காத்திருந்து காத்திருந்து
பூத்ததிந்த புனித நோன்பு
வருசத்தில் ஓர் உதயம்
வந்து போகும் வசந்த மாதம்
இறை மறையாம் திருக்குர்ஆன்
இறங்கியதும் இம்மாதம்
அருள் நலமும் ஒருங்கே பெற்று
அகம் மகிழச் செய்திடும் மாதம்
பாவங்கள் விட்டொழித்து
இறைப் போதனைகள் பொழியும் மாதம்
இச்சைக்கு விடைகொடுத்து
இறைப் பொருத்தம் தேடும் மாதம்
பசித்தாகம் மறந்த நிலையாய்
புனித நோன்பு நோற்கும் மாதம்
கனிந்து உள்ளம் உருகிட நாம்
பணிந்து துவா கேட்கும் மாதம்
ஐவேளை தொழுகையுடன்
மெய்வணக்கம் செய்திடும் மாதம்
மறை வழியே நாம் நடந்து
மகிழ்வுடனே நோன்பு நோற்ப்போம்
சத்தியற்ற எளியோர்க்கு
சமர்ப்பிப்போம் ஜக்காத்தினை
பக்தியுடன் நாம் நடந்து
படைத்தவனின் அருள் பெறுவோம்
இயன்ற வரை அமல் செய்து
இறையன்பை ஈட்டிவிடுவோம்
மறைந்த பின்னும்
பின் தொடர்ந்து
மகத்தான நன்மை பயக்கும்
துன்பத்தை தூரமாக்கும்
தூய இம்மாதத்திலே
நல் அமல்கள் பல செய்து
நாயனருள் பெற்றிடுவோம்
நலமாய் ரமலான் நிறைவாக்கி
மகிழ்வாய் பெருநாள் அனுசரிப்போம்
அதிரை மெய்சா