Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label துபாய். Show all posts
Showing posts with label துபாய். Show all posts

தேசியத் தினம் 45 26

அதிரைநிருபர் பதிப்பகம் | November 30, 2016 | , , , , , , ,


ஷேக்குகள் எழுவரின்
போஷாக்குக் குழந்தை
அமீரகம்!

இந்தக்
கூட்டமைப்பின் வெற்றி
ஒற்றுமைக்கான அங்கீகாரம்
உலகுக்கான முன்னுதாரணம்

இந்த ஒற்றுமை
நாற்பத்திஐந்து ஆண்டுகாலப்
பத்தியம்
நன்மையைத் தேடித்தந்த
வைத்தியம்

தொழுகைக்குப் பிறகும்
தோளோடு தோள் நின்றதால்
தோல்வி யறியாத
தேசமாகிப்போனது அமீரகம்

ஒன்றுமில்லாதத் துவக்கம்
என்றுமில்லாத வளர்ச்சி
எனினும்...
மாய மந்திரமல்ல
நேயம், தந்திரமல்ல!

அமீரகம்...
ஊரில்
ஊதாரியாகத் திரிந்த
உதவாக்கரைப் பலருக்கு
உலகத்தைக் காட்டியது

உழைப்பை மதித்தது
ஊதியம் கொடுத்தது
திறமையைக் கண்டெடுத்துத்
திரவியம் தந்தது

வாழ்க்கையில்
பிந்திய மனிதர்களின்
இந்திய வயிற்றுக்கு
பந்தியே வைத்தது!

அரசியல் தலைவன் என்னும்
அடர்த்தியான விஷத்தையும்
தல தளபதி யென்னும்
மதிமயக்கும் யுக்தியையும்
நம்நாட்டில் விட்டுவிட்டு
உழைத்து வாழ
உகந்த இடம் அமீரகம்!

சுதந்திர நாட்டில்
சுகாதாரச் சீரழிவு
ஷேக்குகள் நாட்டிலோ
சீக்குகள் மிகக்குறைவு

இயற்கை வளமிருந்தும்
எல்லைகளகன்ற இடமிருந்தும்
எம் நாட்டிலோ
எல்லாத் துறைகளிலும்
கையூட்டு
பொதுப் பணிகளில்
சதவிகித வெட்டு
இருபத்தியோராம் நூற்றாண்டிலும்
இருள்சூழ மின்வெட்டு

எந்த வளமும்
இல்லயெனினும்
யானைப் பலம்
அமீரகத்திற்கு

ஊழலால் உழன்று
உதவியின்றி மிரண்டு
அலைகழிக்கப்பட்ட இந்தியனை
அரவணைத்தது அமீரகம்

வகைக்கேற்ப அவரவர்க்கு
வருமானத்தை வழங்கியது
வாழ்க்கையை
வரையறுத்துத் தந்தது

படிக்காதவருக்கும்
துபை என்னும் அடைமொழி
படித்தெடுத்தப் பட்டம்போல்
பெயரோடுச் சேர
ஊர் மதித்தது

இந்தியாவில்
கனவுகளில் மட்டுமே வாய்த்த
காட்சிகளெல்லாம்
நனவானது அமீரகத்தில்

நம்நாட்டு முன்னோரும்
நானும்
பின் வருவோரும்
உண்ணவும் உடுக்கவும்
உறையுள் உருவாக்கி உய்க்கவும்
உதவி இத்தேசம்

நபிமொழி உணர்ந்து
நாகரிகத்தைச் சற்றே
நன்முறைப்படுத்தி
எல்லைமீறலைக் கொஞ்சம்
இழுத்துப் பிடித்தால்
நானிலத்தில் நிகரின்றி
நிமிர்ந்து நிற்கும் இந்நாடு.

நம்
நாட்டுப்பற்றுக்கு நடுவில்
கொஞ்சம்
நன்றிக்கடன் பட்டு
வாழ்த்துவோம் அமீரகத்தை1

....ஈஷி பிலாதி... எமராத்தி!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

பெருநாள் இரவு ஒளி மழை ! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | July 29, 2014 | , , , ,

மழையில்லா இரவில் துபாயில் இன்று ஒளி மழை !

இந்த ஒளி மழை பெய்வதற்கு பொறுப்பேற்றிருக்கும் நிறுவனத்தில் பணியிலிருக்கும் முக்கியமான ஒருவரின் அருகில் இருந்து கொண்டு அதன் நுணுக்கங்களை தெரிந்து கொண்டே ஆடிய கைகளில் சிக்கிக் கொண்ட கேமராவில் தட்டுப்பட்ட துளிகள் !

இந்த வெளிச்சமும் அதில் காணும் வலைவுகளுக்குக்குள் ஏதேனும் அரபி எழுத்து தெரிகிறது என்று அர்த்தங்கள் கொடுத்தால் நான் எப்படிங்க பொறுப்பாக முடியும் ! :)?

இவ்வகை வானவேடிக்கைகள் நிறைந்த விரையங்களில் உடண்பாடில்லை, இருப்பினும் வெகு சில நிமிடங்களே நிகழ்த்த முடிந்த ஒளி மழைக்கான செலவு, அதற்கான ஆயத்தங்கள், எத்தனை பணியாட்கள், எவ்வாறு அதனை இயங்கச் செய்கிறார்கள், அதன் பாதுகாப்பு எப்படி கையாளப்படுகிறது என்ற அனுபவ நுணுக்கங்கள் அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட முடிந்தது.

குறிப்பு : கேமராவை கையில் எடுத்து நீண்ட நாட்களானதால் சிக்கியதை அள்ளிப் போட்டிருக்கிறேன்...



























அபூஇப்ராஹீம்

இத்தியாதி இத்தியாதி - வெர்ஷன் - 3 26

அதிரைநிருபர் பதிப்பகம் | November 28, 2013 | , , , , , , , , ,

குறுக்கம்:

அவனுக்கு இருபத்தியோரு வயதிருக்கும். பாகிஸ்தானியருக்கே உரித்தான நல்ல உயரமும் நிறமும் வசீகரமான முகமும் கொண்டவனாக என் முன் நின்றான்.  முகத்தில் தாடியாகவும் கிருதாவாகவும் அவன் வரைந்து வைத்திருந்த  நளினம் நவ நாகரிகத்தின் தன்மையதாக இருந்தது.  படிப்பறிவு கிடையாது என்பதை அவன் பார்வையும் தோரணையும் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

"உனக்குச் செய்து காண்பிக்கச் சொல்லும் சோதனையெல்லாம் கிடையாது. உன் அண்ணன் கம்ரான் ஏற்கனவே என்னிடம் பேசிவிட்டான். ஒழுங்காக நாளையிலிருந்து வேலைக்கு வா.  உன் பாஸ்போட் காப்பி மற்றும் ஒரு பாஸ்போட் சைஸ் புகைப்படமும் கொடு. விசா ஏற்பாடு செய்கிறேன்." என்று சொன்னதும்,

"நன்றி சார்ஜி" என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டான். 

அவனை எங்களின் பணிமனையில் ஸ்ப்ரே பெயின்ட்டராக வேலைக்குச் சேர்க்கச் சொல்லி ஏற்கனவே அவன் அண்ணன் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் ஊரில் ஊதாரியாகத் திரிவதாகவும் ஸ்ப்ரே பெயின்ட்டிங் தெரிந்து வைத்திருந்தும் ஓரிடத்தில் கூட தொடர்ந்து வேலை செய்வதில்லை என்றும், ஆகவே உதவுமாறும் ரொம்பக் கெஞ்சினதால், எங்களுக்கும் பெயின்ட்டர் தேவைப்பட்டதால் வரச் சொல்லியிருந்தேன். அப்படி விசிட் விசாவில் ஷார்ஜா வந்தவனிடம்தான் நாளை வருமாறு சொல்லி அனுப்பினேன்.

எங்கள் பணிமனையில் புல்டோஸர், வீல் லோடர், மோட்டர் கிரேடர், ரோட் ரோலர், கிரேன் போன்ற பலதரப்பட்ட கனரக எந்திரங்களையும் பழுது பார்ப்போம், டென்டிங் பெயின்டிங் செய்து புதுப்பிப்போம். அத்தகைய பணிமனையை நிர்வகிக்கும் பொறுப்பில் நான் இருந்ததால் என் கோரிக்கையின்படி அந்த கம்ரானின் தம்பி ரிஸ்வானுக்கு வேலை தர ஹெச் ஆர் ஒப்புக்கொண்டனர்.  விசா ப்ரொஸஸிங்கும் துவங்கியது.

விசா அடிக்கப்படும் வரை அவனை வேலைக்கு வரச் சொல்லி விட்டேன். எனவே, அவனும் தினமும் வேலைக்கு வரலானான். அவன் அண்ணன் கம்ரான் எனக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டான்.  

திடீரென ஹெச் ஆரிலிருந்து வந்த மின்னஞ்சலில் உடனே அவனை வேலையை விட்டு நிறுத்தும்படியும் ஹெச் ஆரை வந்து சந்திக்கும்படியும் சொல்லப்பட்டிருக்கவே என்ன ஏதுவென்று விசாரிக்கலானேன்.

விசா விண்ணப்பிக்க வேண்டிய ஷரத்களில் ஒன்றாகிய  மருத்துவ பரிசோதனையில் அவன் ஃபெயிலாகி விட்டதாகச் சொன்னார்கள்.  சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் விண்ணப்பிக்கலாமே என்ற என் யோசனையை மறுத்த ஹெச் ஆர் வெளியே சொல்ல வேண்டாம் அவனுக்கு ஹெச் ஐ வி பாஸிட்டிவ் என்று குண்டைத் தூக்கிப் போட்டனர்.  அவனிடமும் சொல்ல வேண்டாம். பாகிஸ்தான் போய் பரிசோதித்து விட்டு வரச்சொல்வோம் என்று தீர்மானிக்கப் பட்டது.

அவனிடம் அப்படியே சொல்லி ஊருக்குப் போய் சிகிச்சைச் செய்து குணப்படுத்திக் கொண்டு வா என்று சொல்லிவிட்டு அவனிடம் தனியாகக் கேட்டேன்,

"ரிஸ்வான், உண்மையைச் சொல். உனக்குப் பெண்கள் தொடர்பு உள்ளதா?"

"இல்லை சார் ஜி, எப்பவாவது நண்பர்களோடு ரண்டிகளிடம் செல்வதுண்டு"

"உன் வயதுக்கும் அழகுக்கும் நல்ல மனைவி கிடைக்கும் வரை உனக்குப் பொறுமை இல்லாது போனதே"

"ஏன் சார்ஜி, ஏதும் கெட்ட வியாதியா எனக்கு?"

"சரியாத் தெரியலப்பா. ஊருக்குப் போய் சோதித்துக் கொள்"

அவன் பாகிஸ்தான் போய்  7 வது நாள் அவன் அண்ணன் கம்ரான் அழுது கதறிக்கொண்டே வந்து எமர்ஜென்ஸி லீவ் கேட்டு நின்றான்.  ஏன் என்று வினவ, தன் தம்பி தற்கொலை செய்து கொண்டதாகவும் உம்மா தனியாக ஆறுதலின்றி தவிப்பதாகவும் சொன்னான். நெஞ்சுக்குள் எனக்கு என்னவோ செய்தது.  அவனை உடனே அனுப்ப ஏற்பாடுகள் செய்யச் சொல்லி ஹெச் ஆருக்கு தெரிவித்துவிட்டு ரொம்ப வேதனைப்பட்டேன்.

என்னாச்சு இந்த இளைய சமுதாயத்துக்கு.  எத்தனையோ விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டும் இப்படி மனித வாழ்க்கையை விட்டிலின் வாழ்நாளைப் போல சுறுக்கிக்கொள்கிறார்களே என்கிற ஆதங்கம் எனக்கு ஒரு வாரத்திற்கு சரியாகத் தூங்க விடாமல் வாட்டியது.  அந்தப் பையனின் முகமும் அதில் வரையப்பட்டிருந்த தற்காலிக கிருதா தாடியும் நிழலாடிக்கொண்டே இருந்தது.

ஹெச் ஐ வி பாஸிட்டிவ் மானிட வாழ்க்கைக்கு நெகட்டிவ் என்பதை மனிதன் என்றுதான் உணரப்போகிறானோ.

தப்பாட்டம்

அப்போது நான் துபை தேராவில் என் நண்பன் ஆடிட்டர் கபீரின் அறைத் தோழனாக இருந்து வந்தேன். நாங்கள் இருந்த மூன்றாவது மாடியின் பால்கனியில்தான் சின்னச் சின்னதாக உடற்பயிற்சி செய்வோம். காற்று வாங்குவோம், சபகா வீதியின் போக்குவரத்தை வேடிக்கைப் பார்ப்போம். மேலும், அங்கிருந்து பார்த்தால் சபகா ரோட்டின் அந்தப் பக்கமாக இருக்கும் ஹோட்டல்கள் தெளிவாகத் தெரியும்.


மற்ற நாட்களை விட வார இறுதி நாட்களும் விடுமுறை நாட்களும் மிகவும் புழக்கமாக இருக்கும்.  இரவு முழுதும் தேரா தூங்காது.  அப்படித்தான் ஒரு நாள் பால்கனியிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஒரு பெருநாள் தினத்தின் மாலை நேரம். அந்த ஹோட்டலில் புழக்கம் அதிகமாக இருந்தது.  நான் என் நண்பனை அழைத்து அதைக் காட்டி'" அங்கே என்னடா நடக்கிறது? " என்று கேட்டேன். அவன், " உனக்கு விளங்கலையா? ப்ராத்தல்டா. நான் சொல்றதெல்லாம் நடக்கிறதா இல்லையா என்று பார்" என்று வரிசையாகச் சொல்லத் துவங்கினான்.

"இப்ப பாரு அந்த பட்டான் அங்கே மருவிக்கொண்டே வர்ரானா. அந்த பங்காளியைப்பாரு அவனை அனுகுவான்"

அனுகினான்.

"ஒன்னும் பேசிக்க மாட்டானுக ஆனா ஹோட்டலுக்கு இவனை அவன் பின் தொடர்வான் பாரு"

தொடர்ந்தான்.

"கொஞ்ச நேரத்திலே வெளியே வந்து வேற கிராக்கி தேடுவான் பாரு"

வந்தான். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு போவோர் வருவோரின் முகம் பார்க்கலானான்.

"இப்படித்தான் பார்ப்பானுக. யாராவது கொஞ்சம் இவனுகளை உற்றுப்பார்த்தால் கிட்ட வந்து கொக்கிப் போட்டுருவானுக. இது இங்கே சகஜம்டா.  ஒழுக்கமா இருக்க நினைப்பவர்கள் மட்டுமே இங்கே ஒழுக்கமா வாழ முடியும். எப்படியும் வாழ விரும்புபவர்களுக்கு துபை தேரா சொர்க்கம்டா" என்றான்.

எனக்கு நம் சமுதாயத்தை நினைத்து ரொம்ப வேதனையாக இருந்தது. அதுவும் ஈத் போன்ற நாட்களில் பீர் குடிப்பதும் விலை மாதர்களை நாடி போவதும் மிகவும் சகஜம் என்று கேள்விப்பட்டு கவலையாக இருந்தது

இப்படித்தான் ஒருமுறை ஒரு பச்சையிடம் (பாகிஸ்தானியரை இப்படித்தான் குறியிட்டு அழைப்போம்) " நீ தண்ணி அடிப்பியா?" என்று கேட்க அவன் சொன்னான், " நயி சார்ஜி, சிர்ஃப் ஈத்கா தின் பீயகா" என்றான்.  "ஏன்டா அது தியாகத் திருநாள்டா அன்னிக்கு ஏன்டா குறிப்பா குடிக்கிறீங்க?' என்ற என்னை விநோதமாகப் பார்த்துவிட்டு,

"தினமும் குடிக்கக்கூடாது சார்ஜி. ஈத் கா தின் குடிச்சே ஆகனும்" என்றான்.

மது மாது இரண்டிலும் மூழ்கி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கும் நம் சமுதாயத்தை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயக் காலக் கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதை எல்லோரும் உணர்ந்தாக வேண்டும்.  வெளியே சொல்ல பயந்தோ வெட்கப்பட்டோ  மறைத்தோமேயானால் புறையோடிப் போய் விடும் வியாதி இது.

மைய வாடிக்குச் செல்லும் வழி:

அந்த
வழிகாட்டிப் பலகையில்
அம்புக்குறியிட்டுக் காட்டும்
ஒரு வழிப் பாதையை
வாசிக்கும் நிலையில்
அவர் இருப்பதில்லை

அதற்கு முன்
பூடகமாகச் சொல்லப்பட்ட
மது 
முறையற்ற மாது
பழக்கங்களுக்கு எதிரான
எந்த எச்சரிக்கையையும்
புரிந்து கொள்ளும் நிலையில்
அவரை
வைத்திருக்கவில்லை அந்தப் போதை

சில்லரை இன்பங்களுக்காக
நிரந்தர சந்தோஷத்தை
இழந்துபோதல் அறிவா?

யாவற்றையும்
சடுதியில் முடித்துக்கொண்டு
சட்டென 
அற்ப ஆயுளில்
அடங்கும் அவசரம் ஏன்?

மென்று விழுங்கினாலே செரிக்கும்
மெல்ல அனுபவித்தாலே நிலைக்கும்

சுத்தம்
வயிற்றுக்கு மட்டுமல்ல
செயலில் சுத்தம்
வாழ்நாள் முழுக்க
சோறு போடும்

மது மாது வாயிலாக
மைய வாடியிலிருந்து வரும்
அத்துணை அழைப்பிதல்களையும் 
நல்லமல்களைக் கொண்டுப்
புறக்கணியுங்கள்
நிர்ணயிக்கப் பட்ட
நெடும் பயணக் 
காலம் வரும் வரை!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) 16

அதிரைநிருபர் பதிப்பகம் | August 21, 2013 | , , , , ,

தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல அனைத்து உலகின் சாதிக் கொடுமையால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களையும் இரண்டு தினங்களுக்கு முன்னர் ஓர் அதிர்ச்சியான செய்தி பெரிதும் பாதித்தது. அதுதான் 2010ம் ஆண்டு அல்லாஹ்வின் நாட்டப்படி தூய இஸ்லாத்தை தழுவிய டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்களின் மரணச் செய்தி. திங்கள் கிழமை காலைப் பொழுதில் மரணச் செய்தியை கேட்டவுடன் அனைவரின் மனதிலும் ஆழ்ந்த சோகம் ஒட்டிக் கொண்டது. இது நம்மில் சொந்தம் ஒருவர் மறைந்த துயருக்கு நிகராக வாட்டியது. எங்கிருந்தோ இருந்தவர் இஸ்லாத்தை ஏற்று, அவருக்கு இறைவன் விதித்த மரணம் வந்தடைந்ததும் ஏன் என் மனது இப்படி பதறியது. இதற்கு தனிப்பட்ட முறையில் சில காரணங்கள் உண்டு.

இறை மறுப்புக் கொள்கையில் இருந்து தீவிர பிரச்சாரம் செய்து பின்னர் அதிலிருந்து விலகி, இறைவன் ஒருவன் இருக்கிறான் அவன்தான் ‘அல்லாஹ்’ என்று ஆணித்தரமாக எடுத்துரைத்துச் சென்ற முன்மாதிரி முஸ்லிமாக வாழ்ந்து மரணித்துள்ளார்கள் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்).


இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையை ஏற்ற டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) தமிழகம் மட்டுமல்ல அயல்நாடுகளில் வசிக்கும் அனைத்து தமிழ் பேசும் முஸ்லீம்களிடம், இறைவனின் நாட்டப்படி ‘ஏன் இஸ்லாத்தை ஏற்றேன் என்பதை மட்டும் சொல்லாமல், முஸ்லீம்கள் தூய இஸ்லாத்தின்படி எவ்வாறு முறையாக வாழவேண்டும் என்று தீவிர பிரச்சாரம் செய்யவும் ஆரம்பித்தார்கள்’ என்பது உலகறிந்த முக்கியத் தகவல்.

டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்களை இந்த வருடம் (2013) மே-மாதம் அமீரகத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? எதிர்த்தாரா? என்ற ஆவணப் படம் துபாயில் அறிமுகம் செய்யும் ஏற்பாட்டிற்கு உதவும் வாய்ப்பு எனக்கும் எனது சொந்தமான மெய்னுதீனுக்கும் கிடைத்தது. எதிர்பாராத அவசர ஏற்பாடாக இருந்தாலும் அன்றைய தினம் மடிக்கணினி (Laptop), ஒளிப்படக்காட்டி (Projector) இவைகளை குறைந்தபட்ச நேரத்தில் நானும், மெய்னுதீன் இணைந்து அந்த வரலாற்று சிறப்புமிக்க ஆவணப்படத்தை அங்கு வந்திருந்திருந்த அனைத்து சகோதரர்களுக்கும் போட்டுக் காட்டப்பட்டது.

அன்றைய தினம் அமீரகத்தில் வசிக்கும் சகோதரர்கள் ஜாஃபர் அலி, ரஃபி அஹமது, மற்றும் சென்னையிலிருந்து டாக்டர் அப்துல்லாஹ் அவர்களுடன் வந்திருந்த சகோதரர் செங்கிஸ்கானும் ஒரே காரில் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்களுடன் பயணித்தோம். உண்மையில் நினைவை விட்டு அகலாத நிகழ்வு. அந்த 30 நிமிடத்தில், டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் மேடையில் பேசாத சில முக்கியத் தகவல்களை அவர்களால் சொல்லக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டுப் போனேன்.

இஸ்லாத்தை பெரும் தலைவர்களுக்கு எத்திவைக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தினார், கருணாநிதி முதல் போப் ஆண்டவர் வரை சென்று இஸ்லாத்தை எத்தி வைத்து அவர்களோடு விவாதிக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தைச் சொன்னார். அவ்வாறான விவாதங்களை காணொளியாக ஆவணப்படுத்தி வெளியிடுவேன் என்றும் உறுதியாக சொன்னார். கலைஞர் கருணாநிதியை இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்ததாகவும், கலைஞர் ஒரு வாக்குறுதி கொடுத்ததாகவும் அந்த சந்தர்பத்தில் சொன்னார். அந்த வாக்குறுதி என்னவென்று டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் எங்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. இஸ்லாத்தின் பக்கம் கலைஞர் கருணாநிதிக்கு மீண்டும் அழைப்பு விடுப்பேன் என்று தெளிவாக, உறுதியுடன் சொன்னார்கள்.

திரைப்படத் துறையில் பிரபலமானவர்களில் முக்கியமானவரான AVM சரவணன் அவர்களுக்கு இஸ்லாதிற்கு வர ஆர்வம் ஏற்பட்டுள்ளது என்று சொல்லியதோடு அல்லாமல் தன்னிடம் AVM சரவணனன் அவர்கள் பல இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவுகள், புத்தகங்கள் வாங்கி சென்றுள்ளதாகவும், தனக்கு இருக்கும் ஒரு சில பணப் பிரச்சினைகளை முடித்துவிட்டு இஸ்லாத்தில் இணைவது குறித்து யோசிப்பேன் என்று AVM சரவணன் அவர்கள் டாக்டர் அப்துல்லாஹ் அவர்களிடம் சொன்னார் என்ற மற்றுமொரு தகவல், அப்போது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த எனக்கும், சகோதரர்கள் ரஃபி அஹமது ஜஃபர் அலி ஆகியோருக்கும் மிகவும் இன்பமான ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தன்னோடு ஒன்றாக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக கட்சி தலைவர் வைகோ ஆகியோர் இஸ்லாத்தை பற்றி அறிந்தவர்கள், அவர்கள் இஸ்லாத்தை ஏற்க மிகவும் தகுதியானவர்கள். அவர்களும் இஸ்லாத்தில் இணைய வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தார்கள் டாக்டர் அப்துல்லாஹ்.

ஒரு முறை ஒரு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கெடுத்த போது, 7 வருடம் பட்டம் பெற்ற ஒரு இளம் மவ்லவி மற்றொரு மார்க்க சொற்பொழிவாளரை பற்றி தன் உரையில் பொது மேடையிலேயே குறை கூறி பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அது தனக்கு மிகவும் எரிச்சலடைய செய்ததாகவும் டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் மிகவும் வருத்தப்பட்டு சொன்னார்கள். தன்னைப் போன்ற இன்னொரு இஸ்லாமிய சகோதரனை திட்டுவது தான் மார்க்க சொற்பொழிவு என்று பல மார்க்க சொற்பொழிவாளர்கள் கருதுகிறார்களே, இதற்காகத்தான் 7 வருடம் மதர்ஸாவில் படித்தீர்களா? என்று ஆதங்கத்தோடு வினவியதையும் எங்களோடு பகிர்ந்து கொண்டார்கள்.

கருணாநிதி, AVM சரவணன், திருமாவளவன், வைகோ ஆகியோருக்கும் இஸ்லாத்திற்கும் இருக்கும் தொடர்பு பற்றி ஒரு காணொளி பேட்டி தர முடியுமா என்று டாக்டர் அப்துல்லாஹ் அவர்களிடம் கேட்டேன். “அல்லாஹ்வை தவிர நான் யாருக்கும் அஞ்சமாட்டேன், நிச்சயம் அவர்கள் தொடர்பாக பேட்டி தாராளமாக தருவேன்” என்று சொல்லி மறுநாள் துபாய் தேரா ஸ்டார் மெட்ரோ ஹோட்டலுக்கு வர சொன்னார்கள்.

மறுநாள் எனது மற்றொரு சொந்தமான அஹமது முஹ்சீனையும் உடன் அழைத்துச் சென்றேன். மனோதத்துவ நிபுணரான டாக்டர் அப்துல்லாஹ் அவர்களிடம் சிகிச்சை பெறுவதற்காக நிறைய பேர் அங்கே காத்திருந்த காரணத்தால், என்னிடம் பேட்டி தருவதாக சொல்லியிருந்தது அன்று நடைபெறாமல் போனது. இன்ஷா அல்லாஹ் திருமாவளவன், கருணாநிதி, AVM சரவணன், வைகோ ஆகியோருக்கும் இஸ்லாத்திற்கு உள்ள தொடர்பு பற்றி நல்ல வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அது பற்றி பொதுவில் பேசுவேன் என்று சொல்லி எங்களிடமிருந்து விடை பெற்றார் டாக்டர் அப்துல்லாஹ். 

முனைவர் பட்டம் பெற்று உலக புகழ்பெற்ற மனிதராக 63 வயது நிறைந்தவர்களக இருந்தாலும் 16 வயது வாலிபர் போல் மிகவும் சுறுசுறுப்புடன் தன்னுடைய நகைச்சுவை பேச்சாலும், சிந்திக்க தூண்டும் நல்ல கருத்துகளாலும் குறுகிய சில நிமிடங்களில் எங்கள் அனைவரின் உள்ளத்திலும் நீங்காத இடம் பிடித்த அவர்களை சராசரி வயதில் முதிர்ந்த மனிதராக மட்டும் என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை.

டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் மரணம் நம் எல்லோருக்கும் ஒரு படிப்பினையைக் கற்றுத் தருகிறது.

நம்மில் சக முஸ்லீம் ஒருவர் உடல் நிலை பாதிக்கப் பட்டிருக்கிறார் என்றால், கருத்து வேறுபாடுகளை மறந்து அவரிடம் நலம் விசாரிக்கச் செல்ல வேண்டும், தூய இஸ்லாத்தை ஏற்ற டாக்டர் அப்துல்லாஹ் அவர்களை மருத்துவமனைகளில் சந்தித்து அவர்கள் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்த அல்லது அவர்கள் சார்ந்த இயக்கச் சகோதரர்களை பிரார்த்திக்கச் சொன்ன இஸ்லாமிய இயக்கத் தலைவர்கள் மிகமிகக் குறைவே ! இதில் நிறைய தலைவர்கள் தலைமறைவானது ஏன் என்றுதான் புரியவில்லை.

டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்படாமல் மருத்துவ ஆராய்ச்சிக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மார்க்கப்படி ஒருவர் இறந்துவிட்டால் அவரை அடக்கம் செய்ய வேண்டும், இவை அல்லாமல் வேறு வழியில் அந்த உடலை பயன்படுத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. தூய இஸ்லாத்தை ஏற்ற டாக்டர் அப்துல்லாஹ் அவர்களுக்கு உடல் தானம் செய்வது பற்றி அறிந்தும் அதனை தவறு என்று எடுத்துச் சொல்ல தவறியவர்கள் இதற்கு அல்லாஹ்விடம் பொறுப்பாவார்கள்.

வாழும் வரைக் கற்றுக் கொடுப்பவராக இருந்த டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் இறப்பில் கூட இஸ்லாமிய சமுதாயத்திற்கு சில படிப்பினைகளையும் விட்டு சென்றுள்ளார்கள். அதில் முதலாவது இஸ்லாத்த்தை ஏற்கும் சகோதர சகோதரிகளின் வருகையைக் கொண்டாடும் நாம் வந்தபின் செய்ய வேண்டிய கடமைகளில் பொடுபோக்காக இருந்து வழிகாட்ட தவறி இருக்கிறோம். முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள் எனும் இறை வசனத்தின் படி இஸ்லாத்தை ஏற்று வந்தவர்களை முஸ்லிம்களாகவே மரணிக்கவும் கடைசிவரை அவர்களுக்கு எடுத்துரைப்பதும் நமது கடமையாகும்.

இஸ்லாத்தை உளப்பூர்வமாக ஏற்ற சகோதர சகோதரிகளிடம் உடல் தானம் செய்தவது தவறு என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மரணத்திற்கு பின் இறுதிக் காரியங்கள் இஸ்லாமிய முறைப்படி நடக்க வேண்டும் என்ற உறுதி மொழியை எழுத்துபூர்வமாக எவ்வித சட்டச் சிக்கல்கள் எழாமல் இருப்பதற்கு முன்னின்று செய்து முடிக்க வேண்டும்.

கருணாநிதி, வைகோ திருமாவளவன் AVM சரவணன் ஆகியோரை தூய இஸ்லாத்தின் பக்கம் அழைக்க முயற்சி செய்த டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக அவர்கள் அனைவரையும் தூய இஸ்லாத்தின் பக்கம் அழைக்க இனி நம்மில் யார் முன் வரப்போகிறார்கள்? அல்லாஹ்வே மிக்க அறிந்தவன். அல்லாஹ்விடம் மட்டுமே அதற்கான விடை உள்ளது. அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழி படுத்துகிறான், தான் நாடியோரை இழிவு படுத்துகிறான்.

வல்ல ரஹ்மானே, மரணித்த நம் சகோதரர் டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயரிய சொர்க்கத்தை கொடுப்பாயாக. அன்னாரை இழந்து துக்கத்தில் இருக்கும் குடும்பததார்கள், நண்பர்கள், முஸ்லீம்கள் அனைவருக்கும் பொருமையை கொடுப்பாயாக. 

டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் கடைசி அமீரக பயணத்தில் பேசியபோது பதிக்கப்பட்ட காணொளி.


M.தாஜுதீன்

நோன்பு கஞ்சி செய்யாதிருப்பது எப்படி..! 55

அதிரைநிருபர் பதிப்பகம் | July 18, 2013 | , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

முதலில் நம்மூர் வழக்கப்படி ‘கொருத்துப்போட்டு’விடுவோம்.  வாங்க… அமீரகத்தில் பள்ளிக்கூடங்களின் விடுமுறை மாதங்களான ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் வீட்டுக்கார அம்மாக்களால்  அம்போ என்று விடப்பட்ட தற்காலிக பிரமச்சாரிகள் எல்லாம் என் பக்கம் வந்துவிடுங்கள்.  விடுப்பு கிடைத்தாலும் விடுவதாயில்லை என்று ஊருக்குப் போகாமல் வீட்டுக்காரம்மாக்கள் இங்கேயே தங்கிவிட்ட, அட்டைப்பூச்சிகளை மணந்த,  நிரந்தர சம்சாரிகள் அந்தப் பக்கமாக என்று கொருத்துப்போட்டுக்கொண்டால் ஆட்டத்தைத் துவங்கி விடலாம்.

நோன்பு என்றாலே எனக்கு அமல்களுக்குப் பிறகு சட்டென்று அடிப்பது நோன்புக் கஞ்சி வாடைதான்.  தங்கத்தைவிட நோன்புக் கஞ்சியின் மஞ்சள்தான் எனக்கு மனோரஞ்சிதம்.  அதுவும், பரிமாறும் தருணத்தில் கஞ்சியின் ஆடை மல்லாவின் மேல்புறத்தில் உறைந்துபோய் கிடக்க, பிய்த்துப்போட்ட வாடாத் துண்டுகள் அந்த ஆடையின் பரப்பு இழுவிசையைத் துளைக்க முடியாமல் மிதக்க… நகரா அடிப்பது போலல்லாமல் அனைப்பதுபோல் ஆனந்தமாக இருக்கும்.  நோன்புக் கஞ்சி இல்லாமல் நோன்பு துறப்பது என்பது ஏர் அரேபியாவில் பயணிப்பதைப் போல, பயணம் வசதியாக இருந்தாலும் பட்டினி போட்டுறுவாய்ங்க.  விவரமானவர்கள் எல்லாம் விமானம் பறந்தெழுந்தவுடன் (flight take off) பொட்டலங்களைப் பிரித்துவிடுகிறார்கள்.  அதென்னவோ, விமானத்தில் தரும் சாப்பாடு என்னவாக இருந்தாலும், நமக்கு முன் வைக்கப்படும் சாப்பாடு மீனாகவேக்கூட இருந்தாலும் கொஞ்சம்கூட உணவு வாசம் நாசி தொடாது; மணமே இருக்காது.  ஆனால், ஏர் அரேபியப் பயணிகள் பொட்டலங்களைத் திறந்தவுடன் பலதரப்பட்ட உணவு வாசம் மூக்கைத் துளைக்கும். அதிலும் குறிப்பாக சாம்பார் வாடை சட்டையைப் பிடித்து உலுக்கும்.  சாதாரண சான்ட்விச் (sandwich) கூட செழிப்பாக மணக்கும்  இப்படியாகத்தான் யாருக்கு ஃபோன் பண்ணினாலும், எங்களிடம் உணவுப் பொட்டலங்கள் இருக்கின்றன என்னும் ஏர் அரேபியத் திமிரோடு,  தாம் நோன்புக் கஞ்சி காய்ச்சித்தான் நோன்பு துறப்பதாகச் சொல்லவே உசுப்பேத்தப்பட்ட நான், “நானும் கஞ்சி காய்ச்சப் போகிறேன்” என்று சூளுரைத்தேன்.

சொன்னதுதான் தாமதம், என் நளபாதத் திறமைகளைப் பற்றி அறிந்து வைத்திருக்கும் நண்பர்கள் என்னைக் கஞ்சி காய்ச்ச ஆரம்பித்துவிட்டார்கள்.  “தலைப்பிறையில் கஞ்சி காய்ச்சப் போகிறாயே, தலைக்கறிக் கஞ்சியா?’ என்று ரைமிங்கில் கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள்.  தலக்கஞ்சியா? தலையா? மூச்!  கோலாலம்ப்பூர் பார்ட்டி ஏற்கனவே எச்சரித்தது நினைவில்லையா? (ஆட்டு மூளை வறுவலும் ஆஸ்பத்திரி டோக்கனும்) “ஆட்டுக்கரியாவது ஒரு ரெட்டைக்கிளி தீப்பட்டி சைஸில் சாப்பிட்டுக்கோ ஆனால், பார்ட்ஸ் (organs of animal) சாப்பிட்டே உன்னோட பார்ட்ஸ் கெட்டுடும்” என்ற எச்சரிக்கை எனக்கு ஆட்டை முழுசாப் பார்க்கும்போதுகூட நினைவில் வரும்.

ஆனால், நான் கோலால்ம்பூர் போயிருந்தபோது கவனித்த வகையில் மலேசியக்காரவுக ஒன்னும் ஆரோக்கியமான உணவு உண்பதாகத் தெரியவில்லை.  ஒரு நாள் தங்கியிருந்ததில் கவனித்த வகையில் ஜங்க் ஃபுட்(junk food)டைத்தான் விரும்பி சாப்பிடுகிறார்கள்.  என் நண்பர்களோடு தங்கியிருந்த ஓட்டலின் கீழ்த்தளத்தில் அமைந்துள்ள ரெஸ்ட்டொரென்டில்  சாப்பிட போனபோது, நம்மூர்ல ‘லொக்கடா’ன்னு சொல்வோமே ஒரு ப்ரெவுன்(brown) நிறக் கவர், அதைக்கொண்டு பொட்டலம் பொட்டலமாக மடித்து வைத்திருந்ததைக் காட்டி, “ரெண்டு” ஆர்டர் பண்ணினான் ‘கலிஃபோர்னியா’ பார்ட்டி.  வந்ததும் பிரித்துப் பார்த்தால் அருமையான புலாவ் சாதத்தை அப்படியே தராமல் அதில் நெத்திலிக்கருவாட்டைப் போட்டு ‘நாசமாப்போச்சி’ என்று ஏதோ பேர் வைத்துத் தந்தார்கள். எனக்கு அந்தப் ‘பொட்டலத்தில் சாதம்’ பார்த்ததும் ஏனோ ‘பட்டணத்தில் பூதம்’ நினைவுக்கு வந்தது.  இதற்கிடையே மீ கொரிங்க் வாங்கி சாப்பிட்டுகொண்டிருந்த எனக்கு வாயில் வைத்ததும் காலை வரை காத்திராமல் ‘எங்கேயோ’ எறிந்தது. என் சிங்கப்பூர் நண்பனுக்கு தலையில் எஞ்சியிருந்த நான்கைந்து உரோமங்களும் உறைப்புத் தாழாமல் கண்முன்னே உதிர்ந்து விழுந்தன.  மலேசியர் சாயலில் இருந்த மற்றொரு நண்பன் ஏற்கனவே ச்செக்கச்செவப்பே, முகம் மெத்தச் செவந்து செவ்விந்தியராகிப்போய் ‘உறைப்புத் தாங்க முடியலே. கொஞ்சம் குறைத்துத் தரமுடியுமா?’ என்று தட்டைத் திருப்பிக் கொடுக்க, அவர்கள் குறைத்துக் கொடுத்த மீ கொரிங்க் சாப்பிடுகையில் கண்ணீர் சிந்தினான் கத்தார் பார்ட்டி.  இந்தக் களேபர நாடகங்கள் முடிந்து திரையிறங்கும் நேரத்தில் எங்களைப் பார்க்க வந்த ஜாகிருக்கு உறைப்பை மறைத்து இனிமையாகச் சிரித்து வைத்தோம். “உனக்கும் ஒன்னு ஆர்டர் பண்ணவா?’ என்று கேட்ட கலிஃபோர்னியக்காரனுக்கு “வேண்டாம் வேண்டாம்” என்று பதறிய ஜாகிரின் மறுப்பு எனக்கொன்றும் புதிராகத் தோன்றவில்லை.

கஞ்சி மேட்டருக்கு வருவோம்.  கஞ்சி காய்ச்சப்போறேன் என்று சொன்னதும் என்னைக் கஞ்சி காய்ச்சத் துவங்கிய பார்ட்டிகளுக்கு சவாலாக களத்தில் இறங்கினேன்.  எப்படி காய்ச்சுவது என்று நான் எத்தனை பேரிடம் கேட்டேனோ அத்தனை பேரிலும் ஒருத்தர்கூட மற்றொருவருடைய முறையை ஒத்துச் சொல்லாதது என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தியது, மன உளைச்சலுக்கு உள்ளானேன், வேதனைப்பட்டேன்.  எனக்கு ஏனோ எல்லாக் கருத்துகளிலும் வேறுபட்டு நிற்கும் இயக்கக் காரர்களின் மார்க்க விளக்கங்கள் சட்டென்று நினைவுக்கு வந்தது.  

முதலில் மனைவிக்கு ஃபோன் போட்டு, “நீ சூப்பரா நோன்புக் கஞ்சி காய்ச்சித்தருவியே, எப்படி செய்தே?” என்று கேட்டேன்.  “ உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை.  கஞ்சி குடிக்கனும்னு தோணினா கடைல வாங்கிக் குடிங்களேன்” என்றவளிடம் கட்டாயப்படுத்தி கேட்டதில், “இன்னென்ன பொருட்களையெல்லாம் போட்டு ப்ரெஷெர் குக்கரில் 4 விசில் வச்சா கஞ்சி ரெடி” என்றாள்.  அடுப்பங்கரையில் தேடிப்பார்த்ததில் ப்ரெஷர் குக்கரின் விசிலைக் காணவில்லை. “விசில் எங்கே?” என்று மீண்டும் ஃபோனில் கேட்டால், ‘இல்லாட்டி என்ன? நீங்களே 4 விசில் அடிச்சிட்டு இறக்கிடுங்க” என்று சொல்வாளோ என்கிற பயத்தில் என் காக்காவுக்கு ஃபோன் பண்ணினேன். அவர், “அரிசி இந்தா இம்புட்டு, கடலைப்பருப்பு இம்புட்டு” என்று ஆரம்பிக்க, “காக்கா, இம்புட்டுன்டா அளவு பிடிபடமாட்டேங்குதே. இத்தனை கிராம் என்று சொன்னால்தானே விளங்கும்” என்றேன். “நோன்பாளிகளைச் சித்ரவதை செய்யாதே” என்று ஃபோனை வைத்துவிட்டார் .  அதிரை நிருபரின் அபு இபுவோ, “காய்ச்சி வைத்தால் நெறிப்படுத்த மட்டுமே தெரியும்” என்று தன்னைத் தற்காத்துக்கொண்டார்.  தம்பி தாஜுதீனுக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி அல்லவா, அந்த நினைப்பில் எனக்கு உதவ முன்வந்தார்.

“ஒரு சட்டியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கிக்கொள்ளுங்கள். இன்னொரு சட்டியில் அரிசி பருப்பு வெந்தயம் இவற்றை ஊர வைத்துக் கொள்ளுங்கள். மூன்றாவது சட்டியில்” என்று துவங்க, “இருங்க இருங்க. ஒக்கே ஒக்கடு மல்லா கஞ்சி காய்ச்ச இத்தனை சட்டிகளா? ஒரு சட்டியை ‘அட் எ ட்டைத்ல ஹேன்ட்ல் (handle at a time)’ பண்றதே எனக்கு பெரிய விஷயம்.  மூன்றெல்லாம் ட்டூ மச், வீண் முயற்சி’ என்று அந்தத் திட்டத்தைக் கை விட்டேன். “ஏங் காக்கா சிரமப்படுறிய? நோன்பு திறக்க இங்க வந்துடுங்களேன்” என்ற தாஜுதீனின் அழைப்பில் அன்பிருந்தது; கஞ்சி மணத்தது.  “துபையில் அந்தரத்தில் காரை பார்க்கிங் செய்யும் வசதி வரும்வரை அங்கு வருவதாயில்லை” என்று மறுத்து விட்டேன்.

அப்பத்தான் எனக்கு சவுதியில் ஜுபைலில் வசிக்கும்போது இதுபோன்றொதொரு சூழலில் ‘எப்படி நோன்புக் கஞ்சி காய்ச்சுவது’ என்று ரஹிமாவில் வசித்த, பெரிய கண்களோடு கண்ணாடிக்கடையில் இருந்த நண்பன் ஆஷிக்கின் ரெசிப்பி(recipe) நினைவுக்கு வந்தது.

“உனக்கு மட்டும்தானேடா? ஒரு முறை செய்து ரெண்டு நாட்களுக்கு வைத்துக்கொள்” என்று வழக்கம்போல் சிக்கனத் தொனியில் புத்தி சொல்லிவிட்டு,”கைப்பிடியளவு அரிசி, அரைக்கைப்பிடியளவு கடலைப் பருப்பு, காற்கைப்பிடியளவு வெந்தயம் மூன்றையும் அலசி ஆறு மடங்கு தண்ணீரில் அதே சட்டியை அடுப்பில் வைத்து கொதிக்கவை. அது கொதிக்கும்போதே வரிசையாக வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, முட்டைக்கோசு, காரெட், பீன்ஸ் ஆகியவற்றை வரிசையாக நறுக்கிப் போட்டுக் கொண்டே வா.  அத்துடன் மசாலாவை ஸ்பூனில் எடுக்காதே. ஒரு கத்தியை எடுத்து அதைக்கொண்டு, அதாவது கத்தி முனையளவு மஞ்சள், இரண்டு கத்திமுனையளவு சீரகத்தூள், இரண்டு கத்தி முனையளவு மிளகுத்தூள், தேவைக்கேற்ப உப்பு போட்டு கொதிக்கவை.  இடையில் மல்லி மற்றும் புதினாத் தழைகளின் இலைகளை மட்டும் பறித்துப் போடு. கொஞ்சம் தேங்காய்ப்பால் ஊத்தி இறக்கினால் கஞ்சி ரெடி” என்றான்.

எம்ப்பி 3 யில் ஒரு ஜூஸ் குர் ஆன் ஓதிக்கொண்டிருக்கும்போதே இவையாவையும் செய்து பார்த்ததில் தஞ்சாவூர் ஆத்தங்கரை பள்ளியில் தரும் பால் கஞ்சி ரேஞ்சுக்குத்தான் கஞ்சி வந்தது, துவையல் இல்லாததுதான் குறை. நம்மூர் நோன்புக் கஞ்சிக்கு நாக்கைத் தொங்கப் போட்ட என்னைப்பார்த்து ‘பெப்பே’ என்றது பால் கஞ்சி. ஏனோ கஞ்சியில் எல்லாப் பொருட்களும் கொஞ்சம் கொஞ்சம் குறைவாகவே எனக்குப் பட்டது.  அவனிடம் கேட்டபோது, “இதுதான்டா ‘சிக்கன’க் கஞ்சி; கோழி போட்டேன்னா ‘சிக்கன்’ கஞ்சியாயிடும்” ன்னான்.

“நீ ஏன்டா யார் யார்ட்டேயெல்லாம் கேட்டே. நான் சொல்றபடி செய்” என்று முன்வந்த என் நண்பன் அஸ்லம் என் சமையல் திறமைகளைப் பற்றி முன்பின் அறியாததால் முதலில் மேலோட்டமாகச் சொல்லத் தலைப்பட்டவன், நான் கிரகிக்கத் தடுமாறுவதைப் பார்த்து சற்றே மிரண்டு போனான்.  “நான் வேணா வந்து காய்ச்சித் தரவா?” என்று தப்பிக்க முயன்றவனை என்னோடான நட்பு ஆட்டிப்படைக்க, ஆனா ஆவன்னாவிலிருந்து துவங்கினான்.  அவன் சொன்ன குறிப்புகள் இலகுவாக இருந்ததோடு கற்பனையில் செய்யும்போதே நம்மூர் நோன்புக்கஞ்சி வாடை வீசியது.  இறங்கி விட்டேன்.

ஆஷிக் சொன்ன அதே பொருட்களை “மொத்தமாக வெட்டி வைத்து சட்டியில் போட்டு வேகவை” என்கிற இலகுவான முறை என்னைக் கவர்ந்ததால் அப்படியே செய்தேன். .  கஞ்சியின் திடப்பொருட்கள் அனைத்தும் அணிதிரண்டு ஒரு பக்கமாக ஒதுங்கிக் கிடக்க மேலே தெளிவாகத் தண்ணீர்மட்டும் தனித்துக் கிடந்தது.  கரண்டிகொண்டு கலக்கிவிட்டாலும் சுழன்று முடிக்கும்போது மீண்டும் தனித்தனியாகவே திரண்டு கொண்டன.  காய்ச்சி முடித்த நோன்புக் கஞ்சியை நான் குடித்தபோது என் எதிரில் இருந்திருக்க வேண்டும் நீங்கள்.  இஞ்சி தின்ற குரங்குபோலானது கஞ்சி குடித்த என் மூஞ்சி. என்ன செய்ய? வேறு வழியில்லாமல்,  கிரிக்கெட்டில் தோற்ற அணியின் மிகவும் பிரசித்தி பெற்ற வசனமான, “வி வில் லேன் ஃப்ரம் அவர் மிஸ்ட்டேக்ஸ் (we will learn from our mistakes) என்னும் தாரக மந்திரத்தின்படி என் கஞ்சி காய்ச்சும் தினங்கள் தொடர்கின்றன.  

உருப்படியான நோன்புக்கஞ்சி உங்களிடம் இருப்பின் ஷார்ஜாவுக்கு ஒரு மல்லா பார்சே….ல்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

அன்னாந்து பார்த்தது கேமரா ! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | July 05, 2013 | , , , , , ,

அட ! இதைத்தான் பார்த்துட்டோமேன்னு அலுப்புத் தட்டினாலும் பரவாயில்லைங்க. மெய்யாலுமே பாஸ் இது நானே என் சொந்தக் கைகொண்டு எடுத்த ஃபோட்டோங்க அதுவும் இடதுகை விரல்கள் கேமராவின் பாடியை(!!) பிடித்துக்கொள்ள வலதுகை விரல்கள் கொண்டு விழிலென்ஸை உருட்டி உருட்டி ஒரு நிலைக்குள் வந்ததும் ஆள்காட்டி விரல் கொண்டு கஷ்டப்பட்டு அழுத்தி எடுத்த படங்கள் !

அல்கைல் ரோட்டில் காலைநேரப் பயணத்தில் காரை ஓரம் கட்டி இந்த தூரம் சுருக்கி ரசித்து எடுத்த படம் !


ஒரு மீட்டிங் அட்டெண்ட் செய்துவிட்டு அல்புர்ஜ் கலிஃபா டவரிலிந்து வெளியில் வரும்போது அன்னாந்து பார்த்தேன் அட ! கேமராவும் கையில் இருந்தது... வானம் பார்த்தது கேமரா !


படம் எடுக்க D90 நிக்கானுடன் அங்கே நிக்கனும்னு நிற்கவில்லை எல்லாமே எதேச்சையாக நடந்த நிகழ்வுகள் !

நம்புங்க !

அபூஇப்ராஹீம்

துபாயில் அரிய வாய்ப்பு ! - திருக்குர்ஆனை எளிய முறையில் புரிந்து கொள்ள தமிழ் வகுப்புகள் ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | June 05, 2013 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இன்ஷா அல்லாஹ் ! துபாய் அல்மனார் செண்டரில் (தமிழ் தாவா பிரிவு) 07-ஜூன்-2013 முதல் வாரம்தோறும் பிரதி வெள்ளிக்கிழமை காலை 06:00 மணிமுதல் 08:00 மணி வரை திருக்குர்ஆனை எளிய வழியில் புரிந்து கொள்ளுங்கள் வாராந்திர தமிழ் வகுப்புகள் நடைபெற இருக்கிறது.

துபாய், சார்ஜா, அஜ்மான் வாழ் தமிழ் சகோதரர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம் !


அதிரைநிருபர் பதிப்பகம்

துபாய் கிரசண்ட் ஆங்கிலப் பள்ளியில் அதிரை மாணவி முதலிடம் ! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | June 04, 2013 | , , , ,

அதிரை தரகர் தெரு மர்ஹூம் எஸ்.ஏ.ஜப்பார் (நிருபர்) அவர்களின் பேத்தியும், சகோதரர் ஜாகிர் ஹுசைன் அவர்களின் மகளுமான செல்வி அஃப்ரின் துபாய் அல் கிஸ்ஸசில் உள்ள கிரசண்ட் ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்! நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 485/500 எடுத்து பள்ளியிலேயே  முதல் இடத்தைப் பிடித்துள்ளார் – அல்ஹம்துலில்லாஹ் !


மாணவி அஃப்ரின் அவர்களுக்கு அதிரைநிருபர் மற்றும் வாசகர்கள் சார்பாக நெஞ்சார்ந்த  வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இனிவர இருக்கும் மேல்நிலைப் பள்ளி தேர்விலும் வெற்றிகளை குவிக்க வாழ்த்துகிறோம் இன்ஷா அல்லாஹ்..!

தகவல் : ஜாகிர் ஹுசைன்
அதிரைநிருபர் பதிப்பகம்

குருவி...! 37

ZAKIR HUSSAIN | May 20, 2013 | , , , , ,

இது முழுக்க முழுக்க லைட் ரீடிங் ..அதனால் யாரும் ட்யூப்லைட் போட்டு படிக்கனும்னு சொல்லவில்லை.

விசயம் சொல்லிக் கொள்வது மாதிரி பெரிசா ஒன்னுமில்லை என்றால் தன்னடக்கம் கருதி சின்னதாக சொல்வது மாதிரி விமான பயணம் என்பதில் நிறைய டெக்னிக்கல் விசயம் ஏதாவது இருக்கும் என்று நினைத்து படிப்பவர்களுக்கு நான் துண்டை போட்டு தாண்டி சொல்கிறேன், இதில் அப்படி ஒன்னும் விசயமில்லை. [தெரிஞ்சாதானே எழுதறதற்கு!!!].

எனவே உருப்படியான விசயம்தான் படிப்பேன் என்று 'மாகானதிபதி" முன் சத்யப்பிரமானம் எடுத்தவர்கள் வீட்டில் வெங்காயம் வெட்டிக் கொடுப்பது , துவைத்து வைத்த பிள்ளைகளின் துணியை காயப்போடுவது போன்ற பொறுப்பான வேலைகளில் ஈடுபட்டு அப்படியும் நேரத்த ஒட்ட முடியவில்லை என்றால் இதைப்படிக்களாம்.


1968 என நினைக்கிறேன். முதன் முதலில் என் வாப்பா திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கியதை பார்க்க / அழைக்க போயிருந்தேன். அவ்வளவு சின்ன வயதில் அந்த விமான நிலையத்தில் ஒரு பட்டனை அழுத்தினால் ஐஸ் வாட்டர் வரும் [குவளை மிஸ்ஸிங்] அதை அழுத்தி குடித்ததில் ஜென்ம புண்ணியம் அடைந்ததாக நினைத்தேன்.

அப்போது வந்த விமானத்திற்கு "காத்தாடி' வெளியில் சுற்றியது. இப்போதைய டெக்னாலஜியை பார்க்கும்போது ரைட் பிரதர்ஸிடம் நமது இந்தியன் ஏர்லைன்ஸ் லீசுக்கு எடுத்த மாதிரிதான் தெரிந்தது. எங்கே இவனுக ரைட் பிரதர்ஸிடம் வம்புடியாக வாங்கிட்டு வந்துட்டானுகளா என நினைக்க தோன்றும்.

இந்திய முஸ்லீம்கள்  முன்பு பர்மா / சிலோன் என்று பிழைக்க போன காலத்திற்கு பிறகு பினாங்கு பிழைக்கும் தளமானது . [ஏதோ தமிழ்நாடு செய்தித்துறையின் பிளாக் & ஓயிட் ஃபிலிமில் தியேட்டரில் காண்பிக்கும் செய்தித் தொகுப்பு மாதிரி இல்லே!!].


பயணத்திற்கு  S.S ரஜூலா , M.V.சிதம்பரம் கப்பல்கள் வாழ்க்கையுடன் ஒன்றிப்போனது. [கப்பலில் நான் பயணம் செய்ததில்லை என்பதால் எனக்கு அதைப் பற்றி எழுத தெரியாது என்பதால் நீங்கள் தப்பித்தீர்கள்].

பிறகு துபாய் / சவூதிக்கு மக்கள் படையெடுக்க ஆரம்பித்தவுடன் வந்தது விமான பயணங்களின் பயன்பாடு. இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று எல்லோரையும் ஏற்றிக் கொண்டு சென்றதில் தான் காமெடி. 

சிலர் கட்டிச் சோறிலிருந்து மாங்கா ஊறுகாய் வரை வாங்கிப்போய் துபாயில் சாப்பிட்டதாக ஆட்களை அழைக்கப் போகும்போது கேள்விப் பட்டதுண்டு.

ஆரம்ப காலத்தில் நீங்கள் விமான டிக்கெட் எடுத்திருந்தால் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து ஒரு மினி வேன் அழைத்துச் செல்லுமாம். இப்போது 5 நிமிடம் அந்த விமான கம்பெனியின் மேனேஜிங் டைரக்டரே தாமதமாக போனாலும் "போடா பசுநெய்" என்று சொல்லிவிட்டு கேப்டன் புறப்பட்டு விடுவார். [ஏதாவது வித்யாசமா எழுதுங்க என்று அ.நி கட்டளை இல்லாவிட்டால் ' போடா வெண்ணே"  என்று சொல்லிவிட்டு கேப்டன்... என எழுதியிருக்களாம்.]

இதில் ப்ளேனில் கொண்டு போகும் பொருட்களும் அதை கையாளும்  ஆட்களும்தான் இன்னும் காமெடி. ஒருமுறை நான் காட்மாண்டுவில் விமானத்தில் ஏறி உட்கார்ந்ததும் அதில் வந்த சில நேப்பாளிகளையும் அவர்கள் வைத்திருந்த கூடை மாதிரி இருந்த பொருட்களை பார்த்ததும் எனக்கு தூக்கமே வரவில்லை. ஏதும் பாம்பு போட்டோ [படம்] எடுத்து ஆட ஆரம்பித்தால் என்ன செய்வதென்று ஒரே புலப்பம். தவிறவும் நாம் ஏதாவது பெண் பாம்பை வஞ்சித்திருக்கிறோமா என்று எனது நினைவுகளை ரிவர்சில் ஒட்டிப்பார்த்தேன். அப்புறம் பாட்டு பாடி நம்மை பழிவாங்குதெல்லாம் இருக்க கூடாதல்லவா?. இருந்தாலும் தனுஸ் எல்லாம் பாட்டுப் பாடுவதற்கு பாம்பு பாட்டு எவ்வளவோ தேவலாம்.

விமான பயணங்களில் விதிக்கப்படும் 20 கிலோ / 30 கிலோ லக்கேஜ் விதி தனது ரத்தத்தில் கொஞ்சம் கூட இந்திய ரத்தம் சம்பந்தம் இல்லாத ஏதோ ஒரு இனத்தை சார்ந்தவன் ஏற்படுத்தியது என நினைக்கிறேன். தமிழ்நாட்டு முஸ்லீம்கள் வெளிநாட்டுக்கு வரும்போது பேரன் / பேத்தியின்   கல்யாணத்துக்கூட உழைக்கும் சோசியல் கான்ட்ராக்டில் கையெழுத்திட்டு வந்து உழைத்து லக்கேஜ்கள் வாங்கி செல்ல வேண்டியிருக்கிறது என்பது எழுதப்படாத விதி. உழைக்கும் ஆட்கள் கதவுக்கு வைக்கும் சக்கை மாதிரி மொபைல்போன் வாங்குவதும் பள்ளிக்கூடம் தாண்டாத பிள்ளைகளுக்கும் , நேராக கையெழுத்துப்போட தெரியாத வீட்டுப்பெண்களுக்கு சம்சங் கேலக்ஸி-3 வாங்குவதும்... என்ன கொடுமை சார் இது??.

லக்கேஜ் கொண்டு போவதற்கென்று இப்போது எவ்வளவோ வசதியான சக்கரம் வைத்த கேபின் பேக் எல்லாம் இருந்தும் சமீபத்தில் மலேசியா வந்த சபீர் ஒரு சூட்கேசுடன் வந்து இறங்கியவுடன் என் மனதில் தோன்றிய வசனம் ' பாஸ்.. இந்த அணு ஆராய்ச்சி குறிப்பெ வச்சு எந்த இடத்திலே நாம் அணு குண்டு வெடிக்கப் போறோம்??' என்ற கேள்விதான்.  நல்ல  வேலை  ஏர்போர்ட்டிலிருந்து வரும் வழியில் எந்த புத்தர் கோயிலும் இல்லை..இருந்தால் ஆராய்ச்சிக்குறிப்பின் ஒரு பகுதி  அங்கு உள்ள மொசைக் கல்லுக்கு கீழ்தான் இருக்க வேண்டும் என்று காரை விட்டு இறங்கிவிட்டால் என்ன செய்வது. ??

சூட்கேஸ் பிதுங்க பிதுங்க லக்கேஜ் கட்டும் என் சொந்தக்காரர்களை பார்த்திருக்கிறேன். அது ஒரு தனித்திறமை.. எக்கோலாக் சூட்கேசில் 15 கிலோவுக்கு மேல் சர்வ சாதாரணமாக கட்டுவார்கள். இன்னும் சில பேர் பிளாஸ்டிக் கயிறை இழுத்துக்கட்டும் திறமை அலாதியானது. கட்டும்போது இடையில் உங்கள் விரல் மாட்டிக்கொண்டால் பிறகு ஏழுகடல் தாண்டி ஒரு தீவில் உள்ள கிளியிடம் போய் சொல்லி உயிர்பிச்சை கேட்டாலும் அந்த பிளாஸ்டிக் கயிற்றிலிருந்து உங்கள் விரலை எடுக்க முடியாது. அவ்வளவு ஸ்ட்ராங்காக கட்டுவார்கள் அந்த காலத்து நம் ஆட்கள்.

இந்தியாவில் தங்கம் கொண்டுவரலாம் என்ற சட்டம் வந்தவுடன் வரும் எல்லோரிடமும் "பாய் பிஸ்கட் கொண்டு வந்திருக்கீங்களா?' என்ற கஸ்டம்ஸ் ஆபிசரின் கேள்விக்கு வயதான ஒருவர் சொன்ன பதில் ' கிரீம் தடவியதா? இல்லை தடவாததா?' என்ற அப்ரானி பதிலிலேயே தெரிய வேண்டும் எப்படியாகப்பட்ட ஆட்கள எல்லாம் வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்று.

நம் மக்கள் மலேசியா சிங்கப்பூருக்கு ஆரம்பத்தில் புறப்பட்டு செல்லும் காலங்களில் வயதை நிர்ணயிக்க கப்பலுக்குள் நுழையுமுன் கன்னத்தை தடவிப்பார்த்து [சவரம் செய்திருந்தால் “பெரியவன்”] அனுப்புவார்களாம். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் 'மிகப்பெரிய' கண்டுபிடிப்பு இது. கால ஓட்டத்தில் என்ன என்ன தடைகள் இருந்தாலும் மனித மூளை தப்பிக்க ஈசியாக ஒரு  தடம் போட்டுவிடும் என்பது சமயங்களில் எந்த அரசுக்கும் தெரிவதில்லை.

இப்போது வந்திருக்கும் பட்ஜட் ஏர்லைன்ஸ் அதிகம் விமான      பயணங்களை ஊக்குவித்தாலும் பயணிக்கும் போது பெரும் அவஸ்தைகளே மிஞ்சுகிறது என்று பட்டிமன்ற தீர்ப்பு மாதிரி சொல்லி விடலாம்.

புதுக்கல்லூரியில் படிக்கும்போது நாங்கள் வாங்கிக் கொடுத்த டிக்கட் OK  களும் தாதர் எக்ஸ்பிரஸ் டிக்கட்களின் மொத்த கூட்டுத்தொகையும் கின்னஸ் புக் கில் இடம் பெரும் அளவுக்கு அதிகமானது. [வெளிநாடு போய் இறங்கி ஒருவர் கூட 'கடுதாசி" போடாதது வேறு கதை]. பாஸ்போர்ட்டையும் டிக்கட்டையும் ரொம்பவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சொல்லி நம்மிடம் ரயில்வே ஸ்டேசனில் வந்து சொல்வார்கள். கடைசியில் ட்ரைன் நகறும் போது சத்தமாக ‘மாப்லெ மறந்துடாம சொன்ன தேதிக்கு டிக்கட் OK வாங்கிட்டு தாக்கல் சொல்லிடு என்று மறவக்காடு/தம்பிக்கோட்டை ஸ்டேசன் மாஸ்டர் காதில் விழும் அளவுக்கு கத்துவார்கள். ஒருமுறை  நான் கொஞ்சம் "ம்ம் ம்ம் சரி" என்று அவ்வளவு வெயிட் கொடுத்து பேசாததால் என் மச்சான் என்னைப்பார்த்து சொன்னது ' டேய் பாஸ்போர்ட்டை / டிக்கட்டை காணாக்கிடாதே ..அப்படி காணாக்கிட்டா வரும்போது  திருவாரூர் / திருத்துறைப்பூண்டி எங்காவது  எறங்கி ஏதாவது மளிகைக்கடையிலே போய் எனக்கு வேலை கேட்டு வாங்கிட்டு வா.. நான் நல்லா சுருல் போடுவேன்.”

நாம் கோபால் பல்பொடி மாதிரி  இலங்கை , மலேசியா, சிங்கப்பூர் என்று போன காலம் போய் கேள்விப்படாத நாட்டிற்கெல்லாம் போய் வருகிறோம். 

இன்னும் நமது மக்கள் தனது வேலைக்காக எங்கெல்லாம் போய் தனது வருமானத்திற்காக வாழ்க்கையில் பல வருடங்களை தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது.

ஒரு வாரத்துக்குள் மலேசியா சிங்கப்பூர் வந்து   வெளிநாட்டுப் பொருட்களை வாங்கி இந்தியாவில் விற்கும் வியாபாரிகளை "குருவி"என்று சொல்வார்கள். நாம் எவ்வளவுதான் அதிக நாட்கள் தங்கினாலும் நாமும் ஒரு குருவிதான். கொஞ்சம்    “நாள் பட்ட குருவி”.

[அப்பாடா 'இந்தாளு தலைப்பு க்கு சம்பந்தம் இல்லாமெ எழுதறான்னு யாரும் சொல்லிடக்கூடாதல்லவா? ].

இதைப்படித்த பிறகு 'உண்மையிலேயே இதில் ஒன்னுமில்லேதான்" என்று சொல்பவர்கள்தான் உண்மையான விமர்சகர்கள்.

ZAKIR HUSSAIN

அடப் பாவிங்களா !? (மற்றுமொரு அனுபவம் பேசுகிறது !) 27

அதிரைநிருபர் பதிப்பகம் | May 05, 2013 | , , , ,


ஒரு சனிக்கிழமை மத்தியான நேரம், மீன் ஆணம் ரசம் சூடா சோறு சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டி தூக்கத்தை போடலாம்னு எத்தனிக்கும்போது அபுதாபியிலிருந்து ஒரு ஃபோன் கால், சார் மாலிக்குங்களா? போன வாரம் நீங்க லுலு செண்டர்லே கூப்பன் எழுதிப்போட்டதுலே நீங்க ஜெயிச்சிருக்கீங்க (இது மாதிரி கூப்பன் எழுதி கை வலிச்சதுதான் மிச்சம்) என்ற சந்தோஷமான செய்தி கேள்விப்பட்டவுடன் வந்த கொட்டாவியெல்லாம் போன இடம் தெரியலே. உடனே சுறுசுறுப்பாகி அப்புறம் சொல்லுங்க சார் என்று கேட்டதுதான் மிச்சம். நீங்க உங்க குடும்பத்தோடு 7 நாள் கோவா சுற்றுலா செல்லலாம், இந்த வருஷத்துக்குள்ளே பயன்படுத்திக்கனும், விமான டிக்கெட் நீங்களே எடுக்கனும் என்றும் அங்கே இறங்கியவுடன் 3 ஸ்டார் ஹோட்டல் மற்றும் முழு சுத்திக்காட்டும் செலவும் இந்த கூப்பனில் அடங்கும் என்றும் சொன்னார். அந்த கூப்பனை வாங்கனும் என்றால் ஒரு பெரீய காரியம் செய்யனும். அதாவது துபாய்- ஷார்ஜா ரோட்டில் உள்ள அலுவலம் அன்றே மாலை சரியாக 6 மணிக்கு மனைவி, குழந்தையுடன் சென்று அதற்கான சின்ன(?) புரோகிராம் நடக்கும் அதுலே கலந்துக்கொண்டவுடன் வெற்றிப்பெற்றதற்கான கூப்பன் கிடைக்கும் என்றார்.


சரி வந்த அந்த ஒரு நல்லதையாவது போய் வாங்கிடலாம் என்று தூக்கம் தொலைத்து 6.10க்கே போய் ஒரு ஃபில்டிங்க்லே 13 வது ஃபிளாட்டில் ஆஃபீஸ் இருக்கு என்று கண்டு பிடித்து போனால் மயான அமைதி. விபரம் சொன்னவுடன் ரெஜிஸ்டர் செய்துட்டு இங்கே புரோகிராம் குறைந்தது 3 மணிநேரம் முழுதா இருக்கனும் என்ற உத்திரவாதம் வாங்கிட்டு பிள்ளைகள் விளையாடுவதற்கும் பார்ப்பதற்கும் டாம்/ஜெர்ரி வீடியோவை போட்டு அவங்களை அங்கே தள்ளிக்கொண்டு போய்விட்டார்கள். 

சிறிது காத்திருப்பிற்கு பிறகு அழைப்பு வந்தது, நீங்க இங்க்லீஸா/ஹிந்தியா என்றார்கள் நான் தமிழ் ஆனால் இங்க்லீஸை தேர்ந்தெடுத்து உள்ளே சென்றோம். அங்கே...

ஒரு பெரிய ஹால், கிட்டத்தட்ட ஒரு மேசைக்கு மூனு நாற்காலிப்போட்டு அந்த காலத்து டி.ராஜேந்தர் படத்துலே டிஸ்கோ டான்ஸ் பாட்டு நடந்தால் எப்படி இருக்குமோ அது மாதிரி (மேடை மட்டும் மிஸ்ஸிங்), பக்கத்துலே உள்ளவங்களிடம் காதோடு காது வைத்து பேசினால்தான் விளங்கும் என்றளவுக்கு அதிரடி மியூஸிக் சிஸ்டம் அதிர்ந்துக்கொண்டிருந்தது. எங்களுக்கான இருக்கை மிக நெருக்கமாக போடப்பட்டு தலையோடு தலை ஒட்டி பேசினால்தான் விளங்கும் என்ற அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒருவர் ஹைதராபாத் காரராம், தன் பெயர் காதர் Welcome to Country Club என்று ஆரம்பித்து ஃபோனில் சொன்ன அதே வார்த்தைகளை இவரும் ரிப்பீட்டு செய்தார். மேலும் சன் டீவிலே கேட்பது மாதிரி லவ் மேரேஜா, சொந்தமா, யாரு சமைப்பா, என்னா படிச்சிருக்கீங்க, எத்தன குழந்தைகள், இருவருக்கும் என்னா சமையல் புடிக்கும், யாரு சமைச்சா புடிக்கும் இப்படி நிறைய கேட்டு கேட்டு சொல்லி சொல்லி இப்போது 45 நிமிடம் கடந்துவிட்ட்து. 

திடீர்னு ஒரு மேசையில் உள்ளவர் எழுந்து Dear Ladies and Gentle man, Pleased to welcome to join our club Mrs & Mrs X and just they signed our contract அப்படினு சொன்னவுடன் மற்ற மேஜையிலுள்ளவங்க கைதட்டினர், நமக்கும் எதுவுமே புரியவில்லை இருந்தாலும் மேனர்ஸ் கருத்தில் கொண்டு நாமும் பேருக்கு தட்டினோம்.

சரி, எங்களுக்கான ஆள் (காதர்), இப்போ உலகத்துலே சுற்றுலா செல்லவேண்டுமானால் எங்கே செல்ல புடிக்கும்? இப்படி ஒரு கேள்வி, நாங்களும் ஏதோ ஒன்னு சொன்னோம், அதுக்கு அங்கே போகனும் என்றால் பெண்சில் கால்குலேட்டர் வைத்து ஒரு கால்குலேஷன் செய்து இவ்வளவு திர்ஹாம் செலவு ஆகும், அதே எங்களுக்கான மெம்பர்ஷிப் அட்டை காண்பித்தால் அதுலே பாதிதான் வரும், எது பெட்டர் என்றார்.யோசித்தோம், இடையிடையே தேனீர், ஜூஸ் இப்படி சப்ளை வேறு.

இடையிடையே ஒவ்வொரு 20 நிமிஷத்துகு ஒரு தடவை அதே மாதிரி ஒவ்வொரு மேசையா ஒருத்தர் எழுந்து அதே வசனத்தை ஓதி கைதட்டு வாங்கினர். அதற்குபிறகு என்ன நடக்குது என்பதை உணர்வதற்கு கால அவகாசம் தரவில்லை.

பழைய ரெஸ்டாரண்ட்லே அடிப்பட்ட மெனு கார்ட் மாதிரி ஒரு புத்தகத்தை கொடுத்து இதுலேயுள்ள ரிஸார்ட் எல்லாம் எங்க கம்பெனியோடது, இந்தியாவுலே உள்ள எந்த மாநிலத்துக்கு சென்றாலும் அங்கே 3 அல்லது 5 ஸ்டார் ரிசார்ட் இருக்கு நீங்க தங்கிக்கலாம் என்றார். அதற்கு நான் நான் ஏண்டா நடுராத்திரிலே சுடுகாட்டுக்கு போகப்போரேனு வடிவேலு ஒரு படத்துலே கேட்பார் அதுமாதிரி சுற்றுலா செல்பவங்க கிடைக்கும் நேரங்களில் முடிந்தளவு எல்லா இடங்களையும் பார்த்து அனுபவித்து சந்தோஷப்படத்தான் தவிர படுத்து தூங்குவதற்கு இல்லையே. எனவே சாதாரண கட்டணத்தில் அறை போதுமானது என்றவுடன் சின்ன சிரிப்புடன் சமாளித்துவிட்டு இவங்களோட மெம்பர்ஷிப் கார்ட் வாங்கினால் கராமாவில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு வாரம் ஒரு முறையும், ஏதாவது கோலிவுட் பட்டாளம் வந்து செய்யும் புரோகிராமுக்கு டிக்கட்டும் இலவசமாக கிடைக்குமாம்.

சரி, முடிவா மெம்பர் ஆவதற்கு எவ்வளவு என்று இடையிடையே கேட்டாலும் அதை கடைசி 30 நிமிடத்தில்தான் வெச்சிருக்காங்க ட்விஸ்ட், இதை பற்றி விலாவாரியா மேனேஜர் சொல்லுவார் என்று இன்னொருவர் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு 10 நிமிஷம் அதே வேதம் ஓதினார். கடைசியில் மற்ற நேரங்களில் சேரனும்னா 45,000 திர்ஹாம் வருமாம், இன்னிகு அது ஆஃபராம் அதாவது 27,000 திர்ஹாம் வருவாம். அதிலேயும் இன்ஸ்டால்மெண்ட் ஸ்கீம் இருக்காம் அதாவது 9,000 திர்ஹாம் இப்போ உடனே கட்டிவிட்டு அடுத்த 2 மாசத்தில் மீதியை செலுத்தனுமாம். 

இதைவிட கொடுமை என்னவென்றால், கொடைக்கானலில் ஒரு பிளாட் (காலி மனை) தருவாங்களாம், அதுலே இவங்களே வில்லா கட்டி வாடகைக்கு விட்டு அந்த வருமானத்தில் 50% தருவாங்களாம், மேலும் 9,000 திர்ஹாம் கட்டியது போக மீதி பணம் ADCB பேங்க் மூலம் சேலரி ட்ராண்ஸ்பர் இல்லாமல் லோன் வாங்கி தருவாங்களாம்.. அத்தோடு விட்டாங்களா இப்போ பணம் இல்லை, சம்பளம் வாங்கியதும் திரும்ப வருகிறேன் இல்லேனா 2 நாள் கழித்து யோசித்து வருகிறேன் என்றதுக்கு இங்கேயே இப்போவே கொடுக்கனும் இல்லேனா முன்னர் சொன்னா மாதிரி 45,000 கொடுக்கும்படியாகிடும் என்றார்கள்.  வேணும்னா ஒரு ஆளை கூடவே அனுப்புறேன் பணம் கொடுத்துவிடுங்க என்றர்கள். சுதாரிச்சுக்கடா என்று அப்பப்போ எனக்குள்ளே நானே சொல்லிக்கிட்டேன். 

நேரம் இரவு 10 ஆகிவிட்டது, நாங்கள் மட்டுமே மீதி அவர்களும் விடுவதாக இல்லை கடைசியாக 1000 திர்ஹாம் அட்வாஸா கொடுங்கள் அப்புறம் 2 நாள் கழித்து மீதியை கொடுங்க என்று பிச்சை எடுக்கும் ரேஞ்சுக்கு வந்துட்டாங்க. இவ்வளவு பேசி சும்மா வர மனசு இடம் தரலே, கடைசிலே என் நண்பனுடைய கிரடிட் கார்டை கொடுத்து அதுலே எடுத்துக்க என்று கொடுத்தவுடன் பரபரப்பான வேலைகள் நடந்தன, என்னை அங்கேயே பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ எடுத்து அந்த கூப்பனில் பிரிண்ட் செய்து கையிலே கொடுத்தாங்க. அதே நேரம் இறைவனின் கிருபையால் அந்த கடன் அட்டையை தேய்க்கும்போது Insufficient Money என்று ரிசல்ட் வந்துவிட்டது. அத்தோடு தலைக்கு வந்த்து தலைவலியோடு மட்டும் திரும்பிவிட்டேன்.

சில நாள் கழித்து நண்பரிடம் பகிர்ந்துக்கிட்ட போது, அங்கே நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் சொல்லிக்காட்டினார். இடையிடையே எழுந்து சொன்னதும் கைதட்டியது எல்லாமே அவர்களின் செட்-அப் என்றார். அடங்கொய்யாலே.... அப்போ ”எனக்கு ரத்தம் கக்கி சாவே” என்று மயில்சாமி சொன்ன ஜோக்தான் ஞாபகம் வந்த்து...

சில நாள் கழித்து எதார்த்தமா என் நண்பனுக்கு ஃபோன் செய்தேன். இதுவும் இறைவன் நாடியது, இப்போ அவசரமா ஒரு மீட்டிங்க் கிளம்பிக்கிட்டிருகேன் அப்புறமா ஃபோன் செய்றேன் என்றான், என்னானு விசாரிச்சா அவனும் ரத்தம் கக்கி சாவ ரெடியாகிட்டான், அடப்பாவி மக்கா பாயிண்ட் பாயிண்டா விளக்கி அங்கே போகவேனாம் என்று தடுத்த புண்ணியம் கிடைத்தது. இனிமேலாவது மக்கள் உஷாராவாங்களா?

இரண்டு காரியம் புரியவில்லை

எப்படி இந்தநாட்டு அரசாங்கம் இதை கண்டுக்காம இருக்கு !?

எப்படி இவ்வளவு ஓப்பனா ஏமாத்துறாங்க. !?

எகிப்தை மையமாக வைத்து இயங்கும் International Tourism club

இந்தியர்கள் நடத்தும் Country Club…

என்ற இரண்டும் இங்கே செயல்பட்டுக்கிட்டிருக்கு...

அப்துல் மாலிக்

சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் - தொடர்கிறது... 23

அதிரைநிருபர் பதிப்பகம் | April 16, 2013 | , , , ,


சிதறும் வெளிச்சங்களை சிந்தாமல் அப்படியே சித்திரங்களாக வாரியனைத்து உங்களனைவரோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்...

ஊருக்குச் செல்ல யாருக்குத்தான் ஆசையிருக்காது, இரவுப் பொழுதொன்றில் ஆகாயத்திலிருந்து அன்னாந்து பார்க்காமல் அப்படியே தரையை நோக்கினேன் என்னுடைய கேமாரக் கண்ணோடு !

துபாய் - இதெப்படி இருக்கு !?


அட நம்ம சென்னை(தாங்க)... மின்சாரம் இருக்கே அங்கொன்றும் இங்கொன்றுமாக !


அட இதெல்லாம் குப்பை மேட்டருங்க ! ஆனால் சிலருக்கு வாழ்வாதாரம் !


இதுவும் நம்ம ஏரியாதான், கணினிக்கு ஏற்ற வால்-பேப்பர் காண்ணுக்கு உகந்த உற்சாகம் !


ஷஃபி அஹ்மது

அமீரக தமிழ் மன்றம் 13வது ஆண்டு விழா ! பார்வையாளனின் பார்வை ! 30

அதிரைநிருபர் பதிப்பகம் | April 10, 2013 | , , , ,


ஒரு வெள்ளிக்கிழமை மதியம் சாப்பிட்டுவிட்டு கோடி ருபாயை கொட்டிக் கொடுத்தாலும் வளைகுடா விடுமுறை பகல் பொழுதில் எழுந்து செல்ல மனது இடம் கொடுக்காத அந்த நேரத்தில் "தம்பி அ.த.ம.ஆண்டு விழாவுக்கு வர்ரீங்களா நமக்கு ஃப்ரீ டிக்கெட் இருக்குன்னு" கவிக் காக்கா உசுப்பேத்த 'சரி அதுல என்னமோ நம்மூரு காரவெலெல்லாம் பேசி வாதாடப்போறாங்கன்னு' ஒரு பில்டப் கொடுத்து, அந்தப் பேச்சாளரை தேராவிலிருந்து நீ(ங்கதான்) கூப்பிட்டுக்கிட்டு வரனும்னு வேற சொல்லிட்டாங்க....

இதற்கு முன்னர் நடந்த எத்தனையோ விழாக்களுக்கெல்லாம் இலவசமாகவும், சிறப்பு அழைப்பின் பேரிலும் செல்ல வாய்ப்பு கிடைத்திருந்தாலும் இந்த மாதிரியான ஒரு வாய்ப்பு நிரம்பவே வித்தியாசமாக இருந்தது என்று சொல்லாவிட்டாலும் மிகையாயிருக்காது.

இன்முக வரவேற்பு, சேர்த்து வைத்தால் ஒரு புத்தகம் போடும் அளவுக்குத் துண்டு விளம்பரப் பிரசுரங்கள், இலவச மருத்துவ முகாமுக்கான படிவம், அதற்கிடையில் வழியிலேயே மறித்த புடவை கட்டிய பெண்களில் இருவர் "சார் (தமிழில் ஐயா என்பதை மாத்திட்டாங்களாம்) இதில் உங்க பெயரையும் மொபைல் நம்பரையும் எழுதிக் கொடுங்க" என்று மிக அருகில் நெருங்கி நின்று கொண்டார் அதனை வீட்டுக்காரவொல்லாம் பார்த்தங்கன்னா எவ அவன்னு கோபப்பட்டால் வருத்தப் பட வாய்பே இல்லை.

அமீரகத்தில் தமிழ் வளர்த்த, அமீரகத்தில் தமிழ் போற்றும், அமீரகத்தில் தமிழர்களின் நலனை(!?) போற்றும் மன்றம் இப்படியாக அடைமொழிக்கெல்லாம் சொந்தமானதாக இருக்குமோ என்றுதாங்க நாங்களும் ஆவலாய் சென்றோம்.

அங்கே ஆல்-இன்-ஆல் அழகராஜாவாக ஒருவரே எல்லாம் என்று மைக்கையும் பிடித்தார்... தமிழ் தாய் வாழ்த்து என்று அ.த.ம.பொறுப்பாளர்கள் பார்வையாளர்கள் அனைவரையும் எழுந்து நிற்க வைத்து பாடினார்கள்.... அப்போதுதான் பள்ளிக் காலங்களில் படித்த பாட்டு அப்படியே மனதிற்குள் ஓடியது ! பக்கத்திலிருந்த கவிக் காக்கா இதில் வணக்க வழிபாடுகள் வருகிறதே... என்று முனுமுனுத்தார்கள்... யோசிக்க நேரம் கொடுக்கவில்லை வாழ்த்துப்பா படிய அமைப்பாளர்கள்.

ஸ்பான்சர்ஸ் லிஸ்ட்டை ரொம்பவே கஷ்டப்பட்டு வாசித்துக் காட்டினார்கள்

தமிழுக்கான சேவை ஆரம்பமானது....!!? வேற என்னங்க ! இரண்டு இளம் பெண்கள் புதுமையாக வடிவமைத்த நடனம், புதுமையான பெயர் வேறு அதுக்கு வைத்து இருட்டிலும், வெளிச்சத்திலும் ஆடிவிட்டு கைத்தட்டு பத்தாதுன்னு மைக்கைப் பிடித்த ஒரு பெண் சொல்ல பார்வையாளர்களும் போனாப் போகட்டும் என்று கையில் இருந்த தூசியை தட்டினார்கள்.

வரவேற்புரை, வாழ்த்துரை இப்படியாக வழமையான விழாவாக துவங்கியது, அந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஆண்டுவிழா மலர் வெளியீடும் இருந்தது. சிறப்பு விருந்தினராக வந்தவர்களும், சிரிப்பு விருந்தினராக வந்தவரும், சினிமாவைத்தான் பேசினார்கள் (தமிழுக்கான சேவை).

இன்றைய காலகட்டத்தில் கருவிலிருந்து வெளிவரும் சிசுவுக்கும் ஒரு சிம் கார்டு என்ற எழுதப்படாத பாலிஸி இருப்பதால் தாய் மொழியை செல்லிடையில் தட்டி தட்டி தாலாட்டு பாடுவது எப்படின்னு சொல்லிக் காட்டினார்கள், நான்காம் தமிழ் என்றார்கள்… ஏனோ தமிழ் யுனிகோடுக்கு கோடு போட்டவங்களை ஞாபகமே படுத்தலை ஒருவேளை அது போன தலை முறைக்குத்தான் ஞாபகம் இருக்கும்னு விட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன். இருந்தாலும் அங்கே சொன்ன விஷயம் ஆண்ட்ரய்டு பயனாளிகளுக்கு பயன்பட்டிருக்கும் நிச்சயம்.

சிறப்பு விருந்தினர் அவர் பட்டிமன்ற சிறப்பு பேச்சாளார், எடுத்த எடுப்பில் சொன்னது ஆண்டுவிழா மலரில் அவரின் பெயரில் தமிழ் நிமிர்ந்து நின்றதாகச் சொன்னார் அவரின் பெயருக்கு முன்னாள் இட்டுக் கொள்ளும் 'அவனி' என்ற பெயரை 'ஆவனி' என்று அச்சடித்தது மட்டுமல்ல திரு என்பதற்கு பதிலாக திருமதி என்று அச்சடித்த அ.த.ம.ஐ பாராட்டினார்.... அந்த திருமணமாகாத ஆண் சிறப்பு விருந்தினர்.

ஆண்டுவிழா மலர் வெளியிடப்பட்டது, வெளியிட்டவர்களும் அதனைப் பெற்றவர்களும், மைனா, கும்கி என்ற இரண்டு சினிவைப் பற்றி சிலாகித்தார்கள், எல்லா நல்ல(!!?) படங்களையும் பார்ப்பதாகச் சொன்ன நன்கறியப்பட்ட  சிறப்பு விருந்தனர் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்ற சினிமா பார்த்ததாகவும் அதனைப் பாராட்டியும் தகவல்கள் சொன்னார்கள்.

கும்கி என்ற சினிமாவை எடுத்த சாலமன் என்ற சினிமா இயக்குனர், அவரும் எப்படி படம் எடுத்தேன் எப்படி தோற்றேன், எப்படி ஜெயித்தேன் என்று சினிமா காட்டினார் பூரித்துப் போனது பார்வையாளர் பக்கம் அதன் தாக்கம் யார் வேனும்னாலும் கேள்வி கேட்லாம்னு அறிவித்ததும் போ(ட்)டா போ(ட்)டி அங்கே முகஸ்துதிக்குதான் !

சிரிப்பு விருந்தினர் ஆரம்பத்தில் கிச்சு கிச்சு மூட்டினர், கைதட்டனும் என்ற கட்டாயம் இருந்ததுபோல் பார்வையாளர்களும் தூசியை தட்டிக் கொண்டிருந்தனர் ஆரம்பத்தில் அவரும் சினிமாவுக்குள் புகுந்தார் அரங்கம் பரபரப்பானது, நிறைவில் அம்மாவையும் தாத்தாவையும் இழுத்தார் அரங்கம் அதிர்வில் ஆடியது!

வயர்லெஸ் மைக்கை கூகிலிலும், யாஹுவிலும் தேடச் சொல்லியிருந்தால் பட்டென்று படமாவது கிடைத்திருக்கும், ஆனால் இரண்டு குழுவுக்கும் கொடுக்க மைக் போதவில்லை எங்கே மைக் என்று கேட்டது மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது மைக்கில்.

இதெல்லா வற்றையும் விட முத்தாய்ப்பாக "அவர்களா இவர்களா" என்று கருத்தாடல் இரண்டு குழுக்களுக்கிடையே "விஜய் டிவி நீயா நானா கோபிநாத்" நடத்தினார், அவரின் மடைதிறந்த பேச்சும், தெளிவான காட்டுகளும், நிதர்சனம் சொல்லும் நேர்மையும் என்று அசத்தினார் இடையிடையே பசி வயிற்றை கிள்ளுது என்று தோசைப் பிளாசாவை நினைத்தே புலம்பியும் கொண்டிருந்தார்.... (இங்கே தாங்க தமிழ் எழுதிருச்சு உட்கார்ந்தது)

மூவரைத் தவிர மற்றவர்கள் பேசியதில் எதுவுமே சரியாக பிடிபடவில்லை, அந்த மூவரில் நம்ம ஊருக்கரவொலும் நச்சென்று பேசியது அது அவருக்கே உரிய பாணியில் பேசியது ரசிக்கும் படி மட்டுமல்ல அந்த நிகழ்வின் சுவராஸ்யத்தை கூட்டியது...  அங்கே தாங்க தமிழ் எழுந்து நின்றது...

நிறைவாக கோபிநாத் அவரின் வழக்கமான உரையை நிகழ்த்தி விட்டு சிறந்த பேச்சாளரை (!!?) தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவரிடம் கொடுக்க அவரோ இரண்டு குழுக்களில் இருந்தவர்களிடமே கேட்டு தேர்ந்தெடுத்து விட்டார்... இங்கே தாங்க தமிழ் எழுந்ததும் நடையைக் கட்டியது !

இன்பத் தமிழ் எனும் போதினிலே தேன் வந்து பாயுது காதுனிலேன்னு பாடவெல்லாம் தோனலைங்க விட்டாப் போதும் என்று வெளியில் விறு விறுவென்று வந்துட்டேன், திரும்பிப் பார்த்தா கவிக் காக்காவைக் காணோம் ஆஹா ! தமிழ் சங்கமத்தில் தொலைத்து விட்டோமா என்று ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தேன்... அந்த தமிழ் சங்கமத்தில் நீச்சல் அடித்து ஒரு மீனைப் பிடித்த சந்தோஷத்தில் வெளியில் வந்தார்கள் அதுதாங்க ஆண்டு விழா மலர்.

ஆளுக்கு ஒரு திசையில் காரை ஓட்டிக் கொண்டு வந்துட்டோம்.... இதுக்குமேலே கவிக் காக்கா தொடர்வார்கள்....

தொடர் ஓட்டப் பந்தயத்தில் பள்ளிப்பிராயத்தில் அஸ்லத்திடம் வாங்கிய பட்டனுக்குப் பிறகு அதே தோரணையில் எழுதிய இந்தப் பதிவின் பட்டனை முந்தி வந்து தந்த அபு இபு(வின் தொந்தி) நிறைய வாழ்த்தி…

ஆளுக்கு ஒரு திசையில் காரை ஓட்ட நினைத்ததென்னவோ சரிதான்.  ஆனால், அபு இபு  துபை போவதற்குப் பதில் ஷார்ஜா ரோட்டைப் பிடிக்க, பின்னால் வந்த நான் அலைபேசி “எங்கே போறீங்க?” என்று கேட்டேன்.  “துபை” என்றவரிடம் “அப்டீன்னா ஒரு யு டர்ன் அடிச்சு மம்ஸார் சாலையைப் பிடிங்க” என்றேன்.  பேச்சாளரைக் கடத்திச் செல்லும் எண்ணம் அவரிடம் இல்லையென்றாலும் ‘அந்த நெருங்கி நின்ற புடவை’ வழியை மாற்றக்கூடாதல்லவா?

இதிலே வேடிக்கை என்னவென்றால், என்னுது காம்ரி கார் என்றாலும் அதைக் கார்ஷா குதிரைவண்டி ரேஞ்சுக்குத்தான் பழக்கி வச்சிருக்கேன்.  ஸ்டார்ட் பண்ணினால் வீடு, வீட்டிலிருந்து அலுவலகம், அங்கிருந்து ஸ்கூல் என்று தானாகவேப் போய்ட்டு வந்துடும்.  நான் வளைச்சி நெளிச்செல்லாம் ஓட்ட வேண்டியதில்லை.  அத்தோடு, என் கார் பூகோளத்தில் கொஞ்சம் வீக், நானோ எங்கே எத்தனை முறை போய் வந்தாலும் அந்த இடத்திற்கு மீண்டும் போக சரித்திரத்தில் கொஞ்சம் வீக்.  அப்பேர்பட்ட நானே சாலை வழிகளில் தேர்ந்த அபு இபுவுக்கு வழி சொன்னேன் என்றால் கிரகத்தை என்னவென்பது.  இதுல இன்னொரு மேட்டர் என்னென்னா, பேச்சாளன் என் நண்பன் செய்யது அஹமது கபீர் வேறு அந்தக் காரில் இருந்தான்.  அவனுக்கு துபையின் எல்லா ரூட்டும் அத்துபடி.  எனக்குத் தெரிந்து துபையில் கார் லைசென்ஸ் வாங்கிய 20 ஆண்டுகளில் ஒரு விபத்துகூட செய்யாத ஒரே ஆள் இவன் தான்.  அதெப்படி என்கிறீர்களா? கடைசியில் சொல்றேன்.

அடுத்த இரண்டு நாட்கள் அமீரகத்தனமாகக் கடக்க, மூன்றாவது நாள் ஆஸ்ஃபால்ட் பேவரின் (asphalt paver) லெவெலிங் சென்ஸார் (leveling sensors) செயல்திறன் குறைபாடு பற்றிய பரிசோதனையில் இருந்தபோது அந்த ஃபோன் வந்தது.  அதில் ஒரு பெண் என்னை வாழ்த்தி எனக்குப் பரிசு விழுந்திருப்பதாகச் சொன்னது.  பிறந்த நாள் முதல் எந்த ரூபத்திலும் எனக்கு எந்தப் பரிசும் விழுந்திருக்கவில்லையாதலால் குழம்பினேன்.  “மலையாளியானோ?” என்ற கேள்விக்கு, “மலையாளம் மனசுலாக்காம்” என்று சொல்ல, அந்தப் பெண் ஏற்கனவே பதிவு செய்து வைக்கப்பட்ட தோரணையில் மலையாளத்தில், “அமீரகத் தமிழ் மன்ற” நிகழ்ச்சியின்போது நான் எழுதிய கூப்பனுக்குப் பரிசு விழுந்திருப்பதாகவும், அதன்படி இந்தியாவில் எந்த நட்சத்திர ஹோட்டலிலும் ஒரு வாரம் குடும்பத்தோடு இலவசமாகத் தங்கலாம்” என்றும் “ஓஃபிஸில் வந்து வாங்கிக்கொள் ச்சேட்டா” என்றும் பரைஞ்ஞது.

எனக்கு எதிர்வரும் ஜூலை ஆகஸ்ட் விடுமுறையில் என்ன செய்யலாம் என்கிற குழப்பம் சட்டெனத் தீர்ந்தது. சர்தான், வடநாட்டுப்பக்கம் குடும்பத்தோடு போய் தங்கிட்டு வரலாம் என்று திட்டமிட்டுக்கொண்டே அபு இபுவை அழைத்தேன்.  அந்தப் பெண் எவ்வளவுதான் விளக்கமாக அட்ரெஸ் சொல்லியும் விளங்காத நான் (என் காரின் பூகோள அறிவைப்பற்றி ஏற்கனவே சொல்லியாயிற்று) அபு இபுவிடம் சொன்னதும் “ஓ அந்த ஹோட்டலா, வாங்க போலாம்” என்றார்.

Country club  ஹோட்டலின் ஒரு ஹால். சிங் என்னும் பெயரைத் தவிர வேறு சர்தார்ஜிக்கான எந்த அடையாளமும் இல்லாத இளைஞனும் அவன் மேலாளரும் வரவேற்று வார்த்தைகளால் உபசரித்தார்கள். கட்டாயப்படுத்தியதால் நான் ட்டீ சொல்ல, அபு இபு ஒன்றுமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

கூப்பனைத் தரப்போவதாக, இதோ தந்துவிடப் போகிறோம், இன்னும் சிறிது நேரத்தில் தந்து விடுவோம், தந்தே விட்டோம் என்றெல்லாம் உஷார் காட்டிவிட்டுக் கொண்டே திருநெல்வேலிப் பக்கம் வீட்டு மனை வாங்கச் சொல்லியும் ஏதோ ஒரு விடுமுறைகால ரிஸார்ட்ஸில் ‘தங்க அட்டை’ உறுப்பினராகச் சேரச் சொல்லியும் பேசிக்கொண்டே இருந்தான் அந்த ட்டை கட்டிய ஆசாமி.  (எனக்கு ட்டை கட்டிய ஆட்களுடன் பேசுவதென்றாலே சற்று அலர்ஜி.  ஏனென்று பிரிதொரு பதிவில்).  கடமையே கண்ணாயிய அபு இபுவோ யாவற்றையும் வழக்கம்போல் உண்ணிப்பாகக் கவனித்து நெறிப்படுத்திக்கொண்டிருந்தார்.  காரியதரிசியைப் பேசவிட்டுவிட்டு பதவிசாக அருகில் அமர்ந்திருக்கும் வெளிநாட்டுத் தூதுவர் போல இருந்தார் என்று சொன்னால் சரியாக விளங்கும்.

“ நேரமாகுது, ஆத்தா வையும், கூப்பனைக் கொடு” என்று அழாத குறையாகக் கேட்கவில்லையே தவிர, எல்லா அஸ்திரத்தையும் பிரயோகித்தும் விடாக்கண்டனாக அந்த ‘பல்லேபல்லே’ பேசிக்கொண்டேயிருந்தான்.  நான் விவரமாக, “உங்கள் ப்ரொஜெக்ட் சம்பந்தமான ப்ரோச்சர்ஸ் இருந்தால் கொடுங்கள். பார்த்துவிட்டு முடிவெடுக்கிறேன்” என்று கொடாக்கண்டனாக இருப்பதை உணர்ந்துகொண்ட அவன், எங்கள் விதிகளின்படி கூப்பன்களை உங்கள் ஈ மெயிலுக்கு அனுப்புகிறோம் சார்” என்றான். அப்பதான் இவிங்க எதுக்குக் கூப்பிட்டான்கள் என்று விளங்கியது. 

3 நாட்களுக்குப் பிறகு மெயிலில் வந்த கூப்பனில் ஆயிரெத்தெட்டு நிபந்தனைகளோடு கூப்பனை பிரின்ட் அவுட் எடுக்கச் சொல்லி யிருந்தது. ஆனால், கூப்பனைப் பார்க்க அதை திறக்கவே முடியவில்லை.  எங்கள் கம்பெனியில் ஐ ட்டி மேனேஜர் வரை முயற்சி செய்தாயிற்ரு. ம்ஹூம்.  எல்லாம் உட்டாலக்கடி வேலை என்பது தெளிவாகத் தெரிகிறது.  

20 வருடங்களாக ஒரு ஆக்ஸிடென்ட் கூட செய்யாமல் லைசென்ஸ் வைத்திருக்கும் என் நண்பன் செய்யது அஹமது கபீரின் ட்ரைவிங் திறமைக்கு  ஒரு “ஓ” போடுவதற்கு முன், கொஞ்சம் காதைக் கொடுங்க, “ஏய்யா, கார் ஓட்டினாத்தானேயய்யா ஆக்ஸெடென்ட்லாம். லைசென்ஸ் வச்சிக்கிட்டு அவன் பஸ்லேல்ல போறான்.”

நிறைவாக, நிகழ்ச்சியில் நான் கவனித்தவற்றில் குறிப்பிடத்தகுந்தவை:
  • சகோ. ஆஸிஃப் மீரானின் கடின உழைப்பின் பிரதிபலிப்பு நிகழ்ச்சியின் ஒவ்வொரு பொழுதிலும்.
  • சகோ. ஜெஸிலா அவர்களின் நேர்த்தியான நிகழ்ச்சி தொகுப்பு
  • நிகழ்ச்சியின் முதல் பாடலாக “ஐய்யய்யோ” என்று துவங்கும் கும்கி பாடல் கொண்டு துவங்கியதில் நெருடல்
  • பலகுரல் மன்னன் சேதுவின் மிமிக்ரியில், மன்மோகன் சிங் குரலில் பேசச்சொன்னதும், கைகள் கட்டி தலை தாழ்த்தி மெளனித்து நின்ற டைமிங் கண்டு அரங்கமே அதிர்ந்தது.
  • 'அவனி மாடசாமியின்' பேச்சில் அழகாய்த் தெரிந்த தமிழ்.
  • இயக்குனர் பிரபு சாலமனின் நேர்மையான பேச்சு. “மதங்களை புண்படுத்தி படம் எடுக்கவே மாட்டேன்”
  • கோபிநாத்தின் பிரமிக்க வைக்கும் அறிவார்ந்த பேச்சும் நிகழ்ச்சியை நடத்திய பாங்கும்.
  • என் நண்பன் கபீரின் நறுக்கென்று பேச்சு. குறிப்பாக, அன்பா பணமா என்னும் தலைப்பில் பணமே என்று பேசிய கபீரை மட்டும்தான் “சூப்பர்” என்று சொன்னார் கோபிநாத்.  அன்பு பார்ட்டிகளைப் பார்த்து கபீர், “அன்பானவர்களுக்கிடையே கடன் கொடுத்துப் பாருங்கள். அன்பு படும் பாட்டை. கடன் அன்பை முறிக்கும்” என்று சொன்னபோது அவன் வாதத்திறமை கண்டு வியந்தேன்
ஆனா, பரிசு? கடைசிவரை…வடையும் போச்சு…ட்டீ இன்னும் வரல.

அபூஇப்ராஹீம் - அபூசாஹ்ரூக்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு