அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பிற்குரிய சகோதரர்களே!
நாம் கடல் கடந்து, தாய், தந்தை, மனைவி, மக்கள் சொந்த பந்தங்கள் யாவரையும் விட்டுப்பிரிந்து சம்பாதிக்க அயல்நாடுகளுக்குச் சென்று சம்பாதித்து பணம் அனுப்புகிறோம். அந்தப் பணத்தை நம் பெண்கள் என்ன செய்கிறார்கள்? தேவையான அளவுக்குபோக மீதி பணத்தைச்சேமித்து வைக்கிறார்களா? அல்லது பிறர் நம்மைப் பாராட்ட வேண்டும் என்று சின்ன விஷயங்களுக் கெல்லாம் விருந்து கொடுக்கிறார்களா? பணத்தை மட்டுமல்ல நாம் ஆசையோடு வாங்கிக்கொடுக்ககூடிய ஒவ்வொரு பொருளையும் எப்படி பாதுகாக்கிறார்கள்?
பொருளினால் விரயமாகும் பணம்
ஆம். அதிரைப் பட்டினத்தில் எங்கு சென்றாலும் காலை 9.00 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரையிலும் ஈயம், பித்தளைக்கு “நடகடலப் பருப்பு” என்ற அறைகூவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களின் சப்தம் கேட்டவுடன் நம் பெண்கள் வீட்டு உள்ளே இருந்து “இந்தாங்க, கல்லகாரவரே!” என்ற கூப்பாட்டோடு வெளியே வருகிறார்கள். எதற்கு? துருப்பிடித்த இரும்பை அல்லது உடைந்த பிளாஸ்டிக்கை அள்ளிப்போட்டு கடலை வாங்கவா? இல்லையே!

நான் நேரில் பார்த்த ஒரு சம்பவத்தைச் சுட்டிக் காட்டுகிறேன்: 3,500/= ரூபாய் மதிப்புள்ள போர் செட் பைப்பை, எந்தவிதமான டேமேஜ் இல்லாததை, எடை போடுகிறார்கள். நான் அந்த சைக்கிள்காரரிடம் கேட்டேன்: “எவ்வளவுக்கு எடுத்தாய்” என்று. அவர் சொன்னார், “கிலோ 4 ரூபாய்க்கு எடுத்தேன்”. அந்தப் பைப்புக்கு காசைக் கொடுத்துவிட்டு அவசர அவசரமாக சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தள்ள முடியாமல் தள்ளிக் கொண்டு ஓடுகிறார்.
அன்பிற்குரிய சகோதரர்களே சிந்தியுங்கள். நீங்கள் வாங்கிக் கொடுக்கக்கூடிய ஒவ்வொரு பொருளையும் கவனியுங்கள்; விசாரியுங்கள். தெரியாதது போலஇருந்து விடாதீர்கள். ஏனென்றால் நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “நாளை மறுமைநாளில் அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் கேள்வி கணக்குகள் கேட்கப்படும். அவற்றில் ஒன்றுதான் நீ எந்த வழியில் சம்பாதித்தாய்? எந்த வழியில் சம்பாதித்த பொருளைச் செலவு செய்தாய்? சொல். ஒவ்வொரு பைசாவுக்கும் அல்லாஹ் கேள்வி கேட்பானே அப்படிப்பட்ட நாளை பயந்து செலவு செய்யுங்கள். சகோதரர்களே அறியாமல் செய்த பாவத்தை அல்லாஹ் மன்னிப்பதோடு, இனி எஞ்சி இருக்கக்கூடிய காலங்களில் அல்லாஹ் பொருந்திக் கொள்ளக்கூடிய வகையில் பொருள் ஈட்டி செலவு செய்யக் கூடியவர்களாக நம்மை ஆக்குவானாக ஆமீன்!
லெ.மு.செ. முகம்மது அபுபக்கர்