அதிரை வர்த்தக - கலாச்சார பொருட்காட்சி மற்றும் திருவிழா முதல் நாள் - ஓர் அலசல் 59

அதிரைநிருபர் பதிப்பகம் | April 30, 2013 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரையில் வர்த்தக & கலாச்சார பொருட்காட்சி மற்றும் திருவிழா சீறும் சிறப்புமாக(!!!) நடைபெற்று வருகிறது அனைவரும் அறிந்ததே.

பொருட்காட்சிகள், மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டுகள் வரவேற்கத்தக்கவை. மேலும் ஷிர்க்கை ஏற்படுத்தக்கூடிய கந்தூரியையும் அதனை தொடர்ந்த அனாச்சாரங்களையும் ஒழிப்பதற்காக இஸ்லாமிய வரம்பிற்குட்பட்ட ஓர் மாற்று ஏற்பாடு என்ற நோக்கமாக இருந்தால் வரவேற்கத்தக்கது, பாராட்டுதற்குரியது. 

அதே சமயம், கந்தூரி ஷிர்க் அதனை தொடர்ந்த அனாச்சாரங்கள் போன்றவற்றை ஒழிப்பதற்கு இன்னொரு சமூக சமுதாய சீர்கேடுகளான இன்னிசை கலை நிகழ்ச்சி, இசை, ஆட்டம் பாட்டம், இரட்டை அர்த்தமுள்ள உரையாடல்கள் & பாடல்கள், அதிலும் ஆண் பெண் ஒருசேர கலந்த பார்வையாளர்கள் கூட்டம் மேலும் இதன் மூலம் ஏற்படக்கூடிய தேவையற்ற அசாதாரண சூழ்நிலை இவை அனைத்தையும் எண்ணி பார்த்தால் கந்தூரியில் நடக்கும் அனாச்சாரங்களுக்கும் இங்கு நடக்கும் செயல்களுக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை. மேலும், வெடி வெடிக்கப்பட்டு பணத்தை வீண் விரையம் செய்யாமல், அதை மற்ற நல்வழிகளான இஸ்லாமிய அழைப்பு பணி, ஷிர்க் மற்றும் பித்'அத் ஒழிப்பு பிரசுரங்கள் வெளியிட்டால் இதை காண வரும் அனைவரும் பயனடைவார்கள்.

மிக முக்கியமாக, இந்நிசை நிகழ்ச்சியின் மேடையில் (நேற்று முன் தினம்) 28.04.2013 முதல் நாள் இரவு அரங்கேற்றிய நிகழ்ச்சியொன்றில் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் கூட வெளிப்படுத்த முடியாத இரட்டை அர்த்தமுள்ள கலந்துரையாடல்களும் நிகழ்த்தப்பட்டது. ஆண் பெண் ஒருசேர கலந்துகொண்டு இந்நிகழ்ச்சியை காணும்போது ஏற்படும் வீண் விபரீதங்களுக்கு நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்.

இத்திருவிழாவிற்காக, ஊரில் தினமும் ஆட்டோ விளம்பரம் செய்யப்படுகிறது, அதில் அன்றைய தினம் எந்த திரையுலக பாடகர் மற்றும் பாடகி கலந்துகொண்டு பாட இருக்கிறார் என்றும் மேலும் அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களும் சேர்ந்து பாடலாம் என்றும் விளம்பரம் செய்யப்பட்டு அழைக்கப்படுகிறார்கள்.

இந்த அதிரை வர்த்தக & கலாச்சார திருவிழா ஏற்பாட்டளர்களின் நோக்கம் சேவை மனப்பான்மையாக தெரியவில்லை, இலாப நோக்கத்திற்காக எற்பாடு செய்யப்படுகின்ற இதுபோன்ற நிகழ்ச்சிகள் இஸ்லாமியர்களால் அதிலும் கந்தூரிகளுக்கு மாற்றமாக என்று மக்களிடம் பரப்பி கந்துரி நிகழ்ச்சிகளையே விஞ்சும் அளவிற்கு அனாச்சாரங்களை அரங்கேற்றுவது எவ்வகையில் நியாயம்.

மேலும், அவசிய தேவைகளை தவிர பெண்களை இதுபோன்ற காரியங்களுக்கு வெளியில் அழைப்பது திருமறையின் வரிகளுக்கு மாற்றமாகும். அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்;

(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். (அல் குர்ஆன்: 33:33)

பணத்திற்காக நம் பண்பாடு கலாச்சாரம் அனைத்தையும் அடகு வைத்துவிட்டு பொருட்காட்சி என்ற பெயரில் அதனோடு சேர்த்து மேலே குறிப்பிட்ட இஸ்லாத்திற்கு விரோதமான காரியங்களை அரங்கேற்றும் இந்நிகழ்சியின் ஏற்பாட்டாளர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சிக் கொள்ளவேண்டும்.

குற்றம் பிடிப்பது நமது நோக்கமல்ல. அதே சமயம் தவறுகளை சுட்டிக்காட்டி அதை சரிகாண வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இடப்படுகின்ற இந்த ஆக்கம் நல்லதை ஏவி தீமையை தடுக்கவேண்டும் என்ற இறை மறையின் கூற்றிற்கு இணங்க எழுதப்பட்டது.

இதில் ஏற்பாட்டாளர்கள் கவனிக்கவேண்டியது என்னவெனில், இசை மற்றும் அனாச்சாரக் கலை நிகழ்ச்சிகள் இல்லாமல் நடத்தினாலும் இந்த பொருட்காட்சி நிச்சயம் வெற்றிபெறும் என்பதுதான்.  ஆதாரமாக, குர் ஆன் மாநாடுகளுக்கு வரும் கூட்டத்தையும் வர்த்தக மையங்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கையையும் சொல்லலாம்.  அநாச்சாரங்களுக்குச் செலவு செய்யும் பணமும் மிஞ்சும், வருபவர்கள் கவனம் சிதறாமல் வாங்குவதில் மும்முரமாவதால் வியாபார நோக்கமும் விருத்தியாகும்.

குறிப்பு: அதிரையிலிருந்து சகோதரர்கள் பகிர்ந்து கொண்ட காணொளி காட்சிகள் உங்களின் பார்வைக்காக.


மேலும் விபரங்கள் (இன்ஷா அல்லாஹ்) விரைவில்...

அதிரைநிருபர் பதிப்பகம்

தக்வா பள்ளியில் இடர்கள் கலைந்து, பயான் தொடர்ந்தது…! 35

அதிரைநிருபர் பதிப்பகம் | April 29, 2013 | , , , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

சூழ்ச்சிக்காரர்களுக்கு எல்லாம் சூழ்ச்சிக்காரன் அல்லாஹ் ஒருவனே..

திருக்குர்ஆன் 8:30.  (நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.

திருக்குர்ஆன் 3:120. ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது; உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்.

திருக்குர்ஆன் 4:76. நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள்; நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள்; ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் - நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும்.

திருக்குர்ஆன் 6:123. மேலும் இவ்வாறே ஒவ்வோர் ஊரிலும் குற்றவாளிகளின் தலைவர்களை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். அதில் அவர்கள் சூழ்ச்சி செய்வதற்காக, ஆயினும் அவர்கள் தங்களுக்கே சூழ்ச்சி செய்து கொள்கிறார்கள். (இதை) அவர்கள் உணருவதில்லை.

திருக்குர்ஆன் 8:18. இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரின் சூழ்ச்சியை இழிவாக்கி (சக்தியற்றதாய்) ஆக்குவதற்கும் (இவ்வாறு செய்தான்.)

அல்லாஹ்வின் மிகப்பெறும் கிருபையால் நமதூர் பாரம்பரியமிக்க தக்வா  பள்ளியில் மார்க்க பிரச்சாரகர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு, தக்வா பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் 28-ஏப்ரல்-2013, மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு வழமைபோல் இனிதே நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

27-ஏப்ரல்-2013 அன்று தக்வா பள்ளி 7 பேர் கொண்ட செயற்குழுக் கூட்டம், நடைபெற்றது. இதில் வழக்கம் போல் தக்வா பள்ளியில் நடைபெற்று வந்த ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு இனியும் தொடர்ந்து நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது என்ற உண்மைச் செய்தியை உடனுக்குடன் அதிரை செய்திகளை சுடச்சுட அளித்துவரும் நமதூர் வலைத்தளங்கள் தர தவறியது மட்டுமன்று சில வலைத்தளத்தில் தவறான தகவல்களும் பதியப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

கடந்த ஒருவாரமாக மிகவும் பரபரப்பாகவும் எதிர்பார்ப்புடனும் பேசப்பட்டு வந்த அதிரை பற்றிய செய்தியில் தக்வா பள்ளியில் வழக்கமாக நடைபெற்று வந்த ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மார்க்க சொற்பொழிவு நிறுத்தப்பட்டதாக வெளிவந்த சர்ச்சையான தகவலுக்கு பின்னர் நம் அதிரைநிருபர் வலைத்தளத்தில் அந்தச் சூழலின் உண்மை நிலவரத்தை மிகுந்த சிரமத்திற்கிடையே ஆய்வு செய்து இரண்டு பதிவுகள் பதிந்தோம். 


நம்மிடம் இருந்த, மேலும் கிடைத்த வலுவான ஆதாரங்களை ஆய்வு செய்த பிறகு, இந்த சர்ச்சையில் மிகப்பெரிய சூழ்ச்சி இருப்பதை மக்கள் மத்தியில் எடுத்து வைத்தோம். அல்லாஹ்வின் கிருபையால் சூழ்ச்சிக்காரர்களின் சூழ்ச்சி வலை கிழித்தெறியப்பட்டது.

மார்க்க அறிஞர் ஒருவரை பழிவாங்கும் திட்டத்தில் பல சூழ்ச்சிகள் செய்தார்கள். மேலும் பல அதிரைவாசிகளுக்கு ஊரில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒரு சிலர் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், தனிப்பட்ட அலைபேசி  மற்றும் தொலைபேசி அழுத்தங்கள், மிரட்டல்கள், செய்ததோடு அல்லாமல், நம் அதிரைநிருபர் வலைத்தளத்தின் குழுவில் உள்ளவர்களின் சொந்தங்களிடம் மறைமுக மிரட்டல்கள் செய்தும், ஹைதர் அலி ஆலிம் அவர்களின் தக்வா பள்ளி பயான் தொடர்பான செய்திகளை முடக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார்கள். இவை அனைத்தையும் அல்லாஹ்வின் மாபெறும் உதவியால் வென்றெடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

தக்வா பள்ளியில் மார்க்க சொற்பொழிவு வழக்கம் போல் நடைபெற்றது என்பதை நினைத்து ஒரு வகையில் நாம் சந்தோசமடைந்தாலும், நம் சகோதரர்கள் சத்தியத்துக்கு எதிராக அல்லாஹ்வின் விபரீதங்கள் அறியாமல் மேலும் மேலும் சூழ்ச்சிகள் செய்து அவமானப்பட்டு போவார்களோ என்ற ஓருவித அச்சவுணர்வும் நம்மில் பலரிடம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. 

யா அல்லாஹ்,  இஸ்லாத்திற்கு எதிராக அறியாமல் சூழ்ச்சிகள் செய்யும் அனைத்து முஸ்லீம் சகோதரர்களுக்கும் மார்க்க தெளிவை தந்தருள்வாயாக..

இதில் யார் வென்றார்கள், யார் தோற்றார்கள், யார் அவமானப்பட்டார்கள் என்று நாம் தனி நபர்களைக் குறிப்பிட்டு கருத்துக்களைப் பதிவதைவிட. இறைவனை மட்டும் புகழ்ந்து, தவறு செய்த சம்பத்தப்பட்ட சகோதரர்கள் திருந்த வேண்டும், அவர்களுக்காக நாம் அனைவரும் துஆ செய்ய வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

மேலும் ஸூரத்துந் நம்லி(எறும்புகள்) என்ற அத்தியாயத்தில்  45 வது வசனம் முதல் (27:45)  முதல்  53வது வசனம் வரை (27:53) கொஞ்சம் நிதானமாக வாசித்துப்பாருங்களேன், அண்மைக் கால அதிரை நிகழ்வுகளுக்கு பொருந்தும் விதமாக இருக்கும். அனைத்தையும் மிக்க அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே…

இங்கு நாம் அழுத்தமாக சொல்ல விரும்பும் தகவல் என்னவென்றால், தக்வா பள்ளியில் நடைபெற்று வந்த ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவை நிறுத்தியது தொடர்பாக உண்மைக்கு புறம்பான அரைகுறை செய்திகளை வெளியிட்ட  அதிரை வலைத்தளங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். பணம் படைத்தவர்களின் ஆதிக்க சக்திகளுக்கு அஞ்சி சத்தியத்தை எடுத்துச் சொல்ல தயக்கமிருப்பின் தயவு கூர்ந்து தவறான செய்திகளைப் பதிந்து உண்மை நிலவரத்தை மறைத்து நமதூர் சகோதரர்களை குழப்ப வேண்டாம் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

பிறமதத்தவர் செய்யும் தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டி செய்திகள் போட்டுவிட்டால் முஸ்லீம் ஊடகங்கள் நியாயமானவை, தைரியமானவை என்று பெருமிதம் கொள்ளுவது போல் சத்தியத்துக்கு எதிராக எல்லைமீறி சூழ்ச்சிகள் செய்துவரும் நம்மவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவர்களை அவ்வகை தவறுகளிலிருந்து திருத்தும் விதமாக செய்திகளை வெளியிடுவதும் நியாயமானவை, தைரியமானவை என்று பெருமிதம் கொள்ளலாமே இன்ஷா அல்லாஹ்.

முக்கியமாக நினைவுறுத்துகிறோம், மெளலவி ஹைதர் அலி ஆலிம் என்ற தனி மனிதரை மட்டும் உயர்த்தி மற்ற மெளலவிகளை தாழ்த்தும் எண்ணம் எங்களுக்கு துளியளவும் இல்லை. தர்கா வழிபாடு, இணைவைப்பு மவ்லிது, அனாச்சாராங்கள், மூட நம்பிக்கைகள், பித்அத்துகளுக்கு எதிராகவும், சத்தியத்தை தைரியமாக எடுத்துச் சொல்லும் அதிரை மார்க்க அறிஞர்கள் யாருக்கு இத்தகைய தடைகள், தொந்தரவுகள் வந்தாலும் நிச்சயம் குரல் கொடுப்பதில் முன்னணியில் இருப்போம். இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ், நம் அனைவருக்கும் பொறுமையையும், நிதானத்தையும் தருவானாக. 

சத்தியத்துக்கு ஆதரவாகவும், அசத்தியத்துக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் நன்மக்களாக நம் எல்லோரையும் அல்லாஹ் ஆக்கியருள் புரிவானாக.

(நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக. (அல்குர் ஆன் 17:81)

நய வஞ்சகத்துக்கு எதிரான போராட்டம் அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் தொடரும். இன்ஷா அல்லாஹ்.

அதிரைநிருபர் பதிப்பகம்

நெஞ்சில் உரமின்றி…! 62

அதிரைநிருபர் பதிப்பகம் | April 28, 2013 | , , ,



தீவினை செயும் மாந்தர் எவர்க்கும்
நோவினைத் தரும் வேதனை இருக்கும்
பூவினை யொத்த தோலெனும் போர்வை
தீயினைத் தொட்டு சாம்பலை உதிர்க்கும்

தன்னையே உயர்த்தித் தற்பெருமை பேசுவோர்
வெண்ணெயை வைத்துக் கொக்கினைப் பிடிப்பவர்
மண்ணையே திரித்து மாலையாய் பிதற்றுவர்
கண்ணையே குத்திக் காட்சியைக் காட்டுவர்

நாவிலே நாளெலாம் நந்தவனம் வளர்ப்பவர்
நெஞ்சிலே முட்செடி நித்தமும் சுமப்பர்
புன்னகை இதழிலே பூநாகம் இருக்கும்
புண்ணென உள்ளமே ரணமாகிக் கிடக்கும்

நெஞ்சிலே உரமின்றி தஞ்சமே தேடுவர்
நேர்மைத் திறனின்றி முதுகிலே குத்துவர்
நிமிர்ந்த நெஞ்சே நிலையான வீரம்
நேர்கொண்ட பார்வையே நல்லோர்க்குத் தீரம்

குறைகுட மென்று கூத்தாடிக் காட்டுவர்
கூழையாய்க் குணிந்து கும்பிடும் போடுவர்
பிறையென ஆனாலும் வளர்ந்தால் பெளர்னமி
தரையெனக் கிடந்தாலும் நடந்தால் நேர்வழி

நன்மையை ஏவி தீமையைத் தடுப்பவர்
உண்மையைப் பேசி பொய்தனை  விடுபவர்
இம்மையை நல்ல தன்மையாய் வாழ்பவர்
தம்மையே  திருத்தித் தரணிக்குக் காட்டுவர்

வருவதை ஏற்று வாழ்க்கையை வாழ்பவர்
வறுமையைச் சகித்து வான்மறை ஓதுவர்
பொறுமையைக் கொண்டு புண்களை ஆற்றுவர்
மறுமையை நாடி ஒருவனைப் போற்றுவர்

கைகளைக் கொண்டு கடுமையாய் உழைப்பவர்
கற்றதைக் கொண்டு கண்ணியம் காப்பவர்
பொய்களை வென்று புதிர்களை உடைப்பவர்
பெற்றதைப் பகிர்ந்து பெரும்பேறு ஈட்டுவர்

நஞ்சையை யொத்த மனத்தினைக் கொண்டவர்
நன்செயல் வித்தை தழைத்திட உதவுவர்
தென்னையை யொத்தத் தேன்சுவை யெல்லாம்
அன்னையைப் போல அன்புடன் புகட்டுவர்

ரத்தமும் சதையும் யாவர்க்கும் உண்டுதான்
நித்தமும் நினைவும் நேர்மைக்கு நன்றுதான்
முத்தமோ யுத்தமோ மோகித்தது எதுவெனினும்
நேருக்கு நேராக நிற்பதே ஆணினம்!

Sabeer AbuShahruk

பழகு மொழி - 16 தொடர்கிறது... 11

அதிரைநிருபர் பதிப்பகம் | April 28, 2013 | ,

(2) 3.2 வினைப்பத வகைகள்

செயல்களை அடிப்படையாகக் கொண்ட சொற்களை வினைச் சொற்கள் என்போம். வினைச் சொற்களின் வகைகளை,


01 - ஏவல் வினை
02 - தெரிநிலை வினை
03 - குறிப்பு வினை
04 - தன் வினை
05 - பிற வினை
06 - செய் வினை
07 - செயப்பாட்டு வினை
08 - உடன்பாட்டு (இயல்மறை) வினை
09 - எதிர்மறை வினை
10 - (செயப்படு பொருள்) குன்றிய வினை
11 - (செயப்படு பொருள்) குன்றா வினை
12 - முற்று வினை (வினைமுற்று)
13 - எச்ச வினை (வினையெச்சம்)
14 - வியங்கோள் வினை
15 - துணை வினை
எனப் பிரிக்கலாம்.

(2) 3.2.1 வினைப் பகாப் பதம்

வினைச் சொல் வேற்றுமை ஏற்காது; தெளிவாகவோ குறிப்பாகவோ காலம் காட்டும்:

வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது
நினையும் காலை காலமொடு தோன்றும்.
காலம்தாமே மூன்று என மொழிப.
இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா
அம் முக் காலமும் குறிப்பொடும் கொள்ளும்
மெய்ந் நிலை உடைய தோன்றலாறே
 - தொல்காப்பியம், வினையியல் 1-3.

எல்லா வகை வினைச் சொற்களும் மூன்று காலங்களான இறந்தகாலம், நிகழ்காலம் வருங்காலம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு காலத்தைத் தெளிவாகவோ குறிப்பாகவோ உணர்த்தும். அதனாற்றான், வினைச் சொற்களுக்குக் 'காலக்கிளவி' என்று இன்னொரு பெயரும் உண்டு.

காலத்தைத் தெளிவாகக் காட்டுபவை 'தெரிநிலை வினை' என்றும் குறிப்பாக உணர்த்துபவை 'குறிப்பு வினை' என்றும் இருவகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன.

ஒரு சொற்றொடரின் பிரிக்க முடியாத பகுதியாக வினைச் சொல் அமைந்திருந்தால் அது 'தெரிநிலை வினை' ஆகும்; பகுதியானது பெயர்ச் சொல்லாக இருப்பின் அது, 'குறிப்பு வினை' எனப்படும்.

காட்டுகள்:
'சென்றான்' எனும் சொல் கடந்த காலத்தைத் தெளிவாகக் காட்டும் தெரிநிலை வினை(முற்று). இதன் பகுதியான, 'செல்' என்பது ஏவற் சொல்லாகும் (செல்+ஆன்= சென்றான்).

'அவன் அழகன்' எனும் இரு சொற்களில் இறுதிச் சொல்லானது, 'அழகு' எனும் பண்புப் பெயரைப் பகுதியாகக் கொண்டுள்ளது. ஆனால் காலத்தை(த் தெளிவாக)க் காட்டவில்லை. எனினும்,

அவன் அழகன் ஆக இருந்தான்; அவன் அழகன் ஆக இருக்கிறான்; அவன் அழகன் ஆக இருப்பான் என்று காலங்களைக் குறிப்பாக உணர்த்துவதால் 'குறிப்பு வினை' என்றானது.

"வினைக் குறிப்புக் காலமொடு தோன்றுங்கால், பண்டுகரியன், இதுபொழுது கரியன், என இறந்த காலமும் நிகழ் காலமும் முறையானே பற்றி வருதலும் நாளைக்கரியனாம் என எதிர் காலத்து ஆக்கமொடு வருதலும் அறிக!" - தொல்காப்பிய வினையியல் உரையில் சேனாவரையர்.

ஆதலின், நாம் பாடம் (2) 3.1 (பெயர்ப் பகுபதங்கள்)இல் படித்த அறுவகைப் பெயர்ப் பகுபதங்களும் குறிப்பு வினையாக வரும்.

தலைப்பு (2) 3.1இல் குறிப்பிட்டுள்ள 15 வகை வினைகளுள் முதலாவதாக இடம்பெற்றுள்ள ஏவலில் முடியும் முற்றுவினைச் சொற்களைப் பற்றி, பாடம் (2) 2.1.2இல் படித்திருக்கிறோம். ஏவல் (முற்று)வினைச் சொற்கள், பகுக்க முடியாத பகாப் பதங்களாகவே அமைந்திருக்கும்:

நட,      வா,    மடி,     சீ,           விடு, கூ,            வே,     வை,
நொ,   போ,  வௌ, உரிஞ், உண், பொருந், திரும், தின்,
தேய்,  பார்,  செல், வவ்,      வாழ், கேள்,       அஃகு என்று

எய்திய இருபான் மூன்றாம் ஈற்றவும்
செய் என் ஏவல் வினைப் பகாப்பதமே
 - நன்னூல் 147.


மேற்காணும் 23 சொற்களும் 'சொல்வதைச் செய்' என ஏவுவதாக இருப்பதால் இதனை, 'செய் வாய்பாடு' என அழைக்கின்றனர். 'செய்' வாய்பாட்டில் வரும் ஏவல்கள் அனைத்தும் வினைப் பகாப் பதங்களாகும்...
இன்ஷா அல்லாஹ் தொடரும்
ஜமீல் M.ஸாலிஹ்

நேர்மை ! தூய்மை! தாய்மை!- நிறைவுப் பகுதி 9

அதிரைநிருபர் பதிப்பகம் | April 27, 2013 | , , ,

மண்ணில் என்ன  தோன்றக்கூடும் 
மழை இல்லாதபோது 
மனிதனோ மிருகமோ 
தாயில்லாமல் ஏது?

“பாலினை நினைந்தூட்டும் தாயினை” என்று தொடங்கும்  ஒரு தமிழ்ப் பாடல் உண்டு. பெற்ற பிள்ளைக்கு எப்போது பசிக்கும் என்று வாயில்லாத குழந்தை சொல்ல முடியாத தருணத்தை தானே உணர்ந்து பாலூட்ட ஓடிவருபவள் தாய் என்று சுட்டிக்காட்டுவதற்காகவே அந்த  வார்த்தைகள். 

பசியால் துடித்த தனது  குழந்தைகளின் வறுமையைக் காணச் சகிக்காத தாய் ஒருத்தி தான் பெற்ற ஏழு குழந்தைகளையும் கிணற்றில் வீசி எரிந்து கொன்றுவிட்டு தானும் தன் வாழ்வை  முடித்துக் கொண்டதாக நல்ல தங்காள் கதை சொல்கிறது.  பெண் பிள்ளை பிறந்தால் கள்ளிப் பாலை ஊற்றி சாகடித்ததாக சில கரிசல்காட்டுக் கருத்தம்மா காவியங்கள் சில காலத்துக்கு முன்பு ஊடகங்களில் ஒளிபரப்பாயின.

 உடலின் பசிக்காய் உறவில் திளைத்துக் 
குடலிற் கருவைக் குவித்து வளர்த்துப்
பத்துத் திங்கள் பாரம் தாங்கிப்
பெற்றபின் பெற்றது பெண்மக வெனிலோ
அள்ளிப் பாலை அளிக்காது
கள்ளிப் பாலைக் கருதிக் கொடுப்பரே!

இப்படி சில இயல்பான தாய்மைக்கு எதிர்மறையான தாய்களை  இக்காலம் சொல்லிக் காட்டுகிறது. குப்பைத் தொட்டிகளில் குழந்தைகள் என்கிற தலைப்புச் செய்திகள் வறுமைக்கு,  தாய்மையையும் வெல்லும் சக்தி உண்டென பறைசாற்றுகின்றன.  

அதே போல் ஒரு எதிர்மறையான தாயின் வரலாறு இதோ ஒரு வகை கெட்ட தாயானாலும் அவள் வார்த்தையின் வலிமையை  சுட்டிக் காட்டுவதற்காகவும் நல்லவையே வாழும் அல்லவைகள் அழியும் என்று நிலைநிறுத்தவும்  புகாரியிலே ஒரு வரலாறு சொல்லப் படுகிறது. 

பனூ இஸ்ராயில் சமுதாயத்தைச் சேர்ந்த ஜூரைஜ் என்ற ஒரு மனிதர் எந்நேரமும் இறைவனையே தொழுது கொண்டிருந்தார். அதிலேயே ஆனந்தம்  கண்டார். அப்படித் தொழுவதர்காகவே ஒரு ஆசிரமும் அமைத்து இருந்தார். ஒருநாள் தன் மகன் தொழுது கொண்டிருந்ததைப் பாரதத்  அவரது தாயார் ஜூரைஜை பெயர் சொல்லி அழைத்தார். ஆனால் தொழுகையில் இருந்த ஜூரைஜ் தன் தாய்க்கு பதில் கூற மறுத்துவிட்டார். “ நான் ஏன் தாய்க்கு பதில் அளிப்பதா அல்லது தொழுவதா?” என்று மனதிற்குள் கேள்வி எழுப்பிக் கொண்டார். பெற்ற தாயாகிய தான் அழைத்தும் பதில் அளிக்காத மகன் மீது தாய்க்குக் கோபம வந்தது. அந்தக் கோபத்தில் “ இறைவா! விபச்சாரி ஒருவளின் முகத்தில் இவன் விழிக்கிற வரை என்  மகனுக்கு நீ  மரணத்தைத் தாராதே !” என்று வேண்டினாள்; சாபமிட்டாள். 

ஒருநாள் ஜூரைஜ் தனது ஆசிரமத்தில் இருந்தார். அப்போது ஒரு பெண், நான் இவரை நிச்சயம் சோதனைக்குள்ளாக்குவேன்என்று கூறி உள்ளே  நுழைந்து அவருடன் தகாத உறவு கொள்ள அழைத்துப் பேச முயன்றாள் ; முனைந்தாள் .அவர் இணங்க மறுத்துவிட்டார். ஆகவே, அவள் ஊர் ஆடுமேய்ப்பவனிடம் சென்று அவனிடம் தன்னை ஒப்படைத்தாள். அதன் காரணமாக் ஓர் ஆண்குழந்தையை பெற்றெடுத்தாள். 

இவ்விதம் பிறந்த குழந்தையை ஊரார் மத்தியில் கொண்டுவந்து பொய்யாக இந்தக் குழந்தை ஜூரைஜூக்குப் பிறந்தது என்று கூறினாள். இவளது இந்த பொய்யை உண்மை என்று நம்பிய மக்கள் வெகுண்டெழுந்து அவரது ஆசிரமத்தை தகர்த்து உடைத்து அவரை இழிவாகப் பேசினார்கள். 

இதன்பின் ஜூரைஜ் இதனை இறைவனிடம் முறையிடவேண்டுமென்று உளூச் செய்து தொழுதார். தொழுத கையோடு தனக்கு பிறந்ததாக பழி சொல்லப்பட்ட  பச்சிளங் குழந்தையிடம் வந்தார். குழந்தையை நோக்கி “ உண்மையில் நீ யாருடைய குழந்தை ? என்று கேட்டார். அந்தக் குழந்தை வாய் திறந்து பேசியது “ நான் ஒரு ஆடுமேய்ப்பவனுக்குப் பிறந்த குழந்தை. நீங்கள் என் தகப்பன் என்பது தவறு  ” என்று கூறியது. மக்கள் மனம் திருந்தினர். 

ஒரு இயல்புக்கு மாறான எதிர்மறையான தாய் இடும் சாபம் பலிக்காது என்பதற்கு இது உதாரணம். தாய்மை ஒரு மென்மையாக இருக்கும்வரைதான்  அதற்கு மேன்மை என்பதற்கு இந்நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு. .( புகாரி பாகம் 3 / 2482 )          

சுலைமான் நபி அவர்களின் அரசவையிலே வந்த ஒரு வழக்கும் அதற்கான தீர்ப்பும் வரலாற்றின் ஏடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை.  

இரண்டு பெண்கள் ஒரு பெரிய பிரச்சினையைத் தீர்க்க  சுலைமான் நபி அவர்களிடம்  வருகிறார்கள். அவர்களில் ஒருத்தி சொல்கிறாள்: ‘இவளும் நானும் ஒரே வீட்டில் வசிக்கிறோம், எனக்கு ஒரு மகன் பிறந்தான், இரண்டு நாட்களுக்குப் பிறகு அவளுக்கும் ஒரு மகன் பிறந்தான். ஆனால் ஒரு ராத்திரி அவளுடைய குழந்தை இறந்துவிட்டது. அதனால், நான் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் செத்த குழந்தையை என் பக்கத்தில் வைத்து விட்டு என்னுடைய குழந்தையை அவள் எடுத்துக்கொண்டு போய்விட்டாள். நான் தூங்கியெழுந்தபோது என் பக்கத்தில் செத்த குழந்தையைப் பார்த்தேன், பார்த்ததுமே அது என் குழந்தை அல்ல என்பது எனக்குத் தெரிந்தது’ என்கிறாள்.

உடனே இன்னொருத்தி: ‘இல்லை! இல்லை! உயிரோடுள்ள குழந்தை என்னுடையது, செத்த குழந்தைதான் அவளுடையது!’ என்று சொல்கிறாள். ஆனால் அந்த முதல் பெண்: ‘இல்லவே இல்லை! செத்த குழந்தை உன்னுடையது, உயிரோடுள்ள குழந்தை என்னுடையது!’ என்று சொல்கிறாள். இப்படியே அந்த இரு பெண்களும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். நபி சுலைமான் என்ன செய்யப் போகிறார்? இரு தாய்களுக்குள் உரிமைப் போராட்டம். 

ஒரு கூர் வாளை கொண்டுவரச்  சொல்கிறார். அதைக் கொண்டு வந்ததும் ‘உயிரோடுள்ள குழந்தையை இரண்டாக வெட்டி ஆளுக்குப் பாதியாக இந்தப் பெண்களிடம் கொடுத்துவிடு’ என்று சொல்கிறார்.

உடனடியாக அந்த உண்மையான தாய்,  ‘ஐயோ, வேண்டாம்! தயவுசெய்து குழந்தையைக் கொல்ல வேண்டாம். அவளுக்கே கொடுத்துவிடுங்கள்’ என்று சொல்லி அழுகிறாள். ஆனால் இன்னொருத்தியோ ,  ‘எங்கள் இரண்டு பேருக்குமே அந்தக் குழந்தையைக் கொடுக்க வேண்டாம்; அதை இரண்டு துண்டாக வெட்டிப் போடுங்கள்’ என்று தீர்ப்புக்கு சம்மதிக்கிறாள். 

அவர்கள் பேசி முடித்ததும்  சுலைமான் நபி   அவர்கள் பேசுகிறார்: ‘குழந்தையைக் கொல்லாதே! . அந்த முதல் பெண்ணிடம் கொடுத்துவிடு! . அவள்தான் அந்தக் குழந்தையின் உண்மையான தாய்’ என்று சொல்கிறார். உண்மையான தாய் குழந்தையின் மீது உயிரையே வைத்திருக்கிறாள், எங்கே யாரிடம்  இருந்தாலும் தன் குழந்தை உயிருடன் நலமுடன்  இருந்தால் போதுமென்று நினைக்கிறாள் உண்மையான தாய். அதனால் குழந்தையைக் கொன்றுவிடக் கூடாது என்பதற்காக மற்றவளிடமே கொடுத்துவிடும்படி சொல்கிறாள்; இதை வைத்துத்தான் சுலைமான் நபி அவர்கள்  உண்மையான தாய் யார் என்பதைத் தெரிந்துகொள்கிறார். 

ஒரு உருவகக் கதை இருக்கிறது..

ஒரு தாயின் திருவயிற்றில் குடியிருந்த ஒரு குழந்தையிடம் நீ நாளை பூமியை தரிசிக்கப் போகிறாய் என்று இறைவன் சொன்னான். .

குழந்தை அழுதுகொண்டே கேட்டது. நான் எப்படி அவர்களோடு பேசுவேன்?

உனக்கு பேச்சைக் கற்பிப்பதற்காக ஒரு தேவதையை நான் ஏற்கனவே அனுப்பி வைத்திருக்கிறேன் என்றான் இறைவன். 

நான் எப்படி உங்களை வணங்குவேன்?

அந்த தேவதை உனக்குச் சொல்லித் தருவாள்.

நான் நல்லனவற்றை எப்படிக் கற்றுக் கொள்வேன் ?

அதையும் அந்த தேவதையே உனக்குக் கற்றுத் தருவாள்.

நான் துன்பப்படும்போது என்ன செய்வேன்?

அந்த தேவதை உன் அருகிருப்பாள். துன்பம் தீர்ப்பாள்.

நான் எப்படி அந்த தேவதையைக் கண்டு கொள்வேன்?

பூமியில் அந்த தேவதையின் பெயர் உம்மா /அம்மா.

ஒரு நல்ல வெயில் காலம். ஒருவன் வேலை தேடி நேர்காணலுக்குப் போய் களைத்துப்போய் வீட்டுக்கு வருகிறான். 

அப்பா கேட்கிறார் “வேலை கிடைத்ததா?”

தம்பி கேட்கிறான் “எவ்வளவு சம்பளம்?”

தங்கை கேட்கிறாள் “ட்ரான்ஸ்போர்ட் உண்டா?”

அக்கா கேட்கிறாள் “போனஸ் உண்டா?” 

வியர்வை வழியும் அவன் முகத்தை தனது புடவைத்தலைப்பால் துடைத்துவிட்டு அவனுக்கு குடிக்க குளிர்ந்த தண்ணீர் தந்து தாய் கேட்கிறாள் “சாப்பிட்டியா?”

சுகமான சுமையை 
இடம் மாற்றினாள் 
தாய்...
பிரசவத்துக்குப் பின் 
வயிற்றில் இருந்து 
இதயத்துக்கு. 

கட்டுரை நிறைவடைகிறது. தாய்மை நிறைவடையாது. மீண்டும் சிந்திப்போம்.; சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்.   

முத்துப் பேட்டை P. பகுருதீன்.B.Sc.,

கடன் அட்டை - கிரடிட் கார்டு - வரமா ? சாபமா ? - விவாதக்களம்...! 46

அதிரைநிருபர் பதிப்பகம் | April 26, 2013 | , , , , ,


கடன் அன்பை முறிக்கும் ! இன்னும் ஒரு படி மேலே போய் எலும்பையும் முறிக்கும் என்று சொல்லிய காலம் மருவி இப்போது, கடன் அட்டைகள் இல்லாத சட்டைப் பைகள் இல்லை என்று சொல்லுமளவுக்கு அதன் தாக்கம் அதிகம் என்றால் மிகையில்லை !

கடன் அட்டையினை தானாக வந்து வாசல் தட்டி கொடுத்து விட்டுச் சென்று பின்னர் தடியர்களோடு வந்து வாசல் தட்டி இழுத்துச் செல்லும் சோகமும் உண்டு. தானாக வந்தாலும் தள்ளியே இருக்கச் சொல்லி அதிலிருந்து ஒரு துளிகூட எங்களை நெருங்க வேண்டாம் என்று சொல்லும் ரகமும் உண்டு.

அவர்/அவன் எடுத்தான் அதனால்தான் நானும் எடுத்தேன் ஒரு கடன் அட்டை மட்டும்தான், அதனை அடைக்க மற்றொன்று எடுத்தேன் இப்படியாக புலம்பல்களும் கண்டிருக்கிறோம் கேட்டிருக்கிறோம்.

கடன் அட்டைகள் அவரவர்களின் தேவைகளுக்கு ஏற்ப அதனை முறையாக பயனாளிகளால் கையாளத் தெரிந்தவர்கள் அதனைப் பயன்படுத்தியும் வருகின்றனர். எப்படி அது சாத்தியம் என்று கேட்டால் திட்டமிடல், அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பயன்படுத்துதல் என்று அளவாக சொல்லி விடுகின்றனர்.

கடன் அட்டையா? (அதாங்க கிரடிட் கார்டு) அப்படின்னா என்ன என்று கேட்டவர்களும் நம்மிடையே இன்றளவும் இருக்கிறார்கள் !

சரி ! அனுபவத்தினூடே கருத்தாடல் செய்வோமா ! நீங்கள் எந்த ரகம் !? உங்களைச் சார்ந்தவர்களுக்கு இது சாபமா ? வரமா ? 

வேண்டுமா ? வேண்டாமா ? (கடன் வாங்கலாம் வாங்க...! என்ற தொடர் பதிவையும் ஒரக்கண்ணால் பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்).

விவாதிக்கலாமே !

அதிரைநிருபர் பதிப்பகம்

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 36 7

அதிரைநிருபர் பதிப்பகம் | April 26, 2013 | ,


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!

கஞ்சத்தனம் கூடாது:

அல்லாஹ் கூறுகிறான்:

யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற்றவராகத் தன்னை கருதி, நல்லதை நம்ப மறுக்கிறாரோ, சிரமமானதற்கு அவருக்கு வழியை ஏற்படுத்துவோம். அவன் விழும் போது அவனது செல்வம் அவனைக் காக்காது. (அல்குர்ஆன்:  92:8 -11)

தனது உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோர் தான் வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன்: 64: 16)

'அநீதம் செய்வதை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அநீதம் செய்வது, மறுமை நாளின் இருள்களாகும். கஞ்சத்தனத்தை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக கஞ்சத்தனம், உங்களுக்கு முன் இருந்தோரை அழித்து விட்டது. அவர்கள் (கொலை மூலம்) தங்களின்  ரத்தத்தை ஓட்டிக் கொள்ளவும், தங்களுக்குத் தடை செய்யப்பட்டதை ஆகுமாக்கிக் கொள்ளவும் அவர்களை அது தூண்டி விட்டது'' என்று நபி (ஸல்)கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 563)

அர்ப்பணம் செய்தல், துயர் போக்குதல்:

அல்லாஹ் கூறுகிறான்:

தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன்: 59:9)

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். (அல்குர்ஆன்: 76:8)

'நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'நான் பசியாக உள்ளேன் என்று' கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் தன் மனைவியரில் ஒருவரிடம் ஆள் அனுப்பினார்கள். ''உங்களை சத்தியம் மூலம் அனுப்பியவன் மீது சத்தியமாக, என்னிடம் தண்ணீர் தவிர வேறு இல்லை' என்று அவர்களின் மனைவி கூறினார். பின்பு மற்றொரு மனைவியிடம் அனுப்பினார்கள். அதுபோலவே அவர்களும் கூறினார்கள். ''சத்தியத்தின் மூலம் உங்களை அனுப்பியவன் மீது சத்தியமாக, தண்ணீர் தவிர என்னிடம் எதுவும் இல்லை' என்றே (அவர்கள் மனைவியர்) அனைவரும் கூறினர். ''இன்றைய இரவு (இவரை) விருந்தாளியாக்கிக் கொள்பவர் யார்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அன்சாரிகளில் ஒருவர், ''இறைத்தூதர் அவர்களே! நான் (ஏற்கிறேன்)'' என்று கூறிவிட்டு, தன் வீட்டிற்குச் சென்றார். தன் மனைவியிடம், 'நபி(ஸல்) அவர்களின் விருந்தாளியை நீ கண்ணியப்படுத்துவாயாக!' என்று கூறினார்.

மற்றொரு அறிவிப்பில் கீழ்க்கண்டவாறு உள்ளது:

அவர் தன் மனைவியிடம், ''உன்னிடம் எதுவும் உள்ளதா?'' என்று கேட்டார்.

''என் குழந்தைகளுக்குரிய உணவைத்தவிர வேறு இல்லை'' என்று அவர் மனைவி கூறினார். ஏதேனும் அவர்களுக்கு தந்திரம் செய்து அவர்கள் இரவு உணவைக் கேட்டால், அவர்களை தூங்கச் செய்வாயாக! நம் விருந்தாளி வந்ததும், விளக்கை நீ அணைத்து விடு! நாம் சாப்பிடுவது போல் அவரிடம் காட்டிக் கொள்வோம் என்று கூறினார். (அவர் வந்ததும்) அவர்கள் உட்கார்ந்தார்கள். விருந்தாளி சாப்பிட்டார். இருவரும் பசியாகவே இரவைக் கழித்தார்கள். காலை நேரம் வந்ததும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றார். அவரிடம், ''இரவு உங்கள் விருந்து மூலம் உங்களிருவரின் விருந்தாளியிடம் நடந்து கொண்டது குறித்து அல்லாஹ் மகிழ்ச்சி அடைந்துவிட்டான்''  என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 564)

அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:

 ' இருவரின் உணவு, மூன்று பேருக்குப் போதும், மூன்று பேர் உணவு, நான்கு பேருக்குப் போதும்.'' என்று நபி (ஸல்)கூறினார்கள்.(புகாரி,முஸ்லிம்)

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில்:

ஜாபிர்(ரலி) அறிவிக்கின்றார்கள்:

''ஒருவரின் உணவு, இரண்டு பேருக்கு போதும், இரண்டு பேர் உணவு, நான்கு பேருக்குப் போதும். நான்கு பேர் உணவு எட்டுப்பேருக்கு போதும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஜாபிர்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 565)

'நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்த போது, தனக்குரிய வாகனத்தில் ஒருவர் வந்தார். அவர் தன் பார்வையை வலப்புறமும், இடப்புறமும் திருப்பிக் கொண்டிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ''ஒருவரிடம் வாகனத்தின் முதுகில் மேல் மிச்சமாக இடம் இருந்தால், வாகனமில்லாத ஒருவனுக்கு  அதை அவர் கொடுக்கட்டும்! பயண உணவில் மேல் மிச்சமாக ஒருவரிடம் இருந்தால், பயண உணவு இல்லாதவருக்கு அதைக் கொடுக்கட்டும்! என்று கூறினார்கள்.  இவ்வாறு பல பொருட்களையும் வகையிட்டுக் கூறினார்கள். ''மேல் மிச்சம் எதுவும் எங்களில் எவரிடமும் இருக்க அனுமதி இல்லை'' என நாங்கள் எண்ணும் அளவுக்குக் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 566)

சரியான வழியில் சம்பாதித்து, சரியான வழியில் செலவு செய்கின்ற நன்றியுள்ள பணக்காரரின் சிறப்பு:

யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மைப் படுத்துகிறாரோ அவருக்கு  வசதிக்குரிய வழியை எளிதாக்குவோம். (அல்குர்ஆன்: 92:5-7)

இறையச்சமுடையவர் (நரகிலிருந்து) அதிலிருந்து விலக்கப்படுவார். அவர் தனது செல்வத்தை வழங்கி தூய்மையடைந்தவர். மிக உயர்ந்த தன் இறைவனின் முகத்தைத் தேடுவது தவிர திருப்பிச் செலுத்தப்படும் எந்த நன்றிக் கடனும் எவரிடமும் அவருக்கு இருக்காது. அவர் திருப்தியடைவார். (அல்குர்ஆன்: 92:17-21) 

தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது.  உங்கள் தீமைகளுக்கு (இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 2:271)

நீங்கள் விரும்புவதை (நல் வழியில்) செலவிடாத வரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள். நீங்கள் எப்பொருளை (நல் வழியில்) செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன். (அல்குர்ஆன்: 3:92)

இரண்டு பேர்கள் விஷயத்தில் தவிர பொறாமை என்பதில்லை. (1) அல்லாஹ் ஒரு மனிதருக்கு செல்வத்தை வழங்கி உள்ளான். அதை அவர் சத்திய வழியில் செலவு செய்கிறார். (2) அல்லாஹ் ஒருவருக்கு அறிவை வழங்கி உள்ளான். அவர் அதன் மூலம் தீர்ப்பும் வழங்கி, (பிறருக்கு) கற்றும் கொடுக்கிறார். (இந்த இருவர் மீதும் பொறாமை கொள்ளலாம்) என நபி (ஸல்)கூறினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)  அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 571)

இருவரின் விஷயத்திலே தவிர பொறாமை என்பதில்லை. (1) ஒருவருக்கு அல்லாஹ் குர்ஆனை (ப்பற்றிய அறிவை) தந்துள்ளான். அவர் அதை இரவிலும் பகலிலும் ஓதுகிறார். (2) ஒருவருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கி உள்ளான். அவர் அதை இரவிலும், பகலிலும் செலவு செய்கிறார் (இந்த இருவர் மீதும் பொறாமை கொள்ளலாம்)'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 572)

முஹாஜிர்களில் உள்ள ஏழைகள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். ''பணக்காரர்கள், உயர்ந்த தகுதிகளையும், நிலையான சொர்க்கத்தையும் பெற்றுக் கொண்டார்கள்'' என்று கூறினார்கள். ‘'ஏன் அப்படி?’’ என நபி(ஸல்) கேட்டார்கள். ‘’நாங்கள் தொழுவது போலவே அவர்களும் தொழுகிறார்கள். நாங்கள் நோன்பு வைப்பது போலவே அவர்களும் நோன்பு வைக்கிறார்கள். அவர்கள் தர்மம் செய்கிறார்கள். நாங்கள் தர்மம் வழங்குவதில்லை. அவர்கள் அடிமைகளை விடுதலை செய்கிறார்கள். நாங்கள் விடுதலை செய்வதில்லை’’ என்று வந்த ஏழைகள் கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் ‘’உங்களுக்கு முந்தி விட்டவர்களை நீங்கள் அடைந்து கொள்கின்ற, உங்களுக்குப் பின் வருவோரை நீங்கள் முந்துகின்ற ஒரு செயலை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?  நீங்கள் செய்வது போல் ஒருவர் செய்தாலே தவிர எவரும் உங்களை விடச் சிறந்தவராக ஆக முடியாது’’ என்று கூறினார்கள். உடனே அவர்கள் ‘’இறைத்தூதர் அவர்களே! சரி’’ என்றார்கள். ‘’நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் 33 தடவை சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர்  கூறுங்கள்’’ என்று நபி(ஸல்) கூறினார்கள். முஹாஜிர்களில் உள்ள ஏழைகள், நபி(ஸல்) அவர்களிடம் மீண்டும் வந்து, ‘’எங்களின் (பணக்கார) சகோதரர்கள் எங்களின் செயல்களை கேள்விப்பட்டு அது போன்றே அவர்களும் செய்கிறார்கள்’’ என்று கூறினார்கள். ‘’அது அல்லாஹ் தான் விரும்பியோருக்குத் தருகின்ற அருட்கொடையாகும்’’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 573)

"ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் - தொடர் - 4 9

அதிரைநிருபர் பதிப்பகம் | April 25, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அல்லாஹ்வுக்கே எல்லா புகழும், சென்ற பதிவில் சகோதரர் தஸ்தகீர் (crown) சொனதுபோல் இந்தத் தொடர் நம் மனதில் உள்ள அழுக்கை நீக்கும் என்று நம்பலாம்.

அல்லாஹ்வுக்காவும், அவனின் தூதர்  முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்காகவும் கண்ணீர் சிந்திய மக்களின் வரலாறுகளை அதிகமதிகம் படித்து நாமெல்லாம் படிப்பினை பெற வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் தம் சிறு வயதில் தன் தந்தையை இழந்து, பிறகு தன் தாயையும் இழந்து, அனாதையாகி யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என்பதற்காக ஆடு மேய்த்து, குரைசிகளிடம் காய்ந்த பேரித்தம்பழங்களுக்காக(உணவுக்காக) வேலைபார்த்து அப்துல் முத்தலீப் அவர்களுடன் 8 வயதில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அப்துல் முத்தலீப் அவர்களையும் இழந்து.  அந்த 8 வயது காலகட்டத்திலிருந்து அபூதாலிப் அவர்களுடன் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் நபி(ஸல்) அவர்கள்.

தன்னுடைய பெரிய தந்தை அபூதாலிபுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அபூதாலிப் எல்லா உபகாரமும் நபி(ஸல்) அவர்களுக்கு செய்தார், நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யும் போது எல்லாவிதமான உதவிகளும் செய்தார். ஆனால் தன்னுடைய மரண நேரத்தில் இஸ்லாத்தை தழுவாமல் இறந்துவிட்டார்.

அபூதாலிப் வாழ்நாளில் நபி(ஸல்) அவர்களுக்கு செய்த உபகாரம் நபி அவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை. கலிமா சொல்லாமல் மரணிக்கப்போகிறாறே தன்னுடைய பெரிய தந்தை. லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தையை மட்டும் சொன்னால் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காக மன்றாடுவேனே என் பெரிய தந்தையே என்று அழுது அழுது கெஞ்சிக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள் நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய பெரிய தந்தை அபூதாலிபின் மரண நேரத்தில்.

அந்த நேரத்தில் அல்லாஹ் பின் வரும் இறைவசனம் அல்லாஹ்விடமிருந்து இறங்கும் அளவுக்கு நபி(ஸல்) அவர்கள் அழுதார்கள் என்று (புகாரி 1360) ஹதீஸ் தொகுப்புகளில் காண்கிறோம்.

 مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَن يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولِي قُرْبَىٰ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الْجَحِيمِ

முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல. அல் குர் ஆன் (9:113)

கலிமா சொல்லாமல் ஒருவர் மரணித்தால், அவர் எங்கு செல்வார் என்பதை அல்லாஹ் தன் தூதர்களுக்கு விளக்கியிருந்தான், அந்த கொடிய நிலை தன்னை வளர்த்து, பாசம் காட்டி, வாழ்வில் பேருதவியாக இருந்த தன்னுடைய பெரிய தந்தைக்கு வரப்போகிறதே என்று நினைத்து நினைத்து நபி(ஸல்) அவர்கள் அழுதுள்ளார்கள் என்பதை நாம் வரலாறுகளில் காணமுடிகிறது.

இது போல் மற்றுமொரு உருக்கமான சம்பவம் நம் இஸ்லாமிய வரலாற்றில் முத்திரை பதித்தவை.

மக்கா வெற்றிக்கு பிறகு நபித்தோழர்கள் ஆனந்தக் கண்ணீருடன் உற்சாகமாக இருந்த காலகட்டத்தில், நபி(ஸல்) அவர்களின் சபைக்கு வயது முதிர்ந்த ஒரு பெரியவரை இருவர் அழைத்து வருகிறார்கள். “யார் அந்த பெரியவர்?" என்று நபி(ஸல்) அவர்க கேட்டார்கள், அவர் அபூபக்கர்(ரலி) அவர்களின் தகப்பனார் என்று கூறப்பட்டது.

நம்முடைய நபி(ஸல்) அவர்கள் பண்பை பாருங்கள், அபூபக்கர் தன்னுடைய பாசமான மாமனார் அல்லவா, தன்னுடைய மூத்த தோழர் அல்லவா. அந்த முதியவர் அபூபக்கர்(ரலி) அவர்களின் தந்தையாவார்.

“இந்த வயது முதிர்ந்த முதியவரை இவ்வளவு சிரமப்பட்டு இங்கு ஏன் கொண்டுவந்தீர்கள், சொல்லியனுப்பிருந்தால் நான் அவர் இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்திருப்பேனே” என்று அபூபக்கர்(ரலி) அவர்களிடம் அன்பாக வினவினார்கள். 

“யா ரசூலுல்லாஹ் எனது தந்தைக்கு இஸ்லாத்தை சொல்லிக்கொடுங்கள்” என்று அபூபக்கர்(ரலி) சொன்னார்கள்.

உடனே நபி(ஸல்) அவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்களின் தந்தைக்கு இஸ்லாத்தை சொல்லிக்கொடுக்க, அவரும் இஸ்லாத்தை ஏற்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்து, நபி(ஸல்) அவர்களுடைய கையை நீட்ட சொல்லி தன்னுடைய கையை நபியவர்களின் கையின் மேல் வைத்தார்.

உடனே அபூபக்கர்(ரலி) அவர்கள் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தார்கள். “தந்தை இஸ்லாத்தை தழுவிய இந்த சந்தோசமான தருணத்தில் ஏன் அபூபக்கர்(ரலி) அவர்கள் அழுகிறார்கள்” என்று அருகில் இருந்த தோழர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. 

அப்போது அபூபக்கர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களை பார்த்து “ யா ரஸூலுல்லாஹ் நான் ஏன் அழுகிறேன் தெரியுமா? உங்களுடைய கைக்கு மேல் இப்போது என்னுடைய தந்தையுடைய கை இருக்கிறது இஸ்லாத்தை தழுவுவதற்காக, ஆனால் உங்களுடைய கைக்கு மேல் உங்களை வளர்த்து ஆளாக்கி, வாழ்நாட்களில் எல்லா வகையான உதவிகள் செய்த உங்கள் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களுடைய கை இருந்து, அதை பார்த்து உங்கள் கண்களில் ஆனந்த கண்ணீர் வருமே அதை பார்க்கிற வாய்ப்பு எனக்கு இல்லாமல் போயிவிட்டதை நினைத்து அழுகிறேன் யா ரஸூலுல்லாஹ், என்னுடைய தந்தை இஸ்லாத்தை தழுவுவதை காட்டிலும் உங்களுடைய பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் இஸ்லாத்தை தழுவியிருக்க வேண்டும் யா ரஸூலுல்லாஹ்” என்று சொன்னார்கள் அபூபக்கர்(ரழி) அவர்கள்.

நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் இஸ்லாத்தை தழுவியிருக்க வேண்டுமே என்று அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களும் அழுதிருக்கிறார்கள், ஆனால் எவ்வளவு தான் இஸ்லாத்திற்காக என்னற்ற உதவிகள் பல செய்தாலும் அல்லாஹ் இணைவைப்புடன் யார் மரணித்தாலும் அவர்களுக்கு நிரந்தர நரகம், அவர்களுக்காக நாம் பாவமன்னிப்பு கேட்பதை அல்லாஹ் தடுத்துள்ளான்.

மேல் சொன்ன வரலாற்று சம்பவங்களிலிருந்து நாம் படிப்பினைபெற வேண்டியது என்னவென்றால், அல்லாஹ் தான் மன்னிக்க மாட்டேன் என்று சொல்லும் பாவம், நபி(ஸல்) அவர்களாலேயே அவர்களை வளர்த்து ஆளாக்கி இஸ்லாத்திற்காகவும், நபி(ஸல்) அவர்களின் ஏகத்துவ பிரச்சாரத்திற்காகவும் எண்ணிலடங்கா உதவிகள் செய்த தன்னுடைய பெரிய தந்தை அபூதாலிப் அவர்களுக்கு மன்னிப்பு வாங்கி கொடுக்க முடியவில்லை என்ற நிலைக்கான காரணம் அல்லாஹ்வுக்கு அபூதாலிப் அவர்கள் இணைவைத்தது மட்டுமே.

நம்முடைய சொந்தங்கள் எத்தனையோ பேர் உயிரோடு இருக்கும்போது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்றார்களே, அவர்களை அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் காரியங்களில் இருந்து மீட்டெடுப்பதற்காக என்றைக்காவது நாம் அல்லாஹ்விடம் அழுது துஆ செய்திருக்கிறோமா? 

இணைவைப்பில் ஈடுபடும், பெற்றோர்கள், பிள்ளைகள், சொந்தங்கள், நண்பர்களை அக்காரியங்களிலிருந்து விடுபட வைக்கும் வேலைகளை கவலையுடன் நாம் செய்திருக்கிறோமா? அதற்காக அல்லாஹ்விடம் இறைஞ்சி அழுதிருக்கிறோமா? 

நம்மோடு பாசமாக இருக்கும் சொந்தங்கள் அல்லாஹ் மன்னிக்கவே மாட்டேன் என்று சொல்லும் இணைவைப்பு பாவத்துடன் மரணித்தால் அவர்களுக்காக நாம் என்ன துஆ செய்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்படாது என்பதற்கு மேல் சொன்ன குர் ஆன் வசனம் (9:113) சாட்சியாக உள்ளதே அதை நினைத்து அழுதிருக்கிறோமா?

நம்முடைய தாய், தந்தை, மனைவி, கணவர், பிள்ளைகள், சகோதர சகோதரிகள், சொந்தங்கள், நண்பர்கள் தொழாவிட்டால் அழுதிருக்கிறோமா?

நம்முடைய தாய், தந்தை, மனைவி, கணவர், பிள்ளைகள், சகோதர சகோதரிகள், சொந்தங்கள், நண்பர்கள் இணை வைப்போடு மரணித்தால், நரகத்தின் அடித்தட்டிற்கு தள்ளப்படுவார்களே என்று நினைத்து அழுதிருக்கிறோமா?

இந்த வார உறுதி மொழி:

இணைவைப்பு மவ்லிது மஜ்லிஸ் மற்றும் தர்கா போன்ற இடங்களுக்கு செல்லும் நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு நளினமான முறையில் இணைவைப்பினால் ஏற்படும் தீமையை எடுத்துரைப்போம், அவர்களை இணைவைப்பு காரியங்களிலிருந்து மீட்டெடுப்போம். இது நம் எல்லோருக்கும் இறைவனால் விதிக்கப்பட்ட கட்டளை.

வல்ல அல்லாஹ் அதற்காக நம் எல்லோருக்கும் துனை புரிவானாக.

M. தாஜுதீன்

நயவஞ்சகத்திற்கு – பகிரங்க எச்சரிக்கை ! 86

அதிரைநிருபர் பதிப்பகம் | April 24, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அதிரைக்கென்று இருந்த பாரம்பரியம், கம்பீரம், மார்க்கப் பற்றில் இருந்த பிடிப்பு, அதற்கென்று கட்டுண்டு இறையச்சத்தைப் பேணுபவர்கள் என்ற தகுதிகளைத் தகர்த்தெரியப் புறப்பட்டிருக்கும் நயவஞ்சகச் செயல்களுக்கு பகிரங்க எச்சரிக்கையாக இந்த பதிவு. இஸ்லாமிய மார்க்கத்துக்கு விரோதமாக நம்முடைய சகோதரர்கள் சிலர் தங்களின் சுய விருப்பு வெறுப்புகளுக்காகவும், கவுரவத்திற்காகவும் சத்தியத்தை எடுத்துரைக்கும் மார்க்க பிரச்சாரகர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார்கள். அவர்களின் இந்த சூழ்ச்சிக்கு நமதூருக்கு குடிபெயர்ந்து வந்த ஒரு மார்க்க பிரச்சாரகர் தற்போது இரையாகிவிட்டார்.

ஷிர்க் பித்அத்துக்களைப் பகிரங்கமாகவும், வன்மையாகவும் கண்டித்து எதிர்த்த கண்ணியத்திற்குரிய மர்ஹூம் அலீய் ஆலிம் அவர்கள் வாழும் காலத்தில் ஏளனமாக பேசிய அதே கூட்டம் தான் இன்று இந்த மார்க்க பிரச்சாரகரையும் ஏளனமாக பேசி, அவரை அதிரையை விட்டு விரட்ட முயற்சி செய்கிறார்கள். காரணம், அவர் தர்கா வழிபாடு, இணை வைப்பு, வட்டி, மவுலத்து, தாயத்து, தட்டை போன்ற பிற மத கலாச்சாரங்களை, பித்அத்து அனாச்சாரங்களைப் பகிரங்கமாகக் கண்டித்துது மட்டுமின்றி, எதிர்த்தும் வந்துள்ளார், தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருக்கிறார்.

யார்? எங்கு? எப்போது? என்னவெல்லாம் உரையாடினார்கள், எவ்வளவு பாதகமான காரியங்கள், என்னவெல்லாம் சூழ்ச்சிகள் செய்தார்கள், என்பதை வெளியில் கொண்டு வருவது மிக மிக எளிது என்பதை இவர்கள் அறியவில்லையா ?. மேலும் சூழ்சிக்காரர்களின் அநீதி மிகுந்த வாதங்கள், ரகசிய ஆலோசனைகள் இவற்றை வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தின் உதவியுடன் சத்தியத்துக்கு எதிராக திரளும் இந்தக் கூட்டத்தின் சதிகளை இறையச்சமிக்க மக்கள் முன் வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கான சூழலை உருவாக்குகிறார்கள்.

உண்மையை உரக்கச் சொல்லும் ஆலிமை ஊரைவிட்டு துரத்தும் முயற்சிக்குப் எதிராக பல வகையில் சூழ்ச்சிகள் செய்யப்படுகிறது, சூழ்ச்சிக்காரர்களுக்கு எல்லாம் சூழ்ச்சிக்காரன் அல்லாஹ் ரப்புல் ஆலமீன். சத்திய இஸ்லாத்திற்காக எதிராக சூழ்ச்சி செய்யும் அக்கிரமக்காரர்களை அல்லாஹ் எப்படி இவ்வுலகில் கேவலப்படுத்தி இருக்கிறான் என்ற வரலாற்றை எந்த ஒரு மனிதனாலும் மறுக்க முடியாது.

கடந்த சில வருடங்களாக நமதூர் வாசிகள் அனைவரும் அவதானித்து வருகிறார்கள், குறிப்பிட்ட ஓர் ஆலிம் அவர் வெளியூரிலிருந்து வந்தவர் என்ற காரணத்தாலும், சத்தியத்தை உள்ளது உள்ளபடி உள்ளூரில் இருக்கும் மார்க்க பிரச்சாரகர்கள் பகிரங்கமாக எதிர்க்க, சொல்லத் தயங்கும் விஷயங்களை எடுத்துச் சொல்லி வந்த காரணத்தாலும் அவரை படாதபாடுபடுத்தி வருகிறார்கள் நம் அதிரை மண்ணின் மைந்தர்கள்.

சில மாதங்களுக்கு முன்னர் நடந்த விளக்கம் கேட்கும் அமர்வில் சம்பத்தப்பட்ட மார்க்க பிரச்சாரகரின் மார்க்க சொற்பொழிவில் தவறேதும் இல்லை என்று ஒத்துக் கொண்டவர்கள், தற்போது அதே மார்க்கப் பிரச்சாரகருக்கு எதிராக நிற்பவர்களுக்கு உதவியும், ஊக்கமும் கொடுத்துவரும் நமது சகோதரர்களின் நிலைபாட்டை எந்த வகையில் சேர்ப்பது !?. 

அன்று அவர்களால் எடுத்துரைக்கப்பட்ட விளக்கங்களில் மார்க்க பிரச்சாரம் செய்யும் ஆலிமைப் பற்றி சொன்னது, “ அவரின் பயானில் தவறில்லை”, “அவர் எங்களை அவமதித்தார்”, “பயான் தடை நடவடிக்கை தற்காலிகம் அல்ல”, “அந்த தீர்ப்பை மாற்றவே முடியாது” என்றும். “அவருக்கு மன்னிப்பு கிடையாது”. குறிப்பிட்ட நபரின் மீதான தனிப்பட்ட விரோதமே அந்த மார்க்க பிரச்சாரகரின் மீது நடவடிக்கை எடுக்க காரணம் என்று முரண்பட்ட வார்த்தை சிதறல்கள் ஏராளம் ஏராளம்.

இவர்கள் இன்னும் ஒருபடி மேலேச் சென்று சம்பத்தப்பட்ட மார்க்க பிரச்சாரகரின் சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும், அங்கே அடிதடி ஏற்பட வேண்டும் என்ற சமூக விரோதச் செயலை செய்ய அப்பாவி லெப்பைமார்களை உசுப்பேற்றியது. அதோடு அல்லாமல் அங்கே குளிர் காய நினைக்க முயன்றவர்களின் நயவஞ்சகச் சதித்திட்டங்களையும் அல்லாஹ் கண்கானித்துக் கொண்டிருக்கிறான் என்பதை மறந்த இவர்களின் அன்றைய சூழ்சிக்கு, கீழ்கண்ட செயல்களே சாட்சி.
  • லெப்பைக் குடும்ப சகோதரர்களைத் தூண்டி, ஆலிமுக்கு எதிராக முக்கியமான தெருக்களின் ஜமாத்திற்கு சென்று மனு கொடுக்க வற்புறுத்தல் செய்யப்பட்டிருக்கிறது. 
  • அவர் மார்க்கத்தைப் பற்றி பேச வேண்டாம் என்றும், எங்கள் பிழைப்பில் அடித்துவிட்டார் என்று மற்ற தெரு ஜமாத்துக்களிடம் மனு கொடுங்கள் என்று லெப்பைக் குடும்ப சகோதரர்களுக்கு ஆலோசனை வழங்கியது. 
  • சத்திய பிரச்சாரத்துக்கு எதிராக அரசாங்க உதவியை நாடலாமே என்று யோசனையை லெப்பை மார்கள் வழங்கியது.
  • ஊரில் ஏகப்பட்ட இயக்கங்கள் இருக்கும் போது லெப்பைகளின் நலனுக்காக ஏன் சங்கம் இல்லை? என்று கேள்வி எழுப்பி பிரச்சினையை மேலும் பெரிதாக்க முயன்றது.
  • தக்வா பள்ளியில் நடைபெறும் பயானில் லெப்பைமார்கள் பிரச்சினையை ஏற்படுத்தினால் ஆலிமை ஊரைவிட்டு துரத்திவிடலாம் என்ற யோசனையை முன் வைத்தது. 
  • பிரச்சினை முற்றிப்போய் வெட்டு-குத்து வந்தால் யார் பொறுப்பு என்று அச்சத்துடன் கேட்ட ஒரு லெப்பை சகோதரரிடம், “அதெல்லாம் பயப்படத் தேவையில்லை” என்று தைரியம் சொன்னது.
  • தக்வா முஹல்லாவாசி என்ற பெயரில் தக்வா பள்ளியின் அன்றைய கமிட்டித் தலைவரிடம் “நான் பிரச்சினை செய்வேன்” என்று மிரட்டியது.
மேலே சொல்லப்பட்டவைகள் பதிவுக்கு என்று எழுதப்பட்ட வரிகள் அல்ல அத்தனையும் உண்மை, அவர்கள் அவ்வாறு செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்ளை ஆய்வு செய்த பின்னரே இதனை பொதுவில் வைக்கிறோம்.

அறிந்தோ, அறியாமலோ நம்முடைய சகோதரர்கள் தங்களின் சுயலாபத்திற்காகவும், ஒரு சிலரை பழிவாங்குவதற்காகவும் தூய இஸ்லாமிய நெறிமுறைகளைப் புறந்தள்ளி. சத்தியப் பிரச்சாரம் செய்யும் ஆலிம்களை குறிவைத்து தங்களின் நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார்கள்.

இனியும் ஏகத்துவ சத்திய பிரச்சாரத்துக்கு எதிராக மேலே குறிப்பிட்டுள்ள சம்பவங்களில் தொடர்புடையவர்கள், அவர்கள் செய்ததது தவறு என்று திருந்த வேண்டும். மேலும் மேலும் பிரச்சினை ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

இவர்கள் யார் இதனைச் சொல்ல நாங்கள் இப்படித் தான் இருப்போம். இன்னும் பல சூழ்ச்சிகள் செய்வோம், பழிவாங்குவோம் என்று இன்னும் வீராப்பு காட்டினால், இதுவரை பொறுமையைக் கையாண்டு வரும் சகோதரர்களின் மேலும் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் அதிலும் மேற்குறிப்பிட்ட அனைத்து விடயங்களுக்கான ஆதாரங்களைப் பொதுவில் வைக்கப்படும் என்பதை தெளிவாக எடுத்துரைத்து, இனியும் இவ்வாறான ஈனச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க முயற்சிக்கட்டும் என்றும் பகிரங்க எச்சரிக்கையாகவே இங்கே பதிகிறோம். 

அல்லாஹ்வின் சத்திய மார்க்கம் என்று வந்துவிட்டால், சொந்தங்கள், வீடு, தெரு, ஊர்மக்கள் என்பதெல்லாம் அடுத்தக் கட்டமே. அசத்தியத்துக்கு எதிராக குரல் கொடுப்பதில் நம் பங்கு என்றும் முன்னனியில் இருக்கும். இன்ஷா அல்லாஹ்.

சூழ்ச்சிகள் செய்யும் அன்பர்களே உங்களின் மறைவானவற்றையும், வெளிப்புறங்களையும் அல்லாஹ் கண்காணிக்கிறான், மலக்குமார்கள் கண்காணிக்கிறார்கள், அத்தோடு மனிதனால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

நயவஞ்சக கூட்டத்திற்கு நாளை கபுரிலும் வேதனையுண்டு, மஹ்சரிலும் வேதனையுண்டு, நரகத்தின் அடிதட்டில் நிச்சயம் இடம் உண்டு என்பதையும் நினைவூட்டுகிறோம். 

அல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாப்பானாக.

யா அல்லாஹ் நாங்கள் எல்லோரும் இவ்வுலகின் அற்பமான சுயநலனுக்காக எவ்வளவோ தவறுகள் செய்கிறோம், அதனை மன்னித்து எங்களை நேர்வழி படுத்துவாயாக! 

யா அல்லாஹ் உன்னை மட்டுமே வணங்கும் நன்மக்களாக எங்களை ஆக்குவாயாக!

வேறு எந்த தனிமனிதனின் திருப்திக்காக வாழும் நயவஞ்சகர்களாக எங்களை ஆளாக்கிவிடாதே!

எங்கள் அனைத்து பாவங்களையும் மன்னிப்பாயாக!

அதிரைநிருபர் பதிப்பகம்

இவ்வுலகம் அழிவை நோக்கிச் செல்கிறதா? 19

அதிரைநிருபர் பதிப்பகம் | April 24, 2013 | ,


ஆம்..! அதில் சந்தேகமே இல்லை! இக்காலத்தில் விஞ்ஞானம்  வளர்ந்து கொண்டே இருக்கிறது. விஞ்ஞானம் என்றால் மனிதனின் வாழ்வை மேம்படுத்துவதற்காக அமைதல் வேண்டும் என்பது நமது அசைக்க முடியாத நம்பிக்கை.

விஞ்ஞானம் வளர்வதால் மனிதன் என்னவாகிறான்?

இக்கால விஞ்ஞான உலகம் மனிதனுக்குப் பயனுள்ளதாகவும் இருக்கின்றது, அதனை நாம் யாரும் மறுக்க இயலாது!. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அந்த நஞ்சைப் போல் தான் இவ்வுலகம் மாறிக் கொண்டு இருக்கிறது.

வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகைகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் கழிவுகள், இதனால் நீர்நிலைகள் மாசுபடுவது, ப்ளாஸ்டிக்ஸ் போன்று அன்றாடம் பெருகிக் கொண்டே இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ப்ளாஸ்டிக்ஸ். சாதரணமாக நாம் பரோட்டா வாங்கச் சென்றாலும் சூடான பரோட்டாவை ப்ளாஸ்டிக் பேப்பரில் (நம் ஊரில் பட்டர் கீஸ் என்கிறார்கள்) வைத்து தருகிறார்கள், சால்னாவை எதில் ஊற்றுகிறார்கள்? ப்ளாஸ்டிக் கீஸ்ஸில் தான், சில இடங்களில் பார்க்க முடிகிறது, தேனீர் பார்சல் வாங்குவதற்கு ப்ளாஸ்டிக் பையை பயண்படுத்துகிறார்கள். சும்மாவே ப்ளாஸ்டிக் பயன்படுத்துவது அபாயம் என்கிறார்கள், இதில் சூடானவற்றை அதில் ஊற்றினால்?? இப்படி எங்கு பார்த்தாலும் ப்ளாஸ்டிக் நம்மைச் சூழ்ந்திருக்க புதிது புதிதாக கேன்சர் போன்ற நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றது.அழிவுக்கானவற்றை எல்லாம் மனிதனே உருவாக்க  படைத்தவனை பழிச் சொல்வோர் ஏராளம். சுற்றுச்சூழல் மாசுபாடுகளை அல்லாஹ் ஏற்படுத்துவதில்லை மாறாக மனிதன் ஏற்படுத்துகிறான்.


அல்லாஹ் தனது திருமறையில் கூறுவதாவது

“நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தைச் சுமந்து கொள்ளுமாறு எடுத்துக் காட்டினோம், ஆனால் அதை சுமந்துக்கொள்ள அவை மறுத்தன, அதைப்பற்றி அவை அஞ்சின. (ஆனால்) மனிதன் அதைச் சுமந்தான். நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும் அறிவிலியாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:72.)”

இக்காலத்தில் ஆடையணிதல்:

நியூ ஃபேஷன் என்ற பெயரில் ஆடையணிதலின் நோக்கமே மாறிவிட்டது.மேலை நாடுகளில் பிற மதத்தவர்கள் (ஆண்களும் பெண்களும்) நியூ பேஷன் என்ற பெயரில் உள்ளாடைகள் தெரியுமளவுக்கு உடையணிகிறார்கள். அடுத்தவர்கள் (மேலை நாட்டினர்) என்னச் செய்தாலும் அதனையே பின்பற்றும் உலகமாகவல்லவா மாறிக் கொண்டிருக்கிறது இவ்வுலகம். LowHip Pant, Short Shirt என்று  சீரழிந்துக் கொண்டிருக்கிறது இந்த ஃபேஷன்!!

நமது உயிரிலும் மேலான நம் தலைவர் நபி(ஸல்) அவர்கள் மறுமை நாளின் அடையாளமாக ஆடையணிவது பற்றியும் எச்சரித்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் மறுமை நாளின் அடையாளத்தில் ஒன்றாக கூறியதாவது”பெண்கள் நிர்வாணமாக ஆடையணிந்திருப்பார்கள்”.இது பற்றி நாம் சொல்ல வேண்டியதே இல்லை, தற்போதைய நடைமுறையில் இருந்து வருகின்றது

மது:

மதுவைப் பற்றி இஸ்லாம் கடுமையாக எச்சரித்துள்ளது.ஆனால், இப்போது நடைமுறையில் இருப்பது என்ன தெரியுமா? இஸ்லாமியர்,இஸ்லாமல்லாதவர் என பாகுபாடின்றி மது அருந்தும் பழக்கம் அரங்கேறி வருகிறது.

என்னுடன் பழகியவர்களில் பல இஸ்லாமியர்கள் என்னிடம் கேட்டதுண்டு..

"பாய்!! தண்ணி அடிப்பீங்களா?" 

அதற்கு நான் “இல்லை”…

பிறகு "பீராச்சும்(BEER) அடிப்பீங்களா?" 

அதற்கும் "இல்லை.."

திருப்பி நாம் கேட்டோமானால் வரும் பதில் என்ன தெரியுமா? "தண்ணி அடிக்க மாட்டேன், பீர் மட்டும் எப்பயாச்சும்..."

இந்த கேடுகெட்ட பழக்கம் பெருமளவில் கல்லூரி மாணவர்களிடம் பெருகிக் கொண்டு வரும் மோசமான பழக்கமாக இருக்கிறது.

“மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்”. இன்றைய காலத்தில் இன்னுமொரு பழக்கம் இருந்துவருகிறது,மது அருந்தாதவர் மது அருந்தும் தங்களின் நண்பர்களுடன் சேர்ந்து அவர்கள் வாங்கி வைக்கும் சைட் டிஷ் ஐ சாப்பிடுவதற்காக அவர்களுடன் அந்த சபையில் உட்கார்ந்திருப்பது.நாம் மது அருந்தாவிட்டாலும் அவர்களுடன் உட்க்கார்ந்திருந்தால் அவர்கள் மீது இறங்கும் சாபம் நம் மீது இறங்காதா?

நபி (ஸல்) அவர்கள்:

எனது சமூகத்தில் வேறு பெயர்களை வைத்து மது அருந்துவார்கள், அவர்களது முன்னிலையில் இசைக்கருவிகள் இசைக்கப்படும், பாடல்கள் பாடப்படும். இவர்களை அல்லாஹ் பூமிக்குள் செருகி விடுவான் என்றார்கள். (ஆதாரம் : இப்னு மாஜா)

மேலும் அல்லாஹ் திருமறையில்,

“நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம் மதுபாணத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடம் பகைமையையும் வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களை தடுத்துவிடத்தான் எனவே அவற்றை விட்டும் நிங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?” (அல்குர் ஆன் 5:90,91)

ஏன் இந்த புர்கா?

இஸ்லாம் பெண்களுக்கு “ஹிஜாப்” என்ற பர்தா முறையைக் கடமையாக்கியிருக்கிறது. அதன் மூலம் தங்களின் கற்பைக் காத்துக் கொள்ள ஏவுகிறது.இந்த புர்காவை சில இஸ்லாமியப் பெண்கள் எப்படி அணிகிறார்கள் என தெரியுமா? என் கண் முன்னே சில பெண்கள் புர்கா அணிந்த முறையைப் பார்த்திருக்கிறேன்.தங்களின் உடலை ஒட்டியபடி அமையப்பட்டிருக்கும் நிலையில் இருந்தது.

நபி(ஸல்) அவர்களுடன் ஆயிஷா(ரழி) இருக்கும் போது, அஸ்மா(ரழி) வருகிறார்கள். அப்போது அவர்களது ஆடை மிக மெல்லியதாக (உடல் தெரியும் நிலையில்) இருந்தது. அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் யா அஸ்மா ஒரு பெண் பருவமடைந்து விட்டால் அவளுடைய இந்த, இந்த பாகங்களைத் தவிர மற்றவை வெளியே தெரிவது நல்லதல்ல என்று கூறும் போது அவர்களின் முகத்தையும், மணிக்கட்டு வரையிலான கைகளையும் சுட்டிக் காட்டினார்கள். - ஆயிஸா(ரழி) வாயிலாக, காலித் இப்னு தரீக், அபூதாவூது, அபூஹாத்தம்

இன்னும் சிலர் இருக்கின்றனர் தங்களை இஸ்லாமியப் பெண்கள் என்று காட்டிக் கொள்வதற்காக… புர்கா அணிந்திருப்பார்கள் முக்காடில்லாமல். இன்னும் சிலர் இருக்கின்றனர், அவர்களைப் பார்த்தால் இஸ்லாமியப் பெண் என்றே தெரியாது அவர்களாக சொல்லும் வரை. இதைப் பற்றி அல்லாஹ் திருமறையில் கூறும் போது,

“நபியே! நீர் உம் மனைவிகளுக்கும் உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் கூறும்: அவர்கள் தங்களுடைய துப்பட்டிகளின் முன்றானைகளைத் தொங்க விட்டுக் கொள்ளட்டும். அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும் மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிக்க அன்புடையவன்." - (அல்குர் ஆன்: 33:59)

சாட்டிங்(Chatting):

Social Networking என்ற பெயரில் நேரத்தை வீணே கழிக்கும் சூழல் உருவாகிவிட்டது. முன்பின் தெரியாத யாரோ யாருக்கோ (Friend Request) அனுப்புகிறார்கள், Friend Requestம் Accept செய்யப்படுகிறது.. இதில் ஆண்/பெண் பாகுபாடே கிடையாது. தங்களது அலுவலகப் பணியை ஒழுங்காகச் செய்கிறார்களோ இல்லையோ பெரும்பாலானோர் தங்களது Online Friendsகளுடன் தவறாது Chat பன்னுகிறார்கள்.

என் வேலை, என் குடும்பம், என் சமூகம் என்ற ஒரு காலம் இருந்தது.. அப்போதெல்லாம் தங்களது நெருங்கிய நண்பர்களைக் கூட என்றாவது ஒரு நாள் பார்த்தோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளும் காலம்.இன்றையக் காலத்தில் முன்/பின் தெரியாதவர்களுடன் தேவையில்லாத பேச்சுகள், அரட்டைகள்,ஒருவரை ஒருவர் வர்ணித்துக் கொள்ளுதல் போன்றவையெல்லாம் நடந்து வரும் அவலம் ஏற்பட்டிருக்கின்றது. இதில் மூழ்கி, தங்களது கடமைகளைச் செய்ய தவறிவிடுகின்றனர். அது இம்மைக்கான கடமையாகட்டும் மறுமைக்கான கடமையாகட்டும். மறுமையின் அடையாளமாக நபி(ஸல்) கூறுவது மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்து போய்விடும். காலம் சுருங்கி விட்டதையும் சுருங்கிக் கொண்டே போவதையும் நம்மால் நன்கு உணர முடிகிறது.

இசை நம்மைச் சூழ்ந்த நிலை:

தற்போதைய கால கட்டத்தில் இசை நம்மைச் சூழ்ந்திருப்பதனை நாம்  உணரலாம்.நம்மில் பெரும்பாலானோர் இசையைச் சுவைப்பவர்களாகவே இருக்கின்றனர்.இசையைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

என் சமூகத்தாரில் சில கூட்டத்தார்கள் தோன்றுவார்கள் அவர்கள் விபச்சாரம், மது, பட்டு, இசை போன்றவற்றை அனுமதிக்கப்பட்டவையாக கருதுவார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதை நாம் ஹதீஸில் காண முடிகிறது.

மேற்கூறப்பட்ட நான்கில் விபச்சாரம் மட்டும் தான் இப்போது மீதமுள்ளதென நினைக்கின்றேன்.

இன்னும் சிலர் நம்மில் இசையை விட்டு விளகியவர்களாக இருக்கின்றனர். ஆனால் நாம் பேருந்தில் பயணிக்கும்போது எப்படியாவது இசை நம் காதுகளை வந்தடைந்துவிடுகின்றது.

முடிவுக்கு வருவோமா?

சுகாதாரமின்மை, அனாச்சாரங்கள்,மற்றும் இஸ்லாம் தடுத்துள்ளவற்றில் பெரும்பாலானவை நடைமுறையில் இருப்பதை நம்மால் மறுக்க இயலாது. இவற்றால் நமக்குக் கேடுதான் என்பதும் மறுக்க முடியாத உண்மை. எல்லாம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆகையால், சிலவற்றை நம்மால் தடுக்க இயலாவிட்டாலும்,இஸ்லாம் நமக்கு தடுத்தவற்றை விட்டு விளகிக் கொண்டு மறுமைக்காக நம்மை தயார்படுத்திக் கொள்வதே சிறந்தது.

'காலத்தின் மீது சத்தியமான மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்' (103:1,2)

அப்துர் ரஹீம் ஜமீல்

பரீட்சையை கண்டுபிடித்த புண்ணியாவனே ! - படிக்காதவங்களுக்காக** இது ஒரு ரிவைண்ட் ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | April 23, 2013 | , , , ,

1980 - 90களில்... நினைவலைகள் ! - இது ஒரு ரிவைண்ட் !

பரீட்சை அப்டீங்கற விஷயத்தை கண்டுபிடிச்ச புண்யவான் யாருன்னு தெரியலை.. - அவர் தலை மேல.! ஆவல் தீர குட்டனும்னு கோபம் கோபமா வருதே !

பின்ன என்ன தலைவா.. பரீட்சைன்னு ஒண்ணு வெச்சா, ரிசல்ட்ன்னு ஒண்ணு வந்து தொலைக்குது.. எந்த பயத்தையும் விட இந்த ரிசல்ட் பயம் தான் பெரிய பயமா இருக்கு..!

பத்தாங்கிளாஸ்.. அதாங்க, எஸ்.எஸ்.எல்.சி-க்கு போனவுடனே, ஆளாளுக்கு 'பப்ளிக் எக்ஸாம்' 'பப்ளிக் எக்ஸாம்'னு நமக்கு பிரஷரை ஏத்துவாங்க.. வீட்ல நிம்மதியா கதை புக் படிக்க முடியாது, ரேடியோ கேட்க முடியாது.. அட, ஒரு கல்யாணம், விசேஷம்னு யாராச்சும் கூப்பிட வந்தா, அவங்க கூட கொஞ்ச நேரம் பேசக் கூட விடமாட்டாங்க. படி படின்னு ஒரே ரோதணை. நாம படிச்சே தீரணும்னு ஒரு கூட்டமே நமக்கு எதிரா திரண்டிருக்கும்.

பரீட்சை நேரத்துல ஏற்கனவே பயந்து இருக்க நமக்கு, அட்வைஸ் பண்றேங்கற பேர்ல ஆளாளுக்கு ஆடியோ பேதி மருந்து குடுப்பாங்க.. இந்த பாட புஸ்தகம் இருக்கே.. ஹப்பா.. எனக்கு அதை தொறந்த அஞ்சாவது நிமிஷம் கொட்டாவி வரும், ஆறாவது நிமிஷம் தூக்கம் வரும். எட்டாவது நிமிஷம் டீ வரும்.

உம்மா டீ குடுக்கும் போது அவங்களை பாத்தா பாவமா இருக்கும். நம்மளை என்னவோ 'உலகம் சுற்றும் வாலிபன்' லெவலுக்கு மதிச்சு, மாத்தி மாத்தி டீ போட்டு குடுத்துகிட்டே இருப்பாங்க.. அது என்னமோ, என்ன மாயமோ தெரியலை.. அந்த டீயை குடிச்சா இன்னும் நல்லா Fresh-ஆ தூக்கம் வரும்.

பரிட்சை நேரத்துல என்னைத் தவிர எல்லாரும் என் படிப்பு மேலயே அக்கறையா இருப்பாங்க.. பத்தாக்குறைக்கு ரேடியோவில வர்ற விளம்பரம், பத்திரிகைகள்ல வர கட்டுரை எல்லாமே படிப்பு.. படிப்பு.. படிப்பு பத்தி தான்.

எனக்கு ஒரு சந்தேகம்.. அது எப்படி பரிட்சை நேரத்துல மட்டும் இந்த பாழாப்போன ஜுரம் வந்து தொலைக்க மாட்டேங்குது.?

இதெல்லாத்தையும் விட இப்போது பரீட்சைப் பேப்பரு ரயில்வே டிராக்கில் போட்டுவிட்டு சென்ற புண்ணியவான் மாதிரியெல்லாம் அப்போ எவனும் இல்லே... அப்படியிருந்துச்சுன்னா எவ்வ்வ்ளோ குஷியா இருந்திருக்கும் !

ஒரு வழியா கடைசி பரிட்சைய எழுதி முடிச்சதும் மனசுக்குள்ள வந்த சந்தோஷம் இருக்கே.. ஹைய்யோ.. அடுத்த ஒரு மாசம் கிரிக்கெட், ஃபுட்பால், ஃபிரண்ட்ஸ்னு கலக்கலா போச்சு..

காலைல எழுந்து பசங்களோட ஜாகிங்.. வீட்டுக்கு வந்து காலை சாப்பாடு, மைதானத்துக்கு போய் கிரிக்கெட், மறுபடியும் வீடு. குளியல். சோறு. கிளம்பி தெருவில் இருக்கும் முச்சந்தியில் நிற்பது இல்லாட்டி ஏதாவது குளக்கரையோரம் அரட்டை, ரேடியோ, பிரவுசிங் சென்டர், நொறுக்கு தீனி, மறுபடியும் கிரிக்கெட். 6.30 மணிக்கு மேல Flood Light மேட்ச் நடக்கற இடத்துக்கு போய் அலப்பறை. ஆஹா.. நிம்மதியா போய்கிட்டிருந்தது.

"பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.. வரும் ஜூன் மாதம்.. " உம்மாடியோவ்.. அதுக்குள்ள ரிசல்ட்டா..?! என்ன அவசரம்.. நல்லா பொறுமையா டயம் எடுத்து இன்னும் ஒரு ரெண்டு மூணு மாசம் கழிச்சு ரிசல்ட்டை வெளியிடலாமே.."

நல்லா படிக்கற பசங்களுக்கு கவலை இல்லை.. கண்டிப்பா புட்டுக்கும்னு தெரிஞ்ச பசங்களுக்கும் கவலை இல்லை.. என்னை மாதிரி மதில் மேல் மியாவ் தான் இதுல அவஸ்தைபடறோம்.

இன்னும் பத்து நாள்ல ரிசல்ட் வரப் போகுதுன்னு தெரிஞ்ச உடனே, எனக்கு மனசு பக் பக்குனு அடிக்க ஆரம்பிச்சிடுச்சு.. "பாஸ் பண்ணிடுவ இல்லை..?"னு மாமா கேக்கும்போது "கண்டிப்பா.."ன்னு பலவீனமா சொன்னேன். மாமா என் கண்ணையே ஒரு 3 செகண்ட் பாத்துகிட்டு இருந்தார்.. ஒருவேளை மாமாவுக்கு நாம கணக்கு பரிட்சை சரியா எழுதலைன்னு தெரிஞ்சிருக்குமோ..?

மாமா நகர்ந்ததும் உம்மா வந்து, " நல்லா தானே எழுதியிருக்க.. பாஸ் பண்ணிடுவ இல்லை..? யாரும் என்னை மதிக்க மாட்டா.. நீ பெயில் ஆயிட்டா  ரொம்ப இளக்காரமா போயிடும்டா.." அதாவது, நான் பாஸ் பண்ணி ப்ளஸ் ஒன் போறது கூட முக்கியமில்லை.. உறவுக்காரங்க மத்தில தலைக்குனிவு வந்திடக் கூடாது..! என்ன உலகம்டா இது..!

மறுநாள் பேப்பர் படிச்சிட்டிருந்த மாமா, கண்ணாடியை கழட்டி வெச்சுட்டு, பாத்ரூமுக்கு போயிருந்தார் போல.. நான் கண்ணாடியை பாக்காம, பேப்பரை அப்டியே எடுக்க, கண்ணாடி 'க்ளிங்' ஆயிடுச்சு..!

மாமா வந்து உடைஞ்சிருந்த கண்ணாடியை பாத்தார்.. கண்ணாடி போடாத மாமாவோட முகத்தைப் பார்க்க சிரிப்பாய் இருந்தது. என்னை முறைச்சது கூட பரவால்ல.. திட்டியிருந்தா கூட திருப்தியா இருந்திருக்கும்.. ஒண்ணும் சொல்லலை.. உடைஞ்ச துண்டுகளை ஒரு பேப்பர்ல எடுத்து போட்டுகிட்டு, " ரிசல்ட் வரட்டும்.."ன்னு சொல்லிட்டு போயிட்டார். கண்ணாடி உடையறதுக்குக்கும், என் ரிசல்ட்டுக்கும் என்ன சம்மந்தம்.. ? கண்ணாடியை உடைச்சதுக்கு திட்டித் தொலைக்க வேண்டியது தானே. ரிசல்ட் புட்டுகிச்சுன்னா, இதுக்கு சேத்து வெச்சு.. ஐயோ..!

இறைவா.. நான் எப்படியாவது பாஸ் ஆகிடணும்.. இந்த ஒரு தடவை மட்டும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணு...!

எங்க செட்ல யாரெல்லாம் பெயில் ஆவான்னு யோசிச்சு பாத்தேன்.. ம்ஹூம்.. சொல்ல முடியாது.. எல்லாருமே பாஸ் ஆனாலும் ஆயிடுவானுங்க.. நான் மட்டும் பெயில் ஆகி, மத்தவன் எல்லாம் பாஸ் ஆகிட்டா.. உம்மாடியோவ்.. அதுமட்டும் நடக்கக் கூடாது.. குறைந்தபட்சம், பக்கத்து வீட்டு நண்பன் மட்டுமாவது பெயில் ஆயிடணும்.. அவன் பிட் அடிச்சிருப்பானோ.. இறைவா.. என்னை பாஸ் பண்ண வெக்க முடியாட்டி, அட்லீஸ்ட் எனக்கு கம்பெனி குடுக்க ஒரு நண்பனையும் பெயில் ஆக்கிடு.. டீலிங்..!

அதுக்கப்பறம் எந்த எதிர்மறையான வார்த்தைகள் காதுல விழுந்தாலும், அது என் ரிசல்ட்டை பத்தி ஞாபகப்படுத்திகிட்டே இருந்தது. 'போச்சு' 'வராது' 'இல்லை'ன்னு எல்லா வார்த்தைகளையும் மாத்தி மாத்தி யாராவது சொல்லிகிட்டே இருந்தாங்க.

பஸ்ல போயிட்டிருக்கும்போது, என் கணக்கு பேப்பரை திருத்தும்போது, திருத்தரவருக்கு பைத்தியம் பிடிச்சு, நூத்துக்கு 80 மார்க் போடற மாதிரி பகல் கனவெல்லாம் கண்டேன்.. திட்டமிட்டு காணும் கனவு எல்லாம் பலிக்குமான்னு தெரியலை.

ரிசல்ட் வந்த அன்னிக்கு பசிக்கவே இல்லை.. உம்மா என்னை விடாம "சீக்கிரம் சாப்பிட்டுடு.."ன்னு வம்படியா சாப்பிட வெச்சாங்க.. அன்னிக்கு வீட்ல எல்லாரும் மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி இருந்தாங்க.. மாமா ஆபிஸுக்கு போவாரா மாட்டாரான்னு சந்தேகமா இருந்தது.. இறைவா.. அவர் கிளம்பி ஆபிஸ் போயிடணும்.. வம்படியாக பிரார்த்தனை முணுமுணுத்தது...

இப்ப மாதிரி ரிசல்ட்டை பிரவுசிங் சென்டர்ல எல்லாம் போய் பாக்க முடியாது.. பேப்பர் தான்.

ரிசல்ட் பேப்பர் இப்ப வரும்.. அப்ப வரும்னு அலைகழிய வெச்சிட்டாங்க.. பக்கத்து தெரு, அடுத்த தெருன்னு நாயா பேயா அலைஞ்சு, பேப்பரை வாங்கினா கை காலெல்லாம் நடுங்குது.

பேப்பர்ல நம்பரை தேட முடியலை.. கண்ல பூச்சி பறக்குது.. வயத்துல பட்டாம்பூச்சி பறக்குது.. பேப்பர்ல டுடோரியல் காலேஜ் விளம்பரம் எல்லாம் போட்டிருக்காங்க.. ஒரே அபசகுனமா இருக்குது..

என் நம்பர் சுத்தமா மறந்து போச்சு.. பேப்பரை தரைல விரிச்சு, அது மேலயே மண்டி போட்டு உக்காந்து, நம்பரை ஞாபகப்படுத்தி, கஷ்டப்பட்டு தேடிப் பாத்ததுல.. நம்பர் இல்லை.. இன்னொரு தடவை ஒழுங்கா பாக்கறேன்.. ம்ஹூம்.. இல்லை.. என்னமோ தெரியலை.. எல்லா டென்ஷனும் போய், நிம்மதியா இருந்தது..

நாம ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் மார்க் எதிர்பார்த்து அது வரலைனா வருத்தப்படலாம்.. பேப்பர்ல போட்டோ வர வேண்டாம் பாஸ்.. வெறும நம்பர் மட்டும் வந்தா போதும்னு பொன் செய்யும் மருந்தா மனசை வெச்சிருக்கோம்.. அதுக்கு கூட வழியில்லாம போயிடுச்சு..

திடீர்னு பக்கத்து வீட்லேந்து பயங்கரமா சத்தம் கேட்டது.. நண்பனை திட்டிகிட்டிருந்தாங்க.. ஆஹா.. அவனுக்கும் புட்டுகிச்சா..?! நன்றி நண்பா..!

மேட்டரை கன்ஃபர்ம் பண்ணிக்க பக்கத்து வீட்டுகிட்ட போனேன். பக்கத்து வீட்டு பையனும் உங்கூட தானே படிக்கறான்.. அவன் பாஸ் பண்ணிட்டான்.. நீயும் இருக்கியே தண்டம்.. தண்டம்.. "

என்ன சொல்றாங்க.. நான் பாஸா.. ? எப்படி?

அட, ஆமா.. பதட்டத்துல என் நம்பருக்கு பதிலா நண்பர்களின் நம்பரை மட்டுமே பேப்பர்ல தேடியிருக்கேன்.

பேப்பரை எடுத்து பார்த்ததுல, என் நம்பர் என்னைப் பார்த்து கண் அடிச்சுது.

மாமா வீட்டுக்குள்ளேயிருந்து பயங்கர சந்தோஷத்துடன் வெளியே வந்து, முதுகைத் தட்டி விட்டு ஆபிஸுக்கு போனார். கண்ணாடி போடாத மாமாவின் முகம் இப்ப அழகா இருந்தது.

மறுபடியும் மறுபடியும் பேப்பரை தரைல பரப்பி, என் நம்பரை பாத்துகிட்டே இருந்தேன்.

நல்லவேளை டாஸ்மாக் கடைகளின் களியாட்டம் அப்போது இல்லை, அப்படி ஒன்று நிகழ்ந்து அதனால பாஸ் பன்னவன்னு ஒரு பழிச்சொல் சுமக்காமல் போனோமே ! அப்பாடா !

இப்ப நினைச்சு பாத்தா அந்த ரிசல்ட் டென்ஷன் இருக்கே, அதுவும் ஒருமாதிரி நல்லா தான் இருக்கு, இல்லை.!
குறிப்பு : சென்றவருடம் ஒரு பிரபல வரப்பத்திரிகையில் வெளியான கட்டுரையைத் தழுவி வட்டார பேச்சு மொழி இணைத்து சின்ன சின்ன நெறியாடல் செய்து வித்தியாசமான ரசனையாக அந்த மீடியம் கிளாஸ் மாணவனின் ஏக்கத்தில்தான் இந்தப் மீள்பதிவு...

இப்படிக்கு இவ்வாறன அவஸ்தைகளில் சில வற்றை அனுபவித்த...  [**தலைப்பில் இந்தப் பதிவை அன்று படிக்காதவர்களுக்காக என்று இப்போ வாசிச்சுடுங்க ப்ளீஸ்]


அன்றைய மாணவன்


அபூஇப்ராஹீம்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)