Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் - தொடர்கிறது...! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | June 30, 2013 | , , , , ,

அசத்தும் மொழிகளுக்கும் மயக்கும் சாப்பாட்டிற்கும் ஆளுக்கொரு பிரச்சினைக்கும் ஆங்காங்கே அசைபோடும் சந்தோஷத்திற்கும் என்றும் குறைவில்லாத அதிரை மண்ணின் மைந்தனின் கையில் இருந்த கேமராக் கண்ணுக்கு சிக்கியதை அப்படியே சிந்திக்கத் தூண்டும் சித்திரமாக தொடர்ந்து அதிரைநிருபரில் வெளிவருவதை நன்கறிவீர்கள்.

இதோ மீண்டும் தொடர்கிறது சகோதரர் ஷஃபி அஹமது அவர்களின் கேமராப் பார்வையும் அதன் கோர்வையும் உங்களின் ரசனைக்கு. - அதிரைநிருபர் பதிப்பகம்.


நேற்று (29-06-2013) சட்டென்று கண்ணில் பட்ட சென்னை மெரினா கடற்கரையின் கலங்கரை விளக்கு கோபுரத்தின் கம்பீரமான அழகு ! மேகங்களின் அணிவகுப்பும் அசத்துகிறது.


சென்னையின் பாலம் ஒன்றின் அலங்கோலம் மழை போட்ட கோலங்களை இப்படிக் கண்டிருப்பவர்கள் எத்தனை பேர் !?







மேகங்களின் ஆடையலங்கரங்களை ஜவுளிக்கடையொன்றி விரித்து வைத்தால் பெண்களின் அலைமோதல் அங்கே கரை ஒதுங்கும்.


வாருங்கள் தொடர்ந்து இன்னும் ரசிக்க ! என்று வழிமேடையமைத்து அழைக்கிறது சாலையோர பசுமைச் சுவர்கள்.

ஷஃபி அஹ்மது
சித்திரங்களின் சிற்பி

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் - தொடர் - 21 28

அதிரைநிருபர் பதிப்பகம் | June 29, 2013 | , ,

தொடர் : இருபத்தி ஒன்று

இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்கள் (வட்டி தவிர்த்த  வாழ்வு) 

ஆளுக்கு ஆளு தருவதுண்டு
அசலுக்கு மேலும் வளர்வதுண்டு 
நாட்டுக்கு நாடு பெறுவதுண்டு 
அது இல்லையென்றால் எதுவுமில்லை !
தொழிலில்லை !முதலில்லை! கடனுமில்லை! 
சொல்லப் போனால் உலகமெங்கும் 
வரவில்லை! செலவில்லை! வழக்குமில்லை! 

அதன் ஆயுள் கெட்டி 
மெல்லப் பார்க்கும் எட்டி 
அது போடும் குட்டி 
அதன் பேர் வட்டி. 

உலகை  ஆசைதான் ஆட்சி செய்கிறது. அதிலும் பேராசை . பேராசைக்கு நமது கண்முன்னே  நடமாடும் எடுத்துக் காட்டாக இருப்பவர்கள் சில மூசாக்கள் அவர்களே வட்டி மூசாக்கள்.  தீய வழியில் கூட பணம் சேர்க்க வேண்டுமென்ற ஆசை தனி நபர்  தொடங்கி உலகம் தழுவிய காட்டுத் தீயாகப் பரவி விட்டது.  தீமை என்று தெரிந்தும் பல நாடுகளின் அரசுகளே இந்த வட்டி தொடர்பான கொடுக்கல் வாங்கல், லாட்டரி, குதிரைப் பந்தயம், மதுவணிகம் ஆகியவற்றில்  வரை முறை இன்றி ஈடுபடுகின்றன. இத்தகைய அரசுகளுக்கு சமூக நலனைவிட பணமே பெரிதாகத் தெரிவதால் சமூகத்தை சுரண்டி சமூகத்துக்கே இலவசம் என்ற பெயரில் திருப்பித் தருகின்றன . 
   
அரசாங்கமும் தனிமனிதனும்  வட்டியை ஒரு தீமையாகவே கருதுவதில்லை. ஆனால் சமுதாயத்தில் இது எவ்வளவு பெரிய சுயநலவாதிகளையும், பேராசைக்காரர்களையும், சகோதர மனப்பான்மை அற்றவர்களையும், பொருளாதார வீழ்ச்சியையும் உருவாக்குகிறது என்பதை யாரும் உணருவதில்லை ஏன்? அரசாங்கத்திற்கும் இது மிகப் பெரிய இழப்பாகும்.

சாதிகளில் பல சாதிகள் இருப்பதைப் போல் வட்டியிலும் பலவகை வட்டிகள் உள்ளன. கந்து வட்டி, மீட்டர் வட்டி, மில்லி வட்டி, நெல்லு வட்டி என்றெல்லாம் வட்டியை வகைப்படுத்தி வணிகம் செய்கிறார்கள். வட்டிக்கடை என்கிற போர்டு ஊரெங்கும் தொங்குகின்றன . அரை மணி நேரத்தில் நகைக் கடன் என்ற விளம்பரப் பதாகைகள் ஊரெங்கும் மாளிகை கட்டி முளைத்துவிட்டன. ஒரு சமுதாயமே வட்டிக்குக் கொடுத்து வாங்கும் சமுதாயம் என்று முத்திரை குத்தப் பட்டு இருக்கிறது. சில குடும்பங்களுக்கு வட்டிப் பணமே வருவாய் என்கிற நிலை இருக்கிறது. அரசுப்பணியோ அல்லது தனியார் பணியோ அவற்றில் இருந்து ஒய்வு பெற்றபின் வட்டிக்கு கொடுத்து வாங்கும் பலர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அன்றாடம் கூலி வாங்கிப் பிழைப்பு நடத்துபவர்கள் தங்களின் கூலியின்  பெரும் பகுதியை அன்றாடம் தின வசூல் வட்டிக் காரர்களிடம் கொடுத்துவிட்டு வாழ்க்கைச் செலவுகளுக்கு வழியற்று நிற்கிறார்கள். வட்டிப் பணத்தில் வாழ்க்கை நடத்துவோர்  அதுவும்  ஒரு வியாபாரம்தானே  என்று நியாயம் கற்பிக்கிறார்கள்.   

உலகின் வளர்ந்த நாடுகள் என்று கணக்கிடப்படுபவை பெருமளவில் உலக நிதி நிறுவனங்களில் இருந்து பெரும் பணத்தை வட்டியாகப் பெற்று தாங்கள் நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களில் ஈடுபடுத்துகின்றன. அவ்விதம் செய்கின்ற நேரங்களில் நிதி நிறுவனங்கள் இடும் அத்தனை கட்டளைகளுக்கும் அடிபணிந்து கையொப்பமிடுகின்றன. பல நேரங்களில் இத்தகைய உலக வங்கி போன்ற நிறுவனங்களின் கட்டளைகளுக்குப் பணிந்து தாங்கள் நாட்டின் அரசுப் பணிகளின் கட்டணத்தை கூட்டுகின்றனர். தமிழ்நாட்டில் பேருந்து கட்டணமும் மின்சாரக் கட்டணமும் உயர்த்தப் பட்டபோது இந்தக் காரணமும் கூறப்பட்டதை நாம் மறந்து இருக்க முடியாது. 

ஏன் வட்டி கூடாது என்று சொல்கிறோம்? இதற்கான பொருளாதாரக் காரணங்களும் சமூக அவலக்  காரணங்களும் நிறைய உள்ளன. பலவற்றைப் பட்டியல் இடலாம்.
  • வட்டித் தொழிலில் கடன் வாங்கியவன் இலாபமடைந்தாலும் நட்டமடைந்தாலும், கடன் கொடுத்தவன் ஒரு குறிப்பிட்ட இலாபத்திற்கு உரியவனாகிறான். ஆனால், வியாபாரம் அல்லது கைத்தொழில் அல்லது வேளாண்மை போன்ற விவகாரங்களில், கடன் வாங்கிய பணத்தை பயன்படுத்துவோனுக்குப் பெரும்பாலும் குறிப்பிட்ட அளவே இலாபம் அவன் கையில்  கிடைக்கிறது . பல நேரங்களில் வட்டிக்குக் கொடுத்தவனுக்கு வேளாண்மை  செய்த விளை பொருள்கள்கூட வட்டியாக சென்றுவிடுகிறது.   
  • வியாபார நடவடிக்கைகளில் விற்பவன் ஒரே ஒரு தடவைதான் இலாபம் பெறுகிறான். ஆனால், வட்டி சம்பந்தமான நடவடிக்கைகளில் கடன் கொடுத்தவன் தன் மூலதனத்தின் (அசல்) மீது தொடர்ச்சியாக இலாபம் பெற்றுக் கொண்டே இருக்கிறான். அந்தத் தொகை வட்டிக்கு மேல் வட்டியாகி அதிகரித்து இறுதியில் கடன்பட்டவனைப் பாழாக்கி விடுகிறது. நிலம் , தங்கம் ஆகியவற்றின் மீது கடன் வாங்கியவன் வட்டியின் அதிகரிப்பால் இறுதியில் தனது வாழ்வின் ஆதாரத்தையே இழந்துவிடுகிறான்.
  • வியாபாரக் கொடுக்கல் வாங்கலில் ஒருவன் தன் உழைப்பு, அறிவு இவற்றின் பலனாக இலாபத்தை அடைகிறான். ஆனால், வட்டி சம்பந்தமான தொழிலில் கடன் கொடுத்தவன் கடன்பட்டவனுடைய வருமானத்திலிருந்து கொள்ளை இலாபம் பெறுகிறான். மேலும், கடன் வாங்கியவனுக்கு இலாபம் கிடைத்தாலும் சரி, நட்டமேற்பட்டாலும் சரி, கடன் கொடுத்தவன் இலாபமே அடைகிறான். அப்படியே அவனுக்குக்குக் கிடைக்க வேண்டிய இலாபம் தாமதித்தால் இன்னும் அதிகமான இலாபம் வரவேண்டுமென்று கணக்கு வைத்து கழுத்தை நெறிக்கிறான்.
  • வட்டித்தொழில்  செய்வோரிடம் கஞ்சத்தனம் , சுயநலம், இரக்கமின்மை, பணத்தைப் போற்றிப் பூஜித்தல் முதலான தீமைகள் இயல்பிலேயே அவர்களின் இதயத்தில் குடிகொண்டுவிடுகின்றன . பச்சாதாபம் , அனுதாப உணர்ச்சி, பரஸ்பர உதவி செய்தல், கூட்டுறவு ஆகியவற்றையும் அது அழித்து விடுகிறது. மக்கள் பணத்தைச் சேர்த்துத் தங்கள் சொந்த நலத்திற்காக மட்டும் அதைச் செலவு செய்யும்படி தூண்டுகிறது. செல்வம் சமுதாயத்தின் எல்லாப் பாகங்களிலும் தடையின்றிச் சுற்றி வருவதைத் தடுக்கின்றது. 
  • ஏழைகளிடம் இருக்கும் சிறு செல்வமும் அவர்களிடமிருந்து  பணக்காரரிடம் செல்லும் ஒரு பாதைக்கு நான்குவழிப் பாதையை  உண்டாக்குகிறது. அதன் விளைவாக, சமுதாயத்தின் செல்வம் ஒரு சிலருடைய பணப்பெட்டிகளில் குவிந்து, இறுதியாக அது சமுதாயம் முழுவதையும் ஏற்றத்தாழ்வான  பொருளாதார வீழ்ச்சியிலும் அழிவிலும் கொண்டு சேர்த்து விடுகின்றது.
  • ஏராளமான பணம் படைத்தோர் அதை வட்டிக்குக் கடன் கொடுத்து, இன்னும் ஏராளமான பணத்தை அதிகரிக்கிறார்கள். இந்த அதிகரிப்பு முன் பணம் வாங்கிய  தொழிலாளிகளுக்குக் கொடுக்க வேண்டிய ஊதியத்தைக் குறைத்ததிலிருந்து கிடைத்தது. பல தொழிலாளர்கள் கொத்தடிமையாக வாழவேண்டிய நிலை ஏற்படுகிறது. இவ்வாறு பணக்காரர் பெரும் பணக்காரராகின்றார்கள். ஏழைகள் மேலும் மேலும் வட்டிக்குக் கடன் வாங்கி பரம ஏழைகளாகின்றார்கள். இறுதியாக சமுதாயம் ஆட்டம் கண்டுவிடுகிறது.
  • சட்டங்களின், அதிபதியான எல்லாம் வல்ல இறைவன்  வியாபாரத்தை  அனுமதித்து, வட்டியை  தடை செய்துள்ளான். அந்த இறைவனின்  வேதத்தில்  ஒன்று ஒளியுடனும், மற்றொன்று இருளுடனும் ஒப்பிடப்பட்டுள்ளது. வட்டிக்குக் கடன் கொடுத்தல் ஒரு தொழிலுமல்ல, வியாபாரமுமல்ல என்பது உண்மையிலும் உண்மையாகும். 
  • தனிக் கல்வியோ, தொழில் அறிவோ தேவையில்லாததால் அது ஒரு தொழில் அல்ல. அது ஒரு அலுவல். இதற்கான தகுதி காதில் ஒரு பென்சில்;  கையில் ஒரு நோட்டு; ஒலி எழுப்பக்கூடிய மணி வைக்கப் பட்ட சைக்கிள்.; இதயத்தில் இரக்கமின்மை; வாயில் வன்முறைப் பேச்சுக்கள்; தட்டிவைக்க சில அடியாட்கள்; சாரயவாடைவீசும் வாய்கள்.  அவ்வளவுதான்.  மனிதர்களுடைய துன்பங்களையும், துயரங்களையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அதனால் வளர்ச்சியடையும் இந்த வேலை எப்போதும் இழிவு. இந்த அலுவலில் ஈடுபட்டவர்கள் பொதுவாக இரக்கமற்ற இழிவானவர்கள். பணக் கஷ்டத்திலுள்ளோரை பலவகைகளிலும் துன்புறுத்தி, அவர்களுடைய வறுமையைப் பயன்படுத்தித் தங்கள் பணத்தை அதிகரித்துக்கொள்கிறார்கள். வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு சொத்துக்களை சூறையாடும் சூழ்ச்சிக்காரர்கள் தாலிக் கொடிகளைக் கூட சந்தியில் வைத்து வர வேண்டிய பாக்கிக்காக வன்முறையால் அறுத்து வசூலிக்கும் சாதி வலிமை உடையோர்  இந்தத் தொழிலை குலத்தொழிலாக செய்கிறார்கள். 
  • முதலாளித்துவ அமைப்பில் எந்த  சிரமமோ  அல்லது உழைப்போ இன்றி  மூலதனத்தின் அளவு பெருகுவதற்கு வட்டியே காரணமாக அமைந்துவிடுகிறது. 
  • சுருக்கமாக சொல்லப் போனால் , வட்டி எனும் கொடிய விஷம்  விளைவிக்கும்  நாசவேலைகள் கொஞ்சமல்ல.  அது இரக்கமின்மையை உண்டாக்குகின்றது. வீண் செலவையும் நீதி தவறிய வாழ்க்கையையும் விளைவிக்கின்றது. பேராசையைப் பெருக்குகின்றது. பொறாமைக்கு வழி வகுக்கின்றது. உலோபித்தனத்தை உற்சாகப்படுத்துகின்றது. வெட்கம் கெட்ட கேவலமான நிலைக்கு மனிதனைத் தாழ்த்தி விடுகின்றது. 
ஆனால், இறைவனின் மார்க்கமான இஸ்லாம்  மார்க்கம் ஒன்றே இந்த விஷச்செடியின் விளைவுகளை உலகுக்கு உணர்த்திக் காட்டி இந்த வட்டி வாங்கும் வழக்கத்தின் மேல்  ஒரு போர்ப்பிரகடனம் செய்து வட்டி என்பது  முற்றிலும் சட்ட விரோதமானதென்று பிரகடனம் செய்து தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது. 

கிரேக்க, ரோம நாகரீகங்களில் மக்கள் வட்டியின் பளுவால் நசுக்கப்பட்டார்கள். ஆனால், தற்கால ஐரோப்பியப் பொருளாதார வல்லுநர்களைப் போன்றே, அந்த நாடுகளின் சட்டம் சமைத்தோர் அதை முற்றிலும் தடுக்கவில்லை. பைபிளில் வட்டி தடுக்கப்பட்ட போதிலும் யூதரல்லாதவர்களிடம் யூதர்கள் வட்டி வாங்குவதை அனுமதித்துள்ளது. இது ஏன் என்பதை நாம் சிந்தித்தால் விஷயங்கள் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும். யூதர்கள் அல்லாதவர்களுக்கு வட்டிக்குக் கடனைக் கொடுத்துவிட்டு திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் அவர்கள் மீது அக்கிரமத்தையும் அநியாயத்தையும் அடக்குமுறையையும் ஏவி விடுவது யூதர்களின் பழக்கம். இதனால்தான் “ஒரு யூதனுடன் கை குலுக்கினால்,  உன் விரல்களை எண்ணிப் பார்த்துக்கொள்” என்கிற பழமொழி உலகில் உலவுகிறது. 

திருமறையாம் திரு குர் ஆன் ஒன்றே எல்லா  வகைகளிலும் வட்டியைத் திட்டவட்டமாகத் தடுத்து உலகம் முடியும் வரை புகழைப் பெற்றுக் கொண்டது.

 உலகமே வியந்து புகழும் மாபெரும் பெருமைக்குரிய அண்ணலார் நபி (ஸல்)  இந்த வட்டித் தொழில் செய்வோரால் ஏற்படும் துன்பத்தையும் அறிந்து கொண்டு, முஸ்லீம்களை  வட்டிக்குப் பணம் கொடுக்கலாகாதென்று உபதேசித்தார்கள். இறுதி மக்கா புனித யாத்திரை - ஹஜ் - செய்த புனிதமான தினத்தில், நபிபெருமானாரவர்கள் அறியாமைக் காலத்திலிருந்து கொடுக்கப்பட வேண்டிய வட்டிப் பணங்களெல்லாம் ரத்து செய்யப்பட்டன என்று விளம்பரம் செய்ததோடு, அதற்கு உதாரணமாகத் தங்கள் பெரிய தந்தை அப்பாஸ் அவர்களுக்கு  வர வேண்டிய வட்டித்தொகை   முழுதும் தள்ளுபடியாகிவிட்டதென்று அறிவித்தார்கள்.  

மிகக் கடுமையான சட்டங்களை இஸ்லாமியப் பொருளாதாரம் வட்டிக்கு எதிராக வழங்கி இருக்கிறது. நிச்சயமாக, இது பொருளாதாரச் சட்டங்களில் மிக்க அறிவு நிறைந்த சட்டமாகும் என உலகப் பொருளியல் வல்லுனர்கள் வியந்து கூறுகிறார்கள். . எந்தெந்த நாடுகளில் உயர்ந்த வட்டி விகிதம் கட்டுப்பாடு இல்லாமல் ஏற்பட்டுள்ளதோ அங்கெல்லாம் கைத்தொழிலிலும், வியாபாரமும் , மக்கள் நிலையும்   முன்னேற்றமடையவே  முடியாது என்று பொருளாதார நிபுணர்கள் இன்று  கூறுகின்றார்கள். 

அதுமட்டுமல்ல, இந்த வட்டியில் தொடர்புடைய எல்லோரும் - பத்திரம் எழுதுவோரும் - சாட்சிகளும் - அல்லாவின் சாபத்திற்குள்ளாவார்கள் எனவும் கூறியுள்ளார்கள். ரிபா - கடுமையான வட்டி மட்டும் தடுக்கப்பட்டுள்ளதெனவும், வேறுவிதமான முறைகள் அனுசரிக்கப்படலாம் என்பதும் இந்தக் கட்டளைகளின் பொருளல்ல. ஆனால், இந்தப் போதனைகளெல்லாம் முதலாளித்துவக் கொள்கையின் மனப்பான்மை, ஒழுக்க நிலைகள், கலாச்சாரம், பொருளாதார அமைப்பு ஆகியவற்றை அழிக்கவே வெளியிடப்பட்டன. மேலும் ஒரு புதிய அமைப்பை உண்டாக்கி, அதில் கஞ்சத்தனத்திற்குப் பதிலாகத் தானதருமம், சுயநலத்திற்கு பதிலாக ஈகை, இரக்கம்,  அனுதாபம், கூட்டுறவு, வட்டிக்கு மாற்றாக  ஜகாத், பாங்க் முறைக்குப் பதிலாக பைத்துல்மால் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கூட்டுறவுச் சங்கங்கள், இன்சூரன்ஸ் கம்பெனிகள், எதிர்கால நலனை நோக்கி ஏற்பட்ட சேமிப்பு முதலியன ஏற்படுத்தப்படும் சூழ்நிலைகளைத் தடுக்கவும் இந்தப் போதனைகள் குறிக்கோளாகக் கொண்டிருந்தன.

“Makkan verses deal with certain pillars of the Islamic economic system, like obligation of Zakah and prohibition of Riba. “ என்று கூறுகிறார் முனைவர் மன்சூர் காப் என்கிற இஸ்லாமிய பொருளியல்  அறிஞர். அதாவது மக்காவில் இறக்கப் பட்ட ஆயத்துகளே இஸ்லாமியப் பொருளாதாரத்துக்கு தூண்களாக நிற்கும் ஜகாத்தை கடமையாக்கி,  வட்டியை தடை செய்யும்    கருத்துக்களுடையவைகளாக  இறக்கப் பட்டன என்று கூறுகிறார். மேற்கோளாக ,

That which you lay out for increase  (by way of Riba) through the property of (other) people will have no increase with Allah; but that which you lay out for Zakah seeking the Countenance of Allah. (will increase); it is these who will get a recompense multiplied. (30:39)

மனிதர்களின் பொருள்களுடன் (சேர்ந்து) பெருக்குவதற்காக வேண்டி, வட்டிக்கு நீங்கள் எதனைக் கொடுக்கிறீர்களே, அது அல்லாஹ்விடம் (நன்மையைக் கொண்டு) அதிகரிக்காது. அல்லாஹ்வின் பொருத்தத்தை நீங்கள் நாடியவர்களாக ஜகாத்திளிருந்து நீங்கள் கொடுப்பதானது (அது அல்லாஹ்விடத்தில் பெருகும்)அத்தகையோர்தாம் (தம் நன்மைகளை) இரட்டிப்பாக்கிக் கொள்கின்றனர். 

என்பதைக் காட்டுவதுடன்,

It is noteworthy that while providing early hints of the forthcoming economic system of Islam, these Makkan verses associate economic behavior with the doctrine of accountability before God on the Day of Judgement.  

The building of economic system was completed in Madinah with the establishment of state by the Prophet  Muhammed (PBUH). 

இஸ்லாத்தின் பொருளாதார சட்டம் என்னவாக இருக்கப் போகிறது என்பதன் ஆரம்பக் குறிப்பை மக்காவில் இறக்கப் பட்ட ஆயத்தில் கோடிட்டுக் காட்டிய இறைவன் மதினாவில் நிறுவப்பட்ட  இஸ்லாமிய ஆட்சியில் அமுல படுத்திக் காட்டவைத்தான்  என்றும் கூறுகிறார். 

(Relevance Definition and Methodolagy of Islamic Economics- Dr. Monzer Kahf).

வட்டி கொடுப்போரையும் வாங்கி முடிப்போரையும் பற்றி திருமறை மற்றும் நபி மொழிகள் செய்துள்ள போர்ப் பிரகடனங்களையும் அவை பற்றிய பொருளியல் அறிஞர்களின் குவியல் குவியலாகக் கொட்டிக் கிடக்கும் கருத்துக்களையும்  தொடர்ந்து பார்க்கலாம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
இபுராஹீம் அன்சாரி

"வெரசன வாங்கடா யாவாரம் செய்யலாம்" 25

அதிரைநிருபர் பதிப்பகம் | June 28, 2013 | , , , , , , , ,

நாம் பள்ளிப்பருவ சிறுவர்களாக இருந்த சமயம் ஊரில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என தேர்வுகள் வந்து அதன் பின்னர் வரும் விடுமுறைகளில் தெருவில், வீட்டின் முன் நட்புச்சிறுவர்களாய் நாலு பேரு சேர்ந்து கூட்டாண்மையில் தலா ரூபாய் ஐந்தோ அல்லது பத்தோ வீட்டில் பாடுபடுத்தி வாங்கி முதலீடாய் போட்டு நாம் ஒன்று சேர்ந்து நடத்திய கடைகளும் அதில் இடம் பெற்ற விற்பனைப்பொருட்களும் (நீங்களெல்லாம் பெரும், பெரும் சூப்பர் மார்க்கெட்டில் இன்று மேலாளராகவோ, மேற்பார்வையாளராகவோ பணி செய்து வருவதால் அவற்றையெல்லாம் முற்றிலும் மறந்திருப்பீர்கள். அதனால் அவை இங்கு கொஞ்சம் ஞாபகப்படுத்தப்படுகிறது) நம் நினைவுகளில் டெமரேஜ் ஏதும் தராமல் நிரந்தமாய் தஞ்சமடைந்துள்ளன.


(லிஸ்டெ போட்ற வேண்டியது தான்)

1. கல்கோனா
2. கடலை மிட்டாய்
3. மஞ்ச கலரு கொடலு
4. தேன் முட்டாயி
5. பால் பன்னு
6. மைசூர் பாக்கு (அப்பொ கரிங்கல்லு மாதிரி இருக்கும். மன்சூராக்க கோவிச்சிக்கிடாதிய)
7. கொத்து மாங்கா (தோப்லேர்ந்து பறிச்சதுனால கூடுதல் லாபம் கிடைக்கும்)
8. மோரு (கருவாப்பிள்ளை, பச்ச மொளவா, கொத்து மாங்கா, கடுகு போட்டு தாளிச்சது)
9. சர்வத்து (ஜம்ஜா விதை ஊற வைத்து, ரோஸ் கலரு பாவு காச்சி வித்தாலும் ஐஸ் போட்டு விக்கிற அளவுக்கு வசதி இல்லை)
இன்னும் இங்கு விடுபட்ட விற்பனை பொருட்களை நீங்கள் பின்னூட்டத்தில் தொடரலாம்.

நாளாக, நாளாக விற்பனை நன்கு சூடு பிடிக்கும். பெரிய பசங்க சிலர் நம் கடையின் (அலங்கோலத்தை பார்த்து) சூழ்நிலையை பார்த்து இரக்கப்பட்டு (மொகத்தாச்சனைக்காக) நம் கடையில் ஏதேனும் வாங்கிச்செல்வர்.

பள்ளி திறக்கும் ஒரு சில தினங்களுக்கு முன்னர் இந்த கூட்டாண்மை வியாபாரம் வரவு, செலவுகள் போக கணக்கு பார்க்கப்பட்டு முதலீட்டிற்கு தகுந்தாற்போல் (ரூபாய் 20 அல்லது 30க்குள்) லாபம் பிரித்து கொடுக்கப்படும் அல்லது எடுக்கப்படும். (வருமான வரி பயமோ, ஆடிட்டிங் தொல்லையோ, பணியாளர் சம்பள பிரச்சினையோ இங்கில்லை).

இந்த மாதிரி வியாபாரம் நாம் எஸனல் குர்'ஆன் ஓதப்போகும் வீட்டுப்பள்ளிகளிலும் அந்த ஒஸ்தார் மூலமே நடத்தப்பட்டது. என்ன செய்வது? அப்பொழுதுள்ள பொருளாதார சூழ்நிலைக்கு இது போன்ற சிறு வருமானங்கள் கொஞ்சம் வீட்டுத்தேவைகளுக்கும் தோள் கொடுத்து உதவியது. இப்பொழுதுள்ள விலைவாசி, பொருளாதார சூழ்நிலைக்கு இதுபோன்ற வியாபாரங்களும், அதன் வருவாயும் வீட்டு கொல்லையில் மேயும் கோழிகளுக்கு தவுடு வாங்கி கொழச்சி வக்க கூட பத்தாது.

இதுபோல் நாம் சிறு பிராயத்தில் தொடங்கிய கடைகள் இப்பொழுது அதை நினைத்துப்பார்க்க சிலருக்கு வெட்கமாகவும், கொஞ்சம் கேவலமாகவும் (அரீர்ப்பாகவும்) கூட தெரியலாம். ஆனால் அன்று அது போல் கடை வைத்து தன் வாழ்க்கையில் வியாபாரம் என்றால் என்னவென ஆரம்பித்தவர்களில் பலர் இன்று அல்லாஹ்வின் கிருபையால் அல்ஹம்துலில்லாஹ் அமெரிக்க, ஆஸ்திரேலிய, ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற்றும், சிலர் அரபுலகத்திலும் குடும்பத்துடன் நல்ல சூழ்நிலையில் இருந்து வருகின்றனர்.

இப்பொ உள்ள புள்ளையல்வோ ஊட்டு வாசல்ல ஒரு கடை கட்டி மினி சூப்பர் மார்க்கெட்டு மாதிரி வச்சி குடுத்தாலும் அங்கு உக்காந்து வியாபாரம் செய்ய வெக்கப்படுதுவோ, கூச்சப்படுதுவோ. ஆனா வெளிநாடுகளில் கவராலு போட்டுக்கிட்டு வேவா வெயில்ல நின்டு வேல பாக்க மட்டும் எவ்வித கூச்சமும் படுறதில்லை.

இந்த கட்டுரை எழுத காரணம், சகோ அர.அல அவர்கள் இன்று முகப்புத்தகத்தில் இணைத்திருந்த இந்த அரிய புகைப்படமே காரணம். கொட்டகைக்குள் 5 பாட்டில்களும், 5 முதலாளிகளும் நமக்கெல்லாம் இங்கு ஃபோஸ் கொடுத்து ஏதோ சொல்லவர்ராங்க. கேட்டுக்கிடுங்க.....

தம்பி, உச்சி உரும நேரத்துல மசக்கமா வருது ஒரு சர்வத்து கலக்கி குடும்மா.....

இன்ஷா அல்லாஹ் இன்னொரு சந்திப்பில் சந்திப்போம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது

முன் மாதிரி! ( உன்னப்பனின் விண்ணப்பம் - II ) 40

அதிரைநிருபர் பதிப்பகம் | June 27, 2013 | , , ,


அற்றுச் செல்லும் நேரமதில்
உன்னிடம்
விட்டுச் செல்வதன் சாரமிது

நகைக்கும் பற்களில் பழுப்பேற
புகைக்கும் பழக்கம் எனக்கு
நீ பிறந்த நாள்தான் அப்பழக்கம்
நான் துறந்த நாள்
புகை அற்ற வாயால்
பெயர் வைத்தேன் உனக்கு

பொக்கைவாய்ப் புன்னகையால் - நீ
புதுவுலகை எனக்களிக்க -உன்
பிடரியில் கைதாங்கி
பூமுகத்தில் முத்தமிட்டேன்.

பக்கத்தில் உனைக் கிடத்தி
பகுத்தறிவு போதித்தேன்
.
இறைமறை ஓதுவதை
இளநகையோடுப் பார்த்திருந்தாய்
பள்ளிக்கூடம் போகுமுன்பே
எழுத்துகளைப் பயிற்றுவித்தேன்

உன்னை நான் வளர்த்தெடுக்க
என்னை நான் வார்த்தெடுத்தேன்

முன்கோபம் முறியடித்து
முகமன் சொல்ல வைத்தேன்

காசுபணம் சொத்துசுகம்
கவனத்தைச் சிதைக்காமல்
கல்வியையும் கண்ணியத்தையும்
கடமையென உணர வைத்தேன்

உடல் சுத்தம் உடை சுத்தம்
உளச்சுத்தம் உயர்ந்ததென
இடஞ்சுட்டி பொருள் விளக்க
எடுத்துக்காட்டாய் நான் நின்றேன்

உண்மையும் உழைப்புமே
உயர்வுக்கு உகந்ததென்றேன்

என்னைப் பார்த்தே
எல்லாம் கற்கும்
உன்னைப் பார்த்து
உள்ளம் பூரித்தேன்

மாதிரி மனிதனாய் உன்முன்
பரிணமிக்க முயன்றேன்

அதிகாலை தொழுது
அழகான விடியலில்
அருள்வேதம் ஓது
அந்நாள் உனக்கு நன்னாளே

பொழுது புலர்வதை
நீ காணும் நாட்களே
உன்
வாழ்நாட்கள் என கணக்கில் வை

நன்னீராடு பசிக்குப் புசி
நல்லோரோடு ரசித்துச் சிரி
நளினம் கொள் நற்சொற்கள் சொல்

விண்முட்டும் கட்டடத்திற்கும்
முதற்படிதான் துவக்கம்
முறைப்படி முதலில் படி
முன்னேறுவாய் படித்தபடி

உழைத்து உண்
உனைவிட
இளைத்த மனிதருக்கு
உண்ணக் கொடு

தடுக்கி விழுவோரைத்
தாங்கிப் பிடி
தடுமாறி நடப்போருக்குக்
கைத்தடியாகு

மின்னணு எந்திரங்களில்
நுண்ணறிவு பெறு
கண்ணொளி கருதி
கட்டுப்பாட்டுடன் கையாள்

வீண் வாதம் தவிர் - அது
ஒரு  வழிப் பாதையில்
எதிர் வழிச் செல்லும்
பிடிவாத மன்றோ

வழியெலாம் வாய்த்த
வாய்ப்புகள் விடுத்து
வாய்ப் புகழ் பாடி
ஏய்ப்பவர் அறி

இருப்போரோ இறந்தோரோ
மூத்தவர் பலரும்
நேற்றைய தினம் வரை
இன்றைய தலைமுறையின்
நாளை சிறக்க
நன்னயம் செய்யவே நாடினர்

நன்மையை நாடினர்
உண்மையைத் தேடினர்
தேடியபோதினில்
தெளிவின்றிப் போயினும்
நாடிய மனங்களின்
நன்றி மறக்காதே

இஸ்லாம் முதற்கொண்டு
இனியவை யாவையும்
எல்லோர்க்கும் எத்திவை

மாற்று மதத்தவரும்
மனிதர் என்ற பார்வைகொள்
மத நல்லிணக்கம்
மாற்றம் கொணர
துவேஷம் ஒத்திவை

போகும் வழியெல்லாம்
புன்னகை தூவிச் செல்
திரும்பி வருகயில்
உனக்காகக் காத்திருக்கும்
ஒரு
புன்னகை தேசம்!


சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் - தொடர் - 13 13

அதிரைநிருபர் பதிப்பகம் | June 26, 2013 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

கடந்த பதிவில் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் மரண நேர சம்பவங்களைக் கண்ணீர் மல்க கண்டோம். இந்த வாரம் நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்பு நடந்த நெகிழ்வூட்டும் ஒரு சில வரலாற்று சம்பவங்களைக் காண்போம்.

நபி(ஸல்) கொஞ்சம் குணமடைந்து விட்டார்கள் என்பதால், அருகாமையில் தன்னுடைய வீட்டிற்குச் சென்ற அபூபக்கர் (ரலி) அவர்கள் தம்முடைய ஆருயிர் தோழர், மருமகன், உடன் பிறவா சகோதரர், இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் மரணித்த செய்தி அறிந்து குதிரையில் வந்திறங்கினார்கள். "நபி(ஸல்) அவர்கள் மரணிவிட்டார்கள் என்று யாராவது சொன்னால் அவர்களின் தலையைச் சீவிவிடுவேன்" என்று கோபத்தின் உச்ச நிலையில் உமர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார்கள். 

இந்த சமையத்தில் யாரிடமும் எதுவும் பேசாமால், ரசூலுல்லாஹ்வை முதன் முதலில் மெய்ப்பித்த உத்தம தோழர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் தன்னுடைய மகளும் நபி(ஸல்) அவர்களின் அருமை மனைவியுமான ஆயிசா(ரலி) அவர்களிடத்தில் உள்ளே வர அனுமதி கேட்கிறார்கள். “அனுமதி தர வேண்டியவர் இறந்து போய்விட்டார்கள்” என்று முஃமீன்களின் அன்னை ஆயிசா(ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். பின்னார் அபூபக்கர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் ஜனாஸா அருகில் சென்றார்கள். நபி(ஸல்) அவர்களின் நெற்றியில் முத்தமிட்டு “யா ரசூலுல்லாஹ் என்னுடைய தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும், நீங்கள் உயிரோடு இருக்கும் போது நறுமணம் கமழ்ந்தீர்கள், இறந்த பின்பும் நறுமணம் கமழ்கிறீர்கள் யா ரசூலுல்லாஹ்” என்று கூறியவாறு தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தார்கள்.

உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லீம்களுடைய ஈமானை ஒரு தட்டிலும் இந்த சித்தீக்குடைய ஈமானை ஒரு தட்டிலும் வைத்தால் இந்த சித்தீக்குடைய தட்டில் உள்ளதே அதிகமிருக்கும் என்று நபி(ஸல்) அவர்களால் பாராட்டி நன்மாராயம் கூறப்பட்ட அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் வெளியில் வந்து கோபத்துடன் இருக்கும் உமர் (ரலி) அவர்களை அமைதியாக அமருமாறு மூன்று முறை கூறினார்கள். பின்னர் அல்லாஹ்வை புகழ்ந்துவிட்டு பின்வருமாறு மக்களை பார்த்து கூறினார்கள்.

"நிற்க, உங்களில் யார் முஹம்மத்(ஸல்) அவர்களை (இறைவன் என நம்பி) வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள், முஹம்மத்(ஸல்) நிச்சயம் இறந்துவிட்டார்கள் என்பதை அறிந்துகொள்ளட்டும் உங்களில் யார் அல்லாஹ்வை வணங்கிக்கொண்டிருந்தார்களோ அவர்கள் 'அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்; மரணிக்கவேமாட்டான்' என்பதை அறிந்துகொள்ளட்டும்.  "அல்லாஹ் கூறுகிறான்; முஹம்மது ஒரு (இறைத்) தூதரேயன்றி வேறல்லர்; அவருக்கு முன்னரும் (என்) தூதர்கள் பலர் (வந்து) சென்றிருக்கிறார்கள்; எனவே, அவர் இறந்துவிட்டால், அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் தம் கால் சுவட்டில் திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு விரைவில் பிரதிபலன் வழங்குவான்' (திருக்குர்ஆன் 3:144) என்றார்கள். 

அபூபக்கர் (ரலி) மூலமாகத்தான் இதை அவர்கள் அறிந்தது போன்றும் இதனை ஓதக் கேட்ட மக்கள் யாவரும் இதனைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டேயிருந்தார்கள்.  அப்போது உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்:  “அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்கர் (ரலி) அவர்கள் இந்த வசனத்தை ஓத நான் கேட்டபோதுதான் அது என் நினைவுக்கே வந்தது. எனவே, அதிர்ச்சியடைந்தேன். அப்போது என் கால்களால் என் (உடல்) சுமையை தாங்க முடியவில்லை. அபூ பக்ர்(ரலி) ஓதிக்காட்டிய இவ்வசனத்தைக் கேட்டு நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து நான் தரையில் விழுந்துவிட்டேன்” என்று கூறிய உமர் (ரலி) அவர்கள் சமாதானம் அடைந்தார்கள் என்று புகாரி போன்ற ஹதீஸ் தொகுப்புகளில் வாசிக்கும் போது மெய் சிலிர்க்கிறது.

இந்நிலையில் நபி(ஸல்) அவர்களின் வீட்டிலிருந்த அண்ணல் நபியின் அருமை மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்கள் “ அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக்கொண்ட என் தந்தையே!, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த அந்தஸ்தத்தை அல்லாஹ்விடமிருந்து பெற்றுக்கொண்ட என்னுடைய தந்தையே!, எப்போதும் உங்களிடம் தொடர்பில் உள்ள ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் இந்த மரண செய்தியை சொல்லுகிறோம்” என்று கூறி தன்னுடைய தந்தை, எண்ணிலடங்கா மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மரணத்தைச் சொல்லி சொர்க்கத்து பெண்களின் தலைவி ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழுதார்கள், பின்னர் நபி(ஸல்) அவர்களை அடக்கம் செய்த பிறகு ஃபாத்திமா (ரலி) அவர்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு 10 ஆண்டுகள் பணிவிடை செய்த அனஸ் (ரலி) அவர்களிடம் “ அனஸே இறைத்தூதர் மீது மண்ணை அள்ளிப் போட எப்படி உங்களுக்கு மனம் வந்தது” என்று கேட்டார்கள்  என்பதை புகாரி போன்ற ஹதீஸ் தொகுப்புகளிலிருந்து வாசிக்கும் அனைவருக்கும் கண்ணீர் வந்தே தீரும்.

நபி(ஸல்) அவர்கள் மரணித்த பிறகு முதன் முதலில் அபூபக்கர் சித்தீக்(ரலி) அவர்கள் ஒரு ஜும்மா உரை நிகழ்த்தினார்கள். அந்த ஜும்மா உரையில் நபி(ஸல்) அவர்கள் எப்படி ஜும்மா உரையை ஆரம்பிப்பார்களோ அது போல் ஹம்து ஸலவாத்து சொல்லி அழ ஆரம்பித்தார்கள் அபூபக்கர்(ரலி) அவர்கள், “இது யார் நின்ற இடம் தெரியுமா? இந்த இடத்தில் நின்று யார் உரை நிகழ்த்தினார்கள் தெரியுமா? அப்படிப்பட்ட இடத்தில் நான் நின்று உரை நிகழ்த்துகிறேன் “ என்று சொல்லி அழுது உரை நிகழ்த்தினார்கள் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் என்று ஹதீஸ் தொகுப்புகளில் காணும் போது கண்கள் குளமாகிறது.

நபி(ஸல்) அவர்களை அடக்கம் செய்த பின்பு சில நாட்கள் கழித்து உமர்(ரலி) அவர்கள் சொன்னார்கள் “ நான் நினைத்தேன், நான் மரணித்து, அபூபக்கர்(ரலி) அவர்கள் மரணித்து, உஸ்மான்(ரலி) மரணித்து, அலி(ரலி) மரணித்து, அப்துர்ரஹ்மான் இப்னு அஃவ்ப்(ரலி) மரணித்து நாங்கள் அனைவரும் மரணித்த பிறகு தான் ரசூலுல்லாஹ் மரணிப்பார்கள் என்று நினைத்தேன், ஆனால் நாங்கள் இருக்கும் போதே எங்கள் ஆருயிர் தோழர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்களே”  என்று சொல்லி அழுத்துள்ளார்கள் என்று ஹதீஸ் தொகுப்புகளின் காணலாம்.

நபி(ஸல்) அவர்களுடைய மரணத்திற்கு பிறகு மிகப்பெரிய செல்வந்தராக வாழ்ந்து வந்த நபி தோழர், அல்லாஹ்வின் தூதரால் சொர்க்கவாசி என்று நன்மாராயம் கூறப்பட்ட  அப்துர்ரஹ்மான் இப்னு ஆவ்ப்(ரலி) அவர்கள், ஒரு நாள் அவர்கள் முன்னால் உயர் ரகமான பேரீத்தம் பழங்கள் கொடுக்கப்பட்டது., அந்த பேரீச்சம் பழங்களை சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை கையில் எடுத்து தோழர்களை எல்லாம் பார்த்து அழ ஆரம்பித்துவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதரர் (ஸல்) அவர்களை நினைவு கூர்ந்து “நபி(ஸல்) வாழ்ந்த காலத்தில் இது போன்ற உயர்தரமான பேரீச்சம் கணிகளை கண்ணால் கூட பார்க்காமலே மரணித்துவிட்டார்களே” என்று சொல்லி அழுதுள்ளார்கள் என்பதை ஹதீஸ் தொகுப்புகளில் காணும் போது நம்முடைய கண்களும் கலங்குகிறது.  

நபி(ஸல்) அவர்களோடு மக்காவிலிருந்தும் மற்றும் மதினாவில் இறுதி மூச்சு வரை ஒன்றாக இருந்த உத்தம நபியின் உன்னத தோழர் பிலால் (ரலி) அவர்கள், அடிமைகளுக்கு விடிவு பிறக்க செய்த உத்தம மனிதர், அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மரணித்த பிறகு, மதினாவில் இருக்க மனம் இன்றி சிரியா நாட்டிற்கு சென்றுவிட்டார்கள், நபி(ஸல்) அவர்களோடு வாழ்ந்த காலத்தில் முதன் முதலில் நீங்கள் தான் பாங்கு சொல்ல வேண்டும் நபி(ஸல்) அவர்களால் நியமிக்கபட்ட பிலால்(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை பாங்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள். 

நபி(ஸல்) அவர்களை பிரிந்த அதிர்ச்சியில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற வார்த்தையை சொல்லும் தைரியத்தையே இழந்துவிட்ட பிலால்(ரலி) பாங்கு சொல்லுவதையே நிறுத்திவிட்டார்கள். சில வருடங்களுக்கு பிறகு பைத்துல் முகத்திஸ் அமீருல் முஃமினீன் உமர்(ரலி) அவர்கள் காலத்தில் வெற்றிகொள்ளப்பட்ட போது, பிலால்(ரலி) அவர்களை அழைத்து உமர்(ரலி) அவர்கள் நீங்கள் தான் இங்கு பாங்கு சொல்ல வேண்டும் என்று சொன்னார்கள். நபி(ஸல்) மரணித்த பிறகு பைத்துல் முகத்திஸில் பாங்கு சொன்னார்கள் பிலால்(ரலி) அவர்கள். முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று சொன்னவுடன், பிலால்(ரழி) அவர்களும் அங்கு கூடியிருந்த அனைத்து ஸஹாபாக்களும், பிற முஸ்லீம்களும் அழுதார்கள் என்று பொன் எழுத்துக்களால் பதியப்பட வேண்டிய வரலாற்று சம்பவங்களை ஹதீஸ் தொகுப்புகளில் நாம் காணலாம்.

மனித இனத்தின் முன்மாதிரி, அகிலத்தின் அருட்கொடை, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஜனாதிபதி, இஸ்லாமிய போர்படைத் தலைவர், பொருளாதார மாமேதை, கண்ணியமான குடும்பத் தலைவர்,  இறைத்தூதரர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறந்த பின்பு அவர்களிடம் இருந்தது “பைலா என்ற வெள்ளை நிற கோவேறி கழுதை மற்றும் அங்குமிங்குமாக ஒட்டப்பட்டிருந்த போர்வை இவை மட்டுமே ரசூலுல்லாஹ்வுடைய கடைசி சொத்து." உலக வரலாற்றில் எந்த ஒரு தலைவரும் இவ்வாறு வாழ்ந்து மரணித்ததாக எந்த ஒரு சரித்திர ஏடுகளிலும் காணமுடியாது. நபி(ஸல்) அவர்கள் போல் இனி ஒரு மனிதர் யாரும் வரப்போவதும் இல்லை.

வயிராற உண்ண நமக்கு பல உணவு வகைகள் சமைக்கப்பட்டு நம் முன்னே இருக்கும் போது, நம்முடைய உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்கள் இது போன்ற உயர்தரமான உணவு வகைகளைச் சாப்பிடாமலே மரணித்துவிட்டார்கள் என்று அப்துர்ரஹ்மான் இப்னு ஆவ்ப் (ரலி) அவர்கள் அழுதது போல் நாம் என்றைக்காவது அழுதிருப்போமா?

அன்று திண்ணை தோழர்கள் (ஸஹாபாக்கள்) பசியும் பட்டினியுமாக வாழ்க்கையைக் கழித்தார்களே, இன்று வகை வகையாக நமக்கு உணவு கிடைக்கிறது, அதை நினைத்து என்றைக்காவது அல்லாஹ்விடம் கண்ணீர் மழ்க நன்றி செலுத்தியிருப்போமா?

அண்ணல் நபி(ஸல்) அடிக்கடி சொன்ன வார்த்தைகளில் “நானும் பிலாலும் சென்றோம், நானும் பிலாலும் நடந்தோம், நானும் பிலாலும் இருந்தோம், நானும் பிலாலும் சாப்பிட்டோம், நான் பிலாலும் உறங்கினோம்,” என்று நபி(ஸல்) அவர்களோடு வாழ்ந்த அந்த தியாகச் செம்மல், முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர்களின் பட்டியலில் உள்ள உன்னத மனிதர், முதன் முதலில் பாங்கு சொன்ன உத்தம நபியின் உன்னத தோழர், இஸ்லாத்திற்காக அடிவாங்கியவர்களின் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் நம்முடைய பிலால் (ரலி) அவர்கள் செய்த தியாகங்களை என்றைக்காவது நினைவு கூர்ந்து அழுதிருப்போமா?

நமக்கு நோய் நொடி வரும்போது நம்முடைய இறைத்தூதர் (ஸல்) அவர்களும் நோய்வாய்ப்பட்டார்கள், அவர்களும் நோயின் வேதனையில் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள் என்று என்றைக்காவது எண்ணி அழுதிருப்போமா?

நபி(ஸல்) அவர்களின் மேல் கொண்ட அன்பால் அவர்களின் மரண நேரத்தின் நெகிழ்ச்சியூட்டும் சம்பவங்களை ஒரு தடவை அல்ல பல முறை வாசித்து, பிறருக்கு எடுத்துச் சொல்லி நாம் நம்முடைய ஈமானை பலப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.  இன்ஷா அல்லாஹ்.

நாம் அழ வேண்டும்,
அர்த்தத்தோடு அழ வேண்டும்.

இந்த வார உறுதி மொழி:

நமக்கு மரணம் எந்த வினாடியும் ஏற்படும் என்று வாயளவில் மட்டும் சொல்லாமல், உள்ளத்தளவில் நமக்கு மரணம் எந்த வினாடியும் வரும் என்பதை சொல்லி, உணர்ந்து நமக்கு இவ்வுலகில் ஒவ்வொரு நாளும் கிடைக்கும் நேரத்தை கடமையாக்கப்பட்ட வணக்க வழிபாடுகள் மூலம் அல்லாஹ்வை வணங்கி, அவனுடைய சிந்தனையில் நம்முடையை ஒவ்வொரு பொழுதையும் செலவழிப்போமாக.

இந்த தொடர் அடுத்த வாரத்துடன் நிறைவுக்கு வருகிறது இன்ஷா அல்லாஹ்.

M தாஜுதீன்

நேற்று ! இன்று! நாளை! - 6 23

அதிரைநிருபர் பதிப்பகம் | June 25, 2013 | , , , , , , ,

ஒரு அரசாங்க சமஸ்தானத்தில் வேலை  பார்த்த புலவரிடம் இன்னொருவர் “சமஸ்தானத்தில் வேலை  பார்க்கிறீரே ! எவ்வளவு சம்பளம்?” என்று விசாரித்தாராம். புலவரும் “ மாசம்பத்து “ என்று பதில் கூறினாராம்.மாசம்பத்து என்கிற சொல்லுக்கு மா அதாவது பெரிய என்றும் அதிகம் என்றும்  சம்பத்து என்பதற்கு பணம் என்றும் பொருள் கொள்ளலாம். மாசம் பத்து ரூபாய் மட்டுமே என்றும் பொருள் கொள்ளலாம். இதை இங்கு குறிப்பிடக் காரணம் சம்பத் என்றால் செல்வம், செல்வாக்கு, பணம் என்று பொருள்படும். இங்கு நாம் விவரிக்க இருக்கும் ஈ . வெ. கி. சம்பத் அவர்களும் நல்ல செல்வம் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர்.   ஈ. வெ. கி. சம்பத் எனப்படும் ஈரோடு வெங்கட நாயகர் கிருஷ்ணசாமி சம்பத் (1926 - 1977) . இவர் பெரியார் ஈ. வெ. ராமசாமியின் அண்ணன் ஈ. வெ. கிருஷ்ணசாமியின் மகன். சம்பத் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தார். நீதிக்கட்சியிலும் பின்னர் திராவிடர் கழகத்திலும் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார். 1949ல் பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து அண்ணாதுரை பிரிந்து சென்று திராவிட முன்னேற்றக் கழகம்  தொடங்கிய போது அவருடன் சென்ற முக்கிய தலைவர்களுள் ஒருவர். சம்பத் திமுகவின் ஐம்பெரும் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார். (ஏனைய நால்வர் - அண்ணா,இரா. நெடுஞ்செழியன், கே. ஏ. மதியழகன், என். வி. நடராசன்). ஈ.வெ. கி. சம்பத் என்கிற பெயர் தமிழக அரசியல் உலகில் இன்று மறக்கப் பட்டாலும் ஒரு காலத்தில் தமிழகத்தை ஒரு கலக்குக் கலக்கிய பெயர். இந்த வரலாற்றுத் தொடர் சம்பத் போன்ற ஒரு அரசியல் பண்பாளரைப் பற்றி எழுதப் படாவிட்டால் நிறைவு பெற்றதாக ஆகாது.

அவர் அண்ணா அவர்களுடன் தோளோடு தோள் நின்று கட்சி வளர்த்தவர். அன்றைய கால கட்டத்தில் சுயமரியாதை அல்லது திராவிட இயக்கங்கள் ஆகட்டும் எல்லாம் ஏழ்மையின் நிழலில் வாழ்ந்தவர்கள்தான். இன்று கோடீஸ்வரர்களின் பட்டியலில் பெயர்கள் இருப்பவர்கள் ஒரு காலத்தில் மனைவிக்கு ஐந்து ரூபாய் மணிஆர்டர் அனுப்ப வழி இல்லாமல் இருந்தவர்கள்தான். இற்றுப் போன செருப்பை கக்கத்தில் வைத்து நடந்தவர்கள் இன்று இன்னோவாகார்களில் வலம் வரலாம்.  ஆனால் சம்பத் பிறவிப் பணக்காரர். பொருள் படைத்த மனிதர். அந்தக் காலத்தில்     ஈரோட்டில் பிறந்தவர் சென்னையில் தங்கி எம். ஏ. படிப்பது சாதாரணமான விஷயமல்ல. படித்ததுடன் பண்பாளராகவும் வாழ்ந்தார்.

தி .மு.க என்பது ஆரம்பத்தில் கையில் காசு இல்லாமல் பெரியாரை விட்டும் பிரிந்து தத்தளித்த கட்சியே. ஆனால் பெரியாரின் அண்ணன் மகனாகிய சம்பத்தின்  பையிலும் கையிலும்  இருந்த பணம் கட்சியின் வளர்ச்சிக்குப் பயன் பட்டது. அதே போல் நடிப்பிசைப்புலவர் கே. ஆர். ராமசாமி     என்கிற நடிகர் நாடகங்கள் நடத்தி கட்சி வளர நிதியுதவிகள் செய்தார். இலட்சிய நடிகர் என்று பெயர் பெற்ற எஸ். எஸ். இராஜேந்திரனின் பங்களிப்பும் கணிசமானது ; மறக்க முடியாதது. 

ஆரம்ப காலங்களில் அண்ணாவும் சம்பத்தும் தங்களின் கரங்களால் சுவரொட்டிகள் ஒட்டுவார்களாம். சுவரொட்டி ஓட்டுவது கைக்கு எட்டாத தூரத்தில் ஓட்டவேண்டும். இல்லாவிட்டால் இப்போது மாடுகள் சுவரொட்டிகளைத் தின்பது போல் அன்று மாடுகள் மட்டுமல்ல  மனித மாடுகளும் கிழித்துவிடுவார்கள். எனவேதான் எட்டாத உயரத்தில் ஓட்ட வேண்டும். சம்பத் அவர்கள் குனிந்து கொள்ளவும் அண்ணா அவர் மீதேறி சுவரொட்டி ஒட்டுவதும் அண்ணா குனிந்து கொள்வதும் சம்பத் அவர் மீதேறி சுவரொட்டி ஒட்டுவதும் வைகறை வேளைகளில் வழக்கமான நிகழ்வுகள்.  

இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து விஷயத்துக்குள் சென்றால் அண்ணாவை கை ரிக்ஷாவில் வைத்து சம்பத்தும் , சம்பத்தை கை ரிக்க்ஷாவில் வைத்து அண்ணாவும் இழுத்துச் சென்று சுவரொட்டிகள் ஒட்டிய நிகழ்ச்சிகளும் பிரச்சாரப் பயணங்களும் நிறையவே இருந்தன. 

சுவரொட்டி என்றதும் நினைவுக்கு வருபவை அந்த நாளைய சுவரொட்டிகளின் கவர்ச்சிமிகு அடுக்கு மொழி வாசகங்கள். எவ்வளவு நாகரிகமான வாசகங்கள் அன்றைய சுவரொட்டிகளில் சுயமரியாதை உணர்வுடன் ஒட்டப்பட்டன. இன்று போல் "வாழ்த்த வயதில்லை! வணங்குகிறோம்”  என்றெல்லாம் வக்கற்ற  சுவரொட்டிகள் ஒட்டப்படவில்லை. "சென்று வா! புகழ் மொண்டு வா!" என்றெல்லாம் மொக்கையான சுவரொட்டிகள் ஓட்டப்படவில்லை. அன்றைய சுவரொட்டிகள் ஒரு வரலாற்றை சொல்லும் . உதாரணத்துக்கு சில :-

“ நாட்டு வாட்டம் போக்கிட நோட்டடித்தால் போதுமா?” – பண நோட்டுகளை அச்சடித்த போது 

“ காகிதப் பூ மணக்காது ! காங்கிரஸ் சமதர்மம் இனிக்காது “- ஆவடி காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு ,

“சாலை ஓரத்தில் வேலையற்றதுகள்; வேலையற்றவர்களின் நெஞ்சங்களில் விபரீத எண்ணங்கள் ! அரசே! இது ஆபத்தின் அறிகுறி! “- வேலை  இல்லாத் திண்டாட்டத்தை சுட்டிக் காட்ட   

“ கூலி உயர்வு கேட்டார் அத்தான் குண்டடி பட்டு செத்தார்”- துப்பாக்கி சூட்டில் ஒரு தொழிலாளி செத்ததற்கு, 

“ காவல்துறை அமைச்சர் கக்கா! மாணவர்கள் என்ன கொக்கா?”- இந்தி எதிர்ப்புப் போரின் போது 

இவற்றில் “காகிதப்பூ” என்கிற வார்த்தையைப் பார்க்கும்போது நினைவுக்கு வரும் மற்றொரு செய்தியை பகிராமல் இருக்க இயலாது. இந்த வார்த்தையை தலைப்பாக வைத்து கருணாநிதி ஒரு நாடகத்தை 1967 –ல் தேர்தல் நிதிக்காக நடத்தி அதில் தானே கதாநாயகனாக நடித்தார். இந்த நாடகத்தில் ஒரு காதல் பூவும் மலர்ந்தது. ஆம்! இந்த   நாடகத்தில் கதாநாயகியாக நடித்தவர் பின்னாளில் அவரது வாழ்விலும் நாயகியானார். அவரே கருணாநிதியின் இன்னொரு மனைவியான திருமதி இராசாத்தி அம்மையார்.  காகிதப்பூவாக இருந்தாலும் அவரது இதயத்தில் மணம் வீசியவர். கருணாநிதியின் நாதஸ்வரத்தில் ஒலித்த மொழியே கனிமொழி என்கிற தனி மொழி. இவை பற்றி நிறைய பின்னர் பேசலாம்.  இப்போது திரு. சம்பத் அவர்களைப் பற்றி ,  1957 பாராளுமன்றத் தேர்தலில் தி மு க சார்பில் இரண்டுபேர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். ஒருவர் நாமக்கல் தொகுதியிலிருந்து சம்பத் மற்றவர் வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து தர்மலிங்கம் என்பவர். சொல்லின் செல்வர் என்று புகழப்பட்ட சம்பத் அவர்களின் மேடைப் பேச்சு கேட்பதற்கு இனிமையாக இருக்கும். யாரையும் மனம் நோகும்படிப் பேசமாட்டார். சொல்ல வந்ததை  கண்ணியமுடன் நயமாகப்        பேசுபவர். பொக்கிஷத்தில் உள்ள முத்துக் குவியலை அவிழ்த்து விட்டதைப் போல சரளமான ஒலி எழுப்பியும் தடங்கள் இல்லாமல் பேசும் ஆற்றல் வாய்ந்தவர். பொய்யை பொய் என்று சொல்லமாட்டார். உண்மைக்குப் புறம்பு என்பார். தோல்வி என்று சொல்ல மாட்டார். வெற்றி வாய்ப்பு இழந்தார் என்பார். பண்டித ஜவஹர்லால் நேருடன் இந்தி மொழி பற்றி பாராளுமன்றத்தில் நேருக்கு நேராக வாதாடிய வல்லமைக்கு சொந்தக்காரர்.   

திமுக'வின் ஆரம்ப காலங்களில் முடிதிருத்தும் கடைகளில், தேநீர் கடைகளில் , வெற்றிலை பாக்குக் கடைகளில், ‘ திராவிட நாடு திராவிடருக்கே’  என்கிற வாசகத்துடன் ஒரு படம் கண்ணாடி பிரேம் போட்டு தொங்கிக் கொண்டு இருக்கும். முதலில் அண்ணா அவருக்கு எதிர்ப் புறம்  சம்பத் படமும் இருக்கும். அதைத்தொடர்ந்து நெடுஞ்செழியன், கருணாநிதி, என்.வி நடராசன்,                  சத்யவாணி முத்து, சி. பி. சிற்றரசு, டி.கே  சீனிவாசன் ( இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்  டி. கே. எஸ். இளங்கோவனின் தந்தை) , என். எஸ். இளங்கோ, மதியழகன், ஆசைத்தம்பி, எஸ். எஸ். ராஜேந்திரன்      ஆகியோரின் படங்களும் இருக்கும். 

ஒரு கட்டத்தில் அதாவது 1962 பொதுத் தேர்தலுக்கு முன் நெடுஞ்செழியன் பொதுச்செயலாளராகவும் கருணாநிதி பொருளாளராகவும் இருந்தனர். சிறுக, சிறுக கட்சிக்குள் முனகல் சப்தம் வெளியில் கேட்க  ஆரம்பித்து விட்டது.  பாராளுமன்ற உறுப்பினராக சம்பத் அடிக்கடி டில்லியிலேயே தங்கி விட்டதால் கட்சியில் பிடிமானம் சற்று தளர்ந்து போனது மட்டுமல்லாமல் டில்லி அசோகா  ஓட்டலில் ஏதோ ஒன்று  அவரை தடுக்கி விட்டது. மாயமா, மந்திரமா, மனத் தடுமாற்றமா என்று புரியவில்லை. 

அறிஞர் அண்ணா என்று மேடைகளில் முழங்கிவந்த சம்பத் தோழர் அண்ணாத்துரை என்று பேச ஆரம்பித்தார். கட்சித்தலைவர்களும் நாடும் வியப்படைந்தனர். காரணம் தெரியாமல் விழித்தனர். கட்சிக்குள் தேர்தல் நடத்தி புதிய பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நிலை வந்தது.   நெடுஞ்செழியன் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டி இட்டார். யாரும் எதிர் பாராத நிலையில் சம்பத்  தானும் போட்டியிடப் போவதாக அறிவித்தார். கட்சியில் பிளவு வரும் நிலை வந்தது. நெடுஞ்செழியன் மற்றும் சம்பத் ஆகியோர் போட்டி இடப் போகின்றனர் என்கிற அறிவிப்பு வெளியிடப்போகும் நேரத்தில் நாடகத்தில் காட்சி மாறுவது போல் அண்ணா தான் போட்டி இடப் போவதாகச் சொன்னார். உடனே போட்டியிட்ட இருவரும் போட்டியில் இருந்து விலகினர் . இதனால் அந்த முறை அண்ணாவே பொதுச் செயலாளர் ஆனார். 

ஆனால் மழை விட்டாலும் தூவானம் விடவில்லை. நாளாக நாளாக விரிசல் அதிகமாகிக் கொண்டே போனது. மாயவரம்  பொதுக் குழுவுக்குப் பிறகு சம்பத் சில கோரிக்கைகளை முன் வைத்து தீர்மானம் நிறைவேற்ற வற்புறுத்தியபோது திரைப்படத்துறையில் இருப்பவர்களை குறிவைத்தே அந்த  தீர்மானங்கள் வர இருப்பதாக பேசப்பட்டது. பொருளாளரான கருணாநிதி கார் வாங்கவும், திரைப்படம் எடுக்கவும் கட்சி நிதியைப் பயன்படுத்தியதாக அரசால புரசலாக   பேசப்பட்டது. கொந்தளிப்பு நிறைந்த சூழலில் திமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு வேலூரில் கூடியது. அப்போது அண்ணாவுக்கும் கருணாநிதிக்கும் எதிராக ஆறு தீர்மானங்களை சம்பத் குழுவினர் கொண்டுவர இருப்பதாக செய்திகள் கசியத் தொடங்கின. பொதுச்செயலாளருக்கான அதிகாரங்கள் குறைக்கப்படும். அவைத் தலைவருக்கு அதிக அதிகாரங்கள் தரப்படும். பொருளாளர் பதவி கணக்கர் பதவி போல மாற்றப்படும் என்றெல்லாம் பேசப்பட்டன.

சம்பத்தின் பேச்சும் போக்கும் அண்ணாவை அதிருப்தி அடையச் செய்தன. அதை எல்லோருக்கும் புரியவைக்கும் வகையில் திராவிட நாடு இதழில் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற தலைப்பில் தொடர்கட்டுரை ஒன்றை எழுதினார். பெர்னார்ட் ஷா எழுதிய ஆப்பிள் கார்ட் என்ற கதையைத் தற்போதைய சூழலுக்கு ஏற்ப எழுதியிருந்தார். அந்தக் கதையில் வரும் போனார்ஜிஸ் என்ற பாத்திரத்தின் பெயரை புயலார் என்று மாற்றியிருந்தார். கதையில் வரும் மன்னரை புயலார் இளக்காரமாகப் பார்ப்பார், அவமதிப்பார், மமதையுடன் நடந்துகொள்வார். கதையில் வரும் மன்னர் அண்ணா என்றும் புயலார் என்பது சம்பத் என்றும் கட்சியினர் பேசத் தொடங்கினர்.

அண்ணாவின் பொடிவைத்த பேச்சுகள், குத்தல் நடை அனைத்தும் சம்பத்தைத் தாக்கும் வகையில் இருந்தன. ஆத்திரமடைந்த சம்பத், அண்ணாவுக்குப் பதில் கொடுக்கும் வகையில் அண்ணாவின் மன்னன் என்ற தலைப்பில் பதில் கட்டுரை ஒன்றை எழுதினார். அது, கண்ணதாசனின் தென்றல் இதழில் வெளியானது. அண்ணாவைப் போல அல்லாமல் சம்பத் நேரடி யுத்தத்தைத் தொடங்கியிருந்தார். சம்பத் – கருணாநிதி மோதல் என்பது சம்பத் – அண்ணா மோதலாக மாறியது. பத்திரிகைகளுக்கு அபார தீனி. அண்ணாவுக்கும் சம்பத்துக்கும் மோதல் முற்றிவிட்டது; விரைவில் திமுக உடைகிறது என்று எழுதினர்.

பிறகு சம்பத் எழுதிய அண்ணாவின் மன்னன் கட்டுரை பற்றி கட்சியின் பொதுக்குழுவில்  பேச்சு எழுந்தது. எல்லோரும் சம்பத்தைக் கண்டித்துப் பேச, அவைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் சம்பத். அதன்பிறகு பொருளாளர் என்ற முறையில் கட்சியின் கணக்கு வழக்கு விவரங்களை செயற்குழுவில் தாக்கல் செய்தார் கருணாநிதி. கார் வாங்கியது, திரைப்படத் தயாரிப்பு ஆகியவற்றுக்குக் கட்சியின் நிதி எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்பதை விளக்கும் வகையில் வங்கிக்கணக்கு புத்தகத்தையும்  தாக்கல் செய்தார் கருணாநிதி.

சம்பத்தின் ராஜினாமாவோடு பிரச்னைகள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது பற்றி அண்ணாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது தனது பாணியில், ‘ காதில் போட்டிருந்த  கடுக்கன் காதை சற்றுப் புண்ணாக்கிவிட்டது அதனால் கழற்றி வைத்திருக்கிறேன். புண் ஆறியதும் எடுத்து மீண்டும் அணிந்து கொள்வேன் ‘ என்றார்.  ஆனால் புதிய புதிய பிரச்னைகளைக் கிளப்பினார் சம்பத்.  குறிப்பாக, பொதுக்கூட்டம் ஒன்றில் கவிஞர் கண்ணதாசன் தாக்கப்பட்டதை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார் சம்பத். திடீரென பொருளாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் கருணாநிதி. சிக்கல்களை சீர்செய்யும் முயற்சியில் அண்ணா இறங்கினார். பிறகு உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் சம்பத். தனது ராஜினாமாவைத் திரும்பப் பெற்றார் கருணாநிதி.

உண்ணாவிரதம் முடிந்த கையோடு டெல்லி புறப்பட்டார் சம்பத். அசோகா வனத்தில் மாட்டிக் கொண்ட சீதை  போல அசோகா ஓட்டலில் நடந்த அதிசயத்தில் சம்பத் மாட்டிக் கொண்டார் என்று யூகங்கள் வந்தன.  அங்கு காங்கிரஸ் தலைவர்கள் சிலருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகச் செய்திகள் வெளியாகின. சில நாள்களில் சென்னை திரும்பிய சம்பத், 9 ஏப்ரல் 1961 அன்று திமுகவில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். திராவிட முன்னேற்றக் கழகம் தனது முதல் பிளவைச் சந்தித்தது.

சம்பத்துடன் கண்ணதாசன், மதியழகன், இளங்கோ, ஆசைத்தம்பி ஆகியோரும் பிரிந்தனர். ஆனாலும் ஆசைத்தம்பியும் மதியழகனும் மீண்டும் திமுகவுக்குத் திரும்பிச் சென்றனர். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல் காங்கிரசார் தலைகால் புரியாமல் மகிழ்ந்தனர். கட்சிகளை உடைக்கும் கலையில் ஒரு கட்டம் அரசியல் அரங்கில் அரங்கேறியது. 

திமுகவை விட்டு வெளியேறிய சில  தினங்களில் சம்பத்தின் புதிய கட்சி உருவாகிற்று. திராவிட நாடு என்று முழங்கிக் கொண்டிருந்த சம்பத் தமிழ் தேசியம் என்கிற ஒரு தத்துவத்தின் அடிப்படையில் தமிழ் தேசியக் கட்சியை உருவாக்கினார். திமுகவும் த தே க வும் ஒருவருக்கொருவர்  குற்றச்சாட்டுகளையும் வசவுகளையும் கக்கினார்கள். அப்போது 1962 பொதுத் தேர்தல் வந்தது. தென் சென்னை பாராளுமன்றத் தொகுதியில் சம்பத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி மு கவின் மற்றொரு சொல் வல்லோன் நாஞ்சில் மனோகரன் போட்டியிட்டார். நாஞ்சில் மனோகரன் ஏற்கனவே  நாகை பாராளுமன்றத் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தவர். எனவே போட்டி கடுமையாக இருந்தது.  அப்போது சம்பத் பேசிய வார்த்தைகள் இன்றளவும் பலரால் பயன் படுத்தப் படுகிறது. தென் சென்னையில் தி மு க வுக்கு நல்ல ஆதரவு இருந்ததால் சம்பத் கூறினார், “ சிங்கத்தை   அதன் குகையிலேயே சந்திக்கிறேன்” என்றார். பத்திரிக்கைகள் இந்த தொகுதி பற்றிய  செய்திகளை பரபரப்பாக்கின. புளிய மரத்தடிகள் மக்கள் கூடிப் பேசும் அரசியல் அரங்குகளாயின. நல்ல  வேளை மருத்துவர் ஐயா அப்போது வளரவில்லை அதனால் மரங்கள் நிழல் தரும் அளவுக்கு வளர்ந்து இருந்தன. தேர்தல் முடிவுகள் வெளி வந்தன. சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கச்  சென்ற சம்பத்,  பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அன்றைய மாலைமுரசு பத்திரிகையில் இந்த தோல்வியே கார்டூனாக வந்தது. அதாவது குகைக்குள் நுழைந்த சம்பத்தை ஒரு சிங்கம் சதையையும் தோலையும் சாப்பிட்டுவிட்டு முள்ளை மட்டும் வெளியில் கொண்டு வந்து கக்கியது போன்ற     படம் வந்து பிரமாதப் படுத்தியது. இந்தத்  தோல்விக்குப் பிறகு சம்பத் வேறு எந்த தேர்தலிலும் போட்டி இட்டதாக தெரியவில்லை. 

சம்பத்துடன் திமுகவை விட்டு விலகிய பலர் மீண்டும் தி மு கவுக்கு திரும்பிவிட கண்ணதாசன் முதலிய சிலருடன் மட்டும் கை கோர்த்துக் கொண்டு சம்பத் தமிழ் தேசியக் கட்சிக்கு மூடுவிழா நடத்திவிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.    இப்படி பெரியாரின் அண்ணன் மகனாக , அண்ணாவின் நண்பராக அரசியல் செய்து புகழ் பெற்ற சம்பத் பெருந்தலைவர் காமராசரின் சீடரானார். தமிழ் தேசியக் கட்சியின் ஒரே சாதனை அதுவரை திருமணம் வேண்டாம் என்று இருந்த என். எஸ். இளங்கோவுக்கு திருமணம் செய்து வைத்ததுதான். கட்சி ஆரம்பித்த சமயம் ஏற்றி வைக்கப் பட்ட அந்தக் கட்சியின் கொடிகள் சாயம் வெளுத்துப் போய் இருந்ததை    மாற்றக் கூட அந்தக் கட்சியில் தொண்டர் பலம் இருக்கவில்லை.  

சம்பத்தும் கண்ணதாசனும் காங்கிரசில் சேர தருணம் பார்த்திருந்த சமயத்தில் கண்ணதாசன் இப்படி எழுதினார். 

"அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி ! 
நான் சேரும் நாள் பார்க்க சொல்லடி" 

என்பதே அந்த வரிகள். காமராசரின் அம்மா பெயர் சிவகாமி என்பது ஊர் அறிந்தது. இதே போல் அரசியல் நிகழ்வுகளை பாடல்களில் புகுத்தி எழுதுவது கண்ணதாசனுக்கு   வழக்கம். 

இதே முறையில்தான்  1962ல் வெளியான ஒரு திரைப்படத்தின்  படப்பிடிப்பு 1961லேயே நடந்து வந்தது. அப்போதுதான் கவிஞர் கண்ணதாசன் தி.மு.க.வை விட்டு விலகி (ஏப்ரல் 11, 1961) ஈ.வெ.கி.சம்பத் தலைமையில் தமிழ் தேசியக் கட்சியைத் துவங்கி அதில் முக்கிய பொறுப்பிலிருந்தார். அப்போது அவர் எழுதிய பாடல்களிலும் கட்டுரைகளிலும் தி.மு.க. தலைவர் அண்ணாதுரையை கடுமையாக தாக்கி வந்தார். அந்த நேரம் பார்த்து இயக்குனர் பீம்சிங், படித்தால் மட்டும் போதுமாவுக்காக, தம்பியை ஏமாற்றிய அண்ணனைப் பற்றி பாடல் எழுத வேண்டும் என்று கேட்டபோது, கவிஞருக்கு அண்ணாதுரையை தாக்க அருமையான சந்தர்ப்பம் கிடைத்தது என்று மகிழ்ந்து, உடனே விஸ்வநாதன்-ராமமூர்த்தி குழுவினருடன் அமர்ந்து விட்டார்.

அவர் பாடல் வரிகளைச் சொல்லச் சொல்ல தம்பியை ஏமாற்றிய அண்ணனைப் பற்றி  கதையைத் தழுவிய பாடல்தான் இது  என்று தயாரிப்பாளர்கள் எண்ணினார்கள்.  படம் வெளியான பின்புதான் கவிஞர் சொன்னார், அது அண்ணாதுரையை தாக்கி நான் எழுதியது என்று. அந்த வரிகள் இதுதான் :-

அண்ணன் காட்டிய வழியம்மா – இது
அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா – என்
கையே என்னை அடித்ததம்மா

தொட்டால் சுடுவது நெருப்பாகும்
தொடாமல் சுடுவது சிரிப்பாகும்
தெரிந்தே கெடுப்பது பகையாகும்
தெரியாமல் கெடுப்பது உறவாகும்

அடைக்கலம் என்றே நினைத்திருந்தேன் 
அணைத்தவனே நெஞ்சை எரித்து விட்டான்
கொடுத்தருள்வாய் என்று வேண்டி நின்றேன்
கும்பிட்ட கைகளை முறித்து விட்டான்

அவனை நினைத்தே நானிருந்தேன் – அவன்
தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான்
இன்னும் அவனை மறக்கவில்லை – அவன்
இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை. 

இது மட்டுமல்ல . திமுக பெரிய கட்சி ; தமிழ் தேசியக் கட்சி சிறிய கட்சி என்கிற விமர்சனங்கள் வந்தபோது 

ஓதிய மரங்கள் பெருத்து இருந்தாலும் 
உத்திரமாகாது 
உருவத்தில் சிறியது கடுகானாலும் 
காரம்  போகாது – என்று எழுதினார். 

இன்ஷா அல்லாஹ் தொடரும்....
முத்துப் பேட்டை  P. பகுருதீன் .B.Sc;

அதிரையில் நடந்த அடிக்கல் நாட்டு விழா எனும் பூமி பூஜை !. 71

அதிரைநிருபர் பதிப்பகம் | June 24, 2013 | , , , ,

அதிரையின் பிரதான கடைத்தெரு (மார்க்கெட்) பாரம்பரியமிக்க தக்வாப் பள்ளி நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இங்கு அமைந்துள்ள ஒரு சில கடைகள் சுகாதாரமற்று காணப்படுவதை பலர் குறைபட்டுக் கூறினாலும், நீண்ட காலமாக முறையான பராமரிப்பின்றி காணப்படும் கடைகளின் சில பகுதிகள் இடிந்து விழும் நிலையிலேயே இருந்து வந்தன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக் கொண்ட தக்வாப் பள்ளியின் புதிய நிர்வாகிகள் பழமை வாய்ந்த மீன்-மார்க்கெட் பகுதியை புதுப்பித்து விரிவாக்கம் செய்யும் பணிகளில் ஈடுபடப் போவதாக கூறி வந்தனர். அதன் தொடர்ச்சியே மீன் மார்க்கெட்டை விரிவாக்கம் செய்து அங்கே புதிய கட்டடம் ஒன்றை கட்டி எழுப்புவதாகவும் அறிவித்திருந்தனர். இதற்காக பிரமாண்டமாய் ரூபாய் 85 இலட்சம் பொருட்செலவில் 120 கடைகளைக் கொண்ட வளாகம் கட்டுவதற்காக 17-06-2013 அன்று காலை 7 மணியளவில் அடிக்கல்(!!) நாட்டப்பட்டது. இதுதான் கடந்த வாரம் அதிரைச் செய்திகளை அளித்து வரும் வலைத்தளங்களில் வெளிவந்த செய்தி. ஆனால் அன்று இஸ்லாமிய மார்க்கத்திற்கு விரோதமான நிகழ்வுகள் நடந்ததை கண்டிக்காமல் மறைக்கப்பட்டுள்ளது என்பதை தீர விசாரித்த பின்னரே அறிய முடிந்தது. அதுதான் உண்மை. 

தக்வா பள்ளி பிரதான மார்கெட் அடிக்கல் நாட்டு விழா.


பிற மதத்தவர்கள் செய்யும் பூமி பூஜையில் இடம் பெரும் சடங்குககள்.


பிற சமூகத்தவர் புனிதம் என்று கருதுவதை நாம் அதற்கு இணையாக செய்வது சரியா நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

நபி(ஸல்) அவர்களும் தங்களின் காலத்தில் வீடுகள், பள்ளிவாசல்கள் கட்டினார்கள், ஏதாவது ஒரு சந்தர்பத்தில் இவ்வாறான அடிக்கல் நட்டு கட்டினார்கள் என்று ஹதீஸ்களில் இருந்து காட்ட முடியுமா?

அடிக்கல் நாட்டு விழா என்ற இந்த சடங்கு இஸ்லாமிய மார்க்கத்தில்தான் உள்ளதா?

ஒரு குறிப்பிட்ட மனிதன் அந்தச் செயலை செய்தால்தான் அச்செயலில் பரக்கத்து (அபிவிருத்தி) உள்ளது என்பதற்கு குர்ஆன் ஹதீஸ் படிப்பினையில் என்ன ஆதாரம் உள்ளது?

எந்த ஒரு செயலை செய்தாலும் பிஸ்மில்லாஹ் என்று சொல்லிச் செய்ய வேண்டும் என்ற அறிவு எல்லோருக்கும் இருந்தும், கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் விழா என்று ஒரு நிகழ்வை நடத்தி பாஃத்திஹா ஓதி ஆமீன் சொல்லி அடிக்கல் நாட்ட குர்ஆன் சுன்னா அடிப்படையில்தான் ஆதாரம் உள்ளதா? 

ஏன் ஷாஃபி மத்ஹப் வழிபோற்றுகிறோம் என்று சொல்லுபவர்கள் தான் இந்த அடிக்கல் நாட்டு விழாவை நடத்தியுள்ளார்கள். கண்ணியத்திற்குறிய இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் இவ்வாறு செய்வதற்கு அங்கீகரித்த அல்லது அனுமதித்த ஒரு ஃபாத்வாவையாவது ஆதாரமாவது காட்ட முடியுமா?

இது போன்ற மார்க்க விரோத நிகழ்ச்சிகளில் முன்னின்று ஃபாத்திஹா ஓதுபவர்களில் பெரும்பாலானவர்கள் கூலி வாங்காமல் அச்செயலை செய்வதில்லை என்பது மறைக்கப்பட்ட உண்மை. 

அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உள்ளோம் என்று, அல்லாஹ்வின் பெயரை சொல்லி அடிக்கல் நாட்டு விழாக்களில் கலந்து கொள்ளும் ஜின் வைத்தியம், தாயத்து, தட்டு இன்னும் பிற குறி சொல்லி வைத்தியம் செய்யும் பேர்வழிகள் சிலர் அல்லாஹ்வின் புரோகிதர்கள் என்ற பிரம்மையை உண்டாக்கிக் கொண்டவர்களான இவர்கள் என்ன இலவசமாகவா தங்களுடைய சேவையை செய்கிறார்கள்? 

இதெல்லாம் 100% வியாபாரம் ஒவ்வொரு மார்க்க விரோத போக்குக்கு பின்னாலும் பல்லாயிரம் ரூபாய் அல்லவா வீணடிக்கப்படுகிறது.

பிறமத கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கை இதோ..

நபி(ஸல்)கூறினார்கள் யார் பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றி நடக்கின்றாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவர் என கூறினார்கள். நூல்: அபூதாவூத் 3512. 

அடிக்கல் நாட்டு விழா என்னும் பெயரில் பூமி பூஜை என்ற அனாச்சாரமான பிறமத கலாச்சாரத்தை அப்படியே செய்து வருகின்றனர் என்பதை மேல் குறிப்பிட்ட தக்வாபள்ளி மார்கெட் அடிக்கல் நாட்டு விழாவில் நடைபெற்றதையும், பிறமதத்தை சேர்ந்தவர்கள் செய்த பூமி பூஜையில் நடைபெறதையும் உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறோம்.

மார்க்க அறிஞர்கள் நிறைந்த ஊர் என்று அதிரையை பல வருடங்களாக சொல்லி வருகிறோம். மார்க்க அறிஞர்கள் குறைவாக உள்ள பிற ஊர்களில் இல்லாத மார்க்க விரோத போக்கு அளவுக்கதிகமாகிக் கொண்டே போவதற்கு யார் பொறுப்பு? என்பதை சிந்திக்க வேண்டும். 

ஏன் ஷிர்க் பித் அத்துக்களை எதிர்த்து பேச உள்ளூரில் மார்க்க அறிஞர்கள்தான் இல்லையா? 

வெள்ளி மேடையில் ஷிர்க் பித்அத் அனாச்சாரங்களை எதிர்த்து துணிந்து பிரச்சாரம் செய்யும் அதிரை இளம் ஆலிம்களும், பெரிய ஜும்மா பள்ளியில் பிரச்சாரம் செய்துவரும் ஆலிம் அவர்களும் தாங்கள் தொடர்ந்து செய்துவரும் தக்வா பள்ளி பயானிலும், பெண்கள் பயான்களிலும் இது போன்ற பூமிபுஜை அனாச்சாரங்களை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் அடியோடு இந்தக் கலாச்சாரம் விட்டொழிய பாடுபடவேண்டும்.

அதிரையில் உள்ள பழைமைவாய்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அரபி மதர்ஸாக்கள் என்றைக்கு மத்ஹப் பாடத் திட்டத்திலிருந்து விலகி தூய்மையான குர்ஆன் ஹதீஸ் அடிப்பையிலான மார்க்க கல்வி திட்டத்திற்கு வருகிறதோ அன்று தான் நமதூருக்கு இவ்வாறான மார்க்க புரோகிதர்களிடமிருந்து விடிவுகாலம் பிறக்கும் என்பது மட்டும் தெளிவு.

அல்லாஹ் நம் எல்லோரையும் நேர்வழி படுத்துவானாக. மார்க்கத்தில் இல்லாத புதினங்களிலிருந்து நம் எல்லோரையும் பாதுகாப்பானாக.

புரோகிதர்களின் சூழ்ச்சிக்கு எதிரான எச்சரிக்கை தொடரும். இன்ஷா அல்லாஹ்.

அதிரைநிருபர் பதிப்பகம்

உங்கள் குழந்தைகள் யாருடைய செல்லப் பிள்ளைகள் !? :: விவாதக்களம் 30

அதிரைநிருபர் பதிப்பகம் | June 23, 2013 | , , , ,

குழந்தைப் பருவத்தில் பள்ளியில் / தெருவில் விளையாடி விட்டு கரைபடிந்த வேட்டியோடும் அழுக்கடைந்த பேன்டோடும் வீட்டுக்குள் நுழைந்தால் நிறையபேருக்கு விழுவது காரமான திட்டு, அதில் எங்கிருந்தோ ஒரு மூலையிலிருந்து குரல் வரும் "யாவ்வுள புள்ளைய திட்டுறே இப்போதான் வெளியிலேயிருந்து வர்ரான், தம்பி நீ போயீ கைகால் கழுவிட்டு டிரஸ் மாத்திட்டு வாம்மா" இப்படியாக கனிவான இதமான குரல் ஒன்று ஒலிக்கும்.

அவ்வாறான அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டதுண்டா ? "சீக்கிரம் சாப்புடு, உம்மா வந்திடப் போறா / வாப்பா வந்திடப் போறாங்க" என்று அறக்க பறக்க சாப்பிட வைக்கும் பெரிசுகளின் மூச்சுக் காற்று உங்களின் மீது நிச்சயம் பட்டிருக்கனுமே ! அந்த சுகமான சூழல் திரும்பிடாதா என்று ஏங்க வைத்திருக்கனுமே !?

"புள்ள வந்திருக்கா ஏதாவது கொண்டுவாவுள" என்று குரல் கொடுத்து விட்டு அப்படியே நம்மை வாரிச் சுருட்டும் வாப்பிச்சோ / பெரியம்மாவோ அல்லது அப்பாக்களோ அமையப் பெற்றவர்கள் நம்மில் ஏராளம் இருந்தாலும், இந்தச் சூழல் நமது குழந்தைகளுக்கும் கிடைக்கப் பெறுகிறதா ? இன்றையச் சூழலில் என்று சிந்திக்கவே தூண்டுகிறது.

ஆண் / பெண் குழந்தைகளாகட்டும், வீட்டில் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ நிச்சயம் செல்லப் பிள்ளையாக இருப்பார்கள், அதில் அவரவர் வீட்டுச் சூழலின் இறுக்கம் / தளர்ச்சி இவைகளைப் பொறுத்தே அமைகிறது.

நீங்கள் யாருடைய செல்லப் பிள்ளை !? அப்படின்னா உங்கள் குழந்தைகள் யாருடைய செல்லப் பிள்ளைகளாக வலம் வருகிறார்கள் !?

வாருங்களேன் நெருக்கமாகவே விவாதிக்கலாம் !

அதிரைநிருபர் பதிப்பகம்

தன்னிலை சுகாதாரம்.. 14

அதிரைநிருபர் பதிப்பகம் | June 22, 2013 | , ,

இதை எழுத காரணமாக இருந்த சூழ்நிலை இப்போது ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழியும் சூழ்நிழைதான்,


'உலகத்தில் இருக்கும் மதம் / மார்க்கங்களில் அதிகம் சுத்தம் சம்பந்தமாக முக்கியத்துவம் கொடுத்த ஒரே மார்க்கம் இஸ்லாம் தான், துரதிஸ்ட்டவசமாக் அதன் விழிப்புணர்வுகள் முஸ்லீம்களிடம் சரியாக போய்சேரவில்லையோ என நினைக்க தோனுகிறது....இது ஒரு முறை டாக்டர் K.V.S ஹபீப் முகமது சொன்னார் [ இவர் இஸ்லாமிய அறிஞரும் ஆவார்.]

அது முன்பு இருக்கலாம் இப்போது மாறிவிட்டது என நினைப்பவர்களுக்கு....

# எப்படி பப்ளிக் டாய்லெட்களில் அடிக்கும் ஒருவிதமான அமோனியா வாடை மூச்சுதினறவைக்கிறது

# தன் பல்லை சுற்றி கேரளாவில் உள்ள அரண்மணை சுவர்கள் மாதிரி பாசிபடிய விட்டு எப்படி சிலபேரால் பொதுவில் நடமாட முடிகிறது.

இதற்க்கும் மக்கள் தொகைதான் காரணமா????....எப்படி இதே மக்கள் தொகை [ஆட்கள்] பயன்படுத்தும் டாய்லெட் வெளிநாடுகளில் சுத்தமாக இருக்கிறது.

அவர்களுக்கு எல்லாம் மற்றவர்களை பற்றி கவலை இருக்கிறது. நம்மிடம் அது இல்லை ,

இருந்தால் வீட்டுவாசலில் ஏன் ஒவ்வொறு நாளும் ஒடும் சாக்கடையில் லாங் ஜம்ப் தாண்டுகிறோம்.

காலையிலும் இரவிலும் பல் தேய்க்க சொல்வது பள்ளிக்கூட படிப்பு. இது என்னவோ எக்ஸாமுக்கு உள்ள விசயம் மாதிரி நிரைய பேர் அந்த வருசத்து புத்தகத்தை பாதி விலைக்கு போட்ட அதே மூட்டையில் கட்டி அனுப்பி விட்டார்கள்./ வாங்கியவனும் பயன்படுத்த வில்லை என்று சகோ; சாகுல் ஹமீது தமாமிலிருந்து பின்னூட்டமிடலாம்.

இதற்கெல்லாம் அரைமணித்தியாலத்தில் பாலிசிங் ட்ரில்லர்/வாக்யும் வைத்து சுத்தபடுத்த பல்டாகடர்கள் வந்துவிட்டார்கள் கேட்டால்..."நேரமில்லை' நு SMS மாதிரி சொல்லிடுவானுக. இன்னும் செளசால்யம் [Toilet] இல்லாத வீடுகள் நமது ஊரில் இருக்கிரது என நினைக்கிறேன் , .காரணம் = வசதியில்லை..அதெ வீட்டில் உள்ள்வர்கள் எப்படி லட்சகணக்கில் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்ப பணம் புரட்டிகிறார்கள் என்ப்து 'பிடிவாதக்கொடுமை'

பக்கத்தில் ஆட்கள் இருக்கும்போது வாயில் கர்சீப் / அல்லது முடிந்தால் தூரம் போய் தும்மும் பணிவன்பு நிறைய பேரிடம் இல்லை. இது போன்ற கற்கால பழக்க வழக்கங்களால் Epidamic Disease பரவுகிறது என மருத்துவ துறையினர் தொடர்ந்து வழியுருத்திவருகிறார்கள்.இந்த லட்சனத்தில் 'பன்றிக்காய்ச்சல் பாய்மாருஙகளுக்கு வ்ராது' என ஒருவர் ["பாய்"தான்] இனையயத்தில் எழுதியிருந்தார்... [உன் அறிவியல் அறிவில் கொள்ளி வைக்க!!]

இன்னும் சிலர் ஜுரம் / தடுமலுக்கு டாக்டரிடம் போகும் போது ஏதோ எல்லாம் இழந்து விட்ட மாதிரி போவது [ அப்பதான் நல்ல ஊசி/மாத்திரை தருவார்!!] கொஞ்சம் பல் தேய்த்து , வாய் கொப்பளித்து , முகம் கழுவி போனால்தான் என்ன .

இவர்கள் வாய்திறந்து பேசி அந்த மயக்கத்தில் டாக்டருக்கு ஆம்புலன்ஸ் தேவைப்படும் அளவுக்கு போய்விடலாம் அல்லவா?

சிகரட் / வெத்திலை / சுருட்டு உபயோகிப்பவர்களை திருமணம் செய்த பெண்களுக்கு 'அமைதிக்கான நோபல் பரிசு' கொடுக்கலாமா என அதிரை எக்ஸ்பிரஸ் ஒரு இன்டெர்னெட் தேர்தல் தாராளமாக நடத்தலாம்.மலேசியாவின் இஸ்லாமியத்துறை சிகரட் ஒரு ஹ்ராமான வஸ்த்து என அறிவித்து சில வருடங்கள் ஆகிவிட்டது.

காரில் போகும்போது தும்மும்போது கவனமாக இருங்கள், உங்களிடமிருந்து வெளியாகும் பாக்டிரியா 30 நிமிடத்துக்கு உயிர்வாழமுடியும். [ கார் கண்ணாடி திறந்திருப்பது நல்லது.] அப்படி யாரும் தும்மிவிட்டால் உடனே கண்டித்து விடாதீர்கள்..சிலருக்கு நாக்கில் சனியன் AC ரூம் போட்டுதங்கியிருக்கும்.

Personal Hygiene பற்றி எழுத நிறையவிசயம் இருக்கிறது.

ZAKIR HUSSAIN
22-Jun-2010 - இது ஒரு மீள்பதிவு !

முதுமை என்பது, ஒரு குழந்தைப் பருவம்! 2

அதிரைநிருபர் | June 21, 2013 | , ,

என் பெற்றோர் என்னைச் சந்திக்க வந்துவிட்டு, ஒரு வியாழக்கிழமை அன்று ஊருக்குத் திரும்பிச் செல்ல ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களை விடைகொடுத்து அனுப்புவதற்காக நாங்கள் விமான நிலையத்திற்குச் செல்ல ஆயத்தமானோம். உண்மையில், அவர்கள் ஊருக்கு விமானத்தில் திரும்பிச் செல்ல இருக்கிறார்கள் என்பது, அவர்களுக்குத் தெரியாது. என் பெற்றோர், அதுவரையில் விமானப் பயணமே செய்ததில்லை! எனவே, இம்முறை விமானப் பயணத்தின் சுகானுபவத்தில் அவர்கள் திளைக்கட்டும் என்று முடிவெடுத்து, அவர்களுக்கான இருக்கையை உறுதிப்படுத்திவிட்டுத்தான், என் தந்தையாரிடம் விமானப் பயணச்சீட்டை நீட்டினேன்.

என் தந்தையின் முகத்தில் பளிச்சிட்ட வியப்பையும் ஆனந்தத்தையும் கண்டு மகிழ்ந்த நான், விமானம் பறக்கும் உயரமென்ன, அதைவிடப் பன்மடங்கு உயரப் பறந்தேன்! பள்ளிச் சிறுவன் ஒருவனைப்போல், அவர் தான் எடுத்துச் செல்லவேண்டிய பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக்கொண்டிருந்ததும், தனது சாமான்களை ஏற்றிக்கொண்டு உருட்டிச் செல்லும் 'ட்ராலி'யை நகர்த்திப் பார்த்ததும், நாங்கள் விமான நிலையத்தை அடைந்த பின்னர் பயணிகளின் பரிசோதனைக்காகக் காத்திருந்ததும், தனக்குச் சாளர இருக்கை (Window seat) கேட்டுப் பெற்றதும் ஆகிய அவருடைய ஒவ்வொரு அசைவும் என்னைக் குதூகலிக்கச் செய்தது.

இறுதியாக, எங்களுக்கு விடைகொடுத்துவிட்டு விமானத்தில் ஏறும் நேரத்தை அடைந்தபோது, என்னை நோக்கி வந்த அவருடைய முகத்தைப் பார்த்தேன்; அவர் கண்கள் பனித்தன! "Thanks my dear son" என்று அவர் கூறியபோது, அவருடைய அதரங்கள் துடித்தன! அவருடைய நன்றிக்கு ஆயிரம் பொருள்கள் கூறலாம்! நான் செய்ததோ, ஒரேயொரு உதவிதான். அதன் பயனை உணர்ந்த அந்தத் தந்தையின் உள்ளமோ, அதற்காக அயிரமாயிரம் நன்றிகளை அள்ளித் தந்துகொண்டிருந்தது!

அவர் எனக்கு நன்றி கூறியபோது, எனது அந்தச் சாதாரண உதவிக்காகத் தந்தையிடமிருந்து இத்துணை உணர்வுகளின் வெளிப்பாடா என்று வியந்து நின்றேன்! "எனக்கு ஏனப்பா இவ்வளவு நன்றிப் பெருக்கு?" எனக் கூறி எனது தாழ்மையை வெளிப்படுத்தினேன். அடுத்த வினாடியில், எனது கடந்த கால வாழ்க்கையின் எல்லா விதமான நிகழ்வுகளும் என் இதயத்தில் படங்களாக விரிந்தன:

நாம் குழந்தைகளாக இருந்தபோது, பெற்றோர் நம்முடைய எத்தனைக் கனவுகளை நனவுகளாக்கினர்! அவர்களின் பொருளாதார நிலைபற்றி அறியாமல், நாங்கள் கிரிக்கெட் மட்டை வாங்கிக் கேட்டோம்; வாங்கித் தந்தார்கள். விதவிதமான ஆடைகள், விளையாட்டுச் சாதனங்கள் எல்லாம் வாங்கித் தந்தார்கள். புதுப்புது இடங்களைக் கண்டு களிக்கச் செய்தார்கள். அவர்களின் பொருளாதார வசதியைப்பற்றி எங்களுக்கேது கவலை? எங்களுக்கு எங்கள் ஆசைகள் நிறைவேறவேண்டும்; அவ்வளவுதான். அவற்றை நிறைவேற்றித் தருவதற்காக அவர்கள் என்னவெல்லாம் தியாகங்கள், அர்ப்பணிப்புகள் செய்தார்கள் என்பது பற்றியெல்லாம் நாங்கள் சிந்தித்துப் பார்த்தோமா? அல்லது, அவர்கள் நிறைவேற்றித் தந்த எங்கள் விருப்பங்களுக்காக எப்பொழுதாவது அவர்களுக்கு நாங்கள் நன்றி சொன்னோமா?

இது போன்றே, இன்று நாங்கள் எம் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக, அவர்களைத் தரமான பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைக்கிறோம். அதற்கான செலவுகளைக் கணக்குப் பார்ப்பதில்லை. அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து, நம்மைப்பற்றிப் பெரிதாக எண்ணிக்கொள்ளும் அதே வேளை, நம்மை உயர்நிலையில் ஆக்க நம்முடைய பெற்றோர்கள் என்னவெல்லாம் தியாகங்கள் செய்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கத் தவறிவிடுகின்றோம்!

என் சிறு வயதில் என் பெற்றோர் என்னிடம் கேட்ட பல கேள்விகளுக்குப் பொறுமையில்லாமல் பதில் சொல்லியிருக்கிறேன். அப்போதெல்லாம், அவர்கள் என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், இப்போது என் மகள் கேட்கும் கேள்விகளுக்கு நான் மிகவும் அடக்கமாகவும் அமைதியாகவும் பதில் கூறுகின்றேன். இப்போதுதான் நமக்கு உணர்வு வருகின்றது, முதுமை என்பது மற்றொரு குழந்தைப் பருவமாகும் என்று. எனவே, நாம் நம் குழந்தைகளைப் பாசத்துடன் பராமரிக்கும் விதத்திலேயே நம் பெற்றோர்களையும் முதியவர்களையும் நோக்கவேண்டும்.

நம் குழந்தைகள் வந்து நம்மிடம் கேள்விகள் கேட்கும்போது, செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருக்கலாம். அப்போது, அவர்களின் முகத்தை நோக்கிக் கனிவாக பதில் கூறுவதற்குப் பகரமாக, ஒரே வார்த்தையில் பதில் கூறி அவர்களை விரட்டிவிடக் கூடாது.

"Thanks!" என்ற சொல்லைக் கூறி, என்னை இவ்வளவு தூரம் சிந்திக்கச் செய்துவிட்ட என் தந்தையை, அவருக்கு இன்பத்தைத் தரும் இந்தப் பயணக் கனவை நனவாக்கிக் கொடுக்க இவ்வளவு நாட்கள் காத்திருக்க வைத்துவிட்டேனே என்ற குற்ற உணர்வால் கூனிக் குறுகி நின்றேன் நான். எனக்கு நன்றாகத் தெரியும், அவர்கள் என்னை உயர்த்தி வைத்துப் பார்ப்பதற்காக என்னவெல்லாம் தியாகங்கள் செய்திருப்பார்கள் என்று. எஞ்சியிருக்கும் நாட்களில் அவர்களின் எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பேன் என்று இவ்வேளை நான் எடுக்கும் உறுதிப்பாடு நிலைத்திருக்கவேண்டும், அவர்களின் மரணத்தின் பின்னரும்!

அவர்கள் முதுமையை அடைந்துவிட்டதால், அவர்களின் இதய வேட்கைகளைத் தியாகம் செய்துவிட வேண்டும்; அவர்களின் பேரப்பிள்ளைகளின் பராமரிப்பில் தங்கள் எஞ்சிய காலத்தைக் கழிக்கவேண்டும் என்பது கருத்தன்று. அவர்களுக்கும் ஆசைகள் இருக்கத்தான் செய்யும்! எனவே, உங்கள் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுங்கள்! அவர்கள் விலைமதிப்பற்ற சொத்தாவர்!

'Human Relations' என்பது பற்றிய கருத்தாய்வு நிகழ்ச்சி ஒன்றில், Indian Institute of Technologyயில் பணி புரியும் திரு வி. பாலசுப்ரமணியன் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவிலிருந்து.

தகவல்: அதிரை அஹ்மது

இது ஓர் மீள்பதிவு : - அன்று இது அதிரைநிருபருக்கு கன்னிப் பதிவு !
20-Jun-2010

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 01 2

அதிரைநிருபர் பதிப்பகம் | June 21, 2013 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

குர்ஆனையும் நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும்,
நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்.

அபூஹூரைரா(ரலி)அறிவிக்கின்றார்கள்: ''ஒரு மனிதனின் அழகிய இஸ்லாமிய பண்புகளில்; அவன் தனக்கு அவசியம் இல்லாததை விட்டு விடுவதும் ஒன்றாகும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.' (திர்மிதீ.) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 67 )

அபூஹூரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: பலமுள்ள ஒரு மூஃமின், பலவீனமான மூஃமினை விட சிறந்தவனும், அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவனும் ஆவான் ஒவ்வொன்றிலும் சிறப்புண்டு உனக்கு பயனளிப்பவற்றில் ஆசை கொள்வீராக! அல்லாஹ்விடம் உதவி தேடுவீராக! பலவீனம் அடையாதே! உனக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் 'நான் இப்படிச் செய்திருந்தால் இப்படி, இப்படி ஆகி இருக்குமே' என்று கூறாதே! எனினும் 'அல்லாஹ்வின் விதி. அவன் நாடியபடி நடந்தது' என்று கூறு! நீ இதை செய்யவில்லை என்றால், இது ஷைத்தானின் செயலாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).  ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 100)

அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ஒருவர் தன் வீட்டிலிருந்து வெளியேறும்போது ‘’ பிஸ்மில்லாஹ் தவக்கல்து அலல்லாஹ், வலா ஹவ்ல வலாகுவ்வத்த இல்லா பில்லாஹ்‘’ என்று கூறினால், நீ நேர்வழி கொடுக்கப்பட்டீர். நீ போதுமாக்கப்பட்டீர். நீ பாதுகாக்கப்பட்டீர்' என அவரிடம் கூறப்படும். ஷைத்தான் அவரைவிட்டும் தூரப் போய் விடுவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( துஆவின் பொருள் : அல்லாஹ்வின் பெயரால் (புறப்படுகிறேன்) அல்லாஹ்வையே பொறுப்பாக்குகிறேன். எந்த ஒரு திரும்புதலும், ஆற்றலும் அல்லாஹ்விடமே தவிர இல்லை. ((அபூதாவூது, திர்மிதீ, நஸயீ மற்றும் இப்னு ஹிப்பான்) - (ரியாளுஸ்ஸாலிஹீன்: 83)

அல்லாஹ் கூறுகிறான்:'. ..நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்... (அல்குர்ஆன் : 2:148)

'உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சொர்க்கத்தின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது. அது இறையச்சமுடையயோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.' (அல்குர்ஆன் : 3:133)

அபூஹூரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: 'இருள் நிறைந்த இரவு போல் (தொடரும்) குழப்பத்தை அஞ்சி, நீங்கள் நற்செயல் புரிய விரையுங்கள். ஒருவன் காலையில் மூஃமினாக இருப்பான். மாலையில் காபிராக இருப்பான். அல்லது மூஃமினாக மாலையில் இருப்பான். காபிராக காலையில் எழுவான். உலக நோக்கங்களுக்காக தன் மார்க்கத்தையே விற்று விடுவான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
( ரியாளுஸ்ஸாலிஹீன்: 87)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''.
(புகாரி,முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

- அலாவுதீன். S.
12-12-2010

நான்காம் ஆண்டிலும்...! 33

அதிரைநிருபர் பதிப்பகம் | June 20, 2013 | , , , , ,

நான்காம் ஆண்டிலும்
நன்மையே வேண்டி !

மூன்றாண்டு காலம்
முத்துக் குளித்தோம்
இணையக்கடல் எமக்கு
எத்துணைத் தந்ததோ
அத்துணையும் உங்களுடன்
அன்புடன் பகிர்ந்தோம்

கண்டெடுத்துக் கரைசேர்த்தது
ஏராளம்
ஒத்துழைத்த உங்கள் மனம்
தாராளம்

மொழியை மெருகேற்றினோம் -நல்
வழியைக் கருவாக்கினோம்
அரசியலை அலசினோம் - அதன்
விரிசல்களில் வெளிச்சமிட்டோம்

இஸ்லாத்தை எத்தி வைத்தோம் - இதில்
பிரிவுகளைக் குட்டி வைத்தோம்
சமுதாயச் சீர்திருத்தமும்
சீர்கேட்டில் சிறு திருத்தமும் சொன்னோம்

உள்ளத்திற்கு
உரமூட்ட "படிக்கட்டுகள்"
அமைதியூட்ட "அருமருந்து"
மகிழ்வூட்ட "நபிமணியும் நகைச்சுவையும்"
நெகிழ்வூட்ட "அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும்"

ஆஃப்ரிக்கா முதல்
அமெரிக்காவிலிருந்து அதிரை வரை
அழகிய "பயணக் கட்டுரைகள்" பல கண்டோம்

பேச்சற்ற இடங்களைப்
"பேசும் படங்களாக்கினோம்"
கற்றோரும் மற்றவரும்
மெச்சுகின்ற "கவி" படைத்தோம்

"மனுநீதி மனிதகுலத்திற்கு நீதியா"
ஆய்வுக்கட்டுரையை
அகிலத்தின்
புத்தியைப் புதுப்பிக்கப்
புத்தகமாய்ப்  பதிப்பித்தோம்

"பழகு மொழி"யெனத் தமிழை
அழகாய்க் கற்பிக்கிறோம்

அற்ப உலகின்
பொருளாதாரக் கொள்கைகளை
மண்டியிட வைக்கப் போகும்
"இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்"
ஆராய்ச்சி தொடர்கிறது

ஆங்கிலத்தின் அவசியத்தை
அவ்வப்போது வலியுறுத்துகிறோம்

குருட்டுப் பார்வை
மாறுகண்
மங்கியப் பார்வை
என
எல்லாப் பார்வைகளையும்
ராஜபார்வையால்
சீராக்கி
மருண்டும் மருகியும்
உழன்ற இஸ்லாமிய
இக்காலக் கவிஞர்களுக்காக
வக்காலத்து வாங்கினோம்
"கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை"யில்!

விதி மீறலைச் சுட்டினோம்
வீதி யெங்கும் பேசவைத்தோம்
சதி யேதும் நிகழாமல்
நீதி கேட்டு நிமிர வைத்தோம்

விவாதக்களம் அமைத்தோம்
விரசமில்லா விமர்சனமும்
துணிவான தூண்டல்களே என
தனியொரு விதி படைத்தோம்

அதிரையின்
வட்டார மொழி
தனிப்பட்ட வாழ்வியல் தோரணை
என
எல்லாவற்றையும்
உங்களோடு
உள்ளன்போடு பகிர்ந்தோம்

இனிவரும் காலங்களில்
இன்னும் சாதிக்க
இருகரம் ஏந்தி
இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்

இணைந்திருங்கள்
இன்ஷா அல்லாஹ்!

அதிரை நிருபர் பதிப்பகம்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு