எங்கே அமைதி...? - (டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் ) 3

அதிரைநிருபர் பதிப்பகம் | December 31, 2015 | , , , ,

அமைதி இன்றைய நிலை!

உலகின் முதல் அணுகுண்டு, விஞ்ஞானி ஓப்பன் ஹெய்மர் தலைமையில் தயாராகி வந்த வேளை அது.

அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. அங்கே இந்த விஞ்ஞானி அணுகுண்டு வெடித்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை பற்றி விளக்கிச் சொன்னார்.

“இந்த அணுகுண்டின் தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் ஏற்பாடு உள்ளதா?”

“ஆம்” என்றார் விஞ்ஞானி. “என்ன அது?” என அனைவரும் ஆர்வத்தோடு கேட்டார்கள்.

“அது சமாதானம்” என்றார்.

‘என்ன விலை கொடுத்தேனும் அமைதியை வாங்க வேண்டும்’ என்பதே ஒவ்வொரு மனிதனின் ஆசையுமாகும்.

இறைவனிடத்தில் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டுமே பிரார்த்தனை புரிய வேண்டும் என்று ஒருவனுக்குக் கட்டளையிடப்பட்டால் அறிவும் அனுபவமும் உள்ள மனிதன் ‘இறைவா! எனக்கு அமைதியைத் தா’ என்றே பிரார்த்தனை புரிவான்.

கல்வி, செல்வம், பதவி, புகழ், வீரம் எல்லாமிருந்தும் வாழ்க்கை அமைதியற்றதாகி விட்டது; அர்த்தமற்றதாகி விட்டது. இது போலவே ஒரு நாட்டில் பொருள் வளம், மனித வளம், இயற்கை வளம், அறிவு வளம் எல்லாமிருந்தும் மக்கள் அமைதியாக வாழ முடியாத அளவுக்கு வன்முறைகளும், குற்றங்களும் நிகழுமாயின் அந்த நாட்டை ‘வளர்ந்த நாடு’ என்று கூற முடியாது.

அமைதியுள்ள மனிதனே மனிதரில் சிறந்தவன் !

அமைதியுள்ள நாடே பாருக்குள்ளே நல்ல நாடு !

அமைதியை விரும்பாதவர் எவருமில்லை. அமைதியைக் குலைப்பவர்களும் அமைதியையே விரும்புகிறார்கள். உலக நாடுகளுக்கிடையே சண்டைகளை மூட்டி விட்டு இராணுவத்தளவாடங்களை விற்பனை செய்யப் போட்டி போடும் வல்லரசுகளும் தங்கள் நாடுகள் அமைதியாக இருக்க வேண்டும் என்றே எண்ணுகின்றன.

உலக அளவில் ஆயுத விற்பனை செய்வதில் அமெரிக்காவுக்கே முதலிடம் ! 1990 – ஆம் ஆண்டில் மட்டும் 7.1 பில்லியன் டாலருக்கு ஆயுதங்களை அந்நாடு விற்பனை செய்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகள் வாங்கிய ஆயுதங்களில் 65 விழுக்காடு அமெரிக்காவிலிருந்து வாங்கப்பட்டவையே ! (Report by Congressional Research Service – CRS – Hindu 08.08.99) ஆனால் உலக நாடுகளில் அமைதி, மனித உரிமைகள், அணு ஆயுதத்தடுப்பு ஆகியவற்றைப்பற்றி வாய் கிழிய பேசுவதில் இவர்களே வல்லவர்கள் !

எதிர்க்கட்சியாக இருக்கும் போது கலவரங்களையும், மோதல்களையும் தூண்டிவிடுபவர்கள், ஆளும் கட்சியாக மாறுகின்ற போது அமைதியாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். ‘பாருங்கள்…! நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து எந்தக் கலவரமும் நிகழ்ந்ததில்லை’ என்று மார்தட்டிக் கொள்கின்றனர்.

அனாவசியமாக அடுத்தவர் விவகாரத்தில் தலையிட்டுக் குட்டையைக் குழப்புகின்றனர். அமைதியைக் கெடுப்பவர்கள் தாம் மட்டும் அமைதியாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

ஆதிக்கக்காரர்கள், தன்னலவாதிகள் ஆகியோரின் தூண்டுதலுக்குப் பலியாகி கலவரங்களில் ஈடுபட்ட பொதுமக்களும் இறுதியில் தமது தவறை உணர்ந்து அமைதிக்காக ஏங்கி அலைகின்றனர். எங்களை அமைதியாக வாழவிடுங்கள் என்று ஆதிக்கக்காரர்களுக்கு ஆணையிடுகின்றனர்.

ஆண்டுக் கணக்கில் போர் ! ஆயிரக்கணக்கில் சாவு ! கோடிக்கணக்கில் பொருட்சேதம் ! இதற்குப் பிறகு அமைதிப் பேச்சில் ஈடுபடுவதைத் தவிர வேறுவழியில்லை என்ற முடிவுக்கு வருகின்றனர்!

அமைதி – இன்றைய நிலை

அமைதிக்காக ஏங்குகிறது மனித சமூகம். அது விரும்பிய அமைதி கிட்டியதா?

தனிமனிதனுக்கு அமைதியில்லை. வீட்டிலும் அமைதியில்லை. சமூகத்திலும் அமைதியில்லை. நாட்டிலும் அமைதியில்லை. சர்வதேச அளவிலும் அமைதி இல்லை.

பெருகிவரும் மனநோய்களும் தற்கொலைகளும் தனிமனித அமைதியின்மைக்குச் சான்று ! மன நோய்கள் மட்டுமல்ல; உடல் நோய்களும் அமைதியற்ற மனநிலையால் உருவாகுகின்றன. அமெரிக்க மக்களில் அறுபது சதவீதத்தினர் மனநல மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுகின்றனர். உலகிலேயே மக்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தி வரும் ஸ்வீடனிலும் சுவிட்சர்லாந்திலும்தான் அதிக அளவில் தற்கொலைகள் நிகழ்கின்றன என்று கூறுகிறது. ஒரு பத்திரிகைக் குறிப்பு. ஒவ்வொரு எட்டு விநாடிக்கும் உலகில் ஒருவர் தற்கொலைக்கான முயற்சியில் ஈடுபடுகிறார்.

பெருகி வரும் மணமுறிவுகள் இல்லற வாழ்வின் அமைதியின்மையை உணர்த்துகின்றன. இங்கிலாந்தில் மூன்றில் ஒரு திருமணம் மணமுறிவில் முடிகின்றது. ஸ்வீடன், டென்மார்க், நார்வே, ஐஸ்லாண்ட், (Scandinavian Countries) முதலிய நாடுகளில் ஏழில் நான்கு திருமணங்கள் மணமுறிவில் முடிகின்றன. “அமெரிக்காவில் தற்கொலைக்கான முக்கியக் காரணம் மணமுறிவே ஆகும். “(The Detrioit செப்டம்பர் 1,1995)

பிள்ளைகள் – பெற்றோர்கள் உறவில் ஏற்படும் விரிசலுக்கு சாட்சியாக விளங்குகின்றன. முதியோர் இல்லங்கள். பல ஆண்டுகள், தனக்காகவும், குடும்பத்திற்காகவும் உழைத்தவர்கள் தமது வாழ்வின் மாலைப் பருவத்தை வீட்டில் குடும்பத்தினரோடு அமைதியாகக் கழிக்க வேண்டிய முதியவர்கள் தனிமையில் மன உளைச்சலோடு முதியோர் இல்லங்களில் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

துள்ளித்திரியும் பதின்பருவத்தினரும் (Teenage) அமைதியிழந்து தவிப்பதும் இந்த நூற்றாண்டு வேதனைகளில் ஒன்று. இளம் வயதுக் குற்றவாளிகள் பெருகிய வண்ணம் உள்ளனர். நாட்டில் நடைபெறும் மொத்தக்குற்றங்களில் 56 விழுக்காடு குற்றங்கள் 16 முதல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களால் நிகழ்த்தப்படுகின்றன. போதைப் பொருட்களுக்குப் பலியாகி இளமையைத் தொலைத்துவிட்டு பரிதாபமாகக் காட்சி தருகின்றனர்.

பள்ளிச் சிறுவர்கள் துப்பாக்கிகளோடு பள்ளிக்கூடத்திற்கு வந்து சக மாணவர்களைச் சுட்டுக் கொல்லும் நிகழ்ச்சியும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. அமெரிக்க மக்கள் தொகை 25 கோடி. அமெரிக்காவில் தனியார் வசமிருக்கும் கைத்துப்பாக்கிகளின் எண்ணிக்கை 20 கோடி (PTI செய்தி) சராசரியாக ஒருவருக்கு ஒரு துப்பாக்கி !

சாதி, மதம், இனம், மொழி, பிராந்தியம் ஆகியவற்றின் அடிப்படையில் வன்முறை நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

“எவர் குருதியும் சிவப்பு தான்

எவர் கண்ணீரும் உப்பு தான்”

என்று புத்தன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் ஜாதிக்கொடுமைக்கு எதிராகப் புயலாக எழுந்து நின்றான். ஆனால் இந்த நூற்றாண்டிலும் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை, கிராமங்களில் இரட்டைக் கிணறு, இரட்டை மயானம், இரட்டைப் பாதை என்ற நிலை தொடர்கிறது. தீண்டாமை மட்டுமல்ல பார்க்காமை, பேசாமை, நெருங்காமை, நிழல்படாமை ஆகிய அனைத்துக் கொடுமைகளும் நிகழ்த்தப்படுகின்றன.

இந்திய மக்களின் அமைதியைக் குலைப்பதில் வகுப்புக் கலவரங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. மதத்தின் பேரால் நமது நாட்டைப் போன்று உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இத்தனைக் கலவரங்கள் நிகழ்வதில்லை.

நாடுகளுக்கிடையில் நடந்து வரும் மோதல்களும் உச்சகட்டத்தை அடைந்துள்ளன. போஸ்னியா, கொசாவோ, ருவாண்டா, அயர்லாந்து, இலங்கை, காஷ்மீர், பாலஸ்தீனம் என உலகில் பல பகுதிகளிலும் தொடர்ந்து பிரச்னைகள் ஒரு மூத்த பத்திரிகையாளரின் கணிப்புப்படி உலகில் பல்வேறு இடங்களில் -116-க்கு மேற்பட்ட இடங்களில் மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளன.

நொடிப்பொழுதில் உலகத்தைத் தரைமட்டமாக்கும் வலிமை வாய்ந்த அணுகுண்டுகள், மக்களைக் கூண்டோடு அழிக்கும் இரசாயன ஆயுதங்கள் (Chemical Weapons) நோய்களை உண்டாக்கும் உயிரி ஆயுதங்கள் (Biological) ஆகியவற்றைப் பெறுவதில் உலக நாடுகளுக்கிடையே போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டியில் பங்கு பெறும் அனைத்து நாடுகளும் அமைதிக்காகவே இவற்றைத் தயாரிக்கிறோம் என்று கூறுகிறார்கள்.

விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் ஒருவர் ‘மூன்றாவது உலகப் போர் மூண்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். ‘என்னால் நான்காவது உலகப் போரைப் பற்றி மட்டுமே சொல்ல முடியும்’ என்று பதில் தந்தார் ஐன்ஸ்டீன். மேலும் அவர் ‘நான்காவது உலகப் போர் நடைபெறாது. ஏனெனில் மூன்றாவது உலகப் போரிலேயே உலகம் முழுமையாக அழிந்து போகும்’ என்றார்.

இவ்வாறு தனிமனிதனும், வீடும், நாடும் இன்று அமைதியின்றித் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அமைதியைத் தொலைத்துவிட்ட மனிதன் அமைதியைத் தேடி ஆலாய்ப் பறக்கின்றான்.

பிரார்த்தனை, யாகம், வேள்வி, தியானம், யோகா போன்ற வழிகளில் அமைதியைக் காண விழைகின்றான்.

உலகப்பற்றை ஒழித்து தனிமையில் தவம் புரிந்தால் அமைதி கிட்டும் என்பது சிலருடைய நம்பிக்கை !

இயற்கை எழில் சூழ்ந்த அமைதியான ஆரவாரமற்ற இடங்களுக்குச் சென்று அமைதி பெறத் துடிக்கிறான்.

‘வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்ற பழமொழிக்கேற்ப நகைச்சுவை மன்றங்களுக்கும் அமைதி நாடிச் செல்பவர் உளர்.

இசை, ஆடல், பாடல் இவற்றில் லயித்து அமைதி பெற எண்ணுபவர் பலர்.

அமைதிக்காக போதை மருந்து, தூக்க மாத்திரை இவற்றை நாடிச் செல்பவர்களும் உள்ளனர்.

ஆனால் அமைதி ஒன்றும் அப்படி எளிதில் கிடைத்து விடுவதல்ல ! ஒருவேளை கிடைத்துவிட்டாலும் அது தற்காலிகமானது. தொடக்கத்தில் குறிப்பிட்டது போல் அமைதி பலவழிகளில் சீர்குலைக்கப்பட்டிருக்கிறது. எனவே அதனை அடையும் வழிகளும் பலவாகும்.

அமைதியை தனிமனித அமைதி, சமூக அமைதி, இறைவனுடன் பெறும் அமைதி எனப் பிரிக்கலாம். இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை; அமைதியற்ற மனிதன் அமைதியற்ற சமூகத்தை உருவாக்குகிறான்; அமைதியற்ற சமூகம் அமைதியற்ற மனிதனை உருவாக்குகிறது.

பேராசை, பொறாமை, புகழ்வெறி, பதவி வெறி, ஆதிக்க உணர்வு உள்ள மனிதர்கள் தங்களது அமைதியையும் இழந்து விடுவதோடு சமூகத்தின் அமைதியையும் கெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். பதவி வெறி பிடித்த அரசியல்வாதியால் நாட்டின் அமைதி எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

வறுமை, சாதி மத வெறி, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை முதலிய கொடுமைகள் நிரம்பிய சமூகம் அமைதியற்ற மனிதனை உருவாக்குகிறது. சமூகம் தீமைகளால் சூழப்பட்டிருக்கின்ற போது அதில் வாழும் மனிதன் மட்டும் எப்படி அமைதியாக வாழ முடியும்?

சாதி வேண்டாம் என்று தனிமனிதன் கூறினாலும் சாதி அமைப்பிலிருந்து அவனால் விடுபட முடியவில்லை. சாதியை அவன் விட்டாலும் சாதி அவனை விடுவதாக இல்லை. சாதியைப் பொருட்படுத்தாது அவன் திருமணம் செய்ய விரும்பினால் சமூகம் அவன் மீது சாதியைத் திணிக்கிறது.

இலஞ்சம் வாங்குவதை ஒருவன் வெறுத்தாலும் இலஞ்சம். கொடுத்தே ஆக வேண்டிய நிலைமையில் இருக்கிறான்.

ஆபாசத்தை வெறுப்பவர்களும் ஆபாசமே ‘வாழ்க்கை முறை’ என்றாகி விட்ட சமூகத்தின் பாதிப்பிலிருந்து தப்ப முடியவில்லை.

எனவே அமைதியை உருவாக்க விரும்புபவர்கள் இவ்விருவகை அமைதியின்மை பற்றியும் சிந்திக்க வேண்டும். பொதுவாக சமயவாதிகள் அல்லது ஆன்மீகவாதிகள் தனிமனித அமைதி பற்றி மட்டுமே பேசுவார்கள். அவர்கள் தரும் தீர்வுகள் பிரார்த்தனை, வழிபாடு, தியானம் என்ற அளவிலேயே அமைந்திருக்கும். ஆனால் சமயச்சார்பற்ற கொள்கையுடையவர்கள் சமூக, அறிவியல், பொருளாதார விஷயங்களைப் பற்றியே அதிகம் பேசுவார்கள். தனிமனித ஒழுக்கம், அமைதி, சீர்திருத்தம் ஆகியவை பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். தனிமனிதனும், சமூகமும் அமைதி பெறும் போதுதான் உண்மையான, முழுமையான அமைதி மலர முடியும்.

தனி மனித அமைதி

சமூக அமைதி

இவ்விரண்டையும் நிலைநாட்ட வந்த சமயமே இஸ்லாம்.

இஸ்லாம் என்ற சொல்லுக்கு அமைதி என்றும், கீழ்ப்படிதல் என்றும் பொருள். பொதுவாக சமயங்களின் பெயர்கள் அச்சமயத்தை நிறுவியவர்கள் அல்லது அவை தோன்றிய இடம் ஆகியவற்றோடு தொடர்புடையவையாக இருக்கும். ஆனால் இஸ்லாம் இதனின்று மாறுபட்டு ‘அமைதி மார்க்கம்’ என்று அழைக்கப்படுகிறது.

பெயரில் மட்டும் ‘அமைதி’ என்பதை வைத்துக்கொண்டு, அமைதியைப் பற்றி பேசாது அமைதியாக இருந்து விடும் சமயமல்ல ! அதன் ஒவ்வொரு அடியும் அமைதியை நோக்கி எடுத்து வைக்கப்படுகிறது.

ஒருவரைச் சந்திக்கும் போது சொல்ல வேண்டிய முகமன் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ உங்கள் மீது சாந்தி உண்டாகுக என்பதே.

வீட்டினுள் நுழையும்போதும் (திருக்குர்ஆன் 24:27) தொழுகையை முடிக்கும் போதும் ‘அமைதி உண்டாகுக’ என்றே கூற வேண்டும்.

இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் பகுதிக்கு ‘தாருல் இஸ்லாம்’ அமைதியின் இருப்பிடம் எனப் பெயர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா எனும் நகர் வந்து இஸ்லாமிய அரசை நிறுவினார்கள். அவர்கள் மதீனாவில் நுழைந்தவுடன் மக்களை நோக்கிச் சொன்னார்கள்:

“அமைதியைப் பரவலாக்குங்கள். உணவு அளியுங்கள். இரத்தபந்த உறவுகளை உறுதிப்படுத்துங்கள். இரவில் மக்கள் உறங்கும் வேளையில் தொழுகையில் ஈடுபடுங்கள். நீங்கள் சுவனம் புகுவீர்கள்!”

(நூல் : திர்மிதி, இப்னு மாஜா)

அமையப் போகின்ற இஸ்லாமிய அரசு எத்தகையதாக இருக்கும் என்பதற்குக் கட்டியம் கூறுவது போல் அமைந்துள்ளது பெருமானாரின் இக்கூற்று.

“தொழுகை, நோன்பு, தர்மம் ஆகியவற்றைவிட சிறந்த செயல் ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என வினவினார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். “கட்டாயம் அறிவியுங்கள்” என்றனர் நபித்தோழர்கள். மக்களுக்கிடையில் சமரசம் செய்து வையுங்கள்; உறவுகளை சீர்குலைப்பதே அழிவுக்கான காரணமாகும்” என்றார்கள் நபிகள் நாயகம். (திர்மிதி)

“குழப்பம் விளைவிப்பது கொலையைவிடக் கொடியது.” (திருக்குர்ஆன் 2 :27)

“பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள். உண்மையில் நீங்கள் இறைநம்பிக்கை கொண்டவராயின் இதில்தான் உங்களுக்கு நன்மை இருக்கின்றது.” (திருக்குர்ஆன் 7 :85)

“குழப்பம் விளைவிப்பவன் சுவனம் புகமாட்டான்.” (புகாரி, முஸ்லிம்)

மேற்குறிப்பிட்ட திருக்குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் மட்டுமே அமைதியைப் பற்றிப் போதிக்கின்றன என்பதல்ல. திருக்குர் ஆனின் எல்லா வசனங்களும், நபிகள் நாயகத்தின் ஒவ்வொரு சொல்லும் செயலும் அமைதிக்கு வழிவகுப்பதாகவே அமைந்துள்ளன. எனவேதான் இறைவன் தான் அருளிய சமயத்திற்கு ‘இஸ்லாம்’ ‘அமைதி’ என்று பெயரிட்டான். இவ்வுலகில் மனிதன் அமைதியாக வாழ வேண்டும். மறுமையில் அமைதியின் இருப்பிடமாம் சுவனத்திற்குச் செல்ல வேண்டும். இதுவே இறைவனின் விருப்பமாகும்.

அமைதிக்கான வழிகளைக் காட்டுவதற்காகவே மனிதர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தன் தூதர்களாக நியமித்து, அவர்கள் வாயிலாக அமைதிக்கான அனைத்து வழிகாட்டுதல்களையும் இறைவன் வழங்கினான். இத்தூதர்கள் இறைக்கோட்பாடுகளை மக்களுக்கு விளக்கியதோடு அமைதியை நிலை நாட்டும் பணியிலும் ஈடுபட்டனர். முதல் மனிதராகிய ஆதம் முதல் இறைத்தூதர் ஆவார். அவரைத் தொடர்ந்து தூதர்கள் பலரை உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் இறைவன் நியமித்தான். அந்த வகையில் இறுதியாகப் பணியாற்றியவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களாவார்.

இறைவனுன் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தும் சமுதாயமே அமைதி பெறும். இஸ்லாம் என்ற சொல்லுக்கு அமைதி, கீழ்ப்படிதல் என இரு பொருள் உண்டு என்பதை தொடக்கத்தில் பார்த்தோம். இறைவனின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்தால் அமைதி கிட்டும். இறைவழிகாட்டுதலை மீறினால் அமைதி மறுக்கப்படும் என்பதே அச்சொல் நமக்கு உணர்த்தும் பாடமாகும்.

‘சாந்தி உண்டாகும் (இறைவனின்) நேர்வழியைப் பின்பற்றி நடப்போருக்கு’ (குர் ஆன் 20 : 47) எனும் இறைவசனமும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறது.

மனிதர்கள் அனைவரும் ஒரு ஆண் பெண்ணின் வழித்தோன்றல்கள். ஒரே ஆன்மாவிலிருந்து பிறந்தவர்கள். எனவே அனைவரும் சகோதரர்கள் எனும் இறைக்கருத்தை மறுத்து மனிதர்களை நாம் பல வர்ணங்களாகப் பிரித்தோம். அதன் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்தோம். விளைவு சாதி இன மோதல்கள் !

மதுவை தீமைகளின் பிறப்பிடம் என்கிறது இறைக்கோட்பாடு ! அதனை வருமானங்களின் பிறப்பிடம் எனக்கருதி அதனைத் திறந்துவிட்டோம். விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

வட்டி ஒரு சுரண்டல்; ஒரு கொடுமை என்ற இறைக்கோட்பாட்டை ஏற்க மறுத்து வட்டியின்றி பொருளியலே இயங்க முடியாது என்ற நிலையை உருவாக்கினோம். பணவீக்கம், விலைவாசி உயர்வு, ஏழைகளும், ஏழை நாடுகளும் சுரண்டப்படுதல், அடிமைப்படுத்தப்படுதல் போன்ற பல கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றோம் !

‘மானக்கேடானவற்றிற்கு அருகில் கூட நெருங்காதீர்கள்’ என்ற இறைக் கோட்பாட்டை மீறியதால் ஏற்பட்ட விளைவுகள் விபச்சாரமும், கருக்கலைப்பு, பால்வினை நோய்கள், எய்ட்ஸ்…!

இப்படி வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் இறைச்சட்டங்களை மீறிய போதெல்லாம் மனித சமூகம் அமைதியை இழந்து விடுகின்றது. எனவே அமைதியைப் பெறுவதற்கான ஒரே வழி –

“படைத்தவனின் பக்கம் திரும்புவதே !”

(திருக்குர்ஆன் 94 :8)

“இறைவனின் பக்கம் விரைந்து வருவதே !” (திருக்குர்ஆன் 51 :50)

( எங்கே அமைதி …? எனும் நூலிலிருந்து )

பரிந்துரை : அதிரை அஹ்மது

திருமணத்திற்கு முன்பும் பின்புமான கவுன்சிலிங் - `சமரசம்` - வழங்கிய புத்தக மதிப்புரை ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | December 30, 2015 | , ,

மிகச் சிறந்த குடும்பநல ஆலோசனை நூல் என சமரசம் இதழ் வழங்கியிருக்கும் புத்தக மதிப்புரையே பரைசாற்றுகிறது...!

இல்லறம் நல்லறமாகவும்... கொண்டவனின் கொடையானவளும் குதுகாலிக்க சிறந்ததொரு ஆலோசனையை வழங்கியிருக்கும் இந்த நூல் இல்லற வாழ்வில் ஈடுபட முயலும் ஒவ்வொருவரின் கையிலும் தவழ வேண்டிய நூல் எனவும் பரிந்துரைக்கிறது `சமரசம்.`


பரிந்துரை : இப்னு அப்துல் ரஜாக்

ஹிஜாப் ஒரு கவசம்! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | December 29, 2015 | , ,

அழகு...
ஓர் அழைப்பிதழ்!
முத்திரையிடு
முகவரியிடு - அன்றேல்
உரியவரைச் சென்று
சேராமல் போய்விடும்
ஊரில் போய்
சோரம் போய்விடும்

அழகு...
ஓர் அறுசுவையுணவு!
நாற்சந்தி தள்ளுவண்டிபோல்
திறந்து போடாமல்
நட்சத்திர அந்தஸ்த்தாக
மூடி வை  - தவறினால்
ஈயென மொய்க்கும் கண்கள்
ஈயென இளிப்பர் ஆண்கள்

அழகு...
ஓர் ஆச்சர்யக்குறி!
அற்ப இச்சைகளுக்கோ
அபிலாஷைகளுக்கோ
வளைந்து கொடுக்காதே - மீறினால்
வாழ்க்கையை அது
கேள்விக்குறியாக்கி
முற்றுப்புள்ளியில் முடித்துவிடும்!

அழகு...
ஓர் அடைமழை!
பருவம் தவறி பெய்தாலோ
அளவை மீறி பொழிந்தாலோ
பாழுங்கிணற்றில் வீணாகும்
பரம்பரை மானம் பறிபோகும்

அழகு
ஓர் அற்புத போதை
அனுமதிக்கப்பட்டவரே
அனுபவிக்க வேண்டும் - இல்லையேல்
கண்டவனும் கண்டு
போதை தலைக்கேறி
பைத்தியம் பிடித்துவிடும்

அழகு
ஓர் அருட்கொடை
பத்திரப்படுத்து!
பகிரங்கப்படுத்தி
பாவம் செய்தால்
படைத்தவனின்
கோபப்பார்வையால்
குலநாசம் உறுதி

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

நேருக்கு நேர் - அல்ஜஸீர தொலைக்காட்சி காணொளி ! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | December 28, 2015 | , ,


தினந்தோறும் நாம் ஏராளமான தொலைக்காட்சி, முகநூல் விவாதக்களங்கள், நேருக்கு நேர், விவாதமேடை இன்னும் எத்தனை எத்தனையோ !

ஆனால், இங்கே பதிக்கப்பட்டிருக்கும் அல்-ஜஸீரா தொலைக்காட்சியின் நேருக்கு நேர் காணொளி களத்தில் பேசுபொருளை ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டும்...

இயன்றால் கருத்துகளை பதிக்கவும் தவறாதீர்கள் !


அதிரைநிருபர் பதிப்பகம் 

நிறம் மாறும் மனிதர்கள் ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | December 27, 2015 | ,


மனித இனம் ஆறறிவைப்பெற்ற இனமாக இருந்தாலும் குணத்தால் ஒவ்வொருவரும் சற்று இயல்பு நிலையிலிருந்து மாறுபட்டுத்தான் இருப்பார்கள். அப்படி குணத்தால் மாறுபட்டு இருந்தாலும் அனைத்து செயல்பாடுகள் நடவடிக்கைகள் யாவும் மனசாட்சிக்கு உட்பட்டே இருக்கும். அப்படி இருந்தால் தான் அம்மனிதன் ஆறறிவைப் பெற்றவனாக முழுமை அடைந்தவனாக இருக்க முடியும். சிந்தித்துச் செயல்படும் பகுத்தறிவைப் பெறாத யாவரும் முழுமனிதனாக இருக்க முடியாது. ஆனால் ஒரு சிலர் இதற்க்கு விதி விளக்காக நிறம் மாறும் குணமுடையோர்களாக தனது நிலைபாட்டில் சரியாக இருக்கமாட்டார்கள். தனக்கு சாதகமாக எப்படி உள்ளதோ அப்படி தன்னை மாற்றிக் கொள்வார்கள். இன்னும் சொல்லப் போனால் தன் கொள்கையைக் கூட மாற்றிக் கொள்ள தயங்க மாட்டார்கள்.போதிய பகுத்தறிவைப் பெற்றிருந்தும் சிந்தித்து செயல்படும் திறனிருந்தும் மனசாட்சியிலிருந்து விலகி சற்றுமாறுபட்டு இரட்டை வேடமிடுபவர்களாக இருப்பார்கள். இத்தகைய குணமுடையோர்களே நிறம்மாறும் மனிதர்களாவார்கள். இவர்கள் எதிரிகளைவிட மிக ஆபத்தானவர்களாகும்.

பசுத்தோல் போர்த்திய புலிகளான இத்தகையோர் போக்கு சற்று வியக்கத்தக்கதாக இருக்கும். எப்படியென்றால் உள்ளொன்றும் புறமொன்றும் காட்டிப் பழகும் இத்தகையோர் அதிகம் சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் தேவைகள் காரியங்கள் பூர்த்தியாகும்வரை அந்த அப்பாவி மனிதரை மிகைப்படுத்தி புகழ்மாலை சூடுவார்கள். எப்படியெல்லாம் தனக்குத் தெரிந்த தந்திரக்கலைகளை கையாளத் தெரியுமோ அப்படியெல்லாம் பேசிமயக்கி தனது காரியங்களை சாதித்துக் கொண்டு வருவார்கள்.தனது காரியங்கள் வெற்றி பெற வேண்டியும், தனக்கு உதவி தேவைப்படும்போது மட்டும் அவர்களை பயன்படுத்திக் கொள்வார்கள்.தனக்கு அவசியமில்லாத போது அம்மனிதனுக்கு என்ன நேர்ந்தாலும் கண்டு கொள்ளாமல் இருந்து கொள்வார்கள். அதாவது ரசத்தில் சேர்க்கும் கருவேப்பிலை போல பாவித்துக் கொள்வார்கள்.

அதே சமயம் கள்ளம்கபடமற்ற அந்த அப்பாவிமனிதன் இக்கபடப்போக்கு அறியாமல் அனைத்தையும் நம்பி கடைசியில் மோசம்போனபிறகு இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா..? என நினைத்து புலம்பி மனவேதனை அடைவார்.

இப்படி நிறம் மாறும் மனிதர்களால் சிலசமயம் அதிகம் பாதிப்புக்களையும் ஏற்ப்படுத்திவிடும். எப்படிஎன்றால் தனக்கு உடன்பட்டு நடக்காதவர்களை, தான் சொன்னபடி கேட்காதவர்களை, தனக்கு சாதகமாக உதவி செய்யாதவர்களை, கொஞ்சம்கூட யோசிக்காமல் தனது கொடூரக் குணம்கொண்டு அவதூறு பேசி மக்கள் மத்தியில் கெட்ட பெயரை முத்திரை குத்த முயற்ச்சிப் பார்கள்.

இதில் வேதனையளிக்கக் கூடியது என்னவென்றால் இத்தகைய காரியங்களை படிக்காத பாமரர்கள் யாரும் செய்வதில்லை நன்கு படித்த நன்றாய் உலக விபரமறிந்த ஆறறிவு நிரம்பப் பெற்றவர்களே இப்படி நடந்து கொள்கிறார்கள். என்பதுதான் ஆச்சரியமளிக்கக் கூடியதாக உள்ளது.அப்படியானால் இதற்க்குக் காரணம் மனதில் காழ்ப்புணர்வும்,பொறாமை,தாழ்வு மனப்பான்மை இருப்பவர்களிடத்தில் தான் இத்தகைய குணம் மிகுதியாய் காணப்படும்.

அப்படியானால் இத்தகைய குணம் உள்ளவரிடத்திலிருந்து விலகி இருப்பதே நலமாகும். ஆரம்பத்திலேயே ஒருவரின் குணம் அறிந்து பழகுவது சிறந்ததாகும். ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்று சொல்வதுபோல ஆரம்பத்திலேயே சிலரது சுயநலப் பழக்கங்கள் எப்படியும் தெரிபட்டுப் போகும். அப்போதே அவர்களின் பழக்கத்தைக் குறைத்துக் கொண்டால் நிறம் மாறும் மனிதர்களின் பகைமையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.அப்படி விலகிச் செல்வதன் மூலம் அத்தகைய குணம் படைத்தோர் உணர்ந்து திருந்திநடந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இருக்கும்.

குணத்தில் நிரந்தரமில்லாமல் கிடைக்கும் நேரத்தில், கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அந்த சூழ்நிலையில் அகப்படும் மனிதர்களை பயன்படுத்தி தனக்கு ஆகவேண்டிய காரியங்களை பூர்த்தி செய்து கொள்வார்கள். இத்தகையோர் எதிலும் பிடிப்பினை இல்லாது வாழ்க்கையை கடத்திக் கொண்டு போவார்கள்.

நல்லவர்யார் கெட்டவர்யார் என்பதைக்கூட எப்படியும் அறிந்து கொள்ளலாம். ஆனால் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் இத்தகையோரை இனம் காண்பது மிகக் கடினமே. இவர்களின் போக்கும் செயலும் நல்லோர்களைச் சார்ந்தே இருக்கும். ஆனால் இறுதியில் ஒருநாள் இவர்களின் உண்மை முகம் வெளிப்படும்போது நம்பிக்கையிழந்து மானமிழந்து அனைவரின் சாபத்துக்கு ஆளாகிப் போவார்கள்.

இவ்வுலக வாழ்வில் எதிலும் நேர்மையுடன் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். தாம் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருக்கவேண்டும். எதிலும் ஒரு பிடிப்பினை வேண்டும். அப்படியல்லாது மனம்போனபோக்கில் நேரத்திற்கு ஒரு நிறமாக மாறிக் கொண்டு சென்றால் அவப்பெயரையே சுமக்க நேரிடும்.

ஆகவே உணராதவர்களுக்கு உணர்த்தாத வரை தனது தவறான போக்கு ஒருபோதும் தெரியாமல் போய்விட வாய்ப்பு உள்ளது. .உணர்வதும் உணர்த்துவதும் இந்த இரண்டுமே மனிதனின் கடமையாகிறது. ஆகவே நாம் இந்த விஷயத்தில் கவனமுடன் கையாண்டு யார் மனதையும் நோகடித்து இலாபம் தேடிக் கொள்ளாமல் நிறம் மாறா மனிதர்களாக வாழ்ந்து மற்றவர்களையும் மகிழ்ச்சியுற வாழச் செய்வோமாக.!!!

அதிரை மெய்சா 

கிழக்கே உதித்த சுதந்திரச் சூரியன் – சிராஜ் உத்–தெளலா 1

அதிரைநிருபர் பதிப்பகம் | December 26, 2015 | , ,

தொடர் - ஒன்பதுலிருந்து...

ஜனவரி-மே,  1857  இல் நிகழ்ந்த இந்திய விடுதலை எழுச்சி பரவலாக இந்தியாவின் முதல் விடுதலைப் போர் எனக் கூறப்படுகின்றது. இதனை வரலாற்று நூல்களிலும் மேற்கு நாடுகளின் எண்ணங்களிலும் "இந்திய சிப்பாய்க் கலகம்" எனக் கூறி இருப்பதனால், இந்தியர்களில் பலரும் இதனைத்தான் முதல் இந்திய விடுதலைக்கான எழுச்சியாக நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் 1757 லேயே வங்காளத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற பிலாசிப் போரே முதல் சுதந்திர போர் ஆகும். ஆம் வங்காளத்தில் சிராஜ்-உத்-தௌலா சிந்திய ரத்தத்தின் மீதுதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தன் முதல் அரசுமுறையான ஆக்கிரமிப்புக் கல்லை  இந்திய மண்ணில் நட்டது. இந்தியாவில் பிரிட்டீஷாரின் ஆட்சி முதலில் வங்காளத்தில்தான் ஏற்பட்டது என்பதுதான் வரலாறு ஏற்றுக் கொண்ட உண்மை. ஆகவே மேற்கில் போர்த்துகீசியரை எதிர்த்து சிந்தப் பட்ட முதல் ரத்தத்துளியும் கிழக்கில் ஆங்கிலேயரை எதிர்த்து சிந்தப்பட்ட முதல் ரத்தத்துளியும் முஸ்லிம்களுடையதுதான்  என்பது வரலாற்றில் மதச்சாயம் பூசி மறைக்க முயல்வோரின் முகத்திலும் முதுகிலும்  எழுதப் பட வேண்டிய உண்மை வரலாறு ஆகும். 

The First War of Indian Independence is a term predominantly used in India to describe the Indian Rebillion of 1857 It is also known by a number of other names such as the Great Rebellion, the Indian Mutiny, the Sepoy Rebellion, the Sepoy Mutiny the Revolt of 1857, and the Uprising of 1857.

என்பதுதான் உண்மைக்கு மாறாக நாம் மனப்பாடமாக படித்து எழுதிய பாடம். ஆங்கிலேயர் இந்தியாவை கபளீகரம் செய்யத் தொடங்கக் காரணமாக இருந்தது ஆங்கிலேயர் வர்த்தக முக்காடு போட்டுத் தொடங்கிய கிழக்கிந்தியக் கம்பெனி என்பதாகும். இந்தியாவின் கிழக்கே இருந்தது வங்காளம் அதன் தலை  நகரம் கல்கத்தா. இந்த மறைக்க முடியாத உண்மையை மனதில் வைத்துக் கொண்டு  கேளுங்கள் மாவீரன் சிராஜ்- உத் – தெளலாவின் கதையை.

வரலாற்றுச் சந்தையில் ஒரு சுற்று சுற்றி வருவோம் வாருங்கள். 

Trade Follows Flag  அதாவது வணிகம் என்கிற பசுத்தோலை போர்த்திக் கொண்டே நாடுகளை காலணி ஆதிக்கத்துக்குக் கொண்டு வரும் புலிதான் ஆங்கிலேயரின் கொள்கை என்பதை பறைசாற்றும் வரலாற்றுக் கலைச்சொல்லே  Trade Follows Flag என்பதாகும். அதன்படி தனது ஆக்கிரமிப்பு அரசியலுக்கு போட்டுக் கொண்ட முகமூடியே ஆங்கிலேயருடைய வணிகக் கொள்கையாகும். இந்த வகையில் இவர்கள் சுட்ட, சுருட்டிய, ஏப்பம் விட்ட நாடுகள் ஏராளம். எங்கே போனால் எதை வாங்கலாம் அல்லது விற்கலாம் என்பது சாதாரணமான வணிக நடைமுறை . ஆனால் வெள்ளைக்காரர்கள் என்று சொல்லப் பட்ட கொள்ளைக் காரர்கள் எங்கே போனால் எதைச் சுருட்டலாம் -  புரட்டலாம் - எதை எடுத்து இடுப்பில்  சொருகலாம் - யாரைப் பிரிக்கலாம் - எங்கே கலகமூட்டலாம் - எந்த அப்பத்தைப் பிரித்துக் கொடுப்பதில் குரங்காக செயல்படலாம் -எந்தக் குளத்தை குழப்பிவிட்டு மீன் பிடிக்கலாம் – என்பதே ஆங்கிலேயரின் நோக்கமாக இருந்தது. இந்த அடிப்படையில்தான் அவர்கள் ஆப்ரிக்க மக்களை அடிமைகளாக்கினார்கள்- அங்கிருந்த தங்க சுரங்கங்களை தங்களுடையதாக ஆக்கினார்கள்- அமெரிக்காவை  அடிமைப் படுத்தினார்கள் தூரக் கிழக்கு நாடுகள் முதல் ஆசியாவின் அனைத்து நாடுகளையும் சுரண்டினார்கள்-  சூர்யன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று பெருமை அடித்துக் கொண்டார்கள். அந்த வகையில் அவர்களின் கண்ணில் பட்ட அப்பாவிகள் வாழும் வளம் மிக்க நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவும் தப்பவில்லை. 

ஆனால் வரலாறு,  ஒரு உண்மையை ஒப்புக் கொள்ளும். ஆங்கிலேயர்களின் நாடு பிடிக்கும் பேராசையின் ஆக்டோபஸ் கரங்கள் இந்தியாவின் மீது படரத் தொடங்கியது அவுரங்கசீப்புக்குப் பிறகு வீழ்ந்துவிடத் தொடங்கிய மொகலாயப் பேரரசுக்குப் பிறகே. அதுவரை இவர்களால் இந்தியாவை நோக்கி வாலாட்ட  முடியவில்லை. காட்டு மல்லி பூத்து இருந்தாலும் காவல்காரனாக மொகலாயர் காத்து இருந்ததால் ஆங்கிலேயன் என்கிற ஆட்டம் போட்ட மயிலை காளை தோட்டம் மேயப் பார்க்க முடியவில்லை.  மொகலாய அரசின் வீழ்ச்சியின் 66 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட ஒட்டு மொத்த இந்தியாவை கட்டி ஆளும் தகுதியும் தன்மையும் படைத்த வேறு எந்த அரசும் ஏற்படவில்லை. கீரைப் பாத்தி நாடுகள் தங்களுக்குள் அதிகாரத்துக்காக அடித்துக் கொண்டது ஆங்கிலேயருக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் ஆனது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது உண்மை ஆயிற்று. இந்தியா வேலி இல்லாத தோட்டமானது. அதனால் ஆங்கில மயிலக்காளை இப்போது ஆட்டம் போட்டுத் தோட்டம் மேயப் பார்த்தது. 

ஆக, இந்த சூழ்நிலைகலைப் பயன்படுத்தி  ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனி,   இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கும் கதையாக, ஆட்சியின் மேலும்  குறி வைத்தது. இந்த வர்த்தகக் கம்பெனி உருவாக்கப் பட்ட நாள் 1.12.1600. “ கம்பெனி என்பது வாங்கவும் விற்கவும் வந்த வர்த்தக ஸ்தாபனம். அதற்குள் அடங்க வேண்டியது பொருள்கள் ; புருஷர்கள் அல்ல” என்கிற வசனங்கள் ஒலிக்காத காதுகளே ஒரு காலத்தில் இல்லை.  கிழக்கிந்தியக் கம்பெனி என்று மெல்லத் தொடங்கி பொருள்களை வாங்கி விற்பதில் தொடங்கி இந்திய நாட்டையே கொஞ்சம் கொஞ்சமாக ஏப்பம் விடத்தொடங்கினார்கள். 

தங்களின் ஆதிக்கப் பசிக்கு இரையாக்கிக் கொள்ளும் செயலுக்கு ஆரம்பமாக கடற்கரைப்பட்டினங்களையே நோக்கி கண் வைக்க ஆரம்பித்தனர். அந்த வகையில் ஆளும் திராணியற்ற அரசர்களை விலைக்கு வாங்கி தங்களின் ஆதிக்கக் கணக்கைத் தொடங்கினர். தங்களின் வர்த்தகக் குடியேற்றங்களை கடற்கரைப் பட்டினங்களில் ஏற்படுத்திக் கொண்டனர். 1612  ஆம் வருடம் சூரத்திலும் 1616- ல் மசூலிப் பட்டினத்திலும்  1633 –ல் ஹர்ஹர்பூரிலும் 1640 ல் சென்னையிலும்  1669- ல் மும்பையிலும்  1686- ல் கல்கத்தாவிலும் தங்களின்  வர்த்தகக் குடியேற்றங்களை நிறுவினார்கள்.

உலகெங்கிலும் அந்நிய நாட்டின் மூலதனம் இப்போதும்  வரவேற்கப் படுகிறது. அப்படி மூலதனம் இடும் எவரும் தங்களின் முதலீடுகளைத்தான் பணமாகவோ அல்லது பொருளாகவோ அந்தந்த நாடுகளில் முதலீடு செய்வார்கள். இத்தகைய முதலீடுகளுக்குரிய தேவையான அனுமதி மற்றும் உரிமைகளைத்தான் தாங்கள் பிறந்த மற்றும் வணிகம் செய்யும் நாடுகளிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள். ஆனால் ஆங்கிலேயன் கிழக்கிந்தியக் கம்பெனியைத் தொடங்கும்போதே தங்களுக்காக ஒரு கப்பற்படையை  வைத்துக் கொள்ளவும் ,  தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்ளவும் பிரிட்டிஷ் ராணியிடமிருந்து உரிமை பெற்று இருந்தார்கள். இதன் விளைவாக முதலில் வங்காளத்தில் (அன்றைய வங்காளம் என்பது இன்றைய பங்களா தேசமும் சேர்ந்தது) இருந்த சிட்டாகாங்க் துறைமுகத்தைத் தாக்கி அதில் தோல்வி கண்டார்கள். 

1686- ல் கல்கத்தாவில்  கால்பதித்த வெள்ளையர்கள் 1690 –ல் கல்கத்தாவின் ஹூக்ளி நதியின் கரையில் தங்களின் பண்டங்களை பாதுகாக ஒரு கிடங்கும் அத்துடன் ஒரு கோட்டையும் கட்டினார்கள். இந்தக் கோட்டையின் வரலாற்றுப் பெயர் வில்லியம் கோட்டை என்பதாகும். மொகலாய மன்னராக இருந்த பாருஷியாவுக்கு மருத்துவம் பார்த்த ஆங்கிலேயரான அமில்ரன் வில்லியத்தின் நினைவாக இந்தக் கோட்டை கட்டப் பட்டதாக சொல்லிக்கொண்டார்கள். ஆங்கிலேயரின் சூழ்ச்சியின் அடையாளமாக இந்தக் கோட்டைக்குள்ளே ஒரு சிறைச்சாலையைக் கட்டினார்கள். அந்த சிறைச்சாலை 18 அடி நீளமும் 16 அடி 10அங்குல அகலமும் உள்ள சிறிய அறைகளைக் கொண்டது. இப்படி ஒரு சிறையை அவர்கள் கட்டியதன் நோக்கம் தங்களை எதிர்ப்பவர்களைப் பிடித்து இந்த சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தத்தான். ஆனால் இறைவன் போட்ட கணக்கு வேறாக இருந்தது.  வங்காளத்தின் வீரன் சிராஜ் - உத் -தெளலா இந்த சிறைச்சாலையில் தங்களையே  அடைக்கப் போகிறார் என்பதை ஆங்கிலேயர்கள் அறியவில்லை. அதைப் பற்றி பின்னர் காணலாம்.  இப்போது இப்படியெல்லாம் ஆங்கில ஆதிக்கம் விரிவடைந்து கொண்டே சென்றது என்பதை மட்டும் விளங்கிக் கொள்ளலாம். 

சென்னையிலும் மும்பையிலும் இன்னும் இந்தியாவின் பல பகுதிகளிலும் ஆங்கிலேயர்கள் எவ்வித எதிர்ப்புமின்றி காலூன்றத்தொடங்கினார்கள். ஆனால் கல்கத்தாவில் அவர்களது ‘பாச்சா’ பலிக்கவில்லை; பருப்பு வேகவில்லை.  இதற்குக் காரணம், வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு நாடாளும் ஆசை வந்துவிட்டது என்பதை முதலில் கணித்து, ஆங்கிலேயரின் நிர்ப்பந்தங்களுக்கும் நிபந்தனைகளுக்கும் எதிராய் இந்த மண்ணில் முதுகெலும்புடன் முதலில் நிமிர்ந்து நின்றவர்தான்  சிராஜ் - உத் –தெளலா. 

ஆப்கானியப் படை வீரர் அலிவர்த்திகான்  1726 ஆம் ஆண்டு துருக்கியில் இருந்து இந்தியா வந்து வங்காளத்தின் படையில் சேர்ந்தார். காலம் அவரை வங்காளத்தின் நவாப் ஆக்கியது.  அலிவர்த்திகானின்  மறைவுக்குப் பிறகு அவரது பேரர் ஆன சிராஜ் - உத் -தெளலா 1740-ல் தனது  24 ஆம் வயதில் இள ரத்தத்தின் துடிப்போடு வங்காளத்தின் நவாப் நாற்காலியின் அதிபதி ஆனார். இவர் நவாப் ஆனதும்,  எதிர்ப்பே இல்லாமல் எங்கும் சுருட்டிக் கொண்டிருந்த கிழக்கிந்திய கம்பெனியின் ஏகாதிபத்திய ஆவலுக்கு  பல வகைகளில் இடிகளை இனாமாக  இறக்க ஆரம்பித்தார்.  ஆங்கில ஏகாதிபத்தியம் கலக்கம் அடைந்தது. 

சிராஜ் - உத் –தெளலா  வங்காளத்தின் நவாப் ஆகப்  பொறுப்பேற்றுக் கொண்டதை பிரிட்டிஷார் விரும்பவில்லை. ஆகவே அவரது அரசவையில் இருந்த சிலரை இரகசியமாக சந்தித்து , ஆசைகாட்டி சிராஜ் - உத் –தெளலாவை பதவியில் இருந்து கவிழ்த்துவிட திட்டம் தீட்டினார்கள். இந்த விபரம் சிராஜ் - உத் –தெளலாவுக்குத் தெரியவந்தது. அவரது கோபத்தைக் கிளப்பியது. அத்துடன் பிரிட்டிஷாரின் மூன்று முக்கியமான செயல்கள் சிராஜ் - உத் –தெளலா உடைய ஆத்திரத்தை அதிகமாக்கியது. 

முதலாவதாக, வில்லியம் கோட்டையில் அவர்கள் செய்த மாற்றங்கள். இந்த மாற்றங்களை அவர்கள் போர்க் கைதிகளை அடைக்கும் விதமாக செய்தார்கள். இந்தச்செயல் சிராஜ் - உத் –தெளலாவுக்குப் பிடிக்கவில்லை. மேலும் நவாப் ஆன தன்னிடம் - இப்படி தனது ஆளுமைக்கு உட்பட்ட பிரதேசத்தில் கட்டிட மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக அரசின் அனுமதியை பிரிட்டிஷார் கேட்காதது ஏன் என்று சிராஜ் - உத் –தெளலா கேள்வி எழுப்பினார்.  தட்டிக் கேட்க ஆள் இல்லாமல் வளர்ந்த பிரிட்டிஷாருக்கு இது அதிசயமாக இருந்தது. இந்த இந்திய மண்ணிலும் தங்களை எதிர்க்க ஒருவனா என்று சிந்திக்க ஆரம்பித்தனர். முளையிலேயே கிள்ளி எறியும் திட்டம் முளைவிட்டது. 

இரண்டாவதாக பிரிட்டிஷாருக்கு அனுமதிக்கப் பட்ட வர்த்தக சலுகைகளை அவர்கள் மீறி செயல்பட்டார்கள் என்கிற குற்றச்சாட்டை அவர்கள் மீது சுமத்தினார் நவாப் சிராஜ் - உத் –தெளலா. பிரிட்டிஷாரின் அத்துமீறலான செயல்களால் அரசுக்கு சுங்கம் மூலம் வரவேண்டிய வரிகள் பிரிட்டிஷாரால் ஏமாற்றப் பட்டன என்கிற குற்றமும் பிரிட்டிஷார் மீது சுமத்தப் பட்டது. 

மூன்றாவதாக, சிராஜ் - உத் –தெளலா உடைய அரசுக்கு துரோகம் இழைத்து அரசுப் பணத்தைக் களவாடி கையாடல் செய்த கிருஷ்ணதாஸ் மற்றும் ராஜிவ்பல்லவ் ஆகிய  சிலருக்கு தங்க இடமும் பொருளும் கொடுத்து அவர்களை நவாப்புக்கு எதிராக தூண்டிவிட்டு தங்களின் பாதுகாப்பில் வைத்துக் கொண்ட செயல் நவாபின் ஆத்திரத்தை அதிகமாக்கியது.  

இத்தகைய காரணங்களால் நவாப் சிராஜ் - உத் –தெளலாவுக்கும் பிரிட்டிஷாரின் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும்  உறவு சீர்கெட ஆரம்பித்தது. இந்நிலையில் தங்களின் ஆரம்ப கால அனுமதியை வைத்து ஆங்கிலக் கடற்படையை கல்கத்தாவில் குவிக்க ஆரம்பித்தனர் . படைக் குவிப்பை நிறுத்தும்படி  நவாப் சிராஜ் - உத் –தெளலா விடமிருந்து அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப் பட்டது. அந்த எச்சரிக்கைக்கும்  கிழக்கு இந்தியக் கம்பெனியினர் கேளாக்காதினர் ஆயினர். நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்கிற ஆணவம் மிக்க மனோநிலை நவாப் சிராஜ் - உத் –தெளலாவின் கோபத்தைத் தூண்டியது . உடனே ஆங்கிலேயர் கட்டிய நாம் மேலே குறிப்பிட்ட வில்லியம் கோட்டையை தனது படைகளைவிட்டு ஆக்ரமிக்க உத்தரவிட்டார். ஆங்கிலேயர் கதிகலங்கினர். இந்த முற்றுகையில் இருந்து தான் மட்டும் ஹூக்ளி நதியில் நின்ற ஒரு கப்பலில் ஏறி தப்பித்து சென்றான் அட்மிரல் வாட்சன் என்கிற தளபதி. 

அதற்குப் பின்தான் வரலாற்றில் Calcutta’s Black Hole என்று குறிப்பிடப்படும் “கல்கத்தா இருட்டறைத் துயர் நிகழ்ச்சி “  என்பது நடந்தது. எந்த ஆங்கிலேயர்கள் தங்களை எதிர்க்கும் இந்தியர்களை அடைத்துவைத்து சித்தரவதை செய்ய சின்னஞ்சிறு அறை வைத்து சிறைச்சாலை காட்டினார்களோ அந்த சிறைச்சாலை  அறைக்குள்  நவாப் சிராஜ் - உத் –தெளலாவின் உத்தரவின் பேரில் வில்லியம் கோட்டைக்குப் பொறுப்பாளராக இருந்த ஹால்வேல் உட்பட 146 ஆங்கிலேயர்களும் கைது செய்யப்பட்டு கடும் கோடை இரவில் 18 அடி நீளமும் 16 அடி 10அங்குல அகலமும் இருந்த  சிறிய அறையில் அடைக்கப்பட்டு  வினை விதைத்தவர்கள் வினை  அறுத்தார்கள். கெடுவான் கேடு நினைப்பான் என்கிற இலக்கணத்துக்கு இலக்கியமாக அடைபட்ட 146 ல் 22 பேர்களைத் தவிர அனைவரும் மூச்சுத்திணறி இறந்து கிடந்தனர். ஆங்கிலேயர்களின் ஆட்சி எத்தனை இந்திய உயிர்களை காவு வாங்கி இருக்கிறது என்று கணக்குப் பார்த்தால் ஆங்கிலேயர்கள் காவு வாங்கப் பட்ட கணக்கு மிகக் குறைவாகவே இருக்கும். ஆனால் இந்தக் கணக்கைத் தொடங்கி வைத்தவர் நவாப் சிராஜ் - உத் –தெளலா ஆவார். 

அடுத்த நாட்டினரை அடுக்கடுக்காய்க் கொன்று குவிப்பவன்,  தன் நாட்டினர் செத்தால் தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்கிற நிலைக்கு ஆளானான் ஆங்கிலேயன். ராபர்ட் கிளைவ்,  அட்மிரல் வாட்சன் போன்றோர் சென்னையில் இருந்து கல்கத்தாவுக்கு விரைந்தனர். ஆங்கிலேயரின் போர்ப் படை ஒன்றும் அணி வகுத்தது. 

அடுத்துக் கெடுத்தலிலும் ஆசைகாட்டி  மோசம் செய்வதிலும் ஆங்கிலேயருக்கு நிகரில்லை என்பது வரலாறு நிரூபணம். அந்த வகையில் நவாப் சிராஜ் - உத் –தெளலா வின் உறவினர் மற்றும் ஆலோசகர் மீர் ஜாபர் என்பவர் ஆங்கிலேயர் விரித்த சதிவலையில் சிக்கினார்.  நவாப் சிராஜ் - உத் –தெளலா வின் நடவடிக்கைகள் ஆங்கிலேயரின் கவனத்துக்கு உளவாக சொல்லப் பட்டது.  ஆங்கிலேயர் வஞ்சகமாக நவாப் சிராஜ் - உத் –தெளலா வுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டே படை திரட்டினர். உடன்படிக்கைக்கு எதிராக, ஆங்கிலேயப் படை திரட்டப்பட்டதால் வீரன் நவாப் சிராஜ் - உத் –தெளலா 1757 – ல் வெள்ளையர் முகாமிட்டு இருந்த கல்கத்தா துறைமுகத்தை ஆவேசத்துடன் தாக்கினார். 

நவாப் சிராஜ் - உத் –தெளலா ஆங்கிலேயருடன் பொருதிய இந்தப் போர் பிளாசிப் போர் என்று வரலாற்றில் குறிப்பிடப் படுகிறது. மேலும் ஆங்கிலேயரை எதிர்த்து இந்த மண்ணில் நடந்த முதலாவது மிகப் பெரும் போரும் பிளாசிப் போர்தான். இந்தப் போரில் ராபர்ட் கிளைவின் மூவாயிரம் பேர்களை மட்டுமே கொண்ட ஆங்கில மற்றும் அடிவருடிகளின் படை  , நவாப் சிராஜ் - உத் –தெளலா வின் பதினெட்டு ஆயிரம் குதிரைப் படையையும் ஐம்பது ஆயிரம் காலாட்படையையும் தோற்கடித்தது. இதற்குக் காரணம் மீர் ஜாபரின் துரோகம் ஒரு பக்கம் ஆனாலும் இயற்கையும்  சதி செய்தது. பிளாசிப்  போரில் நான்கு மணிநேரம் பெய்த இடைவிடாத மழையால் நவாப் சிராஜ் - உத் –தெளலாவின் படையின் வெடி மருந்துகள் நனைந்து போய் வெடிக்க மறுத்தன. நவாப் சிராஜ் - உத் –தெளலாவின் வீரம் இயற்கைக்கு முன் மண்டியிட்டது. அன்று பெய்த மழை இந்தியாவின் சரித்திரத்தையே மாற்றியது. இல்லாவிட்டால் ஆங்கிலேயர்கள் அன்றே அழிக்கப் பட்டு இருப்பார்கள் என்பதே வரலாற்று ஆசிரியர்களின் கணிப்பு.

போர்க்களத்தில் துரோகிகள் செய்த சதியால் தோல்வியைத்தழுவிய  சிராஜ் - உத் –தெளலா அங்கிருந்து தப்பித்து முர்ஷிதாபாத் சென்று பின் ஒரு படகில் பாட்னா சென்றார். அங்கு கைது செய்யப்பட்டார்.  இறுதியில்   மீர் ஜாபரின் மகன் மீரான் ஜாபர் என்கிற ஆங்கில அடிவருடியின் உத்தரவு பெற்ற அலி பேக் என்பவனால்  நவாப் சிராஜ் - உத் –தெளலா என்கிற  வங்கத்தின் சிங்கம்  July 2, 1757 அன்று கொல்லப்பட்டது.  

வங்காளத்தில் நவாப் சிராஜ் - உத் –தெளலா சிந்திய ரத்தத்தின் மீதுதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது முதல் அடிக்கல்லை இந்தியாவில் நட்டது. இந்தியாவில் முதல் பிரிட்டிஷ் ஆட்சி நவாப் சிராஜ் - உத் –தெளலா ஆண்டு மாண்ட வங்காளத்தில்தான் நிறுவப்பட்டது. இதுவே இந்தியாவில் தங்களின் ஆதிக்கம் நிலைபெற்ற நாள் என்று ஆங்கிலேயரும் ஆணவத்துடன் குறிப்பிடுகிறார்கள்.  
இன்ஷா அல்லாஹ் இன்னும் சந்திக்கலாம். 
இபுராஹீம் அன்சாரி
===============================================
எழுத உதவிய குறிப்புகள் :-
Is the Black Hole of Calcutta a myth? 
The Parliamentary history of England from the earliest period to the year 1803.  
Akhsaykumar Moitrayo, Sirajuddaula, Calcutta 1898.
===============================================

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 020 0

அதிரைநிருபர் பதிப்பகம் | December 25, 2015 | , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

மனைவியிடம் கணவனின் உரிமைகள்:

சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். (அல்குர்ஆன்:4:34)

''ஒருவன் தன் மனைவியை இல்லறத்திற்கு அழைத்து, அவள் வரமறுத்து, இதனால் அவள் மீது அவன் கோபமாக இருந்தால், விடியும் வரை வானவர்கள் அந்தப் பெண்ணை சபிப்பார்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 281)

''ஒரு பெண், அவளின் கணவன் ஊரில் இருக்கும் சமயம் அவனின் அனுமதியின்றி (நபில்) நோன்பு வைத்தல் கூடாது. மேலும் அவனின் அனுமதியின்றி அவனது வீட்டினுள் (எவரையும்) அனுதிக்கக் கூடாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 282)

''நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்களாவீர். உங்களில் அனைவரும் அவரது பொறுப்புப்பற்றி கேள்வி கேட்கப்படுவீர். ஒரு தலைவர் பொறுப்பாளியாவார். ஒரு மனிதர், தன் குடும்பத்தாருக்கு பொறுப்பாளியாவார். ஒரு பெண் தன் கணவனின் வீடு, மற்றும் குழந்தைக்கு பொறுப்பாளியாவாள். நீங்கள்  அனைவரும் பொறுப்பாளர்களாவீர். உங்களில் அனைவரும் தன் பொறுப்புப் பற்றி கேள்வி கேட்கப்படுவீர்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம் (ரியாளுஸ்ஸாலிஹீன்: 283)

''ஒரு மனிதரை மற்றொரு மனிதருக்கு 'ஸஜ்தா' செய்ய நான் கட்டளையிடுதாக இருந்தால் ஒரு பெண்ணை அவளின் கணவனுக்கு 'ஸஜ்தா' செய்யும்படி கட்டளையிட்டிருப்பேன்'' என நபி(ஸல்)கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 285)
  
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

 இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன்.S

வயோதிக வலிகள்! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | December 24, 2015 | , ,

வலிகளோடு வாழப் பழகுவதே
வயோதிகத்தை
வரவேற்கும் வித்தை!
வலிகளில் - சில
மூட்டில் வருபவை - பிற
வீட்டில் தருபவை!

நிவாரணங்களைப் பற்றிய
உதாரணங்களின் பட்டியலில்
வயோதிகத்தின் வலிகளுக்கு
நிவர்த்தி பற்றிய குறிப்பில்லை!

மூட்டின் தேய்மானங்களும்
வீட்டில் அவமானங்களும்
கவனிப்பாரற்ற தருணங்களில்
கடுமையாய் வலிக்கும்!

களிம்பு பூசியோ
கனிந்து பேசியோ
ஆசுவாசப்படுத்தினாலும்
வலி நீங்க - நிரந்தர
வழி இல்லை!

எனினும்,
வலிநீக்கும் குளிகைகளிலும்
வாஞ்சையான விசாரிப்புகளிலும்
தற்காலிகமாக
விழிநீர்க்கும் வயோதிகம்!

தேங்காய்ப் பாலின்
மூன்றாம் பால்கஞ்சி
தெவிட்டாது முதுமைக்கு!

எனினும்,
காப்பகங்களில் விடுவதும்
கருங்குழியில் இடுவதும்
ஒன்றோ வேறோ?

நினைவு தப்புவதற்கு முன்
அன்பையும் அக்கறையையும்
நெஞ்சு நெகிழ
அனுபவிக்கத் தருவதால்
வாழ்க்கையை வென்றதாய்
திருப்தியுறும் வயோதிகம்!

இந்த
அன்பைவிட விலைகுறைவாய்
ஏதுமுண்டோ உலகில்
இவர்களுக்குத் தர?

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

மெளனம் பேசியதே.... 7

அதிரைநிருபர் பதிப்பகம் | December 23, 2015 | , , , , , ,

இது எல்லோர் மனதிலும் புகுந்திருக்கும் வலி. நிவாரணத் தைலம் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் குறுக்கில் படுத்திருக்கும் குழந்தையை தாண்டாத மெளனப்போராட்டம்.

பிறந்து பின் பள்ளி செல்லும் வரை பெற்றோருடைய விலங்கு, பின் பள்ளிப் பருவத்தில் கற்பனையில் வாழும் காலங்களில் கனவுகளின் விலங்கு, பின் மாயம் கலையும் முன் வாழ்க்கையின் அடிவாரத்தில் மனைவியின் விலங்கு... காலம் ஒரு ஓட்டப் பந்தய வேகத்தில் தொடங்க பிள்ளைகள் பின் தொடர உறவுகளின் விலங்கு... என்றாவது ஒருநாள் வானம் வெளுக்குமா, அதன் திசை நோக்கி நடந்து எழுத மை வாங்கும் திராணி வாங்கி   விட்டுப்போன வாழ்க்கையை நிரப்புவோமா?

இத்தனை பயணங்களிலும் காரை நிறுத்தி வேப்பமரக் காற்றில் பாய் விரித்து படுக்கும் தனிமையை எங்கு தொலைத்தோம். 

மலை மீது ஏறி நுனிப்பாறையின் விளிம்பில் நின்று அகன்ற பள்ளத்தாக்கை முகத்துக்கு முன் நிறுத்தி எப்போது கத்தித்தீர்த்தோம். 

காற்றின் சீற்றத்தில் ஏரியில் வரும் தொடர் அலைகளை எப்போது கால் நனைக்க கடைசியாக நின்றோம்.

பூமியில் காய்த்த பிரச்சினைகளால் வானத்து மேகங்களும் நம் வாழ்க்கையை விட்டே கண்காணா தூரம் போய் விட்டதா?.

மீண்டும் ஒரு நாள் மறுபடியும் பிறந்து வந்தா கரும்பலகை பார்த்து பள்ளியில் உட்காரப்போகிறோம்.

கொட்டும் அருவியில் குளிக்கும்போது அருவியை மீறி சத்தம் போட்டதுண்டா?

எப்போதாவது ஒரு நாள் கண்ணுக்கு கரை எட்டா தூரம் கடலுக்கு போய் அசையாத படகில் படுத்துக் கொண்டு மாலை நேரத்தில் மங்கும் வெளிச்சத்தில் மின்னல் நடனம் பார்த்து தூரமாய் கொட்டும் மழை பார்த்ததுண்டா?


விளையாத நிலத்துக்காக மழை வேண்டி இறைவனிடம் மண்றாடியது எப்போது?.  

மருந்தை யாசிக்கும் நோயாளிக்கு பணம் தந்து பிணி போக்கி மகிழ்ந்தது எப்போது.?

இரவின் மங்கிய வெளிச்சத்தில் விரும்பி பாடிய பாடல்கள் எப்போது.

வாழ்க்கையின் விசை தொலைபேசியைக்கூட அதன் விருப்பத்துக்கும் அழைப்புக்கும்தான் தொட வைக்கிறது. என் விருப்பம் மெளனிக்க நித்தம் அழைத்து அடிமையாக்கும் தொலைபேசியின் சத்தம் அற்ற நட்ட நடுக்காட்டில் என் கால்கள் மற்றும் கற்பனையில் நடக்க வழக்கம்போல், “வரும்போது பிரட் வாங்கிட்டு வாங்க வில் கற்பனை சுகம் அனைத்தும் சரிந்து விழும் சீட்டுக் கட்டாய்.

எப்போதாவது ஒரு முறை கேட்கும் பழைய பாடலிலும், சின்ன வயதில் பயன்படுத்திய சென்ட்டின் வாசனையில்  தொலைந்து போன இளமையும் , பிள்ளைகளின் கனவை சுமக்க நாம் பொதிகழுதை ஆகிப்போன சூழ்நிலையும் கனவுகளில் மட்டும் வாழசொல்கிறது. விடுமுறையின் விடிகாலை போல் உற்சாகம் தருகிறது. 

உட்கார்ந்திருக்கும் பிச்சைக்காரன் பார்ப்பது தர்மம் போடும் மக்களின் கால்களைத்தான், முடி வெட்டுபவர் பார்ப்பது என்னவோ நடப்பவர்களின் தலையை மட்டும் தான்...எல்லோருக்கும் ஒரு இலக்கு இருக்கிறது. வாழ்க்கையில் பின்னப்பட்ட வலையில் நாம் மட்டும்தான் வாழ மறந்து நமக்காக வாழ்கிறோமா? இலக்கு இல்லாமல்..
 
தேர்வு முடிந்தும் பள்ளிக்குப்போகும் மாணவனாய் மனிதனை மாற்றியது எது?, பின்னப்பட்டது  எதுவும் பிரியாமல் இருக்கிறது, மனிதன் மட்டும் கலைத்து போடப்பட்டானா?.

இனிமேலாவது நம் மனதுக்கு உணவளிப்போம், வயிற்றை நிரப்பியது நாட்களை நகர்த்தவல்ல.நாம் நகராமல் நங்கூரம் போட்டவர்களை அடையாளம் காண்போம்.

மழையில் ஒருமுறையேனும் மொத்தமாக நனைந்து பார்ப்போம்.

சுதந்திர உணர்வுகளை எதில் எல்லாம் தொலைத்தோம்?...
யாரோ ஒருவன் வானத்திலிருந்து குதிப்பதை வேடிக்கை பார்த்து..
யாரோ ஒருவனின் பயணக்கட்டுரை படித்து
யாரோ ஒருவன் ஆழ்கடல் அமிழ்ந்து பார்த்த வர்ண ஜாலங்களில்
யாரோ ஒருவன் சைக்கிளில் உலகம் சுற்றிய செய்தி படித்து...
யாரோ ஒருவனின் பனிமலை ஏற்றத்தை பார்த்து
யாரோ ஒருவனின் பச்சைக்கம்பள வயல் பார்த்து.
யாரோ ஒருவனின் செயல் பார்த்து சொக்கும் நாம் எப்போது நமக்காக வாழப்போகிறோம்.

இன்றைய பொழுதிலாவது சொந்த சிறையின் சுவற்றில் ஒரு சின்ன ஒட்டை போட்டு சுதந்திரம்  சுவாசிப்போம்...


நாளை இதுவே பூமிப்பரப்பை உயரத்திலிருந்து பார்க்கும் சுகந்த  காலங்களுக்கு ஆரம்பமாய்..

உழைத்து களைத்தவர்களின்  வியர்வை துடைக்க துண்டு எடுத்த தரவும் பழைய லெட்ஜர் பார்த்து சேவை செய்யும் இந்த நவீன உலகில் நாம் ஒரு நாள் வாழ்வோம் என்று காத்திருந்தே காலத்தை போக்கிவிடக் கூடாதென்றே இதை எழுதினேன்.

மனசு முழுக்க டன் கணக்கில் கோபத்தையும், வெறுப்பையும் சுமந்து கொண்டு நாம் வாழ முடியாது.

செத்தவனின் கதையை ஒரு வாரத்துக்கு மேல் பேசினாலே 'அலவு வலிக்குதப்பா' என்று ஆதங்கப்படும் உலகம் இது. இது தெரியாமல் உயிரோடு இருக்கும்போது மட்டும் ஏன் நமக்கு ஒரு நூற்றாண்டு பிடிவாதம்.

உங்கள் நடை பாதையெல்லாம் முள்ளை கொட்டியவர்களை மொத்தமாக மன்னித்து விடுங்கள்.  

உங்கள் முதுகுக்கு பின்னால் மண்வாரி வீசி முகத்துக்கு முன்னால் மலர் தூவியவர்களை புன்னகையோடு கைகுலுக்குங்கள். 

குப்பைகளை நெஞ்சில் சுமந்து புனிதம் போதிக்க முடியாது.

தூங்க முடியாத ஏக்கத்துடன் தொலைதூரம் போக முடியாது.

தனிமையும் மெளனமும் உங்களுக்கு மட்டும் உரிய பங்கு போட முடியாது சொத்து.  

இன்றையிலிருந்து உங்களுக்காக வாழுங்கள்.

ZAKIR HUSSAIN

யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் 0

அதிரைநிருபர் பதிப்பகம் | December 22, 2015 | ,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்   

யுவான் ரிட்லி (Yvonne Ridley), நம்மில் பலருக்கும் நன்கு தெரிந்த பெயர். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர். பத்திரிக்கையாளர், சமூக சேவகர், அரசியல்வாதி என்று பல பரிமாணங்களை கொண்டவர். 

இவர் பேச நான் கேட்ட மற்றும் படித்த சில தகவல்களை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ் 
  
இவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி சுருக்கமாக...

அது செப்டம்பர் 2001 ன் பிற்பகுதி, சகோதரி யுவான் ரிட்லி அவர்கள் பிரிட்டனின் சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்காக பணியாற்றிய நேரம். உலகம், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்களால் ஸ்தம்பித்திருந்த நேரம். அமெரிக்காவின் சந்தேகக் கண்கள் அப்கானிஸ்தான் மீதும், அதனை ஆளும் தாலிபான்களின் மீதும் வலுவாக விழுந்திருந்த சமயம்.

இந்த சூழ்நிலையில் தான் யுவான் ரிட்லி அவர்கள், தாலிபான்களை பற்றி செய்தி சேகரிப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து அப்கானிஸ்தானிற்கு புறப்பட்டார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருந்தும் மறைமுகமாக அப்கானிஸ்தானிற்குள் நுழைந்து விட்டார். எப்படி? புர்காவை அணிந்து, எல்லையார மக்கள் செல்வது போல் கழுதையின் மீது பயணம் செய்து அப்கானிஸ்தானிற்குள் நுழைந்து விட்டார்.

உள்ளே நுழைந்த சிறிது நேரத்தில், தாலிபன் வீரர் ஒருவரின் முன், கழுதையிலிருந்து தவறி விழுந்து மாட்டிக்கொண்டார். உளவாளி என்று சந்தேகம் எழுப்பி தாலிபன் அரசாங்கம் அவரை சிறையில் தள்ளியது. பதினோரு நாட்கள் சிறைவாசத்திற்கு பின்பு, அக்டோபர் 9, 2001ல், தாலிபன்களால் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். 

சிறையிலிருக்கும் போது தன்னை ஒரு தாலிபன் வீரர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள அழைத்ததாகவும், தான் மறுத்து விட்டதாகவும், ஆனால் சிறையிலிருந்து வெளியே சென்ற பின் குரானைப்  படிப்பதாக தான் அந்த வீரரிடம் சொன்னதாக யுவான் ரிட்லி பின்னர் தெரிவித்தார்.

கொடுத்த வாக்குறுதியை காப்பதற்காகவும், மேலும் பெண்களின் நிலை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று ஆராய்வதற்கும் குரானைப் படிக்க, 2003 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்...

இனி இவர் சொல்ல நான் படித்த, கேட்ட சில தகவல்கள்...

சிறையிலிருந்த போது... 

"நான் சிறையிலிருந்த நாட்களில், அவர்களை கடுமையாக திட்டிருக்கிறேன், அவர்களை நோக்கி உமிழ்ந்திருக்கிறேன், அவர்கள் தந்த உணவை உண்ணாமல் அவர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறேன். இதையெல்லாம் விட, ஒருநாள், என் ஆடைகளை களைந்துவிட்டு அவர்கள் முன் நின்று அவர்களை சங்கடப்படுத்திருக்கிறேன்.

அப்போது அங்கு வரவழைக்கப்பட்ட தாலிபான்களின் உதவி வெளியுறவுத் துறை அமைச்சர் (Deputy Foreign Misniter) என்னிடம், நீங்கள் இப்படி செய்வது சரியில்லை, உங்கள் ஆடைகளை திருத்திக்கொள்ளுங்கள், உங்கள் செயல் எங்கள் வீரர்களின் மனதில் தவறான எண்ணங்களை விதைக்கக்கூடும் என்றார்.

இன்னும் சில நாட்களில் அமெரிக்கா இவர்கள் மீது குண்டு வீசப்  போகிறது, அதைப்பற்றி இவர்கள் கவலைப்படவில்லை, என் உடையைப்பற்றி தான் அதிகம் கவலைப்படுகிறார்கள். அமெரிக்கா இவர்களை விரட்ட தேவையில்லாமல் பணத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறது, ஆபாசமாக உடையணிந்த பெண்களை இவர்கள் முன்பு அழைத்து வந்தாலே போதும், இவர்கள் ஓடிவிடுவார்கள்"...

சிறையிலிருந்து வெளியே வந்த இவர் தாலிபன்கள் தனக்கு சிறையில் ஒரு <> பெண்ணுக்குண்டான மதிப்பை அளித்ததாக தெரிவித்தார். அவ்வளவுதான். சில ஊடகங்கள் இவருக்கு "ஸ்டாக்ஹோம் சின்றோம் (Stockholm synrome)" பிரச்சனை இருப்பதாக தெரிவித்தன. இந்த பிரச்சனை இருப்பவர்கள், தங்களை கடத்தியவர்களுக்கு சாதகமாக பேசுவார்களாம். அதுசரி...  

தான் சார்ந்த சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிகை தன்னை காப்பாற்ற முயற்சி செய்ததை பற்றி குறிப்பிடும் இவர்,

"சண்டே எக்ஸ்பிரஸ்சின் உரிமையாளர் ஒரு யூதர். அவர் என்னைக் காப்பாற்ற ஒரு குழுவை அமைத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள தாலிபன் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு கொடுத்துவிடுங்கள், எப்படியாவது ரிட்லியை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டுவிட்டார்.

அவர் அமைத்த குழுவின் தலைவர் தாலிபன்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் அவர் சண்டே எக்ஸ்பிரஸ் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசினார்.

அவர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டீர்களா? ஒரு மில்லியன், இரண்டு மில்லியன்?

இல்லை சார், நான் கொண்டுச்சென்ற காசோலையை திரும்ப கொண்டு வந்துவிட்டேன். அவர்களுக்கு பணமெல்லாம் வேண்டாமாம்..

என்ன பணம் வேண்டாமா, வேறு என்ன வேண்டுமாம், ஆயுதங்களா?

இல்லை சார், அவர்களுக்கு எதுவும் வேண்டாமாம், நம்மைப் போன்றவர்கள் அவர்களுக்கு குறைந்தபட்ச  மரியாதை அளித்தால் போதுமாம்.

இதனை அந்த குழுத்தலைவர் என்னிடம் விவரித்தார். தாலிபன்கள் மீதான வெறுப்பு உச்சத்தில் இருந்த நேரமது. அவர்கள் சொல்லியதில் நிறைய அர்த்தமிருக்கிறது. மேலும் சண்டே எக்ஸ்பிரஸ் குழுவினர் என்னை காப்பாற்ற எடுத்த முயற்சி அளப்பறியது"                

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே, அதாவது இஸ்லாத்தை பற்றி படித்துக்கொண்டிருந்த போதே,  மது அருந்துவதை நிறுத்தி விட்டார்.

"இஸ்லாம் என் வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை தந்துவிட்டது. நான் மதுவை நிறுத்தி விட்டேன். இனி தொலைப்பேசியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, ஆண் நண்பர்களிடமிருந்து பார்ட்டிகளுக்கு செல்ல எப்போது அழைப்பு வரும் என்று எதிர்ப்பார்க்கவும் போவதில்லை"

<>இவருக்கு இஸ்லாத்தில் உள்ள சந்தேகங்களை களைய பெரிதும் உதவியது, பிரிட்டன் ஊடகங்களால் அடிப்படைவாதி என்றும் தீவிரவாத எண்ணங்களை உருவாக்குபவர் என்றும் சொல்லப்பட்ட பின்ஸ்பரி பார்க் (Finsbury Park Mosque, North London) மசூதியின் இமாம் அபு ஹம்சா அல்-மஸ்ரி.   

"அவர் எனக்கு மிகவும் உதவியிருக்கிறார். ஒருமுறை எனக்கு அவரிடமிருந்து அழைப்பு.

சகோதரி, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்காக வாழ்த்துக்கள். 

இல்லை இல்லை, நான் இன்னும் தெரிந்துக்கொள்ளவேண்டியது இருக்கிறது.

அப்படியா, ஒன்றும் அவசரமில்லை, நன்றாக ஆராய்ந்து செயல்படுங்கள். உங்களுக்கு உதவி தேவையென்றால் முஸ்லிம் சமுதாயமே உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறது. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், நமக்கு மரணம் எப்போது வேண்டுமென்றாலும் வரலாம். நாளையே நீங்கள் இறந்தால் நீங்கள் சேருமிடம் நரகம்தான்...

ஊடகங்களோ இவரை தவறாக சொல்கின்றன, ஆனால் இவரோ மிகவும் கண்ணியமானவராக தெரிந்தார். அவர் சொன்ன அந்த வார்த்தைகள் என்னை மிகவும் பாதித்தன.அந்த வார்த்தைகள் நான் இஸ்லாத்தை ஏற்கும்வரை என்னுள் ஒலித்துக்கொண்டிருந்தன"

யுவான் ரிட்லி அவர்கள் தான் இஸ்லாத்திற்கு வந்தவுடன் தன்னால் பின்பற்றுவதற்கு மிகவும் கடினமாக இருந்ததாக குறிப்பிட்டது ஐந்து வேலை தொழுகைகளைத்தான். இப்போது அவர் அதனை நிவர்த்தி செய்து கொண்டு விட்டார். அல்ஹம்துலில்லாஹ்                           

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகளை கடுமையாக விமர்சிப்பவர்...

அமெரிக்காவின், தீவிரவாதத்தின் மீதான போரானது, உண்மையில் இஸ்லாத்தின் மீதான போர் என்று கூறியவர்.

தான் சிறையிலிருந்தபோது இஸ்ரேலின் உளவுத்துறை தன்னை கொல்ல சதி செய்ததாகவும், அதன்மூலம் தாலிபன்களின் மீதான போருக்கு ஆதரவு கூடுமென அவர்கள் திட்டம் தீட்டியதாகவும் கூறியவர்.

பல சமயங்களில் சகோதரி யுவான் ரிட்லி அவர்களின் வார்த்தைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஒரு முறை அவர் கூறினார்...

"கோக கோலாவை (Coca Cola) முஸ்லிம்கள் குடிப்பது நம் பாலஸ்தீனிய குழந்தைகள் மற்றும் சகோதரிகளின் ரத்தத்தை குடிப்பதற்கு ஈடாகும். இதற்கு நாம் நேரடியாக இஸ்ரேலிய ராணுவத்திடம் சென்று குண்டுகள் கொடுத்து நம் பாலஸ்தீனிய மக்களை சுடச்சொல்லலாம்"

ஆவேசமாக பேசக்கூடியவர், நகைச்சுவை உணர்வு மிக்கவர், மிகுந்த துணிச்சல்காரர்.
  • அரசுகளால் தீவிரவாதிகள் என்று கூறப்படும் சிலருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தவர்.
  • ஒருமுறை சவூதி இளவரசரிடம் கைக்குலுக்க மறுத்து தன் வேலையை இழந்தவர்.
இப்படி பல சொல்லலாம்.

முஸ்லிம்களுக்கெதிரான செயல்களை கண்டித்து பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். 

ஒருமுறை "ஏன் சிலர் (Islamophobes) முஸ்லிம்களை கண்டால் பயப்படுகிறார்கள்" என்று ஒருவர் கேட்டதற்கு, "நாம் அல்லாஹ்விடம் பயப்படும்வரை அவர்கள் நம்மை பார்த்து பயந்து கொண்டுத்தான் இருப்பார்கள் (They will fear us until we fear Allah(swt))" என்று கூறியவர்.

மேலும் "ஏனென்றால், நாம் அல்லாஹ்விடம் பயப்படும்வரை, நமக்கு மது தேவையில்லை, பார்ட்டிகள் தேவையில்லை, பப்புகள் (pub) தேவையில்லை, இப்படி அவர்கள் வியாபாரத்தை பெருக்ககூடிய பல நமக்கு தேவையில்லை. இதனால் தான் பயப்படுகிறார்கள்"

தன்னை மிகுந்த நெகிழ்ச்சி அடையச்செய்த ஒரு நிகழ்ச்சியாக அவர் கூறியது...

"எனக்கு இறைவன் ஹஜ் செய்யக்கூடிய பாக்கியத்தை நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சில வருடங்களிலேயே கொடுத்தான். ஒருமுறை தொழுகைக்கு தாமதமாகிவிட்டது. பாங்கு சொல்லிவிட்டார்கள். நான் அவசர அவசரமாக ஓடுகிறேன், அங்கே சென்றால் என்னைப்போல பலரும் தாமதம். நாங்கள் எல்லோரும் முட்டிமோதி கொண்டிருக்கிறோம் பள்ளிவாயிளுக்குள் நுழைய. ஒரே குழப்பம்.

அப்போது தக்பீர் சொல்லப்பட்டது. நான் என் தொழுகை விரிப்பை சாலையிலேயே விரித்து விட்டேன். அப்போது பார்க்கிறேன் என் முன்னும் , பின்னும் ஆயிரக்கணக்கான மக்கள், மிக அழகாக வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள், மிக அதிக ஒழுக்கத்துடன். சில நொடிகளுக்கு முன் குழப்பங்களுடன் இருந்த இடமா இது?

நான் சொல்லுகிறேன், உலகில் எந்த ஒரு ராணுவமும் இப்படி ஒரு ஒழுங்கை ஒருசில நொடிகளில் கொண்டுவரமுடியாது. பாருங்கள் என் குடும்பத்தை, இதுதான் எங்கள் ஒற்றுமை, இதுதான் எங்கள் சகோதரத்துவம்.

இந்த சகோதரத்துவத்தை நாம் என்றென்றும் கடைப்பிடித்திருந்தால், இன்று அவர்கள் நம் நாடுகளை நெருங்கியிருக்க மாட்டார்கள். நம் சகோதரர்களை கொடுமைப்படுத்த மாட்டார்கள்"      

ஹிஜாப்பைப் பற்றி இவர் சொல்ல கேட்கனுமே...அடடா...

"ஹிஜாப் எங்கள் உரிமை. நான் முஸ்லிமென்பதை காட்டுகிறது. என்னிடம் மதுவை நீட்டவேண்டாம் என்று சொல்கிறது, என்னிடம் தவறான பேச்சுக்களை பேச வேண்டாம் என்று சொல்கிறது. இது ஏன் இவர்கள் கண்களை உறுத்துகிறது? என் பண்புகளை பார்த்து இவர்கள் என்னை மதிக்கட்டும், என் உடைகளை பார்த்தல்ல. அப்படி என் உடைதான் இவர்களுக்கு முக்கியம் என்றால் அவர்கள் நட்பு எனக்கு தேவையில்லை. ஹிஜாப் அணியாத முஸ்லிம் பெண்கள், ஹிஜாப் அணியாததற்கு எந்த ஒரு ஆதரவையும் என்னிடம் எதிர்ப்பார்க்க வேண்டாம்"  

ஒருமுறை ஒரு நாட்டில் நடந்த கலந்துரையாடலில், ஒரு பெண் இவரிடம்,

"இந்த நாடு தான் மிகுந்த வெப்பமுள்ள நாடாயிற்றே...இங்கேயும் நீங்கள் ஏன் ஹிஜாப் அணிந்திருக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு,

சகோதரி யுவான் ரிட்லி அவர்கள் சொன்ன பதில், "நரகம் இதைவிட வெப்பமாய் இருக்கும், பரவாயில்லையா?" என்பது...

இறைவன், தான் நாடியவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்து வரும் ஒவ்வொரு விதமும் வியப்பைத் தருகின்றன. அவர்களின் மூலம் அவன் நிறைவேற்றும் காரியங்களும் நம் கற்பனைக்கெட்டாதவை. எல்லாப் புகழும் இறைவனிற்கே...

சமீபத்தில் நான் கண்டு வியந்த மற்றுமொருவர் சகோதரர் ஜோஷுவா எவன்ஸ் (Br.Joshua Evans) அவர்கள். இவருடைய "How the Bible led me to Islam" என்ற வீடியோவை பாருங்கள், யு டியுப்பில் கிடைக்கிறது. இவர்களைப் போன்றவர்களை பார்க்கும் போதெல்லாம் என்னிடம் பல கேள்விகள் எழுகின்றன. அவற்றில் முக்கியமான கேள்வி "Did I took Islam for Granted?" என்பதுதான்...


யுவான் ரிட்லி அவர்களுக்கு தற்போதிருக்கும் ஒரு மிகப்பெரும் ஆசை, தன் மகள் டைசி (Daisy) இஸ்லாத்தின்பால் வரவேண்டும் என்பதுதான்.  

"ஆம், அவள் வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். ஆனால் அவளாக வரவேண்டும்" 

ஒருமுறை யுவான் ரிட்லி அவர்கள் மிக அழகாக சொன்னது...

"இஸ்லாத்தில், இறைநம்பிக்கையை வைத்தே ஒருவர் உயர்நிலையை அடைய முடியும், அழகினாலோ, வைத்திருக்கும் பணத்தினாலோ, பதவியினாலோ அல்ல"    

அவர் சொன்ன இந்த குரானின் அர்த்தங்கள் நம்மிடம் என்னென்றும் இருக்க வேண்டும், நிலைக்க வேண்டும்.

இறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவானாக...ஆமின்

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்... 

References:
1. Sister Yvonne Ridley's Speech at Reverts Meeting, New Zealand, 2005
2. Sister Yvonne Ridley's Interview at "The Hour", Canadian Broadcasting Corporation TV   
3. Sister Yvonne Ridley's interview with BBC, dated 21st Spetember 2004.
4. Sister Yvonne Ridley's Interview with Rachel Cooke, The Guardian dated 6th July 2008.
5. How I come to love the Veil, interview with Sister Yvonne Ridley, The Washington Post dated Oct 22, 2006


உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ
நன்றி : http://www.ethirkkural.com/2010/03/blog-post.html


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)