தப்பித்தது –
இது
கவிதை அல்ல
நல்லவேளை –
நான்
கவிஞனும் இல்லை!
இந்த
வார்த்தைக் கோர்வை
எதேச்சையானது
சொந்த
வாழ்கையைச் சொல்வதில்
சுயேட்சையானது
இது
பகுத்தறிவுப் பண்புகளைத்
தொகுத்தக் கணக்கு
வளைந்தும் நெளிந்தும்
வயலைச்சேரும் வரப்பு
இது
வைத்தியர்கள் இலக்கணமோ
மருத்துவச்சி அனுபவமோ
அவசியப்படாத
இயற்கை பிரசவம்

தேன் தடவிய
கசப்பு மருந்து
தீன் தடுத்திடாத
எழுத்து விருந்து.
இது
கர்ப்புள்ள பெண்டிர்
வேண்டிடும் கர்ப்பம்
கயமையை எதிர்ப்பதில்
தீண்டிடும் சர்ப்பம்
உபரிக் குறியீடுகளும்
உதிரிக் காகிதங்களும்
விரயமாகாததால்
விழலுக்கு
இது
வீணாவதில்லை
இது
கத்தரித்து வைக்கப்பட்ட
கட்டபொம்மன் மீசை
திருத்தி அமைக்கப்பட்ட
தீன்குலத்தோர் கேசம்
விளிப்புகளையும் அழைப்புகளையும்
அடிவருடல்களையும் தவிர்த்த
அறிவாகரனின் மேடைப்பேச்சு
கொண்டதைக் கொண்டே
கொள்கலன் அறியப்படும்
உண்டதைக் கொண்டே
உடல்நலம் சீர்படும்
ஏட்டோடு பழகாமல்
எழுத்தோடு மோதாமல்
எண்ணங்களைப் பார்க்கனும்
என்னவென்று புரியனும்
கெட்டதை சொல்லுமெனில்
கட்டுரையும் தீதே
கட்டுக் கதைகளையும்
தடுத்தே வைக்கனும்
கடமையை மறந்து
ஜடமாய் வாழ்பவனை
எண்ணமும் எழுத்தும்
திண்ணமாய் எழுப்பும்
எழுதிப் படைப்பவன்
இறந்து மடிந்தபின்னும்
எண்ணமும் எழுத்தும்
இன்னமும் நிலைக்கும்
- Sabeer abuShahruk