் தான். முயற்சிகள் தோல்வியடையலாம் முயற்சிக்க தயங்களாமா?. நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் இறைவனிடம் மனமார மன்றாடிகேட்டு ஆரம்பியுங்கள்..அதற்கு பிறகு பாருங்கள் உங்களின் வெற்றிப்பாதையை.

நாம் இறைவனிடம் சரணடைய தயங்குகிறோம். இதுவரை இறைவன் நமக்கு தந்த எத்தனையோ வசதிகளுக்கு நாம் நன்றி சொல்லி விட்டோமா? என் வாழ்க்கையில் மிக கஷ்டமான சூழ்நிலையில் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். நான் என் கஸ்டத்தை அவரிடம் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கும்போது அவர் கேட்டது ' உன் துஆ வில் இறைவனுக்கு நன்றி சொல்வதை அதிகமாக்கு' என்றார்.  “இறைவனின் ரஹ்மத் உனக்கு நிறைய கிடைக்கும், அவன் அள்ளித் தருவதை உன்னால் கணக்கிட முடியாது என்றார். என் வாழ்க்கையில் அவரின் அறிவுரைக்கு பிறகு மிகப்பெரிய மாற்றமும் சுபிட்சமும் ஏற்பட்டது. எல்லாம் அந்த வல்ல இறைவனின் செயல்.

தொழில்/ வேலை செய்து நல்லபடியாக சம்பாதிப்பவர்கள் இறை வழிபாட்டுக்கான நேரத்தை ஒதுக்குவதில் மெத்தனம் காட்டுவது அல்லது "ரொம்ப பிசி" என்று ஒரு வார்த்தையில் இறை வணக்கத்தை செயல்படுத்த சிரமம் காட்டுவது அவ்வளவு நல்லதல்ல. உங்களுக்கு தரப்பட்டிருக்கும் அனைத்து வசதிகளும் சோதிக்கத்தான் என தெரிந்தால் அதன்மீது இந்த அளவு அடிமைத்தனம் இருக்காது.

இஸ்லாத்தில் வழிபடுதலும் , கீழ்படிதலும் என்ற விசயம் இருக்கிறது. இங்கு கீழ்படிதல் என்பது இறைவனின் கட்டளைக்கு. சிலர் வழிபடுகிறார்கள், ஆனால் கீழ் படிய மறுக்கிறார்கள். நமது மன இச்சைக்கு தகுந்த மாதிரி இறைவனின் கட்டளைகளை மாற்றி அமைக்க நாம் யார்?. சரி இது போன்ற சமயங்களில் குர்ஆன், ஹதீஸ், மார்க்க அறிஞர்கள் என்று நமது சந்தேகத்தை தீர்க்க முடியும். ஆனால் கடைசியில் உள்ள மார்க்க அறிஞர்களை முதன்மை படுத்தி குர்ஆனை கடைசியாக்கி விட்டதால் பல குழப்பங்கள். நாம் இறைவனிடம் சரண் அடையும் நிலையை உருவாக்கி கொண்டால் அவனது ஆட்சியில் நாம் சுபிட்சமாக இருப்போம். நமக்கு தேவைப்பட்டதை கொடுக்கவும் , தேவையற்றதை நம்மிடமிருந்து எடுக்கவும் அவன் ஒருவனே அறிந்தவன்.

இன்றைக்கு நமக்கு வருமானம் குறைவாக இருக்கலாம். ஆனால் அந்த குறைந்த வருமானத்திலும் நிம்மதியை தந்திருந்தால் அதுவே பெரிய விசயம். நான் எழுதியிருப்பதை படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு இறைவன் உங்கள் கண்பார்வையை குறைவின்றி கொடுத்திருக்கிறான், ஒருமுறை உங்கள் கண்களை மூடி படிக்க ஆசைப்பட்டாலே அந்த வல்லோனின் கருணை எவ்வளவு விசாலமானது என்பது தெரியும். எத்தனையோ மக்கள் தங்கள் குடும்பத்திற்கு அன்றாடம் சாப்பாட்டுக்கு கூலி வேலை பார்க்கும் சூழ்நிலையிலிருந்தும் கண் பார்வையற்றவர்களாக இருந்து கஷ்டப்படுகிறார்கள். இறைவன் நம்மை அது போன்ற சோதனைக்கு உட்படுத்தாமல் இருப்பதற்கே நாம் எவ்வளவு நாள் நன்றி செலுத்த வேண்டும்.

வாழ்க்கையில் கிடைக்கும் வெற்றிகள் அனைத்திற்கும் நாம் மட்டும் பொறுப்பல்ல. நம்மை நெறிப்படுத்திய ஆசிரியர்கள், நம்மை கண்டித்த பெற்றோர், தவறு செய்தால் தண்டிக்கப்படுவாய் என்று சொன்ன பெரியவர்கள் எல்லோரும் சேர்ந்து மோல்ட் செய்யப்பட்டுதான் நாம் இப்போது வெற்றிபெற தகுதியுடையவானாகிறோம்.

இவையனைத்தையும் நமக்கு சரியாக தந்து நம்மை காப்பாற்றி வரும் அந்த இறைவனை வழிபடுதல் மிக முக்கியம் என்பதற்கு மறுமொழி இருக்க முடியாது.

பல வருடங்களுக்கு முன் என்னிடம் ஒரு இந்தோனேசிய கூலித்தொழிலாளி சொன்னது

நாளைக்கே நமது மரணம் என்று உன் வணக்கத்தை / நல் அமல்களை செய். இன்னும் நூறு வருடம் வாழப்போவதை போல் உன் பொருளாதாரத்தை உயர்த்த  உழை.

-ZAKIR HUSSAIN

ஷஃபான் மாத அமல்களும் ஷப்-ஏ-பராஅத்தும் 3

அதிரைநிருபர் பதிப்பகம் | June 22, 2012 | , , , ,

www.satyamargam.com

ரமலானை வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளில், ரமலானுக்கு முந்தைய மாதமான ஷஃ'பானில் செய்ய வேண்டிய அமல்கள் என்ன என்பதைப் பற்றி முஸ்லிம் சமுதாயத்தில் பெரும்பாலானோர், அறியாமையில் இருக்கிறார்கள்.

ஷஃ'பான் எனும் இந்த மாதத்தை, மரணித்துப்போன நம் பெற்றோர்கள் போன்ற நெருங்கிய உறவினர்கள் பெயரால் ஃபாத்திஹா ஓதி, விஷேச அமல்கள், துவாக்கள் செய்து அதன் மூலம் நன்மையை அவர்களுக்குச் சேர்க்கக்கூடிய(?) ஒரு மாதமாகவே இந்த மாதம் தவறாகக் கருதப்படுகிறது. இதன் 15ம் நாளை, 'ஷப்-ஏ-பராஅத்' எனும் பெயரில் சில முஸ்லிம்கள் பரவலாகக் கடைபிடித்து வருகிறார்கள்.

இஸ்லாத்தில் கூறப்படாத இத்தகைய அனாச்சாரங்கள் தற்போது ஓரளவு குறைந்துள்ளன என்றாலும், இன்றும் பலர் இதை ஒரு சிறந்த அமலாக, நன்மை தரும் காரியமாகக் கருதி, விதவிதமான சமையல்கள், இனிப்புவகைகள் என்று சமைத்து, பயபக்தியுடன் பரவசத்துடன் குழுமியிருந்து ஃபாத்திஹா ஓதி, மரணித்த தமது உறவினருக்கு நன்மைகளை நாடிப் பிரார்த்திப்பதாகச் செயல்படுத்தி வருகின்றனர்.

இந்த நூதனச் செய்முறைக்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ ஆதாரமில்லை. புனித குர்ஆனின் ஹதீஸ்களின் மூலமொழி அரபியாகும். 'ஷப்-ஏ-பராஅத்' இல் உள்ள  'ஷப்' என்பது அரபிச் சொல் கிடையாது; 'இரவு' என்ற பொருளில் வரும் பார்ஸிச் சொல்லாகும். 'ஏ'காரம் என்பது அரபு மொழியிலேயே இல்லாத ஓர் ஒலி. இப்படியிருக்கையில் தானாக உருவாக்கிக் கொண்ட ஒரு புதிய நடைமுறைக்கு 'ஷப்-ஏ-பராஅத்' என்ற பெயர் சூட்டி முஸ்லிம்களின் புனித ரமலான், ஹஜ்ஜுப் பெருநாள் போன்ற விஷேசமான இதர பண்டிகைகளின் பட்டியலில் காலங்காலமாக இதனையும் சேர்த்து விட்டனர். ஆனால் இது நபி (ஸல்) அவர்கள் மூலம் ஏவப்பட்ட ஒரு நபி வழியா? நல்ல அமலா? இதனைச் செய்தால் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா? இதற்கு நன்மை கிடைக்குமா கிடைக்காதா? அல்லது ஒருவேளை இது ஒரு பாவமான காரியமாகி தண்டனையைப் பெற்று தருமா? என்றெல்லாம் அவர்கள் சிந்திக்கத் தவறி விடுகின்றனர்.

எவர் ஒருவர் என்னால் ஏவப்படாத (மார்க்கக்) காரியத்தை நன்மையான காரியம் என்று கருதித் செயல்படுகிறாரோ அது அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்).

இந்த ஒரு ஹதீஸே நாம் மார்க்கம் என்றும் நன்மையென்றும் கருதி இப்படி நபி (ஸல்) காட்டித்தராத செயல்களைப் புதிதாக உருவாக்கவோ, சேர்க்கவோ அல்லது அதைப் பலரும் செய்கிறார்கள் என்பதால் செயல்படுத்தவோ கூடாது என்பதை மிகத் தெளிவாக அறிவுறுத்துகிறது. இதைப்போன்று பல ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்களால் காட்டித் தராத ஒன்றைச் செயல்படுத்த நேரடியான தடையுள்ளதையும் நாம் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

அல்லாஹ்விடம் நன்மையை நாடி, தமது உறவினர்களுக்கு நன்மையை வேண்டிப் பிரார்த்திக்கவும், தமக்கு நன்மைகளும் அபிவிருத்தியும் ஏற்படும் என்று கருதி, இப்படிப்பட்ட அமல்கள் செய்பவர்கள் நபி (ஸல்) அவர்கள் இதை நமக்கு காட்டித்தரவில்லை என்பதையும் சிந்திப்பதில்லை.

நிச்சயமாக ஒருவர் இறந்தபின் மூன்றைத் தவிர அவருடைய அமல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடுகின்றன. அம்மூன்றாவன:
  • அவர் விட்டுச்சென்ற நிலையான தர்மங்கள் (இறையில்லங்கள் கட்டுவது, மரங்கள் நடுவது, கிணறுகள் அமைப்பது, கல்விச்சாலைகள் நிறுவுவது போன்றவை) 
  • அவர் தந்த பயன் தரும் கல்வி (ஈருலக வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டு அவர் கற்றுக் கொடுத்த கல்வி) 
  • ஸாலிஹான அவரின் பிள்ளைகள் செய்யும் பிரார்த்தனைகள்.

இம்மூன்றைத் தவிர வேறு எவ்வழியிலும் ஒருவர் இறந்தபின் அவருக்கு நன்மைகள் சேருவதில்லை. (ஆதார நூல்கள்: முஸ்லிம். அபூ தாவூத், திர்மிதி, நஸயீ)

நபியவர்கள் காட்டித் தந்த வழி இவ்வாறிருக்க, இறந்து போன உறவினருக்கு பராஅத் இரவில் பாத்திஹாக்கள் ஓதினால் எந்தப் புண்ணியமும் கிட்டப்போவதில்லை என்பதுதான் உண்மை. தவிர, நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத புதிய ஒரு வழிமுறையை மார்க்கமாகச் செய்யும் பாவத்தையும் சுமக்க வேண்டிவரும்.

நபி (ஸல்) அவர்கள் மற்ற எல்லா மாதங்களையும்விட - ரமலானுக்கு அடுத்தபடியாக - ஷஃ'பான் மாதத்தில்தான் அதிகமாக நோன்பு நோற்றுள்ளார்கள்.

ரமலான் மாதத்திற்கு முந்தைய மாதமான ஷஃ'பானில் நோன்பு வைப்பது நபியவர்களால் மிகவும் வலியுறுத்திக் கடைபிடிக்கப்பட்ட ஓர் அமல் ஆகும் என்பதைக் கீழ்வரும் ஹதீஸ்கள் நமக்கு பறைச்சாற்றுகின்றன:

"நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃ'பானும் அதைத் தொடர்ந்துள்ள ரமளானுமாகும்" என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூற, தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) குறிப்பிடுகிறார். (அபூதாவூத், நஸயி).

நபி (ஸல்) அவர்கள், 'நோன்பை விடவேமாட்டார்களோ' என்று நாம் நினைக்கும் அளவுக்கு (சிலபோது) நோன்பு நோற்பவர்களாகவும் 'நோன்பிருக்க மாட்டர்களோ' என்று நினைக்கும் அளவுக்கு நோன்பு நோற்காதவர்களாகவும் இருந்தார்கள். நபியவர்கள் ரமளானைத் தவிர முழமையாக நோன்பு நோற்ற வேறொரு மாதத்தை நான் அறியவில்லை. நபியவர்கள் அதிக நாட்கள் நோன்பு வைத்த மாதம் ஷஃ'பானாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்).

அமல்கள் உயர்த்தப்படும் மாதம்:
உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் நபியவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதரே! ஷஃ'பானைப் போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை' என்று கூறிய போது, நபியவர்கள், "மனிதர்கள் ரஜப், ரமளான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள (ஷஃ'பான் என்ற) ஒரு மாதத்தின் விஷயத்தில் அலட்சியமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில், அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன்" என கூறினார்கள். (ஆதாரம்: நஸயி, அஹ்மத்).

இதற்கு மாற்றமாக ஷஃ'பான் மாதத்தில், பிறை 15ல் மட்டும் நோன்பு நோற்பதும், அதன் இரவில் மூன்று யாஸீன்கள் ஓதுவதும், ரொட்டி மற்றும் இனிப்புப் பண்டங்களை வைத்து சாம்பராணிப் புகையுடன் ஃபாத்திஹா ஓதிய பின்னர் அதையும் இதர உணவுகளையும் பரிமாறிக் கொள்வதும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தராத ஒரு 'பித்அத்' தான காரியமாகும்.

நமக்கு இஸ்லாத்தையும் நன்மை தீமைகளையும் கற்றுத்தர அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட நபி(ஸல்) அவர்கள் நமக்கு இவற்றைக் கற்றுத் தரவில்லை. அவர்களுக்குப் பின்னர் யாரோ சிலர் உருவாக்கியவைதான் இவையும் இவை போன்றவையும் என்பதைப் பலரும் அறிவதில்லை. நமக்கு நன்மைகள் வேண்டுவது அல்லது நமது நெருங்கிய உறவினர்களுக்கு துஆச் செய்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றல்ல; துவாச் செய்வது தவறும் அல்ல. இதை, தினந்தோறும் தவறாமல் நாம் செய்து வர வேண்டும். அதிகமாகவும், ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும், தஹஜ்ஜுத் எனும் இரவுத் தொழுகைகளிலும் செய்ய வேண்டும். அதுவே நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியாகும்.

வருடத்தில் ஒரு நாள் அல்லது ஒருசில நாட்கள், அதுவும் அல்லாஹ்வோ நபி (ஸல்) அவர்களோ காட்டித் தராத ஒரு நாளில் இதுபோன்ற அமல்களைச் செய்வது எந்தப் பலனையும் விளைவிக்காது என்பதை நாம் உணர வேண்டும். பலகாலமாக நமது மூதாதையர் செய்வதாலோ நம்முடைய உறவினர்கள், நமது ஊரார்கள் எல்லாம் செய்கிறார்கள் என்பதற்காக நாமும் அவற்றைச் செய்யாமல், இவையெல்லாம் பொல்லாப் புதுமைகள் என்பதை அறிந்து கொண்டு, இதுபோன்றவற்றை விட்டு விலகி இருந்து, பிறருக்கும் உணர்த்தி விலக்கி அவர்களையும் நேர்வழிக்கு அழைக்க வேண்டும்.

இந்தியாவில் சிலபகுதிகளில் இரவு விழித்து விசேஷமான, தஸ்பீஹ்கள் தொழுகைகள் மற்றும் பொதுக் கல்லறைகளுக்கு இரவில் கூட்டம் கூட்டமாக ஆண்களும் பெண்களும் சென்று துவா செய்யும் வழக்கமும் இருக்கிறது, இந்த வழக்கம், நபி (ஸல்) அவர்கள் பெண்கள் கப்ரு ஜியாரத்தைக் கண்டித்ததற்கும் எச்சரித்ததற்கும் எதிரானதாகும் என்று உணர்த்தி இப்பழக்கத்தையும் கைவிடச்செய்ய நாம் முயலவேண்டும்.

ரமளானுக்கு ஒரிரு நாட்கள் இருக்கும் போது நோன்பு நோற்கலாகாது:
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாதத்திற்கு ஓரிரு நாட்கள் மீதி இருக்கும்போது (ஷஃபானின் இறுதியில்) நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். (திங்கள், வியாழனில்) வழமையாக நோன்பு நோற்பவர் தவிர, அவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) ஆதார நூல் :புகாரீ).

மேற்கண்ட ஹதீஸ் திங்கள், வியாழன் ஆகிய இருநாட்களில் தொடர்ந்து வழக்கமாக நோன்பு வைத்து வருபவர்களைக் குறிக்கின்றது என்பதுடன், இதுபோன்ற திங்கள்-வியாழன் நோன்புகள் வைப்பது நபி(ஸல்) அவர்கள் தாமும் கடைபிடித்து வந்ததுடன் பிறருக்கும் ஆர்வமூட்டிய அழகான தெளிவான வழிமுறையாகவுமுள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு முறையாகப் பயனடைய முயல வேண்டும்.

அதேபோல்தான் குர்ஆன் ஓதுதலும் ஆகும். திருமறையின் எந்த அத்தியாயத்தை ஓதினாலும் அதற்கு ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் உண்டு என்பதை உணர்ந்து நாம் தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதிகமாக ஓதிவரவேண்டும், மேலும் நபி (ஸல்) அவர்கள் காட்டியுள்ள திக்ருகள், துஆக்கள், தர்மங்கள் நஃபிலான வணக்கங்கள் மூலம் நன்மையையும் அல்லாஹ்வின் அருளையும் உதவியையும் பெற்றிடத் தொடர்ந்து முயன்று, இம்மை-மறுமை வெற்றியைப்பெற முயலவேண்டும்.

அற்புதமான இந்த ஷஃ'பான் மாதத்தை பித்அத்களில் வீணாக்காமல், இறைத்தூதர் காட்டித்தந்த வழியில் கடைப்பிடித்து ஈருலகிலும் வெற்றிபெற அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.

ஆக்கம்: அப்துல்லாஹ்

பெட்ரோலை போட்டு தாகத்தை தனியுங்க ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | June 22, 2012 | , , , , , ,

போடுங்க பெட்ரோலை... தனியுங்கள் உங்கள் தாகத்தை - இலவசம்...!

"யேய்.. யேய்... வண்டியை மேல ஏத்திராதப்பா..ஏத்திராதப்பா..? அட நிப்பாட்டுப்பா.."

அப்புடி என்னத்த தலைப்புல தப்பா சொல்லிபுட்டேன்! உண்மையதானே சொன்னேன்..  "

இந்தா முதல்ல தண்ணீரையோ, குளிர்பானத்தையோ குடி. இல்லாட்டி கோபத்துல வேர்த்து விறுவிறுத்து போகிருக்கின்ற முகத்தை டிஸ்ஸுல துடச்சிக்கோ".

எதுவா இருந்தாலும் கீழே உள்ள படத்தை பார்த்துபுட்டு பேசு.. அப்புறம் தெரியும் நீ யார் மேல கோபப்படனும்னு.

10 ரியாலுக்கு எரிபொருள் எண்ணெய் (Petrol/Diesel) போட்டால் 1 லிட்டர் தண்ணீர் புட்டியோ (பாட்டில்), குளிர்பானமோ அல்லது டிஸ்ஸு பெட்டியோ இலவசம் என்று சாலையோரமா ஒரு பலகை பல்லை இளித்துக்கொண்டு சாய்ந்து நின்றது.அதை அந்த எரிபொருள் எண்ணெய் உரிமையாளருக்கு தெரியாம கப்சுப்னு புகைப்படம் எடுத்தாச்சு..


அதாவது இந்திய நாணய மதிப்புப்படி 2 லிட்டர் (150 ருபாய்) அளவு எரிபொருள் எண்ணெய் போட்டால் 1 1/2 லிட்டர் தண்ணீர் இலவசமாம்.

இதைவைத்து இங்கு தண்ணீர் மலிவுன்னு நினைத்துவிடாதீர்கள்...
1/2 லிட்டர் தண்ணீர் - 1 ரியால்
1 லிட்டர் எரிபொருள் எண்ணெய் - 1/2 ரியால்

இந்தியா எரிபொருள் எண்ணெய்யின் (மூன்றாம் தரம்) விலை = 75.40 ரூபாய் / லிட்டர்.
சவூதியில் எரிபொருள் எண்ணெய்யின் (இரண்டாம் தரம்) விலை = 7.00ரூபாய் / லிட்டர் .

சவூதி அரேபியா, ஈரான் போன்ற எரிபொருள் எண்ணெய் வளமிக்க நாடுகளிடமெல்லாம் கொஞ்சம் கொஞ்சிப்பேசாமல், அறிவாளி ஆட்களையெல்லாம் அள்ளிக்கொண்டு சென்றுக்கொண்டிருக்கும் அமெரிக்காவிடம் மண்டியிட்டு கெஞ்சிக் கொண்டிருக்கும் இந்திய அரசாங்கம் இருக்கும்வரை பெட்ரோலிய விலையில் சதம்காணாமல் விடப்போவதில்லை என்று வருங்காலம் பிரகாசமாய் தெரிகின்றது.. மொத்தத்தில் இந்தியா அரசுக்கு தன் நாட்டு மனிதவளத்தையும் சரிவர உபயோகிப்பதில்லை, பிற நாடுகளையும் சரிவர உபயோகித்துக் கொள்வதில்லை.

இங்கு மின்சாரமும் மலிவுங்கிற தெனாவெட்டுல தினமும் கல்யாணக்காரவீட்டு தோரணம் மாதிரி எண்ணெய் நிறுவனத்தை சோடிச்சி வச்சிருக்கானுங்க பாருங்களேன்.

ஹும்ம்..இதை சொன்னா நம்மள போடா வெண்ணைன்னு சொல்றாங்க..

பின் குறிப்பு:
ஜம் ஜம் தண்ணீர் 5 லிட்டரு இலவசமா சில விமானத்துல ஏற்ற அனுமதிக்கின்றதுபோல் பெட்ரோலை விடமாட்டார்கலாவென்று சிலபேர் ரூம்போட்டு யோசித்துக் கொண்டும் ஆசையாய் இருக்கத்தான் செய்கிறார்கள் நம் ஆசிய பெருமக்கள்.ஹ்ம்ம்..

அன்புடன்,
மீராஷாஹ் ரஃபியா 


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு