Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நபிமணியும் நகைச்சுவையும்...! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | February 28, 2013 | ,

தொடர் : 23
மழை!

சுவனத்திலிருந்து இறங்கும் ஷவர்!

கீழ்வானில் அதோ வெள்ளிக் கீற்றாக கண்ணைப் பறிக்கும் ஒரு மின்னல்!

அத்துடன் நீர்த்துளிகளைச் சுமக்கும் கருமேகங்கள் மெல்ல உரசுவதிலும் அதன் செல்ல உறுமல்களிலும் உதயமாகிப் பொழிவது மழை!

சரம்சரமாய்ப் பெய்தாலும் சொட்டச்சொட்டப் பெய்தாலும் அப்போதும் அதன் பெயர் மழைதான்!

அதற்கு அடை மழை. அந்தி மழை. அப்பு மழை. ஆலங்கட்டி மழை. கன மழை. காத்து மழை, குமுறும் மழை. கோடை மழை. திடீர் மழை. தொடர் மழை. தூறல் மழை. தூவும் மழை. சாரல் மழை. சுழி மழை. பனி மழை. பருவ மழை. பெய் மழை. பொடி மழை. வெக்கை மழை. வெள்ள மழை என்று என்ன பெயர் வைத்தாலும் மழை ஓர் அழகுதான்! பகலில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து அலுக்காமல் மனம் குளிர மழையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்!

ஆனால், "இரவின் இருளில் மழை பெய்வதில்லை. அதன் பேச்சுச் சப்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கும்" என்றான் தற்காலக் கவிஞன் ஒருவன்! அதுவும் சரிதான். இங்கேநம்மூரில் மின்னல் வெட்டினால், மின்சாரம் போய்விடுமல்லவா!

எல்லாம் வல்லவன் அல்லாஹ் (ஜல்) சொல்கிறான்:

வறண்ட பூமியை நோக்கி தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம் என்பதை அவர்கள் காணவில்லையா? அதன்மூலம் பயிர்களை வெளிப்படுத்துகின்றோம். அதிலிருந்து அவர்களும் அவர்களது கால்நடைகளும் உண்ணுகின்றனர். இதை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க மாட்டார்களா? (1)

அன்பின் வடிவாய் ஆகி நின்ற அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அருள்மழை குறித்து அருளினார்கள்:

அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்று ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; தம் கால்நடைகளுக்கும் புகட்டினர்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது ஒன்றுக்கும் உதவாத வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைக்க விடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்(2)

கடும் வெப்பத்தின்போது ஆறுஏறி, கடல், குளம் ஆகிய நீர்நிலைகளிலிருந்து உறிஞ்சப்படும் நீர், நீராவியாக மாறி காற்றுடன் கலந்து ஆகாயம் சென்று பிறகு மழை மேகங்களாய் உருவாகின்றன! அது பின்னர், அல்லாஹ் (ஜல்) எங்கெங்கே எந்தந்த அளவில் பொழியப்பட வேண்டுமென நாடுகின்றானோ, அங்கெல்லாம் மழை அருளப்படுகின்றது. மீண்டும் நிகழும் அதே நீர்சுழற்சி! அது ஏகன் இறைவனின் ஏற்பாடு!

நீர் பார்க்கவில்லையாநிச்சயமாக அல்லாஹ் தான் மேகங்களை மெதுவாக இழுத்து, பின்னர் அவைகளை ஒன்றாகச் சேர்த்து அதன்பின்ஒன்றின் மேல் ஒன்றாக இணையச் செய்கின்றான். அவற்றின் மத்தியிலிருந்து மழை வெளிப்படுவதை நீர் காண்கின்றீர் (3)


மழை பொழிவதால் வறண்டுபோன நிலம், உயிர்பெறுகின்றது. 'நீரின்றி அமையாது உலகு' என்பதுபோல் நீர் சிலமாதம் இல்லையென்றாலும் இடர் தரும் ஏராளமான இன்னல்களும் உணவுப் பற்றாக்குறைகளும் உண்டாகி மனிதன் உட்பட உயிரினங்கள் அனைத்தும் பல கஷ்டங்களுக்கு உள்ளாகின்றன!

பாலைவனப் பிரதேசங்களில் மழையின்றிப் போய்விட்டால், அதன் சிரமம் எத்தகையது என்பதைச்சொல்ல வேண்டியதேயில்லை! அந்த ஆண்டு கொடுமையான பஞ்சம் மதீனாவைச் சூழ்ந்து கொண்டது. வானம் பொய்த்துப் போனது!

மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "யா ரசூலல்லாஹ், மழை பெய்யாமற் போனதால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது" என்று முறையிட்டனர். அப்போது பொற்குணம் வாய்ந்த பூமான் நபியவர்கள், மக்களை ஊருக்கு வெளியே தொழும் திடலுக்கு புறப்பட்டு வருமாறு அறிவுறுத்தினார்கள். அத்தொழுமிடத்தில் சொற்பொழிவு மேடை ஒன்றை தயார் செய்யுமாறும் உத்தரவிட்டார்கள். ஆகவே, தொழுமிடத்தில் சொற்பொழிவு மேடை ஒன்று தயார் செய்யப்பட்டு அவர்களுக்குப் போடப்பட்டது.

செங்கதிரோன் பொற்கதிரை அதன் விளிம்பில் சிந்தவந்த அன்று காலை, செம்மல் நபி நாயகம்(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்குப் புறப்பட்டு வந்தார்கள். பின்னர்,சொற்பொழிவு மேடை மீது ஏறி நின்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து பெருமிதப்படுத்திவிட்டு,

"மக்களே,நீங்கள் உங்கள் நகரங்களில் மழைக்காலம் தொடங்குவது தாமதமாகவும் அதனால் வறட்சி நிலவுவதாகவும் முறையிட்டீர்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (ஜல்) இதுபோன்ற சூழ்நிலைகளில் அவனிடமே பிரார்த்தித்துக் கேட்க வேண்டும் என்று உங்களுக்குக் கட்டளை இட்டுள்ளான். மேலும், நீங்கள் இவ்வாறு அழைத்துப் பிரார்த்தித்தால் உங்களுக்கு மறுமொழி அளிப்பான் என்றும் உங்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளான்" என்று கூறினார்கள். பின்னர் அவர்கள்,

"அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர்ரஹீம். மலிக்கியவ்மித்தீன். லாஇலாஹ இல்லல்லாஹு, யஃபஅலு மாயுரீது, அல்லாஹும்ம அன்த்தல்லாஹு லாஇலாஹ இல்லா அன்த்தல் ஃகனிய்யு, வ நஹ்னுல் ஃபுகராஹு அன்ஸில் அலைனல் ஃகைஸ், வஜ்அல் மாஅன்ஸல்த்த லனா குவ்வத்தன் வ பலாஃகன் இலாஹீன்"

என்று கூறி தனது கைகளை அவர்களின் அக்குள்களின் வெண்மை தெரியும் அளவு உயர்த்திய வண்ணமாகவே தொடர்ந்து பிரார்த்தித்துக் கொண்டு இருந்தார்கள்.

(தமிழில்: அகில உலகங்களின் இரட்சகனும் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் கூலி கொடுக்கப்படும் மறுமை நாளின் அதிபதியும் ஆகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அல்லாஹ்வைத் தவிர வழிபடத் தகுதியானவன் வேறு எவனுமில்லை. அவனே, நினைத்ததைச் செய்து முடிப்பவன். யா அல்லாஹ்! நீயே எங்களின் இறைவன் ஆவாய். எந்தத் தேவையும் அற்றவனாகிய உன்னைத் தவிர வழிபடத் தகுதியானவன் வேறு எவனுமில்லை. நாங்கள் எல்லோரும் உன்னிடமே தேவை உடையவர்கள்.  ஆகவே, நீ எங்களுக்கு மழையைப் பொழியச் செய்வாயாக. எங்களுக்குப் பொழிந்ததைப் பயனுள்ளதாகவும் சேமிப்பாகவும் எங்களின் தேவைகள் நிறைவடையும் ஒரு தவணைவரை ஆக்குவாயாக!)

பின்னர், தம் முதுகை மக்கள் பக்கம் திருப்பி, தமது கைகளை உயர்த்தியவாறு, தாம் அணிந்திருந்த போர்வையை கீழும் மேலுமாக மாற்றிப் போட்டுக்  கொண்டார்கள். பின்னர், மக்களை நோக்கியவாறு சொற்பொழிவு மேடையிலிருந்து இறங்கினார்கள். உடன், இரண்டு ரக்அத் 'மழைத்தொழுகை'  தொழுவித்தார்கள்.

அப்போது வல்லமையும் உயர்வும் மிக்க அல்லாஹ் (ஜல்) மேகத்தைத் திரளச் செய்தான். மின்னல்வெட்டியது. தொடர்ந்து பெரும் இடி முழங்கியது.  அல்லாஹ்வின் அனுமதி கொண்டு மழைக் கொட்டத் துவங்கியது. உலகம் செழிக்க வந்த உண்மைத் தூதர் (ஸல்) அவர்கள்இன்னும் திடலில் மழைத் தொழுகையை முடித்துக் கொண்டு மஸ்ஜித் நபவீக்கு வரவில்லை. அதற்குள், வீதியின் இரு மருங்கிலும் மழை ஆறாய் ஓடத்துவங்கியது!

மக்கள் தங்களின் இல்லங்களை நோக்கி ஓடுவதையும் மழையில் நனைய பயந்து ஓரமாய் ஒதுங்குவதையும் கண்ட மாண்பு நபியவர்கள் மடை திறந்த வெள்ளம் போல் மகிழ்ந்து சிரித்தார்கள். பிறகு பின்வருமாறு கூறினார்கள்:

"அல்லாஹ் (ஜல்) அனைத்தின் மீதும் ஆற்றல் கொண்டவனாக இருக்கின்றான். நான் அல்லாஹ்வின் அடிமையாகவும் அவனுடைய தூதராகவும் இருக்கின்றேன் என்று நான் சாட்சியம் அளிக்கின்றேன்" என்று உரைத்தார்கள். (4)

இதுபோல் மற்றொருமுறை மழைபெய்த சம்பவத்தில், அண்ணலார் அவர்கள், மற்ற மக்களைப் போல் மழைகண்டு மருளாமல், தமது தலை, தோள், மார்பு ஆகிவற்றைத் திறந்து விட்டவர்களாக, வெளியே சென்று சுவனத்திலிருந்து மண்ணகம் பெறும் அருட்கொடைகளைத் தமது உடம்பில் நேரடியாகப் பெற்று அம்மழைக்கான தம் பங்கை மிகவும் ரசித்து அனுபவித்தார்கள்! இவ்வாறு, ஏனைய மனிதர்களிடமிருந்து இது போன்ற விஷயங்களில் வித்தியாசப் பட்டவர்களாகவே விளங்கினர் வெற்றிகளின் நாயகர் வேந்தர் நபி (ஸல்) அவர்கள்.

அந்த வெற்றிவேந்தரின் வித்தியாசமான தோற்றம்தான் என்ன!

அன்றொரு நாள், அது ஒரு பௌர்ணமி இரவு! எனக்கு முன்னால் மட்டும் இரண்டு நிலவுகள்! விழிகளை உயர்த்தி விண்ணில் தவழ்ந்து வரும் வானத்து நிலவைப் பார்க்கிறேன். பேரொளி வீசும் நிலவொன்று என் முன்னால் நிற்பதையும் காண்கின்றேன். இன்னும் சற்று நெருங்கிப் பார்த்தால், நெஞ்சை சுண்டியிழுக்கும் ராஜகம்பீர அழகு! அழகும் சௌந்தர்யமும் ஒன்றாய் வடிவெடுத்த ஒரு தோற்றம்! ஆற்றலும் வல்லமையும் சீராகக் கலந்த ஒரு வார்ப்பு! அவர் மனிதருள் ஒருவராய்ப் பிறந்தவர்தான்! எனினும், அவரது மாசு மறுவற்ற முகம் வெண்ணிலவைக் காட்டிலும் அதிகமாய் ஜொலித்து நின்றது! இறுதியாக, அந்த சிவப்பு ஆடைகளுக்குள் அழகுக்கு அழகாய் அமைந்துள்ள இந்த மண்ணகத்து நிலவே, அந்த விண்ணகத்து நிலவை விடவும் பேரழகு எனும் முடிவையே கடைசியில் நான் கண்டேன்! (5)

அதே ஆண்டு மீண்டும் மதீனாவைப் பஞ்சம் சூழ்ந்தது! அது ஒரு வெள்ளிக்கிழமை. கற்கண்டு மொழியில் சொற்கொண்டு வந்த காஸிமின் தந்தை (ஸல்) அவர்கள் ஜும்ஆ வின் உரையாற்றிக் கொண்டிருந்தவேளை ஒரு கிராமவாசி எழுந்தார். 'யா ரசூலல்லாஹ்! பருவ மழை பொய்த்து விட்டது! அள்ளித் தரும் அல்லாஹ்வைக் கொண்டு அவன் அருள் மழையைப் பொழியச் செய்யுமாறு வேண்டுங்கள்' என்றார்.

அப்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வானத்தை அண்ணார்ந்து பார்த்தார்கள். அதில் மழைமேகம் என்று ஏதும் இல்லாமல் வெறிச் சோடிக்கிடந்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள் மண்ணகத்திற்கு புத்துயிர்  கொடுக்கும் அருள்மழையைப் பொழிந்து தங்களைக் கருணைக்கண் கொண்டு நோக்குமாறு பணிவுடன் இறைவனைப் பிரார்த்தித்தார்கள்.

உடனே மழை மேகங்கள் ஒன்றோடொன்று திரண்டு சூழ்ந்தன! மழைக் காற்று மாருதமாய் மக்களிடம் குளிர்ந்து வீசி வந்தது. அவர்கள் அந்த இடத்தை விட்டும் நகர்வதற்குள் மழை பொழியத் துவங்கியது. இதையடுத்து மதீனாவின் நீர்வழிகள் எல்லாம் நிரம்பி வழிந்தன! மழை என்றால் மழை! வானமே பொத்துக் கொண்டது போல் இடைவிடாத மழை! அதுவும் இரவு பகலாக ஏழு நாட்கள் அடுத்த ஜும்ஆ தினம் வரை அம்மழை நீடித்தது. 

இந்த வார ஜும்ஆ உரையின்போது வேறொரு மனிதர் எழுந்து நின்றார். நாவலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் மக்களின் கவனத்தைக் குவித்துச் சொற்பொழிவை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்.

அந்த மனிதரோ குறுக்கிட்டவராக, 'அல்லாஹ்வின் தூதரே! இடைவிடாத  தொடர் மழையினால் நாங்கள் மூழ்கிக் கொண்டிருக்கிறோம். எங்களின் பொருட்கள் கெட்டுப்போகத் துவங்கிவிட்டன! எங்கள் வீடுகளோ இம்மழையைத் தாங்காமல் இடிந்து விழுந்து விடும் நிலையில் இருக்கின்றன! எனவே, எங்களைவிட்டும் மழையை நிறுத்துமாறு உங்களுடைய இறைவனிடம் பிரார்த்தியுங்கள்' என்றார்.

இதைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் அத்தனைப் பற்களும் தெரியும்படி அழகாகச் சிரித்தார்கள். பிறகு அறிவின் தென்றலாம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! எங்களுக்காக மழையைப் பொழிந்தருள்! அது எங்களின் மீதல்ல! அது எங்களின் சுற்றுப்புறங்களில் உள்ள மலைகளின் மீதும் மானாவாரி நிலங்களின் மீதும் நிலத்தில் நிலைத்திருக்கும் மரங்கள் மீதும் இன்னும் நிரையக் காத்திருக்கும் நீர்நிலைகள் மீதும் மற்றும் நீர்நிலைகள் பாய்ந்தோடும் பள்ளத்தாக்குகள் மீதும் உன் அருள்மழையைப் பொழியச் செய்வாயாக! தயை கூர்ந்து எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே!' என்று  மூன்று முறைப் பிரார்த்தித்தார்கள்.

அதன் விளைவாக, மழை நகருக்குள் பொழிவதை உடனே நிறுத்திக் கொண்டது! அந்தத் திரண்ட மேகங்கள் மதீனாவிலிருந்து விலகி, அதன் வலப் பக்கமாகவும் இடப்பக்கமாகவும் பிரிந்து சென்றன. மதீனாவைச் சுற்றி மழை பொழிகிறது. ஆனால் மதீனாவுக்குள் சிறிதும் பெய்யவில்லை. தான் தேர்ந்தெடுத்தத் தூதரின் உயர்ந்த மதிப்பையும் தன்னுடைய நேசத்திற்குரிய தூதரின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டதையும் இறைவன் மக்களுக்கு அன்று தெள்ளத் தெளிவாக நேரடியாகவே காட்டினான்! (6)

தங்களின் துஆ' வை அப்படியே, அந்த கணமே ஏற்றுக்கொண்டு பலனை நிறைவேற்றித்தந்த அல்லாஹ்வின் மகத்தான அருள் நிறைந்த செயல் இந்த  புவனத்தின் பொன்மணியாம் நம் நபிமணியைப் புளகாங்கிதம் அடைய வைத்தது! எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் போற்றி "அல்ஹம்துலில்லாஹ்" என்றனர்.

சற்று நேரத்தில்தமக்கு மிக ஆதரவாய் இருந்த தம் பெரியதந்தையை சட்டென்று நினைவு கூர்ந்தார்கள்:

'இன்று அபூதாலிப் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அவர் இயற்றிய கவிதையை அவரே உணர்வு பூர்வமாகப் பாடி மகிழ்ந்திருப்பார்' அப்போது அபீதாலிபின் வீரத்திருமகன் அலீய் அபுல்ஹஸன் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அந்தக் கவிதை அதே பாணியில் இப்போது பாடப்பட வேண்டுமா?" என்று கேட்டுவிட்டு, தன் தந்தையின் அதே தொனியில் அதே இனிமையுடன் பாடத்தொடங்கினார்:

"அழகே அழகான வெண்மை நிறம் ஒளிர்பவர் எவரோ
அவரால் வான்மழைக்கே பெரும் கோரிக்கை எழுப்பப்படும்!

அதுமட்டுமின்றி,
அனாதைப் பிஞ்சுகளின் ஆதரவகம் அவர்தான்! அந்த 
அனாதரவான விதவைகளின் காவலனும் அவரேதான்!" (7)

இதுபோன்று காத்தமுன் நபியவர்கள் கவிதையை ரசித்ததாக இன்னொரு நிகழ்ச்சியும் கூறப்படுகின்றது:

நான், அகிலத்தின் இருளை அகற்றிட வந்த அண்ணல் நபி (ஸல்) யின் அவையில் நூற்றுக்கு மேற்பட்ட தடவை அமர்ந்திருக்கின்றேன். அப்போது அவர்களின் தோழர்கள் சில நேரம் கவிதை பாடுவார்கள். அறியாமைக் காலத்தில் நிகழ்ந்த சில சம்பவங்கள் குறித்தும் நினவூட்டுவார்கள். ஈமான் கற்பித்த இனிய நபியவர்கள் அதை அமைதியுடன் கேட்டுக்கொண்டு இருப்பார்கள். சில சமயம் நபித்தோழர்களுடன் சேர்ந்து சிரிக்கவும் செய்தார்கள். (8)

இவ்வாறு, மாண்பு நிறைந்த மங்காத அறிவுச் சுடரான அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் அர்ரஹ்மானிடம் வேண்டிப்பெற்ற அருள் மழைத்தூறல்கள் இந்த அவனிக்கு வந்து மண்ணுறையும் பல்லுயிர்களும் புத்துணர்வுடன் நலம் பெற்று வாழப் பயன்பட்டன! இன்னும் அந்த அருள் மழைத்துளிகளில் எஞ்சிய நினைவலைகள் அதோ அந்த பசும்புல் வனங்களிலும் பாலை மணல் வெளிகளிலும் மலைச் சிகரங்களிலும் இதமாய் வீசும் தென்றலிலும் சலசலத்து ஓடும் நீரலைகளிலும் நீக்கமறவே நிறைந்திருக்கின்றன! அல்லாஹ்வின் அருளை அழகாய் அடைந்திருக்கின்றன!

o o o 0 o o o
Sources:
(1) அல்குர்ஆன் 32:27
(2) புஹாரி 79: அபூ மூஸா (ரலி)
(3) அல்குர்ஆன்: 24:43
(4) அபூதாவூத் 992: ஆயிஷா (ரலி)
(5) திர்மிதீ 2811: ஜாபிர் இப்னு ஸும்ரா (ரலி)
(6) புஹாரி 6093: அனஸ் பின் மாலிக் (ரலி)
(7) புஹாரி 1009: இப்னு உமர் (ரலி)
(8) திர்மிதீ 2777: ஜாபிர் பின் சமுரா (ரலி)
இன்ஷா அல்லாஹ் தொடரும்...

இக்பால் M.ஸாலிஹ் 

நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது... 21

அதிரைநிருபர் பதிப்பகம் | February 27, 2013 | , ,

எத்தியோப்பியா
குறுந்தொடர் : 6

ஏசி அல்லது ஃபேன் இல்லாத (அதற்கான தேவையே இல்லாமல் வருடம் முழுவதும் ஊட்டி வானிலை) அந்த ஹோட்டலில் இரவு ஓய்வு எடுத்து விட்டு அடுத்த நாள் பொருட்காட்சிக்குத் தயாரானோம். ஏற்பாட்டாளர்கள் காலையில் ஏழு மணிக்கே நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் வாசலில் தங்களது வாகனத்தை கொண்டுவந்து காத்திருந்தார்கள். சில பொருட்களை கஸ்டம்ஸ் பிடித்து வைத்திருந்ததால் அதனை பெற்றுவர வேண்டி நான் பொருளாதார அமைச்சகத்திற்கு போக வேண்டியிருந்தது, அங்கு போகும் வழிநெடுகிலும் அந்த நாட்டின் அழகு கண்கொள்ளாக் காட்சியாக மனதைக் கொள்ளையடித்தது.


மனதைக் கொள்ளையடிக்கும் அழகிய கிராம சாலைகள்


தெள்ளத் தெளிவான சாலைகள் (சோறுபோட்டு சாப்பிடும் அளவிற்கு இல்லாவிட்டாலும் ஒரு ஆஃபிரிக்க நாட்டிற்கு இதுவே கூடுதல்)


படத்தை நன்றாக உற்றுப் பாருங்கள் ஆஃபிரிக்க யூனியன் செல்லும் வழி


வாழ்வைத்தேடிச் செல்லும் மண்ணின் மைந்தர்கள்…

கண்ட காட்சிகளெல்லாம் நமக்கு டாட்டா காட்டியது, அதன் பிறகு பொருளாதார துறை அனுமதிக் கடிதம் கஸ்டம்ஸ் என்று நீண்டது. நான் பட்ட கரடுமுரடு கஷ்டங்களை இங்கே எழுதி உங்களைக் கஷ்டப்படுத்த விரும்பவில்லை.. எல்லாம் நல்ல மாதிரியாக முடிந்து, ஒரு வழியாக பொருட்காட்சி நடக்கும் மெஸ்க்கல் ஸ்கோயரை வந்தடைந்தோம். அந்த மக்கள் ரொம்பவே பூசணிக்காய் திண்பாங்கபோல நம் நாட்டில் வாழைப்பழம் தொங்குவதுபோல அங்கே பூசணிக்காய்கள் மலையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன ஒவ்வொரு கடையிலும்.


பூசணிக்காய்களின் கடை…

பொருட்காட்சியைத் தொடங்கி வைக்க அமைச்சர் இன்னும் ஒரு மணிநேரத்தில் வருவார்! வருவார்!! என்று பத்து மணி நேரமாகக் கத்திக் கொண்டிருந்தார்கள். ஆனாலும்ம் அமைச்சர் வந்த பாடில்லை, அவரை வரவேற்க ஏற்பாடு செய்திருந்த பேண்ட் குழுவினரின் இசை காதைப் பிளந்து கொண்டிருந்தது. எத்தியோப்பியாவின் ஒவ்வொரு அரசு நிகழ்ச்சியிலும் அந்த பகுதியின் பெருபான்மையான மக்களின் இனத்தலைவர் அரசு மரியாதையுடன் அழைத்து வருவது மரபாம். அந்த வகையில் அடிஸ் அபாபாவின் தலைவர் அவர் ஒரு முஸ்லிம், மரியாதையுடன் அழைத்து வரப்பட்டார்.


நான்தான் பேண்ட் பேக்ரவுண்டுடன் (நிழற்படத்தில் நிஜமாக பேண்டு சத்தம் கேட்குதா !?)


அடிஸ் அபாபாவின் தலைவர் ராஜ மரியாதையுடன் அழைத்து வரப்படுகின்றார்

ஒரு வழியாக அமைச்சர் வந்துவிட்டார், பொருட்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு பூத்தாக சென்றவர், அவரின் உதவியாளர்கள் “துபாய்” கம்பெனி இவர்கள் என்றவுடன் தாவிக்குதித்தவராக என்னிடம் வந்தார் (துபாய் என்ற வார்த்தையை மரியாதையுடனும, மதிப்புடனும் உலகிற்கு அறிமுகம் செய்த பெருமை மேதகு கண்ணியதிற்குரிய சேக் முகம்மது அவர்களையேச் சாரும்), நான் அவரிடம் ”உங்கள் நாட்டிற்கு வியாபாரம் செய்ய வந்திருக்கின்றோம் உங்களின் ஆதரவு தேவை” என்றேன். அவர் மகிழ்ச்சியுடன் அதற்கு எப்போதும் எங்களின் ஒத்துழைப்பு உண்டு. இன்னும் மென்மேலும் தருவோம் அதற்காக நீங்கள் இங்கே தொழிற்சாலைகளை தொடங்கி உற்பத்தி செய்தால் என்றார்.

தன்னாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட வேண்டும் என்ற நினைப்பு உள்ள அம்மைச்சரிடம் “நிச்சயம் வருங்காலத்தில் செய்வோம்” என்றேன் மகிழ்வுடன் அவர், அருகில் இருந்த அமைச்சக தலைமைச் செயலாளரை அழைத்து தகவல் அட்டையைக் கொடுத்து அறிமுகம் செயதபின் எந்த நேரத்திலும் ”என்னை தொடர்ப்பு கொள்ளலாம்” என்றார். அந்த பெண் தலைமைச் செயலர் "ஆஃபிரிக்கா நாடுகள் அனைத்தும் இப்பொழுது உள்நாட்டில் உற்பத்தி செய்ய முன்வரும் தொழில் நிறுவனங்களை சிவப்புக்கம்பளம் கொண்டு அழைக்கின்றன. ஆஃபிரிக்காவில் தொழிலாளர் கூலி சீனா / இந்தியாவைவிட ரொம்ப குறைவுதான் அரிதான வளங்கள் (Rare Earth Element (REEs) குறைவாக இருந்தாலும், இருக்கும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து இங்கேயே தயாரிப்பதற்கான சாத்தியங்களும், அல்லது உதிரி பாகங்களை இறக்குமதிச் செய்து ச்சும்மா நட்டு, போல்டை மட்டும் அங்கு உற்பத்தி செய்து “Made In Africa” என்று போடுவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளன.. என்ன திருப்பூர் சபீர் காக்கா கிளம்பிடலாமா ? ஒரு கொசுறுச் செய்தி சீனாதான் உலகின் 95% அத்தியாவசிய வளங்களை வைத்திருக்கின்றன அதனால்தான் இன்று வாப்பா உம்மாவைத்தவிர அனைத்தும் சீனா தயாரிப்புகளாகி வருகின்றன.


பொருளாதார துறை அமைச்சருடன் சின்னச் சின்ன உரையாடல்கள்.


பொருளாதார துறைத் தலைவியுடன்

பொருட்காட்சியின் இடையில் டீ கிடைக்காததால் காஃபி குடித்தேன். நிச்சயம் அது தேன் தான் - காஃபியின் பிறப்பிடமே எத்தியோப்பியாதான்…”café” என்ற காஃபி அதிகமாக விளையும் இடம் எத்தியோப்பியாவில்தான் உண்டு. ஆனால், நம் மேற்கத்திய நாடுகள் வழக்கம்போலவே தன் அதிகாரங்களை பயன்படுத்தி உயர்ந்த நறுமண மிக்க காஃபி ரகங்களின் காப்புரிமையைத் தன் வசப்படுத்தி வைத்து கொண்டு இம்மக்களின் வயிற்றில் அடிக்கின்றன. 

அது சரி காஃபி கண்டுபிடித்த கதை உங்களுக்கு தெரியுமா ?? எத்தியோப்பியாவின் கடைக்கோடி கிராமத்தில் வாழ்ந்த ஒரு பெரியவர் (அவர் பெயர் ஹாரோ என்று நினைக்கின்றேன்) தன் ஆடுகள் ஒரு நாள் வழக்கத்தைவிட உற்சாகமாக இருப்பதைக் கண்டார். அதற்கான காரணம் தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட அந்த பெரியவர் அதன் உணவுகளைக் கவனித்தபோது ஒரு விதமான கொட்டைகளை சாப்பிட்ட அன்றைக்குதான் அவைகள் உற்சாகமாக இருப்பதை கண்டுபிடித்தார். அந்தக் கொட்டைகளை பறித்து, காய வைத்து தானும் சாப்பிட்டு பார்த்தார் உடம்பில் ஒரு வித உற்சாகம் தோன்றுவதைக் கண்டார். அங்கிருந்துதான் கிளம்பிற்று காஃபி இன்றும் அவர் பெயரில் நிறைய சங்கிலித்தொடர் காஃபி கடைகள் உண்டு. அவர்தான் காஃபியின் வாப்பா .ஸ்டார் பக்ஸ் அந்த கடைகளின் காப்பிதான் (copy). எத்தியோப்பியா சென்றால் இதனை நீங்கள் உணர்வீர்கள்.


எத்தியோப்பியாவின் பாரம்பரிய காஃபிக் கடை

அவர்கள் சாப்பிடும் உணவை நாம் சாப்பிடுவது கடினம்தான், எத்தியோப்பியாவின் தேசிய உணவு “கேத்ஃபூ” ஒரு விதமான ஸ்பெஷல் ரொட்டியுடன் (நம்மூர் மைதா தோசைபோல இருக்கு) ஆட்டுக்கறியை வேகவைக்காமல் கீமாவாக்கி அதனை ரொட்டிக்கு தொட்டுச் சாப்பிடுகின்றார்கள். அந்த நாட்டின் பாரம்பரிய இரவு விடுதிக்கு (நாசமாப்போன ஆஃபிரிக்க மட்டும் மேலைநாடுகளில் இரவை தூங்குவதற்கு பயன்படுத்தாமல் இப்படி விழித்திருந்து உடல் நலத்தை கெடுப்பது பொழுதுபோக்கு என்று நினைக்கின்றேன். நான் போனது கலாச்சார இரவு விடுதி) சென்றபோது இது எனக்கு பரிமாறப்பட்டது வற்புறுத்தலின் பேரி்ல், அல்லாஹ் பெயர் சொல்லி அறுக்கப்பட்டதா? என்று தெரியாத உணவை அந்த நாட்டின் அதிபரே வந்து சொன்னாலும் சாப்பிடமாட்டேன் என்று சொல்லிவிட்டு அந்த ரொட்டியை மட்டும் சிறிது சுவைத்தேன். புளிப்புச்சுவையுடன் இருந்த அந்த ரொட்டி குமட்டிக் கொண்டு வந்தது, பாத்ரூம் வருகின்றது என்று சாக்கு சொல்லிவிட்டு பக்குவமாக அதனை ஃபிளஸ் செய்துவிட்டு வந்தேன்.


தேசிய உணவு “கேத்ஃபூ”

இந்த உணவுகளை வெறுத்தாலும் ”மந்தி”க்கு அடிமையான நான் இதுவரை கிட்டத்தட்ட சென்ற நாடுகள் மற்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நாடுகளின் உணவங்களில் எல்லாம் சாப்பிட்டு விட்டேன். ஆனால் எத்தியோப்பியாவின் பைத்தல் மந்தியின் சுவைக்கு முன்னர் எதுவும் எடுபடவில்லை. அதன் சுவை நாக்கில் நின்றதால் தினமும் டாக்ஸி பிடித்தாவது அந்த மந்தியை ஒரு பிடிபிடித்துவிட்டு வந்துவிடுவேன். அதனால் சிறிது தொந்தியும் வந்துவிட்டது :).. எத்தியோப்பியாவின் ஆட்டுக்கறி ஒரு சுவைதான்


மந்தியின் எழிலான !!! தோற்றம்..வாய் ஊறுதா ? 


யாருடைய வீடும் இல்லை பைத்தல் மந்தி உணவகம்தான்

எத்தியோப்பியா மக்கள் பெரும்பாலும் நண்பர்களாக பழகக்கூடியவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரியே. இருந்தாலும் பெண்களிடம் பழகும்போது மிகக்கவனமாக இருக்க வேண்டும் கேஸுவலாக எதற்கும்/எதனையும் செய்ய தயங்காதவர்கள் ஒரு சில எத்தியோப்பியப் பெண்கள் (சில ஷைத்தானிய தனமான விளையாட்டுகளும் அடங்கும்). மனக்கட்டுபாடு இல்லாவிட்டால் எங்குமே ஒழுக்கமாக வாழ முடியாது. பல சவுதிக்காரர்கள் அங்கு அலையும் நிலையைக் கண்டால் மனம் ரொம்பவே கஷ்டப்படுகின்றது. வியாபரத்திற்காக அலைந்தால் மகிழ்ச்சி கொள்ளலாம், ஆனால் விசயமே வேறு அங்குள்ள டாக்சிக்காரர்கள் அவர்களைப்பற்றி சொல்லும் சம்பவங்கள் நமக்கு தலைக்குனிவை ஏற்படுத்துகின்றன..அல்லாஹ் நம் அனைவரையும் அந்த இழிச்செயலை விட்டும் காப்பாற்ற வேண்டும்.

கீழேயுள்ள படத்திற்கும் செண்டிமெண்டுக்கும் சம்பந்தம் உண்டும் அடுத்த தொடரோடு இதனைக்கண்டுவிட்டு, மேலும் சிலவற்றை கூறிவிட்டு தொடரைமுடிப்போம் காத்திருப்பீர்களா ??


முகமது யாசிர்

எப்படியும் கம்பன் வருவானா? 15

அதிரைநிருபர் பதிப்பகம் | February 26, 2013 | , , , ,


மத்திய ரயில்வே துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் இன்று (26-02-13) மத்திய ரயில்வே பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் (பாராளுமன்ற தாக்குதல் அல்ல) செய்ய இருக்கிறார். ஆனால் அதில் நமதூர் வழி திருவாரூர் காரைக்குடி அகல ரயில்பாதைப்பற்றி ஏதேனும் சொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் ஒன்றும் தெரிவிக்கவில்லை.

இந்த வழித்தடத்தில் காலம் காலம் ஓடிய கம்பன் எக்ஸ்பிரஸ் என்ன ஆனது?

அதில் பல வருடங்கள் பயணித்து அனுபவித்த பகுதி மக்களின் போராட்டங்களுக்கு கிடைத்த பலன்கள் என்ன?

மத்திய உள்துறை மந்திரியாக இருந்த சமயம் திரு. ப. சிதம்பரத்தை நம் ஊர் பெரியவர்கள் அவர் வீட்டில் நேரில் சந்தித்து அகல ரயில்பாதையை துரிதப்படுத்தி அதில் கம்பனை விரைவில் ஓட்டச்செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொண்டு கொடுக்கப்பட்ட மனுவிற்கும் பிறகு அவர் மத்திய அரசின் லட்டர் பேடிலிருந்து அதை பெற்றுக்கொண்டதற்காகவும் பின்னர் அதை ரயில்வே துறை அமைச்சருக்கு பரிந்துரைக்கப்பட்டதற்காகவும் எழுதி அனுப்பப்பட்ட அந்த நகல் கடிதத்தால் ஏற்பட்ட பலன்கள் என்ன?

நமது தஞ்சை தொகுதி பாராளுமன்ற எம்.பி.யும் மத்திய நிதித்துறை இணையமைச்சருமான திரு. பழநிமாணிக்கத்தை நேரில் பல முறை சந்தித்து நமதூர் பெரியவர்கள் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கும், அகல ரயில் பாதை பணிக்காக அவர் கொடுத்த வாக்குறுதிகளுக்கும் என்ன பலன் கிடைத்துள்ளது?

திமுகவின் பாராளுமன்ற எம்பிக்கள் குழு தலைவரும், முன்னாள் மத்திய கப்பல் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவரும், மன்னார்குடியை சொந்த ஊராகக்கொண்ட திரு. டி.ஆர்.பாலு அவர்களிடமும் நம்மூர் பெரியவர்கள் நேரில் சென்று மனு கொடுத்துள்ளார்கள். அதன் பலன் என்ன?

திரு. பழநிமாணிக்கம் அவர்களும், திரு. டி.ஆர். பாலு அவர்களும் நம் பகுதி அகல ரயில்பாதை பணிகள் பற்றி மாறி, மாறி பத்திரிக்கைகளில் பேட்டியும், வாக்குறுதியும் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்து வந்தனர். அதன் பயன் தான் என்ன?

நமக்கு அருகில் உள்ள முத்துப்பேட்டையை சொந்த ஊராகக்கொண்டு வேலூர் தொகுதியின் தற்பொழுது எம்பியாக இருக்கும் ஜனாப் அப்துல் ரஹ்மான் அவர்களை நேரில் சந்தித்து மனுக்கள் கொடுக்கப்பட்டு என்ன ஆனது?

புதிதாக ரயில் வழித்தடம் அமைத்துக்கேட்டால் அதனால் பாதிக்கப்படும் விவசாய நிலங்களின் உரிமையாளர்கள், விவசாயிகளால் பல போராட்டங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஓடிக்கொண்டிருந்த குறுகிய ரயில்பாதையை அகல ரயில்பாதையாகத்தானே இப்பகுதி மக்கள் ஆக்கிக்கேட்கிறார்கள்? பிறகு ஏன் இந்த சுணக்கமும், தயக்கமும் என்று தெரியவில்லை.

இப்பகுதி உப்பளங்களாலும், கருவாட்டு மண்டிகளாலும் அரசுக்கு வருவாய் அதிகம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்பகுதி மக்களின் வாக்குகளில் தானே நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராகி அங்கு அலங்கரிக்க முடிகிறது? என்ற குறைந்தளவு நன்றி விசுவாசம் நம் எம்பிக்களுக்கு வர வேண்டாமா?

இவர்களிடம் மனுக்கள் பல கொடுத்து நம் மக்கள் மல்லுக்கட்டி நின்றும், மாறி, மாறி இவர்கள் வாக்குறுதிகளை வாரி வழங்கியும் கடைசியாக நம் மண்ணில் கம்பனை கொண்டு வந்து சேர்ப்பதற்குள் அதை பயன்படுத்தி இன்னும் கொஞ்சம் மிச்சம், மீதி உசுரோடு இருக்கும் எத்தனையோ நம் பெரியவர்களும் போய்ச்சேர வேண்டிய இடம் போய்ச்சேர்ந்து விடுவார்கள் போலும். அதற்குள் பல பாராளுமன்ற தேர்தல்களும், சட்ட மன்ற தேர்தல்களும் நம்மை சந்தித்து விட்டுப்போய் விடும் போல் தெரிகிறது.

மத்திய அரசு நாட்டின் பொருளாதார வளர்ச்சி +8 சதவிகிதம் வளர்ச்சி அடைந்திருப்பதாக அறிவித்திருந்தாலும் நம்மைப்பொறுத்தவரை இன்னும் நாம் -8 சதவிகிதம் தாழ்ச்சி அடைந்ததாகவே கருதவேண்டியுள்ளது பழைய பல விடயங்களை இன்று ஒப்பிட்டு பார்க்கும் பொழுது......

கணவன் இறந்ததால் ஒரு விதவையாக்கப்பட்ட மனைவிக்கு கழட்டப்படும் வண்ண ஆடை, அணிகலன்கள் போல் சமீபத்தில் நம் ஊர் இரும்பு ரயில் பாதைகள் பெயர்த்தெடுக்கப்பட்டன. அகல ரயில்பாதை பணி மூலம் அவளுக்கு என்று தான் அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு மறுமணம் செய்து வைக்கப்படுமோ? காத்தே இருப்போம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது

பரீட்சைக்கு படிக்கலாமா? - ஓர் நினைவூட்டல் ! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | February 26, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் . . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

பரீட்சை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. பத்திரிகையிலும், தொலைக்காட்சியிலும் எப்படி படிக்க வேண்டும் என்ற அறிவுரைகளை தொடங்கி விட்டார்கள். நாமும் நமது பங்கிற்கு எப்படி படிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்த இருக்கிறோம். அரசு சலுகை சரிவர கிடைக்காமல் தங்கள் பிள்ளைகளை பல சிரமங்களுக்கிடையில் படிக்க வைத்துக்கொண்டு இருக்கும் பெற்றோர்களுக்காகவும் , மாணவ, மாணவியருக்காகவும் இந்த கட்டுரையை எழுதுகிறோம். கவனமாக படியுங்கள்.

முஸ்லிம்கள் அன்றும் இன்றும்

ஒரு காலத்தில் இந்தியாவையே ஆண்ட சமுதாயம். இந்திய விடுதலைக்காக கடினமாக பாடுபட்ட இஸ்லாமிய சமுதாயம் சிந்திய இரத்தங்கள்தான் எத்தனை. மேலும் விடுதலைக்காக தங்கள் சொத்துக்களை இழந்து, உயிரையும் தியாகம் செய்ததற்கு பரிசாக இன்று தீவிரவாதிகள் என்ற முத்திரை குத்தியும், இந்திய நாட்டில் கொத்தடிமைகளாக வாழும் நிலைக்கும், அரபு நாடுகளிலோ இரண்டாந்தர குடிமக்களைவிட எந்த மதிப்பும் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கும் அவல நிலைக்கு நம்மை தள்ளியது ஒரு கூட்டம்.

அந்த கூட்டங்கள் இந்திய விடுதலைக்காக துரும்பளவு கூட தியாகம் செய்தவர்கள் கிடையாது. ஆனால் தியாகச் செம்மல்கள் என்று தம்மை வரலாற்றில் பதிவு செய்து கொண்ட பொய்யின் அடிப்படையில் இந்தியாவின் அனைத்து வளங்களையும் தங்களுக்கு சாதகமாக்கி, முஸ்லீம்கள் எந்த பிரதிபலனும் பார்க்காமல் செய்த தியாகத்தை கொச்சைப்படுத்தி அரசிலும், நாட்டிலும் எந்த சலுகையும் அனுபவித்து விடக்கூடாது என்பதில் மட்டும் மிக கவனமாக இன்று வரை இருந்து கொண்டு இருக்கிறார்கள். மேலும் ஆங்கிலேயன் காலத்தில் நமக்கு இருந்த இட ஒதுக்கீட்டை சுதந்திர இந்தியாவில் அகற்றியும் அன்றும் இன்றும் அரசின் அனைத்து சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு முஸ்லீம் சமுதாயத்தை மட்டும் எந்த விதத்திலும் முன்னேற விடாமல், அரசுதுறைகளில் நுழைய விடாமல் எல்லா துறைகளிலும் திறமையாக பூதக்கண்ணாடி வைத்து பார்த்துக்கொண்டு தன்னை மட்டும் மனித இனம் என்று கூறி தற்பெருமையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறது கயவர்கள் கூட்டம்.

முஸ்லிம் சமுதாயத்தில் படிப்பறிவு என்பது மிக மிக கீழ் நிலையில் படுபாதாளத்தில் இருக்கிறது. சுதந்திரத்திற்கு முன் விடுதலை பெறுவதற்காக படிப்பை நம் முன்னோர்கள் விட்ட காரணத்தால் இன்று வரை கல்வியில் வீழ்ந்தே கிடக்கிறோம். நம்முடைய தியாகத்திற்கு முதல் பரிசு நமக்கு இருந்த இட ஒதுக்கீட்டை பறி கொடுத்தது. இரண்டாம் பரிசு தீவிரவாதி என்ற பெயர் - நாம் பெற்ற இந்த இரண்டு பரிசுகளாலும் கல்வியிலும், வாழ்விலும் பின்தங்கிவிட்டோம்.

பெற்றோர்களின் கவனத்திற்கு:

தங்கள் பிள்ளைகளின் பரீட்சை நேரம் நெருங்கி விட்டது. இதுவரை எப்படி படித்தார்கள் என்பது முக்கியமல்ல வரும் இறுதித்தேர்வில் எப்படி படிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். இன்றுவரை அவர்களின் படிப்பில் தாங்கள் கவனம் செலுத்தாமல் இருந்திருக்கலாம். இந்த இறுதித் தேர்வுக்காக நீங்கள் உங்களின் நேரங்களை அவசியம் ஒதுக்கி அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

முதலில் தங்களின் வரவேற்பு அறையில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டி நிகழ்ச்சிகளை தாங்களும் பார்க்காதீர்கள். பிள்ளைகளையும் பார்க்க விடாதீர்கள். முடிந்தளவு தொலைக்காட்சியை நல்ல நிகழ்ச்சிகளுக்கும், செய்திகளை தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தி, ஷைத்தானின் மொத்த உருவமான சினிமா, பாடல்கள், மெகா சீரியல்கள் இவை அனைத்திற்கும் விடை கொடுத்து விடுங்கள். இம்மையிலும் மறுமையிலும் எந்த நன்மையையும் பெற்றுத்தராதவற்றின் பக்கம் நெருங்கலாமா? உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் மேலும் வல்ல அல்லாஹ் கூறுவதைப்பாருங்கள்:

காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.(அல்குர்ஆன் : 103: 1,2,3).

பரீட்சைக்கு நாம் எப்படி தயாராவது:

திட்டமிடும் காரியத்தைத்தான் ஒழுங்காக நாம் செய்ய முடியும். வெளியூருக்கு போகுமுன் டிக்கெட் முன்பதிவு செய்கிறோம். ஊரில் செல்லும் இடங்களை முன் கூட்டியே திட்டமிட்டு விடுகிறோம். அந்த ஊரில் போய் திட்டமிடுவதில்லை. அதுபோல் ஒவ்வொரு தேர்வின் பாடத்திற்கும் குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கி ஒரு அட்டவணை தயார் செய்து அதன்படி உங்கள் பாடங்களை பல பகுதிகளாக பிரித்து படித்து முடித்து விடுங்கள். மாணவ மாணவியர்களே! நீங்கள் மிக முக்கியமாக கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது. ஒரு கேள்விக்கான பதிலை படித்து முடித்தவுடன் படித்ததை உடனடியாக ஒரு நோட்டில் எழுதி பார்த்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்களுக்கு பரீட்சையில் கைகொடுத்து உங்களுக்கு வெற்றியை கிடைக்கச் செய்யும். இதை தவிர வெறும் மனப்பாடம் எந்த வகையிலும் பயன் அளிக்காது. படித்ததை இரவு நேரங்களில் எழுதிப் பாருங்கள். எழுதிப்பார்ப்பதில் கவனக்குறைவாக இருந்து விடாதீர்கள்.

நாட்கள் இருக்கிறது படித்துக் கொள்ளலாம் என்று இருந்து விடாதீர்கள். காலத்தை வீண் விரயம் செய்யாமல் படிக்க ஆரம்பித்து விடுங்கள். சென்று போன நாட்கள் திரும்பி வராது என்பதை நினைவில் கொண்டு உங்களின் ஒரு வருட படிப்பிற்காக நீங்கள் பயன்படுத்திய மணித்துளிகள் எத்தனை அந்த மணித்துளிகளில் சில மணி நேரங்கள்தான் உங்களின் தேர்வுக்கான நேரம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

படிக்கும் நேரங்கள்:

பெற்றோர்களே பிள்ளைகளை விடிய விடிய படி படி என்று தொல்லை கொடுக்காதீர்கள். கண் விழித்து படிப்பதால் உடலில் தொந்தரவுகளும், மனச்சோர்வும்தான் ஏற்படும். அப்படி படித்தாலும் மனதில் அதிக நாட்களுக்கு படித்தது ஞாபகம் இருக்காது. அதனால் இரவு 10 அல்லது 10:30க்குள் படித்து முடித்து விட்டு உறங்கச் சொல்லுங்கள். விடியற்காலை 3:30 அல்லது 4 மணிக்கு எழுந்த வெது வெதுப்பான நீரில் குளித்து விட்டு 2 ரக்காஅத் நபில் தொழுது இறைவனிடம் உதவி தேடிய பிறகு படிக்கச் சொல்லுங்கள். இந்த நேரத்தில் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். படிப்பதும் நன்றாக மனதில் பதியும். அதோடு ஃபஜ்ர் நேரம் வந்தவுடன் தொழுது விட்டு தொடர்ந்து படிக்கச் சொல்லுங்கள். காலையில் ஒரு மணி நேரம் படிப்பது மற்ற நேரத்தில் 3 மணி நேரம் படிப்பதற்கு சமம் ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எவ்வளவு நேரம் படிக்கலாம் என்பதை அவரவர் வசதிக்கு தக்கவாறு நிர்ணயம் செய்து கொள்ளலாம். பள்ளி நாட்களில் 7 முதல் 8 மணி நேரமும் விடுமுறை நாட்களில் 10 முதல் 13 மணி நேரம் என்று தனித்தனியாக நேரங்களை பிரித்து அந்த நேரங்களில் படிக்கலாம்.

உடல் ஆரோக்கியம்:

உடலுக்கு தூக்கம் அவசியமான ஒன்று. இரவில் 5 மணி நேரம் தூங்குங்கள். மதியம் அரை மணி நேரம் குட்டித்தூக்கம் போடுங்கள். இது தொடர்ந்து கவனம் செலுத்துவதற்கு உதவியாக இருக்கும்.

எண்ணெய் உணவுகளை அதிகம் சாப்பிட்டால் மந்தம் ஏற்படும். அதனால் எண்ணெய் பொருட்களை மிக குறைவாக சாப்பிடுங்கள். ஹோட்டல் உணவுகள், ஃபாஸ்ட் புட் உணவுகளை அறவே தவிர்த்து விடுங்கள். தூங்காமல் படிப்பதற்கு அடிக்கடி டீ, காபி அதிகம் குடிப்பீர்கள், இதனால் சுறுசுறுப்பு ஏற்படும். அதே நேரத்தில் உடலில் பித்தத்தை அதிகப்படுத்தி விடும். குறைவாக டீ, காபி குடிப்பது நல்லது. இதைவிட சூடான பால் குடிப்பது சிறந்தது. பகல் நேரங்களில் மோர், இளநீர், பழச்சாறுகள் அவரவர் வசதிக்கேற்றவாறு குடிக்கலாம். நொறுக்குத்தீனி எதுவும் சாப்பிடாதீர்கள். எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை மிதமான அளவில் நேரத்திற்கு சாப்பிட்டு விடுங்கள்.

நினைவாற்றல் பெருக:

மனிதர்களின் மூளை சிறியது இது முன்னூறு கோடி நரம்பு செல்களை கொண்டது. நமது மூளையில் உள்ள 'கார்டெக்ஸ்' என்ற பகுதி நாம் கேட்கும் ஒலி, பார்க்கும் ஒளி, நுகரும் மணம், நாவின் சுவை இவைகளை ஆய்வு செய்த பின் நம்மை உணரச் செய்கிறது. தேவையானால் பதிவு செய்தும் வைத்துக்கொள்கிறது. இப்படி பார்க்கும், கேட்கும், உணரும், அறியும் விஷயங்களை ஒன்று சேர்த்து மூளையில் பதிவு செய்வதுதான் 'நினைவாற்றல்' என்பது. வகுப்பில் ஆசிரியர் பாடங்கள் நடத்தும்போது அதிக கவனம் செலுத்தி நம் மனதில் தேவையற்ற கவனச்சிதறல்கள் ஏற்படுவதை தவிர்த்துக் கொண்டு உன்னிப்பாக கவனித்து மனதில் உள்வாங்கிக்கொண்டால் இன்ஷாஅல்லாஹ் பலன் அளிக்கும். இப்படி பாடங்களை மனதில் பதிய வைத்து மீண்டும், மீண்டும் பாடங்களை படிக்கும்பொழுது நம் மனதில் மறந்து போகாத அளவுக்கு பதிந்து விடும்.

நம்முடைய கவனத்தை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி கவனமாக படித்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மாணவ மாணவியர்களே! நீங்கள் படிக்கும் பாடங்களை ஆர்வத்துடன் கவனித்து நீங்கள் என்னவாக வர வேண்டும் என்பதை டாக்டர், இன்ஜீனியர், ஆசிரியர், வக்கீல் இப்படி எந்த துறையை விரும்புகிறீர்களோ அதை அடிக்கடி மனதில் நினைத்து மிக ஆர்வத்துடன் படிக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக பருக வேண்டும். நீர்தான் உலகில் உயிர் வாழ முக்கியம். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள நீர் அதிகம் தேவை. உடல் குளிர்ச்சியாய் இருக்கும்பொழுது கவனம் மிக சுலபமாகி விடும்.

நினைவாற்றலுக்கு கை கொடுக்கும் உணவு

மூளை நரம்பில் நியூரான் என்ற செல் உள்ளது. இந்த செல்தான் கேட்பது, பார்ப்பது, உணர்வது போன்றவற்றை ஒருங்கிணைக்கும். இதற்கு பி1 வைட்டமின் தேவை. இதில் உள்ள தியாமின் என்ற புரதம் நினைவாற்றல் பெருக உதவி செய்கிறது. தியாமின் குறைபாடு ஏற்பட்டால் நினைவாற்றலில் குறை ஏற்படும். அதனால் தியாமின் அதிகமுள்ள கோதுமை, கடலை, தானியங்கள், பச்சைபட்டாணி, சோயாபீன்ஸ் போன்றவைகளை அதிகம் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பழங்களையும் அதிக அளவு சாப்பிட வேண்டும்.(எங்க உம்மாவே காய்கறி சாப்பிடமாட்டார்கள் எனக்கு எப்படி இதையெல்லாம் தருவார்கள் என்று நினைக்க வேண்டாம் - உம்மாவிடம் அவசியத்தை எடுத்து கூறுங்கள்). உணவுதான் இயற்கை மருந்து முடிந்தளவு அவரவர் வசதிக்கேற்றவாறு தியாமின் உணவுகளை சாப்பிட முயற்சித்தால் மூளையின் சக்தி குறையாது. நினைவாற்றலும் பெருகும். தங்களால் முடிந்தவரை பின்பற்றுங்கள்.
(வைத்தியனிடம் கொடுக்கும் பணத்தை வாணிபனிடம் (அரிசி,மளிகைபொருட்கள், காய்கறி, பழங்கள் விற்பவர்)கொண்டு போய் கொடுத்து ஆரோக்கியமாக இருங்கள் என்பது பழமொழி).

மேலும் : ‘‘ ரப்பி ஜித்னி இல்மா ’’ ‘‘இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக! ’’ (அல்குர்ஆன் : 20:114) என்று அடிக்கடி பிரார்த்தனை செய்து வாருங்கள்.

மனதை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்:

மாணவ மாணவியரின் மனது ஷைத்தானின் ஆதிக்கமான தொலைக்காட்சியின் மீது ஒன்றி விட்டது. இந்த தொலைக்காட்சிகள் சமூக நலனில் அக்கரை கொண்டு செயல்படவில்லை. பணத்தை குறிக்கோளாக கொண்டு தன்னை, தன் குடும்பத்தை வளப்படுத்திக்கொள்ள மட்டுமே என்று செயல்படுகிறது. அதனால் இதன் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுங்கள். கடந்த காலங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவியரிடம் தங்களின் அதிக மதிப்பெண்ணுக்கும் பரீட்சையில் பெற்றி பெறவும் உதவியாக இருந்த காரியங்களை பற்றி கூறுங்கள் என்று கேட்டபொழுது படித்ததை அனைத்தையும் எழுதிப்பார்ப்பது எங்கள் கட்டாய பழக்கம் என்றார்கள். மேலும் 9ஆம் வகுப்பு முதல் எங்கள் வீட்டில் கேபிள் டிவியை கட் செய்து விட்டோம். பரீட்சைக்கு 4 மாதங்களுக்கு முன்பே கேபிள் டிவியை கட் செய்து விட்டோம் என்று சொன்னார்கள். வாழ்க்கைக்கு எந்த வகையிலும் உதவி செய்யாத காட்சிகளைத்தான் இந்த தொலைக்காட்சிகள் காட்டுகின்றன என்பதை புரிந்து கொள்ளுங்கள். சிறந்த முறையில் படித்து முன்னேற்றம் அடைவதே உங்களுடைய முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
அதோடு தாங்களும் தன்னிறைவு பெற்று இந்த சமுதாயத்தில் வீழ்ந்து கிடப்பவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று அடிக்கடி மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் ஒரு லட்சியம் இருக்க வேண்டும். கல்வி பலவிதங்களிலும் எட்டாத சமுதாயத்தில் இருக்கிறோம். நாம் சிறப்பான முறையில் படித்து வெளி வந்து மற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு இருங்கள். எக்காரணத்தை கொண்டும் தாழ்வு மனப்பான்மைக்கு இடம் கொடுத்து விடாதீர்கள். எனக்கு மறதி இருக்கிறதே என்று கலங்கி நின்று விடாதீர்கள். தாழ்வு மனப்பான்மையோடு இருந்தால் எந்தக் காரியத்திலும் வெற்றி கிட்டாது. என்னால் முடியும் எனக்கு இறைவன் உதவி செய்வான் என்ற தன்னம்பிக்கையை அதிகம் வளர்த்துக்கொள்ளுங்கள். இறைவனின் உதவி கிடைக்க தினமும் பிரார்த்தனை செய்து வாருங்கள். வல்ல அல்லாஹ் உதவி செய்வான். மேலும் படிப்பின் மேல் தாங்கள் செலுத்தும் ஆர்வமும், கவனமும் கைகொடுக்கும்.

பரீட்சைக்கு செல்வதற்கு முன்:

பரீட்சைக்கு முன் தினம் அதிக நேரம் விழித்திருக்க வேண்டாம். விடியல் காலை 4 மணிக்கு எழுந்து குளித்து தொழுது இறைவனிடம் உதவி தேடிய பிறகு அன்றைய தினத்தின் பரீட்சைக்கான பாடத்தை மீண்டும் படியுங்கள். மிதமான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். வயிறு முட்ட சாப்பிட்டால் தூக்கம் வரும். வீட்டை விட்டு கிளம்பும் முன் 2 ரக்காஅத் தொழுது பிரார்த்தனை செய்து விட்டு கிளம்புங்கள். சுத்தமான உடை அணிந்து கொள்ளுங்கள். பள்ளிக்கு அரைமணி நேரம் முன்னதாக சென்று விடுங்கள். இது தேவையற்ற பதற்றத்தை உண்டாக்காது. பேனா, பென்சில், ரப்பர் எவையெல்லாம் தேவையோ அவைகளை ஒவ்வொன்றிலும் இரண்டு வைத்திருப்பது நல்லது. மேலும் பரீட்சை ஹால் நுழைவுச் சீட்டு, பரீட்சைக்கான அனைத்து பொருட்களையும், தங்களின் ட்ரெஸ்ஸையும் முதல் நாள் இரவே தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். பரீட்சைக்கு புறப்படும் நேரத்தில் பொருள்களை காணவில்லை என்று தேடிக் கொண்டு இருந்தால் டென்ஷனாகி வீட்டில் பெற்றோரிடமும் திட்டு வாங்கி பரீட்சையில் கவனக்குறைவை ஏற்படுத்தும்.

பரீட்சை ஹாலில்:

பரீட்சை பேப்பர் வாங்கியவுடன் முதலில் தேர்வின் எண், பெயர், பாடம், நாள் இவைகளை தெளிவாக பேப்பரில் எழுதி விடுங்கள். பிறகு கேள்வித்தாளை வாங்கியவுடன் பதற்றபடாமல் விடை தெரிந்த கேள்விகளை டிக் செய்து கொள்ளுங்கள். பிஸ்மில்லாஹ் சொல்லி முதலில் தெரிந்த கேள்விகளுக்கு கேள்வித்தாளில் உள்ள எண்களை கவனமாக பேப்பரில் எழுதி கையெழுத்து அடித்தல், திருத்தல் இல்லாமல் அழகான முறையில் பதிலை எழுதுங்கள். பிறகு தெரியாத கேள்விகளை யோசித்து எழுதுங்கள். எல்லாம் எழுதி முடித்த பிறகு அண்டர்லைன் இட வேண்டிய இடங்களில் அண்டர்லைன் போடுங்கள். பெல் அடிக்கும் வரை ஹாலில் இருந்து மீண்டும் மீண்டும் கேள்வித்தாளையும் எழுதிய பேப்பரையும் படித்து பாருங்கள். விட்ட கேள்விகளுக்கும் பதில் ஞாபகம் வரும். தவறாக எழுதி இருந்தால் திருத்திக் கொள்ளலாம். பெல் அடிப்பதற்கு முன் பேப்பரை கொடுத்து விடாதீர்கள். பரீட்சை முடிந்து வெளியே வந்தவுடன் விடுபட்ட போன கேள்விகளுக்கு பதில் ஞாபகம் வந்து எழுதாமல் போய் விட்டோமே என்ற கவலை தங்களுக்கு வரலாம். அப்படி வந்தால் கவலையை தூர எறிந்து விட்டு வல்ல அல்லாஹ் போதுமானவன் என்ற நினைப்புடன் அடுத்த பரீட்சைக்கு தங்களை தயார்படுத்துங்கள்.

பெற்றோர்களின் உதவி:

தங்கள் பிள்ளைகள் படிப்பதற்கு வீட்டின் சூழ்நிலைகளை அமைதியாக்கிக்கொடுங்கள். தாங்கள் செய்ய வேண்டிய உதவிகள் அதிக அளவு அவர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்க வேண்டும். மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பேசாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமையை வல்ல அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அதனால் வல்ல அல்லாஹ் மேல் பாரத்தை போட்டு விட்டு நாம் படித்தோமா? நம் பிள்ளை படிப்பதற்கு என்று சும்மா இருந்து விடாமல் உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யுங்கள். நம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து விட்டுத்தான் வல்ல அல்லாஹ் மேல் பொறுப்பு சாட்ட வேண்டும்.

எழுத்துப்பயிற்சி:

மாணவ, மாணவியர்களே! நீங்கள் எழுத்துப்பயிற்சியில்தான் கவனக்குறைவாக இருக்கிறீர்கள். அதனால் மீண்டும் உங்களை வலியுறுத்துகிறேன். நாம் மனப்பாடம் செய்வதை தேர்வில் ஒப்பிக்க போவதில்லை. பேப்பரில்தான் எழுதுகிறோம். ஆகையால் படிப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் அதிகமாக எழுதி பார்ப்பதற்கு கொடுக்க வேண்டும். அதனால் படித்ததை எழுதிப் பார்ப்பதுதான் சிறந்தது. எழுதுவது வீண் வேலை என்று இருந்து விடாதீர்கள். எழுத அவசியம் முயற்சி செய்யுங்கள். (ஆரம்பத்தில் சிரமமாகத்தோன்றும், பிறகு சுலபமாகிவிடும்). நல்ல பலன் கிடைப்பதை உணர்வீர்கள். எழுதியதை வீட்டில் உள்ளவர்களிடம் அல்லது நண்பர்களிடம் கொடுத்து திருத்தச்சொல்லுங்கள். யாரும் கிடைக்காத நேரத்தில் தாங்களே திருத்திக்கொள்ளுங்கள். மாணவ, மாணவியரே வல்ல அல்லாஹ்வின் மேல் நம்பிக்கை வைத்து, தன்னம்பிக்கையுடன் படியுங்கள். தாங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் : 58:11)

S.அலாவுதீன்

குறிப்பு : சென்ற வருடம் நான்கு பக்கத்தில் தரமான காகித்தில் அச்சடித்து அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும், பள்ளி, மற்றும் வீடுகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டது அதேபோல் இவ்வருடமும் இதனை பிரசுரமாக வினியோகிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதிரைநிருபர் வலைக்காட்சி செய்தித் தொகுப்பு ! 11

அதிரைநிருபர் | February 25, 2013 | , , ,

வாரம் ஒருநாள் வலைக்காட்சி செய்தித் தொகுப்பு ஒவ்வொரு வாரமும் வழங்கி வருவதை அறிவீர்கள் அதன் தொடர்ச்சியாக இந்த வார செய்தித் தொகுப்பு !

இந்த வார செய்தியில், ஹைதராபாத் குண்டு வெடிப்பு, வைகோ ஜெயலலிதா சந்திப்பு, பி எஸ் எல் வி சி 20 ராக்கெட் பயண ஆயத்தம், வீரப்பன் கூட்டாளிகளின் துக்குக்குக்கு தடை, பிரபாகரன் மகன் சாவு போன்ற செய்திகள் எமது பார்வையுடன் காணொளியாக உங்களனைவரின் பார்வைக்கும்.


இந்த வலைக்காட்சி பற்றிய மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் நேரிலும், அலைபேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்து வரும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர்...!

இன்னும் புதுப் பொலிவுடனும் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப சகோதரர்களுடன் இணைந்து சிறப்பாக வெளிவர இருக்கிறது இன்ஷா அல்லாஹ்...

அதிரைநிருபர் பதிப்பகம்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு