இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் - தொடர் - 29 39

அதிரைநிருபர் பதிப்பகம் | August 31, 2013 | , , ,


இஸ்லாமியப் பொருளாதாரத்தின் அடித்தளம்- குடும்ப உறவுகள்.(மனைவி).

மனைவியை BETTER HALF  என்று சொல்வார்கள். ‘ஒவ்வொரு வெற்றிகரமான ஆண்களுக்குப் பின்பும்  ஒரு பெண் இருக்கிறார்’ என்றும் சொல்வார்கள். ஒரு நல்ல மனைவி ஒரு குடும்பப்பொருளாதாரத்தின் அடிப்படை என்பதை யாரும் மறுக்க இயலாது. இன்னும் சொல்லப் போனால் சென்ற அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்ட மற்றக் கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திடச்செய்பவள் அன்னை என்கிற கருத்து ஒரு சாதாரணமான கவிதை வரியில்ல. மனைவியாக வருபவள் நல்லவளாக  சிறந்த நிர்வாகியாக பாசமுள்ளவளாக பண்பாடு மிக்கவளாக உள்ளதைக் கொண்டு நல்லது செய்பவளாக அமைந்துவிட்டால் அது எத்தனை பெரும் பேறு  என்பதையும் அப்படி  அமையாத  இல்லாத குடும்பங்களின் பொருளாதாரம் எவ்வளவுதான் பெரும் பணம் படைத்த குடும்பமாக இருந்தாலும் சீர்கேட்டுக் கிடப்பதையும்  நாம்  கண்ணால் காண முடியும்.

நான் குறிப்பிடப்போவது நான் அறிந்த இரு குடும்பங்களின் கதை. எனக்குப் பல குடும்பங்களின் கதைகள்  தெரியும். காரணம் குறைந்தது ஒரு பத்து குடும்பங்களுக்கு நான்தான் எழுத்தர். அறுபதுகளில் மலேசியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உழைத்துக் கொண்டிருந்த குடும்பத்தலைவர்களுக்கு- கடிதங்கள் எழுதுவதும் வரும் கடிதங்களை  படித்துச் சொல்வதும்  எனது முக்கியப்  பணியாக இருந்தது. இதற்காக ஒரு கடிதத்துக்கு இரண்டணா  முதல் நாலணாவரை கிடைக்கும் பல மனிதர்களின் . வாழ்க்கைப் பாடங்களைப் படித்துக் கொள்ளவும் மனிதர்களின் பிரச்னைகளை அறிந்து கொள்ளவும்  இவை எனக்குப் பெரும் உதவியாக இருந்தன. இப்படி   நான் அறிந்த இரு குடும்பெண்களின் மாறுபட்ட குணமுடைய இரு மனைவிகளைப் பற்றி இங்கே சுருக்கமாக சொல்லப் போகிறேன். அந்த இரு குடும்பத்தலைவிகளும் இன்று உயிருடன் இல்லை. (இன்னாளில்லாஹி) அவர்கள் என்னை மன்னிபபார்களாக. எனது நோக்கம் மனைவிகள் எப்படி குடும்ப பொருளாதாரத்தை உருவாக்க கருவியாக இருக்கிறார்கள் என்பதை சுட்டுவதே.

நான் சொல்லப் போகும் ஒரு குடும்பத்தின் தலைவர் மலேசியாவில் இருந்து மாதாமாதம் ஐந்து தேதிக்குள் கிடக்கும்படி இருநூற்று ஐம்பது ரூபாய் பணம் அனுப்புவார். அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் ஒரு பெண் குழந்தை. சொந்த வீடு. இந்தப் பணத்தைத் தவிர தம்பிடி காசுகூட இடையில் அனுப்ப மாட்டார்.  ஊருக்கு வரும்போது ஒரு பவுன கூட கொண்டு வர மாட்டார் என்று அவர் மனைவி புலம்புவார். . ஊருக்கு வந்துவிட்டு திரும்பி மலேசியா போகும்போது கப்பல் பயணச்சீட்டுக்கு அவரிடம் பணம் இருக்காது. அவர் யாரிடமாவது கடன் வாங்கி வரும்படி மனைவியிடம் கேட்பார். மனைவியும் கடன் வாங்கி வந்து கொடுப்பார்கள். அந்தக் கடனை முதல் மாதம் செலவுப் பணத்தோடு சேர்த்து அனுப்பிவிடுவார். நான் சொல்ல வருவது என்னவென்றால் இப்படி வெளியில் கடன் வாங்கியதாக அந்தக் குடும்பத்தலைவி கொண்டுவந்து கணவரிடம் கொடுத்த பணம் உண்மையில் கடன் வாங்கியது அல்ல. கணவருக்குத்தெரியாமல் அந்த அன்புத்தாயே சிறு சேமிப்பாக சேர்த்த பணம். அது மட்டுமல்ல பிள்ளைகளுக்கு பசி இல்லாமல் வயிறார உணவு, நியாயமான உடை, சமூக / குடும்ப காரியங்களில் உறவினர்களின் விஷயங்களில் கவுரவத்தொடு நடப்பது தர்மம் முதலிய அத்தனை காரியத்திலும் கச்சிதமாக செய்து கணவர்  அனுப்பியதிலேயே மிச்சம் பிடித்து  தன் மகளுக்காக கிட்டத்தட்ட எண்பது பவுன வரை நகைகளும் சேர்த்து வைத்து சிறுகக் கட்டி பெருக வாழ்ந்தார். இந்த எண்பது பவுன்களும் மலேசியக் கணவரால் அனுப்பப்பட்டதோ அல்லது அதற்காக தனியாக பணம் அனுப்பி வாங்கப் பட்டதோ அல்ல! அல்ல! அல்ல!.  இன்று பிள்ளைகளும் தலை  எடுத்து  அல்லாஹ் உதவியால் இன்றும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். மாத வருமானம் இரு நூற்று ஐம்பது ரூபாயில் மரியாதையாக குடும்பம் நடத்திக் காட்டிய பெருமை நிறைந்த பெருமகள் அவர். அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொள்வானாக்! ( எனது தபால் எழுதும் கூலியுடன் கூடவே தன் கையால் செய்த  பொரிவிலங்காய் உருண்டை, அறிப்புப் பணியாரம் எல்லாம் தருவார்.)

இதற்கு நேர்மாறான இன்னொரு குடும்பத்தலைவியையும் நான் சுட்டிக் காட்டவேண்டும். இவரது கணவர்  சிங்கப் பூரில் ஒரு தேநீர் விடுதி நடத்தி வந்தார். நல்ல சாம்பாத்தியம். நிறையப் பணம் தொடர்ந்து அனுப்புவார். இரண்டே பிள்ளைகள். ஊர் வரும்போதெல்லாம் நிறைய நகைகள் கொண்டு வருவார். ஆனால் இவர் மனைவி ஒரு “தீங்கலி”. ஊதாரித்தனமாக செலவு செய்வார். மீன்கடைகளில் விலை பேசாமல் மீனை வாங்கி வந்து சமைப்பார். மளிகைக் கடைகளில் கடன்வைத்து சாமான்களை வாங்குவார். கையில் பணம் இல்லாவிட்டால் எதையும் தள்ளி வைக்க மாட்டார்.  வாங்கக் கூடாத இடங்களில் வாங்கக் கூடாத  தெருக்களில் ஆண்களிடமும் கூட  அதிக வட்டிக்கு வட்டிக்கு வாங்கியாவது அனாவசிய ஆடம்பர செலவுகளைச் செய்வார். பால்காரருக்குப் பணம் தர மாட்டார்.  பட்டுக் கோட்டைக்கு அடிக்கடி போய் இனிப்பு காரம் என்று பொட்டலம் பொட்டலமாக வாங்கி வருவார். கணவர் அடிக்கடி சிங்கப் பூரில் இருந்து அனுப்பும் துணிமணிகள் பற்றாமல் அடிக்கடி ஜவுளி எடுப்பார்.  ஆயிரக் கணக்கில் கணவரிடமிருந்து  பணம் தொடர்ந்து  வந்து கொண்டு இருந்தாலும் கணவருக்கு எப்போதும் பணம் கேட்டே கடிதம் எழுதுவார். கணவர் ஊர் வரும்போதெல்லாம் கடன்காரர்கள் படையெடுத்து வருவார்கள். இடையில் சிங்கப் பூரில் சாலை ஓரத்தில் கணவர் வைத்திருந்த கடைக்குரிய இடத்தை அந்த நாட்டு அரசு எடுத்துக் கொண்டது. கணவர் ஊரோடு வரும்போது நானூறு இனிப்பு நீரையும்  கொண்டுவதார். சேமிப்பு இல்லாததால் இன்னும் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது." தேவை இல்லாததை வாங்குபவர்கள் தேவையானதை விற்க நேரிடும்" என்கிற ஆங்கிலப் பழமொழி இவர்கள் விஷயத்தில் உணமையானது. குடி இருந்த வீட்டை முதலில் அடகு வைத்து பிறகு அதை விற்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப் பட்டனர்.

இதை ஏன் குறிப்பிடுகிறேன்  என்றால்  ஒரு குடும்பம் வாழ்வதிலும்  தாழ்வதிலும் மனைவி ஆற்றும் பணி அளப்பரியது. மனைவி என்பவள் குடும்பப் பொருளாதாரத்தை வளர்க்கும் மரம போன்றவள். தகுதி வாய்ந்த ஒரு இல்லத் தலைவியுடைய இல்லமே நல்ல இல்லமாக அமைய முடியுமென்று திருவள்ளுவரும் கூறுகிறார். ஒருவனின் மனைவியிடம் இல்லறத்தை சிறப்புடன் நடத்தும் இயல்பு இல்லாவிட்டால் அவன் வாழ்க்கை செல்வம் முதலிய நலன்கள் நிரம்பப் பெற்று இருந்தாலும் அதனால் பயனே இல்லை. மனைவி சிறந்தவளாக இருந்தால் இல்லத்தில் ஒன்றும் இல்லாவிட்டாலும் எல்லாம் உள்ளது போல ஆகுமென்று வள்ளுவர் கூறுகிறார்.

மனையாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனை மாட்சித் தாயினும் இல் – என்கிற குறள் இதை வலியுறுத்துகிறது.

அல்லாஹ்வின் அருட்  தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

“இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.”

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல் :முஸ்லிம் 2911

மேலும்,

“உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவர்களே”  என்றும் கண்மணி  நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : அஹ்மத் 7095 

மனைவிமார்களை கண்ணியப் படுத்துவது அவர்களை தட்டிக் கொடுத்து அரவணைத்து செல்வது குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்த வழிகோலும் என்பதால்தான் இஸ்லாம் மனைவிமார்களை  கண்ணியப் படுத்துகிறது. வேறு எந்த மதமும் மனைவிகளை இப்படி கண்ணியப் படுத்தியதாக தெரியவில்லை.. பெண்ணுரிமை விசயத்தில் இஸ்லாத்தை கொச்சைப் படுத்தும் நவீன வாதிகள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குடும்ப வாழ்வில் காணப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றி சிந்திக்கும் போது பெண்ணின் பங்கு  பற்றி விவாதித்தல் அடிப்படையானது. ஒரு சிறந்த தாயும், தந்தையுமே நல்ல சிறந்த சந்ததியினரை உருவாக்க இயலும். . ஆனால் அந்த சிறந்த தாயும் தந்தையும் உருவாதல் நல்ல கணவன், மனைவியின் உறவின் வழியாகவே  சாத்தியமாகும். இந்தப் பின்னணியில்  குடும்பத்தில் பெண் வகிக்கும் பங்கு அடிப்படையானது. முதன்மையானது. 

இஸ்லாமிய கோட்பாடுகள் புகட்டுவதன்  இலக்கு,  ஒர் உண்மையான முஃமினை, முதிர்ச்சிமிக்க பூமியின் பிரதிநிதியை பொறுப்புக்களை ஏற்று நடக்கும் நாணயமிக்க பலமான மனிதனை உருவாக்குவதாகும்.

நம்பிக்கைதான்  ஈமானின் பெரும்  பலம்,  நான் பூமியின் பிரதிநிதி என்ற பொறுப் புணர்வு, நாணயம், வேலைகளை மிகச் சரியாக நிறைவேற்றும் ஆற்றல், திறன் என்ற பண்புகளை மனித இனத்தினின் மீது புகட்டி உருவாக்கிவிடுவதன்  வழியாகவே இது  சாத்தியமாகும். இப்பண்புகள் இளமையிலிருந்தே உருவாக்கப்பட வேண்டும். மனிதனுக்கு கருத்து அரும்புவிடத் தொடங்கும்போதே  இவை பயிற்றுவிக்கப் பட வேண்டும்.  

இப்படி ஒரு நிலை நடைமுறைப் படுத்தப் பட வேண்டுமானால்  ஒரு சீரான குடும்பத்தில் பிரச்சினைகள் அற்ற அழகான குடும்ப அமைப்பிலேயே சாத்தியமாகும். குழந்தைகளின் முதல் பள்ளிக் கூடம் தான் வளரும் குடும்பமே. தாயையும் தந்தையையும் பார்த்தே குழந்தைகள் பழகி வளருகின்றன. ஒரு குழந்தை தானாகவே தன்னை பண்புள்ளதாக வளர்த்துக் கொள்ள இயலவே இயலாது.  “ தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை” எண்பது நம்மிடையே வழங்கப் படும் ஒரு  பழமொழி. ‘ தாயை தண்ணீர்  எடுக்கும் இடத்தில் பார்த்தால் மகளை வீட்டில் பார்க்க வேண்டாம் “ என்றும் கூறுவார்கள். எனவே நமது குழந்தைகள் நம்மால் கவனிக்கப் பட்டும் , நம்மால்  வளர்க்கப் படவும் வேண்டும். இதற்கு நம் குழந்தைகள் நம்மைக் காணும் போது தாயும் தந்தையும் மனமொப்பி இணைந்த குடும்ப அமைப்பு சீராக அமைதல் மிகவும் அடிப்படையானது.  சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில்  அடைக்கப் பட்டுள்ள சிறுவர்கள்  அந்நிலை அடையக் காரணம் அவர்களின் தாய் தந்தையரின் குடும்ப வாழ்வு இக்குழந்தைகளின் கண் முன்னே  சிதைக்கப் பட்டதே என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஒரு  தந்தை தனது  வீட்டில் குழந்தைகளின் முன்னே  மதுவருந்தி விட்டு வைக்கும் மிச்சத்தை மகன் எடுத்துக் தெரியாமல் குடிப்பது நாம் கேள்விப்படும் ஒன்று. அல்லாஹ் பாதுகாப்பானாக!

குடும்பத்தின் ஆரம்ப அங்கத்தினர்கள் கணவன், மனைவி எனப்படும் ஆணும், பெண்ணுமே, குடும்பம் எனபது ஒருவருக்கொருவர் பரஸ்பர அன்புகாட்டல் மற்றும் , இரக்க மனப்பாங்கின் மீது அமைகிறது. உணர்வுகளின் பரிமாற்றமே அன்பு. பொறுப்புக்களை சுமத்தும் போது இரக்கம் அடிப்படையாகிறது. நிறைவேற்ற  இயலாத பொறுப்பை ஒருவர் மீது ஒருவர் சாட்டுவது இருவருக்கிடையில் அன்பை வளர்க்காது. ஒருவர் மீது ஒருவர் பொறுப்பைசுமத்தும் போது இந்த இரக்க உணர்வு மேலோங்க  வேண்டும். இவ்விரு உணர்வுகள் மீதும் எழாத குடும்பம் அர்த்தமற்றதாகிறது. அந்தக் குடும்பத்தில் வளரும் குழந்தைகளும் சீரான வளர்ச்சியைப் பெறமாட்டார்கள். வெறுப் புணர்வோடும், எப்போதும் முரண்பாட்டோடும், சண்டை சச்சரவோடும் வாழும் ஒரு கணவன் மனைவியருக்கிடையே வாழும் பிள்ளைகள் எவ்வாறு சீராக ஒழுக்க சீலர்களாக  அமைய முடியும்.?

இந்த சூழ்நிலையில்  குடும்பத்தின் அமைப்பில் அதன் பொருளாதார வளர்ச்சியில்  பெண்ணின் பங்கு மிக அடிப்படையானது. மனைவியே குடும்பத்தின் அஸ்திவாரம். இதனால்தான் வீட்டை மனை என்கிறார்கள். இதை ஆள்பவளே மனைவி.  தலைமை தாங்குவது  ஆணின் பொறுப்பில் இருந்தாலும் பெண்ணே குடும்பத்தில் பிரதான பாத்திரமாக அதனை இயக்குகிறாள். 

தித்திக்கும் திருமறை  ஆண், பெண் படைப்பின் நோக்கமாகவே இக் கருத்தை விளக்குகிறது. திருமறையில் கூறப்படுகிறது.

உங்களிலிருந்து உங்களுக்கான ஜோடியைப் படைத்து அதனிடம் நீங்கள் அமைதி காணுமாறு அமைந்திருப்பது அவனது அத்தாட்சிகளில் ஒன்றாகும். உங்களிடையே அன்பையும் இரக்கத்தையும் அவன் ஆக்கி யுள்ளான்” (ஸூரா-ரூம் 21)

ஏனைய அனைத்து உயிரினங்களையும் விட மனித ஆண்-பெண் இனக்கவர்ச்சி மிகுந்த வீரியம் கொண்டது. ஆண் காம உணர்வு வகையில் பலவீனமானவன். பெண்ணின் தோற்றம், வெறுமனே அவளைக் கற்பனை செய்வதுவே அவனில் பாதிப்பை ஏற்படுத்தும். இப்பலவீனமே அவனைப் பெண்ணின் பின்னால் ஓட வைக்கிறது. பெண்ணின் மென்மை. அவளது பேச்சு, உறவாடல் அனைத்தும் அவனுக்கு மன அமைதியையும், ஆறுதலையும் கொடுக்கிறது. பெண்ணின் சிறப்புத் தன்மை மனோதத்துவ ரீதியாக ஆரம்பிக்கிறது.  

ஆண் அவனது இயற்கையான உடல் அமைப்பு, தோற்றம், பலம், வன்மை என்பவற்றால் உழைக்கவும், போராடவும்  சுமைகளை சுமக்கும் சுமைதாங்கியாகவே  படைக்கப்பட்டுள்ளான். உழைத்து, களைத்து, முட்டி, மோதி மனமும், உடலுமே தாக்குண்டு வீடு நோக்கி வரும் ஆணுக்கு பெண்ணின் குளிர்ச்சியான பார்வையும், மென்மையான பேச்சும், ஸ்பரிசமும் அமைதியையும் ஆறுதலையும் கொடுக்கும். வாழ்வின் வெயிலுக்கான நிழலே பெண். ஆணுக்கு இந்த இடம் தவறும் போதுதான் அவன் மன உளைச்சல் கொண்டவனாகவும், வெறுப்பும், விரக்தியும் கொண்டவனாகவும், சில போது வெறி பிடித்தவனாகவும் மாறிப்போகிறான். இதனால்தான் பல வீடுகளில் தட்டைப் பீங்கான்கள் உடைகின்றன.

பெர்னாட்ஷா நொந்து போய்ச் சொன்னார் “ பெண்களைப் போல ஆண்களுக்கு ஆறுதல் தர ஆள் இல்லை. ஆனால் பெண்கள் இல்லாவிட்டால் ஆண்களுக்கு இந்த ஆறுதல்  தேவையும் இல்லை “ எனறு.

இவ்வாறு ஓர் ஆணைச் ஆணாகச்  செய்பவளே பெண்தான். அவனை மன நலம்   கொண்டவனாக வைத்து,  சமூகப் பொருளாதாரத்தின்  சிறந்த நற்பயன் தரும் சக்தியாக வைத்திருப்பது அவளது கையிலேயே உள்ளது. இக் கருத்தை இறைதூதர் (ஸல்) கீழ்வருமாறு மிகவும் அழகாகச் சொல்கிறார்கள்.

யாருக்கு அல்லாஹ் நல்ல மனைவியைக் கொடுக்கின்றானோ அவனது மார்க்கத்தின் பாதி நிறைவுபெற அல்லாஹ் உதவி விட்டான் அடுத்த பாதியில் அல்லாஹ்வை அவன் பயந்து நடந்து கொள்ளட்டும்.” (தபரானி, பைஹகி, ஹாகிம்)

இவ்வாறு பெண் இருக்கவேண்டுமானால் அவள் தன்னில் உருவாக்கிக் கொள்ள வேண்டிய அம்சங்கள் யாவை?

கணவன் மனைவி  இருவரும் சில மணிநேரங்களில் நிறைவு பெற்று முடியும் பிரயாணத் தோழர்களல்ல, ஓரிரு நாட்கள் மட்டும் உறவாடக் கூடியவர்களல்ல. வாழ்நாள் முழுக்க வாழப்போகும் வாழ்க்கைத் தோழர்கள். இங்கு எந்த நிர்ப்பந்தமும் ஆணோ, பெண்ணோ எந்தத் தரப்ப்பார் மீதும் பிரயோகிக்கப்படக் கூடாது. இருவரது மனமொத்த   ஒருமைப்பாடு மற்றும்  உடன்பாடு மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அத்துடன் பொருளியல் மற்றும் சமூகத்தரமும் பேணப் பட வேண்டும்.

இறைதூதர் (ஸல்) அவர்கள் இந்தக்  காரணத்தால்தான் கணவன் மனைவியாகப் போகும்  இருவரும் ஒருவரை ஒருவர் திருமணத்துக்கு முன்னரே  பார்த்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள். நமது பகுதிகளில் இந்தப் பழக்கம் நடைமுறையில் இல்லை. 

ஒரு நபித்தோழர் தான் திருமணம் பேசி இருப்பதாகக் கூறியபோது நீ அவளைப் பார்த்தாயா?, அவளைப் பார், அப்போது உங்களிடையே ஓர் இணக்கத்தை  உருவாக்க அது மிகப் பொருத்தமாக அமையும்.எனக் கூறினார்கள்.

கட்டிடத்துக்கு மனைப் பொருத்தம் எப்படி அவசியமோ திருமணத்துக்கும் மனப்  பொருத்தம் மற்றும் உடல் பொருத்தம் ஆகியன அவசியமாகும். தான் விரும்பாத ஓர் ஆணுடன் எப்படி ஒரு பெண் வாழ முடியும்? எவ்வாறு அவள் அவனுக்கு மன அமைதியைக் கொடுக்க முடியும்? அப்படி அமைதில்லாதவன் எப்படி பொருளாதார ரீதியில் உயர முடியும்? இந்நிலையில் இருவருமே மன அமைதியை இழந்து தவிப்பர். உறவாடலின் முதல் அடிப்படையே இங்கு இல்லாமல் போகின்றது. பொருத்தமில்லா மனைவி பொருத்தமில்லாக் கணவனுக்கு மணமுடிக்கப் பட்டால்  வாழ்வின் அடிப்படையிலேயே  வெடிகுண்டு வைக்கப் படுகிறது என்றே பொருள்.  

அடுத்த அம்சம் மனதத்துவத்தைப் புரிந்திருத்தலாகும். திருமணத்தின் ஆரம்பத்தில் இனக்கவர்ச்சியின் வேகத்தால் இருவரும் மிகவும் சுமுகமாக உறவாட முடியும். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அக் கவர்ச்சி குறையத்துவங்கும். இப்போது ஆணின் மனத்தத்துவம் புரியாத ஒரு பெண் பல தவறுகளை அப்பகுதியில் இழைத்து முரண் பாடுகளை உருவாக்கி விடுவாள்.

கணவனுக்குக் கட்டுப்படல், அவனுக்கு நன்றி செலுத்தல், போன்ற பல விடயங்களை இப்பகுதியில் இறைதூதர் (ஸல்) அவர்கள் திரும் பத்திரும்ப வலியுறுத்தியதன் காரணம்  இதுவேயாகும். கீழே சில ஹதீஸ்களை இக்கருத்தை விளங்குவதற்காகத் தரவிரும்புகிறேன்.  

தனது கணவனுக்கு நன்றி செலுத்தாத ஒரு பெண்ணை அல்லாஹ் பார்ப்பதில்லை. அவனது தேவை இன்றி அவள் இருக்கவும் முடியாது. “ (அல் ஹாகிம் -அல் முஸ்தத்ரக்)

“எப்பெண்ணாவது மரணிக்கும் போது கணவன் திருப்திப்பட்ட நிலையில்  மரணித்தால் சுவர்க்கத்தில் நுழைவாள்(இப்னுமாஜா, அல்ஹாகிம்)

ஒரு பெண் இறைதூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு விளக்கத்துக்காக  வந்தாள். தான் வந்த நோக்கம் நிறைவேறியதும்  இறைதூதர் (ஸல்) அவளைப் பார்த்து உனக்கு கணவன் இருக்கிறானா? எனக் கேட்டார் ஆம் என அப்பெண் கூறிய போது அவனைப் பொருத்த வரையில் உனது நிலை என்ன? என இறைதூதர் (ஸல்) வின வினார்கள். சிலவேளை இயலாமல் போவது தவிர என்னால் முடிந்தளவு நான் அவனது கடமைகளை நிறைவேற்றுகிறேன் என அப்பெண் கூறினாள். அப்போது இறைதூதர் (ஸல்)

அவனைப் பொறுத்தவரையில் நீ எங்கே இருக்கிறாய் எனப் பார்த்துக் கொள். ஏனெனில் அவனே உனது சுவர்க்கமும், நரகமும்”  என்றார்கள்.(முஸ்னத் அஹமத், ஸூன் நஸாயி, முஸ்தரக் அல்-ஹாகிம்)

செலவழிப்பதற்குப் பொறுப்பாக இருப்பவன் கணவன். என்றாலும் மனைவிதான் வீட்டுச் செலவினங்களை நெறிப்படுத்துகிறாள். அந்த வகையில் வீட்டின் செலவினங்களை கணவனின் வருமானத்திற்கேற்ப நெறிப்படுத்தி ஒழுங்குபடுத்துவது மனைவியரின் பொறுப்பாகும்.  செல்வம் அதிகம் இருந்தால்   ஆடம்பர மோகமின்றி கவனமாகப் பணத்தைக் கையாளும் போக்கும் வறுமை நிலையாயின் பொறுமை யுடனும், சகிப்புத்தன்மையுடனும் வாழும் திறனும் ஒரு நல்ல மனைவிக்கு இருக்க வேண்டும். இவ்வாறு கணவனின் செல்வத்தை மிகவும் கவனமாக பாதுகாக்கும் திறன் அவளுக்கு இருக்க வேண்டும்.

அத்தோடு கணவன் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் செலவழிக்க கடமைப்படுகிறானே தவிர அவனது சொத்து விவகாரங்களில் தலையிடவோ, அவனது உறவினர்களுக்காக செலவிடுவதில் தலையிடவோ மனைவிக்கு உரிமை இல்லை. என்பதை அவள் உணர்ந்து கொள்ள வேண்டும். இன்று நமது குடும்பங்களில் நடைபெறும் முக்கியமான பிளவுகள் இஸ்லாமியப் பொருளாதாரம் வரையறுக்கும் இந்த அமசத்தை உணராமல் இருப்பதால்தான் என்பதை இங்கு வேதனையுடன் குறிப்பிடுகிறேன்.

இஸ்லாமியப் பொருளாதார சந்ட்டங்களின்படி , மனைவியின் சொத்தில் கணவனுக்கு தலையிட எந்தவிதமான உரிமையுமில்லை என்பதும் இங்கு கவனிக் கத்தக்கது. 

கணவனின் சொத்தைப் பாதுகாப்பதும் ஒரு மனைவியின் பொறுப்பு என்பதையும் இறைதூதர் (ஸல்) விளக்கிக் காட்டியுள்ளார்கள்.

நான்கு விடயங்கள் யாருக்குக் கிடைக்கப்பெறுகிறதோ அவர் உலக, மறுமையின் நன்மையைப் பெற்றவராகின்றார். நன்றி செலுத்தும் உள்ளம், இறை நினைவு கூறும் நாவு, சோதனைகளின் போது பொறுமையாக உள்ள உடம்பு, தன்னிலோ, கணவனின் சொத்திலோ பாவகாரியங்களை நாடாத மனைவி. (தபரானி - அல்கபீர், அல்-அவ்ஸத்)

மூன்று விஷயங்கள்   மனிதனின் சந்தோஷ வாழ்வுக்கு காரணமாகும் எனக் கூறிய இறை தூதர் (ஸல்) அவற்றில் முதலாவதைக் கீழ்க்கண்டபடி கூறினார்கள்.

நீ பார்த்தால் உன்னைக் கவரக் கூடிய, நீ இல்லாத போது தன்னையும், தனது செல்வத்தையும் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய மனைவி “ (அல்-ஹாகிம் - முஸ்தத்ரக்)

எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் இப்படிப்பட்ட நற்குணமுள்ள மனைவிகளைத்  தந்து அனைவரின் பொருளாதார வாழ்வும் சமூக ஒழுக்கமும் மேம்பட உதவுவானாக !
மீண்டும் சந்திக்கலாம் இன்ஷா அல்லாஹ். 
இபுராஹீம் அன்சாரி

வேலை நேரமும் கல்வியும்..! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | August 30, 2013 | , , , , ,

இன்று முன்னேறிய நாடுகளை கவனித்தால் ஒரு முக்கியமான செய்தி நமக்கு புலப்படும். இந்த நாடுகளில் பள்ளி கூடங்கள் எல்லாம் அதிகாலை 7 மணிக்கு தொடங்கி விடும். அதுபோல் அரசு அலுவலகங்கள் 8 மணிக்கு தொடங்கி விடும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகூடம் அனுப்பிவிட்டு தாங்கள் வேளைக்கு செல்வதற்கும் வசதியாக இருக்கும் .

குழந்தைகளும் அதிகாலை படிப்பை தொடங்குவதால் படித்தவை அனைத்தும் மனதில் நிற்கும் நன்றாக படிக்கும் குழந்தைகள் பிற்காலத்தில் வாழ்கையில் நல்ல முன்னேற்றமும் தகுதியும் அடைவதால் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்ல முன்னேற்றம் கிடைகின்றது .

அதை விட முக்கியமான விஷயம் அதிகாலையில் எழவேண்டும் என்பதால் இரவில் சீக்கிரம் தூங்கி விடுவார்கள். மானாட மயிலாட ஆட்டம் போன்ற மட்டமான TV நிகழ்ச்சிகள் பார்த்து மூளை மழுங்கடிக்கபடுவது தவிர்க்கப்படுகின்றன. அதிகாலையில் எழுந்து பள்ளிக்கூடம் செல்வதால் 7 மணிக்கு ஸ்கூல் என்றால் 6:30 க்கு வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும் இவர்கள் 5 மணிக்கு எல்லாம் எழுந்து ரெடியாக வேண்டும் 5 மணிக்கு எழுந்தால் இறை வணக்கமான சுபுஹு தொழுகை நிறைவேறிவிடும்.

குழந்தைகளுக்கு படிப்பு படிப்பு என்று படிப்பை மட்டும் சொல்லிக் கொடுக்காமல் படிப்பினுடன் சேர்ந்து வெளிப்பழக்க வழக்கங்களையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். உதரணத்திற்கு சாப்பாட்டு நேரத்தில் திடீர் விருந்தாளி வந்து வந்து விட்டால் மேலும் உடனே சமைக்க நேரமிருக்காது, இருக்கும் உணவை பகிர்ந்து உண்பதற்கு பழகி கொடுக்க வேண்டும் (யார் வந்தால் என்ன, எனக்குள்ள கொள்ளளவு என்னவோ அதை புல் செய்து கொள்வேன் என்ற சிந்தனையை இளைய வயதிலேயே எழாமல் இருக்க நல்ல புத்திமதிகளை புரியும்படி சொல்ல வேண்டும்).

நமது ஊரில் வங்கிகள்: 10 மணிக்கு வங்கிகள் திறக்கப்படுகிறது அங்கு வேலை செய்வோரின் முகத்தை பார்த்தால் தூங்கி வழிந்து கொண்டுதான் இருக்கும். போட்டிருக்கும் சட்டை காலர் அழுக்கு பிடித்தே இருக்கும் அல்லது காலர் பிய்ந்து போயிருக்கும் இந்த இரண்டில் ஒன்று இல்லை என்றால் இவர் பேங்க்கில் வேலை செய்பவர் இல்லை என்று அர்த்தம்.

நாம் போய் கவுண்டரில் ஏதாவது விபரம் கேட்டால் அண்ணார்ந்து பார்க்கவே ஐந்து நிமிடம் ஆகும் நாம் கேட்டதற்கு பதில் அந்த நாலாவது சீட்டில் போய் கேளுங்கள், இங்கே வந்து களுத்தை அறுக்குரியலே என்று சிடு சிடுப்பார். அந்த நாலாவது சீட்டுக்கு போன அங்கு ஆளே இருக்க மாட்டார், என்னவென்று கேட்டால் லீவுலே போயிருக்கார் என்பார்கள் சரி மனேஜரை பார்க்கலாமென்று போனால் லாக்கருக்கு போனவர் இன்னும் வரவில்லை என்று நம்மை மதிக்காமல் பியுன் சொல்லிவிட்டு போய்க்கொண்டு இருப்பான். லாக்கருக்குல போனவரு அவருடைய டூட்டி டைம் முடிஞ்சிதான் வெளியோ வருவாரு போல.

இதெல்லாத்தையும்விட கேஷ் கவுண்டரில் உள்ளவர் பணம் தரும்போது என்னவோ அவர் வீட்டு பணத்தை நமக்கு சும்மா எலக்சன் நன்கொடையா தருவது போல் பல அலப்பறை செய்து விட்டுதான் பணத்தை கையில் கொடுப்பார். இவர்களிடம் ஒரு சிரிப்பையோ அல்லது கனிவான வார்த்தையையோ நாம் எதிர்பார்த்தால் நாம் ஏமாந்து தான் போகணும். இங்கு கொடுமை என்னவென்றால், இவர்கள் வாங்கும் சம்பளம் நம் பணம் என்பது நமக்கே தெரியாது, அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது.

அடுத்து பத்திரப்பதிவு அலுவலகம்: அதே 10 மணி அதே அலுக்கு சட்டை தரையை சீய்க்கும் எட்டுமுழ வேஷ்டி. இவர்களுக்கு சம்பளத்தை விட கிம்பளம் ஜாஸ்தி அதிலும் அதிரைப்பட்டினம் என்றால் சொல்ல வேண்டியது இல்லை ஊரில் மழை பெய்கிறதோ இல்லையோ இங்கு பணமழைதான் தினமும் .

கை நாட்டு எடுத்து விட்டு கை விரல் துடைக்க ஒரு துணி ஒன்று கொடுப்பார்கள் அதில் விரல் துடைத்தால் அந்த விரலை அன்றே அறுத்து எரிந்து விடவேண்டியதுதான், அவ்வளவு துர்நாற்றம் அந்த துணியில்.

பத்திர பதிவு ஆபிசர்: ஓ அந்த இடமா வேலிவ் கூடுதல் ஆச்சே! எக்ஸ்ட்ரா இன்னும் பத்திரம் ஒரு 50 THOUSAND ஆகும் நீங்க ஒன்னு பண்ணுங்க பத்திர எழுதரிடம் 15000 கொடுத்திருங்க பாக்கியா நான் பாத்துக்கொள்கின்றேன் என்பார் நமக்கு இதே எல்லாம் கேட்டு தலைசுத்தும் பணத்தை கொடுத்தமா வேலைய முடிச்சமான்னு வீடு வந்து சேருவோம் . இவ்வளவு பணத்தை வாங்கும் அந்த பத்திர பதிவு ஆபிசர் கை நக அழுக்கை பார்தா முழுசா மூணு நாளைக்கு சோறு சாப்பிட மனசு வராது...

மேலே கண்ட அனைவரும் நன்கு படித்து பட்டம் வாங்கியவர்கள் தான் ஆனால் இவர்கள் நடை முறை கல்வியை பயில மறந்தவர்கள் .

நாம் என்ன செய்ய வேண்டும்
  • நாம் நம் பிள்ளைகளுக்கு ஐவேளை தொழுகையையும், நல்ல படிப்பையும், ஹராம் ஹலாலையும், சுத்தம், நேர்மையும், நல்ல பழக்க வழக்கங்களையும், எல்லோரையும் மதிக்கவும் கற்றுகொடுக்க வேண்டும் .
இங்கு வரும் நாம் சகோதரர்கள் அவரர்களுக்கு தெரிந்த நல்ல விசயங்களை நம் மாணவ செல்வங்களுக்கு கட்டுரை மற்றும் பின்னுட்டம் மூலம் அறியத்தரவும்.

மற்றும் ஒரு சுவாரஸ்யமான சிந்தனை தூண்டும் பதிவில் சந்திக்கலாம்.

Sஹமீது
இது ஒரு மீள்பதிவு

"கிட்டன்ஸ்ல ஊர் முச்சூடும்" – ஊடகங்கள் 19

அதிரைநிருபர் பதிப்பகம் | August 29, 2013 | , , , , , , ,

ஊடக தர்மங்கள் நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் செத்துப்போய் பல மாமாங்கம் ஆகி விட்டன. வெறும் கற்களை மட்டும் கையில் வைத்துக்கொண்டு கனரக பீரங்கிகள் முன் இழந்த தன் மண்ணை மீட்க சண்டை போடுவதால் பாலஸ்தீன மக்கள் மீது வானிலிருந்து பாஸ்பரஸ் கொத்து குண்டு மழை பொழியச்செய்து பச்சிளம் குழந்தைகள் என கூட பார்க்காமல் அழித்தொழிக்கும் இஸ்ரேல் அரசே முன்னின்று நடத்தும் அரசு பயங்கரவாதத்தை அமெரிக்கா மெச்சி உள்நாட்டு பாதுகாப்பு என அதை ஆதரித்து இஸ்ரேலுக்கு ஆதரவான தனது குரலை பிரகடணப்படுத்துகிறது ஒவ்வொரு முறையும். அதை அப்படியே அச்சு பிசகாமல் ஏற்று தன் அச்சுத்தொழிலையும், தொலைக்காட்சித் தொழிலையும் வளர்க்கும் ஊடகங்கள்.


சமீபத்தில் சிரியாவில் பஸார் அல் அசாத் என்னும் கொடிய மனித மிருகத்தின் அரசு அப்பாவி பொது மக்களின் மேல் ரசாயன விஷ குண்டுகளை போட்டு சுமார் 1300க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் என அந்த விஷக் காற்றை சுவாசித்த அனைவரையும் கொன்று குவித்தது. இதற்காக பச்சாதாபப்பட்டு அமெரிக்கா தனது போர்க்கப்பலை சிரியா எல்லையோர கடல் பகுதியில் பிரிட்டனின் உதவியுடன் எந்நேரமும் சிரியாவை தாக்க தயாராக உள்ளது. இது சிரியாவில் அரசுக்கு எதிராக போராடும் குழுக்கள் மற்றும் அங்குள்ள அப்பாவி பொது மக்கள் மேல் அனுதாபப்பட்டு செய்யப் போவதாக தெரியவில்லை. அதன் மூலம் எப்படியாவது ஈரானை நிலை குலையச் செய்யவே இந்த ஏற்பாடு.


தமிழகத்தில், இளவரசன் நல்லவனோ? கெட்டவனோ? அவன் காதலித்து கல்யாணம் செய்ததது சரியோ? தவறோ? ஆனால் அவன் இறந்த பின் அவனுடைய இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள அவனுடைய இனத்தின் தலைவரை ஏன் அரசு அனுமதிக்கவில்லை? சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி இருக்கலாம். சரி.

ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவருடைய ஊரில் பாஜகவின் தேசிய தலைவர்களில் ஒருவர் அத்வானி சேலம் வந்து ஆடிட்டர் ரமேஷுக்கு இரங்கல் தெரிவித்து பெரும் மாநாடே நடத்த அரசு எப்படி அனுமதித்தது? அங்கு சட்டம் ஒழுங்கு எல்லாம் லீவு போட்டு விட்டு வெக்கேஷனில் போய் விட்டதா?

கமலின் "விஸ்வரூபம்" படத்திற்கு ஆதரவாகவும், கருத்துச்சுதந்திரம் பற்றியும் ஓரணியில் திரண்டு கொக்கரித்த ஊடகங்களும், அதே கபோதிகளும் இன்று "மதராஸ் கபே" படம் ஒரு இனத்திற்கு எதிரானது என்று கூக்குரலிட்டு அதை தடை செய்தே தீர வேண்டும் என்று கூறி மரத்திற்கு மரம் நிறம் மாற்றும் பச்சோந்திகளையெல்லாம் ஓரம் கட்டி மரத்திலிருந்து அவைகளை வேடிக்கைபார்க்க வைத்து விட்டன. 

அன்று கட்சத்தீவை ஏகோபித்த முடிவில் தாரை வார்த்து இலங்கைக்கு கொடுத்து விட்டு இன்று அதை திரும்பி பெற்றுத்தீர வேண்டுமென சபதமெடுக்கின்றன அரசியல் கட்சிகள்.

ஊடகங்கள் சித்தரிப்பது போல் அல்லது உண்மையில் பாக்கிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடாக இருக்கலாம். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் அங்கு நடந்த குண்டு வெடிப்பில் நேரடி தொடர்பு என குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் பல வருடங்கள் வாடிக் கொண்டிருந்த சரப்ஜித் சிங்கை நேரில் சென்று பார்த்து வர அவர் குடும்பத்திற்கு பாக்கிஸ்தான் விசா கொடுத்தது. பிறகு சிறையில் ஏற்பட்ட சண்டையில் பலத்த காயமடைந்த அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு இறந்த பின் அவருடைய உடலை இறுதி ஈமச்சடங்குகளுக்காக குறைந்த பட்ச மனிதாபிமானத்தில் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது அந்த பயங்கரவாத நாடு. 

ஆனால் அஃப்சல் குரு என்ற இந்திய மாநிலங்களில் ஒன்றான கஷ்மீரத்து ஏழை இளைஞன் பாராளுமன்ற தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டான் (நேரடித் தொடர்பு இல்லை என்பது உலகறிந்த உண்மை) என்று காரணம் கூறி உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறிய "காவி பயங்கரவாதம்" பற்றிய சர்ச்சையில் அவரை பதவி நீக்கம் செய்யும் வரை ஓயமாட்டோம் என்று பாராளுமன்றத்தில் அமளி, துமளியில் ஈடு பட்ட பாஜகவின் வாயை அடைப்பதற்காக பிரணாப் முகர்ஜி மூலம் இரவோடு இரவாக அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு அவனுக்கு முன் எத்தனையோ பெரும் குற்றங்களில் ஈடுபட்டு மரண தண்டணை பெற்று (ராஜீவ் கொலையாளிகள் உட்பட) தண்டணைக்காக காத்திருப்போர் பட்டியலில் வரிசையில் நிற்க இவனை மட்டும் விடிகாலையிலேயே தூக்கிலிட்டு அவன் மனைவி, பிள்ளை குடும்பம் கடைசியில் அவனுடன் பேசி பிரியா விடைபெற வாய்ப்பு கேட்டும் அனுமதிக்காமல் அவனுடைய உயிரற்ற உடலை இறுதிச்சடங்கிற்கு அவனுடைய குடும்பத்திற்கு ஒப்படைக்காமல் திகார் சிறையிலேயே அவன் போற்றும் இஸ்லாம் மார்க்கம் கூறும் இறுதிச் சடங்கேதும் நடத்தாமல் புதைத்து நொடிப்பொழுதில் அமெரிக்காவின் நிகழ்வுகளை இந்தியாவில் காணும் இந்த தொழில் நுட்ப யுகத்தில் இரண்டு நாட்களுக்குப் பிறகு விரைவு தபால் மூலம் தூக்கு தண்டணை நிறைவேற்றம் பற்றி அவன் குடும்பத்திற்கு தபால் அனுப்பி தன்னுடைய (பாசிச மத துவேச பார்ப்பனக்) கடமையில் கண்ணாக இருந்தது நம் தாய் திருநாடாம் பாரத நாடு என்பதை நினைக்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது(!!!!???).

மாமியார் உடைத்தால் வெறும் மண் குடம்; மருமகள் உடைத்தால் அது பொன்குடமாகிப்போகும். உனக்கு வந்தால் ரத்தம் பிறருக்கு வந்தால் அது சும்மா தக்காளி சட்னியாகிப் போகும் நம் நாட்டில். 

வடக்கில் எல்லைப்படையில் ஒருவன் சண்டையில் இறந்தாலும் நாடே கொந்தளித்து ஊடகங்கள் தோறும் கூக்குரலிடுகின்றன. ஆனால் தினம் தினம் தமிழக மீனவனை கடலில் ஸ்டெம்பின்றி, பாலின்றி, பேட்டின்றி விக்கெட் வீழ்த்துவது போல் வீழ்த்துகிறான் இலங்கை கடற்படை என்னும் கடற் கொள்ளையர்கள். கேட்க நாதியில்லை. ஊடகங்களெல்லாம் உச்சி வெயிலில் மயங்கிக் கிடக்கின்றன. 

பிரதம நாற்காலிச் சண்டையில் (காங்கிரஸ்,பாஜக) நாட்டில் இன்னும் எத்தனை குண்டு வெடிப்புகள் நடக்குமோ? இராணுவ வீரர்களை இழப்போமோ? நீர் மூழ்கிக்கப்பல்கள் நெருப்பில் மூழ்குமோ? மதிய உணவில் விஷம் கலக்கப்படுமோ? எல்லை சீன, மியான்மர், பாக்கிஸ்தான், இலங்கை அட்டூழியங்களுக்கு எத்தனை உயிர், உடமைகள் பறிபோகுமோ? அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்படி மிதிபடுமோ? நாட்டில் அனைத்து பொருட்களின் விலைவாசியும் ராக்கெட் இன்றி எப்படி செவ்வாய்க்கிரகம் எட்டுமோ? சாதி, மதம் தாண்டிய பாலியல் பலாத்காரங்கள் டாஸ்மாக் கடைகள் போல் இன்னும் எப்படி பெருகுமோ? என இப்படி பட்டியல் நீளும் மாபாதகங்களை எண்ணி ஒவ்வொரு உண்மைக்குடிமகனும் நிச்சயம் அஞ்சாமல் அஞ்சி நிமிசம் கூட நகர்த்த முடியாது.

ஒரு இந்தியக்குடிமகனாக என் சொந்த கருத்து.

மு.செ.மு.நெய்னா முஹம்மது

நேற்று ! இன்று ! நாளை ! - தொடர் - 9 17

அதிரைநிருபர் பதிப்பகம் | August 29, 2013 | , , , , ,

எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் ஒரு தொடக்கம் இருந்திருக்க வேண்டும். குறிப்பாக அரசியல் நிகழ்வுகள் ஒரே ஒரு தொடக்கத்தில் மட்டுமல்ல தொடர்ந்த சில காரணங்களாலேயே நிகழ்வுறும். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து (திமுக) ‘ மூன்றெழுத்தில்  என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும்’ என்று பாடி கைதட்டல் பெற்ற எம்ஜியார் நீக்கப் பட்டதன் பின்னணியில் பல காரணங்கள் அரசியல் நோக்கர்களால் பட்டியலிடப்பட்டன. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் என்கிற முப்பெரும் பொறுப்பில் ஒருவரான  பொருளாளர் பதவியில் இருந்த எம்ஜியார் நீக்கப் பட்டது ஏன்? 

முதலாவதாக, அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதியை முதல்வராகக் கொண்டுவர எம்ஜியார் ஆற்றிய அரும்பணியை முன்னர் எழுதப்பட்ட அத்தியாயத்தில் குறிப்பிட்டேன். அவ்விதம் எம்ஜியாரால் முதல்வராக்கப் பட்ட கருணாநிதி,  தன்னிடம் எல்லா அரசு நடை முறைகளிலும் ஆலோசித்து செயல்படுவார் என்று எம்ஜியார் எதிர்பார்த்தார். ஆனால் அவ்விதம் நடைபெறவில்லை. வழக்கம்போல் கருணாநிதி ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்காவிட்டாலும் அலட்சியப் படுத்திய நிகழ்வுகள் அங்கும் இங்குமாக நடைபெறத் துவங்கின. குறிப்பாக சில அரசு அதிகாரிகளின் பதவி மற்றும்   இடமாற்றங்களில் எம்ஜியாரின் பரிந்துரைகளுக்கு பால் வார்க்கப் படவில்லை.  இதனால் உள்ளங்களில் சில உரசல்கள் தீப்  பொறிகளாக பல திசைகளிலும் தெறித்து விழுந்தன. தூபம் போடும் பலர் சுற்றிலும் புகைவதை விசிறி  வைத்து வீசிவிடத் தொடங்கினர். இதில் வழக்கம்போல பல பார்ப்பன சக்திகள் அதிகம்.    

இந்த நிலையில் , மதுரையில் கட்சியின் மாநில மாநாடு நடை பெற்றது இந்த மாநில மாநாட்டில் இரண்டு விஷயங்கள் அப்போது குறிப்பிடப்பட்டதை மறக்க முடியாது. ஒன்று,  மாநில மாநாட்டின் செயற்குழுவுக்குப் பிறகு நடைபெற்ற  விருந்து. இதில் பரிமாறப் பட்ட அசைவ ஐட்டங்கள். நடப்பன ஊர்வன பறப்பன என்று பல ஐட்டங்கள். இதைப் பற்றி பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதின. கருணாநிதி இதற்கு அடித்த கமெண்ட்: “ சில பத்திரிகைகள் செயற்குழுவில் நாங்கள் நிறைவேற்றிய தீர்மானங்களைப் பார்த்தன. பல பத்திரிகைகள் நாங்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலையைப் பார்த்தன” என்று கூறினார்.  இரண்டு,   எம்ஜியார்  பேசும்போது மாநில சுயாட்சிக்காக இராணுவத்தைக் கூட சந்திக்கத் தயார் என்று    வீராவேசமாகப் பேசியது.

இந்த மாநாட்டில் கருணாநிதி பேசும் முன்பே எம்ஜியார் பேசிவிட்டார். எம்ஜியார் பேசி முடித்ததும் கருணாநிதி பேசும் போது  கூட்டம் கலைந்து செல்ல ஆரம்பித்தது. புரட்சி நடிகரின் பேச்சை கேட்க காத்திருந்த கூட்டம் முத்தமிழ்வித்தகர் மு. கருணாநிதியின் பேச்சை கேட்கக் காத்திருக்காமல் களைய ஆரம்பித்ததும் முதல்வருக்கு அதிர்ச்சி. உடனே ஒரு ஓரங்க நாடகத்தை அரங்கேற்றினார். தலை சுற்றுகிறது என்று மயங்கி விழுந்தார். உடனே தலைவரின் பேச்சுப் பாதியிலேயே நிறுத்தப் பட்டது. உண்மைக காரணம் கூட்டம் இல்லாததே. கருணாநிதியின்  ரீங்காரம் போய் ஓங்காரம் உண்டாகி ஆங்காரம் ஏற்பட்டது.  அப்போது அவர் மனதில் உருவானதுதான் எம்ஜியாரை விலக்கிவிட வேண்டுமென்ற திட்டம். நீட்டிய இடத்தில் கையெழுத்திட நெடுஞ்செழியன் பக்கத்துணையாக இருந்தது அசட்டு தைரியத்துக்கு கட்டியம் கூறி அரசியல் வித்தகரின்  விநாச காலத்தின் விபரீத புத்திக்கு விதை போட்டது. 

அடுத்து கோவை செயற்குழுக் கூட்டம். மக்களின் வாயில் சாராயத்தை ஊற்ற வேண்டுமென்றார் திருக்குவளையார். இல்லை வேண்டாம் என்றார் நாடோடி மன்னன். ஏற்கனவே  இருந்த இறுக்கத்துக்குள்   இரும்பால் செய்த பிளவுக் கோடாலி  இடையில் புகுந்து இப்படி   அப்படி நெம்பிவிட ஆரம்பித்தது. 

அடுத்தபடியாக, கருணாநிதிக்கு சொந்தமான மேகலா பிக்சர்ஸ் தயாரித்த ‘எங்கள் தங்கம்’  படத்தில் எம்ஜியார் நடித்ததற்கான சம்பள பாக்கி ரூபாய் ஒன்றரை இலட்சத்தை தனது சார்பாக வங்க தேச யுத்த நிதிக்குக் கொடுக்கச் சொல்லி இருந்தார் எம்ஜியார். அதன்படி யுத்த நிதிக்குக் கொடுத்துவிட்டதாக கணக்குக் காட்டி கணக்கை சரி செய்தனர் கருணாநிதியின் மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தார். ஆனால் இதை முறையாக படிவங்கள் மூலம் செலுத்தத் தவறியதால் எம்ஜியாருக்கு அந்தப் பணத்துக்கான வருமானவரியைக் கட்டும்படி வருமானவரித்துறை நோட்டிஸ் விட்டு அதற்குரிய வரியையும் கட்ட வைத்து எம்ஜியாரை எரிச்சல்பட வைத்து. . 

இதைத் தொடர்ந்து தனக்கு ஒரு அமைச்சர் பதவி வேண்டுமென்று கேட்க ஆரம்பித்தார் எம்ஜியார். திரைப்படங்களில் நடித்துக் கொண்டு அமைச்சராக இருக்கக் கூடாது என்று சட்டம் பேசினார் கருணாநிதி. திரைப்  படத்தில் பலவகையிலும் ருசிகண்ட எம்ஜியார் பூனை இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. தன்னை நம்பி இருக்கும் வகைக்கொரு கதாநாயகிகளை வாழ்விழக்கச் செய்துவிட்டு அமைச்சர் பதவி என்கிற அலங்காரத்தை சூடிக் கொள்ள எம்ஜியார் விரும்பவில்லை. திரை  உலக வாழ்வை இழக்காமலேயே அமைச்சராக்க கருணாநிதி நினைத்தால் நிகழ்த்தி இருக்கலாம். ஆனால் அமைச்சரவையில் அங்கம் தந்து தன்னை அருகில் அமர்த்திக் கொள்ள கருணாநிதி விரும்பவில்லை என்று எம்ஜியார் ஆத்திரப் பட்டார்; ஆதங்கப் பட்டார். ‘நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது அங்கு சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது’  என்றும் ‘ நான் ஒரு கை பார்க்கிறேன்! நேரம் வரும் கேட்கிறேன்!  பூனையல்ல புலிதான் எனப் போகப் போகக் காட்டுகிறேன் ‘  பல்லவி பாடி இதயத்தின்  எரிச்சலைத் தீர்த்துக் கொண்டார். 

இதற்கிடையில் எம்ஜியாருக்குப் போட்டியாக எம்ஜியாரைப் போல் நடை உடை பழக்கி கருணாநிதி,  தனது மகன் மு. க. முத்துவை திரைப்  படத்தில் அறிமுகப் படுத்தி பிள்ளையோ பிள்ளை என்று திரைப் பட சந்தைகளில் கூடையில் வைத்துக்  கூவத் தொடங்கினார். ஆனால் எங்கள் வீட்டுப் பிள்ளை என்று ஏழைகள் கொண்டாடிய எம்ஜியாரின் புகழ்ச் சூரியனுக்கு முன்,  மு க முத்து என்ற பனித்துளி கன  நேரத்தில் காணாமல் போனதுதான் மிச்சம். அதிலும் பிள்ளையோ பிள்ளை படத்தை ரசிகர்களின் அரவமே இல்லாமல் அரசியல் செல்வாக்கால் மட்டுமே நூறு நாட்கள் ஓடச்செய்து அதன் நூறாவது நாள் விழாவில் எம்ஜியாரையும் கலந்து கொண்டு பாராட்டச்செய்தார். ஆனால் எம்ஜியார் பேசும்போது “ நடிப்புலகில் அவரவரும் தனக்கென்று ஒரு தனி பாணியை வைத்து நடித்தாலே வெற்றி பெறலாம். பிறரைப் போல் நடிக்க முயற்சிப்பது எடுபட்டு வெற்றி பெறாது; மக்கள் ரசிக்க மாட்டார்கள்” என்கிற பொருள்படப் பேசி குத்திக் காட்டியதால் பிளவுகள் அதிகரித்தன.   

இதுதான் தருணம் என்று கணியூர் குடும்பம் என்று திராவிட வரலாற்றில் குறிப்பிடப்படும் கே. ஏ. மதியழகன் மற்றும் அவரது சகோதரர் கிருஷ்ணசாமி ஆகியோர் எம்ஜியாரைத்  தூண்டி விட்டனர். கிருஷ்ணசாமியை ஆசிரியராகக் கொண்ட   “தென்னகம்“ என்கிற பத்திரிக்கை எம்ஜியாருடைய நிகழ்ச்சிகளுக்கும் பேச்சுக்களுக்கும் முன்னுரிமை கொடுத்து கருணாநிதியை இருட்டடிப்பு செய்யத் தொடங்கியது. அதுவரை கருணாநிதிக்கு அடித்த ஜால்ராக்களை அப்பத்திரிகை வசதியாக மறந்தது.  மயிலாப்பூர் மாங்கொல்லை என்ற இடத்தில் நடைபெற்ற மதியழகனும் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் கருணாநிதி கணக்குக் காட்ட வேண்டுமென்று எம்ஜியார் வெளிப்படையாகப் பேசினார். அவ்வளவுதான்! காத்திருந்த பத்திரிகைகள் எம்ஜியாரை கரை படாத கரங்களுக்கு சொந்தக் காரர் என்பதாகவும் கருணாநிதியை ஊழல பேர்வழி என்றும் சித்தரித்து தங்களின் பக்கங்களை நிரப்பிக் கொண்டன. தினமலர் போன்ற பத்திரிகைகளும் மக்கள் குரல் போன்ற அதுவரை அட்ரஸ் தெரியாத பத்திரிகைகளும் நன்றாகக் கல்லாக் கட்டின. 

மக்கள் மன்றத்தின் இடையே தனது திரைப்படங்களில் ஒழுக்க சீலராகவும், மது அருந்தாதவராகவும், புகைப் பிடிக்காதவராகவும், ஏழைக்கு  உதவும் குணம் படைத்தவராகவும், வயோதிகர்களை அதுவும் குறிப்பாக தாய்மார்களை வணங்கும் குணம் படைத்தவராகவும் காட்டிக் காட்டி தனக்கென ஒரு செல்வாக்கை வளர்த்த எம்ஜியார் சொல்வது வேதவாக்கு என்று மக்கள் எண்ணத் தொடங்கினர். ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊரறிந்த  உண்மை நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை’ என்றும், ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்’  என்றெல்லாம் எம்ஜியார் பாடிய திரைப் பாடல்கள் ஏதோ கதைக்காக என்று எண்ணாமல் உண்மை என்று இன்றும் எண்ணும் ஒரு கூட்டம் தன்னை பின்தொடரும் என்று எம்ஜியார் போட்டக் கணக்கு அவருக்கு கருணாநிதியை எதிர்க்கும் துணிச்சலை தந்தது. மயிலாப்பூரைத் தொடர்ந்து திருக்கழுக் குன்றத்திலும் கூட்டம் போட்டுப் பேசவைத்தது. இரண்டாம் உலகப் போருக்கு செர்பிய இளவரசன் சுட்டுக் கொல்லப் பட்டது உடனடிக்  காரணமானது போல் திமுகவின் இரண்டாம் பிளவுக்குக் காரணமாக அமைந்தது.        

1972 அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி ஆகாசவாணி! செய்திகள்!  வாசிப்பது சரோஜ்  நாராயணசாமி!   என்று செய்தி வாசிப்பவர் மிகவும் மகிழ்ச்சி ததும்பும் குரலில் செய்தி வாசித்தார். தி மு கவிலிருந்து எம்ஜியார் நீக்கிவைக்கப் பட்டிருப்பதான செய்திதான் அது. பட்டி தொட்டியெங்கும் அதிர்ச்சி. பார்ப்பன முகாம்களில் ஆனந்தம். திராவிட இயக்கமொன்று பெரும்பிளவைச் சந்தித்ததில் அதிகாரவர்க்கத்தினருக்கு ஆனந்தம் பரமானந்தம். ஆனால் இந்தச் செய்தியை முடிவெடுக்க கருணாநிதி எத்தனை இரவுகள் சிந்தித்தாரோ தெரியாது ஆனால் என் இதயத்திலிருந்து அண்ணாவின் இதயக்கனியை  அறுத்து எறிந்துவிட்டேன் என்று அறிக்கை வெளியிட்டார். 

கல்லடி சொல்லடி என்பார்களே அவற்றை முதலமைச்சர் என்கிற முறையில் கருணாநிதி சந்தித்தார். பல  இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது. வெகுண்டெழுந்த எம்ஜியாரின் ரசிகர் கூட்டம் வேலி தாண்டிய வெள்ளாடுகள் ஆயினர். பேருந்துகள் ஓடவில்லை. பள்ளிகள் பூட்டப்பட்டன. வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.  பல தரப்புக்  கதம்ப மலர்கள் ஒரு மாலையாகி எம்ஜியாரின் கழுத்தில் சூட்டப்பட்டன. செம்மொழி அறிஞர் என்று இன்று  புகழப்படும் கருணாநிதியின் மீது செம்மொழி அறியாத வசவுகள் மற்றும் வாசகங்கள் சூட்டப்பட்டன. சுவரொட்டிகள் இவற்றிற்கு சுருதி கூட்டின. புறநானூற்று தாய்மார்களும் அகநானூற்று அன்னைமார்களும் கருணாநிதிக்கு எதிராக ஒப்பாரிப் பாட்டுப் பாடி பொரிந்து தள்ளினர். 

சில அரசியல் கட்சிகள் அதிலும் குறிப்பாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் எம்ஜியாரைத் தாங்கள் இயக்கத்துள் இழுக்கவும் வலை வீசின. தலைநகர் டில்லியில் இருந்த தங்களின் அலுவலகங்களுக்கு அழைத்துப் போயின. அத்தகைய கட்சிகள் நினைத்ததெல்லாம் ஒரு புகழ் வாய்ந்த திரைப்பட நடிகர் நமது கட்சிக்குள் வந்தால் கட்சிக்கு இலாபம் என்ற வகையிலேயே கணக்குப் போட்டன. 

ஆனால் எம்ஜியார் அனைவரின் கணக்கையும் பொய்யாக்கினார். 1972 அக்டோபர் மாதம்  17 ஆம் நாள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பெயரில் தனிக் கட்சி கண்டார். முன்னர் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியின் கருப்பு சிவப்புக்கு  இடையே வெள்ளை நிறம் கொடுத்து அதில் அண்ணாவின் படத்தைப் பொறித்தார். இந்த யோசனையை எம்ஜியாருக்கு வழங்கியவர் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் எம் கல்யாண சுந்தரம் என்று கூறப்படுகிறது. 

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவான செய்தி அறிந்த மக்கள் வெள்ளம சென்னை  லாயிட்ஸ் சாலையில் இருந்த எம்ஜியாரின் அலுவலகம் மற்றும் இல்லங்களை நோக்கி ஆதரவு கோஷத்துடன் படை திரண்டனர். கே. ஏ. மதியழகனும், அவரது சகோதரர் கிருஷ்ணசாமியும் எம்ஜியாருக்கு வலது கரமாக செயல்பட்டனர். அத்துடன் நாராயணசாமி முதலியார் என்கிற சட்ட மேதையும் துணை நின்றார்.  . 

1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவராவதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டதை இங்கு குறிப்பிடவேண்டும். அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை ..சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைத்தாரே   தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்பியதில்லை.  ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை  கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு. எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.

முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது. அந்தப் பிளவுக்கு கண்ணதாசனும்  சம்பத்தும் காரணமாக இருந்தார்கள்.  அவர்களைப்  பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து அவர்களுக்குக்  கிடைக்கவில்லை.

ஆனால் இதற்கு எதிரிடையாக  எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தவர்கள்.

கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள். காலம் காலமாக கட்டியாண்ட எம்ஜியார் ரசிகர் மன்றத்தினர் இதில் முதலிடம் வகித்தார்கள். 

அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும். இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள். சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.சென்னையில் இருந்து மதுரை வரை இரயிலில் எம்ஜியார் பயணம் செய்த நிகழ்வு, இரயில நின்ற இடங்களிலெல்லாம் திரண்ட மக்கள் வெள்ளம்   இந்திய இரயில்வே வரலாற்றில் இதற்குமுன் என்றும் காணாதது.  

ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று பலர்  எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது. அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.

எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது. எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.

அதனால் எம்.ஜி.ஆருடைய விலகல்  காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று அரசியல் வித்தகர்கள் நம்பினார்கள். மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார். விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராகவும் ஆர்வமுடையவராகவும்  விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் நடத்திக்  காட்டினார்.

“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு” - என்றும் அவர் காட்டினார்.

அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத பாமர கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை. யாரோடு  உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. 

கண்ணதாசன் கூறுகிறார் “ எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.”

அ தி மு கவின் வரலாற்றுச் சிறப்புடைய திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், ஆகியவை  செப்பேட்டில் செதுக்கப்பட  வேண்டிய ஒன்றாகும். சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும். திமுகவுக்கு மூன்றாவது இடத்தைப் பெற்றுத்தந்த திண்டுக்கல்,  திண்டு எம்ஜியாருக்கு கல் கருணாநிதிக்கு என்று பறை சாற்றி, எதிர்கால அரசியல் எப்படி அமையப் போகிறது என்று கட்டியம் கூறியது. பலர் எம்ஜியாரை  நோக்கிப் படை எடுத்து வந்தனர். அனைவரையும் அரவணைத்தார். . 

இந்த நேரத்தில்  கருணாநிதி அவர்களைப் பற்றி மீண்டும் இன்னும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவதும் அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை  குறிப்பிடுவதும் பொருத்தமாகும் என்று கருதுகிறேன்.

கருணாநிதி கட்சி மற்றும் அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி. பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார். கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. க. சுப்புவை அப்படித்தான் இழுத்தார். இன்னொரு உதாரணம் ஏ.கே. சுப்பையா. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.

எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி கருணாநிதிக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம். நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று தலைமைசெயலகத்தில்  இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள். நினைவாற்றல் நிரம்பப் பெற்றவர். ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, எழுதப் படாத சட்டம்  ஒன்றை தனக்குள் வைத்திருந்ததுதான். .

இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை. ஆனால் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவுவது பேரளவுக்கல்ல தனது உதவி  முழுதும் பயனாளிக்குப்  பயன்படும்படி  செய்வார்.  அவருக்கு  அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார். சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டபடி கருணாநிதி,  பிறருக்கு உதவும் விஷயத்தில் சுத்த சைபர்.  இரண்டு பேருக்கும்  இடையிலே பேதம் இது  கருணாநிதியினுடைய சுபாவம் அது.

பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த      பலவீனத்தினால்தான், கருணாநிதியின் மிகப் பெரிய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் எம்ஜியார் என்கிற இதயக்கனி உயிரோடு இருந்தவரை மீண்டும் முதல்வர் பதவி அவருக்கு  எட்டாக்கனியாக இருந்தது. கருணாநிதிக்குப் பல கஷ்டங்கள் தோன்றின. 

இன்னும் சுவையான செய்திகளுடன் இன்ஷா அல்லாஹ் தொடரும். 

ஆக்கம்: P. முத்துப் பேட்டை  பகுருதீன் B.Sc;
உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி.

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 8 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 28, 2013 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அகிலத்தின் அருட்கொடை, உலகத் தலைவர்களுக்கெல்லாம் முன்மாதிரி, நம் அருமை நபி(ஸல்) அவர்களின் பாசமிகுந்த மகள், சொர்க்கத்து பெண்களின் தலைவி ஃபாத்திமா(ரலி) அவர்கள் வாழ்வின் முக்கிய சம்பவங்கள் மற்றும் அதிலிருந்து நாம் பெறும் படிப்பினைகள் பார்க்கலாம்.

அகிலத்தின் இறைத்தூதர், முஹம்மது(ஸல்) அவர்களின் அருமை மகளார் இவ்வுலகில் செல்வச் செழிப்போடு வாழ நூறு சதவீதம் தகுதியானவர்கள் என்பதை இதுவரை வாழ்ந்த இன்னும் வாழ்ந்து வரும் இன்றைய அதிகார வர்க்கத்தினரோடு சிறிதளவு ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரிந்துவிடும். ஆனால் சொர்கத்து பெண்களின் தலைவி, அல்லாஹ்வின் இறைத்தூதர் அவர்களின் அன்பு மகள் இப்பூவுலகில் பிறந்தபோது தன் தாயோடு செல்வ சீமாட்டி அன்னை ஹதீஜா அம்மையார் எப்போது தூய இஸ்லாத்தை ஏற்றார்களோ அன்று முதல் மரணிக்கும் வரை ஒரு சராசரி பெண்ணாக வாழ்ந்து கஷ்டங்களையும் துன்பங்களையும் தான் வாழ்ந்த சொற்பமான காலத்திலேயே சுமந்துள்ளார்கள் என்பதை ஹதீஸ் தொகுப்புகளில் வாசிக்கும் போது உண்மையில் கண்கள் கலங்குகிறது.

நபி(ஸல்) அவர்களின் அருமை மனைவி அன்னை ஹதீஜா(ரலி) அவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள், வரிசைப்படி சொல்வதாக இருந்தால் 1.ஜைனப்(ரலி), 2.ருகைய்யா(ரலி) 3.ஃபாத்திமா(ரலி) 4.உம்மு குல்தும்(ரலி). ஃபாத்திமா(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்கு ஒரு சில வருடங்களுக்கு முன்புதான் பிறந்துள்ளார்கள். கிட்டத்தட்ட 20 ஹதீஸ்கள் வரை ஃபாத்திமா(ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்பு 3 அல்லது 6 மாதம் கழித்து ஃபாத்திமா(ரலி) அவர்கள் மரணித்ததால் அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்ட ஹதீஸ்கள் மிகவும் குறைவு.

நபி(ஸல்) அவர்களின் மகள் என்பதால் செல்வ செழிப்புள்ள ஒருசில நபித்தோழர்கள் ஃபாத்திமா(ரலி) அவர்களை மணமுடிக்க நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய வளர்ப்புடன் ஒன்றாக வாழ்ந்த சொந்தம், நபி(ஸல்) அவர்களிடம் மார்க்க கல்வி கற்ற மாணவர், நபி(ஸல்) அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் ஒரு துளிகூட மாறு செய்யாத அருமைத் தோழர் அலீய்(ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். அலீய்(ரலி) அவர்கள் பணக்காரரோ, அன்றைய மக்கா பிரதேசத்தில் வாழ்ந்த திடகாத்திர தோற்றமுடைய ஆண் அழகரோ அல்ல, ஒரு சாதாரண கருப்பு நிறத் தோற்றமுடைய ஆண் மகன்.

ஃபாத்திமா(ரலி) அவர்கள் தன் தந்தை நபி(ஸல்) அவர்கள் தனக்கு பொருத்தமான தகுதியானவரைத் தான் மனமுடித்துத் தந்துள்ளார்கள் என்று நூறு சதவீதம் நம்பிக்கை நிச்சயம் ஃபாத்திமா(ரலி) அவர்கள் எண்ணத்தில் உறுதியாக இருந்ததால் தான், மரணிக்கும் வரை பாசம் நேசம் காட்டி தன் கணவர் அலீய்(ரலி) அவர்களோடு சந்தோசமாக வாழ்ந்துள்ளார்கள.

அலீய்(ரலி) மற்றும் ஃபாத்திமா(ரலி) அவர்கள் இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் ஐந்து. 1.ஹஸன், 2. ஹுசைன், 3. முஹ்சீன், 4, ஜைனப், 5. உம்மு குல்தும். தன் உடன் பிறந்த சகோதரிகள் இருவரான ஜைனப்(ரலி) உம்மு குல்தும்(ரலி) மரணித்த பின்பு தன் பிள்ளைகளுக்கு அவ்விருவரின் பெயரை வைத்துள்ளார்கள் என்பதை நாம் அவதானிக்கும் போது, ஃபாத்திமா(ரலி) தன் சகோதரிகளின் மேல் எந்த அளவுக்கு பாசம் வைத்திருந்தார்கள் என்பதையும், நபி(ஸல்) அவர்கள் மறைந்த தம் இரு மகள்கள் (ஜைனப்(ரலி) உம்மு குல்தும்(ரலி)) மேல் எவ்வளவு பாசம் வைத்துள்ளார்கள் என்பதையும் நம்மால் அறிய முடிகிறது.

நபி(ஸல்) அவர்கள் இறுதி காலகட்டத்தில் அவர்களுடைய மகள்களில் ஃபாத்திமா(ரலி) அவர்கள் மட்டும்தான் உயிரோடு இருந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் உயிருக்கு நிகரான பாசம் நிறைந்தவராக ஃபாத்திமா(ரலி) அவர்கள் இருந்துள்ளார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்களைப் பற்றி “என்னுடைய ஓர் சதை தூண்டு” என்று நபி(ஸல்) சிலாகித்துக் கூறியுள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் மகளார் ஃபாத்திமா(ரலி) அவர்களுக்கு என்று தான் ஒரு இறைத்தூதர், இஸ்லாமிய ஆட்சித் தலைவர் என்பதால் எந்த ஒரு தனிப்பட்ட சலுகைகள் எதுவும் கொடுக்கவில்லை. கடந்த வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் எந்த ஒரு ஆட்சித் தலைவரும் இப்படி தனக்கு பிறந்த மகளை ஒரு சராசரி மக்களோடு மக்களாக வாழ வைத்ததாக காண இயலாது.

ஃபாத்திமா(ரலி) அவர்கள் என்னதான் இறைத்தூதரின் மகளாக இருந்தாலும், வீட்டு வேலைகளை தானே முன்னின்று செய்யும் சராசரி பெண்ணாக வாழ்ந்தார்கள் என்பதற்கு பின் வரும் வரலாற்று சம்பவமே சாட்சி. சொர்கத்து வாசியான பெண் வீட்டின் உணவுக்காக மாவு அரைத்து அரைத்து அவர்களின் கைகளில் அச்சு ஏற்பட்டு ஒரு கடினமான தோற்றமாக மாறிவிட்டது. இதனை கண்ட அலீய்(ரலி) அவர்கள், உங்கள் தந்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் போர் கைதிகளை அடிமைகளாக மக்களுக்கு கொடுக்கிறார்களே, ஏன் இப்படி உடலை வருத்தி கஷ்டப்படுகிறீர்கள், உங்கள் தந்தை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு அடிமையை பெற்று வீட்டு வேலை செய்ய வைக்கலாமே, சென்று கேட்டுப் பாருங்களேன் என்று ஃபாத்திமா(ரலி) அவர்களிடம் கூற, ஃபாத்திமா(ரலி) அவர்கள் அன்னை ஆயிசா(ரலி) அவர்கள் இல்லத்திற்கு சென்றார்கள். ஆனால் அங்கு நபி(ஸல்) அவர்கள் இல்லை. தான் வந்துவிட்டு போன செய்தியை தன் தந்தை நபி(ஸல்) அவர்களிடம் தெரிவிக்குமாறு அன்னை ஆயிசா(ரலி) அவர்களிடம் கூறிவிட்டு வந்துவிட்டார்கள்.

பாசம் நிறைந்த மகள் தன் வீட்டிற்கு ஏன் வந்துள்ளார் என்பதை அறிந்த அருமை தந்தையான அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கடும் குளிரான அந்த இரவு நேரத்தில் ஃபாத்திமா(ரலி) அவர்கள் இல்லத்திற்கு வந்து நலம் விசாரித்து விட்டு, ஃபாத்திமா(ரலி) அவர்களின் தேவையை அறிந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் பின் வருமாறு கூறினார்கள், “நீங்கள் என்னிடம் ஒரு வேலைக்காக ஒரு அடிமை வேண்டும் என்று கேட்டீர்களே, உங்கள் இருவருக்கும் அதைவிட சிறந்தது ஒன்று சொல்லித் தரவா?” என்று கூறிவிட்டு சொன்னார்கள் மருத்துவ குணம் நிறைந்த அண்ணலார் அவர்கள் “நீங்கள் தூங்குவதற்கு முன்னால் சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை அல்லாஹு அக்பர் 34 தடை ஓதிவிட்டு உறங்குங்கள், நீங்கள் ஒரு வேலைக்காரனை வீட்டில் வைத்திருப்பதைவிட இது சிறந்தது” என்று கூறிவிட்டு அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்கள்.

கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், ஃபாத்திமா(ரலி) அவர்கள் கேட்டது என்ன? நபி(ஸல்) அவர்கள் கொடுத்தது என்ன?. இருப்பினும் தன் தந்தை இறைத்தூதர் எது செய்தாலும் அதில் நன்மை உள்ளது என்பதை உளப்பூர்வமாக உணர்ந்த ஃபாத்திமா(ரலி) அவர்கள் வாழ்நாளில் தன் தந்தை வழிகாட்டிய அந்த சிறந்த துஆவை ஓதி  வந்தார்கள், மேலும் அலீய்(ரலி) அவர்களும் ஒவ்வொரு நாளும் ஜமல், சிப்பீன் போன்ற கஷ்டமான யுத்த நாட்களிலும் ஒவ்வொரு இரவிலும் தூங்கும் போது ஓதிவந்துள்ளார்கள் என்பதை ஹதீஸ்களில் வாசிக்கும் போது உள்ளம் சிலிர்க்கிறது.

ஒரு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளர் அவர்களின் மகளுடைய வாழ்வு இவ்வளவு எளிமையாக இருந்துள்ளதே, ஆனால் நம்முடைய வாழ்வு ஃபத்திமா(ரலி) அவர்களின் வாழ்வு போல் எளிமையாக உள்ளதா? என்பதை நாம் சீர்த்தூக்கி பார்க்க வேண்டும்.

அல்லாஹ்வின் இறைத்தூதராகிய நபி(ஸல்) அவர்கள் தன்னிடம் மார்க்க கல்வி பயின்ற, தன்னுடைய சொந்தம் அவர் ஏழையாக இருந்தாலும், உழைத்து சம்பாதிக்கும் அருமைச் சொந்தம் அலீய்(ரலி) அவர்கள்தான் தன் மகள் ஃபாத்திமாவுக்கு பொருத்தம் என்று ஒரு பொறுப்பான தந்தையாக பெருந்தன்மையுடன் திருமணம் செய்து வைத்தார்களே, அது போல் என்னதான் பணம் செல்வங்கள் நம்மை சுற்றி இருந்தாலும், நம் மகளுக்கு வரவேண்டிய மாப்பிள்ளை வச்தியானவனாக, கட்டழகு ஆண் மகனாக கல்வியறிவு மிகுந்தவனாக இருப்பதை விட உழைத்து சம்பாதிக்கும் மார்க்க பற்றுள்ள எளிமைக்கு சொந்தக்காரராக, சுயமரியாதையுடன் இருந்தாலே போதும் என்று பொருந்திக் கொள்ளும் தந்தையரை இன்று காணமுடியுமா?

ஒரு மார்க்க பற்றுள்ள உழைப்பாளியை தனக்கு பொருத்தமானவராகத் தான் தேர்ந்தெடுத்திருப்பார் என்று பரிபூரண நம்பிக்கைக் கொண்ட சொர்கத்துவாசியான கண்மணி ஃபாத்திமா(ரலி) அவர்கள் மரணிக்கும் வரை மிகவும் சந்தோசமாகவும், ஒழுக்க நெறியோடும் அலீய்(ரலி) அவர்களுடன் வாழ்ந்தார்களே, அதுபோல் பெற்றோரால் மணமுடித்து தந்த கணவனைப் பொருந்திக் கொண்டு, ஒழுக்க நெறியோடு சந்தோசமாக வாழ்க்கை நடத்தும் பெண்கள் எத்தனை பேர் உள்ளார்கள்? இதில் நிறையபேர் விதிவிலக்காக இருக்கிறார்கள் என்பதை நாம் மறுக்கவும் முடியாது அவர்களையும் நாம் கண்கூடாக கண்டும் வருகிறோம்.

சுவர்க்கத்து பெண்களின் தலைவி ஈமானில் உயர்ந்து நின்ற ஃபாத்திமா(ரலி) அவர்கள் வீட்டு வேலைக்கு என்று தனியாக வேலையாட்கள்  இல்லாமல் வாழ்ந்துள்ளார்கள் என்றால் அநேக முஸ்லீம் வீடுகளில், தம் சொந்த துணி துவைக்க, சாப்பிட்ட பாத்திரம் கழுவ, வசிக்கும் வீடு சுத்தம் செய்து கழுவ, தன்னை பெற்ற தாய் தந்தையரை கவனித்துக் கொள்ள வேலைக்காரர்களை வைத்திருக்கிறோமே, இதுதான் முன்மாதிரி சமுதாயத்திற்கு அடையாளமா? சுவர்கத்துவாசியான ஃபாத்திமா(ரலி) அவர்களின் வாழ்விலிருந்து ஏன் இன்னும் படிப்பினை பெறாமல் உள்ளோம்?

ஒரு தந்தை தன்னுடைய அதிகாரம், சக்திக்கு உட்பட்டு தன் பிள்ளைகளுக்கு சேரவேண்டியவைகளை சேர்த்து வைத்திருந்தும், அது தனக்கு போதவில்லை என்று திருமணத்திற்கு முன்பும் பின்பும் தன் தந்தை தாயிடம் இன்னும் சட்டம் பேசி பிடுங்கித் தீர்க்கும் பிள்ளைகளுக்கு நபி(ஸல்) அவர்களின் செல்வப் புதல்வி ஃபாத்திமா(ரலி) அவர்களின் வாழ்வில் கிடைக்கும் நம் மறுமை வெற்றிக்கு ஒரு நல்ல வழிகாட்டி உள்ளது என்பதை உணர்ந்துகொள்ளும் நிலயில் நாம் எத்தனை பேர் உள்ளோம்?

நபி(ஸல்) அவர்களின் அருமை மகளார் ஃபாத்திமா(ரலி) அவர்களின் வாழ்விலிருந்து படிப்பினை பெறும் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக !

சுவர்கத்துவாசியான ஃபாத்திமா(ரலி) அவர்கள் பற்றி இன்னும் அறியப்படாத செய்திகள் அடுத்த பதிவில் தொடரும். இன்ஷா அல்லாஹ்.

M தாஜுதீன்

Ascertained Return (Dhua of a student – III) - உன்னையே மீண்டடைவேன் ! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | August 27, 2013 | , , , , ,

The only One
I would try so hard
to be close with,
is my Allah alone ...

I have learned ...
I think I have experienced loneliness..
But, this is not loneliness...  

For some reasons
I have stopped caring
about the people around me....
I loved this isolation
from people around me....

I understood
the sweet isolation
that
the prophet PBUH experienced
in his state of deep thinking
staying in cave of mount Hira....

Ya Allah
You just made me realise
"look Shahnaz ...l
look around you
the  people you thought of depending on.
its just you and your Creator in the end "  .....
Ya Allah
You just made me laugh of the realisation ..
.
the day I return to You
will be my utmost aim in my life...
For now
For You  ...
I'll just continue on
with my responsibilities
You have given me in this world .

Love you Allah.

-Shahnaz Sabeer Ahmed


உன்னையே மீண்டடைவேன்! (ஒரு மாணவியின் துஆ – III)

ஒரே ஒருத்தனும் தனித்தவனுமாம்
என்னிறைவா
உன்னிறைவான
நெருக்கம் மட்டும் நாடியே
என்
தீவிர முயற்சிகள் நீளும்!

நான் கற்றுக்கொண்டேன்…
தனிமையென்கிற தன்னிறைவில்
நான் அனுபவித்ததொன்றும்
தனிமையல்ல

சில காரணங்களுக்காக
என்னைச் சூழ்ந்திருப்போரின்
அபிப்ராயங்கள்
என் கவனத்தை ஈர்ப்பதை
தடுத்துக் கொண்டேன் – அவ்வளவே!
இந்த
உலகத்திருப்போரின் ஊடுருவலற்ற
ஒற்றையிருப்பு
எனக்குப் பிடித்திருந்திருக்கிறதுபோலும்!

ஆனால், அதிலிருந்து
அந்த
இனிய தனித்திருப்பின் நிலையை
எனதருமை நாயகம் (ஸல்)
ஹீரா குகையில்
உலகை மாற்றிய
உயரிய சிந்தனைகளை
எப்படி அனுபவித்திருப்பார்கள்
என உணர முடிகிறது

யா அல்லாஹ்!
என்னைச் சூழ்ந்துள்ள
எவரும்
என்னுடன்
நிலைபெறமாட்டார்; துணைவரமாட்டார்
என்னைப் படைத்த உன்னைத் தவிர
என்னும்
உயரிய தத்துவத்தை
எனக்கு உணர்த்தியவனே…

உன்
உடனிருப்பே நிரந்தரம்
என்ற எண்ணம்
என்னுள் சிலிர்க்கிறது; சிரிக்கிறேன்.

உன்னை மீண்டடையும்
அந்நாளே
என்
வாழ்க்கையின் உச்சகட்டக் குறிக்கோள்

அதுவரை
உனக்காகவே
நீ
இவ்வுலகில்
எனக்கிட்டப் பொறுப்புகளைச்
செயல்படுத்தியே தொடரும் என் வாழ்க்கை

அல்லாஹ் உன்மேலான
அபரித அன்போடு…

ஷஹ்னாஸ் சபீர் அஹ்மது
மருத்துவ மாணவி (இரண்டாம் ஆண்டு)
தமிழில்   : சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

குணக்குன்று 15

அதிரைநிருபர் பதிப்பகம் | August 26, 2013 | , , , , , , ,

உதய நிலவின் குளிராக உஷ்ண பூமியியின் ஒரு சமுதாயத்திலிருந்து உத்தம நபியை உலகிற்கு அளித்தான் ஏக இறைவன் அல்லாஹ். நீதி மறையின் விளக்க உரையாக நற்குணத்தின் குன்றாக, இறைமறையோடு அருட்கொடையை இப்புவிக்கு பரிசாக தந்தான் வல்ல அல்லாஹ்.

தம்  தூய வாழ்வினால் மனித வாழ்க்கையின்அளவுகோலை மாற்றி , இருளை விட்டும் மக்களை அகற்றி, தங்களின் ஒழுக்கம், வழிகாட்டுதலில், சொல்லில், செயலில் ஒரே நேர்கோட்டுப்பாதையில் எள்ளளவும் பிசிறில்லாமல், தீமையெனும் களை எடுத்து, நன்மை என்னும் நாற்றங்காலை நட்டு, அதன் விளைச்சலை தன் வாழ்நாளிலேயே அறுவடை செய்து, அதன் பலனை அனைவரையும் அனுபவிக்கச் செய்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

நற்குணத்திலும், நற்செயல்களிலும், இப்புவியின் இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வரும் வரை பின்பற்றப்பட வேண்டிய சமுதாயம் என்று ஒரு மிகப்பெரும் சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கிச் சென்ற , மனிதகுல முன்மாதிரி, இறுதி நபி (ஸல்) அவர்களின் குணம், அவர்களின் நடைமுறை வாழ்க்கை , பழகிய விதம், மற்றும் அவர்களின் உயர் பண்புகள் நாள்தோறும் எவ்வாறு இருந்தது என்பதை சுருக்கமாக எடுத்துரைக்கவே இந்தப்பதிவு.

உயர் பண்பு 

வார்த்தைக்குள் அடங்காத சிறந்த பண்புகளையும் குணங்களையும் கொண்டவர்களாக, அவர்களோடு சமகாலத்தில் பழகியவர்களே, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதையைப் போல், இதற்கு முன் யாருக்கும், யாரும் கொடுத்ததுவும் இல்லை, கொடுக்கப்பட்டதாக கேள்விப்பட்டதும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு  அருமை நபி (ஸல்) தம் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டார்கள். 

ஒருவரைப்பற்றி விரும்பாத செய்தி கிடைத்தால் அப்போது நபி (ஸல்) அவர்கள் "சிலர் ஏன் இப்படி செய்கிறார்கள்" என்று பொதுவாகப் பேசுவார்கள்.  சம்பத்தப்பட்ட நபரின்  பெயரை குறிப்பிட்டு சங்கடப்படுத்த  மாட்டார்கள்.

மக்களில் உண்மையாளராக, ஒழுக்க சீலராக, திகழ்ந்தார்கள். இந்த உண்மையை நபித்தோழர்கள் மட்டுமல்ல எதிரிகள் கூட தெரிந்து வைத்திருந்தார்கள். 

மலர்ந்த முகம், இளகிய மனம், நளினம் பெற்று இருந்தார்கள். கடுகடுப்பு, முரட்டு குணம், கூச்சல், அருவருப்பாக பேசுதல், அதட்டுதல் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு இருந்தார்கள். 

நபித்துவம் வருவதற்கு முன்பே,  "நம்பிக்கைக்கு உரியவர் " என்று அழைக்கப்பட்ட ஏந்தல் நபி, அறியாமைக் காலத்திலும் அறிவிலிகளுக்குக்கும் நீதமான தீர்வு சொன்ன நீதிமான்.

தனக்கு முன்பு யாரும் எழுந்து நிற்பதை தடை செய்தார்கள், பணிவு உடையவர்களாகவும், பெருமை கொள்வதை விட்டும் விலகியும் இருந்தார்கள். 

தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்பவர்களாக இருந்தார்கள். காலணியை தாங்களே தைத்து கொண்டார்கள், ஆட்டிலிருந்து பால் கறந்து பயன்படுத்தி கொண்டார்கள், ஆடைகளை துவைத்து பயன்படுத்தி கொண்டார்கள், எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களை தனித்துக்காட்ட விரும்பியதே இல்லை. 

ஒருமுறை ஒரு பயணத்தின் போது ஆடு ஒன்றை அறுத்து சமைக்கும்படி கூறினார்கள். ஒருவர் நான் ஆட்டை அறுக்கின்றேன் என்றார், ஒருவர் நான் உரிக்கின்றேன் என்றார், மற்றொருவர் நான் சமைக்கின்றேன் என்றார்,  அப்படியென்றால் நான் விறகு பொறுக்கிக் கொண்டு வருகின்றேன் என்று அண்ணல் நபி ( ஸல் ) அவர்கள் சொன்னார்கள்.

அதற்கு சஹாபாக்கள் யா ரசூலுல்லாஹ் தங்களுக்கு ஏன் சிரமம் நாங்களே பார்த்துக்கொள்கின்றோம் என்றார்கள். 

அதற்கு கண்மணி நாயகம் (ஸல்) சொன்னார்கள் : " நீங்கள் செய்வீர்கள் என்று எனக்கு தெரியும் , ஆனால் என்னை என் தோழர்களிடமிருந்து  தனித்து காட்ட விரும்பவில்லை. அப்படி தனித்து காட்டுவதை  அல்லாஹ் வெறுக்கின்றான் " என்றார்கள். 

அண்ணல் (நபி ஸல்) தெள்ளதெளிவாக பேசுபவர்களாக  இருந்தார்கள், அனைவராலும் அறியப்பட்ட ஒரு நல்லியல்பு பெற்றவர்களாக இருந்தார்கள். தெளிவாக, சரியாக, சரளமாக பேசக் கூடியவர்களாக இருந்தார்கள். நூதன நுட்பங்களுடன்  சொல்லாக்கம் முழுமை பெற்றவர்களாக இருந்தார்கள். ஒவ்வொரு இனத்தாரிடமும் அவரவவர் மொழி நடையில் பேசும் திறமை பெற்றிருந்தார்கள். நகரவாசிகள், கிராமவாசிகளுக்கு தகுந்தார்ப்போல் அவரவர் தொனியில் பேசக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.

சிரமத்தை தாங்குவது, சக்தி இருந்தும் மன்னிப்பது, சகித்துக்கொள்வது பொறுத்துப் போவது அவர்களின் உயர் பண்புகளில் உள்ளவைகளாகும். சாதாரணமாக இடையூறுகள் அதிகமாக அதிகமாக பொறுமை குறைந்து கொண்டே போகும். ஆனால் இந்த நீதிமானுக்கோ பொறுமை கூடிக் கொண்டே போனது. 

ஒரு விஷயத்தை தேர்ந்தெடுக்க இரண்டு வாய்ப்புகள் என்று வரும்போது அதில் இலகுவானதையே தேர்ந்தெடுப்பார்கள். அது பாவகரமானது என்று தெரிய வரும்போது வெகு தூரம் விலகி விடுவார்கள். தங்களுக்காக தங்கள் சுய நலத்திற்காக யாரையும் பழி வாங்கியதில்லை. ஆனால் அல்லாஹ்வின் கண்ணியம் பாழாக்கப்பட்டால் அதற்குற்குரிய தண்டனையை வழங்கத் தயங்கியதில்லை.

மெதுவாக கோபப்படுவார்கள். விரைவாக மகிழ்ச்சி அடைவார்கள். வறுமைக்கு  அஞ்சாமல் தேவை உடையோர்க்கு உதவி செய்தார்கள். விரைந்து வீசும் காற்றின் வேகத்தைவிட செல்வத்தை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : அண்ணல் நபி (ஸல்) யாரும் ஒன்றை கேட்டு அவர்கள் இல்லை என்று சொன்னதே இல்லை.  

இப்படி  எந்த குணாதிசயங்களிலும்  ஒரு கடுகளவு குறை சொல்லும் சந்தர்ப்பத்திற்கு  இடமே இல்லாமல் இவ்வுலகை விட்டும் விடை பெற்றுச் சென்று இருக்கின்றார்கள் என்றால் என்னே ஒரு அற்புதமான வாழ்வு வாழ்ந்து சென்று இருக்கின்றார்கள்.

அமைதியின் கம்பீரம்!

நபி (ஸல்) மிகக்குட்டையோ, நெட்டையோ அல்லர், கூட்டத்தில் பார்ப்பதற்கு நடுத்தரமானவர்கள், அடத்தியான சுருட்டை  முடி கொண்டவரும் அல்லர், கோரை முடி கொண்டவரும் அல்லர், சிவந்த வெண்மையானவர்கள், கருவிழி உடையவர்கள். புஜமும் மூட்டு எலும்புகளும் தடிப்பானவர்கள். 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா செல்லும் வழியில் , அவர்களைக் கண்ட குஜைமா கிளையைச் சேர்ந்த உம்மு மஅபத் விவரிக்கும்போது, 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வயிறோ, தலையோ பெருத்தவர் அல்லர், கவர்ச்சிமிகு பேரழகும், கருத்த புருவமும் உடையவர்கள், நீண்ட இமை முடியும், கம்பீரக்குரல் வளமும் உடையவர்கள். அவரது அமைதி கம்பீரத்தைத் தரும், ஒளி இலங்கும் பேச்சுடையவர் என்றும் இன்ன பிற பண்புகளையும் விளக்குகின்றார்கள்.  

ஒரு விஷயத்திற்காக திரும்பிப் பார்த்தால் முழுவதுமாக திரும்பிப் பார்ப்பாகள். நடந்தால் பள்ளத்தை நோக்கி நடப்பது போன்று பிடிப்புடன் நடப்பார்கள். இரண்டு புஜங்களிலும் நபித்துவ முத்திரை இருக்கும். மக்களுக்கு அதிகமாக வழங்கும்  தன்மை   உள்ளவராகவும், துணிவு உள்ளம் கொண்டவராகவும், மக்களில் அதிகம் உண்மை பேசுபவராகவும்,  பொறுப்புகளை நிறைவேற்றுபவராகவும் இருந்தார்கள்

அழகின் அசல் !

அண்ணல் நபி (ஸல்) அவர்களோடு தம் வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்த, கணிசமான நபிமொழி தொகுப்புகளை அறிவிக்கக்கூடிய அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: 

"அண்ணல் (நபி) அவர்களைப்போன்று அழகானதை நான் பார்த்ததே இல்லை. அவர்கள் வதனத்திலே சூரியன் இலங்கியது. நாங்கள் சிரமப்பட்டு நடக்கும் வேகத்தை அவர்கள் சர்வ சாதரணமாக நடப்பார்கள். அல்லாஹ் பூமியை சுருட்டி நாயகத்தின் கையில் கொடுத்து விட்டானோ என்றும் நாங்கள் நினைக்கும் அளவுக்கு அவர்கள் நடையில்   வேகம் இருக்கும். 

"ஜாபிர் இப்னு சமூரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

"ஒருமுறை நான் ஒரு பௌர்ணமி நிலவில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தேன் நிலவையும் அவர்களையும் மாறி மாறி பார்த்தேன். எனக்கு நிலவைவிட அண்ணல் நபி (ஸல்) அவர்களே அழகாகத் தெரிந்தார்கள்" (திர்மதி, மிஷ்காத் )

இப்படி பௌர்ணமி நிலவு தோற்கும் அளவுக்கு அண்ணல் நபியை இவ்வுலகில் உலவவிட்டான் பேரறிவாளன் அல்லாஹ். 

ருபைய்யி  பின்த் முஅவ்வித் ( ரலி ) கூறுகின்றார்கள் :

ரசூல் (ஸல்) அவர்களைப் பார்த்தால், உதிக்கும் அதிகாலை சூரியனைப்போல் இலங்குவார்கள். (முஷ்னத்தாரமி, மிஷ்காத்) 

அகன்ற புஜமும், சோனை வரை முடிவைத்தும் இருந்தார்கள். வேதக்காரர்களை ஒத்திருக்கவேனும் என்பதற்காக வகிடு எடுக்காமல் நேராக சீவிக்கொண்டிருந்தார்கள். (சஹீஹுல் புகாரி, முஸ்லிம் )

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கையைப் போன்றதொரு மெல்லிய பட்டாடையை நான் தொட்டதில்லை. அவர்களிடமிருந்து வரும் நறுமணத்தைப்போன்று  வேறு எந்த நறுமணத்தையும் நான் நுகர்ந்ததில்லை. 

வேறு அறிவிப்பில் கஸ்த்தூரியிலோ அல்லது  அம்பரிலோ, வேறு எங்குமே நான் இது போன்றதொரு மணத்தை நுகர்ந்ததில்லை -   (சஹீஹ் புஹாரி, முஸ்லிம் )

ஒரு வழியில் ரசூலுல்லாஹ் (ஸல்) சென்று சிறிது நேரம் கழித்து அதே வழியில் வேறொருவர் சென்றால், அந்த வழியில் மணம் பரப்பிக் கொண்டிருக்கும் அந்த சூழ்நிலையை  வைத்து, அவர் அந்த வழியில் சிறிது நேரத்திற்கு  முன்பு அண்ணல் நபி (ஸல்) அந்தப் பாதை வழியாக சென்றிருக்கின்றார்கள் என்று தெரிந்து கொள்ளும் அளவுக்கு அவர்கள் மேனி கஸ்தூரி மணம் கமழும் ஒரு சுகந்தமாகவே  வாழ்ந்திருக்கின்றார்கள்.  

பனிக்கட்டியைவிட குளிர்ச்சியாகவும், நறுமனத்திலிருந்து கையை எடுத்தது போன்று  நறுமணம் பொருந்தியதாகவும், அவர்களின் கைகள் இருந்தன என்றும் இன்ன பிற அறிவிப்புகளிலும் காணமுடிகின்றது

அண்ணல் நபி (ஸல் ) அவர்கள் மூன்று குணங்களை விட்டும் தங்களை பாது காத்துக்கொண்டார்கள் :

1. முகஸ்துதி , 2. அதிகம் பேசுவது, 3.  தேவையற்றவற்றில் ஈடுபடுவது.

மூன்று  காரியங்களிலிருந்து தங்களை தவிர்த்துக் கொண்டார்கள் :

1. பிறரை பழிக்க மாட்டார்கள்.  2.  பிறரை குறைகூற மாட்டார்கள்.  3.  பிறரின் குறையை தேட மாட்டார்கள். 

ரசூல் (ஸல்) அவர்கள் பேச ஆரம்பித்தால் , அதைக்கேட்பவர்கள், தலையில் பறவை அமர்ந்திருப்பது போன்று , ஆடாமல் அசையாமல் கேட்பர்.

நபி (ஸல்) சபையில் கண்ணியத்திற்குரியவர்களாக தோற்றமளிப்பார்கள். தங்கள் மேனியின் மறைக்கப்பட வேண்டியதை மறைத்தும் வேறு எதையும் வெளிக்காட்டமாட்டார்கள். அதிகம் மௌனம் காப்பார்கள். அவர்கள் புன்முருவலாகவே சிரிப்பார்கள். அவர்களின் பேச்சு தெளிவாக இருக்கும்.  பேச்சு தேவைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்காது. 

நபியவர்களை கண்ணியப்படுத்த வேன்டும் என்பதற்காக, சப்தமிட்டு சிரிக்காமல் எல்லா தோழர்களும் புன்முருவளிலேயே தங்கள் சிரிப்பை வெளிப்படுத்துவர். 

மறைவான நாணம்

சாதாரண மனிதர்களைப்போல் அல்லாமல் திரை மறைவிலுள்ள கன்னிப்பென்களைவிட நாணம் உள்ளவர்களாகவும், மிகுந்த கூச்ச சுபாவம் உள்ளவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்..

எவருடைய முகத்தையும் ஆழமாக உற்று நோக்கியதில்லை. பெரும்பாலும் பார்வை கீழ்நோக்கியே இருக்கும். பார்வை கடைக் கண்ணாலேயே இருக்கும்.வெட்கத்தினாலும் உயர் பண்பினாலும்  யாரையும் வெறுப்பூட்டும்படி பேசியதே இல்லை.  

சஹாபாக்களின் நேசம்

எங்கள் கழுத்துக்கு கத்தி வந்தாலும் பரவாயில்லை  ஆனால் எங்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் நகத்தில் ஒரு கீறல் விழுந்தால் கூட எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று சொல்லும் அளவுக்கு , அண்ணல் நபியின் மீது உயிரையே வைத்திருந்தார்கள் சஹாபாப் பெருமக்கள். அவ்வளவு ஆழமாக நேசித்தார்கள். அவர்களின் சிறந்த பண்பும் , குண நலன்களுமே இதற்குக் காரணம். 

இப்படி, இஸ்லாமிய அரசியலுக்கும், ஆன்மீகத்திற்கும் ஒரு சேர தலைவராக இருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களோடு வேற்றுமையோ,  உயர்வு, தாழ்வோ பாராட்டாமல், நெருக்கத்தோடு வாழ்ந்து, உயர் பண்பின் உச்சத்தில் நின்று வழி காட்டிச் சென்றிருக்கின்றார்கள் என்றால் இதைவிட உயர் பண்பை வேறெங்கு கற்றிட முடியும் ?"

"என்னைப் பற்றி எந்த ஒரு செய்தி கிடைத்தாலும் அதை எடுத்து சொல்லிவிடுங்கள்" என்று பகிரங்கமாக பிரகடனப்படுத்திய ஒரே தலைவர் உலகிலேயே அண்ணல் நபி (ஸல்) ஒருவராகத்தான் இருக்கும். 

ஏனெனில் இந்த சொற்றொடர் உண்மையிலேயே ஒரு ஒழுக்க நியதிக்கும், உயர்பண்பின் உச்சத்திற்கும், நற்குணங்கள் என்று என்னென்னவெல்லாம் உலக  வழக்கத்தில் வருகின்றதோ அனைத்தையும் உள்ளடக்கிய, அப்பழுக்கற்ற , தூய்மையான வாழ்வுக்கு சொந்தக்காரர் தான் இந்த வார்த்தையை பிரகடனப் படுத்த முடியும். 

அதனால்தான் , அல்லாஹ்வால் வழி நடத்தப்பட்டதால், அங்கொன்றும் இங்கொன்றுமாக பெருமானார்  வாழ்க்கையில் மனிதன் என்ற முறையில் சில கோபதாபங்கள், மற்றும் சறுக்கல்கள் வரும் சமயமெல்லாம், இடறி விழுந்து விடாமல் அல்லாஹ் நம்மை காப்பாற்றி இருக்கின்றான் என்ற முழு நம்பிக்கையில்,  தூய்மையான அப்பழுக்கற்ற வாழ்வுக்கு அங்கீகாரமாக அல்லாஹ் பெருமானார் (ஸல்) அவர்களை  தேர்ந்தெடுத்ததால் தான் இதை சொல்ல முடிந்து இருக்கின்றது.

சுருங்கச்சொன்னால், நபி (ஸல்) நற்குணத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்தார்கள். ரப்புல் ஆலமீன் எஜ்மானனாக இவர்கள் அல்லாஹ்வின் தூதராக அழகிய ஒழுக்க முறைகளை கற்று தேர்ந்திருந்தார்கள். 

நிச்சயமாக நீங்கள் நற்க்குணமுடையவராகவே இருக்கின்றீர்கள் - அல்-குரான் -68:4 என்று அல்லாஹ் குர்ஆனில் புகழ்கிறான். 

தாக்கம் ! 

இந்தப்பண்புகள்தான் நபியவர்களை அனைவராலும் நேசிக்க வைத்தது. முரண்டு பிடித்த சமுதாய உள்ளங்களை பணிய வைத்தது. மக்களை கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் இணைய வைத்தது. 

தலையை கொய்ய வந்தவரை தலைகீழாக மாற்றி, ஈமானில் பிரகாசிக்க வைத்தது. ஒரு அடிமைக்கு அல்லாஹ்வை அழைக்கும் பணிக்கு முதலில் குரல் கொடுக்க வைத்தது. வெற்றியிலும் பணிவு வேணும் என்னும் கொள்கையில் அனைத்து மக்களையும் பணிய வைத்தது. 

செருக்கற்ற,  தூய , பரஸ்பர உதவி மனப்பான்மை, மனித நேயம் மற்றும்  உன்னத பண்புகளைக்கொண்ட சமுதாயத்தை உருவாக்கியது. 

மொத்தத்தில் நாகரிகமற்ற ஒரு சமுதாயத்தை ஒரு உன்னத சமுதாயமாக மாற்றி அதை இவ்வுலகின் முன்னோடி சமுதாயமாக அறிமுகப்படுத்தி   இவ்வுலக வாழ்விற்கு பிரியா விடை கொடுத்தது. 

சல்லல்லாஹு  அலா முஹம்மது 
சல்லல்லாஹு அலைஹிவசல்லம்

சல்லல்லாஹு  அலா முஹம்மது
யாரப்பி சல்லி அலைஹிவசல்லம் 

அபு ஆசிப்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)