Showing posts with label இப்ராஹிம் அன்சாரி. Show all posts
Showing posts with label இப்ராஹிம் அன்சாரி. Show all posts

மரம் வளர்ப்பது ஒரு அறம் 9

அதிரைநிருபர் பதிப்பகம் | June 27, 2016 | ,

"ஏம்பா மரம் மாதிரி நிற்கிறே?" என்ற வார்த்தைகள் நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள்தான். ஒன்றும் செயல்படாமல் இருக்கும் மனிதர்களைப் பார்த்துத்தான் இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் உண்மையில் அந்த வார்த்தைகளில் பொருள் இருக்கிறதா? மரம் என்றால் அது செயல்படாததா? ஒன்றுக்கும் பயனற்றதா? இப்படி மரத்தைக் கேவலமாக ’எடுத்தெறிந்து‘ பேசுவது சரியான அணுகுமுறைதானா? உண்மையில் மரம் பயனற்றதா? மரம் என்றால் அது வெறும் மரம் மட்டும்தானா?

இந்தக் கேள்விகளை நாம் கேட்டுப் பார்த்தால் , வரும் விடைகள் - பிள்ளைகள் தங்களது தாய் தந்தையர்க்கு சமமாகப் பாவிக்கப்பட வேண்டியவை மரங்கள்; காடுகளில், வீடுகளில், தோட்டங்களில், சாலை ஓரங்களில் இருந்து அன்புப் புரட்சியையும் அமைதிப் புரட்சியையும் அழகாக நிகழ்த்திக் கொண்டிருப்பவை மரங்கள்; ஆன்மீகவாதிகளுக்கும் அறிவியல்வாதிகளுக்கும் அன்றாடங் காய்ச்சிகளுக்கும் கூட ஆறுதலும் அரவணைப்பும் தருவதே மரங்கள் என்ற பதில்கள் கிடைக்கின்றன.

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களால் நல்லவருக்கு உவமையாகக் காட்டப்பட்டது பேரிச்சை மரம். இன்னும் பிற சமயங்களில் புத்தனுக்கு ஞானம் தந்தது போதி மரம் என்றும்; ஆண்டவனின் அற்புதத்தை சொல்வது அரசமரம்; மேலும் புராணக் கதைகளான இராமாயணத்தில் சீதைக்கு சிறையாய் இருந்தது அசோக வனம். மகாபாரதத்தில் அர்ச்சுனனுக்கு பகவத் கீதை உபதேசிக்கப்பட்டது ஒரு ஆலமரத்தின் அடியில்தான் என்று பிறமதத்தவர்களும் நம்புகிறார்கள்; அத்திமரமும், ஆலிவ் மரமும், செடார் மரமும் இந்து மத வேதங்களிலும் பைபிளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. திருமறை குர்ஆனிலும் இறைவன் இந்த மரங்களின் மீது சத்தியமிட்டு ஒரு அத்தியாயத்தை இறக்கினான். (அத்தியாயம் : 95 அத்-தீன்)


வாழையடி வாழையாக குடும்பம் தழைத்து வாழுங்கள் என்று வாழ்த்தும் மரம் வாழ (வாழை) மரம்; உடலின் உறுதியை உலகுக்கு உரைப்பது தேக்கு மரம்; தேன்காயாக குலைகளைத் தருவது தென்னை மரம் ; பெரிய என்ற பொருள்தருவது பெருந்தமையான மா மரம். 

"தினைத் துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன் தெரிவார்" 

என்று நன்றி உடையோரின் அளவுகோலாக வள்ளுவனால் காட்டப்படுவது பனைமரம். அதே பனை மரம்தான் நிலையற்ற உறவு கொண்டாடுவோரையும் நன்றி கொன்றோர் உறவும் பனை மரத்து நிழலும் ஒன்றுதான் என்றும் காட்டப்படுகிறது.

“பெத்த புள்ளே தராவிட்டாலும் வச்ச புள்ளே தரும்” என்று பெற்று வளர்த்த பிள்ளைகளை விடவும் தென்னை மரங்களை பிள்ளையாகப் பாவித்து நம்பிக்கை வைப்பது நமது பண்பாடு. அதனால்தான் தென்னங்கன்றுகளுக்கு தென்னம் பிள்ளை என்று பெயர். அதுமட்டுமல்லாமல், இள வயது மரங்களை, பசு தான் ஈன்ற ஒரு கன்றுக்கு இணையாக மரக் கன்றாக கருதுவதும் பண்பாடுதான். வளர்ந்து ஆளாகும் வரை பிள்ளைகளைப் பராமரிப்பதுபோல் கன்றுகளையும் பராமரிக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்வதுதான் இதன் நோக்கம்.

மத , இன பேதமின்றி அவரவர் வழிபாட்டுத்தலங்களில் மரம் நட்டு வைப்பது நமது நாட்டின் கலாச்சாரம். அந்நாளில் பல்வேறுபட்ட அரசுகள் தங்களுக்காக எல்லைகளில் காவல் மரங்களை நட்டு வைத்து அடையாளப்படுத்தியதாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. கிராமங்களில் மரத்தடிகள்தான் உச்ச நீதிமன்றமாகவும் உயர்நீதி மன்றமாகவும் இன்றும் திகழ்ந்து வருகின்றன. நாட்டாமையும் சின்னக் கவுண்டர்களும் அங்குதான் உருவாகின்றனர். மரங்கள், வாழ்வோடு இணைந்து இழைந்து இருந்தும் பயன் தருகின்றன; இறந்தும் பயன் படுகின்றன. 

மரங்களை காட்டு மரம், வீட்டு மரம், வழிபாட்டுத்தளங்கள் அல்லது கல்விக் கூடங்களில் வைக்கும் மரம் என மூன்று பிரிவாக பிரித்து வகுத்து உள்ளனர் நமது முன்னோர்கள். உலகில் ஏறத்தாழ ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பல்வேறுவகையான மரங்கள் இருப்பதாக உலக மூலவள ஆதார அமைப்பு (World Resources Institute) கணக்கிட்டுள்ளது. உலகெங்கும் சுமார் 400,246, 300, 201 மரங்கள் இருப்பதாக நாஸா விண்வெளி நிறுவனம் (NASA) கணக்கிட்டுள்ளது.

மரம் நடுவோம் ! மரம் நடுவோம்! என்று அரசுகளும் நல்ல எண்ணம் கொண்ட மனிதர்களும் தங்களின் மார்பில் அடித்துக் கொண்டு கதறக் காரணங்கள் யாவை?

மரங்கள் நிழலைத் தருகின்றன; மரங்கள் மழை மேகங்களை ஈர்த்து மழை பொழிய வைக்கின்றன; மரங்கள் இருக்கும் இடத்துக்கு அழகூட்டுகின்றன. அனைத்துக்கும் மேலாக, மரங்கள் மனித இனம் உயிர் வாழத்தேவையான பிராண வாயு என்கிற ஆக்சிஜனை உற்பத்தி செய்து, மனித இனம் உயிர்வாழத் தேவையற்ற கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சி அழிக்கின்றன.

இன்று உலகமெங்கும் புவி வெப்பமாகிறது என்று ஓங்கி ஒலித்து கதறப்படுகிறது. இதற்குக் காரணங்கள் பல. அவற்றுள் முக்கியமானது – அழைக்கப்பட வேண்டிய காடுகள் அழிக்கப்படுவதுதான். ஊட்டி, கொடைக்கானல் போன்ற கோடை வாசஸ்தலங்களில் கூட குடிநீர்ப் பிரச்னை என்று கேள்விப்படுகிறோம். காரணம், நகர் மயமாகும் நச்சுத் திட்டத்தின்கீழ் அரசியல்வாதிகளாலும் செல்வாக்குப்பெற்றோர்களாளும் வனப்பகுதிகள் கதறக்கதற கசக்கப்பட்டு கற்பழிக்கப்படுவதே. உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதார்நாத் உள்ளிட்ட இயற்கை வளம் சூழ்ந்த பகுதிகளில், சுற்றுச்சூழல் விதிகளை மீறி இயற்கை வளங்களை அழித்து கட்டடங்கள் பெருகியதே அங்கு மண்சரிவு ஏற்பட்டு பேரழிவுக்கு காரணமாக அமைந்தது.

நச்சு வாயுக்களின் வெளியேற்றம் என்பது நகர மயமாக்கல் – பொருளாதார வளர்ச்சி ஆகியவை நமக்குத் தந்த பரிசுகளாகும். கழிவறைகளே இல்லாத வீடுகள் இருந்ததன ஒரு காலம் ; ஆனால் இன்றோ அனைத்து அறைகளிலும் பிரிட்ஜ் முதல் ஏர்கண்டிஷனர் வரை உள்ளீடாக வைத்தே வீடுகள் கட்டப்படுகின்றன. இவைகளுடன் இன்று ஒரு குடும்பத்தில் ஒன்பது வகை இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் இருக்கின்றன. இவைகள் கக்கும் புகைகள் காரணமாக காற்றில் கார்பன் டை ஆக்சைடின் விகித்தாச்சார அளவு அதிகரிக்கிறது. இந்த அத்துமீறலை எதிர்த்து அமைதிப் புரட்சி நடத்துவது மரங்கள் மட்டுமே. ஆக்சிஜனை உற்பத்தி செய்து கார்பன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றின் விகிதாச்சாரத்தை சமன் செய்யும் ஒரு ஆக்சிஜன் மையமாக செயல்பட்டு, காற்றில் தனது தலையை விரித்துப் பேயாடிப் போராடுவது மரங்கள் மட்டுமே.

மரங்களை அழிப்பதே மழை இன்மைக்குக் காரணம் என்று அறியாத பேதையர்கள் கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் செய்து வைக்கிறார்கள்; கோயில்களில் இருக்கும் நந்திகளுக்கு பால் அபிஷேகம், மிளகு அபிஷேகம், நெய்யூற்றி நடத்தும் யாகங்கள், பெண்களின் நடுநிசி நிர்வாண பூஜைகள், முழங்கால் தண்ணீரில் அம்ர்தவர்ஷினி ராகத்தை கழுதையாக கத்துவது, வருண ஜெபம் என்றெல்லாம் இன்றும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. நோய்க்கு மருந்து கொடுப்பதற்கு பதிலாக பேய்க்கு தூபம் போட்டுக் கொண்டிருப்போர் மனித மாமிச மலைகள், மரங்களை வேருடன் பிடுங்கி வீசி எறிவதுதான் முக்கியக் காரணம் என்று எப்போது உணர்வார்களோ அன்றுதான் விடியும்.

அறிவியல் ரீதியாக சில புள்ளி விபரங்களை நாம் பார்ப்போமானால் பயனாக இருக்கும்.

ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள வளர்ந்த மரங்கள் ஒரு வருடத்தில் உள்ளே உறிஞ்சி காற்றை தூய்மைப்படுத்தும் கார்பனின் அளவு, ஒரு வாகனம் 26000 மைல் பயணிப்பதால் வெளியிடும் கார்பன் அளவிற்கு ஈடானதாகும், அதுமட்டுமல்லாமல், 18 மனிதர்கள் ஒரு வருடம் முழுதும் சுவாசிக்க தேவையான ஆக்சிஜனையும் அவை வெளியிடுகின்றன.

ஒரு தனி மரம் ஆண்டுக்கு 260 பவுண்டுகள் ஆக்சிஜனை வெளியிடுகிறது. இது இரண்டு மனிதர்கள் ஒரு வருடம் சுவாசிக்க போதுமானதாகும். ஐம்பது வருடங்கள் வாழும் ‘ஒரு மரம்’ உற்பத்தி செய்யும் சேவைகளை பணத்தால் மதிப்பிட்டால் ஆக்சிஜன் US$ 30,000, சுத்திகரிக்கும் நீர் US$ 35,000 கார்பனை வடிகட்டுவதற்கான செலவு US$ 1,25,000 ஆகுமென்று ஒரு கணக்கீடு சொல்கிறது. 

அரசாங்கங்கள் நீரை சுத்திகரிக்கவும், கார்பன் வெளியேற்றத்தை குறைக்கவும் பல பில்லியன் டாலர்களைச் செலவிடுகின்றன. இவை அனைத்து சேவைகளையும் மரங்கள் இலவசமாகவே செய்து வருகின்றன. ஒருவேளை இலவசமாக இந்த சேவை கிடைப்பதால்தான் மரங்களின் அருமை நமக்குத் தெரியவில்லையோ என்னவோ. மரங்கள் செய்யும் இத்தகைய விலைமதிப்பற்ற சேவைகளைக் கூட பணத்தால் மதிப்பீடு செய்யப்படுவதற்குக் காரணம், பணத்தாசை கொண்ட பலரால் மரங்கள், பணத்தால் மதிப்பிடப்பட்டு வெட்டப்பட்டு விற்கப்படுவதுகூட ஒரு காரணமாக இருக்கலாம்.

மரங்கள் செய்யும் சேவைகள் என்கிற பட்டியலில் மேலே நாம் சுட்டிக்காட்டிய மூன்று சேவைகளை மட்டும் அல்லாமல் மரங்கள் நில அரிப்பை தடுகின்றன; நிலத்தடி நீரின் அளவை உயர்த்துகின்றன; ஆறுகளின் பாதையையும் ஆற்றுப் பெருக்கையும் கட்டுப்படுத்துகின்றன; ஊரைக் குளிர்விக்கின்றன; குருவிகள் கூடுகட்டும் இடமாகி பல்லுயிர்களை பெருக்குகின்றன; பட்டுப் போன மரங்கள் வீட்டுக்காகவும் விறகுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்தையும் விட ‘நீரின்றி அமையாது உலகு ‘ என்ற நிலையில் அடிப்படையான மழை பெய்யக் காரணமாகின்றன; அதன் காரணமாக விவசாய உற்பத்திப் பொருள்கள் விளைவிக்கப்படுகின்றன என்ற மரங்களின் பணிகளுக்கெல்லாம் பணத்தால் மதிப்புப் போட்டால் இந்த உலகையே மரங்களுக்கு விலையாக கொடுத்தாலும் ஈடாகாது.

மாமன்னர் அசோகர் போர் செய்து பலரைக் கொன்றார் என்பதை விட அவர் சாலை ஓரங்களில் மரங்களை நட்டினார் என்பதையே சரித்திரம் புகழ்கிறது. எல்லா மதங்களும் மரம் நடுவதை தலையாய தர்மங்களில் ஒன்று என்று சொல்கின்றன. குறிப்பாக இஸ்லாம் பெருமானார் ( ஸல்) அவர்களின் பொன் மொழிகள் மூலமாக மரம் நடுவதை மிகவும் உயர்வாகப் பேசுகிறது. இதோ சில சான்றுகள்!

“எவரேனும் மரம் நடுவாரேனால் அம்மரத்திலிருந்து எவ்வளவு உண்ணப்படுமோ அவ்வளவு தர்மம் செய்த நன்மை மரம் நட்டவருக்கு கிடைக்கும். அதிலிருந்து திருடப்பட்டதும் தர்மாகிவிடும். பிராணிகள் உண்டதும் தர்மமாகிவிடும் “ அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி) ( முஸ்லிம் )

“ஒருவர் மரம் நாட்டினால் அம்மரத்தின் மூலம் எத்தனை பழங்கள் உற்பத்தியாகுமோ அவற்றின் அளவுக்கு மரத்தை நட்டவருக்கு அல்லாஹ்விடம் நன்மை கிடைக்கும்" அறிவிப்பாளர்: அபூ அய்யூப் (ரலி) (முஸ்னத் அஹ்மத்)

ஒரு மனிதன் இறந்து போனதும் அவனது நல்ல மற்றும் கெட்ட செயல்களும் அதன் மூலமான நன்மை மற்றும் பாவங்களும் நின்று போய்விடுகின்றன. ஆனால் அந்த மனிதன் உயிரோடு இருக்கும் போது வெட்டிய கிணறு , ஏற்படுத்திய கல்வி நிறுவனம், நட்டு வைத்த மரங்கள் ஆகியவை அவை மக்களுக்குப் பயன்படும் கால காலமெல்லாம் அவன் உலகைவிட்டு மறைந்தாலும் அவனுக்கு நன்மையை சேர்த்துக் கொண்டே இருக்கும் என்று கூறும் இஸ்லாம் அதை ‘சதக்கத்துல் ஜாரியா’ என்று வகைப்படுத்துகிறது. செத்தும் கொடுத்த சீதக்காதிகள் இவர்கள். 

“பயன்மரம் உள்ளூர் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின் “ - என்று திருக்குறளும் கூறுகிறது. 

நாம் செய்தால் என்ன? இப்படித் தொடங்கினால் என்ன? என்ற வகையில் சில கருத்துக்களை சீர்தூக்கிப் பார்க்கலாம். 

எல்லா நற்காரியங்களும் அவரவர் இல்லங்களிளிருந்துதான் ஆரம்பிக்கின்றன என்று சொல்வார்கள். ( CHARITY BEGINS AT HOME ) . அதே போல் நாம் வீடு கட்டத் திட்டமிடும்போதே வீட்டின் நான்கு மூலைகளிலும் நான்கு மரங்களையாவது நட்டு வைக்க இடம்விட வேண்டும். அதனால் முதலாவதாக நமது வீடுகளின் வசிப்பிடம் காற்றோட்டமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். இதனால் 6 முதல் 9 செல்சியஸ் வரை உஷ்ணம் குறைவதாக கணக்கிட்டு இருக்கிறார்கள். குளிர் சாதனங்களைப் பயன்படுத்தும் நேரமும் மின்சாரச் செலவும் குறையலாம்.. 

இதற்காக வீட்டில் நடத்தக்க பப்பாளி, முருங்கை, மாதுளை, கொய்யா, நெல்லி போன்ற பயன்தரும் செடிகளை நடலாம். வீட்டை சுற்றி அழகுதரும் வண்ணப் பூச்செடிகளை நடலாம். அரளி, மல்லிகை, செம்பருத்தி, இட்லிப் பூ ஆகியவை அழகும் மணமும் தருமே. இந்த மரம் மற்றும் செடிகளுக்கான தண்ணீருக்கு நாம் ஒன்றும் பிஸ்லேரி மினரல் வாட்டருக்கு ஆர்டர் செய்ய வேண்டாம். நமது குளியலறைகளிலிருந்து வெளியேறும் பயன்படுத்தப்பட்ட தண்ணீரை பாயச் செய்தாலே போதுமானது. இதனால் தெருக்களில், கால்வாய்களில் சாக்கடை நீர் கலப்பதையும் தடுக்கலாமே! 

வீட்டினுள் நிழலில் வளரும் செடிகளை தொட்டிகளில் வைத்து வளர்க்கலாம். முக்கியமாக துளசி, ஓமவல்லி, கற்றாழை போன்ற செடிகளை இவ்விதம் வளர்ப்பதால் அவை தொற்று நோய்கள் அண்டாமல் காக்கும். மணி பிளான்ட் செடிகளை துணைச் சுற்றி வளர்த்தால் காண ரம்மியமாக இருக்கும்.

குழந்தை பிறந்தால் அதன் நினைவாக தேக்கு மரக் கன்றுகளை நடலாம்; குழந்தைகள் பிரசவமாகும் மருத்துவமனைகளுக்கு மருத்துவச செலவுடன் நான்கு மரக்கன்றுகளையும் பரிசளிக்கலாம். திருமணங்கள் நடத்தால் ஊரெங்கும் அழைப்பு விடுத்து விருந்து வைக்க முன்பு, திருமண மாப்பிள்ளை பள்ளிக்கு திருமண ஒப்பந்தத்துக்காக வரும் பாதைகளில் செடிகளை நட்ட பிறகே வருவதை வழக்கமாக்கலாம். திருமண அழைப்பிதழோடு ஒரு சில விதைகளையும் கொடுத்ஹ்டு அழைக்கலாம். திருமணப் பரிசாக எவர்சில்வர் தட்டுகளையும் குடங்களையும் வழங்கி அவைகளைப் பழைய சாக்கில் கட்டிப் பரண்மேல் போடுவதற்கு பதிலாக மரக் கன்றுகளை நட்டு பரிசளிக்கலாம். 

யாராவது இறந்தால் கபர்ஸ்தானின் சுவர் ஓரங்களில் வேப்பங்கன்றுகள் போன்றவற்றை நடலாம். தலைவர்களின் பிறந்த நாள்களைக் கொண்டாடும் கட்சிக்காரர்கள் சாலை ஓரங்களில் நிழல் தரும் மரச் செடிகளை நட்டு புதிய அத்தியாயம் படைக்கலாம். நடிகர்களின் பிறந்த நாளுக்கு, தலைகளை மொட்டை அடிக்கத் தயாராகும் இரசிகர்கள் அவரது வயதின் எண்ணிக்கைக்கு ஏற்ப மரக்கன்றுகளை நடலாமே! 

நெல் வயல்களையும் தென்னந்தோப்புகளையும் வீட்டுமனைகளாக மாற்றி விற்றுத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்போர் அந்த இடங்களில் இருந்த மரங்களை வெட்டிய பாவத்துக்குப் பரிகாரமாக மனைப் பகுதியில் சாலைகளுக்காக ஒதுக்கப்படும் இடங்களில் இருபுறமும் பராமரிப்புடன் கூடிய புன்னை, புங்கை , வேம்பு , பாதாம் செடிகள் போன்ற மரக்கன்றுகளை பாதுகாப்புடன் நட்டு வைக்கலாம். மனைகளை வாங்குவோருக்கு ஆளுக்கு நான்கு மரக்கன்றுகளை பரிசாக வழங்கலாம்.

மா, ஆல, அரச, புளிய , வாகை, பெருவாகை ஆகிய மரங்கள் நிறைய இடங்களை ஆக்கிரமித்து வளரும் வகையானவை. பரந்த நிழலைத் தரக் கூடியவை. வேர்களைப் பரப்பி வளரக் கூடியவை. இவைகளை வீட்டில் வளர்ப்பதைவிட பள்ளிக் கூடங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள், அரசு அலுவலகங்கள், மைதானங்கள் ஆகியவற்றில் நட்டு வளர்க்கலாம்.

மனிதன் செய்யும் செயல்களிலும் தர்மங்களிலும் சிறந்த தர்மமாக மரக்கன்றுகளை நடுதல், அவைகளைப் பேணுதல், பராமரித்தல் ஆகியவற்றை கருதிட வேண்டும். மரம் நடுவது ஒரு அறம் அதுவும் தலையாய அறங்களில் ஒன்று என்ற எண்ணம் நம்மிடையே பரவலாக வேண்டும். நமக்காகவும் நமது வசதிகளை மேம்படுத்திக் கொள்ளவும் எவ்வளவோ செய்கிறோம். அந்தப் பட்டியலில் இனி மரங்களை நடுவதையும் சேர்த்துக் கொண்டால் ஊர் செழிக்கும் நமது உள்ளமும் மகிழும்; சுற்றுச் சூழல் மேம்படும்; நாம் எண்ணிப் பார்க்காத நன்மைகளெல்லாம் நம்மை வந்து சேரும்.

நமக்கு முந்தைய தலைமுறையிலும் நம்முடைய இளமைக் காலங்களிலும் இல்லாத ஒன்றாக இன்று நமது காலடியில் இருக்கும் தணணீரை காசு கொடுத்து வாங்குகிறோம். அது போதாது என்று இப்போது காற்றையும் காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு மெதுவாகத் தள்ளப்படுகிறோம். எதிர்கால தலைமுறை காற்றுக்கு காசு செலவழிக்கப் போகும் முன் நாம் மரக்கன்றுகளை நமது கைகளில் எடுத்துக் கொண்டு விழித்திடவும், செயல் புரிந்திடவும் வேண்டும். உயிர் இல்லாத விதைகளை உயிர்ப்பித்துக் கொடுக்க மண் தயாராக இருக்கிறது. கைப்பிடி அளவு மணல் நமது கைகளில் இருந்தாலும் அதில் ஊரையே வளைக்கும் ஒரு ஆலம் விதை முளைத்து விடுகிறது. 

விதைகள் தயாராய் உள்ளன; விதைகளை வரவேற்க மண்ணும் தயாராக உள்ளது. அதே போல் இலவச மரக் கன்றுகளை வழங்கிட அரசுத்துறைகளும் தன்னார்வ அமைப்புகளும் தயாராக உள்ளன. பசுமை அதிரை 2020 திட்டமும் தயாராக உள்ளது. மனிதர்கள்தான் தயாராக வேண்டும். தயாராவோமா தாயபுள்ளைகளே!

இப்ராஹீம் அன்சாரி

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? – பகுதி - 1 16

அதிரைநிருபர் பதிப்பகம் | November 07, 2015 | , ,

அண்மைக்காலமாக,  மதமாற்றம் பற்றி பல்வேறு திசைகளில் இருந்தும் எதிர்க்குரல் சற்று உரத்து சத்தமாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறது.. இதற்குக் காரணம் சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்திய மக்கள் தொகை தொடர்பான மதவாரியான  புள்ளிவிபரங்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், கிருத்தவ மக்களின் எண்ணிக்கை வளராமல் இருப்பதாகவும்  இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் ஒரு விவாதம்   எழுப்பப்பட்டது. இந்த அளவீடுகளை ஆய்ந்தால் அவை எதிர்மறையான  முடிவுகளைத் தருவதே  உண்மை . ஆனாலும் ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாளாக்கும் சில  அரசியல் கட்சிகள் ,   சகோதரர்களாகப் பழகும் சகிப்புத்தன்மை மிக்க சாதாரண மக்களிடையே முஸ்லிம்களும் கிருத்தவர்களும் மதமாற்றம் செய்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்து பிளவு படுத்தி, அவர்களின் நெஞ்சங்களில் நஞ்சை விதைத்தன. தேர்தல் ஆதாயம் தேடும் சக்திகள், பெரும்பான்மை மக்களின் வாக்கு வங்கிகளை தங்களுக்கு ஆதரவாகத் திருப்பும் முயற்சிகளின் முனைப்பாக இந்தக் கருத்தைப் பரப்புவதில்  ஈடுபட்டு இருக்கிறார்கள். 

அத்தகையோர்க்கு சிறு விளக்கம் தரவேண்டுமென்பதற்காகவே ஒரு அழைப்பாளன் என்ற முறையில் இந்தப் பதிவைத் தரவேண்டியது இதை எழுதுபவரின் சமுதாயக் கடமையாக உணரப் பட்டு இங்கு பதியப்ப\டுகிறது. 

அழைப்புப் பணி என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் பிறவிக் கடமையாகும். ‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’  என்று இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சில தலைவர்கள் முழங்கியதாக சொல்கிறோமே அதே போல் ஒரு முஸ்லிமுக்கு விதிக்கப்பட்ட  கடமைகளில் அழைப்புப் பணியும் ஒரு கடமையாகும். 

காரணம் ,  பெருமானார் (ஸல் ) அவர்களின் இந்த சமுதாயத்தை படைத்த இறைவனே  நற்சான்றிதழ் கொடுத்து இது ஒரு நல்ல சமுதாயம் என்று சொல்கிறான். உலகில் உலவும் எந்த ஒன்றையும் சுட்டிக் காட்டி அதை நல்லது என்றும் சிறப்புக்குரியது என்றும் சான்றிதழ் வழங்க வேண்டுமானால் அவ்வாறு சுட்டபப்டும்  பொருள் அல்லது சமுதாயம் தன்னகத்தே சிறப்பாக ஏதாவது  ஒரு தரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பது உலக நியதி. அந்த வகையில் சந்தையில் உலவும் சில வணிகப் பொருள்களை சிறந்தது என்று நாம் ஏன் தரம் பிரிக்கிறோமென்றால் சில சிறப்புக்குரிய தன்மைகள் அப்பொருளோடு இருந்தே ஆகும். 

உதாரணமாக,  மக்கள் பயன்படுத்தும் சில நுகர்பொருள்கள் தரத்தில் சிறந்தவைகளாக மக்களால் பெயர் குறிப்பிடப்பட்டு வாங்கப்படுகின்றன. பல நுகர்பொருள்களை அவற்றின் உள்ளடக்கத்  தரத்துக்காக வாங்குகிறோமே அதேபோல் படைக்கப்பட்ட மனித சமுதாயத்திலேயே இதுதான் சிறந்த சமுதாயம் என்று         படைத்தவனே குறிப்பிடுகிறான் என்றால் இந்த சமுதாயம் தனது உள்ளடக்கமாக வைத்திருக்கும் தரம் என்ன? 

அது வேறொன்றுமல்ல .  நன்மையை ஏவி தீமையை தடுக்கும் தன்மையை தன்னகத்தே கொண்டிருக்கும் சமுதாயம் இது  என்பதுதான். அதுமட்டுமல்லாமல்  பாவங்களில் ஈடுபடுவோரை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் இந்த சமுதாயத்தின் தன்மைதான்.  எல்லாம் வல்ல இறைவன் தனது திருத் தூதர்களுக்கு வழங்கிய பணியும் இவைதான்.  இந்தத் தன்மைகள்  இறைநம்பிக்கை கொண்ட மனித சமுதாயத்தின் உள்ளீடாக ஓடும் ரத்தத்திலும் இயங்கும் உறுப்புகளிலும் நாடி நரம்புகளிலும் நடை பயின்று கொண்டே இருக்க வேண்டுமென்பதே படைத்தவனின் எதிர்பார்ப்பு. 

நமது தலைவரான பெருமானார் (ஸல்) அவர்களின் முழு வாழ்வே அழைப்புப் பணியால் அலங்கரிக்கபட்டதுதான். முதன் முதலாக, ஹீராக் குகையில் தனது தூதருக்கு வஹீ என்கிற இறைத்தூதை அனுப்பிய இறைவன் தனது தூதருக்கு விதித்த கட்டளையின் அடிநாதமே அழைப்புப் பணிதான். 

நபியே! நீங்கள் எழுந்து நின்று மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்!” (74: 1-7) என்பதே அல்லாஹ்வின் அருட் தூதருக்கு வழங்கப்பட்ட  கட்டளை. தான் ஏற்றுக் கொண்ட நல் வழியை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி , அவர்களையும் நல்ல வழியின் பக்கம் திருப்பிவிட  முயற்சி எடுப்பதே அழைப்புப் பணியாகும். 

இந்த வகையில்தான் தனக்கு விதிக்கப்பட்ட  முதல் கட்டளையை எடுத்துக் கொண்டு ஒரு நிமிடத்தைக் கூட   வீணாக்காமல்  நேராக தனது மனைவி ஹதிஜா (ரலி) அவர்களை நோக்கி விரைந்த   பெருமானார் (ஸல்) தனது மனைவியிடம் நடந்ததைக் கூற,   அவர் அங்கேயே அப்பொழுதே இஸ்லாத்தை ஏற்கிறார். அதைத்தொடர்ந்து அபூபக்கர் ( ரலி ) அவர்களுக்கும் , அலி (ரலி) அவர்களுக்கும் வளர்ப்பு மகன் ஜைது ( ரலி) அவர்களுக்கு இஸ்லாத்தை ஏத்தி வைத்தார்கள். தொடர்ந்து இரகசியமாகவும் அதன்பின் தங்களின் சொந்தங்களையும் அதையும் தொடர்ந்து  அல்லாஹ்வின் கட்டளைப் படி அழைப்பை பகிரங்கப்படுத்தியும் தனது தூதுத்துவப் பயணத்தைத் தொடர்கிறார்கள். 

மக்காவில் எதிரிகளின் இடையூறுகளுக்கிடையே தொடர்ந்த அண்ணலாரின் அழைப்புப் பணி மக்காவில் எல்லை தாண்டி முதலில் தாயிப்  நகர் வரை விரிகிறது. அங்கு இருந்த பெரும் செல்வாக்குப் பெற்றவர்களிடம் அச்சமில்லாமல் அழைப்புப் பணி செய்து அவர்களால் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு இரத்தம் சொட்டிய நிலையில் ஒரு திராட்சைத் தோட்டத்தில் சோர்ந்து போய் சுருண்டு கிடந்த நேரத்திலும் ஒரு அடிமைக்கு இஸ்லாத்தை எத்திவைத்து இன்புறுகிறார்கள். அதையும் தொடர்ந்து மதீனாவிலிருந்து ஹஜ்ஜுக்காக வரும் பயணிகளிடம் அழைப்புப் பணி செய்து அவர்களுடன் அகபாவில் ஒப்பந்தம் செய்து அந்தப்  பணிக்காகவே முஸ் அப் இப்னு உமைர் ( ரலி) அவர்களை மதீனாவுக்கு அனுப்பி , அழைப்புப் பணியை பரவலாகச் செய்த பின்னர், அதன்பின் தானே மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரா செய்யும்போது போகும் வழியிலேயே அஸ்லம் குலத்தைச் சேர்ந்த எண்பது பேருக்கு இஸ்லாத்தை எத்தி வைத்து  மதினாவை  அடைந்து இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை அமைக்கிறார்கள்.                  

மதினாவில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை அமைத்ததும் உலகெங்கிலும் இருந்த  அபிசீனிய, எகிப்திய, பாரசீக, ரோமானிய, பஹ்ரைன், யமாமா, சிரியா, ஓமன் முதலிய நாடுகளின்   அரசர்களுக்கும் இஸ்லாத்தை அறிமுகம் செய்து அழைப்புக் கடிதங்களை அனுப்பினார்கள். பலர் உடனே அழைப்பை அங்கீகரித்தார்கள்.  சிலர் சற்று காலம் கடந்து ஏற்றுக் கொள்கிறார்கள். மக்காவில் ஒரு குஹையில் பிறந்த  இஸ்லாம் உலகப் பேரரசர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றால் அதற்கு பெருமானார்       ( ஸல் ) அவர்களின் ஒட்டு மொத்த வாழ்வுமே இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு அர்ப்பணிக்கப்பட்டதே காரணம் என்பதைத்தான் இந்த வரலாற்று  வரிகள் நமக்கு நினைவூட்டுகின்றன.  

பெருமானார் ( ஸல்) அவர்களுடைய மறைவுக்குப் பிறகு, நபித் தோழர்கள் பெருமானார் ( ஸல்) அவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி உலகமெங்கும் பரவிச்சென்று சத்தியமார்க்கத்தை எடுத்துரைத்தார்கள். உலகின் பல பாகங்களில்,  ஆங்காங்கே  இருந்த சமுதாய சூழ்நிலைகளில்-  சமத்துவமின்மை இல்லாத  ஏற்ற தாழ்வுகளில் - ஆண்டான் அடிமை என்கிற பேதம் நிலவிய நாடுகளில்  எல்லாம் சகோதரத்துக்காகவும் சமத்துவத்துக்காகவும் ஒரு மாமருந்தாக இஸ்லாம் திகழ்கிறது என்பதை உணர்ந்த பல மக்கள் இஸ்லாத்தை தங்களின் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டனர். அந்த நிலை இன்றும்  தொடருகிறது.  

கல்வியிலும் அறிவியல் வளர்ச்சியிலும் ஏற்றம் கொண்ட நாடுகள் என்று போற்றிப் புகழப்படும் நாடுகளிலெல்லாம் இஸ்லாமிய வெளிச்சம் விரைவாகப் பரவத் தொடங்கி இருக்கிறது. பல்துறை அறிஞர்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க மார்க்கம் இஸ்லாம்தான் என்பதை உணர்ந்து தங்களின் வாழ்வின் தித்திப்பான திருப்புமுனையாக இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்துத் தழுவிக் கொண்டிருக்கிறார்கள். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த உண்மையை ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இன்று உலகில் அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் புரட்சி இதுதான். 

பள்ளிவாசல்கள் பற்றாக்குறை என்ற செய்தி பிரான்சு நாட்டிலிருந்து வந்த போது, புதிய பள்ளிவாசல்கள் அங்கு பரவலாகக்  கட்டப்பட்டன.  ஏற்கனவே ஒளிவெள்ளமாக இருந்து பின்னர்  பூட்டுப் போட்டு இழுத்து மூடப்பட்ட பள்ளிவாசல்களின் , கதவுகளில் தொங்கிய பூட்டுக்கள்  ஆட்சியாளர்களால் நொறுக்கப்பட்டு திறக்கபட்டு ஐந்துவேளை  வழிபாட்டுக்குத் திறந்துவிடப்பட்ட  நிகழ்வுகள் போராட்டமின்றி மனமாற்றத்தால் ஆப்ரிக்காவின் அங்கோலாவில் அரங்கேறியது. மேலும் அங்கு புதிய பள்ளிவாசல்களும்  கட்டப்படுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் திருச்சபைக்குச் சொந்தமான கட்டிடங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டும் சொந்தமாக வாங்கப்பட்டும் பள்ளிவாசல்களாக மாறப்பட்டு  அங்கெல்லாம் “ அல்லாஹு அக்பர் “  என்ற முழக்கம் ஒலிக்கிறது. இந்த மறுமலர்ச்சிக்கெல்லாம் காரணம் பெருமானார் (ஸல்) அவர்களின் வழி ஒற்றிய அழைப்புப் பணிதான். 

“ யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் ! ”  என்றான்  பெருந்தன்மை மிக்க  ஒரு தமிழ்ப் புலவன். அந்த வகையில் இஸ்லாம் என்ற இனிய மார்கத்தை நான் மட்டும் நுகர்ந்தால் போதாது; அந்தப் பூஞ்சோலையில் நான் மட்டும் நுழைந்தால் போதாது என்று அடுத்தவருக்கும் அதன் சிறப்பியல்புகளை எடுத்துரைப்பது முஸ்லிமாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் கடமையாகும். இந்தக் கடமையை நிறைவேற்றாவிட்டால் மறுமையில் இறைவனுக்கு இதற்கும் சேர்த்து பதில் சொல்ல வேண்டி வருமென்று அறிஞர்களின் தரப்பிலிருந்து எச்சரிக்கை விடப்படுகிறது. 

அறிஞர் இப்னுல் கைய்யிம் ( ரஹ்) அவர்கள் கோடிட்டுக் காட்டுகிறார்கள். மனித சமுதாயத்தின் வெற்றியின் நிலைத் தரங்கள் நான்கு. 

1.. மனிதனுக்கு இம்மையிலும்  மறுமையிலும்   வெற்றியைத் தரும் சத்திய மார்க்கத்தையும் அது தொடர்பான கல்வியையும் கற்பது 

2.. தான் கற்றதை அமல் என்கிற செயல்பாட்டில் தங்களின் சொந்த வாழ்வில் நிறைவேற்றிக் காட்டுவது , 

3. தான் கற்றதையும் செயல்படுத்தியதையும் அதன் இன்பங்களையும் அடுத்தவருக்கும் எத்திவைப்பது,  கற்றுக் கொடுப்பது, அழைப்பது. 

4. அவ்வாறு அழைப்பதனால் ஏற்படும் துன்ப துயரங்களைத் தாங்கிக் கொள்ளும் நெஞ்சுரம் பெறுவது.; பொறுமையை மேற்கொள்வது    
  
அழைப்புப் பணி என்றாலே அது ஏதோ மதமாற்றம் என்று சிலர் விவாதத்தை எடுத்து வைக்கிறார்கள். மதமாற்றம் என்பது ஒரு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தானும் தனது சமுதாயமும் அனுபவிக்கிற கொடுமைகளைக் களைய ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தார் எடுக்கிற முடிவாகும். ஆனால் அது அறிவின் அடிப்படையில் ஏற்படுவதாகும். 

இவைகளுக்கு  உதாரணம் சொல்ல வேண்டுமானால் பெருமானார் ( ஸல்) அவர்களின் சிறிய தந்தையார்  ஹம்ஜா ( ரலி ) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சியையும் உமர் (ரலி ) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சியையும்  குறிப்பிடலாம். 

தனது அண்ணன் மகனான முகமது (ஸல்) அவர்களை ஒருவன் கல்லால் அடித்துத் தலையில் காயம் ஏற்படுத்திவிட்டான் என்ற உடனே நானும் இஸ்லாத்தை ஏற்கிறேன் என்னை நீங்கள் என்ன செய்ய இயலும் என்று உணர்வுபூர்வமான முடிவெடுத்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர் ஹம்சா  ( ரலி ) அவர்கள். 

இதற்கு மாறாக, பெருமானார் (ஸல்) அவர்களைக் கொலை செய்து அவர்களுடைய தலையை கொண்டுவந்து கொடுத்து  நூறு ஒட்டகங்களை பரிசாகப் பெறுவேன் என்று சபதமிட்டு வாளோடு கிளம்பிய உமர் (ரலி ) அவர்கள் தாஹா  என்கிற திருமறையின் அத்தியாயம் ஓதப்பட்டதை காதால் கேட்டு அதன் அறிவுபூர்வமான அர்த்தங்களைப் புரிந்துகொண்டு வாளை தூக்கி வீசிவிட்டு இஸ்லாத்துக்கு தோள் கொடுக்க துணிந்து வந்தார். இது அறிவின் அடிப்படையிலான முடிவு. 

இவ்வாறு அறிவுபூர்வமான மன மாற்றங்கள் ஏற்பட வேண்டுமானால் மற்ற சமுதாய  மக்கள் வாழும் நாட்டில் அவர்களுடன் ஒன்றிணைந்து வசிக்கும்  முஸ்லிம்கள்,  ஒரு முன்னுதாரண வாழ்வை மேற்கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் வாழும் வாழ்க்கை முறைகளைப் பார்த்தது மற்றவர்கள் பாடம் கற்றுக் கொள்ளத் தக்க வகையில் அவர்களது வாழ்க்கை இருக்க வேண்டும்.  நம்பிக்கை, நாணயம், வணிகத்தில் நேர்மை, வாக்குறுதிகளைக் காப்பாற்றுதல் போன்ற நல்ல தன்மைகளை பொதுவாழ்வில் வெளிச்சம் போட்டுக் காட்டும் முஸ்லிம்களால் அவர்கள் மேற்கொண்டுள்ள வாழ்வியல்  முறையான இஸ்லாத்துக்கு அவை பெருமை தேடித்தரும். இத்தகைய இஸ்லாம் போதித்த  வாழ்வுமுறைகளை முஸ்லிம்கள் வாழ்ந்து காட்டும்போது அது ஒரு மறைமுக அழைப்புப் பணியாக கருதப்படும்.  அறிவுபூர்வமான மனமாற்றங்கள் ஏற்பட     பொதுவாழ்வில் நமது நற்குணங்களும் நற்பணிகளும்       வழிவகுக்கும். 

அழைப்புப் பணி என்பது ஒரு கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு கைகளில் குர் ஆனையும் பிற நூல்களையும் எடுத்துக் கொண்டு மற்றவர்களை அணுகிப் பேசி, விவரித்து, விவாதித்துத்தான் செய்ய வேண்டுமென்பது இல்லை. நமது அன்றாட வாழ்வின் அணுகுமுறைகள் ஒவ்வொன்றுமே அழைப்புப் பணிதான். இதோ இந்த  சிறிய சம்பவம் எவ்வாறு ஒரு பெரிய அறிஞரை இஸ்லாத்தில் கொண்டு வந்து சேர்த்தது என்று பார்க்கலாம். 

பிக்தால் என்ற பெயரை நம்மில் பலர் அறிந்து இருக்கலாம் ; அறியாதவர்களும் இருக்கலாம். திருமறையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களின் ஒருவர்தான் பிக்தால். இதற்கு முன் பலர்  மொழி பெயர்த்து இருந்தாலும் அவர்கள் எல்லாம் இஸ்லாத்தில் இணைந்த பின்  மொழி பெயர்த்தவர்கள் அல்ல. ஒரு முஸ்லிமாக மாறி அதன்பின் , திருக் குரானை மொழிபெயர்த்தவர் என்ற வரிசையில் பிக்தால் முதலாமவர் ஆவார்.  

லண்டன் கேம்பிரிட்ஜில் ஒரு கிருத்தவராகப் பிறந்த பிக்தால் (Muhammad Marmaduke Pickthall (born Marmaduke William Pickthall, 7 April 1875 – 19 May 1936) அவர்கள் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டது எப்படி ? 

மத்திய கிழக்கு நாடுகளில் தனது பிரிட்டிஷ் நிறுவனத்துக்காக பணியாற்றிவந்த பிக்தால் , தான் குடியிருந்த வீட்டின் மேல்தளத்திலிருந்து  ஒரு காட்சியைக் கண்டார்.  

ஒரு பெரியவர்,   ஆடுமேய்க்கும் இளைஞன் ஒருவனை வாய்க்கு வந்தபடி பேசி கை நீட்டி அடிக்கிறார். அவனோ எவ்வித எதிர்ப்பையும் காட்டாமல் பேச்சையும் அடியையும் வாங்கிக் கொண்டு பொறுமையாக கை கட்டி நிற்கிறான்; ஆனால் கண்ணீர் மட்டும் வழிகிறது. இப்படி ஒரு ஜடம்போல நிற்கும் அந்த இளைஞனை நோக்கி பிக்தால் படி இறங்கி  வந்தார். உங்களுக்குள் என்ன பிரச்னை? ஏன் அவர் உன்னை அடித்தார்? என்று அவனிடம் கேட்டார். 

“நான் அந்தப் பெரியவரிடம் கடன் வாங்கி இருந்தேன். அதை என்னால் குறிப்பிட்ட நேரத்தில் திருப்பித் தர இயலவில்லை அதனால் அவர் ஏசுகிறார்; அடிக்கிறார் “ என்றான் இளைஞன். 

“பணம் தரக்கூடாது என்று நான் நினைக்கவில்லை தந்துவிடுவேன் என்று சொல்லி இன்னும் சில நாட்கள் தவணை வாங்கி இருக்கலாமே!” என்றார்  பிக்தால். 

“இல்லை சார்! யாராவது கடனை வாங்கினால் உரிய நேரத்தில் திருப்பித் தரவேண்டியது உங்களின் கடமையாகும் என்று எங்கள் நபிகள் ( ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள். நாம் சொன்ன கெடு முடிந்துவிட்டால் கடனைக் கேட்க கொடுத்தவருக்கு முழு உரிமை இருக்கிறது. கெடுவுக்குள் கொடுக்க இயலாத குற்றத்துக்கு நான் ஆளாகி கூனி நிற்கிறேன் . ஏற்கனவே அந்தக் குற்றத்துக்கு ஆளான நான்,  அந்த மனிதரை எதிர்த்துப் பேசியும் திருப்பி அடித்தும் இன்னொரு குற்றத்தையும்  செய்ய    விரும்பவில்லை . எனது இறைவனுக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும் “ என்று இளைஞன் கூறினான். 

பிக்தால் சிந்திக்க ஆரம்பித்தார். எத்தனையோ நூற்றண்டுகளுக்கு முன் வாழ்ந்து ,  உபதேசித்து மறைந்த ஒருவர் மீதும் அவரது போதனைகள் மீதும் இவ்வளவு பற்றுள்ளவனாக ஒரு பாமரன் இருக்கிறானே அப்படியானால் அவர்  இன்னும் என்னவெல்லாம் சொல்லி இருப்பார்? அவரை  அப்படி சொல்ல வைத்த சக்திதான் எது என்று தேட ஆரம்பித்தார். அவரது தேடலின் விளைவு வில்லியம் பிக்தாலை முகம்மது பிக்தாலாக மாற்றியது.  

மாஷா அல்லாஹ்! 

நான் மீண்டும் குறிப்பிடுகிறேன். 

இஸ்லாம் போதித்த  வாழ்வுமுறைகளை முஸ்லிம்கள் வாழ்ந்து காட்டும்போது அதுவே  ஒரு மறைமுக அழைப்புப் பணியாக கருதப்படும்.  அறிவுபூர்வமான மனமாற்றங்கள் ஏற்பட     பொதுவாழ்வில் நமது நற்குணங்களும் நற்பணிகளுமே       வழிவகுக்கும். 

அன்பான அணுகுமுறை, வெல்ல இயலாத மனங்களை வென்று விடும். அப்போது அழைப்புப் பணி,  மதமாற்றமாகத் தோன்றாது; மனமாற்றமமாகவே தோன்றும்.

இப்ராஹிம் அன்சாரி

ராஜா வீட்டு விருந்து ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | October 13, 2015 | , , , ,

சாக்கடைச் சேறு கலந்து போடும் சோறு!

கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கும் பிரச்னை உ பி மாநிலம் தாத்ரி என்ற கிராமத்தில் மாட்டுக் கறி வைத்திருந்தார் என்ற குற்றத்துக்காக ஒரு முஸ்லிமை அரக்கர்கள் அடித்துக் கொன்றதுதான். இந்தியாவே இந்தக் கொடூரத்தை விமர்சித்தது ; விசாரித்தது; விவாதித்தது. இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு எதிராக எழுந்த எதிர்ப்புக்குரல் இமயமலையில் கூட எதிரொலித்தது. நாம் இன்று இந்தத் தலைப்பில் பெரும்பகுதி பேசப் போவது முகமது அக்லக் என்ற ஏழையின் கொடூரக் கொலையைப் பற்றி அல்ல. அந்தக் கொலையைத் தொடர்ந்து நாட்டின் சில தலைவர்கள் தெரிவித்துள்ள சீண்டிவிடும் கருத்துக்கள் பற்றித்தான் அலச இருக்கிறோம்.

முதலாவதாக ஒரு இழவு விழுந்த வீட்டில் ஆறுதல் சொல்லும் பண்பாடும் கண்ணியமும் கலாச்சாரமும் அற்ற மகேஷ் சர்மா என்கிற ஒருவர்தான் இந்தியாவின் கலாச்சாரத்தை கட்டிக் காப்பாற்றும் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ள கலாச்சாரத்துறை அமைச்சர் என்று அறிகிறபோது “ பாரத நாடு பழம்பெரும் நாடு" என்று பாடிய பாரதி இப்போது இருந்தால் தற்கொலை செய்து கொள்வார். 

முகமது அக்லக் கல்லாலேயே அடித்துக் கொள்ளப்பட்டது ஒரு சாதாரண விபத்து, இத்தகைய சம்பவங்கள் நடப்பது தவிர்க்க முடியாதது என்பதுதான் அமைச்சரின் வாயிலிருந்து உதிர்ந்த மணிமொழிகள். அதுமட்டுமல்ல அதையும்தாண்டி அவர் சொல்லி இருப்பது முகமது அக்லக்கை கொன்றதை விடவும் கொடூரமானது. முகமது அக்லக்கை கொல்லத்தானே செய்தார்கள் அவருடைய வீட்டில் 17 வயது பெண் இருந்தாளே அவளை கற்பழிக்கவா செய்தார்கள்? என்றும் கேட்டிருக்கிறார். அமைச்சரின் இந்த இரண்டு கொடிய வார்த்தைகளும் அவர் வகித்துவரும் பதவிக்கும் அவர் பொறுப்பேற்றுள்ள துறைக்கும் இந்த நாட்டுக்கும் ஏற்பட்டுள்ள இழிவு என்றுதான் வேதனையுடன் குறிப்பிடவேண்டும். 

அடுத்ததாக, இந்தியாவின் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வண்டிய பொறுப்பில் இருக்கும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ இது ஒரு சாதாரண உள்ளூர் சம்பவம் இதை அரசியலாக்குகிறார்கள் ஊடகங்கள் பெரிது படுத்துகின்றன" என்று கூறி இருக்கிறார். எது சாதாரண சம்பவம்? 

சம்பவம் நடந்த தாத்ரியில் ஒரு இந்துக் கோயிலில் இந்து சகோதரார்கள் கைதட்டி பஜனைப் பாடல்கள் பாடிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த சில குண்டர்கள் நம்மை அவமானப்படுத்த வேண்டுமென்பதற்காகவே ஒரு முஸ்லிம் பசுவைக் கொன்று கறி சமைத்திருக்கிறான் அதற்கு நாம் பழி வாங்க வேண்டுமென்று உசுப்பேத்திவிடவும் பஜனையில் ஈடுபட்டிருந்த கூட்டம் வெறிகொண்டு அக்லக்கின் வீடு நோக்கிக் கிளம்பி அவர்கள் சொன்னது எதையும் காதிலே வாங்கிக் கொள்ளாமலேயே செங்கல்லால் அடித்தே அக்லக்கை கொன்று இருக்கிறது இப்படி ஊர் கூடி ஒருவரை அடித்துக் கொள்வது சாதாரண சம்பவமா? இதுபோல சம்பவங்கள் இந்தியா முழுதும் நடந்தால் மத்திய உள்துறை அமைச்சர் கைகளை கட்டிக கொண்டு சாதாரண சம்பவம் என்று சல்லாபக் கட்டிலில் சாய்ந்து படுத்திருப்பாரா?

நாடெங்கும் நடைபெற்ற விவாதங்களில் கலந்து கொண்டவர்களில் தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் பொருளாளர் எஸ் ஆர் சேகர் என்பவரும் முக்கியமானவர். தாத்ரி படுகொலை பற்றி இவர் எடுத்துவைத்த வாதம் என்னவென்றால் பசுவதை தடை சட்டம் அமுலில் உள்ள மாநிலத்தில் சட்ட மீறுதல் நடந்திருக்கிறது அதனால் வெகுண்டேழுந்த மக்கள் இவ்வாறு செய்துவிட்டாகள் என்று சொல்லி இருக்கிறார். எஸ் ஆர் சேகர் கூறுவதை நாம் எஸ் ஸார் என்று சொல்ல முடியாது இருந்தாலும் ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொண்டு நாம் கேட்க விரும்புவது என்னவென்றால் பசுவதை சட்டம் அமுலில் உள்ள இடத்தில் அதை மீறினால் அதற்கு தண்டனை தருவதற்கு அந்த சட்டப்படித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமா அல்லது தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் ஆகவேண்டுமா? என்பதுதான். பல கொடிய குற்றங்களைச் செய்தவர்கள் மீதெல்லாம் வருடக்கணக்காக வழக்குகளை நடத்திக் கொண்டிருப்பானேன். ஒவ்வொரு குற்றவாளிகள் வீட்டுக்கும் ஆயிரம் அடியாட்களை அனுப்பி அடித்துக் கொல்ல வேண்டியதுதானே! இவர்களில் முதல் பட்டாளத்தை மத்தியப் பிரதேசத்துக்கு அனுப்பி வியாபம் ஊழலில் ஈடுபட்டவர்களை கொலை செய்த குற்றவாளிகளின் வீடுகளுக்கு அனுப்ப வேண்டியதுதானே. இரண்டாவது பட்டாளத்தை தேடப்படும் குற்றவாளியான லலித் மோடிக்கு உதவிய உன்மத்தர்களின் வீடுகளுக்கு அனுப்ப வேண்டியதுதானே. இந்த நாட்டில் வீதிக்கொரு சாதி ஆளுக்கொரு நீதி யென்று அட்டூழிய ஆட்சியை தொடர்ந்து நடத்த இயலுமென்று எண்ணிக் கொண்டு இவ்வாறெல்லாம் பேசுகிறார்களா? 

அடுத்ததாக, தரங்கெட்ட பேச்சுக்களுக்காகவே நாட்டில் ஒரு விருது வழங்கப்பட வேண்டுமென்றால் தனது விலங்கினத் தோழர்களுடன் சேற்றில் புரளத் துடிக்கும் பாரதீய ஜனதாவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜாவுக்குத்தான் வழங்கப்பட வேண்டும். அந்த அளவுக்கு தரக்குறைவாகப் பேசுவதற்கு, அகில இந்தியாவிலும் இவரை விட்டால் ஆள்கிடைக்காது. இவரது அடக்க இயலாத நாவின் அத்துமீறலான பேச்சுக்கு ஆயிரம் உதாரணங்கள் உள்ளன. தந்தை பெரியாரை செருப்பால் அடிக்க வேண்டுமென்றார்; வை. கோ பத்திரமாக வீட்டுக்குப் போக இயலாது என்றார்; முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது பரீட்சைகளில் காபி அடிக்கவே என்றார். இப்போதும் ஏதோ முஸ்லிம்களை அவமானப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு ஏற்கனவே தரம் தாழ்ந்து போயிருக்கும் இவர் இன்னும் தன்னையே தரம் தாழ்த்திக் கொண்டு ஓர் கருத்தை சொல்லி இருக்கிறார். 

ஹெச் ராஜா , அந்தக் கருத்தை சொல்ல வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்றால் மாட்டுக் கறி வைத்திருந்தார் என்ற குற்றத்துக்காக அநாதரவாக இருந்த முகமது அக்லக்கை அடித்துக் கொன்றீர்களே இதோ நாங்கள் மாட்டுக் கறி விருந்தே வைக்கிறோம் முடிந்தால் வந்து பாருங்கள் என்று நாடெங்கும் ஊடகங்களில் அழைப்பிதழ் கொடுத்து மாட்டுக் கறி பிரியாணி, கபாப், வறுவல், மசாலா போன்ற பல சுவைதரும் அயிட்டங்கள் பரிமாறப்பட்டன. தமிழ்நாட்டில் , தலைநகர் சென்னை முதல் திண்டுக்கல் , திருச்சி, மதுரை, சேலம் முதலிய பெரு நகரங்களிலிருந்து சிறிய கிராமம் வரை இத்தகைய விருந்துகள் நடத்தப்பட்டன. சமூக வலைதளங்களில் அவற்றின் வண்ணப்படங்கள் வெளியிடப்பட்டன. 

இவைகளைப் பார்த்த ஹெச் ராஜாவுக்கு தானும் ஏதாவது சொல்லவேண்டுமென்று ஒரு அரிப்பு. நீங்கள் மாட்டுக் கறி விருந்து வைத்தால் நாங்கள் பன்றிக்கறி விருந்து வைப்போம் என்று சொல்லி இருக்கிறார். பன்றிக் கறி விருந்து வைக்கிறார் என்றால் முஸ்லிம்கள் கொதித்து எழுவார்கள் அதனால் கலகம் வரட்டும் என்று தப்புக் கணக்குப் போட்டு அந்த வார்த்தைகளை சொல்லி இருக்கிறார். தனது தொழிலில் இவர் ஒரு சார்டட் அக்கவுண்டன்ட் ஆனால் அரசியலில் அல்லது ஆன்மீகத்தில் இவர் போடும் கணக்கு தவறானது என்பதை ஹெச் ராஜா உணரவேண்டும். 

இஸ்லாம் பன்றிக் கறிக்கு எதிரானது ; இது பற்றி திருக் குர் ஆன் தடைகளை விதிக்கிறது அதனால் நாம் பன்றிக்கறி விருந்து வைப்போம் என்று தனது அரைகுறை அறிவை வைத்து சிந்தித்து இருக்கிறார். ராஜா அவர்களுக்கு சொல்லிக் கொள்வோம். ஆமாம் ! இஸ்லாம் பன்றிக்கறியை தடை செய்துதான் இருக்கிறது. ஆனால் அது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல ; ஒட்டு மொத்த மனித சமூகத்துக்கே அந்தத் தடை. காரணம் திருமறை குர் ஆன் அகில உலகத்துக்குமே அருட்கொடையாக அருளப்பட்டது. உலகமக்கள் நல்ல உடல்நலத்தோடு இருக்க வேண்டுமென்று அவர்களைப் படைத்த அல்லாஹ் காட்டிய வழி அது.

இஸ்லாத்தை பற்றிய தவறான புரிந்துணர்வில் இருக்கும் ராஜா போன்றவர்களுக்கு அன்புடனும் பண்புடனும் அவர்களுடைய தவறான புரிந்துணர்வை நீக்கும் நோக்கத்தில் கீழ்க்காணும் சில அறிவியல் ரீதியான உணமைகளை சொல்லிக் காட்டுவோம்.. காரணம் நாங்கள் கற்ற தாவா என்கிற அழைப்புப் பணியில் பிற மத சகோதரர்களுடைய தவறான புரிந்துணர்வை நீக்கும்வண்ணம் உண்மைகளைச் சொல்வதும் ஒரு அம்சம் 

மனித குலத்துக்கு வழிகாட்ட திருமறை குர் ஆனை தந்து அருட் தூதர் மூலம் இறக்கி வைத்த இறைவன் கீழ்க்கண்ட தனது வசனங்களில் பன்றிக்கறியைத் தடை செய்து இருக்கிறான். 
  • 1. "தானாகவே செத்ததும் இரத்தமும் பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாதவற்றுக்காக அறுக்கப்பட்டதையும் தடை செய்து இருக்கிறான்" (2: 173)
  • 2. தானாக செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவருக்காக அறுக்கப்பட்டதும் ,கழுத்து நெரித்து செத்ததும் அடிபட்டுச் செத்ததும் கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டபட்டு செத்ததும் விலங்குகள் கடித்து செத்தவையும் உங்களுக்கு விலக்கபட்டிருக்கின்றன. ( 5:3)
  • 3. நபியே! நீர் கூறும் தானாக இறந்ததாக அல்லது ஒட்டப்பட்ட இரத்தமாக அல்லது பன்றிக் கரியின் மாமிசமாக உள்ளதைத் தவிர வேறு எதையும் உண்பவருக்கு அது உண்ணத் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை . ஏனெனில், நிச்சயமாக அவை அசுத்தமானதாகும். ( 6 : 145)
  • 4. நீங்கள் புசிக்கக்கூடாது என்று உங்களுக்கு அவன் தடுத்திருப்பவையெல்லாம் தானே செத்ததும், இரத்தமும், பன்றியின் இறைச்சியும் எதன் மீது அல்லாஹ் அல்லாத வேறு பெயர் கூறப்பட்டு அறுக்கபட்டதோ அதுவுமேயாகும். ( 16:115 )
மேற்கண்டவாறெல்லாம் , பன்றிக்கறியை திருமறையில் தடை செய்துள்ள இறைவனும் அதை எடுத்துச் சொல்லிய இறைத்தூதர் நபி ( ஸல்) அவர்களும் இந்தத் தடைக்கான காரணத்தைக் கூறவில்லை. தனது திருமறை முழுதும் மனிதனை சிந்தித்துப் பார்க்கச் சொன்னான். 

அதன்படி , ஆறறிவு படைத்த மனிதன் அறிவியல் ரீதியாக ஆராய்ந்தான். பன்றிகள் தனது மலத்தையும் மனிதர்களின் மலத்தை உண்பதாலும், சாக்கடைச சேற்றில் புரள்வதை தங்களின் உயிர்நாடியாக வைத்திருப்பதால் தான் பன்றியின் மாமிசம் அசுத்தமானதாக இருக்கலாம் அதனால் தடை செய்யப்பட்டு இருக்கலாம் என்று என்று சிலர் மேம்போக்காகக் கருதினர். 

இதுதான் காரணம் என்றால் மலத்தை உண்ணும் மாடு, கோழி போன்ற எத்தனையோ உயிரினங்களை ஏன் தடை செய்யவில்லை என்றும் மனிதன் தனக்குள் கேள்வியை எழுப்பிக் கொண்டான். சாக்கடையில் புரளும் பன்றிகள் மட்டுமல்ல மலத்தை உண்ணாத அளவில் சுகாதார சூழ்நிலையில் பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகள் கூட தடை செய்யப்பட்டிருக்கிறதே ஏன் என்று அதையும் தாண்டி விரிவாக மனிதன் சிந்தித்தான்.

அந்த சிந்தனையின் பலனாக ஆய்வாளர்களுக்கு , அறிஞர்களுக்கு பல உண்மைகள் வெளிப்பட்டன. அவர்கள் கண்டு பிடித்த உணமைகளின் ஒட்டுமொத்த முடிவு பன்றியின் மாமிசம் மனித உடம்புக்கு ஒவ்வாதது; தீங்கு விளைவிப்பது ; கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டியது என்பதுதான். 

முதலாவதாக பாரதீய ஜனதாகட்சியின் தேசியச் செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் வாய்க்கொழுப்பெடுத்து , பன்றிக்கறி விருந்து வைப்பேன் என்று அறிவிக்கும் முன்பு அவர் விருந்து வைக்கத் தேர்ந்தெடுத்த மெயின் அயிட்டத்தில் ( பன்றிக் கறியின் ) அடங்கி இருக்கும் உட்கூறுகளின் அறிவியல் தன்மைகளை ஆராய்ந்தாரா? 

மனிதன் சாப்பிடும் உணவுகளில் கொழுப்பு – கொலாஸ்டரால்- அவனது உடல் நலத்துக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை மருத்துவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இதயத்தின் இயக்கத்துக்கு கொழுப்பு கேடு விளைவிக்கிறது என்பது மருத்துவத்தின் முடிவு. 

ஹெச் ராஜா அவர்கள் தனது சுய புரிதலுக்காக வேண்டுமானால் ஒரு சோதனைக் கூடத்துக்கு ஆட்டுக்க்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி ஆகிய மூன்றிலும் 100 கிராம் வீதம் எடுத்துப் போய்க் கொடுத்து அவற்றின் கொழுப்பின் அடக்க விகிதத்தை சோதித்துப் பார்க்கட்டும் 100 கிராம் ஆட்டிறைச்சியில் 17 கிராம் கொழுப்பும் 100 கிராம் மாட்டு இறைச்சியில் 5 கிராம் கொழுப்பும் 100 கிராம் பன்றி இறைச்சியில் 50 கிராம் கொழுப்பும் உள்ளது என்கிற உண்மையை அவர் தெரிந்து கொள்வார். அதாவது பாதிக்குப் பாதி கொழுப்பு பன்றி இறைச்சியில் உள்ளது. இஸ்லாம் ஏன் பன்றி இறைச்சியைத் தடை செய்துள்ளது என்பது அப்போதாவது அவருக்குப் புரியுமா? .

அடுத்து ஹெச் ராஜா அவர்கள் செல்ல வேண்டிய இடம் ஒரு கால்நடை மருத்துவமனை. அங்கு போய் அங்குள்ள மருத்துவரிடம் கால்நடைகளின் உடற்கூறு அமைப்பைபற்றி அவர் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். வியர்வைச் சுரப்பிகள் என்பவை இறைவனால் மனித உடலில் அமைக்கப்பட்டுள்ள அதிசயங்களில் ஒன்று. இவை கால்நடைகளுக்கும் உள்ளன. 

உடல் சூடாகும்போது தானாகவே வியர்வை சுரந்து வெளியாகி உடல் சூட்டை தணிக்கும் அத்துடன் உடலுக்குத் தேவையற்ற உப்பு முதலிய ஒவ்வாதவைகளும் நீராக வெளியேற்றப்படும். அதனால்தான் வியர்வை நாறுகிறது. . பன்றிக்கு இந்த வசதி கிடையாது. அதாவது மிருகங்களில் பன்றிக்கு வியர்வை சுரப்பி கிடையாது. மனிதர்களும் பன்றி அல்லாத மற்ற உயிரினங்களும் 40 டிகிரி சென்டிகிரேட் அதற்கு மேலும் உடல் சூட்டை தாங்கிக் கொள்ள இயலும் காரணம் வியர்வை சுரப்பிகள் சுரக்கும் வியர்வையின் நீர்த்தன்மையால் உடல் குளிர்ந்து விடுகிறது. . . ஆனால் பன்றிக்கு 29 டிகிரி செண்டிகிரேடுக்கு மேல் உடல் சூட்டைத் தாங்க இயலாது. அதனால்தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பது போல் சேறு கண்ட இடங்களிலும் சாக்கடைகளிலும் அவை படுத்துப் புரளுகின்றன. 

இதற்கு அடுத்து ஹெச் ராஜா அவர்கள் செல்லவேண்டிய இடம் மைக்ரோ பையாலஜி என்கிற நுண்கிருமிகள் பற்றிய ஆய்வுக்கூடம்.

பன்றியின் இறைச்சியில் மனிதனுக்குக் கேடு செய்கின்ற நாடாப் புழுக்கள் என்ற நுண்கிருமிகள் உள்ளன என்று 2007- ல் கொலம்பியா பல்கலைக் கழகம் கண்டு பிடித்து இருக்கிறது. எவ்வளவு அதிகபட்ச வெப்பத்தில் சூடாக்கி சமைத்தாலும் இந்தப் புழுக்கள் சாவதில்லை. பெருங்குடல் புற்று நோய் போன்ற வியாதிகள் ஏற்பட இந்த நாடாப்புழுக்களே காரணமாகின்றன.. மூளைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், இதய வீக்கம் உள்ளிட்ட 66 நோய்கள் பன்றி இறைச்சியை உண்பதால் ஏற்படுவதை மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.

பன்றி உணவை தடை செய்துள்ள அரபு முதலிய இஸ்லாமிய நாடுகளில் இதய வீக்கம் என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களை விட, பன்றியை உணவாகக் கொள்ளும் ஐரோப்பாவில் இதய வீக்கம் உள்ளவர்கள் ஐந்து மடங்கு அதிகமாக உள்ளனர். என்று ஆய்வுகள் கூறுகின்றன. 

ப‌ன்றி இறைச்சியை உண்ப‌தால் "டேனியா சோலிய‌ம்" Taenia Solium (Pork Tapeworm) என்ற‌வொரு புழு, ந‌ம் உண‌வுக்குழ‌லின் அடிப்பாகத்தில் அட்வான்ஸ் தராமல் குடியேறி, அதே பகுதியில்  தன் முட்டைகளை (Ova) இடுகிறது. இந்த முட்டைகள் தான் மிகவும் ஆபத்தானவை. இவை மனிதனின் இரத்த குழாய்களில் பயணிப்பதால் அதன் மூலம் எல்லா உறுப்புகளையும் சென்றடைந்து விடுகின்றன. மனித உடல் உறுப்புகளில் எந்த பகுதிக்கு இந்த முட்டைகள் பரவினாலும் அங்கே ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விடும். இத‌ய‌ம், மூளை, க‌ண், நுரையீர‌ல் என‌ எல்லா இட‌ங்க‌ளிலும் இந்த டேனியா சோலிய‌த்தின் முட்டைக‌ள் கைவ‌ரிசையைக் காட்டுகின்ற‌ன.

டேனியா சோலியம் என்ற புழுவைப் போன்றே இன்னுமொரு புழு உயிரினம் "ட்ரிசுரா ட்ரிசுராஸிஸ்" (Trichura Tichurasis) பன்றி மாமிசத்தின் மூலம் தான் இதுவும் மனித உடலில் பரவுகிறது .டேனியா சோலியமும் இந்த ட்ரிசுராவும் ஒரே மாதிரியான குணமுள்ள உறவினர்கள்தான்.

ஆனால் இந்த புழுக்களின் முட்டைகள், பன்றி இறைச்சியை நன்கு சமைப்பதால் இறந்து விடுகின்றன என்பது எல்லோர் மத்தியிலும் இருக்கும் பொதுவான தவறான கருத்து. .அமெரிக்காவில் பலமுறை நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ட்ரிசுராஸிஸ்-ஆல் பாதிக்கப்பட்ட 24 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 22 பேர் பன்றிகறியை கருகக் கருக நன்கு சமைத்து உண்டவர்கள்தான். ஆகவே, இந்த புழுக்களின் முட்டை நீரின் கொதிநிலையில் இறப்பதில்லை.

பன்றிக் காய்ச்சல் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். எங்காவது மாட்டுக் காய்ச்சல் , ஆட்டுக் காய்ச்சல் என்று கேள்விப்பட்டு இருக்கிறோமா? "இன்ஃபுளூயன்ஸா ஏ எச்1 என்1' வைரஸ்தான் பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இதுதான் முதலில் "ஸ்வைன் ஃப்ளூ' என்று அழைக்கப்பட்டது. இந்த வைரஸ் முதன்முதலில் மெக்ஸிகோவில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது இந்தியா உள்பட 76 நாடுகளுக்குப் பரவியுள்ளது. வட அமெரிக்காவில் உள்ள பன்றிகளில் காணப்படும் வைரஸ் , இந்த வைரஸுடன் ஒத்திருப்பதால் முதலில் "ஸ்வைன் ஃப்ளூ' என அழைக்கப்பட்டது.

இன்னொரு செய்தியும் இருக்கிறது ஆனால் அதை ஹெச் ராஜா அவர்கள் தேவையானால் பயன்படுத்தலாம். அர்ஜென்டினாவில் அதிபர் மாளிகையில் வர்த்தகர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் அந்நாட்டின் அதிபர் கலந்துகொண்டு பேசும்போது தற்போது பாலின உணர்வைத்தூண்டுவதற்காக வயாகரா என்கிற மாத்திரை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பன்றியின் இறைச்சி அதைவிடச் சிறந்தது என்று பேசினார். அதை தனது சொந்த அனுபவத்தில் தானும் தனது கணவரும் உணர்ந்து இருப்பதாகப் பேசினார் அந்தப் பெண் அதிபர். ஒரு வேளை பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில் தனது கட்சியின் உறுப்பினர்கள் இன்புற்று வாழ அந்தக் கட்சியின் தேசிய செயலாளர் பன்றிக்கறி விருந்தை ஏற்பாடு செய்வதில் யாருக்கும் மாறுபட்ட கருத்தில்லை. மனைவியைப் பிரிந்து இருக்கும் பிரதமர், அதில் கலந்துகொண்டால்தான் கஷ்டம்.

பன்றிக்கறி இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டு இருக்கலாம். அந்தத்தடை மனித குலத்தின் நன்மையைக் கருதிய தடை. ஆனால் இவ்வாறு இஸ்லாம் தடை செய்த பன்றிக்கறியை மற்ற மத சகோதரர்கள் சாப்பிடக் கூடாது என்றோ பன்றிகளை வளர்க்கக் கூடாது என்றோ எந்த முஸ்லிமாவது எப்போதாவது எங்காவது போராட்டம் நடத்தி இருக்கிறானா? பன்றிக்கறி சாப்பிடுபவன் வீட்டிலோ அல்லது கடைகளிலோ வன்முறையைப் பயன்படுத்தி தடுத்திருக்கிறானா? முஸ்லிம்களுக்கு தடை செய்யப்பட்டதை விட்டு அவன் விலகி இருக்கிறான். அவ்வளவுதான். இவ்வாறிருக்க முஸ்லிம்களுக்கு எதிராக சொல்வதாக நினைத்துக் கொண்டு திரு ராஜா சாக்கடையில் புரளும் தனது சக நண்பர்களை அறுத்து சோறு சமைத்து விருந்து வைக்க விரும்பினால் அது அவரது இஷ்டம். குடல் நோய் ஏற்பட்டு, மாரடைப்பு ஏற்பட்டு, காமக்கொடூரனாகி வாழ வேண்டுமென்றால் பன்றிக்கறியை பட்டி தொட்டி எங்கும் பரப்பிவைத்து அவர்கள் சாப்பிடட்டும். எந்த முஸ்லிமும் இதற்காக, அவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதைதவிர வேறு ஒன்றும் செய்யப்போவதில்லை. சீண்டுகிறேன் என்று சீரழிய வழி தேடுபவர்களைப் பார்த்து சிரிப்பதைத் தவிர ஒன்றுமில்லை. அறிவியல் ரீதியாக அல்லாஹ் வகுத்துத் தந்த ஹராம் ஹலால் பேணி , மறை 
வழி நடப்பதைவிட ஒரு முஸ்லிமுக்கு வேறு ஒன்றுமில்லை. 

இப்ராஹிம் அன்சாரி

பசுமை அதிரை 2020 - WE SUPPORT ! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | October 10, 2015 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும்.

முகநூல் என்பது வெறும் பொழுது போக்கு அதில் பயனுள்ள காரியங்களை சாதிக்க  இயலாது என்று ஒரு வாதம் உலவுதல்  உண்டு. ஆனால் அதையும் பயனுள்ள காரியங்களுக்குப் பயன்படுத்தலாம் என்பதை  சிந்தித்து இந்தக் குழுவை உருவாக்கி நமது ஊரைச் சேர்ந்த பலரை இதில் இணைத்து இருக்கிறார்கள். 

நமது ஊரைச் சார்ந்த பல பிரச்னைகள் , கருத்துக்கள் இங்கே விவாதிக்கப்படுகின்றன. இதுவரை பயனுள்ளதாக எதையும் நாம் செய்யவில்லை என்றாலும்  சில சிந்தனைகளின் பிறப்பிடமாகவும் சில செயல்பாடுகளின் களமாகவும் இந்தத் தளம் அமைந்திருப்பதையும் உருவெடுத்து வருவதையும்  மறுக்க இயலாது. 

அந்த வகையில் அதிரை பசுமை 2020 என்ற ஒரு அழகிய  கருத்து இந்தக் குழுவால் முன்னெடுக்கப்பட்டு திட்டமிடப்பட்டு இருக்கிறது. நான் அறிந்த வரை இந்தத் திட்டத்தில் கீழ்க்கண்ட     பணிகளை முன்னோடியாக செயல் படுத்த  இருக்கிறோம். 
  • 1. ஊரைச் சுற்றியுள்ள  காட்டுக் கருவைச் செடிகளை வேரோடு பிடுங்கி வீசி எறிவது. 
  • 2. நீர் நிலைகளில் , நீர்நிலைகளைச் சுற்றியுள்ள கரைகளில் முளைத்திருக்கும் காட்டுக் கருவை முதல் ஆகாயத் தாமரை, கோரைப்புல்  முதலிய ஆக்கிரமிப்புச் செடிகளை அகற்றுவது 
  • 3. காட்டுக் கருவை அழிக்கப்பட்ட இடங்களில் வாய்ப்புள்ள இடங்களில் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத புங்கை, புன்னை, செம்மரம், வேம்பு, வேப்பங்கன்றுகள் ஆகிய மரக்கன்றுகளை நடுதல் 
  • 4. இராஜமடம் ரயில்வே கேட்டிலிருந்து  முத்தம்மாள் தெரு முனை வரை சாலையின் இரு புறமும் மரக் கன்றுகளை நடுவது
  • 5. முத்தம்மாள் தெரு முனையிலிருந்து தக்வா பள்ளி ஆட்டோ ஸ்டாண்ட் வரை சாலையின் இரு புறமும் மரக்கன்றுகளை நடுவது 
  • 6. கருங்குளம் பாலத்திலிருந்து மாரியம்மன் கோயில் ஆர்ச் வரை சாலையின் இருபுறமும்  மரக்கன்றுகளை நடுவது 
  • 7. நடுவிக்காடு சாலைப் பிரிவு முதல் வண்டிப்பேட்டை வரை சாலையின் இரு புறமும் மரக்கன்றுகளை நடுவது 
  • 8. மழைவேனிற்காடு ( எவ்வளவு அழகான பெயர்)  மில் முதல் வண்டிப்பேட்டை வரை சாலையின் இருபுறமும் மரக் கன்றுகளை நடுவது 
  • 9. நடுத்தெருவிலிருந்து மறைக்கா பள்ளி செல்லும் சாலை வழியாக ஒரு புறம் நெசவுத்தெரு மறுபுறம் மேலத்தெரு கடைசி வரையும்  மரக்கன்றுகளை நடுவது 
  • 10. இ சி ஆர் சாலையிலிருந்து  ரயில்வே சதேஷ செல்லும் சாலையிலும் இரு புறமும் மரக்கன்றுகளை நடுவது  
  • 11. பட்டுக் கோட்டை சாலைப் பிரிவிலிருந்து சி. எம். பி கால்வாயின் இருபுறமும் வள்ளியம்மை நகர் வரை மரக்கன்றுகளை நடுவது 
  • 12. பிளாஸ்டிக் உபயோகத்தை தடுக்கும் விதமாக இந்தக் குழு உறுப்பினர்கள் தங்களின் சொந்த பண்பாட்டிலும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் பிளாஸ்டிக்கை அறவே பயன்படுத்தாமல் மற்றவர்களுக்கு வழி காட்டுவது 
ஆகிய திட்டங்களை இந்த தாயபுள்ளைவோ  குழு ஆரம்ப கட்டமாக பரிந்துரைக்கிறது. தொடர் பணிகளை இதற்காக அமைக்கப்படும் குழுவினரின் தேவைக்கேற்ற பரிந்துரையின்படி செயல்படுத்த முயல்வோம்.  

கருவைச்செடி அழிப்பு, மரக்கன்று நடல் ஆகிய பணிகளுக்காக  கல்லூரி , பள்ளி மாணவர்களை களமிறக்கத் திட்டமிட்டு இருக்கிறோம். அதற்காக முதல்வர் மற்றும் தலைமை ஆசியர்களை முதல் கட்டமாக சந்தித்துப் பேசி இருக்கிறோம். மேலும் சில  பணியாட்களையும் நியமிக்க நேரிடும். அவர்களுக்கு ஊதியம் கொடுக்க நேரிடும்.  

மரக் கன்றுகள் பல  இலவசமாகவும்  கிடைக்க ஏற்பாடு செய்து இருக்கிறோம். அத்துடன் வெளிநாடுகளிருந்து மரக் கன்றுகளுக்காக பொருளுதவி செய்யவும் பலர்  போட்டி போடுகிறார்கள். மேலும் கன்றுகள் நடப்பட்டபின் அதற்கான இரும்புக் கூண்டுகளை அமைக்கவும் பலர் பொறுப்பேற்க வேண்டும். அல்லது திரட்டப்படும் நிதியிலிருந்து அவற்றை இந்தக் குழு வழங்கும். 

ஜே சி பி போன்ற இயந்திரங்களை வாடகைக்கு எடுக்க, பணி செய்வோருக்கு குடி தண்ணீர், காலை உணவு, தேநீர் ஆகியவற்றை வழங்க கணிசமாக பொருட்செலவு ஏற்படும். அவற்றை தந்து உதவ பல நல்ல உள்ளங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. 

அந்தந்த மொஹல்லாவில் கன்றுகள் நடுவதற்கு அந்தப் பகுதியின் வயதானப் பெரியவர்களை அழைத்து அவர்களது கரங்களால் நடச்செய்ய வேண்டுமென்றும் குறிக்கோள் வைத்து இருக்கிறோம்.   அந்தந்த தெருக்களில் நடப்படும் கன்றுகளை அந்தந்த தெருவினர் பராமரித்துக் கொள்ள கோரிக்கைவிடப்படும்.  

இந்தப் பணிகளை   நிர்வாகப்படுத்துவதற்காக ஒரு குழுவை அமைப்பது தொடர்பாக வரும் வாரங்களில் பேரூராட்சித் தலைவர்  , பேராசிரியர் அப்துல் காதர் , கல்லூரி முதல்வர், தலைமை ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பின் நிர்வாகிகள், ஊர்ப் பெரியவர்கள், அனைத்துத் தெரு மொஹல்லா தலைவர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், இணைய தள நிர்வாகிகள், இயக்கங்கள் மற்றும் பொதுநல சங்க நிர்வாகிகள்  ஆகியோர் கலந்து கொள்ளும் ஒரு கலந்துரையாடலை தொடக்கமாக ஏற்பாடு செய்ய இருக்கிறோம். அந்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். 

இந்தக் கலந்துரையாடலுக்குப் பிறகு பசுமை அதிரை என்ற பெயரில் ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டு இதற்காக வழங்கப்படும் நிதியைக் கையாள ஒரு பொருளாளர் நியமிக்கபடுவார். இவற்றை மேற்பார்வை இடவும் திட்டம் மற்றும் செலவுகளுக்கு ஒப்புதல் அளிக்கவும் தலைவர்  உள்ளிட்ட  ஒரு குழுவும் நியமிக்கப்படும்.  

தொடக்கமாக, உள்ளூரில் மக்கள் தொடர்பு மற்றும் அரசு தொடர்பான காரியங்களை  மேற்கொள்ள அதிரை நியூஸ் வலைதளத்தின் தலைமை நிர்வாகி ஷேக்கனா  நிஜாம் அவர்கள் முன்வந்து இருக்கிறார்கள்.  

இந்தப் பணி முழுக்க முழுக்க ஒட்டுமொத்த சமுதாய நலனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. அரசியல் , தனி நபர், சாதி, சமய  வேறுபாடுகள் அல்லது விளம்பரங்கள் இல்லாமல் மனமார்ந்த அர்ப்பணிப்போடு மட்டுமே மேற்கொள்ளப்படும். 

இந்தப் பணியில் கரம் கோர்க்க விரும்பும் வெளிநாடு , உள்ளூரில் இருக்கும் நண்பர்கள் தங்களின் விருப்பத்தை இந்தப் பணிக்கான தொடர்புக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும்   0091 – 8148440853 என்ற அலைபேசியில் தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளலாம். பதியும் நேரம் எல்லா நாட்களிலும் இந்திய நேரம் காலை 6 மணி முதல் 9 மணி வரையும் , பிற்பகல்  4 மணி முதல்  10 மணி வரையும் ஆகும். 

தாய புள்ளையலுவொ முநூல் குழுமத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருப்பவர்கள் அல்லது இணைய இருப்பவர்க்ள் தங்களது மனதைத் திறந்த கருத்துக்களை அந்த குழுமத்தில் எடுத்துரைக்க அன்போடு அழைக்கிறோம் !

இந்த நற்பணியில் அனைவரும் தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்து கரம் கோர்க்கும்படிக் கோருகிறோம்.  

இந்தப் பணி பற்றிய தங்களின் அன்பான கருத்துக்களையும் அன்பான மேலதிக பதிவிட வேண்டுகிறோம். 

வஸ்ஸலாம். 

இப்ராஹிம் அன்சாரி


சீனி சக்கரை சித்தப்பா சீட்டிலே எழுதி நக்கப்பா – எபிசோட் எண் இரண்டு 8

அதிரைநிருபர் பதிப்பகம் | October 03, 2015 | , , , , , ,

தமிழ் மொழியில் தலையாயதும் அழகானதும் உணர்வுபூர்வமானதுமான வார்த்தை என்ன என்று கேட்டால் “அம்மா “ என்றுதான் அனைவரும் சொல்வார்கள். இன்று தமிழ்நாட்டைப் பொறுத்தவரை “ அம்மா” என்கிற வார்த்தைக்குப் பொருளும் புகழும் சக்தியும் - அந்த வார்த்தையின் உண்மைப் பொருளைவிடவும் - அதிகமாகும். காரணம் தமிழகத்தின் முதல்வரின் பெயர் செல்வி ஜெயலலிதா என்று சொல்பவர்களைவிட அம்மா என்று சொல்பவர்கள்தான் அதிகம். அம்மா என்றால் என்ன என்று யாராவது கேள்வி எழுப்பினால் அடிமைப் பெண் என்ற திரைப்படத்தில் இன்றைய தமிழக முதலமைச்சர் அவர்கள் தனது சொந்தக் குரலில் பாடிய ஒரு முழுப் பாடலையே நாம் பதிலாகக் சொல்லாம்.

“அம்மா என்றால் அன்பு
      அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி “

- என்று தொடங்கும் அந்தப் பாட்டில்

“அன்பின் விளக்கம் பண்பின் முழக்கம்
          அம்மா என்றொரு சொல்லில் உண்டு
பத்துத் திங்கள் மடி சுமப்பாள் பிள்ளை
          பெற்றதும் துன்பத்தை மறப்பாள்
பத்தியமிருந்துக் காப்பாள் தன்
          ரத்தத்தைப் பாலாக்கிக் கொடுப்பாள் ” 

என்றெல்லாம் செல்வி ஜெயலலிதா  அம்மாவின் தன்மைகளைப் புகழ்ந்து பாடி இருப்பார்.

இவர் இப்படிப் பாடாவிட்டாலும் கூட ,  உலகில் பிறந்த அனைவரையும் அன்பால் கட்டிப் போடும் ஒரு மந்திரச் சொல்தான் அது . அம்மா என்கிற வார்த்தைக்கு இவ்வளவு மகிமை ஏற்படக் காரணம் அம்மா என்பவள் ஒரு ஒப்பற்ற தியாகி; இருக்கும் பிடி சோறும் தனக்கென எண்ணாமல் பிள்ளைக்கு ஊட்டி மகிழ்கிற தேவைதை அவள்; ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம் அம்மாவை வாங்க முடியாது. இரண்டு நிமிடம் கூட இறக்கிவைக்க இயலாமல் அந்த சுமையை பத்துமாதம் சுமந்து பெற்று பாலூட்டி வளர்ப்பவள் அம்மா. பெற்ற பிள்ளைகளிடம் பாசமுள்ள அம்மா பொய் சொல்ல மாட்டாள்; பெற்ற பிள்ளைகளை பாசமுள்ள அம்மா ஆசைகாட்டி மோசம் செய்ய மாட்டாள். பெற்ற பிள்ளைகளை அம்மா பேணி வளர்க்க தன்னையே தியாகம் செய்வாள். பிள்ளைகள் கேட்பதையும் கேட்காததையும் கூட குருவி,  கூட்டில் வாழும் தனது  குஞ்சுகளுக்கு இரை தேடிக் கொடுப்பது போல் கொடுப்பாள். கோழி தனது குஞ்சுகளை தனது இறக்கைகளுக்குள் அணைத்துப் பாதுகாப்பது போல் பாதுகாப்பாள்  அவள்தான் அம்மா; உண்மையான அம்மா.

மேற்கண்டவைகள் சுருக்கமாக,  பொதுவான அம்மாமார்களுக்குரிய அழகான தன்மைகள்; உண்மைகள்.

குடும்பத்தில் வாழும் அம்மாக்களை விட ஆட்சி, அதிகாரம் , நினைத்ததை முடித்திட   இயன்ற ஆற்றல் ஆகிய யாவும் ஒருங்கே குவிந்து அமைந்த அம்மாவுக்கு தனது பிள்ளைகளிடம் இன்னும் அதிகமான அளவுக்கு  அன்பும் பாசமும் செலுத்த இயலும்; அவர்களுக்குத் தேவையானவற்றை தேடிக் கொடுக்கவும் அந்த  அம்மாவால் இயலும். அதுவும் இந்த அம்மாவால் இமயத்தைக் கூட கன்னியாகுமரியில் வைக்க இயலும் என்று அவரது கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பேசுகிறார்.

இப்போது அம்மாவை விட்டுவிட்டு அரசியலுக்கு  வருவோம்.

கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் மீது அதிருப்தி அடைந்த மக்கள் இன்னொரு முறை வாய்ப்புக் கொடுப்போமென்று நல்ல பெரும்பான்மையில் ஆட்சியமைக்கும் வகையில் அம்மையார் செல்வி ஜெயலலிதா அவர்களிடம் முதலமைச்சர் பொறுப்பை மீண்டும் வழங்கினார்கள். தமிழ்நாடு ஒரு தன்னிகரற்ற  மாநிலமாக – இந்தியாவிலேயே முதலிடம் பெரும் தகுதி படைத்த மாநிலமாக மாற்றிக் காட்டுவேன் என்று அம்மையார் அறைகூவினார்கள்; அம்மாவே சொல்லிவிட்டார்கள் ஆகவே முன்னேற்றம் நிச்சயமென்று மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்போது இந்த ஆட்சியின் ஐந்தாண்டுக் காலம் நிறைவடையும் நேரம் வந்துவிட்டது. இப்போது மக்கள் தராசுப் படிக் கற்களை தங்களின் கரங்களில் எடுத்து எடை போட ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த நான்கரை ஆண்டுகள்  ஆட்சியில் கட்சி சார்பில்லாத நம்மைப் போன்ற நடுநிலையாளர்களின் கண்களுக்குப் பளிச் என்று தெரிவது முதலமைச்சர் அம்மையார் அவர்கள் சட்டமன்றத்தில் 110 விதியின்  கீழ் அறிவித்த அறிவிப்புகள்தான். இந்த அறிவிப்புகளைப் பற்றி அலசும் முன்பாக, 110 விதி என்றால் என்ன என்பதை சொல்லி விடலாமென்று கருதுகிறோம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 208  வது பிரிவு,  1- வது உட்பிரிவின் ஷரத்துக்களின்படி தமிழ்நாடு சட்டமன்றத்தின் நடப்பு விதிகள் இயற்றப்பட்டிருக்கின்றன. இவற்றில்  23 அத்தியாயங்களும்  292 விதிகளும் உள்ளன. விதிகளில் உட்பிரிவுகளும் உள்ளன.. இந்த விதிகளின் அம்சங்களின் அடிப்படையில்தான் சட்டபேரவை , பேரவைத் தலைவரால் நடத்தப்பட வேண்டும். இந்த விதிகளின்படிதான் அமைச்சர்கள் முதல் அனைத்து உறுப்பினர்களும் சட்டமன்றத்தின் நடந்துகொள்ள வேண்டும்.  மேலே குறிப்பிட்ட  292 விதிகளுக்குள்தான் விதி எண்  110- ம் வருகிறது.

இந்த 110 – ஆம் விதி என்ன சொல்கிறது என்றால் ,

( 1 ) பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி ஓர் அமைச்சர் பேரவைத் தலைவரின் அனுமதியுடன் அறிக்கை ஒன்றை அவைக்கு அளிக்கலாம்

(2) அவ்விதம் அளிக்கப்படும் அறிக்கையின் மீது அவையில் எவ்வித விவாதமும் இருக்கக் கூடாது.

(3) உள் விதி  1- ன் கீழ் அறிக்கையளிக்க விரும்பும் அமைச்சர் எந்த நாளில் அந்த அறிக்கையை அவைக்கு அளிக்க இருக்கிறார் என்பதை பேரவைத் தலைவரின் பார்வைக்கு வைக்கவேண்டும். அதன் பிரதியையும் சட்டபேரவை செயலாளருக்கும் முன்கூட்டியே அனுப்பிவிட வேண்டும்.

இந்த ஏழெட்டு வரிகள்தான் இன்றைய தமிழக அரசியலை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் விதி 110 பற்றி அடிப்படையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியதாகும்.

இந்தவிதி எந்த நிர்வாகப்  பொதுநல நோக்கத்துக்காக கொண்டுவரப்பட்டது என்பதையும் தெரிந்து கொள்வோம்.

அவசர- அவசிய- தலைபோகிற- பட்ஜெட்டில் குறிப்பிடப்படாத- சூழ்நிலையின்  முக்கியத்துவம் கருதி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு பிரச்னையில் அரசு ஈடுபடப் போகிறது என்பதை அவைக்கு அறிவிக்கும் வாய்ப்பே இந்த விதியின் தலையாய நோக்கம். உடனடியாக செய்யவேண்டிய ஒரு பிரச்னையைப் பற்றி அவையில் விவாதித்துக் கொண்டிருந்தால் காலம் கடந்துவிடும் அதனால் பிரச்னை எல்லை மீறிவிடும் என்பதால் அவையில் விவாதிக்காமலேயே அரசு நடவடிக்கையில் இறங்குவதற்கு வழிவகுப்பது இந்த விதியின் முக்கிய அம்சமாகும்.

ஒரு அண்மைக்கால உதாரணத்தை நாம் குறிப்பிட வேண்டுமானால் புனித மெக்காவில் ஏற்பட்ட விபத்தால் பல நூற்றுக் கணக்கான ஹஜ்ஜாஜிகள் எதிர்பாராமல் இறைவனின் நாட்டப்படி மரணமடைந்தார்களே ( இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ) ,   அம்மாதிரியான நிகழ்வுகள் ஏற்பட்டால் ( அல்லாஹ் பாதுகாப்பானாக!) – சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் நிவாரண உதவிகளை அறிவிக்கலாம். சுனாமி, கடும் வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் எதிர்பாராமல் ஏற்பட்டால் அதற்கான விபரங்களையும் பரிகாரங்களையும் இந்த விதியின் கீழ் அறிவிக்கலாம்.  

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த விதியின் கீழ் வரும் அறிவிப்புகள் அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் சட்டபேரவைத் தலைவர் பி. தனபால் அவர்களே குறிப்பிட்டதைப் போல கின்னஸ் உலக சாதனையில் இடம் பெறத் தக்க வகையில் மொத்தம்  181 அறிவிப்புகளை 110 விதியின் கீழ் அறிவித்து இருக்கிறார். ( இந்து – தமிழ் 30/09/2015)  .

மேலே நாம் குறிப்பிட்டுள்ளபடி அவசர- அவசிய- தலைபோகிற- பட்ஜெட்டில் குறிப்பிடப்படாத- சூழ்நிலையின்  முக்கியத்துவம் கருதி ஏற்படுகிற பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு இந்த 181 அறிவிப்புகளும் உண்மையிலேயே பயன்பட்டிருக்கிறதா என்பதையும் அவ்வாறு அவசரமாக அறிவிக்கபப்ட்டவைகள் அதே  அவசரகதியில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றனவா என்பதையும்தான் நாம் காணவேண்டும்.  இவற்றைக் காண்பதற்கு முன் மாதிரிக்காக  இப்படி அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் எவ்வளாவு காலக்கெடுவில் அறிவிக்கப்பட்டன என்பதன் தொகுப்பை நாம்  காணலாம். .

2011ஆம் ஆண்டு 8-6-2011 முதல் 13-9-2011 அன்று வரை முதலமைச்சர் ஜெயலலிதா 110வது விதியின் கீழ் 19 அறிக்கைகளைப் படித்தார்.

2012ஆம் ஆண்டு 29-3-2012 முதல் 2-11-2012 அன்று வரை முதலமைச்சர் ஜெயலலிதா 61 அறிக்கைகளைப் படித்தார்.

2013ஆம் ஆண்டு 1-4-2013 முதல் 15-5-2013 அன்று வரை முதலமைச்சர் ஜெயலலிதா 46 அறிக்கைகளைப் படித்திருக்கிறார்.

2014ஆம் ஆண்டு 14-7-2014 முதல் 12-8-2014 அன்று வரை முதலமைச்சர் 39 அறிக்கைகளைப் படித்திருக்கிறார்.

இந்த அனைத்து அறிக்கைகளையும் ஒன்று சேர்த்துத்தான் தற்சமயம் நடைபெற்று நிறைவு பெற்ற சட்டமன்றத்தில் , பேரவைத் தலைவர் ஒட்டு மொத்தமாக 181 அறிவிப்புகளைப் படித்து இருக்கிறார் என்று பெருமையுடன் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த 181 அறிவிப்புகளிலும் பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் அறிவிப்புச் செய்து இருக்கிறார். அவைகளின் எண்ணிக்கை சற்றேறக்குறைய அறுநூறு திட்டங்களாகும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

வெளிப்படையாகப் பார்க்கும் போது,  மக்கள் நல அரசு இவ்வாறு அவசரமாக மக்களுக்காக திட்டங்களை அறிவித்து நிறைவேற்றுவது நல்லதுதானே என்றே தோன்றும். ஆனால் இப்படி அறிவிக்கப்பட்ட திட்டங்கள் யாவை என்று ஓரக்கண்ணால் பார்த்தோமானால் அவற்றுள் நமக்குத் தென்படும் சில குறிப்பிடத் தகுந்த அவசரமும் அவசியமும் மக்களுக்கு இன்றியமையாத – இந்தத் திட்டங்கள் நிறைவேறாவிட்டால் நாட்டில் பட்டினிச் சாவு போன்றவை  ஏற்பட்டு விடும் என்கிற அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் சில :

1. மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைப்பது
2. நடப்பாண்டு முதல் மகளிர் இலக்கியங்களைப் படைப்பதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தித் தொண்டாற்றி வரும் பெண் படைப்பாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் “அம்மா இலக்கிய விருது” என்ற புதிய விருது
3. பிறமொழி படைப்புகளைச் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்யும் 10 மொழி பெயர்ப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது வழங்கப்படும்.
4. பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் புகழைப் பரப்பிடும் வகையில் அவரின் 125-ஆவது பிறந்த நாளையொட்டி 125 கவிஞர்களைக் கொண்டு, இரண்டு நாள் கவியரங்கம் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும்.
5. தமிழ் மொழியின் அற நெறிக் கருவூலமான ஆத்திசூடியை சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
6. இலக்கணம், இலக்கியம் மற்றும் மொழியியல் துறைகளில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழறிஞர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும், சித்திரை தமிழ்ப் புத்தாண்டில் `உலகத் தமிழ்ச் சங்க விருதுகள்’ வழங்கப்படும். விருது பெறும் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் பண முடிப்பும் தகுதியுரையும் வழங்கப்படும்

மேலே நாம் குறிப்பிட்டிருக்கும் அனைத்துத் திட்டங்களும் அறிவிப்புகளும் அறிவிப்புகளின் மாதிரிகளில் சில மட்டுமே. மேலோட்டமாகப் பார்க்கும்போது தமிழ் மொழி வளரவும் , தமிழை வளர்க்கவும் முதலமைச்சர் சிறந்த திட்டங்களைத் தானே அறிவித்து இருக்கிறார் என்றே நமக்குத் தோன்றும். நாமும் அதை ஒப்புக் கொள்கிறோம். இந்தத் திட்டங்களை வரவேற்கிறோம்; முதல்வரைப் பாராட்டுகிறோம். ஆனால் இவற்றை 110 விதியின் கீழ் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? என்பதே எம் கேள்வி.

அண்மையில்தான் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த நிதி நிலை அறிக்கையில் இவற்றை இணைத்து இன்னும்  கூடுதலாகக் கைதட்டல்களை வாங்கிச் சென்று இருக்கலாமே!

மேலே மாதிரிக்காக குறிப்பிட்டுள்ள ஆறு திட்டங்களும் அறிவிப்புகளும் உடனே நிறைவேற்றப் பட்டால் எத்தனை உயிர்கள் அவற்றால் காப்பாற்றப்படும் ?  பற்றி எறியும் நெருப்பை இந்தத் திட்டங்கள் /அறிவிப்புகள் அணைத்துவிடுமா? பஞ்சம் பசியை நீக்கிடுமா? குடிக்க நீரைக் கொண்டுவந்து தந்திடுமா? காவிரியில் நீரை கரைபுரண்டு ஓடவைக்குமா? மின்வெட்டை சீர் செய்து மக்களின் அன்றாட வாழ்விலும் தொழிற்சாலைகளிலும் இருளை நீக்கிடுமா? வேலை வாய்ப்புகளை ஊக்கப்படுத்திடுமா? இல்லை! இல்லை! இல்லவே இல்லை!

ஆனால் இந்த அறிவிப்புகள் பற்றி விதிகளின்படி , சட்டமன்றத்தில்  எதிர்க் கட்சிகள் விவாதிக்க இயலாது ; விளக்கம் கேட்க இயலாது; கருத்துச் சொல்ல இயலாது. எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதற்காகவே இப்படிப்பட்ட சாதாரணமான திட்டங்களை அரசியல் சட்டத்தால் அவசரத்துகாகவே வழங்கப்பட்ட  . 110 விதியின் கீழ் அம்மா அறிவிப்புச் செய்கிறார் என்பதுதான் அரசியலை அறிந்தோர் கருத்தாகும்.

ஜனநாயகம் என்ற தாய்தான் இந்த ஜெயலலிதா  அம்மாவை ஈன்றெடுத்து தமிழக மக்களுக்கு வழங்கினாள். அப்படிப்பட்ட ஜனநாயகத்தாயின் குரல்வளையை – அம்மாவே நெறிக்கலாமா?

இந்தக் கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். உணமையாகவே  110 விதியின் கீழ் அறிவித்து உடனே களப்பணி ஆற்றிடத் தகுதி பெற்ற எந்தத திட்டங்களையுமே அம்மையார்  அறிவிக்கவே இல்லையா?

அப்படி ஒரேயடியாக அம்மாவைக் கைவிட்டு விட இயலாது. பற்பல திட்டங்களை அறிவித்து இருக்கிறார். சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலேயும் ஆகிவிட்டது. அத்தகைய திட்டங்கள் எல்லாம் தமிழக முன்னேற்றத்துக்கு அவசியமானவை; மக்களின் வாழ்வில் உணமையிலேயே மாற்றங்களைக் கொண்டுவரத் தக்கவை. பெயரளவு புரட்சித் தலைவியை உண்மையான புரட்சித் தலைவியாக வைத்துப் போற்றத் தக்கவை. துணை நகரங்கள் முதல் ஒளிரும் மின்திட்டங்கள் , சாலை மேம்பாடு, மேம்பாலங்கள், ரயில்வே மேம்பாலங்கள், அடுக்கு மாடி குடி இருப்புகள், தூர்வாரும் திட்டங்கள் இப்படி பல்வேறு பயன்படும் அறிவிப்புகள் /திட்டங்கள் இந்த விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

அவை யாவை? அவைகளின் நிறைவேற்றம்  எந்த நிலையில் இருக்கின்றன?  

இப்போதுதான்  தலைப்பு நமக்கு நினைவுக்கு வருகிறது. அத்துடன் சிரிப்பும் வருகிறது.

சீனி சக்கரை சித்தப்பா! சீட்டிலே எழுதி நக்கப்பா.

இந்த அலசல் இன்னும் முழுமைபெறவில்லை. சந்திக்கலாம்.. இன்ஷா அல்லாஹ்.

இப்ராஹிம் அன்சாரி

இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் 7

அதிரைநிருபர் பதிப்பகம் | July 05, 2015 | ,

உலகில் தோன்றிய ஒவ்வொரு இனத்துக்கும் மொழிக்கும் சமுதாயத்துக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. தங்களுடைய முன்னோர்களின் வரலாறுகளும் வாழ்க்கை முறைகளும் தற்கால சமுதாயத்துக்கு வழிகாட்டியாக நின்று விளங்கும். தங்களின் கடந்தகால வரலாற்றை மறந்த எந்த சமுதாயமும் தாங்கள் வாழும் நிகழ்காலத்தை நெறிப்படுத்தி வாழவோ எதிர்காலத்தை ஒளிமயமாக்கவோ இயலாது. அந்த வகையில் வரலாறு என்பது வாழும் சமுதாயத்துக்கும் வளரும் சமுதாயத்துக்கும் இன்றியமையாததாக இருக்கிறது. வரலாற்றில் இழைத்த நன்மையான காரியங்களை தொடர்ந்து செய்யவும் தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் வரலாற்று நிகழ்வுகள் படிப்பினையாக நின்று நிலவும். அந்த வகையில் இஸ்லாத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் மின்னலைப் போல் வெட்டி ஒளிவீசிய ஒப்பற்ற சில நிகழ்வுகள் – படிப்பினைகள்- தியாகங்கள் – நினைவை விட்டும் மாறாத சம்பவங்கள் ஆகியவற்றுள் சிலவற்றை மட்டும் இங்கே பட்டியலிட விரும்புகிறேன்.

*பெருமானார் நபி ( ஸல் ) அவர்களை பிடித்துப் போக வந்தவர்கள் :-

பாரசீகத்தை ஆண்ட மன்னன் கிஸ்ரா (Cbosreos Eparwz) என்பவனுக்கு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்படி அழைப்பு விடுத்து பெருமானார் (ஸல்) அவர்கள் கடிதம் எழுதி அனுப்பினார்கள் . இந்த அழைப்பு அந்த ஆணவம் பிடித்த மன்னனுக்கு ஆத்திரத்தைத் உண்டாக்கியது . பெருமானார் (ஸல்) அவர்களை கைது செய்து பாரசீக மன்னனின் அரசவையில் நிறுத்துமாறு தனது ஆளுமைக்குட்பட்ட எமன் நாட்டு கவர்னருக்கு உத்தரவிட்டான். யாரோடு மோதுகிறோம் என்று எண்ணிப்பார்க்காத அந்த எமன் நாட்டு கவர்னரும்  உடலால் பலம் பொருந்திய தனது  இரண்டு அடியாட்களை பெருமானார் (ஸல்) அவர்களின் சமூகத்துக்கு அனுப்பி அல்லாஹ்வின் அருள் தூதர்   அவர்களைக்  கைதுசெய்து வரும்படி அனுப்பிவைத்தான். 

மதீனாவுக்கு வந்து மாநபி அவர்களின் முன்னே தோன்றிய அந்த இரண்டு அடியாட்களும் பெருமானார் (ஸல்) அவர்களிடம் தாங்கள் வந்த நோக்கத்தைக் கூறி வாயை மூடிக் கொண்டு தங்களுடன் வந்துவிட வேண்டுமென்றும் இல்லாவிட்டால் பாரசீக மன்னனின் படையெடுப்பால் மதினா அழிக்கப்படும் என்றும் பயமுறுத்தினார்கள். இதைக் கேட்ட பெருமானார் (ஸல்) அவர்களின் இதழோரம் ஒரு புன்னகையின் கீற்று மட்டும் வெளிப்பட்டது. இந்த நிகழ்வைக்கண்டு கொண்டிருந்த சஹாபாக்களின் கரங்களோ தங்களின் கொடு வாள்களைத் தொட்டன. தனது தோழர்களை தனது பார்வையால் அமைதிப் படுத்திய பெருமானார் ( ஸல்) அவர்கள் ஏமன் நாட்டு ஏவலர்களைப் பார்த்து , “ நல்லது! இன்று போய் நாளை வாருங்கள் “ என்று சொன்னார்கள். 

இவ்வளவு இலகுவாக தாங்கள் வந்த வேலை முடியுமென்று எதிர்பாராத ஏமன் நாட்டினர் சரி என்று தலையசைத்து, அடுத்தநாள் பெருமானார் (ஸல்) அவர்களைக் கைது செய்து கட்டிக் கொண்டு போகும் ஆவலுடனும் ஆசையுடனும் அவர்களின் முன் தோன்றி, "என்ன தயாராக இருக்கிறீர்களா?" என்று கேட்டனர். உடனே பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்ன செய்தி அந்த அவையில் இருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆம்! எந்த ஆணவம் பிடித்த கிஸ்ராமன்னன் இறைவனின் அருள் தூதர் அவர்களிக் கைது செய்ய ஆணை இட்டானோ அந்த கிஸ்ரா மன்னன் நேற்று இரவே தனது மகனாலேயே கொலை செய்யப்பட்டுவிட்டான் என்கிற செய்தியே பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாகும். 

அவை அதிர்ந்தது. செய்தி எமன் கவர்னருக்குத் தெரிவிக்கப்பட்டு கிஸ்ரா மன்னன் கொல்லப்பட்டதாக பெருமானார் (ஸல்) அவர்களால் சொல்லப்பட்டது உண்மைதான் என்று உறுதிப் படுத்தப்பட்டது. அண்ணல் நபி ( ஸல்) அவர்களின் வாயில் இருந்த வந்த வார்த்தைகளின் வலு என்ன என்பதை வரலாறு குறித்துவைத்துக் கொண்டது. 

ஏமனிலும் இஸ்லாம் உள்ளச்சத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

*ஏழைகளின் பட்டியலில் இடம் பிடித்த கவர்னர்:- 

ஸஅத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் இஸ்லாமிய வரலாறு காணும் மனிதர்களில் மறக்க முடியாதவர் ஆவார். ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் கலீபாவாக பதவி ஏற்ற பிறகு ஸஅத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் ஹிம்ஸ் பகுதியின் கவர்னராக நியமிக்கப்பட்டார்கள். பதவிதான் கவர்னர் பதவி . ஆனால் அந்த பதவியின் சுகம் மட்டுமல்ல சாதாரண குடிமக்கள் அனுபவிக்கும் வாழ்க்கைச் சுகங்கள் எதையுமே அனுபவிக்காமலும் அவற்றை அரசு வழங்கியும் ஏற்றுக் கொள்ளாமலும் மிக மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

கவர்னராக ஹிம்ஸ் பகுதிக்கு அனுப்பப்படும்போது அரசாங்க கஜானாவிலிருந்து கவர்னரின் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளும்படி ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் உத்தரவிட்டுக் கொடுத்த சிறு தொகையைக் கூட ஏழைகளுக்கு தர்மம் செய்துவிட்டு அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்க்கையை நடத்தினார்கள். 

இந்த நேரத்தில் , ஹிம்ஸ் வட்டாரத்திலிருந்துஒரு தூதுக்குழு கலிபா ஹஜரத் உமர் (ரலி) அவர்களை சந்திக்கச் சென்றது. அந்த தூதுக் குழுவிடம் உங்கள் வட்டாரத்தில் உள்ள பரம ஏழைகளின் பட்டியல் ஒன்றைத் தருமாறு கலிபா உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். கலிபா அவர்களின் கரங்களில் அத்தகைய ஒரு பட்டியல் தரப்பட்டது. 

அந்தப் பட்டியலில் முதல் பெயர் ஸஅத் இப்னு ஆமிர் (ரலி) அவர்களுடையதாக இருந்ததைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் அதிர்ச்சியுற்றார்கள். தனது சாம்ராஜ்யத்தின் ஒரு கவர்னரின் பெயர் பக்கீர்களின் பட்டியலா என்று அதிர்ந்தார். கவர்னரின் எளிய வாழ்வை அறிந்த கலிபா அவர்கள் கவர்னரிடம் தரும்படி கொஞ்சம் பணத்தைக் கொடுத்து அனுப்பினார்கள்.

ஆனால் அந்தப் பணத்தை வாங்கி அனுபவிக்க மனமில்லாத கவர்னர் ஸஅத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் தனது மனைவிடம் தன்னைத் தேடி இம்மையின் மோசமான பொருள் வந்திருக்கிறது அதை உடனே களைய வேண்டுமென்று சொல்லிவிட்டு அந்தப் பணத்தையும் ஏழைகளைத் தேடித் போய் பகிர்ந்தளித்துவிட்டு என்றும் போல தனது எளிய வாழ்வையே தொடர்ந்தார்கள். அல்லாஹ் அவர்களை நல்ல அடியார்களோடு பொருந்திக் கொள்வானாக. ஆமீன். 

*நினைத்ததும் நடந்ததும் வெவ்வேறு:-

இது ஒரு அழகிய வாழ்வியல் தொடர்பான வரலாற்று நிகழ்வு. ஒரு இளைஞருக்கு கல்விப்பசி அதோடு கூடவே வயிற்றுப் பசியும். பசி வந்திடப் பத்தும் பறந்து போய்விட்டது. இன்னொருவருக்கு சொந்தமான ஒரு ஆப்பிள் தோட்டத்துக்குச் சென்று ஒரு ஆப்பிள் பழத்தைப் பறித்து சாப்பிட்டுவிட்டார். 

வயிற்றுப்பசி நீங்கியது. ஆனால் மனசாட்சி உறுத்தியது. ஆப்பிள் தோட்டத்துக்கு சொந்தக்காரரைத் தேடித் போய் அவரிடம் உண்மையைக் கூறி மனம் பொறுக்கச் சொல்ல வேண்டுமென்று பல இடங்களில் அவரைத்தேடி அலைந்து கண்டுபிடித்து நடந்ததைக் கூறி அவரிடம் மன்னிப்புக் கோரினார். 

ஆனால் தோட்டத்தின் உரிமையாளரோ மன்னிக்க மறுத்தார். அத்துடன், "உனது தவறுக்காக மறுமை நாளில் அல்லாஹ்விடம் உனக்கு எதிராக வாதிடவும் செய்வேன்” என்றார். அந்த இளைஞர் மீண்டும் மீண்டும். “என்னை தயவு செய்து மன்னியுங்கள்” என்று கெஞ்சிக் கொண்டே இருக்க அவரோ எதுவும் பேசாமல் வீட்டினுள்ளே சென்று விட்டார்.

ஆனால் அந்த இளைஞரோ, வீட்டு வாசலிலேயே கால்கடுக்கக் காத்திருந்தார். பொழுதும் சாய்ந்தது இளைஞர் தான் நின்ற இடத்திலிருந்து நகரவில்லை. தோட்டக்காரர் வீட்டை விட்டு வெளியே வந்ததும் மீண்டும் மன்னிப்புக் கோரியதுடன், “ வேண்டுமானால் நான் செய்த தவறுக்காக உங்கள் வீட்டில் வேலைக்காரனாக இருந்து எனது பாவத்தைக் கழிக்க அனுமதியாவது தாருங்கள் “ என்று கேட்டான். 

இளைஞனின் தொடர் போராட்டத்தையும் முயற்சியையும் பார்த்த பெரியவர், 

“சரி! ஒரு நிபந்தனைக்கு நீ உடன்பட்டால் உன்னை மன்னிக்கிறேன் “ என்றார்.

"அப்பாடா!" என்று ஆசுவாசப்பட்ட இளைஞர் அதற்கு சம்மதித்து நிபந்தனையைக் கேட்டார். 

“எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவளை நீ திருமணம் முடித்துக் கொள்ள வேண்டும் அந்த நிபந்தனைக்கு சம்மதமா?" என்று கேட்டார் பெரியவர். இளைஞனுக்கு கரும்பு தின்னக் கசக்கவில்லை. அந்தகனத்திலேயே, “ சரி” என்றான்.

பெரியவர் சொன்னார்., “ அவசரப்படாதே! என் மகளுக்கு சில குறைபாடுகள் உள்ளன. அவள் ஊமை! செவிடு! குருடு ! ஊனமுற்றவள் ! “ என்று சொன்னார். 

இளைஞர் அதிர்ந்தார். ஆனாலும் செய்த சிறு தவறுக்கு இறைவன் முன் மறுமையில் கை கட்டி நிற்க பயந்து அந்தப் பெண்ணை மணம் முடிக்க சம்மதித்தார். திருமண நாள் குறிக்கப்பட்டது. இளைஞரின் மனதிலோ சோகம். அவரது சோகம் நிறைந்த அகத்தின் அழகை முகம் காட்டியது. அதே நிலையில் திருமண ஒப்பந்தம் நிறைவேறியது. பெண்ணைக் கைப்பிடிக்க வீட்டினுள் நுழைந்த இளைஞருக்கு இன்னுமொரு அதிர்ச்சி காத்திருந்தது. 

தனது மனைவியாக ஏற்றுக் கொண்ட பெண்ணைக் கண்ட இளைஞர் ஆச்சரியப்பட்டுப் போனார். ஆம்! அவரின் முன்னே இருந்தது எவ்வித உடல் குறைபாடும் இல்லாத அழகான ஒரு பெண். 

“என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? நான் ஊமையோ, குருடோ, செவிடோ , ஊனமுற்றவளோ அல்ல. எனக்காக ஒரு பொறுமைசாலியை- இறைவனுக்கு பயந்தவரை என் தந்தை தேடிக் கொண்டிருந்தார். ஒரு பழத்தைத் திருடி சாப்பட்ட காரணத்துக்காக நீங்கள் அல்லாஹ் வுக்கு பயந்து மன்னிப்புக் கோரி நின்ற விதம் அவருக்குப் பிடித்துப் போய்விட்டது. என் சம்மதம் வாங்கி உங்களை எனக்கு மணமுடித்துத் தந்தார்“ என்று அந்தப் பெண் சிரித்துக் கொண்டே சொன்னாள். 

“நான் ஹராமானதைப் பார்ப்பதிலிருந்து குருடானவள்! ஹராமனதைக் கேட்பதிலிருந்து செவிடானவள்! தீயவற்றைப் பேசுவதிலிருந்து ஊமையானவள்! தீய காரியங்களைத் தேடி நடக்காததிலிருந்து ஊனமுற்றவள்! மற்றபடி எனக்கு எந்தக் குறையும் அல்லாஹ் உதவியால் இல்லை" என்றும் கூறினாள். 

இந்த இரு நல்லவர்களுக்கும் பிறந்த மகன்தான் இமாம் அபூஹனிபா ரஹ்மாஹூமுல்லா அவர்கள். 

எறும்புக் கூட்டமும் பறவையும் எத்திவைத்த இஸ்லாம் :- 

திருமறையின் அந்நம்ல் என்கிற 27 ஆம் அத்தியாயம் பல வரலாற்று நிகழ்வுகளைச் சொல்கிறது. குறிப்பாக நபி சுலைமான் ( அலை ) அவர்கள் தொடர்பான இரு வரலாற்று சம்பவங்கள் படிக்கும் நமக்கு படிப்பினை தருவதாகும். 

ஒரு முறை சுலைமான் ( அலை ) அவர்கள் தனது படைகளுடன் போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு எறும்பு, தனது கூட்டத்தின் மற்ற எறும்புகளைப் பார்த்து “எறும்புகளே! நீஙகள் உங்கள் புதருக்குள் புகுந்து கொள்ளுங்கள்; சுலைமானும் அவருடைய படையினரும் தாம் அறியாமலேயே உங்களைத் திண்ணமாக மிதித்து விட வேண்டாம்” எனக் கூறியது. ( 27: 17-18)

இந்த சம்பவம் நமக்கெல்லாம் ஒரு படிப்பினையாகும். ஒரு ஐந்தறிவுள்ள எறும்பு தனது இனத்தைச் சேர்ந்த அறியாமையில் உள்ள எறும்புகள் அழிந்துவிடக் கூடாது என்பதில் காட்டியிருக்கும் அக்கறையை நாம் இதன் மூலம் உணரவேண்டும். ஒரு எறும்புக்கு இருக்கும் சமூகப் பொறுப்பு நமக்கு இருக்கிறதா என்று இந்த வரலாற்று சம்பவத்தை வைத்து நாம் சிந்திக்க வேண்டும். 

நமது சமுதாயத்தின் சகோதரர்கள் அறியாமையால், ஷிர்க்கிலும் பித்அத்துக்களிலும் ஹராம்களிலும் மூழ்கியிருக்கும் போது மது, போதை, சினிமா, புகைத்தல், வட்டி, சூது என தம்மைத்தாமே அழித்துக் கொள்ளும் காரியங்களில் ஈடுபடும் போது நாம் அவற்றைத் தடுக்காமல் இருக்கலாமா? அப்படி இருந்து விட்டால் எறும்பைவிட கீழான நிலைக்கல்லவா மனிதர்களாகப் படைக்கப்பட்ட நாம் சென்று விடுவோம்.

அதே அத்தியாயம் மற்றுமொரு வரலாற்று நிகழ்வையும் கூறுகின்றது. சுலைமான்(அலை)அவர்கள் தனது படையைப் பார்வையிட்டுக் கொண்டு வரும்போது வழக்கமாக இருக்கும் “ஹுத்ஹுத்” என்ற பறவையைக் காணவில்லை. இந்தப் பறவை தாமதித்து வந்து அதற்குரிய காரணத்தைக் கூறாவிட்டால் அதைக் கொன்று விடுவேன்; அல்லது கடுமையாகத் தண்டிப்பேன் என்று கோபத்தோடு கூறினார்கள். அடுத்தநாள் அந்தப் பறவை வந்து சுலைமான் (அலை) அவர்கள் முன் ஆஜராகி தான் வர இயலாத காரணத்தைத் தெரிவித்தது.

"நீங்கள் அறியாத ஒரு செய்தியை நான் அறிந்து வந்துள்ளேன். ஸபாவில் இருந்து உறுதியான ஒரு செய்தியை உங்களிடம் கொண்டுவந்துள்ளேன். அந்த மக்களை ஒரு பெண் ஆட்சி செய்கிறாள். அந்த நாட்டில் சகல வளங்களும் காணப்படுகின்றன. மகத்தானதொரு சிம்மாசனமும் அவளுக்குண்டு. அவளும் அவளது சமூகமும் ஒரே அல்லாஹ்வை வணங்காமல் சூரியனை வணங்குகின்றனர். ஷெய்த்தான் அவர்களது செயல்களை அவர்களுக்கு அழகாக்கி அவர்களை நேர்வழியைவிட்டு தடுத்துவிட்டான். அவர்கள் அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்க வேண்டாமா? என்று கூறியது. ( 27: 20-26)

பறவை தந்த இந்தத் தகவலைக் கேட்ட சுலைமான் ( அலை ) அவர்கள் அந்தப் பெண்ணுக்கு, இஸ்லாத்தின்பால் இணையும் அழைப்பைக் கொடுத்து தஃவா செய்து, அந்தப் பெண்ணும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு இஸ்லாத்தில் இணைந்ததை திருமறையின் இந்த அத்தியாயம் எடுத்துக் காட்டுகிறது. 

ஒரு நாட்டு மக்கள் சூரியனை வணங்குவதைக் கண்டு ஒரு பறவை கவலை கொண்டுள்ளது. தனது இனத்தை அழிவிலிருந்து எச்சரிக்கை செய்து காப்பாற்ற வேண்டுமென்று ஒரு எறும்புக்குத் தோன்றியுள்ளது. நமது சகோதரர்களில் பலர் அறிந்தும் அறியாமலும் மார்க்கத்துக்கு விரோதமான செயல்களிலும் மார்க்கம் தடுத்த காரியங்களிலும் ஈடுபடுகிறார்கள். இத்தகைய வரலாற்று செய்திகளை நமது மக்கள் நிறைய அறியவேண்டும்; அறிந்து உணரவேண்டும்; அறிவுஜீவிகள் உணர்த்த வேண்டும். 

இஸ்லாமிய வரலாற்றுக் கடலில் மூழ்கி எடுத்த சில முத்துக்களே இவைகள். இதே போல் எண்ணற்ற வரலாற்றுச் சம்பவங்கள் பாடங்களாகவும் படிப்பினைகளாகவும் காணப்படுபவற்றை நாம் தேடித் தேடித் படிப்பதுடன் அவற்றை நமது வாழ்விலும் அமல் செய்ய அல்லாஹ் அருள் புரிவானாக!

இப்ராஹிம் அன்சாரி


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)