Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label வாழ்வியல். Show all posts
Showing posts with label வாழ்வியல். Show all posts

வா... `கிங்` ! 1

அதிரைநிருபர் பதிப்பகம் | April 05, 2016 | , , , ,

இது அரசியல் பதிவல்ல...

வேற எங்கே... அருகில் இருக்கும் இப்னு பத்துத்தா மால்`க்குதான்.

ஒரு முனையிலிருந்து அடுத்த முனைவரை நடந்தாலே நல்ல நடையும் கிடைக்கும் எடையும் குறையும்னு நெனப்புலதான் அப்படி எல்லா நேரமும் இல்லையென்றாலும் அவ்வப்போது சென்றுவருவேன்...

நான் யாரையும் அங்கிட்டும் இங்கிட்டெல்லாம் ப்ப்ராக் பார்க்க மாட்டேன் எனது தேவையெதுவோ அதை மட்டும் மனதில் ஓட்டிக் கொண்டே செல்வதுதான் வழக்கம், வேறயாரும் என்னை அப்படி இப்படி பார்த்தாங்கன்னா நான் பொறுப்பாக முடியாதுல அதான் சொல்லிகிட்டேன் !

ஒரு நாள் !

`அஸ்ஸலாமு அலைக்கும் ப்ரதர்`

`அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...` புருவமுயார்த்தி பார்க்கும் முன்னரே...

`என்னைத் தெரிகிறதா ?`

`ஞாபகம் சட்டென்று வரவில்லையே சொல்லுங்கள் நீங்களே`

`இவர் என் சகோதரரின் மகன் அல்தாஃப், அதோ பின்னாலே அங்கே உட்கார்ந்து இருக்காரே அவர் எனது கணவர், இது எங்கள் குழந்தை ஹாஸிம்`

பார்க்க சந்தோஷமாக இருந்தது... எப்படி சாத்தியம் !? என்ற குழப்பத்திலிருந்த எனக்கு உள்ளங்களை பார்ப்பவன் அல்லாஹ் மட்டுமே என எண்ணிக் கொண்டேன்...

*/*/*/*

வருடம் 2007 ரமளானுக்கு இரண்டு வாரத்திற்கு முன்னர்..

இப்னு பத்துதா மால் ஜியண்ட்டிலிருந்து கேஷ் கொடுத்துவிட்டு வெளியில் வரும்பொது ஒரு பெண்ணொருத்தி அழைத்தார்...

`சார் உங்ககிட்டே பேசனும்`

`என்ன விஷயம்`

`நான் இங்கேதான் வேலை செய்றேன், உங்களை இங்கே தினமும் என்னோட மதிய டூட்டி டைமில் பார்க்கிறேன்`

`சரி அதுக்கென்ன இப்போ`

`எனக்கு ஒரு உதவி வேண்டும், எனது சகோதரன் விசிட்டில் வந்திருக்கான் வேலை தேடிக் கொண்டு இருக்கான்`

`சரி என்னிடம் என்ன உதவி...?`

`உங்கள் கம்பெணியில் ஏதாவது ஒரு வேலை வாங்கி கொடுத்தா எங்க குடும்பம் நன்றியோடு இருக்கும் அவனுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கு ரொம்ப கஷ்டப்படுகிறான்`

`இப்போதைக்கு ஏதும் சொல்ல இயலாது சரி வந்து பார்க்கச் சொல்லவும்`

என்னோட விசிட்டிங் கார்டை கொடுத்தேன்...

`என் ஃப்ரெண்டுக்குத் தெரியும் உங்க கம்பெணி இருக்குமிடம் அவரிடம் கேட்டுக்கிறேன், எப்போ வரச் சொல்ல ? நாளைக்கு...?`

`எப்போ வேனும்னாலும் வரட்டும்`

*/*/*/*/

வருடம் 2010...

`ஏன் ஊருக்கு போகனுமா ?`

`ஆமாம் போகனும்`

`கஷ்டப்படுகிறேன்னு சொல்லித்தானே இங்கே வந்தீங்க`

`இங்கே இருக்க பிடிக்கலை போகனும், என் சிஸ்டர் அவங்க இஷ்டத்துக்கு நடந்துகிட்டு இருக்கா எனக்கு பிடிக்கல`

`ஏன் சொல்லித் திருத்த வேண்டியதுதானே எதுக்கு பயந்துகிட்டு ஓடனும்`

`என்னைய திருத்துறேன்னு சண்டை போடுறா`

/*/*/*/*/


வருடம் 2015...

`உங்க கம்பெணியில வேலை செய்துட்டு பிடிக்காம போறேன்னு சொன்னாரே அவரின் மகன் தான் இவர்`

`ஓ... அப்படியா சந்தோஷம், இப்போ இவர் என்ன பன்றார்...?`

`இங்கே எனது கணவர் வேலை செய்யும் கம்பெணியில் வேலை செய்றார்`

`தப்பா எடுத்துக்க வேணாம், ஒருவிஷயம் கேட்கனும்னு தோனுது...`

`கேளுங்க ப்ரதர்`

`அன்னைக்கு நீங்க குட்டைப் பாவாடையுடன் கேஷ் கவுண்டரில் இருந்தீங்க இன்னைக்கு ஹிஜாபோடு இருக்கீங்க பார்க்க சந்தோசமா இருக்கு...`

`அல்ஹம்துலில்லாஹ்... ஆமாம், நல்லவர் ஒருத்தவரை விரும்பினேன் அவர் வாழ்க்கையை தலைகிழாக மாற்றினார் பின்னர் அவரே என்னை திருமணமும் செய்து கொண்டார் அவரும் எங்க நாடுதான்`

`மாஷா அல்லாஹ் சந்தோஷமாக இருக்கு`

`என்னோட ப்ரதர் அன்னைக்கு சண்டை போட்டுக் கொண்டு போனது நான் இவரோடு பழகுவதை விரும்பாமலும் இஸ்லாம் மார்க்கம் தழுவ இருப்பதை அறிந்து கொண்டதாலும் இங்கே எங்களோடு இருக்க பிடிக்காமல் ஊருக்குச் சென்று விட்டார்`

`ஓ... அதன் பின்னர் எப்படி எங்கே திருமணம் ஆச்சு?`

`இங்கேதான் நாங்க திருமணம் செய்து கொண்டோம், அதன் பின்னர் வேலையை விட்டுவிட்டேன், அல்ஹம்துலில்லாஹ் எனது கணவர் நல்ல வேலையில் இருக்கார் இப்போ ஹவுஸ் ஒய்ஃப் ஒரு குழந்தை`

`இப்போ உங்க ப்ரதர் எப்படி இருக்கார் ?`

`ஹா ஹா ஹா அல்ஹம்துலில்லாஹ் அவரும் இனிய மார்க்கத்தில் சங்கமித்து விட்டார் அவருடைய மகன் இவர்தான்...!

`அல்ஹம்துலில்லாஹ்`

`வாங்க ப்ரதர் காஃபி சாப்பிடலாம்`

`எனக்கு நேரமாகிவிட்டது பின்னர் சந்திக்கலாம்`

`அந்தப் பெண்மணிக்கு அறியுமா எனத் தெரியவில்லை அவரின் கணவர் முன்னர் ஒரு வருடத்தில் வேறு வேலை தேடிக் கொண்டு மாறிகிட்டார், அவர் செல்லும்போது வேலை செய்த கம்பெணியில் சண்டை போட்டுக் கொண்டுதான் சென்றார் (காரணங்கள் வேற).

அவர்தான் அந்தப் பெண்மணியின் சகோதரருக்கு வேலை கேட்கச் சொல்லி சொன்னவர் என்பதையும் அப்போதே அந்த பெண்ணின் சகோதரரிடம் கேட்டு தெரிய வந்தது.

ஏனோ அவர் இந்த உரையாடல் நடக்கும் வரை எங்கள் பக்கம் வரவே இல்லை !

இறைவனின் நாட்டம் !

அல்லாஹ் பொருந்திக் கொள்வானக அவர்களின் நல்லெண்ணங்களை !

*-*-*-*-*-*

அபுஇப்ரஹிம்

மற்றும் - 1 8

ZAKIR HUSSAIN | June 30, 2014 | , , , ,

அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் விசயத்தை விட்டு அடுத்த விசயங்களில் ஏதாவது முக்கியத்துவம் இருந்தால் அதை பற்றி எழுதலாமே என்ற எண்ணத்தில் ...

பெண் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம்  Vs  நவீன முஸ்லீம்கள்

பசங்களை விட பெண் பிள்ளைகளின் மார்க் இப்போது அதிகம் பேசப்படுகிறது. காரணம் பசங்க இப்போது ஒரே பாடலில் ஃபேக்டரி கட்டி முன்னேறி, மெர்சிடிஸில் வந்து இறங்கும் ஹீரோக்களின் வாழ்க்கையை நடைமுறையில் வாழப்பார்ப்பதுதான். ['அது சினிமா, இது வாழ்க்கை ' என்று சொல்லி இந்த வெண்ணைகளுக்கு விளங்க வைக்க இதுவரை பெரிய முயற்சிகள் ஏதும் இல்லை].

தொடர்ந்து எல்லா விசயத்திலும் ஏமாற்றப்பட்ட தென் தமிழ்நாட்டு மாவட்டத்தை சேர்ந்த முஸ்லீம்கள் வெளிநாடுகளை நம்பி வந்ததும், பின்னாளில் அவர்களது பிள்ளைகளுக்கு கல்வியில் முன்னேற்றம் கிடைத்ததும், இப்போது பிள்ளைகளின் வாழ்க்கை மாற்றம், கல்வி முன்னேற்றம் எல்லாம் வரமாகவும் அதே சமயம் கல்யாண காலம் என்று வந்தவுடன் ஆண் பிள்ளைகள் பெண் பிள்ளை அளவு படிக்காததால் ஒரு 'கால மிரட்டல்' மாதிரி ஒரு சூழ்நிலை உருவாகிறது என்பது என்னவோ உண்மை. இதில் மார்க்கத்தை பின்பற்றி வாழ்வது, நம் இந்திய கலாச்சாரங்கள் எல்லாமே ஒரு சவால் ஆகிவிடுகிறது. அமெரிக்கா / ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் தமிழ் முஸ்லீம்கள் பள்ளிவாசலை தானாகவே உருவாக்கி தொழ வேண்டிய கட்டாயத்தில் என நினைக்கிறேன்.

வளைகுடா நாடுகளில் மார்க்கம் பேன பிரச்சினை இல்லை என்றாலும், வேலைக் களைப்பில் வீடு / ரூம் திரும்பும் போது நாம் குடிக்கும் டீ யை நாமே போடும் அவலம். [ஆயிரம் வசதிகள் இருந்தாலும் யாராவது டீ போட்டுத் தருவது / கார் கதவை திறந்து விடும் சுகம் மாதிரி ஒரு சுகம் எதிலும் இல்லை ].


இதில் வாழ்க்கையை மாற்றி அமைக்க சிந்தித்து சிந்தித்து அதை நடைமுறை படுத்தலாம் என்று ஊர்வரும் போது பிள்ளைகள் யுனிவர்சிட்டிக்கும், அல்லது கல்யாணத்துக்கும் தயாராகி விடுகிறார்கள். இளமை வாழ்க்கையில் பெரும் சம்பாத்யத்தை வீட்டுக்கு கொட்டி கட்டிய சூழ்நிலை ஊர் மெச்ச கட்டிய வீடுகள் வருமானம் தராது என்று தெரிந்தும்  எதிர்காலம் - கையிருப்பு எல்லாம் மிரட்டலாக தெரிய பெருவாதிபேர் திரும்பவும் ஃப்ளைட்டில் ஏறி திரும்பி வரும்போது அடித்துப் போட்ட  மாதிரி தூங்கிப்போய் விடுகின்றனர்.

சரி இப்போது விசயத்துக்கு வருவோம்... இன்றைய சவால்தான் என்ன?.

அது வெளிநாட்டில் இருந்தாலும் சரி, உள்ளூரில் இருந்தாலும் சரி. பெண்களை முடக்கிப்போடும் புத்தி இன்னும் மாறவில்லை. பெண் படித்து , அவளாகவே வாழ்வதற்கு தடை போடுபவர்கள் சமயங்களில் மார்க்கத்தை கையில் எடுத்துக் கொண்டு பேசுவது மாதிரி  பேசினாலும், எப்போதும் எதிர்காலத்தை பற்றி நெகடிவ் ஆகவே பேசுபவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

நம் ஊரின் மக்கள் தொகையை 'அதிரை பிறை' வளைத்தளத்தில் பார்த்தேன். மொத்த அதிரை மக்கள் தொகையில் பெண்களை 50% எடுத்துக் கொண்டாலும் அதில் 40 சதவீதம் உழைக்கும் வயதில் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் ஒரு நாளைக்கு  44,315 ப்ரொடக்டிவ் நேரத்தை விரயம் செய்கிறார்கள். இது ஒரு மிகப்பெரிய தொழிற்சாலையின் ஒரு மாத ப்ரொடக்டிவ் நேரம்.

ஆனால் இவை அனைத்தும் பசாது பேசவும், மற்றவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதிலும், டெலிவிசன் சீரியலிலும் அநியாயத்துக்கு அழிகிறது.
 
இப்படி வேஸ்ட் ஆகும் நேரத்தை என்ன செய்யலாம் என்பதை வாசகர்களின் கவனத்திற்கே விட்டு விடுகிறேன். [உடனே பொம்பளைங்க எல்லாம் நாளைக்கே ஐ ஏ எஸ் / ஐ பி எஸ் ஆக வேண்டும் என்று சொல்ல வேண்டாம். அதற்கு எல்லாம் ஒரு டைம் ஃப்ரேம் இருக்கிறது, தவிரவும் 'நீ என்ன படிக்கப்போறே?' என்று பெண்கள் கேட்டால் நாம என்ன செய்றது?].

பொதுவாகவே முஸ்லீம்கள் மார்க்கம் பற்றி பேச ஆரம்பித்தாலே அது என்னவோ உலகக் கல்விக்கு அப்பாற்பட்டது என்ற நிலையிலேயே பெரும்பாலான இடங்களில் சொல்லித் தரப்படுகிறது.

இப்போது இருக்கும் நவீன விஞ்ஞான முன்னேற்றம் மார்க்கத்தை மிக எளிதாக கொண்டு செல்ல உதவும். [மற்றவர்களிடம்]. இப்போது உள்ள சில இஸ்லாமியப் பள்ளிகள் அட்டோமிக் எனர்ஜி / நியூக்ளியர் மெடிசன் சொல்லிக் கொடுக்கும் அதே உத்வேகத்துடன் மார்க்கத்தையும் கற்றுத் தருகிறது. முஸ்லீம்கள் என்று பெயர் இருந்தால் மட்டும் போதாது,  இந்த உலகத்திலும், மறுமையிலும் வெற்றி பெற்றவர்களாக வாழ வேண்டும்.... அதை பெண்கள் உணர வேண்டும்.

எல்லாம் ஃபார்வேர்ட் மயம்

வாட்ஸப், இ-மெயில்களில் ஃபார்வேர்ட் ஆகும் விசயங்கள் இன்னும் பல வருடங்களுக்கான அறிவை வளர்க்க உதவும். ஆனால் விசயங்களில் உண்மை இருக்கிறதா என்று பார்ப்பது மிகவும் குறைவு. சமீபத்தில் கேன்சருக்கு மருந்து கண்டுபிடித்து விட்டார்கள் என்று வாட்ஸப் மெஸ்ஸேஜ். மருந்து அடையாறு கேன்சர் ரிசேர்ச் சென்டரில் கிடைக்கும் என இருந்ததால் சரி எதற்கும் இங்கு உள்ளவர்களுக்கு தேவைப்பட்டால் சொல்லலாமே என அங்கு உள்ள ஃபார்மசிக்கு டெலிபோனில் பேசினேன். அங்கு உள்ளவர்கள் சொன்னது நிறைய பேர் இது போல் விசாரிக்கிறார்கள், உண்மையில் ஒரு மருந்து இருக்கிறது , அது கேன்சரில் உள்ள பல டைப்களில் ஒரு டைப்பிற்கு ஒரு மருந்து. அதை ஆன்காலஜிஸ்ட் தான் பரிந்துறைக்க முடியும் இதை சாதாரணமாக இருமல் டானிக் மாதிரியெல்லம் வாங்க முடியாது என்றார்கள்.

வாட்ஸப்பிலும் , ஃபேஸ் புக்கிலும் எதற்கெடுத்தாலும் ஃபார்வேர்ட் செய்யும் ஆட்கள் தனது மனைவி குடும்பத்துக்கு ஒடி ஒடி உழைக்கிற மாதிரி தனது பெற்றோர்களையும் கவனிக்கிறார்களா என்று கண்டறியும் ஃசாப்ட்வேர் ஏதும் இருக்கிறதா.?. அப்படி இருந்தால்தான் உலகத்தை பற்றி கவலைப்பட முடியும் என்று ஒரு மெஸ்ஸேஜ் ஷேரிங் சட்டம் இருக்க வேண்டும்.

39-B

இது ஒன்றும் பல்லவன் பஸ் ரூட் அல்ல. மலேசியாவில் போதைப் பொருள் கடத்துபவர்களுக்கான தூக்குத்தண்டனை சட்டத்தின் பிரிவு. 1911 சீனப்புரட்சியின் போது சீனாவின் தென் பகுதியிலிருந்து தென்கிழக்காசியாவான தாய்லாந்து / மலேசியா / பர்மா போன்ற நாடுகளுக்கு கொண்டு வரப்பட்ட கஞ்சா , ச்சந்தூ எல்லாம் இப்போது விஸ்வரூபம் எடுத்து வருங்கால சந்ததியினரை மிகப்பெரிய கேள்விக் குறிக்கு ஆளாக்கியிருக்கிறது.

போதைப் பொருளுக்கு ஆளாகி விட்டவர்களின் நிலை மிகவும் கொடூரமானது. நிமிர்ந்து நடக்கும் ஒரு மனிதனை அவனது முதுகெலும்பை அப்படியே அவனிடமிருந்து உறுவித் திருடுவதற்கு சமமானது.


தினம் தினம் மலேசிய ஏர்போர்ட்டில் போதைப்பொருள் கொண்டு வரும் கடத்தல்காரர்கள் பிடிபடுவதும் அவர்கள் கைது செய்யப்படுவதும் பின்னாளில் அவர்கள் இந்த சட்டத்தின் மூலம் தூக்குத் தண்டனையில் அவர்கள் வாழ்க்கை கறைந்து போவதும் .... கொடுமையிலும் கொடுமை.

இதை நான் எழுதக் காரணம் இந்தியாவிலிருந்து  வரும் பயணிகளும் இதில் மாட்டிக் கொள்கிறார்கள். பண ஆசையை தவிர எதுவும் சரியான காரணமாக இருக்காது. இப்போதைக்கு நிறைய நைஜீரியர்கள், இரானியர்கள், பாகிஸ்தானியர்கள், மற்றும் இந்தியர்கள் இதில் நிறைய எலிப்பொறியில் மாட்டுவதுபோல் மாட்டுகிறார்கள். போட்டோ ஃப்ரேம், பால்மாவு பேக்கெட், ஷூ என்று எல்லாவிதமான நம்பியார் காலத்து டெக்னிக்களிலும் கடத்துகிறார்கள்.

டி.வி-யில் இவர்கள் சோதனையின் போது மாட்டும்போது இவர்கள் எப்படி செத்துப் போவார்கள் என்ற எண்ணம்தான் வரும், தூக்கு மாட்டப்போகும் முன், பெற்ற அம்மா, பிள்ளைகள் முகம் மனதில் ஒட... "சடக்" என காலுக்கு கீழ் உள்ள இரும்பு தளம் இரண்டாக விலகிக்கொள்ள  கால் இரண்டும் வெட்டி வெட்டி இழுத்து , கடைசியாக சாப்பிட்ட உணவும் தண்ணீரும் மலமாகவும், சிறுநீராகவும் வெளியாகி, நாக்கு தள்ளி, கண் பிதுங்கி...   ஒரு உயிரற்ற உடலை கறுப்பு பாலிதீனில் பேக் செய்து மொத்தமாக அனுப்பி விடுவார்கள். 

இதில் சிலர் பொதி சுமக்கும் கழுதையாகவும் தன்னை அறியாமல் மாட்டிக் கொள்கிறார்கள். 'இது சின்ன பார்சல்தான் கொடுத்து விடுகிறேனில்' நிறைய விசயங்கள் இருக்கும். அந்த பார்சல் உங்களை பார்சல் செய்து அனுப்பிவிடக் கூடும். கவனம் தேவை. எவ்வளவு பழக்கப்பட்டவராக இருந்தாலும் இதுபோல் மடையனாக வாங்கி வந்து மாட்டிக் கொள்ளாதீர்கள். மலேசிய சுங்கத்துறையும், நார்க் கோட்டிக் டிவிசனும் வைத்திருக்கும் ஸ்கேன் கருவிகளும், கேள்விகளும் மலச்சிக்கள் உள்ளவர்களுக்கு கூட டிசன்ட்ரீ வர வைத்து விடும். மற்றும் இங்கு இருக்கும் மோப்ப நாய்கள் நீங்கள் 35 வருசத்துக்கு முன் ப்ரைமரி ஸ்கூலில் பக்கத்து பையனிடம் திருடிய மாவடுவைக் கூட இப்போது பிடிங்கி காண்பித்து விடும்.

இந்த போதைக் கடத்தல் சட்டதில் கெத்தமின் மாத்திரைகளும் அடங்கும். மாத்திரை தானே வாங்கி வந்தேன் என்றெல்லாம் விவாதிக்க முடியாது. இதில் மிகப்பெரிய கவனம் சாதாரண மாத்திரை பேக்கிங். இதில் போதைப்பொருள் கடத்தினாலும் இங்கு ஈசியாக கண்டுபிடித்து விடுவார்கள்.

மற்ற நாடுகள் மாதிரி காத்திருந்து, ஜனாதிபதியின் கருணை மனு என்பதற்கெல்லாம் அவ்வளவு பெரிய முக்கியத்துவம் எல்லாம் கிடையாது. 

சனியனில் கைவைத்தால் சங்கு நிச்சயம்.

ZAKIR HUSSAIN

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 14 11

அதிரைநிருபர் பதிப்பகம் | October 09, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

முந்தைய பதிவில், நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரிடம் எப்படி  அன்பாக நடந்து கொண்டு சந்தோசமாக இருந்தார்களோ அவற்றில் ஒரு சில சம்பவங்களைச் சுட்டிக்காட்டி படிப்பினைப் பெற்றோம். அதன் தொடர்ச்சி இந்த வாரமும் தொடர்கிறது.

அல்லாஹ் கூறுகிறான்: “பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.”(அல்குர்ஆன் 36:36)

“இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.” (அல்குர்ஆன் 30:21)

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)

பரிசுத்த திருக்குர்ஆனின் மேற்கண்ட வசனத்தின் செயல் வடிவமாக நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கை அமைந்திருந்தது. 

நபி(ஸல்) அவர்களின் குடும்ப வாழ்வில் அழகான, உள்ளத்தைத் தொடும் சம்பவங்கள் பலவற்றையும் நாம் காண முடியும். நபி(ஸல்) அவர்கள் தம் மனைவியரின் கவலைகளைப் புரிந்துகொண்டார்கள். அவர்களை ஆறுதல்படுத்தினார்கள். ஒவ்வொரு முஸ்லிமும் தத்தம் வீடுகளில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கு நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் ஏராளமான முன்மாதிரிகள் உள்ளன.

நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு முறையும் தன் வீட்டிற்குள் வரும்போது சலாம் சொல்லிவிட்டுத் தான் உள்ளே நுழையும் வழக்கமுடையவர்களாக இருந்துள்ளார்கள். தம் பிள்ளைகள், உறவுகளின் வீட்டிற்குச் சென்றாலும் சரி சலாம் சொல்லும் வழக்கமுடையவர்களாக இருந்துள்ளார்கள்.

நாம் எத்தனை முறை வெளியில் சென்றுவிட்டு நம் வீட்டிற்கு செல்லுகிறோம், அதில் எத்தனை முறை சலாம் சொல்லிவிட்டு செல்லுகிறோம்? கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் சலாம் சொல்லுவது ஒரு கெளரவக் குறவான செயலாக அல்லது வெட்கமான செயலாக அல்லவா நாம் பார்க்கிறோம்.  நபி(ஸல்) அவர்கள் நமக்கு முன்மாதிரி என்பதை மறந்து விட்டோமே!

அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஸஃபிய்யா(ரலி) அவர்களை யூதனின் மகள் என்று ஹஃப்ஸா(ரலி) கூறினார்கள். இந்தச் செய்தி ஸஃபிய்யா(ரலி) அவர்களுக்கு கிடைத்த பொழுது அவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். ‘ஏன் அழுகிறாய்?’ என வினவினார்கள். ‘நான் யூதனின் மகள் என ஹஃப்ஸா கூறிவிட்டார்’ என தெரிவித்தார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ’நீ நபியின் மகள் தான். உனது சிறிய தந்தையும் நபியாக இருக்கிறார். நீ நபியின் மனைவியாக இருக்கிறாய். பிறகு எப்படி ஹஃப்ஸா உன்னிடத்தில் பெருமையடிக்க முடியும்? என்று கூறினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களிடம், ‘ஹஃப்ஸாவே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!’ என எச்சரித்தார்கள்.(நூல்:அபூதாவூத்) என்று நெகிழ்வூட்டும் செய்தி ஹதீஸ் தொகுப்புகளில் வாசிக்கும் போது உண்மையில் நபி(ஸல்) அவர்கள் ஆளுமை திறன் வகுப்புகளுக்கு செல்லாமலேயே ஒரு பக்குவமுள்ள நல்ல கணவராக இருந்துள்ளார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஓரு நல்ல எடுத்துக்காட்டு.

மனைவி நம்மிடம் வந்து என்னைப் பற்றி உங்கள் வீட்டில் உள்ளவர்கள் இப்படி பேசினார்கள், அப்படி பேசினார்கள் என்று சொன்னால், கணவனிடமிருந்து வரும் பதில் நீ உன் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கனும், அதான் வாங்கி கட்டிக்கொள் என்று தான் சொல்லுவோம். ஆனால் என்றைக்காவது அவளுக்கு ஆறுதல் தரும் வார்த்தைகள் பேசி அவளின் மனதில் உள்ள அந்த குறையை நீக்கும் விதமாக பேசி ஆறுதல் சொல்லி பக்குவமான கணவனாக இருந்திருப்போமா?

ஒரு கணவர் என்ற நிலையில் நபி(ஸல்) அவர்களின் குணநலன்களை ஆயிஷா(ரலி) இவ்வாறு விளக்குகின்றார்கள்: “நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை) செவியுற்றால் (தொழுகைக்குப்) புறப்பட்டு விடுவார்கள்” (நூல்:புஹாரி)

ஒரு இறைத்தூதராக இருந்தாலும் நபி(ஸல்) அவர்கள் தனது ஆடையைத் தைப்பார்கள்; கிழிந்த செருப்பைத் தைப்பார்கள்; வீட்டில் ஆண்கள் செய்ய முடிகின்ற வேலைகளைச் செய்வார்கள்” (அஹ்மத்). ஒரு அரசாங்கத்தின் ஜனாதிபதி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தன் வீட்டில் உள்ள ஆட்டின் பாலைக் கறப்பார்கள் (முஸ்னத் அஹ்மத்) என்ற செய்திகளை ஹதீஸ்களில் வாசிக்கும் போது நபி(ஸல்) அவர்கள் என்னதான் ஆட்சி அதிகாரம் வந்தாலும் தான் ஒரு சராசரி மனிதனாக வாழ்துள்ள தன்னிகரில்லாத் தலைவராக வாழ்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டில் ஆண்கள் செய்ய முடிந்த அனைத்து வேலைகளையும் செய்து தம் குடும்பத்தவர்களுக்கு உதவியாக இருந்துள்ளார்கள் என்பது கணவராகவும் தந்தையாகவும் இருந்த அவர்களது சிறந்த பண்பாட்டைக் காட்டுகிறது. அவர்களுக்கு இறைமார்க்கப் பணிகள், மேலும் அலுவல்கள் எத்தனையோ இருந்தும் இதர மனிதர்களைப் போலவே தமது குடும்பத்தினருக்காக நேரம் ஒதுக்குவதிலும், உதவுவதிலும் அவர்களுக்கு எவ்வித சிரமமும் இருக்கவில்லை.

நம்முடைய உயிரினும் மேலான அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நமக்கு முன்மாதிரி என்று பெருமையாகப் பேசுகிறோமே தவிர, நம்முடைய சொந்த வீட்டு வேலைகளை நாமாக முன்வந்து செய்திருக்கிறோமா? நல்ல உடல் பலம் இருந்தும், வசதிவாய்ப்புகள் நிறைந்துள்ளது என்ற ஒரே காரணத்தால், கணவனாக இருக்கும் நாம் நம்முடைய சொந்த வேலைகளையும் மனைவியிடமோ அல்லது வீட்டு வேலைக்காரர்களிடமோ செய்ய சொல்லுகிறோமே இது தான் நமக்கு முன்மாதிரி என்று சொல்லும் நபி(ஸல்) அவர்களைப் போன்று சொந்த வேலைகளை செய்யும் நபராக நாம் இருக்க வேண்டும் என்று சிந்திக்கக் கூடாதா?

நபி(ஸல்) அவர்கள் ஒரே பாத்திரத்திலேயே தமது மனைவியருடன் உணவை சாப்பிட்டுள்ளார்கள். ஒரே பாத்திரத்தில் பானத்தை அருந்தியுள்ளார்கள். ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுவதை கேளுங்கள்: “எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நான் (ஏதேனும் பானத்தை) பருகி விட்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் ஏற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்து விட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள்.” என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (முஸ்லிம்.)

நம்மில் எத்தனைப் பேர் உங்கள் மனைவியருடன் ஒன்றாக ஒரே தட்டில் வீட்டில் இருந்து அன்றாடம் உணவு அருந்தியிருக்கின்றோம்? வருடத்தில் எத்தனை முறை? மாதத்தில் எத்தனை முறை? வாரத்தில் எத்தனை முறை? ஒரு நாளில் எத்தனை முறை? அல்லது வாழ் நாளில் ஒரு முறையேனும் உங்கள் மனைவியுடன் ஒன்றாக ஒரே தட்டில் உணவு அருந்தியிருக்கிறீர்களா? மனைவியின் மீது அன்பை வெளிப்படுத்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த இந்த அழகிய வழிமுறையை நாம் ஏன் பின்பற்றக்கூடாது?

தமது மனைவியருடனான நேசத்தை அன்பை பாசத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுடன் உலாவினார்கள், மனதார பல சந்தர்பத்தில் புகழ்ந்துள்ளார்கள் என்பதை பின் வரும் சம்பவத்தில் நாம் கணலாம். இரவானால் நபி(ஸல்) அவர்கள் ஆயிஷாவுடன் பேசிக்கொண்டு நடப்பார்கள் நபி(ஸல்) அவர்கள் அடிக்கடி தமது மனைவியரை புகழவும் தவறவில்லை. ஆயிஷா(ரலி) அவர்களை ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு புகழ்ந்தார்கள்: “ஆயிஷாவுக்கும் இதர பெண்களுக்கும் இடையேயான வித்தியாசம் சாதாரண உணவும், தரீத் (இறச்சிக் குழம்பில் தோய்க்கப்பட்ட ரொட்டி - இது நபி(ஸல்) அவர்களுக்கு பிடித்த உணவாகும்) போலாகும்” (புகாரி, முஸ்லிம்)

இன்று நம்முடைய வாழ்வு இப்படியா இருக்கிறது? “என் பொண்டாட்டியா நீ? உன்னக் கட்டிக்கிட்டு நான் படும் அவஸ்தை இருக்கே… உன்னை கல்யாணம் செய்ததுக்கு பதிலா ஒரு மிருகத்தை கல்யாணம் செய்திருக்கலாம்” என்று கணவன் சொல்ல. அதற்கு பதிலாக மனைவி, ஒரே வார்த்தையில் “உங்களை கட்டிக்கிட்டு நான் என்னத்த கண்டேன்” என்று அவள் தன்னுடைய கணினி FOLDERயை ஓபன் பண்ணி கல்யாண நாள் முதல், பிள்ளை பெற்றதிலிருந்து, இன்று வரை உள்ள எல்லா ஓட்டை உடைசல்களை போட்டு உடைத்து நிம்மதியற்ற சூழலை உருவாக்கி வீடே ரணகளமாகிப் போய்கொண்டிருக்கிறது. ஆனால் நம்மில் எத்தனை பேர் தம் மனைவியின் நற்செயல்களை சொல்லிக்காட்டி புகழ்துள்ளோம்? பிற பெண்களுக்கும் தம் மனைவிக்கும் உள்ள நல்ல குணநலன்களை உயர்த்தி பேசி என்றைக்காவது புகழ்திருப்போமா? நபி(ஸல்) அவர்கள் தன் மனைவியை எப்படி எல்லாம் புகழ்ந்துள்ளார்கள் என்பதைப் பற்றி என்றைக்காவது அறிந்து வைத்திருக்கிறோமா?

இவ்வுலக வாழ்விற்கு நமக்கெல்லாம் முன் மாதிரி அண்ணல் நபி(ஸல்) அவர்கள், அவர்களின் வாழ்வு எப்படி இருந்துள்ளது ஆனால் நம்முடைய வாழ்வு எப்படி உள்ளது? என்பதை கொஞ்சம் உரசிப்பார்ப்பதற்காக சில சிந்தனைதூண்டும் கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள கேள்விகளுக்கு பதில் தரும் விதமாக ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

மேல் சொன்ன நபி(ஸல்) அவர்களின் வரலாற்றில் உள்ளது போல் இக்காலத்திலும் இளைஞர்களில் சிலரும், மேலும் வயதான தம்பதிகளில் பலரும் வாழ்ந்து கொண்டிருகிறார்கள் என்பதையும் இங்கு மறுக்க இயலாது. அல்லாஹ் அவர்களுக்கு நல்லருள் புரிவானாக.

நபி(ஸல்) அவர்கள் எப்படி தம் மனைவியரோடு நல்ல முறையில் வாழ்ந்து சந்தோசமாக தம் வாழ்வை கழித்தார்களோ அது போல் நாமும் சதோசமாக வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.
தொடரும்...
M. தாஜுதீன்

இந்த பதிவுக்கான தேடலில் எனக்கு உதவியாக இருந்த http://www.thoothuonline.com/ தளத்திற்கு ஜஸக்கலாஹ் ஹைரா.

தடைக்கற்களே படிக்கற்களாய்...! 39

அதிரைநிருபர் பதிப்பகம் | August 05, 2013 | , , , ,


வாழ்வில் வசந்தம் வீசும் காலங்கள் என்று ஒன்று எல்லோர்  வாழ்விலும் வந்து போவதுண்டு. வாழும் வாழ்க்கையின் குறிக்கோள் என்றால் என்ன என்று ஆழ் மனதில் அர்த்தம் புரியாத காலம் அது. நம் செலவினங்களுக்காக நம் சட்டைப்பையை நிரப்பும் காசு பணம் எங்கிருந்து வருகின்றது, அதன் மூல காரணி யார் என்று அறியாத; செலவழிக்க மட்டுமே தெரிந்த வயது அது.

அதுதான் பள்ளிப்பருவம். நம் பெற்றோர்களை உணவு தரும் தாயாக , காசு தரும் தந்தையாக , பள்ளிக்கூடப் புத்தகங்களைக் கடையில் வாங்க காசு  தரும் ஒரு காரணியாக மட்டுமே நினைத்து வந்த காலம் அது. இந்தக் காலகட்டங்கள் எல்லோர்  வாழ்விலும் உள்ள ஒரு பொதுவான நிலை. ஆனால் ஒன்றிரண்டு நபர்கள் வாழ்வில் இதற்கு நேர்மாறாக வாழும் வாழ்க்கைக்கு தள்ளப்பட்டு, குருவித்தலையில் பனங்காய் என்னும் தன் சக்திக்கு மீறிய பொறுப்புகள், பள்ளியில் பயிலும் காலங்களிலேயே சீரான வாழ்க்கையை இடை மறிப்பதுண்டு. 

அப்படி இடை மறித்த, வாழ்வை  ஒரு சவாலக ஏற்று வாழ்ந்து, அந்த சவாலுக்கு சாவு மணி அடித்து தன் உன்னத முயற்சியாலும், நண்பர்களின் கலப்படமற்ற தூண்டுகோலாலும் இயற்கையிலேயே தன்னிடம் அமைந்த  தன் பண்பாலும், ஏழ்மையிலும் விடா முயற்சியாலும், எல்லாவற்றிற்கும் மேலாக இறைவன் மீது கொண்ட அதீத நம்பிக்கையாலும் வாழ்க்கையில், தன்னை முன்னெடுத்துச்சென்ற; என் வாழ்க்கையில் நட்பு எனும் தோணியில் இன்றளவும் பயணம் செய்கின்ற ஒரு கலப்படமற்ற நட்புக்கு சொந்தக்கார நண்பனின் வாழ்க்கையில் அவன் கடந்து வந்த பாதையின்  கசப்பும் இனிப்பும் கலந்த சுவடுகளே இதை நான் எழுதத் தூண்டியது.

அந்த நட்புக்கு ஒரு நன்றி சொல்லி நாம் 30 வருடங்கள் பின்னோக்கிப் பார்ப்போம்.

ஆம், நாங்களெல்லாம் சுதந்திரப் பறவைகளாய் எதிர்காலக் குறிக்கோள்  என்ன என்ற கேள்விக்கு இடமில்லாமல், அன்றைய பொழுது நட்பு வட்டாரத்தோடு சந்தோசமாக கழிந்தால் அன்றைய பொழுதின் அர்த்தம் அதுதான் என்ற உணர்வோடு,  நாள் கழிந்து விட்டால் இனி அடுத்து சூரியன் உதிக்கும்போது அடுத்த நாள் பற்றிய சிந்தனை. இப்படியாக நட்பு வட்டாரத்தோடு கழிந்து வீடு வந்து சேர்ந்து என்னும் வழக்கத்தில் பொழுது கழிந்து கொண்டிருந்த காலகட்டத்தில்,எங்கள் நட்புகளுக்கிடையில் ஒருவன் மட்டும், அனைத்திலும் அவன் பங்கு இருந்தாலும், மற்றவர்களை விட ஒரு படி மேலே, முன்னேற வேணும், முன்னேற வேணும் என்னும் துடிப்பு அவனிடத்தில் மட்டும் கொஞ்சம் ஓங்கி இருந்தது. 

அவனிடம் இருந்த அந்த துடிப்பில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஏனெனில் அவன் வளர்ந்த சூழ்நிலை அப்படி.  அவனிடம்  மற்ற நண்பர்களைவிட கூடுதல் உந்தித்தள்ளும் உணர்வு இயற்கையிலே இரத்தத்தோடு அவனிடம் ஊறி இருந்தது.இதன் வெளிப்பாடுதான்,.....................

தன் தாயின் அரவணைப்பில் மட்டும், இருந்து கொண்டு,  தந்தை இருந்தும் இல்லாமல், தன் உற்றார் உறவினர் தனக்கு ஏணியாக நின்று உதவ, வெறியோடு இச்சமுதாயத்தில், நாமும் பேசப்படுகின்ற ஒரு ஆளாக நின்று, பிறந்தோம், வாழ்ந்தோம், வளர்ந்தோம், வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்னும் மனப்போக்குக்கு முற்றுப்புள்ளி வைத்து , கொஞ்சம் கொஞ்சமாக கடின உழைப்பென்னும் ஆயுதத்தை  கையில் எடுத்து, பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி என்னும் சாலையில் கால் பதித்தான். ஏழ்மை என்னும் ஆடை அன்றுவரை அவனை விட்டு அகலவில்ல.

கல்லூரி படிப்பு எப்படியும் பள்ளிப்படிப்பைவிட  விட பல மடங்கு செலவு என்னும் சுனாமி தாக்கும் ஒரு கல்லூரிச்சாலை.இதில் ஏழ்மை என்னும் ஆடை அணிந்தவன் எப்படி கரை சேர்வான். ஆம் செலவு என்னும் சுனாமியிலிருந்து கரை சேர தோணியாகவும், துடுப்பாகவும் உறவின் முறை என்று சொல்லும் ஒரு பாசமிக்க பந்தம்  அவனுக்கு கை கொடுத்தது. 

நன்றி கலந்த மனதோடு அதை ஏற்ற அவனோ ஒரு சின்ன தியாகம் ஒன்றை அதன் விலையாக  கொடுக்க நேர்ந்தது.  அதுதான் அந்த உறவிலேயே  தனக்கு முற்றிலும் பொறுத்த மில்லாத  துணையை. தன் வாழ்க்கையோடு இணைத்துக் கொள்ளவேனும் எனும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதை முழுமனதோடு ஏற்காவிட்டாலும், நன்றி என்னும் சொல்லுக்கு எதிராக செயல்பட அவன் மனது இடம் தராததால் கரம் பிடித்தான் வாழ்கைத் துணையாக.

அதிரையின் எழுதப்படாத விதியான,

பெண் பிறந்தால் மனைக்கட்டு
ஆண் பிறந்தால் பாஸ்போர்ட் 

என்னும் விதிக்கு அவன் மட்டும் விதி விளக்கா என்ன!?. குடும்ப சூழ்நிலை நீ பிறந்த தாயகத்தை விட்டு வெளியேறு என்றது. குடும்பத்தில் பெற்றோருக்கு ஒரே பிள்ளை என்ற செல்லம் இருந்த போதிலும் குடும்பப்பின்னணி அவனை செல்லப்பிள்ளை அல்ல, சுமை தாங்க வேண்டிய பிள்ளை என்று சொல்லி தாயகத்தை விட்டு துரத்தியது. ஒதுங்கினான், ஓடினான், ஓய்வின்றி அலைந்தான் அன்றைய பம்பாய் மாநகரின் எல்லைக்கே  ஓடினான். அவன் ஓட்டத்தை தடுத்து நிறுத்த அவன் குடும்பப்பின்னணி இடம் கொடுக்கவில்லை. தஞ்சமடைந்தான் மும்பை நகரில்.

சொல்லவொண்ணா சோதனைகளுக்கிடையில் தன்னை ஈன்ற தாயின் முகம் தன கண்  முன்னே நிழலாட, உழைக்க வேணும் என்னும் ஒரு வெறியோடு, இருந்தவனுக்கு இறைவன் விதித்த விதியில் வெளிஉலகில் காலெடுத்து வைக்க இறைவன் தந்த வாய்ப்பு என்னும் கதவு திறக்க , அதை அவன் நன் முறையில் பயன படுத்த தவறவில்லை.  சென்றான் சவுதி அரேபியா வென்னும் புனித இல்லங்கள் இருக்கும் தேசம்   அங்கு அவன் காட்டிய உழைப்பு  அதில் இருந்த வேகம், தேனீ, எறும்பு அனைத்தும் அவனிடம் பாடம் கற்கவேணும் அவன் உழைப்புக்கு  முன்னால்  என்று சொல்லும் அளவுக்கு தன் உழைப்பில் , சாதுரியமாக, தெளிவாக, அதே சமயம் தீவிரமாக தன் ஊக்கத்தை அதில் செயல் படுத்தினான். 

இது நான் சொல்வது அனைத்தும் மிகை அல்ல நான் கண்ணால் கண்டது. அவன் பணிபுரியும் அலுவலகம் போகும் வாய்ப்பு வாரம் ஒருமுறை எனக்கு ஏற்படும்போது, நான் வார விடுமுறையில் செல்லும்போது, அவன் விடுமுறைக்கு விடுமுறை கொடுத்து உழைத்துக் கொண்டிருப்பான். 

நான் வந்திருப்பதால் எனக்காக கொஞ்சம் பணியிலிருந்து சீக்கிரம் கூட சில சமயங்களில் வந்து நாங்கள் சந்தோசமாக பொழுதைக் கழிப்போம். இப்படி உழைப்பின் உயர்வை உணர்ந்த அவன் அல்ஹம்துலில்லாஹ், அன்று ஆலமரக்கிளையாக  இருந்தவன், இன்று பல கிளைகளாக விரிந்து தன குடும்பமெனும் பூமிக்கு நிழல் கொடுக்கும் ஒரு ஆலமரமாக மாறிப்போய் , இன்று சமுதாயத்தில் பேர் சொல்லும் பிள்ளைகளில் அவனும் ஒருவன் என்று சொல்வதிலும், அவன் நண்பன் என்பதிலும் பெருமை அடைபவர்களில் நானும் ஒருவன்.

அப்பொழுதுதான் இடியாக ஒரு செய்தி அவனுக்கு சொல்லப்பட்டது, சில காலமே சென்றிருந்தாலும் விருப்பமுடனோ அல்லது விருப்பமில்லாமலோ இருவரின் கட்டில் போட்ட இடத்தினிலே தொட்டில் போடும் நிலை என்பிள்ளைக்கு உருவாகி இருக்கின்றது என்று பெற்ற தாய் பூரிப்பு அடையும் நேரம் அது  சொற்ப நேரமே நீடித்த வகையில்.

தன் மனைவி தன் வாரிசை ஈன்றெடுக்குங்கால் மலடி என்ற அவச்சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஒன்றுக்கு இரண்டாக ஈன்றெடுத்து, ஒன்று பிறந்து இறந்தும், ஒன்று இறந்து பிறந்தும், தாய் சேய்கள் மூவருமே இவ்வுலகுக்கு விடை கொடுத்தனர் இறைவன் நாட்டப்படி என்ற செய்தி இடியென இறங்கியது அவன் மேல்.

அவன்  மனைவி அவன் வாரிசை சுமந்தவலல்லவா.!  ஆம் அவன் உடைந்தே போனான். அவன் கலங்கி நின்ற கணம் என் கண் முன்னே இன்றும் நிழலாடுகின்றது.

வாழ்க்கையில்  வகை வகையான சோதனைக்கு ஆட்பட்ட அவனுக்கு வாழ்க்கையில் முன்னேறி சாதிக்க வேணும் என்ற வெறியின் முன்னே அச்சோதனைகள்  தடையாக இருக்கவில்லை.சோதனைகளை சாதனைகளாக்கிக்காட்ட அவன் மனம் சீரான பாதையில் சாதிக்க வேணும் என்று சிந்தித்து வீறு நடையில் குறைவின்றி பயணித்தது. 

ஒவ்வொரு சோதனையிலும், இறை நம்பிக்கையில் தொய்வு விழாமல் ஒவ்வொன்றும் இறைவன் ஏற்பாடே என்னும் ஈமான் சுடர்விட்டு பிரகாசிக்க ,தன் அலுவலக பனியின் ஒவ்வொரு அசைவிலும் தன் திறமையை அல்லாஹ்வின் உதவியோடு நிரூபித்து காட்ட, இவனுக்கு முன்பிருந்த மேலாளரின் இருக்கை , இவனை தேடி வந்ததில் ஆச்சரியம் ஒன்று மில்லை. 

இதற்குத்தானே இவ்வளவு காலம் காத்திருந்தான். ஆம் அவன் கட்டுப்பாட்டில்முழு அலுவலகமும் வந்தது.அவன் இல்லையெனில், அங்கு இயக்கமே இல்லை என்னும் நிலையை உருவாக்கிஇவனுக்கு முன்பே அங்கு மேலாளர் பதவியில் இருந்த ஒரு இந்தியர் எல்லா வகையான தடங்களையும்  அவனுக்கு கொடுத்து பார்த்து அவன் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக இருக்க முற்பட்ட போதெல்லாம் தன் திறமையினாலும், தன் தூய கலப்படமற்ற மனதினாலும் அந்த அலுவலக முதலாளியின் நெஞ்சில் நிலைத்தான். அதனால் இவனுக்கு முன்பிருந்த அந்த மேலாளரின் இருக்கை இவன்   வசமானது. 

உழைப்பு, உழைப்பு, உழைப்பு , இது இவனின் தாரக மந்திரமாக இருந்ததால் , எல்லா தடைக்கற்களையும் , படிக்கற்களாகவே பாவித்தான். எதிர் நீச்சல் என்னும் சவால் இவனுக்கு வெல்லம் தின்பது போல். அந்த மேலாளர் விரித்த வலையில் இவன் விழ வாய்ப்பில்லாமலேயே  போனது. அந்த மேலாளர் விரித்த வலையில் அவரே வீழ்ந்தார்.

இப்பொழுது , முழு நம்பிக்கையைப்பெற்ற ஒரு தூய தொழிலாளியாகிப் போனான் இவன். இவன் முதலாளியோ இவனை விட்டால் , இங்குள்ள இயக்கம் அனைத்தும் நின்றுவிடும் என்று எண்ணியவன்,, முழுதுமாகவே இவனிடமே ஒப்படைத்து விட்டு, இந்த அலுவலகத்தில் லாபமோ, நஷ்ட்டமோ , மாதம் எனக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி விடு ,மற்ற அனைத்தும் உன்னைச்சார்ந்தது என்னும் நிபந்தனையின் பேரில் இவன் வசம் பரிபூரண காட்டுப்பாட்டுக்குள் வந்தது அலுவலகம்.அந்த அலுவலகத்தில் எல்லமாகிப்போனான் இவன். 

ஆம் தன் தாயை ஏழ்மை நிலையிலே பார்த்தவன் இந்த ஊர் மெச்ச , தன் உதிரத்தை தனக்கு தந்த அந்த தாயை ஊர் கண்ணு படும்படி இன்று வாழ வைத்துக்கொண்டு இருக்கின்றான். தன் தாயின் விருப்பத்தின் பேரில் இரண்டாவதாகக் கை பிடித்த மங்கையுடன் வாழ்வை தொடர்ந்தவன்,, அங்கேயும் கட்டில் போட்ட இடங்களில் தொட்டிலும் போடப்பட்டது. இந்த சந்தோஷ தருணம் ஒரு பக்கம் அவன் வாழ்க்கையை அலங்கரித்தாலும், நன்றி மறவாமல் , தனக்கு பொருளாதார உயிர் கொடுத்த தன் உறவின் முறையையும் இன்றும் நன்றி கலந்த பாசத்தோடு அரவணைத்து செல்லும் அவன் பாங்கு ,மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது மிகை இல்லை என்று சொல்வேன்.

சோதனைகளில் துவண்டு விடாமல்,உழைப்பு என்னும் ஆயுதம்  ஏந்தும் எவனும் எவரிடமும் கையேந்த வேண்டிய அவசியமே இல்லை என்னும் ஒரு நெஞ்சுறுதி வேணும். , எக்காரணம் கொண்டும் , இறைவனுக்கு மாறாகவோ, அல்லது ,குறுகிய காலங்களில் நிறைய திரட்டிவிடவேனும் என்னும் பேராசையால் உந்தப்பட்டு,தூய்மையற்ற வழியில் செல்வம் திரட்ட முற்பட்டாலோ அது வரும்போல் தெரியும், நம்மை அறியாமலேயே , நம்மை விட்டு பாவக்கறைகளை நம்மிடம் தந்து விட்டு, சொல்லாமல் செல்வோம் என்று வந்த செல்வம் சென்றுவிடும். 

ஆதலால் இளமையில் உழைப்பவன், முதுமையில் சிரிப்பான்,இளமையில் முடங்கியவன் முதுமையில் தவிப்பான் 

என்னும் மந்திரம்தான் மேலே நான் பதியும் இந்தப்பதிவு சொல்லும் நீதி போதனை.

இதை ஏற்பவர் வாழ்வோ புரியும் சாதனை !

அதிரைநிருபரில் என் கன்னிப் பதிவின் கதாநாயகனைப்போல்.

(என் முதல் பதிவான என்னோடு நெருங்கிய வாழ்வியல் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையிலானது)

அபு ஆசிப்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு