
இதன் விளைவு நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் வெளிவர ஆரம்பித்தன. ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் வாழும் மக்கள் புத்தகத்தின் மீது நீங்கா மோகம் கொண்டனர். மோகம் தணிக்க மேலும் மேலும் புதிய புதிய புத்தகங்கள் வந்து விழுந்து கொண்டே இருந்தன. அறியாமை எனும் அஜீரணக் கோளாறால் அவதிப்பட்ட மக்களுக்கு நோய் தீர்க்கும் மருந்தாக புத்தகம் வந்தது. மனிதனுக்கு தேவையான அனைத்து துறைகளிலும் புத்தகங்கள் வெளிவந்தது. புத்தகம் மனிதனின் ஞானப் பசிக்கு பால் கொடுக்க வந்த ஞானப்பசு. பசித்தவர்கள் மட்டும் புசித்துப் பலன் பெற்றனர்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் தன் எண்ணங்களை ஈரக்களிமண் ஓடுகளில் எழுதியபோது தொடங்கிய தேடல் ‘பசி’ இன்று உலகெங்கும் அறிவு ஜோதியாய் பிரகாசிக்கிறது. அவன் கண்ட ஊமைக் கனவுகள் இன்று ஒளிமயமான காலத்தை நமக்குத் தந்தன. மனிதன் அன்றைய ஓடுகளில் மண் போட்ட கீறல் ஒரு கிறுக்கன் போட்ட வெறும் கீறல் அல்ல; அது தனக்குப் பின் வரும் மனித சமுதாயத்திற்கு அவன் போட்ட பொற்பாதை. கல்லிலும் முள்ளிலும் மலையிலும் மடுவிலும் அவன் நடந்து நடந்து போட்ட படிக்கட்டுக்கள் எல்லாம் நமக்காகவே போட்ட பாதைகள். அவன் சிந்திய ரத்த வியர்வைத் துளிகளுக்கும் கண்ணீர் சொட்டுகளுக்கும் ஈடாக நாம் கோடிகோடி வைரமணிகளை கூடை கூடையாக கொட்டிக் கொடுத்தாலும் அவன் செய்த தியாகத்துக்கும் சிந்திய வியர்வைக்கும் ஈடாகுமோ? அன்று மனிதன் களிமண் ஓட்டில் கீறிய கீறல்கள் இன்று பல கோடி மக்கள் படித்துப் பயனடையும் புத்தகங்களை தந்தது.
ஒரு நாட்டின் முன்னேற்றதுக்கு இயற்கை வளங்கள் மட்டும் போதாது. அறிவுசார் மனித வளமும் வேண்டும் அவைகள் உருவாக மக்கள் கொண்ட விரிவான அறிவு வளர்ச்சி நான்கு சுவர்களுக்குள் மட்டும் அடங்கிய பள்ளிக் கல்வி மட்டும் அல்ல, அதற்கு அப்பாலும் ஒன்று உண்டு அதுதான் புத்தகம். புத்தகம் அறிவையும் அனுபவத்தையும் வளர்க்கும் . புத்தகம் ஒரு இடைத் தரகர் அதைநாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காலத்தை வீணே கழித்து விடாமல் நல்ல நல்ல புத்தகங்களைப் படித்து பயனடையலாம். மேலை நாடுகள் கீழை நாடுகளைவிட முன்னேறியதற்கு கல்வி ஒரு முக்கிய காரணம்.
சுதந்திரத்துக்கு முன் தமிழ் முஸ்லிம்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நம் முன்னோர்கள் ஆங்கில மொழியுடன் நம் மார்க்கத்தையும் போட்டு குழப்பினார்கள்’. உயர்கல்வி (இங்கிலீஷ்) தன் மகன் படித்தால் கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிடுவான்,” என்ற கற்பனை பயம் தன் பிள்ளைகளை உயர்கல்வி கற்க பள்ளிக்கு அனுப்ப தடை போட்டது. எப்படி அமாவசைக்கும் அப்துல்லாவுக்கும் சம்பந்தம் இல்லையோ அப்படியே இங்கிலீஷ்சுக்கும் ‘ஈசா-நபி’க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஈசா நபிக்கு இங்கிலீஷ் தெரியாது, அவர்களின் தாய்மொழி ஹிப்ரு மொழி. ஆங்கில மொழி கிருஸ்தவ மொழி என்னும் பிரமையில் அதை கற்பதை வெறுத்தோம். மறுத்தோம், பகைத்தோம், வீழ்ந்தோம், ஆனாலும் முற்றிலுமாக வீழ்ந்தே விடவில்லை. நம்மை எழுப்பிவிட “கொக்கொ றோக்கோ.......” என்று ஒரு சேவல் கூவியது.
கூவியது சேவல் அல்ல; காதிர் முகைதீன் உயர் நிலைப் பள்ளி!, சில ஆண்டுகளுக்கு பின் அதற்கு மேலே படிக்க ஒரு அண்ணன் பிறந்தான். அவன் பெயர் காதிர் முகைதீன் கல்லூரி. “பொழுது விடிந்தது, தூங்கியது போதும் எழுந்திரு" என்றது காலம். விழித்து எழுந்தவர்கள் எல்லாம் 'விழித்துக்’கொண்டார்கள். “நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கழித்தோமே”யென அலுத்தும் கொண்டார்கள், என்றாலும் ஒளி மயமான எதிர் காலம் தங்கள் வருங்கால சந்ததிகளுக்கு காத்துக் கிடக்கிறது என்ற நம்பிக்கையின் கயிற்றைப் பற்றிப் பிடித்து கொண்டார்கள்.
மேலை நாடுகளின் முன்னேற்றதுக்கு அவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் ஒரு காரணம்.மேலை நாடுகளை எடுத்துக் கட்டாக சொல்வதை விட நம் அடுத்த வீடு சிங்கப்பூரை கொஞ்சம் எட்டிப் பாருங்களேன் காரணம் தெரியும்.
பள்ளி படிப்போடு படிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து படிப்பது மலேசியா, சிங்கப்பூரில் அன்றாடம் கடமைகளில் ஒன்றாக செய்கிறார்கள். பஸ், விமானம், ரயில் பயணங்களிலும் கூட படிப்பதை நிறுத்துவதில்லை. புத்தக கண்காட்சிகள் நடத்தி படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறார்கள். படிக்கும் பழகத்தை வளர்க்க அரசு சலுகை செய்கிறது. புத்தகங்கள் பற்றிய கலந்துரையாடல் பத்திரிகைகளில் நூல் அறிமுகம் ஆகியவை பொது அறிவை வளர்க்கும் தூண்டுகோள்கள்.
ஆனால் இங்கோ நடிகைகளின் காதல் கிசுகிசுக்களை (goosip) தவறாமல் போடுவதால் வளரும் இளைய தலை முறையின் எதிர் காலம் இருள் மயமாகிறது.
நடிகர் நடிகைகளுக்கு ரசிகர் மன்றம் அமைத்ததோடு நில்லாமல் ஒரு நடிகைக்கு கோயிலே கட்டி கும்பாபிசேகமும் செய்து அம்பிகையின் {நடிகையின்}’ அருளையும் ஆசியையும்’ பெற்றார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்!,..
புத்தகம் வாங்குபவர்களுக்கு மலேசிய அரசு வருமான வரிவிலக்கு அளிக்கிறது. ஏறத்தாழ அறுபது சதவிகிதத்தினர் பத்திரிகை அல்லது புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். இந்தியர்களை இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நலம். குறிப்பாக தமிழ் முஸ்லிம்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு புத்தகம் எட்டிக் காயாக கசக்கும். சுட்டாலும் புத்தகத்தில் கை வைக்கவே மாட்டார்கள். அவர்களின் “தீண்டாமை” கொள்கை வட்டத்தில் புத்தகம் முதலிடம் பெறுகிறது.
மலேசியாவில் பெரிய புத்தகக் கடை ஒன்றில் தனி இடம் ஒதுக்கி வேலையில் ஓய்வு பெற்ற முதியோர்களுக்கு இலவசமாக புத்தகம் படிக்கும் வாய்ப்பை அளித்திருக்கிறார்கள். ஓய்வு பெற்றவர்களுக்கு விலைகொடுத்து புத்தகம் வாங்கி படிக்கும் அளவுக்கு பொருளாதார நிலை இல்லாமல் போகலாம். பொருளாதார குறைபாடு படிக்கும் பழக்கத்திற்க்கு ‘தடையாக’ இருக்கக்கூடாது என்ற நல்ல மனதோடு இதை செய்துள்ளார்கள்.
சில்லறை வியாபாரம் செய்யும் புத்தகக்கடைகளுக்கு மலேசியா அரசு சலுகை கொடுத்து ஊக்கப்படுத்துகிறது. ஆண்டு ஒன்றுக்கு பல இலட்சம் மலேசியா ரிங்கிட் [ரிங்கிட் என்பது மலேசிய நாணயம்] மதிப்பிலான புத்தகங்களை நூலகங்களுக்கு விநியோகம் செய்கிறது.
ஆனால் நம்ம தமிழ் நாட்டுலே ஏதாச்சும் புத்தகம் படிக்கலாம்ன்னு நூலகத்துக்கு போனால், ’’இன்னா நாய்னா சொல்லு! தளவல்கிதா? வஊறு வல்கித? சொல்லு. வூசிகுத்றேன்’’ன்னு சொல்றான். ‘எந்த எடத்துக்கு வந்தோம்’னு விசாரிச்சுப் பாத்தா நூலகம் இருந்த இடம் ஒரே இரவுல ஆஸ்பத்ரியா போச்சு. அலிபாபா கைலே அற்புத விளக்கே புடிச்சுகிட்டு நம்ம ஊருக்கு வந்துட்டான் போலே.
தொடரும்...
S.முஹம்மது ஃபாரூக்