அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அல்லாஹ்வுக்கே எல்லா புகழும், இந்த தொடரின் அறிமுக பதிவை வாசித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டதோடு அல்லாமல் தொடரை சிறப்புடன் கொண்டு செல்ல துஆச் செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
எடுத்துக் கொண்ட கருவுக்கு நல்லதொரு வரவேற்பு மாஷா அல்லாஹ் ! இதுவும் அல்லாஹ்வின் நாட்டமே. எடுத்திருக்கும் பொறுப்பை முடிந்தவரை நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் எழுத்தாக இருக்க அல்லாஹ் நல்லருள் புரிவானாக!
முந்தைய பதிவில், இறைவசனத்தை செவியுற்றால் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்களான நபிமார்கள், ஸாலிஹீன்கள், முத்தக்கீன்கள் அவ்வசனத்தின் தாக்கத்தால் சுஜூதில் விழுந்து அழுவார்கள் என்று விவரித்தோம்.
நபி(ஸல்) அவர்களும் பல சந்தர்ப்பங்களில் திருக்குர் ஆன் வசனங்களை ஓத கேட்டு அழுதுள்ளார்கள் என்பதை வரலாற்றில் அதிகமதிகம் காணமுடிகிறது.
இதோ ஒரு சில உதாரணங்கள்.
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்” என்று சொன்னார்கள்.
நான், “தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?” என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், “ஏனெனில், நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்” என்று சொன்னார்கள்.
ஆகவே, நான் அவர்களுக்கு “அந்நிஸா‘ அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். “ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும் போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?” எனும் (4:41ஆவது) வசனத்தை நான் அடைந்தபோது, நபி (ஸல்) அவர்கள், “நிறுத்துங்கள்” என்று சொன்னார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீர் சொரிந்துகொண்டிருந்தன.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள். நூல் : புகாரி 4582
ஏன் நபி(ஸல்) அவர்கள் அழுதார்கள்? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
தன் சமுதாயத்திற்கு எதிராக மறுமை நாளில் தன்னையே அல்லாஹ் சாட்சியாளனாக்குவான் என்ற திருமறையின் வசனத்தைக் கேட்டதும் நபியவர்கள் அழத் தொடங்கி விட்டார்கள். தான் வழிகாட்டிச் செல்லும் தனது சமூகம் தனது வழிகாட்டலை பின்பற்றாத காரணத்தினால் நாளை மறுமையில் நஷ்டவாளிகளாக நிறுத்தப்படுவார்கள் என்பதை நினைத்தே நபியவர்கள் அழுதிருக்கின்றார்கள். அல்லாஹ்வால் சொர்க்கம் வாக்களிக்கப்பட்டவர், தனது உம்மத்துகளையும் சொர்கத்திற்கு சிபாரிசு செய்ய தகுதியானவர், அல்லாஹ்விடம் தம் சமுதாயத்திற்காக வாதாடவும் தகுதி படைத்த அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களே திருக்குர்ஆனுடைய வசனத்தை ஓதக் கேட்டு அழுதுள்ளார்கள் என்றிருக்கும் போது நாம் என்றைக்காவது ஒரு திருக்குர்ஆன் வசனத்தை ஓதி பொருளுணர்ந்து அழுதிருக்கிறோமா?
நபி(ஸல்) அவர்களுக்கு குர்ஆன் வசனம் இறங்கியபோது அவர்களை குறித்தும், அவர்களின் சமூதாயத்தை குறித்தும், மறுமை, நரகத்தை குறித்தும் அல்லாஹ் சொல்லும் போதும் அவர்களால் தாங்க முடியாமல் பல சந்தர்ப்பங்களில் அழுதிருக்கிறார்கள்.
பல மார்க்க சொற்பொழிவுகளில் நாம் செவியுற்றிருக்கிறோம், அல்லாஹ் நம்மை மறுமையில் எல்லோருடைய முன்னிலையில் விசாரிப்பான், கபுருடைய வேதனை உள்ளது, நரகத்தின் கொடூரம் இவைகளை பற்றி எல்லாம் பல ஹதீஸ்கள், குர்ஆன் வசனங்களை ஓதக் கேட்டிருப்போம். ஆனால் இவைகளை எண்ணி என்றைக்காவது அழுதிருக்கிறோமா?
சொர்க்கத்தில் நேரடியாக பிரவேசிக்க இருக்கும் நபி (ஸல்) அவர்களே பல சந்தர்ப்பங்களில் அழுதிருக்கும் போது, அவர்கள் வழியை பின்பற்றும் நாம் அல்லாஹ்வின் திருவசனங்களை பொருளுணர்ந்து ஓதும் போதும், செவியுறும் போதும் அவனுக்காக நாம் அழனும், அழவேண்டும் இறைப் பொருத்தத்தை நாடியே.
வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன; இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் - இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் - அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன். (குர் ஆன் 2:228)
இந்த வசனத்தை வாசித்தால் நமக்கு ஏதாவது அழுகை வருகிறதா? ஆனால் இந்த வசனம் இறங்கியவுடன் உமர் (ரழி) அவர்கள் மகனார் இப்னு உமர்(ரழி) இந்த வசனம் இறங்கியவுடன் செவியுற்று அழுதுள்ளார்கள் என்பதை வரலாறுகளில் நாம் காண்கிறோம்.
இந்த இறைவசனத்தை உன்னிப்பாக கவனித்தால் நமக்கு புரியும். நம் உள்ளங்களில் உள்ளதை சீர்தூக்கி பார்க்க இந்த ஒரு வசனம் நம்மை அச்சமூட்டி எச்சரிக்கிறது. உள்ளங்களில் உள்ளதை வெளிப்படுத்தினாலும், அல்லது அவைகளை மறைத்தாலும் அதற்காக அல்லாஹ் நம்மிடம் கேள்வி கேட்பான்.
நாம் எவ்வளவு தீய எண்ணங்களை நம் உள்ளங்களில் போட்டு வைத்துள்ளோம், தனி மனிதர்களை பற்றிய தவறான எண்ணம், மார்க்க விசயத்தில் பல உள்நோக்கத்துடன் பிறரை வேண்டும் என்றே பொதுவில் வம்புக்கு இழுப்பது என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இது போன்ற வசனங்களை படிக்கும் போது நம் உள்ளம் உருக வேண்டும், நம்முடையை உள்ளத்தில் உறைந்து கிடைக்கும் பாவ செயல்களை எண்ணி அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோர வேண்டும்.
“இன்றைக்கு ஜும்மா பயான் கேட்டியா?” என்று நம்மவர்களிடம் கேட்டால், பதில் இப்படி வரும்.
“என்னப்பா, இன்றைக்கு பயான் செய்தவர் ஒரே அரைச்ச மாவையே அரைக்கிறாரு, ஒரே பழைய ஹதீஸ், அடிக்கடி கேட்ட குர் ஆன் வசனங்கள் புதிதாக எதுவுமே சொல்லவில்லை.” என்று சலித்துக் கொள்பவர்கள் நம்மில் உள்ளனர் தவிர, ஜும்மாவில் கூறப்பட்ட இறைவசனங்கள் பற்றியோ, பயானில் சொல்லப்பட்ட அல்லாஹ்வின் எச்சரிக்கைகள் குறித்தோ என்றைக்காவது சிந்தித்து இருக்கிறோமா? அச்சப்பட்டிருக்கிறோமா? அழுதிருக்கிறோமா?
அல்லாஹ்வின் திருவசனங்களும், ஹதீஸ்கள் அனைத்தும் பழையது என்று சொல்லி அலுத்துக்கொள்வதற்காக அல்ல. அவைகள் இன்றல்ல என்றுமே புதியது. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்றது. ஒவ்வொரு இறைவசனத்தையும் அர்த்தத்துடன், வரலாற்று சான்றுகளுடன் புரிந்து அல்லாஹ்வின் மீது அச்சத்துடன் ஓத ஆரம்பித்தால், அல்லாஹ்வின் சிறப்புகள், தன்மைகளை எண்ணி எண்ணி அழும் போது, அவைகள் என்றுமே புதியதாகவே இருக்கும்.
இன்று முதல், நாம் குர்ஆனின் ஒரு பக்கமாவது புரட்டி பொருளுணர்ந்து படித்து, அவைகளை விளங்கி அல்லாஹ்வின் சக்தி, ஆற்றல், எச்சரிக்கை, கருணை இவைகளை எண்ணி ஒவ்வொரு நாளும் அவனின் பொருத்தத்தை மட்டுமே நாடி அழும் நன்மக்களாக நம்மை நாமே மாற்றிக்கொள்ள வேண்டும் இன்ஷா அல்லாஹ். இதற்கு அல்லாஹ் நம் எல்லோருக்கும் உதவி புரிவானாக.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
M தாஜுதீன்


