Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label ஞாபகம் வருதே. Show all posts
Showing posts with label ஞாபகம் வருதே. Show all posts

ஞாபகம் வருதே - 3 [சில நேரங்களில் சில மனிதர்கள்!] 19

அதிரைநிருபர் பதிப்பகம் | March 24, 2015 | , , ,

ஒருமுறை நான் மலேசியா சென்றபோது முன்பு வேலை செய்த கடையில் மீண்டும் வேலைசெய்ய மனமில்லை. காரணம் ஜில்லா வாரியான [மாவட்ட அளவில்] தஞ்சாவூர் காரர்களுக்கு ராமநாதபுர காரர்களை பிடிக்காது. அதுபோலவே ராமநாதபுர காரர்களுக்கும். ஊர்வாரியான, ஜில்லாவாரியான வேற்றுமைகள் கொடி கட்டி பறக்கும். இருந்தாலும் தஞ்சை மாவட்டத்துk காரர்களிடம் வேலை செய்வது மிக கடினமே. அமரிக்காவில் ஆப்பிரிக்க அடிமை கருப்பர்கள் பட்ட துயரத்தை எல்லாம் இவர்கள் தரும் துயரம் தூசு ஆக்கிவிடும். இது பற்றி நிறையவே எழுதலாம். இன்ஷா அல்லாஹ் இன்னொரு முறை அதை காண்போம்.

வேலை தேடி ஒரு வாரம் காத்திருந்தேன்.

ஒரு நாள் ஒரு புத்தக கடையில் மேனேஜராக இருக்கும் எனக்கு தெரிந்த ஒருவர் கூப்பிடவிட்டார். “தைபிங்கில் இருக்கும் எங்கள் கடையில் வேலை செய்யப்போகிறாயா? சம்பளம் 150 இரண்டு வருடங்களுக்கு மேல் தொடர்ந்து இருந்தால் இரண்டு மாதச் சம்பளம் போனஸ்!” என்றார்.

‘சரி’ என்றேன்.

தமிழ் முஸ்லிம்கள் கடையில் போனஸ் என்பதற்கும் Working partner என்பதற்கும் அர்த்தமே வேறு. அதன் முழுபொருள் Stick and Carrot. ஒரு நீண்ட கம்பின் நுனியில் கேரட் கிழங்கை கைற்றில் கட்டி குதிரை அல்லது ஒட்டகத்து மீதுயேறி ஒருவர் உட்கார்ந்து கொண்டு வாய்பேச தெரியாத  பசி கொண்ட அந்த ஜீவன்களின் கண்களுக்கு முன்னே இந்த கம்பில் கட்டிய கேரட் கிழங்கை தொங்க விடுவார்கள். 


பசி கொண்டபோது புசிக்க கிடைக்காத அந்த அப்பாவி ஜீவன்களும் மனிதனின் ‘தந்திரம் அறியாமல்’ கரட் நமக்கு அருகில் தானே இருக்கிறது! திங்கலாம்! பசி தீரதிங்கலாம்’’! என்ற ஆசையோடு வேக வேகமாக எட்டு மேலே எட்டு வச்சு நடக்கும். நடக்க-நடக்க கம்பில் கட்டிய கேரட்டும் அந்தவாயில்லா ஜீவன்களின் வாய்க்கு எட்டாமல் நகர்ந்து நகர்ந்து போகும். அது போல்தான் மலேசியாவில் தொழில் நடத்திய தமிழ் முஸ்லிம் முதலாளிகள் தங்களிடம் பணிந்து பணிபுரிந்த loyal  (விசுவாசமான) வேலையாட்களுக்கு கொடுத்த போனஸ் அல்லது பங்கு. இந்த கானல் நீரை நம்பி கண்ணீரும் விட்டு கடையையும் விட்டு காணாமல் போனவர்கள் பலர். நான் இந்த மேனேஜர் சொன்ன போனஸை நம்பவில்லை. ஆனால் சும்மா இருந்து பொழுதை போக்க விரும்பாமல் ரயில் ஏறினேன்.

பகல் முழுதும் ரயில் பயணம். இரு பக்கங்களிலும் பசுமை கம்பளங்கள் போர்த்தது போல் புல்வெளிகள். அடர்ந்த மரங்கள் மலாய்காரர்களின் முற்றிலும் மரத்தினால் கட்டிய பாரம்பரிய வீடுகள். ரப்பர் தோட்டங்கள் மலையில் பிறந்து மண்ணில் நெளிந்து கடலில் கலக்கும் நதிகள் இவை எல்லாம் கண்ணுக்கு காட்சியாய் இருந்தது.மாலை மணி ஐந்துக்கு தைபிங் நிலையத்தில் வண்டி நின்றது. பெட்டி படுக்கையுடன் இறங்கினேன். அங்கு நின்ற டேக்ஸியில் ஏறி அட்ரஸை சொன்னேன். பத்து நிமிஷத்தில் டேக்ஸி கடை முன் நின்றது.

அடுத்த நாள் கடையில் நிர்வாகி நான் செய்ய வேண்டிய வேலைகளை சொன்னார். [பெரும்பாலான தமிழ் முஸ்லிம் கடைகளில் இன்னார் இன்னாருக்கு இன்ன இன்ன வேலை  யென்று ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டாலும் இட ஒதுக்கீட்டை எல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி விட்டு எல்லா வேலைகளையும் எல்லோரும் செய்ய வேண்டும். இந்த ஒதுக்கீடெல்லாம் சம்பளத்தை குறைத்து பேச தூண்டிலில் கோர்க்கும் பூச்சியே.. முதலாளிக்கு சொந்தக்கார மாமன் மச்சாங்கள் தப்பு செஞ்சால்கூட வேறு எவனாவது ஒருத்தன்தான் முதலாளிக்கு ஜவாப் சொல்ல வேண்டும். இது எழுதப்படாத சட்டம்.] Formalityக்காக மேனேஜர் சொன்னதை Formalityக்காக நானும் ஒப்புக் கொண்டதாக டும்டும் மேல தாளத்திற்கு தலையாட்டும் கோயில் மாடுபோல் தலையாட்டினேன். மாதங்கள் ஓடியது.

ஒரு நாள் முதலாளிக்கும் மேனேஜருக்கும் சண்டை வந்தது! மச்சான் மச்சினன் சண்டை அன்றே மேனேஜர் கடையே விட்டு மூட்டை கட்டினார். நான் மேனேஜராக பதவி பிரமானம் எடுத்துக் கொண்டேன். பதவி எனக்கு வந்ததால் எனக்கு முந்திய சீனியருக்கு என் மேல் பொறாமை வந்தது. ‘முன்னவன் நான் இருக்க என் பின்னவனுக்கு பதவியா?’ என்று அவர் போர்க் கொடிதூக்கினார். கடையில் வேலை செய்த பையன்கள் எல்லாம் என் பின்னே நின்றார்கள். ஒரு மாதம் கழித்து அவரும் கடையே விட்டு எக்ஸிட்’ வாங்கினார். கடையில் எனக்கு வயதில் மூத்த ஒருவரும் இருந்தார். அவர் உண்டு அவர் வேலை உண்டு யென்று எதையும் கண்டும் காணாமல் இருந்தார்.

TAIPING என்னும் இந்த சீன மொழி சொல்லுக்கு [PEACE] அமைதி என்று பொருளாம். பெயருக்கு ஏற்றாற் போல் ஊரே ஒரே அமைதி பூங்காவாகவே இருந்தது. மலேசியாவின் முதல் ரயில்பாதை 1885-ஜூன் மாதம் முதல் தேதி தைபிங்கிலிருந்து Port Weld. வரை போடப்பட்டது.

மலேசியாவில் பல பழங்கள் விளைந்த போதிலும் இந்நாட்டு மக்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருப்பது துரியான் [DURIAN] பழமே! ’தூறி’ என்ற மலாய் சொல்லுக்கு ’முள்’ என்பது தமிழ். முக்கனிகளில் ஓன்றான பலா பழவகையை சார்ந்தது. ஆனால் பழமோ நம்ம ஊரு தேங்காய் அளவில் இருக்கும். இதை முன்பின் தின்று ருசி காணாதவர்கள் இதன் கிட்டே நெருங்கினால் குமட்டலும் வாந்தியும் வந்து காத தூரம் காலெடுத்து ஓடுவார்கள்.

இவர்களுக்கு தாம்பாளம் நிறைய பொன்னும் மணியும் குவித்துக் கொடுத்து “சாப்பிடுங்கள்! சாப்பிடுங்கள்!” என்று என்னமாத்தான் கெஞ்சினாலும் ஊஹும் “கல்லசை! என்னசை!” என்று அசைச்சு கொடுப்பார்கள். நெருங்கவே மாட்டார்கள். அதன் வாசம் அப்படி!. ஆனால், இதை மனதைக் கட்டுப்படுத்தி மூக்கை பொத்திக் கொண்டு  ஒருமுறை இருமுறை தின்று ருசி கண்டு விட்டார்களேயானால் அடுத்தமுறை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் கொஞ்சமாவதும் சாப்பிடாமல் போகமாட்டார்கள்.

ருசியும் வெட்கம் அறியாது. ஆனால் இனிப்பு நீர்காரர்களுக்கு இது நஞ்சு. ஆண்மை விருத்திக்கு கைகண்ட மருந்து. விடுதிகளில் தங்கி ஆண்மை விருத்திலேகியம் கொடுக்கும் டாக்டர்களை தேடி விடுதிப்படி ஏற வேண்டியதில்லை. இந்த பழசீசனிலிருந்து சரியாக பத்து மாசம் சென்றதும்  பிறசவ வார்டில் இடநெருக்கடியும் ‘குவா-குவா’ சத்தமும் அதிகமாகும். Duriyan jatoh sarong naik இது இந்தோனேசியா  பழமொழி. தமிழில் “துரியான் பழம் விழுந்தால் கைலி உயரும்”.

தைபிங் நகரில் துரியான் சீசன் ஆரம்பமானது. ரோடுகளின் இருபக்கமும் பழங்கள் குவிந்தன. ஒரு இரவு நாங்கள் எல்லாம் துரியன் பழம் வாங்க கிளம்பினோம். எங்கள்திட்டம் எல்லோருக்கும் மொத்தமாக வாங்குவது எல்லோரும் ஒன்று சேர்ந்து உண்பது. விலையில் எல்லோரும் சரிசமமாக ஈவிச்சு கொள்வது. எங்களில் அந்நாட்டில் பிறந்து ரப்பர் தோட்டத்தில் கூலி வேலை செய்த ஏழை குடும்பத்து பையனும் மிகக்குறைந்த சம்பளத்தில் வேலைசெய்து கொண்டிருந்தான் [குறிப்பு: குறைவான சம்பளத்துக்கு நிறைய வேலை செய்வோர்களை தமிழ் முஸ்லிம் முதலாளிகளுக்கு ரெம்ப பிடிக்கும்] அவன் திண்ணும் பழத்திற்கு அவனிடம் காஸு வாங்குவதில்லை அவனுக்கு நல்ல  பழம் எது, பூச்சி பழம் எது என்று நன்றாகத் தெரியும். மேலும் அவன் நாட்டுபுற மலாய் மொழி Slang நன்றாக பேசுவதால் அதை இதை சொல்லி விலை குறைத்து வாங்கி விடுவான். மலாய்காரர்களுக்கு மலாய்மொழியை அவர்களைப் போல் பேசுபவர்களை பிடிக்கும். அது ஒன்றையே மூலதனமாக கொண்டு பல காரியங்களை சாதித்து விடலாம்.


நாங்கள் துரியான் பழ பஜார் நோக்கி துரிதமாக நடந்தோம். அங்கே மலை மலையாய் பழம் குவித்திருந்தது Mari-marilah Tuan! buah yang bagus.dan sedap.Harga murah saja என்று வொவ்வொரு கடைகாராரும் கூவினார். இதன் பொருள். ”[வாங்க பெரியவரே! நல்ல பழம்! ருசியான பழம்! விலையோ மலிவுதான்]’’. ஒவ்வொரு குவியலாக பார்த்துக் கொண்டே போனோம். அந்த நாட்டுப்புற தெலுங்கு பையன் ஒருகுவியல் அருகில் போய் உட்கார்ந்து கவனமுடன் பார்த்து பார்த்து பலபழங்களை பொறுக்கி சேர்த்து விலைபேசினான். கொஞ்ச நேரம் விற்பவருக்கும் வாங்குபவருக்கும் பேரம் நடந்து பரஸ்பர நல்லெண்ணத்துடன் பேரம் முடிந்தது.

காசை கொடுத்த பையன் “சாயாசூடா பிள்ளி”, [நான் உன்னிடம் வாங்கி விட்டேன்].

பழம் விற்றவன் பதில் சொன்னான் “சாயாசூடா ஜூவால். செலாமத் மாக்கான் திரிமாகஸி” [நான் விற்று விட்டேன். நல்லபடியாக சாப்பிடுங்கள்.நன்றி.]

இது அந்த சின்னஞ் சிறிய நாட்டின் பண்பாடு. கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடியான நம்மைவிட எவ்வளவோ பின் தங்கியவர்களின் பண்பாடு இப்படி. நம்நாட்டின்நிலைஎப்படி?

நம் ஊர்  மெயின் ரோட்டில் ஒருபத்திரிகை கடைக்கு சென்று கைற்றில் தொங்கிய ‘ஆனந்தவிகடன்’னை எடுத்தேன் “ஆஆஆஆ… அதை எடுக்காதீர்கள்! என்னிடம் கேட்டால் நானே தருவேனே!” என்று அதட்டலாக சொன்னார்.

“சரி! கொடுங்கள்” என்றேன். உள்ளே இருந்த ஒரு பிரதியை எடுத்து அங்கிருந்தே தூக்கி மேஜைமீது வீசினார். அது வெளியே வந்து மண்ணில் விழுந்தது. கல்லாவில் இருந்த முதலாளி இந்த மரியாதை கெட்ட செயல் கண்டு கொஞ்சங்கூட கவலையில்லாமல் யாரோ ஒருவருடன் சுவாரசியமாக,தன்னை மறந்து கருணாநிதி-versus ஜெயலலிதா அரசியல் பேசிக்கொண்டிருந்தார்.

விகடனுக்கு. விலைRs15 போட்டிருந்தது. இருபது ரூபாய்கொடுத்து “பாக்கிகாஸு தாங்க!” என்றேன்.

நோட்டை வாங்கியவர் அதை மேஜை மேல் வைத்து காற்றில் நோட்டு பறந்து விடாமல்இருக்க கையை நோட்டின் மேல் வைத்துக் கொண்டார். இப்பொழுது அவர் கையே நோட்டுக்கு பேப்பர் வெய்ட்.

“பாக்கி கொடுங்கள் போகனும்! பாக்கி கொடுங்கள் போகனும்!” என்று நான் ’பலமுறை’ கத்தியும்கூட கடைகாரர்காதில்.அது ஏறவேஇல்லை. கருணாநிதியும் ஜெயலலிதாவும் அங்கே சேர்ந்து வந்து இந்த இருவர் வாதங்களை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

“பா..ஆஆஆக்கி கொடுங்கள்” என்று ஏழுருக்கு அப்பாலும் கேக்கும்படி சத்தம் போட்ட பின்பே கடை முதலாளி கருணாநிதி ஜெயலலிதாவை விட்டு விட்டு தன் சுயநினைவுக்கு வந்தார்.

“இன்னும் பாக்கி வாங்கலையா?” என்று அவர் என்னையே கேட்டுக் கொண்டு அஞ்சு ரூவா நோட்டைஎடுத்து வீசினார்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இங்லாந்திலிருந்து வெளிவந்த Psychologist என்ற மாத இதழில்  Herbert Cason என்பவர் எழுதினார் ’ஒரு வாடிக்கையாளர் உன் கடையிலிருந்து திருப்தியுடன் வெளியானால் அதுவே நூறு வாடிக்கையாளர்களை உன் கடைக்குள் கொண்டுவரும்’’ என்றார். இங்கே பாக்கிகாசைத் தூக்கி வீசுகிறார்கள். கொடுத்த காஸுக்கு பாக்கி கேட்டு பிச்சைகாரன் போல் ஒத்தைக் காலில் நிற்கவேண்டிய திருக்கிறது. [‘’இவர்கள் என்ன Psychologist-டா படித்தார்கள்? ஹெர்பர்ட்காசன் சொன்னது போல்செய்ய’’ என்று நீங்கள் கிசுகிசுப்பது காதில் விழுகிறது].

இப்பொழுது பேசு பொருளுக்கு திரும்புவோம். வாங்கிய பழங்களை எல்லாம் தூக்கி கொண்டு அருகிலுள்ள தனியிடத்திற்கு சென்று சாப்பிட உட்கார்ந்தோம்.பெரியவர் மட்டும் உட்காராமல் நின்றார்.

“ஏன் நிற்கிறீர்கள்? உட்காருங்களேன்!” என்றேன்.

’’நான் தனியாக ஒரு இடத்தில் போய் சாப்பிடுகிறேன். என் பங்குக்கு உள்ள பழத்தை கொடுங்கள்!’’ என்றார்.

பையன்கள் எல்லோருமே என்னை பார்த்தார்கள். ‘பழம் வாங்க வரும் போது பேசியது ஒன்று. இப்பொழுது இவர் மட்டும் ஏன் மக்கர் பண்ணுகிறார்? என்று எனக்கு குழப்பமாக இருந்தது.

“ஏன்? என்ன விஷயம்? வரும் போது இப்படித்தானே பேசி வந்தோம். இடையில் யாரும் ஏதும் தவறாக சொல்லி விட்டார்களா?” என்றேன்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை! எனக்கு எல்லோர் கூடவும் ஒன்றாக இருந்து சாப்பிட பிரியமில்லை” என்றார்.

அங்கிருந்த எல்லோரும் என்னைப் பார்தார்கள். அவர்கள் என்னை நோக்கிய நோக்கம் ‘அங்கிருந்தவர்களில் நானும் அந்தப் பெரியவரும்தான் முஸ்லிம்கள். மற்ற அனைவரும் இந்துக்கள்’. ‘இந்துக்களோடு ஒன்றாக இருந்து நான் சாப்பிடமாட்டேன்’ என்று அவர் சொல்கிறாரோ என்பதே அந்தப் பார்வையின் பொருளாய் எனக்கு பட்டது.

"எல்லோரும் அண்ணன் தம்பிகளாய் ஒன்றாக இருந்து வேலை செய்யும் போது நீங்கள் மட்டும் குழப்பம் செய்வதில் பல பிரச்சனைகள் வரும். அப்புறம் கடை வேலைகளிலும் அது எதிரொலிக்கும். அது எனக்கு தலைவலியை கொண்டு வரும். அதனால் விஷயம் என்னவென்று கூறுங்கள் அது எதுவானாலும் உங்கள் விருப்பபடியே செய்யலாம் என்றேன்"

“ஒன்றுமில்லை! நீங்கள் எல்லாம் இளம் வயதுகார்கள். சீக்கிரம் சீக்கிரம் சாப்பிடுவீர்கள். நான் மெதுவாதான் சாப்பிடுவேன். நான் ஒன்னு சாப்பிட்டு முடிப்பதற்குள் நீங்கள் லெல்லாம் ரெண்டு மூனை முடித்து விடுவீர்கள். காசு கொடுத்தும் எனக்கு கெடைக்க வேண்டிய பங்கு கெடைக்காது அதனால் என்பங்கை தனியே கேட்டேன்’’ என்றார்.

உள்ளம் திறந்துவிட்டார். அவர்உள்ளத்தில் சைத்தான் குடிகொண்டான். அங்கிருந்தவர்களில் எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். அந்தப் பார்வையின் பொருள் “இதுதான் உங்கள்இஸ்லாமா?” என்று கேட்பது போல் இருந்தது. 

அவர் அப்படி நினைத்தால் அவர்பங்கை அவருக்கு கொடுத்துடலாமே!’’ என்று ஒரு பையன் சொன்னான்’’ முதலில் பழத்தை அவரையே சாப்பிட சொல்லுங்கள். மீதியை நாம் சாப்பிடலாம்’’ என்று இன்னொரு பையன் சொன்னான்.

“என் பங்கைத்தான் நான் கேட்டேன்! யாரும் எனக்கு தர்மம் கொடுக்க வேண்டாம்’’என்றார்.!

‘சரி! இதற்கு மேல் கெஞ்சினால் குரங்கு மரத்துக்கு மேலே ஏறும்’’! என “எத்தனை பழம் இருக்கிறது’ என்று எண்ணும்படி சொன்னேன். ஆள் ஒன்னுக்கு மூனு பழம் வீதம் வந்தது போக.ஒரு பழம் மீத மிருந்தது.

‘’ஆள் ஒன்னுக்கு மூனு பழம் வருகிறது. உங்கள் பங்கை நீங்களே பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்றேன்.

அவரே நன்றாக பார்த்து பார்த்து எடுத்துக் கொண்டு சற்று ஒதுங்கிபோய் உட்கார்ந்தார். மீதமிருந்த அந்த ஒரு பழத்தையும் அவரிடம் கொடுத்தேன். 

“வேண்டாம் !ஒருபழம்தானே? நீங்கள்தான் அதிகம் பேர் இருக்கிறீர்கள். உங்கள் பங்கிலேயே இருக்கட்டும்!’’ என்று பெரும்தன்மையுடன் சொன்னார். செய்த்தான் வேதம் ஓதியது!

‘’பரவாயில்லை! எங்களிடம் நிறைய பழம் இருக்கிறது. அதில் ஒன்று பூச்சிப் பழமானால் இன்னொன்றை எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு ஒரு பழம் பூச்சியானால் மிஞ்சுவது இரண்டுதான். அதிலும்கூட பூச்சி இல்லாத பழம் கிடைப்பது அல்லாவின் நாட்டம். கைகாவலுக்கு இதையும் வைத்துக் கொள்ளுங்கள்’’ என்றேன். என் முகத்தை பார்க்காமல் வாங்கிக் கொண்டார்.

பழங்களை உடைத்து திண்ண ஆரம்பித்தோம். ஒரு பழத்திற்கு நாலு compartment-இருக்கும். ஒரு  compartment-டில் மூனுசுலை இருந்தால் அதில் ருசி அதிகமும் விதை சிறிதாகவும் இருக்கும். விதையைச் சுற்றிலும் வெண்ணைபோல் மெல்லிய இலேசான மஞ்சள் நிற க்ரிம் பத்தை போல் படிந்திருக்கும்.இது பழத்தின் கீரிம் compartment-டில் ஒட்டாமல்அப்படியே எடுத்துசாப்பிட அல்லாஹ் படைத்திருக்கும் அற்புதங்களில் இதுவும் ஒன்று அவன் படைப்பின் ஓவ்வொன்றிலும் உற்று நோக்கினால் இதைக் காணலாம்.

நாங்கள் பழங்களை ருசித்து-ருசித்து சாப்பிட்டோம். பக்கத்தில் இருந்த பையன் “அண்ணே! அங்கே பாருங்கள்!’’ என்றான். 

இலேசாக அந்தப் பெரியவர் பக்கம் பார்வையை போகவிட்டேன். ஒரு பழம் முழுதும் பூச்சி. அது ஒரு ஓரத்தில் தூக்கி வீசிக் கிடந்தது. மற்றொரு பழத்தில் பாதி பூச்சி. பாதியை ருசித்துக் கொண்டிருந்தார். ஆக உடைத்த இரண்டில் ஒன்னரை பழம் பூச்சி. பூச்சியில்ல பாதியை ருசிதுக் கொண்டிருந்தார். அவரிடத்தில் பாக்கி இருந்தது அவர் பங்குக்கு கிடைத்த ஒன்று, துண்டு விழுந்ததில் நாங்கள்கொடுத்தஒன்று.ஆக இரண்டு உடைக்காமல் வெய்டிங் லிஸ்ட்டில் இருந்தது. எங்கள் பழங்களிலும் இரண்டு பழத்தில் பாதிபூச்சியும் ஒன்று முழுதும் பூச்சியாய் போனது. அவரும் நாங்களும் துரியான் தின்று எழுந்த போது அவர் துரியானில் ஒன்னரை பூச்சியும் எங்களில் ரெண்டு பழ நட்டதிற்க்கும் எழுந்தோம் எங்களில் ஆறுபேர். அவர் ஒருவர் மட்டுமே.! 

நாங்கள் எல்லோரும் கடைக்கு நடந்தோம். தனித்து போனவரும் கூடவே வந்தார். யாரும் யாருடனும் பேசவில்லை. மௌனத்தின் ஆட்சி சிம்மாசனம் ஏறியது. மறுநாள் வேலைகள் வழக்கம் போல் நடந்தது. அவர் யாருடனும் ஏதும் பேசாமல் தன்வேலைகளை செய்து கொண்டிருந்தார். எப்பொழுதும் பேச்சும் சிரிப்பும் கிண்டலும் நையாண்டியுமாக ஓடியபொழுது சோகமாய் ஓடியது. ஒரு வெள்ளிகிழமை மாலை பினாங்கு தலைமை நிலையத்திலிருந்து டெலிபோன் வந்தது” அவர் கடையை விட்டு நின்றுகொள்கிறேன்” என்று டெலிபோன் போட்டார். நாளைக்கு அவர் கணக்கை பார்த்து பாக்கியே கொடுத்து எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவிடு! ’போனஸ் கீனஸ்’ என்று ஏதெனும் ’’கிக்கிரிபுக்கிரி’’ என்றால் என்னிடம் பேசிக்கிடசொல்’’ என்றார்.

அந்த முதலாளிக்கு பிடிக்காத ஒரே ஒருவார்த்தை ’’போனஸ்’ தான் அந்தக் கடையில். வேலைபார்த்த அத்தனை பேருக்கும் அவர்கடைசியாக உச்சரித்த வார்த்தை இதுதான். பினாங்கு தொடங்கி சிங்கப்பூர் வரை கிளைகளை நிறுவி ’ஓகோ! ஹோ’வென்று ஆலமரம் போல விழுதுகள் விட்டு வளர்ந்த இந்த விருட்சம் வீழ்ந்தது உழைத்துஉழைத்து ஓடாய்போன தொழிலாளிகளின் சாபமே.

இவைகளுக்கு காரணம் தலைமை நிலையத்தில் ஒருசெய்த்தான் மேனேஜராக இருந்து கெடுத்தான். துரியான் பழ செய்தானிடம் விஷயத்தை சொன்னேன் ’’அவன் நாசமாய் போகட்டும் என்று பாக்கிகாசை வாங்கி கொண்டு போய் விட்டார். நானும் அங்கிருந்து விலகியபோது எனக்கும் அந்த செய்த்தான் ஓதிய வேதம் ‘போனஸ் இல்லை! ’மலேசியாவில் தஞ்சாவூர் காரர்கள் கடையில் மேனேஜராக இருந்தவர்களும் முதலாளியும் வேதம் ஓதும் செய்த்தான்களே! வேதம் ஓதிய அவர்கள் கடைகளில் எல்லாம் இப்பொழுது YALE-பூட்டு தொங்குகிறது.!

S.முஹம்மது ஃபாருக்

ஞாபகம் வருதே [2] எறச்சிக்கறி சோறு! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | March 02, 2015 | , , , , ,

நான் மலேசியா புறப்படும்போது பதினோரு ஃபக்கிர்மார்களை.

வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுப்பது வழக்கம்.. இதில் நேத்திக்கடன் கீத்திக்கடன் அது இது என்றெல்லாம் ஏதுமில்லை.

இப்படிச் செய்வதில் ஏதோ எனக்கொரு இனம் புரியாத மனச்சாந்தி! அவ்வளவே! 

ஃபக்கிர்மார்களும் சொன்னபடி பதினோரு பேர் வருவார்கள் .தபுசு அடித்து பாட்டுப் பாடுவார்கள். அவர்கள் பாடும் பாடல்களில் கவிதை நயமும் இசை நயமும் இருக்கும்.     பாடிமுடிந்தபின் விருந்து உண்டு துவா ஓதுவார்கள். 

அவர்கள் புறப்படும்போது ரூவாய் நூற்று ஐம்பத்துது ஒன்று பெரியவரிடம் கொடுத்து “மற்றவர்களுக்குக் கொடுப்பதைக் கொடுத்து நீங்களும் எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்று சொல்லி விடுவேன். அதோடு. தெருவாசிகளில் ’பொறுக்கினால்போல’ சிலரையும் நண்பர்களையும் அடுத்தவீடு அண்டுன வீடுகளையும் சொந்தங்கள் பந்தங்களையும் கூப்பிட்டுக் கொள்வது வழக்கம்..பல பயண காலங்களில் இது  சுமுகமாக தொடர்ந்தது.

ஒரு முறை நண்பர்’ ஒருவர் ’இதை விட்டும் விட்டு சலவாத் நாரியா ஓது! முஸிபத் கழியும்’’என்றார். பக்கிர்மார்களுக்கு வழக்கமாக கொடுக்கும் விருந்தை நிறுத்த மனம் இடம் கொடுக்கவில்லை. சலவாத்நாரியா என்றால் என்ன என்று எனக்குத் தெரியாது.

ஒஸ்தாதிடம் போய் விசயத்தைச் சொன்னேன். 

"இது மூனு-நாலு  பேர் மட்டும் ஓத முடியாது. பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் ஓதக்கூடிய விஷயம்" என்றார். மேலும் நம் ஊரில் இருக்கும் மதர்சாவின் பெயரைச் சொல்லி ’’அதன் தலைமை இமாமிடம் சொல்லுங்கள். அவர்கள் ஓதுகிற பிள்ளைகளை அனுப்பி வைப்பார்கள்" என்றார்.

"மதர்சா தலைமை இமாமுக்கு என்னைத் தெரியாதே!" என்றேன். என் நண்பர் ஒருவரின் பெயரைச் சொல்லி ’’அவரைக் கூட்டிச் செல்லுங்கள் அவருக்குத் தெரியும்’’என்றார்.

நண்பரிடம் சொன்னபோது "அசருக்குப் பிறகு போகலாமே!" என்று சொன்னார்.

நானும் நண்பரும் மதரஸாவுக்குப் போனோம். தலைமை இமாம் அங்கே இருந்தார்கள் .என்னோடு வந்த நண்பர் இமாம் அவர்களிடம் வந்த விஷயத்தைச் சொன்னார். ’’இப்பொழுதுதெல்லாம் பிள்ளைகளைச் சலவாத்நாரியா ஓத அனுப்புவதை நிறுத்தி விட்டேன். ‘மதரஸாவில் ஒதவந்த பிள்ளைகள் யெல்லாம் ஓதுவதை விட்டுவிட்டு வாரா வாரம் வீட்டுக்கு வீடு சலவாத் நாரியா ஓதக் கிளம்பி விட்டார்கள்!’’ என்று பேச ஆரம்பித்து விட்டார்கள்’’ .என்றார்கள்.

கொஞ்ச நேரம்  நானும் நண்பரும் ஒருவரை யொருவர் பார்த்து மௌனமாக அங்கேயே நின்றோம். பின்பு என்னைப் பார்த்து பேர் என்ன?" என்றார்கள். 

‘முஹம்மது பாரூக்” ’என்றேன்.

“தெரு?” 

“கடல்கரைதெரு”

’’முன்பு ஓதி இருக்கிறீர்களா?’’ 

‘’இல்லை இதுதான் முதல் தடவை! வழக்கமாக தைக்கால் பக்கிமார்களை அழைத்து விருந்து கொடுத்து மலேசியா புறப்படுவது வழக்கம். அதை நிறுத்தி விட்டு சலவாத்நாரியா ஓதுங்கள் என்று ஒரு நண்பர் சொன்னார் அதனால்தான்..........’’ 

என்று இழுத்தேன். 

கொஞ்சம் யோசித்து விட்டு

’’அப்போ இந்த தடவை பக்கிர்மார்களை கூப்பிடவில்லையா?’’ என கேட்டார்கள்.

’’இன்ஷா அல்லாஹ்! நாளைக்கு வெள்ளிக்கிழமை சலவாத் நாரியா ஓதினால் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அவர்களை அழைத்து விருந்து கொடுக்கலாம் என்று இருக்கிறேன்’’ என்றேன்.

.’’சரி! நாளைக்கு பதினாறு பேர்கள் அசருக்குப் பின் வந்து ஓதுவார்கள். மஹ்ரிபுக்கு முன்னதாகவே அவர்களை இங்கே அனுப்பிவிட வேண்டும்’’ என்றார்கள்.

கூட வந்தந ண்பரிடம்,

’’எத்தனை பேருக்குச் சாப்பாடு அனுப்பவேணும் என்று கேளுங்கள்’’ என்றேன். 

அவர்கேட்டார்.

’’முப்பது பேருக்கு அனுப்பினால் போதும். அதோடு இனிமேல் பிள்ளைகளை ஒதக்கூப்பிட வேண்டாம்’’ என்றார்கள்.

வெள்ளிக்கிழமை காலை ஒஸ்தாதிடம் விஷயத்தை சொல்லி சலவாத்நாரியாய ஓத வரும்படி கூப்பிட்டேன்.’

"வருகிறேன்" என்று சொன்னவர் இன்னொரு லெப்பையின் பெயரையும் சொல்லி ’’அவரையும் கூப்பிடுங்கள்! இல்லை என்றால் நான்தான் அவரை கூப்பிட வேண்டாம் என்று சொன்னதாக ’ என் தலையில் பழிபோடுவார்" என்றார்.

அவரையும் போய் கூப்பிட்டு விட்டு எங்கள் தெரு கடையில்இறைச்சி வாங்கப் போனேன்.         வெள்ளிக்கிழமை எறச்சி கடையில் கூட்டம் கொஞ்சம் கூடவே நின்றது. என்னுடைய பொல்லாப்பான காலமோ என்னமோ அவ்வழியே வந்த ஒருவரின் கண்ணில் நான் பட்டுவிட்டேன். அவர் ஒரு விடாகண்டர். ’எறச்சிகறி சோறு’ என்றால் நாக்கில் ஜலம் ஊறும். இங்கிதம் பண்பாடு எல்லாம் கிலோ என்ன விலைதான்! எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி எல்லாம் எந்த கவலையும் அவருக்கு இல்லை. என்னைக் கண்ட அவர்.

’’பாரூக்! ஏன் இறைச்சிகடையில் நிக்கிறா?’’ என்றார். 

நான் ஒரு முட்டா பய! இவரை பற்றி முன்னமேயே எல்லாம் தெரிந்திருந்தும்.

‘எறச்சி வாங்க வந்தேன்’’ என்றேன். 

இந்த நேரம் பார்த்து இறைச்சி கடைகாரர் "காக்கா எத்தனை கிலோ வேண்டுமென்று சொன்னீர்கள்" என்றார். 

சொன்னேன்.

"கொஞ்ச நேரம் நில்லுங்கள்! இன்னொரு கடா வரும். அதில் தருகிறேன்" என்றார்.

நான் சொன்ன எறச்சி என் வீட்டு தேவையை விட கூடுதலாக இருப்பதை கேட்ட அந்த விடாகண்டர்

"ஏன் இன்றைக்கு எறச்சி கூட வாங்குகிறாய்?" என்றார்.

விஷயத்தை சொன்ன பாவி நான் இதையும் தெரியாத்தனமா சொல்லி விட்டேனா? அது ஒன்னே அவருக்குப் போதும், என் கழுத்தை அறுக்க.

"ஓதஎத்தனை பேர் வாறராஹ?" என்றார். 

சொன்னேன்

"பிரியாணியா? இல்லே எறச்சிகறி  சோறா?"

"எறச்சிகறி சோறுதான்"

"தெருவில் எத்தனை பேரை கூப்பிடுறா?"

"யாரும்மில்லே! ஒதுற பிள்ளைகள் மட்டும்தான்" என்று சொன்னதும்! 

இவர் இன்னொரு கேள்வி கேட்கு முன்னே இறைச்சி கடைகாரர்

"காக்கா! நீங்க சொன்ன ஆடு வந்துடுச்சு. அதுக்கு இப்போ வயசு நாலரை! .இவர் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி முடிச்சு ஆடுஅறுக்குறதானா ஆட்டுக்கு வயசு ஆறரை ஆயிடும்!. கறி நாக்குக்கு ருசியா இருக்காது!" என்றார்.

எறைச்சி கடைக்காரரை அந்த விடாகண்டர் ஒரு முறை முறைத்து பார்த்து விட்டு போய் விட்டார். இவ்வளவு அநாகரீக கேள்விகள் கேட்டதை அங்கு நின்றவர்கள் கேட்டு முகம் சுளித்தார்கள்.

"ஏன்டா தம்பி! நீ பெத்தமவ அவரு ஊட்டுலே ஈந்தா வாலுது?. என்னேனமோ அதுகேக்குது! நீயும் நிண்டுகிட்டு. எல்லாத்துக்கும் ’பதல் சொல்றியே மூஞ்சிலே அடிச்ச மாதிரி ஒரு பதலே சொன்னா அவன் ஊட்டுலே’ வாளுற ஓம்மவளே திருப்பியா அனுப்பிடுவான்?" என்று கேட்டார்கள்.

வீடு வந்து எறச்சிகடையில் நடந்ததை என் மனைவி இடம் சொன்னேன்.

"ஆஹா? அவருக்கு தெரிஞ்சு போச்சா? எறச்சிகறி சோறுண்டா மசக்கைக்காரி மாங்காயே பாத்த மாதிரிலோ வாய் ஊறும். கூப்பிடலேன்டா ஊரெங்கும் தண்டோரா போட்டு கொறை சொல்லிக்கிட்டு இருப்பார். போய் கூப்பிடுங்கள்.. கொள்வினை கொடுப்பினை இல்லாததால் ரத்த உறவு விட்டு போச்சு!" என்றது.

"யாரையுமே கூப்பிடவில்லையே! இவரை மட்டும் கூப்பிட்டா மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?" என்றேன்.

’’ஒன்றும் நினைக்க மாட்டார்கள்! போய் கூப்பிடுங்கள்!’’ என்றதும்

போய் கூப்பிட்டேன்.

’’வேறு  யார்றெல்லாம் வருகிறார்கள்?’’ என்றார்.

‘’யாருமில்லை மதரஸா பிள்ளைகள் மட்டுமே!’ என்று சொன்னேன். எப்படித்தான் மரியாதை கொடுத்தாலும் அதை பெற்றுக் கொள்ளும் பக்குவம் சிலருக்கு இருக்காது. அதில் இவருக்கு முதலிடம் கொடுக்கலாம். அவருக்கு வேண்டிய இரண்டு மூன்று நபர்களின் பேரை சொல்லி அவர்களையும் ’’கூப்பிடு!’’ என்று கட்டளை போட்டார்.

’’உங்களை கூப்பிட்டால் நீங்கள் போங்க. இல்லாட்டி வாயே பொத்திக்கிட்டு சும்மா வீட்டுக்குளே கெடங்க! அவரே கூப்புடு! இவரே கூப்புடு!’’ ன்டு சொல்லி நச்சறிப்பு செஞ்சு கொடுக்குற மரியாதியே கொலச்சுகிடாமே’’ அல்லா’ண்டு ஊட்டுலே படுத்து தூங்குங்க’’ என்று எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது. அதுஅவர் மனைவின் குரலேயன்றி வேறு யாருடைய குரலுமல்ல. 

’’இவர் வந்தா வரட்டும்! வராட்டி போவட்டும்! நீங்க போய் உங்க வேலையே பாருங்க காக்கா!”என்று மீண்டும் அந்தக்குரல் ஒலித்தது. ’தப்பித்தோம்-பிழைத்தோம்’’ என்று ஓடிவந்துவிட்டேன்.  

அன்று அசருக்கு பிறகு ஒதுகிற பிள்ளைகள் வந்து விட்டார்கள். ஒஸ்தாதும் அவர் கூப்பிடச் சொன்ன லெபையும் வந்து விட்டார்கள். ஒதுதல் தொடங்கியது. ஒதி முடிந்த பின் மதரஸாபிள்ளைகள் போய் விட்டார்கள். மஹ்ரிப் தொழுகை முடிந்ததும் நானும் என் நண்பரும் சோற்றை ஒரு வண்டியில் ஏற்றி மதர்சாவுக்கு கொண்டு போனோம். தூக்க-எடுக்க உதவியா இருக்கு மென்று ஒரு பையனையும் கூடவே கூட்டி சென்றோம்.

சோத்து வண்டியை பார்த்த மதரஸா சமயல்காரருக்கு ’மூஞ்சி’ சரி இல்லை! 

‘’சோறுகறி சட்டிகளை இறக்கி எங்கே வைப்பது?’ என்று கேட்டதற்கு

’’எங்கேயாவது ஏறக்கி போடுங்கள்!’’என்று.கொஞ்சம் காட்டமாகசொன்னார். அகத்தின் அழகு முகத்தில் தெரிந்தது. நாங்களே சோறுகறி சட்டிகளை தூக்கி வந்து ஒரு ஓரத்தில் வைத்து முடித்ததும் வேகமாக சமையல்காரர் ஓடி வந்து எல்லா சட்டிகளையும்திறந்து-திறந்து பார்த்துவிட்டு’படார்-படார்’மூடினார். ஏனோ அவர் மூடு [mood] சரியில்லை! ‘’ என்று நினைத்தேன்.

’’எத்தனை பேருக்கு சோறு கொண்டு வந்திருக்கிறீர்கள்?’’ என்றார்.

’’முப்பது பேருக்கு சோறு கொண்டு வந்திருக்கிறோம்!’’ என்றேன். 

’’ஹும் இது முப்பது பேரு திங்கிற சோறா இது? இருபது பேருக்கு கூட பத்தாதே! பாக்கிபேர் எதைத் திம்பார்கள்?’’என்றார்.

வீட்டில் சோறு ஆக்கிய சமையல்காரர் சட்டியில் சோறு வைத்தபோது ’’இது முப்பது பேருக்கு போதுமா?’’ என்று கேட்டேன்.’’

இதில் நாப்பது பேருக்கு மேலே சாப்பிடுறது சோறு இருக்கு. போற இடத்தில் கூடகொரச்ச இருக்கும். சோறு கொறஞ்சுட கூடாதேன்டு கூடவே வச்சு இருக்கேன். பயப்புடாமே கொண்டு போங்க!’’ என்றார்.

இங்கே இவரோ சோறு பத்தாது என்று வம்புக்கு வர்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நானும் என் நண்பரும் யோசனை பண்ணினோம். ‘கூட வந்த பையனையும் துணைக்கு வைத்து நாமே சோறு பறிமாறுவோம்’ என்ற முடிவுக்கு வந்தோம்.            இடையில் இந்த விவகாரங்களை எல்லாம் பக்கது வீட்டுககாரர் கவனித்துக் கொண்டிருந்தார்.

"நாங்களே சோறு பரிமாறி கொள்கிறோம் .நீ அங்கே போய் வாயே மூடிகிட்டு சும்மாகெட!" என்றேன்.

’’சோறு திண்ட தட்டையும் கழுவி வச்சுட்டு போகணும்’’ என்று சமையல்காரர் அதட்டலாக சொன்னான். 

எங்கள் கூட வந்த பய கொஞ்சம் மொரட்டு பய. ’’சொல்லுங்க காக்க! 

‘மூஞ்சி-மூஞ்சி’ண்டு நாலு குத்து வுட்டு அவன் மூக்கை ஒடைக்கிறேன்!’’ என்றான்.

’’வேண்டாண்டா வாப்பா! அப்பொறம் இந்தக் கடக்கரை தெருவான் வந்து மதறஸா ஆளுகளை அடிச்சு போட்டுட்டு போயிட்டானுவோ!’’ண்டு ஊரு முழுக்க செய்தி பறவிடும். ஒங்காலு ரெண்டையும் புடிக்கிறேன். கொஞ்ச நேரம் சும்மா இரு!’’ என்றேன். என் சொல் பேச்சு கேட்டு புள்ளே ’பதுவுஷசா ’கம்’முன்னு’ இருந்துட்டான்.

எதிர்த்த வீட்டிலிருந்து இங்கு நடப்பதைம் கவனிதுக் கொண்டிருந்தவர் எழுந்து வந்து மதர்ஸா வாசலில் நின்று எங்களை வெளியே கூப்பிட்டார்.

’’இவன் ஏன் உங்களிடம் வம்பு பண்ணி ஆத்திரப்படுகிறான் தெரியுமா?’’ என்றார்.

’’சலவாத் நாரியா ஒதுகிறவர்கள் பிள்ளைகளுக்கு சோறு சமைத்து கொடுக்கு பொறுப்பை இவனிடமே ஒப்படைத்து விட்டு இவன் போடும் சிட்டைப்படி பணத்தை கொடுத்து விட்டு போய் விடுவார்கள். அதில் பாதிக்குமேல் பணத்தை இவன் அடித்து விட்டு ஓதுகிற பிள்ளைகள் வைற்றில் அடித்து விடுவான். நீங்களே சோறு கொண்டு வந்து விட்டதால் உங்கள் மீது ஆத்திரப்பட்டு இப்படி நாய்போல் சீறுகிறான். அவனுக்கு அம்பதோ அறுபதோ கையில் திணித்து விட்டால் வாயே பொத்திகிட்டு வேலையே பார்ப்பான்!’’ என்றார். 

‘இதை முன்பே ஒழுங்கா சொல்லி இருந்தால் போனால் போகிறதென்று நூறே கொடுத்திருக்கலாம்..இப்பொழுது அம்பது தருகிறேன். கொடுதுப்பாருங்கள்! வாங்கினால் சரி! முரண்டு பண்ணினால் நாங்களே சோறு பரிமாறி கொள்கிறோம்’’என்றேன். பணத்தை வாங்கி கொண்டு போய் அவனிடம் ஏதோ சொன்னார்.அவர் திரும்ப வந்து

‘’நீங்கள் வீட்டுக்கு போங்கள்! நாளை காலை வந்து சட்டியே எடுத்து கொள்ளுங்கள். அவனே எல்லாத்தையும் பார்துக் கொள்வான்’’ என்றார்.

இஷா தொழுகை முடிந்ததும் ஒஸ்தாதும் அவருடன் கூட வந்து சலவாத் நாரியா ஓதிய லபையும் விடாகண்டரும் வந்தார்கள். மூவரையும் ஒரு சகனில் வைத்து நானும் என் நண்பரும் பரிமாறினோம்.

’’சோறு வேணுமா? சோறு வேணுமா?’’என்று கேட்டுகேட்டு பரிமாறினோம். ’கறிவேணுமா?/கறிவேணுமா?’’ என்று கூவிகூவி கேட்டு பரிமாறினோம்.

’’போதும் போதும்’’என்றே பதில் வந்தது. குறிப்பாக அந்த விடாகண்டரிடமும் கேட்டேன்

’’போதும்!’’என்றார்.

அல்லாஹ் உதவியினால் எல்லாம் நல்ல படியாகவே முடிந்தது. மறுநாள் காலை மதர்சாவுக்கு வண்டி அனுப்பி சோத்து சட்டி எடுக்க விட்டோம். சட்டிகள் நெளிந்துபோய் இருந்தது. இது சமையல் காரனின் கைவரிசை. இதோடு விட்டதா பிரச்னை? இன்னும் கேளுங்கள். காலை பத்து மணி சுமாருக்கு எங்கள் தெரு பட்டிமன்றத்திற்கு [தர்கா] போனேன். அங்கே ஒரு நபருடன் பேசிக்கொண்டிருந்தபோது வந்தாரையா விடாகண்டர். 

’’பாரூக்! ராத்திரி எனக்கு வந்த எறச்சி எல்லாம் ஒரே ஜவ்வா இருந்துச்சுப்பா! நல்ல எறச்சியை எனக்கு  கெடைக்கலேப்பா!’’ என்றார்.

‘’அல்லாஹ் ஆட்டையும் மாட்டையும் படைத்தபோது அவைகளுக்கு ஜவ்வு முள்ளு எல்லாத்தையும் வைத்துத்தான் படைத்திருக்கிறான். யார்யாருக்கு எதை கொடுக்க நாடினானோ அவர்களுக்கு அதை கொடுப்பான். அவன் கொடுப்பதை தடுப்பார் யாருமில்லை கிடைத்தவரை லாபம் என்று அல்லாஹ்வுக்கு நன்றி கூறு!’’என்றேன். 

‘’அதுக்கு சொல்லலேப்பா அடுத்த வாரம் பாக்கிர்மார்களுக்கு சோறு கொடுக்கும்போது, அவனிடம் எறச்சி வாங்காதே! ஒரே ஜவ்வும் எலும்பும் தண்ணியும் போட்டு  ஏமாத்தி காஸு வாங்கிடுறான்’’ என்றார்.

எறச்சிகாரருக்கும் இவருக்கும் எப்போதும் ஒத்து வராது. என்னை இவர் தன்னுடைய கட்டுபாட்டுக் கோட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறார் என்பது புரிந்தது. ‘’நரிக்கு இடம் கொடுத்தால் கெடைக்கு ரெண்டு ஆடு கேக்கும்’’ என்று நான் வேலை செய்த கடை முதலாளியின் வாக்கு என் காதுக்குள் ஒலித்தது. இனியும் இந்த நரிக்கு இடம் கொடுத்தால் கிடைக்கு ரெண்டு ஆடுஅல்ல ஒரு கெடையை கேக்கும் என்று நினைத்தேன். முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் முற்றியபின் ஆபத்து நமக்கே என்று என் உள் மனம் சொன்னது 

’’பாக்கிர்மார்கள் விருந்துக்கும் அவனிடமே இறைச்சி வாங்குவேன்! உன் கட்டளைபடியெல்லாம் நான் பணிந்து நடக்க முடியாது. நீ வந்தா வா! வரலேண்டா கவலை இல்லை’’ என்றேன்! 

இதைக் கேட்ட அவர் மூஞ்சி சுருங்கிப்போச்சு .அங்கிருந்து ’விசுக்’கென்று போய் விட்டார். இத்தோடு பிரச்சனை ஓய்ந்ததென்று நினைத்தேன்.அன்று மாலை ஐந்து மணி சுமாருக்கு தர்காவுக்கு காற்றுவாங்க வந்தேன். ஒஸ்தாதும் அவருடன் கூட வந்து சலவாத்நாரியா ஓதிய இன்னொரு லபையும் மற்றும் இரண்டொரு லபைமார்களும் ஜாமாத்காரர்களும் தர்கா எதிரே [பழைய ]புறாகூடு பக்கம் நின்று ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். 

நான் வருவதை பார்த்த ஒஸ்தாத்

’’அதோ! பாரூக் வருகிறார்!’’ என்ற ஒஸ்தாத்

’’பாரூக்! கொஞ்சம் இங்கே வாரியளா?’’என்றார்.

கூப்பிட்ட தொனியும் அங்கே நின்ற ஆட்களின் முகபாவங்களையும் வைத்து நான் மனக்கணக்கு போட்டு பார்த்த வகையில் வந்த விடை ‘நான் சாட்சி சொல்லும்’ அளவுக்கு ஒரு குற்றம் நடந்திருப்பதாக நான் உணர்ந்தேன். நான் அவர்கள் கிட்டே நெருங்கியதும் என்னை பார்த்து ஒஸ்தாத் 

’’ஆமாம்! சலவாத்நாரியாக்கு இவரை கூப்பிடாதீர்கள்’’ என்று நான் உங்களிடம் சொன்னேனா?’’என்றார். 

பிரச்னை என்ன என்பது எனக்கு புரிந்து விட்டது

’’யாஅல்லாஹ்! சோதனைமேல் சோதனை என்னை தொடர்ந்து வருதேன்னு?’’ என்னையே நொந்துகொண்டு

’’இல்லையே! நான் உங்களை கூப்பிட்டபோது நீங்கள்தானே ’அவரையும் கூப்பிடுங்கள்’ என்று என்னிடம் சொன்னீர்கள்’ என்று சொன்னேன் 

’’அவரை கூப்பிடாதீர்கள் என்று நான் உங்களிடம் சொன்னதாக நீங்கள்தான் அவரிடம் சொன்னீர்களாம்.’’என்று ஒஸ்தாத் சொன்னார்.

"ஏங்க! நான் அப்படி உங்களிடம் சொன்னேனா?’’என்றேன். பதில் இல்லை. தலை குனிந்து நின்றார். எனக்கு திருமணம் நடக்கும் தருவாயில் கடல்கரைதெரு லபைமார்களுக்கும் ஜமாதுக்கும் வக்கூப் போர்டு சம்பந்தமான ஒரு பிரச்சனையில் லபைமார்களை ’நீக்கி’ வைத்தார்கள். வழக்கமாக நிகாஹ் செய்து வைக்கும் லபைக்கு பதிலாக இவர் என் முன்னே உட்கார்ந்து ‘’இப்போ சொன்ன மஹருக்கு...... என்று ஆரம்பித்து எதை எதையோ சொல்லி ‘ஒப்புக் கொண்டேன்! ஒப்புக் கொண்டேன்! ஒப்புக் கொண்டேன்!’’ என்று சொல்லுங்கள்’ என்றார். மாப்பிள்ளையாகிய நானும் ஒரு கிளிப்பிள்ளையாகி’’ ஒப்புக் கொண்டேன்! ஒப்புக் கொண்டேன்!  ஒப்புக் கொண்டேன்!’’ என்றேன். ஆனால் அப்பொழுது சொன்னதுபோல இப்பொழுது இவர் சொன்ன இந்த படுதூறான செய்தியை நான் ’’ஒப்புக் கொள்ளவில்லை! ஒப்புக் கொள்ளவில்லை! ஒப்புக் கொள்ளவில்லை!’’ என்றதும் அங்குநின்ற எல்லோரும் சிரித்தார்கள் - பந்தி முடிந்தது!

S.முஹம்மது ஃபாரூக்

குறிப்பு : ஸலவாத் நாரிய என்பது புதினங்களில் (பித்அத்) ஒன்று இது நபி வழியல்ல, பழைய நினைவுகளை பகிர்ந்தளிக்கும்போது அதனைப் பற்றிய சுட்டல் இங்கு இடம் பெற்றிருக்கிறது.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு