Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label மலேசியா. Show all posts
Showing posts with label மலேசியா. Show all posts

மாயை 13

ZAKIR HUSSAIN | April 17, 2016 | , , ,

அன்றைக்கு கொஞ்சம் வித்யாசமாக பயணிக்க நினைத்து நான் இருக்கும் இடத்திலிருந்து ஒரு 100 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஸ்லிம் ரிவர் எனும் ஊருக்கு காரில் போய் பின்பு ரயிலில் திரும்பினேன்.



பக்கத்தில் உட்கார்ந்து இருந்தவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. 70 வயது இருக்கும் என்னிடம் அவராகவே பேச்சுக்கொடுத்தார்.

மனதுக்குள் அவர் ஏதோ சுமப்பது போல் என் உணர்வு சொன்னது.. தமிழ்நாட்டில் இருந்து வருவதாக சொன்னார்...ஏதோ  நீடாமங்களம், மன்னார்குடி   ஊர் பக்கம் மாதிரி சொன்னார்.

இந்தியாவுக்கு சொந்தமான அடர்த்தியான காட்டன் சட்டை...கையில் கொஞ்சம் பெரிய சைஸ் லெதர் பெல்ட் வாட்ச். இங்க் பேனா, கையில் ஏதொ நேத்திக்கட கயிறு, ஒழுங்கு படுத்தாத மீசை..குரலில் ஒரு விதமான ஸ்ரத்தையின்மை..அனுபவத்தை எழுத ஆரம்பித்த வெள்ளைமுடிகளின் ஆதிக்கம்.

முதன் முறையாக மலேசியா வந்ததாக சொன்னார்.

நீங்கள் தேடி வந்தது.... உங்களிடம் சின்ன வயதில் பழகிய பெண்ணா?.... இப்போது வயது எப்படியும் 60 தை தாண்டியிருக்க வேண்டுமே??. இப்படி கேட்ட உடனே...

எப்படி இவ்வளவு துள்ளியமா சொல்ரே தம்பி? என்றார்

“இந்த வயதில் இவ்வளவு தூர பயணம்...காதல் / நட்பு இரண்டுக்குத்தான் மிகப்பெரிய சாத்யம்” என்றேன்

சின்ன வயதில் ரொம்ப கஷ்டப்பட்டேன். சம்பாத்யம் சரியாக இல்லாமல் , தங்கை , தாய் , சகோதரன் எல்லோரையும் கவனிக்க ஓய்வில்லாமல் உழைத்தேன் அற்ப காசுக்கு...என்கிட்டே அன்பா இருந்தது இந்த புள்ளெதான் [இன்னும் புள்ளெ இமேஜில் இருந்து அந்த அம்மா டெலிட் ஆகலே]. எல்லோரும் என்னெ வையும்போது 'நீ ஒரு நாள் நல்லா வருவே"னு தைரியம் சொன்னது இந்த புள்ளெ தான்

ரயிலின் வேகத்துக்கு அவரின் பேச்சு கொஞ்சம் திணறியது. கொஞ்சம் அவதானித்தே அவர் பேசினார்.
 

'அப்புறம் நீங்க விரும்பறதெ சொல்லலியா?''

சொல்லலாம்னு நினைக்கும்போதெல்லாம் ஏதாவது தடைவரும்...ஆனா அது ஒருமுறைகூட அப்படி என்னிடம் பேசியதில்லெ...மனசுலெ இருந்திருக்கலாம்.

ஒரு நாள் சொல்ல நினைத்து , பண வசதி , வறுமை எல்லாத்தடையும் மீறி சொல்ல போனால் ...அந்த புள்ளெக்கு கல்யாணப்புடவை எடுக்க கும்பகோணம் பஸ்ஸில் அந்த புள்ளெயோட வீட்லெ உள்ளவங்க புறப்பட்டு போனவுடனே என்னுடைய மனசை மாத்திக்கிட்டேன்...பிறகு அந்த புள்ளெ இங்கெ கல்யாணம் கட்டி இங்கெ வந்து இப்போதைக்கு பெரிய குடும்பம்...வசதி அப்படி ஒன்னும் சொல்லிக்கிறாப்லெ இல்லெ.. எனக்கு பிறகு கல்யாணம் , குடும்பம் , பிள்ளைங்க , பேரப்புள்ளைங்க, கார் , வீடு , சொத்து , எல்லாம் குறையில்லெ....

'இருந்தாலும் உங்க குடும்பத்திலெ...இப்போதைக்கு உங்கள் சொல்லுக்கு அவ்வளவுக்கு முக்கியத்துவம் இல்லெ..."


எப்படி தம்பி இப்படி கரெக்ட்டா சொல்றே?..

'இது ஒன்னும் அதிசயமில்லெ....இது பரிணாம வளர்ச்சி மாதிரியான விசயம், செடி வளந்து பிறகு வயதாகி காய்ந்து போற மாதிரி..'

இப்போ அவங்க வீட்டுக்கு போனீங்களா?...

'போனேன்...அவங்க வீட்டுக்காரர் , அந்த புள்ளே , அதனோட பேரப்புள்ளைங்க எல்லாம் என்னெ நல்லா கவனிச்சாங்க..." இப்போ நாங்க ரென்டு பேரும் வாழ்க்கையின் கடைசிய்லெ நிக்கிறோம், எனக்கு உள்ள சீக்கு புணியெ சொல்லிக்காண்பிச்சேன்'…

அந்த புள்ளே நான் அவங்க வீட்டெ விட்டு புறப்படும்போது என்ன சொன்னிச்சு தெரியுமா?..." 

நீங்க நல்லா இருப்பீங்க..உங்களுக்கு ஒரு குறையும் வராது"...

"உன் கிட்டே பேசினப்புறம் மனசு ரொம்ப லேசாயிடுச்சு தம்பி " என்றார்.  உன்னெ பார்த்தப்போ எனக்கு என்னவோ என் வாழ்க்கையில் நடந்ததை சொல்லனும்னு தோனுச்சி'''


சிலரின் எண்ண ஒட்டம் எவ்வளவு தூரம் அன்பைத்தேடி இவ்வளவு தூரம் பயணம் செய்ய வைத்துள்ளது என்பதை நினக்கும்போது ஆச்சர்யமாக இருந்தது. 

மனிதன் செய்யும் மிகப்பெரிய தவறு நாம் அன்பு செலுத்துபவர்கள் எல்லாம் நம்மிடம் அன்பாகத்தான் இருக்கிறாற்கள்/ இருப்பார்கள் என்று நம்புவது.

உறவு என்பதே மாயை...இந்த மாயையை நிஜமாக்கி பின்னப்பட்டதுதான் வாழ்க்கை. இந்த மாயையில்தான் மனிதன் இத்தனை வக்கிரங்களையும், அன்பையும், தர்மத்தையும், கஞ்சத்தனத்தையும் ..

மன்னிக்கும் தன்மையையும் வன்முறையையும் நிஜம் என்று நம்பி வாழ்கிறான். உறவுகள் இல்லாவிட்டால் வாழ்க்கையில் பிடிமானம் இருக்காது, வெல்வதற்கு எதுவும் இருக்காது... பின்னாளில் உறவுகளின் நடத்தையை வைத்து அந்த மாயையில் ப்ரயோஜனம் இருக்கிறதா இல்லையா என்பது தெரிய வரும்.

எல்லோருக்கும் காலம் தான் பதில் சொல்லும்.

ZAKIR HUSSAIN

மலேசியா ...TRULY ASIA 15

ZAKIR HUSSAIN | November 12, 2015 | , , , ,

திரைப்படங்களில், ஊடகங்களில் மலேசியா என்றாலே இரட்டைகோபுரமும், மூக்கு சப்பையான சில சீனப்பெண்மனிகளும், அல்லது கொஞ்சம் பிசியான கோலாலம்பூர் விமான நிலையமும் மட்டுமே காண்பிக்கப்படுகிறது. அதையும் மீறி நிறைய விசயம் இந்த மலேசியாவிலும் இருக்கிறது.


ஒட்டு மொத்த வருடத்தின் அத்தனை வார இறுதியிலும் ... இந்த இடத்துக்கு போகும் வார இறுதியிலும்  எனக்கு பிடித்த இந்த ரிசார்ட். செராத்திங் எனும் இடம். கடற்கரை  காற்றில் அமர்ந்து ரசிக்க... கடற்கரை இந்த இடத்திலிருந்து 30 மீட்டர் தொலைவுதான். இரவின் நிலவு வெளிச்சத்தில் கடற்கரை மணலின் சலவைக்கு போட்ட சுத்தம் மனது நிறைந்து இருக்கும்.


மலேசியா மழையால் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட நாடு.இதை எழுதும்பொது கூட மழை பெய்கிறது. அதனால் அருவிகளுக்கும் பஞ்சம் இல்லை. இது Cameron Highlands ல் இருக்கிறது. [மலைக்கு போகும் வழியில் இருக்கிறது]. நான் இதில் குளிக்காமல் மலைக்கு போனது மிகவும் குறைவு.



சாலையுடன் சேர்ந்த வயல்களும்...சாலை ஒரம் விற்கப்படும் துரியான் பழமும்.... இதையெல்லாம் ரசிக்காமல் சிலர் ஹோட்டல் ரூமில் படுத்து டி.வி யே கதியென்று கிடக்கும்போது பேசாமல் இவர்கள் வீட்டிலேயே இருந்திருக்களாம் எனத்தோன்றும்.


இரவு மார்க்கெட் என்பது மலேசிய வாழ்க்கையில் ஒன்றிப்போனது. ஒவ்வொரு இடங்களிலும் வாரத்துக்கு  ஒருமுறை இந்த மார்க்கெட்.


கொஞ்சமும் பிசியில்லாத ஊரில் அங்குள்ள மக்களுடன் சேர்ந்து டீ குடித்து..கதை பேசி , பள்ளிவாசலுக்கு போய் தொழுகையில் கலந்து பாருங்கள்..உங்கள் வாழ்க்கை எவ்வளவு இனிமையானது என்பது விளங்கும். [ இது தெரியாமல்தான் தினம் ஆண்டவனை குறை சொல்லிக்கொண்டிருக்கிறோம் ..சிலர்/பலர் மட்டும் ]


பினாங்கு..சாலை ஒர டீக்கடை ...நம் முன்னோர்களின் தியாகம் / அழிச்சாட்டியம் சொல்லும் இடம். இதில் "தியாகம்" என்று சொல்லக்காரணம்..வெளிநாட்டுக்கு போய் சம்பாதித்து தனது இளமை எல்லாம் உழைப்புக்கே செலவிட்டவர்கள். "அழிச்சாட்டியம்" என நான் சொல்லக்காரணம்...வெளிநாட்டுக்கு சம்பாதிக்கபோய் குடும்பத்தை சரியாக கவனிக்காதவர்கள்.


நம்புங்கள் ..இது ரயில்வே ஸ்டேசன் தான். பிச்சைக்காரர்களின் ஆதிக்கம் இல்லாத, தண்டவாளங்களில் அசுத்தம் செய்யாத, சாப்பிட்ட மிச்சத்தை நடைபாதையில் எறியாத மக்கள் இருக்கும் ஊரில் இருக்கும் ரயில்வே ஸ்டேசன்.

ZAKIR HUSSAIN

பர்மா தேக்கு வீட்டுக்காரர் - தொடர்கிறது.... 17

அதிரைநிருபர் பதிப்பகம் | September 22, 2015 | , , ,

ஞாபகம் வருதே - [4] part - 2

அன்று இரவு சென்னையிலிருந்து கேலாலம்புருக்கு புறப்பட்டேன். காலை ஆறு மணிக்கு விமானாம் தரை இறங்கியது. முதலில் குடி நுழைவு துறை எல்லோ லைன் கடந்து பின் கஸ்டம்ஸ். இந்திய கஸ்டம்ஸ்காரர்களின் கண்ணில் விழித்தாலே நளவெண்பாவின் கதாநாயகன் நளனுக்கு பிடித்த ‘சனி’தமயந்தி நமக்கு மாலை. இடாத போதும் நம்மையும் வந்து பிடிக்கும். ஆனால் இங்கே சகோதரத்துவ-நட்பு முறை வாசனைப்பூ மணம் கமழும். செழிப்பான சிரித்த முகத்துடன் சுங்கதுரை அதிகாரிகள்.                    கொண்டு வந்த பெட்டியே தூக்கி மேஜையில் வைத்தேன். ‘’பெட்டிக்குள் என்னஇருக்கிறது?’’என்றார் ’என் சொந்த உபயோகத்துக்கான சாமான்கள்! என்றேன்

"புடைவைகள் எத்தனை இருக்கிறது?" என கேட்டார். 

"ஒரே ஒரு புடவை" என்றேன்.

"யாருக்கு? மனைவிக்கா?"

"மனைவி ஊரில் நானிங்கே?"

"அப்படியென்றால் Girl Friendகா கொண்டு போகிறாய்?" என்றார். 

"எனக்கு girl friend இல்லேயே" என்று செயற்கையான ஏக்கத்துடன் சொன்னேன்.

"u nampa handsome! cubalah.boleh dapat satu" என்றார் 

[நீ கவர்ச்சியாக இருக்கிறாய், முயற்சி செய்; ஒன்று கிடைக்கும்] இது போன்ற நட்பு-கேலி முறையிலான பேச்சுக்கள் வயது வரம்பு இன்றி அங்கே பேசிக்கொள்வது சகஜம். நம் பாரத பூமிபோல் பதவி பந்தாக்கள், மூஞ்சியே ‘உற்ர்ரர்ர்ர்’ என்று நாய் போல் நரி போல் வைத்துக் கொள்வதெல்லாம் அங்கே இல்லை!.

"பெட்டியே மூடு" என்றவர், அடுத்து கீழே  மாம்பழக்கூடையே பார்த்தார்.

"அது என்ன கூடையில் மாம்பழமா?’’

"ஆமாம்" 

"நிறைய இருக்கிறதே! வியாபாரம் செய்ய கொண்டு போகிறாயா?"

"இல்லை! என் நண்பர்களின் குடும்பம் இங்கே இருக்கிறது. அவர்களுக்கு கொடுக்ககொண்டுபோகிறேன். மற்றபடி இது மாதிரியான வியாபாரம் செய்யும் சில்லறைதனமான பழக்கமெல்லாம் என்னிடம் இல்லை!" என்றேன் 

"சரி! நம்புறேன்! நானொன்று கேட்கிறேன். நீ தப்பாக நினைக்காதே! என் பிள்ளைகள் இந்திய மாம்பழம் திங்க ஆசைப்படுகிறார்கள். இரண்டு பழம் கொடுக்க முடியுமா! காசு தந்து விடுகிறேன்!" எனக் கேட்டார்.

கூடையை திறந்து நாலு பழத்தை எடுத்துக் கொடுத்தேன். 

"இரண்டு போதுமே!  உன் நண்பர்களுக்கு வேண்டுமே?"

"நிறைய இருக்கிறது! பிள்ளைகளுக்கு கொடுங்கள்!"

காஸு கொடுக்க பர்ஸை திறந்து கொண்டே "பிறப்பா ரிங்கிட்?" [எத்தனை வெள்ளி] வினவினார்..

"இதை நான்காஸுக்கு விற்கவில்லை! உங்கள் பிள்ளைகளுக்கு என் அன்பளிப்பாக கொடுக்கிறேன்."

என்னை ஒரு பார்வை பார்த்தவர் "திரிமாகஸி! [நன்றி] என்றார். இந்த "திரிமாகசி" மலாய் மொழியில் அதிகம் உபயோகப்படும் வார்த்தை. அதிகம் உபோயோகப்பட்டதனால் அது தேய்ந்து போய் பழைய இரும்பு வியாபாரியிடம் பேரீச்சம் பழத்திற்கு எடை போட்டு கொடுத்து பண்டமாற்று செய்யப்பட வில்லை. மாறாக அது என்றும் வளர்ந்து கொண்டே வருகிறது. 

ஆனால் கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடிகள் வாழும் நம் நாட்டில் `நன்றி` என்ற வார்த்தை பேங்க்லாக்கரில் saftyயாக இருக்கிறது. சில சமயங்களில் இது ஒப்புக்காக சொல்லப்படுகிறது. அடிமனதின் ஆழத்திலிருந்து உணர்வுபூர்வமாக இந்த வார்த்தை வருவதில்லை. எப்படி வரும்? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்! 

நான் மலேசிய சுங்கசோதனையிலிருந்து மலர்ந்த முகத்துடன் வெளியாகி வீடு வந்து சேர்ந்தேன். 


அன்று ஞாயிற்றுக் கிழைமை. ஓய்வு! மறுநாள் மாலை சென்னையில் என் நண்பர் தந்த சாமான்களை எடுத்துக்கொண்டு ’லிட்டில்இந்தியா’ என்று அழைக்கப்படும் Malayan Mansion/Selangor Mansion பகுதிக்கு சென்றேன். அங்கே ‘வைர யாவாரி’ தங்கி இருக்கும் ரூமுக்கு போனேன். கதவில் பூட்டு தொங்கியது. ஆளில்லை. பக்கத்து ரூம்காரர் வெளியே வந்தார்.அவரிடம் கேட்டேன்.

"காலை எட்டு மணி சுமாருக்கு வெளியே போவார். ஒரு மணி சுமாருக்கு வருவார். கொஞ்சநேரம் இருந்து  விட்டு போறவர் இரவு ஒன்பது மணிக்கு மேல் வருவார்" என்றார்.

"நீங்கள் எந்த ஊர்?" எனக் கேட்டவரிடம், ஊர் பெயரைச் சொன்னேன்.

"அவர் உங்க ஊரா?" என்றார் 

"அடுத்த வீட்டுக்காரருக்கே இவரை யாரென்று இன்னும் தெரியவில்லை. இவருடைய பொது உறவு கொள்கையின் லட்சணம் இப்படி!

மண்ணுக்காகப் படைக்கப்பட்ட மனிதனை மனித நேயத்திலிருந்து எது பிரிக்கிறது?

"ஆமாம்! எங்க ஊர்தான். தெருவு வேறே!" என்றேன்.

அவருக்கு ஊரில் ஒருவர் கொடுத்த சாமானைக் கொடுக்க வந்திருக்கிறேன்! தயவுசெய்து அவரிடம் கொடுத்து விடுகிறீர்களா?’ என்றேன். 

இதைக் கேட்டு திடுக்கிட்டுப் போனவர்

"மன்னிச்சுக்கோங்க தம்பி! இதை வாங்கிட்டு அவரோடு என்னால் மல்லுக்கு நிக்க முடியாது! லாயர் Burrow* கேக்காத கேள்வி யெல்லாம் அவர் என்னிடம் கேட்பார். இந்த வம்பெல்லாம் நமக்கு வாணாம்! நீங்களே நேரடியா கொடுத்துடுங்கோ!" என்றார். 

கொண்டு போன சாமானுடன் திரும்பி விட்டேன். [*லாயர் Burrow. மலேயாவில் ஜப்பானியர் ஆட்சிக்கு முன் வெள்ளயார் ஆட்சிகாலத்தில் மேல் சொன்ன பெயரில் உச்ச நீதி மன்ற வழக்கறிஞராக வெள்ளைக்கார துரை ஒருவர் இருந்தாராம். அவர் தன் கட்சி காரருக்கு எதிரான சாட்சிகளை கூண்டில்லேற்றி ’எடக்கு-முடக்கான’ கேள்விகளைக் கேட்டு குழப்பு-குழப்பென்று குழப்பி திண்டாட வைத்து விடுவாராம். சாட்சிகள் குழம்பிப்போய் ‘உடும்பு வேணாம் கையைவிடு!’ என்று ஓடி விடுவார்களாம். இன்னும் புரியும்படி சொல்வதென்றால் ’ஆட்டைக் கழுதையாக்கிய ’நம்மூர்கதைதான்.] 

மறுநாள் பகல் ஒரு மணி சுமாருக்கு வைரயாவாரிக்கு டெலிபோன் போட்டேன். விஷயத்தைச் சொன்னேன்.

"நான் நீங்கள் வந்த அந்த நேரம் ரூமில் இருக்கமாட்டேன். ரெம்ப பிஸி. இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் ரூமில் இருப்பேன். அப்போ கொண்டு வந்து கொடுங்கள்!" என்றார். 

பேச்சில் கொஞ்சம் அதிகாரத் தொனி இழையோடியது.

"நான் மாலை 5.30க்குஅங்கே வருவேன்! 7.30க்கு திரும்பி விடுவேன். ஒன்பது மணிவரை அங்கிருந்தால் திரும்பி வர பஸ் கிடைக்காது. என் மாமா கடையில் கொடுத்து விட்டுப் போகிறேன். வாங்கிக் கொள்ளுங்கள்" என்றேன்.

"அங்கெல்லாம் நான் போய் வாங்க முடியாது! `யாரிடம் கொடுத்து விடுகிறேன்!` என்று ‘வாக்கு’கொடுத்து அதை வாங்கி வந்தீர்களோ அதை அவர் கையிலேயே ஒப்படைக்க வேண்டும். இதுதான் ’அமானிதம்’ என்பதன் அர்த்தம். இதுதான் முறை!" என்றுரைத்தார்.

"புண்ணியத்திற்கு உழைக்கும் மாட்டை பல்லை பிடித்து பதம் பார்ப்பது" என்று தமிழில் சொல்வார்கள். ஆங்கிலத்தில் Look not a gifted horse in the mouth. 

இதைக் கேட்ட எனக்கு ஏறியது ரத்தம்!

"நான் அதை உங்கள் திருவடி பணிந்து உங்களிடமே ஒப்படைக்கிறேன்" என்று வாக்கு கொடுத்து வாங்கி வரவில்லை. இது ஒன்றும் நேத்திக்கடன் அல்ல! வெள்ளிக்கிழமை இரவு அங்கே ’தலை போட்டு’ படுத்துவிட்டு நேத்திக் கடனையும் செலுத்தி வர!. வேண்டுமானால் ஒரு வாரத்திற்குள் இங்கே வந்து உங்கள்  சாமான்களை எடுத்துக் கொள்ளுங்கள். வருவதற்கு முன் அப்பாயின்மென்ட் வாங்கி வரவேண்டும். நான் ரெம்ப பிஸி" என்றேன்.

[வேணுமென்றே நானும் ஒரு’பந்தா’ பன்ணினேன்] டெலிபோனை வைத்து விட்டார். கொஞ்சநேரம் கழித்து டெலிபோன் மணி அடித்தது. என் மாமா பேசினார்

"என்னப்பா அவரிடம் தகராறு செய்கிறாயாமே?" கேட்க..

"ஒன்றும் தகராறு இல்லை" என்று நடந்ததை சொன்னேன்.

"அவர் குணம் அப்படித்தான். நாம்தான் பார்த்து அனுசரித்துப் போகணும் . பெரியமனுஷன். கொண்டுபோய் கொடுத்துவிடு"

"அவர் போடும் கண்டிசனுக்கும் சவுடாளுக்கும் நான் பணிந்து போக முடியாது. வேண்டுமென்றால் ஒரு வாரத்திற்குள் வந்து எடுக்கட்டும். இல்லையென்றால் இங்கேயே கிடக்கட்டும்" என்றேன்.  என் மாமாவுக்கு என் குணம் தெரியும்.

"நீ அதை என்னிடம் கொண்டு வந்து கொடுத்துவிடு. நான் கொடுத்து கொள்கிறேன்" என்றார். அடுத்த நாள் மாலை அங்கே போய் அதை என் மாமாவிடம் கொடுத்துவிட்டு வந்தேன்.  

பல மாதங்கள் கடந்து போனது. ஒரு நாள் மாலை லிட்டில் இந்தியா மலையன் மன்சனில் இருக்கும் புத்தக மொத்த வியாபாரம் செய்யும் கடைக்கு போனேன். அங்குள்ளவர்கள் அனைவரும் என் உடன் பிறவா சகோதரர்களும் நண்பர்களும் போல. நான் நம்மூர்காரர் ஒருவரின் நிறுவனத்தில் working partnerராய் இருந்து கடினமாக இரவு பகல் பாராமல் உழைத்து-உழைத்து ஓடாய்போய் பையிலும் கையிலும் காசில்லாமல் வீசியகையும் வெருங்கையுமாய் வெளியே வந்தபோது எனக்கு ஆதரவு கரம் நீட்டி நெஞ்சோடு நெஞ்சாக அணைத்துக் கொண்ட மனித இதயம் கொண்ட மனிதர்கள் அங்கே இருந்தார்கள். வாரத்திற்கு இரண்டு மூன்று தடவை அங்கே போய் வருவது என் வாடிக்கையான பொழுதுபோக்கு. 

ஒரு நாள் மாலைஅங்கே போய் பேசிக் கொண்டிருந்தபோது அந்த கம்பெனி டெலிபோன் மணி கினுகிணுத்தது. அதை எடுத்துக் கேட்ட மேனேஜர்

"உங்களுக்குத்தான். யாரோ பேச வேண்டுமாம்" என்று ரிஸிவரை என்னிடம் தந்தார். பேசியது வைரயாவாரி

"பாரூக்! நான் இங்கே மூனாவது மாடியில் பதினாளாம் நம்பர் ரூமில் இருக்கிறேன்! ஒரு செய்தி பேசவேண்டும். இங்கே வர முடியுமா?" என்றார். பேச்சில் பணிவும் கனிவும் சோகமும் இழையோடியது.

"அவர்தானா இவர்?" என்ற சந்தேகத்தை தூண்டும்படியான தொனி ஒலித்தது. அங்கே சென்றேன். முகத்தில் வாட்டம். ஆழ்ந்த யோசனை. என்னையே பார்த்துக்கொண்டு ஏதும் பேசாமல் யோசனையில் மூழ்கி இருந்தார். கொஞ்சநேரம் சென்றதும்.

"செய்தி சொல்ல கூப்பிட்டீர்களே? என்ன சேதி" என்று அவரை யோசனைலிருந்து கலைத்தேன். "ஒன்றுமில்லை! நானும் பல யாவாரங்கள் செய்தும் ஒன்றும் கை கொடுக்கவில்லை. ஜான் ஏறினால் முழம் வழுக்குது! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. ’கை’ முதல் எல்லாம் ’கை’ விட்டு  போய்விட்டது. தங்குமிடத்துக்கு மூன்று மாத பாக்கி நிக்கிது. கேட்டு இம்சை படுத்துகிறார். கையில் காசில்லை.கை செலவுக்கு நூறு வெள்ளி இருந்தால் கொடுங்கள் அப்புறம் தந்து விடுகிறேன்" என வேண்டினார்.

அப்பொழுது என்னிடம் இருந்தது ஆறுவெள்ளி சில்லரை மட்டுமே.

"இங்கேயே  இருங்கள் கொஞ்ச நேரத்தில் வருகிறேன்" என்று கீழேபோய் என் நண்பரிடம் பணம் வாங்கி கொடுத்து விட்டு வந்தேன்.

அவர் சொன்னது போல் யாவாரம் அவருக்கு மட்டும் தான் கை கொடுக்கவில்லை. பயறு கஞ்சி, பால் காய்ச்சி வித்தவர்கள் வடைசுட்டு வித்தவர்கள்," வாடா! வாடா! என்று மரியாதை குறைவாக கூறிகூறி "வாடா" விற்றவர்களும் ஆப்பம் சுட்டு யாவாரம் செய்தவர்களும் காஸு சம்பாதித்து ஊரில் மாடிவீடு கட்டினார்கள். அம்பாஸிடர் கார் வாங்கி விட்டார்கள். அவர்களையெல்லாம்  விட அனுபவத்திலும் கல்வியிலும் உடல் கவர்ச்சியிலும் பலமடங்கு மேலான இவர் ஏன் தோற்றார்? அவரை தடுத்த சீனத்து  சுவர் எது.? ஒரே ஒரு காரணம் "வாய்" அவருடைய ‘வாய்!’ வாயாலே கெட்டுச்சாம்  கௌதாரி’’ என்று சொல்வார்கள். 

அதன் முழுகதையும் தெரிந்தவர்கள் சொல்லலாம். சும்மாபோன குருட்டு பாம்பை பார்த்த தவளை வாயே வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் அதை பார்த்து கேலி செய்தது. கடைசியில் அந்த குருட்டு பாம்புக்கே அந்த தவளை இரையான கதை உங்களுக்கு தெரியும்.

1967 ஆண்டு வாக்கில் தென் இந்திய ரயில் நிலையங்களில் "வாய் நல்லதானால் ஊர் நல்லது" என்ற வாசகம் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது.

நீண்ட நாட்களாக அந்த நபரின் நடமாட்டம் லிட்டில் இந்தியா பக்கம் இல்லை. மாதங்கள் பல கடந்தது. ஒரு நாள் மாலை என் கடைக்கு திடீரென வந்தார். முகத்தில் வாட்டம் இழையோடியது. வந்தவருக்கு சேர் எடுத்து போட்டு உட்காருங்கள் என்று சொன்னேன். அது டி’டைம்! இரண்டு.டி வந்தது. டி குடித்த பின் கொஞ்ச நேரம் எதையோ யோசித்துக் கொண்டிருந்தார்.

"யாவாரம் ஏதும் செய்கிறீர்களா?" எனக் கேட்டேன். 

"இல்லை! இந்த சபுர் நான் புறப்பட்டு வந்த நேரம் சரி இல்லை. ஊர்போய் இரண்டு மூன்று மாதம் நின்று விட்டு வந்து யாவாரம் பாக்கலாம் என்று இருக்கிறேன். அடுத்த வாரம் பயணம் டிக்கட்டுக்கு தோது செய்து விட்டேன். ஊருக்கு போனால் பிள்ளைகள் கையை-கையை பாக்கும். அதுகளுக்கு கொடுக்க சாமான்கள் வாங்க கையிலே காசில்லை. ஒரு நூறு வெள்ளி கொடுங்கள் வந்ததும் தந்து விடுகிறேன்" என்றார். 

கொடுத்தேன்.போய்விட்டார்.

அவர் போன அரை மணி நேரம் கழித்து  என் டெலிபோன் மணி கினு கிணுத்தது. எடுத்துக் கேட்டேன். நம் மூர்காரரின் குரல்.

"அவர் அங்கே வந்தாரா?" 

நான் "இல்லை" யென்றேன். 

அவர் என்னிடம் வந்ததை இவரிடம் சொன்னால் ஊரெங்கும் பறையரைவார். சந்தர்ப்ப சூழலில் மனிதனுக்கு ஏற்ற-தாழ்வுகள் இயற்க்கை. அதை யறியாது   ஒரு மனிதனை மட்டம் தட்டுவதும் இழித்து பேசுவதும் இந்த மனிதனின் habit. அதனால் அந்த நபர் வந்ததை நான் அவரிடம் சொல்லவில்லை. 

அவரைப் பற்றி நண்பர் சொன்னார்:

"என்னிடம் வந்து ஊருக்கு போக போரதாகவும் கையில் காசில்லை" என்றவர். 

"கொஞ்சம் பணம் கொடுத்தால் போய் விட்டு வந்து தருகிறேன்" என்று கேட்டிருக்கிறார்

`போய்விட்டு வந்து எங்கே தரப்போகிறார்?’ என்று நூறு வெள்ளி கொடுத்ததைச் சொன்னதும்.

அடுத்து,

"என்ன! நூறு வெள்ளியை தூக்கி போடுகிறீர்கள்? இதை வைத்து நான் என்ன செய்ய முடியும்? என் பேரப் பிள்ளைகளுக்கு சோக்லேட்டே வாங்க முடியாதே! நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்று கொடுத்த பணத்தை நண்பரின் பக்கமே தள்ளி விட்டிருக்கிறார் அவர்.

"உங்கள்  பேரப் பிள்ளைகளுக்கு சொக்லேட் வாங்க நான் ஏன் பணம் கொடுக்க வேண்டும்?" என்று பணத்தை எடுத்து வைத்துக் கொண்டேன். போய்விட்டார்.

இந்த நிலைக்கு அவரை தள்ளியது எது? அவரின் கடந்த கால செல்வ செழிப்பும் அதனால் ஊறிய மமதையும். கால ஓட்டத்தையும் மாற்றத்தையும் கணிக்காமல் கால்போன பாதையெல்லாம் கண் போனது! கண்போன பாதையெல்லாம் மனம் போனது.

மனம்போன பாதையெல்லாம் வாய் போனது.
        வில் விட்டு புறப்பட்ட அம்பும் வாய்விட்டு 
புறப்பட்ட சொல்லும் திரும்ப வராது.

பெரும்பாலோர் தங்களின் கடந்த கால `பாட்டன் பூட்டன்` பெருமைகளை பேசிபேசியே  நிகழ்காலத்தை கைவிட்டார்கள். 

இவர்கள் "பொய் நெல்லை குத்தியே பொங்க நினைத்து கை நெல்லும் விட்டவர்கள்".

S.முஹம்மது பாருக்

பர்மா தேக்கு வீட்டுக்காரர் 28

அதிரைநிருபர் பதிப்பகம் | September 16, 2015 | , , ,

ஞாபகம் வருதே - [4] part - 1

ஒரு முறை மலேசியா புறப்பட சென்னைக்கு ரயில் ஏறினேன். என் நண்பர் ஒருவர் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்திருந்தார். எழும்பூரில் ஒரு விடுதியில் தங்கி வாங்க வேண்டிய சில சாமான்களை வாங்கிக்கொண்டு அன்று இரவு விமானத்தில் புறப்பட எண்ணி இருந்தேன். 

"மண்ணடியில் என் ரூமிலேயே தங்கிவிட்டு புறப்படலாமே! கொஞ்சநேரம் தானே! எதற்கு விடுதிக்கு வேறு வீண் செலவு?" என்று வற்புறுத்தினார்.

"சரி" என்று அங்கே சென்றேன். 

மண்ணடியில் எனக்கு தெரிந்த ஒரு வர்த்தகர் இருந்தார். ‘அவரையும் போய் பார்த்து விட்டு வரலாமே! ’ என்று அங்கே சென்றேன். மூன்றாவது மாடியில் அவர் அலுவலகம் இருந்தது. மேலே போக லிஃப்ட்டும் தொங்கிக் கொண்டு இருந்தது. லிஃப்ட் ஆப்பரேட்டர். முகமும் தொங்கிக் கொண்டிருந்தது. லிஃப்டில் போகலாம் என்று எண்ணிய எனக்கு தொங்கும் முகம் கண்டதும் லிஃப்டில் போக மனமில்லை. அதில் ஏறினால் வம்பு தும்பு வருமோ என்ற அச்ச உணர்வு வந்தது .அதனால் படி ஏறியே மேலே போகலாம்  என்று  ’வலது காலை எடுத்து முதல் படியில் வைத்தேன். அடுத்த கணம்,

"யாரது? நில்லுங்கள்! எங்கே போகிறீர்கள்?" என்ற அசரீரி போல் ஓசை கேட்டது.  இந்த அதட்டல் போட்டது  லிஃப்ட் ஆப்பரேட்டரே யன்றி வேறு யாருமல்ல.

"மூன்றாவது மாடிக்குப் போகிறேன்!"என்றேன்.

"யாரைப் பார்க்கப் போகிறீர்கள்?" என்றார். பதில் சொன்னேன். "எந்த ஊர்?" என்றார். இந்தக் கேள்வியை கேட்டதும் கண்ணதாசன் எழுதிய "எந்த ஊர் என்றவனே! இருந்த ஊரைச் சொல்லவா?" என்ற பாடல் நினைவுக்கு வந்தது.’ அதைப் பாடலாமா?’ என்று நினைத்தேன். வந்த இடத்தில் வம்பு எதற்கென்று விட்டு விட்டேன். இப்பொழுது இந்தப் பாடல் உருவான ஊற்றுக்கண் பற்றி  சுவையான செய்தி ஒன்றை சொல்ல ஆசைப்படுகிறேன். கண்ணதாசனின் இந்தப் பாடலுக்கு ‘கரு’கொடுத்தவர் அண்ணா என்றால் நம்புவீர்களா? ‘அண்ணா முதல்வராய் இருந்தபோது கரூர் வர்த்தக சங்க பிரதிநிதிகள் அண்ணாவைச் சந்திக்க வந்தார்கள். வந்தவர்கள் "வணக்கமுங்கோ! நாங்கள் கரூரிலிருந்து வருகிறோம்!" என்றார்கள். அதைக் கேட்ட அண்ணா `நானும் கரூரிலிந்து வந்தவன் தான்!" என்று நமுட்டுச் சிரிப்புடன் சொன்னார். இதைக் கேட்ட கரூர்காரர்களும் மற்றும் அங்கிருந்த நெடுஞ்செழியன், கருணாநிதி, அன்பழகன் கண்ணதாசன் ஆகியோரும். புருவத்தை உயர்த்தினார்கள்.

"என்ன அண்ணா உளறுகிறார்? காஞ்சிபுரத்தில் பிறந்த அண்ணா கரூரில் பிறந்தேன்’ ’ என்று சொல்கிறாரே”? என்று ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டார்கள்.  கரூர்காரர்களில் ஒருவர் குழப்பத்தோடு அண்ணாவை பார்த்து "நீ...ங்....க....ள்.....கா...ஞ்....சி......" என்று இழுத்தார். அவர் முடிக்கு முன்னே அண்ணா சொன்னார்.

"நான் காஞ்சிபுரத்தில் பிறந்தவன்தான். ஆனால் நான் என்தாயின் ‘கரு’ஊரில் உருவாகி வந்து காஞ்சிபுரத்தில் பிறந்தேன்.               அதனாலேதான் நானும் கரூரிலிருந்து வந்தவன்” என்று சொன்னேன் என்றார். இதைக்கேட்ட கரூர் ஆசாமிகள் கலங்கி போனார்கள்-அண்ணாவின் சொல் வண்ணம் கண்டு சொக்கிப் போனார்கள். ‘தூண்டில் காரனுக்கு மிதப்பு மேல் கண்!’ என்பது போல் அங்கிருந்த கவிஞர் கண்ணதாசனும் காரியத்தில் கண்ணா இருந்தார். வாய்ப்பு வந்தபோது அண்ணா கொடுத்த டிப்சை வைத்தே." எந்தஊர் என்றவனே? இருந்த ஊரைச்சொல்லவா? இருந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!" என்ற பாடலை எழுதினார்.’ வல்லவன் கையில் புல்லும் ஓர் ஆயுதம்’ என்று சொல்வார்கள். அதை அண்ணாவும் கண்ணதாசனும் மெய்ப்படுத்தினார்கள். இப்பொழுது நாம் கரூரிலிருந்து மண்ணடிக்கு  வருவோம். 

கரூரிலிருந்து மண்ணடி வந்தவர்கள் எல்லாம் மீண்டும் ஒரு நாள் ‘மண்ணடிப் போகத்தானே வேண்டும்!? . நான் சொல்லும் மண்ணடி அந்த இறுதிப் பயணம் போகும் மண்ணடி அல்ல: சிங்காரச் சென்னையின் கடலோரமிருக்கும் மண்ணடி. மீண்டும் மண்ணடிக்கு வருவோம்.

"எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்?" மண்ணடி லிஃப்ட் கேட்டது.

"அதிராம்பட்டினம்!"

"தெருவு?"

"கடல்கரை தெரு”

"பேரு?" 

"முஹமது பாரூக்!" [கேட்ட கேள்விகளைப் பார்த்தால் மண்ணடிக்குப் பதிலாக பாஸ்போர்ட் ஆபிஸுக்கு. வந்துவிட்டோமோ?’ என்ற சந்தேகமும் எனக்கு வந்தது.]

"என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள்?" என்றார்.

அவர் என்னை மதரஸா-அல்லது குமர் காரியமாக வந்த வசூல் பேர்வழி என்று எண்ணினாரோ என்னவோ? இப்படிக் கேட்டார்.

"அதையெல்லாம் சொல்ல முடியாது! விட்டால் விடு! இல்லையென்றால் நான் திரும்பிப் போய் விடுகிறேன்...........

அவர் வரச் சொன்னார் வந்தேன். விடமுடியாதென்றால் போய் விடுகிறேன். அதனால் எனக்கு ஒன்றும் குடி மூழ்கி விடப் போவதில்லை" என்றேன். 

இப்படி நான் சொன்னதும் என்னை ஏற இறங்க ஒரு பார்வைப் பார்த்தார். டெலிபோனை தட்டி மேலே கேட்டார். பின்பு,

"நீங்கள் லிஃப்ட்டிலேயே போங்கள்" என்றார்.

இப்போ பூசாரி மணியடித்தார். சாமியும் வரங்கொடுத்தது. ’நீங்கள் லிஃப்ட்டிலேயே போகலாம்" என்றார். 

அதட்டல் இல்லாத மரியாதை தொனி அவர் குரலில் ஒலித்தது. இதுவரை தொட்டிலில் துயில் கொண்ட மனித குணம் இப்பொழுது விழித்துக் கொண்டது. அங்கே ஒருவரை  லிஃப்டில் போக அனுமதிப்பது என்பது ஒரு வெளிநாட்டுத் தலைவர் இன்னொரு நாட்டுக்கு வரும்போது சிவப்பு கம்பளம் வரவேற்புக் கொடுப்பது போல! இது ஒரு[ Royal Salute] ‘ராஜமரியாதை!?’

**********************************************************************************
நான் மலேசியா புறப்படத் தயாரான போது என் நண்பர் இரண்டு கைலி ஒரு சந்தன சோப் ஒரு Vicco பல்பசை இவற்றை நம் ஊர்காரர் ஒருவரின் பேரைச் சொல்லி அவரிடம் கொடுத்து விடும்படி தந்தார். அவர் பெயர் உச்சரிக்கப்பட்டபோது’ என் நெஞ்சுக்குள் ஒரு எச்சறிக்கையுணர்வு மையம் கொண்டது’ இதனால் அவருக்கும் உனக்கும் ஒரு Ego போர் தொடங்கும்!.

"அதை வாங்காதே!" என்று என் உள் மனம் எச்சரிக்கை மணி அடித்தது.

அந்த நபரிடம் பழகுவதிலும் பேசுவதிலும் ஒருவர் எப்படித்தான் முன் எச்சரிக்கையுடன் இருந்தாலும் அதில் எப்படியாவது ஒரு குறை அல்லது தவறு கண்டு அடிபட்ட நாகம்புபோல சீறுவார். உப்புக்குக் கூட பிரயோஜனமில்லாத ஒரு தவறு, நாம் சொல்வதில் கண்டுபிடிப்பார். அதை வைத்தே நம்மைத் தாழ்த்துவார். தலையில் குட்டுவார். அதோடு அல்லாமல் அவரை அவரே ஒரு தூக்கு தூக்கி உச்சாணிக் கொப்பின் உயரத்தில் கொண்டு போய் வைத்துக் கொள்வார். 


அவரே உயர்ந்தவர்; அவரினும் உயர்ந்தவர் யாருமில்லை. அவர் சொல்வதெல்லாம் சரி;! அவர் போட்டிருக்கும் சட்டையே விலை உயர்ந்த சட்டை; அந்த விலை கொடுத்து அதை யாராலும் வாங்கிப் போட முடியாது. அவர் வீட்டு ஜன்னல், கதவு தூண் எல்லாமே "பர்மாவில் இருந்து விமானத்தில் அவர் பூட்டனுக்கு பூட்டன் காலத்தில் கொண்டு வரப்பட்டது” என்பார்.

கையில் கிடந்த ஒரு பவுன் மோதிரம் கீழே விழுந்தாலும்கூட அதை குனிந்து எடுக்காத குடும்பம் எங்கள் குடும்பம் என்பார்’ பர்மா தேக்கிலேயே அடுப்பு எரித்துச் சோறு பொங்கி திண்ட குடும்பம் எங்கள் குடும்பம்’ என்று சொல்ல மறந்து விட்டார் போலும். அவர் "பூட்டன்-,பூட்டன்’ என்று என்றோ போய் சேர்ந்தவர்களின் சாதனைகளையும் பெருமைகளையும் திரும்பதிரும்பச் சொல்லியதைக் கேட்டவர்களுக்கு ஆரம்ப பள்ளியில் படித்த வாய்ப்பாடு போல் மனப்பாடமாகி விட்டது வேறு-சிலருக்கு இந்த பூட்டன்! பூட்டன்" என்ற சொல் அவங்களெல்லாம் பழைய பூட்டுக்களைப் பழுது பார்க்கும் தொழில் செய்தவர்களோ?" என்ற எண்ணத்தை உண்டாக்கியது. 

அவர்கள் விமானத்தில் பர்மா `தேக்கு` கொண்டு வந்த காலத்தில் விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதர்களின் உம்மாக்கும் வாப்பாக்கும் கல்யாணமே ஆகலேங்கிற சங்கதி அங்குள்ள கிணற்று தவளைகளுக்கு தெரியாது. தெரிந்தவர்களும். "எதற்கு வீண்வம்பு?" என்று ‘செட்டி ஜாடையில்’ கண்டும் காணாமல் ஒதுங்கிக் கொள்வார்கள். இவரின் குணங்களில் ஒன்றை மட்டும் உங்களுக்கு விளக்க ஆசைப்படுகிறேன். தயவுசெய்து நான் அவரை வேண்டு மென்றே எல்லை கடந்து அதிகம் விமர்சிப்பதாக எண்ண வேண்டாம். அவர் இடக்கு-முடக்காக ஏதேனும் பேசுவாரே தவிர யாருக்கும் எந்த துரோகமும் செய்யவில்லை.

நண்பர் அந்த சாமான்களை என்னிடம் தந்தபோது நான் அதை கைநீட்டி வாங்கியபோதே ‘அவருக்கும் எனக்கும் ஒரு Ego போர் தொடங்கப் போகிறது’ என்ற உள் மனம் என்னை என்னை எச்சரித்தது. இது போன்ற எச்சரிக்கையை உள் மனம் தரும் போது `NO` என்றவர்கள் பிழைத்துக் கொண்டார்கள். `yes` என்றவர்கள் தூண்டிலில்  சிக்கிய மீன் ஆனார்கள். இது என் வாழ்நாளின் பெரும்பகுதியில் நான் செய்த தவறு. I wanted to say NO but I said YES! NO என்று சொல்ல நினைத்ததை No என்று சொல்லாமல் Yes என்று சொன்னேன். என் வாழ்வின் தேன் நிலவுகாலங்கள் வீண் நிலவுஆனது.

அப்படி சொன்னவர்கள் எல்லாம் தங்கள் சொந்தச் செலவில் தங்களுக்கே சூணியம்வைத்துக் கொண்டவர்களுக்கு சமம். போர் பிரகடனம் ஒன்றை எதிர் நோக்கத் தயாரானேன். காரணம் இவரோடு Deal செய்வது மிகமிக கடினம். 

சில ஆண்டுகளுக்கு முன்பு நான் வேறு ஒருவர் கடையில் Working Partner-ராக இருந்தபோது மாதம்  இருமுறை வெளிவரும் சஞ்சிகை ஒன்றை  அதன் உரிமையாளர் மலேசிய தீபகற்பத்தின் பெரும்பகுதிக்கு விநியோகம் செய்ய எங்களுக்கு தந்தார். அதன் விற்பனை ஏறத்தாழ ஒரு இலட்சம் பிரதிகள். மாதம் இருமுறை என்றால் இரண்டு லட்சம் பிரதிகள். அந்த  இதழின்ஆசிரியரும் உரிமையாளருமான மலாய்க்காரர் மாலை நேரங்களில் வேலை  முடிந்ததும் எங்கள் கடைக்கு இரண்டு-அல்லது மூன்று வாரத்திற்கு ஒரு முறையாவது வந்து சஞ்சிகை விற்பனை சம்பந்தமாகவும் மற்ற பத்திரிக்கைகள் எப்படி ஓடுகிறது என்றும் மற்றும் பொதுவான அரசியல் நிலவரங்கள் பற்றியும் பேசிச் செல்வார். இது அவர் வாடிக்கையான பொழுது போக்கும்-ஒரு ரிலாக்சும் கூட. 

இதை வழக்கமாக்கி கொண்ட அவர் ஒன்னரை மாதமாக வரவே இல்லை. ஆளைக் காணோம். ஒரு நாள் மாலை திடீரென வந்தார். நான்கேட்டேன்

"எங்கே ரெம்ப நாளா ஆளைக் காணோம். ஏதாவது புது Girl friend எதையாவது பிடித்துக்கொண்டு ஹனிமூன் போய் இருந்தாயா?" என்றேன்.

"ஹும்! என்ன முயற்சி செய்தும் ஒன்னும் கிடைக்கலே!" என்றார்.

இது  போன்ற பேச்சுக்கள் மலாய்க்காரர்களுக்கு ரெம்ப பிடிக்கும். எவ்வளவு பெரிய முதலாளியாக இருந்தாலும் கொஞ்ச நாள் பழகியதும் கேலி கிண்டல் செய்யலாம். நம் நாட்டு முதலாளிகளுக்கு இருக்கும் Ego போல் மலாய்கார முதலாளிகளுக்கு இல்லை. ஆனால் மலேசியாவில் கடை வைத்திருக்கும் தமிழ் முஸ்லிம் தஞ்சை மாவட்ட முதலாளிகளுக்கு கெளரவம் ஈகோ எல்லாம் இங்கேயும் [மலேசியாவில்] உண்டு. இது ரத்தத்தோடு கலந்தது அல்ல; ரத்தமே அதுதான். கண் மூடிய பின் அவர்களை மண் மூடி போட தூக்கியபோது ego சொன்னது"you go ! I stay!

மலாய்கார முதலாளிகளிடம் மூஞ்சியை ‘உம்’மென்று வைத்து டீல் பண்ணினால் தகர டப்பா ரெங்கு பெட்டி பாக்கட்டை தோளில் தூக்கி கொண்டு ஜப்பான் காரன் செய்த கித்தா செருப்பை வரட்வரர்ட்டென்று காலில் போட்டு இழுத்துக் கொண்டு ஊர் வந்து சேர வேண்டியதுதான். ரைபன் மூக்கு கண்ணாடி அத்தர் பூசிய டெர்லின் சட்டை, ஓடிகுலான் பாட்டால் ஹார்லிக்ஸ் போட்டல் யார்ட்லி புட்டாமாவு, யார்ட்லி சவ்வுக்காரம் 555 சாப் ரோக்கோ (சிகரெட்) கோபுர சாப்பு பணியன் ONE MAN SHOW சென்ட் பாட்டில்Etc. Etc ஏதுமில்லாமல் கோஷப்பெட்டி(empty]யோடு ஊர் வந்து எறங்க   வேண்டியதுதான்.   

வயதுக்கு வந்து கல்யாணத்துக்கு நிக்கிற தன் மகள் பாத்துமுத்துக்கு மாப்பிளைகேக்க நினைச்சிருந்த தாயோடு கூடப்பிறந்த மூத்த மாமாவே கூட வீட்டுப்படி மிதிச்சு உள்ளே வந்து, "சொவமா வந்தியலா?"-ன்டும் ஒரு வா[ர்]த்தை கேக்க மாட்டார். "மவளுக்கு மாப்புளே தாங்கோ!"-ன்டும் கேக்க மாட்டார்.! பெண் கொடுப்பதும்,மாப்பிளை எடுப்பதும் பினாங்கிலிருந்து வரும் சபுராளியின் பெட்டியின் வெயிட்டை பொறுத்தே அது அமையும்.

ரெம்ப நாள் கழித்து கடைக்கு வந்த அந்த மலாய்காரரிடம்…

"எங்கே ரெம்ப நாளா காணோமே!” என்றேன்.

"பிரிண்டிங். மெசின் வாங்கலாமென்று ஜெர்மனி சென்றிருந்தேன். அதான் வர வில்லை!" என்றார். அவர் கையில் வைரக்கல் பதித்த மோதிரம் ஒன்று பளிச்சிட்டது. அதை நான் கவனித்ததை  கண்ட அவர் அதை என்னிடம் காட்டி..

"இதை அங்கே வாங்கினேன். விலை மலேசியன் ரிங்கிட் இருபத்தி அஞ்சாயிரம்" என்றவர் ‘இதை பார்த்த` என் மனைவி

"இதுபோல் எனக்கும் ஒன்று வேண்டும்!" என்று அடம் பிடிக்கிறாள்!’” என்றார். 

"உனக்கு தெரிந்த வைர வியாபாரம் செய்யும் ’மாமா’* யாராவது இருந்தால் சொல்! பத்து பணி ரெண்டு ஆயிரரிங்கிட்க்குள் ஒன்று வாங்கலாம்!’ என்றார் 

[*தமிழ் முஸ்லிம்களை மலாய்காரர்கள் ’மாமாக்’ என்று அழைப்பது வழக்கம்] மேற்சொன்ன பாட்டன் பூட்டன் பரம்பறை பெருமை பேசும் நபர் கொஞ்ச நாளாக "நான் வைர யாவாரம் செய்கிறேன்! நான் வைர யாவாரம் செய்கிறேன்”! என்று சொல்லிக் கொண்டு இருந்தார். ’அவரை இந்த மலாய்காரரிடம் காட்டி விடுவோம் ’ஏதாவது அஞ்சோ பத்தோ கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவருக்கு டெலிபோன் போட்டேன். 

"எனக்கு தெரிந்த மலாய்க்காரர் ஒருவர் வைரம் வாங்க வேண்டுமாம்! உங்களிடமிருக்கும் வைரங்களை எடுத்துக் கொண்டு இங்கே வரமுடியுமா"? என்றேன்.

"அவர் என்ன வேலை செய்கிறார்?"என்றார்.

"அவர் ஒரு மலாய் மொழி பத்திரிக்கையின் எடிட்டரும் உரிமையாளரும்" என்றேன்.

"என்னிடம் இருக்கும் வைர மெல்லாம் வெறும் முன்னூறு நானூறு வெள்ளி விலை யுள்ள மலிவான வைரமல்ல! ஆயிர வெள்ளியிலிருந்து ஐயாயிரம் வெள்ளி வரை விலையுள்ள வைரங்கள். அவரால் அந்த விலை கொடுத்து அதை வாங்க முடியுமா?" என்றார்

"அந்த விலையில் நிச்சயமாக அவரால் வாங்க முடியுமென்றால் மட்டுமே நான் அங்கே வருவேன். இல்லையென்றால் வெட்டித்தனமாக வந்து என் டயத்தை வேஸ்ட்டு பண்ண விரும்பவில்லை" என்றார்.  

நான் பதில் கொடுத்தேன் "இப்போ அவர் கை விரலில் கிடக்கும் மோதிரத்தில் பதித்த வைரத்தின் விலை 65 ஆயிரம் மலேசியன் ரிங்கிட் மதிப்புள்ளவை. இப்போ அவர் Girl friendடுக்குவாங்க நினைப்பது இருபது ஆயிரத்திலிருந்து முப்பதாயிரம் வரை. நீங்கள் வைத்திருக்கும் மலிவான வைரங்கள் அவர் வீட்டு வாசல் படிக்கு பதிக்க தேவைபட்டால் சொல்லுகிறேன்! கொண்டு வாருங்கள்" என்று சொல்லி விட்டு டெலிபோன் ரிசிவரை ’டக்’கென்று போட்டேன். சற்றுநேரத்தில் டெலிபோன் மணியடித்தது.

நான் எடுக்கவில்லை. 

அடுத்த பகுதியிலும் தொடரும்… 

S.முஹம்மது பாருக்

இலவசம் விலை போனதே ! [அனுபவங்களின் விலாசம்] - குறுந்தொடர் - நிறைவுப் பகுதி 24

அதிரைநிருபர் பதிப்பகம் | July 03, 2014 | , , , , ,

கு.தொ.: 4

“நம் ஊரிலிருந்து வந்திருக்கிறார்கள். எனக்கு வேண்டியவர். குர் ஆன் தமிழ் தர்ஜமா கொண்டு வந்திருக்கிறார்கள். உங்களிடம் கூட்டி வந்திருக்கிறேன்” என்றேன்.  

“உட்காருங்கள். அந்த மாதிரி காப்பியைக் காட்டுங்கள்” என்றேன். கையோடு கொண்டு வந்திருந்த மாதிரியைக் கொடுத்தோம். 

“தலைப்பைப் பார்த்து தர்ஜமா என்று இருக்கிறதே, தர்ஜூமா என்கிறார்களே?!” என்றார்.

“இதுதான் சரியான உச்சரிப்பு” என்று நம் ஊர் ஆள் சொன்னார். பிரித்து ஒரு பார்வை பார்த்து விட்டு,

“அமல்களின் சிறப்பு என்ற புத்தகம் வாங்கி ஹதியா கொடுக்கலாம் என்று இருந்தோம். ஃபாரூக் அண்ணன் ஊர்க்காரர் கொண்டு வந்த்தால் இதையே வாங்கிக் கொள்கிறோம். எத்தனை பிரதிகள் கொண்டு வந்திருக்கிறீர்கள்?” என்றார்.

“முன்னூறு பிரதிகள் கொண்டு வந்திருக்கிறேன். எல்லாம் பினாங்கில் இருக்கிறது” என்றார். அந்த மேனேஜர், 

“என்ன விலை போட்டிருக்கிறது” என்று கேட்டுக் கொண்டே குர்ஆனைத் திறந்து, 

“ரூ 120/- போட்டிருக்கிறது” என்றார். குர்ஆன் கொண்டு வந்த ஆசாமி உடனடியாக,

“அடுத்தப் பதிப்பு ரூ 150/-“ என்றார். உடனே அந்த மேனேஜர்,

“இப்பொழுது பிறந்திருக்கும் பிள்ளைக்கு மட்டும் பேர் வைப்போம். பிறக்கப்போற பிள்ளைக்கு பிறந்ததும் பேர் வைக்கலாம்” என்று திருப்பியடித்தார்.

குர் ஆன் கொண்டு வந்தவர் அடுத்த பதிப்பின் விலை சொன்னதும் இவர் ஒரு ‘தில்லு முல்லு’ ஆசாமி என்பதைப் புரிந்து கொண்டேன். இது பிரச்னையில் முடியும் என்ற எண்ணம் என் உள் மனதில் உதித்தது. மேனேஜரிடம், ‘வேண்டாமென்று சொல்லுங்கள்’ என்று கண்ணைக் காட்டினேன். அவர் கவனிக்கவில்லை.  குர் ஆனைப் புரட்டிப் பார்ப்பதிலேயே குறியாக இருந்தார். 

“முன்னூறு பிரதிகளையும் எடுத்துக் கொள்கிறோம். என்ன ரேட்டுக்குத் தருகிறீர்கள்” என்று கேட்டார்.

“சிங்கப்பூரில்…..” என்று ஒரு பணக்காரர் பெயரைச் சொல்லி, “அவர் இரண்டு பிரதிகள் வாங்கிக்கொண்டு சிங்கப்பூர் டாலர் 1,500/- கொடுத்தார். கோலாலம்பூரில் (ஒரு தமிழ் முஸ்லீம் பெயரைச் சொல்லி) ஒரு பிரதி எடுத்துக் கொண்டு 2,000/- மலேசிய டாலர் கொடுத்தார்.” என்றார். இதைக் கேட்ட மேனேஜர், 

“அது தர்மம்” என்றார். பாம்புக்குப் பால் வார்த்து விட்டோமோ! நம் மரியாதையும் கப்பல் ஏறப் போகுது! ஊர் மரியாதையும் கப்பல் ஏறப்போகுதென்று எண்ணி எழுந்து கொஞ்சம் தள்ளிப்போய் மேனேஜருக்கு ‘வேண்டாம், திருப்பி அனுப்புங்கள்’ என்று சைகை செய்தேன்.  அவர் என்னை கவனிக்கவில்லை.

“நாங்கள் டெல்லியிலிருந்து பல லட்ச ரூபாய்க்கு புத்தகங்கள் இறக்குமதி செய்கிறோம். பேங்க் ரேட்படி போட்டு எங்களுக்கு 30-35% கழிவு கொடுக்கிறார்கள். அது அல்லாமல் நாங்கள் டெல்லிக்கு புத்தக கண்காட்சிக்குப் போகும் போது பல செல்வுகளையும் செய்கிறார்கள். அதெல்லாம் பெரிய வியாபாரம். பரவாயில்லை. குர்ஆன் என்பதால் கழிவு எங்களுக்கு வேண்டாம். நாங்கள் வாங்கியும் அல்லாஹ் பேராலே ஹதியாதான் கொடுக்கப் போகிறோம். வித்து ஆதாயம் சம்பாதிக்கவில்லை. ரூபாய்க்கு மலேசியா 9 காசு வீதம் ஒரு புத்தகத்துக்கு வருது.  மலேசியா காசு 9.60 போட்டுத் தருகிறேன். விருப்பமிருந்தால் கொடுங்கள். இல்லையென்றால் வேறு தோது பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.

வந்தவரோ 300 குர்ஆனை மலேசியா ரிங்கிட் 1,500/2,000 த்துக்கு விற்று நடுவிக்காடு, மங்கனங்காடு, மழவேனிற்காடு, முடுக்குக்காடு, மரவக்காடு தொக்காளிக்காடு போன்ற காடுகளையெல்லாம் ஒரே வளையா வளைச்சுப்போடலாம் என்று திட்டம் போட்டு விட்டார். முன்னூறு பிரதிகளை வாங்கி ஹதியாக் கொடுக்க்கூடிய ஆளாக இருந்தால் அவன் ஒரு ஏமாளியாக இருப்பான் என்றே நினைத்து விட்டார். ‘பொன் முட்டை இடும் வாத்தின் கழுத்தை அறுத்தால் எல்லா முட்டையையும் ஒரே தடவை எடுத்த் விட்டால் ஒரே நாளில் பணக்க்காரனாகலாம்’ என்ற ஐடியா அவருக்கு வந்து விட்டது. அந்த அளவுக்கு உள்ள பைத்தியகாரன் அங்கே இல்லை என்பதை இந்த அசாமி உணரவில்லை. 

பார்த்தார், யோசித்தார்.  ‘ஏண்டா இவரை இங்கே கொண்டு வந்தோம்’ என்றாகிவிட்டது.  இதில் வேறு பிரச்னை எழும் என்று என் உள் மனம் என்னை உறுத்தியது.  ஒரேயடியாக தட்டிக் கழித்து விட்டால் நல்லதென்றே பட்டது! மேனேஜரிடம் மீண்டும் கண் ஜாடை செய்தேன், அவர் புரிந்து கொள்ளவில்லை. குர்ஆன் கொண்டு வந்த ஆசாமி,

“சரி, கணக்குப் பார்த்து பணம் தாருங்கள். பினாங்கிலிருந்து பிரதிகளை அனுப்பி வைக்கிறேன்” என்றார்.

“பிரதிகள் வந்ததும் கணக்குப் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்” என்றார் மேனேஜர்.

“அட்வான்ஸாவது கொடுங்கள்” என்றார்.

“அதெல்லாம் எங்கள் ஸிஸ்டத்தில் இல்லை. நாங்கள் இந்தியாவிலிருந்து வாங்கும் புத்தகங்களுக்கு புத்தக்கங்கள் பெற்றுக்கொண்ட தேதியிலிருந்து 90 நாட்கள் சென்றுதான் பணம் கொடுப்போம்” என்று ஒரே பேச்சாகச் சொன்ன மேனேஜர், “ பினாங்கிலிருந்து அனுப்பும் லாரி சார்ஜைக் கழித்து பாக்கியை ரொக்கமாக வாங்கிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் பேச்சு இல்லை.  உங்கள் விருப்பம் எதுவோ அதுபடி செய்து கொள்ளுங்கள்” என்றார்.

குர்ஆன் கொண்டு வந்த ஆசாமியின் தந்திரங்கள் ஏதும் பலிக்கவில்லை. ஹதியா கொடுக்கும் குர்ஆனைக்கூட அங்குள்ளவர்களுக்கு படிக்க நேரமில்லை. ‘காசு காசு’ என்பதே ஒவ்வொருவரின் வேதமாக இருக்கிறது. தமிழ் முஸ்லீம்கள் குர்ஆன் வாங்கி ஓதுவதும் படிப்பதும் யார்? அதெல்லாம் இமாம்களின் வேலை என்று ஒதுங்கி விடுகிறார்கள்.  குர்ஆன் கொண்டு வந்த முதலைக்கு ஆசையைத் தூண்டியது எது என்றால் அந்தக் கடை மேனேஜர் தவறுதலாக ஒரு டிப்ஸ் கொடுத்து விட்டார். அது “நாங்கள் ‘அமல்களின் சிறப்பு’ என்ற புத்த்கத்தை வாங்கி ஹதியா கொடுக்கலாம் என்றிருந்தோம் என்பதே.  முன்னூறு நானூறு பிரதிகளை வாங்கி ஹதியா கொடுப்பவர்களாக இருந்தால் பெரிய கையாகவும் அதே சமயம் இஸ்லாம் மார்க்கம் என்றால் அள்ளிக் கொடுக்கும் ஏமாளி பண முதலையாகவும் இருப்பார்கள் இதை பயன் படுத்தி ஊரில் தோட்டந்துரவுகளை வாங்கி போட்டு கால் மேல் கால் போட்டு உண்ணலாம்,. காரில் ஊர் சுற்றலாம் என்ற எண்ணம் தோன்றி இருக்க வேண்டும்.  அதனால் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். 

இஸ்லாம் இப்படிச் சொல்லவில்லை. மனித இனத்துக்கு நல்வழி காட்டவே அல்லாஹ் குர் ஆன் என்ற வேதத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளினான்.  இது மனித இனத்திற்கு நேர் வழி காட்டும் திருமறை என்று சொன்னானே தவிர இதை விற்று பெரும் பணத்தைத் தேடிக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. பணக்காரர் ஆவதற்கு வேறு நல்ல நல்ல புத்தகங்கள் மனிதன் எழுதி இருக்கிறான். அதில் ஒன்று ‘Think and Grow Rich’ by Nepoleon Hill என்பதும் சிறந்த ஒன்று. அதிலும் சிந்தித்து செயல்பட்டு நேர்வழியில் பொருளீட்டி பணக்காரன் ஆகு என்றும் தேடிய பணத்தை ஏழை எளியோருக்கு உதவி செய் என்றும் அதை முதலீடாகக் கொண்டு பெரும் பெரும் தொழிற்சாலைகளை நிறுவி பலருக்கு வேலை கொடு என்றும்தான் சொல்லப் படுகிறது.   அது மனிதனால் எழுதப்பட்ட புத்தகம். அதன் விலையோ எழுதியவருக்கு சிறு ராயல்டி, பதிப்பாளருக்கு காகித விலை, அச்சுக்கூலி சில்லறை விற்பனையாளருக்குக் கமிஷன் என்ற கணக்கிலேயே ஒரு சாதாரண தொழிலாளியும் ஒரு வேலை சாப்பட்டுச் செலவுக்கு செய்யும் செலவைவிட மிகக்குறைவாகவே இருக்கும்.  அந்தப் புத்தகம் படித்து அதன் வழி எத்தனையோ பேர் அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் கோடீஸ்வரர் ஆகி இருக்கிறார்கள்.  அந்தப் புத்தகத்தில் விற்கும் விலையை அச்சிட்டு வெளியிடுகிறார்கள். திருமறையோ how to become rich  பாலிஸையையோ ‘A short cut way to become rich’, ‘A way to become rich quickly’ என்னும் வழிமுறைகளைச் சொல்ல அருளப்படவில்லை.

மனித இனம் ஒழுக்க நெறியுடன் வாழ, மனித இனத்திற்கு நேர்வழி காட்ட அல்லாஹ்வால் அருளப்பட்ட புனித வேதம்.  புனித வேதம்-பணம் சம்பாதிக்க அருளப்பட்ட வேதமல்ல.  அல்லாஹ்வின் பேரருளை பெற மனித இனத்திற்கு தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வழியாக அருளப்பட்டது என்பதை முஸ்லீம்கள் எல்லோரும் உணர வேண்டும்.

ஆக, ஒரு வழியாக ஒரு புக் 9-60 மலேசிய ரிங்கிட் விலை பேசி முடித்தாகி விட்டது. பினாங்கில் இருக்கும் குர் ஆன் பிரதிகள் வந்ததும் ட்ரான்ஸ்போர்ட் சார்ஜ் போக மீதி தொகையை உடனடியாக கொடுப்பதென்ற Gentleman Agreement செய்தாகி விட்டது.  இரவு 7-30 மணியளவில அங்கிருந்த உணவு கடை ஒன்றில் இருவரும் சாப்பிட்டு விட்டு நேராக பார்க்கிங்கில் போட்ட வேனை எடுத்து கொண்டு அவரை அவர் தங்கும் இடத்தில் விட்டு விட்டு என் இடத்திற்கு வந்து விட்டேன். 

இரண்டுமூன்று நாட்கள் ஆனது. குர்ஆன் வரவில்லை. ஒருநாள் என் கடைக்கு குர்ஆன் பேர்வழி வந்தார்.,

“குர் ஆனை கஸ்டம்ஸில் வெளியுறவு அமைச்சைச் சார்ந்த புத்தக தணிக்கை இலாக்காவின் மத சம்பந்தப்பட்ட பிரிவு தடுத்து விட்டது.”  என்றார்.

அதை அவர்கள் வெளியிட மறுக்கிறார்கள் என்று சொன்னார். “என்ன காரணம்?” என்றேன். அவருக்கு விளக்கமாகச் சொல்லத் தெரியவில்லை.  நானும் அவரும் புத்தகக் கடை மேனேஜரிடம் சென்றோம். விபரத்தைச் சொன்னோம். அவர்கள் வெளி நாட்டிலிருந்து புத்தகம் இறக்குமதி செய்வதில் அங்குள்ள அதிகாரிகள் நல்ல பழக்கம்.  அந்த புத்தக கம்பெனிக்காரர்கள் மீதும் அந்த இலாகாவில் நல்ல பெயர்.  அரசுக்கு எதிரான புத்தகங்கள் இறக்குமதி செய்து எந்த கெட்ட பெயரும் அந்தக் கம்பெனிக்கு இல்லை. அந்த இலாக்காக்காரர்க்ளும் அடிக்கடி அங்கே வந்த தடை செய்யப்பட்ட புத்தகங்களின் பெயரையும் சில சமயம் பட்டியலையும் கொடுப்பார்கள்.  சில நேரங்களில் தடை செய்யப்பட்ட புத்தகங்களின் பட்டியல்கள் பத்திரிகைகளில் வரும். ஆரசியல் கோட்பாடு குறிப்பாக கம்யூனிசம், அடுத்து இஸ்லாம் சம்பந்தமான எதிர்மறையான கருத்து போதிக்கும் புத்தகங்கள், அடுத்து ஆபாச புத்தகம். இவை தடை செய்யப்பட்டவை.

புத்தகக் கம்பெனி மேனேஜர் அந்த இலாக்காவுக்கு டெலிபோன் போட்டு விஷயத்தைச் சொன்னார். “நாளை அவரை ஆஃபீசுக்கு வரும்படி சொன்னார். மறுநாள் மேனேஜர் அங்கே சென்று விபரம் கேட்டார். அவர்கள் சொன்னது அரபு மொழி எழுத்தில் இரண்டு மூன்று வகை உண்டாம். 1) இந்தக் குர்ஆனில் மலேசியாவில் அங்கீகரிக்கப்பட்ட எழுத்து இல்லையாம். 2) இந்த குர்ஆன் பலதடவைக்கு மேல் அச்சிட்டதால் சில அரபு எழுத்துகளும் சேர், ஸபர் போன்ற குறியீடுகளும் தேய்ந்து போய் இருப்பதால் அர்த்தம் மாறுபடுகிறது என்றும் அதனால் அதை வெளியிட தடை போடும் நிலை இருக்கிறது.” என்றார்கள்.  எங்களுக்கும் இதை தடை செய்ய வருத்தமாக இருக்கிறது. வேண்டுமென்றே செய்த தவறு அல்ல. இயற்கையாக உண்டானது.  இதற்கு ஏதாவது ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணங்களை இன்னும் இரண்டு வாரத்தில் எழுத்து மூலம் கொடுத்தால் வெளியாக்கும் உத்தரவை தருகிறோம் இல்லை என்றால் எல்லாமே கடலில் கொண்டு போய் கொட்டி விடுவோம்” என்றார்களாம்.  மறுநாள் போனபோது சொன்னார்.

குர்ஆன் வெளியாக என்ன வழி? ஒரு குர்ஆனுக்கு மலேசியா டாலர் 2,000 கேட்ட quick rich அல்லது குறுக்கு வழி பணக்காரனாக விரும்பிய பேராசை பேர்வழிக்கு அல்லாஹ்வின் சோதனை!

குறுக்கு வழிக்காரரின் முகம் வெளிறிவிட்டது.  ஆனால், இது குறுக்கு வழிக்காரருக்கு முன்னமேயே தெரியும்.  அதைக் காட்டிக் கொள்ளாமல் குர்ஆனுக்கு உள்ள பணத்தை முன் கூட்டியே வாங்கி விட்டால்...! என்ற எண்ணம்.

என்னிடம் அவர் சொன்னது குர்ஆன் பினாங்கில் ஒரு பிரபல்யமான தமிழ் முஸ்லீம் கம்பெனியின் குடோவ்னில் இருப்பதாகவே பேசினார். தில்லு முல்லுத் தனம். அதுவும் குர்ஆனில். 

இரண்டு நாள் கழித்து குர்ஆனை வெளியாக்கும் வழி கண்டாச்சு.  “இந்திய தமிழ் முஸ்லீம்கள் இந்த அரபு எழுத்திலேயே படித்துப் பழக்கம். தமிழ் முஸ்லீம்களுக்கு மட்டும் விலையில்லாமல் ஹதியாகாவாகக் கொடுப்பது. தமிழ் முஸ்லீம்கள் ஏற்கனவே அரபு வாசகத்தை ஏற்கனவே ஓத தெரிந்தவர்கள். ஆனால், தமிழில் அதற்கு தெளிவான விளக்கம் தெரியாதவர்கள். இன்னும் பலர் அரபு மொழியில் ஓத தெரியாதவர்கள். ஒரு சில சூராக்கள் மட்டும் வாய்வழி மனப்பாடம் செய்து ஓதுபவர்கள். எனவே அரபு மொழி முக்கியமில்லை. குர்ஆனின் வாசகத்தைத் தமிழில் கொடுப்பதே இதன் முக்கிய நோக்கம். அதுவும் தமிழ் முஸ்லீம்களுக்கு மட்டும் இனாமாகக் கொடுப்பதால் சிறிய எண்ணிக்கையிலான பிரதிகளே வெளியாகும்” என்ற காரணத்தை அந்த இலாக்காவின் தமிழ் பகுதியைச் சேர்ந்த ஓர் இஸ்லாமியர், “இந்தக் காரணத்தை எழுதிக் கொடுங்கள். பிரதிகளை வெளியாக்க என்னையும் கலந்து கொள்வார்கள்.  நான் ஒப்புதல் கொடுக்கிறேன்” என்றாராம். 

அதன்படியே அந்த கம்பெனிக்காரர்கள் கடிதம் எழுதிக் கொடுத்தார்கள்.  இதில் நாலைந்து நாட்கள் ஆகிவிட்டது.  கோலாலம்பூரிலிருந்து வெளியாக்கும் உத்தரவு பின்ங்கு போய் சேர வேண்டும்.  அதன் பின்பே குர் ஆன் வெளியாகும். ஒரு கண்டிஷன். இந்தக் குர்ஆன் தமிழ் முஸ்லிம்களுக்கும் மட்டுமே இனாமாகக் கொடுக்க வேண்டும் “இந்த குர்ஆன் இனாமாக கொடுக்கப்படுகிறது” என்ற ரப்பர்  ஸ்டாம்ப் அடித்தே வழங்க வேண்டும் என்ற உத்தரவின் பேரில் குர்ஆன் வெளியாக்க அனுமதி கிடைத்தது.  

ஏறத்தாழ மூன்று நான்கு தடவை என் வேலையைப் போட்டுவிட்டு கூட்டிப்போய் பெட்ரோல் செலவு, பார்க்கிங்க் செலவு எல்லாம் செய்தும் ஏதும் நான் கமிஷனோ வேறு எதுவுமோ எதிர் பார்க்கவில்லை.  அல்லாஹ்வுக்காக நான் அதையெல்லாம் எண்ணவில்லை. யாருக்கு எந்த உதவி செய்தாலும் எதையும் எதிர்பார்க்கும் எண்ணம் எனக்கு இல்லை.

ஒரு நாள் அவர் என் கடைக்கு வந்தபோது புத்தக வெளியீடு சம்பந்தமாகப் பேசினோம்.  அப்பொழுது நான் சொன்னேன்,“நான் சிறுவர்கள் கதை புத்தகம் 4 கலரில் வெளியிடுகிறேன்.  தமிழ் நாட்டில் நல்ல ஓவியர்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாரையாவது என்னிடம் அரிமுகப்படுத்தி விடுங்கள். அவர்களிடம் பேசி கதையைக் கம்ப்யூட்டரில் அனுப்பி அதற்கு ஏற்ற ஓவியங்கள் தீட்டிக் கொடுத்தால் அதற்குரிய சார்ஜைப் பேசி கொடுத்து விடலாம்.  என்னுடைய அட்ரசைத் தருகிறேன்.  என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்ல முடியுமா?” என்றேன்.

“செய்யலாம். அதற்கு எனக்கு ஒரு கமிஷனை நீங்கள் பேசி கொடுக்கனுமே!” என்றார்.

அதைக் கேட்ட நான் திடுக்கிட்டேன்.  உண்ட தட்டையிலேயே…. ஆள்! என்று தீர்மாணித்தேன். மீண்டும் தொடர்ந்தார்,

“அந்தக் கதையை என்னிடம் கொடுங்கள். நான் ப்ரிண்ட் செய்து அனுப்புகிறேன்” என்றார்.

“இது நாலு கலர் படம் போட்ட புக்குகள். அந்தக் குவாலிட்டியில் இந்தியாவில் செய்ய மிஷின் கிடையாது. வெறும் சினிமா நோட்டீஸ் மட்டும் அடிக்கும் மிஷின் மட்டுமே மண்ணடியில் ‘போட்டு சக்குசக்குன்னு’ அடிச்சுத் தள்ளிட்டு காசைக் கொடு என்பீர்கள்.  பத்தாம் பக்கம் இருக்கும் அடுத்தது 16 பக்கம் வரும். வேண்டாம் என்று கழட்டி விட்டேன், ‘ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே’ பாட்டு ஞாபகம் வந்தது.  அடுத்த நாள் வந்தார்.

“நான் சிங்கப்பூர் போகிறேன். மூன்று நான்கு நாள் கழித்து வருவேன்.  புக் வந்து விட்டால் பணம் வாங்கி வையுங்கள்” என்றார்.  

“உங்களுக்கு எந்த விசா தந்தார்கள்?” என்றேன். 

“விசிட்டிங் விசா தந்தார்கள்” என்றார்.  

“நீங்கள் சிங்கப்பூர் போனால் திரும்பி மலேசியா வர முடியாது. ஒரு முறை வந்து விட்டு வெளியானால் அந்த விசா ஆட்டோமாட்டிக்கா கேன்ஸல் ஆகிவிடும். புத்தகம் வந்ததும் பணத்தை வாங்கிக் கொண்டு போங்கள்” என்றேன்.  அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?

“அது உன்னைப் போல கேனப்பயலுகளிடம்தான் அப்படிச் சொல்வார்கள். நாங்கள் எல்லாம் மண்ணடியில் பேர் போட்டவர்கள். மண்ணடி மண்ணை பொன் என்று சொல்லி விற்று காசு பண்ற ஆசாமிகள் நாங்கள்” என்றார்.  

எனக்கு அவர் 10 வயது இளையவர். சரியான நல்ல பாம்புக்கு பால் வார்த்தோம் என்று என்னையே நான் நொந்து கொண்டேன். எனக்கு பத்து வயது இளையவன் என்னை நீ நான் என்று மரியாதை இல்லாமல் பேசுகிறானே என்று எனக்குக் கோபம் வந்தது.  இந்த மாதிரியான ஆசாமிகளிடம் என் குணமே வேறு. வேறு மாதிரியாக நடந்து விடும்.  நான் முதன் முதலில் மலேயா புறப்படும்போது சொல்லிய வாசகம் நினைவு வந்தது. “உனக்குக் கோபம் வந்தால் திடுதிப்பென்று அரிவாள், கத்தி, கம்பு என்று எடுக்கிற ஆளு நீ. வீட்டில் எத்தனை பீங்கான் தட்டையெல்லாம் உடைத்திருக்கிறாய். அங்கே போய் அப்படியெல்லாம் நடந்து கொள்ளாதே” என்று அழுதுகொண்டு சொன்ன சொல் ஞாபகம் வந்தது!  என்னையே நான் சமாளித்துக் கொண்டேன்.

“அப்படியா! Thank you brother! சென்று வாருங்கள். உங்களுக்கு மாலை போட்டு வரவேற்கிறேன்” என்றேன்.  

போய் விட்டார். இதற்கிடையில் நான் கம்பெனி மேனேஜரிடம் விஷயத்தைச் சொல்லி, 

“குர்ஆனுக்கு வெளியுறவுத் துறைக்குக் கொடுத்த கடிதத்தை வாபஸ் வாங்குங்கள். குர்ஆனை வெளியிடுவது அவர்கள் சொந்த முடிவாக இருக்கட்டும்” என்றேன். அவர், 

“வேண்டாம் ஃபாரூக். குர்ஆன் விஷயம். அந்த நாய் அப்படிச் செய்தது என்று நாமும் அப்படி நடக்க வேண்டாம்” என்றார். 

நாலைந்து நாள் வரை குர்ஆன் வரவில்லை. இதற்கிடையில் அவர் போன நாளாம் நாள் அந்தக் கம்பெனி மேனேஜர் ஜெர்மனியில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு புறப்பட்டுப் போய் விட்டார். திரும்பி வர 10-12 நாட்கள் ஆகும் ஒரு நாள் காலை 8:45 மணியளவில் என் டெலிபோன் மணியடித்தது. எடுத்தேன். ஒரே சப்தம்… இரைச்சல்,”

“ஹலோ” என்றேன்

“நான் தான்….. (குர் ஆன் பேர்வழி) காக்கா, மலேசியா ஏர்ப்போர்ட்டிலிருந்து பேசுகிறேன்” என்றார்.

“பேசுங்கள்” என்று கிண்டலடித்தேன்.

“என்னை வெளியே விட மாட்டார்களாம். ஒரு முறை போனால் விசா காலாவதியாச்சு” என்று சொல்கிறார்கள் காக்கா” என்றார்

“அப்படியெல்லாம் என்னைப் போல இளிச்ச வாயனிடம்தானே சொல்வார்கள்! நீதான் மண்ணடி மண்ணை பொன் என்று விற்கிறா ஆளாச்சே! அதை இமிகிரேஷின்காரனிடம் சொல்லுடா!” என்று டெலிபோனை வைத்து விட்டேன்.  

திரும்பவும் மணியடித்த்து. எடுத்தேன். 

“காக்கா, ரொம்ப கோபப்படுறியளே? குர் ஆன் வந்து விட்டதா?” என்றார்.

“வரவில்லை. மேனேஜர் வெளிநாடு போய்விட்டார். வர 15 நாட்கள் ஆகும். குர்ஆன் கையில் கிடைத்தால்தான் பணம் கிடைக்கும்” என்றேன்.

“ஏன் குர்ஆன் இன்னும் வரவில்லை?” என்றார்.

“அதை பினாங்கில் உன் ஆளிடம் கேள்” என்றேன். 

“நான் இங்கிருந்தே ஊர் போறேன். ஊர் போய் டெலிபோன் போடுகிறேன்” என்று வைத்து விட்டார்.

ஊர் போய் மூன்று நான்கு நாள் கழித்து போன் செய்தார். 

“குர்ஆன் வந்து விட்டதா?” என்றார். 

“குர்ஆன் வந்து விட்டது. அதற்குரிய பணம் வவுச்சரும் கொடுத்து விட்டார்கள். லாரி கூலி போக பாக்கி வெள்ளி இவ்வளவு தந்தார்கள்”என்றேன்.

“”அதில் இவருக்கு இத்தனை வெள்ளி, அவருக்கு இத்தனை வெள்ளி கொடுங்கள். பினாங்கில் (ஒரு நபருடைய பெயரைச் சொல்லி) அவருக்கு இவ்வளவு கொடுங்கள். பாக்கி தொகைக்கு பேங்க் போய் ட்ராஃப்ட் எடுத்து அதை கவரில் வைத்து அத்துடன் வவுச்சரையும் வைத்து என் அட்ரஸ் தருகிறேன். எழுதி தபால் ஆபீஸ் போய் என் பெயரில் ரிஜிஸடர் செய்து விடுங்கள்” என்றார்.

எனக்குக் கடுப்பு ஏறியது,

“நீ கொடுக்க வேண்டிய நபர்களுக்கு அவர்கள் இடத்துக்குப் போய் உன் கடனைக் கொடுக்க வேண்டும். பேங்குக்குப் போய் டிரஃப்ட் எடுக்க வேண்டும். தபால் ஆபீஸ் போய் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். இதையெல்லாம் செய்ய எவனாவது இளிச்ச வாயன் இருந்தால் அவனைப் பார். உன் வீட்டு எடுபிடி என்று நினைத்தாயா? கொஞ்சம் இரக்கப்பட்டு இடம் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவாய். இந்த வேலைகளுக்கு எல்லாம் எவனாவது கேனையன் இருப்பான் அவனைப் பார். பணம் வேனும் என்றால் எவனாவது ஒருத்தனை அனுப்பி முழுப் பணத்தையும் வாங்கிப் போகச் சொல். இந்த ‘மண்ணடித் தந்திரங்கள்’ எல்லாம் இங்கே விலை போகாது.  போனால் போகிறது என்று மனிதாபமான முறையில் உதவி செய்தால் மண்டையில் ஏறி மொட்டையடிக்கும் ஆள் என்பதைப் புரிந்து கொண்டேன்.” என்று சொல்லி போனை கட் செய்தேன்.

அடுத்த நாள் டெலிபோன் வந்தது. ஒரு நபரின் பெயரைச் சொல்லி, 

“அவரிடம் பணத்தைக் கொடுத்து விடுங்கள். ரொம்ப கோபப் படுகிறீர்களே, காக்கா!” என்றார்

“ஆமாம். கோபப்படாமல் இருந்தால் ஒண்ட வந்த பிசாசு ஊர் பிசாசை விரட்டும் என்பார்களே, தெரியுமா? உனக்கு இவ்வளவு உதவி செய்த என்னிடம் கமிஷன் கேட்டாய் அல்லவா? உன் போன்ற நன்றி கெட்டவர்கள் எல்லாம் அல்லாஹ் குர் ஆனை தொடவே கூடாது.  நீ எல்லாம் அதைப் பணம் சம்பாதிக்கும் கருவியாகப் பயன் படுத்துவதனால்தான் இஸ்லாமியர்களுக்கு உலக அளவில் சோதனைகள் ஏற்படுகிறது.” என்று சொல்லி போனை வைத்து விட்டேன்.  

பணம் வாங்க வந்தவரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்து விட்டேன்.  அதோடு காலை சுற்றிய நாகப் பாம்பு போய் விட்டது என்று எண்ணி இருந்தேன்.

அடுத்து ஒரு வாரம் கழித்து மீண்டும் போன் மணி அடித்தது. எடுத்த்தும், 

“காக்கா, நான் தான் பேசுகிறேன். குர் ஆன் கொண்டு வந்ததில் கணக்குப் பார்த்தால் எனக்கு நட்டம் எற்பட்டு விட்டது. அந்தக் கடைக்காரரிடம் சொல்லி இன்னும் கொஞ்சம் பணம் வாங்கிக் கொடுங்கள்” என்றார்.

“பேசியபடிதான் பணம் கொடுத்து விட்டார்களே? அதற்குமேல் எப்படி பணம் கேட்பது?” என்றேன்.

“நான் அங்கே ரொம்ப நாள் தங்கியதில் செலவு அதிகமாகிவிட்டது. அவர்களிடம் நீங்கள் சொல்லுங்கள்” என்றார்.

“நான் சொல்ல முடியாது. பேசியபடி பணம் கொடுத்து விட்டார்கள்” என்றேன்.

“அவர்கள் பணம் கொடுக்க சுனங்கி விட்டதால் நான் தங்கியதில் செலவு அதிகமாச்சே.?” என்றார்

“குர்ஆன் வந்து சேரவிவில்லை. சாமான் வராமல் விலை பேசியதும் பணத்தை இந்தா வாங்கிக்கொண்டு ஊர் போ என்று சொல்லும் முட்டாள்கள் இங்கு இல்லை. அவர்கள் முயற்சிக்கா விட்டால் அவ்வளவு குர்ஆனையும் அரசாங்கம் கடலில் கொட்டி விடும்.  குர்ஆனை காசுக்கு விற்று பணம் சம்பாதித்து தோட்டம் தொறவு வாங்க அவர்கள் உன்னிடம் குர்ஆன் வாங்கவில்லை. அதையெல்லாம் அல்லாஹ்வின் பேரால் இனாம் கொடுக்கவே அதை வாங்கினார்கள். காசு ஆசையால் ஷெய்த்தான் வேலையெல்லாம் செய்யாதே” என்றேன்

“அப்படியென்றால் நான் நேரடியாக அவரிடம் பேசுகிறேன்” என்றார்.

நான் அந்தக் கம்பெனி மேனேஜருக்கு டெலிபோன் போட்டு விஷயத்தைச் சொன்னேன். 

“அப்படியா? அவன் முகத்தில் வைத்திருந்த தாடியையும் உங்களூர் ஆள் என்று நீங்கள் கூட்டி வந்ததாலும்தான் நான் குர்ஆனை வாங்கினேன். ஷைத்தான் வேதம் ஓதுகிறது” என்று சொல்லிவிட்டு,

“உங்கள் ஊரில் ஷெய்த்தான்கள் அதிகம் இருக்கும்போல் தெரிகிறது!” என்றார்.

கொஞ்ச நேரம் கழித்து அந்த்க் கடை மேனேஜர் எனக்கு மீண்டும் போன் போட்டார்.

“பணம் கேட்டார். பணம் இல்லை. கொடுத்த பணத்தை திரும்ப கொடுத்து விட்டு குர்ஆனை எடுத்துக் கொள் என்றேன். விலை பேசி முடித்து ஒப்பந்தம் செய்துவிட்டு பிறகு கூட கொடு குறையக் கொடு என்று கேட்கிறாயே அப்படியெல்லாம் நீ கொண்டு வந்த குர்ஆனில் இருக்கிறதா?. உனக்கெல்லாம் ஒரு தாடி! ஒரு தொப்பி! மகா மட்டரகமான பேர்வழியாக இருக்கிறாயே” என்று திட்டி டெலிபோனை வைத்து விட்டேன்” என்று சொன்னார்.

“மீண்டும் டெலிபோன் போட்டு அதே பல்லவியைப் பாடினார். ஒரு வாரம் டயம் தர்றேன். நான் கொடுத்த பணத்தை கொடுத்து விட்டு குர்ஆனை எடுத்துக் கொள். இல்லை என்றால் நீ இங்கே வா. குர்ஆனை தருகிறேன். நான் கொடுத்த பணம் அல்லாஹ் பேராலே உனக்கு கொடுத்த தர்மமாக இருக்கட்டும் என்று சொன்னேன் என்றும், உழைத்துப் பணம் சம்பாதிக்க வழியைப் பார். தில்லுமுல்லுத்தனம் செய்யாதே” என்று சொன்னதாகச் சொன்னார்.

‘இனிமேல் டெலிபோன் போடாதே. போட்டால் நான் வேறு விதமாகப் போக வேண்டி வரும்” என்று எச்சரித்ததாகச் சொன்னர். அதோடு டெலிபோன் வருவது நின்று விட்டது.  

நான் படித்த புத்தி, பாம்பென்று நினைத்து அடிப்பதா? பழுதை என்று நினைத்து மிதிப்பதா? என்று ஒரு தமிழ் சொல்லடை உண்டு. (இதன் பொருள்: பழுதை என்பது வைக்கோல் பிரி). இரவு வேளைகளில் வயல்களின் வழி பாதையில் போகும்போது அங்கே பாம்பும் சுருண்டு கிடக்கும். வைக்கோல் பிரியும் சுருண்டு கிடக்கும். மங்கிய நிலவொளியில் பார்க்கும்போது அது பாம்பாகவும் தெரியும் வைக்கோல் பிரியாகவும் தெரியும். வைக்கோல் பிரியா பாம்பா? வைக்கோல் பிரி என்று எண்ணி பாம்பின் மீதுகால் வைத்தால் என்ன ஆகுமென்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆட்டுத்தோல் போத்திய நரி மந்தையில் புகுந்து ஆடுகளைத் தின்று ரத்தம் குடித்ததைப்போல் இஸ்லாத்தின் தோல் போத்திய நரிகள் நிறையவே குர் ஆனின் போதனை கூறியும் நபிகள நாயகம்(ஸல்) அவர்கள் கூறிய பொன் மொழிகளை (ஹதீஸ்களை) கூறியும் தங்கள் பொருளாதாரத்தை வளப்படுத்திக் கொள்கின்றன.  அல்லாஹ் குர்ஆனை அருளியது அதை ஒன்றுக்கு நூறாக விற்று மனிதன் காசு பார்க்க அல்ல. ரசூலுல்லாஹ்(ஸல்) நல்லுபதேசம் செய்த ஹதீஸ்களைச் சொன்னது புத்தகமாக்கி ஒன்றுக்கு நூறாக விற்று காசு பார்க்க் அல்ல. அவை இரண்டும் நமக்கு வந்தது மனிதன் நல் வழியில் சென்று நல்வாழ்வை பெற்று நல்லதைச் செய்து மனித இனம் திருந்தி அல்லாஹ்வின் நல் அடியாராகவே.  குர் ஆனில் think and grow தத்துவங்கள் சொல்லப்பட் வில்லை. Think and grow rich புத்தகத்திலும் குறுக்கு வழியில் சீக்கிரமே பணக்காரனாகும் தத்துவமும் சொல்லப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

குர்ஆனில் சொல்லப்பட்டதெல்லாம் நேரிய வழியில் நட; அல்லாஹ் ஒருவன் என்று நம்பு அவனையே வணங்கு; நேரிய வழியில் பொருளீட்டி வாழ்க்கை நடத்து தான தர்மங்களைச் செய் போன்றவையே.

அல்லாஹ்வும் இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் குர்ஆனும் ஹதீஸூம் மனிதனுக்கு நேர் வழி காட்ட அல்லாஹ்வால் அனுப்பப்பட்டவையே. அவை மனிதனுக்கு quick rich method டை கூற அல்லாஹ்வால் அனுப்பப்ப்படவில்லை என்பதை மீண்டும் நினைவு படுத்தி நிறைவு செய்கிறேன், அஸ்ஸலாம் அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு!

S.முஹம்மது ஃபாரூக்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு