நேற்று ! இன்று ! நாளை! 23

அதிரைநிருபர் பதிப்பகம் | February 28, 2015 | , , , , , , ,

இரண்டாம் பாகம் : பகுதி இரண்டு

தமிழ் நாட்டில் பெண்ணைப் பார்த்து திருமணம் பேசி முடிப்பது என்பது பாரம்பரியமான ஒரு பண்பாட்டின் பரிமாணம். ‘ தாயை தண்ணீர் எடுக்கும் இடத்தில் பார்த்தால் , மகளை வீட்டில் போய் பார்க்கவேண்டியதில்லை ‘ என்பதும் நம்மிடையே வழங்கப்படும் பழமொழிதான். காரணம் என்னவென்றால் அன்பு, பண்பு, அடக்கம், ஒடுக்கம் ஆகியவை வெளிப்படும் இடம் தண்ணீர் எடுக்கும் நீர் நிலைகள் அல்லது குழாயடிகள்தான். குடங்களை கேடயமாகத் தாங்கி பெண்கள் ஒருவருக்கொருவர் போட்டுக் கொள்ளும் குழாயடிச் சண்டைகள் தமிழ்நாடெங்கும் காலைவேளைகளில் காணக்கிடைக்கும் காட்சிகள்.

அதேபோல் சம்பந்தா சம்பந்தமில்லாத சத்தம் அதிகமாக கேட்கும் இடத்தையும் நாம் சந்தைக்கடை என்று வர்ணிப்போம். பள்ளி அல்லது கல்லூரி வகுப்புகளில் மாணவர்கள் படிப்பில் ஈடுபடாமல், சத்தமாகப் பேசிக் கொண்டு இருந்தால் இது என்ன வகுப்பா இல்லை சந்தைக் கடையா என்று சத்தம் போடும் ஆசிரியர்களை நமது அனுபவத்தில் கண்டு இருக்கிறோம். 

இதேபோல் குழாயடி, சந்தைக்கடை போன்ற உதாரணங்களுடன் சட்டமன்றத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தனிமனிதர்களிடையே தோன்றிய பகைமையின் காரணமாக பாராளுமன்ற , சட்டமன்ற ஜனநாயக மரபுகள் கூவம் நதியில் குளிக்கப் போய்விட்டன. காலம் காலமாக கற்றோராலும் கல்லாதோராலும் கட்டிக் காக்கப்பட்ட மனிதப் பண்புகளும் நடை முறை நாகரிகங்களும் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. அண்மைக் காலங்களில் இதன் நிருபணம் அதிகமாகி விட்டது. 

இன்றைய சட்டமன்ற நிகழ்வுகளை ஒப்பீடாக வைத்து பகுருதீன் ஒரு கற்பனை சித்திரத்தைத் தீட்டி இருக்கிறார். சற்று அதையும் பார்ப்போமே!

வானளாவி வளர்ந்த ஒரு மரத்தில் வட்ட மேசை மாநாடு !  கிளைக்கு ஒன்றாக கீசாரிப்பட்ட ஷைத்தான்கள் உட்கார்ந்து நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தன. அவைகளின் முகங்களில் ஒருவித ஏக்கம் குடிகொண்டிருந்தது. அன்றைக்கு அவர்களின் பொழுது போக்குக்கு ‘ பசாது’ ஒன்றுமில்லையே என்று ஷைத்தான்கள் கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த நேரம் ஒரு கரும்புகை எழுந்தது. மெல்ல மெல்ல அந்தக் கரும்புகை, வெண்புகையாக மாறியது. அந்த வெண்புகையிலிருந்து வெளிப்பட்டது ஒரு ஜின். அந்த ஜின்னின் கையில் ஒரு தமிழ் செய்தித்தாள்! ஷைத்தான்கள் தாங்கள் உட்கார்ந்திருந்த வட்ட மேசையிலிருந்து ஆர்வமாக எழுந்தன வானுலகம் போன ஜின்னை வழிமறித்தன. தங்களின் ‘பசாதுப்’ பசிக்கு இரை கிடைத்துவிட்டது என்ற ஆர்வம் அவைகளிடையே வெளிப்பட்டது.

ஹாவ்! ஹாவ்! என்று சப்தமிட்டவாறே ஷைத்தான்கள் ஜின்னை சூழ்ந்தன. ஜின் அமைதியாக தனது கரத்திலிருந்த செய்தித்தாளை நீட்டியது. நாய்கள் ரொட்டித் துண்டைக் கவ்வுவது போல அதைப் பறித்த ஷைத்தான்கள் செய்தித்தாளை விரித்துப் படித்தன. தலைப்புச் செய்தி இதுதான். 

“தமிழக சட்ட மன்றம் நாளை கூடுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மக்கள் முதல்வரின் அனுமதிகேட்டு வாயைத் திறந்த மன்றத்தின் முதல்வர் அறிவிப்பு! பரப்பரப்பான சூழ்நிலையில் கூடும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க் கட்சிகளும் அவைகளை எதிர்கொள்ள ஆளுங்கட்சியும் வரிந்து கட்டுகின்றன.” என்று அச்சடிக்கப்பட்ட செய்திகள் ‘நச்’ என்று இருந்தன. ஷைத்தான்களின் முகங்களில் நமுட்டுச் சிரிப்பு. 

ஷைத்தான்களில் சற்று விபரம் தெரிந்த ஒரு ஷைத்தான் இப்படிச் சொன்னது. “ கடந்த காலங்களில் சட்டமன்றம் கூடும்போது மக்கள் பிரச்னைகளை எழுப்ப எதிர்க் கட்சிகளும் அவற்றை எதிர்கொள்ள ஆளுங்கட்சியும் தயாராகின்றன என்றுதான் செய்திகள் வரும். ஆனால் இப்போது வரிந்து கட்டுகின்றன என்று ஊடகங்களே செய்திகள் வெளியிடுகின்றன என்றால் ஏதோ குஸ்தி நடக்கபோகிறது அதனால் நமக்கெல்லாம் நிறைய தீனி இருக்கிறது என்று அர்த்தம் “ என்று சொன்னது. 

“அப்படியானால் நாமும் போய் என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிடுவோமா? “ என்று ஒரு ஷைத்தான் ஆர்வமுடன் கேட்டது. இந்தப் பிரேரணை ஒருமனதாக நிறைவேறியது. அவை உடனே கிளம்பின. ஒரு வாயு மண்டலம், கருநிறமாக எழுந்தது. மூன்று ஷைத்தான்களும் கண்சிமிட்டும் நேரத்தில் பூலோகத்தில் வந்திறங்கின. அவை இறங்கிய ஊர் சிங்காரச் சென்னை. சென்றடைந்த இடம் - சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதி. 

விடிந்தால் சட்ட மன்றம் கூடுகிறது. ஆளுநர் உரை அது இது என்று பாதுகாப்புப் பரபரப்பு. அதே நேரம் சட்ட மன்ற உறுப்பினர் விடுதியின் அனைத்து அறைகளும் மூடப்பட்டிருந்தன. ஒரே ஒரு துணிச்சலான ஷைத்தான் மட்டும் சாவித்துவாரத்தின் வழியே உற்றுப் பார்த்தது. உள்ளே உறுப்பினர்கள் அடுத்த நாள் கூட்டத்துக்கு அவசர அவசரமாகத் தயாராகி வருவதை அறிந்தது. ஆமாம்! உறுப்பினர்களின் உணவு மேஜை முன்னே சோமபானமும் சுறா பானமும். அருகில் அவர்கள் கடித்துத் துப்பிய செந்நிறம் தடவப்பட்ட கோழிகளின் எலும்புத் துண்டுகள். 

சரி ! அடுத்த அறையைப் பார்ப்போம் என்று பார்த்தால் அங்கும் அதே காட்சிகள். ஆளும் கட்சி உறுப்பினர்களின் அறைகளில் மட்டும்தானா என்றால் இல்லை! எல்லாக் கட்சி உறுப்பினர்களின் அறைகளிலும் இதே காட்சிகள். சரிதான்! இந்த மாதிரி அத்தியாவசிய விஷயங்களில் எல்லோரும் ஒற்றுமையைக் கடைப்பிடிக்கிறார்கள் என்று ஷைத்தான்கள் சந்தோஷமாகப் பேசிக் கொண்டன. 

அதே நேரம், தங்களை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்த மக்களுக்குப் பிரதிநிதிகளாக பணியாற்றுகிறார்களோ இல்லையோ, பூலோகத்தில் தங்களுடைய பிரதிநிதிகளாக இவர்கள் வேலை செய்யத் தயாராகிறார்கள் என்பதை ஒரு ஷைத்தான் சுட்டிக் காட்டியது. இந்த சந்தோஷத்தைத் தாங்களும் கொண்டாட வேண்டுமென்று விடுதிக்கு அருகிலிருக்கும் டாஸ்மாக் பாருக்கு மூன்று ஷைத்தான்களும் சென்று மொடாக்குடி குடித்தன. 

குடித்துவிட்டு வெளியே வந்த ஷைத்தான்கள் நிலை தடுமாறி டாஸ்மாக் கடை வாசலில் மண்ணில் புரண்டு கிடக்கும் மனித ஷைத்தான்களுடன் தாங்களும் தடுமாறி விழுந்து புரண்டன. ஒரே ஒரு ஷைத்தான் மட்டும் கேரளாவுக்கு போன் போட்டு அங்கிருந்த ஒரு மரக்கிளையிலிருந்து  குட்டிச்சாத்தானை  அழைத்தது, “ மை டியர் குட்டிச் சாத்தான்! அடுத்த பஸ்ஸைப் பிடித்து அவசரமாக சென்னைக்கு வா !” என்று தகவலை தாக்கீதாக அனுப்பிவிட்டு , தானும் சாலை ஓரமாக சக ஷைத்தான்களுடன் படுத்துக் கொண்டது. 

பொழுதுவிடிந்தது! குட்டிச்சாத்தானும் குறிப்பிட்டபடி வந்து ஷைத்தான்களை துயிலெழுப்ப நால்வரும் கூப்பிடு தூரத்தில் இருந்த கூவத்தில் குளித்துவிட்டு சட்டமன்றம் நோக்கி நடந்தே சென்றன. சட்ட மன்றத்தின் பொதுமக்கள் நுழையும் வாயிலில் காத்திருக்காமல் அனைவரும் காற்றாக மாறி ‘ விஷ் ‘ என்று சட்டமன்றத்தின் பார்வையாளர் பகுதியில் ஒரு வசதியான இடத்தில் அமர்ந்தனர். 

அவை நடவடிக்கைகள் ஆரம்பமாயின. ஆளுநர் வந்தார். அம்பிகையே ஈஸ்வரியே என்று ஆலாபனை பாடிவிட்டு அமைச்சரவை தயாரித்துத் தந்த உரையைப் படித்துவிட்டு , சர்க்கரை போடாத காபியையும் குடித்துவிட்டு கிளம்பிப் போனார். 

ஆளுநர் உரையின் மீது விவாதம் ஆரம்பமானது. அவைத்தலைவர் சூரிய நமஸ்காரம் செய்வதுபோல் வானை நோக்கிக் கையை உயர்த்தி தென் சென்னைப் பக்கம் நோக்கி கும்பிட்டு விட்டு தனது இருக்கையில் அமர்ந்தார். 

விவாதம் தொடங்கலாம் என்று அவைத்தலைவர் அறிவித்ததுதான் தாமதம் எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்திருந்த திமுகவினர் எழுந்தனர். ஆளுநர் உரையை கண்டிக்கிறோம் என்றார்கள் . சிறை தண்டனை அளிக்கப்பட்டு ஜாமீனில் இருக்கும் சீதேவியைப் புகழ்வதில் ஆளுநரும் தனது பங்கை ஆற்றியதை எதிர்த்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்கள் . உடனே அந்தக் கட்சி உறுப்பினர்களும் கூடவே ஆதரவுக் கட்சிகளும் ஒரு விடுமுறை உற்சாகத்தில் வெளியேறின. 

அமைச்சர்கள் அமரும் பகுதியில் ஒரு அமைச்சர் தனது காலுக்கு ஒரு தைல பாட்டிலில் இருந்து தைலம் தடவிக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்த குட்டி சாத்தான் , “சாச்சா! அவர் என்ன தடவுகிறார்? ஏன் தடவுகிறார் என்று கேட்டது?” உடனே பெரிய சைத்தான் சொன்னது, “ ஒன்றுமில்லை! அண்மையில் நடந்த ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது குத்தாட்டம் போட்ட அமைச்சர் அவர். அந்த வலி ஆடும்போது அவருக்குத் தெரியவில்லை- தெரிந்து கொள்ளும் நிலையிலும் அவர் இல்லை. இப்போது கால்வலிக்கிறது அதனால் தைலம் தேய்த்துக் கொண்டிருக்கிறார்" என்றது. அமைச்சர்களும் இப்படி ஆடுவார்களா என்ற சந்தேகத்துடன் அனைத்து ஷைத்தான்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மீண்டும் சட்டமன்றத்தின் நடுப்பகுதியில் கூச்சல் கேட்டது. 

வெளிநடப்பு செய்த எதிர்க் கட்சி உறுப்பினர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். 

அடுத்து ஒரு உறுப்பினர் , சட்டமன்றத்துக்கு வராத தலைவர்களைப் பற்றி ஒரு வினா எழுப்பினார். அதற்கு ஒரு ஆளும் கட்சி உறுப்பினர் அப்படி யாரும் வராமல் இல்லை ஒரு கிழவரும் ஒரு சிடிஜனும்தான் வருவதில்லை என்று கூறினார். கிழவர் யார் என்று அவரது கட்சியினருக்கும் சிடிசன் என்று அதாவது குடிமகன் என்று யாரைச் சொல்கிறார்கள் என்று அவரது கட்சியினருக்கும் விளங்கி அதை முன்னிட்டு சட்டமன்றம் சற்று நேரம் கோயம்பேடு ஹோல்சேல் மார்கெட் ஆனது. 

இப்படிப் பட்ட வார்த்தைகளால் மற்றவர்களின் உணர்வுகளைக் கிளறிப் பார்ப்பதும் தகுதி இழந்தவர்களுக்கு அளவுக்கு மீறி புகழாரம் சூட்டுவதும் இந்த மன்றத்தில் இப்போது நடை முறை என்று புரியாத ஷைத்தான்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டன. 

திமுக உறுப்பினர் ஜே. அன்பழகன் எழுந்து தங்கள் கட்சி உறுப்பினர்கள் அமரும் இடத்தில் மூட்டைப் பூச்சி கடிப்பதாக ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு ஒரு அமைச்சர் இப்படியெல்லாம் கோமாளித்தனமாக பேசாதீர்கள் என்றதுதான் தாமதம் உடனே அங்கு ஒரு குருஷேத்திரப் போர் மூண்டது. அவைக் காவலர்கள் அழைக்கப்பட்டனர். அனைத்து திமுக உறுப்பினர்களும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இந்தக் கலவரத்தில் பல உறுப்பினர்களின் வேஷ்டிகள் அவிழ்ந்து விழுந்தன; அல்லது உருவப்பட்டன. பெண் உறுப்பினர்கள் தலை கவிழ்ந்தனர். 

இதைக் கண்ட ஷைத்தான்களுக்கு சந்தோசம் எல்லை மீறியது. உணவு இடைவேளை ! ஷைத்தான்கள் சட்டமன்றத்தை விட்டு வெளியே வந்தன. உணவுக்குப் பின் மீண்டும் உள்ளே போகவேண்டுமா என்ற பொருள்பட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டன. மூத்த ஷைத்தான் பேசியது, “ இந்த பூலோகத்தில் நமக்குப் பிரதிநிதிகளாய் இந்த மன்ற உறுப்பினர்கள் இருக்கும்வரை நாம் பூலோகத்துக்கு வரவேண்டிய வேலையே இல்லை. நமது வேலையைத்தான் இவர்கள் பார்க்கிறார்கள் . ஆகவே நாம் மீண்டும் நமது மரத்துக்கே  போய் நிரந்தர ஒய்வு எடுக்கலாம் “ என்று சொல்லி கண்ணை மூடின ; உடனே உயரப்பறந்தன. குட்டிச் சாத்தானும் ஒரு ஆட்டோ பிடித்து கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்குப் போனது. - என்று சித்திரம் தீட்டினார் பகுருதீன். 

இதோ! நான் பரிமாறும் ஒரு பழைய சோறும் ஊறுகாயும். 

முதலமைச்சர் காமராஜர்! அறிஞர் அண்ணா எதிர்க் கட்சித் தலைவர்! விலைவாசி உயர்வைப் பற்றி விவாதம்! அண்ணாவுக்கு வழங்கப்பட்டதோ கால்மணி நேரம். அவர் பேசியதோ முக்கால் மணி நேரம். காமராசர் பேச்சை ரசித்துக் கொண்டே எவரையும் குறுக்கிடக் கூடாது என்று கண்ணாலேயே உத்தரவு பிறப்பிக்கிறார். அண்ணா தனது பேச்சை நிறைவு செய்யும் போது, “ முதலமைச்சர் காமராசருக்கு , விலைவாசி உயர்வால் குடும்பங்கள் படும் கஷ்டங்கள் புரியாது. காரணம் அவர் பிரம்மச்சாரி. தனிக்கட்டை. குடும்பம் நடத்திப் பார்த்தால்தான் குடும்பங்கள் படும் கஷ்டம் தெரியும் ! “ என்று குறிப்பிட்டார். 

அண்ணாவுடைய பேச்சுக்கு அன்றைய சட்ட மன்ற உறுப்பினர் அனந்தநாயகி அம்மையார் பதில் அளித்தார். காமராஜரைப் பற்றி அண்ணா குறிப்பிட்டது பற்றி அவருக்கு கோபம் கொப்பளித்தது. “அண்ணா இப்படி முதல்வர் காமராசரைப் பற்றிக் கூறுகிறார். இவர் இப்படிப் பேசுவதால்தான் ஆண்டவன் இவருக்கு குழந்தையே இல்லாமல் செய்துவிட்டான்'. என்றார் அனந்த நாயகி. 

அவையில் இருந்த காமராஜர் உடனே எழுந்து கோபமாக தனது அறைக்குச் சென்றார். அனந்த நாயகிக்கு காமராஜரிடமிருந்து வந்தது ஒரு அவசர அழைப்பு. காமராஜர் தனது அறைக்கு வந்த அனந்த நாயகியிடம், “ஏம்மா! அண்ணாத்துரை அப்படி என்ன இல்லாததை சொல்லிவிட்டார். நான் பிரம்மச்சாரி தானே! ஆனால் அதற்காக நீ ஒரு பெண்ணாக இருந்தும் அண்ணாதுரைக்கு குழந்தை இல்லை என்று குத்திக் காட்டுகிறாயே அவர் மனம் எவ்வளவு வருத்தப்படும்? அவரது மனைவி இதைக் கேள்விப் பட்டால் எவ்வளவு வருத்தப்படுவார்? உடனே போய் அவரிடம் மன்னிப்புக் கேள்!" என்று சொன்னார். 

அனந்தனாயகியும் அவ்வாறே செய்தார். இப்போது சட்ட மன்றம் நடைபெறும் இதே இடத்தில்தான் இந்த நிகழ்வும் நடந்தது. 

ஒரு தலைவரை வாய்க்குவந்தபடிஎல்லாம் வசைபாடக் கூடாது என்று பயிற்சியளிக்கும் பாசறையாக அன்றைய சட்டமன்றம் இருந்தது. இன்றோ , எப்படிப் பேசினால் எதிர்க் கட்சிகளை சீண்டலாம் என்றே பயிற்சியளிக்கப்படுகிறது. முதல்வரை திருப்தி செய்வதற்காகவே பண்பாடற்ற வார்த்தைகள் பரிமாறப்படுகின்றன. அதைப் பார்த்தும் கேட்டும் முதல்வரும் குலுங்கக் குலுங்க சிரிக்கிறார். சபை நாகரிகமும் சந்தி சிரிக்கிறது. 

இப்படிப்பட்ட நாகரிகமற்ற அரசியல் அவலங்கள் இப்போது உச்சநிலையில் நின்று நிலவக்காரணம் நேற்றைய அரசியல் என்பது கட்சி சார்ந்த , கொள்கை சார்ந்த அரசியல். ஆனால் இன்றைய அரசியல் தனிநபர்களை முன்னிறுத்தி நடத்தப்படும் துதிபாடும் அரசியல். இதற்கு உதாரணம் எம்ஜியார், கருணாநிதி , ஜெயலலிதா, நரேந்திர மோடி ஆகியோர் மட்டுமல்ல மறைந்த மூப்பனார் முதல் வாசன் வரையும், வைகோ முதல் விஜயகாந்த் வரையும் சரத் குமார் முதல் மருத்துவர் ஐயா வரையும் மட்டுமல்லாமல் இயக்கங்களை இயக்குவோர் வரையும் கூட நீளும். நாளை என்ன நடக்குமோ?

இன்ஷா அல்லாஹ் அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் சந்திக்கலாம்.

ஆக்கம்: முத்துப் பேட்டை பகுருதீன். B. Sc; 
கலந்தாய்வு மற்றும் உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி.

தூதுச் செய்தியின் மீது உறுதியான நம்பிக்கை 4

அதிரைநிருபர் பதிப்பகம் | February 27, 2015 | ,

::::: தொடர் - 12 :::::

பெருமானார் (ஸல்) அவர்களைப் பொறுத்த வரையில், தமக்கு இறைச் செய்தி வந்துகொண்டிருந்ததை உறுதியாக நம்பினார்கள்.  அதில் உண்மை இருந்ததை உணர்ந்தார்கள்.  தமக்குத் தூதுச் செய்தியை அனுப்பிக்கொண்டிருந்த அல்லாஹ்வை முழுமையாக நம்பினார்கள்.  அந்தத் தூதுச் செய்தியை மனித சமுதாயத்துக்கு அறிவிக்கவேண்டும் என்ற தமது கடமையை உணர்ந்தார்கள். 

இதோ, நான் சொல்லப் போகும் நிகழ்வை உங்கள் உள்ளங்களில் படம் பிடித்துப் பாருங்கள்:

ஒரு நாள், அண்ணலார் (ஸல்) அவர்கள் கஅபாவின் அருகில் இருக்கும் ‘சஃபா’ மலை மீது ஏறி, சூழ இருந்த மக்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம், “வா ஸபாஹா!” என்று உரக்கக் கூவினார்கள்.  இதைக் கேட்ட மக்கள், அருகில் இருக்கும் கஅபாவிலிருந்தும் கடை வீதியிலிருந்தும் வந்து அந்த மலையடிவாரத்தில் ஒன்றுகூடினார்கள்.  யாரேனும் அவ்வாறு கூவும்போது மக்கத்து மக்கள் விரைந்து வந்து, அவர் கூற விரும்பும் செய்தியைக் கேட்பது அன்றைய வழக்கம் என்பதால் மட்டுமில்லை;  கூவியவர் உண்மையாளரும் நம்பிக்கைக்குரியவருமான முஹம்மத் (ஸல்) அவர்கள் (அஸ்ஸாதிகுல் அமீன்) என்பதால்.  இந்தப் பட்டம், அவர்களின் இளமை முதல் மக்கத்துக் குறைஷிகள் தம் செல்லப் பிள்ளைக்குக் கொடுத்திருந்ததாகும்.  எனவே, அத்தகையவர் அவ்வாறு கூவினார் என்றால், அது முக்கியமான ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணினார்கள்.  அப்படி வந்தவர்கள் அனைவரும் அம்மலை அடிவாரத்தில் வந்து கூடினார்கள்.  

இன்றைக்கு நாம் ஹஜ் அல்லது உம்ராவுக்காக மக்காவுக்குச் சென்று ‘சஃயி’ என்னும் வணக்கக் கிரியையை நிறைவேற்றத் தொடங்கும்போது இந்த வரலாற்று நிகழ்வை அசை போட்டுப் பார்க்கவேண்டும்.  அன்று முஹம்மத் (ஸல்) அவர்கள் உரத்துக் குரல் கொடுத்து, மக்களை ஓரிறைக் கொள்கையின் பக்கம் அழைத்த அதே இடம்தான் இது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 

தமது குரலைச் செவிமடுத்து வந்து கூடிய மக்களிடம் இவ்வாறு கூறினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்:

“மக்களே!  இந்த மலைக்குப் பின்னால் உங்களைத் தாக்குவதற்காகப் படை ஒன்று அணிவகுத்து நிற்கின்றது என்று நான் சொன்னால், என்னை நம்புவீர்களா?”

“நீங்கள் ஒருபோதும் பொய் சொல்லியவரில்லை; அதனால், கட்டாயம் நம்புவோம்” என்றனர் அம்மக்கள்.

“அது போன்றே, அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதை விடுத்துப் பல தெய்வ வணக்கத்தில் நீங்கள் மூழ்கியிருந்தால், மறுமையில் உங்களை அல்லாஹ் வேதனை செய்வான்” என்ற எச்சரிக்கையை அவர்கள் முன் எடுத்துவைத்தார்கள்.

உடனே, அம்மக்களுள் நபியின் நெருங்கிய உறவினனான அபூலஹப் என்பவன், “இதைச் சொல்லவா நீ எங்களை ஒன்றுகூட்டினாய்?  நீ நாசமாய்ப் போகக் கடவாய்!” என்று சாபமும் கோபமும் ஒன்றிணையக் குரல் கொடுத்தான்!  தன் இரு கைகளால் மண்ணை அள்ளி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது எறிந்தான்!

அபூலஹபைப் பொறுத்தவரை, மறுமையைப் பற்றிப் பேசுவது வீணான செயலே.  அது, அவனுடைய வணிகத்தை விட்டு வெளியில் வரச் சொல்லும்படியான இழப்பிற்குரிய ஒன்றாகும்.  அவனைப் போன்றவர்கள் இந்த உலகைப் பற்றிப் பேசுவதில் மணிக் கணக்காக ஈடுபடுவார்கள். ஆனால், மறுமை பற்றிப் பேசுவது, அவர்களுக்கு வீணான செயலாகும்.  இந்த வகையில்தான், அபூலஹபு தன் சகோதரரின் மகனை வசைமாரி பொழிந்தான்.  ஆனால், வசைமொழியை எதிர்கொண்டவரோ, அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்.  தன்னுடைய தூதரை இன்னொருவன் திட்டியதை அல்லாஹ் வெறுத்தான்.  ஆகவே, அவனைக் கீழ்க்காணும் இறைவசனங்களால் அல்லாஹ் சபித்தான்:

“அபூலஹபின் இரு கைகளும் நாசமாகட்டும்!  அவனும் நாசமாகட்டும்!  அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.  விரைவில் அவன் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் புகுவான்.  விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ, அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறுதான் (இருக்கும்.  அதனால், அவளும் அழிவாள்.)” (111:1-3)

குர்ஆனிய வசனங்கள் அல்லாஹ்வால் அருளப்பெற்றவை என்பதற்குரிய சான்றுகளுள் இந்த அத்தியாயமும் ஒன்றாகும்.  ஏனெனில், அபூலஹபு இறைமறுப்பிலேயே செத்தொழிவான் என்று இந்த இறைவசனம் முன்னதாகவே உறுதிப் படுத்திவிட்டது!

குர்ஆனைப் பொய்ப்படுத்த அவன் விரும்பியிருந்தால், ஒப்புக்காகவேனும் இஸ்லாத்தைத் தழுவிவிட்டு, பின்னர் இறைமறுப்பாளனாக மாறியிருக்கலாம் அல்லவா? சில ஆண்டுகளின் பின், கொடிய நோயொன்றினால் அவன் பாதிக்கப்பட்டுத் தனியனாகச் செத்தான்.  அவனுடைய பிணத்தை எடுத்து அடக்கம் செய்ய ஒருவரும் முன்வரவில்லை.  காரணம், அது அத்துணை நாற்றமெடுத்துப் போயிருந்தது!  இறுதியாக, அவனுடைய மகன்கள் அந்தப் பிணத்தைத் தொடுவதற்கும் அஞ்சி, நீண்ட கம்புகளைக் கொண்டு தள்ளிக்கொண்டு போய், ஒரு பள்ளத்தில் வீழ்த்தினார்கள்!  பின்னர் அதன் மீது கற்களை வீசி மூடினார்கள்.  அபூலஹபு தன் சொந்த மக்களால் கற்கள் வீசப்பட்டுக் கேவலமடைந்தான்.  மேலும், மறுமையில் நரகத்திலும் வேதனையை நுகர்வான்.

இந்த வரலாற்று நிகழ்விலிருந்து நமக்குக் கிடைக்கும் தலைமைத்துவப் பாடம் என்ன தெரியுமா?  தலைவருக்குத் தன்னம்பிக்கை என்பதுதான் மிக இன்றியமையாதது.  அவருடைய நோக்கத்தில், அவருடைய செயல்பாட்டில், செயல்படுத்தும் முறையில், தன்னைப் பார்த்துப் பின்பற்றுவோர் செயல்படுத்திப் பயன் பெறுவார் என்ற நம்பிக்கையில் எல்லாம் அந்த உறுதிப்பாடு பிரதிபலிக்க வேண்டும்.  தலைவர் தனது நோக்கில் சிறிதேனும் நம்பிக்கை இழந்தால், அவருடைய தலைமைத்துவம் வலுவிழந்துவிடும்!

மக்கள் தம் தலைவர்களைப் பல காரணங்களுக்காகப் பின்பற்றுகின்றனர். சிலர், அவர் கொண்டுவந்த செய்திக்காக; இன்னும் சிலர், அவருடைய வலிமைக்காக;  வேறு சிலர், தலைவரிடம் இருக்கும் சில சிறப்புத் தன்மைகளுக்காகப் பின்பற்றுகின்றனர்.  

தலைவர் தனது நோக்கில் உறுதியாக நின்றால், அவரைப் பின்பற்றுவோரும் நிறைந்து, அவருடன் நிலைத்து நிற்பார்கள். இப்படியே மக்கள் கூட்டம் பல்கிப் பெருகும்.  கொள்கையில் உறுதிப்பாடும் விட்டுக் கொடுக்காத தன்மையும்தான் தலைவரின் தகுதிக்குக் கட்டியம் கூறும் குறிப்பிடத் தக்க தன்மையாகும்.

அண்ணலாரின் 23 ஆண்டு கால நபித்துவத்தின்போது, அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகளால் அவர்கள் தமது உறுதியில் தளர்ந்து போனார்கள் என்ற ஒரு சின்னஞ்சிறிய நிகழ்வைக்கூட எடுத்துக் காட்டாக  ஒருவராலும் கூற முடியாது!  இது ஒன்றே அவர்களின் இறைத்தூது அற்புதமான ஒன்று என்பதற்கான எடுத்துக் காட்டாகும். அந்தத் தூதுச் செய்தியும், அதனுடன் இணைந்த அவர்களின் இயல்பான நற்குணங்களும் அழகிய நடைமுறைகளும் அப்பழுக்கற்ற தன்மைகளும் மிகப்பெரும் அறிவும் சிறப்பான தீர்வுகளும் ஈடிணையற்ற இரக்க குணமும் அன்னாரை மனிதப் புனிதராக இலங்கச் செய்தன என்று கூறின், அது மிகைக் கூற்றாகாது.  

பெரும்பாலான மக்கள் அவர்களின் தூதுச் செய்தியை நம்பினார்கள் என்றால், அதன் உண்மையைப் புரிந்து ஏற்றுக்கொண்டார்கள் என்பதால் அன்று;  மாறாக, அன்னாரின் நற்குணங்களால் ஈர்க்கப்பட்டு, ‘முஹம்மது (ஸல்)  கூறினார்கள் என்றால், அது உண்மையாகத்தான் இருக்கும்’ என்ற நம்பிக்கையால் ஈர்க்கப்பட்டார்கள்.  இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இயல்பான நற்குணம், அன்னார் கொண்டுவந்த இறைச் செய்தியை மக்கள் தயங்காது ஏற்கத் துணை நின்றது என்பதுவே மாறாத உண்மையாகும்.

அதிரை அஹ்மது

கண்ணாடிக் குடுவைகள் 4

அதிரைநிருபர் பதிப்பகம் | February 26, 2015 | ,

நபிமணியும் நகைச்சுவையும் தொடர் - 4

உண்மையை நன்மையாக  உபதேசிக்க வந்த உத்தமத் தூதரிடம் உயர்ந்தோன் அல்லாஹ் (ஜல்) இவ்வாறு உரையாடுகின்றான். “நபியே! நீர் அல்லாஹ்வின் அருளின் காரணமாகவே அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்கின்றீர். நீர் கடுகடுப்பாகவும் கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீராயின் உம்மை விட்டும் அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள்”. (1) 

வையகம் வியக்கும் அந்த வரலாற்று நாயகரின் மகத்தான வாழ்வின்   இரு பெரும் கால கட்டங்களில்   அண்ணல் அவர்களின் அருகே அணுக்கமாகவும் மிக நெருக்கமாகவும் வாழ்ந்து, அந்தப் பேணுதல் நிறைந்த பெருந்தகையின்  மகிழ்வூட்டும் முகமலர்ச்சியை, அழகிய வார்த்தைகளை, ஆறுதல் தரும் அன்பை, நேரிய நெறிமுறைகளை, நிறைவான நற்குணத்தை,  நன் நடத்தையின் நறுமணத் தென்றலை சுவாசித்து மகிழும் பாக்கியம் பெற்ற நம் அன்னையர் இருவர் இயம்புவதைக் காண்போம்:

இந்த அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடையாக அண்ணல் நபியவர்கள் அனுப்பப்பட்ட அந்த  மாபெரும் தினத்தில், வேத வெளிப்பாடு அருளத் தொடங்கியபோது, நடுக்கத்துடன் பயந்தவர்களாக தம் இல்லம் வந்து, தமக்கு நிகழ்ந்த புதுமையான நிகழ்ச்சி பற்றி துணைவியாரிடம் அதிர்ச்சியுடன் விவரித்தபோது, பெண்ணினத்திற்கே பெருமை தேடித்தந்த அன்னை கதீஜா (ரலி) அவர்கள், நற்பணி புரியும்  நாயகம் அவர்களுக்கு நெஞ்சத்தில் நிம்மதி ஏற்படும் வண்ணம் அழகான ஓர்  ஆறுதலை அளித்தார்கள். “அண்ணலே! அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் ஒருபோதும் உங்களைத் துன்பத்திலோ துயரத்திலோ ஆழ்த்தி விடமாட்டான். ஏனெனில், நீங்கள் எல்லோரிடமும் மிக்க அன்புடனே இருக்கிறீர்கள். எப்போதும் உண்மையே உரைக்கிறீர்கள். ஏழைப் பங்காளராகவும் எல்லோருக்கும் தோழராகவும் இருக்கின்றீர்கள். அடுத்தவர் உடமைகளை உரிமையாளர்களிடம் நம்பிக்கையோடு ஒப்படைத்து விடுகின்றீர்கள். எளியவர்களுக்கு எல்லாம் எப்போதும் ‘இல்லை’ என்று சொல்லாமல் ஓடோடிச் சென்று உதவி செய்கிறீர்கள். அபலைகளையும் ஆதரவற்றோரையும் ஆதரிக்கிறீர்கள். அனாதைகளுக்கு அடைக்கலம் தருகின்றீர்கள். சக மனிதர்களுக்கு தயவு காட்டி ஒத்துழைக்கிறீர்கள். அநீதி இழைப்பவர்களால் நேரிடும் துன்பங்களைக்கூட சகித்துக் கொள்கிறீர்கள். இப்படிப்பட்ட அருங்குணங்கள் கொண்ட நல்லடியார் ஒருவருக்கு அருளாளன் அல்லாஹ் ஒருபோதும் மனவேதனையை ஏற்படுத்திவிட மாட்டான்” என்று  அல் அமீன்  அவர்களுக்கு ஆதரவளித்துப் பேசியது மட்டுமின்றி அன்னை கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்கள், அந்த இடத்திலேயே  அண்ணலார் கொண்டு வந்த தூதை ஏற்றுக் கொண்டு, உலகிலேயே முதன்மையாக அண்ணல் நபியிடம் விசுவாசம் கொண்டவர் என்ற  அரும்பேறைப்பெற்றார்கள். அதன்பின் ஏற்றுக் கொண்ட  தியாகங்களின் விளைவாக என்றென்றும் சரித்திர ஜோதியின் சரவிளக்காக மிளிர்ந்தார்கள்!

‘அறிவைப் பொதுவுடைமையாக்கிய அண்ணலார்’ அவர்களின்  குணாதிசயங்கள் குறித்து நம் நெஞ்சத்தில் நெகிழ்ச்சியை உண்டாக்கும் வண்ணம், நம் அன்னை ஆயிஷா முதஹ்ஹரா (ரலி) அவர்கள் மொழிவதைக் காண்போம். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருபோதும் எவரையும் பழித்துக் கூறியதில்லை; தமக்குத் தீங்கிழைத்த தீயவர்களையும் வல்லோனின் தூதர் (ஸல்) அவர்கள் வஞ்சம் தீர்த்துக் கொண்டதில்லை! மாறாக, மாண்பு நிறைந்த மன்னர் நபியவர்கள், அவர்களை மன்னிக்கவே செய்தார்கள்.  அநீதமான அனைத்துப்  பாவமான காரியங்களிலிருந்தும் முற்றிலும் விலகி, எப்போதும் பரிசுத்தம் நிறைந்தவர்களாகவே விளங்கினார்கள். தமது ஏவலாட்களையோ, வேலைக்காரர்களையோ ஒரு போதும் அடித்துத் துன்புறுத்தியதோ உதைத்து வருத்தியதோ கடுஞ்சொல் பேசியதோ இல்லை! அவசியமான, தகுதியான வேண்டுகோளை விடுப்பவர் யாராயினும் அவர்களின் கோரிக்கையை நீதி நபியவர்கள் நிராகரித்ததே கிடையாது!”

இந்த அரிதான குணங்கள் அனைத்தும் நம் தாஹா நபியின் தனிச் சிறப்பாகும்!

இதயங்களைக் கவர்ந்த இறுதித் தூதர்  (ஸல்) அவர்கள் இனிமையாகச் சொன்னார்கள்: ஓ, ஆயிஷா! அல்லாஹ் மென்மையானவன். மென்மையான போக்கையே அவன் விரும்புகின்றான். வன்மைக்கும் பிறவற்றுக்கும் வழங்காததை எல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகின்றான் (2) ‘இளகிய மனமும் இனிய நல்மொழியும் மனிதனைப் புனிதனாய்  மாற்றும்’ எனும் பொருள்பட மேலும் சொன்னார்கள். “மென்மை எதில்  இருந்தாலும், அது அதனை அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும்  அலங்கோலமாகிவிடும்!” (3)

ஒரு முறை, நானிலம் போற்றிடும்  நபி நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டுக்குள் வர, அண்ணலாரின் அருமைத் தோழர் உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டு நின்றார்கள். அப்போது நபியவர்களிடம், அவர்களின் துணைவியரான குறைஷிப்பெண்கள் குடும்பச் செலவுத் தொகையை அதிகமாக்கித் தரும்படி குரலை உயர்த்திக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். உமர் ஃபாரூக் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டபோது, அப்பெண்கள்  அவசர அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்து கொண்டனர். அண்ணல் நபி  (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்த உடன், உமர் ஃபாரூக் (ரலி) அவர்கள் உள்ளே வந்தார்கள். ‘சிரிப்பழகர்’ என்ற  செய்யதினா முஹம்மது  (ஸல்) அவர்கள் அங்கே சிரித்துக் கொண்டிருந்தார்கள்!

அப்போது, உமர் ஃபாரூக் (ரலி) அவர்கள் 'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என் தாயும் தந்தையும்  தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்'. தங்களை அல்லாஹ் வாழ்நாள் முழுதும் சிரித்தபடியே மகிழ்ச்சியாக இருக்கச் செய்வானாக! என்றார்கள். அதற்கு நற்குணம் நிறைந்த நாயகம் (ஸல்) அவர்கள், கத்தாபின் மகனே! 'என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன்! என்னிடம் சகஜமாக அமர்ந்து வாதாடிக் கொண்டிருந்த  இவர்கள் உமது  குரலைக் கேட்டவுடன் அவசர அவசரமாகப் பர்தா அணிந்துகொண்டு உள்ளே சென்று விட்டார்களே!' என்றார்கள். அதற்கு உமர் ஃபாரூக் (ரலி) அவர்கள், அப்படியல்ல! அல்லாஹ்வின் தூதரே! 'இந்தப் பெண்கள்  எனக்கு அஞ்சுவதை விட, அதிகமாக அஞ்சத் தாங்கள் தாம் தகுதியுடையவர்கள் என்று கூறிவிட்டுப் பிறகு அப்பெண்களை நோக்கி, 'தமக்குத்  தாமே பகைவர்களாகி  விட்ட  பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகின்றீர்கள்?' என்று சப்தமாகக் கேட்டார்கள். அதற்கு அந்தப்பெண்கள் , 'அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும்போது நீர் கடின சித்தமுடையவராகவும் கடுமை காட்டக் கூடியவராகவும் இருக்கின்றீர்' என்று பதிலளித்தார்கள்.

அப்போதுதான், பொறுமையின் உறைவிடம் பூமான் நபியவர்கள்   'அது இருக்கட்டும், கத்தாபின் புதல்வரே! என் உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீர்  ஓர் அகன்ற பாதையில் சென்று கொண்டிருக்கையில் உம்மை  ஷைத்தான் எதிர்கொண்டால், உமது  பாதையல்லாத வேறு பாதையில் தான் அவன் செல்வான்' என்று தம் அருமைத்  தோழரை நோக்கி அன்பாய்க்  கூறினார்கள். (4)

மனிதனுக்கு மட்டுமே அல்லாஹ் அளித்த தனிச் சிறப்புத்  தன்மைகளில் தலையாயது நகைச்சுவை! 

நகைச்சுவை வாழ்வில் அறவே இல்லை எனில் வாழ்க்கை என்பது சுவை  இல்லாமல் சோகம் ததும்பும்! அதுவே, அளவுக்கு மீறும்போது சகிக்க முடியாத விளைவுகளைப்  பாவங்களுடன் கொண்டு வந்து சேர்க்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!

ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பிரயாணத்தை மேற்கொண்டிருந்தபோது, அன்ஜஷா எனும் பெயருடைய ஒட்டக ஓட்டி ஒருவரும் உடன் சென்றிருந்தார். அவர் அழகிய குரல் வளம் கொண்டிருந்தார்.

அவரது முக்கியமான பணி என்னவென்றால், ஒட்டகச் சிவிகைக்குள் நபி (ஸல்) அவர்களின் மனைவியரை அமர வைத்துப் பாதுகாப்பாக ஓட்டிச் செல்வதுதான். பயண வேகத்தை விரைவுபடுத்த வேண்டி, பாலைவனப் பாடல்கள் சிலவற்றைப்  பாடி ஒட்டகத்திற்கு உற்சாகத்தைக் கொடுத்து ஓடச்செய்து வந்தார் அவர். ஒட்டகமும் பாட்டைக் கேட்டு வேகமாக ஓடத் துவங்கியது! இதைப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழகாய்ச் சிரித்தார்கள்.

உத்தமத் தூதரின் சிரிப்பு மேலும் உற்சாகமளிக்கவே இன்னும் ஒட்டகத்தை விரைவாக ஓடச்செய்தார் அவர். ஒட்டகமும் அதி விரைவாக ஓடத்துவங்கவே, ஒரு கட்டத்தில் அந்த ஒட்டக ஓட்டி சிவிகையுடன் சேர்ந்து கீழே விழுவதைப்போல ஒருபக்கமாகச் சாய்ந்தார்! அதைக்கண்ட  அல்லாஹ்வின் தூதர் (ஸல்),  "ஓ அன்ஜஷா! உனக்கு நாசம்தான்.(5) நிதானமாகப்போ! உள்ளே சிவிகைக்குள் இருக்கும் கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே!" என்றார்கள். 

மலர் போன்ற மென்மை கொண்ட மங்கையரை கண்ணாடிக் குடுவைக்கு ஒப்பிட்டு ஞானத்தின் ஒளிவிளக்கு நாயகம் (ஸல்) அவர்கள், பெண்கள் கண்ணாடி போன்று மிருதுவானவர்கள்; மென்மையானவர்கள் என்றும் கண்ணாடியை எச்சரிக்கையுடன் கையாள்வதைப் போலவே பெண்களிடம் நளினத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் நவின்றார்கள். இன்னும், கண்ணாடி ஓர் அழகான, அதே சமயம் எளிதில் உடைந்துவிடக் கூடிய ஒரு பொருள். ஒருவேளை, உடைந்து போய் விட்டால் மீண்டும் சீர்படுத்துவது கடினம்! அவ்வாறே மங்கையரிடம் நம் கடுமையைக் காட்டி, அவர்கள் மனம் உடைந்து போகாமல் நாம் கவனமாகக் கையாள வேண்டும்  என்ற ஆழமான அர்த்தம் அளித்தே இவ்வாறு, கருணைக்கும் கனிவான அன்பிற்கும் முன்னுதாரணமான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான கத்தாதா (ரஹ்), "பெண்கள் மென்மையானவர்கள் எனும் கருத்தில் அவர்களைக் கண்ணாடிக் குடுவைகளாக உவமித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சிலேடையாகக் குறிப்பிட்டிருக் கின்றார்கள்" என்று கூறுகிறார். இன்னொரு அறிவிப்பாளரான அபூகிலாபா (ரஹ்) தம்முடன் இருந்த ஈராக்கியரிடம் இவ்வாறு கூறினார். “அப்போது நபியவர்கள், ஒரு வார்த்தைக் கூறினார்கள். உங்களில் ஒருவர் அதைச் சொல்லி இருந்தால், இங்கிதம் தெரியாத நீங்கள் அதற்காக அவரைக் கேலி செய்து விளையாடி இருப்பீர்கள். அந்த வார்த்தை “நிதானமாக ஓட்டிச்செல்! கண்ணாடிக் குடுவைகளை (கண்ணாடி போன்ற பெண்களை) உடைத்து விடாதே!” என்பதுதான்.(6)

செம்மல் நபி  (ஸல்) அவர்களுக்குச்  சிலேடையாகவும் சிரிப்பாகவும் பேசத் தெரியாது என்று யார் சொன்னது?

ooooo 0 ooooo

குறிப்பு:  ஓ அன்ஜஷா! உனக்கு நாசம்தான்!: (7) ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் யாரையாவது  ஏசினால், அது மறுமை நாளில் அவருக்கு பாவப் பரிகாரமாகவும் அவரை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக ஆக்கி வைப்பதற்கான முன்னேற்பாடாகவும்  ஆகிவிடும் என்பதையும் இது விஷயத்தில் என்ன மாதிரியான உடன்படிக்கையை இறைவனிடம், வேந்தர் நபி (ஸல்) அவர்கள் வேண்டி வைத்திருந்தார்கள் என்பதையும் அடுத்த தொடரில் நாம் ஆழமாகக் காண்போம்.
                                                                                                            
ஆதாரங்கள்:

(1)  அல்குர்ஆன் 3:159
(2) முஸ்லிம் 5055 ஆயிஷா (ரலி)
(3) முஸ்லிம் 5056 ஆயிஷா (ரலி)
(4) புஹாரி 6085 ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)
(5) புஹாரி 6211 அனஸ் இப்னு மாலிக் (ரலி)
(6) புஹாரி 6149 அனஸ் இப்னு மாலிக் (ரலி)
(7) முஸ்னத் அஹ்மத் 12300

இக்பால் M. ஸாலிஹ்

துளி உலகம்! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | February 25, 2015 | , , , ,


இதோ
கூப்பிடு தூரத்தில் கோடை

குடிநீர்க் குழாய்களில்
காற்று வீசும் காலம்
சமீபத்துவிட்டது

வாரி வழங்கிய
மாரியின் நீரைச்
சேமித்து வைக்காமல்
பூமிக்குப் புகட்டி விட்டோம்

சுட்டெரிக்கப் போகும்
சூரியக் கதிர்களின்
வீரிய வெப்பம்
எஞ்சிய நீர்நிலைகளில்
நீருரிஞ்சி
நில வெடிப்புகளில் நிலைக்கும்

உணவு உருட்டிச் சேமித்த
எறும்புகள்கூட
நீர்த்துளியுருட்டத் துவங்கிவிட்டன.

'தண்ணி' போதையில்
திளைக்கும் கூட்டம்
தண்ணீர்த் தேவையில்
தகிக்கப் போகிறது

தண்ணீர் அரசியல்
சூடு பிடிக்க
ஊடகங்களுக்குத் தாகம் அடங்கும்

உதாசீனம் செய்யப்பட்ட
உபரி நீரோ
உப்புக் கரிக்கிறது
கடலில்!

கடல்

ஓடும்போதும்
கொட்டும்போதும்
ஒல்லியாக இருந்த தண்ணீர்
ஒரே இடத்தில்
ஓய்ந்து
படுத்துக் கிடந்ததால்
உப்பு கூடி
உடல் பெருத்துக்
கடலானது.

எழுப்ப வேண்டாம்
எழுந்தால்
ஆழிப் பேரலையாய்
அழித்து விடும் உலகை!

ஆழ்கடல் முதல்
அலை ஆடையுடுத்தி
ஆடி அசைந்து வரும் கடல்
கரை வந்ததும்
நுரைப் பூச்சூடி
கண்டவர் கால்களில் விழும்
‘கலிமா’ சொல்லாதப் பெண்டிரைப்போல்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

மாமரம் 6

அதிரைநிருபர் பதிப்பகம் | February 24, 2015 | , , , ,

ஒருமுறை ஊர் சுற்றிவிட்டு (டூர்) ஊர்  வரும் வழியில் அரசு தோட்டக்கலைப் பண்ணை, நாட்டுமங்கலம் என்ற போர்டை பார்த்ததும் பண்ணை உள்ளே சென்று பார்க்க முடிவு செய்து காரை உள்ளே செலுத்தினேன் உள்ளே சென்றதும் பண்ணைக்கே உரித்தான பசுமை நிழலாடியது பண்ணையின் பசுமை மனதுக்கு இதமாக இருந்தது 

பண்ணை அதிகாரியை அணுகி ஒட்டு மாங்கன்னு ஒண்ணு வேணும்முன்னு சொன்னதும்  நுப்பது ரூபாய்க்கு பில் போட்டு கொடுத்துவிட்டு ஒரு மாங்கன்னு ஒன்றையும் கொடுத்தார் கொடுத்தவர் சொன்னார் இது உயர் ரக ஒட்டு மாங்கன்னு மூன்று வருடங்களில் காய்த்துவிடும் என்றார் 

ஒட்டு ரகம் என்றால்  என்ன என்று  கேட்டதும் அப்படியோ ஒட்டும்  இடத்திற்கு எங்களை ஓட்டி சென்றார் 


ஹை-பிரீடு என்ற ஆங்கில  சொல்லுக்கு தமிழில்    வீரிய ஒட்டு ரகம் என்ற   பெயர் காரணத்தை சொல்லிவிட்டு .ஒ ட்டும் விசயத்திற்கு வந்தார் அதாவது  ஒரே வகை மரத்தில்  வேறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட இரண்டுரகங்களை வைத்து உருவாக்கப்படுவதுதான் இந்த வீரிய ரக ஒட்டு ரகம். ஒரு மரம் ஆணாகவும், மற்றொரு மரம்  பெண்ணாகவும்   பயன்படுத்தப்படும். உதாரணத்துக்கு ஒரு மாமரத்தை  எடுத்துக் கொள்வோம். ஒருமாமரம் , நோய் எதிர்ப்புத் சக்தி  கொண்டதாக இருக்கும். ஆனால், காய்ப்பு  குறைவாக இருக்கும். மற்றொருமாமரம் , அதிக காய்ப்பு  தரும். ஆனால், நோய் எதிர்ப்பு திறன் இருக்காது. இப்படிப்பட்ட இரண்டு ரகங்களையும் ஒட்டு சேர்த்து உருவாக்கக் கூடிய முதல் தலைமுறைக்கு பெயர்தான் வீரிய ஒட்டு ரகம். என்று விளக்கம் கொடுத்தார் அத்தோடு ஒட்டும்  முறையும் விளக்கினார் 

முதலில் நோய் எதிர்ப்புத் சக்தி அதிகம்  கொண்ட மாங்கொட்டையை ஒரு பாலித்தின் பையில் மண் நிரப்பி ஒரு குறிப்பிட்ட நாட்கள் வரை வளர்க்கின்றனர் அது வளர்ந்து ஒரு குறிப்பிட்ட  உயரம் வந்ததும் அதன் அடிபகுதியில் ஒரு நான்கு அல்லது ஐந்து அங்குளம் விட்டு நம் ஊரில் வாலை  மீன் வெட்டுவதுபொல் கிராசக வெட்டி விட்டு வேறு காய்ப்பு திறன் அதிகமுள்ள மாமரத்தின் நொனி கிளையை  (கொப்பு)கிரசக வெட்டி கொட்டையில்  இருந்துவெட்டி எடுத்த அந்த மேல் பகுதி மீது இந்த கொப்பை நன்றாக இணைத்து அசையாது கட்டி வைத்துவிடுகின்றனர்  மாங்கொட்டையில் இருந்து வரும்  சக்திகளை மேலே உள்ள இணைப்பு பெற்றுக்கொண்டு வளர தொடங்கும் என்று விவரித்தார் 

மேலும் கூறினார் இந்த  ரகத்திலிருந்து கிடைக்கும் விதையினை மீண்டும் விதைத்தால் நாம் எதிர்பார்க்கும் வகையில் காய்ப்பு இருக்காது அதற்க்கு காரணம் அங்கு  விதையில் பல  குழப்பங்கள் உருவாகும். இந்த விதை வாப்பா , அப்பா , முப்பாட்டன் போன்றவர்களின் குணாதிசயத்துடன் எக்கு தப்பாக இருக்கும். ஆகவே, முதல் தலைமுறையில் உருவான வீரிய ஒட்டு ரகங்களை மட்டுமே பயிரிடவேண்டும்.இது  சாதாரண ரகங்களைக் காட்டிலும்  50% வரை கூடுதல்காய்ப்பினை  கொடுக்கும்  என்று சொல்லி முடித்தார் 

அங்கு வாங்கி வந்த ஒட்டு  மாங்கன்றை வீட்டு கொல்லையில் வைத்து தினமும் நீர் ஊற்றி வளர்த்து வந்தேன் மரம் ஜம்முன்னு வளர்ந்ததே தவிர மூன்று வருடம் தாண்டியும் காய்க்கவில்லை ஒரு வேலை ஒட்டு மரம் என்று அட்டு மரத்தை தந்துவிட்டானோ  என்ற சந்தேகமெல்லாம் வந்தது வருஷ வருஷம் மரமாத்து வேலை செய்வதே பெரிய வேலையாய்  இருந்தது 

காய்க்கவே  மாட்டேங்குதே வெட்டி விடுவோம்  என்று முடிவெடுத்து  தோப்புக்காரனை  கூப்பிட்டு வெட்ட சொல்லிவிட்டேன் அவன் வந்து பார்த்துவிட்டு இப்படி பசுமையான மாமரத்தை ஏன் வெட்ட சொல்றிய முதலாளி என்று கேட்டான் நான் சொன்னேன் பல வருடம் ஆகியும் காய்க்கவில்லை என்றேன் அதற்க்கு அவன் சொன்னான் அடுத்த வருடம் காய்க்க வைத்துவிடுவோ மொதலாளி என்று சொன்னவன் விறுவிறு என்று  மாமர  தூரில் இருந்து ஒரு அடி விட்டு ஒரு அடி மேல மரத்தை சுற்றி ஒரு அடிக்கு மாமரத்தின் பட்டையை (மேல் தோல்)  பட்டையை சீவிவிட்டான் 

தோப்புக்காரன் சொன்னது போல் மாமரம் போன வருடம்  பூ பூத்து காயும் காய்த்தது. காய்களில்  ஒரு சில காய்களை மீன் ஆனத்தில் போட்டு சாப்பிட்டதில் உள்ள சுகத்தை இங்கு என்னால் விவரிக்க முடியவில்லை அத்தனை சுவை இந்த வருஷ சீசனுக்கு தற்போது பூ  பூத்துள்ளதாக செய்தி ஊரில் இருந்து வந்ததில் இருந்து மனதில் ஆனந்தம் ஆற்பரிக்கின்றது 

Sஹமீது

பரீட்சைக்கு படிக்கலாமா? - ஓர் நினைவூட்டல் ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | February 23, 2015 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் . . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

பரீட்சை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. பத்திரிகையிலும், தொலைக்காட்சியிலும் எப்படி படிக்க வேண்டும் என்ற அறிவுரைகளை தொடங்கி விட்டார்கள். நாமும் நமது பங்கிற்கு எப்படி படிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்த இருக்கிறோம். அரசு சலுகை சரிவர கிடைக்காமல் தங்கள் பிள்ளைகளை பல சிரமங்களுக்கிடையில் படிக்க வைத்துக்கொண்டு இருக்கும் பெற்றோர்களுக்காகவும் , மாணவ, மாணவியருக்காகவும் இந்த கட்டுரையை எழுதுகிறோம். கவனமாக படியுங்கள்.

முஸ்லிம்கள் அன்றும் இன்றும்

ஒரு காலத்தில் இந்தியாவையே ஆண்ட சமுதாயம். இந்திய விடுதலைக்காக கடினமாக பாடுபட்ட இஸ்லாமிய சமுதாயம் சிந்திய இரத்தங்கள்தான் எத்தனை. மேலும் விடுதலைக்காக தங்கள் சொத்துக்களை இழந்து, உயிரையும் தியாகம் செய்ததற்கு பரிசாக இன்று தீவிரவாதிகள் என்ற முத்திரை குத்தியும், இந்திய நாட்டில் கொத்தடிமைகளாக வாழும் நிலைக்கும், அரபு நாடுகளிலோ இரண்டாந்தர குடிமக்களைவிட எந்த மதிப்பும் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கும் அவல நிலைக்கு நம்மை தள்ளியது ஒரு கூட்டம்.

அந்த கூட்டங்கள் இந்திய விடுதலைக்காக துரும்பளவு கூட தியாகம் செய்தவர்கள் கிடையாது. ஆனால் தியாகச் செம்மல்கள் என்று தம்மை வரலாற்றில் பதிவு செய்து கொண்ட பொய்யின் அடிப்படையில் இந்தியாவின் அனைத்து வளங்களையும் தங்களுக்கு சாதகமாக்கி, முஸ்லீம்கள் எந்த பிரதிபலனும் பார்க்காமல் செய்த தியாகத்தை கொச்சைப்படுத்தி அரசிலும், நாட்டிலும் எந்த சலுகையும் அனுபவித்து விடக்கூடாது என்பதில் மட்டும் மிக கவனமாக இன்று வரை இருந்து கொண்டு இருக்கிறார்கள். மேலும் ஆங்கிலேயன் காலத்தில் நமக்கு இருந்த இட ஒதுக்கீட்டை சுதந்திர இந்தியாவில் அகற்றியும் அன்றும் இன்றும் அரசின் அனைத்து சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு முஸ்லீம் சமுதாயத்தை மட்டும் எந்த விதத்திலும் முன்னேற விடாமல், அரசுதுறைகளில் நுழைய விடாமல் எல்லா துறைகளிலும் திறமையாக பூதக்கண்ணாடி வைத்து பார்த்துக்கொண்டு தன்னை மட்டும் மனித இனம் என்று கூறி தற்பெருமையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறது கயவர்கள் கூட்டம்.

முஸ்லிம் சமுதாயத்தில் படிப்பறிவு என்பது மிக மிக கீழ் நிலையில் படுபாதாளத்தில் இருக்கிறது. சுதந்திரத்திற்கு முன் விடுதலை பெறுவதற்காக படிப்பை நம் முன்னோர்கள் விட்ட காரணத்தால் இன்று வரை கல்வியில் வீழ்ந்தே கிடக்கிறோம். நம்முடைய தியாகத்திற்கு முதல் பரிசு நமக்கு இருந்த இட ஒதுக்கீட்டை பறி கொடுத்தது. இரண்டாம் பரிசு தீவிரவாதி என்ற பெயர் - நாம் பெற்ற இந்த இரண்டு பரிசுகளாலும் கல்வியிலும், வாழ்விலும் பின்தங்கிவிட்டோம்.

பெற்றோர்களின் கவனத்திற்கு:

தங்கள் பிள்ளைகளின் பரீட்சை நேரம் நெருங்கி விட்டது. இதுவரை எப்படி படித்தார்கள் என்பது முக்கியமல்ல வரும் இறுதித்தேர்வில் எப்படி படிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். இன்றுவரை அவர்களின் படிப்பில் தாங்கள் கவனம் செலுத்தாமல் இருந்திருக்கலாம். இந்த இறுதித் தேர்வுக்காக நீங்கள் உங்களின் நேரங்களை அவசியம் ஒதுக்கி அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

முதலில் தங்களின் வரவேற்பு அறையில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டி நிகழ்ச்சிகளை தாங்களும் பார்க்காதீர்கள். பிள்ளைகளையும் பார்க்க விடாதீர்கள். முடிந்தளவு தொலைக்காட்சியை நல்ல நிகழ்ச்சிகளுக்கும், செய்திகளை தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தி, ஷைத்தானின் மொத்த உருவமான சினிமா, பாடல்கள், மெகா சீரியல்கள் இவை அனைத்திற்கும் விடை கொடுத்து விடுங்கள். இம்மையிலும் மறுமையிலும் எந்த நன்மையையும் பெற்றுத்தராதவற்றின் பக்கம் நெருங்கலாமா? உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் மேலும் வல்ல அல்லாஹ் கூறுவதைப்பாருங்கள்:

காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.(அல்குர்ஆன் : 103: 1,2,3).

பரீட்சைக்கு நாம் எப்படி தயாராவது:

திட்டமிடும் காரியத்தைத்தான் ஒழுங்காக நாம் செய்ய முடியும். வெளியூருக்கு போகுமுன் டிக்கெட் முன்பதிவு செய்கிறோம். ஊரில் செல்லும் இடங்களை முன் கூட்டியே திட்டமிட்டு விடுகிறோம். அந்த ஊரில் போய் திட்டமிடுவதில்லை. அதுபோல் ஒவ்வொரு தேர்வின் பாடத்திற்கும் குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கி ஒரு அட்டவணை தயார் செய்து அதன்படி உங்கள் பாடங்களை பல பகுதிகளாக பிரித்து படித்து முடித்து விடுங்கள். மாணவ மாணவியர்களே! நீங்கள் மிக முக்கியமாக கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது. ஒரு கேள்விக்கான பதிலை படித்து முடித்தவுடன் படித்ததை உடனடியாக ஒரு நோட்டில் எழுதி பார்த்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்களுக்கு பரீட்சையில் கைகொடுத்து உங்களுக்கு வெற்றியை கிடைக்கச் செய்யும். இதை தவிர வெறும் மனப்பாடம் எந்த வகையிலும் பயன் அளிக்காது. படித்ததை இரவு நேரங்களில் எழுதிப் பாருங்கள். எழுதிப்பார்ப்பதில் கவனக்குறைவாக இருந்து விடாதீர்கள்.

நாட்கள் இருக்கிறது படித்துக் கொள்ளலாம் என்று இருந்து விடாதீர்கள். காலத்தை வீண் விரயம் செய்யாமல் படிக்க ஆரம்பித்து விடுங்கள். சென்று போன நாட்கள் திரும்பி வராது என்பதை நினைவில் கொண்டு உங்களின் ஒரு வருட படிப்பிற்காக நீங்கள் பயன்படுத்திய மணித்துளிகள் எத்தனை அந்த மணித்துளிகளில் சில மணி நேரங்கள்தான் உங்களின் தேர்வுக்கான நேரம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

படிக்கும் நேரங்கள்:

பெற்றோர்களே பிள்ளைகளை விடிய விடிய படி படி என்று தொல்லை கொடுக்காதீர்கள். கண் விழித்து படிப்பதால் உடலில் தொந்தரவுகளும், மனச்சோர்வும்தான் ஏற்படும். அப்படி படித்தாலும் மனதில் அதிக நாட்களுக்கு படித்தது ஞாபகம் இருக்காது. அதனால் இரவு 10 அல்லது 10:30க்குள் படித்து முடித்து விட்டு உறங்கச் சொல்லுங்கள். விடியற்காலை 3:30 அல்லது 4 மணிக்கு எழுந்த வெது வெதுப்பான நீரில் குளித்து விட்டு 2 ரக்காஅத் நபில் தொழுது இறைவனிடம் உதவி தேடிய பிறகு படிக்கச் சொல்லுங்கள். இந்த நேரத்தில் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். படிப்பதும் நன்றாக மனதில் பதியும். அதோடு ஃபஜ்ர் நேரம் வந்தவுடன் தொழுது விட்டு தொடர்ந்து படிக்கச் சொல்லுங்கள். காலையில் ஒரு மணி நேரம் படிப்பது மற்ற நேரத்தில் 3 மணி நேரம் படிப்பதற்கு சமம் ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எவ்வளவு நேரம் படிக்கலாம் என்பதை அவரவர் வசதிக்கு தக்கவாறு நிர்ணயம் செய்து கொள்ளலாம். பள்ளி நாட்களில் 7 முதல் 8 மணி நேரமும் விடுமுறை நாட்களில் 10 முதல் 13 மணி நேரம் என்று தனித்தனியாக நேரங்களை பிரித்து அந்த நேரங்களில் படிக்கலாம்.

உடல் ஆரோக்கியம்:

உடலுக்கு தூக்கம் அவசியமான ஒன்று. இரவில் 5 மணி நேரம் தூங்குங்கள். மதியம் அரை மணி நேரம் குட்டித்தூக்கம் போடுங்கள். இது தொடர்ந்து கவனம் செலுத்துவதற்கு உதவியாக இருக்கும்.

எண்ணெய் உணவுகளை அதிகம் சாப்பிட்டால் மந்தம் ஏற்படும். அதனால் எண்ணெய் பொருட்களை மிக குறைவாக சாப்பிடுங்கள். ஹோட்டல் உணவுகள், ஃபாஸ்ட் புட் உணவுகளை அறவே தவிர்த்து விடுங்கள். தூங்காமல் படிப்பதற்கு அடிக்கடி டீ, காபி அதிகம் குடிப்பீர்கள், இதனால் சுறுசுறுப்பு ஏற்படும். அதே நேரத்தில் உடலில் பித்தத்தை அதிகப்படுத்தி விடும். குறைவாக டீ, காபி குடிப்பது நல்லது. இதைவிட சூடான பால் குடிப்பது சிறந்தது. பகல் நேரங்களில் மோர், இளநீர், பழச்சாறுகள் அவரவர் வசதிக்கேற்றவாறு குடிக்கலாம். நொறுக்குத்தீனி எதுவும் சாப்பிடாதீர்கள். எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை மிதமான அளவில் நேரத்திற்கு சாப்பிட்டு விடுங்கள்.

நினைவாற்றல் பெருக:

மனிதர்களின் மூளை சிறியது இது முன்னூறு கோடி நரம்பு செல்களை கொண்டது. நமது மூளையில் உள்ள 'கார்டெக்ஸ்' என்ற பகுதி நாம் கேட்கும் ஒலி, பார்க்கும் ஒளி, நுகரும் மணம், நாவின் சுவை இவைகளை ஆய்வு செய்த பின் நம்மை உணரச் செய்கிறது. தேவையானால் பதிவு செய்தும் வைத்துக்கொள்கிறது. இப்படி பார்க்கும், கேட்கும், உணரும், அறியும் விஷயங்களை ஒன்று சேர்த்து மூளையில் பதிவு செய்வதுதான் 'நினைவாற்றல்' என்பது. வகுப்பில் ஆசிரியர் பாடங்கள் நடத்தும்போது அதிக கவனம் செலுத்தி நம் மனதில் தேவையற்ற கவனச்சிதறல்கள் ஏற்படுவதை தவிர்த்துக் கொண்டு உன்னிப்பாக கவனித்து மனதில் உள்வாங்கிக்கொண்டால் இன்ஷாஅல்லாஹ் பலன் அளிக்கும். இப்படி பாடங்களை மனதில் பதிய வைத்து மீண்டும், மீண்டும் பாடங்களை படிக்கும்பொழுது நம் மனதில் மறந்து போகாத அளவுக்கு பதிந்து விடும்.

நம்முடைய கவனத்தை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி கவனமாக படித்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மாணவ மாணவியர்களே! நீங்கள் படிக்கும் பாடங்களை ஆர்வத்துடன் கவனித்து நீங்கள் என்னவாக வர வேண்டும் என்பதை டாக்டர், இன்ஜீனியர், ஆசிரியர், வக்கீல் இப்படி எந்த துறையை விரும்புகிறீர்களோ அதை அடிக்கடி மனதில் நினைத்து மிக ஆர்வத்துடன் படிக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக பருக வேண்டும். நீர்தான் உலகில் உயிர் வாழ முக்கியம். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள நீர் அதிகம் தேவை. உடல் குளிர்ச்சியாய் இருக்கும்பொழுது கவனம் மிக சுலபமாகி விடும்.

நினைவாற்றலுக்கு கை கொடுக்கும் உணவு

மூளை நரம்பில் நியூரான் என்ற செல் உள்ளது. இந்த செல்தான் கேட்பது, பார்ப்பது, உணர்வது போன்றவற்றை ஒருங்கிணைக்கும். இதற்கு பி1 வைட்டமின் தேவை. இதில் உள்ள தியாமின் என்ற புரதம் நினைவாற்றல் பெருக உதவி செய்கிறது. தியாமின் குறைபாடு ஏற்பட்டால் நினைவாற்றலில் குறை ஏற்படும். அதனால் தியாமின் அதிகமுள்ள கோதுமை, கடலை, தானியங்கள், பச்சைபட்டாணி, சோயாபீன்ஸ் போன்றவைகளை அதிகம் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பழங்களையும் அதிக அளவு சாப்பிட வேண்டும்.(எங்க உம்மாவே காய்கறி சாப்பிடமாட்டார்கள் எனக்கு எப்படி இதையெல்லாம் தருவார்கள் என்று நினைக்க வேண்டாம் - உம்மாவிடம் அவசியத்தை எடுத்து கூறுங்கள்). உணவுதான் இயற்கை மருந்து முடிந்தளவு அவரவர் வசதிக்கேற்றவாறு தியாமின் உணவுகளை சாப்பிட முயற்சித்தால் மூளையின் சக்தி குறையாது. நினைவாற்றலும் பெருகும். தங்களால் முடிந்தவரை பின்பற்றுங்கள்.
(வைத்தியனிடம் கொடுக்கும் பணத்தை வாணிபனிடம் (அரிசி,மளிகைபொருட்கள், காய்கறி, பழங்கள் விற்பவர்)கொண்டு போய் கொடுத்து ஆரோக்கியமாக இருங்கள் என்பது பழமொழி).

மேலும் : ‘‘ ரப்பி ஜித்னி இல்மா ’’ ‘‘இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக! ’’ (அல்குர்ஆன் : 20:114) என்று அடிக்கடி பிரார்த்தனை செய்து வாருங்கள்.

மனதை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்:

மாணவ மாணவியரின் மனது ஷைத்தானின் ஆதிக்கமான தொலைக்காட்சியின் மீது ஒன்றி விட்டது. இந்த தொலைக்காட்சிகள் சமூக நலனில் அக்கரை கொண்டு செயல்படவில்லை. பணத்தை குறிக்கோளாக கொண்டு தன்னை, தன் குடும்பத்தை வளப்படுத்திக்கொள்ள மட்டுமே என்று செயல்படுகிறது. அதனால் இதன் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுங்கள். கடந்த காலங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவியரிடம் தங்களின் அதிக மதிப்பெண்ணுக்கும் பரீட்சையில் பெற்றி பெறவும் உதவியாக இருந்த காரியங்களை பற்றி கூறுங்கள் என்று கேட்டபொழுது படித்ததை அனைத்தையும் எழுதிப்பார்ப்பது எங்கள் கட்டாய பழக்கம் என்றார்கள். மேலும் 9ஆம் வகுப்பு முதல் எங்கள் வீட்டில் கேபிள் டிவியை கட் செய்து விட்டோம். பரீட்சைக்கு 4 மாதங்களுக்கு முன்பே கேபிள் டிவியை கட் செய்து விட்டோம் என்று சொன்னார்கள். வாழ்க்கைக்கு எந்த வகையிலும் உதவி செய்யாத காட்சிகளைத்தான் இந்த தொலைக்காட்சிகள் காட்டுகின்றன என்பதை புரிந்து கொள்ளுங்கள். சிறந்த முறையில் படித்து முன்னேற்றம் அடைவதே உங்களுடைய முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
அதோடு தாங்களும் தன்னிறைவு பெற்று இந்த சமுதாயத்தில் வீழ்ந்து கிடப்பவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று அடிக்கடி மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் ஒரு லட்சியம் இருக்க வேண்டும். கல்வி பலவிதங்களிலும் எட்டாத சமுதாயத்தில் இருக்கிறோம். நாம் சிறப்பான முறையில் படித்து வெளி வந்து மற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு இருங்கள். எக்காரணத்தை கொண்டும் தாழ்வு மனப்பான்மைக்கு இடம் கொடுத்து விடாதீர்கள். எனக்கு மறதி இருக்கிறதே என்று கலங்கி நின்று விடாதீர்கள். தாழ்வு மனப்பான்மையோடு இருந்தால் எந்தக் காரியத்திலும் வெற்றி கிட்டாது. என்னால் முடியும் எனக்கு இறைவன் உதவி செய்வான் என்ற தன்னம்பிக்கையை அதிகம் வளர்த்துக்கொள்ளுங்கள். இறைவனின் உதவி கிடைக்க தினமும் பிரார்த்தனை செய்து வாருங்கள். வல்ல அல்லாஹ் உதவி செய்வான். மேலும் படிப்பின் மேல் தாங்கள் செலுத்தும் ஆர்வமும், கவனமும் கைகொடுக்கும்.

பரீட்சைக்கு செல்வதற்கு முன்:

பரீட்சைக்கு முன் தினம் அதிக நேரம் விழித்திருக்க வேண்டாம். விடியல் காலை 4 மணிக்கு எழுந்து குளித்து தொழுது இறைவனிடம் உதவி தேடிய பிறகு அன்றைய தினத்தின் பரீட்சைக்கான பாடத்தை மீண்டும் படியுங்கள். மிதமான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். வயிறு முட்ட சாப்பிட்டால் தூக்கம் வரும். வீட்டை விட்டு கிளம்பும் முன் 2 ரக்காஅத் தொழுது பிரார்த்தனை செய்து விட்டு கிளம்புங்கள். சுத்தமான உடை அணிந்து கொள்ளுங்கள். பள்ளிக்கு அரைமணி நேரம் முன்னதாக சென்று விடுங்கள். இது தேவையற்ற பதற்றத்தை உண்டாக்காது. பேனா, பென்சில், ரப்பர் எவையெல்லாம் தேவையோ அவைகளை ஒவ்வொன்றிலும் இரண்டு வைத்திருப்பது நல்லது. மேலும் பரீட்சை ஹால் நுழைவுச் சீட்டு, பரீட்சைக்கான அனைத்து பொருட்களையும், தங்களின் ட்ரெஸ்ஸையும் முதல் நாள் இரவே தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். பரீட்சைக்கு புறப்படும் நேரத்தில் பொருள்களை காணவில்லை என்று தேடிக் கொண்டு இருந்தால் டென்ஷனாகி வீட்டில் பெற்றோரிடமும் திட்டு வாங்கி பரீட்சையில் கவனக்குறைவை ஏற்படுத்தும்.

பரீட்சை ஹாலில்:

பரீட்சை பேப்பர் வாங்கியவுடன் முதலில் தேர்வின் எண், பெயர், பாடம், நாள் இவைகளை தெளிவாக பேப்பரில் எழுதி விடுங்கள். பிறகு கேள்வித்தாளை வாங்கியவுடன் பதற்றபடாமல் விடை தெரிந்த கேள்விகளை டிக் செய்து கொள்ளுங்கள். பிஸ்மில்லாஹ் சொல்லி முதலில் தெரிந்த கேள்விகளுக்கு கேள்வித்தாளில் உள்ள எண்களை கவனமாக பேப்பரில் எழுதி கையெழுத்து அடித்தல், திருத்தல் இல்லாமல் அழகான முறையில் பதிலை எழுதுங்கள். பிறகு தெரியாத கேள்விகளை யோசித்து எழுதுங்கள். எல்லாம் எழுதி முடித்த பிறகு அண்டர்லைன் இட வேண்டிய இடங்களில் அண்டர்லைன் போடுங்கள். பெல் அடிக்கும் வரை ஹாலில் இருந்து மீண்டும் மீண்டும் கேள்வித்தாளையும் எழுதிய பேப்பரையும் படித்து பாருங்கள். விட்ட கேள்விகளுக்கும் பதில் ஞாபகம் வரும். தவறாக எழுதி இருந்தால் திருத்திக் கொள்ளலாம். பெல் அடிப்பதற்கு முன் பேப்பரை கொடுத்து விடாதீர்கள். பரீட்சை முடிந்து வெளியே வந்தவுடன் விடுபட்ட போன கேள்விகளுக்கு பதில் ஞாபகம் வந்து எழுதாமல் போய் விட்டோமே என்ற கவலை தங்களுக்கு வரலாம். அப்படி வந்தால் கவலையை தூர எறிந்து விட்டு வல்ல அல்லாஹ் போதுமானவன் என்ற நினைப்புடன் அடுத்த பரீட்சைக்கு தங்களை தயார்படுத்துங்கள்.

பெற்றோர்களின் உதவி:

தங்கள் பிள்ளைகள் படிப்பதற்கு வீட்டின் சூழ்நிலைகளை அமைதியாக்கிக்கொடுங்கள். தாங்கள் செய்ய வேண்டிய உதவிகள் அதிக அளவு அவர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்க வேண்டும். மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பேசாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமையை வல்ல அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அதனால் வல்ல அல்லாஹ் மேல் பாரத்தை போட்டு விட்டு நாம் படித்தோமா? நம் பிள்ளை படிப்பதற்கு என்று சும்மா இருந்து விடாமல் உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யுங்கள். நம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து விட்டுத்தான் வல்ல அல்லாஹ் மேல் பொறுப்பு சாட்ட வேண்டும்.

எழுத்துப்பயிற்சி:

மாணவ, மாணவியர்களே! நீங்கள் எழுத்துப்பயிற்சியில்தான் கவனக்குறைவாக இருக்கிறீர்கள். அதனால் மீண்டும் உங்களை வலியுறுத்துகிறேன். நாம் மனப்பாடம் செய்வதை தேர்வில் ஒப்பிக்க போவதில்லை. பேப்பரில்தான் எழுதுகிறோம். ஆகையால் படிப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் அதிகமாக எழுதி பார்ப்பதற்கு கொடுக்க வேண்டும். அதனால் படித்ததை எழுதிப் பார்ப்பதுதான் சிறந்தது. எழுதுவது வீண் வேலை என்று இருந்து விடாதீர்கள். எழுத அவசியம் முயற்சி செய்யுங்கள். (ஆரம்பத்தில் சிரமமாகத்தோன்றும், பிறகு சுலபமாகிவிடும்). நல்ல பலன் கிடைப்பதை உணர்வீர்கள். எழுதியதை வீட்டில் உள்ளவர்களிடம் அல்லது நண்பர்களிடம் கொடுத்து திருத்தச்சொல்லுங்கள். யாரும் கிடைக்காத நேரத்தில் தாங்களே திருத்திக்கொள்ளுங்கள். மாணவ, மாணவியரே வல்ல அல்லாஹ்வின் மேல் நம்பிக்கை வைத்து, தன்னம்பிக்கையுடன் படியுங்கள். தாங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் : 58:11)

S.அலாவுதீன்

குறிப்பு : கடந்த வருடங்களில் நான்கு பக்கத்தில் தரமான காகித்தில் அச்சடித்து அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும், பள்ளி, மற்றும் வீடுகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டது அதேபோல் இவ்வருடமும் இதனை பிரசுரமாக வினியோகிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

புள்ளையலுவோ பரீட்சைக்கு படிக்குதுவோமா ! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | February 22, 2015 | , , , , ,


ஊட்டு பிள்ளைகளை நன்கு படிக்க விடுங்கள் / தூண்டுங்கள்....

மாணவ, மாணவியர்களுக்குத்தான் எல்லாரும் தன்னால் இயன்ற அறிவுரைகளையும் கடந்த கால நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு வழங்கி வருகிறோம். ஆனால் அதற்கு முன் அவர்கள் எவ்வித தொந்தரவும், தொல்லைகளும், தடைகளுமின்றி தன் தேர்வை நல்லபடி எழுதி முடிக்க வீட்டில் உள்ள அப்பா, பெரியம்மா, வாப்பா, உம்மா, ராத்தா, தங்கை, தம்பி, தங்கிச்சிமார்கள் அவர்களுக்கு உறுதுணையாகவும், உதவியாகவும் தேர்வுகள் முடியும் வரை எவ்வித தொந்தரவும் செய்யாதவர்களாகவும் இருத்தல் மிக,மிக அவசியமான ஒன்று. 

கீழே குறிப்பிட்ட படி தொந்தரவுகள் செய்யக்கூடாது.

* தம்பி செத்த கடெக்கி போயி சாமானுவொ கொஞ்சம் வாங்கிட்டு வர்ரியா?

* போனு பண்ணியும் வரலெ செக்கடிமோட்லெ போயி ஆட்டோ புடிச்சிட்டு வர்ரியா புள்ளெ பெத்த ஊட்டுக்கு சீனி வாங்கிட்டு போகனும்?

* வாப்பா வெளியெ போயிட்டாஹ, கொஞ்சம் கூப்பன் கடையிலெ சாமான் வாங்கி தர்றியா?

* ராத்தாக்கு ஒடம்பு சரியில்லெ ஆஸ்பத்திரி வரைக்கும் தொணைக்கி வர்றியா? (அமெரிக்காவரைக்கும் தனியா போயிட்டு வரத்தெரியுது?)

* வண்ணான்ட்டெ துணி போட்டிக்கிறேன் கொஞ்சம் வாங்கித்தந்துர்ம்மா வாப்பா?

* ஊட்லெ வேலெ செய்றவ இன்னிக்கி பாத்து லீவு போட்டுட்டா கொஞ்சம் கடெத்தெருவுக்கு போயி மீனு வாங்கி தர்றியா?

* மாமா ஊடு குடி போறாஹ, காலைப்பசியாற போயிட்டு வந்துரு போவாட்டி கோவிச்சிக்கிடுவாஹ. (பரிச்சையிலெ ஃபெயிலாப்போனா கோவிச்சிக்கிட மாட்டாஹளா?)

* ராத்தாடெ புள்ளெயெ தூக்கிட்டு போயி சங்கத்துலெ போலியோ சொட்டு மருந்து கொடுக்குறாஹெ போயி போட்டுட்டு வந்துர்மா வாப்பா?

* வர்ர வழியிலெ தங்கச்சி பென்சிலும், அலி லப்பரும் வாங்கி கேட்டா வாங்கிட்டு வந்துர்ம்மா மறந்துராமெ?

* தஞ்சாவூர்லெ எக்ஸ்பிசன் போட்டிக்கிறானுவொ ராத்தம்மாவூட்லெ எல்லாரும் காரு புடிச்சி போறாஹ நாமலும் போயிட்டு வருவோம் அங்கெ சாமானுவொ வெலெ கொறஞ்சி விக்கிம் வாடா போயிட்டு வந்துர்லாம்?

* பைப்பு ஒடஞ்சி போச்சி போயி கபீராக்கா மொவனெ கூட்டிக்கிட்டு வர்றியா?

* தையல்காரன்ட்டெ துணி தக்கெ கொடுத்து பத்து நாளாச்சி. போயி வாங்கிட்டு வந்துர்றியா?

* பஞ்சாயத்து போர்ட்லேர்ந்து வந்து மைக்குலெ சொல்லிட்டு போயிட்டாங்க, செத்த அங்கெ போயி தண்ணி பில்லும், ஊட்டு வரியும் கட்டிட்டு வந்துர்ம்மா வாப்பா? (பரிச்சையிலெ ஃபெயிலா போயிட்டா ஹாஜி முஹம்மது சாரு அடிப்பாருண்டு யான் அவ்வொளுக்கு தெரியமாட்டிக்கிது?)

* நாளையோட கெரண்டு பில்லு கட்ட கடைசி நாளு, இன்னெக்கி எப்புடியாவது கட்டிட்டு வந்துரும்மா? இல்லாட்டி அபராதம் போடுவாஹ. (பரிச்சையிலெ ஃபையிலா போயிட்டா வாழ்க்கையே அபராதமா போயிடும்ண்டு அவ்வொளுக்கு தெரியாதா?) கெரண்ட்டே இருக்கிறது இல்லெ...இதுலெ பில்லு வெற கட்டணுமாக்கும்? என்று அவன் முணங்குவது எல்லோர் காதுகளுக்கும் நிச்சயம் கேட்கும் என்று நெனெக்கிறேன்.

* கெரண்டு அடிக்கடி போறதுனாலெ தண்ணி மோட்டாரும் காயிலு அடிவாங்கி வீணாப்போச்சி, செத்த மோட்ரு எசவு பண்ரவனெ கூட்டிக்கிட்டு வர்றியா?

* ஊட்லெ நெத்தா உழுந்துக்கிட்டு ஈக்கிது, தேங்காய்ப்பறிக்கிறதுக்கு ஊடு, ஊடா வந்துக்கிட்டு ஈந்த அந்த ஆளும் செத்துப்போயிட்டானாம். கொஞ்சம் சேர்மாவாடியிலெ காலையிலெ சுபோடெ போயி ஆளு நிக்கிம் கூட்டிக்கிட்டு வந்துர்றியா? தேங்காய் இல்லாததுனாலெ அடுத்த ஊட்லெ கடன் வங்கனுமா ஈக்கிது? (சுபோடெ படிக்கனும்ண்டு நெனெக்காம தேங்காய் ஞாபகத்துலேயே புள்ளெ படுக்குறதுனாலெ ராத்திரி கனவுல கூட தேங்காய் கொலையா வந்துட்டு போவும்)

* வர்ர வழியிலெ மீரா மெடிக்கல்லெ கொஞ்சம் மாத்திரெ வாங்கிட்டு வந்துரு? பட்டுக்கோட்டையிலெயே நேத்து கெடக்கலெ வாப்பா சொன்னாஹெ. 

* மொபைல்லெ காசு முடிஞ்சி போச்சி (கதகதையா அளந்தா வேற என்னா செய்யிம்?) கடெத்தெருவுலெ மீனு வாங்கிட்டு வரும் போது நூறு ரூபாக்கி ஈ.ஸி. போட்டுட்டு வந்துரு மறந்துராமெ?

* சத்துக்கொறவா ஈக்கிது ஆட்டுக்காலு சூப்பு வச்சி தர்ரேன். கறிக்கடையிலெ கொஞ்சம் நெஞ்செலும்பும், காலும் வாங்கிட்டு வந்துரு.

* இன்வன்டரு பேட்டரி சர்வீஸ் பண்ண ஊட்டுக்கு ஆளு வரும் போன் பண்ணுனானுவொ வந்தா கொஞ்சம் கூட இருந்து பாத்துக்கோ.

* பேரனுக்கு (ராத்தா மொவன்) நாளெக்கு பள்ளிக்கொடத்துலெ ஆண்டு விழாவாம். அவனுக்கு அதுலெ கலந்துக்கிறதுக்கு கொஞ்சம் சாமானுவொ வேனும்ண்டு டீச்சர் சொல்லி அனுப்பி ஈக்கிறாஹெ. அந்த சாமான்வொலெ கொஞ்சம் மெயின் ரோட்ல உள்ள கடையிலெ போயி வாங்கி தந்துரும்மா வாப்பா.

* பெரியம்மாவுக்கு ஒரே ஓங்காரமா ஈக்கிது கொஞ்சம் நாட்டு மருந்து கடெயிலெ போயி கொஞ்சம் சாமானுவொ வாங்கிட்டு வா. அவ்வொளுக்கு குடிநி போட்டு கொடுத்தா நல்லாப்போயிடும்.

இப்படி படிப்பைத்தவிர ஏஹப்பட்ட வேலைகளை அவர்கள் மேல் அசராமல் ஏவி விட்டு தேர்வுக்கு தயாராகும் உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கும், அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் நீங்களே எதிரியாக அவர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள்.

கடெசியிலெ, அல்லாஹ் இந்த புள்ளையலுவொலெ நல்லா படிக்க வச்சி, பாஸாக்கி, வாப்பா மாரி கஸ்டப்படாமெ, பெரிய உத்யோகத்துக்கு போயி ஊட்டு கஸ்டமெல்லாம் தீரட்டும் என்று து'ஆ மட்டும் செய்ய மறக்கிறது இல்லெ.....

பரிச்சையிலெ புள்ளையலுவொ ஃபெயிலாப்போனாலோ அல்லது மார்க்கு கொறச்சி வாங்குனாலோ அது தெரிஞ்சா மொதல்ல அப்பா உங்களத்தான் ஏசுவாஹ....புள்ளையலுவொலெ இல்லெ.....தெரிஞ்சிக்கிடுங்க....ஊட்டு புள்ளையலுவொலெ  செரமம் கொடுக்காம நல்லா படிக்க வைங்க...பிறகு அதன் பலாபலன்களை நீங்களும் அனுபவிப்பீங்க......இன்ஷா அல்லாஹ்...

பரீட்சை எழுதின மாதிரி ஒரே டயர்டா ஈக்கிது.... தேத்தண்ணி குடிக்கனும்... வரட்டா....

மு.செ.மு. நெய்னா முஹம்மது

நேற்று ! இன்று ! நாளை ! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | February 21, 2015 | , , , , , ,

இரண்டாம் பாகம் : பகுதி ஒன்று.
அன்பானவர்களே!

முகமன் கூறி மகிழ்கிறோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி. இதற்கு முன் இதே தலைப்பில் பல அரசியல் நிகழ்கால சம்பவங்கள் ஆகியவற்றை விளக்கமாகவும் விமர்சனமாகவும் எழுதிக் கொண்டிருந்தோம். மோதலோடு காதல் கொண்ட சோதரர்களுடன் ஏற்பட்ட ஒரு துரதிஷ்டவசமான கருத்து மோதல் எல்லாம் அந்த எழுத்துத் தொடருக்கு இடையிலே ஏற்பட்ட எங்களால் மறக்க இயலாத சம்பவம். 

இப்போது நாட்டில், வளமும் பொருளாதார வளர்ச்சியும் வளர்ந்திருக்கிறதோ இல்லையோ நகைச்சுவை உணர்வு வளர்ந்திருப்பதைப்  பார்க்கலாம். நாட்டை ஆளும் பொறுப்புக்கு வந்திருப்பவர்களிடமும் அவர்களைச் சார்ந்தோர்களிடமும் இந்த நகைச்சுவை உணர்வு மேலோங்கி இருப்பதை பலரின் பேச்சுக்கள் மூலம் நாம் அன்றாடம் அறியலாம். அந்த வகையில் இந்தத் தொடர், பத்திரிகை இலக்கணத்தில் Satire என்று சொல்லப்படும் முறையில், அதாவது தமிழில் அங்கதம் என்கிற இலக்கண வகையில் பகிரப்படுமென்பதை ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறோம். நையாண்டி கலந்த விமர்சனங்கள் மற்றும் விளக்கங்கள் நிறையவே இருக்குமென்று சொல்லலாம். ஆனால் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் தோண்டிப் பார்ப்போமே தவிர, நோண்டிப் பார்க்க மாட்டோம். யார் மனமும் புண்படாமல் நடப்புகளை நகைச்சுவையுடன் சொல்வதே எமது நோக்கம். சிரிப்பு வந்தால் சிரிக்கலாம்; சிந்திக்கத் தெரிந்தால் சிந்திக்கலாம்; வழக்கம்போல் நிந்திப்பவர்கள் நிந்திக்கலாம். புழுதிவாரித் தூற்றினாலும் ஏற்றதொரு கருத்தை எடுத்தியம்புவோம். 

இந்த வாரம், ஜனநாயகம் என்கிற ஒரு உயர்ந்த கோட்பாடு படும் நாய்படாத பாட்டைப் பற்றிப் பார்க்கலாம். 

இப்போது நாட்டில் - அதுவும் தமிழ்நாட்டில் அடிபட்டு, பின்புறத்தைத் தடவிக் கொண்டே ஓடிக்கொண்டு இருக்கிற ஒரு பரிதாபத்துக்குரிய ஜீவன் ஜனநாயகம்தான். அண்மையில் திருவரங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிகம் அடிபட்ட ஜீவன் அது. ஜனநாயகத்தை, ஆளுக்கொரு தடிகொண்டு அவரவர் சக்திக்கேற்ப கதறக் கதற அடித்தவர்கள் மாநிலத்தை ஆளும் கட்சியினர் மட்டுமல்ல; மாநிலத்தை ஆண்ட கட்சியினரும் மத்தியில் ஆளும் கட்சியினரும்தான். 

ஜனநாயக முறையில் நடைபெற்ற இடைத்தேர்தல் என்பது பெயரளவுக்குத்தான். ஆனால் ஜனநாயகத்துக்கு விரோதமான அத்தனை செயல்களும் அங்கே அரங்கேறின . முதலாவது அந்த இடைத் தேர்தல், ஒரு திணிக்கப்பட்ட இடைத்தேர்தல் என்பதை விளக்க வேண்டியதில்லை. ஒரு மாநிலத்தின் முதல்வரைத் தேர்ந்தெடுத்த தொகுதியில் அந்த மாநில முதல்வரின் மீது பதினெட்டு ஆண்டுகள் வழக்கு நடைபெற்று அதில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் நூறு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு அவரது பதவி பறிக்கப்பட்டதால் நடைபெற்ற தேர்தல்தான் திருவரங்கத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல் என்பது நம் அனைவருக்கும் தெரியும். 

உண்மையான ஜனநாயகத்தை செயல்பட விட்டிருந்தால் நியாயமாக இந்தத் தேர்தலின் தீர்ப்பு எப்படி வந்திருக்க வேண்டும்? ஆனால் எப்படி வந்துள்ளது? இப்போது வென்று இருப்பவர் முன்னாள் முதல்வர் பெற்ற வாக்குகளைவிட இரண்டு மடங்கு வாக்குகள் அதிகமாக வாங்கி வெற்றி பெற்று இருக்கிறாரே! அப்படியானால் முன்னாள் முதல்வரை விட இப்போது வென்று இருப்பவர் பெரிய படிப்பாளியா? திறமைசாலியா? மக்கள் செல்வாக்குப் பெற்றவரா? நிர்வாகம் தெரிந்தவரா? அனுபவசாலியா? இருபத்தெட்டு வேட்பாளர்களைத் தோற்கடித்து , வென்றவர் வளர்மதிதானே தவிர, அவ்வளவாக மதி  வளர்ந்தவரல்ல. 

அது போகட்டும் . வென்ற கட்சி மட்டுமென்ன தனது நான்காண்டு கால மாநில ஆட்சியில் மக்கள் நலப்பணிகளில் கவனம் செலுத்தி மாநிலத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக்குவோம் என்ற தனது தேர்தல் கால கோஷத்தை செயல்படுத்திய கட்சியா? 

பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் மதுக்கடைகள் . மதுக் கடைகளின் வாசலில் பட்டப்பகலில் மண்ணில் வீழ்ந்து கிடக்கும் மண்ணின் மைந்தர்கள் ,

கிரானைட் மற்றும் தாது மணல் கொள்ளைகள் இவற்றின் மூலம் இமாலயத்தின் கின்ஜன் ஜங்கா உயரத்துக்கு ஊழல் முறைகேடுகள் , 

அன்றாடம் கொலை, கொள்ளைகள், கற்பழிப்பு, முதியோர்களை கன்னி வைத்துக் கொலை செய்யும் கூட்டங்களின் வளர்ச்சி, சங்கிலித் தொடர் சங்கிலி பறிப்பு நிகழ்வுகள் , 

78 ஆயிரம் கோடிக்கு மேல் அரசு செலுத்த வேண்டிய வரலாற்றில் இடம்பெறும் கடன் சுமைகள்,

அமைச்சர்கள் , அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பந்தாடப்பட்டு பயமுறுத்தப்பட்டு நிர்வாகத்தில் நீதி செலுத்த முடியாத நிலைகள், 

இரண்டாயிரம் ஆரம்பப்பள்ளிகளை மூடிய நிகழ்வுகள் காரணமாக தனியாருடைய கல்விக் கொள்ளைக்கு கதவைத் திறந்துவிட்ட காட்சிகள், 

எதிர்க்கட்சிகளை சட்டமன்றத்தில் பேசவிடாமல் முடக்கிப் போடுவது , சீண்டி விடுவது  அல்லது வெளியேற்றும் வேடிக்கைகள்,

மக்கள் மன்றத்தில் , எதிர்க் கட்சிகள் ஆளும்கட்சியை விமர்சித்துப் பேசினால் புற்றீசல் போல புறப்பட்டுவரும் அவதூறு வழக்குகள், 

முந்தைய திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒற்றைக் காரணத்துக்காகவே, ஆசியாவிலேயே மிகப்பெரிய அண்ணா நூல்நிலையத்தை முடக்கிப் போட்டத்துடன், அந்த நூல் நிலையத்தில்       சேகரிக்கப்பட்டிருந்த கிடைப்பதற்கரிய சொத்துக்களான நூல்களைத் தூக்கிப் பரண் மேல் போட்டது, 

அதே போல மக்களின் பலகோடி ரூபாயில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை முடக்கிப் போட்டது, 

செம்மொழிப் பூங்காவை செயலிழக்க வைத்ததுடன் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலும் கை வைத்து மக்களைத் திண்டாட வைத்தது, 

காலில் விழும் கலாச்சாரம், தனிமனித வழிபாடு, நீதிமன்றம் தண்டித்தவரின் உருவப்படத்தை அரசு அலுவலகங்களிலும் அரசு விழாக்களில் வரும் ஊர்திகளிலும் தைரியமாக வைத்து, மரபுகளை மண்ணைத் தோண்டிப் புதைத்தது, 

முதியோர் ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்திவைத்து அனாதைகளான முதியோர்களை பிச்சைக்காரர்களாக அலையவிட்டது, 

மின்சாரவெட்டு காரணமாக சிறு குறுந்தொழில்களின் முடக்கம், பெருந்தொழில்கள் எதுவும் தொடங்காமை, இயங்கிக் கொண்டிருக்கும் நோக்கியா முதலிய தொழில்களும் மூடப்பட்டதை பார்த்தும் வாயை மூடிக் கொண்டிருந்தது, 

சத்துணவில் பல்சுவை உணவு தருகிறோம் என்று அதற்காக ஒதுக்கிய 103 கோடி ரூபாய் என்கிற முழுப் பூசணிக்காய் சோற்றில் மறைக்கப்பட்ட மாயம், 

சாதாரண மக்கள் பயன்படுத்தும் ரேஷன் கார்டுகளில் கூட கடந்த இரண்டு வருடங்களாக உள்தாள் மட்டுமே ஒட்டப்படும் நிர்வாகக் குறைபாடுகள், 

கிட்டத்தட்ட 127733 கோடி ரூபாய் அளவுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக 110 விதியின் கீழ் நற்பணி அறிவிப்புகளை மட்டும் கரவொலிகளுக்கு இடையே அறிவித்துவிட்டு பிறகு அவற்றைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் விட்டுவைத்து இருப்பது, 

தயாராக இருக்கும் மெட்ரோ இரயில் திட்டத்தை பெங்களூரில் விழுந்த இடி காரணமாக, இன்னும் தொடங்கி வைக்காமலிருப்பது,  

போக்குவரத்துத் துறைத் தொழிலாளர்களுக்குத் தரவேண்டிய நிலுவைத்தொகை, PF, பணிக்கொடை போன்றவற்றைத் தராமல் இன்னும் நிறுத்தி வைத்திருப்பது, 

இப்படி இந்தக் குறைகளின் பட்டியல் இன்னும் நீண்டுகொண்டே போகும். மொத்தத்தில் தமிழ்நாட்டில் பிரச்னை இல்லாத மாவட்டங்களே இல்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் தாதுமணல் மற்றும் அணுஉலை பிரச்னை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு பிரச்னை, இராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர் பிரச்னை, தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ பிரச்னை, மதுரையில் கிரேனைடு பிரச்னை, சென்னை மற்றும் இதர மாநகரங்களில் சட்ட ஒழுங்கு பிரச்னை என தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று இருக்கிறதா- அரசு இயந்திரம் இயங்குகிறதா? முதலமைச்சர் என்ற ஒருவர் இருக்கிறாரா என்ற கேள்வியை நடுநிலையாளர்களின் மத்தியில் கிளப்பி விட்டு விட்டு இருக்கிறது. 

இந்த நிலையில், திருவரங்கம் இடைத்தேர்தல் வெற்றி, இந்த ஆட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்றிதழ் என்று அமைச்சரவை மட்டுமல்ல ஆளுநர் உரையும் சொந்தம் கொண்டாடுவதைப் பார்க்கும் போது, ‘சிரிப்புத்தான் வருகுதைய்யா உலகைக் கண்டால் சிரிப்புத்தான் வருகுதைய்யா’    என்றுதான் பாடத் தோன்றுகிறது. 

நாம் மேலே பட்டியலிட்ட இந்த ஆட்சியின் குறைபாடுகள் அனைத்தையும் மக்கள் அறியாமலா வாக்களித்தார்கள்? இல்லை. அறிந்து இருக்கிறார்கள்; பொது இடங்களில் இவை பற்றி விவாதித்தார்கள்; ஆட்சியின் குறைகள் அனைத்தையும் விமர்சித்தார்கள். ஆனால் எல்லா விமர்சனங்களுக்கும் ஒரு சர்வரோக நிவாரணி இருக்கிறது. அந்த நிவாரணி, பாதாளம் வரை பாயும்; பத்தும் செய்யும். அவலமான ஆட்சிக்கு மக்கள் வழங்கியுள்ள வெற்றி மனப்பூர்வமானதா ? பணப் பூர்வமானதா?

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்பது எல்லா இடைத்தேர்தல்களிலும் நிருபிக்கப்பட்டு இருக்கிறது. அதிகாரம் , பணப்பட்டுவாடா , அமைச்சர்களின் தலையீடுகள் ஆகிய அத்துமீறல்களின் முன் நீதியும் நியாயமும் மனசாட்சியும் மண்டியிட்டு ஜனநாயகத்தை மரணப்படுக்கையில் தள்ளிவிட்டன. 

மக்கள் நினைப்பதை செய்வதுதான் ஜனநாயகம். மக்கள் விருப்பத்தை வாக்குச் சீட்டுகளின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள உதவும் கருவிதான் ஜனநாயகம். ஆனால் இந்த வலிமை வாய்ந்த ஜனநாயகம் இன்று, தன்னலவாதிகளின் அத்துமீறல் அரசியலால், ஒரு குவாட்டர் சாராயத்துக்கும் ஒரு பொட்டலம் பிரியாணிக்கும் போன் ரீசார்ஜுக்கும் சாப்பாட்டு டோக்கனுக்கும் விற்கப்படுகிறது. 

ஆளும் கட்சியினர் பணம் கொடுத்து வாக்குகளை வாங்குகிறார்கள் என்று அவர்களை விரல் நீட்டிக் குற்றம் சொல்லும் தகுதி எதிர்க் கட்சியான திமுகவுக்காவது இருக்கிறதா என்று ஆராய்ந்தால் இந்தத் திட்டத்தை திருமங்கலத்தில் தொடங்கிவைத்தவர்களே அவர்கள்தான் என்கிற கசப்பான உண்மை நமக்கு நினைவுக்கு வருகிறது. இரசாயனத்துக்கும் பெளதீகத்துக்கும் பார்முலா படித்துப் பழக்கப்பட்டவர்கள், திருமங்கலம் பார்முலா என்ற இடைத் தேர்தல் பார்முலா அறிமுகமானபோது அதிர்ந்தார்கள். இப்படிப்பட்ட அரசியல் அத்துமீறலை அறிமுகப்படுத்திய திமுக பாய்ந்த எட்டு அடியை இன்று அதிமுக பதினாறு அடி பாய்கிறது. இதைக் குற்றம் சொல்லும் தகுதி திமுகவுக்கு இருக்கிறதா? இன்று ஆட்சிக் கட்டிலில் திமுக இருந்தாலும் , இதே கதைதான் நடக்கும்; அப்போது அதிமுக அதை எதிர்க்கும். நடிகர்கள்தான் வேறு; ஆனால் கதை ஒன்றுதான். 

மத்தியில் ஆளும் கட்சியாகிவிட்டோம் என்கிற ஒரே மமதையில் திராவிடக் கட்சிகளுக்கு நாங்கள்தான் மாற்று என்று மார்தட்டி சவுண்ட் விட்ட பாஜக வினரும் ஜாமீன் இழந்தார்கள். ஆனால் அந்தக் கட்சியின் தேசிய செயலாளர் குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறார். எச்சங்களையும் உண்மையான மிச்சங்களையும் அவர்கள் பார்க்கப்பழகிக் கொள்ள வேண்டும் என்பது ஒரு புறம்; தமிழ்நாடு என்றைக்கும் பெரியாரின் விழுதுகள் விழுந்த பூமி என்பதையும் அவர்கள் முதலில் உணரவேண்டும்.  

“நீங்கள் அத்தனை பெரும் உத்தமர்தானா சொல்லுங்கள்! – உங்கள் 

ஆசை நெஞ்சை தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள் ! “ என்று கண்ணதாசன் கேட்டது இவர்கள் அனைவரையும்தான். 

நாடு போகும் போக்கில், ஜனநாயகம்படும்பாட்டில் இன்னொரு முறை கண்ணதாசனைத்தான் துணைக்கு அழைக்க வேண்டி இருக்கிறது. 

“கற்பாம் ! மானமாம்! கண்ணகியாம் ! சீதையாம் ! 
கடைத்தெருவில் விற்குதடா! ஐயோ பாவம்! 
காசிருந்தால் வாங்கலாம் ஐயோ பாவம் ! ” 

உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் , ‘செந்தமிழ்நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே’ என்று பாரதியால் பாடப்பட்ட தமிழ்நாட்டில் ஜனநாயகத்தை விலைபோகும் நிலைக்குத் தள்ளிய அத்தனை பேரும் குற்றவாளிகளே!. 

உயர்ந்த சிந்தனைகள், உரத்த கோட்பாடுகள், உயர்ந்த நிலையிலான அரசியல் நிர்ணய முறைகள் உதவாக்கரைகளின் கரங்களில் மாட்டிக் கொண்டு தங்களது மூச்சை விடும் நாளை எதிர் நோக்கிக் கிடக்கின்றன. 

இதற்கு என்னதான் முடிவு? யார்தான் இந்த இக்கட்டிலிருந்து ஜனநாயகத்தை மீட்க முடியும்? விடை ? 

வெகுதூரத்திலாவது ஏதாவது ஒரு சிறு புள்ளியாகவாவது மாற்று அரசியல் என்கிற வெளிச்சம் தெரிகிறதா? தென்படுகிறதா? தேடுவோம்! இன்ஷா அல்லாஹ். 

ஆக்கம்: முத்துப் பேட்டை பகுருதீன். B. Sc; 
கலந்தாய்வு மற்றும் உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)