அஸ்ஸலாமு அலைக்கும்.
முகநூல் என்பது வெறும் பொழுது போக்கு அதில் பயனுள்ள காரியங்களை சாதிக்க இயலாது என்று ஒரு வாதம் உலவுதல் உண்டு. ஆனால் அதையும் பயனுள்ள காரியங்களுக்குப் பயன்படுத்தலாம் என்பதை சிந்தித்து இந்தக் குழுவை உருவாக்கி நமது ஊரைச் சேர்ந்த பலரை இதில் இணைத்து இருக்கிறார்கள்.
நமது ஊரைச் சார்ந்த பல பிரச்னைகள் , கருத்துக்கள் இங்கே விவாதிக்கப்படுகின்றன. இதுவரை பயனுள்ளதாக எதையும் நாம் செய்யவில்லை என்றாலும் சில சிந்தனைகளின் பிறப்பிடமாகவும் சில செயல்பாடுகளின் களமாகவும் இந்தத் தளம் அமைந்திருப்பதையும் உருவெடுத்து வருவதையும் மறுக்க இயலாது.
அந்த வகையில் அதிரை பசுமை 2020 என்ற ஒரு அழகிய கருத்து இந்தக் குழுவால் முன்னெடுக்கப்பட்டு திட்டமிடப்பட்டு இருக்கிறது. நான் அறிந்த வரை இந்தத் திட்டத்தில் கீழ்க்கண்ட பணிகளை முன்னோடியாக செயல் படுத்த இருக்கிறோம்.
- 1. ஊரைச் சுற்றியுள்ள காட்டுக் கருவைச் செடிகளை வேரோடு பிடுங்கி வீசி எறிவது.
- 2. நீர் நிலைகளில் , நீர்நிலைகளைச் சுற்றியுள்ள கரைகளில் முளைத்திருக்கும் காட்டுக் கருவை முதல் ஆகாயத் தாமரை, கோரைப்புல் முதலிய ஆக்கிரமிப்புச் செடிகளை அகற்றுவது
- 3. காட்டுக் கருவை அழிக்கப்பட்ட இடங்களில் வாய்ப்புள்ள இடங்களில் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத புங்கை, புன்னை, செம்மரம், வேம்பு, வேப்பங்கன்றுகள் ஆகிய மரக்கன்றுகளை நடுதல்
- 4. இராஜமடம் ரயில்வே கேட்டிலிருந்து முத்தம்மாள் தெரு முனை வரை சாலையின் இரு புறமும் மரக் கன்றுகளை நடுவது
- 5. முத்தம்மாள் தெரு முனையிலிருந்து தக்வா பள்ளி ஆட்டோ ஸ்டாண்ட் வரை சாலையின் இரு புறமும் மரக்கன்றுகளை நடுவது
- 6. கருங்குளம் பாலத்திலிருந்து மாரியம்மன் கோயில் ஆர்ச் வரை சாலையின் இருபுறமும் மரக்கன்றுகளை நடுவது
- 7. நடுவிக்காடு சாலைப் பிரிவு முதல் வண்டிப்பேட்டை வரை சாலையின் இரு புறமும் மரக்கன்றுகளை நடுவது
- 8. மழைவேனிற்காடு ( எவ்வளவு அழகான பெயர்) மில் முதல் வண்டிப்பேட்டை வரை சாலையின் இருபுறமும் மரக் கன்றுகளை நடுவது
- 9. நடுத்தெருவிலிருந்து மறைக்கா பள்ளி செல்லும் சாலை வழியாக ஒரு புறம் நெசவுத்தெரு மறுபுறம் மேலத்தெரு கடைசி வரையும் மரக்கன்றுகளை நடுவது
- 10. இ சி ஆர் சாலையிலிருந்து ரயில்வே சதேஷ செல்லும் சாலையிலும் இரு புறமும் மரக்கன்றுகளை நடுவது
- 11. பட்டுக் கோட்டை சாலைப் பிரிவிலிருந்து சி. எம். பி கால்வாயின் இருபுறமும் வள்ளியம்மை நகர் வரை மரக்கன்றுகளை நடுவது
- 12. பிளாஸ்டிக் உபயோகத்தை தடுக்கும் விதமாக இந்தக் குழு உறுப்பினர்கள் தங்களின் சொந்த பண்பாட்டிலும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் பிளாஸ்டிக்கை அறவே பயன்படுத்தாமல் மற்றவர்களுக்கு வழி காட்டுவது
ஆகிய திட்டங்களை இந்த தாயபுள்ளைவோ குழு ஆரம்ப கட்டமாக பரிந்துரைக்கிறது. தொடர் பணிகளை இதற்காக அமைக்கப்படும் குழுவினரின் தேவைக்கேற்ற பரிந்துரையின்படி செயல்படுத்த முயல்வோம்.
கருவைச்செடி அழிப்பு, மரக்கன்று நடல் ஆகிய பணிகளுக்காக கல்லூரி , பள்ளி மாணவர்களை களமிறக்கத் திட்டமிட்டு இருக்கிறோம். அதற்காக முதல்வர் மற்றும் தலைமை ஆசியர்களை முதல் கட்டமாக சந்தித்துப் பேசி இருக்கிறோம். மேலும் சில பணியாட்களையும் நியமிக்க நேரிடும். அவர்களுக்கு ஊதியம் கொடுக்க நேரிடும்.
மரக் கன்றுகள் பல இலவசமாகவும் கிடைக்க ஏற்பாடு செய்து இருக்கிறோம். அத்துடன் வெளிநாடுகளிருந்து மரக் கன்றுகளுக்காக பொருளுதவி செய்யவும் பலர் போட்டி போடுகிறார்கள். மேலும் கன்றுகள் நடப்பட்டபின் அதற்கான இரும்புக் கூண்டுகளை அமைக்கவும் பலர் பொறுப்பேற்க வேண்டும். அல்லது திரட்டப்படும் நிதியிலிருந்து அவற்றை இந்தக் குழு வழங்கும்.
ஜே சி பி போன்ற இயந்திரங்களை வாடகைக்கு எடுக்க, பணி செய்வோருக்கு குடி தண்ணீர், காலை உணவு, தேநீர் ஆகியவற்றை வழங்க கணிசமாக பொருட்செலவு ஏற்படும். அவற்றை தந்து உதவ பல நல்ல உள்ளங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
அந்தந்த மொஹல்லாவில் கன்றுகள் நடுவதற்கு அந்தப் பகுதியின் வயதானப் பெரியவர்களை அழைத்து அவர்களது கரங்களால் நடச்செய்ய வேண்டுமென்றும் குறிக்கோள் வைத்து இருக்கிறோம். அந்தந்த தெருக்களில் நடப்படும் கன்றுகளை அந்தந்த தெருவினர் பராமரித்துக் கொள்ள கோரிக்கைவிடப்படும்.
இந்தப் பணிகளை நிர்வாகப்படுத்துவதற்காக ஒரு குழுவை அமைப்பது தொடர்பாக வரும் வாரங்களில் பேரூராட்சித் தலைவர் , பேராசிரியர் அப்துல் காதர் , கல்லூரி முதல்வர், தலைமை ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பின் நிர்வாகிகள், ஊர்ப் பெரியவர்கள், அனைத்துத் தெரு மொஹல்லா தலைவர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், இணைய தள நிர்வாகிகள், இயக்கங்கள் மற்றும் பொதுநல சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொள்ளும் ஒரு கலந்துரையாடலை தொடக்கமாக ஏற்பாடு செய்ய இருக்கிறோம். அந்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இந்தக் கலந்துரையாடலுக்குப் பிறகு பசுமை அதிரை என்ற பெயரில் ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டு இதற்காக வழங்கப்படும் நிதியைக் கையாள ஒரு பொருளாளர் நியமிக்கபடுவார். இவற்றை மேற்பார்வை இடவும் திட்டம் மற்றும் செலவுகளுக்கு ஒப்புதல் அளிக்கவும் தலைவர் உள்ளிட்ட ஒரு குழுவும் நியமிக்கப்படும்.
தொடக்கமாக, உள்ளூரில் மக்கள் தொடர்பு மற்றும் அரசு தொடர்பான காரியங்களை மேற்கொள்ள அதிரை நியூஸ் வலைதளத்தின் தலைமை நிர்வாகி ஷேக்கனா நிஜாம் அவர்கள் முன்வந்து இருக்கிறார்கள்.
இந்தப் பணி முழுக்க முழுக்க ஒட்டுமொத்த சமுதாய நலனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. அரசியல் , தனி நபர், சாதி, சமய வேறுபாடுகள் அல்லது விளம்பரங்கள் இல்லாமல் மனமார்ந்த அர்ப்பணிப்போடு மட்டுமே மேற்கொள்ளப்படும்.
இந்தப் பணியில் கரம் கோர்க்க விரும்பும் வெளிநாடு , உள்ளூரில் இருக்கும் நண்பர்கள் தங்களின் விருப்பத்தை இந்தப் பணிக்கான தொடர்புக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் 0091 – 8148440853 என்ற அலைபேசியில் தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளலாம். பதியும் நேரம் எல்லா நாட்களிலும் இந்திய நேரம் காலை 6 மணி முதல் 9 மணி வரையும் , பிற்பகல் 4 மணி முதல் 10 மணி வரையும் ஆகும்.
தாய புள்ளையலுவொ முநூல் குழுமத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருப்பவர்கள் அல்லது இணைய இருப்பவர்க்ள் தங்களது மனதைத் திறந்த கருத்துக்களை அந்த குழுமத்தில் எடுத்துரைக்க அன்போடு அழைக்கிறோம் !
இந்த நற்பணியில் அனைவரும் தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்து கரம் கோர்க்கும்படிக் கோருகிறோம்.
இந்தப் பணி பற்றிய தங்களின் அன்பான கருத்துக்களையும் அன்பான மேலதிக பதிவிட வேண்டுகிறோம்.
வஸ்ஸலாம்.



