Showing posts with label history. Show all posts
Showing posts with label history. Show all posts

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

11

அதிரைநிருபர் பதிப்பகம் | August 30, 2014 | , , , , ,

தொடர் : பகுதி ஆறு

உலக வரலாற்றில் பல விந்தையான வித்தியாசமான குணாதிசயங்கள் கொண்ட பலரை சந்தித்து இருக்கிறோம். வெறி கொண்ட வேங்கைள் போல உயிர்களை வெட்டிச் சாய்த்தவர்களையும் தன்னலம் கருதாது பிறர் நலம் கருதியவர்களையும் நல்லது செய்யப் போய் தானாகவே வம்புகளில் மாட்டிக் கொண்டவர்களையும் நல்லவர்களாக நடித்த கெட்டவர்களையும் வரலாறு நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது.

பாலஸ்தீனத்தின் வரலாற்றில் நாம் சந்திக்க இருக்கும் சலாஹுதீன் அய்யூபி என்ற பெயர் படைத்த ஒரு மாவீரர் தான் செய்திருக்கும் சாதனைகளின் அளவுக்கு அவ்வளவாக உலகத்தாரால் அறியப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். அடிப்படையில் ஒரு வீரராகவும், ஆளுமையில் ஒரு இராஜ தந்திரியாகவும், சூழ்நிலைகளைக் கையாளுவதில் சாதுரியம் மிக்கவராகவும், துயரத்தில் இருப்பவர்களை அரவணைப்பதில் காருண்யம் மிக்கவராகவும் சலாஹுதீன் அய்யூபி அவர்கள் வரலாற்றில் ஆஜராகி இருக்கிறார். வீரமும் அன்பும் கருணையும் காருண்யமும் நிறைந்த அந்த மாவீரரின் வீரப்படலத்தைப் பார்க்கலாம். ஒரு குறுநில மன்னராக அறிமுகமாகி அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து வெற்றிக் கனிகளைத் தன் மடி நிறையக் கட்டிக் கொண்ட சலாஹுதீன் அய்யூபி அவர்களைப் பற்றிக் காணலாம். 

பாலஸ்தீனம், கிருத்துவர்களால் கைப்பற்றப்பட்ட பிறகு எஞ்சி இருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் எகிப்து நாட்டில் கலிபாவின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்து கொண்டிருந்தவர்தான் குர்திஷ் இனத்தைச் சேர்ந்த சலாஹுதீன் அய்யூபி. நபிமார்கள் அடங்கப்பட்ட ஜெருசலமும் வளமிக்க பாலஸ்தீனமும் முஸ்லிம்களின் கைகளில் இருந்து பிடுங்கப்பட்டது சலாஹுதீன் அய்யூபிக்கு மண்டைக் குடைச்சலைக் கொடுத்துக் கொண்டு இருந்தது. மீண்டும் பாலஸ்தீன் முஸ்லிம்களின் கைகளுக்கு வரவேண்டுமென்று இரவுபகல் எண்ணம் கொண்டவராக இருந்தார். ஆனால் மிச்சம் இருக்கும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் சலாஹுதீன் அய்யூபின் நிலை, ஒரு மாநிலத்தின் மன்னர் என்பது மட்டும்தானே தவிர முழு அதிகாரமும் படைத்தவரல்ல. ஆகவே நடை முறைப்படி, அரசராக இருப்பவரின் அனுமதி பெற்றே காய்களை நகர்த்த வேண்டிய நிலை. 

ஆனாலும் அவர் வைத்திருந்த வாளின் அரிப்பைத் தாங்க முடியாமல் லிபியாவின் ஒரு பகுதியையும் கூடவே யேமன், ஹிஹாஸ் ஆகிய பகுதிகளையும் கிருத்தவர்களுடன் போரிட்டு வென்று இஸ்லாமிய சாம்ராஜ்யத்துடன் இணைத்த பெருமைக்குரியவராக இருந்தார். 

இத்தனை பகுதிகளை வென்ற சலாஹுதீன் அய்யூபிக்கு ஜெருசலத்தையும் வெல்ல முடியும் என்ற தன்னம்பிக்கை உருவாகி இருந்தது. இதற்காக அவருக்குத் தேவைப் பட்டது இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி உடைய அனுமதியும் ஒத்துழைப்பும்தான். அதற்காக சக்கரவர்த்தியைச் சந்தித்து தனது திட்டங்களை விவரித்து ஜெருசலத்தை வெற்றி கொண்டுவிட வேண்டுமென்ற வெறி அல்ல இன உணர்வு, சலாஹுதீன் அய்யூபினுடைய உள்ளத்தில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தது. 

ஆனால் சக்கரவர்த்தியோ இன்னொரு சுயனலவாதியின் கைப்பாவையாக மட்டுமல்ல நடப்பது எதையுமே அறியாத அறிய இயலாத சின்னஞ்சிறு வயதினராகவும் நோஞ்சானாகவும் இருந்தார். அவருடைய தந்தை நூருத்தின் மஹ்மூத் என்பவர் மறைந்ததால் வாரிசு முறைப்படி, முகத்தில் மீசை கூட முளைக்காத அல்ல .... அரும்பு கூட விடாத மலீக்க்ஷா என்பவர்தான் சக்கரவர்த்தியாக இருந்தார். 

வேங்கைகள் அமர்ந்து இருந்த சிம்மாசனத்தில் மலீக்க்ஷா என்கிற வெள்ளாட்டுக் குட்டி அமர்ந்து கொண்டு செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தது. சக்கரவர்த்தியின் கைகளில் சட்டி குடுவைகள் கொடுக்கப்பட்டு அவர் சிம்மாசனத்தில் அமர்ந்து அவைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்.

சக்கரவர்த்தியை பொம்மையாக்கி சாவி கொடுத்து ஆடவைத்துக் கொண்டிருந்தவர் இன்னொரு மாநிலத்தின் மன்னராக இருந்த குமுஷ்தஜின் என்பவராவார். அறியாப் பருவத்தில் சக்கரவர்த்தி - அவரை ஆட்டிவைக்க கொடிய எண்ணம் கொண்ட குமுஸ்தஜின் ஆகியோர் கொண்டதே அரசியல் அமைப்பாக இருந்தது.

சக்கரவர்த்தியைத் தடம் புரளச் செய்து ஒழித்துக் கட்டிவிட்டு தானே சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக பட்டம் சூட்டிக் கொள்ள குமுஸ்தஜின் ஆசையும் ஆர்வமும் கொண்டு அதற்கான காய்களை நகர்த்தத் தொடங்கி இருந்தான். அவன் ஏற்படுத்திய இரும்புத்திரைக்குப் பின்னால் சக்கரவர்த்தி ஒரு சிறைக்கைதியைப் போல் போட்டதைத் தின்று கொண்டு பொழுது போக்கிக் கொண்டு இருந்தார்.

சட்டப்படி, அந்நியருடன் போடும் சண்டைகளுக்கு சக்கரவர்த்தியின் அனுமதிவேண்டுமென்ற நிலையில் அவரை சந்தித்து சம்பிரதாயமாக ஒரு அனுமதி வாங்கி பாலஸ்தீனத்தின் மீது படையெடுக்க சலாஹுதீன் அய்யூபி திட்டமிட்டார். ஆனால் சக்கரவர்த்தியை சலாஹுதீன் அய்யூபி போன்ற மாவீரர்கள் சந்தித்து விட்டால் தனது சதி வேலைகளுக்கு சக்தி இல்லாமல் போய்விடுமென்று உணர்ந்த குமுஸ்தஜின், சக்கரவர்த்தியை சலாஹுதீன் அய்யூபி சந்தித்து விடாமலிருக்க அனைத்து வகையான தடைகளையும் ஏற்படுத்தினார். 

ஏற்கனவே தன்னந்தனியாக பல பிரதேசங்களை வென்று இருந்த சலாஹுதீனுக்கு இந்த நிலை சலிப்பை ஏற்படுத்தியது. தானே சுதந்திர மன்னராக பட்டம் சூட்டிக் கொண்டு போர் தொடுக்கலாமா என்று கூட யோசித்தார். ஆனால் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியுடனேயே போர் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும் ஏற்படுமே என்ற எண்ணத்தில் அவரது ஆர்வத்தைத் தள்ளிப் போட்டார். 

ஆனாலும் காலம் கடந்ததே தவிர சக்கரவர்த்தியால் சரியான நிலைக்குவர இயலவில்லை. குமுஸ்தஜின் குறுக்கே நின்று கொண்டே இருந்ததால் பொறுமை இழந்த சலாஹுதீன் அய்யூபி போருக்கு தயாராக வேண்டிய நிலை வந்தாலும் தான் கவலைப்படப் போவதில்லை என்று அதிரடியாக அறிவித்தார். அவரது அந்த அறிவிப்பு சாம்ராஜ்யத்தை ஒரு கலக்கு கலக்கியது. சலாஹுதீன் அய்யூபி போன்ற நினைத்ததை முடிப்பவருடைய அறிவிப்பால் உள்ளதும் போய்விடுமோ என்று சாம்ராஜ்யத்தை யோசிக்க வைத்தது. அதனால் சலாஹுதீன் அய்யூபியை தனி உரிமை பெற்ற சுல்தானாக சாம்ராஜ்யம் அங்கீகரித்தது. சலாஹுதீன் அய்யூபி ஆளும் பகுதிகளில் சாம்ராஜ்யம் தலையிடாது; குறுக்கிடாது என்று அறிவிக்கப்பட்டது. இப்படியாக சலாவுதீன் ஆண்டுகொண்டிருந்த எகிப்து மற்றும் அவர் வெற்றி கொண்ட பகுதிகளுக்கு சாதாரண சலாஹுதீன் அய்யூபி சுல்தான் சலாஹுதீன் அய்யூபியாக உருவெடுத்தார்.

நோஞ்சானாகவும் விளையாட்டுப் பிள்ளையாகவும் சாம்ராஜ்ய சக்கரவர்த்தியின் பதவியில் அமர்ந்து இருந்த மலீக்க்ஷா 1182 ஆம் ஆண்டில் தனக்கு இருபது வயது கூட நிரம்பாமல் இருந்த நிலையில் இறந்து போனார். சக்கரவர்த்தியின் இறப்புக்காகவே காத்திருந்தது போல் சக்கரவர்த்தி மறைந்த செய்தி கிடைத்ததுமே சலாஹுதீன் விஸ்வரூபம் எடுத்தார். தனது படைகளைத் திரட்டிக் கொண்டு பெரும்பாலும் மத்திய ஆசியா முழுவதையுமே கைப்பற்றினார். சலாஹுதீனுடைய சண்டமாருத நிலையைக் கண்ட பல சின்னஞ்சிறு அரசுகள், சலாஹுதீனுடன் போர் செய்து புண்ணியமில்லை என்று கருதி தங்களின் பொழுதை வீணாக்காமல் வா! ராஜா வா! என்று சலாஹுதீனை வரவேற்று சலாஹுதீனுடைய அதிகாரத்துக்கு அடிபணிவதாக தாங்களே முன் வந்து எழுதிக் கொடுத்துவிட்டு சலாஹுதீனை அரசராக ஏற்றுக் கொண்டார்கள். மத்திய ஆசியா முழுதும் சலாஹுதீன் வெற்றிக் கொடி கட்டி- பகைவரை முட்டும்வரை முட்டி – அவரை தட்டும் வரைதட்டி தன்னிகரில்லாத் தலைவராக உருவெடுத்தார். ‘மாபெரும் சபைகளில் அவர் நடந்தால் அவருக்கு மாலைகள் விழுந்தன. ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் என்று அவரைப் போற்றிப் புகழ்ந்தார்கள் ‘ . அரசர்கள் அய்யூபியின் வீரத்துக்கு முன் மண்டியிட்டார்கள். வலிமை நிறைந்த சலாஹுதீனை வலிய வந்து ஏற்றுக் கொண்டு தங்களை அவருடன் இணைத்துக் கொண்டார்கள்.

ஆனால் விதிவிலக்காக சிரியா மட்டுமே கிருத்தவர்களின் ஆட்சியின் கீழ் மிச்சம் இருந்தது. சிரியாவையும் வீழ்த்திவிடவேண்டுமென்று சலாஹுதீன் தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது சிரியா தானாக வந்து பொறியில் மாட்டியது. ஒரு முஸ்லிம்களின் வணிகக் குழு சிரியாவின் வழியாகச் சென்று கொண்டிருந்த போது, சிரியாவின் கிருத்தவ இராணுவம் அவர்களைத் தாக்கி வணிககுழுவில் இருந்த அனைத்து முஸ்லிம்களையும் கொன்று போட்டது. இதுவே சிரியா மீது படை எடுப்பதற்கு சலாஹுதீன் அவர்களுக்கு போதுமான காரணமாக அமைந்தது. பொங்கி எழுந்தார்; புறப்பட்டார் சிரியா நோக்கி. 

ஆக்ரோஷமாக போரில் இறங்கிய சலாஹுத்தீனின் படை சிரியாவின் இராணுவத்தை துவம்சம் செய்தது. வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப் படி கிட்டத்தட்ட பத்தாயிரம் கிருத்துவ வீரர்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டார்கள். இன்றைய லெபனான் நாட்டின் பிரதேசங்களாக நாம் காணும் பெய்ரூட், ஜாபா முதல் ரமல்லா, டால்மெய்ஸ், நப்லஸ் போன்ற அன்றைய சிரியாவின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள் சலாஹுதீன் அவர்களின் வசமாயின. இப்படியாக , சிரியாவுடனான இந்த யுத்தத்தின் போக்கும் பாதையும் சலாஹுதீன் அவர்களை ஜெருசலத்தின் எல்லை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் கொண்டு போய் நிறுத்தியது

அடுத்தது என்ன?

சலாஹுதீன் அய்யூபி அவர்களின் நீண்டநாள் கனவான ஜெருசலமும் பாலஸ்தீனமும் வீழ்ந்து மீண்டும் முஸ்லிம்களின் ஆட்சி அங்கு ஏற்பட்ட வரலாறுதான்.

அங்கே நடந்த அரசியல் அதிகாரத்தின் அதிசயங்களை அடுத்த வாரம் காணலாம். இன்ஷா அல்லாஹ். 

இபுராஹீம் அன்சாரி

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 23, 2014 | , , , , ,

தொடர் : பகுதி ஐந்து

உலகையே ஆட்டிப்படைக்கிற இந்த உணர்வு பூர்வமான பேசுபொருள் தொடரை தொடர்ந்து எழுதும் முன்பு இத்தொடரின் கடந்த அத்தியாயத்தில் நாம் எடுத்துக் காட்டி எழுதி இருந்த சில வரலாற்றுச் செய்திகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து (தம்பி) சகோதரர் இப்னு அப்துல் ரஜாக் அவர்கள் அதிரைநிருபரின் வாசகராக எழுப்பி இருந்த சில கேள்விகளுக்கு பதில் கூறிவிட்டே தொடர வேண்டுமென நினைக்கிறேன்.

தம்பி இப்னு அப்துல் ரஜாக் அவர்கள் எழுப்பி இருந்த வினாக்களுக்கு கருத்துரைப் பகுதியிலேயே தம்பி கவிஞர் சபீர் அவர்கள் சுருக்கமான ஆனாலும் பொருத்தமான பதிலை பதிவு செய்து இருந்தாலும் தொடரின் எழுத்தாளர் என்கிற முறையில் விரிவான விளக்கம் தேவை என்று சில பெரியவர்களும் உலகின் பல பாகங்களில் இருந்து சில நல்லெண்ணம் கொண்ட சகோதரர்களும் அலைபேசிகள் அழைப்பின் மூலம் கேட்டுக் கொண்டதால் அந்த சந்தேகங்களுக்குரிய பதில்களை நான் அறிந்தவரை எழுதிவிட்டுத் தொடரைத் தொடர நினைக்கிறேன். இன்ஷா அல்லாஹ்.

முதலாவதாக எழுப்பப்பட்டுள்ள சந்தேகம் / ஆட்சேபம் / கேள்வி /கருத்து என்னவென்றால்
சகோதரர் இப்னு அப்துல் ரஜாக் அவர்களின் கருத்து
என்பதாகும். இதற்கான பதில் :

இதுவரை எழுதி இருந்த அந்தப் பகுதி ஒரு மறைமுகமான நையாண்டியின் முறையிலேயே எழுதி இருந்தேன் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். போப் ஆண்டவர் அர்பன் அவர்கள் தனது பாவத்தை மன்னிக்கும்படி அவர் நம்பிய ஆண்டவர் என்று குறிப்பிட்டது அவர் நம்பிய ஆண்டவரையே நானும் நம்பியதால் எழுதப்பட்டதல்ல. போப்பாண்டவர் நம்பிய ஆண்டவருக்கு அந்தப் பாவங்களை மன்னிக்கும் அளவுக்கு சக்தி அல்லது ஆற்றல் இல்லை என்பதையும் கேள்வி தொடுத்து இருக்கும் தம்பி அவர்களே சுட்டி இருப்பதுபோல் is a prophet and slave தான் என்பதை நானும் உறுதியாக நம்பியே ஈமான் கொண்டு இருக்கிறேன். எனது எழுத்தில் ஒரு இறைத்தூதரான நபி ஈசா (அலை) அவர்களை மனிதர்களின் பாவங்களை மன்னிப்பதற்காக நம்பிப் பயன் இல்லை அந்த ஆற்றல் அவருக்கு இறைவனால் வழங்கப் படவில்லை என்ற செய்தி தொக்கி நிற்கிறது. கருத்தை தொப் என்று முகத்தில் அடித்தாற்போல் போட்டு உடைக்காமல் நளினமாக இப்படி தொக்கி நிற்கும்படி எழுதியது மட்டுமே எனது தவறாக இருக்க முடியும். மற்றபடி Your Comment is unacceptable என்று சொல்லுமளவுக்கு எனது ஈமானை நான் விட்டுவிடவில்லை என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

மேலும், அதே கருத்தில் கேள்வி எழுப்பிய தம்பி அவர்கள் //And the pope believed a fake god, Jesus.// என்று குறிப்பிட்டு இருப்பதில் FAKE GOD, JESUS என்கிற வார்த்தைகளை நான் ஆட்சேபிக்கிறேன். அடுத்த மத நம்பிக்கையாளர்களை நோக்கி, இப்படிப் பட்ட கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம் “உங்களது மதம் உங்களுக்கு ; எங்களது மதம் எங்களுக்கு” என்கிற பொருள் பதிந்த “ லக்கும் தீனுக்கும் வலிய தீன்” என்கிற அருள்மறையின் வார்த்தைகளை தம்பி அவர்கள் உணர்ந்து பார்த்து விட்டு அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன். காரணம் , அடுத்தவர்களுடைய நம்பிக்கைகளை நாமும் நம்ப வேண்டுமென்ற கட்டாயமில்லை எனினும் அவர்களின் நம்பிக்கையைப் புண்படுத்தக் கூடாது என்கிற அடிப்படையிலேயே //அவர் நம்பிய ஆண்டவர் அவரது பாவங்களை மன்னித்தாரா என்று தெரியவில்லை.// என்று மூடு மந்திரமாக நான் குறிப்பிட்டு இருக்கிறேன். மற்ற மதத்தவர்களின் நம்பிக்கைகளை கடினமான வார்த்தைகளால் விமர்சிப்பதை நாம் விரும்பவில்லை. காரணம் அது இறைவனாலும் தடுக்கப்பட்டதாகும்.

“இறைவனை விடுத்து மற்றவர்களை அழைத்துப் பிரார்த்திப்பவர்கள் ஊகத்தைத்தான் பின்பற்றுகிறார்கள் “ (10:66,67)

“அல்லாஹ்வை விடுத்து, இவர்கள் யாரை அழைக்கிறார்களோ அவர்களால் ஒரு ஈயைக் கூட படைக்க முடியாது “ ( 22:73)

“எதனால் படைக்க இயலாதோ , இலாபமும் நஷ்டமும் அளிக்க எதனிடம் ஆற்றல் இல்லையோ, மரணமும் வாழ்வும் எதன் கைவசம் இல்லையோ அது கடவுளாக முடியாது “ ( 25:3 )

ஆகிய திருமறையின் வாசகங்களை போப் ஆண்டவர் அர்பன் வேண்டுமானால் அறிந்திருக்க வாய்ப்பு இல்லாமல் இருந்திருக்கலாம் . நாம் அறியாமல் இருந்திருக்க முடியுமா?

இரண்டாவதாக, கீழ்க்கண்ட கண்டனத்துக்கும் நாம் பதில் அளிக்க வேண்டி இருக்கிறது.
சகோதரர் இப்னு அப்துல் ரஜாக் அவர்களின் கருத்து
இந்தக் கண்டனத்தில் Where did you take this idea to write against truth. என்று கேட்டிருப்பதற்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கற்பனைக் கதைகளை எழுதுபவர்கள்தான் அவர்களின் ஐடியாவின் பிரகாரம் கதைகளை நகர்த்திச் செல்வார்கள். நாம் எழுதுவது நாவல் அல்ல; வரலாற்றின் அடிப்படையிலான செய்திகள்தான். இவற்றுள் சொந்தக் கருத்துக்களின் சாயலோ சாரலோ துளியும் கிடையாது. Idea என்கிற வார்த்தைப் பிரயோகத்துக்கு எனது கடுமையான கண்டனங்களை நான் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு வேறு வழி இல்லாமல் தள்ளப்பட்டு இருக்கிறேன்.

வேண்டுமானால் இந்த ஐடியா என்கிற வார்த்தைக்கு பதிலாக இந்தத் தகவல்களை எங்கிருந்து பெற்றேன் (Source) என்று கேட்டிருந்தால் வெளிப்படையாக கேட்டிருப்பதாக எண்ணி நானும் அவற்றை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டிருக்க இயலும். ஆனால் நானே கற்பனை செய்து பொய்களை எழுதி இருப்பதாக ஒரு குற்றச்சாட்டை இந்தத் தம்பியிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை.

இந்தத் தொடரை எழுதும் முன்பு பல வரலாற்று நூல்களை நேரிலும் இணைய தளங்களிலும் தேடிப் படித்தே எழுதுகிறேன். அவற்றிலிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சிலவற்றை மட்டுமே நான் குறிப்பிட்டு இருக்கிறேன்.

பெருமானார் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு பதவி ஏற்ற கலிபாக்களை வரலாறு, The Rightly guided Caliphs என்றே கவுரவித்து அழைக்கிறது. அவர்களுக்குப் பிறகுதான் அனைத்தும் மாறிப்போய் இருக்கிறது என்று குறிப்பிடும் வரலாறுகள் ஹஜரத் அலி (ரலி) அவர்களுக்குப் பிறகு இஸ்லாமிய பேரசின் ஆட்சியானது Umayyads, Abbasis, Ottaman Turks என்று பல கைகளில் மாறி மாறி வந்தது. நான் குறிப்பிட்டு இருக்கிற மத சகிப்புத்தன்மையற்ற செயல்கள் நடைபெற்றது சஹாபாக்கள் ஆண்ட காலத்தில் அல்ல. இதை தம்பி அவர்கள் நன்றாக கவனத்தில் கொண்டு கருத்துத் தெரிவித்து இருக்க வேண்டும். இதையே கவிஞர் சபீர் அவர்களும் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.

கி . பி 637 – ல் ஹஜரத் உமர் (ரலி) அவர்களின் காலத்தில் ஜெருசலம் கைப்பற்றப்பட்டு அவர்கள் பொறுபேற்றுக் கொண்ட செய்திகளை முன் அத்தியாயங்களில் விவரித்து இருக்கிறோம். அதன் பின் 1076 - ல் அதாவது நானூற்று நாற்பது ஆண்டுகளுக்கிடையில் ஜெருசலத்தில் நடைபெற்ற செயல்பாடுகள் பற்றி – குறிப்பாக துருக்கியர்கள் கைகளில் பாலஸ்தீனம் அகப்பட்டதும் நடைபெற்ற செயல்களின் சின்ன ஒரு சித்திரத்தைத்தான் வரலாற்று நூல்களில் இருந்து படித்துத் திரட்டி தந்திருந்தேன். அது கூட இத்தகைய மத சகிப்பற்ற தன்மைகள் காரணமாக வெறுப்புத் தீ மூட்டப்பட்டு சிலுவைப் போர்கள் மூண்டன என்று குறிப்பிட்டுக் காட்டவுமே அவைகளை திரைபோட்டு மறைத்து விடாமல் நடுநிலையோடு குறிப்பிட வேண்டி இருந்தது.

வரலாறு நம்மைப் புகழும் வரிகளை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றவைகளை மறைத்துக் காட்டுவது ஒரு நேர்மையான அரசியல் அல்லது வரலாற்று அரசியலின் விமர்சனம் ஆகாது. அந்த அடிப்படையிலேயே இஸ்லாமிய ஆட்சியாளர்களாக இருந்தவர்கள் செய்த வெறுப்பூட்டும் செயல்களையும் குறிப்பிட்டுக் காட்ட வேண்டியது ஒரு கடமையாக இருந்தது. இத்தகைய காரணங்களால் பாதிக்கப்பட்டவர்கள் திரண்டு ஆட்சியைப் பறித்துக் கொண்டதையும் பல படுபாதக படுகொலைகளை நிகழ்த்தி இஸ்லாமிய சமுதாயத்தை அழித்த காட்சிகளையும் காட்டவேண்டிய கடமையும் இருந்தது.

ஆகவேதான் முஸ்லிம்களாக இருந்தாலும் அவர்களும் நடத்திய சில தவறான நிகழ்வுகள் தகவல்கள் அடங்கிய சரித்திர வரிகளை A History of the Jewish People – என்கிற நூலில் HAIM HILLEL BEN SASSON எழுதி இருந்த சுருக்கத்தையே நாம் நமது இயல்பான தமிழ் நடையில் பகிர்ந்து இருந்தோம். அந்த செய்திகள் எல்லாம் நமது கற்பனையில் உதித்தவை அல்ல. இன்னும் மேலே குறிப்பிட்டுள்ள நூலில் பகுதி இரண்டில் Jews Under Islamic Rule என்ற அத்தியாயத்தை கேள்விகள் எழுப்புவோர் படித்துப் பார்த்தால் இவைகளைத் தெரிந்து கொள்ளலாம். நமது பக்கத்திலும் நடந்த தவறுகள் நமக்குப் பாடமாக அமைய வேண்டும் என்கிற உணர்வையும் பெற முடியும்.

தனிமரம் தோப்பாகாது, ஒரே ஒரு வரலாற்றாசிரியர் சொன்னவைகளை மட்டும் வைத்துக் கொண்டு அந்தப் பட்டியலை நான் தரவில்லை. The Decline and Fall of the Roman Empire என்கிற நூலின் Volume II-ல் Edward Gibbon என்பவர் எழுதியுள்ள பக்கங்கள் 367 to 440 வரை உள்ள நீண்ட நெடிய பல செய்திகளைப் படித்துப் பார்த்தால் பல விபரங்கள் வெளிப்படுகின்றன. மேலும் அனந்தன் ராஜா ராமன் என்பவரும் இவற்றை சொல்லி இருக்கிறார். அவர் கிருத்தவர் அல்ல.

கிருத்தவர்கள் இட்டுக்கட்டி எழுதியதாக மட்டும் இவற்றைப் புறந்தள்ள இயலாது. அப்படிப் புறந்தள்ளினால் சிலுவைப் போர்கள் ஏற்பட்டதற்கான காரணங்கள் யாவை என்பதை நாம் உலகத்துக்குச் சொல்லியாக வேண்டும். காரணமின்றிக் காரியம் நடக்காது என்பதை நாம் அறிய மாட்டோமா?

அதே கிருத்தவர்கள் எழுதிய பல வரலாற்று நூல்களில்தான் நமது நான்கு கலிபாக்களையும் வானளாவப் புகழ்ந்து இருக்கிறார்கள். மேலும் கீழ்க்கண்ட பகுதியும் இஸ்லாத்தின் மாண்புகள் குறித்தும் கிருத்துவ ஆட்சியாளர்களின் சதிகளை அம்பலபப்டுத்தியும் தாக்கியும் கிருத்துவ வரலாற்று ஆசிரியர்களே எழுதியதுதான்.

சாம்பிளுக்காக,

“துருக்கியில் ஒஸ்மான் அலி தலைமையிலான துருக்கி இஸ்லாமியப் படைகள், துருக்கியை கைப்பற்றியதுடன் நில்லாது இன்றைய பொஸ்னியா வரை தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். மதம் மாற்றுவதில் கிறிஸ்தவ ராஜ்யத்திற்கும், இஸ்லாமிய ராஜ்யத்திற்குமிடையில் பெரிய வேறுபாடுகள் இருந்தன. கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் தமது நாட்டினுள் பிற மதங்களை பொறுத்துக் கொள்ளவில்லை. இதனால் பலர் பலவந்தமாக கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டனர். அதற்கு மாறாக இஸ்லாமிய ஆட்சியாளர்கள், தமது நாட்டினுள் கிறிஸ்தவர்களை, (யூதர்களையும்) வாழ விட்டனர். இஸ்லாத்தைப் பிடித்தவர்கள் விரும்பினால் மதம் மாறிக்கொள்ளலாம் என்ற நிலை இருந்தது.

ஐரோப்பியர்கள், அரபு-இஸ்லாமிய ஆட்சியாளரிடம் இருந்து கற்றுக் கொண்டவை நிறைய இருக்கின்றன. ஒரு வகையில் சிலுவைப் போர்களின் எதிர்மறையான, அதே நேரம் அனைவருக்கும் நன்மையளித்த விளைவுகள் அவை. இஸ்லாமிய சாம்ராஜ்ய தலைநகரான பாக்தாத்தில் கணிதம், விஞ்ஞானம், மருத்துவம், வானசாஸ்திரம், தத்துவவியல், இலக்கியம் போன்ற பலவற்றை கற்றுத்தேர்ந்த அறிஞர்கள் இஸ்லாமிய அரசின் உதவியால் பல நூல்களை எழுதினார்கள். அதே நேரம் ஐரோப்பாவில் பெரிய அரசனாக கருதப்பட்ட காரல் சக்கரவர்த்தி தனது பெயரைக் கூட எழுத்துக் கூட்டி எழுதத் தெரியாதவராக இருந்தார். அந்தக்காலத்தில் அனேகமாக போப்பாண்டவர் உட்பட கிறிஸ்தவ மதகுருக்கள் மட்டும், எழுதப்படிக்க தெரிந்தவர்களாக அதுவும் லத்தீன் மொழியில் மட்டும் பைபிளை மட்டும் படித்துக் கொண்டிருந்தனர்.

ஐரோப்பாவை கிறிஸ்தவமதம் இருண்ட கண்டமாக வைத்திருந்த காலம் ஒன்றுண்டு. இங்குள்ள சரித்திர பாடப் புத்தகங்களும் அப்படித் தான் கூறுகின்றன. சிலுவைப் போரில் இஸ்லாமிய ராஜ்யப் பகுதிகளை கைப்பற்றிய கிருஸ்தவ வீரர்கள், அங்கே தம்மை விட நாகரீக வளர்ச்சியடைந்த முஸ்லீம் சமுதாயத்தை கண்டு வியந்தனர். அதன் பிறகுதான் ஐரோப்பா சொந்தம் கொண்டாடும் அறிவியல் ஐரோப்பாவை வந்தடைந்தது. உண்மையில் அறிவியலின் தகப்பன்மார்கள் இஸ்லாமியர்களே!

குறிப்பாக நவீன மருத்துவம் அரேபியரிடம் இருந்து கற்றுக் கொண்டதால் தான் , ஐரோப்பிய மக்கள் உயிர் காப்பாற்றப்பட்டனர். அதுவரை சாதாரண தலைவலி என்றாலும், மண்டைக்குள் இருக்கும் "அசுத்த ஆவியை" ஆணியடித்து ஓட்டை துளைத்து வெளியேற்றும் மருத்துவர்களைத் தான் ஐரோப்பா கண்டிருந்தது. கிருத்துவ மதம் பரவ முன்னர், மூலிகை வைத்தியம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் கிறிஸ்தவ மதம் அவ்வாறு வைத்தியம் செய்வோரை எல்லாம், "சூனியக்காரிகள்" என்று கூறி உயிரோடு எரித்து, மூலிகை மருத்துவர்களை இல்லாமல் செய்து விட்டது.

ஸ்பெயின் எட்டு நூறு ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய நாடாக இருந்தது. அதன் ஆட்சியாளர்கள் இன்றைய மொரோக்கோவில் இருந்து வந்த "மூர்கள்". அன்று கல்வியறிவில் பின்தங்கியிருந்த ஐரோப்பியக் கண்டத்தில், "இஸ்லாமிய ஸ்பெயினில்" பல்கலைக்கழகம் நிறுவப்பட்டிருந்தது. அங்கே பல மருத்துவ, அறிவியல் நூல்கள் வெளியிடப்பட்டன.

ஸ்பெயினில் இஸ்லாமியர்களை சதி செய்து ஓடச் செய்த கிறிஸ்தவப் படைகள் அங்கிருந்த அறிவுபூர்வமான நூல்களை எல்லாம் கைப்பற்றி ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய மொழிகளுக்கு மொழிபெயர்த்ததால் தான் நாம் தற்போது காணும் நவீன மருத்துவம் தோன்றியது.

முஸ்லிம்கள் கடல் வணிகத்தில் முன்னோடியாக இருந்தனர். அவர்களிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் நாகரிகத்தையும், மருத்துவத்தையும், விஞ்ஞானத்தையும், கணிதத்தையும், கடல் வணிகத்தையும், சகிப்பு தன்மையுடைய ஆட்சி முறையையும் கற்று கொண்டனர். இன்று தாம் முஸ்லிம்களிடமிருந்து பெற்ற அறிவை விற்று பொருளீட்டுகின்றனர். சேர்த்த செல்வத்தை முதலீடு செய்து பணமாக்குகின்றனர்.”

என்றெல்லாம் கிருத்துவ வரலாற்று ஆசிரியர்கள் இஸ்லாத்தைப் புகழ்ந்து எழுதி இருக்கிறார்கள். அதற்காக தம்பி இப்னு அப்துல் ரெஜாக் அவர்களின் அச்சத்தை நாம் ஒரேயடியாக மறுத்துவிடவும் முடியாது. முடிந்தவரை நடுநிலையாளர்கள் என்று நாம் நம்புபவர்களின் கருத்துக்களையே படித்த பதிவு செய்து இருக்கிறோம். அதற்குமேல் அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.

இதுபற்றி நாம் மீண்டும் மீண்டும் சொல்ல வருவது என்ன வென்றால் ஒரு நாட்டின் வரலாற்றை அலசும்போது அந்த நாட்டில் நடைபெற்ற நல்லவை கெட்டவைகளையும் எடுத்து வைப்பதுதான் ஒரு நேர்மையான அலசலாக இருக்க முடியும். இல்லையேல் அந்த அலசல் ஒரு சார்பான அலசலாக இருக்கும் ; உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர இயலாது; தெளிவான படப்பிடிப்பைக் காட்ட இயலாது . ஆகவே , இன்று யூதர்கள் செய்த அல்லது செய்யும் கொடுமைகளை சுட்டிக் காட்டிக் கண்டிக்கும் அதே நேரத்தில் இந்த நீண்ட நெடிய வரலாற்றில் இஸ்லாமியக் கொள்கைகள் இடறிய இடங்களையும் அப்படி இடரவைத்தவர்களையும் சுட்டிக் காட்டுவதுதான் ஒரு நேர்மையான முறையாக இருக்குமென்று நாம் நம்புகிறோம். அதே அடிப்படையில் இந்த நடுநிலையான அலசல் இன்ஷா அல்லாஹ் தொடரும்.

இந்தத் தொடரின் அனைத்துவரிகளையும் ஆழ்ந்து படித்து சுய விருப்பு வெறுப்பின்றி கேள்விகளை எழுப்பி எங்களை மீண்டும் மீண்டும் புடம் போடும் தம்பி இப்னு அப்துல் ரஜாக் அவர்களை மனமாரப் பாராட்டுகிறேன். இன்னும் இது போல கேள்விகளை வரவேற்கிறேன். பண்பாடு மிக்க உங்களின் கேள்விகள் எங்களை தலையில் தட்டாது ஆனால் பாராட்டும் நோக்கோடு முதுகில் தட்டுமென்றே நம்புகிறோம்.

இப்போது தொடரின் அடுத்த பகுதிக்குச் செல்லலாம். கிருத்தவர்களிடமிருந்து மீண்டும் பாலஸ்தீனம் முஸ்லிம்களின் கரங்களுக்கு மாறிய வரலாறு. அந்த வரலாற்றின் நாயகன் சலாவுதீன் என்கிற மலைக்க வைக்கிற மனிதாபிமானமிக்க மாவீரன்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம்.

இபுராஹீம் அன்சாரி

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

17

அதிரைநிருபர் பதிப்பகம் | August 16, 2014 | , , , , ,

தொடர் பகுதி : நான்கு

அல்ஹம்துலில்லாஹ் ! கலிபா ஹஜரத் உமர் அவர்களுடைய ஆட்சி காலத்தில் தனது எல்லைகளை விரிவுபடுத்தி நிலப்பரப்புக்களை வென்றெடுத்த இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் – நிலபரப்புகளை மட்டும் வென்றெடுக்கவில்லை . மாறாக, அந்த மண்ணில் வாழ்ந்த மக்களின் மனங்களையும் இஸ்லாத்தின்பால் ஈர்த்தெடுத்தது. வஞ்சகர்கள், வரலாற்றின் சில பக்கங்களில் உள்நோக்கங்களுடன் குறிப்பிட்டு இருப்பது போல் வாள்முனையில் இஸ்லாம் பரப்பப் படவில்லை. மாறாக, இஸ்லாத்தை ஏற்கனவே ஏற்றுக் கொண்டோரின் வாழ்க்கையின் நன்னெறி முறைகளைப் பார்த்து இதுவே நமக்கு ஏற்ற வழி என்று தாமாக முன்வந்து ஏற்றுக் கொண்டோரே ஏராளம். 

ஆனாலும், ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் கொலையுண்டு மறைந்த பின்னர் ஏற்பட்ட குழப்பங்களின் தொடர்ச்சியைத் தொடர்ந்து இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் ஒரு புறம் விரிவடைந்தாலும் தனது வலிமையை சிறுகச் சிறுக இழக்கத் தொடங்கியது என்பதையே வரலாற்றின் வரிகள் மெய்ப்படுத்திக் காட்டுகிறன. 

ஹஜரத் உமர் (ரலி) அவர்களுக்குப் பிறகு ஆளவந்த ஹஜரத் உதுமான் (ரலி) அவர்களும் குழப்பவாதிகளால் கொலை செய்யப்பட்டு உடலைப் புதைக்கக்கூட இடம்தேடி அலைந்த நிகழ்வுகளாகட்டும் அவர்களுக்குப் பின்னால், நான்காம் கலிபாவாக வந்தமர்ந்த ஹஜரத் அலி (ரலி) அவர்களுடைய ஆட்சிகாலமாகட்டும் இவையாவுமே இஸ்லாமிய ஆட்சியின் வரலாற்றில் ஒற்றுமையின்மையால் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலைகளையே படம் பிடித்துக் காட்டுகின்றன. அவைகள் இன்றைக்கும் நாமெல்லாம் படித்துணரத்தக்க பாடமாவும் அமைந்திருக்கின்றன.

குடிசைக்கொரு கொடி பிடித்துத்திரியும் இந்த சமுதாயத்தின் இன்றைய இயக்கக் குஞ்சுகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அவை. 

கலிபாக்களின் கட்டளைகள் மீறப்பட்ட வரலாற்று சம்பவங்கள் ஹஜரத் உதுமான் (ரலி) அவர்களின் காலத்திலேயே தொடங்கிவிட்டன. தன்னை நிலைப் படுத்திக் கொள்ள, தனது உத்தரவுகளை நிறைவேற்ற இணையற்ற இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கலிபா அவர்கள் மற்றவர்களை கெஞ்சும் நிலக்குத் தள்ளப்பட்டதையும் பிறகு அவர்களே கொல்லப்பட்டதையும் நாம் காண்கிறோம். 

ஹஜரத் அலி (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் முஆவியா (ரலி) அவர்களோடு நிகழ்ந்த ஆதிக்கப்போட்டிகள் சாம்ராஜ்ய விரிவு மற்றும் நிர்வாகத்திலும் பல குழப்பங்களை ஏற்படுத்தின என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். இதனால் பாலஸ்தீனம், சிரியா, எகிப்து, லெபனான், ஜோர்டான் ஆகிய பகுதிகளில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தின என்பது வரலாற்றின் பக்கங்களில் வடுக்கள் நிறைந்த அத்தியாயங்களே ஆகும். ஒற்றுமையின்மையும் தலைமைக்குக் கட்டுப்படாத தன்மைகளும் தனி நபர்களுக்கிடையிலான நீயா நானா போட்டிகளும் ஆணவமும் அகம்பாவமும் சந்தேகமும் ஒரு சாம்ராஜ்யத்தை வலுவிழக்கச் செய்யும் என்பதற்கு அன்று நடந்த நிகழ்ச்சிகள் அனைத்துமே உலகம் உள்ளளவும் நாம் உணரவேண்டிய உதாரணங்கள். 

‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்று சொல்வார்கள். அதே நேரம் அரேபியாவில் தோன்றிய இஸ்லாத்தின் படிப்படியான பரிணாம வளர்ச்சி ரோம சாம்ராஜ்யத்தையே வென்று- பைசாந்தியர்கள் என்று சொல்லப்பட்டவர்களை எல்லாம் பலமிழக்கச் செய்து- யூத மற்றும் கிருத்தவர்களின் புனித நகராகக் கருதப்பட்ட ஜெருசலத்தை எல்லாம் அவர்களிடமிருந்து கைப்பற்றி அங்கும் அல்லாஹ்வின் பாங்கொலியை ஒலிக்கச் செய்து – அங்கு தனது ஆட்சியை நிறுவும் வகையில் கவர்னர்களை நியமித்து – மனம் மாறிய பல கிருத்தவ யூதர்களை இஸ்லாத்தைத் தழுவச் செய்த செயல்பாடுகளை எல்லாம் கிருத்துவ உலகமும், திருச்சபைகளும், அந்தத் திருச்சபைகளின் பாதிரியார்களும் பொறாமைக் கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். ‘தம்பி எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்’ என்று கழுகுப் பார்வை பார்த்தவர்களுக்கு இஸ்லாமியத் தலைவர்களுக்கிடையே ஏற்பட்ட பாகுபாடுகள் ‘பேய்க்கு சாம்பிராணி போட்டது போல்' ஆகியது.

இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் வரலாற்றின் சம்பவங்களுக்குள் நாம் நுழையப் போனால் இந்தத்தொடரில் நாம் சொல்ல வந்த செய்திகள் முக்கியத்துவம் இழந்துவிடும். ஆகவே சாம்ராஜ்யத்தின் தலைமைப் போட்டியால் வந்த விளைவுகளின் காரணமாக கி.பி 1086 -ல் துருக்கியர்களின் வசம் ஜெருசலம் கைமாறியது என்பதை மட்டும் குறிப்பிட்டு விட்டு தொடரலாம். 

ஹஜரத் உமர் (ரலி) அவர்களின் சகிப்புத் தன்மையையும் சமாதானத்தையும் சாந்தியையும் அதன்பின் சல்லடை போட்டுத் தேட வேண்டியதாயிற்று. துருக்கியர்கள் ஆண்டபோது சகித்தன்மை துருப்பிடித்துப் போனது. ஜெருசலத்தின் புனித திருத்தலங்களுக்கு உலகெங்கிலுமிருந்து வழிபடச் சென்ற கிருத்துவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். கிருத்துவ தேவாலயங்கள் தங்களின் மாண்புகளை இழந்தன. எந்த அளவுக்கென்றால் தேவாலயங்கள் குதிரைகளைக் கட்டி வைக்கும் லாயங்களாக பயன்படுத்தப் பட்டன. இத்தகைய செயல்கள் கிருத்துவர்களின் மத உணர்வையும் மன உணர்வுகளையும் புண்படுத்தின. இதனால் உலகெங்கிலும் உள்ள கிருத்துவர்கள் ஒன்று கூடி உரையாட ஆரம்பித்தனர். ஐரோப்பாவில் இருந்த கிருத்தவர்கள் போர் செய்தாயினும் புனித இடங்களை மீட்டாக வேண்டுமென்று தீர்மானித்தனர். இந்தத் தீர்மானத்துக்கு திருச்சபை , ஐரோப்பிய நாட்டின் ஆட்சியின் தலைவர்கள், மன்னர்கள், மதத்தலைவர்கள் அனைவரும் ஆதரவும் கொடுத்து உறுதியும் மேற்கொண்டனர். 

இந்த இடத்தில், கிருத்துவப் பாதிரியாராக இருந்து போபாண்டவரான அர்பன் (Urban 2) என்பவரை நினைவு கொள்ளாமல் இருக்க இயலாது. புனித பூமியான பாலஸ்தீனத்தை முஸ்லிம்களிடமிருந்து மீட்டெடுக்க வேண்டுமென்று இரும்புத் தூணாக நின்றவர் இவர் ஆவார். தனது உணர்ச்சிகளைத் தூண்டும் பேச்சுக்களால் கிருத்தவர்களை ஆயுதம் தாங்கி சிலுவைப் போர்களில் ஈடுபடவைத்தவர்களில் முக்கியமானவர் அர்பன் ஆவார்.

சாதாரணமாக நாடுகளுக்குள் அல்லது அரசுகளுக்குள் ஒரு போர் மூண்டால் அந்தப் போரைத் தூண்டுபவர்களும் அந்தப் போரை முன் நின்று நடத்துபவர்களும் அந்தந்த நாட்டின் அரசர்களாகவோ, அமைச்சர்களாகவோ, ஆலோசகர்களாவோதான் இருப்பார்கள். ஆனால் சிலுவைப் போரைத் தூண்டியவர்களும் ஆலோசனை கூறி முன் நின்று நடத்தியவர்களும் பாதிரிமார்களே என்பதும் தலைமைதாங்கியவர் போப் ஆண்டவரே என்பதும் சிலுவைப் போரின் வித்தியாசமான வியப்பான அம்சம். அவர்களுள் மேற்குறிப்பிட்டுள்ள போப்பாண்டவராக ஆக்கப்பட்ட அர்பன் முக்கியப் பங்காற்றினார். புனித பூமியாக கருதப்பட்ட பாலஸ்தீனத்தையும் ஜெருசலத்தையும் முஸ்லிம்களிடமிருந்து மீண்டும் கைப்பற்றுவதற்காகப் போர் தொடுக்கும்படி கிறிஸ்தவர்களுக்கு ஆணையிட்டவர் அர்பன் ஆவார். 1088 ஆம் ஆண்டு அவர் போப் ஆண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்தே போர் செய்து புனித இடங்களை மீட்க வேண்டுமென்ற வெறியுடன் மக்களைத் தூண்டினார். 

போப் ஆண்டவர் அர்பன் கிருத்துவ நாடெங்கும் சுற்றி உணர்ச்சியைத் தூண்டும் வகையில் உரையாற்றினார். துருக்கியர்கள் புனித பூமியை ஆக்கிரமித்துக் கொண்டு, புனித இடங்களை மாசுபடுத்துவதாகவும் கிறிஸ்தவ யாத்திரிகர்களுக்குத் தொல்லை கொடுப்பதாகவும் கூறி வன்மையாகக் கண்டித்தார். கிறிஸ்தவ உலகம் முழுவம் ஒரு புனிதப் போரில் ஒருங்கிணைந்து, புனித பூமியைக் கிருத்தவர்களே மீண்டும் கைப்பற்றுவதற்குப் பெரும் புனிதப் போரைத் தொடங்க வேண்டுமென்று வலியுறுத்தினார். 

மேலும் தமது உரையில் மிகவும் சாதுர்யமாக போர் செய்வதன் மூலம் வெற்றிகொண்டால் கிருத்தவ உலகத்துக்கு ஏற்படும் பொதுவான நல நோக்கங்களையும் பொருளாதாரக் காரணங்களையும் எடுத்துரைத்தார். புனித பூமி செல்வச் செழிப்புடையது என்பதையும், மக்கள் நெரிசல் மிகுந்த மற்ற கிறிஸ்துவ ஐரோப்பிய நாடுகளைவிட செல்வ வளம் மிக்கது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். இவை பற்றி பைபிளின் வாசகங்களை வாசித்துக் காட்டினார். இறுதியாக, மக்களின் நம்பிக்கையைத் தூண்டுவதற்காக இறைவன் பெயரைச் சொல்லி ஆன்மீகத்திலும் கை வைத்தார். இந்தப் புனிதப் போரில் பங்கு கொள்வதால் கடவுளின் ஆசிகிட்டுமென்றும், புனிதப் போராளிக்கு அவரது பாவங்கள் அனைத்திலிருந்தும் பாவமன்னிப்பு கிடைக்கும் என்றும் மூளைச்சலவை செய்தார். 

சிலுவைப்போரில் கலந்துகொள்ள தயாராகிவரும் வீரர்களுக்கு போப்பாண்டவர் சில சலுகைகளையும் அறிவித்தார். அவைகளில் முக்கியமானவை இந்தப் போரில் பங்கு பெறும் கிறிஸ்துவர்கள் அனைவரும் திருச்சபையின் நிரந்தரப் பாதுகாப்புக்கு உள்ளாவார்கள். அவர்களது உறவினர், வீடு, நிலம், இதர சொத்துக்கள் அனைத்தையும் திருச்சபையே பாதுகாக்கும். ஒவ்வொரு வீரரின் குடும்பத்துக்கும் தேவையான பண உதவிகளுக்கு திருச்சபையே பொறுப்பேற்கும். அதுவரை அவர்கள் யாரிடம் கடன் வாங்கி இருந்தாலும் அதைத் திருப்பிச் செலுத்த வீரர்களுக்குப் பொறுப்பில்லை. கடனை வசூலிக்க யாரும் வீரர்களின் மீது வழக்குத் தொடரக் கூடாது அதற்குரிய பண உதவிகளை திருச்சபையே செய்யும். வீரர்கள் அரசுக்கு செலுத்தவேண்டிய வரி பாக்கிகளை அரசுகள் தள்ளுபடி செய்துவிட வேண்டும். மேலும் வரிகள் கட்டுவதிலிருந்து அவர்களுக்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்டது.

சிலுவைப் போர்களின் முக்கிய அம்சமாக வரலாற்று ஆசிரியர்கள் காண்பது என்ன வென்றால் அமைதியை போதிக்க வேண்டிய ஒரு போப்பாண்டவரே அதைத் தூண்டிவிட்டதும் ஆயுதங்களைக் கரங்களில் கொடுத்து ஊக்கப்படுத்தியதும்தான். அடுத்து, இதை போப் ஆண்டவர் தலைமை ஏற்று நடத்தியதால் அனைத்து கிருத்தவ நாடுகளும் இந்தப் போரில் பங்கேற்றன. மாறாக , ஏதாவது ஒரு ஐரோப்பிய நாடு இந்தப் போருக்குத் தலைமை வகித்து இருக்குமானால் இன்னொரு ஐரோப்பிய நாடு இதில் கலந்து கொண்டிருக்காது. உதாரணமாக பிரான்சு தலைமை ஏற்றால் ஜெர்மனி கலந்து கொண்டிருக்காது. 

போப்பாண்டவர் அர்பன் ஆற்றிய வெறித்தனமான பேருரைகள் கூடிய கிருத்துவர்கள் மத்தியில் பெரும் உணர்வுக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரது உரைகளைக் கேட்ட அவர்கள் , மத உணர்வால் தூண்டப்பட்டுக் குமுறி எழுந்தார்கள். அர்பன் தமது உரையை முடிப்பதற்கு முன்னரே கூட்டத்தினர், "ஆண்டவர் அதை விரும்புகிறார்" என்று முழக்கமிட்டனர். இந்த முழக்கமே சிலுவைப் போர்களின் போர் பிரகடனமாகவும் முழக்கமாகவும் ஆகியது . 

இறைவனால் பரிசாக அளிக்கப்பட்டதாக நம்பப்பட்ட புனிதமான பாலஸ்தீனத்தையும் அதன் பெருமைக்குரிய தலைநகரான ஜெருசலத்தையும் முஸ்லிம்களிடமிருந்து மீட்டெடுக்கும் நோக்கத்துடன்தான் சிலுவைப் போர்கள் தொடங்கபப்ட்டன என்று சொல்லப்பட்டாலும் ஆனால் உண்மையில் இந்தப் போர்களின் நோக்கம், விரைவாகப் பரவிக் கொண்டிருந்த இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தி ஐரோப்பாவின் பக்கமும் முழுக்கப் போகவிடாமல் தடுப்பதுதான். கிருத்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஜென்மங்களுக்கும் பகை இருக்கும் அளவுக்கு ஒரு நிரந்தர இரும்புத்திரையை எற்படுத்திவிடவேண்டுமென்பதும் சிலுவைப்போர்களின் நோக்கம். அதுமட்டுமல்லாமல் இஸ்லாத்துக்கு எதிராக முழு கிருத்தவ உலகையும் திரட்டுவதும் அதன் நோக்கங்களில் மற்றொன்றாகும். அதனால்தான் திருச்சபைகளும் பாதிரியார்களும் இவற்றின் திட்டங்களில் பங்கேற்றனர். 

கி பி. 1096 முதல் 1270 வரை மொத்தம் எட்டு சிலுவைப் போர்கள் நடைபெற்றன. இந்தப் போர்களில் பங்கேற்கச் சென்ற கிருத்துவ வீரர்கள் செந்நிறத் துணியால் செய்யப்பட்ட சிலுவையின் அடையாளங்களை சின்னமாக அணிந்து போரிட்டதால் இப்போர்கள் சிலுவைப் போர்கள் என்று அழைக்கப்பட்டன.

முதலாவது சிலுவைப் போரில் கிருத்துவப்படை தோல்வியையே சந்தித்தது. ஆனால் கூடுதல் வெறித்தனமான உணர்வுடன் திரண்ட இரண்டாம் படையைச் சேர்ந்த வீரர்கள் வரும் வழியில் நடந்துகொண்ட அநாகரிகமான முறைகளால் உலக சரித்திர ஆசிரியர்களின் வெறுப்பான வார்த்தைகளை சம்பாதித்து கொண்டனர். இந்த சிலுவைப்போர் வீரர்களை, வரலாற்றாசிரியர் கிப்பன் (Gibbon), 'மூடர்கள்’, அநாகரிகமானவர்கள்' என்று வருணிக்கிறார்.

முதலாவது தோல்விக்குப் பின் ஏற்பட்ட இரண்டாம் சிலுவைப் போரில் கோட்டையின் படைத்தலைவனாக இருந்த ஃபிரஸ் (Firuz) என்பவன் கிறிஸ்துவ தளபதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு துருக்கியில் இருந்த ஆண்டியோக் கோட்டைக் கதவுகளை கடைசி நிமிடத்தில் திறந்துவிட்டு விட்டபடியால், கோட்டை கிறிஸ்துவர்களின் வசமாகிப் போனது. சதியாலும் நிதியாலும்அவர்கள் ஜெருசலத்தை நோக்கி முன்னேற வழி வகுத்தது. 

இறுதியாக ஜெருசலம் கிருத்தவர்களால் கைப்பற்றப்பட்டது. இதற்கு இரு வாரங்களுக்குப் பிறகு 1099 ஆம் ஆண்டில் போப்பாண்டவர் அர்பன் காலமானார். இதில் ஒரு வினோதமான செய்தி என்னவென்றால் ஜெருசலத்தின் வெற்றிச் செய்தி அவரை சென்று அடையும் முன்பே அர்பன் அடிக்கடி தனது உரையில் குறிப்பிட்ட அந்த அந்த ஆண்டவர் அவரை அழைத்துக் கொண்டதுதான். ஆனால் போப்பாண்டவர் அர்பன் உயிருடன் இருந்த காலத்தில் உரையாற்றியது போல் அவர் நம்பிய ஆண்டவர் அவரது பாவங்களை மன்னித்தாரா என்று தெரியவில்லை. 

காரணம் சிலுவைப் போரின் நடைமுறைகளின்போது அன்பு மார்க்கம் என்று அடையாளமிட்டுக் கொள்ளும் கிருத்தவ மதத்தின் போர் வீரர்களின் அட்டகாசம் இன்று காசாவில் இஸ்ரேல் அரங்கேற்றும் அட்டூழியங்களுக்கு சற்றும் சளைத்ததல்ல. 

கோட்டைக்குள் இருந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கிறிஸ்துவர்கள் கண்மண் தெரியாமல் வெட்டி வீழ்த்தினார்கள். வெற்றிக்களிப்புடன் எக்காளமிட்டபடி ஜெருசலேத்தை அடைந்து, எதிர்ப்பட்ட அத்தனை பேரையும் கொன்று வீழ்த்தியபடியே முன்னேறிச் சென்றார்கள். முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தகத் தலங்கள், வழிபாட்டிடங்கள் , அலுவலகங்கள் ஆகியன சூறையாடப்பட்டன.

ஜெருசலேத்தின் வீதிகள் அனைத்தும் பிணங்களால் நிறைந்திருந்தன. பிணம் தின்னும் கழுகள் பெரும் விருந்துண்ண ஏராளமாக வானில் வட்டமிட்டபடி இருந்தன. அதே கழுகளின் வாரிசுகள்தான் இன்று காசாவிலும் வட்டமிடுகின்றன. எங்கு பார்த்தாலும் அழுகுரல்கள், அவல ஓலங்கள். இடிந்த கட்டடங்களில் தீ வைக்கபட்ட்டதால் பெரும்புகை எழுந்து வானை நிரப்பியது. 

சிலுவைப் போர்களில் கிருத்துவ வீரர்கள் நடந்துகொண்ட முறைகள் இன்றளவும் அந்த மதத்தின் மீதான வரலாற்றுக் கரும்புள்ளியாகக் காட்சியளிக்கிறது. வெற்றி கொண்ட பகுதிகளில் இருந்த மாற்று மதத்தவர்களை அவர்கள் காட்டுமிராண்டிகள் போல் வெட்டிச் சாய்த்ததுதான் இன்றளவும் சிலுவைப் போர்களின் முதல் அடையாளமாகச் சொல்லப்பட்டு வருகிறது. 

அந்தச் சம்பவத்தின்போது மட்டும் எழுபதாயிரம் ஜெருசலத்துவாசிகள் கிறிஸ்துவர்களால் கொல்லப்பட்டதாக மிஷட் (Nafed Khaled Mishad) என்கிற சரித்திர ஆசிரியர் எழுதுகிறார். யுத்த நெறிமுறைகளை அவர்கள் காற்றில் பறக்க விட்டார்கள் என்பது அனைவரும் கூறும் ஒரு பொதுவான குற்றச்சாட்டு. 

மேலே நாம் குறிப்பிட்ட மிஸாட் என்கிற வரலாற்றாசிரியர், “கிருத்தவர்களை சும்மா விட்டால் உலகிலுள்ள அத்தனை முஸ்லிம் மற்றும் யூத மதத்தவர்களையும் கொன்று புதைத்து விட்டு, அவர்களைப் புதைத்த இடங்களிலெல்லாம் தேவாலயங்களை எழுப்பி, கொலைபாதக அடையாளங்களை மறைத்து விடும் வெறியில் இருந்தார்கள்” என்று அந்த வெறித்தனமான செயலை சித்திரிக்கிறார். சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவரின் கூற்றை மேற்கோளாகக் கொண்டு எழுதும் மிஸாட், “கொல்லப்பட்டவர்களின் ரத்தம் உமர் மசூதியின் நுழைவு மண்டபத்தில் முழங்கால் அளவு மூழ்கும் ஆழத்தில் நின்றது ” என்றும் குறிப்பிடுகிறார். இவ்வளவு ஒப்பீடாக மற்ற வரலாற்று ஆசிரியர்கள் சொல்லாவிட்டாலும் கிருத்துவ வீரர்களின் அநியாயம் மற்றும் அட்டூழியங்களைப் பற்றிக் கணக்கு வழக்கில்லாத புள்ளிவிவரங்கள் காணக்கிடைக்கின்றன. 

முஸ்லிம்களை மட்டுமல்லாமல், கிருத்துவ வீரர்கள் தாங்கள் முன்னேறும் வழியிலெல்லாம் முதலில் யூதர்கள் கண்ணில் படுகிறார்களா என்று அவர்களையும் தேடித்தேடிக் கொன்று குவிக்கத் தொடங்கினார்கள். பல்லாயிரக்கணக்கான யூதர்களை அவர்கள் ஈவிரக்கமின்றிக் கொன்று குவித்ததை சரித்திர நூல்கள் பக்கம் பக்கமாக வருணிக்கின்றன.

இதில் பரிதாபம் என்னவெனில், யூதர்கள் தம்மை முஸ்லிம்கள் தாக்குவார்களோ என்றுதான் அப்போது பயந்துகொண்டிருந்தார்களே தவிர கிறிஸ்துவர்களிடமிருந்து அப்படி ஒரு தாக்குதலை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை.நடப்பது கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமான யுத்தம்.

இதில் தங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுதான் அப்போது யூதர்களின் நிலையாக இருந்தது. ஏனெனில், ஜெருசலேம் அவர்களுக்கும் புனித நகரமே என்றாலும் அப்போது அது முஸ்லிம்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.

முஸ்லிம்களை எதிர்த்து, கிறிஸ்துவர்கள் போல போரில் இறங்க யூதர்களிடம் பெரிய படைபலமெல்லாம் அப்போது இல்லை. அவர்கள் சந்தேகமில்லாமல் சிறுபான்மையினர். ஆகவே, எத்தரப்புக்கும் சார்பின்றி நடுநிலைமை காக்கலாம் என்றே யூதர்கள் முடிவு செய்திருந்தார்கள். 

ஆனால் வெறிபிடித்த கிருத்தவர்கள் முஸ்லிம்களையும் யூதர்களையும் கிள்ளுக் கீரையாக நடத்தி பாலஸ்தீனத்தில் அக்கிரம ஆட்சி புரிந்தார்கள். ஐரோப்பிய கிருத்தவ நாடுகள் அனைத்தும் இந்த அக்கிரமங்களுக்கு மதத்தின் தலைமையின் துணையோடு துதிபாடி துணை நின்றன. 

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

ஒரு நூற்றாண்டு இவ்விதம் சென்றது. சலாவுதீன் என்கிற குர்திய இனத்தைச் சேர்ந்த முஸ்லிம் தளபதி கிருத்தவர்களை விரட்டி அடித்து மீண்டும் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றும் வரை ஒரு நூற்றாண்டு சென்றது. அதன் பின் நடந்தவைகளை அடுத்துக் காணலாம் இன்ஷா அல்லாஹ்.

இபுராஹீம் அன்சாரி

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

10

அதிரைநிருபர் பதிப்பகம் | August 09, 2014 | , , , , ,

தொடர் பகுதி : மூன்று

படைத்த இறைவனின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளான பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்களும் அந்த நாடும் எத்தனை ஆட்சியாளர்களின் கரங்களில் எடுப்பார் கைப்பிள்ளையாக ஆனார்கள் என்பதை வரலாறு வடிவமைத்துக் காட்டுகிறது.

  • முதலாவதாக 7 ஆம் நூற்றாண்டில் கி.பி.636–ல் கலீஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில் பாலஸ்தீனம் ரோம சாம்ராஜ்யத்திடமிருந்து கைப்பற்றப்பட்டு இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது. இது ஒரு வரலாற்றுத் திருப்புமுனை.
  • அடுத்து, 11ஆம் நூற்றாண்டில் கி பி 1095-ல் முதலாவது சிலுவை யுத்தத்தின் காரணமாக முஸ்லிம்கள் வசமிருந்த பாலஸ்தீனம் கிருத்தவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. அப்போது, இன்று காசா வில் நடந்து வருவதைவிடக் கோரமான படுகொலைகளை திருச்சபைகளின் ஆதரவுடன் கிருத்துவப் படைகள் நடத்தின. இந்த ஆக்ரமிப்புகள் கிட்டத் தட்ட 90 ஆண்டுகள் தொடர்ந்தன.
  • இதனைத் தொடர்ந்து 12-ஆம் நூற்றாண்டில் 1190 -ல் மாவீரர் சலாஹுதீன் அய்யூபி அவர்கள் திட்டமிட்டுப் போராடி பாலஸ்தீனத்தை கிருத்துவர்களிடமிருந்து மீண்டும் மீட்டெடுத்து முஸ்லிம்கள் ஆளத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து சுமார் 725 ஆண்டுகள் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ்தான் மீண்டும் பாலஸ்தீனம் இருந்தது.
  • 1924- ல் உதுமானிய கிலாஃபத்தை கலைத்து மீண்டும் பாலஸ்தீனத்தை சிலுவை யுத்த கொலைகாரர்களின் வாரிசுகள் உட்புகுந்து ஆக்கிரமிப்பு செய்தார்கள்.
  • யூதர்களை ஹிட்லர் தேடிப்பிடித்து தேடிப்பிடித்து கொத்துக் கொத்தாகக் கொன்று போட்டார். இந்தப் படுகொலைகள் உலக மக்களின் அனுதாபத்தை யூதர்களின்பால் திருப்பிவிட்டது. இன்று காசாவில் பாலஸ்தீனியர்கள் படும் பாட்டை விட நூறு மடங்கு அவதிகளை யூதர்களுக்கு ஹிட்லர் பரிசாக அளித்தார். அதைப்பற்றி தனி அத்தியாயம் பார்க்க இருக்கிறோம்.
  • 1948 – ல் இரண்டாம் உலகப் போருக்குப் பின் வல்லரசுகளின் வெற்றியால் அனுதாபத்தின் அடிப்படையில் இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டு பாலஸ்தீனத்தின் நிலப்பகுதிகளில் வல்லரசுகளால் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது. 
இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இரண்டாவது கலிபாவான அமீருல் மூமினீன் என்று அழைக்கப்பட்ட ஹஜரத் உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் ஜெருசலம் முஸ்லிம்களின் வசமானது. நீதி நியாயங்களைக் கடைப்பிடித்த ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் யூத , கிருத்துவ, இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களைச் சார்ந்தவர்களும் அவரவர்களுடைய மதங்களின் நியமங்களைப் பின்பற்றி அமைதியுடன் வாழ வழிவகுத்திருந்தார். ஒருவரை ஒருவர் மதித்து கண்ணியப்படுத்தி கருத்து மாறுபாடுகளின்றி மத நல்லிணக்கம் ஓங்கி வளர்ந்த இடமாகவும் தலைநகர் ஜெருசலமும் பாலஸ்தீனமும் திகழ்ந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக ஹஜரத் உமர் ( ரலி) அவர்களுடைய கொலைக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் பாலஸ்தீனத்தின் தனிப்பட்ட தன்மைகளை கவனத்தில் கொள்ளாமல் கையாண்டதால் பாலஸ்தீனம் கிருத்தவர்களின் கைகளுக்குப் போனது. இவ்விரு வரலாற்று சம்பவங்களையும் பகிர்வோம்.

முதலில் ஹஜரத் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பாலஸ்தீனின் நிலையைப் பற்றிப் பார்க்கலாம்.

ஹஜரத் உமர் (ரலி) அவர்களின் கட்டளைப்படி பாலஸ்தீனம் முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்டது. அவ்விதம் கைப்பற்றப்பட்டபோது பாலஸ்தீனத்தை ஆண்டவர்கள் ரோமானியர்கள் ஆவார்கள். பாலஸ்தீனத்தின் தலைநகரான ஜெருசலம் முஸ்லிம் வீரர்களால் முற்றுகையிடப் பட்டது. தலைநகர் ஜெருசலம் அவ்வளவு இலகுவாக வீழ்ந்து விடவில்லை. முற்றுகை நீடித்ததே தவிர அந்த முற்றுகையை தனது முழுபலத்துடன் எதிர்த்து நின்றது ரோம சாம்ராஜ்யத்தின் கிருத்தவப் படை. ஆனாலும் இறுதியில், நான்கு மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் நடைபெற்ற ஒரு வீராவேசப் போருக்குப் பின் ஜெருசலம் வீழ்ந்தது. அன்றைய நாள் இஸ்லாமியப் படைக்குத் தலைமை தாங்கிய தளபதி அபூ உபைதா (ரலி) அவர்கள் ரோமானியப் படைகளை தன்னிடம் சரணடைந்து முஸ்லிம்களுடைய ஆட்சியை நிறுவ சம்மதிக்க வேண்டுமென்று உத்தரவிட்டார்.
அந்த நேரம் ஜெருசலத்தின் பிரதான பாதிரியாராகவும் நகரத்தின் தலைவராகவும் இருந்தவரின் பெயர் (Sophranius) சோப்ரனியூஸ் என்பவராவரார். அவர் படைத்தளபதி அபூ உபைதா (ரலி) அவர்களுக்கு ஒரு செய்தி அனுப்பினார். அதன்படி வெற்றி கொள்ளப்பட்ட ஜெருசலத்தின் கையளிப்பு, இஸ்லாமிய உலகின் கலிபாவான ஹஜரத் உமர் (ரலி) அவர்களின் முன்னிலையிலே தர முடியுமென்றும் இதற்காக கலிபா உமர் (ரலி) அவர்களை ஜெருசலத்துக்கு வரச் சொல்லுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். கலிபா அவர்களோ தொலைதூரத்தில் - மதினாவில் இருந்தார்கள்.

இந்த நிகழ்வை, The patriarch Sophranius appeared on the walls, and by the voice of an interpreter demanded a conference. After a vain attempt to dissuade the lieutenant of the Caliph from his impious enterprise, he proposed, in the name of the people, a fair capitulation , with this extraordinary clause , the articles of security should be ratified by the authority and presence of Omar himself. என்று அன்று நிகழ்ந்த நிகழ்வுகள் Decline and Fall of the Roman Empire - Volume II என்கிற புகழ் பெற்ற வரலாற்று நூலில் Edward Gibbon என்பவரால் pages 267 -268 – ல் விவரிக்கப்பட்டிருக்கிறது. 

இந்தத்தகவல் கலிபா உமர் (ரலி) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதும் உடனே உயர்மட்ட ஆலோசனைக் குழு மதினாவில் கூடியது. அந்தக் கூட்டத்தில் ஹஜரத் அலி (ரலி) அவர்களின் ஆலோசனையை ஏற்று கலிபா உமர் (ரலி) அவர்கள் ஜெருசலத்துக்குப் புறப்பட்டார்கள். 

பாலைவனப் பயணம் – நெடுந்தொலைவு ஆனாலும் தனது கஷ்டங்களை பொருட்படுத்தாமல் கலிபா உமர் (ரலி) அவர்கள், ‘தேவை இல்லாமல் இன்னும் ஒரு சொட்டு இரத்தம் கூட சிந்துவதற்கு இடம் தர மாட்டேன்’ என்று சொல்லி விட்டுப் புறப்பட்டு ஜெருசலம் வந்தடைந்தார்கள். 

ஜெருசலம் நகரத்தின் நுழைவாயிலில் கலிபா அவர்களுக்காக காத்திருந்த பாதிரியார், கோதுமை நிற ஒட்டகத்தில் வந்திறங்கிய அந்த மனிதரைக் கண்டதும், ஆச்சரியத்தால் வியந்து போனார். மேலே நான் குறிப்பிட்டு இருக்கிற வரலாற்றாசிரியரின் கூற்றுப்படி பனிரெண்டு இடங்களில் ஒட்டுப் போட்டுத் தைத்த மேலங்கி மற்றும் தோலறுந்த காலணியும் அணிந்து வந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கலிபா அவர்களைக் கண்டு மலைத்துப் போனார் பாதிரியார். பெருமானார் (ஸல்) அவர்கள் மீதும் அவரது சீடரான கலிபா உமர் (ரலி) அவர்கள் மீதும் அங்கு திரண்டிருந்த மக்களுக்கு மரியாதை கூடியது. இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தன்னிரகற்ற மன்னரின் எளிமை, எதிரிகளை வாயடைக்கச் செய்தது. முதல் பார்வையிலேயே அந்நகர மக்களின் நெஞ்சம் கவர்ந்தார் ஹஜரத் உமர் (ரலி) அவர்கள். 

ஜெருசலம் கை மாற்றப்பட்டது. அதன் அடையாளமாக நகரத்தின் சாவி கலிபா உமர் (ரலி) அவர்களிடம் ஒப்புக் கொடுக்கப்பட்டது. Sophranius bowed before his new master , and secretly muttered in the words of Daniel என்று வரலாறு குறிப்பிடுகிறது. நகரத்தின் பல்வேறு பகுதிகளையும் புதிய மன்னருக்குப் பாதிரியார் சுற்றிக் காட்டினார். விளக்கங்கள் கூறினார். கிருத்தவ தேவாலயங்களுக்குக் கூட்டிச் சென்றார். 

At the hour of prayer they stood together in the Church of Resurrection , but the Caliph refused to perform his devotions, and contented himself with praying on the steps of the Church of Constantine. To the Patriarch he disclosed his prudent and honourable motive. “Had I yielded “ said Omar “ to your request , the Moslems of a future age would have infringed the treaty under colour of imitating my example” என்று Edward Gibbon அவர்கள் அந்தக் காட்சியை வர்ணிக்கும் போது நமது விழிகள் வியப்பால் விரிகின்றன. சமூக நல்லிணக்கத்துக்கான சான்று அந்தக் காட்சி. 

அதாவது, பாதிரியாருடன் ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் அங்குள்ள கிருத்துவ தேவாலயங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் பொது அசர் தொழுகைக்கான பாங்கு ஒலித்தது. தொழத்தயாரான உமர் (ரலி) அவர்களை தேவாலயத்திலேயே தொழுது கொள்ளும்படி பாதிரியார் வேண்டினார். ஆனால், கலிபா ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் சொன்னது என்ன தெரியுமா? “ இறைவனை நாங்கள் அவனால் படைக்கப்பட்ட எந்த இடத்தில் வேண்டுமானாலும் தொழலாம்; ஆனால் எனது செயல், எதிர்காலத்தில் ஒரு முன்மாதிரியாகி எனது தோழர்கள் உங்கள் தேவாலயத்தில் தொழுவதற்கு திரண்டு வந்துவிடக் கூடுமென்று நான் அஞ்சுகிறேன்" என்று கூறினார். கலிபா தொழுத இடம் என்று முஸ்லிம்கள் நாளைக்கு உரிமை கொண்டாடி அதனால் சிறுபான்மையினராகிய கிருத்துவர்களுக்குப் பாதிப்பு வரக்கூடாது என்று கலிபா உமர் (ரலி) அவர்கள் கவனமாக இருந்து வேறொரு இடத்தில் தனது தொழுகையை நிறைவேற்றினார்கள்.

ஜெருசலத்தில் தான் தங்கி இருந்த அந்த நாட்களில் பெருமானார் (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் என்னும் விண்ணுலகப் பயணத்தை மேற்கொண்ட இடத்தையும் பெருமானார் அவர்கள் தொழுகை நடத்திய இடத்தையும் காண விழைந்த ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் அந்த இடங்களுக்குச் சென்றார். அந்த புனிதமான இடங்கள் கூளமும் குப்பையுமாகக் கிடந்தது. சரியான பராமரிப்பின்றிக் கிடந்ததைக் கண்ட கலிபா உமர் (ரலி) அவர்கள் தங்களுடன் வந்திருந்த சில தோழர்களுடன் இணைந்து தங்களின் கரங்களால் அந்த இடங்களை தூய்மைப் படுத்தினார்கள். அதன்பின் அந்த இடங்களில் தாங்களும் தொழுகை நடத்தினார்கள். இங்குதான் மஸ்ஜித்- அல் அக்ஸா அமைந்துள்ளது.

ஜெருசலம் நகரத்தை உமர் (ரலி) அவர்கள் பெற்றுக் கொண்டபோது அந்நகரில் அமைதி நிலவியது. அங்கு வாழ்ந்த கிருத்தவர்களுடன் கலிபா அவர்கள் ஒரு ஒப்பந்தத்தையும் செய்து கொண்டார். அந்த ஒப்பந்தம் 

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால் ....

எலியா (ஜெருசலத்தின் மறுபெயர்) நகரத்தின் மக்களுக்கு, நம்பிக்கையாளர்களின் தளபதியும் இறைவனின் சேவகனுமாகிய உமர் அளிக்கும் வாக்குறுதி. நோய்வாய்ப்பட்டவர்கள், நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள் உட்பட அனைவரின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் தேவாலயங்களுக்கும் சிலுவைகளுக்கும் அவர்கள் மதத்துடன் தொடர்புடைய அனைத்துக்கும் நான் பாதுகாப்பு அளிக்கிறேன். அவர்களது சர்ச்சுகள் வீடுகளாக மாற்றப்படாது. அவைகள் அழிக்கப்படாது. சர்ச்சுகளின் இணைப்புப் பகுதிகளும் அழிக்கபடாது. இந்நகரில் வாழும் குடி மக்களின் சிலுவைகளும் உடமைகளும் அழிக்கபடாது. அவர்களது மத நம்பிக்கையில் எவ்வித முட்டுக்கட்டையும் போடப்படாது . அவர்களில் ஒருவருக்குக் கூட எவ்வித துன்பமும் இழைக்கப்படாது." (பார்வை : கலிபாக்கள் வரலாறு – மஹ்மூத் அஹ்மத் கழன்பர் ) 

என்பதுதான் அந்த ஒப்பந்தம்.

போர்க் களங்களில் – வாள் முனையில்- கழுத்தில் கத்தி வைத்துப் பரப்பப்பட்டது இஸ்லாம் என்று கதைகளை அள்ளி விடுவோர் கவனத்தில் கொள்ள வேண்டிய நிகழ்வுகளாகும் இவை. அன்பாலும் அடக்கத்தாலும் பண்புமிக்க செயல்களாலும் பரப்பப்பட்டதுதான் இஸ்லாம் என்பதை கலிபா ஹஜரத் உமர் (ரலி) அவர்களின் நடவடிக்கைகளும் அணுகுமுறைகளும் பாரெங்கும் அறியப் பறைசாற்றுகின்றன.

கிருத்தவ மற்றும் யூத மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் வழிபாட்டு உரிமைகளுக்கும் உத்திரவாதம் அளித்த ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் அந்த மக்கள் அரசுக்கு வரியை மட்டும் செலுத்த வேண்டுமென்று ஆணையிட்டார்கள். பணக்காரர்கள் மீது ஆண்டுக்கு ஐந்து தீனார்களும் நடுத்தர மக்கள் மீது நான்கு தீனார்களும் அடித்தட்டு மக்கள் மீது மூன்று தீனார்களும் வரியாக விதிக்கப்பட்டது. கிருத்துவ தேவாலயங்களில், முஸ்லிம்களின் பள்ளிகளின் தொழுகைக்கான பாங்கு நேரம் தவிர மற்ற நேரங்களில் தேவாலய மணிஓசை ஒலித்துக் கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டது. கிருத்தவர்கள் தங்களின் சிலுவைகளைச் சுமந்து வீதிகளில் ஊர்வலம் வரவும் அனுமதியளிக்கப்பட்டது. முஸ்லிம்கள் அல்லாதவர்களின் சொத்துக்களை எவரும் சூறையாடவோ அத்துமீறி அனுபவிக்கவோ முயலக் கூடாதென கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டனர். முஸ்லிம் அல்லாதவர் ஒருவரை ஒரு முஸ்லிம் கொலை செய்துவிட்டாலும் முஸ்லிம் அல்லாதவர்க்கு வழங்கப்பட்டதற்கு ஈடான அதே தண்டனையே முஸ்லிமுக்கும் வழங்கப்பட்டது. ஆடை அணிகலன்களை அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் பாரம்பரிய முறையில் அவர்களின் சொந்த விருப்பத்தின்படி அணிந்துகொள்ள உரிமை அளிக்கப்பட்டது. இதனால் கலாச்சார அடையாளங்களை வெளிப்படுத்திக் கொள்ள பூரண சுதந்திரம் அளிக்கப்பட்டது.

 உமர் (ரலி) அவர்களின் ஜெருசலத்துக்க்கான விஜயமும் செய்து கொண்ட ஒப்பந்தமும் விதிக்கப்பட்ட வரி முறைகளும் அங்கு வாழ்ந்த மக்களையும் அதுவரை அவர்களை ஆண்டு கொண்டிருந்த பாதிரியார் சோப்ரோனியூசையும் மிகவும் கவர்ந்தது. இஸ்லாத்தின் இனிமையின்பால் அவர்களை ஈர்த்தது. இதனால் கத்தியின்றி இரத்தமின்றி பலர் இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இப்படி இணைத்துக் கொண்டவர்களில் பல யூதர்களும் அடக்கம்.

தனது ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து மத மக்களையும் சரிசமமாக நடத்த வேண்டுமென்று கலிபா உமர் (ரலி) அவர்கள் கட்டளை பிறப்பித்து இருந்தார்கள். தனக்குப் பின் ஆட்சிக்கு வருபவர்களும் இந்த முறைகளைப் பின்பற்ற வேண்டுமென்றும் கூறி இருந்தார்கள். அதன்படி அடுத்த கலிபாவாக ஹஜரத் அலி (ரலி) அவர்கள் பதவி ஏற்றுக் கொண்ட பிறகும் கூட எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டு இருந்தது. கிட்டத்தட்ட நானூற்று ஐம்பது ஆண்டுகள் இவ்விதம் கடந்தன. 

அப்போதுதான் முதல் சிலுவைப் போர் வந்தது. அதையும் பார்க்கலாமே இன்ஷா அல்லாஹ்.

இபுராஹீம் அன்சாரி

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 02, 2014 | , , , , ,

தொடர் பகுதி : இரண்டு

வசிக்கத்தக்க வளங்கள் நிறைந்த நாடாக படைக்கப்பட்டு யூதர்களுக்குப் பரிசாக அளிக்கப்பட்டது பாலஸ்தீனம். அந்த பாலஸ்தீனம் பல அரசியல் புயல்களில் சிக்கி பல்வேறு ஆட்சியாளர்களின் கரங்களில் சிக்கிச் சீரழிந்தது. அதற்கான காரணங்களாகக் காட்டபடுபவை யூதர்கள் செய்த நம்பிக்கை துரோகத்தால் இறைவனின் கோபத்துக்கு ஆளாகியதுதான் என்றும் காலத்துக்கும் இந்த அமைதியற்ற வாழ்வு யூதர்களுக்கு இறைவனிடமிருந்து பெற்ற சாபத்தின் விளைவு என்று வரலாற்று நிகழ்வுகளைக் காணும் நம்மை நம்ப வைக்கிறது. 

அடிப்படையில் பாலஸ்தீன பிரச்னை ஒரு அரசியல் பிரச்னை போலத் தோன்றினாலும் உண்மை அதுவல்ல. இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள எல்லைப் பிரச்னை அல்ல; நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை அல்ல; அத்துமீறி நாட்டுக்குள் நுழைபவர்கள் பற்றிய பிரச்னை அல்ல. உண்மையில் சொல்லப்போனால் இது ஒரு பங்காளிப் போர்; அதுமட்டுமல்லாமல் இது இறை நம்பிக்கையாளர்களுக்கும் இறை மறுப்பாளர்களுக்குமான போர். இந்தப் போரில் நிலையற்ற வல்லரசுகள் இஸ்ரேலுக்குத் துணையாக இருக்கலாம். ஆனால் நிலையான இறைவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறான். ஒரு காலம் வரும் அந்தக் காலம் வரும்வரை காஸா நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அதுவரை, இஸ்லாத்தின் விரோதிகள் தற்காலிக சந்தோசப் பட்டுக் கொண்டு இருக்கலாம். 

வாருங்கள் பேச வந்த விஷயத்துக்குள் போகலாம். 

ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இறைவனிடமிருந்து தனது தூதர்கள் மூலம் நான்கு வேதங்கள் வந்தன. ஒரு தூதருக்கு வந்த வேதத்தை அதற்கு அடுத்து வரும் வேதம் பயன்பாட்டுக்கு வர இயலாமல் செய்துவிடும். ஏற்கனவே வழங்கப்பட்ட வேதம் இருக்கும் போது புதிய வேதம் இறக்கப்படுவதன் நோக்கமும் அதுதான். அந்த வகையில் நபி மூஸா ( அலை) அவர்களுக்கு வந்த வேதத்தை விட நபி ஈசா (அலை) அவர்களுக்கு வந்த வேதமாகிய இன்ஜீல் மேலோங்கியதாக நம்பிக்கை கொள்ளப்பட்டது. அதேபோல் நபி ஈசா (அலை) அவர்களுக்கு வந்த இன்ஜீல் வேதத்தை விட அதற்கு அடுத்து பெருமானார் (ஸல்) அவர்களுக்கு வந்த வேதம் ஆகிய அருள்மறை குர் ஆன் மேலோங்கி நின்றதாக நம்பிக்கை கொள்ளப்பட்டது. இந்த வேதங்களை வழங்கிய இறைவனின் கட்டளையும் அதுதான். ஆனால் இந்த அடிப்படை உண்மைகளை ஏற்றுக் கொள்ள மறுத்து தங்களுக்கு முதன் முதலில் வந்த வந்த வேதம் மட்டும்தான் தான் உண்மையான வேதம் என்று யூதர்களும் , கிருத்தவர்களும் நம்பிக்கை கொள்ள மறுத்து ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளவும் இருவரும் சேர்ந்து இஸ்லாத்தின் விரோதிகளாக மாறியதும்தான் பாலஸ்தீனத்தின் அடிப்படைப் பிரச்னை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து , பெருமானார் முகமது (ஸல்) அவர்களை இறைவன் இறுதி நபியாக பெருமைப் படுத்தியது யூதர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. யூதர்களின் கரங்களில் இருந்த முந்தைய வேதங்களில் இறுதி நபி ஒருவர் வருவார் என்று கூறப்பட்டிருந்ததை யூதர்களும் நம்பிக்கொண்டு மட்டுமல்ல எதிர்பார்த்துக் கொண்டும் இருந்தார்கள். அந்த நபி மதீனத்து மாநகரில் வந்தமர்வார் என்பதுவரையும் கூட அவர்களுக்கு நம்பிக்கை இருந்தது. அதனால்தான் பல யூதக் குடியிருப்புகள் மதினத்து மாநகரைச் சுற்றி உண்டாயின. ஆனால் இறுதியாக வந்த நபி பிறந்த கோத்திரம்தான் யூதர்களை வெறுப்புக்கு உள்ளாக்கியது. 

அதாவது நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இரு புதல்வர்கள். ஒருவர் இஸ்ஹாக் (அலை) மற்றவர் இஸ்மாயில் (அலை) ஆவார்கள். யூதர்களைப் பொறுத்தவரை பெருமானார் (ஸல்) அவர்களுக்கு முன்பு வந்த நபிமார்கள் அனைவரும் இஸ்ஹாக் (அலை) அவர்களுடைய கோத்திரத்தில்தான் வந்தார்கள். ஆகவே இறுதி நபியையும் அவர்கள் அதே போல் யூதர்களின் கோத்திரமான இஸ்ஹாக் (அலை) அவர்களின் வழியில்தான் வருவார்கள் என்று எதிர்பார்த்த நேரத்தில், இஸ்மாயில் (அலை) அவர்களின் கோத்திரத்தில் – வம்சாவழியில் வந்த நபி முகமது (ஸல்) அவர்களின் மீது வெறுப்பு ஏற்பட்டது. இந்தக் காரணம் முஸ்லிம்களான பாலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே பரம்பரை வெறுப்பையும் துவேஷத்தையும் தூண்டிவிட்டது. பெருமானார் ( ஸல்) அவர்கள் காலத்தில் இருந்தே அவர்கள் இஸ்லாத்துக்கு எதிரான காரியங்களை செய்யத் துணிந்தார்கள்.

இதனால் முன்பு எந்த இறைவன் இஸ்ரேலியர்களுக்காக இந்த வளம் மிக்க பால்ஸ்தீனத்தை படைத்துக் கொடுத்தானோ, அந்த இறைவனின் கட்டளைகளுக்கு மாறுபாடுகள் செய்து துரோகம் செய்தனர் என்றும் அதற்கான இறைவனின் சாபம் யூதர்களின் மீது இறங்கியது என்றும் இறைவன் வழங்கிய அத்தனை வேதங்களின் நெடுகிலும் கண்டு வருகிறோம். கிட்டத்தட்டத் திருமறையின் அனைத்து அத்தியாயங்களிலும் யூதர்கள் செய்த துரோகம் இறைவனால் கண்டிக்கபடுகிறது. 

யூதர்களின் தவறான செயல்பாடுகளால் இறைவனின் அதிருப்தியை அளவுக்கு அதிகமாக சம்பாதித்துக் கொண்டனர் என்பதையும் நாம் மறுக்க முடியாது. படைத்த இறைவன் இந்த மக்களுக்காகச் செய்த எண்ணற்ற உதவிகளை மறந்துவிட்டு இவர்களின் நன்றி மறந்த செயல்களால் அதிருப்தி அடைந்து தனது கோபத்தை பல இடங்களில் வெளிப் படுத்தி இருக்கும்போது இவர்கள் எவ்விதம் நிம்மதியாக வாழ இயலும். இறைவன் வாரி வழங்கி இருக்கும் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாத எந்த சமூகமும் இறைவனின் சாபத்திலிருந்தும் கோபத்திலிருந்தும் தப்பித்துவிட முடியாது என்பதற்கும் பாலஸ்தீனம் ஒரு உதாரணம். இதனைக் கொண்டு வல்லோனின் வாக்குகளைவிட்டு வழிதவறிச் செல்கிற உலக மக்களை இறைவன் எச்சரிக்கை செய்கிறான் என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம். அல்லாஹ் பாதுகாப்பானாகவும். பாலஸ்தீனத்தின் அரசியல் வரலாறுகளைப் பார்க்கும் முன்பு யூதர்களின் மீது இறைவனின் வெளிப்படையான கோபத்தின் வெளிப்பாடுகளின் சில வரிகளையும் சில வரலாற்று நிகழ்வுகளையும் பார்த்து விடலாம்.

சூரத் அல் பகராவின் பல வரலாற்று நிகழ்வுகளை அல்லாஹ் குறிப்பிட்டுக் காட்டுகிறான். 

“இஸ்ராயீலின் வழித் தோன்றல்களே! நான் உங்களுக்கு வழங்கி இருந்த என் அருட்கொடைகளையும் உங்களை உலகத்தோர் அனைவரிலும் மேன்மையாக்கி வைத்திருந்ததையும் நினைவு கூருங்கள்" ( 47- 48 ) 

பிர் அவுனுடைய கூட்டத்தாரின் (அடிமைத்தளையிலிருந்து) நாம் உங்களுக்கு விடுதலை அளித்ததையும் நினைவு கூருங்கள். (49)

மேலும் இதையும் நினைவு கூறுங்கள். நாம் மூஸாவுக்கு நாற்பது இரவு பகல்களை வாக்களித்திருந்தோம். ஆனால் அவர் சென்றபிறகு நீங்கள் காளைக் கன்றை கடவுளாக ஆக்கிக் கொண்டீர்கள். அப்போது நீங்கள் பெரும் அக்கிரமம் புரிந்தவர்களாக இருந்தீர்கள். அதன் பின்னரும் நீங்கள் நன்றியுடையோராய் இருக்ககூடும் என்பதற்காக நாம் உங்களை மன்னித்தோம். ( 51-51)

மேலும், உங்கள் மீது மேகம் நிழலிடச் செய்தோம்; உங்களுக்கு மேலும் “மன்னு, ஸல்வா” (என்னும் மேன்மையான உணவுப் பொருள்களை) இறக்கி வைத்து, “நாம் உங்களுக்கு அருளியுள்ள பரிசுத்தமான உணவுகளிலிருந்து புசியுங்கள்” (என்றோம்;) எனினும் (உங்கள் மூதாதையர்கள் வரம்பு மீறினார்கள்) அவர்கள் நமக்குத் தீங்கு செய்துவிடவில்லை; மாறாக, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள். ( 57 ) 

(ஷாமிற்கும் சிரியாவிற்கும் இடையில் உள்ள ஒரு தீவில் அவர்கள் இருந்த போது அவர்களை கோரமான வெயில் தாக்காமல் இருக்க வானில் திரிந்த மேகத்தைக் கொண்டு அவர்கள் போகுமிடங்களிலெல்லாம் அவர்கள் மீது வெயில் படாமல் பாதுகாத்து நிழலைக் கொடுத்து, பசியை போக்க வானில் இருந்து உணவையும் இறக்கி தாகம் தீர கல்லில் இருந்து தண்ணீரையும் வரச் செய்து இன்னும் பல உபகாரங்களையும் செய்தான். இவற்றை எல்லாம் அனுபவித்து விட்டு அல்லாஹ்விற்கு மாறுபாடு செய்தார்கள்.

யூதர்களின் தந்தையான யாகூப் (அலை) அவர்களும் அவர்களின் குடும்பத்தாரும் வாழ்ந்த பகுதியான பைத்துல்முகத்தஸை யாகூப் (அலை) அவர்கள் எகிப்துக்கு சென்ற பிறகு அமாலிக்கா என்ற கூட்டத்தினர் அதை ஆக்கிரமித்து கொண்டனர். அவர்களிடம் இருந்து அதை மீட்க அவர்களுடன் போர்செய்யும் படி மூஸா நபிக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். மூஸா நபி அவர்களை போருக்கு செல்வதற்காக அழைத்த போது அவர்களுடன் மனமின்றிப் புறப்பட்ட யூதர்கள், பைத்துல் முகத்திஸ்கு அருகில் உள்ள ஒரு தீவில் தங்கிய பொழுது பலசாலிகளான அமாலிக்கா கூட்டத்தாரைப் பற்றி கேள்வி பட்ட அவர்கள், பயந்தாகொள்ளிகளாக போர் செய்ய மறுத்தனர் எனவே அல்லாஹ் அந்த தீவில் அவர்களுக்கு பெரிய சோதனை கொடுத்தான். அவர்கள் அவ்விடத்தைக் கடக்க இரவு முழுவதும் சிரமப்பட்டு நடப்பார்கள். மறுநாள் காலையில் பார்த்தால் முன் இரவில் அவர்கள் எங்கிருந்து நடக்க ஆரம்பித்தார்களோ அதே இடத்தில் தான் இருப்பார்கள். இதே போன்று பகல் முழுவதும் சிரமப்பட்டு நடந்து இரவு வந்தவுடன் அவர்கள் பகலில் எங்கிருந்து நடக்க ஆரம்பித்தார்களோ அங்கு தான் நின்று கொண்டு இருப்பார்கள். இப்படி 40 வருடங்கள் நடந்தும் அவர்களால் அந்த இடத்தை கடக்க முடியவில்லை . அவர்கள் 6 லட்சம் பேர்களாக இருந்தனர். சிலரை தவிர அனைவரும் அதே இடத்திலேயே மரணமானார்கள்.) இந்த நிகழ்வைத்தான் அல்லாஹ் அல் பகராவில் குறிப்பிடுகிறான். நூல்  : தப்ஸீருல் ஜலாலைன்.

மேலும் அதே அல் பகராவில் , 

“இழிவும் தாழ்வும் (வீழ்ச்சியும்) அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டன. மேலும் அவர்கள் அல்லாஹ்வின் சினத்துக்கும் ஆளாகிவிட்டார்கள். இந்த விளைவு ஏன் ஏற்பட்டதென்றால் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும் நபிமார்களை நியாயாமின்றி கொலை செய்து கொண்டும் இருந்தார்கள். இந்த விளைவு ஏற்பட்டதற்குக் காரணம் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்து கொண்டும் (ஷரீஅத்தின்) வரம்பை மீறிக் கொண்டும் இருந்ததுதான்! ” (61).

“மேலும் உங்களில் எவர்கள் - சனிக்கிழமை வரையறையை மீறினார்களோ அவர்களைப் பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்தே இருக்கிறீர்கள். அவர்களை நோக்கி நீங்கள் குரங்குகளாகி (அனைவராலும் வெறுக்கப்பட்டு) இழிவடைந்தவர்களாகி விடுங்கள் என்று நாம் கூறினோம். (இவ்வாறு) அவர்களின் இறுதி முடிவை அன்று வாழ்ந்த மக்களுக்கும் அதற்குப் பின்னர் வரக்கூடிய வழித் தோன்றல்களுக்கும் ஒரு படிப்பினையாகவும் இறையச்சமுடையோர்க்கு நல்லுரையாகவும் ஆக்கினோம்.” (65-66).

“மேலும், நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தை அருளினோம். மேலும் அவரைத் தொடர்ந்து தூதர்களை அனுப்பினோம். இறுதியில் மரியமுடைய மகன் ஈஸாவுக்கும் தெளிவான சான்றுகளைக் கொடுத்தனுப்பினோம். மேலும் தூய ஆன்மாவைக் கொண்டு அவருக்கு வலுவூட்டினோம். யாரேனும் ஒரு தூதர் உங்களுடைய மன இச்சைகளுக்கு இசைவில்லாத ஏதேனும் ஒன்றை உங்களிடம் கொண்டுவந்த போதெல்லாம் நீங்கள் ஆணவம் கொண்டு புறக்கணித்தீர்கள்; சிலரைப் பொய்யரென்று கூறினீர்கள்; மற்றும் சிலரை நீங்கள் கொலை செய்தீர்கள் . ......அவர்களுடைய அவ நம்பிக்கையின் காரணமாக அல்லாஹ் அவர்களை சபித்துவிட்டான்.” ( 87 – 90 ).

“(இஸ்ரேலிய வம்சத்திலிருந்தே தோன்றிய) அல்லாஹ்வின் தூதர்களை நீங்கள் ஏன் கொலை செய்துகொண்டிருந்தீர்கள்?” ( 91- 93).

“அல்லாஹ் இறக்கியருளிய வழிகாட்டலை அவர்கள் நிராகரிப்பது – தான் அடியார்களில் தான் நாடுகின்ற ஒருவர் மீது தனது கருணையை (வஹி மற்றும் தூதுத்துவத்தை) அல்லாஹ் இறக்கியருளுவது குறித்துக் காழ்ப்புணர்ச்சி கொண்டு அவர்கள் நிராகரிப்பது எவ்வளவு கெட்டது! ஆகவே இப்போது அவர்கள் கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகிவிட்டார்கள். மேலும் இத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு இழிவுமிக்க தண்டனை உண்டு (87-90).

இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள், தப்ஸீர் இப்னு கசீர் நூலில் சொல்கிறார்கள் இப்படி “பனூ இஸ்ரவேலர்கள் ஒரே நாளில் 300 நபிமார்களை கொலை செய்தார்கள் .”
.
அனஸ் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்.

உக்கல் என்ற கூட்டத்தை சார்ந்த சிலர் நபி ( ஸல்) அவர்கள் இடம் வந்தார்கள். இஸ்லாத்தை ஏற்றார்கள் . ஆனால் அவர்கள் மதீனாவில் தங்குவதை விரும்பவில்லை. அவர்களுக்கு நோய் வந்தது. எனவே பெருமானார் ( ஸல்) அந்த மக்களை சதகாவின் ஒட்டகங்களை எடுத்து சென்று அதனுடைய பாலையும் சிறுநீரையும் குடிக்கும் படியும் மதினாவுக்கு வெளியே வாழும் படியும் ஏவினார்கள். அவர்கள் நபி சொன்னதை செய்தார்கள் உடல் நலம் பெற்றார்கள் அத்துடன் மீண்டும் மதம் மாற்றிக் கொண்டார்கள். அத்துடன் நபி (ஸல்) அவர்களின் ஒட்டக மேய்ப்பாளரையும் கொலை செய்து விட்டு ஒட்டகங்களையும் ஓட்டிச் சென்றார்கள் . நபி ( ஸல்) அவர்கள் அந்த துரோகிகளைத் தேட ஆள் அனுப்பி பிடித்துவரச் செய்தார்கள். அவர்கள் நபி ( ஸல்) அவர்களின் முன்னாள் கொண்டு வரப்பட்டார்கள். இரக்கமே உருவான பெருமானார் (ஸல்) அவர்கள் அந்த துரோகிகளின் கைகளையும் கால்களையும் துண்டித்து அவர்களின் கண்களைப் பறித்தார்கள். மரணிக்கும் வரை அவர்களுக்கு எதையும் குடிக்கவும் கொடுக்கவில்லை.

தனக்கும் தன் குடும்பத்திற்கும் எதிரிகள் எண்ணற்ற கொடுமைகள் செய்த பொழுது அவற்றை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்ட நபி ( ஸல்) அவர்கள், இஸ்லாமிய உம்மத்தில் ஒரு சகோதரர் நம்பிக்கை துரோகம் செய்யப்பட்டு அநீதியாக கொல்லப்பட்ட பொழுது பொங்கி எழுந்தார்கள் என்பதை நாம் இந்த இடத்தில் உணர்ந்து கொள்ள வேண்டும். 

இன்னும் பெருமானார் (ஸல்) அவர்களுடைய வரலாற்றில் யூதர்கள் நல்லவர்கள் போல உறவாடி விஷம் வைத்த நிகழ்வும், செய்வினை வைத்த நிகழ்வையும், பெரிய பாறாங்கல்லை அவர்கள் மீது தள்ளிவிட்டுக் கொலை செய்ய முயன்ற நிகழ்வுகளையும் பார்க்கிறோம். 

“ஒரு யூதனுடன் கை குலுக்கினால் உன் விரல்களை எண்ணிப் பார்த்துக் கொள்” என்று ஒரு பழமொழி உலகெங்கும் உலவி வருகிறது. இது யூதர்களுடைய அடிப்படை குணத்துக்கான உலகத்தர சான்றிதழ். 

Merchant of Venice என்கிற பெயரில் ஆங்கில நாடக உலகின் அறிஞர் ஷேக்ஸ்பியர் ஒரு நாடகம் எழுதி இருக்கிறார். நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவை காலத்தின் கண்ணாடி என்று கருதப்பட வேண்டும். அந்த வகையில் இந்த நாடகம் ஒரு யூத இனத்தைச் சார்ந்த ஷைலக் என்கிற வட்டி மூசாவின் கொடிய நெஞ்சின் குணத்தைப் பறை சாற்றுகிறது. அந்த நாடகத்தின் காட்சிகளை இங்கே விவரிக்க விரும்பவில்லை. யூதர்களின் கொடிய குணத்துக்கு ஒரு சான்றாகவே குறிப்பிட விரும்புகிறேன். 

தங்களுடைய துரோகச் செயல்களால், ஈவு இரக்கமற்ற நடவடிக்கைகளால் , சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாத வாழ்வால், அடுத்துக் கெடுக்கும் குணத்தால் இந்த யூதர்கள் இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்; நாடின்றி வீடின்றி உலகெங்கும் அலைந்து திரிய வேண்டுமென்று இறைவனால் சபிக்கப்பட்டவர்கள் அவர்கள். இறைவனின் வாக்குப் படி படைப்பினங்கள் யாவும் யூதர்களுக்கெதிராக திரண்டு நிற்குமென்று மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள். ஒரு காலம் வரும் ஒரு யூதன் தனது உயிருக்கு பயந்து ஒரு மரத்துக்குப் பின்னால் போய் ஒளிந்து கொண்டாலும் அந்த மரமே இவனைக் காட்டிக் கொடுக்குமாம்.

இப்படி இறைவனின் கோபத்தையும் சாபத்தையும் உலகமக்களுக்கிடையில் அரக்கர்கள் என்கிற பெயரும் வாங்கி வைத்திருக்கும் யூதர்கள் ஒருகாலமும் நிம்மதியாக வாழ முடியாது. அமைதியான சூழலில் அவர்கள் வாழவே முடியாது என்பதுதான் இறைவன் வழங்கி இருக்கும் தண்டனையின் வெளிப்பாடு. இன்று ஏதோ அமெரிக்க ஆயுத பலத்தால் அவர்கள் வெல்வது போலத் தோன்றினாலும் இறுதியில் தோற்பார்கள். கெடுவான் கேடு நினைப்பான் என்பதுதான் நாம் அறிந்த பழமொழி. நிராயுத பாணிகளை இரக்கமின்றிக் கொலை செய்வது யூதர்களின் இரத்தத்தில் ஊறிய இயல்பு அதற்குரிய விலையை அவர்கள் காலம் வரும்போது செலுத்தியே தீருவார்கள் என்பதை இங்கு நிலை நிறுத்தி இந்த அத்தியாயத்தை நிறைவு செய்வோம். 

மீண்டும் தொடந்து இந்த வரலாற்றை ஆய்வோம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும். 

இபுராஹீம் அன்சாரி

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

21

அதிரைநிருபர் பதிப்பகம் | July 26, 2014 | , , , , ,

குறுந்தொடர் - பகுதி : ஒன்று

உலக மனித இனத்தின் வரலாறு என்பதை ஒரு ஆலமரமாகக் கொண்டால் அந்த ஆலமரத்தின் ஆணிவேர் ஆழப்பதிந்திருப்பது இன்று அன்றாடம் அழுகுரல் கேட்டுக் கொண்டிருக்கும் பாலஸ்தீனத்தில்தான். இன்று பாலஸ்தீனத்தின் மண் செந்நிறம் கொண்ட இரத்த சகதியாக மாறிப் போகக்காரணம் ஏதோ நேற்றுத் தொடங்கிய பகை முடிக்க பாண்டி பஜாரில் கண்டு எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. இது ஒரு ஜென்மப் பகை! இரத்தத்தின் அணுக்களில் ஊறித் திளைத்துப் பின் தினவெடுக்கும் கரங்கள் கைகளில் எடுத்த ஆயுதப் பகை! இந்தப் பகையின் வரலாறு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்குச் சொந்தமானது. இன்றைக்கு பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மக்கள் கதறி அழுவதன் அடிப்படைக் காரணம், காலம் காலமாக களம் கண்டு வரும் இருபுறத்து மக்கட்பிரிவின் பிறப்புப் பகை! பிறக்கும் குழந்தைகள் உதைத்து விளையாடுவது இயற்கையின் படைப்பு. ஆனால் இஸ்ரேலிலோ பிறந்த குழந்தை கூட ஒருநாள் ஆனதும் உதைக்கத் தேடுவது பாலஸ்தீனியர்களை. உண்மைக் காரணங்கள் யாவை? 

இஸ்ரேல் என்றால் என்ன? இஸ்ரேலியர் என்றால் யார்? பாலஸ்தீனியர்களுக்கும் அவர்களுக்கும் என்ன பகை? இஸ்ரேலியர்கள் என்பவர்களின் இதயம் இருக்கும் இடத்தில் கருங்கல் துண்டு ஒன்று இருக்கக் காரணம் என்ன? காஸா என்கிற கைதி கண்ணாயிரத்தின் என்ன? எங்கே? எப்போ? என்கிற கதையின் காரணங்கள் யாவை? அலசுவோம் ஒரு குறுந்தொடராக. 

பாலஸ்தீனம் என்பது உலகப்படத்தில் மத்திய தரைக் கடலின் ஒரு ஓரத்தில் ஒரு சிறிய லக்ஸ் சோப் அளவு இருக்கும் ஒரு கீரைப்பாத்தி நாடுதான். ஆனால் இந்த நாடுதான் உலகில் தோன்றிய பல மதங்களுக்கும் நபி மார்களுக்கும் தாய்வீடாகத் திகழ்கிறது. இஸ்லாம் கூறுகிற நான்கு வேதங்களான சபூர், தவ்ராத், இன்ஜீல் மற்றும் குர்ஆன் ஆகிய இறைவனின் வேதங்கள் என்று நம்பப்படுகிற வேதங்களில் திருக் குர்ஆனைத் தவிர மற்ற அனைத்து வேதங்களும் இறங்கியதும் இந்த வேதங்களில் கூறப்படும் வரலாற்று நிகழ்வுகளும் அந்த வேதங்களின் நாயகர்களும் வாழ்ந்த – ஆண்ட- போதித்த – குறிப்பிட்ட இடங்களை எல்லாம் கொண்டிருப்பது இந்த நாடுதான். 

பைபிளை எடுத்துப் பார்த்தால் இந்த பிரதேசத்தை அது கானான் நாடு என்று குறிப்பிடுகிறது. இதைதான் அந்த நாளில் இஸ்ரேல் என்றும் அழைத்தார்கள். கிருத்தவ வேதங்களில் தேவன் என்று நம்பப்படுகிற கர்த்தர் கூறுவதாக இப்படி ஒரு வாக்கு வருகிறது. இஸ்ரேலியர்களுக்காகவே படைக்கப்பட்டு அவர்களை வாழ்வதற்காக இறைவன் அவர்களை அனுப்பிவைத்த இடம் இந்த கானான் தேசம் அல்லது இஸ்ரேல். இதுவே பாலஸ்தீனம் என்றும் அழைக்கப்பட்டது. ஆகவே வேதங்களில் இஸ்ரேல் என்றாலும் பாலஸ்தீனம் என்றாலும் ஒன்றுதான். அதனால்தான் இந்த அடிபிடி.

கடவுள் இடமிருந்து வந்த வார்த்தையாக பைபிள் இஸ்ரேலியர்களை நோக்கி இப்படிக் கூறுகிறது. இதைத்தான் உலக நாடுகளும் இஸ்ரேலை ஆதரிக்கும் நாடுகளும் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கின்றன. இந்த வசனங்கள் இந்தப் பிரச்னையின் அடிப்படை என்பதை நாமெல்லோரும் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். 

Palestine, or Canaan, or Israel, was described by God in Deuteronomy 8:7-9.

"For the Lord your God is bringing you into a good land, a land of brooks of water, of fountains and springs, flowing forth in valleys and hills, a land of wheat and barley, of vines and fig trees and pomengranates, a land of olive oil and honey; a land where you shall eat food without scarcity, in which you shall not lack anything; a land whose stones are iron, and out of whose hills you can dig copper."

மேற்கண்ட வரிகளில் வர்ணிக்கப்படுகிற பல வளங்கள் நிறைந்த அழகிய நீர்வளம் நிலவளம் மிக்க இடம் நிறைந்த வாழ்வாதாரங்களுடன் இஸ்ரேலியர்களுக்காகப் படைக்கப்பட்டு அவர்களுக்கு வாக்களிக்கபட்டு அவர்கள் வாழ்வதற்காக அளிக்கப்பட்டது என்பது வேத காலத்து அல்லது புராண காலத்து நிலை. இதைத்தான் இஸ்ரேலியர்கள் தங்களுக்கு தங்களின் கடவுளால் வாக்களிக்கப்பட்ட இடம் “Promised Land” என்று பாலஸ்தீனத்தை உரிமை கொண்டாடுகிறார்கள். 

சரித்திர காலத்துக்கு வந்தால், கி பி 636 ஆம் ஆண்டு உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில், இஸ்லாமியப் பேரசின் எழுச்சியின் காரணமாக கிபி 661 ஆண்டு சிரியா வெற்றி கொள்ளப்பட்டது. சிரியா இஸ்ரேலோடு எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து பாலஸ்தீனமும் வீழ்ந்தது. இதைத் தொடர்ந்து அலி (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட பின்பு 691 ஆம் ஆண்டு இன்றைய பாலஸ்தீனத்தில் உள்ள ஜெருசலத்தில் வைத்துத்தான் உமய்யாக்காளின் தலைவரான முஆவியாவுடைய (ரலி) பதவியேற்பு வைபவமும் நடந்தேறியது. உமய்யாக்களுக்குப் பிறகு 750ல் வந்த அப்பாஸிகளின் ஆட்சியிலும் அதனைத் தொடர்ந்து 878ல் எகிப்திய மன்னர்களாலும் ஆளப்பட்டு அன்றைய யூதர்கள் ஓரங்கட்டப்பட்டு இஸ்லாம் அங்கு ஆட்சி செலுத்தியது. ஆகவே யூதர்கள் கரங்களில் இருந்த பாலஸ்தீனம் முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்பட்டது என்பது சரித்திர சம்பவம். 

என்றைக்குமே தன்னிகரற்ற ஜெருசலம் தலைநகராகத் திகழ்ந்தது. City of Dawood என்று அழைக்கப்படுகிற ஜெருசலம் உலகின் புராதான நகரங்களில் ஒன்றாக கருதப் படுகிறது. நபி தாவூத் (அலை) அவர்களால் நிர்மாணிக்கப்பட்டு அவர்களது மகன் நபி சுலைமான் (அலை) அவர்களால் அலங்கரிக்கப்பட்ட நகராகத் திகழ்ந்தது ஜெருசலம் என்று வரலாறு குறிப்பிடுகிறது. யூத, கிருத்தவ, இஸ்லாம் ஆகிய மதங்களான ஆப்ரகாமிய மதங்கள் என்று உலக வரலாறு குறிப்பிடும் மதங்களின் தாயகமாக ஜெருசலம் விளங்கியது. “ஆலம் வாழுகின்ற தீனோர் யாவர்க்கும் ஆரம்பக் கிப்லா அதுதான்” என்ற கூற்றுடன் பைத்துல் முக்கத்தஸ் இங்குதான் இருக்கிறது. உலக முஸ்லிம்கள் மக்காவில் உள்ள காபாவை நோக்கித் தொழும் முன்பு பைத்துல் முகத்தஸ் இருக்கும் திசை நோக்கித்தான் தொழுது வந்தார்கள். நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் முன்னோர்கள் வாழ்ந்த பூமியும் நகரமும் இதுதான். பெருமானார் முகமது (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் சென்ற போது ஜிப்ரீல் (அலை) அவர்களின் இறக்கையில் வந்து இறங்கிய இடம் என்று நாம் நம்புகிற நகரும் ஜெருசலம்தான். பல நபிமார்களின் அடக்கஸ்தலங்கள் அமைந்து இருப்பதும் ஜெருசலத்தில்தான். இதன் இருப்பிடமும் பாலஸ்தீனத்தை சேர்ந்ததுதான்.

பெத்லஹெம் என்பது நபி ஈசா (அலை) அவர்களின் பிறப்பிடம். இதுவும் இருப்பது பாலஸ்தீனத்தில்தான். நபி ஈசா(அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டதாக கிருத்துவர்கள் நம்பிக் கண்டு இருக்கும் கல்வாரி மலை இருக்கும் இடமும் பாலஸ்தீனம்தான்.

கானான் தேசத்தார்- யூதர்கள்- கிருத்தவர்கள்- முஸ்லிம்கள் என்று பலரின் கரங்களில் அகப்பட்ட இந்த புனிதர்கள் வாழ்ந்த பூமி பின்னர் உலக வழக்கம் போல பிரிடிஷார் கைகளிலும் அகப்பட்டது. இதுதான் இன்றைய பிரச்னைகளின் ஆரம்ப அறிமுகப் படலம். 

இன்ஷா அல்லாஹ் இந்தக் குறுந் தொடரில் இன்று உலகமே இரக்கப்பட்டுக் கண்ணீர் வடிக்கிற பாலஸ்தீனியர்களின் கதையைத் தொடர்ந்து தர முயற்சிக்கிறோம். 

இன்ஷா அல்லாஹ் சந்திக்கலாம்.

இபுராஹீம் அன்சாரி

அதிராம்பட்டினத்தின் இடைக்கால பெயர் “வீரசோழன்பட்டினம்” 2

அதிரைநிருபர் பதிப்பகம் | August 03, 2013 | , , , , ,

அதிராம்பட்டினத்தில் 1961ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு-மூன்றாம் இராசராசனின் கல்வெட்டாக கருதப்படும் எழுத்தமைதியைக் கொண்ட கி.பி.12-13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு(ARE 1961:310) இப்பட்டினத்தை வீரசோழன்பட்டினம் எனக் குறிப்பிடுவதோடு தமிழகத்தின் முக்கியத் துறைமுகமாகவும் இருத்ததையும் அது, இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டில் இருத்தது என்பதையும் தெரிவிக்கிறது.

கல்வெட்டு(ARE 1961:311) அதிராம்பட்டினம்  இடைக்காலத்தில், பெரும் வணிகர்களின் செயல்படுகளைக் கொண்ட சிறந்த துறைமுகமாக விளங்கியதை உறுதிப்படுத்துகின்றன.

கி.பி.11ஆம் நூற்றாண்டில் சென்னைக்கு அருகில் உள்ள கோவளமும் வீரசோழன்பட்டினம்  என அழைக்கப்பட்டதை முதலாம் வீரராசேந்திரன் கல்வெட்டு காட்டுகிறது. ஆகவே, அதிராம்பட்டினத்திற்கு வீரசோழன்பட்டினம் என்ற பெயர் மேற்சுட்டிய அரசனது பெயராலோ அல்லது முதலாம் குலோத்துங்கன் கொண்டிருந்த வீரராசேந்திரன் எனும் சிறப்புப் பெயராலோ வந்திருக்கவேண்டும்.

அர.ஹிதாயத்துல்லாஹ்

ஆதார நூற்கள்: 
1) தமிழகத் துறைமுகங்கள்-பா.ஜெயக்குமார்
2) கடல்வழி வணிகம்- நரசய்யா


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)