Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label 2014. Show all posts
Showing posts with label 2014. Show all posts

ஜெட் ! ஜெட்லி! பட்! பட்ஜெட்! பட்டும் படாத பட்ஜெட். 27

அதிரைநிருபர் பதிப்பகம் | July 15, 2014 | , , , , , ,

அண்மையில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலும் – அந்தத் தேர்தலில் பாரதீய ஜனதா அள்ளி விட்ட வாணவேடிக்கை வாக்குறுதிகளும் – அவற்றை நம்பி மக்கள் அந்தக் கட்சிக்கு அளித்துள்ள மகத்தான வெற்றியும் – அதைத் தொடர்ந்து ஏற்பட்ட புதிய ஆட்சி தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு வாரி வழங்கிக் கொண்டு இருக்கும் பட்டை நாமப் பரிசுகளின் பட்டாளத்தில் இப்போது பட்ஜெட்டும் சேர்ந்து இருக்கிறது.

கடந்த ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இதே போன்ற ஒரு பட்ஜெட்டின் விமர்சனக் கட்டுரையில் நான் குறிப்பிட்டதை மீண்டும் குறிப்பிடுகிறேன். பட்ஜெட் என்பது அறிஞர் அண்ணா சொன்னது போல் BUD GET என்ற இரண்டு சொற்களால் ஆனது. BUD என்றால் ஒரு மலரின் மொட்டு என்று பொருள். இதைத்தான் தொடர்பு படுத்தி தனது முதல் பட்ஜெட்டை சமர்ப்பித்த போது அண்ணா சொன்னார். இந்த மலரின் மொட்டு இப்போதுதான் கட்டவிழ்கிறது. இது மணம் வீசுமா என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும் என்றார். அதே போல் பாரதீய ஜனதா ஆட்சிப் பொறுப் பெற்று அவைக்கு அளிக்கும் முதல் பட்ஜெட் இது . இந்த முதல் மலர் இன்று தனது மொட்டுக்களை விரித்திருக்கிறது. இது மணம் வீசுமா - குணம் தருமா அல்லது குழிபறிக்குமா என்பதைச் சொல்ல வேண்டுமானால் “ போகப் போகத் தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும் “ என்று சொல்லி இந்த விமர்சனத்தைத் தொடங்கலாம். 

எடுத்த எடுப்பிலேயே சொல்வதானால் இந்த பூ பட்ஜெட் – தாமரைப் பூவின் பட்ஜெட் . பொதுவாக தாமரைப் பூ அழகாக இருக்கும் ஆனால் மணக்காது . எட்டாத உயரத்தில் இருக்கும் சூரியனைப் பார்த்து பல்லிளிக்கும்; இழுக்க முயற்சிக்கும் ஆனால் அருகில் இருக்கும் வண்டுகளை அவ்வளவாகக் கவராது. பூக்களின் புகுந்த வீட்டு சீதனமான தேன் துளிகள் தாமரைப் பூவில் வலைவீசிப் பார்த்தாலும் வாய்க்காது. நீர் நிறைய இருந்தால் மட்டுமே நிலைத்து நிற்கும் தாமரைப் பூ, நிலத்தில் பூத்துப் படரும் மல்லிகைக் கொடிக்கு இணையாகாது. இப்போது அருண்ஜெட்லி சமர்ப்பித்து இருக்கும் இந்த அருணோதய பட்ஜெட்டும் அப்படித்தான் இருக்கிறது. தாமரைப் பூவின் மருத்துவ குணங்களைப் பற்றி சொல்லும் சித்த வைத்தியர்கள் தாமரைப் பூ மூளை வளர்ச்சிக்கு நல்லது என்று கூறுகிறார்கள். இந்தப் பூவோடு அடிக்கடி புழங்குகிறவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இதுவாகும் என்ற தொடக்கத்தை அடக்கத்தோடு சொல்லி அதன் அம்சங்களை அலசுவோம். 

ராஜாதி ராஜ ராஜ கம்பீர புலிப்பால் குடித்த பராக்கிரம நரேந்திர மோடி மகராஜ் பராக்! பராக்! பராக்! என்று பறையரிவித்து அவர் வந்தால் மண்ணைப் பொன்னாக்குவார் – பூனையை யானையாக்குவார் – கிளியை புளியாக்குவார் என்றெல்லாம் கூறினார்கள். பதவியேற்ற உடனே விலைவாசி குறைந்துவிடும் – இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்தும் மந்திரக் கோல் அவர் கைகளில் இருக்கிறது- அவர் ஆண்ட குஜராத் மாடலில் ஆட்சி நடக்கும்- நிதிப் பற்றாக்குறை நீங்கி கஜானா நிரம்பி வழியும்- வேலை வாய்ப்புகள் வீடுதேடி வந்து கதவுதட்டும்- அரசு நிர்வாகம் முன் எப்போது இல்லாத அளவில் விரைவான வேகத்தில் செயல்படும் – அதிகாரிகள் அலறுவர்- வரி ஏய்ப்போர் கதறுவர்- கருப்புப்பணம் காலடியில் வந்து மண்டியிடும்- என்றெல்லாம் மக்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு போர்காலகனவுலகப் பின்னணியில் நிதியமைச்சர் திரு. அருண் ஜெட்லி தனது முதல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து இருக்கிறார்.

ஆட்சி மாறியதும் எரிவாயு சிலண்டர் விலை அண்மையில் ஏற்றம் கண்டது. அதற்குக் காரணம் முன்பு ஆண்ட காங்கிரஸ் ஆட்சிதான் என்று சொல்லப்பட்டது. டீசல் விலை ஏற்றம் கண்டது. அதற்கும் காரணம் காங்கிரஸ் ஆட்சிதான் என்று கூறப்பட்டது . இரயில் கட்டணங்கள் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டன; இதற்கும் காரணம் காங்கிரஸ் ஆட்சி தயாரித்து வைத்திருந்த விலைஉயர்வுத் திட்டங்கள் தான் என்று கூறப்பட்டன . ஆனால் ஆட்சிக்கு வந்து சமர்ப்பித்துள்ள பட்ஜெட் மட்டும் அருண் ஜெட்லி தயாரித்ததாக ஆளுக்கு ஆள் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருப்பதைத்தான் நம்மால் புரிந்து கொள்ள இயலவில்லை. இப்படிப் புகழ்வோர் வரிசையில் இராமதாசரும், விசயகாந்தனும், வைகோவும் நிற்பது பற்றி நமக்கு ஆச்சரியமில்லை. ஆனால் ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளிக் கொண்டு நீ முந்தியா! நான் முந்தியா! என்று தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவும் தானைத்தலைவர் கருணாநிதியும் கூட நிற்பதுதான் வேடிக்கையாகவும் விந்தையாகவும் இருக்கிறது. 

உண்மையில் , ஒரு அரசுமாற்றம் நிகழும்போது முந்தைய அரசு தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையின் தொடர் அடிப்படையில்தான் தனது முதலாவது நிதிநிலை அறிக்கையை அருண் ஜெட்லி தயாரித்தாக வேண்டிய நிலைப்பாடு கட்டாயமாக இருந்ததை எந்த அரசியல் அறிவியலாரும் மறுப்பதற்கு இடமில்லை. முன்னாள் நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் தயாரித்த நிதிநிலை அறிக்கைக்கு பார்டர் கட்டி, பெயின்ட் அடித்து, சீரியல் செட் கட்டி, ஜிகினா காகிதங்களால் ஜோடித்துத் தந்திருப்பதுதான் அருண்ஜெட்லியின் இந்த பட்ஜெட் என்பது அரசியல் நோக்கர்களுக்கு அரை சதவீத சந்தேகம் கூட இல்லாமல் புரியும். அதுதான் நடைமுறையும் கூட.

ஒரு புதிய அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் அது சமர்ப்பிக்கும் முதலாவது நிதிநிலை அறிக்கையை பல்வேறு தரப்பினரும் ஆர்வமுடன் ஆய்ந்து பார்த்து விமர்சிப்பது தவிர்க்க இயலாதது. இதற்குக் காரணம் ஆட்சிக்கு வர முன்பு அவர்கள் அளித்த தேர்தல் அறிக்கையின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியக் கூறுகளின் வாடை வீசுகிறதா என்று பார்ப்பது இயல்பான ஒன்று.. அதே நேரம் முதல் நிதிநிலை அறிக்கையிலேயே தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவைகள் நிழலாடுகிறதா என்று பார்க்க நினைப்பதும் பொருளாதார ரீதியில் நடைமுறையில் சாத்தியப்படாத ஒன்றுதான். ஆனால் மக்கள் அவற்றை எதிர்பார்ப்பதை தவறு என்று சொல்ல இயலாது.

பொதுவாக பொருளியல் வல்லுனர்கள் நிதிநிலை அறிக்கையில் நான்கு அம்சங்கள் இருக்கின்றனவா என்று பார்ப்பார்கள். அவை:- 
  1. இருக்கும் பொருளாதார மூலவளங்களை கட்டுக்குள் வைத்தல், 
  2. இருக்கும் மூலவளங்களையும் இனி வளர்ந்து வருமென்று உத்தேசிப்பதையும் வைத்து வளர்ச்சிக்கான தொடர்ந்த தொலை நோக்குத் திட்டங்கள், 
  3. வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்வது, 
  4. தொழில் மற்றும் விவசாயத்தின் மீது முதலீடு செய்பவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றச் செய்வது மற்றும் வளர்ப்பது. 
ஆகியவைதான் அந்த நான்கு அம்சங்கள். அருண் ஜெட்லி சமர்ப்பித்துள்ள இந்த நிதிநிலை அறிக்கையில் இந்தக் கொள்கைகள் மேலோட்டமாகத் தென்படுகிறதே அன்றி உருப்படியான திட்டங்கள எதுவும் ஊடுருவவில்லை என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

வருமான வரியின் தனிநபர்களின் உச்சவரம்பு இரண்டரை இலட்சமாக உயர்த்தப் பட்டு இருக்கிறது. இதைப் பற்றி பெருமைப்பட ஒன்றுமில்லை. காரணம் கடந்த வாரம் தக்காளி ஒரு கிலோ பதினைந்து ரூபாய் இந்த வாரம் முப்பது ரூபாய். விலைவாசிகள் ஏறிக் கொண்டல்ல எகிறிக் கொண்டு இருக்கும்போது அரை இலட்சம் உயர்வு ஒன்றும் அதிகமல்ல என்றுதான் சொல்ல வேண்டும். இந்த உச்சவரம்பை இன்னும் அரை லட்சம் கூட்டி அறிவித்து இருந்தால் அரசு ஊழியர்களுக்கும் மென்பொருள் மற்றும் தகவல் தொழில் நுட்பப்பிரிவில் பணியாற்றுவோருக்கும் சிறு இளைப்பாறுதல் கிடைத்திருக்கும். 

கங்கை நதியை தூய்மைப்படுத்த ரூ.2,047 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. “மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம் ஆனால் கங்கையே சூதகமானால் எங்கு போய் முழுகுவது” என்பதுதான் புரியவில்லை. பிணங்களை கங்கையில் விடுவது இறந்தவர்களை மோட்சத்துக்கு கொண்டு சேர்க்கும் என்கிற நம்பிக்கை உள்ள இந்து சகோதரர்கள் நிரம்ப வாழும் நாட்டில் – காசியில் எரிறியும் பிணங்களைத் தின்னும் சாமியார்கள் சுற்றித் திரியும் சூழ்நிலையில் அவர்களை ஒரு பகுத்தறிவுப் பாதைக்கு மாற்ற அரசு முயற்சி எடுப்பதுதான் கங்கையை உண்மையிலேயே தூய்மைபடுத்துவதற்கு அச்சாரமாக இருக்க முடியும். பிணங்கள் கங்கையில் விடப்படும்போது அவற்றுடன் சேர்த்து பூமாலைகளும் இறந்தவர்கள் பயன்படுத்திய அல்லது அவர்களுக்கு விருப்பமான ஆடைகள் மற்றும் மெத்தை தலையணை வரை கங்கை நீரில் விடப்படும் நிலை உள்ள வரை கங்கை எப்படி தூய்மையாகுமென்று புரியவில்லை. இதற்கான நடவடிக்கைகளை எடுப்பதைவிட்டுவிட்டு கங்கையையே தூய்மைப் படுத்த என்று ஒரு பெரும் தொகையை எடுத்த எடுப்பிலேயே ஒதுக்கி இருப்பது வியப்பும் வேடிக்கையும் நிறைந்த செயலாகவே தோன்றுகிறது. அருளாதாரம் என்று நம்பும் விசயத்துக்கு பொருளாதாரத்தை பலியிடும் நிகழ்வு இது.

காலமெல்லாம் முழங்கி வந்த நதி நீர் இணைப்பைத் தொடங்குவதற்கு நூறு கோடி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை ஒரு தொடக்கமாகக் கருதி வரவேற்கலாம். மாநிலங்களுக்கிடையே நிலவும் நதிநீர் வழக்குகள் நீர்த்துப் போகவேண்டுமானால் நாட்டின் நீர்வளம் நாடு முழுதும் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். வாஜ்பாய் அவர்களின் காலத்திலேயே எடுத்துவைக்கபட்ட இதற்கான முதல் முயற்சியின் அடிகள், “வளர்ச்சியின் நாயகன் ” காலத்தில் தடைகளைக் கடந்து நிறைவேற்றப்பட்டால் வரலாறு அதனை வாழ்த்தும். வருங்கால பட்ஜெட்டில் இதற்கான முன்னெடுப்பு தீவிரமாக இருக்குமென்று நமது நம்பிக்கையை இப்போது பதிவு செய்வோம்.

நெடுஞ்சாலைகள் வளர்ச்சியை கனிவுடன் பார்ப்பது, நேரடி வரிகளை அதிகம் போட்டுத் தாக்காதது ஆகியவை இந்த நிதிநிலை அறிக்கையில் உண்மையிலேயே வரவேற்க வேண்டிய அம்சங்கள்தான். எல் இ டி டிவிக்களின் பிக்சர் ட்யூப் போன்ற சில உபரிப் பொருட்களுக்கான இறக்குமதி வரிகளைக் குறைத்திருப்பதும் பாராட்டத் தக்கதுதான். இதனால் உள்நாட்டு உற்பத்திகள் உயர வாய்ப்புண்டு. 

சேமிப்புகளுக்கு ஊக்கம் தரும் விதத்தில் சில அறிவிப்புகள் வந்துள்ளன. உதாரணமாக, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், முன்தேதியிட்டு வரிகள் விதிப்பதில்லை என்கிற முடிவை குறிப்பிடலாம். அத்துடன் அத்தகைய ஊக்கங்களின் நோக்கம் சேமிப்புகளை பங்குச் சந்தைகளை நோக்கி திருப்பி விடுவதாக இருக்கலாம் என்கிற தோற்றம் கிழக்கே சூரியன் உதிப்பது போல் உதித்திருப்பதாகத் தோன்றுகிறது. இதுவும் ஒரு நல்ல அம்சம்தான். இதனால் அடுக்குப் பானைகளில் தஞ்சம் புகுந்துள்ள சேமிப்புகள் கூட பங்குச் சந்தைகளுக்கு வர வாய்ப்பும் சேமிப்புகளுக்கு ஒரு புதிய பரிணாம வளர்ச்சியும் ஏற்பட வாய்ப்புண்டு. 

எல்லா நகர கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் தடையில்லாத மின்சாரம் தரப்படும் என்றும் இதற்கான கால அளவையும் 2019 ஆம் ஆண்டுக்குள் என்றும் சொல்லபட்டிருப்பது- இதை நாங்கள் செய்யபோகிறோம் ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் இதைக் கேட்காதீர்கள் ஐந்தாண்டுகாலம் அவகாசம் தாருங்கள் என்று கேட்டிருப்பது அடுத்த தேர்தலையும் மனதில் வைத்தே என்று எண்ணத் தோன்றினாலும் நோக்கம் நல்ல நோக்கம் என்று பாராட்டலாம். அத போல் வீட்டுக்கு வீடு கழிப்பறை வசதிகள் விசயத்திலும் அரசு மேற்கொண்டுள்ள நிலையையும் வரவேற்கலாம். ஆனால் இதற்கான செயல் திட்டங்கள் எதையும் குறிப்பிடாமல் விட்டிருப்பது நாம் ஏற்கனவே கூறியிருப்பதுபோல் ஜிகினா வேலையோ என்று சந்தேகிக்கவும் வைக்கிறது.

காங்கிரஸ் ஆட்சியில் அவர்கள் என்ன சாதனைகளைச் செய்தார்கள் என்று ஒரு கேள்வி எழுப்பபட்டால் அவர்கள் தரும் சாதனைப் பட்டியலில் முதலில் இருப்பது நூறுநாள் வேலை வாய்ப்பு என்பதுதான். ஆனால் நடை முறையில் இந்தத் திட்டம் அரசின் நிதிவளத்தை ஆக்கபூர்வமான விஷயத்துக்கு அல்லாமல் சும்மா அள்ளிவிட்ட கதையாகவே இருந்தது. செய்யப்பட்ட செலவுக்கும் அதனால் விளைந்த பயனுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. ஆனால் இப்போது திரு அருண் ஜெட்லி ஒரு உருப்படியான திட்டத்தை முன் வைத்து இருக்கிறார் . இதற்காக அவரைப் பாராட்டலாம். 

காரணம் இந்த வலை தளத்தில் விளை நிலங்களைப் பற்றிய ஒரு பதிவை நாம் எழுதிய போது நூறு நாள் வேலைத் திட்டத்தை விவசாய நிலங்களின் மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டுமென்று கேட்டிருந்தோம். இப்போது அருண் ஜெட்லி இப்போது நூறுநாள் வேலைத்திட்டத்தை விவசாயத்துடன் இணைத்து இருக்கிறார். இது செயல்பாட்டுக்கு வந்தால் மிகுந்த பயனளிப்பதாக இருக்கும். இவ்வளவு நாள் நூறுநாள் வேலை என்று வருகிற கூலித் தொழிலாளர்கள் கூடையைக் கவிழ்த்துப் போட்டுவிட்டு காட்டுக் கருவைச் செடிகளின் நிழலில் அமர்ந்து வெற்றிலை பாக்கு போட்டுவிட்டுப் போய்க் கொண்டு இருந்தார்கள். இந்த மனித உழைப்பை விவசாயத்துடன் இணைத்திருப்பதற்கு மிகப் பெரிய பாராட்டை வழங்கலாம். 

காப்பீட்டுத்துறை, நாட்டின் பாதுகாப்புத்துறை ஆகியவற்றில் நேரடி அந்நிய முதலீடுகளை வரவேற்று அனுமதி அளித்திருப்பது அடிப்படையில் அரசியல்வாதிகளின் கருப்பை வெள்ளையாக்கும் நடவடிக்கையைச் சார்ந்திருக்கும் என்கிற சந்தேகத்தை கிளப்புகிறது. அவ்வாறு வரும் முதலீடுகளை அரசு எவ்வாறு கையாளப் போகிறது, கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் போகிறது முதலீடு செய்பவர்களின் வாரிச்சுருட்டும் இலாப நோக்கை எப்படி வகைப் படுத்தப் போகிறது ஆகிய அம்சங்களைப் பொறுத்தே இந்த சோதனை ஓட்டத்தின் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும். 

நேரடி அந்நிய முதலீடுகளுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் பொதுத்துறை நிறுவனங்களில் – நவரத்னா எனப்படும் வெற்றிப் பாதையில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்நாட்டின் தனியார் முதலீடுகளைப் பற்றி இந்த நிதிநிலை அறிக்கையில் ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை. அதே போல பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விலைவாசிக் குறைப்பு , டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பைக் கூட்டுவதற்கான திட்டங்கள், உற்பத்தி ஊக்குவிப்பு, ஏற்றுமதிகள் ஊக்குவிப்பு, இறக்குமதிக் குறைப்பு ஆகியவை பற்றியும் நிதியமைச்சர் தொட்டுச் சொல்கிறாரே தவிர எதிலும் பட்டுக் கொள்ளவில்லை. 

அதே போல், கறுப்புப் பணப் பிரச்னை எவ்வாறு நாட்டி உலுக்குகிறதோ அதே போல் பெரிய நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து கடனாக வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாத வாராக்கடன் , வரிகளின் நிலுவைகள், ஆகியவைகளை வசூலிக்க இந்த அரசு என்ன செய்யபபோகிறது என்ற கேள்விக்கு இந்த பட்ஜெட்டிலும் விடையில்லை. இதற்கு முன்பு காங்கிரஸ் அரசு போட்ட பட்ஜெட்டுகளிலும் விடை இல்லை. கார்பரேட் கம்பெனிகளுக்கு வரிச் சலுகைகள், அவர்களின் வரிஎப்புகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பது போன்ற காரியங்களில் இவ்விரு கட்சிகளுக்கும் இடையே “ உள்ளடி வேலை” – எழுதப் படாத ஒப்பந்தம் இருப்பதை இந்த பட்ஜெட் இன்னும் உறுதி செய்கிறது. ஆட்சிகள் மாறினாலும் இது போன்ற காரியங்களை எந்த அரசையும் செய்ய விடாமல் தடுக்கும் சக்திகள் எவை என்பதை சாமான்ய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

நமது முக்கியக் கவலை விவசாய உற்பத்தி- பொய்த்துப் போன பருவ மழை- ஆகிய பிரச்னைகளைக் கையாள இந்த அரசின் செய்லதிட்டம் எதுவும் அறிக்கையில் இல்லை. விவசாய மான்யங்களைக் குறைப்போம் என்கிற பேச்சு விவசாயிகளை அதிர்வடையச் செய்து இருக்கிறது. உரம் மற்றும் விவசாயம் சார்ந்த இடுபொருள்களுக்கான மானியங்களை உயர்த்திவழங்கி இருக்க வேண்டும். காரணம் பருவமழை காலை வாரிவிட்ட நிலையில் ஊக்கத்துடன் ஒரு விவசாயி தனது பணிகளை மேற்கொள்ள அரசாங்கம் அவனுக்கு ஆதரவளிக்க வேண்டும். இதற்கான அடையாளங்கள் பட்ஜெட்டில் இல்லை. ஆனால் எட்டு இலட்சம் கோடி விவசாயக் கடன் வழங்கவும் , கடன்களை ஒழுங்கான தவணையில் திருப்பிச் செலுத்துவோருக்கு மூன்று சதவீதம் ஊக்கத்தொகை தருவதும் நல்ல ஆரம்பம் என்றே சொல்ல வேண்டும்.

தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ்-க்கு (All India Institute of Medical Science) இணையான மருத்துவமனை அமைக்கப்படும், 15 இடங்களில் ஊரக சுகாதார ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. தூத்துக்குடி துறைமுகத்தில் அவுட்டர் துறைமுகம் அமைக்க வந்துள்ள அறிவிப்பை தமிழராக நாம் வரவேற்கவே வேண்டும். சூரிய மின்சக்தி உற்பத்திக்கு, தமிழகத்துக்கும் சேர்த்து ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதும் நம்மைப் புன்முறுவல் பூக்க வைக்கும். . 

அரசின் வருவாயை அதிகரிக்க மாற்று வழிகள் ஆராயப்படும் என்பதும், 2015-16-ஆம் நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறையை 3.6 சதவிகிதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்படும் என்ற அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கது. 

கிராமங்களில் அகன்ற வலை வரிசை இன்டர்நெட் அமைப்புகள், விவசாயிகளுக்காக தனியாக கிசான் டிவி ஆகியவையும் வரவேற்புக்குரியவை. டிவி அலைவரிசையை, ஆளும் கட்சி தனது அரசியல் நோக்கத்துக்காகப் பயன்படுத்தாமல் நவீன விவசாய யுக்திகளை விவசாயிகளுக்கு பயிற்றுவிற்பதற்காகப் பயன்படுத்தினால் உண்மையில் வெற்றியே. இதில் பயிற்று மொழி சர்ச்சை வரவும் வாய்ப்புண்டு. தமிழக விவசாயிகளிடம் சாவல் சாவல் என்றால் அவர்களுக்கு அது அரிசி என்று தெரியாது. கூவும் சேவலைத்தான் அவர்களுக்குத் தெரியும். 

மொத்தத்தில், ப.சிதம்பரம் பெற்றுப் போட்ட குறைப் பிரசவக் குழந்தைக்கு டெக்ஸ்ட்ரோஸ் ( DEXTROSE) டிரிப் ஏற்றி, பொட்டும் பூவும் வைத்து , பவுடர் பூசி பெற்றவளின் பெயர் மாற்றி பிறந்திருக்கிறது இந்த பட்ஜெட் குழந்தை. ஆகவே, இது ஒரு கலப்பு சித்தாந்தங்களின் பட்ஜெட். ஆனால் முதலாளிகளை மட்டும் காப்பாற்றும் விதத்தில் கவனமாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழந்தையைப் பெறுவதில் மன்மோகன் சிங் மற்று ப. சிதம்பரத்தின் ஆகியோரின் பங்களிப்பே அதிகம். இனி பிறக்கபோகும் குழந்தைகள்தான் நரேந்திரமோடிக்கும் அருண் ஜெட்லிக்கும் உண்மையாகப் பிறக்க இருக்கும் குழந்தைகள். அந்தக் குழந்தைகள் பிறந்து வளர்ந்து நடை போடுவதைப் பார்த்த பின்னர் வெளிவரும் விமர்சனங்களே வக்கனையாகவும் பொருத்தமாகவும் இருக்கும். 

இபுராஹீம் அன்சாரி

கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2014 - பரிசுகள் 11

அதிரைநிருபர் பதிப்பகம் | May 20, 2014 | , , , ,

கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2014

போட்டிகள், பரிசுகள்

மாணவிகள் பிரிவு

பதிவு செய்த மொத்த மாணவிகள் : 228

நிலை 1 (3, 4 & 5 வகுப்புகள்) மாணவிகள் : 74

            பத்துப் பிரார்த்தனைகள் - போட்டியார்கள் : 27

முதல் பரிசு :                  நதீரா பானு முஹம்மது அப்துல்லாஹ், மேலத்தெரு
இரண்டாம் பரிசு :         நபீஹா அஹ்மது அனஸ், கடற்கரைத் தெரு
மூன்றாம் பரிசு :            நஸூஹா ஸாதிக் பாட்சா, CMP லேன்
ஆறுதல் பரிசுகள் : 24

          மனனம் : ஸூரத்துல் ஆதியாத் (+ தஜ்வீத்) - போட்டியாளர்கள் : 40

முதல் பரிசு :                  ஜுல்ஃபா முஹம்மது தமீம், CMP லேன்
இரண்டாம் பரிசு :         முபீனா முஹம்மது நளீம், பிலால் நகர்
மூன்றாம் பரிசுகள் :      ஃபழீலா & ஃபஹ்மிதா இத்ரீஸ் முஹைதீன், புதுமனைத் தெரு
ஆறுதல் பரிசுகள் : 36

நிலை 2 (6 & 7 வகுப்புகள்) மாணவிகள் : 68

            பேச்சுக் கலை : "மனிதனை அழிப்பது எது?" போட்டியாளர்கள் : 29

முதல் பரிசு :                  ஹம்னா அப்துர் ரஹ்மான், சேது ரோடு
இரண்டாம் பரிசு :         சுமையா முஹம்மது யூஸுஃப், புதுத் தெரு
மூன்றாம் பரிசுகள் :      ஆமினா அப்துர் ரஸ்ஸாக், நடுத்தெரு & முஃப்லிஹா நஜ்முத்தீன், தட்டாரத் தெரு
ஆறுதல் பரிசுகள் : 25

            மனனம் : ஸூரத்துல் இன்ஃபிதார் (+ தஜ்வீத்) போட்டியாளர்கள் : 28

முதல் பரிசு :                  ஃபாத்திமா முஹம்மது ஃபாஸி, ஆலடித் தெரு
இரண்டாம் பரிசு :         வஃபியா ஸல்மான் , ஆலடித் தெரு
மூன்றாம் பரிசுகள் :      ஃபழீலா அலாவுத்தீன், கடற்கரைத் தெரு & மர்யம் முனவ்வரா முஹம்மது மீரா ஸாஹிப், ஆலடித் தெரு
ஆறுதல் பரிசுகள்  : 25

            கட்டுரைப் போட்டி - போட்டியாளர்கள் : 68

முதல் பரிசுகள் :            ஹம்னா அப்துர் ரஹ்மான், சேது ரோடு & ஆயிஷா அப்துர் ரஸ்ஸாக் புதுமனைத் தெரு
இரண்டாம் பரிசு :         சமீஹா ஹாஜா அலாவுத்தீன், மேலத் தெரு
மூன்றாம் பரிசு :            சுமையா முஹம்மது யூஸுஃப், புதுத் தெரு

நிலை 3 (8 & 9 வகுப்புகள்) மாணவிகள் : 51

            பேச்சுக் கலை :"குர் ஆன் கூறும் நல்லுபதேசம்" - போட்டியாளர்கள் : 26
முதல் பரிசு :                  சஃபீனத்துர் ராபியா அப்துல் ஹமீது, கடற்கரைத் தெரு
இரண்டாம் பரிசு :         தஹ்ஸீனா அபுல் ஹஸன், ஆலடித் தெரு
மூன்றாம் பரிசு :            ருமைஸா அஹ்மது ஹாஜா, நடுத் தெரு
ஆறுதல் பரிசுகள் : 23

            மனனம் : ஸூரத்துல் கியாமா (+ தஜ்வீத்) - போட்டியாளர்கள் : 26

முதல் பரிசு :                  தஹ்ஸீனா அபுல் ஹஸன், ஆலடித் தெரு
இரண்டாம் பரிசு :         அஸ்மா அப்துஸ் ஸாதிக், மேலத் தெரு
மூன்றாம் பரிசு :            கதீஜா காமிலா சய்யித் அஹ்மது புகாரீ, ஆஸ்பத்திரித் தெரு
ஆறுதல் பரிசுகள் : 23

          கட்டுரைப் போட்டி - போட்டியாளர்கள் : 68

முதல் பரிசு :                  சஃபீனத்துர் ராபியா அப்துல் ஹமீது, கடற்கரைத் தெரு
இரண்டாம் பரிசு :         அஸ்மா அப்துஸ் ஸாதிக், மேலத் தெரு
மூன்றாம் பரிசு :            ருமைஸா அஹ்மது ஹாஜா, நடுத் தெரு

நிலை 4 (10, +1 & +2 வகுப்புகள்) மாணவிகள் : 35

            பேச்சுக் கலை : "மதி மயக்கும் உலக ஆசைகள்" - போட்டியாளர்கள் : 14
முதல் பரிசு :                  தவ்ஹீதா ஷேக் தாவூது, மேலத் தெரு
இரண்டாம் பரிசு :         பெல்ஹா முஹம்மது முஹைதீன், மேலத் தெரு
மூன்றாம் பரிசு :            அனீஸா அப்துஸ் ஸாதிக், மேலத் தெரு
ஆறுதல் பரிசுகள் : 11

            மனனம் : ஸூரத்துல் முத்தஃதிர் (+ தஜ்வீத்) - போட்டியாளர்கள் : 13

முதல் பரிசு :                  சுஹைமா அப்துல் கரீம், புதுமனைத் தெரு
இரண்டாம் பரிசு :         முஃப்லிஹா முஹம்மது தமீம், புதுமனைத் தெரு
மூன்றாம் பரிசு :            பெல்ஹா முஹம்மது முஹைதீன், மேலத் தெரு
ஆறுதல் பரிசுகள் : 10

          கட்டுரைப் போட்டி - போட்டியாளர்கள் :

முதல் பரிசு :                  சுஹைமா அப்துல் கரீம், புதுமனைத் தெரு
இரண்டாம் பரிசு :         ரிஹானா நர்கிஸ் அஹ்மது அலீ, பழஞ்செட்டித் தெரு
மூன்றாம் பரிசு :            பெல்ஹா முஹம்மது முஹைதீன், மேலத் தெரு


மாணவர்கள் பிரிவு
பதிவு செய்த மாணவர்கள் - 65 ; வருகையாளர்கள் - 38
எழுத்துப் போட்டியாளர்கள் - 21

          எழுத்துப் போட்டி அ-பிரிவு

முதல் பரிசு :          தவ்ஃபீக் ஷாஹுல் ஹமீது, பிலால் நகர்
இரண்டாம் பரிசு : அப்துர் ரஹ்மான் பஹ்ருத்தீன், மேலத்தெரு
மூன்றாம் பரிசு :    ஷேக் உமர் அஹ்மது ஹாஜா, நடுத் தெரு

          எழுத்துப் போட்டி ஆ-பிரிவு

முதல் பரிசு :          அப்துல் பாஸித் ஜியாவுல் ஹக், ஹாஜா நகர்
இரண்டாம் பரிசு : இர்ஃபான் அலீ சஹாபுத்தீன், பிலால் நகர்
மூன்றாம் பரிசு :    ஜாஹிர் ஹுஸைன் கமாலுத்தீன், பிலால் நகர்
எழுத்துப் போட்டி ஆறுதல் பரிசுகள் - 15
வாய்மொழி ஆறுதல் பரிசுகள் 17

        துஆ மனனப் போட்டி - பங்கெடுத்த மாணவர்கள் : 19

முதல் பரிசு :          ஜாஹிர் ஹுஸைன் கமாலுத்தீன், பிலால் நகர்
இரண்டாம் பரிசு : ஹாமித் அப்துர் ரஹ்மான், சேது ரோடு
மூன்றாம் பரிசு :    இர்ஃபான் அலீ சஹாபுத்தீன், பிலால் நகர்
ஆறுதல் பரிசுகள் : 16

        சூரா மனனப் போட்டி - பங்கெடுத்த மாணவர்கள் : 21

முதல் பரிசு :          ஹாஸர் மாஜுத்தீன், சான வயல், மேலத்தெரு
இரண்டாம் பரிசு : இர்ஃபான் அலீ சஹாபுத்தீன், பிலால் நகர்
மூன்றாம் பரிசு :    நிஅமத்துல்லாஹ் ஷேக் அப்துல் காதிர், நடுத் தெரு

ஆறுதல் பரிசுகள் : 18

SEC-ADT
அதிரை தாருத் தவ்ஹீத்

ADT - பரிசளிப்பு நிகழ்வும், குடும்ப பிரச்சினைகளும் உளவியல் தீர்வும் பொதுக்கூட்டம் ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | May 16, 2014 | , , ,

அதிரை தாருத் தவ்ஹீத் வருடந்தோறும் நடத்தி வரும் கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாமில் இந்த வருடமும் மே 3ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடை பெற்றது. பயிலரங்கில் பங்கேற்ற மாணவ மணிகளுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்பிக்கும் நிகழ்வும், குடும்ப பிரச்சினைகளும் அவற்றுக்கு இஸ்லாம் கூறும் உளவியல் தீர்வுகளும் என்ற தலைப்பில் உளவியல் சிறப்புரையும் வரும் 17-மே-2014 சனிக்கிழமை மாலை அஸருக்குப் பிறகு அதிரை தக்வாப் பள்ளி அருகில் நடைபெறவுள்ளது.

அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அதிரை தாருத் தவ்ஹீத் அழைக்கிறது.


இப்படிக்கு,

அதிரை தாருத் தவ்ஹீத்

அதிரையில் கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2014 12

அதிரைநிருபர் பதிப்பகம் | April 25, 2014 | , , , , ,

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால் !

அதிரை தாருத் தவ்ஹீத், அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (கடற்கரைத் தெரு), இஸ்லாமிய பயிற்சி மையம் (பிலால் நகர்), ஏ.எல்.எம்.மெட்ரிகுலேஷன் பள்ளி (சி.எம்.பி.லேன்).

இணைந்து வழங்கும், குர்ஆன்-ஹதீஸ் ஒளியில் !

கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2014

மே மாதம் 3 முதல் 15 வரை (வெள்ளிக் கிழமை தவிர)

பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்பவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளாக...

தொலைவிலிருந்து வரும் மாணவர்களுக்குத் தனியாகவும், மாணவியர் & குடும்பத் தலைவியருக்குத் தனியாகவும் வரப் போக வாகன வசதி (இலவசமாக)!

மின்வெட்டின் பாதிப்பின்றி பயிற்சி முகாம்களில் ஜெனெரேட்டர் வசதி!

அகலத்திரை - ப்ராஜக்டரில் பாடங்கள் !

போட்டிகளில் பங்கு கொண்டு வெல்லும் மாணவ-மாணவியருக்குப் பரிசுகள் !

பதிவுக்கு முந்துங்கள் ! 

விண்ணப்பப் படிவம் தரவிறக்கம் (PDF-File) செய்து கொள்ள இங்கே சொடுக்கவும் [Download], மேலும் டிஜிடல் விண்ணப்ப படிவத்திலேயே டைப் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.

இன்முகத்துடன் வரவேற்கிறது !

  அதிரைதாருத் தவ்ஹீத்  


இட ஒதுக்கீடு! – இன்னும் ஒரு ஆய்வா !? - பகுதி இரண்டு ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | April 17, 2014 | , , , , ,

பட்டு வேட்டியைப் பற்றி கனாக்கண்டிருந்த போது
நாங்கள் கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது.” 

என்று வைரமுத்து ஒரு கவிதையில் கூறியிருப்பார். 

இந்திய சுதந்திரத்துக்கு முன்பு ஆங்கில ஆட்சியில் வழங்கப் பட்டிருந்த இட ஒதுக்கீடு கூட சுதந்திர இந்தியாவால் சுரண்டப்பட்டது என்பது வேதனையான வரலாறு.

நீதியரசர் ரெங்கநாத் மிஸ்ரா அவர்களின் விசாரணைக் கமிஷன் தந்த அறிக்கையை கடந்த வாரம் பார்த்த நாம் இப்போது இன்னொரு நீதிபதி இராஜேந்திர சச்சார் அவர்களின் தலைமையில் இந்திய முஸ்லிம்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர மற்றொரு கமிஷனையும் அமைத்தது பற்றியும் அந்த அறிக்கையின் சாராம்சங்களையும் காணலாம். 

இந்த விசாரணைக் குழுவில் மொத்தம் ஏழு பேர்கள் இருந்தனர். இந்தக் குழு நாடு முழுதும் சுற்றுப் பயணம் செய்தது. பலரை சந்தித்தது. களப்பணியாற்றி பல உண்மைகளைக் கண்டறிந்தது. ஆனாலும் சில அரசுத்துறைகள், அரசு சார்ந்த நிறுவனங்கள், முக்கியமாக இராணுவத்தில் தரைப்படை, கப்பல்படை, விமானப்படை ஆகியவை இந்தக் குழுவுக்கு கேட்ட தகவல்களை முறையாகத் தர மறுத்துவிட்டன என்பதையும் நாம் பதிவு செய்தாக வேண்டும். 

நீதிபதி சச்சார் கமிஷன் தனது அறிக்கையை நவம்பர் 2006ல் மத்திய‌ அரசிடம் சமர்பித்தது. அந்த அறிக்கையில் முஸ்லிம்கள் கல்வி, அரசு வேலைவாய்ப்பு போன்றவற்றில் இந்தியாவில் அவர்களின் மக்கள்தொகையின் ஒப்பீட்டு விகிதாச்சாரத்தைக் காட்டிலும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டியது. இன்னும் ஒரு படி மேலே சொல்லப்போனால் தலித்துகள், மலைவாழ் மக்களை விடவும் பின் தங்கிய நிலையில் இருந்து வருகின்றனர் என்பதை படம் பிடித்துக்காட்டியது. இந்த அறிக்கை, இவ்வளவு காலமும் முஸ்லிம்கள் எதோ ராஜபோக வாழ்க்கை வாழ்வதாக எண்ணிக கொண்டு அவர்களைப் பற்றி எண்ணிப் பார்க்காமலும் ஏறெடுத்துப் பார்க்கமலும் இருந்தவர்களுக்கு ஒரு இடி போல் இறங்கியது. அரசுகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கே தங்களுடைய உண்மை நிலை என்ன என்றும் உணர்த்தியது. 

சச்சார் கமிட்டி கண்டறிவித்த உணமைகளில் நாம் அறிந்துகொண்ட அதிர்ச்சி தரும் நிலைகள் சில:
  • 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 13.4% முஸ்லிம்கள் இருக்கின்றனர். 
  • ஆனால் ஐ.ஏ.எஸ் பணியில் முஸ்லிம்கள் 3%, மட்டும் 
  • பட்டப்படிப்பு படித்தவர்கள் 3%, மட்டுமே 
  • இரயில்வே துறையில் 4.5% மட்டுமே (அதில் 98.7% பேர் கடை நிலை ஊழியர்கள்) இருந்து வருகின்றனர். 
  • 25.2% முஸ்லிம்கள் வாழக்கூடிய மேற்கு வங்கத்தில் முஸ்லிம் அரசு ஊழியர்கள் 4.7% மட்டுமே ஆவார்கள்.
  • 18.5% முஸ்லிம்கள் வாழும் உத்திர பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் 7.5% மட்டுமே ஆவார்கள் என்று முஸ்லிம்களின் அவல நிலையை பட்டியலிட்டது சச்சார் கமிஷன்.
  • நாடு முழுவதும் முஸ்லிம்களே மிகக் குறைந்த வருமானத்தில் வாழ்கின்றனர். முஸ்லிம்களில் 94.8% பேர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கிறார்கள். ரேஷன் கார்டு வைத்திருக்கும் 32% தலித் மக்களோடு ஒப்பிடுகையில் 22% முஸ்லிம்களிடமே ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. விவசாயம் செய்துவரும் முஸ்லிம்களில் 2.1% விவசாயிகளே டிராக்டர் முதலிய விவசாய உபகரணங்களை வைத்து இருக்கிறார்கள். நிலங்களுக்கு நீர் பாய்ச்சும் பம்ப்செட் வைத்திருப்பவர்கள் 1% பேர்களே. பாராளுமன்றத்தின் 543 உறுப்பினர்களில் 33 பேர்களே முஸ்லிம்கள். இவர்களில் முஸ்லிம்களுக்கு உண்மையாக உழைப்பவர்கள் இன்னும் சொற்பம். உயர்கல்வி பயில்வதற்கு கல்விக்கடன் பெற்றுள்ள மொத்த மாணவர்களில் 3-2% மட்டுமே முஸ்லிம்கள் . 
  • நீதித்துறையில் தலித்துகளின் பங்கு 20 சதவிகிதமாக இருக்கிற போது முஸ்லிம்கள் பங்கு 7.8 சதவிகிதம் மட்டுமே. தலித்துகளில் 23 சதவிகிதத்தினருக்கு குழாய் குடிநீர் கிடைக்கையில் முஸ்லிமகளில் 19 சதவிகிதத்தினருக்கு மட்டுமே அது கிடைக்கிறது. பொதுத்துறை (7.2%) சுகாதாரத்துறை (4.4%) ரயில்வே துறை (4.5%) போன்ற பல்வேறு அரசு சார்ந்த துறைகளில் தலித்களைவிட முஸ்லிம்களின் பங்கு குறைவாகவே இருக்கிறது. மின்சாரமே இல்லாத கிராமங்களில் அதிகம் வாழ்பவர்கள் முஸ்லிம்களே. அதுபோல சேரிகளில் வாழ்பவர்களிலும் முஸ்லிம்களே அதிகம். இவை எல்லாம் நீதிபதி சச்சார் கமிட்டி கண்டறிந்து அறிவித்தவை. 
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் இந்தியாவில் ஓரளவு நல்ல நிலையை அடைந்துள்ளதற்கு காரணம் அவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடுதான் என்று இடஒதுக்கீட்டின் அவசியத்தை நீதிபதி சச்சார் குறிப்பிட்டு மட்டுமிருந்தார். இந்த அறிக்கையில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் முஸ்லிம்கள் தங்களின் கஷ்டத்தின் காரணமாக தங்களின் இனப் பெருக்கத்தை கருத்தடை முறைகளைப் பின்பற்றி தன்னிச்சையாகக் குறைத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் காரணத்தால் முஸ்லிம்களின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. நீதிபதி இராஜேந்திர சச்சார் அளித்த இந்த அறிக்கையில் முஸ்லிம்கள் இவ்வளவு கீழான நிலையில் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர் என தீர்க்கமாக அறிக்கை தந்து அறிவித்தது.

“பேசும்போது நல்லா பேசு ! ஆனா பாட்டெழுதும்போது பாட்டை விட்டுடு” என்று ஒரு புகழ்பெற்ற வசனம் தமிழ்நாட்டில் உலவி வந்ததுண்டு. அதே போல் முஸ்லிம்களின் அவலநிலையை பட்டியலிட்ட சச்சார் கமிஷன் துரதிஷ்டவசமாக முஸ்லிம்களின் துயர்களைக் களைய வழிமுறைகளை அல்லது இடஒதுக்கீடு போன்றவற்றிற்கான அளவீடு அல்லது இன்னும் என்னவெல்லாம் செய்யவேண்டுமென்ற பரிகாரம் எதையும் பரிந்துரை செய்யவில்லை. 

இதற்கு மாறாக, நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கின்றது, இந்நிலை மாற முஸ்லிம்களுக்கு 10% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரையை பதிவு செய்து இருந்தது.

ஆயினும் ஒன்றைச் சொல்லலாம். நீதிபதி சச்சார் கமிஷன், இந்திய சமூக இனங்களுக்கிடையே நிலவி வரும் ஏற்றத்தாழ்வு எனும் நோயை ஆராய்ந்து கண்டறிந்து அறிவித்தது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனோ இப்படிப்பட்ட ஏற்ற தாழ்வை நீக்கும் நிவாரணம் இடஒதுக்கீடுதான் என்றது. 

ஆனால் இந்த இரு கமிஷன்களின் அறிக்கைகளும், பரிந்துரைகளும் முஸ்லிம்களின் மறுவாழ்வு மற்றும் நலத்திட்டங்களுக்காக பரிந்துரை செய்திருந்தாலும் அந்த கருத்துக்கள் அடங்கிய அறிக்கைகளை பலகாலம் தொட்டிலில் போட்டு தாலாட்டி தூங்கவைத்து விட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் இடஒதுக்கீடு என்று தேர்தல் அறிக்கைகளில் மத்திய அரசை ஆண்ட காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டு முஸ்லிம்களை ஏமாற்றி வருகிற வாழைப் பழக் கதையை வழக்கமாக வைத்திருக்கிறது. அதே போல் அரசு , இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள நினைக்கும் போது அதை எதிர்த்து கருத்து தெரிவித்த கட்சிகள் கூட சமூக நீதி, முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு என்றெலாம் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிடுவது நகைச்சுவை இல்லாமல் வேறென்ன?

இந்த வாழைப்பழக் கதை மாதிரியே “திரும்ப முதல்லேருந்து வா” என்று இன்னொரு நகைச்சுவைக் கதையும் உண்டு. அதே போல்தான் இடஒதுக்கீடு என்ற உன்னத சமூக நீதிக் கொள்கைகள் மத்திய மாநில அரசுகளால் பந்தாடப்படுகின்றன. சுதந்திரம் பெற்று அறுபதுஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. நாட்டில் நலிவடைந்த பிரிவோரின் நிலைகள் என்ன என்று அரசு அறிந்து கொள்வதற்கு விசாரணைக் குழுக்கள் வேண்டுமென்று ஒன்றுக்கு இரண்டு குழுக்கள் போடப்பட்டு அறிக்கைகளும் நீதியின் வழியில் நீதிபதிகளால் சாதகமாகவே தரப் பட்டுவிட்டன. அவற்றை நிறைவேற்றுவதற்கு அதிகாரம் படைத்த அரசுகள் வாயளவில் முஸ்லிம்களுக்கு வெண்ணை தடவுகின்றனவே தவிர முழு அளவில் அந்த அறிக்கைகள் பரிந்துரைத்தவைகளை நடைமுறைப் படுத்த மனம் வரவில்லை என்றால் – இயலவில்லை என்றால்- சட்ட வடிவம் தந்து எழுந்து நடக்க வைக்காமல் சவளைப் பிள்ளையாகவே காலத்துக்கும் வைத்திருக்கிறது.

இன்னொரு வரலாற்று செய்தியையும் இங்கு பதிவு செய்தாக வேண்டும். இவ்வாறு நீதியரசர்கள் சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா போன்ற விசாரணை குழுக்கள் அமைக்கபப்ட்டது வரலாற்றில் முதல் முறையல்ல. இவ்வாறு இஸ்லாமிய சமுதாயம் குறித்து எச்சரிக்கை மணி ஒலிக்கப்படுவதும் முதன் முறை அல்ல. 1953ல் காகா கலேல்கர் கமிஷன், 1983 கோபல் சிங் கமிஷன், 1989 மண்டல் கமிஷன் என்று பல கமிஷன்கள் அமைக்கபப்ட்டே இருந்தன. 

இப்படியே இந்த சமுதாயம் ஆசைகாட்டி மோசம செய்யபடுவது ஒரு வழக்கமான அரசியல் விளையாட்டு என்றால் அதன் அரசியல் பின்னணி என்ன?

அதன் பின்னணி ஒன்றுமில்லை. இந்திய தேசிய ரத்தத்தில் கலந்துவிட்ட வகுப்பு துவேஷம் என்கிற விஷம்தான் காரணம். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மேலே குறிப்பிட்ட முஸ்லிம்களுக்கு சாதகமான இரண்டு நீதிபதிகளின் பரிந்துரைகளை சட்டமாக்கினால் அதை பிஜேபி போன்ற இன மத துவேஷ எதிர்க் கட்சி எதிர்க்கும் என்பதுதான் முதன்மைக் காரணம். இதே பிஜேபி எதிர்த்தாலும் அணு உலை அமைப்பு போன்ற ஏனைய எல்லா சட்டங்களையும் அவசரச் சட்டம் போட்டாவது நிறைவேற்றத் துணிகிற மத்திய அரசு, முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டு விஷயத்தில் மட்டும் பாராளுமன்றத்தின் மேற்கூரையை பார்த்துக்கொண்டே பத்தாண்டுகளை ஓட்டியது ஏன்? எதிர்க் கட்சியான பிஜேபி மட்டுமல்ல, காங்கிரசுக்குள்ளேயும் காங்கிரசின் கூட்டணி என்ற பெயரில் அந்த அரசைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் கட்சிகளுக்குள்ளேயும் ஆர் எஸ் எஸ் சித்தாந்தங்களை மறைமுகமாக பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் அடிவருடிகள், கதராடை அணிந்து காந்தி பெயர்ச் சொல்லி கட்சிகளுக்குள் ஊடுருவி இருப்பதும்தான் காரணம்.

இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என்று அதன் அரசியல் சட்டத்தில் எழுதிவைக்கபப்ட்டு இருக்கிறது. உண்மைதான். மத சார்பற்ற அணி என்று அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் ஒரு பகுதி தங்களை அடையாள படுத்திக் கொண்டு இருக்கின்றன. ஆனால் நாம் கேட்க விரும்புவது என்னவென்றால் மத சார்பற்ற அணி என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அரசியல் கட்சிகள் உண்மையிலேயே சிறுபான்மையினருக்காகவும் தாழ்த்தப் பட்ட மற்றும் பிற்படுத்தப் பட்ட மக்களுக்காகவும் ஆக்கபூர்வமாக செய்தது என்ன? மத சார்பற்ற என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் முதலிய சிறுபான்மையினரின் வாக்குகளை குறிவைத்து வாய்ஜாலம் பேசுவதுதான் இந்தக் கட்சிகளின் குறிக்கோளாக இருக்கிறதே தவிர, உண்மையில் சிறுபான்மையினருக்காக காலம் காலமாக எந்த உண்மையான நன்மைகளை நடைப் படுத்தி இருக்கிறார்கள் என்பது நாம் சிந்திக்க வேண்டிய செய்தியாகும்.

அப்படி ஆக்கபூர்வமான காரியங்கள் நடந்திருந்தால் 
  • முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு பத்து சதவீதம் தரவேண்டுமென்ற நீதிபதிகளின் அறிக்கை ஆஸ்பத்திரிப் படுக்கையில் கிடந்தது ஆக்சிஜனுக்காக போராட வேண்டிய அவசியம் ஏன் ஏற்படுகிறது?
  • சிறைச்சாலைகளில் பல சிறுபான்மையினரை பல வருடங்கள் வழக்கு ஏதுமின்றி விசாரணைக் கைதிகளாகவே வைத்திருக்கவேண்டிய நிலைமை ஏன் ஏற்பட்டு இருக்கிறது? 
  • எல்லா இயக்கங்களும் மாறி மாறி போராட்டங்களை அறிவித்தும் நடத்தியும் கூட மத்திய மாநில அரசுகள் இந்த கோரிக்கைகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? 
ஏனென்றால் சிறுபான்மையினரின் பிரச்னைகள் தீர்க்கப் படாமலேயே இருக்க வேண்டும் அப்போதுதான் அவர்களை இங்கும் அங்குமாக உதைத்து மற்ற பெரிய கட்சிகள் பந்தாட இயலும் என்கிற கீழ்த்தரமான நோக்கம்தான். இதில் வேதனையாகக் குறிப்பிட வேண்டிய செய்தி என்னவென்றால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இயக்கங்கள் பெரிய அரசியல் கட்சிகளின் கால்களில் உதைபடும் கால்பந்தாக நாங்கள் வருகிறோம் என்று போட்டி போட்டுக் கொண்டு தாங்களே உருண்டு ஓடிப்போய் மைதானத்தின் நடுவில் உட்கார்ந்து கொள்வதுதான். 

இந்த நிலைமைகள் தான் மனசாட்சி உள்ள – எந்த இயக்கத்தைச் சேர்ந்த யாரும் உண்மை நிலைமைகள் என்று உணர்ந்து இருந்தாலும் கூட மதசார்பற்ற அணி என்று அறிவித்துக் கொள்ளும் அணியோடுதான் நம்மை ஏதாவது காரணம் சொல்லி இணைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். காரணம், ஒரு புறம் வேடன் மறு புறம் நாகம் இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான் என்கிற நிலைமைதான் சிறுபான்மையினரின் நிலைமை. 

ஒருபுறம் மத வெறியர்கள் வெளிப்படையாக விளம்பரப் பலகை வைத்து இந்தப் பக்கம் வராதே! என்று நம்மை பயமுறுத்துகிறார்கள். மற்றொரு புறம் பிற அரசியல் கட்சிகள், நமது ஓட்டுப் பால் சுரக்கும் மடிகளில் ஆறுதல் விளக்கெண்ணையை தடவி செம்பு நிறைய பால் கறக்கிறார்கள். நாமோ பலவாறு பிரிந்து கிடப்பதால் அவர்களுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டு போயஸ் தோட்டத்துக்கும் கோபாலபுரத்துக்கும் முட்டுக் கொடுத்துக் கொண்டு அவர்கள் போடும் ஒன்று இரண்டு இடங்களுக்காக தயவை எதிர்பார்த்து நிற்கிறோம். இதற்காக நமது சொந்த சகோதரர்களை துர்வார்த்தைகளால் அர்ச்சிப்பதற்கும் நாம் தயங்குவதில்லை. இதே இட ஒதுக்கீட்டைக் காரணம் காட்டி நமக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் அவர்களின் கரங்களில் இருக்கும் கத்திகளுக்கு நாமே கழுத்தைக் கொடுத்து பலியாகிறோம். பிரித்தாளும் கொள்கையில் பெயர் பெற்றவன் பிரிட்டிஷ்காரன் என்று அன்று சொல்வார்கள். இன்றோ அரசியலில் வித்தகம் என்பது சிறுபான்மையினரையும் தலித்துக்களையும் கூறு போட்டுப் பிரித்து திக்காலுக்கு திக்கால் விட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டு முட்டி மோதவிடுவதுதான் என்பதாக ஆகிவிட்டது.

மிகுந்த வேதனையுடன் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். இந்து சகோதரர்கள் இடையே எவ்வாறு சாதிரீதியான கட்டமைப்பு உருவாகி இவர் செட்டியார், இவர் முதலியார், இவர் பிள்ளைமார் , இவர் வன்னியர் , இவர் கவுண்டர் என்று பாகுபாடுகள் ஊடுருவி உருவாகி இருக்கிறதோ அதற்கு சற்றும் குறையாமல் அதே அளவு வீரியத்துடன் முஸ்லிம்களிடையே இயக்கப் பாகுபாடுகளும் இயக்க வெறியும் நிலவி வருகிற உணமையை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். சாலையில் போகிற ஓர் இந்து சகோதரனை அடுத்த இந்து சகோதரன் இந்த ஆள் என்ன சாதி என்று கேட்பது போல் ஒரு முஸ்லிம் சகோதரனை மற்றொரு முஸ்லிம் சகோதரன் இவன் எந்த இயக்கத்தில் இருக்கிறான் என்று எடை போடுவது , ஆராய்வது இன்றைய சமுதாயத்தின் நடுவே வேதனையான விஷ விருட்சமாக வளர்ந்துவிட்டது. இந்து சகோதரர்கள் தங்களுடைய சாதித் தகராறுகளை தர்மபுரியிலும் பரமக்குடியிலும் மரக்காணத்திலும் முதுகுளத்தூரிலும் கீழ வளவு மற்றும் மேல வளவிலும் காட்டிக் கொள்கிறார்கள் என்றால் முஸ்லிம்கள் திருவிடச்சேரியிலும் அதிராம்பட்டினத்திலும் மதுக்கூரிலும் கிளியநூரிலும் காட்டிக் கொள்கிறார்கள் அல்ல காட்டிக் “கொல்கிறார்கள்” . இதையா இஸ்லாம் போதித்தது? இந்த ஒற்றுமையின்மை சால்வையை போர்த்திக் கொண்டு இட ஒதுக்கீடு கேட்டு இயக்கத்துக்கு ஒரு மாதிரி போராட்டங்கள் நடத்தினால் நமக்கு இஞ்சி போட்ட டீ கூட கிடைக்காது . இடஒதுக்கீடா கிடைத்துவிடும்? 

பல்வேறு இயக்கங்களின் போராட்டங்களுக்குப் பிறகு தமிழகத்தில் 3.5% கல்வியில் இட ஒதுக்கீடு கிடைத்தது. கிடைத்த இந்த இட ஒதுக்கீட்டிற்கு உரிமை கொண்டாடி ஒவ்வொரு இயக்கமும் தங்களது கொடிகளையும், பெயர்களையும் முன்னிறுத்திக் கொண்டன. விளைவு ஒரு இயக்கத்தார் மற்றொரு இயக்கத்தாரை பழிப்பதும், இழிப்பதும் காட்சியானது. இந்தக் கட்டுரை வெளியாகும் தினம் அன்றுவரை இந்தப் பகையுணர்வு நீங்கவில்லை. இந்த 3.5% இட ஒதுக்கீட்டைத் தந்த கட்சியும் அதன் தலைவரான கலைஞர் கருணாநிதியும் நமது கோரிக்கையான ஏழு சதவீதத்தை நமக்காக ஒரே நேரத்தில் தந்திருக்க இயலாதா? தரவில்லை. காரணம் அடுத்த தேர்தலுக்காக முஸ்லிம்களுடன் பேரம் நடத்த ஒரு கைப்பொருள் கையில் வேண்டும் என்பதுதான் காரணம். அதேபோல் அதை நாங்கள் அதிகரித்துத் தருகிறோம் என்று அடுத்தகட்சியும் இந்த இட ஒதுக்கீட்டை வைத்து நம்மிடம் அரசியல் பேரம் நடத்துவதற்கும் இவைகள் காரணமாக இருக்கின்றனவே தவிர இந்தக் காரணங்களும் பிரச்னையும் கோரிக்கையும் காலத்துக்கும் இருந்து கொண்டு இருந்தால்தான் நம்மைவைத்து இவர்கள் அனைவரும் நடத்தும் அரசியலும் இருக்கும். பிரச்னை தீர்ந்துவிட இவர்கள் விடமாட்டார்கள். அப்படிப் பிரச்னை தீர்ந்துவிட்டால் இவர்கள் நம்மோடு நடத்தும் அரசியலும் தீர்ந்துவிடும்.

இடஒதுக்கீடு பெறுவதற்கும் நம்மை கல்வி, வேலைவாய்ப்பு , சமூக நிலை ஆகியவற்றில் உயர்த்திக் கொள்ளவும் என்னவெல்லாம் வழியாக இருக்கலாம்?

முதலாவதாக நமக்குள் இருக்கும் இயக்க மயக்கங்கள் தீரவேண்டும். ஒற்றுமை ஒன்றே குறிக்கோளாக இருக்க வேண்டும். ஒற்றுமைக்கு குறுக்கே வரும் எவரையும், “ அண்ணன் என்னடா ! தம்பி என்னடா ! அவசரமான உலகத்திலே” என்று ஒதுக்கிவிட வேண்டும். 

அடுத்து நமது கல்வித்தகுதிகளை உயர்த்திக் கொள்ள வேண்டும். 

மூன்றாவதாக கல்வித்தகுதியை உயர்த்திக் கொள்வதுடன் நாம் கற்ற கல்விக்குத் தகுந்த அரசுப் பணிகளைத் தேடித்தரும் போட்டித் தேர்வுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டும். அதே போல் பல உயர் கல்வி நுழைவுதேர்வுகளிலும் கலந்து கொள்ள வேண்டும். 

நான்காவதாக நமது அரசியல் வலிமையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். அரசியல் வலிமைய வலுப்படுத்தே வேண்டுமென்றால் இங்கே இருக்கும் பெரிய ஆலமரக் கட்சிகளின் நிழலில் வளர்ந்துவிட முடியுமென்ற நினைப்பை அகற்ற வேண்டும். நமக்கென்ற ஒரே ஒரு அரசியல் அமைப்பில் நாம் மட்டுமல்ல நம்முடன் கை கோர்க்க நம்மை போல் ஒடுக்கப் பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுடன் நமது தலைமையில் நமது கூட்டணி அமைந்தால் அரசியலில் – நிர்வாகத்தில் நாம் இந்தியாவுக்கே தலைமை தாங்க நம்மால் முடியும்.

காலமெல்லாம் உயர் சாதியினராலும் பெரும் கட்சிகளாலும் வார்த்தை அலங்காரங்களால் வஞ்சிக்கப் பட்டவர்களின் வரிசையில் வருபவர்கள் யார் என்று எண்ணிப் பார்த்தால் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட மக்களோடு முஸ்லிம் மற்றும் கிருஸ்தவ மக்களே வருவார்கள். இந்திய சமுதாயத்தில் இந்தப் பிரிவினரின் மக்கள் தொகை அளவுதான் அதிகம் . ஆனால் இவர்கள் ஆளப்படுவது இவர்களைவிடக் குறைந்த அளவுள்ள உயர் பிரிவு வகுப்பினரால் மட்டுமே. தங்களின் வாழ்வாதாரங்களுக்ககவும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களுக்காகவும் மற்றவர்களிடம் இவர்கள் துண்டேந்தி நிற்கும் நிலை ஒரு வித்தியாசமான வேடிக்கை. ஆகவே ஆண்டாண்டு காலமாக வஞ்சிக்கப்பட்டு வரும் சமூகத்தின் இப்பிரிவினர் தங்களின் கரங்களை வலுவாக கோர்த்து ஒரு மாற்று அரசியல் அணி உருவாகி நாட்டை ஆளும் நிலை வரும்போதுதான் உண்மையான சமூக நீதி இந்தியாவில் உருவாக வாய்ப்புண்டு. இந்த நிலை ஏற்படாதவரை வாழைப் பழக்கதைகளும் மறுபடியும் முதல்லே இருந்து வா போன்ற நிகழ்வுகளும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். 

உத்தரவுகளை இடும் நிலையில் உட்கார வேண்டிய சமூகங்கள் , தங்களின் உண்மை நிலைகளை உணராத வரையில் உத்தரவுகளை எதிர்பார்த்து ஆண்ட வர்க்கங்களின் வாசலில் வரிசையாக நின்று கொண்டு போட்டதைப் பொறுக்கிக் கொண்டு போகும் நிலைதான் தொடரும். 

இனி இதைப் பற்றி சற்று சிந்திக்கத் தொடங்கலாமா? இன்ஷா அல்லாஹ்.

அதிரைநிருபர் பதிப்பகம்

அதிரை உலா - 2013 24

அதிரைநிருபர் பதிப்பகம் | December 31, 2013 | , , , ,

2013 - வது  வருடம் விடைபெறும் தருவாயில் இருக்க  அதனை விடை கொடுத்து அனுப்பும் முன்னர் சென்ற வருட உலகம், சென்ற வருட இந்தியா என்றெல்லாம் பல்வேறு ஊடகங்களிலும் கண்டு வருகிறோம். அவைகளையெல்லாம் விடுத்து நாமும் 2012ம் வருடத்தில் பார்த்தது போலவே இவ்வருடமும்  அதிரையின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காண்போம்.


1.பல்லாண்டுகளாய் சாக்கடையும் ஆக்கிரமிப்பும் நிறைந்த நடுத்தெரு பள்ளியின் பின்புறமுள்ள செட்டியா குளத்திற்கு தமிழ்நாடு அரசு மூலம்  நபார்டு உதவி திட்டத்தின் கீழ்  50 லட்சம் ஒதுக்கி அவ்வப்போது  பணி நடந்து முடியும் தருவாயில் உள்ளது. 


2.மக்களின் மடமையை பயன்படுத்தி அவர்களின் மூட நம்பிக்கைக்கு புகைமூட்டி அதில் குளிர்காய எடுத்துக் கொண்ட ஆயுதமாக  இந்த புதிய கல்லறை, அதுவும் ஏற்கனவே இருக்கும் கல்லறைக் கட்டிடத்திற்கு அருகிலேயே புதியதொரு கல்லறை ஜொஹரா அம்மாள் என்று பெயரிட்டு!


3.செக்கடிப்பள்ளிக்கு சொந்தமான அதன் மேட்டுப் பகுதிகளில் பல கட்டிடமாகவும் கீத்துக் கொட்டகைகளாகவும் இருக்க, மற்றொரு கட்டிடம் செக்கடிப்பள்ளி நிர்வாகம் பேரில் கட்டி வருகையில் திடீரென்று அங்கே பேரூராட்சி சார்பில் "இது பேரூராட்சிக்கு சொந்தமான இடம்" என பெயரிட்டு போர்டு  வைத்து கட்டிட தளவாட சாமான்களை பேரூராட்சி அள்ளிச் சென்றது, பேரூராட்சி தலைவரின் கவனத்திற்கு வராமலே! பின்னர்  நிர்வாக  (அரசியலில் நீயா நானா) குளறுபடிகள் கலைந்து அத்தகைய அறிவிப்பு போர்டு நீக்கப்பட்டு பேரூராட்சி தலைவரின் தலையீட்டின் பேரில் செக்கடி பள்ளி நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட்டன. 


4. மார்ச் மாத்தத்தில் தக்வாபள்ளிக்கு புதிய நிர்வாகம் வந்தது. பதவி ஏற்பு விழாவுக்கு கூடாது அல்லது சர்ச்சை என நன்கறிந்த   மெளலிது ஓதி நார்சாவுடன் முரண்டு செய்தார்கள். சில முடிவெடுப்பதில் சிலரை கலக்காமலேயே செயல்பட்டதாக வழக்கும் தொடர்ந்தனர். அதோடு மட்டுமல்லாமல் பல்லாண்டுகளாய் மார்க்க பயான் செய்த ஹைதர் அலி ஆலிம் அவர்களை நீக்க வழி தெரியாமல் 10 நாள் சஸ்பென்ஸ் மற்றும் மைக் கிடையாது போன்ற சட்டமன்ற சமாச்சாரமெல்லாம் நடந்து முடிந்தன.


5. அல் அமீன் பள்ளி விவகாரத்தில் பல ஆண்டுகளாய் நிலச் சர்ச்சைக்கு தீர்வு கிடைத்து சாதகமான தீர்வு கிடத்தது ஒட்டு மொத்த அதிரையருக்கும் குறிப்பாக "அதிரை எக்ஸ்ப்ரஸ்" வலைத் தளத்தின் முன்னெடுப்பகளுக்கும் கிடைத்த வெற்றியாகும். விரைவில் பிரம்மான்ட பள்ளி உருவாகி தொழுகையால் நிரம்ப துஆ செய்வோமாக!


6. மார்க்க அறிஞர் ஒருவரை பழிவாங்கும் திட்டத்தில் பல சூழ்ச்சிகள் செய்தார்கள். மேலும் பல அதிரைவாசிகளுக்கு ஊரில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒரு சிலர் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், தனிப்பட்ட அலைபேசி மற்றும் தொலைபேசி அழுத்தங்கள், மிரட்டல்கள், செய்ததோடு அல்லாமல் தக்வா பள்ளி பயான் தொடர்பான செய்திகளை முடக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார்கள்.  ஒரு கட்டத்தில் நம்மவர்களே நம்மவர் மீது வழக்கு தொடர்ந்து அவர்களை கைது செய்ய காவல் துறை பள்ளிக்கு வந்தும் பின் அவரே நானே வருகிறேன் என்று காவல் துறைக்கு போயும் பின்னர் பலதரப்பு பேச்சு வார்த்தை நடத்தி ஓரளவு சுமூக தீர்வுடன் அல்லாஹ்வின் நாட்டபடி அதிரையிலேயே இருக்கிறார்கள்.


7. அதிரையர்களுக்கு பொழுது போக்கு அம்சங்கள் என்ற புதிய முயற்சியாக வர்த்தக திருவிழா என்ற பெயரில்  ஏப்ரல் 28 முதல் மே 12 வரை  ஒரு குழுவினர் சார்பாக நடத்தப்பட்டது. இது கந்தூரிக்கு மாற்றாகவும் மார்க்கத்திற்கு உட்பட்டும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  முதல் நாள் இரவு அரங்கேற்றிய நிகழ்ச்சியொன்றில் அருவருக்கத்தக்க வார்த்தைகளால்  வெளிப்படுத்த முடியாத இரட்டை அர்த்தமுள்ள கலந்துரையாடல்களும் நிகழ்த்தப்பட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் இது இப்படியே தொடர்வது மார்க்க விரோதம் என கருதி ஒரு புறம் ஆலிம்கள் தலையீட்டின் பேரிலும் மறுபுறம் கலெக்டரின் தலையீட்டின் பேரிலும் கலை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு விழா தொடர்ந்தது.


8. கடந்த மேயில் கடற்கரை தெருவில் கல்வி விழிப்புணர்வு மாநாடு அன்னை ஆயிசா மகளிர் கல்லூரி நிறுவனர் சலீம் அவர்கள் சிறப்பு சொற்பொழிவுடன் சிறப்பாக நடை பெற்றது.


9. கடந்த ஜூனில் கடைத்தெரு மார்க்கெட்டில் புதிதாக கடைகள் கட்டும் நோக்கில் திட்டமிட்டு அஸ்திவார மட்டம் வரை தற்போது எழுந்துள்ளது. துவக்க நிகழ்வில் அடிக்கல் நாட்டு சம்பவ முறையில் சர்ச்சைகள் எழுந்தன. நிர்வாகத்தின் நல்ல நோக்கம் சீக்கிரம் நிறைவேறட்டும். இன்சா அல்லாஹ்.


10.  அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் மேற்பார்பார்வையில் பெண்களால் அதிரையில்  இயங்கி வரும் அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியின் ஸனது (பட்டம்) வழங்கு விழா கடந்த  ஜூனில் அன்னை ஆயிசா அறிவியல் கலை மகளிர்கல்லூரி தாளாளர் பேராசிரியை சயீதாபானு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள    சிறப்பாக நடைபெற்றது.


11. பேராசிரியர்கள் அப்துல் காதர், பரகத் இவர்களுக்கு பதிலாக இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியின் மூத்த முதல்வராக டாக்டர் எஸ்.எம் அன்வர் பாட்ஷா அவர்கள்  பள்ளியின் நிர்வாகத்தால் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


12. சகோ. M.ஜமால் முஹம்மது அவர்களின் மகன் J.மீராசாகிப் குரூப் தேர்வுகளில் வெற்றிகரமாகத் தேர்ச்சிபெற்று 2014 ஆம் ஆண்டு நடைபெறும் I A S தேர்வு எழுதவுள்ளார். பொறியியல் பட்டம் பெற்றுள்ள J.மீராசாகிப், சென்னை அண்ணா சாலையிலுள்ள அழகிய கடன் I A S  அகாடமியில் இதற்கான பயிற்சிகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 


13. காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில்  கா.மு.மே.பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் SKM ஹாஜா முகைதீன் அவர்களின் தலைமையுரையுடன், இணையதள எழுத்தாளரும் அதிரைநிருபர் வலைத்தளத்தின் மூத்த பங்களிப்பாளருமான சகோதரர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் சிறப்புரையை ஆற்றி  பேசியதுடன்  பட்டிமன்றப் பேச்சாளர் சகோதரர் அண்ணா சிங்கார வேலு அவர்கள் தனக்கே உரித்தான நகைச்சுவை மற்றும் சிந்திக்க வைத்த பேச்சுடன்  அதிரைநிருபர் வலைதளத்தால் கவுரவித்து வழங்கப் பட்ட “நபிகள் நாயகம்” என்கிற வரலாற்று நூல் நினைவுப் பரிசாக ஆசிரிய ஆசிரியைகளுக்கு வழங்கப்பட்டது.  அத்துடன் ஆசிரியர் தினம் பற்றிய கவிஞர் சபீர் அவர்களின் கவிதை படி எடுத்து அனைவருக்கும் வழங்கப் பட்டது.  நிகழ்ச்சியில் அதிரை அறிஞர் பன்னூலாசிரியர் அதிரை அகமது, பேராசிரியர் அப்துல் காதர், கணிணி தமிழ் அறிஞர் ஜமீல் எம். ஸாலிஹ், மூத்த சகோதரர் முகமது பாரூக். நாவலர் நூர் முகமது, பெற்றோர் சங்க  தலைவர் செய்யது, எல்.எம்.எஸ். அபூபக்கர்,ஆகியோர் உட்பட கலந்து கொண்டு சிறப்பித்தனர்.   


14. கடந்த அக்டோபரில் கடைத்தெரு மார்க்கெட்டில் தீ விபத்து ஏற்பட்டு மிகப் பெரும் சேதம் ஏற்பட்டது. இதிலும் அரசியல் வாதிகள் அத்தனை பேரும் தனக்கே உரிய பானியில் ஆதாயம் அடைய முற்பட்டனர். உண்மை அல்லாஹ்வுக்கே வெளிச்சம். இன்னும் கயறு தொழிற்சாலை தீ, சமாதி கூரை தீ, வீடுகள் தீக்கிரை என தொடர்கதையாக உள்ளது. அதிரைக்கென்று தீயணைப்பு வாகனம் ஒதுக்குவதில் அரசின் மெத்தனம் உடனடியாக களையப்பட வேண்டும். வெளியூரில் இருந்து வரும் தீயணைப்பு வாகன தமதித்தால் அவர்கள் மீதே கோபத்தை காட்டி தாக்கிய வேதனைச் சம்பவமும் கடைத்தெருவில் அரங்கேறியது.


15. K M A ஜமால் முஹம்மது அவர்கள் ஆரசியல் ஆதாயம் இல்லாமல் பொது நலனில் அக்கரை கொண்டு பல்வேறு தேவை அறிந்து அரசுக்கு சட்ட ரீதியாக கோரிக்கை வைத்து  அவ்வப்போது சேவையில் சாதித்து வருகிறார். இவரைப் போல தெருவுக்கு நாலு பேர் சமுக அக்கரை கொண்டால் அரசியலே தோற்பது நிச்சயம்.


16. அதிரை தாருத்தவ்ஹீத்  மார்க்க பிரச்சாரங்கள் சிறப்பாக செய்து வருவதுடன் கடந்த இரு சாமதித்திருவிழாவுக்கு எதிராக நேரடி அணுகுமுறை, மற்றும் குறைந்த பட்சமாக  அதனால் மின் துண்டிப்பு தவிர்க்கப்பட மனுச் செய்தும் அதில் வெற்றியும் கண்டது. இன்னும் தொடர் நடவடிக்கைகளால் மார்க்க விரோதங்கள்  முற்றிலும் ஒழியும் என்பதில் ஐயமில்லை. 


17. கடந்த காலம் அதிகமான விபத்துகளை அதிரை சந்திக்க நேர்ந்தது. குறிப்பாக ரமலான் மாத வாக்கில்  அதிகமான வாகன, உயிர் சேதம் ஏற்பட்டது. 


18. தெருவில் இறங்கி காலி குடங்களுடன் போராட்டம் என்பதெல்லாம் பத்திரிகையில் படித்த செய்தி அன்று. இன்றோ அதிரையில் பெண்கள் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது அதிரை பேருராட்சி!


19. பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையில் சட்டத்தாலும் செயலாலும் தடுக்க முடியாமல் தோல்வியுற்ற பேரூராட்சி இன்று சாலைகளில் அலையும்  ஆடு மாடுகளை பிடிப்பதிலும் சட்டம் போட்டு 'லூஸ்' விட்டு அதிலும் தோல்வி கண்டுள்ளது. ஆளுமையின் குறையா அல்லது ஆள்பவரை பிடிக்காத அரசியல்  சதியா? பாவம் அதிரை!


20. ஈ.சி. ஆர் சாலையில் மூன்றடுக்காய் பிரம்மாண்டமாய் காட்சி தரும் இறையில்லம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில்  மீதி வேலை முடித்திட நிதிக்காக காத்திருக்கிறது. இன்சா அல்லாஹ் வழி கிடைக்கும். 


21. சி.எம்.பி.லைனில் அமைந்த  ALM ஸ்கூலில் ஜூம்மா மட்டும் நடந்த இடத்தில் ஐவேளைக்கும் தொழுகைக்கும் மஸ்ஜிதும் உருவாக்கி எளிய முறையில் திறப்பு விழா கண்டு அதிரை மஸ்ஜித் எண்ணிக்கையை மேலும் ஒன்று கூட்டியுள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.


22. கடந்த தேர்தலில் இரண்டாமிடம் பெற்ற S.அப்துல் அஜீஸ் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவின் செயலாளராக நியமிக்கப்பட்டார்., புதிய பொறுப்பு அதிரைக்கும் இஸ்லாமியர்களுக்கும் பெருமை சேர்க்க அல்லாஹ் நாடுவானாக!


23. பேரூராட்சி தலைவர் அன்றிலிருந்து இன்று வரை ஏகப்பட்ட சவால்களையும் எதிர்ப்புகளையும் வழக்குகளையும்  எதிர் கொண்டு அதிரைக்காக! போராடி வருகையில் அரசியல் காழ்ப்புணர்வால் திட்டங்கள் கேன்சலாகிய கதையாகவே உள்ளன. நேர்மையும் உண்மையும் வெற்றியாகட்டும். 


24. சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, பெருநாள் சந்திப்பு, கலந்துரையாடல் மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சி இறைவன் அருளால் மிகச் சிறப்பாக சகோதரர் இப்ராஹிம் அன்சாரி அவர்கள் தலைமையில்  நடந்தேறியது, இந்நிகழ்ச்சியின் நோக்கம், பிற சமுதாயத்தினர் மத்தியில் இஸ்லாம் பற்றிய தவறான புரிந்துணர்வுகளைக் களைந்து, அவர்களுக்கு இஸ்லாத்தைப்  பற்றிய நற்போதனைகளை எடுத்துக் கூறுவதும், இஸ்லாமியர்களுக்கும் பிற சமுதாயத்தினருக்குமிடையே உள்ள புரிந்துணர்வை வளர்த்து, நம்மை சுற்றியுள்ள   வட்டாரத்திலும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நன்னோக்கத்தில் நமதூர் இளைஞர்களின் மனதில் உதித்ததே இந்த ஈத்-மிலன் நிகழ்ச்சி. இந்த வருடத்தின் ஹைலைட் நிகழ்வு இது.


25. அல்லாஹ்வின் நாட்டப்படி மஸ்ஜிதின் கம்பீர தோற்றத்திற்கும், மனம் குளிர இயற்கையை ரசிக்கவும் மண் வளம் கூடிடவும் அல்லாஹ் தந்த அருட்கொடை. இதுபோல் அதிரையின் எல்லா குளமும் நிரம்பிட மனம் ஒன்றிய வலிமையையும்,  மழைநீரையும்  அனைத்து ஆறு ஏரி வளங்கள் வாயிலாகவும் வாய்ப்புகளை தந்தருள்வானாக! 


* இன்ஷா அல்லாஹ் அடுத்த வருட அதிரை-உலாவில் அதிரைக்கு இரயில் போக்குவரத்து, ஷிஃபாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம், பாதாளச் சாக்கடைத் திட்டம், அனைத்து குளத்திலும் தண்ணீர், விபத்தே இல்லாப் போக்குவரத்து  இன்னும் எல்லாம் இன்பமாய் காண்போமாக! மார்க்க நெறிக்குட்பட்டு!

M.H.ஜஹபர் சாதிக்
pictures supplied


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு