Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இன்று ஒரு தகவல் ! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | January 31, 2012 | , , ,


சில சுவராஸ்யமான தகவல்களைத் தருவதுதான் இந்த சிறு தொகுப்பின் நோக்கம். சும்மா போட்டு அறுக்கிறானே என்று அலுத்துக்கபிடாது. சோற்றில் அஞ்சுகறியையும் வச்சு சுவையாக பரிமாறுவதுதான் நோக்கமே தவிர. வேறெதுவும் இல்லை, இரண்டு கறிதான் இங்கே இருக்கு மத்த மூணு எங்கேண்டு கேட்காதீங்க. நேரம் கிடைச்சா வரும் (ஆனா வராது)..

நடைபயிற்சி

அக்குபஞ்ச்சர் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள், இது சைக்கிள் டயரை பஞ்ச்சர் செய்வதுபோல,நம்முடைய பாதத்தை பஞ்ச்சர் செய்து சில வியாதிகளை பக்குவப்படுத்துவதுதான் அது அல்லாஹ் நம் பாதத்தை நடப்பதற்காகத்தான் படைத்து இருக்கின்றான்..நடக்காமல் நந்திபோல் இருப்பதால் என்னென்ன வியாதிகள் வரும் என்பதை நாம் பார்த்து / அனுபவித்து கொண்டு இருக்கின்றோம்.அல்லாஹ் காப்பானாக அமீன்

நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ஒரு சென்சர் (sensor)  புள்ளி நம் பாதத்தில் உண்டு,அங்குதான் அதன் நரம்புகள் முடிவடைவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன, கீழே உள்ள படத்தைப் பார்த்தால் உங்களுக்கு புரியும், இதயம் வலப்புற பாதத்தில் உள்ளதை அறியலாம்,அந்த சென்சார் புள்ளிகளை மசாஜ் செய்வது மூலம்,அதன் வலிகளை குணப்படுத்த முடியும் என்று பஞ்ச்சர் செய்பவர்கள் கூறுகிறார்கள்.


அல்லாஹ் நாம் நடக்க பாதத்தை வைத்து அதன் மூலம் நம் உறுப்புகளை சுறுசுறுப்படைய செய்கின்றான் அதனால் தொடர்ந்து உறுப்புகளை மசாஜ் செய்வோமா அட அதாங்க “வாக்கிங்” போவமா நண்பர்களே

இரத்தவகையும், குணங்களும்

முயற்சிதான் மெய் வருத்தக்கூலிதரும் என்ற சொல்லுக்கு ஏற்ப, நாம் எந்த் அளவிற்கு தூய்மையான எண்ணத்துடன் முயற்ச்சி செய்கிறோமோ அந்த அளவிற்குத்தான் வெற்றி கிட்டும், அடுப்பே எரிக்காமே அல்லாஹ் சோறு தருவான் என்றிருப்பது மடமையின் உச்சகட்டம்

ஒரு சில ஆராய்ச்சியின் முடிவில் கிடைத்த தகவல்கள் படி வெவ்வேறு இரத்த குருப்பை சேர்த்தவர்களின் குணாதிசியங்கள் எப்படி இருக்கு என்று பார்ப்போம். இது உங்கள் குணங்களுடன் ஒத்து போகவில்லையென்றால் எனக்கெதிரா எதுவும் கேஸ் போட்டுராதீங்க.. !

‘O” டைப்

எதற்க்கும் தலைமை தாங்க வேண்டும் என்ற விருப்பம், குறிக்கோளை அடைய வேண்டும் என்ற தாகம் அதனை அடையும் வரை களைப்படையாத முயற்ச்சி,உங்களை நம்பலாம் அவ்வளவு நல்லவரு நீங்க,ஆனா சாதனைகள் செய்தாலும் பெருமை அடித்துக்கொள்வீர்கள் கொஞ்சம் பொறாமையும் உங்களிடம் உண்டு

‘A” டைப்

உங்களுக்கு ஒற்றுமை, அமைதி, ஒருங்கிணைப்பு ரொம்ப அதிகம்,மற்ற ஆள்கள் கூட பழகkகூடிய,பொறுமையாக உள்ள அன்பானவங்க நீங்க கொஞ்சம் பிடிவாத குணமும்,பரபரப்பாகவும் திரிவீங்க நீங்க

’B” டைப்

நீங்க கொஞ்சம் அப்படியும் இப்படியும் உள்ள நபர்தான், முகத்திற்கு நேரா பேசக்கூடிய ஆள்தான் உங்க வழியிலயே எல்லாத்தையும் செய்ய விரும்புவீங்க.கிரியேட்டிவிட்டியும் உங்களிடம் உண்டு ,ஆனால் நீங்க தனியாக சும்மா கம்பு போல நின்று செயல்களை செய்ய வேண்டும் என்ற குணம் உங்களை சில சமயம் துன்பத்திலும் மாட்டிவிடும்

“AB” டைப்

கூலான / கட்டுப்பாடனா ஆள்தான் நீங்க.எல்லாருக்கும் உங்களை பிடிக்கும், இயற்கையாகவே மற்றவர்களை மகிழ்ச்சிபடுத்த வேண்டும் என்ற குணம் உங்களிடம் மேலோங்கி இருக்கும்,ஆனா உங்களக்கு நட்ப்போட பழகத்தெரியாது, ஒரு விசயத்தில் 'டக்'கென்று முடிவெடுக்கவும் தெரியாது

என்னங்க! தகவல்கள் நல்லா இருந்துச்சா இல்லை புளிச்சமாவை அரைத்த கதைதானா!?

-முஹம்மது யாசிர்

படிக்கட்டுகள்... - ஏற்றம் - 4 22

ZAKIR HUSSAIN | January 30, 2012 | , , ,


போன வாரத்தில் எழுதிய Time Managementல் சில விசயங்களும் சேர்த்திருக்கலாம் எனும் அளவுக்கு முக்கியமான விசயம்;

அப்பாயின்ட்மென்ட் கொடுத்த நேரத்தில் சரியாக இருக்க வேண்டும். டிராபிக் ஜாம் எதுவும் தடையாக இருந்தால் எவ்வளவு நேரம் தாமதமாகலாம் என சொல்வதுடன் ஒரு  Sorry சொல்லிவிடுங்கள். உங்கள் மீது நிச்சயம் மதிப்பு கூடும்.

ஆனால் எப்போது பார்த்தாலும் தாமதமாக போகும் ஆளாக இருந்தால் ஒரு காமெடிபீசுக்கு உள்ள மதிப்புதான் நமக்கு கிடைக்கும். வருதப்படுவான்பா என நினைத்து எல்லோருக்கும் ஒரே நேரத்தில் அப்பாயின்ட்மென்ட் கொடுத்தால் நிறைய பொய் சொல்ல வேண்டிவரும். எதிர்த்தார்போல் உட்கார்ந்து கேட்பதும் மனிதன் தானே. அவனுக்கு பொய் என்றால் எதுவும் தெரியாதா என்ன?

ஒருவர் உங்களுக்கு அலுவல் மற்றும் முக்கிய விஷயங்களுக்கு SMS செய்தால் அது உங்களுக்கு கிடைத்து விட்டது என்பதற்கு Reply SMS   “OK”  என அனுப்பிப்பாருங்கள். உங்கள் மீது ஒரு மதிப்பு அவருக்கு இருக்கும்.

The Mask

முகமூடிக்கும் மனித மனத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. வெளியில் தான் எப்படி ஆகப்போகிறேன் என்பதை சத்தம்போட்டு சொல்வார்கள். ஆனால் மனதுக்குள் அவர்களிடம் அந்த தீர்க்கம் இருக்காது. இது இவர்கள் செய்யும் தொழில் / படிப்பு இதில் அப்படியே பிரதிபலிக்கும். தீர்மானத்துடன் வேலை செய்பவர்களிடம் ரிசல்ட் எப்போதும் உருப்படியாக இருக்கும்.

அப்படியானால் நாம் போட்டிருக்கும் முகமூடி என்ன என்பதை அறிவது முக்கியம். தன்னை ஒரு பயில்வான் மாதிரியும் , டெர்ரர் பார்ட்டி மாதிரி காண்பித்துக் கொள்பவர்கள் மனதுக்குள் சரியான பயந்தாங்கொள்ளியாக இருப்பார்கள். தாயத்து பார்ட்டிகளும் இதில் அடங்கும். நம்மில் சிலர் கொஞ்சம் அளப்பரை பார்ட்டியாக இருந்து 'நான் போனவுடனேயே தடுமாறிட்டான், கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியலெ. எப்படி சார் இவ்வளவு விசயம் தெரிந்து வச்சிருக்கீங்க'னு கேட்டான் என்று எப்போது பார்த்தாலும் தன்னுடைய பராக்கிரமங்களை அடிக்கடி அளந்து தள்ளுகிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையிலும் எதுவும் ஈசியாக முடியாது.


ஒரு நியூஸ்பேப்பர் வாங்கப்போனாலும் அதில் கூட கடைக்காரன் அவனிடம் பிரச்சினை செய்வான். காரணம் என்ன தெரியுமா?அது அவனுடைய  personal creation அவன் எனர்ஜி பிரச்சினைகளை எதிர்பார்த்தே இருக்கும். அவனுடைய ஈகோவை குளிர்விக்க இது போல் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். தன் எனர்ஜி எதில் இயங்குகிறது எனத்தெரியாமல் சிலர் கஸ்டமர்களிடம் விவாதித்து ஜெயிக்க நினைப்பார்கள். ஒன்று இதில் சுத்தமாக மறந்து விடுகிறோம் நம் கஸ்டமருக்கும் ஈகோ இருக்கிறது. தன்னை தோற்கடித்தவனிடம் எந்த மனிதனும் அன்புடன் திரும்பி வருவதில்லை. அப்படி வந்தால் அவன் மகான் / அல்லது ஞாபக மறதிக்காரன்.

செய்யும் வேலையில் / தொழிலில் பயத்துடன் அணுகும் ஒவ்வொரு விசயமும் உங்களுக்கு இன்னும் தேவையில்லாத பயத்தைத்தரும் [OR சொந்த ஆப்பை நீங்கள் கூர்சீவுகிறீர்கள் என அர்த்தம்.]. நீங்கள் செய்யும் வேலையில் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் எனும் எண்ணம் அடிக்கடி வந்து போகலாம். ஆனால் உங்கள் வேலையில் எத்தனை பேர் பயன் அடையப்போகிறார்கள் என நீங்கள் ஒருமுறை சிந்தித்தால் அந்த வேலை ஒரு கலை போல் உங்களிடமிருந்து வெளிப்படும்.

உதாரணம்: நீங்கள் கம்ப்யூட்டர் விற்பனையில் இருக்கிறீர்கள், அந்த கம்ப்யூட்டரின் டெக்னிக்கல் விசயங்கள் சொல்வதுடன் அது உங்கள் கஸ்டமரின் அன்றாட வாழ்க்கையில் அவரது வேலைகளை எப்படி எளிதாக்கும் என நீங்கள் தெளிவாக்கினால் உங்கள் மீது ஒரு தனி மரியாதை உங்கள் கஸ்டமருக்கு ஏற்படும்.. அதை விட்டு எடுத்த உடன் அதன் விலை எவ்வளவு என சொல்வது முறையில்லாத சேல்ஸ் டெக்னிக். ஒரு கஸ்டமர் தனக்கு என்ன Benefit என மட்டும்தான் பார்ப்பார். திருப்தியிருந்தால் விலை ஒரு தடையில்லை.

ட்ராவல் லைனிலும் அப்படித்தான், நீங்கள் சொல்லும் ட்ராவல் பேக்கேஜ் எப்படி அவர்களின் அன்றாட அவசர உலகத்திலிருந்து ஒரு அமைதியான ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் என சொல்லிப்பாருங்கள் the deal  can be closed much easily.

Third Party Sales referralsம் முக்கியம். மற்றவர்கள் எப்படி பயன் அடைந்தார்கள். அவர்கள் உங்களின் சேவையில் எப்படி திருப்தியடைந்தார்கள் என்று சொல்வது ஒன்றும் தம்பட்டம் அல்ல.  Sometime third party referral helps customer to make decision. 


The Empty Glass; [OR The Empty Bowl] 

இந்த காலிக்கோப்பை தத்துவம் படித்திருப்பீர்கள். ஒரு ஞானியிடம் தனக்கு பல விசயம் தெரிந்து இருக்கிறது என சொல்லி உங்கள் அறிவை கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன் என சொன்ன சீடனிடம். உன் கோப்பை காலியாக இருந்தால்தான் நான் நீர் நிரப்ப முடியும் என ஞானி சொன்னதாக: இதில் தெளிவு என்னஅறிவுப்பசி இல்லாமல் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இல்லாமல் "எனக்குத்தான் தெரியுமே" என்று இருந்து விட்டால் புதிய முன்னேற்றம் என்பது கனவில் கூட கைவசப்படாது.

தொழிலில் அப்டேட் ஆகாமல் இருந்தால் எப்படி வாழ்கை மட்டும் அப்டேட் ஆக இருக்கும்?.

Law Of Attraction & Law of  Vibration

உங்கள் எண்ணமும் எனர்ஜியும் எதில் நிலைத்திருக்கிறதோ அதில் அதாக நீங்கள் மாற முடியும்.உங்கள் இன்றைய சூழ்நிலையை நிர்ணயிப்பது முன்பு உங்களிடம் இருந்த Law Of attraction தான். உங்களைப்பற்றிய எண்ணம் என்ன என நான் உங்களை எழுதச்சொன்னால் பெரும்பாலும் எல்லோரும் நான் சிம்பிளானவன், இந்த நிறத்தில் உடை உடுத்துவேன் , இப்படித்தான் எல்லோரும் எழுதுகிறார்கள். ஆனால் தன் கனவுகளை சாதித்தவர்களாக அவர்களாலேயே எழுத கை வருவதில்லை. இது உங்களின் Prosperity Consciousnessக்கு மிகவும் முக்கியம். எதையும் நெகடிவ் ஆக சிந்தித்துவிட்டு, முன்னேறுவதை பற்றி பேசினால் 300 தடை சொல்லி, அதற்கு காரணம் "யார் சொல்லு பேச்சு கேட்கிறா! எல்லாம் தலை படிக்கிறானுக" என சொல்லும் பெரும்பாலானவர்கள் grounded in “Energy of Poverty”.  ஒன்றுமே செய்யாமல் இருந்தால் பாதுகாப்பானது  என நினைப்பார்கள். கடைசியில் அவர்களை பாதுகாக்க ஆள் தேவைப்படும் சூழல்தான்.

தன்னை ஒரு பணக்காரன், ஆரோக்கியமானவன் , சாதிப்பவன் இப்படி சொல்வதையோ / எழுதுவதையோ ஏதோ தேசத்துரோகம் மாதிரி நினைக்க பழகிவிட்டோம். கொஞ்சம் சத்தம் போட்டு சிரித்தாலே திட்டு வாங்கும் முன்னோர்கள் வழி.தானாக ஏற்படுத்திக்கொண்ட வெட்டித் தத்துவங்கள். இதில் சில பேர் சொல்வது இன்னும் அதிசயம். ஏனெனில் இவர்களுக்கு முன்னேர ஆசை இல்லாமல் இல்லை. ஆனால் தானாக ஏற்படுத்திக் கொண்ட சிறையிலிருந்து இவர்கள் வெளிவரத்தயாராக இல்லை. All are “Mental Prisons”

நம் ஆட்களின் வெட்டித்தத்துவங்கள் சில.
# பணம் ஒரு பேய்
# பணம் வந்தால் நிம்மதி போயிடும்
# பணக்காரன் என்றாலே "எங்கோயோ லவட்டிட்டு வந்துட்டான்யா"
# பணம் உறவை முறிக்கும்.
# பணம் நிறைந்தால் பிள்ளைங்க எல்லாம் கெட்டுடுவாங்க
# பணம் மனிதர்களை பணத்துக்கு அடிமையாக்கும்


என்னுடைய கேள்வி இதுதான்..
இவ்வளவு நெகட்டிவ் எண்ணங்களை வைத்துக்கொண்டு எப்படிப்பா பணத்தை சம்பாதிக்க போறே??

தொழில் தர்மம் தாண்டி தொடர்ந்து வெற்றி அடையமுடியாது. ஒவ்வொரு தொழிலும் ஒரு ‘DEMAND” உங்கள் மீது வைத்திருக்கும். காலை பேப்பர் வியாபாரம் செய்ய கடை ஆரம்பித்து காலையில் எனக்கு 8 மணிக்கு மேல்தான் எழுந்திருக்கமுடியும் என சொன்னால் எப்படி?. வொர்க்சாப்பில் மெக்கானிக் வேலைக்கு வந்து எனக்கு ஸ்பானர், எண்ணெய்கிரீஸ் என்றால் அலர்ஜி என்றால் என்ன சொல்வது.

நீங்கள் அன்றாடம் செய்யும் வேலையை திட்டிக் கொண்டே செய்தால் எதுவும் சிந்தனைக்கு வராது. கடைசியில் மிஞ்சுவது நோய்தான், தேவையில்லாத டென்ஷன். டென்ஷனில் உங்கள் சுவாசம் குறையும். சுவாச அளவு குறைந்தால் உங்கள் ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவில் குறைவு இருக்கும் ஆக்ஸிஜன் உங்கள் ஆர்கனுக்கு போதாமல் போகும்போது நோய் ஆரம்பிக்கும்.


இப்போது நன்றாக மூச்சு இழுத்து விடுங்கள் ஒரு 3 முறை......
தொடரும்...
We will see more detail in Next Episode…

- ZAKIR HUSSAIN

இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி - Sports Day ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | January 30, 2012 | , ,


இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளியில் இன்று நடந்த விளையாட்டு தின நிகழ்வில் மாணவர்களின் சாகச நிகழ்சிகளும் அதனைத் தொடர்ந்து இளம் மாணவர்களின் ஓட்டப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழாவும் இனிதே நடந்தேறியது - அல்ஹம்துலில்லாஹ் !

பள்ளியின் மேலாளர் S.K.M.ஹாஜா முகைதீன் Msc., B.T. (முன்னாள் தலைமை ஆசிரியர் காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி-ஆண்கள்) வென்புறாக்களை பறக்கவிட்டு விளையாட்டு நிகழ்ச்சிகளை துவக்கிவைத்தார்கள்.


கண்கொட்டாமல் பார்க்க வைத்த பள்ளி வளாகத்தில் இளம் மாணவச் செல்வங்கள் நிறைந்து இருக்கும் பூங்காவில் நுழைந்த உணர்வு, மாணவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளின் வண்ணக் கலவை.



இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி இளம் மாணவ வீரர்களின் சாகச விளையாட்டு பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது...







பிஞ்சு பாதங்களின் ஓட்ட வேகம் கூட்டி உள்ளங்களில் குதுகலத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது...





மலர்களும் ஒடுமா ? ஆம் இங்கே சின்னஞ் சிறு பூந்தளிர்கள் வண்ணத்து பூச்சியின் எல்லைக் கோட்டை நோக்கி ஓடும் அழகோ நம்மை அசத்துகிறது.



ஓட்டப் போட்டிகள் மட்டுமல்ல நடைபோட்டிகளும், சிலிர்க்க வைக்கும் சாகச போட்டிகளிலும் மாணவர்கள் கலந்து கொண்டு கலக்கினர் !




பார்வையாளர்களாக இருந்தவர்களை பரவசத்திலும் ஆனந்தத்திலும் ஆழ்த்தி அவர்களின் மனம் வென்றவர்களுக்கு, பரிசளித்து வெற்றியாளர்களாக அறிவிக்க வேண்டாமா ? 

ஆம் !

இதோ சின்னஞ்சிறு மொட்டுகளின் கரங்களில் தவழும் பரிசுக் கோப்பைகள்.







விளையாட்டுப் போட்டிகளிலும் சாகச நிகழ்வுகளிலும் சாதனை படைத்த மாணாவர்களுக்கு பரிசளிப்பு வழங்கப்படுகிறது.




விளையாட்டு விழா என்றாலே மனதுக்கும், உடல் வலிமைக்கும் சவாலாக இருக்கும் அப்படியான தருணத்தில் மாணவர்களின் குதூகலம் அவர்களின் பள்ளிக்கூட வாழ்வில் மறக்க முடியாத நாட்கள்தான் என்பதில் ஐயமில்லை !

பங்கெடுத்த மாணவமணிகள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள், இன்னும் அதிக அளவில் பங்கெடுத்து பயிலும் பள்ளிக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறோம்.

படங்கள் : அபுஇஸ்மாயில்

-அதிரைநிருபர் குழு

காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி - பேசும் படம் 43

அதிரைநிருபர் பதிப்பகம் | January 29, 2012 | , , , ,


அதிரை மற்றும் சுற்று வட்டார மக்களுக்கு என்று ஓர் கல்விக் கருவூலமாக 60 வருடங்களுக்கு முன்னர் அதிரையின் கல்வித் தந்தை மர்ஹூம் SMS அவர்களால் சமுதாய அக்கரையுடனும் எதிர்கால சந்ததியர்களின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட உயர்நிலைப் பள்ளி இன்று காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளியாக கம்பீரமாக தலை நிமிர்ந்து வைரவிழா தருணத்தில் நிற்கிறது.


அறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள், பிரபல தொழில் அதிபர்கள், கல்வி சீமான்கள், கொடை வள்ளல்கள், கல்வி பயின்ற மேதைகள், கணினி வல்லுனர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், சட்டம் தெரிந்த வல்லுனர்கள், கவிஞர்கள் என்று உருவாக்கிய இடம்.


அப்படியே நெஞ்சில் நிற்கும் வகுப்பறைகள் ! 1980களில் தலைமை ஆசிரியர் அலுவலகம், அறிவியல் பிரிவிற்கான சோதனைக்கூடம், 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு அறைகள்...


மறக்கத்தான் முடியுமா ? இந்த வகுப்பறைகளை !?


பொலிவுடன் கானும் புதிய பள்ளிக் கட்டிடத்தின் நேர்த்தி மீண்டு அழைக்கிறது பள்ளிப் படிப்புக்கு வரச் சொல்லி !



மாநில அளவில் இதுநாள் வரை நடைபெற்ற ஓட்டப்போட்டிகளில் கலந்துகொண்டு இப்பள்ளிக்கு பெருமையை தேடித்தந்த மாணவர்களின் பட்டியல்கள்.


அரசுப் பொதுத்தேர்வில் இப்பள்ளியின் முதல் மதிப்பெண்கள் பெற்று சிறந்து விளங்கிய மாணவர்களின் பட்டியல்கள்.


மஸ்ஜித் - காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி :

ஆரம்பிக்கட்ட கால கட்டங்களில் ஓலைக் கூரையாக இருந்த அல்லாஹ்வின் பள்ளி இன்று அழகுற எழுந்து நிற்கும் இம்மஸ்ஜித்தில் மாணவர்களுக்கு தொழுகைகள் மற்றும் தீனியாத் வகுப்புகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


விளையாட்டு மைதானம்,  எண்ணற்ற அற்புதமான விளையாட்டு சாதனை வீரர்களை உருவாக்கிய இடம்


சத்துணவுக்கூடம்


கழிப்பறை


குடிநீர் தொட்டி


கிளறிவிட்ட நினைவுகளோடு - வாங்க பள்ளிக்கூடம் போகலாம் !
- அதிரைநிருபர் குழு
படங்கள் : சேக்கனா M. நிஜாம் மற்றும் அபூபக்கர் (அமேஜான்)

கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை-5 23

அதிரைநிருபர் பதிப்பகம் | January 28, 2012 | , , , ,


நமது இத்தொடருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குபவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களுள் தலையாயது,

والشعراء يتبعهم ألغاون 

“கவிஞர்கள் - அவர்களை வழிகேடர்களே பின்பற்றுவர்”  (26: 224) எனும் இறைவாக்காகும்.  ‘ஓ! இப்படியோர் இறைவசனம் இருப்பது எனக்குத் தெரியாதே!’ என்று சொல்லும் அளவுக்கு நானொன்றும் அறிவீணன் அல்லன்.  இதற்கும், இது போன்ற வசனங்களுக்கும் வேத விரிவுரையாளர்கள் எவ்வாறு விளக்கம் தந்துள்ளார்கள் என்பதை விளங்குவதே அறிவுடைமை.

இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் தமது ‘தஃப்ஸீர் இப்னு கதீர்’ எனும் விரிவுரையில் கூறும் கருத்து நமக்கு முன் தெளிவாக உள்ளது.  அவர்களின் கருத்துப்படி, அன்றைய மக்காவின் சிலை வணக்கக்காரர்களுள் இலக்கிய வித்தகர்களும் இருந்தனர்.  அவர்கள் குர்ஆனிய வசனங்களைக் கேட்டுவிட்டு எள்ளி நகையாடி, ‘வேத வசனங்கள்’ என்று சிலவற்றைப் புனைந்து, மக்களுக்கிடையே புழக்கத்தில் விட்டனர்.  அவற்றுக்கும் ஆதரவாளர்கள் சிலர் இருந்தனர்.  பொய்யாகப் புனைந்துரை செய்தவர்களைத் தரம் தாழ்த்தியும், அவர்களுக்குப் பக்கத் துணையாக நின்றவர்களை ‘வழிகேடர்கள்’ என்றும் சாடியே இவ்வசனம் இறங்கிற்று எனக் குறிப்பிடுகின்றார்கள் இமாம் இப்னு கதீர் (ரஹ்).  

இறைத் தூதரைக் ‘கவிஞர்’ என்று இணைவைப்பாளர்கள் கூறியபோது, 

و ما علمناه الشعر ما ينبغي له

“(நம் தூதராகிய) அவருக்கு நாம் கவிதையைக் கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் இல்லை” (36:69)  என்று மாற்றடி கொடுத்தான் மறை வழங்கிய வல்லோன்.   வேத விரிவுரையாளர்களுள் இன்னொரு மேதையான இமாம் அத்தபரீ (ரஹ்) அவர்களும் தமது ‘தஃப்ஸீர் அத்தபரீ’ எனும் நூலில் இவ்வாறு குறிப்பிடுவதாக இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் இதை உறுதிப் படுத்துகின்றார்கள்.

குர்ஆனிய வசனங்களின் இயல்புகளுள் ஒன்று, ஒரு கருத்தை வலியுறுத்தும்போது, அதன் பின்னே அதற்கு எதிரானதையும் சேர்த்துக் கூறிவிடுவது ஆகும்.  இத்தன்மையில் அமைந்துள்ளதுதான் மேற்காணும் முதல் வசனம்.  அதன் பின்னே இடம்பெற்ற 227 வது வசனத்தைப் பாருங்கள்:

“(ஆயினும்,) அவர்களுள் எவர் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்து, (தங்களின் கவிதைகளில்) அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூர்ந்து, (பிறர்  நிந்தனையால்) அநியாயத்திற்கு உள்ளானதன் பின்னர் பழி வாங்கினாரோ, அவரைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்.)”

நம்பத் தகுந்த நபிமொழி அறிவிப்பாளரும் நபி வரலாற்றாசிரியருமான முஹம்மத் இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:  மேற்கண்ட 224 வது வசனம் அருளப்பட்டவுடன், நபித் தோழமையைப் பெற்ற கவிஞர்களான ஹஸ்ஸான் இப்னு தாபித், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா, கஅப் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகியோர் அழுதவர்களாக அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நாங்கள் எல்லாரும் கவிஞர்கள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும்தானே;  அந்த நிலையில் அல்லவா இத்தகைய வசனம் அருளப்பட்டுள்ளது!” என்று அங்கலாய்த்தவர்களாகக் கூறினர்.  அப்போது நபியவர்கள் அத்தோழர்களுக்கு மேற்கண்ட 227 வது வசனத்தை ஓதிக் காட்டி, இவ்வசனத்தில் கூறப்பட்ட மூன்று தன்மைகளுக்கு உரியவர்கள் நீங்கள்தாம், நீங்கள்தாம், நீங்கள்தாம்” என்று ஆறுதல் கூறினார்கள்.   

‘அபூ தாவூத்’ எனும் நபிமொழித் தொகுப்பில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வாயிலாக இடம்பெற்ற அறிவிப்பொன்றும் இக்கருத்தை வலுப்  படுத்துகின்றது.

‘அஷ்ஷுஅரா’ (கவிஞர்கள்) எனும் அத்தியாயத்தின் விரிவுரையை நிறைவு செய்யும்போது, இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் ஒரு நபிவரலாற்று நிகழ்வைக் குறிப்பிடுகின்றார்கள்.  அண்ணல் நபி (ஸல்) அவர்களை வசை மொழிகளால் எதிரிகள் திட்டியபோது, தோழர் ஹஸ்ஸானைப் பார்த்து, “இவர்களுக்கு எதிராக வசைக்கவி பாடும்; ஜிப்ரீலும் உமக்குத் துணை நிற்பார்!” என்று கூறி ஊக்கப் படுத்தினார்கள்.
(ஆதாரம்: சஹீஹுல் புகாரீ)

கஅபு இப்னு மாலிக் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் வந்து, “எது அருளப்பட வேண்டுமோ, கவிஞர்களைப் பற்றியான அதை அல்லாஹ் அருளிவிட்டான்” என்று கவலையுடன் கூறினார்கள்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உண்மையான இறை நம்பிக்கையாளன் தன் எதிரியுடன் தன் வாளாலும் நாவாலும் போர் செய்வான்.  இவ்வாறு நாவால் செய்யும் சொற்போரானது, அவர்களை அம்புகளைக் கொண்டு தாக்குவதற்குச் சமமாகும்” என்று கூறி, ஆற்றுப் படுத்தினார்கள்.
(ஆதாரம்: முஸ்னது அஹ்மத்)

(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)

-அதிரை அஹ்மது

வேகம் விவேகமா? 36

அதிரைநிருபர் பதிப்பகம் | January 27, 2012 | , , , , ,


தம்பி,

வேகம் குறை…
விரட்டுவது
விதியாகக் கூட இருக்கலாம்

உன் பைக்கில்
உருள்வது சக்கரங்களா ?
சாவின் கரங்களா ?

மழை நனைத்த சாலையும்
மணல் நிறைந்த பாதையும்
திறன் மிகுந்த யாரையும்
புரட்டிவிடும் சருக்கியே

உலகாள்பவன்
உனக்களித்த
உடலுறுப்புகளை
ஊனமாக்காதே

பேணிப் பாதுகாக்கும்
புலண்களை
ஊமையாக்காதே

காதில் கேட்பதற்காக
கைபேசியை
கழுத்தில் வைக்கும்போது
அது
அலைபேசியல்ல அன்பரே
அரிவாளென்று அறி

தீ சுடுமென்றோ
தீயவை கெடுக்குமென்றோ
சொல்லித் தெரிவதோ அறிவு

விபத்தின் விபரீதம்
விளங்காதா உனக்கு

முழங்கை
மூட்டு பிறழ்ந்தவன்
முழுக்கை யுடைந்தவன்
முகத்தில் தழும்பு படைத்தவன்
நடை குலைந்தவன்
நொண்டி நடப்பவன் என
எத்தனை ஆதாரங்கள்

போதாதென்று
அகால மரணங்கள்....

பெற்ற தாயை
பேதலிக்கவிட்டுப்
போய்ச் சேர்ந்தவர்

கட்டிய மனைவியின்
காத்திருப்பை நிரந்தரமாக்கி
கண்மூடியவர்

நண்பர்களை விட்டோ சேர்ந்தோ
நீள்துயில் கொண்டவர்

பேர் வைத்தப் பிள்ளைகளை
பாரில் தவிக்கவிட்டு - இறுதி
ஊர் போய்ச் சேர்ந்தவர்

தொலைதூரப் பயணத்தை
இரு சக்கரத்தில் கடந்தால்
தமிழ்நாட்டுச் சாலைகள்
தண்டுவடத் தட்டுகளை
மென்றுவிடும் தம்பி

வாழ்க்கையில் முந்து
வளைவுகளில் முந்தாதே

தொழிலில் காட்டு தோரணையை
தெருவில் காட்டாதே

விவேகத்தைக் காட்டு
வேகத்தைக் கூட்டாதே

உனக்காகக் காத்திருப்பவைகளை
உணராமல்
நீ காத்திருக்கும் மரணத்தை
எட்டிப் பிடிக்க
ஏன் இந்த வேகம்

வேகம் குறை
விரட்டுவது
விதியாகக் கூட இருக்கலாம்.

-சபீர்

நட்புக்கு வயது நாற்பத்தி எட்டு... ! 27

அதிரைநிருபர் பதிப்பகம் | January 26, 2012 | , , , , ,


கடிதங்கள் கூட இலக்கியமாகுமா? எழுதுபவரையும்,  எழுதப்படுபவரையும், எழுதும் விஷயத்தை பொறுத்தும் ஆகலாம். ஜவஹர்லால் நேரு தனது மகள் இந்திராவுக்கு சிறையில் இருந்து எழுதிய கடிதங்களின் தொகுப்பு “ GLIMPSES OF WORLD HISTORY”  என்று நூலாகி இருக்கிறது. அதேபோல் நெப்போலியன் தனது மனைவி ஜோசபினுக்கு , ஹிட்லர் தனது காதலிக்கு, ஆபிரஹாம் லிங்கன் தனது மகனின் ஆசிரியருக்கு, ரொனால்டு ரீகன் தனது மனைவி ரேனிக்கு, லிபியாவின் கடாபி ஜனாதிபதி ஒபாமா ஆகியோருக்கு இடையில் நடந்த கடிதபோக்குவரத்துக்கள் உலகில் போற்றப்படுகின்றன. அண்ணாதுரை அவர்கள் “அன்புள்ள தம்பிக்கு” என்று எழுதிய கடிதங்கள் இலக்கிய தரம் வாய்ந்தவை. 

இதோ இங்கே ஒரு கடிதம் பிரசுரிக்கப்படுகிறது. இது இரு நண்பர்களுக்கிடையே ஒரு நாற்பத்தி ஐந்து ஆண்டு கால நட்பின் பரிணாமங்களை கூறும் கடிதம்.  ஒரு நண்பரால் இன்னொரு நண்பருக்கு எழுதப்பட்டது. எழுதியவரின் அனுமதி பெற்று இதை அனுப்பி இருக்கிறேன். எழுதப்பட்டவருக்கும் இது வெளியிடப்படுவதில் மகிழ்வே. இதை எழுதியது யார் ? யாருக்கு எழுதப்பட்டது என்பதை நம்மில் சிலர் கண்டு பிடித்துவிடலாம். கண்டு பிடிக்க முடியாவிட்டால் பின்னூட்டத்தில் போட்டு உடைத்துவிடலாம். உடைத்து. பெரிய இலக்கியத்தரம் என்ற வரிசையில் வராவிட்டாலும் கூட நம்மில் எல்லோருக்குமே பொதுவாக அடுத்தவர் கடிதத்தை படிப்பதில் ஒரு சின்ன சபலமும் சந்தோஷமும் இருக்கலாம். அந்த சந்தோஷத்தை தரும் பெறும் நோக்கத்தில் மட்டுமே இது அனுப்பப்படுகிறது. 

அதுமட்டுமல்லாமல் ஒரே சீரியஸ் ஆன விஷயங்களையே சிந்திக்கும்/படிக்கும் மனதுக்கு ஒரு சின்ன ரிலாக்ஸ். 

இதோ அந்தக்கடிதம் இப்படி தொடங்குகிறது....

யாவினும் இனிய நண்ப!

அஸ்ஸலாமு அலைக்கும்.

தாங்கள் குறிப்பிட்டு இருப்பதுபோல் உலகம் முழுதுமிருந்து எத்தனையோ நண்பர்கள் எனது கண் அறுவை சிகிச்சைக்கு பிறகு எனது நலம் கேட்டிருந்தாலும் அவர்களில் பலர் இதுவரை நம்மை போல் ஒன்றாக உண்டு, உறங்கியவர்கள் அல்ல. இணைய தளத்தில் எனது எழுத்துக்களை ரசித்து நட்பு பாராட்டியவர்கள் அவர்களில் பலர்.

“ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன?

வேரென நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்” 

என்று பாரதி பாடிய வரிகளுக்கு ஒப்ப, எனக்கு வேராகவும், நீராகவும்  இருந்ததும் இருப்பதும் உங்கள் நட்பே! இதை நான் ஐ.நா சபையில் கூட அறிவிக்க தயார். 

மீண்டும் கூற வேண்டுமானால் எனது வாழ்வில்

“நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய்” இருந்தது உங்கள் நட்பே! 

மாணவப்பருவத்தில் நாமும் களித்திருக்கிறோம். ஒரே நாளில் மூன்று படங்கள் பார்த்திருக்கிறோம்.

டில்லிக்கு ராஜாவாக இருந்தாலும் பள்ளிக்கு பிள்ளைதானே. பின்னாளில் பெரிய பேராசிரியராக வந்து புகழ் பெற இறைவன் நாடி இருந்தாலும் சிறு வயதில் எல்லோரும் சேட்டைகள் செய்தவரே. பூக்கின்ற நேரத்தில் பூத்தலும் காய்க்கின்ற காலத்தில் காய்த்தாலும், பழுக்கின்ற நேரத்தில் பழுத்தலும் பழுதல்லவே. 

தஞ்சைமணிக்கூண்டு மங்களம்பிகாவில் நெய் மசால் தோசையும், இந்தோ இலங்கையில் கோலா உருண்டை குழம்புக்கறியும், சென்னை புகாரியில் பீச் மெல்பாவும் ருசித்து இருக்கிறோம். 

தொப்பிக்கடை மாடியில், இரவில் விளக்குகளை அணைத்துவிட்டு உறக்கம் வரும்வரை வெறும் தரையில் படுத்துக்கொண்டே விடிய விடிய விடிய குட்டி காதருடனும், அய்யம்பேட்டை சபீருடனும், அரசனகரி நிஸாருடனும், தோப்புத்துறை ரெஜாக்குடனும், சக்கராப்பள்ளி சாலிகுடனும் அரட்டை அடித்து இருக்கிறோம். அந்த காலத்தில் சிரித்த சிரிப்புகளைக் கொண்டு எத்தனையோ கிலோவாட் மின்சாரம் தயாரிக்கலாம். 

நானும் நீஙகள் ஆடியும் பாடியும் களித்திருக்கிறோம். ஆனாலும் வகுப்பில் முதலாவதாக வந்தும் காட்டியிருக்கிறோம். 

நீங்கள் பதினோராம் வகுப்பு படிக்கும்போது (1965-66) நீங்களும் , நான் பதினோராம் வகுப்பு படிக்கும்போது (1967-68) நானும் வாக்களிக்கப்ப்பட்டு பள்ளியின் மாணவர் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தோம்.  (நமக்கு கேள்ஸ் ஓட்டு அதிகம் விழுந்தது- எனக்கு இன்னும் அதிகம் விழுந்தது - காரணம் நான் நாடகத்தில் பெண்வேடமிட்டது முதல் எனக்கு வசந்தி என்று பெயர் சூட்டி கிண்டலடிப்பார்கள், வேறொரு நாடகத்தில் நான் திப்பு சுல்தானாக நடித்ததை வசதியாக மறந்துவிடுவார்கள்.) 

அந்த நேர பள்ளி பாராளுமன்றத்தில் நாம் இருவருமே அடுத்தடுத்த பிரதமர்கள்! அம்மடியோவ். நம்மீது ஊழல் புகார் எதுவும் வரவில்லை. பள்ளி பாராளுமன்றத்தில் மீலாது விழா கணக்கை நீங்கள் சமர்ப்பிக்கும்போது விருந்தினருக்கு “வெண்சுருட்டு” (சிகரெட்தான்) வாங்கியது என்று நீங்கள் கணக்கு படித்தது ஒரு எதிர்கால தமிழ் பேராசிரியராக வருவதற்கு அச்சாரமிட்டது. அன்று உங்களுக்கு எதிராக எதிர்கட்சி தலைவர் நண்பர் அதிரை அன்வர் அவர்கள்.( இன்றைய த.த.ஜ.). 

எனக்கு இரண்டு வருடம் மூத்தவராக நீங்கள் படித்து உங்கள் புத்தகங்களை அப்படியே நான் பெற்றுக்கொள்ள வசதியாக இருந்தது. ஆனாலும் அதற்காக என வீட்டில் பணம் வாங்கி நூர் லாட்ஜிலும், ஆரிய பவனிலும் தின்று செலவு செய்ததும், கொழும்பு ஸ்டோரில் சட்டை துணி எடுத்ததும் வேறு விஷயம்.  நீங்கள் சப்தம் போட்டு அழகு தமிழில் படிப்பதை கேட்டு கேட்டு பதினொன்ராம் வகுப்பு பாடங்கள் எனக்கு ஒன்பதாம் வகுப்பிலேயே மனப்பாடம் ஆனதே அது பெரிய விஷயம். குப்தர் காலம் பொற்காலம்,  இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை, ஒருவிதையிலை இருவிதையிலை தாவரம், வட்டத்தின் பரப்பளவு, பித்தகொராஸ் தேற்றம்,  பறவை பறக்கும் விதத்தை விவரி, தவளையின் இனப்பெருக்கம், போர்மூண்டகாலை மனோன்மணிய நடராசன் வீரர்களை நோக்கிப்பேசியது,  அவன் புல்லையும், நாங்கூழ் புழுவையும் பார்த்து பேசியது, கண்ணகி கால் சிலம்பை ஒடித்தபோது 'தேரா மன்னா' என்று பேசியது உட்பட அனைத்தும் இன்றும் என் நினைவில் பதிந்த காரணம் நீங்கள் சப்தமிட்டு சப்தமிட்டு படித்து அவை எனக்கும் மனப்படமாகி இருந்தது. இன்று கேட்டாலும் சொல்வேன்.  

கட்டுரைப்போட்டியிலும், பேச்சுபோட்டியிலும் பரிசுகளை அள்ளிக்குவித்து இருக்கிறோம். காந்தி நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டியில் மாவட்டத்தில் முதல் பரிசு பெற்று வந்தோம். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தஞ்சை மாவட்டத்தின் பிரதிநிதியாக நீங்களும் வட ஆற்காடு மாவட்ட பிரதிநிதியாக வாணியம்பாடியிலிருந்து நானும் கலந்து கொண்டு அன்றைய சட்ட கல்லூரி சார்பில் வந்த சுகி சிவத்திடம் தோற்றுப்போனோம். கோவை பி. எஸ். ஜி. கலைகல்லூரியில் பரிசு பெற்று வந்தோம். வேலூர் ஊர்சு கல்லூரியில் கவிக்கோ அப்துல் ரகுமான் கையால் பரிசுக்கோப்பை வாங்கினோம். பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் சிற்றின்பம் / பேரின்பம் பேச்சுப்போட்டியில் வாகை சூடினோம்.  நம்மிடம் தோற்ற பலர் பின்னாளில் அரசியலில் புகுந்து அமைச்சர்களாகவும் , சபாநாயகரராகவும் வந்தது தனிக்கதை. உள்ளூர் மாணவர்களானாலும் கல்லூரிக்கு நாம் உதாரண மாணவர்களாய் இருந்து இருக்கிறோம். ஆசிரியர்கள் அனைவரின் அன்பையும் பெற்றோம். 

ஒரு முறை கல்லூரியில் காந்தி நூற்றாண்டுவிழா பட்டி மன்றத்தில் நாம் எதிர் எதிர் அணியில் பேசும்போது வட்ட மேசை மாநாட்டுக்கு காந்தியை ஏன் அனுப்பினார்கள்? கோகலேயை , திலகரை ஏன் அனுப்பவில்லை என்று நீங்கள் கேட்க அடுத்து பேச வந்த நான் வட்டமேசை மாநாடு நடக்கும்போது கோகலேயும் திலகரும் உயிரோடு இல்லையே செத்தவர்களை எப்படி அனுப்ப முடியும் என்று கேட்க-

மற்றொரு பட்டி மன்றத்தில் சொந்த விஷயத்தை எடுத்து உதாரணத்துக்கு நான் பேச, பந்து விளையாட்டில் பாலைத்தான் ( BALL) உதைக்க வேண்டும் காலை அல்ல என்று நீங்கள் பேச-

இப்படியெல்லாம் பல உரசல்கள் இருந்தாலும் நாம் அன்று முதல் இன்று வரை நம்மை நாம் அறிந்து கொண்டவர்களாகவும் புரிந்து கொண்டவர்களாகவும் நமது நட்பு நாள்காட்டியில் நாற்பத்தெட்டு ஆண்டுகளை கடந்துவிட்டோம். நீங்கள் ஓயுவூதியம் பெறுகிறீர்கள். நான் இன்னும் ஊதியம் பெறுகிறேன். 

சிற்பிகள் இல்லாமலேயே நம்மை நாமே செதுக்கிக்கொண்ட சிற்பங்களாக வழிகாட்ட ஆள் இல்லாமல் நாமே நமக்கு தேர்ந்தெடுத்த வாழ்வுப்பயணங்கள். அப்பப்பா.....! உங்கள் வாப்பா ஜவுளிக்கடையும், புகையிலை வியாபாரத்தையும் கவனிக்கவே நேரம் இல்லா நிலையில், என் வாப்பாவோ பினாங்கிலிருந்து இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வந்து ஓர் இரு மாதம் தங்கி அரைகுறையாய் கேள்விகேட்டு, விளங்கி ஆயிரம் அறிவுரைகள் மட்டும் சொல்லி செல்வார்கள். நாம் சொல்வதுதான் அவர்களுக்கு உண்மை. நாமே கூடிப்பேசி நமது உயர்கல்வியை தேர்ந்தெடுத்தோம் வழிகாட்ட ஆள் இல்லை. கணக்கு சொல்லித்தர ஆள் இல்லை. ஆங்கில சொல்லுக்கு அர்த்தம் சொல்லித்தர ஆள் இல்லை.  ஆனாலும் நமக்கு நல்ல ஆசிரியர்கள் அமைந்தார்கள். அபிராமம் ரெஜாக் சாரும்,  இளையான்குடி பசல் முகமது சாரும் ( 42 வருடங்களுக்கு பிறகு இன்றும் உறவு வைத்து சென்ற முறை ஊர் சென்றபோது மதுரை போய் பார்த்து வந்தேன்), நம்மை இரும்பாக காய்ச்சி சம்மட்டி கொண்டு அடித்து அடித்து உருவாக்கிய பட்டரைக்காரர்கள். 

நட்புக்கு இலக்கணம் கூடிக்கதைபேசி, கூத்தடித்து, கும்மாளமிட்டு, ஊர்சுற்றுவது மட்டுமே என்று இருந்த, இருக்கும்  நிலைகளை மாற்றி,

உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும், முகம் புதைக்கும் மடியாகவும், முதுகில் தட்டும் கையாகவும், சாய்ந்து கொள்ளும் தோளாகவும், சாய்த்து கேட்கும் செவியாகவும், வழிந்தோடும் கண்ணீரை வழித்துவிடும் சுட்டு விரலாகவும், உடுக்கை இழந்தவனுக்கு கையாகவும் இருந்தன நமது நட்பு .

வாழ்க்கை புயலில் தடுமாறி கலங்கரை விளக்கு தெரியாமல் தடுமாறி நின்ற எனக்கு நண்பர் தாவூது அவர்கள் மூலம் ஒளிகாட்டி வழிகாட்டிநீர்கள். இரயில பயணம் போல் படித்து முடித்ததும் அவரவர் பாதைகளில் சென்று மறந்து வாழும் எண்ணற்ற நண்பர்கள் நடுவில் ஏறறத்திலும் இறக்கத்திலும் என்றென்றும் துணையாய் இருப்பது உங்கள் நட்பு.  

நான் வீடற்று இருந்த நிலைகண்டு உஙகளில் ஒரு இடத்தை எனக்கு தந்து அதில் ஒரு உப்பரிகையும் கட்டி தந்து கனவில் கண்ட இல்லத்தை நனவில் ஆக்கித்தந்த நட்பு உங்களின் நட்பு. பணத்தால் மட்டுமே இவைகளை சாதிக்க இயலாது. அன்பு இழையோடும் நட்பால் மட்டுமே இவைகளை ஆக்கித்தர இயலும்.  

ஒரு நண்பனின் ஒரு திருமணத்துக்குத்தான் சாட்சி கையெழுத்துப்போடும் நண்பர்களை காணமுடியும் . எனது இரண்டு திருமணத்துக்கும் நீங்கள் சாட்சி கையெழுத்து போட்டது மட்டுமல்ல- என் கையெழுத்து இல்லாத என் மகள் திருமணத்தின் பதிவு புத்தகத்தில் கூட கையெழுத்து போட்டுள்ளவர்கள் நீங்கள்.  அதையும்விட மேலாக எனது பேத்தியின் திருமண பதிவு புத்தகத்தில் கூட உங்கள் கை எழுத்து இருக்கிறது என்றால் நமது 48 ஆண்டுகால நட்பு வரலாற்றுக்கு நான் வேறென்ன சான்று கூற முடியும்?

ஊருக்கெல்லாம் கல்விக்கண் திறக்கின்ற தாங்கள் எனக்கு வாணியம்பாடி கல்லூரியில் வணிகவியலில் இடம் வாங்கி தந்தது ஒரு வழக்கமான செயலாக இருக்கலாம். ஆனால் என் பேரனுக்கும் அப்படி ஒரு வழி பிறக்கவும் இன்று அவன் ஒரு பொறியாளராக உருவெடுக்கவும் வித்திட்டீர்களே அதை எங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் மறக்க முடியுமா?

“கண்ணை இமை இரண்டும் காப்பதுபோல் என் குடும்பம் வண்ணமுறக்காக்கின்ற” தங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நலமும் இன்னும் வளமும் தந்து வாழ வேண்டும் என்பதை சொல்லி – இனியும் ஒரு முறை பிறக்க ஆசைப்படுகிறேன். அப்படி பிறந்தால் உங்களின் நண்பராகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்பதை என் விருப்பமாக எல்லாம் வல்ல அந்த இறைவனிடம் சொல்லி விடைபெறுகிறேன். 

வஸ்ஸலாம். 

என்றும் உங்கள்,

// ----------- //

-இபுராஹீம் அன்சாரி

செய்தியாளரின் பண்புகள் ! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | January 25, 2012 | , ,


ஒரு செய்தியாளர் திறமை மிக்க செய்தியாளராக விளங்க வேண்டும் என்றால் அவரிடம் சில தகுதிகளும் பண்புகளும் கட்டாயம் இருக்க வேண்டும். அவற்றை இங்கு விளக்கலாம்:

செய்தி மோப்பத் திறன் (Nose for News)
செய்தியாளர் செய்திகள் கிடைக்கும் இடத்தை மோப்பம் பிடிக்கும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். செய்தியைக் கண்டவுடன் அவர்களது மூக்கு வியர்க்க வேண்டும்.அவர்களிடம் செய்தி உள்ளுணர்வு எப்பொழுதும் விழித்திருக்க வேண்டும். நல்ல செய்தியாளர் எப்பொழுதும் செய்திக்குப் பசித்திருப்பவராகவும், செய்தியைக் கண்டுகொள்ள விழித்து இருப்பவராகவும்,     சொல்லும் முறையில் தனித்து இருப்பவராகவும் விளங்க வேண்டும்.

நல்ல கல்வி அறிவு
செய்தியாளர் போதுமான அளவு கல்வியறிவு பெற்றிருக்கவேண்டும். எல்லாவற்றையும் பற்றி அறிவும் ஆர்வமும்பெற்று இருக்க வேண்டும். அவர்களுக்கு எல்லாத்துறைகளைப் பற்றியும் ஆழமான தெளிவு இருந்தால்தான் அவற்றைப் பற்றிய செய்திகளை நுட்பமாகவும் ஆழ்ந்தும் முழுமையாகவும் அளிக்க முடியும்.

சரியாகத் தருதல்
செய்திகளைச் சரியாகவும் துல்லியமாகவும் (Accuracy) தருகின்ற பண்பு செய்தியாளருக்கு இருக்க வேண்டும்.எதனையும் சரிபார்க்காமல் யூகம் செய்து எழுதக்கூடாது. அப்படி எழுதினால் சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும். 'எதனையும் முதலில் பெற வேண்டும், அதனையும் சரியாகப்பெற வேண்டும்' என்பது தான் செய்தியாளரின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

விரைந்து செயல்படல்
செய்தியாளர் வியப்பூட்டும் வகையில் விரைவாகச் (Speed) செயல்பட வேண்டும். செய்தித்தாளின் இறுதிப் பக்கம் தயாராகும் முன்பு, திறமையான செய்தியாளர் தான் சேகரித்த செய்திகளை அனுப்புவார்.     செய்தியைச்  சரியாகப் பெறவேண்டும்; உடனேயும் பெற வேண்டும் என்பதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நடுநிலை நோக்கு
தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்கு ஆட்படாமல்செய்தியாளர் நடுநிலை நின்று செய்திகளைச் சேகரித்து அனுப்பவேண்டும். சொந்தக் கருத்துகளைச் செய்திகளோடு சேர்த்து எந்தச் சமயத்திலும் கூறக்கூடாது. செய்தியின் முக்கியத்துவத்தை மாற்றவோ, கோணத்தை வேறுபடுத்தவோ, வண்ணம் பூசவோ முயலக்கூடாது.

செய்தி திரட்டும் திறன்
செய்தி கிடைக்கும் இடத்தை அடைந்து செய்தியை இனங்கண்டு உண்மையான விவரங்களைத் திரட்ட வேண்டும்.சேகரித்த செய்தியை முறைப் படுத்தி, செய்தியாக வடிவம் அமைத்துத் தரும் ஆற்றல் செய்தியாளருக்கு இருக்கவேண்டும். இத்திறனைப் பயிற்சியின் மூலமாகவும் பட்டறிவின் வாயிலாகவும் பெற இயலும்.

பொறுமையும் முயற்சியும்
செய்தியாளருக்கு மிகுந்த பொறுமைக் குணம் வேண்டும். அவசரப் படவோ பதற்றப் படவோ கூடாது. பதறிய காரியம் சிதறும் என்பது பழமொழி. செய்தியை அறிந்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம், உண்மையை வரவழைத்து, அதனைச் செய்தியாக எழுதி அலுவலகத்திற்கு அனுப்புகின்றவரை பல இடையூறுகள் ஏற்படலாம். அவற்றை எல்லாம் மனத்தளர்ச்சி இன்றி முயற்சி திருவினை யாக்கும் என்ற தெளிவோடு செயல்படுகிற செய்தியாளர்களால் தான்அரிய செயல்கள் செய்ய முடியும்.

சொந்தமுறை அல்லது தனித்தன்மை
செய்தியாளர் செய்திகளைத் திரட்டுவதிலும் தனக்கென்று ஒரு தனித்தன்மையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மற்றவர்களைப் பின்பற்றக் கூடாது. சிறந்த செய்தியாளர்கள் செய்திகளைத் திரட்டித் தருவதில் தனி முத்திரை இருக்கும். 

நல்ல தொடர்புகள்
செய்தியாளர் பல தரப்பட்ட மக்களோடு நெருங்கியதொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு தொடர்புள்ளவர் சிறந்த செய்தியாளராகத் திகழ முடியும். மக்கள் தாம் செய்தியின் மூலங்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

நம்பிக்கையைக் கட்டிக் காத்தல்
செய்தி தருகின்றவர்கள் தங்கள் மீது பத்திரிகையும் பொதுமக்களும்     வைத்திருக்கும் நம்பகத் தன்மையைக் கட்டிக் காக்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் செய்தி கொடுக்கிறவரைக் காட்டிக் கொடுக்கக் கூடாது. செய்திதருகின்றவருக்குக் கொடுக்கும் வாக்குறுதியை எப்படியும் நிறைவேற்ற வேண்டும்.

நேர்மை (Honesty) 
செய்தியாளர் மிகவும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். செய்திகள் இல்லாத இடத்தில் பொய்யாகச் செய்தியை உருவாக்குவதோ,     கிடைத்த செய்தியை வேண்டுமென்றே வெளியிடாமல் புதைத்து விடுவதோ இதழியல் அறமாகாது.

கையூட்டுப் (லஞ்சம்) பெறாமை
செய்தியாளர்கள் கையூட்டுக் கருதியோ,வேறு நன்மைகளையும் சலுகைகளையும் எதிர்பார்த்தோ செய்திகளை மாற்றவோ, திருத்தவோ, பொய்யைப் பரப்பவோ கூடாது. சிலர்புகழ் பெறுவதற்காகவும்,     விளம்பரம்     ஆவதற்காகவும் செய்தியாளர்களைப் பயன்படுத்திக் கொள்ள முயல்வார்கள். அன்பளிப்புகள், விருந்துகள் வழங்கி, செய்தியாளர்களைச் சிலர் விலை கொடுத்து வாங்க முயற்சி செய்வார்கள். செய்தியாளர்கள் இது போன்ற சோதனைகளுக்கு ஆட்படாமல் சாதனைகளைச் செய்வதிலேயே கவனமாக இருக்க வேண்டும். 

செயல் திறன்
செய்தியாளர் நுட்பமாகவும் திறமையாகவும் தந்திரமாகவும் செயல் படவேண்டும். சூழ்நிலைக்கு ஏற்பச் செயல்படும் தந்திரத்துடன் பணிகளைச் செய்ய வேண்டும்.

ஏற்கும் ஆற்றல்
புதிய இடங்களுக்குச் செல்லும் பொழுதும், புதிய மனிதர்களைப் பார்த்துப் பழகும் பொழுதும் அதற்கு ஏற்றாற்போலத் தன்னை மாற்றிக் கொண்டு செயல்படவேண்டும். புதியனவற்றை ஏற்கும் மனப் பக்குவம் இருக்கவேண்டும்.

தன்னம்பிக்கை
செய்தியாளர் தளராத தன்னம்பிக்கையோடு பணிசெய்ய வேண்டும். என்னால் முடியும், செயற்கரியன செய்வேன் என்ற தன்னம்பிக்கை இருந்தால் பலவற்றை எளிதாகச் செய்யமுடியும். 

இனிய ஆளுமை (Personality)
செய்தியாளர் இனிய ஆளுமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். காண்பவர்களைக் கவரும் வகையில் பொலிவான தோற்றமும்,     இனிமையாய்ப் பழகும் பண்பும் கொண்டவர்களாகச் செய்தியாளர்கள் இருக்க வேண்டும். அத்தகையவர்களால் பணிகளை எளிதாகச் செய்ய முடியும்.

தெளிவாகக் கூறும் ஆற்றல்
செய்தியாளர் எதனையும் தெளிவாக எடுத்துக் கூறும்ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். பேசுவதிலும், எழுதுவதிலும் தெளிவு இருக்க வேண்டும். நேரில் பார்த்துச் செய்திகளைச் சேகரிக்கின்ற பொழுது தெளிவாக விவரங்களைக் கேட்டறியவேண்டும். செய்திகளை, குழப்ப மில்லாமல் தெளிவாக எழுதும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். 

மரபுகளைப் பற்றிய அறிவு
சமுதாயம், சமயம் தொடர்பான செய்திகளைத் திரட்டித்தரும் பொழுது மரபுகளை அறிந்திருக்க வேண்டும். மரபுகளுக்கு முரண்படும் வகையில் செய்திகளைக் கொடுக்க நேரிட்டால் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

சட்டத் தெளிவு
எப்படிப்பட்ட செய்திகளை வெளியிட்டால் சட்டப்படி குற்றம் ஆகிவிடும் என்பதைச் செய்தியாளர் அறிந்திருக்க வேண்டும்.     சட்டத் தெளிவு இல்லாமல் எதையும் செய்தி ஆக்கினால் அவருக்கும்,      செய்தித்தாளுக்கும் தொல்லைகள் ஏற்படும். குறிப்பாக, சட்ட மன்ற, நாடாளுமன்றச் செய்திகளை வெளியிடும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு செய்தியாளர் பல தகுதிகளையும் பண்புகளையும் சிறப்பாகப் பெற்றிருக்க வேண்டும். 
Source : tamil virtual-academy
இறைவன் நாடினால் தொடரும்...

-சேக்கனா M. நிஜாம்

மானிடம் 23

அதிரைநிருபர் பதிப்பகம் | January 24, 2012 | , , ,

மறைந்து கொண்டிருக்கும் மனிதத்தன்மைகள் என்ற அருமையான பதிவைக் கண்டதும் அதிரைநிருபரில் சென்றவருடம் ஜனவரி 26 அன்று சிறகு வரிகளால் வருடும் மென்மைக் கவிதை வடிக்கும் சகோதரர் அப்துல் ரஹ்மான் எழுதிய கவிதையை நினைவூட்டலாக இங்கே மீள்பதிவு செய்கிறோம்...
- அதிரைநிருபர் குழு

சுட்டெரிக்கும் கோடையில்
போகும் பாதையில்
ஒரு குழாயடி
சந்தோசம்....
உடல் வியர்க்கிறது
மூளை குளிக்கச்சொல்லுகிறது
குளிக்கமட்டுமே சொல்கிறது
மனமோ குளித்தால் தண்ணீர்
போகும் பாதையை பாத்திகட்டி
அருகில் உள்ள செடிகளுக்கு
வழியமைத்து குளிக்கச்சொல்லுகிறது .......

வழிதவறிய காட்டில்
ஒரு மாமரம் ..
மூளை மாங்காயைப் பறித்து
பசியாற சொல்கிறது
பசியாற மட்டுமே சொல்கிறது
மனமோ பசியாறிவிட்டு
சிறிது தொலைவில் மாங்கொட்டையை
மண்ணில் புதைக்கச்சொல்லுகிறது
மீண்டும் ஒரு மரம் வளர .........

அவசரமாக நடக்கையில்
பாதையில் வாழைப்பழத் தோல்
கண்ணில் படுகிறது ..
மூளை அதை ஓராமாக காலால் தள்ளிவிடச்சொல்லுகிறது
காலால் தள்ளிவிட மட்டுமே சொல்லுகிறது
மனமோ அதை கையில் எடுத்து
எதிரே வரும் ஆட்டிற்கோ ,மாட்டிற்கோ
கொடுக்கச்சொல்லுகிறது ....

வீட்டின் வாயிற்படியில்
ஒரு யாசகன் ...
மூளை சில்லறையை கொடுக்கச்சொல்லுகிறது
சில்லறையை மட்டுமே கொடுக்கச்சொல்லுகிறது
மனமோ யாசகனை உள்ளே அழைத்து
சுத்தம் செய்ய தண்ணீர் கொடுத்து
உணவு பரிமாறி வழியனுப்ப சொல்லுகிறது ....

முன்பெல்லாம் மூளையோடு
மனதும் சரிவர இணைந்து இருந்தது
இப்போ
மனதை தொலைத்து விட்டு
மூளையோடு மட்டும்
அப்படி எங்குதான்
தொலைகிறது இந்த மானிடம் ?

-அப்துல் ரஹ்மான்
-harmys


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு