Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எங்கே அமைதி...? - (டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் ) 3

அதிரைநிருபர் பதிப்பகம் | December 31, 2015 | , , , ,

அமைதி இன்றைய நிலை!

உலகின் முதல் அணுகுண்டு, விஞ்ஞானி ஓப்பன் ஹெய்மர் தலைமையில் தயாராகி வந்த வேளை அது.

அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. அங்கே இந்த விஞ்ஞானி அணுகுண்டு வெடித்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை பற்றி விளக்கிச் சொன்னார்.

“இந்த அணுகுண்டின் தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் ஏற்பாடு உள்ளதா?”

“ஆம்” என்றார் விஞ்ஞானி. “என்ன அது?” என அனைவரும் ஆர்வத்தோடு கேட்டார்கள்.

“அது சமாதானம்” என்றார்.

‘என்ன விலை கொடுத்தேனும் அமைதியை வாங்க வேண்டும்’ என்பதே ஒவ்வொரு மனிதனின் ஆசையுமாகும்.

இறைவனிடத்தில் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டுமே பிரார்த்தனை புரிய வேண்டும் என்று ஒருவனுக்குக் கட்டளையிடப்பட்டால் அறிவும் அனுபவமும் உள்ள மனிதன் ‘இறைவா! எனக்கு அமைதியைத் தா’ என்றே பிரார்த்தனை புரிவான்.

கல்வி, செல்வம், பதவி, புகழ், வீரம் எல்லாமிருந்தும் வாழ்க்கை அமைதியற்றதாகி விட்டது; அர்த்தமற்றதாகி விட்டது. இது போலவே ஒரு நாட்டில் பொருள் வளம், மனித வளம், இயற்கை வளம், அறிவு வளம் எல்லாமிருந்தும் மக்கள் அமைதியாக வாழ முடியாத அளவுக்கு வன்முறைகளும், குற்றங்களும் நிகழுமாயின் அந்த நாட்டை ‘வளர்ந்த நாடு’ என்று கூற முடியாது.

அமைதியுள்ள மனிதனே மனிதரில் சிறந்தவன் !

அமைதியுள்ள நாடே பாருக்குள்ளே நல்ல நாடு !

அமைதியை விரும்பாதவர் எவருமில்லை. அமைதியைக் குலைப்பவர்களும் அமைதியையே விரும்புகிறார்கள். உலக நாடுகளுக்கிடையே சண்டைகளை மூட்டி விட்டு இராணுவத்தளவாடங்களை விற்பனை செய்யப் போட்டி போடும் வல்லரசுகளும் தங்கள் நாடுகள் அமைதியாக இருக்க வேண்டும் என்றே எண்ணுகின்றன.

உலக அளவில் ஆயுத விற்பனை செய்வதில் அமெரிக்காவுக்கே முதலிடம் ! 1990 – ஆம் ஆண்டில் மட்டும் 7.1 பில்லியன் டாலருக்கு ஆயுதங்களை அந்நாடு விற்பனை செய்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகள் வாங்கிய ஆயுதங்களில் 65 விழுக்காடு அமெரிக்காவிலிருந்து வாங்கப்பட்டவையே ! (Report by Congressional Research Service – CRS – Hindu 08.08.99) ஆனால் உலக நாடுகளில் அமைதி, மனித உரிமைகள், அணு ஆயுதத்தடுப்பு ஆகியவற்றைப்பற்றி வாய் கிழிய பேசுவதில் இவர்களே வல்லவர்கள் !

எதிர்க்கட்சியாக இருக்கும் போது கலவரங்களையும், மோதல்களையும் தூண்டிவிடுபவர்கள், ஆளும் கட்சியாக மாறுகின்ற போது அமைதியாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். ‘பாருங்கள்…! நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து எந்தக் கலவரமும் நிகழ்ந்ததில்லை’ என்று மார்தட்டிக் கொள்கின்றனர்.

அனாவசியமாக அடுத்தவர் விவகாரத்தில் தலையிட்டுக் குட்டையைக் குழப்புகின்றனர். அமைதியைக் கெடுப்பவர்கள் தாம் மட்டும் அமைதியாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

ஆதிக்கக்காரர்கள், தன்னலவாதிகள் ஆகியோரின் தூண்டுதலுக்குப் பலியாகி கலவரங்களில் ஈடுபட்ட பொதுமக்களும் இறுதியில் தமது தவறை உணர்ந்து அமைதிக்காக ஏங்கி அலைகின்றனர். எங்களை அமைதியாக வாழவிடுங்கள் என்று ஆதிக்கக்காரர்களுக்கு ஆணையிடுகின்றனர்.

ஆண்டுக் கணக்கில் போர் ! ஆயிரக்கணக்கில் சாவு ! கோடிக்கணக்கில் பொருட்சேதம் ! இதற்குப் பிறகு அமைதிப் பேச்சில் ஈடுபடுவதைத் தவிர வேறுவழியில்லை என்ற முடிவுக்கு வருகின்றனர்!

அமைதி – இன்றைய நிலை

அமைதிக்காக ஏங்குகிறது மனித சமூகம். அது விரும்பிய அமைதி கிட்டியதா?

தனிமனிதனுக்கு அமைதியில்லை. வீட்டிலும் அமைதியில்லை. சமூகத்திலும் அமைதியில்லை. நாட்டிலும் அமைதியில்லை. சர்வதேச அளவிலும் அமைதி இல்லை.

பெருகிவரும் மனநோய்களும் தற்கொலைகளும் தனிமனித அமைதியின்மைக்குச் சான்று ! மன நோய்கள் மட்டுமல்ல; உடல் நோய்களும் அமைதியற்ற மனநிலையால் உருவாகுகின்றன. அமெரிக்க மக்களில் அறுபது சதவீதத்தினர் மனநல மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுகின்றனர். உலகிலேயே மக்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தி வரும் ஸ்வீடனிலும் சுவிட்சர்லாந்திலும்தான் அதிக அளவில் தற்கொலைகள் நிகழ்கின்றன என்று கூறுகிறது. ஒரு பத்திரிகைக் குறிப்பு. ஒவ்வொரு எட்டு விநாடிக்கும் உலகில் ஒருவர் தற்கொலைக்கான முயற்சியில் ஈடுபடுகிறார்.

பெருகி வரும் மணமுறிவுகள் இல்லற வாழ்வின் அமைதியின்மையை உணர்த்துகின்றன. இங்கிலாந்தில் மூன்றில் ஒரு திருமணம் மணமுறிவில் முடிகின்றது. ஸ்வீடன், டென்மார்க், நார்வே, ஐஸ்லாண்ட், (Scandinavian Countries) முதலிய நாடுகளில் ஏழில் நான்கு திருமணங்கள் மணமுறிவில் முடிகின்றன. “அமெரிக்காவில் தற்கொலைக்கான முக்கியக் காரணம் மணமுறிவே ஆகும். “(The Detrioit செப்டம்பர் 1,1995)

பிள்ளைகள் – பெற்றோர்கள் உறவில் ஏற்படும் விரிசலுக்கு சாட்சியாக விளங்குகின்றன. முதியோர் இல்லங்கள். பல ஆண்டுகள், தனக்காகவும், குடும்பத்திற்காகவும் உழைத்தவர்கள் தமது வாழ்வின் மாலைப் பருவத்தை வீட்டில் குடும்பத்தினரோடு அமைதியாகக் கழிக்க வேண்டிய முதியவர்கள் தனிமையில் மன உளைச்சலோடு முதியோர் இல்லங்களில் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

துள்ளித்திரியும் பதின்பருவத்தினரும் (Teenage) அமைதியிழந்து தவிப்பதும் இந்த நூற்றாண்டு வேதனைகளில் ஒன்று. இளம் வயதுக் குற்றவாளிகள் பெருகிய வண்ணம் உள்ளனர். நாட்டில் நடைபெறும் மொத்தக்குற்றங்களில் 56 விழுக்காடு குற்றங்கள் 16 முதல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களால் நிகழ்த்தப்படுகின்றன. போதைப் பொருட்களுக்குப் பலியாகி இளமையைத் தொலைத்துவிட்டு பரிதாபமாகக் காட்சி தருகின்றனர்.

பள்ளிச் சிறுவர்கள் துப்பாக்கிகளோடு பள்ளிக்கூடத்திற்கு வந்து சக மாணவர்களைச் சுட்டுக் கொல்லும் நிகழ்ச்சியும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. அமெரிக்க மக்கள் தொகை 25 கோடி. அமெரிக்காவில் தனியார் வசமிருக்கும் கைத்துப்பாக்கிகளின் எண்ணிக்கை 20 கோடி (PTI செய்தி) சராசரியாக ஒருவருக்கு ஒரு துப்பாக்கி !

சாதி, மதம், இனம், மொழி, பிராந்தியம் ஆகியவற்றின் அடிப்படையில் வன்முறை நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

“எவர் குருதியும் சிவப்பு தான்

எவர் கண்ணீரும் உப்பு தான்”

என்று புத்தன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் ஜாதிக்கொடுமைக்கு எதிராகப் புயலாக எழுந்து நின்றான். ஆனால் இந்த நூற்றாண்டிலும் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை, கிராமங்களில் இரட்டைக் கிணறு, இரட்டை மயானம், இரட்டைப் பாதை என்ற நிலை தொடர்கிறது. தீண்டாமை மட்டுமல்ல பார்க்காமை, பேசாமை, நெருங்காமை, நிழல்படாமை ஆகிய அனைத்துக் கொடுமைகளும் நிகழ்த்தப்படுகின்றன.

இந்திய மக்களின் அமைதியைக் குலைப்பதில் வகுப்புக் கலவரங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. மதத்தின் பேரால் நமது நாட்டைப் போன்று உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இத்தனைக் கலவரங்கள் நிகழ்வதில்லை.

நாடுகளுக்கிடையில் நடந்து வரும் மோதல்களும் உச்சகட்டத்தை அடைந்துள்ளன. போஸ்னியா, கொசாவோ, ருவாண்டா, அயர்லாந்து, இலங்கை, காஷ்மீர், பாலஸ்தீனம் என உலகில் பல பகுதிகளிலும் தொடர்ந்து பிரச்னைகள் ஒரு மூத்த பத்திரிகையாளரின் கணிப்புப்படி உலகில் பல்வேறு இடங்களில் -116-க்கு மேற்பட்ட இடங்களில் மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளன.

நொடிப்பொழுதில் உலகத்தைத் தரைமட்டமாக்கும் வலிமை வாய்ந்த அணுகுண்டுகள், மக்களைக் கூண்டோடு அழிக்கும் இரசாயன ஆயுதங்கள் (Chemical Weapons) நோய்களை உண்டாக்கும் உயிரி ஆயுதங்கள் (Biological) ஆகியவற்றைப் பெறுவதில் உலக நாடுகளுக்கிடையே போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டியில் பங்கு பெறும் அனைத்து நாடுகளும் அமைதிக்காகவே இவற்றைத் தயாரிக்கிறோம் என்று கூறுகிறார்கள்.

விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் ஒருவர் ‘மூன்றாவது உலகப் போர் மூண்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். ‘என்னால் நான்காவது உலகப் போரைப் பற்றி மட்டுமே சொல்ல முடியும்’ என்று பதில் தந்தார் ஐன்ஸ்டீன். மேலும் அவர் ‘நான்காவது உலகப் போர் நடைபெறாது. ஏனெனில் மூன்றாவது உலகப் போரிலேயே உலகம் முழுமையாக அழிந்து போகும்’ என்றார்.

இவ்வாறு தனிமனிதனும், வீடும், நாடும் இன்று அமைதியின்றித் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அமைதியைத் தொலைத்துவிட்ட மனிதன் அமைதியைத் தேடி ஆலாய்ப் பறக்கின்றான்.

பிரார்த்தனை, யாகம், வேள்வி, தியானம், யோகா போன்ற வழிகளில் அமைதியைக் காண விழைகின்றான்.

உலகப்பற்றை ஒழித்து தனிமையில் தவம் புரிந்தால் அமைதி கிட்டும் என்பது சிலருடைய நம்பிக்கை !

இயற்கை எழில் சூழ்ந்த அமைதியான ஆரவாரமற்ற இடங்களுக்குச் சென்று அமைதி பெறத் துடிக்கிறான்.

‘வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்ற பழமொழிக்கேற்ப நகைச்சுவை மன்றங்களுக்கும் அமைதி நாடிச் செல்பவர் உளர்.

இசை, ஆடல், பாடல் இவற்றில் லயித்து அமைதி பெற எண்ணுபவர் பலர்.

அமைதிக்காக போதை மருந்து, தூக்க மாத்திரை இவற்றை நாடிச் செல்பவர்களும் உள்ளனர்.

ஆனால் அமைதி ஒன்றும் அப்படி எளிதில் கிடைத்து விடுவதல்ல ! ஒருவேளை கிடைத்துவிட்டாலும் அது தற்காலிகமானது. தொடக்கத்தில் குறிப்பிட்டது போல் அமைதி பலவழிகளில் சீர்குலைக்கப்பட்டிருக்கிறது. எனவே அதனை அடையும் வழிகளும் பலவாகும்.

அமைதியை தனிமனித அமைதி, சமூக அமைதி, இறைவனுடன் பெறும் அமைதி எனப் பிரிக்கலாம். இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை; அமைதியற்ற மனிதன் அமைதியற்ற சமூகத்தை உருவாக்குகிறான்; அமைதியற்ற சமூகம் அமைதியற்ற மனிதனை உருவாக்குகிறது.

பேராசை, பொறாமை, புகழ்வெறி, பதவி வெறி, ஆதிக்க உணர்வு உள்ள மனிதர்கள் தங்களது அமைதியையும் இழந்து விடுவதோடு சமூகத்தின் அமைதியையும் கெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். பதவி வெறி பிடித்த அரசியல்வாதியால் நாட்டின் அமைதி எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

வறுமை, சாதி மத வெறி, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை முதலிய கொடுமைகள் நிரம்பிய சமூகம் அமைதியற்ற மனிதனை உருவாக்குகிறது. சமூகம் தீமைகளால் சூழப்பட்டிருக்கின்ற போது அதில் வாழும் மனிதன் மட்டும் எப்படி அமைதியாக வாழ முடியும்?

சாதி வேண்டாம் என்று தனிமனிதன் கூறினாலும் சாதி அமைப்பிலிருந்து அவனால் விடுபட முடியவில்லை. சாதியை அவன் விட்டாலும் சாதி அவனை விடுவதாக இல்லை. சாதியைப் பொருட்படுத்தாது அவன் திருமணம் செய்ய விரும்பினால் சமூகம் அவன் மீது சாதியைத் திணிக்கிறது.

இலஞ்சம் வாங்குவதை ஒருவன் வெறுத்தாலும் இலஞ்சம். கொடுத்தே ஆக வேண்டிய நிலைமையில் இருக்கிறான்.

ஆபாசத்தை வெறுப்பவர்களும் ஆபாசமே ‘வாழ்க்கை முறை’ என்றாகி விட்ட சமூகத்தின் பாதிப்பிலிருந்து தப்ப முடியவில்லை.

எனவே அமைதியை உருவாக்க விரும்புபவர்கள் இவ்விருவகை அமைதியின்மை பற்றியும் சிந்திக்க வேண்டும். பொதுவாக சமயவாதிகள் அல்லது ஆன்மீகவாதிகள் தனிமனித அமைதி பற்றி மட்டுமே பேசுவார்கள். அவர்கள் தரும் தீர்வுகள் பிரார்த்தனை, வழிபாடு, தியானம் என்ற அளவிலேயே அமைந்திருக்கும். ஆனால் சமயச்சார்பற்ற கொள்கையுடையவர்கள் சமூக, அறிவியல், பொருளாதார விஷயங்களைப் பற்றியே அதிகம் பேசுவார்கள். தனிமனித ஒழுக்கம், அமைதி, சீர்திருத்தம் ஆகியவை பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். தனிமனிதனும், சமூகமும் அமைதி பெறும் போதுதான் உண்மையான, முழுமையான அமைதி மலர முடியும்.

தனி மனித அமைதி

சமூக அமைதி

இவ்விரண்டையும் நிலைநாட்ட வந்த சமயமே இஸ்லாம்.

இஸ்லாம் என்ற சொல்லுக்கு அமைதி என்றும், கீழ்ப்படிதல் என்றும் பொருள். பொதுவாக சமயங்களின் பெயர்கள் அச்சமயத்தை நிறுவியவர்கள் அல்லது அவை தோன்றிய இடம் ஆகியவற்றோடு தொடர்புடையவையாக இருக்கும். ஆனால் இஸ்லாம் இதனின்று மாறுபட்டு ‘அமைதி மார்க்கம்’ என்று அழைக்கப்படுகிறது.

பெயரில் மட்டும் ‘அமைதி’ என்பதை வைத்துக்கொண்டு, அமைதியைப் பற்றி பேசாது அமைதியாக இருந்து விடும் சமயமல்ல ! அதன் ஒவ்வொரு அடியும் அமைதியை நோக்கி எடுத்து வைக்கப்படுகிறது.

ஒருவரைச் சந்திக்கும் போது சொல்ல வேண்டிய முகமன் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ உங்கள் மீது சாந்தி உண்டாகுக என்பதே.

வீட்டினுள் நுழையும்போதும் (திருக்குர்ஆன் 24:27) தொழுகையை முடிக்கும் போதும் ‘அமைதி உண்டாகுக’ என்றே கூற வேண்டும்.

இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் பகுதிக்கு ‘தாருல் இஸ்லாம்’ அமைதியின் இருப்பிடம் எனப் பெயர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா எனும் நகர் வந்து இஸ்லாமிய அரசை நிறுவினார்கள். அவர்கள் மதீனாவில் நுழைந்தவுடன் மக்களை நோக்கிச் சொன்னார்கள்:

“அமைதியைப் பரவலாக்குங்கள். உணவு அளியுங்கள். இரத்தபந்த உறவுகளை உறுதிப்படுத்துங்கள். இரவில் மக்கள் உறங்கும் வேளையில் தொழுகையில் ஈடுபடுங்கள். நீங்கள் சுவனம் புகுவீர்கள்!”

(நூல் : திர்மிதி, இப்னு மாஜா)

அமையப் போகின்ற இஸ்லாமிய அரசு எத்தகையதாக இருக்கும் என்பதற்குக் கட்டியம் கூறுவது போல் அமைந்துள்ளது பெருமானாரின் இக்கூற்று.

“தொழுகை, நோன்பு, தர்மம் ஆகியவற்றைவிட சிறந்த செயல் ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என வினவினார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். “கட்டாயம் அறிவியுங்கள்” என்றனர் நபித்தோழர்கள். மக்களுக்கிடையில் சமரசம் செய்து வையுங்கள்; உறவுகளை சீர்குலைப்பதே அழிவுக்கான காரணமாகும்” என்றார்கள் நபிகள் நாயகம். (திர்மிதி)

“குழப்பம் விளைவிப்பது கொலையைவிடக் கொடியது.” (திருக்குர்ஆன் 2 :27)

“பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள். உண்மையில் நீங்கள் இறைநம்பிக்கை கொண்டவராயின் இதில்தான் உங்களுக்கு நன்மை இருக்கின்றது.” (திருக்குர்ஆன் 7 :85)

“குழப்பம் விளைவிப்பவன் சுவனம் புகமாட்டான்.” (புகாரி, முஸ்லிம்)

மேற்குறிப்பிட்ட திருக்குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் மட்டுமே அமைதியைப் பற்றிப் போதிக்கின்றன என்பதல்ல. திருக்குர் ஆனின் எல்லா வசனங்களும், நபிகள் நாயகத்தின் ஒவ்வொரு சொல்லும் செயலும் அமைதிக்கு வழிவகுப்பதாகவே அமைந்துள்ளன. எனவேதான் இறைவன் தான் அருளிய சமயத்திற்கு ‘இஸ்லாம்’ ‘அமைதி’ என்று பெயரிட்டான். இவ்வுலகில் மனிதன் அமைதியாக வாழ வேண்டும். மறுமையில் அமைதியின் இருப்பிடமாம் சுவனத்திற்குச் செல்ல வேண்டும். இதுவே இறைவனின் விருப்பமாகும்.

அமைதிக்கான வழிகளைக் காட்டுவதற்காகவே மனிதர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தன் தூதர்களாக நியமித்து, அவர்கள் வாயிலாக அமைதிக்கான அனைத்து வழிகாட்டுதல்களையும் இறைவன் வழங்கினான். இத்தூதர்கள் இறைக்கோட்பாடுகளை மக்களுக்கு விளக்கியதோடு அமைதியை நிலை நாட்டும் பணியிலும் ஈடுபட்டனர். முதல் மனிதராகிய ஆதம் முதல் இறைத்தூதர் ஆவார். அவரைத் தொடர்ந்து தூதர்கள் பலரை உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் இறைவன் நியமித்தான். அந்த வகையில் இறுதியாகப் பணியாற்றியவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களாவார்.

இறைவனுன் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தும் சமுதாயமே அமைதி பெறும். இஸ்லாம் என்ற சொல்லுக்கு அமைதி, கீழ்ப்படிதல் என இரு பொருள் உண்டு என்பதை தொடக்கத்தில் பார்த்தோம். இறைவனின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்தால் அமைதி கிட்டும். இறைவழிகாட்டுதலை மீறினால் அமைதி மறுக்கப்படும் என்பதே அச்சொல் நமக்கு உணர்த்தும் பாடமாகும்.

‘சாந்தி உண்டாகும் (இறைவனின்) நேர்வழியைப் பின்பற்றி நடப்போருக்கு’ (குர் ஆன் 20 : 47) எனும் இறைவசனமும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறது.

மனிதர்கள் அனைவரும் ஒரு ஆண் பெண்ணின் வழித்தோன்றல்கள். ஒரே ஆன்மாவிலிருந்து பிறந்தவர்கள். எனவே அனைவரும் சகோதரர்கள் எனும் இறைக்கருத்தை மறுத்து மனிதர்களை நாம் பல வர்ணங்களாகப் பிரித்தோம். அதன் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்தோம். விளைவு சாதி இன மோதல்கள் !

மதுவை தீமைகளின் பிறப்பிடம் என்கிறது இறைக்கோட்பாடு ! அதனை வருமானங்களின் பிறப்பிடம் எனக்கருதி அதனைத் திறந்துவிட்டோம். விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

வட்டி ஒரு சுரண்டல்; ஒரு கொடுமை என்ற இறைக்கோட்பாட்டை ஏற்க மறுத்து வட்டியின்றி பொருளியலே இயங்க முடியாது என்ற நிலையை உருவாக்கினோம். பணவீக்கம், விலைவாசி உயர்வு, ஏழைகளும், ஏழை நாடுகளும் சுரண்டப்படுதல், அடிமைப்படுத்தப்படுதல் போன்ற பல கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றோம் !

‘மானக்கேடானவற்றிற்கு அருகில் கூட நெருங்காதீர்கள்’ என்ற இறைக் கோட்பாட்டை மீறியதால் ஏற்பட்ட விளைவுகள் விபச்சாரமும், கருக்கலைப்பு, பால்வினை நோய்கள், எய்ட்ஸ்…!

இப்படி வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் இறைச்சட்டங்களை மீறிய போதெல்லாம் மனித சமூகம் அமைதியை இழந்து விடுகின்றது. எனவே அமைதியைப் பெறுவதற்கான ஒரே வழி –

“படைத்தவனின் பக்கம் திரும்புவதே !”

(திருக்குர்ஆன் 94 :8)

“இறைவனின் பக்கம் விரைந்து வருவதே !” (திருக்குர்ஆன் 51 :50)

( எங்கே அமைதி …? எனும் நூலிலிருந்து )

பரிந்துரை : அதிரை அஹ்மது

திருமணத்திற்கு முன்பும் பின்புமான கவுன்சிலிங் - `சமரசம்` - வழங்கிய புத்தக மதிப்புரை ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | December 30, 2015 | , ,

மிகச் சிறந்த குடும்பநல ஆலோசனை நூல் என சமரசம் இதழ் வழங்கியிருக்கும் புத்தக மதிப்புரையே பரைசாற்றுகிறது...!

இல்லறம் நல்லறமாகவும்... கொண்டவனின் கொடையானவளும் குதுகாலிக்க சிறந்ததொரு ஆலோசனையை வழங்கியிருக்கும் இந்த நூல் இல்லற வாழ்வில் ஈடுபட முயலும் ஒவ்வொருவரின் கையிலும் தவழ வேண்டிய நூல் எனவும் பரிந்துரைக்கிறது `சமரசம்.`


பரிந்துரை : இப்னு அப்துல் ரஜாக்

ஹிஜாப் ஒரு கவசம்! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | December 29, 2015 | , ,

அழகு...
ஓர் அழைப்பிதழ்!
முத்திரையிடு
முகவரியிடு - அன்றேல்
உரியவரைச் சென்று
சேராமல் போய்விடும்
ஊரில் போய்
சோரம் போய்விடும்

அழகு...
ஓர் அறுசுவையுணவு!
நாற்சந்தி தள்ளுவண்டிபோல்
திறந்து போடாமல்
நட்சத்திர அந்தஸ்த்தாக
மூடி வை  - தவறினால்
ஈயென மொய்க்கும் கண்கள்
ஈயென இளிப்பர் ஆண்கள்

அழகு...
ஓர் ஆச்சர்யக்குறி!
அற்ப இச்சைகளுக்கோ
அபிலாஷைகளுக்கோ
வளைந்து கொடுக்காதே - மீறினால்
வாழ்க்கையை அது
கேள்விக்குறியாக்கி
முற்றுப்புள்ளியில் முடித்துவிடும்!

அழகு...
ஓர் அடைமழை!
பருவம் தவறி பெய்தாலோ
அளவை மீறி பொழிந்தாலோ
பாழுங்கிணற்றில் வீணாகும்
பரம்பரை மானம் பறிபோகும்

அழகு
ஓர் அற்புத போதை
அனுமதிக்கப்பட்டவரே
அனுபவிக்க வேண்டும் - இல்லையேல்
கண்டவனும் கண்டு
போதை தலைக்கேறி
பைத்தியம் பிடித்துவிடும்

அழகு
ஓர் அருட்கொடை
பத்திரப்படுத்து!
பகிரங்கப்படுத்தி
பாவம் செய்தால்
படைத்தவனின்
கோபப்பார்வையால்
குலநாசம் உறுதி

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

நேருக்கு நேர் - அல்ஜஸீர தொலைக்காட்சி காணொளி ! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | December 28, 2015 | , ,


தினந்தோறும் நாம் ஏராளமான தொலைக்காட்சி, முகநூல் விவாதக்களங்கள், நேருக்கு நேர், விவாதமேடை இன்னும் எத்தனை எத்தனையோ !

ஆனால், இங்கே பதிக்கப்பட்டிருக்கும் அல்-ஜஸீரா தொலைக்காட்சியின் நேருக்கு நேர் காணொளி களத்தில் பேசுபொருளை ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டும்...

இயன்றால் கருத்துகளை பதிக்கவும் தவறாதீர்கள் !


அதிரைநிருபர் பதிப்பகம் 

நிறம் மாறும் மனிதர்கள் ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | December 27, 2015 | ,


மனித இனம் ஆறறிவைப்பெற்ற இனமாக இருந்தாலும் குணத்தால் ஒவ்வொருவரும் சற்று இயல்பு நிலையிலிருந்து மாறுபட்டுத்தான் இருப்பார்கள். அப்படி குணத்தால் மாறுபட்டு இருந்தாலும் அனைத்து செயல்பாடுகள் நடவடிக்கைகள் யாவும் மனசாட்சிக்கு உட்பட்டே இருக்கும். அப்படி இருந்தால் தான் அம்மனிதன் ஆறறிவைப் பெற்றவனாக முழுமை அடைந்தவனாக இருக்க முடியும். சிந்தித்துச் செயல்படும் பகுத்தறிவைப் பெறாத யாவரும் முழுமனிதனாக இருக்க முடியாது. ஆனால் ஒரு சிலர் இதற்க்கு விதி விளக்காக நிறம் மாறும் குணமுடையோர்களாக தனது நிலைபாட்டில் சரியாக இருக்கமாட்டார்கள். தனக்கு சாதகமாக எப்படி உள்ளதோ அப்படி தன்னை மாற்றிக் கொள்வார்கள். இன்னும் சொல்லப் போனால் தன் கொள்கையைக் கூட மாற்றிக் கொள்ள தயங்க மாட்டார்கள்.போதிய பகுத்தறிவைப் பெற்றிருந்தும் சிந்தித்து செயல்படும் திறனிருந்தும் மனசாட்சியிலிருந்து விலகி சற்றுமாறுபட்டு இரட்டை வேடமிடுபவர்களாக இருப்பார்கள். இத்தகைய குணமுடையோர்களே நிறம்மாறும் மனிதர்களாவார்கள். இவர்கள் எதிரிகளைவிட மிக ஆபத்தானவர்களாகும்.

பசுத்தோல் போர்த்திய புலிகளான இத்தகையோர் போக்கு சற்று வியக்கத்தக்கதாக இருக்கும். எப்படியென்றால் உள்ளொன்றும் புறமொன்றும் காட்டிப் பழகும் இத்தகையோர் அதிகம் சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் தேவைகள் காரியங்கள் பூர்த்தியாகும்வரை அந்த அப்பாவி மனிதரை மிகைப்படுத்தி புகழ்மாலை சூடுவார்கள். எப்படியெல்லாம் தனக்குத் தெரிந்த தந்திரக்கலைகளை கையாளத் தெரியுமோ அப்படியெல்லாம் பேசிமயக்கி தனது காரியங்களை சாதித்துக் கொண்டு வருவார்கள்.தனது காரியங்கள் வெற்றி பெற வேண்டியும், தனக்கு உதவி தேவைப்படும்போது மட்டும் அவர்களை பயன்படுத்திக் கொள்வார்கள்.தனக்கு அவசியமில்லாத போது அம்மனிதனுக்கு என்ன நேர்ந்தாலும் கண்டு கொள்ளாமல் இருந்து கொள்வார்கள். அதாவது ரசத்தில் சேர்க்கும் கருவேப்பிலை போல பாவித்துக் கொள்வார்கள்.

அதே சமயம் கள்ளம்கபடமற்ற அந்த அப்பாவிமனிதன் இக்கபடப்போக்கு அறியாமல் அனைத்தையும் நம்பி கடைசியில் மோசம்போனபிறகு இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா..? என நினைத்து புலம்பி மனவேதனை அடைவார்.

இப்படி நிறம் மாறும் மனிதர்களால் சிலசமயம் அதிகம் பாதிப்புக்களையும் ஏற்ப்படுத்திவிடும். எப்படிஎன்றால் தனக்கு உடன்பட்டு நடக்காதவர்களை, தான் சொன்னபடி கேட்காதவர்களை, தனக்கு சாதகமாக உதவி செய்யாதவர்களை, கொஞ்சம்கூட யோசிக்காமல் தனது கொடூரக் குணம்கொண்டு அவதூறு பேசி மக்கள் மத்தியில் கெட்ட பெயரை முத்திரை குத்த முயற்ச்சிப் பார்கள்.

இதில் வேதனையளிக்கக் கூடியது என்னவென்றால் இத்தகைய காரியங்களை படிக்காத பாமரர்கள் யாரும் செய்வதில்லை நன்கு படித்த நன்றாய் உலக விபரமறிந்த ஆறறிவு நிரம்பப் பெற்றவர்களே இப்படி நடந்து கொள்கிறார்கள். என்பதுதான் ஆச்சரியமளிக்கக் கூடியதாக உள்ளது.அப்படியானால் இதற்க்குக் காரணம் மனதில் காழ்ப்புணர்வும்,பொறாமை,தாழ்வு மனப்பான்மை இருப்பவர்களிடத்தில் தான் இத்தகைய குணம் மிகுதியாய் காணப்படும்.

அப்படியானால் இத்தகைய குணம் உள்ளவரிடத்திலிருந்து விலகி இருப்பதே நலமாகும். ஆரம்பத்திலேயே ஒருவரின் குணம் அறிந்து பழகுவது சிறந்ததாகும். ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்று சொல்வதுபோல ஆரம்பத்திலேயே சிலரது சுயநலப் பழக்கங்கள் எப்படியும் தெரிபட்டுப் போகும். அப்போதே அவர்களின் பழக்கத்தைக் குறைத்துக் கொண்டால் நிறம் மாறும் மனிதர்களின் பகைமையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.அப்படி விலகிச் செல்வதன் மூலம் அத்தகைய குணம் படைத்தோர் உணர்ந்து திருந்திநடந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இருக்கும்.

குணத்தில் நிரந்தரமில்லாமல் கிடைக்கும் நேரத்தில், கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அந்த சூழ்நிலையில் அகப்படும் மனிதர்களை பயன்படுத்தி தனக்கு ஆகவேண்டிய காரியங்களை பூர்த்தி செய்து கொள்வார்கள். இத்தகையோர் எதிலும் பிடிப்பினை இல்லாது வாழ்க்கையை கடத்திக் கொண்டு போவார்கள்.

நல்லவர்யார் கெட்டவர்யார் என்பதைக்கூட எப்படியும் அறிந்து கொள்ளலாம். ஆனால் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் இத்தகையோரை இனம் காண்பது மிகக் கடினமே. இவர்களின் போக்கும் செயலும் நல்லோர்களைச் சார்ந்தே இருக்கும். ஆனால் இறுதியில் ஒருநாள் இவர்களின் உண்மை முகம் வெளிப்படும்போது நம்பிக்கையிழந்து மானமிழந்து அனைவரின் சாபத்துக்கு ஆளாகிப் போவார்கள்.

இவ்வுலக வாழ்வில் எதிலும் நேர்மையுடன் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். தாம் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருக்கவேண்டும். எதிலும் ஒரு பிடிப்பினை வேண்டும். அப்படியல்லாது மனம்போனபோக்கில் நேரத்திற்கு ஒரு நிறமாக மாறிக் கொண்டு சென்றால் அவப்பெயரையே சுமக்க நேரிடும்.

ஆகவே உணராதவர்களுக்கு உணர்த்தாத வரை தனது தவறான போக்கு ஒருபோதும் தெரியாமல் போய்விட வாய்ப்பு உள்ளது. .உணர்வதும் உணர்த்துவதும் இந்த இரண்டுமே மனிதனின் கடமையாகிறது. ஆகவே நாம் இந்த விஷயத்தில் கவனமுடன் கையாண்டு யார் மனதையும் நோகடித்து இலாபம் தேடிக் கொள்ளாமல் நிறம் மாறா மனிதர்களாக வாழ்ந்து மற்றவர்களையும் மகிழ்ச்சியுற வாழச் செய்வோமாக.!!!

அதிரை மெய்சா 

கிழக்கே உதித்த சுதந்திரச் சூரியன் – சிராஜ் உத்–தெளலா 1

அதிரைநிருபர் பதிப்பகம் | December 26, 2015 | , ,

தொடர் - ஒன்பதுலிருந்து...

ஜனவரி-மே,  1857  இல் நிகழ்ந்த இந்திய விடுதலை எழுச்சி பரவலாக இந்தியாவின் முதல் விடுதலைப் போர் எனக் கூறப்படுகின்றது. இதனை வரலாற்று நூல்களிலும் மேற்கு நாடுகளின் எண்ணங்களிலும் "இந்திய சிப்பாய்க் கலகம்" எனக் கூறி இருப்பதனால், இந்தியர்களில் பலரும் இதனைத்தான் முதல் இந்திய விடுதலைக்கான எழுச்சியாக நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் 1757 லேயே வங்காளத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற பிலாசிப் போரே முதல் சுதந்திர போர் ஆகும். ஆம் வங்காளத்தில் சிராஜ்-உத்-தௌலா சிந்திய ரத்தத்தின் மீதுதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தன் முதல் அரசுமுறையான ஆக்கிரமிப்புக் கல்லை  இந்திய மண்ணில் நட்டது. இந்தியாவில் பிரிட்டீஷாரின் ஆட்சி முதலில் வங்காளத்தில்தான் ஏற்பட்டது என்பதுதான் வரலாறு ஏற்றுக் கொண்ட உண்மை. ஆகவே மேற்கில் போர்த்துகீசியரை எதிர்த்து சிந்தப் பட்ட முதல் ரத்தத்துளியும் கிழக்கில் ஆங்கிலேயரை எதிர்த்து சிந்தப்பட்ட முதல் ரத்தத்துளியும் முஸ்லிம்களுடையதுதான்  என்பது வரலாற்றில் மதச்சாயம் பூசி மறைக்க முயல்வோரின் முகத்திலும் முதுகிலும்  எழுதப் பட வேண்டிய உண்மை வரலாறு ஆகும். 

The First War of Indian Independence is a term predominantly used in India to describe the Indian Rebillion of 1857 It is also known by a number of other names such as the Great Rebellion, the Indian Mutiny, the Sepoy Rebellion, the Sepoy Mutiny the Revolt of 1857, and the Uprising of 1857.

என்பதுதான் உண்மைக்கு மாறாக நாம் மனப்பாடமாக படித்து எழுதிய பாடம். ஆங்கிலேயர் இந்தியாவை கபளீகரம் செய்யத் தொடங்கக் காரணமாக இருந்தது ஆங்கிலேயர் வர்த்தக முக்காடு போட்டுத் தொடங்கிய கிழக்கிந்தியக் கம்பெனி என்பதாகும். இந்தியாவின் கிழக்கே இருந்தது வங்காளம் அதன் தலை  நகரம் கல்கத்தா. இந்த மறைக்க முடியாத உண்மையை மனதில் வைத்துக் கொண்டு  கேளுங்கள் மாவீரன் சிராஜ்- உத் – தெளலாவின் கதையை.

வரலாற்றுச் சந்தையில் ஒரு சுற்று சுற்றி வருவோம் வாருங்கள். 

Trade Follows Flag  அதாவது வணிகம் என்கிற பசுத்தோலை போர்த்திக் கொண்டே நாடுகளை காலணி ஆதிக்கத்துக்குக் கொண்டு வரும் புலிதான் ஆங்கிலேயரின் கொள்கை என்பதை பறைசாற்றும் வரலாற்றுக் கலைச்சொல்லே  Trade Follows Flag என்பதாகும். அதன்படி தனது ஆக்கிரமிப்பு அரசியலுக்கு போட்டுக் கொண்ட முகமூடியே ஆங்கிலேயருடைய வணிகக் கொள்கையாகும். இந்த வகையில் இவர்கள் சுட்ட, சுருட்டிய, ஏப்பம் விட்ட நாடுகள் ஏராளம். எங்கே போனால் எதை வாங்கலாம் அல்லது விற்கலாம் என்பது சாதாரணமான வணிக நடைமுறை . ஆனால் வெள்ளைக்காரர்கள் என்று சொல்லப் பட்ட கொள்ளைக் காரர்கள் எங்கே போனால் எதைச் சுருட்டலாம் -  புரட்டலாம் - எதை எடுத்து இடுப்பில்  சொருகலாம் - யாரைப் பிரிக்கலாம் - எங்கே கலகமூட்டலாம் - எந்த அப்பத்தைப் பிரித்துக் கொடுப்பதில் குரங்காக செயல்படலாம் -எந்தக் குளத்தை குழப்பிவிட்டு மீன் பிடிக்கலாம் – என்பதே ஆங்கிலேயரின் நோக்கமாக இருந்தது. இந்த அடிப்படையில்தான் அவர்கள் ஆப்ரிக்க மக்களை அடிமைகளாக்கினார்கள்- அங்கிருந்த தங்க சுரங்கங்களை தங்களுடையதாக ஆக்கினார்கள்- அமெரிக்காவை  அடிமைப் படுத்தினார்கள் தூரக் கிழக்கு நாடுகள் முதல் ஆசியாவின் அனைத்து நாடுகளையும் சுரண்டினார்கள்-  சூர்யன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று பெருமை அடித்துக் கொண்டார்கள். அந்த வகையில் அவர்களின் கண்ணில் பட்ட அப்பாவிகள் வாழும் வளம் மிக்க நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவும் தப்பவில்லை. 

ஆனால் வரலாறு,  ஒரு உண்மையை ஒப்புக் கொள்ளும். ஆங்கிலேயர்களின் நாடு பிடிக்கும் பேராசையின் ஆக்டோபஸ் கரங்கள் இந்தியாவின் மீது படரத் தொடங்கியது அவுரங்கசீப்புக்குப் பிறகு வீழ்ந்துவிடத் தொடங்கிய மொகலாயப் பேரரசுக்குப் பிறகே. அதுவரை இவர்களால் இந்தியாவை நோக்கி வாலாட்ட  முடியவில்லை. காட்டு மல்லி பூத்து இருந்தாலும் காவல்காரனாக மொகலாயர் காத்து இருந்ததால் ஆங்கிலேயன் என்கிற ஆட்டம் போட்ட மயிலை காளை தோட்டம் மேயப் பார்க்க முடியவில்லை.  மொகலாய அரசின் வீழ்ச்சியின் 66 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட ஒட்டு மொத்த இந்தியாவை கட்டி ஆளும் தகுதியும் தன்மையும் படைத்த வேறு எந்த அரசும் ஏற்படவில்லை. கீரைப் பாத்தி நாடுகள் தங்களுக்குள் அதிகாரத்துக்காக அடித்துக் கொண்டது ஆங்கிலேயருக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் ஆனது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது உண்மை ஆயிற்று. இந்தியா வேலி இல்லாத தோட்டமானது. அதனால் ஆங்கில மயிலக்காளை இப்போது ஆட்டம் போட்டுத் தோட்டம் மேயப் பார்த்தது. 

ஆக, இந்த சூழ்நிலைகலைப் பயன்படுத்தி  ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனி,   இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கும் கதையாக, ஆட்சியின் மேலும்  குறி வைத்தது. இந்த வர்த்தகக் கம்பெனி உருவாக்கப் பட்ட நாள் 1.12.1600. “ கம்பெனி என்பது வாங்கவும் விற்கவும் வந்த வர்த்தக ஸ்தாபனம். அதற்குள் அடங்க வேண்டியது பொருள்கள் ; புருஷர்கள் அல்ல” என்கிற வசனங்கள் ஒலிக்காத காதுகளே ஒரு காலத்தில் இல்லை.  கிழக்கிந்தியக் கம்பெனி என்று மெல்லத் தொடங்கி பொருள்களை வாங்கி விற்பதில் தொடங்கி இந்திய நாட்டையே கொஞ்சம் கொஞ்சமாக ஏப்பம் விடத்தொடங்கினார்கள். 

தங்களின் ஆதிக்கப் பசிக்கு இரையாக்கிக் கொள்ளும் செயலுக்கு ஆரம்பமாக கடற்கரைப்பட்டினங்களையே நோக்கி கண் வைக்க ஆரம்பித்தனர். அந்த வகையில் ஆளும் திராணியற்ற அரசர்களை விலைக்கு வாங்கி தங்களின் ஆதிக்கக் கணக்கைத் தொடங்கினர். தங்களின் வர்த்தகக் குடியேற்றங்களை கடற்கரைப் பட்டினங்களில் ஏற்படுத்திக் கொண்டனர். 1612  ஆம் வருடம் சூரத்திலும் 1616- ல் மசூலிப் பட்டினத்திலும்  1633 –ல் ஹர்ஹர்பூரிலும் 1640 ல் சென்னையிலும்  1669- ல் மும்பையிலும்  1686- ல் கல்கத்தாவிலும் தங்களின்  வர்த்தகக் குடியேற்றங்களை நிறுவினார்கள்.

உலகெங்கிலும் அந்நிய நாட்டின் மூலதனம் இப்போதும்  வரவேற்கப் படுகிறது. அப்படி மூலதனம் இடும் எவரும் தங்களின் முதலீடுகளைத்தான் பணமாகவோ அல்லது பொருளாகவோ அந்தந்த நாடுகளில் முதலீடு செய்வார்கள். இத்தகைய முதலீடுகளுக்குரிய தேவையான அனுமதி மற்றும் உரிமைகளைத்தான் தாங்கள் பிறந்த மற்றும் வணிகம் செய்யும் நாடுகளிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள். ஆனால் ஆங்கிலேயன் கிழக்கிந்தியக் கம்பெனியைத் தொடங்கும்போதே தங்களுக்காக ஒரு கப்பற்படையை  வைத்துக் கொள்ளவும் ,  தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்ளவும் பிரிட்டிஷ் ராணியிடமிருந்து உரிமை பெற்று இருந்தார்கள். இதன் விளைவாக முதலில் வங்காளத்தில் (அன்றைய வங்காளம் என்பது இன்றைய பங்களா தேசமும் சேர்ந்தது) இருந்த சிட்டாகாங்க் துறைமுகத்தைத் தாக்கி அதில் தோல்வி கண்டார்கள். 

1686- ல் கல்கத்தாவில்  கால்பதித்த வெள்ளையர்கள் 1690 –ல் கல்கத்தாவின் ஹூக்ளி நதியின் கரையில் தங்களின் பண்டங்களை பாதுகாக ஒரு கிடங்கும் அத்துடன் ஒரு கோட்டையும் கட்டினார்கள். இந்தக் கோட்டையின் வரலாற்றுப் பெயர் வில்லியம் கோட்டை என்பதாகும். மொகலாய மன்னராக இருந்த பாருஷியாவுக்கு மருத்துவம் பார்த்த ஆங்கிலேயரான அமில்ரன் வில்லியத்தின் நினைவாக இந்தக் கோட்டை கட்டப் பட்டதாக சொல்லிக்கொண்டார்கள். ஆங்கிலேயரின் சூழ்ச்சியின் அடையாளமாக இந்தக் கோட்டைக்குள்ளே ஒரு சிறைச்சாலையைக் கட்டினார்கள். அந்த சிறைச்சாலை 18 அடி நீளமும் 16 அடி 10அங்குல அகலமும் உள்ள சிறிய அறைகளைக் கொண்டது. இப்படி ஒரு சிறையை அவர்கள் கட்டியதன் நோக்கம் தங்களை எதிர்ப்பவர்களைப் பிடித்து இந்த சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தத்தான். ஆனால் இறைவன் போட்ட கணக்கு வேறாக இருந்தது.  வங்காளத்தின் வீரன் சிராஜ் - உத் -தெளலா இந்த சிறைச்சாலையில் தங்களையே  அடைக்கப் போகிறார் என்பதை ஆங்கிலேயர்கள் அறியவில்லை. அதைப் பற்றி பின்னர் காணலாம்.  இப்போது இப்படியெல்லாம் ஆங்கில ஆதிக்கம் விரிவடைந்து கொண்டே சென்றது என்பதை மட்டும் விளங்கிக் கொள்ளலாம். 

சென்னையிலும் மும்பையிலும் இன்னும் இந்தியாவின் பல பகுதிகளிலும் ஆங்கிலேயர்கள் எவ்வித எதிர்ப்புமின்றி காலூன்றத்தொடங்கினார்கள். ஆனால் கல்கத்தாவில் அவர்களது ‘பாச்சா’ பலிக்கவில்லை; பருப்பு வேகவில்லை.  இதற்குக் காரணம், வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு நாடாளும் ஆசை வந்துவிட்டது என்பதை முதலில் கணித்து, ஆங்கிலேயரின் நிர்ப்பந்தங்களுக்கும் நிபந்தனைகளுக்கும் எதிராய் இந்த மண்ணில் முதுகெலும்புடன் முதலில் நிமிர்ந்து நின்றவர்தான்  சிராஜ் - உத் –தெளலா. 

ஆப்கானியப் படை வீரர் அலிவர்த்திகான்  1726 ஆம் ஆண்டு துருக்கியில் இருந்து இந்தியா வந்து வங்காளத்தின் படையில் சேர்ந்தார். காலம் அவரை வங்காளத்தின் நவாப் ஆக்கியது.  அலிவர்த்திகானின்  மறைவுக்குப் பிறகு அவரது பேரர் ஆன சிராஜ் - உத் -தெளலா 1740-ல் தனது  24 ஆம் வயதில் இள ரத்தத்தின் துடிப்போடு வங்காளத்தின் நவாப் நாற்காலியின் அதிபதி ஆனார். இவர் நவாப் ஆனதும்,  எதிர்ப்பே இல்லாமல் எங்கும் சுருட்டிக் கொண்டிருந்த கிழக்கிந்திய கம்பெனியின் ஏகாதிபத்திய ஆவலுக்கு  பல வகைகளில் இடிகளை இனாமாக  இறக்க ஆரம்பித்தார்.  ஆங்கில ஏகாதிபத்தியம் கலக்கம் அடைந்தது. 

சிராஜ் - உத் –தெளலா  வங்காளத்தின் நவாப் ஆகப்  பொறுப்பேற்றுக் கொண்டதை பிரிட்டிஷார் விரும்பவில்லை. ஆகவே அவரது அரசவையில் இருந்த சிலரை இரகசியமாக சந்தித்து , ஆசைகாட்டி சிராஜ் - உத் –தெளலாவை பதவியில் இருந்து கவிழ்த்துவிட திட்டம் தீட்டினார்கள். இந்த விபரம் சிராஜ் - உத் –தெளலாவுக்குத் தெரியவந்தது. அவரது கோபத்தைக் கிளப்பியது. அத்துடன் பிரிட்டிஷாரின் மூன்று முக்கியமான செயல்கள் சிராஜ் - உத் –தெளலா உடைய ஆத்திரத்தை அதிகமாக்கியது. 

முதலாவதாக, வில்லியம் கோட்டையில் அவர்கள் செய்த மாற்றங்கள். இந்த மாற்றங்களை அவர்கள் போர்க் கைதிகளை அடைக்கும் விதமாக செய்தார்கள். இந்தச்செயல் சிராஜ் - உத் –தெளலாவுக்குப் பிடிக்கவில்லை. மேலும் நவாப் ஆன தன்னிடம் - இப்படி தனது ஆளுமைக்கு உட்பட்ட பிரதேசத்தில் கட்டிட மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக அரசின் அனுமதியை பிரிட்டிஷார் கேட்காதது ஏன் என்று சிராஜ் - உத் –தெளலா கேள்வி எழுப்பினார்.  தட்டிக் கேட்க ஆள் இல்லாமல் வளர்ந்த பிரிட்டிஷாருக்கு இது அதிசயமாக இருந்தது. இந்த இந்திய மண்ணிலும் தங்களை எதிர்க்க ஒருவனா என்று சிந்திக்க ஆரம்பித்தனர். முளையிலேயே கிள்ளி எறியும் திட்டம் முளைவிட்டது. 

இரண்டாவதாக பிரிட்டிஷாருக்கு அனுமதிக்கப் பட்ட வர்த்தக சலுகைகளை அவர்கள் மீறி செயல்பட்டார்கள் என்கிற குற்றச்சாட்டை அவர்கள் மீது சுமத்தினார் நவாப் சிராஜ் - உத் –தெளலா. பிரிட்டிஷாரின் அத்துமீறலான செயல்களால் அரசுக்கு சுங்கம் மூலம் வரவேண்டிய வரிகள் பிரிட்டிஷாரால் ஏமாற்றப் பட்டன என்கிற குற்றமும் பிரிட்டிஷார் மீது சுமத்தப் பட்டது. 

மூன்றாவதாக, சிராஜ் - உத் –தெளலா உடைய அரசுக்கு துரோகம் இழைத்து அரசுப் பணத்தைக் களவாடி கையாடல் செய்த கிருஷ்ணதாஸ் மற்றும் ராஜிவ்பல்லவ் ஆகிய  சிலருக்கு தங்க இடமும் பொருளும் கொடுத்து அவர்களை நவாப்புக்கு எதிராக தூண்டிவிட்டு தங்களின் பாதுகாப்பில் வைத்துக் கொண்ட செயல் நவாபின் ஆத்திரத்தை அதிகமாக்கியது.  

இத்தகைய காரணங்களால் நவாப் சிராஜ் - உத் –தெளலாவுக்கும் பிரிட்டிஷாரின் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும்  உறவு சீர்கெட ஆரம்பித்தது. இந்நிலையில் தங்களின் ஆரம்ப கால அனுமதியை வைத்து ஆங்கிலக் கடற்படையை கல்கத்தாவில் குவிக்க ஆரம்பித்தனர் . படைக் குவிப்பை நிறுத்தும்படி  நவாப் சிராஜ் - உத் –தெளலா விடமிருந்து அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப் பட்டது. அந்த எச்சரிக்கைக்கும்  கிழக்கு இந்தியக் கம்பெனியினர் கேளாக்காதினர் ஆயினர். நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்கிற ஆணவம் மிக்க மனோநிலை நவாப் சிராஜ் - உத் –தெளலாவின் கோபத்தைத் தூண்டியது . உடனே ஆங்கிலேயர் கட்டிய நாம் மேலே குறிப்பிட்ட வில்லியம் கோட்டையை தனது படைகளைவிட்டு ஆக்ரமிக்க உத்தரவிட்டார். ஆங்கிலேயர் கதிகலங்கினர். இந்த முற்றுகையில் இருந்து தான் மட்டும் ஹூக்ளி நதியில் நின்ற ஒரு கப்பலில் ஏறி தப்பித்து சென்றான் அட்மிரல் வாட்சன் என்கிற தளபதி. 

அதற்குப் பின்தான் வரலாற்றில் Calcutta’s Black Hole என்று குறிப்பிடப்படும் “கல்கத்தா இருட்டறைத் துயர் நிகழ்ச்சி “  என்பது நடந்தது. எந்த ஆங்கிலேயர்கள் தங்களை எதிர்க்கும் இந்தியர்களை அடைத்துவைத்து சித்தரவதை செய்ய சின்னஞ்சிறு அறை வைத்து சிறைச்சாலை காட்டினார்களோ அந்த சிறைச்சாலை  அறைக்குள்  நவாப் சிராஜ் - உத் –தெளலாவின் உத்தரவின் பேரில் வில்லியம் கோட்டைக்குப் பொறுப்பாளராக இருந்த ஹால்வேல் உட்பட 146 ஆங்கிலேயர்களும் கைது செய்யப்பட்டு கடும் கோடை இரவில் 18 அடி நீளமும் 16 அடி 10அங்குல அகலமும் இருந்த  சிறிய அறையில் அடைக்கப்பட்டு  வினை விதைத்தவர்கள் வினை  அறுத்தார்கள். கெடுவான் கேடு நினைப்பான் என்கிற இலக்கணத்துக்கு இலக்கியமாக அடைபட்ட 146 ல் 22 பேர்களைத் தவிர அனைவரும் மூச்சுத்திணறி இறந்து கிடந்தனர். ஆங்கிலேயர்களின் ஆட்சி எத்தனை இந்திய உயிர்களை காவு வாங்கி இருக்கிறது என்று கணக்குப் பார்த்தால் ஆங்கிலேயர்கள் காவு வாங்கப் பட்ட கணக்கு மிகக் குறைவாகவே இருக்கும். ஆனால் இந்தக் கணக்கைத் தொடங்கி வைத்தவர் நவாப் சிராஜ் - உத் –தெளலா ஆவார். 

அடுத்த நாட்டினரை அடுக்கடுக்காய்க் கொன்று குவிப்பவன்,  தன் நாட்டினர் செத்தால் தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்கிற நிலைக்கு ஆளானான் ஆங்கிலேயன். ராபர்ட் கிளைவ்,  அட்மிரல் வாட்சன் போன்றோர் சென்னையில் இருந்து கல்கத்தாவுக்கு விரைந்தனர். ஆங்கிலேயரின் போர்ப் படை ஒன்றும் அணி வகுத்தது. 

அடுத்துக் கெடுத்தலிலும் ஆசைகாட்டி  மோசம் செய்வதிலும் ஆங்கிலேயருக்கு நிகரில்லை என்பது வரலாறு நிரூபணம். அந்த வகையில் நவாப் சிராஜ் - உத் –தெளலா வின் உறவினர் மற்றும் ஆலோசகர் மீர் ஜாபர் என்பவர் ஆங்கிலேயர் விரித்த சதிவலையில் சிக்கினார்.  நவாப் சிராஜ் - உத் –தெளலா வின் நடவடிக்கைகள் ஆங்கிலேயரின் கவனத்துக்கு உளவாக சொல்லப் பட்டது.  ஆங்கிலேயர் வஞ்சகமாக நவாப் சிராஜ் - உத் –தெளலா வுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டே படை திரட்டினர். உடன்படிக்கைக்கு எதிராக, ஆங்கிலேயப் படை திரட்டப்பட்டதால் வீரன் நவாப் சிராஜ் - உத் –தெளலா 1757 – ல் வெள்ளையர் முகாமிட்டு இருந்த கல்கத்தா துறைமுகத்தை ஆவேசத்துடன் தாக்கினார். 

நவாப் சிராஜ் - உத் –தெளலா ஆங்கிலேயருடன் பொருதிய இந்தப் போர் பிளாசிப் போர் என்று வரலாற்றில் குறிப்பிடப் படுகிறது. மேலும் ஆங்கிலேயரை எதிர்த்து இந்த மண்ணில் நடந்த முதலாவது மிகப் பெரும் போரும் பிளாசிப் போர்தான். இந்தப் போரில் ராபர்ட் கிளைவின் மூவாயிரம் பேர்களை மட்டுமே கொண்ட ஆங்கில மற்றும் அடிவருடிகளின் படை  , நவாப் சிராஜ் - உத் –தெளலா வின் பதினெட்டு ஆயிரம் குதிரைப் படையையும் ஐம்பது ஆயிரம் காலாட்படையையும் தோற்கடித்தது. இதற்குக் காரணம் மீர் ஜாபரின் துரோகம் ஒரு பக்கம் ஆனாலும் இயற்கையும்  சதி செய்தது. பிளாசிப்  போரில் நான்கு மணிநேரம் பெய்த இடைவிடாத மழையால் நவாப் சிராஜ் - உத் –தெளலாவின் படையின் வெடி மருந்துகள் நனைந்து போய் வெடிக்க மறுத்தன. நவாப் சிராஜ் - உத் –தெளலாவின் வீரம் இயற்கைக்கு முன் மண்டியிட்டது. அன்று பெய்த மழை இந்தியாவின் சரித்திரத்தையே மாற்றியது. இல்லாவிட்டால் ஆங்கிலேயர்கள் அன்றே அழிக்கப் பட்டு இருப்பார்கள் என்பதே வரலாற்று ஆசிரியர்களின் கணிப்பு.

போர்க்களத்தில் துரோகிகள் செய்த சதியால் தோல்வியைத்தழுவிய  சிராஜ் - உத் –தெளலா அங்கிருந்து தப்பித்து முர்ஷிதாபாத் சென்று பின் ஒரு படகில் பாட்னா சென்றார். அங்கு கைது செய்யப்பட்டார்.  இறுதியில்   மீர் ஜாபரின் மகன் மீரான் ஜாபர் என்கிற ஆங்கில அடிவருடியின் உத்தரவு பெற்ற அலி பேக் என்பவனால்  நவாப் சிராஜ் - உத் –தெளலா என்கிற  வங்கத்தின் சிங்கம்  July 2, 1757 அன்று கொல்லப்பட்டது.  

வங்காளத்தில் நவாப் சிராஜ் - உத் –தெளலா சிந்திய ரத்தத்தின் மீதுதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது முதல் அடிக்கல்லை இந்தியாவில் நட்டது. இந்தியாவில் முதல் பிரிட்டிஷ் ஆட்சி நவாப் சிராஜ் - உத் –தெளலா ஆண்டு மாண்ட வங்காளத்தில்தான் நிறுவப்பட்டது. இதுவே இந்தியாவில் தங்களின் ஆதிக்கம் நிலைபெற்ற நாள் என்று ஆங்கிலேயரும் ஆணவத்துடன் குறிப்பிடுகிறார்கள்.  
இன்ஷா அல்லாஹ் இன்னும் சந்திக்கலாம். 
இபுராஹீம் அன்சாரி
===============================================
எழுத உதவிய குறிப்புகள் :-
Is the Black Hole of Calcutta a myth? 
The Parliamentary history of England from the earliest period to the year 1803.  
Akhsaykumar Moitrayo, Sirajuddaula, Calcutta 1898.
===============================================

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 020 0

அதிரைநிருபர் பதிப்பகம் | December 25, 2015 | , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

மனைவியிடம் கணவனின் உரிமைகள்:

சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். (அல்குர்ஆன்:4:34)

''ஒருவன் தன் மனைவியை இல்லறத்திற்கு அழைத்து, அவள் வரமறுத்து, இதனால் அவள் மீது அவன் கோபமாக இருந்தால், விடியும் வரை வானவர்கள் அந்தப் பெண்ணை சபிப்பார்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 281)

''ஒரு பெண், அவளின் கணவன் ஊரில் இருக்கும் சமயம் அவனின் அனுமதியின்றி (நபில்) நோன்பு வைத்தல் கூடாது. மேலும் அவனின் அனுமதியின்றி அவனது வீட்டினுள் (எவரையும்) அனுதிக்கக் கூடாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 282)

''நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்களாவீர். உங்களில் அனைவரும் அவரது பொறுப்புப்பற்றி கேள்வி கேட்கப்படுவீர். ஒரு தலைவர் பொறுப்பாளியாவார். ஒரு மனிதர், தன் குடும்பத்தாருக்கு பொறுப்பாளியாவார். ஒரு பெண் தன் கணவனின் வீடு, மற்றும் குழந்தைக்கு பொறுப்பாளியாவாள். நீங்கள்  அனைவரும் பொறுப்பாளர்களாவீர். உங்களில் அனைவரும் தன் பொறுப்புப் பற்றி கேள்வி கேட்கப்படுவீர்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம் (ரியாளுஸ்ஸாலிஹீன்: 283)

''ஒரு மனிதரை மற்றொரு மனிதருக்கு 'ஸஜ்தா' செய்ய நான் கட்டளையிடுதாக இருந்தால் ஒரு பெண்ணை அவளின் கணவனுக்கு 'ஸஜ்தா' செய்யும்படி கட்டளையிட்டிருப்பேன்'' என நபி(ஸல்)கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 285)
  
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

 இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன்.S

வயோதிக வலிகள்! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | December 24, 2015 | , ,

வலிகளோடு வாழப் பழகுவதே
வயோதிகத்தை
வரவேற்கும் வித்தை!
வலிகளில் - சில
மூட்டில் வருபவை - பிற
வீட்டில் தருபவை!

நிவாரணங்களைப் பற்றிய
உதாரணங்களின் பட்டியலில்
வயோதிகத்தின் வலிகளுக்கு
நிவர்த்தி பற்றிய குறிப்பில்லை!

மூட்டின் தேய்மானங்களும்
வீட்டில் அவமானங்களும்
கவனிப்பாரற்ற தருணங்களில்
கடுமையாய் வலிக்கும்!

களிம்பு பூசியோ
கனிந்து பேசியோ
ஆசுவாசப்படுத்தினாலும்
வலி நீங்க - நிரந்தர
வழி இல்லை!

எனினும்,
வலிநீக்கும் குளிகைகளிலும்
வாஞ்சையான விசாரிப்புகளிலும்
தற்காலிகமாக
விழிநீர்க்கும் வயோதிகம்!

தேங்காய்ப் பாலின்
மூன்றாம் பால்கஞ்சி
தெவிட்டாது முதுமைக்கு!

எனினும்,
காப்பகங்களில் விடுவதும்
கருங்குழியில் இடுவதும்
ஒன்றோ வேறோ?

நினைவு தப்புவதற்கு முன்
அன்பையும் அக்கறையையும்
நெஞ்சு நெகிழ
அனுபவிக்கத் தருவதால்
வாழ்க்கையை வென்றதாய்
திருப்தியுறும் வயோதிகம்!

இந்த
அன்பைவிட விலைகுறைவாய்
ஏதுமுண்டோ உலகில்
இவர்களுக்குத் தர?

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

மெளனம் பேசியதே.... 7

அதிரைநிருபர் பதிப்பகம் | December 23, 2015 | , , , , , ,

இது எல்லோர் மனதிலும் புகுந்திருக்கும் வலி. நிவாரணத் தைலம் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் குறுக்கில் படுத்திருக்கும் குழந்தையை தாண்டாத மெளனப்போராட்டம்.

பிறந்து பின் பள்ளி செல்லும் வரை பெற்றோருடைய விலங்கு, பின் பள்ளிப் பருவத்தில் கற்பனையில் வாழும் காலங்களில் கனவுகளின் விலங்கு, பின் மாயம் கலையும் முன் வாழ்க்கையின் அடிவாரத்தில் மனைவியின் விலங்கு... காலம் ஒரு ஓட்டப் பந்தய வேகத்தில் தொடங்க பிள்ளைகள் பின் தொடர உறவுகளின் விலங்கு... என்றாவது ஒருநாள் வானம் வெளுக்குமா, அதன் திசை நோக்கி நடந்து எழுத மை வாங்கும் திராணி வாங்கி   விட்டுப்போன வாழ்க்கையை நிரப்புவோமா?

இத்தனை பயணங்களிலும் காரை நிறுத்தி வேப்பமரக் காற்றில் பாய் விரித்து படுக்கும் தனிமையை எங்கு தொலைத்தோம். 

மலை மீது ஏறி நுனிப்பாறையின் விளிம்பில் நின்று அகன்ற பள்ளத்தாக்கை முகத்துக்கு முன் நிறுத்தி எப்போது கத்தித்தீர்த்தோம். 

காற்றின் சீற்றத்தில் ஏரியில் வரும் தொடர் அலைகளை எப்போது கால் நனைக்க கடைசியாக நின்றோம்.

பூமியில் காய்த்த பிரச்சினைகளால் வானத்து மேகங்களும் நம் வாழ்க்கையை விட்டே கண்காணா தூரம் போய் விட்டதா?.

மீண்டும் ஒரு நாள் மறுபடியும் பிறந்து வந்தா கரும்பலகை பார்த்து பள்ளியில் உட்காரப்போகிறோம்.

கொட்டும் அருவியில் குளிக்கும்போது அருவியை மீறி சத்தம் போட்டதுண்டா?

எப்போதாவது ஒரு நாள் கண்ணுக்கு கரை எட்டா தூரம் கடலுக்கு போய் அசையாத படகில் படுத்துக் கொண்டு மாலை நேரத்தில் மங்கும் வெளிச்சத்தில் மின்னல் நடனம் பார்த்து தூரமாய் கொட்டும் மழை பார்த்ததுண்டா?


விளையாத நிலத்துக்காக மழை வேண்டி இறைவனிடம் மண்றாடியது எப்போது?.  

மருந்தை யாசிக்கும் நோயாளிக்கு பணம் தந்து பிணி போக்கி மகிழ்ந்தது எப்போது.?

இரவின் மங்கிய வெளிச்சத்தில் விரும்பி பாடிய பாடல்கள் எப்போது.

வாழ்க்கையின் விசை தொலைபேசியைக்கூட அதன் விருப்பத்துக்கும் அழைப்புக்கும்தான் தொட வைக்கிறது. என் விருப்பம் மெளனிக்க நித்தம் அழைத்து அடிமையாக்கும் தொலைபேசியின் சத்தம் அற்ற நட்ட நடுக்காட்டில் என் கால்கள் மற்றும் கற்பனையில் நடக்க வழக்கம்போல், “வரும்போது பிரட் வாங்கிட்டு வாங்க வில் கற்பனை சுகம் அனைத்தும் சரிந்து விழும் சீட்டுக் கட்டாய்.

எப்போதாவது ஒரு முறை கேட்கும் பழைய பாடலிலும், சின்ன வயதில் பயன்படுத்திய சென்ட்டின் வாசனையில்  தொலைந்து போன இளமையும் , பிள்ளைகளின் கனவை சுமக்க நாம் பொதிகழுதை ஆகிப்போன சூழ்நிலையும் கனவுகளில் மட்டும் வாழசொல்கிறது. விடுமுறையின் விடிகாலை போல் உற்சாகம் தருகிறது. 

உட்கார்ந்திருக்கும் பிச்சைக்காரன் பார்ப்பது தர்மம் போடும் மக்களின் கால்களைத்தான், முடி வெட்டுபவர் பார்ப்பது என்னவோ நடப்பவர்களின் தலையை மட்டும் தான்...எல்லோருக்கும் ஒரு இலக்கு இருக்கிறது. வாழ்க்கையில் பின்னப்பட்ட வலையில் நாம் மட்டும்தான் வாழ மறந்து நமக்காக வாழ்கிறோமா? இலக்கு இல்லாமல்..
 
தேர்வு முடிந்தும் பள்ளிக்குப்போகும் மாணவனாய் மனிதனை மாற்றியது எது?, பின்னப்பட்டது  எதுவும் பிரியாமல் இருக்கிறது, மனிதன் மட்டும் கலைத்து போடப்பட்டானா?.

இனிமேலாவது நம் மனதுக்கு உணவளிப்போம், வயிற்றை நிரப்பியது நாட்களை நகர்த்தவல்ல.நாம் நகராமல் நங்கூரம் போட்டவர்களை அடையாளம் காண்போம்.

மழையில் ஒருமுறையேனும் மொத்தமாக நனைந்து பார்ப்போம்.

சுதந்திர உணர்வுகளை எதில் எல்லாம் தொலைத்தோம்?...
யாரோ ஒருவன் வானத்திலிருந்து குதிப்பதை வேடிக்கை பார்த்து..
யாரோ ஒருவனின் பயணக்கட்டுரை படித்து
யாரோ ஒருவன் ஆழ்கடல் அமிழ்ந்து பார்த்த வர்ண ஜாலங்களில்
யாரோ ஒருவன் சைக்கிளில் உலகம் சுற்றிய செய்தி படித்து...
யாரோ ஒருவனின் பனிமலை ஏற்றத்தை பார்த்து
யாரோ ஒருவனின் பச்சைக்கம்பள வயல் பார்த்து.
யாரோ ஒருவனின் செயல் பார்த்து சொக்கும் நாம் எப்போது நமக்காக வாழப்போகிறோம்.

இன்றைய பொழுதிலாவது சொந்த சிறையின் சுவற்றில் ஒரு சின்ன ஒட்டை போட்டு சுதந்திரம்  சுவாசிப்போம்...


நாளை இதுவே பூமிப்பரப்பை உயரத்திலிருந்து பார்க்கும் சுகந்த  காலங்களுக்கு ஆரம்பமாய்..

உழைத்து களைத்தவர்களின்  வியர்வை துடைக்க துண்டு எடுத்த தரவும் பழைய லெட்ஜர் பார்த்து சேவை செய்யும் இந்த நவீன உலகில் நாம் ஒரு நாள் வாழ்வோம் என்று காத்திருந்தே காலத்தை போக்கிவிடக் கூடாதென்றே இதை எழுதினேன்.

மனசு முழுக்க டன் கணக்கில் கோபத்தையும், வெறுப்பையும் சுமந்து கொண்டு நாம் வாழ முடியாது.

செத்தவனின் கதையை ஒரு வாரத்துக்கு மேல் பேசினாலே 'அலவு வலிக்குதப்பா' என்று ஆதங்கப்படும் உலகம் இது. இது தெரியாமல் உயிரோடு இருக்கும்போது மட்டும் ஏன் நமக்கு ஒரு நூற்றாண்டு பிடிவாதம்.

உங்கள் நடை பாதையெல்லாம் முள்ளை கொட்டியவர்களை மொத்தமாக மன்னித்து விடுங்கள்.  

உங்கள் முதுகுக்கு பின்னால் மண்வாரி வீசி முகத்துக்கு முன்னால் மலர் தூவியவர்களை புன்னகையோடு கைகுலுக்குங்கள். 

குப்பைகளை நெஞ்சில் சுமந்து புனிதம் போதிக்க முடியாது.

தூங்க முடியாத ஏக்கத்துடன் தொலைதூரம் போக முடியாது.

தனிமையும் மெளனமும் உங்களுக்கு மட்டும் உரிய பங்கு போட முடியாது சொத்து.  

இன்றையிலிருந்து உங்களுக்காக வாழுங்கள்.

ZAKIR HUSSAIN

யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் 0

அதிரைநிருபர் பதிப்பகம் | December 22, 2015 | ,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்   

யுவான் ரிட்லி (Yvonne Ridley), நம்மில் பலருக்கும் நன்கு தெரிந்த பெயர். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர். பத்திரிக்கையாளர், சமூக சேவகர், அரசியல்வாதி என்று பல பரிமாணங்களை கொண்டவர். 

இவர் பேச நான் கேட்ட மற்றும் படித்த சில தகவல்களை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ் 
  
இவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி சுருக்கமாக...

அது செப்டம்பர் 2001 ன் பிற்பகுதி, சகோதரி யுவான் ரிட்லி அவர்கள் பிரிட்டனின் சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்காக பணியாற்றிய நேரம். உலகம், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்களால் ஸ்தம்பித்திருந்த நேரம். அமெரிக்காவின் சந்தேகக் கண்கள் அப்கானிஸ்தான் மீதும், அதனை ஆளும் தாலிபான்களின் மீதும் வலுவாக விழுந்திருந்த சமயம்.

இந்த சூழ்நிலையில் தான் யுவான் ரிட்லி அவர்கள், தாலிபான்களை பற்றி செய்தி சேகரிப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து அப்கானிஸ்தானிற்கு புறப்பட்டார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருந்தும் மறைமுகமாக அப்கானிஸ்தானிற்குள் நுழைந்து விட்டார். எப்படி? புர்காவை அணிந்து, எல்லையார மக்கள் செல்வது போல் கழுதையின் மீது பயணம் செய்து அப்கானிஸ்தானிற்குள் நுழைந்து விட்டார்.

உள்ளே நுழைந்த சிறிது நேரத்தில், தாலிபன் வீரர் ஒருவரின் முன், கழுதையிலிருந்து தவறி விழுந்து மாட்டிக்கொண்டார். உளவாளி என்று சந்தேகம் எழுப்பி தாலிபன் அரசாங்கம் அவரை சிறையில் தள்ளியது. பதினோரு நாட்கள் சிறைவாசத்திற்கு பின்பு, அக்டோபர் 9, 2001ல், தாலிபன்களால் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். 

சிறையிலிருக்கும் போது தன்னை ஒரு தாலிபன் வீரர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள அழைத்ததாகவும், தான் மறுத்து விட்டதாகவும், ஆனால் சிறையிலிருந்து வெளியே சென்ற பின் குரானைப்  படிப்பதாக தான் அந்த வீரரிடம் சொன்னதாக யுவான் ரிட்லி பின்னர் தெரிவித்தார்.

கொடுத்த வாக்குறுதியை காப்பதற்காகவும், மேலும் பெண்களின் நிலை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று ஆராய்வதற்கும் குரானைப் படிக்க, 2003 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்...

இனி இவர் சொல்ல நான் படித்த, கேட்ட சில தகவல்கள்...

சிறையிலிருந்த போது... 

"நான் சிறையிலிருந்த நாட்களில், அவர்களை கடுமையாக திட்டிருக்கிறேன், அவர்களை நோக்கி உமிழ்ந்திருக்கிறேன், அவர்கள் தந்த உணவை உண்ணாமல் அவர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறேன். இதையெல்லாம் விட, ஒருநாள், என் ஆடைகளை களைந்துவிட்டு அவர்கள் முன் நின்று அவர்களை சங்கடப்படுத்திருக்கிறேன்.

அப்போது அங்கு வரவழைக்கப்பட்ட தாலிபான்களின் உதவி வெளியுறவுத் துறை அமைச்சர் (Deputy Foreign Misniter) என்னிடம், நீங்கள் இப்படி செய்வது சரியில்லை, உங்கள் ஆடைகளை திருத்திக்கொள்ளுங்கள், உங்கள் செயல் எங்கள் வீரர்களின் மனதில் தவறான எண்ணங்களை விதைக்கக்கூடும் என்றார்.

இன்னும் சில நாட்களில் அமெரிக்கா இவர்கள் மீது குண்டு வீசப்  போகிறது, அதைப்பற்றி இவர்கள் கவலைப்படவில்லை, என் உடையைப்பற்றி தான் அதிகம் கவலைப்படுகிறார்கள். அமெரிக்கா இவர்களை விரட்ட தேவையில்லாமல் பணத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறது, ஆபாசமாக உடையணிந்த பெண்களை இவர்கள் முன்பு அழைத்து வந்தாலே போதும், இவர்கள் ஓடிவிடுவார்கள்"...

சிறையிலிருந்து வெளியே வந்த இவர் தாலிபன்கள் தனக்கு சிறையில் ஒரு <> பெண்ணுக்குண்டான மதிப்பை அளித்ததாக தெரிவித்தார். அவ்வளவுதான். சில ஊடகங்கள் இவருக்கு "ஸ்டாக்ஹோம் சின்றோம் (Stockholm synrome)" பிரச்சனை இருப்பதாக தெரிவித்தன. இந்த பிரச்சனை இருப்பவர்கள், தங்களை கடத்தியவர்களுக்கு சாதகமாக பேசுவார்களாம். அதுசரி...  

தான் சார்ந்த சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிகை தன்னை காப்பாற்ற முயற்சி செய்ததை பற்றி குறிப்பிடும் இவர்,

"சண்டே எக்ஸ்பிரஸ்சின் உரிமையாளர் ஒரு யூதர். அவர் என்னைக் காப்பாற்ற ஒரு குழுவை அமைத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள தாலிபன் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு கொடுத்துவிடுங்கள், எப்படியாவது ரிட்லியை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டுவிட்டார்.

அவர் அமைத்த குழுவின் தலைவர் தாலிபன்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் அவர் சண்டே எக்ஸ்பிரஸ் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசினார்.

அவர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டீர்களா? ஒரு மில்லியன், இரண்டு மில்லியன்?

இல்லை சார், நான் கொண்டுச்சென்ற காசோலையை திரும்ப கொண்டு வந்துவிட்டேன். அவர்களுக்கு பணமெல்லாம் வேண்டாமாம்..

என்ன பணம் வேண்டாமா, வேறு என்ன வேண்டுமாம், ஆயுதங்களா?

இல்லை சார், அவர்களுக்கு எதுவும் வேண்டாமாம், நம்மைப் போன்றவர்கள் அவர்களுக்கு குறைந்தபட்ச  மரியாதை அளித்தால் போதுமாம்.

இதனை அந்த குழுத்தலைவர் என்னிடம் விவரித்தார். தாலிபன்கள் மீதான வெறுப்பு உச்சத்தில் இருந்த நேரமது. அவர்கள் சொல்லியதில் நிறைய அர்த்தமிருக்கிறது. மேலும் சண்டே எக்ஸ்பிரஸ் குழுவினர் என்னை காப்பாற்ற எடுத்த முயற்சி அளப்பறியது"                

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே, அதாவது இஸ்லாத்தை பற்றி படித்துக்கொண்டிருந்த போதே,  மது அருந்துவதை நிறுத்தி விட்டார்.

"இஸ்லாம் என் வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை தந்துவிட்டது. நான் மதுவை நிறுத்தி விட்டேன். இனி தொலைப்பேசியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, ஆண் நண்பர்களிடமிருந்து பார்ட்டிகளுக்கு செல்ல எப்போது அழைப்பு வரும் என்று எதிர்ப்பார்க்கவும் போவதில்லை"

<>இவருக்கு இஸ்லாத்தில் உள்ள சந்தேகங்களை களைய பெரிதும் உதவியது, பிரிட்டன் ஊடகங்களால் அடிப்படைவாதி என்றும் தீவிரவாத எண்ணங்களை உருவாக்குபவர் என்றும் சொல்லப்பட்ட பின்ஸ்பரி பார்க் (Finsbury Park Mosque, North London) மசூதியின் இமாம் அபு ஹம்சா அல்-மஸ்ரி.   

"அவர் எனக்கு மிகவும் உதவியிருக்கிறார். ஒருமுறை எனக்கு அவரிடமிருந்து அழைப்பு.

சகோதரி, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்காக வாழ்த்துக்கள். 

இல்லை இல்லை, நான் இன்னும் தெரிந்துக்கொள்ளவேண்டியது இருக்கிறது.

அப்படியா, ஒன்றும் அவசரமில்லை, நன்றாக ஆராய்ந்து செயல்படுங்கள். உங்களுக்கு உதவி தேவையென்றால் முஸ்லிம் சமுதாயமே உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறது. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், நமக்கு மரணம் எப்போது வேண்டுமென்றாலும் வரலாம். நாளையே நீங்கள் இறந்தால் நீங்கள் சேருமிடம் நரகம்தான்...

ஊடகங்களோ இவரை தவறாக சொல்கின்றன, ஆனால் இவரோ மிகவும் கண்ணியமானவராக தெரிந்தார். அவர் சொன்ன அந்த வார்த்தைகள் என்னை மிகவும் பாதித்தன.அந்த வார்த்தைகள் நான் இஸ்லாத்தை ஏற்கும்வரை என்னுள் ஒலித்துக்கொண்டிருந்தன"

யுவான் ரிட்லி அவர்கள் தான் இஸ்லாத்திற்கு வந்தவுடன் தன்னால் பின்பற்றுவதற்கு மிகவும் கடினமாக இருந்ததாக குறிப்பிட்டது ஐந்து வேலை தொழுகைகளைத்தான். இப்போது அவர் அதனை நிவர்த்தி செய்து கொண்டு விட்டார். அல்ஹம்துலில்லாஹ்                           

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகளை கடுமையாக விமர்சிப்பவர்...

அமெரிக்காவின், தீவிரவாதத்தின் மீதான போரானது, உண்மையில் இஸ்லாத்தின் மீதான போர் என்று கூறியவர்.

தான் சிறையிலிருந்தபோது இஸ்ரேலின் உளவுத்துறை தன்னை கொல்ல சதி செய்ததாகவும், அதன்மூலம் தாலிபன்களின் மீதான போருக்கு ஆதரவு கூடுமென அவர்கள் திட்டம் தீட்டியதாகவும் கூறியவர்.

பல சமயங்களில் சகோதரி யுவான் ரிட்லி அவர்களின் வார்த்தைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஒரு முறை அவர் கூறினார்...

"கோக கோலாவை (Coca Cola) முஸ்லிம்கள் குடிப்பது நம் பாலஸ்தீனிய குழந்தைகள் மற்றும் சகோதரிகளின் ரத்தத்தை குடிப்பதற்கு ஈடாகும். இதற்கு நாம் நேரடியாக இஸ்ரேலிய ராணுவத்திடம் சென்று குண்டுகள் கொடுத்து நம் பாலஸ்தீனிய மக்களை சுடச்சொல்லலாம்"

ஆவேசமாக பேசக்கூடியவர், நகைச்சுவை உணர்வு மிக்கவர், மிகுந்த துணிச்சல்காரர்.
  • அரசுகளால் தீவிரவாதிகள் என்று கூறப்படும் சிலருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தவர்.
  • ஒருமுறை சவூதி இளவரசரிடம் கைக்குலுக்க மறுத்து தன் வேலையை இழந்தவர்.
இப்படி பல சொல்லலாம்.

முஸ்லிம்களுக்கெதிரான செயல்களை கண்டித்து பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். 

ஒருமுறை "ஏன் சிலர் (Islamophobes) முஸ்லிம்களை கண்டால் பயப்படுகிறார்கள்" என்று ஒருவர் கேட்டதற்கு, "நாம் அல்லாஹ்விடம் பயப்படும்வரை அவர்கள் நம்மை பார்த்து பயந்து கொண்டுத்தான் இருப்பார்கள் (They will fear us until we fear Allah(swt))" என்று கூறியவர்.

மேலும் "ஏனென்றால், நாம் அல்லாஹ்விடம் பயப்படும்வரை, நமக்கு மது தேவையில்லை, பார்ட்டிகள் தேவையில்லை, பப்புகள் (pub) தேவையில்லை, இப்படி அவர்கள் வியாபாரத்தை பெருக்ககூடிய பல நமக்கு தேவையில்லை. இதனால் தான் பயப்படுகிறார்கள்"

தன்னை மிகுந்த நெகிழ்ச்சி அடையச்செய்த ஒரு நிகழ்ச்சியாக அவர் கூறியது...

"எனக்கு இறைவன் ஹஜ் செய்யக்கூடிய பாக்கியத்தை நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சில வருடங்களிலேயே கொடுத்தான். ஒருமுறை தொழுகைக்கு தாமதமாகிவிட்டது. பாங்கு சொல்லிவிட்டார்கள். நான் அவசர அவசரமாக ஓடுகிறேன், அங்கே சென்றால் என்னைப்போல பலரும் தாமதம். நாங்கள் எல்லோரும் முட்டிமோதி கொண்டிருக்கிறோம் பள்ளிவாயிளுக்குள் நுழைய. ஒரே குழப்பம்.

அப்போது தக்பீர் சொல்லப்பட்டது. நான் என் தொழுகை விரிப்பை சாலையிலேயே விரித்து விட்டேன். அப்போது பார்க்கிறேன் என் முன்னும் , பின்னும் ஆயிரக்கணக்கான மக்கள், மிக அழகாக வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள், மிக அதிக ஒழுக்கத்துடன். சில நொடிகளுக்கு முன் குழப்பங்களுடன் இருந்த இடமா இது?

நான் சொல்லுகிறேன், உலகில் எந்த ஒரு ராணுவமும் இப்படி ஒரு ஒழுங்கை ஒருசில நொடிகளில் கொண்டுவரமுடியாது. பாருங்கள் என் குடும்பத்தை, இதுதான் எங்கள் ஒற்றுமை, இதுதான் எங்கள் சகோதரத்துவம்.

இந்த சகோதரத்துவத்தை நாம் என்றென்றும் கடைப்பிடித்திருந்தால், இன்று அவர்கள் நம் நாடுகளை நெருங்கியிருக்க மாட்டார்கள். நம் சகோதரர்களை கொடுமைப்படுத்த மாட்டார்கள்"      

ஹிஜாப்பைப் பற்றி இவர் சொல்ல கேட்கனுமே...அடடா...

"ஹிஜாப் எங்கள் உரிமை. நான் முஸ்லிமென்பதை காட்டுகிறது. என்னிடம் மதுவை நீட்டவேண்டாம் என்று சொல்கிறது, என்னிடம் தவறான பேச்சுக்களை பேச வேண்டாம் என்று சொல்கிறது. இது ஏன் இவர்கள் கண்களை உறுத்துகிறது? என் பண்புகளை பார்த்து இவர்கள் என்னை மதிக்கட்டும், என் உடைகளை பார்த்தல்ல. அப்படி என் உடைதான் இவர்களுக்கு முக்கியம் என்றால் அவர்கள் நட்பு எனக்கு தேவையில்லை. ஹிஜாப் அணியாத முஸ்லிம் பெண்கள், ஹிஜாப் அணியாததற்கு எந்த ஒரு ஆதரவையும் என்னிடம் எதிர்ப்பார்க்க வேண்டாம்"  

ஒருமுறை ஒரு நாட்டில் நடந்த கலந்துரையாடலில், ஒரு பெண் இவரிடம்,

"இந்த நாடு தான் மிகுந்த வெப்பமுள்ள நாடாயிற்றே...இங்கேயும் நீங்கள் ஏன் ஹிஜாப் அணிந்திருக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு,

சகோதரி யுவான் ரிட்லி அவர்கள் சொன்ன பதில், "நரகம் இதைவிட வெப்பமாய் இருக்கும், பரவாயில்லையா?" என்பது...

இறைவன், தான் நாடியவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்து வரும் ஒவ்வொரு விதமும் வியப்பைத் தருகின்றன. அவர்களின் மூலம் அவன் நிறைவேற்றும் காரியங்களும் நம் கற்பனைக்கெட்டாதவை. எல்லாப் புகழும் இறைவனிற்கே...

சமீபத்தில் நான் கண்டு வியந்த மற்றுமொருவர் சகோதரர் ஜோஷுவா எவன்ஸ் (Br.Joshua Evans) அவர்கள். இவருடைய "How the Bible led me to Islam" என்ற வீடியோவை பாருங்கள், யு டியுப்பில் கிடைக்கிறது. இவர்களைப் போன்றவர்களை பார்க்கும் போதெல்லாம் என்னிடம் பல கேள்விகள் எழுகின்றன. அவற்றில் முக்கியமான கேள்வி "Did I took Islam for Granted?" என்பதுதான்...


யுவான் ரிட்லி அவர்களுக்கு தற்போதிருக்கும் ஒரு மிகப்பெரும் ஆசை, தன் மகள் டைசி (Daisy) இஸ்லாத்தின்பால் வரவேண்டும் என்பதுதான்.  

"ஆம், அவள் வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். ஆனால் அவளாக வரவேண்டும்" 

ஒருமுறை யுவான் ரிட்லி அவர்கள் மிக அழகாக சொன்னது...

"இஸ்லாத்தில், இறைநம்பிக்கையை வைத்தே ஒருவர் உயர்நிலையை அடைய முடியும், அழகினாலோ, வைத்திருக்கும் பணத்தினாலோ, பதவியினாலோ அல்ல"    

அவர் சொன்ன இந்த குரானின் அர்த்தங்கள் நம்மிடம் என்னென்றும் இருக்க வேண்டும், நிலைக்க வேண்டும்.

இறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவானாக...ஆமின்

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்... 

References:
1. Sister Yvonne Ridley's Speech at Reverts Meeting, New Zealand, 2005
2. Sister Yvonne Ridley's Interview at "The Hour", Canadian Broadcasting Corporation TV   
3. Sister Yvonne Ridley's interview with BBC, dated 21st Spetember 2004.
4. Sister Yvonne Ridley's Interview with Rachel Cooke, The Guardian dated 6th July 2008.
5. How I come to love the Veil, interview with Sister Yvonne Ridley, The Washington Post dated Oct 22, 2006


உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ
நன்றி : http://www.ethirkkural.com/2010/03/blog-post.html


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு