Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உலகமயமா? ஏழை மயமா? 10

அதிரைநிருபர் பதிப்பகம் | December 31, 2011 | , , , ,


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). இந்த கட்டுரை 2007ஆம் வருடம் சத்தியப்பாதை மாத இதழில் நான் எழுதி வெளி வந்ததது. இன்றும் கட்டுரையில் உள்ள நிலைமையே உலகத்தில் தொடர்ந்து வருவதால் மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன். இதில் உள்ள புள்ளிவிபரம் இன்று பல மடங்கு பெருகி இருக்கிறது.

உலகமயமாக்கலால் ஏழைகள் தன்னிறைவு அடைந்து விடுவார்கள் என்பது இந்தியாவெங்கும் சிலரால் எடுத்து வைக்கும் வாதம். ஆனால் நடக்கும் நிகழ்வுகளோ எதிராக உள்ளது. உலகமய பொருளாதாரத்தால் ஏழை பணக்காரன் வித்தியாசம் அதிகரித்து வருகிறது. அதனால் உலகமயமாவது முடிவுக்கு வரக்கூடும் என்று சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகப்பொருளாதாரக் கூட்டத்தில் உலக வங்கித் தலைவரே கூறியிருக்கிறார். வருடா வருடம் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் (பில்லியனர்கள்) பட்டியலை 'போர்ப்ஸ்' எனும் பிரபல பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது. (ஒரு பில்லியன் என்பது 100 கோடி). பிப்ரவரி 9 ம் தேதி 2007 வரை பட்டியல் தயாரித்தது. இதில் உலகில் 946 பில்லியனர்கள் உள்ளனர். கடந்த ஆண்டை விட 178 புது பில்லியனர்கள் அதிகமாகி உள்ளனர். 

அமெரிக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ் உலகின் முதல் பணக்காரர் இடத்தில் தொடர்ந்து இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு 56பில்லியன் டாலர் ( 2.52 லட்சம் கோடிகள்).  ஆசியக் கண்டத்திலேயே, இந்தியாவில்தான் அதிக பில்லியனர்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு 22 என்ற எண்ணிக்கையிலிருந்து தற்போது 36 பில்லியனர்கள். ஜப்பானில் இருக்கும் பில்லியனர்களோ வெறும் 22தான். ஜப்பானை முந்தி விட்டார்கள் நம் இந்தியர்கள் - இதனால் பெருமைப்பட முடியுமா? (சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னர் இந்தியா பல நாடுகளாக இருந்தது ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு மன்னர், குறுநிலமன்னா, ஜமீன்கள் இருந்தது போல்) இன்றைய 36 பில்லியனர்களும் தனித் தனி ஜமீன்கள் - குறுநில மன்னர்கள் போல் உருவாகி வருகிறார்கள்.  இதனால் ஏழைகள் அதிகம் உள்ள நாடாக மாறி செல்வங்கள் ஒரே பக்கம் குவிந்து வருவதை எப்படி பெருமையாக எடுத்துக்கொள்ள முடியும். நாட்டின் சட்டங்களும் பணம் உள்ளவர்களுக்கு சாதகமாகவே இருந்து வருகிறது.

இந்தியாவின் பில்லியனர்களில் ஒருவர் கூட முஸ்லிம் கிடையாது. முஸ்லிம்கள் வளமாக வாழ்கிறார்கள் என்று பொய்ப்பிரச்சாரம் செய்யும் பாசிச கூட்டங்கள், சுதந்திரத்திற்கு முன்பிருந்து சதி செய்து வரும்  இந்த பாசிச கூட்டங்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களில் 1சதவீத அளவில் கூட இல்லாமல் சொந்த உழைப்பில் சேர்த்து வைக்கும் முஸ்லிம்களின் செல்வங்களையும் நாசம் செய்து வஞ்சித்து வருகின்ற மனித நேயமற்ற வெறிபிடித்த கூட்டங்கள் தினம் தினம் அதிகமாகி கொண்டே வருகிறார்கள். மேலும் பாசிச கூட்டங்கள் அப்பாவிகளை தூண்டிவிட்டு முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்று தொடர்ந்து திட்டங்களையும் தீட்டி வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களின் பிரார்த்தனை அல்லாஹ்வால் (இறைவனால்) ஏற்றுக்கொள்ளப்பட்டால், இந்த மனித இரத்தம் குடிக்க அலைந்து கொண்டு இருக்கும் பாசிச கூட்டங்களால் இறைவனின் கோபத்தை தாங்க முடியுமா? முடியவே முடியாது! 

(அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான். தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை. (அல்குர்ஆன் : 2:258)

உலகின் 1 சதவீதம் மிகப்பெரிய பணக்காரர்கள் 40சதவீத சொத்துக்களுக்கு அதிபதிகள். உலகின் 10சதவீத மக்கள் உலகின் 85சதவீத சொத்துக்களுக்கு உடமையாளர்கள். உலகில் ஆண்டிற்கு 80லட்சம் மக்கள் உண்ண உணவின்றி இறந்து போகின்றார்கள் என்று பிரபல டைம் பத்திரிக்கை தெரிவிக்கின்றது. உலகில் ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் குழந்தைகள் பசிக் கொடுமையால் இறக்கின்றனர் என ஐ.நா. சபை அறிக்கை ஒன்று கூறுகிறது. உலகில் 50 சதவீத மக்கள் மாதத்திற்கு ரூ 2,700 வருமானம் கூட இல்லாதவர்கள். உலகின் முதல் மூன்று பணக்காரர்களின் சொத்து, ஏழ்மையான 48 நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் மேலாக உள்ளது. 

21-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் 100 கோடி பேருக்கு மேல் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். உலகில் 50 சதவீதம் இளைஞர்களுக்கு வேலை இல்லை.  25 கோடி மக்கள் மாதத்திற்கு ரூ 1,350 கூட வருமானமில்லாத ஏழைகளைக் கணக்கிட்டு உலகில் அதிக ஏழைகள் உள்ள நாடு இந்தியா என்ற அவப்பெயரையும் பெற்றுள்ளது. 81 சதவீத இந்தியர்களின் மாத வருமானம் ரூ 2,700 க்கும் குறைவாகவே உள்ளது. இந்தியாவின் 36 பில்லியனர்கள் 25 சதவீத பொருளாதராத்தைக் கைக்குள் வைத்துள்ளனர். பணக்கார நாடுகள் வருடாவருடாம் கூடி, தங்கள் பொருளாதராத்தில் 0.7 சதவீதம், ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்று தீர்மானம் போடுவதோடு சரி. தீர்மானத்தை நிறைவேற்ற அந்த பில்லியனர்கள் பணத்தின் மேல் கொண்டுள்ள ஆசை தடுக்கிறது. 

பணம் ஒரே பக்கம் மலைபோல் சோந்து கொண்டு இருப்பதும்,  ஏழை மக்கள் பசி பட்டிணிக்கு ஆளாகும் முரண்பாட்டிற்கும் என்ன காரணம் இந்த பணக்கார உலக நாட்டின் சட்டங்கள் அனைத்தும் மனிதக்கரங்களால் எழுதப்பட்டவை. ஏழைக்கு ஒரு நீதியும், பணக்காரனுக்கு ஒரு நீதியும் நிறையவே காணப்படுகிறது. உலக நாடுகள் அனைத்திலும் பணக்காரன், மேற்கொண்டு பணம் சேர்ப்பதற்கு வழி வகுக்கும் வகையில்தான் ஒவ்வொரு ஆண்டும் சட்டங்களை இயற்றி வருகிறது. ஏழைகளை தன்னிறைவு அடையச் செய்ய வேண்டும் என்ற திட்டங்கள் அனைத்தும் திட்டங்களாகவே இருந்து சரியான முறையில் ஏழைகளைப்போய்ச் சேர்வதில்லை.      

இந்த பில்லியனர்களுக்கு வாழும் வாழ்க்கை நெறி இஸ்லாம் போதிக்கப்பட்டு  இருந்தால்; ஏழை வரியான ஜக்காத்தை இறைவனுக்காக மனமுவந்து ஏழைகளுக்கு வழங்குவார்கள். இஸ்லாம் போதிக்கும் சட்டங்கள் மனிதக் கையால் எழுதப்பட்டவை அல்ல. இந்த உலகையும், மனிதர்களையும் படைத்த ஒரே இறைவனால் மனிதர்களுக்கு வழங்கிய சட்டமாகும் இதனால் இறைச்சட்டத்தில் எந்த குளறுபடிகளையும் எந்த மனிதனாலும் காண முடியாது. உலக மனிதர்களுக்கு எல்லாக் காலத்திற்கும் பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்களையும் ஒருங்கே பெற்ற திருக்குர்ஆனை உண்மையான எண்ணத்துடன் ஆராய்ந்து பார்த்தால் புரிந்து கொள்வார்கள்.

மனிதர்களே! சிந்தியுங்கள்! நேர்வழி பெறுங்கள்.

- S.அலாவுதீன்

எண்ணமும் எழுத்தும் 52

அதிரைநிருபர் பதிப்பகம் | December 28, 2011 | , , , , ,


தப்பித்தது –
இது
கவிதை அல்ல
நல்லவேளை –
நான்
கவிஞனும் இல்லை!

இந்த
வார்த்தைக் கோர்வை
எதேச்சையானது
சொந்த
வாழ்கையைச் சொல்வதில்
சுயேட்சையானது

இது
பகுத்தறிவுப் பண்புகளைத்
தொகுத்தக் கணக்கு
வளைந்தும் நெளிந்தும்
வயலைச்சேரும் வரப்பு

இது
வைத்தியர்கள் இலக்கணமோ
மருத்துவச்சி அனுபவமோ
அவசியப்படாத
இயற்கை பிரசவம்

தேன் தடவிய
கசப்பு மருந்து
தீன் தடுத்திடாத
எழுத்து விருந்து.

இது
கர்ப்புள்ள பெண்டிர்
வேண்டிடும் கர்ப்பம்
கயமையை எதிர்ப்பதில்
தீண்டிடும் சர்ப்பம்

உபரிக் குறியீடுகளும்
உதிரிக் காகிதங்களும்
விரயமாகாததால்
விழலுக்கு
இது
வீணாவதில்லை

இது
கத்தரித்து வைக்கப்பட்ட
கட்டபொம்மன் மீசை
திருத்தி அமைக்கப்பட்ட
தீன்குலத்தோர் கேசம்

விளிப்புகளையும் அழைப்புகளையும்
அடிவருடல்களையும் தவிர்த்த
அறிவாகரனின் மேடைப்பேச்சு

கொண்டதைக் கொண்டே
கொள்கலன் அறியப்படும்
உண்டதைக் கொண்டே
உடல்நலம் சீர்படும்

ஏட்டோடு பழகாமல்
எழுத்தோடு மோதாமல்
எண்ணங்களைப் பார்க்கனும்
என்னவென்று புரியனும்

கெட்டதை சொல்லுமெனில்
கட்டுரையும் தீதே
கட்டுக் கதைகளையும்
தடுத்தே வைக்கனும்

கடமையை மறந்து
ஜடமாய் வாழ்பவனை
எண்ணமும் எழுத்தும்
திண்ணமாய் எழுப்பும்

எழுதிப் படைப்பவன்
இறந்து மடிந்தபின்னும்
எண்ணமும் எழுத்தும்
இன்னமும் நிலைக்கும்

- Sabeer abuShahruk

மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் ! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | December 28, 2011 | , ,

"நான் கண்ட சரித்திரக்குறியீடு"

உத்வேகமும், உற்சாகமும் தரும் அருமையான ஒரு அப்பட்டமான உண்மை நிறைந்த அனுபவ கட்டுரையை வழங்கிய கட்டுரையாளர் இப்ராகிம் அன்சாரி காக்கா அவர்களுக்கு முதற்கண் நன்றிகளும், வாழ்த்துக்களும்.

என் பத்து வருடங்கள் தாண்டிய சவுதி அரேபிய அனுபவத்தில் என் கண் முன்னே நான் கண்ட ஒரு அதிசயத்தை இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

நான் முன்பு சவுதியின் முக்கிய எண்ணெய் வள தொழில்நகரமான‌ யான்பு நகரில் ஒரு ஸ்டீல் கம்பெனியில் என்னுடைய மேலாளர் திரு. காமராஜ் (மன்னார்குடி சொந்த ஊர், படிப்படியாக முன்னேறியவர் ஆரம்பத்தில் ப்ராஜெக்ட் இன்‍ஜினியராக நிறுவனத்தில் சேர்ந்து, பிறகு சீனியர் ப்ராஜெக்ட் இன்‍ஜினியர், பிறகு ப்ராஜெக்ட் மேனேஜர், பிறகு ப்ளேனின் மேனேஜர் தற்சமயம் ப்ராஜெக்ட்ஸ் மேனேஜர்) அவர்களின் கீழ் பெர்சனல் செக்ரட்டரியாக ப்ராஜெக்ட்ஸ்/திட்டமிடல் துறையில் (ப்ளேனிங்) பணியாற்றிக்கொண்டிருக்கும் பொழுது நான் வேறொரு

வாய்ப்பிற்காக இன்னொரு கம்பெனி செல்ல நேரிட்டது. அங்கு செல்ல வேண்டிய‌ பணிகள் நடந்து கொண்டிருக்கும் சமயம் எனக்கு மாற்றாக ஒரு ஆள் என் துறைக்கு தேவைப்பட்டது.

அச்சமயம் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்திருந்தும் வெல்டராக பணிபுரிந்து கொண்டிருந்த பீகாரைச்சேர்ந்த ஒரு இளைஞன் (பெயர் அஸ்லம் அன்சாரி) ப்ராஜெக்ட் முடிந்து பணியில்லாமல் இருந்த அவனை சில மாதங்களுக்கு முன் ஆவணக்கட்டுப்பாட்டு துறையில் ஆவணங்களை கோப்பிலிட ஒரு ஆள் தேவைப்பட்டு நான் அவனை அடையாளம் கண்டு என் மேலாளரிடம் சொல்லி அங்கு அவன் அமர்த்தப்பட்டு பணி செய்து வந்தான். நான் நிறுவனத்தை விட்டு வெளியேற இருக்கும் தகவலறிந்து நான் வேலை செய்த ப்ராஜெக்ட்/திட்டமிடல் துறைக்கு வரவழைக்கப்பட்டான். என் மேலாளரும் அவனுடைய சுறுசுறுப்பு கண்டு எனக்கு மாற்றாக அவனை ஏற்றுக்கொண்டார். நான் அங்கிருந்து வெளியேறியதும் நாளடைவில் கொஞ்சம், கொஞ்சமாக திட்டமிடல் துறையின் முக்கிய‌ மென்பொருளான "ப்ரைமவேரா" வை அக்கம்பக்கத்தினரிடம் மெல்ல,மெல்ல கற்றுக்கொண்டான்.

நான் மற்றொரு கம்பெனியில் பணியில் சேர்ந்து என் பழைய நண்பர்களுக்கு வேலைவாய்ப்பு சம்மந்தமான மின்னஞ்சல்கள் அவ்வப்பொழுது அனுப்பி வருவேன். அதில் கத்தாரில் ஹுன்டாய் நிறுவனத்திற்கு ஒரு ப்ராஜெக்ட் கிடைத்து அதில் ப்ராஜெக்ட் ப்ளேனர் வேலையும் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.

அதை கண்ட அவன் அதே துறையில் பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த ஒரு மூத்த ப்ளேனரின் சி.வி.யை வாங்கி அப்படியே இவன் பெயருக்கு சில மாற்றங்களுடன் மாற்றி கத்தார் ஹுன்டாய் விலாசத்து மின்னஞ்சல் அனுப்பி விட்டான்.

உடனே அங்கிருந்தும் இன்டர்வியூவிற்கு அழைப்பு தொலைபேசியில் வந்து ப்ராஜெக்ட் ப்ளேனராக 2000 சவுதி ரியால் சம்பளத்தில் என் பழைய நிறுவனத்தில் வேலை பார்த்த அவன் இன்று கிட்டத்தட்ட 4000 அமெரிக்க டாலர் சம்பளத்தில் சவுதி விசாவை முடித்துக்கொண்டு போய் அந்த நிறுவனத்தில் சேர்ந்து கார் மற்றும் குடும்ப சகல வசதிகளுடன் கத்தாரில் நலமுடம் செளக்கியமாக இருந்து வருகிறான். மாஷா அல்லாஹ்..

சென்ற வாரம் சில பழைய கம்பெனி நண்பர்களுடன் இணைந்து அவன் நிறுவன‌ வேலைகளுடன் தோஹாவின் மையப்பகுதியில் ஒரு பெரிய சவுத் இண்டியன் ரெஸ்ட்டாரெண்ட் ஆரம்பிக்க இருப்பதாகவும் அதில் வந்து என்னை அவசியம் கலந்து கொள்ளும்படியும் பத்திரிக்கை அனுப்பி இருந்தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இதில் பொறாமைப்படுவதை விட தொடர் முயற்சியால் தனக்குள் ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்து அதை நிரூபித்துக்காட்டி வல்ல அல்லாஹ்வின் நாட்டத்தில் இன்று கத்தாரில் சந்தோசமாக குடும்பத்துடன் அவன் வாழ்ந்து வருவது என் வாழ்வில் நான் கண்ட சரித்திரக்குறியீடு....

எப்பொழுதோ, எங்கோ, தனக்கோ அல்லது யாருக்கோ நடந்த சில அசெளகரியமான‌ சம்பவங்களையே காரணம் காட்டி அதையே நினைத்து கொண்டு பயந்து நமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளையும் அதனால் வர இருந்த நல்ல பல வளர்ச்சிகளையும், வாழ்க்கை முன்னேற்றங்களையும் நாம் நமக்கு தெரியாமலேயே அவிழ்க்க முடிந்தும் முடியாமல் இறுகக்கட்டிப்போட்டு வைத்துள்ளது வேதனையான மற்றும் நிதர்சனமான உண்மையே.

ஒருவன் வெளிநாட்டில் குடும்பம், கார், சகல‌ வசதிகளுடன் சந்தோசமாக இருந்து வரும்பொழுது அவன் இந்த நிலைக்கு வருவதற்கு எவ்வளவு சிரமம் எடுத்து படித்திருப்பான் இல்லை சிரத்தை எடுத்து முயன்றிருப்பான் என்பதை நாம் பெரும்பாலும் சிந்திக்க மறந்து விடுகிறோம். மாறாக, பொறாமையே முன்வந்து நின்று கொண்டு நம் முயற்சிகளை கொன்றுவிடுகிறது. கர்வம் வந்து தானே சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டு நம் வாழ்வில் கொடுங்கோல் ஆட்சி செய்து வேதனைப்பட வைத்து விடுகிறது.

இது போன்ற கட்டுரைகள் எழுதுபவருக்கும், அதை கவனத்துடன் படிப்பவருக்கும் பல்கலைக்கழகம் செல்லா ஒரு நல்ல பாடம். நமக்கு ஏற்பட்ட இது போன்ற அனுபவங்களை அடிக்கடி பகிர்ந்து கொள்வதுடன் நம் வீட்டு பிள்ளைகளின் காரியத்தில் இதை கடைபிடித்து அவர்களின் ஒவ்வொரு அசைவையும் திட்டமிட்டு மார்க்க வரம்பிற்குட்பட்டு கொண்டு செல்வோமேயானால் வரும் காலம் அவர்களால் நமக்கு ஆனந்தமாக இருக்குமேயன்றி ஒருபோதும் அல்லல்பட வைத்து விடாது.

அதிரை நிருபர் குழுமத்திற்கு, இயன்றால் மேற்கண்ட என் கருத்துக்களை "நான் கண்ட சரித்திரக்குறியீடு" என்ற தலைப்பில் தனிக்கட்டுரையாக‌ வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அனுபவங்கள் பேசட்டும் அதுவே நம் வாழ்க்கைக்கு ஓர் ஏணிப்படியாக ஆகட்டும் எனக்கும் உங்கள் அனைவருக்கும் வல்ல அல்லாஹ்வின் நாட்டத்தில்.
அனுபவம் பேசுகிறது தொடரும்...
- மு.செ.மு. நெய்னா முஹம்மது.

குழப்பம் - ஆலோசனை - தீர்வு... 10

அதிரைநிருபர் பதிப்பகம் | December 27, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் . . .
  
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)  நமது  வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கிறோம். பல காரியங்களில் நமக்கு குழப்பம் ஏற்படுகிறது செய்யலாமா? செய்யக்கூடாதா? ஒவ்வொரு காரியங்களையும் பிறரிடம் கலந்து ஆலோசனை செய்கிறோம். மனிதர்கள் தங்கள் அறிவில் பட்டதை கூறுவார்கள். என்னதான் அருமையான யோசனை தந்தாலும் நமக்கு நிம்மதி இருக்காது அந்த காரியம் நடந்து முடியும் வரை.

நாம் ஆரம்பித்த காரியம் நல்லபடியாக நடந்து விட்டால் நிம்மதி  என்ற மகிழ்வைத்தரும். நஷ்டத்தில், மனக்குழப்பத்தில், வேதனையில் விட்டுவிட்டால் இதை நினைத்து வாழ்நாள் முழுவதும் வேதனை அடைவோம். வாருங்கள் என்ன பிரச்சனைகளை நமது வாழ்வில் சந்திக்கிறோம் என்பதை பார்ப்போம்.

மாணவ, மாணவியர்களுக்கு:
10 ஆம் வகுப்பு முடித்தவுடன் +1ல் என்ன குரூப் எடுப்பது என்பதில் குழப்பம். +2 முடித்தவுடன் எந்த துறையை தேர்ந்தெடுப்பது? எந்த காலேஜை தேர்ந்தெடுப்பது? என்பதில் குழப்பம் என்ன செய்வது இதற்கு?

தாய், தந்தைக்கு:
பாசத்தோடு வளர்த்த மகளுக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளையை பார்ப்பது அவன் நல்லவனா? கெட்டவனா? நல்ல குடும்பமா? பலபேரிடம் விசாரிக்கிறோம். வெளியில் பிறர் சொல்வதை நம்பி திருமணம் செய்து கொடுக்கிறோம். பிறகுதான் தெரிகிறது அவர்களின் சரியான குணம். என்ன செய்வது இதற்கு?

மகனுக்கு பெண் தேடுகிறோம். நல்ல பெண்ணா?  நல்ல குடும்பமா? மருமகள், மகனை நம்மோடு விட்டு வைக்குமா? அல்லது தனிக்குடித்தனம் என்று இழுத்துக் கொண்டு சென்றுவிடுமா? என்பதில் குழப்பம்? என்ன செய்வது இதற்கு?

வளைகுடா வாசிகளுக்கு:
குடும்பத்தை தொடர்ந்து நம்மோடு வைத்திருப்பதா? ஊரில் கொண்டு போய் நிரந்தரமாக தங்க வைத்து விடுவதா? என்பதில் குழப்பம்? என்ன செய்வது இதற்கு?

பிள்ளைகளுக்கு எந்த துறையை தேர்ந்தெடுப்பது, எந்த கல்லூரியில் சேர்ப்பது? என்பதில் குழப்பம்? என்ன செய்வது இதற்கு?

கம்பெனியில் சம்பளம் குறைவாக இருக்கிறது. இதே கம்பெனியில் தொடர்வதா? இல்லை வேறு கம்பெனிக்கு செல்வதா? சம்பளம் குறைவாக இருந்தாலும் தொல்லைகள் அதிகம் இல்லை. புது கம்பெனியில் சம்பளம் அதிகம் கிடைத்து தொல்லைகள் அதிகமாக இருந்துவிட்டால். . . என்பதில் குழப்பம்? என்ன செய்வது இதற்கு?

வளைகுடாவில் இருக்கும் திருமணமான பேச்சுலர்களுக்கு:
மனைவி மக்களை பிரிந்து எத்தனை காலம் தனிமையில் இருப்பது? ஊர் சென்று விடலாமா? தொழில் எதுவும் தொடங்கலாமா? என்ன தொழில் செய்வது? குழப்பம்? என்ன செய்வது இதற்கு?

தொழில் தொடங்குவோருக்கு:
நல்ல இடத்தை தேர்வு செய்து, தனியாகவோ, கூட்டாகவோ தொழில் தொடங்க இருக்கிறோம். ஆரம்பித்த தொழில் நல்லபடியாக நடக்குமா? என்பதில் குழப்பம்? என்ன செய்வது இதற்கு?


இன்ஷாஅல்லாஹ் தீர்வை அடுத்த பகுதியில் பார்ப்போம்...

- S.அலாவுதீன்

I.A.S. வழிகாட்டு மையம் 7

அதிரைநிருபர் | December 27, 2011 | , , , ,

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


அன்பான சகோதரர்களே,

இன்றைய அரசியலில் முஸ்லிம் சமுதாயத்திற்கென்று தலைமை இல்லை, விழிப்புணர்வில்லை, எந்த அரசியல் கட்சிகளும் சமுதாயத்தை மதிப்பதில்லை, சமுதாய தலைவர்களுக்கு சமுதாயத்தை பற்றிய அக்கறை இல்லை.

இதனால் தான் நமது சமுதாயம் கல்வி மற்றும் பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் பின் தங்கி கீழ்மட்டத்தில் உள்ளது என்றெல்லாம் புலம்பியே காலத்தை கழித்துக்கொண்டிருக்கும் நாம், முஸ்லிம் சமுதாயம் மேம்படவும், இறையச்சம் உள்ள முஸ்லிம்கள் அதிகார மையத்தில் அமர்ந்து அனைத்து துறைகளையும் இயக்கும் உயர் பதவியை சென்றடைய ஓர் அரிய, எளிய மாற்று வழி இருப்பதை நாம் ஏன் மறந்து விட்டோம்?

இதற்காக உருவாக்கப்பட்டது தான்


அல்-இதாரா I.A.S. வழிகாட்டு மையம்


இதன் நோக்கம்

நமது சமுதாய இளைஞர்கள் I.A.S படிப்பு என்றாலே "எட்டா கனியாக" நினைத்து மனதளவில் அச்ச உணர்வுக்கு ஆளாகின்றனர். ஆனால் அரசியல் வாதிகளாலும், ஆட்சியாளர்களாலும், MLA, MP, அமைச்சர், பிரதம அமைச்சர் போன்றோர்களாலும் சாதிக்க முடியாததெல்லாம் I.A.S அதிகாரிகளால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதையும். மேற்கண்ட பெரிய பதவிகளில் இருப்பவர்களை எல்லாம் இயக்குபவர்கள் I.A.S அதிகாரிகள் தான் என்பதையும், அந்த அதிகார மையத்தை கை பற்றுவது இயலாத காரியம் இல்லை என்பதையும் உணர மறுக்கின்றனர்.
 
இதை பற்றி முழுமையான முறையில் விழிப்புணர்வூட்டி I.A.S-க்கு தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்து அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலவசமாக செய்து, சென்னை, மற்றும் டெல்லியில் உள்ள சிறந்த I.A.S பயிற்சி அகாடமிகளுடன் இனைந்து செயலாற்றவும், அதன் மூலம் நமது இளைஞர்களை இறை அச்சம் மற்றும் தக்வாவுடன் சமுதாய உணர்வுகளை ஊட்டி பக்குவபடுத்தி இஸ்லாத்திற்கும், இந்தியாவிற்கும் விசுவாசமான IAS அதிகாரிகளாக உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
 
ஆலோசனை குழு

இதற்கான ஆலோசனை குழுவில் (ADVISORY BOARD) தற்போது பணியில் உள்ள மற்றும் ஒய்வு பெற்ற I.A.S அதிகாரிகளை இணைத்து அவர்களது மேலான ஆலோசனைகளுடன் இயங்க உள்ளது.
 
ஆர்வமுள்ள முஸ்லிம் இளைஞர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.
 

அடிப்படை தகுதிகள்

·         ஏதேனும் ஒரு UG டிகிரி முடித்து இருக்க வேண்டும்

·         21 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்

தொடர்புக்கு
அழகிய கடன் அறக்கட்டளை.
822, மக்காஹ் மஸ்ஜித் வளாகம்,
அண்ணா சாலை, சென்னை .
Ph. 98408 99012, 98847 06795


தகவல்: முதுவை ஹிதாயத்துல்லாஹ்

ஊடக போதை - தொடர்கிறது... 3 10

அதிரைநிருபர் பதிப்பகம் | December 25, 2011 | , , , , ,

version : 3
அஸ்ஸலாமு அலைக்கும்,

ஊடக போதை இதுவரை வெளியான பதிவுகளில் அதிரை சார்ந்த வலைத்ததளங்களில் போலி மற்றும் புனைபெயர்களின் நிலைபாடுகளை விரிவாக அலசினோம். தொடரும் இந்த மூன்றாவது பதிவில் தற்போதைய அரசியல் சூழலில் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களின் முக்கிய பிரச்சினையாக்கப்பட்ட(!?) முல்லை பெரியாறு அணையைத்தான, தமிழக ஊடகங்கள் மனசாட்சியில்லாமல் தங்களின் கல்லாவை நிரப்பும் கண்மூடித்தனமான போக்கை மாற்றம் என்றொரு இணையதளத்தில் வெளிவந்த ஒரு பதிவில் நமது கவனத்தை ஈர்த்த விமர்சனத்தை உங்கள் பார்வைக்கும் தருகிறோம்.

கேடுகெட்ட ஊடங்களுக்கு மனசாட்சியே கிடையாதா?

பத்தாம் நாள் போராட்டம், பதினொன்றாம் நாள் போராட்டம், பனிரெண்டாம் நாள் போராட்டம் என ஒவ்வொரு நாளும் முழுப்பக்க படங்களோடும், ஒவ்வொரு பக்கத்திலும் ஏதாவது தாக்குதல் செய்திகளுமாய் தினகரன் பத்திரிகை வெறிபிடித்து வருகிறது. டயர் எரித்தாலும் செய்தி. உம்மன் சாண்டியின் கொடும்பாவியை எரித்தாலும் செய்தி. கேரள எல்லையில் கூட்டம் சென்றாலும் செய்தி. தனியாய் நின்றாலும் செய்தி. கேரள மக்களுக்குச் சொந்தமான கடைகளை அடித்து நொறுக்கினாலும் செய்தி. தமிழக மக்கள் கேரளாவிலிருந்து விரட்டப்பட்டாலும் செய்தி. தினகரனுக்குத் தாங்களும் சளைத்துப் போய்விடக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் தினமலரும், வரிந்து கட்டிக்கொண்டு செய்திகளை வெளியிடுகின்றன.  பிறகு முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை பேசித் தீர்வு காண்பதா அவர்களின் நோக்கமாக இருக்கப் போகிறது?

போதாக்குறைக்கு இருக்கவே இருக்கின்றன தொலைக் காட்சி சேனல்கள். தமிழக மக்களிடையே பெரும் கோபத்தையும், வெறியையும் திட்டமிட்டு பெயரளவில் பிரபல ஊடகங்கள் அனைத்தும் ஒன்றாக இருப்பதுபோல் தங்களுக்குள்ளேயே ஊட்டிக்கொண்டு இருக்கின்றன. இதனைப் பார்க்கிற கேரள மக்களுக்கும் இதே கோபமும் வெறியும் ஒரு சாராரிடம் ஏற்படும். அங்கு இருக்கிற பத்திரிகைகளும் இதே காரியத்தைத்தான் அங்கு செய்கின்றன. இரண்டு மாநிலத்து மக்களும் ஒருவருக்கொருவர் மோதி  அடித்துக் கொள்வதில்தான் இந்த ஊடகங்களுக்கு எவ்வளவு சந்தோஷம்? தங்கள் தந்திரங்கள் சரியாக கிளிக் ஆகி, பத்திரிகை விற்பனையும் அமோகமாக நடக்கிறதல்லவா?

கேரளாவில் ஊடகங்களின் மூலம் இதுபோல் ஊட்டப்படும் வெறிக்கு ஆளாகும் அங்குள்ள மக்களை, ‘மலையாளிகளின் அட்டகாசம்’ , ‘மலையாளத் திமிர்’ என்றெல்லாம் இந்த பத்திரிகைகள் அடைமொழிகள் இடுகின்றன. தமிழகத்தில் உள்ளவர்கள் கேரளாக்காரர்களின் கடையை அடித்து நொறுக்கினால் ‘தமிழர்களின் எழுச்சி’ என்றும், வீரம் போலவும் சித்தரிக்கின்றன. இந்த வார்த்தைகள் இனவெறியையும், இனப்பகைமையையும் விதைக்கின்றனவா இல்லையா? இதில் என்ன பெருமைப்படவும்,  போற்றிக்கொளவும் இருக்கிறது? மக்கள் ஒருவருக்கொருவர் தங்களை அடித்துக் கொள்வதில் என்ன எழுச்சி வேண்டிக் கிடக்கிறது என்பதை போராட்டங்களை முன்னின்று நடத்தி அற்ப லாபமடைய இருக்க்கும் அரசியல் கோமாளிகளுக்கு ஆதரவளிக்கும்  பொதுமக்கள் தான் சிந்திக்க வேண்டும்.

இருதரப்பு எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் தமிழகத்திலிருந்து காய்கறி, பால், முட்டை போன்ற உணவுப்பொருட்கள் கேரளம் செல்வது தடைப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படுவது கேரள மக்கள் மட்டுமல்ல. தமிழக விவசாயிகளும் தான் என்பதை மறந்துவிடலாகாது. கேரளம் செல்லும் அனைத்துப் பாதையையும் அடைப்போம் என்றெல்லாம் இங்குள்ள சிலர் கோஷம் எழுப்புவதும் மக்களை உசுப்பிவிடுவதும் எந்த வகையிலும் பிரச்சனை தீர உதவாது என்பதோடு, தமிழக மக்களுக்கும் நலன் பயக்காது என்பது உறுதி. 

மக்களை முன்வைத்துத்தான் அணை பாதுகாப்பற்றது எனப் பிரச்சினையை ஒருபக்கம் ஆரம்பித்தார்கள். மக்களை முன்வைத்துத்தான் அணை பாதுகாப்பானது, தண்ணீர் வேண்டும் என்பதில் இன்னொரு பக்கம் உறுதியாய் இருந்தார்கள். மக்களை முன்வைத்துத்தான் இருபக்கமும் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்தன. மக்களை முன்வைத்துத்தான் அரசியல் கணக்குகளும், அரசியல் காழ்ப்புணர்ச்சிகளும் தீர்மானிக்கப்பட்டன.   ஆனால் இந்த மொத்த விவகாரத்திலும் இரு மாநிலத்து மக்களுக்கும் என்ன பங்கு இருக்கிறது, தத்தம் தலைவர்கள் சொன்னதைக் கேட்டதைத் தவிர.  ஆனால் அந்த மக்கள்தாம் ஒருவருக்கொருவர் இன்று அடித்துக்கொண்டு சாகின்றனர். இது என்ன கொடூரம்? 

இரண்டு பக்கமும் அமைதி வேண்டி, மக்களின் நல்லிணக்கம் வேண்டி குரல்கள் எழுகின்றன. அவைகள் இந்தப் பத்திரிகைகளால் கண்டு கொள்ளப்படுவதில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும், அதுவரை இருபக்கமும் பொறுமையாய் இருக்க வேண்டும் என சுமூகத் தீர்வுக்கு பேசும் சக்திகள் இந்த பத்திரிக்கைகளால் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.

மத்திய மாநில அரசின் மோசமானக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டு வீடிழந்து, மண்ணிழந்து, வாழ்க்கையிழந்து நடுத்தெருவில் வீசியெறியப்பட்ட  மக்கள் தேசமெங்கும் நிறைந்து கிடக்கின்றனர். அவர்களிடம் உருக்கமானப் பேட்டிகளை வாங்கி வெளியிடுவார்களா? தங்கள் ஆதிக்கத்துக்கும் அதிகார வர்க்கத்துக்கும் எதிரான சிறு கல்லையும் எடுத்துப் போடாத இந்த பத்திரிகைகள் மக்களின் மீது பாறாங்கல்லைத் தூக்கிப் போட கொஞ்சமும் யோசிப்பதில்லை.  தங்களுக்கு கல்லா கட்டினால் சரி.

மாநில அரசாங்கங்களும், மத்திய அரசும், நீதிமன்றமும் மக்கள் நலன் கருதி நிச்சயம் பாகுபாடு இல்லாமல் நல்ல தீர்வு வரும் என்பது இரு மாநிலத்தின் பொதுவான மக்கள் அனைவரின் நம்பிக்கை.

தமிழகத்தில் பரபரப்புக்காக விற்பனையே குறிக்கோளாக கொண்ட ஊடகங்களில் மனசாட்சி ஊனமுடன் இருப்பதே காரணம், இவ்வகையான ஊடக போதை உவகைக்கு அடிமையாகி ஊக்கமளிக்கும் தமிழ்(!!!) மக்களே உங்களுக்குமா மனசாட்சி என்பது இல்லை ?

வேதனையான விடயம் என்னவென்றால் இந்த கேடுகெட்ட ஊடகங்களின் நாடகத்தில் தாங்களும் கதாபாத்திரம் ஏற்று பங்குபெற வேண்டும் என்ற வேடதாரிகளின் போராட்டத்தில் தங்களையும் இணைத்து அற்ப அரசியல் இலாபத்திற்காக இனவெறியூட்டி கரிசனம் காட்டி வேடிக்கை வேசம் போட்டு வருகிறார்கள் நம் இஸ்லாமிய இயக்கங்களும். முல்லை பெரியார் அணை போராட்டத்தினால் இன்று அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது பெரும்பாலான வியாபாரிகள் முஸ்லீம்களும், ஏழை விவசாயிகளும் என்பதை ஏனோ இந்த இயக்க சகோதரர்களுக்கு சிந்தையில் எட்டவில்லை என்பது வேதனையே.

மொழியை முன்னிறுத்தி போராட்டம், இனத்தின் பெயரால் போராட்டம், ஊழலுக்கு எதிரான போராட்டம், பக்கத்து மாநிலங்களுக்கு எதிரான போராட்டம் என்றாலும் அதன் பின்னனிக்கு பணமுதலைகளின் ஆளுமை வெறியும் அடுத்தவனை அழிக்கும் குரூரம்தான் எங்கோ ஒரு மூலையில் இருந்து கிளம்பியதே. நியாவான்களை ஓரங்கட்டவும், அவர்களின் வியாபார ஸ்தலங்களை முடக்கவும்தான் இப்படியான போராட்டங்களுக்கு பொருளுதவி செய்து வரும் பணமுதலைகளின் சதியே. இதனால் பாதிக்கப்படுவது சாமானியமும் அன்றாடம் பொளப்பு நடத்தும் சிறு வியாபாரிகளுமே. இவ்வகையான போராட்டத்திற்கு ஊக்கம் எங்கிருந்து வருகிறது ஏன் அவர்கள் அள்ளிக் கொடுக்கிறார்கள் என்பதை அறிந்திராத அப்பாவிகள் நமக்காத்தான் போராடுகிறார்கள் என்று தினசரி பத்திரிகையில் முகத்தை புதைக்கிறான், விழித்தது முதல் உறங்கும் வரை செய்திச் சேனல்கள்களில் மூழ்கிப் போகிறான் தன்னைப் பற்றியும் தான் சார்ந்திருக்கும் நாட்டின் இறையான்மையையும் மறக்கடிக்கப்பட்டவனாக.

அராஜகங்களையும் வன்முறைகளையும் அரங்கேற்றிவிட்டு மக்களிடம் உணர்வு போராட்டம் என்ற போர்வையில் கண்ணாம்பூச்சி விளையாட்டு விளையாடி வரும் தரம் கெட்ட அரசியல்வாதிகளும், மற்றும் இது போன்றவைகளை ஊக்கப்படுத்தும் அனைத்து ஊடகங்களும் தமிழக நன்னோக்கு கொண்ட மக்களால் கண்டிக்கப்பட வேண்டியவைகளே.. !

இந்திய ஒருமைப்பாடு எங்கே?????? 

நன்றி: (எடுத்தாய்ந்த கருத்துக்களுக்கு) மாற்றம் இணையதளம்.

- அதிரைநிருபர் குழு

அதிரை கல்விச் சேவையகம் AEM - அறிவிப்பு ! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | December 25, 2011 | , ,


அன்பிற்குரிய அதிரைச் சகோதரர்களுக்கு:  

அஸ்ஸலாமு அலைக்கும்.

சென்ற ஜனவரி 2011 - 14,15 ஆகிய தேதிகளில் நாம் நடத்திய கல்வி விழிப்புணர்வு மாநாடு பற்றிய விவரங்களையும் அதன் காணொளிகளையும் கண்டிருப்பீர்கள் என நம்புகின்றேன்.  முதல் மாநாடாக இருந்ததால், அதனைக் குறுகிய வட்டத்திற்குள்தான் சகோதரர்களை ஈடுபடுத்தி, அல்லாஹ் உதவியால், வெற்றிகரமாக நடத்தி முடித்தோம்.  அல்ஹம்து லில்லாஹ்!

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் புத்தாண்டில் இரண்டாவது மாநாட்டைச் சற்று விரிவாகவும், அதிகமான சகோதரர்களின் பங்களிப்பிலும், பயனுள்ள பல நிகழ்ச்சிகளுடனும் நடத்தத் தீர்மானித்துள்ளோம்.  அது பற்றிய ‘மஷ்வரா’ விரைவில் தொடங்கவுள்ளது.  எனவே, பங்களிப்புச் செய்ய ஆர்வமுள்ள அதிரையின் அன்புச் சகோதரர்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை "ADIRAI EDUCATIONAL MISSION" என்ற மின்னஞ்சல் குழுமத்தில் இணைத்துக்கொண்டு உங்களின் அரிய / உரிய பங்களிப்புகளை வழங்குமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இணைப்பு கூகுள் குழுமம் இதோ : adirai-edu-mission@googlegroups.com

உங்கள் புரிந்துணர்வுக்கும் அன்பாதரவுக்கும் மிக்க நன்றி.  வஸ்ஸலாம்.

அன்புடன்,

அதிரை அஹ்மது
+91 98 94 98 92 30

அர்ப்பணிப்பும் - அங்கீகாரமும்! அனுபவம் பேசுகிறது.... 17

அதிரைநிருபர் பதிப்பகம் | December 24, 2011 | , , , ,


உத்தியோகம் புருஷ லட்சணம் என்று கூறுவார்கள்.

எவ்வினையோருக்கும் இம்மையில் அல்லாஹ்வின் நாட்டப்படி நம்மை இயக்குதற்கு இன்பம் பயக்கும் ஓர் வேலை என்பதும் –  அவசியமே!.

ஆகவே! வேலைதான் அவர்களுக்கு சமுக அந்தஸ்தையும் அடையாளத்தையும் கொடுக்கும். அந்த வேலைதான் வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றிட அவசியமானது. அதுமட்டுமல்லாமல் பரந்து விரிந்த இந்த உலகத்தில் ‘தான்’ ஒரு உபயோகமான நிலையில் இருக்கிறோம் என்ற மன திருப்தியை அவரவர்களுக்கு தருவதும் வேலைதான். நாம் வெறுத்து ஒதுக்கும் வரதட்சனை என்றொரு விலை நிர்ணயம் செய்திடும் காரணிகளில் இந்த வேலை என்றொரு செயல்பாட்டிற்கும் பங்குண்டு. மகளுக்கு திருமணம் செய்ய தேடும் புதிய மாப்பிள்ளைக்கு அவரின் வேலை நிலை அதன் உறுதி இவற்றை முன்னிருத்தியே பார்க்கிறார்கள். ஒவ்வொருவரும் ஏதாவது வேலையில் இருந்து பொருள் ஈட்டுவது அவரவர் சார்ந்திருக்கும் சமூகத்திற்க்கும் சமுதாயத்திற்கும் பெருமை சேர்ப்பதாகும். அவ்வகையில் நிலையான வேலை வேண்டும் என்றும் அதனையும் ஒரு குறிக்கோளாக வைத்தே படிக்கிறோம் –  பட்டம் வாங்குகிறோம், கடல் கடக்கிறோம், பெற்றோரை, மனைவி, மக்களை சுற்றம், நட்பை பிரிகிறோம்.

வேலையில் திறமை காட்டுவதன் அடிப்படையில்தான் (DELIVERING EXCELLENCE) நமக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும் .

பெரும்பாலோர் தங்களுக்கு வேலை ஒன்று கிடைத்து அதில் அமர்ந்துவிட்டால் போதும் என்று அந்த நிலையோடு நிறுத்திக் கொள்கிறார்கள். தங்களின் வேலையில் தேவையான திறமை காட்டுவதற்கோ அதிலிருந்து அடுத்தடுத்த மேற்படிகளுக்கு செல்வதற்காக தங்களுடைய தகுதிகளை உயர்த்திக்கொள்ள வேண்டுமென்று மனதளவில்கூட நினைத்து சிறு முயற்சிகள் எடுப்பதில்லை.

பணிக்கால மூப்பின் அடிப்படையில் சட்டத்திற்கும் ஒழுங்கு முறைகளுக்கும் உட்பட்டு வருடா வருடம் கிடைக்கும் ஊதிய உயர்வும் பதவி உயர்வுமே போதும் என்று திருப்தி அடைந்து விடுகிறார்கள். அரசு வேலையில் அமர்ந்து விட்டவர்களுக்கு வேண்டுமானால் இந்த எண்ணம் வழிமுறையாக பின்பற்றிக் கொண்டிருக்கலாம் அதுவும் சில நேரங்களில்தான். ஆனால் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் அளக்கப்படும் என்பதை அவர்கள் உணரவேண்டும் ..

எனக்கு தெரிந்து இந்திய அஞ்சல் மற்றும் தந்தி துறையில் அலுவலராக பணிக்கு சேர்ந்து தனது ஐம்பத்தி ஐந்தாவது வயதில் தலைமை அலுவலராகி 58 வது வயதில் ஒய்வு பெற்றவரை தெரியும். அதே நேரத்தில் கடைநிலை தபால்காரராக பணியில் சேர்ந்து 5 வருடத்தில் அலுவலராகி 10 வருடத்தில் தலைமை அலுவலராகி 15 வருடத்தில் மாவட்ட பிரிவு நிர்வாகியாகி 52 வயதில் மாவட்ட நிர்வாகியாகி ஒய்வு பெற்றவரையும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

சிலரோ கடமைக்கென்றே வேலை செய்வார்கள், ஆனால் அந்த வேலையை திருந்த செய்ய மாட்டார்கள். வேலையை திருந்தவும் சிறப்புறவும் செய்பவர்களே கவணிக்கப்படுகிறார்கள், பதவி உயர்வும் பெறுகிறார்கள். அதையும் விட செய்யும் வேலையை நமக்கென்று பொறுப்பில் இருக்கும் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும்படி செய்வதும் ஒரு கலையே. இதனை ACCURACY, PERFORMANCE & PRESENTATION என்று கூறலாம். ஈடுபட்டு இருக்கும் வேலைக்குத் தகுந்தாற்போல் கல்வித்தகுதிகளை அந்த வேலைகளை செய்தபடியே மேம்படுத்திக்கொள்வதும் ஒரு இன்றியமையாத தன்மையாகும். அதை CAREER DEVELOPMENT  என்று கூறலாம்.

ஒரு மரம் வெட்டுபவன் ஒரு எஸ்டேட்டில் வேலைக்கு சேர்ந்தான். நல்ல உரம்பாய்ந்த உடல் தகுதி உள்ளவன். வேலைக்கு சேர்ந்த முதல் வாரம் 20 மரங்களை வெட்டி அடுக்கினான். அடுத்தவாரம் அவனால் 15 மரம்தான் வெட்ட முடிந்தது. அதற்கு அடுத்தவாரம் 10  மரங்களே வெட்ட முடிந்தது. நேராக தனது முதலாளியிடம் சென்றான், பிரச்னையை சொன்னான். “தன்னால் எவ்வளவு உழைத்தும் முன்பு போல் அதிக மரங்கள் வெட்ட முடியவில்லை” என்றான். முதலாளியோ சிரித்துக் கொண்டே அவன் கையில் இருந்த கோடாரியை வாங்கி பார்த்தார். அது கூர் தீட்டப்படாமல் மழுங்கி இருந்தது. மரம் வெட்டியிடம் இவ்வாறு கூறினார். கோடாரியின் முனை தீட்டப்படாத காரணத்தால் உன்னால் முன்புபோல் அதிகமாக மரம் வெட்ட முடியவில்லை . அவ்வப்போது கோடாரியை கூர் தீட்டி மரம் வெட்டு என்றார். அதன்படி செய்ததால் அவனால் மீண்டும் 20   மரம் வெட்ட முடிந்தது.

மரம் வெட்டும் தொழிலாளிக்கு எடுத்துரைக்கப்பட்ட்து போன்றே மற்ற பணியில் உள்ள அனைவருக்கும் பொருந்தும். கோடாரியை அடிக்கடி கூர் தீட்டிக் கொள்வதுபோல் தனது துறை சம்பந்தப்பட்டவைகளில் அடிக்கடி நமது அறிவை கூர் தீட்டிக் கொள்ளவேண்டும். அன்றாடம் படும் அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் இதைத்தான் பட்டறிவு என்று கூறுவார்கள்.

இளநிலை பட்டதாரியாகி வேலையில் சேர்பவர்கள் தான் சார்ந்து இருக்கும் துறை சம்பந்தப்பட்ட முதுகலை படிப்பினை அஞ்சல் வழியாக கற்கலாம். அத்துடன் துறை சம்பந்தப்பட்ட போட்டி தேர்வுகளுக்கும் தயார்படுத்தி அதில் கலந்து கொள்ளலாம். பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தங்கள் செலவிலேயே பயிற்சிகளை அதாவது GLOBAL ENGLISH TRAINING , ORACLE,  PREMVIERA, ACONEX , QUALITY CONTROL, QUALITY ASSURANCE, HEALTH & SAFETY, ENVIRONMENTS போன்ற வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.  ஆனால் நம்மில் பலர் அவ்வகையாக தேடிவரும் வாய்ப்புகளில் பங்கெடுப்பது இல்லை. அங்கே தோற்றுவிட்டால் என்ன செய்வது என்ற பய உணர்வும், உறுதியான தன்னம்பிக்கையின்மையும் காரணமாக இருக்கிறது.

கட்டிட பொறியாளர்கள் பலருக்கு AUTOCAD  பயன்கள் அதன் அத்தியாவசியங்களை உணர்ந்திருந்தும் அதனை முறையாக பயன்படுத்த தெரிந்திருக்காது. அதனால் அவர்களுக்கு வேலையில் உயர்வும் தடைபடும். சிவில் மட்டும் தெரிந்து பணியில் சேர்பவர்கள் அதை தொடர்ந்து மெக்கானிகல், எலெக்ட்ரிகல், உள் அரங்க வடிவமைப்பு, பிளம்பிங்க் போன்றவைகளையும் அதன் மென்பொருள் பயன்பாடுகளையும் கற்று தெரிந்து கொண்டு மேம்படுத்திக் கொள்வது அவரவர் வாழ்வில் தங்கப்பதக்கத்தில் முத்துக்கள் பதித்தது போலாகும்.

அலுவலகத்தில் தேநீர் பரிமாறிக்கொண்டும் –  அலுவலக கழிவறைகளை சுத்தம் செய்து கொண்டிருந்த ஒருவர் தனது முயற்சியால் கூட இருந்தவரிடம் கேட்டு கேட்டு கணினியின் செயல் பாடுகளை சிறுக சிறுக கற்று,  இன்று ACONEX, PREMVIERA  போன்ற மென்பொருள் பயன்பாடுகளை கற்றுத் தேர்ந்த ஆவனக்கோப்பு பொறுப்பாளராக அதாவது டாகுமென்ட் கண்ட்ரோளராக (Document Controller) பணிபுரிகிறார். (ஜாபர் சாதிக்)

அதேபோல் பத்தாவது மட்டும் படித்த ஒருவர் – கட்டிடத் தொழிலாராக வந்தவர் - இன்று நிறுவனம் நடத்திய ORACLE TRAINING - ல் துணிவுடன் பங்கேற்று நேரகண்காணிப்பாளராக (TIME–KEEPER)  பிளந்து கட்டுகிறார். (ராமமூர்த்தி)

எடுபிடி உதவியாளராக (HELPER) பணியில் சேர்ந்த பலர் எனக்கு தெரிந்து ஒரு தனிப்பட்ட தொழிலை தெரிந்தவர்கூடவே இருந்து கற்றுக்கொண்டு கொத்தனார்களாக, பிளம்பர்களாக, உருவெடுத்து விட்டதுடன் அதில் திறமையும் காட்டி வருகிறார்கள். (எவ்வளவோ பேர்கள்)

அடிப்படைக் கல்வி அறிவு அவ்வளவாக பெற்றிராத ஒருவர் தனது பணியின் ஈடுபாடும், அர்ப்பணிப்பு, ஒழுங்கு, நேரம் தவறாமை, அனுபவங்களை கல்வியகாக போற்றியதன் காரணமாக உதவி கட்டிட பொறியாளராக உயர்வு பெற்றுள்ள உண்மை கதையும் உண்டு.  (கார்த்திக்).

பரவலாக பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை புடம்போட்டு எடுக்கவும் – வெளிநாடுகளுக்கு மேற்கல்வி, கூடுதல் மேம்பாட்டு பயிற்சிகள் கற்றுவரவும் அனுப்புகிறார்கள். இதற்காக வருடத்துக்கு இவ்வளவு என்று நிதி ஒதுக்குகிறார்கள்.

இன்றைய காலத்தில் கணினியினால் நிகழும் அதிவேக மாற்றங்களும் தொழில்நுட்பங்களும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. இன்று உள்ள எந்த செயல்பாடும் நாளைய தினம் புதியதாக உருமாற்றம் பெற்று வருகிறது. ஆகவே மாற்றங்களை,  வளர்ச்சிகளை தொடர்ந்து கவனித்து வருபவர்களே –  அதற்காக தங்களை தயார் படுத்திக் கொள்பவர்களே உயர்வான மாற்றங்களுக்கு வழி வகுத்துக்கொள்வார்கள். அப்படி சுய முயற்சி, அதோடு விடா முயற்சியும், செய்யும் தொழிலில் திறமை, அர்ப்பணிப்பு, உடையவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவது மனிதவள மேம்பாட்டுதுறைகளின் தலையாய பணிகளில் ஒன்றாகும். (RECOGANIZE AND REWARD).

அடைகாக்கப்படும் முட்டையிலிருந்து கோழிக்குஞ்சுகூட தன் தோட்டை இளம் அலகால் கொத்தி கொத்தித்தான் உடைத்துக்கொண்டு வெளிவருகிறது. இன்றைய உலகில் ஏற்றம் பெற எல்லா வசதிகளையும் பெற்றுள்ள நாம் முயன்றால் முடியாதது இல்லை - இறையருளால்.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

- இப்ராகிம் அன்சாரி

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 6 19

அதிரைநிருபர் பதிப்பகம் | December 23, 2011 | , , ,


அல்லாஹ்வின் திருப்பெயரால் ...
version :  6
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

குர்ஆனையும் நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ். 

‘‘ஒருவனுக்கு நல்லது செய்ய அல்லாஹ் நாடிவிட்டால் அவனை சோதிப்பான் ’’  என்று நபி(ஸல்) கூறினார்கள் (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) அவர்கள் (புகாரி)( ரியாளுஸ்ஸாலிஹீன்: 39 )

‘‘உங்களில் ஒருவர் தனக்கு ஏற்பட்ட தீமைக்காக மரணத்தை எதிர்பார்க்க வேண்டாம். அப்படியே அவசியம் விரும்புவர் இருந்தால், 'இறைவா! உயிருடன் இருப்பது எனக்கு சிறப்பாக இருந்தால் என்னை வாழச் செய்வாயாக! மரணிப்பது எனக்கு சிறந்ததாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக! என்று கூறட்டும் ’’  என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ்(ரலி)அவர்கள்(புகாரி,முஸ்லிம்).(ரியாளுஸ்ஸாலிஹீன்:40 )

‘‘அல்லாஹ், தன் அடியானுக்கு நல்லதை நாடிவிட்டால், அவனுக்கு உலகத்திலேயே தண்டனையை தீவிரமாக்குவான். அல்லாஹ் தன் அடியானுக்கு தீமை செய்ய நாடிவிட்டால் அவனது குற்றம் காரணமாக அவனை விட்டும் (சோதனையைத்) தடுப்பான், இறுதியில் மறுமை நாளில் அவனுக்கு அதை நிறைவேற்றுவான் ’’  என்று நபி(ஸல்) கூறினார்கள். 

‘‘கூலியில் மகத்தானது, கடும் சோதனையுடன் உள்ளதாகும். நிச்சயமாக அல்லாஹ் ஒரு கூட்டத்தை நேசித்தால் அவர்களை சோதிப்பான். ஒருவன் அதில் திருப்தி அடைந்தால், அவனுக்கு (அல்லாஹ்வின்) திருப்தி உண்டு. மேலும் ஒருவன் கோபம் அடைந்தால், அவனுக்கு (அல்லாஹ்வின்) கோபம் உண்டு’’  என்று  நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ்(ரலி) அவர்கள் (திர்மிதீ) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 43 )

'மல்யுத்தம் புரிவதால் '''வீரன்' என்பதில்லை. கோபம் ஏற்படும் சமயம் தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவனே வீரன்'  என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்:அபூஹூரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 45)

'நபி(ஸல்) அவர்களுடன் நான் உட்கார்ந்திருந்தேன்.இரு மனிதர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் சிவந்திருந்தது. அவரது கழுத்து நரம்புகள் புடைத்திருந்தன. அப்போது நபி(ஸல்) அவர்கள், ''ஒரு சொல்லை நான் அறிவேன். அதை அவன் கூறினால், அவனிடம் ஏற்பட்டுள்ள (கோபம்) அவனை விட்டும் போய்விடும். (அதாவது) ''அஊதுபில்லாஹி மினஷ்ஷய்தானிர் ரஜீம்'' (வெறுக்கப்பட்ட ஷைத்தானின் தீங்கைவிட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று கூறினால், அவன் அடைந்தது(கோபம்) போய் விடும்'' என்று கூறினார்கள். உடனே நபித்தோழர், கோபப்பட்டவரிடம் சென்று, ''ஷைத்தானை விட்டும் பாதுகாப்பை அல்லாஹ்விடம் நீ தேடவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் '' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: சுலைமான் இப்னு சுரத்(ரலி) அவர்கள்  (புகாரி,முஸ்லிம்).( ரியாளுஸ்ஸாலிஹீன்: 46)

'நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் 'எனக்கு உபதேசம் செய்யுங்கள்' என்று கேட்டார். 'கோபம் கொள்ளாதே என்று நபி(ஸல்) கூறினார்கள். அவர் மீண்டும் மீண்டும் கேட்டார். கோபம் கொள்ளாதே' என்றே நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி)  அவர்கள் (புகாரி). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 48)

'ஓர் இறைவிசுவாசியான ஆண் மற்றும் பெண்ணிற்கு அவரது உயிர் மற்றும் அவரது குழந்தை, அவரது சொத்து என அனைத்திலும் சோதனை இருந்து கொண்டே இருக்கும். இறுதியாக அவர் (சோதனை மூலம் மன்னிப்பு ஏற்பட்டதால்) குற்றம் ஏதுமின்றி அல்லாஹ்வை சந்திப்பார்.'' என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) அவர்கள் (திர்மிதீ). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 49)

"எனக்குப்பின் உரிமை பறித்தலும், நீங்கள் வெறுக்கும் காரியங்களும் உருவாகும்" என நபி(ஸல்) கூறினார்கள். "இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (இது விசயமாக) நீங்கள் இடும் கட்டளை என்ன?" என்று நபி தோழர்கள் கேட்டனர், உங்கள் மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுங்கள்! உங்களுக்கு தேவையானதை அல்லாஹ்விடம் கேளுங்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரலி)அவர்கள்(புகாரி,முஸ்லிம்).(ரியாளுஸ்ஸாலிஹீன்: 51)

"ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

- S.அலாவுதீன்

ஹத்தனா மாப்பிள்ளை 1970 35

அதிரைநிருபர் பதிப்பகம் | December 21, 2011 | , , , , ,

அப்புறம்...?

என்னத்தெச் சொல்ல?

கருப்பு வெள்ளையில்
படம் ஒன்று எடுத்தாக
கழுத்து மாலை கழட்டி
சுவத்துக்குக் கொடுத்தாக

சப்பாத்தும் ஸ்ட்டாக்கிங்ஸும்
சட்டுபுட்டென்று கழட்டி
வெல்வெட்டுத் தொப்பி யெடுத்துத்
மேல்தட்டில் வைத்தாக

மாப்பிள்ளைத் தோழன் வைத்து
ட்டை அவிழ்த்து எடுத்தாக
மோதிரமும் சங்கிலியும்
மேனியிலே விட்டு வச்சாக

கம்ஸு சட்டையோடு
கஞ்சிப்பிராக்கும் களைந்தாக
கால்சராயும் கருப்பு பெல்ட்டும்
கலர் ஜட்டியும் உருவினாக

முக்காலி மேலிருத்தி
முகம் மடக்கிப் பிடிச்சாக
முழங்கால்கள் வளைத்து
முன்னோக்கி இழுத்தாக

என் சப்தம் அமிழ
எல்லோரும் குலவையிட்டு
கதறக் கதறவே
ஹத்தனா செய்தாக

மூட்டாத கைலி கட்டி
முருக்குக் கடிக்க தந்து
ஆவிகள் அண்டாதாம்
மடக்குக் கத்தி தந்தாக

மல்லாக்கப் படுக்க வைத்து
மேலிருந்து மரப்பு கட்டி
எஸ்கிமோ வீட்டைப் போல
டென்ட்டு போட்டு வச்சாக

வேறென்ன சொல்ல?

விருந்து கொடுத்ததெல்லாம்
விதம் விதமா கவனிச்சதெல்லாம்
வெட்டிப் போடத்தான்னு
விளங்காமல் போனதென்ன

எனக்கு நடந்ததுதான்
எம் எஸ் எம்முக்கும் நடந்திருக்கும்
கிரவுனுக்கும் சபீருக்கும்
நெய்னாத் தம்பிக்கும் தம்பியின் தம்பிக்கும்!

யாருக்கெல்லாம் வலித்ததோ
எல்லோரும் வாங்க இங்கே
முருக்குக் கடிக்கத் தந்த
மர்மத்தை போட்டுடைங்க

வலிக்கிடையே வாய்த்த
விடுமுறை நாட்களெல்லாம்
பட்டுடாமல் பாதுகாக்க
வேட்டி பிரித்துப் பிடித்த
நினைவுகளே மிச்சமுங்க

ஃபோட்டோவைப் பாருங்க

- Sabeer abuShahruk,

அன்று v/s இன்று - காலங்களின் கோலம் ! 25

அதிரைநிருபர் பதிப்பகம் | December 20, 2011 | , , ,


இந்தக்காலம்
அன்று ஏழை,எளியவர்களாக வாழ்ந்து வந்தாலும் மக்கள் ஒரு வித அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். பெரும் பிரச்சினைகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் உருவாகி அவர்களை ஆட்கொள்ளவில்லை.
இன்று பணங்காசு புழக்கம் எல்லாத்தரப்பு மக்களிடமும் வந்து விட்டாலும் வாழ்வில் ஏதோ ஒரு நிம்மதி இல்லாத நிலை நிலவி வருவதாகவே எல்லோராலும் உணரப்பட்டு வருகின்றன. விதவிதமான பிரச்சினைகள் நாலாப்புறங்களிலிருந்தும் வந்த வண்ணம் உள்ளன.
அன்றைய உலக நாகரீக வளர்ச்சிகளெல்லாம் அல்லாஹ், ரசூல், குர்'ஆன், ஹதீஸைப்பற்றி பேசி வாழ்ந்து வந்த மக்களை விட்டும் வரம்பு மீறி விடவில்லை. இறையச்சத்தின் முன் இதுவெல்லாம் எம்மாத்திரம் என்ற நிலை மக்களிடம் அன்றிருந்தது.
இன்று அல்லாஹ், ரசூல், குர்'ஆன், ஹதீஸ் பற்றி பேசப்படாத இடங்களில்லை, ஒளி/ஒலிபரப்பாத ஊடகங்கள் இல்லை. வகைவகையான வழிகளில் எல்லா மொழிகளிலும் மார்க்க புத்தகங்களும், கணிப்பொறி வழி சி.டி, டி.வி.டி என்று ஏராளம் வந்து விட்டாலும் உலக நாகரீக வளர்ச்சியின் மேல் மக்களின் மோகம் அவர்களின் உண்மையான இறையச்சத்தை கொஞ்சமோ (அ) அதிகமோ அசைத்துப்பார்த்து தாக்கி விட்டதாகவே கருதப்பட்டு வருகின்றன.
அன்று அனைத்து தரப்பு மக்களும் வயது வித்தியாசமின்றி அன்றாடம் தனக்கு வேண்டியதை தன்னால் ஆன‌ உடல் உழைப்பிலேயே பெற்று ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ்ந்து வந்தனர். குறிப்பிட்ட ஒரு சில நோய்கள் மட்டுமே மக்களின் வாழ்வில் (புழக்கத்தில்) வந்து போனது.
இன்று எல்லா தரப்பு மக்களிடமும் பணப்புழக்கம் வந்து விட்டதால் வயது வித்தியாசமின்றி அனைவரும் தன் வியர்வை சிந்தாமலேயே இருக்கையில் அமர்ந்து கொண்டே தன் பணத்தை வைத்து தனக்கு வேண்டியதை பெற்று விடுகின்றனர். உடல் உழைப்பில் அவ்வளவு ஆர்வமும், அவசியமும் இல்லாமல் போய் விட்டது. தினம்,தினம் புதுபுது நோய்கள் உருவாகி வயது வித்தியாசமின்றி அவர்களை தாக்கி இளம் வயதிலேயே மண்ணோடு மடிய வைத்து விடுகிறது. மருத்துவமனைகளோடு அலைய வைத்து விடுகிறது.
அன்று சிறுவர்களால் விளையாடப்பட்ட பம்பரம், பளிங்கி, கிட்டிக்கம்பு, பட்டம், தொட்டு விளையாட்டு, கண்டு விளையாட்டு, பள்ளாங்குழி, சில் கோடு, அட்டபில்லு, குளத்தில் குதித்து/குளித்து கும்மாளமிடுவது, நொங்கு வண்டி, டயர் வண்டி, கயிறு ரயில் வண்டி போன்ற ஒழுக்க விளையாட்டுக்களால் சமூகத்தில் ஏதேனும் சீரழிவு வந்ததாக தெரியவில்லை. அவர்கள் உடல் நலமும், மன நலமும் பாதுகாக்கப்பட்டது. இளம் வயதில் தலைநரையையோ அல்லது வழுக்கையையோ காணுவது அரிதாக இருந்தது.
இன்று சிறுவர்கள் முதல் வாலிபர்கள் வரை கணிப்பொறி வழி கேம்ஸ், இண்டர்நெட், கூகுள், ச்சாட்டிங், ஃபேஸ் புக் மூலமும், தொலைக்காட்சி மூலம் ஜெட்டிக்ஸ், டாம் அன் ஜெர்ரி, சூப்பர் மேன், ஹாலிவுட் நல்ல/கெட்ட ஆங்கிலப்படங்கள், சினிமா, நாடக சீரியல்கள் மூலமும் அறைக்குள் எலிப்பொறி வைத்து பிடிக்கப்படும் எலிகள் போல் கணிப்பொறி மூலம் பிடிக்கப்பட்டு உடலாலும், மனதாலும் சீர்கெட்டு அமைதியில்லாமல் உறக்கமின்றி பல உடல்நலக்குறைவு உபாதைகளுக்குட்பட்டு வாழ்க்கை ஒரு விரக்தியுடன் அமைதி, பாசம், நேசம், இயற்கையை அனுபவிக்க இயலாமல் தவித்து வருகிறது.
அன்று வீட்டு, தெருப்பெரியவர்கள் போற்றி மதிக்கப்பட்டனர். அவர்களின் சொல்லுக்கு உள்ளம் உண்மையிலோ அல்லது பயந்தோ கட்டுப்பட்டது. அதனால் பெரும்,பெரும் பிரச்சினைகள் கூட கடுகாய் ஆகி காணாமல் போனது. மரணத்தை முன் வைத்து விருப்பு,வெறுப்புகளெல்லாம் வெகுண்டோடிப்போனது.
இன்று மேலை நாட்டு கலாச்சார சீர்கேட்டின் விளைவாக மகன்/மகள் தன்னை ஈன்றெடுத்த தாய்,தந்தையரை மதிப்பதில்லை. அப்படி இருக்கும் பொழுது குடும்ப, தெருப்பெரியவர்களுக்கு எப்படி மதிப்பும், மரியாதையும் செலுத்துவான்/ள்? அவன்/அவள் மனம் போன போக்கிற்கு போய் தலைக்கணம் பிடித்து அலைகிறான்/ள். பேரிடர் தன் வாழ்வில் குறிக்கிட்டதும் என்றோ மடிந்து போன தன் பெற்றோரை பிரயோஜனமின்றி எண்ணிப்பார்க்கிறான்/ள் அந்தோ பரிதாபமான நிலையை அடைகின்றனர். அல்லாஹ்வின் பேருதவி அப்பொழுது தான் அவசியப்படுகிறது.
அன்று உணவு வயிற்றுப்பசிக்கு உண்ணப்பட்டது. அது ஜீரணமும் ஆகி வாழ்க்கை ஆரோக்கியமானது. காசின்றி ஆனந்தத்தைக்கண்டது. ஆஸ்பத்திரி செலவைக்குறைத்தது இறுதியில் இதயம் அல்ஹம்துலில்லாஹ் சொல்லி நின்றது.
இன்று ருசிக்கு உணவு உண்ணப்பட்டு அது வயிற்றில் கண்ணாமூச்சி விளையாண்டு ஆரோக்கியத்திற்கே வேட்டு வைத்து விடுகிறது. இறுதியில் ஆஸ்பத்திரி மருந்து மாத்திரைகளுடன் அல்லல் பட வைத்து விடுகிறது ஆரோக்கியத்திற்காக ஏங்க வைத்து விடுகிறது.
அன்று தொழில்நுட்ப நவீனங்கள் குறைந்திருந்தாலும் எங்கு சென்றாலும் நம் வேலைகள் சில மணித்துளிகளில் முடிந்து விடும். மணிக்கணக்கில் கால்வலிக்க வரிசையில் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.
இன்று தொழில் நுட்ப நவீனங்கள் பெருகி விட்டாலும் எங்கு சென்றாலும் கால் வலிக்க வரிசையில் காத்து கிடக்க வேண்டியுள்ளது. அது பொது கட்டணக்கழிப்பிடமாக இருந்தாலும் சரி பணம் போட்டு எடுக்கும் வங்கியாக இருந்தாலும் சரி. மக்கள் தொகைப்பெருக்கத்தால் தொழில் நுட்ப வளர்ச்சிகள் கூட காணாமல் போய் விடுகின்றன நம்மை கால் கடுக்க காக்க வைத்து விடுகின்றன.
அன்று மானத்திற்காக உடலை மறைக்க உடை உடுத்தப்பட்டது. அதனால் தீயவர்களின் தீய பார்வைகளிலிருந்தும்/செயல்களிலிருந்தும் பாதுகாப்பும் கிடைத்தது.

இன்று நாகரீகத்திற்காக உடல் தெரிய உடை உடுத்தப்படுகிறது. அதனால் ஆங்காங்கே தீயசக்திகளின் சதிகளுக்கு சதைகள் தீக்கிரையாக்கப்படுகின்றன வாழ்க்கை சீரழிந்து போகின்றன.
அன்று அனைத்து தரப்பு மக்கள் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் தனித்தனி குளங்கள் பயன்படுத்தப்பட்டன. அதனால் வருடம் முழுவதும் ஊரின் குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பி இருந்தது.
இன்று ஆழ்குழாய்க்கிணறுகள் வீடுதோறும் தோன்டப்பட்டு அதில் நீர்மூழ்கி மோட்டார்களை இறக்கி ஊரின் நீர் ஆதாரங்களான குளம், குட்டைகள் காணாமல் போய் இடித்த வீடுகளின் கல்,மண்களால் நிரப்பப்பட்டு மனைகளாய் உருமாறி மக்களின் வசிப்பிடங்களாக ஆக்கப்பட்டு வருகின்றன.
அன்று தேவைகள் குறைவாக இருந்ததால் சவுதி, துபாய் வருமானம் போதுமானதாக இருந்தது. வீட்டு தேவைகள் பல நிறைவேறின.
இன்று மக்கள் அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகள் சென்றாலும் வீட்டு தேவைகள் தீர்ந்தபாடில்லை.
அன்று கடைத்தெருவிற்கு கொஞ்சம் பணம் எடுத்துப்போய் நிறைய சாமான்கள் வாங்கி வரலாம். (இருபது ரூபாய்க்கு இரண்டு கூறு தேசப்பொடி வாங்கி ரெண்டு நாளைக்கு வச்சி ஓட்டலாம்.)
இன்று கடைத்தெருவிற்கு நிறைய காசுபணம் எடுத்துப்போய் கொஞ்சம் சாமான்கள் தான் வாங்க முடிகிறது. (இருநூறு ரூபாய்க்கு மீனு வாங்கினால் ஒரு வேளை கூட நிரப்பமா சாப்பிட முடிவதில்லை)
சாய்ங்காலப்பொழுதை சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் விளையாண்டு கழிக்க ஊரில் ஆங்காங்கே போதிய விளையாட்டுத்திடல்கள் இருந்தன. அவர்களுக்கும் உடற்பயிற்சியும் அதன் மூலம் கிடைத்தது.
இன்று விளையாட்டுத் திடல்களெல்லாம் விலை மனைகளாக்கப்பட்டு விளையாட திடல் இன்றி வீட்டிலேயே வாலிபர்களும், சிறுவர்களும் முடங்க வேண்டியுள்ளது.
அன்று பலதரப்பட்ட விளையாட்டுக்கள் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்தன. விரும்பிய விளையாட்டுக்கள் விளையாடப்பட்டன.
இன்று எல்லா விளையாட்டுக்களும் ஓரங்கட்டப்பட்டு கிரிக்கெட் விளையாட்டிற்கு மட்டும் எல்லாத்தரப்பு மக்கள்கள் மட்டுமின்றி நாடே சல்யூட் அடித்து வரவேற்று அதன் வீரர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது கொடுக்க மத்திய/மாநில அரசுகளாலேயே பரிந்துரைக்கப்படுகின்றனர். இவ்விளையாட்டில் வீரர்கள் மண்ணில் புரள்கிறார்களோ இல்லையோ பல ஆயிரம் கோடிகள் எப்படியும் புரண்டு விடுகின்றன.
அன்று குறைவான கல்வியின் மூலம் நிறைவான பண்புகளையும், நல்ல பல பழக்கவழக்கங்களையும் மக்கள் பெற்றிருந்தனர்.
இன்று அதிகம் படித்து நல்ல பண்புகளும், பழக்கவழக்கங்களும் இன்றி அல்லல் படுகின்றனர்.
அன்று இயற்கை உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

இன்று அதிவேக செயற்கை உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
அன்று பிளாஸ்டிக் பொருட்களின் தேவை குறைவாக இருந்தது. அதனால் மக்களின் ஆரோக்கியமும் அதிகமாக இருந்தது.
இன்று பிளாஸ்டிக் பொருட்களின் தேவை அதிகமாகி ஆரோக்கியம் குறைந்து விட்டது.
அன்று ஓட்டு வீட்டிற்குள் ஒட்டி உறவாடியது குடும்ப உறவு.

இன்று மாடி வீட்டிற்குள் மலையேறி விட்டது குடும்ப உறவு.
அன்று மக்களுக்கிடையே இயக்கங்களும், அதனால் வரும் பரஸ்பர தயக்கங்களும் குறைவு.
இன்று பல இயக்கங்களும், பரஸ்பரம் ஒன்றிணைய வரும் பல தயக்கங்களும் அதிகம்.
அன்று கடன் வாங்கியவர் கலக்கமடைவார் கடன் வாங்கிய பணம் திருப்பப்படும் வரை.
இன்று கடன் கொடுத்தவர் கலக்கமடைவார் கடன் கொடுத்தப்பணம் திரும்பி கிடைக்கும் வரை.

மண‌ப்பெண்ணுக்கு நகைகளுடன் வீடு கொடுத்து மாரடிக்கும் ஊர்ப்பழக்கம் மட்டும் அன்று முதல் இன்று வரை மாறவும் இல்லை தேயவும் இல்லை ஒரு சில வீடுகளைத்தவிர‌.

அந்த‌க்கால‌மும், இந்த‌க்கால‌மும் ந‌ம் பார்வையில் ஓர் ஒப்பீடு/ம‌திப்பீடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. அவை ச‌ரியா? த‌வ‌றா? என்ப‌தை ந‌ன்கு ப‌டித்து அத‌ன் பின் பின்னூட்ட‌மிட‌ ம‌ற‌வாதீர் ச‌கோத‌ர‌, ச‌கோத‌ரிக‌ளே.....

- மு.செ.மு. நெய்னா முஹம்மது.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு