அதிரையின் அன்றாட நாட்களில் அன்றும் அதேபோல் வழமையான பொழுதாக இருந்தது நன்பகல் வரை விடுமுறையில் ஊருக்குச் சென்ற எனக்கு. அன்று பகல் சுமார் மதியம் 1:00 மணிக்கு நண்பரிடமிருந்து ஃபோன் வந்தது உடனே புறப்பட்டு வாருங்கள் இன்னும் ஓரிரு மணி நேரத்தில் கடலில் மீன் பிடிக்க போகிறோம் என்று சொல்லி ஒரு மெகா பில்டப்போடு அழைத்தார். ஆஹா இதுவே நம் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்ததை இன்றே நிறைவேற்றப்போகும் ஆவலில் நண்பரின் குரலில் ஆனந்த தளுதளுப்பு தெரிந்தது ஃபோனில் நாம் அறக்க பறக்க பகல் உணவை முடித்து விட்டு நொறுக்கு தீனி மற்றும் தாகம் தீர குடிக்க (பவண்டோ நமக்கு பிடித்தது) அவசரமாக வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருவதற்குள் நண்பர் எனது வீட்டிற்கே வந்து விட்டார்.
மணி மதியம் ஒன்னேமுக்காலைக் கடந்து விட்டது சீக்கிரம் சீக்கிரம் என்று விரட்டியபடி வீட்டில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாந்தி மாத்திரை ஒன்றை விழுங்கியும் விட்டேன். நண்பரின் டிவிஎஸ்50 (!!!!) மீதே ஏறி அமர்ந்ததும் கடற்கரையை நோக்கி புதுப்பிக்கப்பட்ட சாலை மீது அந்த(க்கால குதிரைவண்டி மாதிரி) டிவிஎஸ்-50 பறந்தது (டிவிஎஸ்-50 எப்படி பறந்தது என்று குறுக்கு கேள்வி எல்லாம் கேட்கப்புடாது). கடற்கரையைச் சேர்ந்ததும் முகத்துவாரம் வந்து விட்டது என்றார் நண்பர் (முகத்துவாரம் என்று அவர் குறிப்பிட்ட இடம்தான் படகுகள் வந்து செல்லும் வழி ஓடை).
படகில் நண்பரின் மற்றொரு நண்பர் மட்டும், தான் உண்டென்று தன் வலைகளை சரி செய்து கொண்டிருந்தார் இன்னும் இரண்டு மீனவர்கள் வந்ததும் புறப்பட்டு விடாலாம் என்றார். சிறிது நேரத்திலேயே குறிப்பிட்ட இரண்டு மீனவர்களும் வந்து சேர்ந்தனர். சரி எல்லோரும் வந்து விட்டார்கள் மீன் பிடி படகு புறப்பட்டதா என்றால் அதுதான் இல்லை. படகு ஓடை வழிச் சேற்றில் இரங்கிய இரண்டு மீனவர்களும் படகைத் தள்ளிக் கொண்டு வந்தனர் சிறிது தூரம் படகினைத் தள்ளிப் போனதும் இன்ஜினை ஸ்டார்ட் செய்யப்பட்டது.
படகு முகத்துவாரத்தை நெருங்கியது படகும் அதன் உசுப்பலை அதிகரித்துக் கொண்டு அங்கிருந்து கடக்கும் முன்னர் படகு வழி ஓடையில் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்த “கெ'டு'த்தல் மீன்” நாம் பயணமாகும் படகைத் துரத்திக் கொண்டு பின்னாலேயேத் தொடர்ந்து வந்தது . நம்மோடு படகில் பயணிக்கும் மீனவர் ஒருவர் வாய்க்காலில் குதித்து கெடுத்தல் மீனைப் பிடிக்க போனவரைச் சம்மாட்டி (படகு உரிமையாளர்) தடுத்து விட்டார். பின்னர் அதற்கான காரணத்தைச் சொன்னார் “அந்த கெடுத்தல் மீன் முள் குத்தினால்” கடலுக்குச் செல்லும் நம் படகுப் பயணம் தடைப்பட்டு விடும்” என்றார் அட! ஆக ‘கெடுத்தல்’ மீன் பிடிப்பதை ‘கெடுத்து’விட்டார்.சம்மாட்டி
படகுப் பயணம் முகத்துவாரத்தைக் கடந்து சென்ற சிறிது நேரத்தில் அங்கே கண்ணுக்கு எட்டிய தூரத்தில் படகு ஒன்று தத்தளித்துக் கொண்டிருந்தது அதன் அருகே நாங்கள் பயணம் செய்யும் படகும் நெருங்கிச் சென்று என்னவென்று விசாரித்ததில் அந்த படகின் என்ஜின் பழுதாகிவிட்டது கரைக்கு தகவலனுப்பிருப்பதாகவும் மெக்கானிக்கிற்காக காத்திருப்பதாகச் சொன்னார்கள். முதல் அனுபவத்தின் நுனியில் இருந்த நமக்கோ தூக்கி வாரிப்போட்டது இருந்தாலும் கொஞ்சமேனும் தைரியத்தை வரவைத்துக் கொண்டு சம்மட்டியிடம் (படகின் பைலட்) கேட்டேன் "நாம் செல்லும் இந்த படகும் இப்படி ரிப்பேர் ஆனால் என்ன செய்வீர்கள்?" என்று ஒரு முன்னெச்சரிக்கையாய்(!!!) ஒரே ஒரு கேள்வியைக் கேட்டேன். சம்மாட்டியும் கூலாகச் சொன்னார் "நம்மிடம் பாய் மரம் இருக்கிறது அவ்வாறு என்ஜின் பழுதென்றாலும், தட்டுத் தள்ளாடி ஊர் (கரை) வந்து சேர்ந்து விடாலாம்" என்றதும் பகல் சாப்பிட்ட சாப்பாடு செரிமானப் பணியை துவங்கியது.
படகும் நமதூர் கடற்கரைச் சேற்றைக் கடந்து வேகம் எடுத்தது. பரந்து விரிந்த வங்க்கடலின் நிறம் மெல்ல மெல்ல மாறியது, சில இடங்களில் தெளிவான நீரில் கடலின் அடிமட்ட தரை தெரிந்தது அதில் ஒரு ஏராளமான சிறிய மீன்கள் சுதந்திரமாக திரிவதும் கண்ணுக்கொரு கடல் விருந்தாக தெரிந்தது. படகின் வேகம் கூடியதும் கடல் நீரை கிழித்துக் கொண்டு சென்று கொண்டிருந்த்து அந்த நீரின் சாரல் நம் மீது தெரித்தது தூறலாக உடம்பில் ஒட்டிக் கொண்டது சில நிமிடங்களிலேயே உடம்பில் கடல் நீர் உப்பாக உறைந்தது.
கடல் நீரின் பசுமையின் இனிமையை ரசித்துக் கொண்டே பயணத்தில் லயித்துக் கொண்டிருக்கும்போது சட்டென்று நடுவே கருப்பாக ஆங்கங்கே திட்டு திட்டாகப் படை திரண்டு வருதுபோல் வேகமாக நகர்ந்து நாங்கள் பயணிக்கும் படகை நோக்கி வந்தது அந்த கருங்கூட்டம் அதை பார்த்த நான் பயத்தில் “சம்மாட்டி இங்கே ஓடி(!!!) வந்து பாருங்கள் நம் படகை நோக்கி ஏதோ கருப்பு கூட்டம் கூட்டமா வருது” என்று சத்தம் போட்டேன். சம்மாட்டி படகின் கண்ட்ரோலை (சுக்கானை) வேறு (COPILOT) ஒருவரிடம் செலுத்த கொடுத்து விட்டு நான் நின்ற முன் பகுதிக்கு வந்து அதை பார்த்த சம்மாட்டி முகத்தில் ஒரு பூரிப்பு தெரிந்தது அந்த கருப்பு கூட்டம் அனைத்தும் மீன்கள் என்றும் “அது செவ்வல் செவ்வலாய் (செவ்வல் என்றால் கூட்டம் கூட்டமாய்) வருகின்றது” என்றார். இதுபோன்ற மீன்கள் செவ்வல் (கூட்டத்தை) பார்த்து நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்றும் ஒரு சிறிய வரலாறு சொன்னார்.
இதுதான் சரியான இடம் இதற்கு மேல் படகை செலுத்த வேண்டாம் என்றும் வலைகளை படுத்தல் (போடுதல்) போட சொல்லி சம்மட்டியின் உத்தரவு பிறபிப்பிக்கப்பட்ட்தும் உடன் வந்திருந்த மூன்று மீனவர்களும் மும்முரம் காட்டி வலை படுத்தலை செய்தனர். இந்த படுத்தல் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது வலை கிட்டத்தட்ட இரண்டரை கிலோ மீட்டருக்கு மேல் நீளம் இருந்தது அகலம் ஆறு அடிக்கு மேல் இருந்தது. வலை படுத்து விட்டு சூரியன் மறையும் வரை அனைவருக்கும் ஓய்வு என்றும் பிரகடனம் செய்தார்கள்.படகோட்டிகள்
நாமும் சுதாகரித்துக் கொண்டு சென்ற முறுக்கும் பவண்டோவும் பரிமாறப்பட்டது. கடல் அலையின் தாலாட்டில் தெட்டிலில் தூங்கிய நினைவுகள் வந்து சென்றன. இந்த கேப்பில் சூரியன் மறையும் காட்சிகளை நம்மோடு உடன் வந்திருந்த மூன்றாம் கண்னும் சும்மாவா இருக்கும் அதன் பணியை அதிரைநிருபருக்காக கிளிக்கிக் கொண்டிருந்த்து. சூரியன் கீழிறங்கத் தொடங்கியவுடன் வலையின் தொடக்கதிலும் அதன் மற்றொரு முனையிலும் சிவப்பு நிறத்தில் சிறிய led லைட் விட்டு விட்டு எரிந்தது இதுதான் வலை விரித்திருப்பதை அறிந்து கொள்வவதற்கும் வேறு படகுகள் வலையில் சிக்காமல் இருப்பதற்கும் இந்த லைட் பயன்படுத்தப்படுகின்றது என்றும் விளக்கம் தரப்பட்டது.
இரவில் வீட்டில் மின்சாரமில்லாத வீட்டில் இருக்கும் நினைவையூட்டியதால் கடல் நீர் மீது மிதந்திருந்த இருட்டில் பயம் தெரியவில்லை. இருட்டை கிழிக்க படகில் காண்டாவை ஏற்றினார்கள் (இரவு விளக்குக்கு பெயர்தாங்க காண்டா) சுற்றி நின்ற படகுகளிலும் காண்டாவை ஏற்றினார்கள் ஆங்கங்கே விளக்குகளும் வலையில் உள்ள led லைட் களும் கண் சிமிட்ட ஆரம்பித்தன வலை எடுக்கும் நேரமும் நெருங்கியது படகை வலையின் ஒரு முனையை நோக்கி செலுத்தினர்.
வலையின் ஒரு முனையை பிடித்து இழுத்ததும் வலையில் கொத்து கொத்தாக மீன்கள் சிக்கி இருந்தன. சம்மாட்டி முகம் காண்டாவைவிட மிக பிரகாசமாக இருந்தது நமக்கும் படு உற்சாகம் வலையை இழுக்க இழுக்க கத்தாளை மீன், கெண்டை மீன். பண்ணா மீன், கும்பால மீன், என்று ஆர்வக் கோளாறால் நம் வாய்க்குள் நுழையும் மீன்களின் பெயரை சொல்ல ஆரம்பித்தேன். அட! ரொம்ப லேட்டாகத்தான் உணர்ந்தேன் மீனவர்களுக்கு மீன்கள் பெயர் தெரியாதா(!!!?) என்றும். அனைத்து வலைகளையும் எடுத்தவுடன் படகு கரையை நோக்கி புறப்பட்டது ஒருவாறாக கடலில் மீன் பார்(பிடிக்)க்கும் ஆவல் நிறைவேறியது.
படகு கரைக்கு வந்ததும் சம்மாட்டி ஒரு நியாயமான கைப்பை நிறைய மீன்களை அள்ளி தாரளமாக தந்தார் வீடு வந்து சேர்ந்ததும் மீன்களைச் சுத்தம் செய்து வீட்டில் பொறிப்பதற்கு ஆயத்தமானார்கள். நானும் குளித்து விட்டு வந்து நான்கு பொறித்த கும்பாலாவை லபக்கி விட்டு படுக்கைக்கு சென்று படுத்தேன் அந்த கடல் அலையின் தாலாட்டின் தாக்கம் பெட்டுக்கு கீழ் கடல்நீர் தாலாட்டி கொண்டிருந்தது.
-Sஹமீது









